top of page

இயலில் தேடலாம்!

268 results found with an empty search

  • இலண்டனிலிருந்து அன்புடன் - 8

    Nina Peanut is Amazing – ஒரு சிறந்த Middle Grade Graphic Novel காமிக்ஸ் புத்தகங்கள் என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? விதவிதமான வண்ணங்கள், அழகான ஓவியங்கள், குட்டி குட்டி வசனங்கள்—இதெல்லாம் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் தரும். காமிக்ஸ் உலகம் வளர வளர Graphic Novel எனும் தனிப்பிரிவும் உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட Graphic Novel களில் ஒன்றாகும் “Nina Peanut is Amazing”. 9 முதல் 12 வயதினருக்கான Middle Grade புத்தகம் இது. அயர்லாந்தைச் சேர்ந்த சாரா பௌவி (Sara Bowie) இதன் எழுத்தாளரும் ஓவியரும் ஆவார். 12 வயதான நீனா (Nina Peanut) இந்தக் கதையின் நாயகி. நீனாவின் நெருங்கிய நண்பன் ப்ரேன் (Brain)—நீனா என்ன செய்தாலும் அவன் எப்போதும் ஆதரவாக நிற்பான். நீனா தனக்கென ஒரு யூட்யூப் சானல்  வைத்திருக்கிறாள். அவள் உருவாக்கும் வீடியோக்களுக்கு ப்ரேன்தான் காமெரா மேன். அந்த வீடியோக்களுக்கு விருப்பக்குறி(Like) இடுவதும் அவன்தான். நீனாவின் வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவியான மேகனும் சொந்தமாக யூட்யூப் சானல் வைத்திருக்கிறாள். சானலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் இருப்பதால், மேகன் தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராகவே நினைப்பாள். அதனால் சக நண்பர்களை எல்லாம் நன்றாக வேலை வாங்குவாள். நீனாவையும் ப்ரேயினையும் நண்பர்களாகச் சேர்த்துக்கொள்ள மாட்டாள்.  அந்த நேரத்தில்தான் ஆசிரியர், பள்ளியில் நடக்கவுள்ள ஆண்டு விழாவிற்காக மாணவர்களைச் சிறுசிறு குழுக்களாகப் பிரிக்கிறார். அதில், நீனா மற்றும் மேகன் இருவரும் ஒரே குழுவில் சேர்த்தப்படுகிறார்கள். நீனா மற்றும் மேகன் இருவருக்கும் இடையில் பிறக்கும் போட்டி, பொறாமை, சண்டை, பின்னர் உருவாகும் நட்பு — இப்படிப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளின் மூலம் இந்தக் கதை முன்னேறுகிறது. வழக்கமான காமிக்ஸ் பாணியைப் போல இல்லாமல், இந்தப் புத்தகத்தில் பல புதிய முயற்சிகளைக் காணலாம். குறிப்பாக, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாயகி நீனா தனக்கே உரிய சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்துவது மிகவும் புதுமையாக இருந்தது. மேலும், யூட்யூப் வீடியோ இந்தக் கதையின் முக்கிய அம்சமாக இருப்பதால், அதில் உள்ள சிறிய விவரங்களையும் ஆசிரியர் அழகான ஓவியங்களாக வடிவமைத்திருக்கிறார். இந்தச் சிறு சிறு காட்சிகள் கூட வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. நெருங்கிய நண்பனிடம் காரணமின்றி விலகிச் செல்வது, புதிய நண்பர்களுடன் கலவையில் நாமும் மாறிப்போகும் தருணங்கள், நாம் “bossy” ஆக நடந்துகொள்ளும் நேரங்களை புரியாமல் இருப்பது—இப்படி குழந்தைகளின் உண்மையான மனநிலைகளை மிக அழகாக ஆசிரியர் கதையில் பதிவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாது. சில இடங்களில் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்! நாங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாசித்து மகிழ்ந்தோம். உங்களும் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் குடும்பத்துடன் வாசியுங்கள்! வாசித்துவிட்டு உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிருங்கள்! பஞ்சுமிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.

  • அறிவோம் ஆளுமை - 9

    'சே' விடுதலையின் குரல் ரதி :  அத்தை.. நேற்று ரோஷினி அக்கா போட்டிருந்த டி-ஷர்ட்ல கம்பீரமாக ஒரு இளைஞரின் படம் இருந்துச்சு.. இவர் யாருன்னு கேட்டேன். இவர் பெயர் சேகுவேரா.  இவர் ஒரு போராளின்னு சொன்னாங்க.  ஜோ : ஆமா, சேகுவேரா ஒரு போராளி. மக்கள் விடுதலைக்காகப் போராடிய 'புரட்சியாளர் .  அர்ஜென்டினாவில் பிறந்த அவரோட முழுப் பேரு எர்னஸ்டோ குவேரா டி லா வெர்னா. உலகம் அவரை 'சே' என்று கொண்டாடியது.     நகுலன் : சேகுவேரா எப்படி போராளியனார் அத்தை? ஜோ :  அதற்குக் காரணம் இரண்டு பெண்கள். ஒருவர் அவங்க அம்மா.  சேகுவேராவின் அம்மாவோட பேரு ஸெலியா. அவங்களுக்கு கதைகள் பிடிக்கும். கடல் பிடிக்கும். பிடிக்காத ஒரே விஷயம் பயம். படிக்கும்போதே முற்போக்கு இடதுசாரி சிந்தனைகள் கொண்டவங்களா  இருந்தாங்க. அவங்க முற்போக்கு இயக்கங்களோட தொடர்பு கொண்டவர்களா இருந்தாங்க.   திருமணத்திற்கு முன்பு நிறைய போராட்டங்களில்  கலந்துக்கிட்டிருக்காங்க. அதனாலே புரட்சி மற்றும் போராட்டம்  என்பது சே யின் ரத்தத்திலேயே இருந்தது. ரதி : ரொம்ப இண்டிரெஸ்டிங்கா இருக்கு அத்தை!    ஜோ : அர்ஜென்டினாவை உலுக்கிய உள்நாட்டு போர் பற்றி பெரியப்பா மூலம் தெரிந்து கொண்டார் சே. தனது வீட்டு தோட்டத்தில் ஒரு சிறிய போர்க்களத்தை உருவாக்கி பதுங்குகுழிகள் வெட்டினார் மலைகளை உருவாக்கினார். தன் தாயிடம் அரசியல் பேச ஆரம்பித்தார்.   நகுலன் : இன்னொரு பெண்மணி யார் அத்தை? ஜோ: மற்றொருவர் ஹில்டா.  ஹில்டாவுடைய நட்புக்கு பிறகுதான் மார்க்ஸ் ஏங்கல்ஸ்  மற்றும் லெனின் போன்றோரின் எழுத்துக்களை சே வாசிக்கத் தொடங்கினார். இதுதான் இவரை ஒரு புரட்சியாளராக மாற்றுவதற்கான முதலடியாக இருந்தது.  காலனியாதிக்கத்தால் மக்கள் படும் துயரை கண்டு அதிலிருந்து அவர்களை விடுவிக்க நினைத்தார். அதுவே அவரைப் போராளியாக்கியது. ரதி :  சே சிறுவயதில் ரொம்ப துரு துருனு இருந்திருப்பாரு அப்படி தானே அத்தை!  ஜோ :  அப்படின்னு சொல்ல முடியாது.  சிறுவயதில் ஒரு நோஞ்சான் குழந்தை.  அவருக்கு இரண்டு வயதிலேயே ஆஸ்துமா வந்துவிட்டது. அதிக நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருக்கிறார்.  தொடர்ந்து ஆஸ்துமாவினால் இருமல் வந்து கொண்டே இருக்கும். ஆனால் சேவின் அம்மாவும் அப்பாவும் மற்ற குழந்தைகளை விட சேவின் மீது அதிக அக்கறை எடுத்து பார்த்துக் கொண்டார்கள். அதனால் சே மற்ற மாணவர்களை விட குறைந்த நாள் பள்ளிக்கு சென்றாலும் மிகச்சிறந்த அறிவாளியாக இருந்தார். ரதி : அப்படின்னா வீட்டில் சே நிறையப் புத்தகங்களை வாசிச்சிருப்பாரில்லையா? ஜோ : ஆமாண்டா செல்லம். சே வின் பெற்றோர் நிறைய கதைப் புத்தகங்களை வாங்கி சே வை வாசிக்க வைத்தார்கள். தான் படித்த கதைகளைப் பற்றி தன் நண்பர்களுடன் பேசுவதில் சே வுக்கு ஆர்வம் அதிகம்   நகுலன் : சே என்ன படித்திருக்கிறார் அத்தை?  ஜோ : ஆரம்பத்தில் சே பொறியாளராக வேண்டும் என்று எண்ணியிருந்தார். அந்த நேரத்தில் சே வின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து போகிறார். சே விற்கு தன்னுடைய பெற்றோருக்கு அடுத்து மிகவும் பிடித்தவர் பாட்டி. நோயால் இனி யாரும் மரணம் அடையக் கூடாது அதனால் நான் மருத்துவம் படிக்கப் போகிறேன் என்று சே மருத்துவம் படித்தார்.   ரதி: அவங்க நாட்டுக்காகப் போராடி அவங்க நாட்டை காப்பாத்திட்டாரா? ஜோ : சே அவங்க நாட்டுக்காக போராடல!  நகுலன் : அப்புறம்!  வேற எந்த நாட்டுக்காக போராடினார்?  ஜோ : கியூபாவுக்காக போராடினார். பொலிவியாவுக்காக போராடினார்.  ரதி : உண்மையாலுமே அவர் கிரேட் தான்.  நகுலன் : கியூபாவ எந்த நாடு  ஆட்சி செய்தது? ஜோ : கியூபாவை ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆட்சி செய்தன.  ரதி : எதுக்காக கியூபாவை அவங்க கைப்பற்றினார்கள்? ஜோ :   அங்கிருக்கும் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க. குறிப்பாக அங்கே கரும்பும் புகையிலையும் அதிகமாக விளையும். நகுலன் : ஏன்  கியூபா விடுதலைக்காக போராட சே  முடிவு பண்ணாரு? ஜோ : அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து லத்தின் அமெரிக்கா நாடுகள் விடுதலையடைய வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆனால் அவர் உடனே எந்த போராட்டத்திற்கும் நேரடியாக  இறங்கவில்லை. அவர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார். அவருடைய உற்சாகம் மிகுந்த பேச்சு தன்னம்பிக்கை அவருடைய கனவு காணும் குணம் இதெல்லாம் 'சே'வை ஈர்த்தது. அதன் பிறகு தான் கியூபா விடுதலைக்காக போராட வேண்டும் என்று முடிவு செய்தார். நகுலன் : அவருக்குத்தான் ஆஸ்துமா இருந்ததே.  பிறகு எப்படி அவரால் துப்பாக்கி எடுத்து சண்டையிடவெல்லாம் முடியும்?  ஜோ : 'சே'வுடைய ஆஸ்துமா அவரை ஒவ்வொரு போரின் போதும் அவருக்கு மிகப்பெரிய தொந்தரவுகளை கொடுத்தது. சில நேரம் இறந்துவிட்டார் என்று கூட அவரோடு இருந்த வீரர்கள் நினைத்தார்கள். எல்லாவற்றையும் கடந்து தன்னுடைய உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் படைக்கு தலைமை வகித்துப் போரிட்டார்.  ரதி: பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குறிய மனிதனாக எப்போதுமே சே இருந்திருக்கிறார். அதனால்தான் உலகம் இன்றும் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.   ரதி: கியூபாவுக்கு விடுதலை கிடைத்ததா?  ஜோ : ஆமாம் பல போர்களுக்கு பிறகு கியூபா விடுதலை பெற்றது. கியூபாவின் வங்கி தலைவராக மற்றும் பணத்தாளில் சே என்று கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது. கியூபாவின் பொருளாதாரத்தை சீரமைக்கும் பொறுப்பு எல்லாவற்றையும் விட சவாலானது அத்தனை சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்தார் சே. நகுலன்: அமைச்சர் என்றாலே பந்தா வந்துருமே!   ஜோ: அதுதான் இல்லை. என்னதான் பதவி வந்தாலும் சே மாறவில்லை அலுவலக காரை பணிக்கு மட்டுமே பயன்படுத்தினார். எங்காவது செல்ல வேண்டுமென்றால் நடந்தே சென்றார். அவசரம் என்றால் பேருந்து. தன்னை எந்த இடத்திலும் மாற்றிக் கொள்ளவில்லை. அவர் அமைச்சரா இருந்தாலும் தொழிற்சாலையிலும் வேலை செய்ஞ்சாருன்னா பார்த்துக்கொள்ளுங்களேன். நகுலன் :  கிரேட் அத்தை. விடுதலைக்குப் பின் கியூபா எப்படி இருந்தது?   ஜோ:   கியூபா மிகப்பெரும் மாற்றங்களையடைந்தது. புரட்சிக்கு முன் கியூபாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 23.6% அதன் பிறகு 98.82 சதவீதமாக மாறியது. கல்வி என்பது ஒரு தேசத்தின் உண்மையான சொத்து என்று பிடலுக்கும் 'சே'வுக்கும் தெரிந்திருந்தது. கியூபாவில் கல்வியும் மருத்துவமும் இலவசம்.  ரதி: ஏன் அவரோட தாய்நாட்டிற்காக அவர் போராடல.?  ஜோ : சரியான கேள்வி அதன் பிறகு தான் அர்ஜென்டினாவை பற்றி மட்டுமல்ல  லத்தின் அமெரிக்கா நாடுகளின் சுதந்திரம் பற்றி யோசித்தார். அதுமட்டுமல்ல. அமெரிக்கா அல்ஜீரியா நாடுகளின் விடுதலை குறித்தும் சிந்தித்தார்.அதன் பிறகு அவரால் கியூபாவில் இருக்க முடியவில்லை.  நகுலன் : அப்புறம் அர்ஜென்டினா போய்ட்டாரா?  ஜோ : காங்கோ சென்று விட்டா.ர் அங்கு அவர்களுக்காக போராட முடிவு செய்து போராட்டத்தில் இறங்கினார். மீண்டும் கியூபாவிற்கு வர வேண்டும் என்று  காஸ்ட்ரோ கோரிக்கை வைத்தார். ஆனால் அவர் ஏற்கவில்லை. மாறாக அர்ஜென்டினா செல்வதாக கூறினார். ஆனால் காஸ்ட்ரோ அர்ஜென்டினாவுக்கு பதிலாக பொலிவியா செல்லலாமே என்று கேட்டார். பொலிவியாவில் இருந்தால் அவருக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் என்று கேஸ்ட்ரோ நம்பினார்.  ரதி : அப்படின்னா  பொலிவியா போய்ட்டாரா.  ஜோ : ஆம் பொலிவியா சென்று கொரில்லா யுத்தம் என்று சொல்லப்படும் மறைந்து தாக்கும் யுத்தம் நடத்தினார். ஆனால், அங்கு பொலிவியா ராணுவம் அவரை கைது செய்தது. அமெரிக்காவின் உத்தரவுப்படி  ஒரு பள்ளியில் சிறை வைத்திருந்த அவரை சுட்டுக் கொன்று விட்டார்கள்.  நகுலன், ரதி : என்னது அவரை கொன்னுட்டாங்களா? ஜோ : ஆமாம்  தன்னுடைய நாட்டுக்காக போராடாமல் இன்னொரு நாட்டுக்காக போராடி வென்று அங்கு அவருக்கு கொடுத்த பதவியை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் போராட சென்ற ஒரு போராளியின் வாழ்க்கை என்னை மிகவும் ஈர்த்தது. அவர் இறந்தாலும் போராளியாக உலகமுழுவதும் எல்லோர் மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  நகுலன் : ஆமாங்க அத்தை எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. இதை கேட்டதுக்கு அப்புறம் எதா இருந்தாலும் தைரியமா இருக்கணும்.  பிரச்சினையை எதிர்த்து போராடனும் அப்படிங்கற எண்ணம் ஏற்பட்டிருக்கு.  நகுலன்,ரதி : We Love Che  ஜோ :   yes Children! We love che. சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • மலரின் மொழி

    அழகான பூந்தோட்டம். அங்கே விதவிதமான மலர்கள் இருந்தன. டிக்கா தான் அங்கே இருப்பதிலேயே பெரிய பூ. அது ஒரு செங்காந்தள் மலர். அந்த தோட்டத்திற்கு நிறைய தேனீக்கள் தேன் சேகரிக்க வரும். சுக்கா அன்று தான் தேன் சேகரிக்க முதன்முதலாக வந்தது. அதனோடு வந்த தேனீக்கள் எல்லாம் சரியான தேன் இருக்கும் பூக்களில் அமர்ந்து அழகாக தேனை சேகரித்தன. சுக்கா தேன் சேகரிக்கச் செல்லும் போது சில பூக்களின் நிறங்கள் மாறின. எதற்காக அப்படி மாறுகிறது என்பது சுக்காவிற்கு குழப்பமாகவே இருந்தது. சுக்கா வரிசையாக ஒவ்வொரு பூவாக சென்று அமரும். அதில் சிலவற்றில் தேன் இருக்கும் சிலவற்றில் இருக்காது. மற்ற தேனீக்கள் எப்படி சரியாக தேன் இருக்கும் மலர்களின் சென்று அமர்கின்றன எனவும் அதற்கு புரியவே இல்ல. இன்றைய நாள் சுக்காவிற்கு சரியாக அமையவில்லை. அது தேனெடுக்க அமர்ந்த மலர்களில் ஒன்றில் கூட தேன் இல்லை. சுக்கா சோர்வாக அமர்ந்தது. அப்போது அதன் அக்கா ஜிக்கா வந்து அமர்ந்தது. "சுக்கா தேன் சேகரிக்காம ஏன் இங்க உக்காந்திருக்க? ஏன் சோகமா இருக்க? என்கிட்ட சொல்லு" "எந்தப் பூவும் எனக்கு தேன் கொடுக்க மாட்டேங்குது. நான் பூகிட்ட போகறப்பல்லாம் அந்த பூக்கள் வேற நிறத்துக்கு மாறுது. எனக்கு ஏன் இப்படி நடக்குது" என சோகமாக சொன்னது சுக்கா. "என்னோட வா" என சுக்காவை டிக்காவிடம் அழைத்துப் போனது. "டிக்கா என் தங்கைக்கு சொல்லிக் கொடு" என்றது ஜிக்கா. "என்ன பூ பேசுமா?" என ஆச்சரியமாக கேட்டது சுக்கா. "சுக்கா, உன்னை சுத்தி நல்லா கவனி. பூக்கள் தேன் மட்டும் கொடுக்கறதில்லை. அவங்களோட மொழிய புரிஞ்சிக்க முயற்சி செய்" என பறந்து சென்றது ஜிக்கா. சுக்கா, "என்ன பூக்கள் பேசுமா? அத புரிஞ்சிக்கனுமா?" என யோசித்தது. அப்போது டிக்கா ஒளிர்ந்தது. அதன் கதகதப்பான ஒளி சுக்காவை ஈர்த்தது. அது டிக்காவிடம் போய் தேனை உறிஞ்சியது. அதன் பின் சுக்கா மலர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தது. சுக்காவை கண்டதும் நிறம் மாறும் மலர்களாக சென்று தேன் எடுக்க முயன்றது. தேனே இல்லை. நிறம் மாறாமல் அழகாக புதிதாக தோன்றும் மலர்களில் சென்று அமர்ந்தால் தேன் கிடைத்தது. புத்திசாலி மலர்கள். அவற்றில் இருந்து ஒரு தேனீ தேனை எடுத்துக் கொண்டால், தம்மை நோக்கி வரும் பிற தேனீக்களை வராதே என சொல்வதற்காக நிறம் மாறுகின்றன. இந்த இரகசியத்தைக் கண்டுபிடித்ததும் சுக்கா மிகவும் மகிழ்ச்சியடைந்தது. சுக்காவைக் கண்டதும் நிறம் மாறும் பூக்கள் அருகே வராதே என சொல்வது புரிந்ததால், அவற்றின் அருகே சென்று  நேரத்தை வீணாக்காமல் புதுப்புது பூக்களைத் தேடி பறந்தது சுக்கா. "சுக்கா சுக்கா நீ மட்டும் எப்படி இவ்வளவு வேகமா தேன் சேகரிக்கிற எனக் கேட்டது சுக்காவின் தங்கை தேனீ. அதன் பெயர் பக்கா. பக்காவை அழைத்துக் கொண்டு போய் டிக்காவிடம் நிறுத்தியது சுக்கா.  ராஜலட்சுமி நாராயணசாமி

  • புத்தகமூட்டையைக் குழந்தைகளின் முதுகில் ஏற்றாதீர்கள் – கார்த்திகா கஜேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரிமித்ரா பள்ளிக்குழுமம் ராஜபாளையம்.

    மித்ரா கல்விக் குழுமம் ஆரம்பிக்கும் எண்ணம் எங்கிருந்து தோன்றியது? விப்ரோவில் ஹெச். ஆராக வேலை செய்து கொண்டிருந்தேன். 2015ல் என் மகள் சாரு பிறந்தாள். மகள் பிறந்த ஒரு ஆறு மாசம் எனக்கு வீட்ல இருக்க வேண்டிய சூழல். என்னோட மகளைக் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அந்த மாதிரி ஒரு வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.  எப்படியாவது வேலைக்கு போகணும் என் வாழ்நாள் முழுவதும் நான் சம்பாதிச்சுக்கிட்டே இருக்கணும் என்று நான் நினைத்தேன்.  அந்த நேரத்தில் தான் ஒரு பள்ளி தொடங்கலாம் என்று எனக்கு ஒரு யோசனை வந்தது.  ஓசூரில் இரண்டு வருடங்கள் ஒரு பள்ளியில ஆசிரியராக வேலை பார்த்த அனுபவம் அதற்குக் கை கொடுத்தது.  மித்ரா மாண்டிசோரி பள்ளி தொடங்கினேன். அதன் பிறகு  மற்றொரு இடத்தில் அடுத்த  மாண்டிசோரி பள்ளி தொடங்கினேன். ஒவ்வொரு பகுதிக்கும் தேவை இருந்தது. அதன் அடிப்படையில் தொடங்கினேன்.  இது மித்ரா கல்விக் குழுமமாக மாறியது. வீட்டுப்பாடம் இல்லாத பள்ளி என்ற முறையை தங்கள் பள்ளியில் கொண்டு வர காரணம் என்ன? அதுக்கு காரணம்  என்னுடைய மகள் தான். ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து வந்து ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாள்.  'என்னடா லட்டு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய்?' என்று நான் கேட்டேன்.  பேக் எடுத்துட்டு போகாம நான் பள்ளிக்கூடம் போன மாதிரி எனக்கு கனவு வந்ததுங்க அம்மா.’ என்று அவள் கூறினாள். அது ஒரு சாதாரண விஷயம் தான் ஆனால் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பெரியவங்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். ஆனால் இவ்வளவு சின்னக் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனையா? என்று நான் நினைத்தேன்.  பேக் எடுத்துக்கொண்டு செல்வது குழந்தைகளுக்கு  ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போதிருந்தே என் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் ஒரு தொடக்கப்பள்ளியை வாங்கினேன். வீட்டுப்பாடம் இல்லாத ஒரு பள்ளியாக இந்தப் பள்ளியை செயல்படுத்தலாம் என்ற யோசனை தோன்றியது. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது புத்தக மூட்டை.  வீட்டு பாடம் இல்லை என்றால் புத்தகமூட்டைகளைக் குழந்தைகள் சுமந்து திரிய வேண்டியது இல்லை. இது எவ்வளவு பெரிய விடுதலை. அவங்களுக்கு தேவையான மதிய உணவை, தண்ணீர் மற்றும் ஸ்னாக்ஸ் மட்டும் ஒரு சிறு பேகில் எடுத்து வந்தால் போதும். இதற்கு மையப்புள்ளி என்று சொன்னால் ஒரு குழந்தையின் ஏக்கம்தான். என் மகள் கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி தான் இது.  இதுபோன்ற பள்ளி வேறு ஏதாவது செயல்படுகிறதா?  தமிழ்நாட்டுல திருவண்ணாமலை கோயம்புத்தூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதுவரை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு வரவில்லை. ஆனால் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது இதுவரை எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். அதை நாங்கள் எங்கள் பள்ளியில் செயல்படுத்தி வருகிறோம். இந்த புதுமையான முறைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு இருக்கிறது? இந்த முறையை ஆரம்பத்தில் பெற்றோர்களுக்குப்  புரிய வைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். ஹோம் ஒர்க் இல்லாமல் பிள்ளைங்க எப்படி நல்லாப் படிப்பாங்க? எப்படி சிலபஸ் முடிப்பீங்க? எப்படி டெஸ்ட் வைப்பீங்க? இப்படி ஆயிரம் கேள்விகள் பெற்றோரிகளிடமிருந்து வந்தன.  இது மற்ற பள்ளிகள் போல எட்டு பீரியட்ஸ் இருக்கிற பள்ளி கிடையாது. இது ஒரு மாண்டிசோரி பள்ளி. இதில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும். அதை அவர்களை வாசிக்க வைத்து, அது சார்ந்த செயல்பாடுகளைக் கொடுத்து ஆசிரியர்கள் உடனிருந்து  இவற்றைச் செய்ய வைப்பார்கள். இதுபோன்று அவர்களோடு தொடர்ந்து உரையாடினேன். உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும் கூட சில பெற்றோர்கள் வீட்டுப்பாடம் வேண்டும் என்று கேட்பார்கள். அப்படித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்காக ஒன்றோ இரண்டோ கொடுப்போம். அதுவும் கண்டிப்பாக செய்து வர வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதில்லை.  ஆனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வீட்டிற்கு ரிலாக்ஸாகப் போகிறார்கள். பள்ளிக்கூடத்துக்கு ரிலாக்ஸாக வருகிறார்கள். ஒன்று வீட்டு பாடம் செய்ய தேவையில்லை. இரண்டாவது புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இருந்தால் யாருக்குத் தான் மகிழ்ச்சியாக இருக்காது? வீட்டுப்பாடம் செய்யும் அந்த நேரத்தை தங்களுடைய தனி திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். பெற்றோர்களும் அதை மகிழ்வோடு கூறி இருக்கிறார்கள். குழந்தைகளும் கூறி மகிழ்ந்திருக்கிறார்கள்.  தங்களின் சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து கவனித்து வந்த வகையில், விளையாட்டு, நாடகம், மேடைப்பேச்சு, புத்தக வாசிப்பு மற்றும் கதை சொல்லல் உள்ளிட்ட பல கற்றல் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொடுக்கும் புதுமையான கல்வி முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை அறிய முடிந்தது. இவை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை எல்லா குழந்தைகளும் அறிவாளிகள் தான். ஆனால், எந்தக் குழந்தை கேள்வி கேட்கிறதோ அந்தக் குழந்தையை அறிவாளி என்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் கேள்வி கேட்பதில்லை. அப்படிக் கேள்வி கேட்பதற்குத் தடையாக இருப்பது அவர்களிடம் தைரியம் இல்லாததுதான்.   குழந்தைகளில் இரண்டு வகை ஒன்று தைரியம் இருக்கும் குழந்தை. மற்றொன்று தைரியம் இல்லாத குழந்தை. ஒரு குழந்தைக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்றால் இது எனக்குப் புரியவில்லை சொல்லிக் கொடுங்கள் என்று  எழுந்து கேட்பதற்கு தைரியம் வேண்டும். அந்த தைரியம் வந்து விட்டாலே போதும். முதலில் தைரியத்தை வளர்க்க பயத்தை உடைக்க வேண்டும். அதற்கு ஒரு பயிற்சி தேவைப்பட்டது. அந்த பயிற்சிதான் மேடைப்பேச்சு, புத்தக வாசிப்பு, நாடகம் நடிக்க வைத்தல் மற்றும் கதை சொல்லல் உள்ளிட்ட ஏராளமான செயல்பாடுகள். இவை அனைத்துமே குழந்தைகள் பத்து இருபது பேருக்கு முன்னால் நின்று பேசுவதற்கான பயிற்சி.  எங்களுடைய பள்ளியில் ஒன்றரை வயதில் இருந்தே இதைத் தொடங்கி விடுவோம். பிரைமரி வரை அது தொடரும். ஒரு குழந்தைக்கு ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் தேவை. ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் என்பது கல்வி மற்றும் திறன்களை மட்டும் சார்ந்து இருக்காமல் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சமூகத்தை புரிந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றைச் சேர்ந்ததுதான். இப்படியான  குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் மித்ரா கல்விக் குழுமத்தின் நோக்கம்.  கதைகள் குழந்தைகள் உலகில் என்னவாக இருக்கிறது? மிக அழகான கேள்வி. நான் பார்த்த வரைக்கும் குழந்தைகள் தினமும் கதை சொல்கிறார்கள். கதை சொல்லாத நாளே கிடையாது. தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பெரியவர்கள்தான் கதை சொல்ல மிகவும்  யோசிக்க வேண்டும். ஆனால் ஸ்பான்ட்டனியஸாக குழந்தைகள் கதை சொல்கிறார்கள். குழந்தைகள் கதை கூறும் போது நான் ஒன்றைக் கூர்ந்து கவனித்தேன். அவர்கள் மிகவும் ரிலாக்ஸகிறார்கள். கதை சொல்லச் சொல்ல ஏதோ பாரம் குறைந்தது போல் உணர்கிறார்கள். சில நேரங்கள்ல அந்தக் கதைக்குள் நிறைய  இமேஜினேஷன் இருக்கும். நிறைய கிரியேட்டிவிட்டி இருக்கும். சில நேரங்களில் நியூ கிரியேஷன் இருக்கும். இதை நாம் பில்டப் என்று சொல்லுவோம்.  சாதாரணமான ஒன்றை குழந்தைகள் ரொம்பப் பெரிது பண்ணிச் சொல்லுவாங்க.  கேட்கவே ரொம்பக் கியூட்டாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து கதைகளைப் பிரிக்கவே முடியாது. குழந்தைகள் வேறு கதைகள் வேறு கிடையாது. குழந்தைகளும் கதைகளும் ஒன்று தான். ஒரு எக்சைட்மென்ட் அப்படின்னு சொல்லலாம்.  குழந்தைகளுக்கு ஒரு ரொட்டீன் இருக்கு காலைல எழுந்திருக்கணும், குளிக்கணும், பிரஷ் பண்ணனும், ஸ்கூலுக்கு வரணும், சாப்பிடணும் மற்றும் படிக்கணும் இதையெல்லாம் தாண்டி கதைகள் என்று வந்துவிட்டாலே அது அவர்களுக்கு ஒரு ரெப்ரஷ்மெண்ட்போலத்தான். ஏனென்றால் இது அந்த ரொட்டீன்ல் இருந்து வேறுபடுகிறது. கதைகள் மட்டுமே குழந்தைகளை மனிதத்தன்மையோடு இயங்க வைக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் கவனித்த வரையில் பெரும்பான்மையான கதை சொல்லிகள் குழந்தை மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இளமையாகவும் இருக்கிறார்கள். அதற்கு கதைகளும் குழந்தைகளுமே காரணம் என்று நினைக்கிறேன்.  சமூகப் பொறுப்பு மிக்க இந்தப் பணியில் தங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது? ஒரு பெண் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் வீட்டு வேலைகளை முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும். ஆனால் எங்கள் வீட்டில் நான் ஒன்றைச் செய்கிறேன். நீ ஒன்றைச் செய்துவிடு என்று பங்கிட்டுக் கொள்வோம். என்னுடைய குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம்.  என் கணவர் சில வேலைகளைச் செய்வார். என்னுடைய அம்மா சில வேலைகளைச் செய்வார். என்னுடைய அப்பா சில வேலைகளைச் செய்வார். நாங்கள் எல்லோரும் அதை எங்களுடைய பொறுப்புகளாகப் பார்க்கிறோம். வேலையாகப் பார்க்கவில்லை. அதனால் வீட்டு வேலை எந்த வகையிலும் என்னுடைய பள்ளிக்கூட வேலைகளுக்கு ஒருபோதும் தடையாக  இருந்ததில்லை. காலை 9 மணிக்கு அனைத்து வேலைகளையும் முடித்து விடுவோம். என்னுடைய பள்ளி சார்ந்த அகாடமிக் மேனேஜ்மென்ட் வேலைகள் எல்லாம் நானே பார்த்துக் கொள்வேன். வீட்டில் இவ்வளவு சப்போர்ட் இல்லையென்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. தொடர்ந்து கல்வி சார்ந்து சிந்திக்கவும் முடியாது. புதுமையான ஒன்றை யோசிக்கிறதுக்கு நமக்கு ஒரு ஸ்பேஸ் தேவை. அதை என்னுடைய குடும்பம் கொடுக்கிறது. என்னுடைய குடும்பம் என்றால் என் மகள் உட்பட. என் மகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் அவளுடைய லஞ்ச் பாக்ஸை அவளை கழுவி வைத்து விடுவாள். காலையில் குளிப்பதிலிருந்து அவளுடைய வேலைகளை அவளே பார்த்துக் கொள்வாள். குறிப்பாக அவள் சாப்பிட்ட தட்டை அவளே கழுவி வைத்து விடுவாள். இந்த நேரத்தில் என்னுடைய மகள், கணவர், அப்பா, அம்மா, மட்டுமின்றி மாமனார் மாமியாருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களும் பெரும்பான்மையான நேரத்தில் என்னுடன் கரம் பற்றி நின்று இருக்கிறார்கள்.  சமகால கல்வி முறை குறித்து தங்களுடைய பார்வை?   சமகால கல்வி முறையில் எது மாதிரியான மாற்றம் இருந்தால் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? சமகால கல்வி முறையில நான் பார்க்கின்ற மிக முக்கியமான ஒன்று வீட்டுப் பாடம்.  பெற்றோர்களில் சிலர் படித்தவர்கள். சிலர் படிக்காதவர்கள். சிலர் வேலைக்குச் செல்பவர்கள். அதனால் அவர்களுக்கு வீட்டில் சொல்லிக் கொடுப்பது என்பது சிரமம். கற்றல் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். ஆனால்,கல்வி என்பது பள்ளியில் தொடங்கி பள்ளியில் முடிய வேண்டும்.  காலையிலிருந்து எட்டு மணி நேரம் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே வன்முறைதான். அதைத் தாண்டி திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க வைப்பது என்பது அது அதைவிட வன்முறை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் வீட்டுப்பாடம் இல்லாத ஒரு முறையை உருவாக்கி அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா மாதிரியான விழாக்களில் தொடர்ந்து சில குழந்தைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அது முதலில் மாற வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். வாய்ப்புக் கொடுக்க வேண்டும். எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் எல்லா தனியார் பள்ளிகளிலும் இருக்கின்றன.  அதில் சிலம்பம், பாட்டு, நடனம்  மற்றும் ஓவியம் உள்ளிட்டவை இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையான ஏதோ ஒன்றோ இரண்டோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்.  குழந்தைகளுக்கு எது வரும், எது வராது என்று அவர்களுக்குத் தெரியாது. அதை செய்து பார்த்த பிறகு தான் அதை அவர்களால் கண்டுபிடிக்க முடியும். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கும் எல்லாப் பயிற்சியையும் கொடுக்கும் போது, அவர்களுக்கு எது வருகிறது என்று அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். எந்தக் குழந்தைக்கு எந்தத் திறமை இருக்கிறது என்பதை ஆசிரியர்களும் சரி பெற்றோர்களும் சரி, சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.  ஆண்டுவிழா மாதிரியான விழாக்களில் சுழற்சி முறையிலாவது குழந்தைகளுக்கு வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். எங்களுடைய பள்ளியில் 150 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லோருக்குமே ஆண்டு விழா மாதிரியான விழாக்களில் வாய்ப்பு வழங்கப்படும். அதற்குத் தான் நாங்கள் இங்கே பயிற்சி கொடுக்கிறோம். எல்லாப் பள்ளிகளும் இதைப் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  எனக்குச் சிறுவயதாக இருக்கும் போது வாசிப்பு பயிற்சி அதிகமாக இருந்தது. நான் வாசித்த தில் என்ன புரிந்ததோ அதைத்தான் எழுதுவேன். ஆனால் இப்போது பள்ளிகளில் ஒரே ஒரு முறை பாடத்தை நட த்தி  விட்டு நேரடியாக கேள்விகளையும் பதில்களையும் எழுதிப் போட்டு விடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் வாசிக்க வைப்பதில்லை. அப்படியே மீறி வாசிக்க வைத்தாலும் நன்றாக படிக்கும் குழந்தைகளை வாசிக்க வைத்து விட்டு, ஹோம் ஒர்க் கொடுத்து விடுகிறார்கள். 90% குழந்தைகளுக்கு புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று முழுமையாக தெரியாது.   மிக முக்கியமாக இதை நான் மாற்ற வேண்டும் என்று நினைப்பது இதைத்தான்.  எல்லாக் குழந்தைகளுக்கும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று முதலில் தெரிய வேண்டும். அதனால் மட்டுமே குழந்தைகளுக்குப் பரந்துபட்ட பார்வை கிடைக்கும். வெறும் கேள்வி பதிலால் பரந்துபட்ட பார்வை கிடைக்காது. முக்கியமாக இது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் எல்லாக் கலைகளிலும் எல்லா விளையாட்டுகளிலும் குழந்தைகள் பங்கு பெறுவதற்கான சூழலையும் வாய்ப்பையும் ஒவ்வொரு பள்ளியும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.  சமீபத்தில் தங்கள் வாசித்த கல்வி சார்ந்த புத்தகங்கள் பற்றி? ஆயிஷா நடராசன் புத்தகங்கள் மரியா மாண்டிசோரி   The whole brain child - Daniel j.seigel உதயசங்கர் ,சரிதா ஜோ கதை புத்தகங்கள்.நீதிமணி குழந்தைப்பாடல்கள் இதெல்லாம் வாசித்து  ரொம்ப ரசிச்சது. சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • ஊருக்குப் போன அம்மா

    நேற்று அரவிந்தின் அம்மா இறந்து விட்டார். அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அம்மா இப்படி நீண்ட நேரம் படுத்துக்கிடந்து பார்த்ததே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பார். தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் விட்டு வருவார். தண்ணீர் எடுத்து சமையல் செய்வார். அரவிந்தின் சீருடைகளைத் துவைப்பார். அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். அவர் எப்போது உறங்குவார் என்று தெரியாது. எப்போது எழுந்திரிப்பார் என்று தெரியாது. ஆனால் இப்போது காலையில் இருந்து ஒரே இடத்தில் அசையாமல் படுத்துக் கிடந்தார். யார் யாரோ வந்தார்கள். மாலைகளைப் போட்டார்கள்.. அழுதார்கள். அரவிந்துக்கு எதுவும் புரியவில்லை. அம்மா அழகாக இருந்தார். அவருக்குப் பிடித்த நீலநிறப் புடவையைக் கட்டியிருந்தார். அவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எழுந்து விடுவார் இப்போது எழுந்து விடுவார் என்று அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கண்ணைக் கூடச் சிமிட்டவில்லை. அவனுக்கு வயிறு பசித்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அரவிந்தன் அழுதபோது அவனுடைய பொன்னம்மா பாட்டி, “ அம்மா சாமிகிட்டே போயிட்டா..”  என்று சொல்லி அழுதாள். அவனுக்குப் புரியவில்லை. அவனிடம் அம்மாவின் வாயில் அரிசி போடச்சொன்னார்கள். ஒரு சின்னக்குச்சியைக் கொளுத்தி கொடுத்து திரும்ப வாங்கிக் கொண்டார்கள். அம்மா நெருப்புக்குப் பக்கத்தில் போகக்கூடாது என்று எப்போதும் சொல்வார். “ அவன் சின்னப்பையன்.. சுடுகாட்டுக்கு வேண்டாம்.. “  என்று யாரோ சொன்னார்கள்.  பிறகு அம்மாவை அலங்காரம் செய்த வண்டியில் வைத்துக் கொண்டு போனார்கள்.  ” எங்கே போகிறாள் அம்மா? “ அவன் சித்தியிடம் கேட்டான்.   ” அம்மா ஊருக்குப் போறாள்.. சீக்கிரம் வந்துருவா..” என்று சொல்லி அழுதார். இப்போது அரவிந்தனுக்குச் சமாதானமாக இருந்தது. பலமுறை அம்மா ஊருக்குப் போவார். காலையில் போய் விட்டு இரவில் திரும்பி வருவார். சிலசமயம் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஆகிவிடும். அப்போது அவன் பாட்டி வீட்டில் தான் இருப்பான். அங்கிருந்து தான் பள்ளிக்கூடத்துக்குப் போவான். கடைசியாக ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அங்கிருந்து வரும்போது இப்படி தூங்கிக் கொண்டே வந்தார். இப்போதும் ஊருக்குத் தானே போகிறார்.  “ அம்மா சீக்கிரம் வரவேண்டும் “ என்று மனதுக்குள் நினைத்தான். ஆனாலும் அவனுடைய மனதில் ஏதோ ஒரு துக்கம் பொங்கியது.  பள்ளியில் ஆசிரியர்கள் அவனிடம் பரிவு காட்டினார்கள். அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது. அம்மா எப்போது வருவார் என்று பாட்டியிடம் தினம் கேட்பான். அப்படிக் கேட்டாலே பாட்டி அழுவார். அவர் அழுவதைப் பார்க்கச் சகிக்காது. அதனால் பாட்டியிடம் கேட்க மாட்டான். அடிக்கடி வீட்டின் பின்புறம் இருக்கிற புங்கை மரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்வான். அந்த மரத்திடம் “ அம்மா எப்போ வருவார்? “ என்று கேட்பான். மரம் பதில் சொல்லாது என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அப்படி தினம் ஒருமுறையாவது கேட்க வேண்டும். அப்போது தான் அவனுக்கு நிம்மதி. புங்கைமரம் தலையாட்டும். சிலசமயம் பூக்களை அவன் தலையில் உதிர்க்கும். சில சமயம் காற்றினால் அவன் தலைமுடியைக் கோதி விடும்.  அப்போது இலையுதிர்காலம். புங்கை மரத்தின் இலைகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாறத்தொடங்கியிருந்தன. எப்போதும் கவலை நிறைந்த முகத்துடன் இருந்த அரவிந்த் மரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களைக் கவனிக்கவில்லை. அன்றும் அவன் மரத்தினடியில் உட்கார்ந்து, “ அம்மா எப்போ வாருவார்? “ என்று கேட்டான்.  அப்போது திடீரென ஒரு பெரிய காற்று வீசியது. புங்கை மரத்திலிருந்து பழுத்த இலைகள் மழை மாதிரி அரவிந்தின் தலைமீது விழுந்தன. தலையை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்திலும் சில இலைகள் விழுந்தன. புங்கை மரத்தில் பாதி இலைகள் இல்லை. அவன் நெற்றியில் விழுந்த இலையை எடுத்தான். அது பாதிபச்சையும் பழுப்புமாய் இருந்தது. அவனைச் சுற்றிலும் இலைகள். எல்லாம் அடர்பழுப்பு நிறத்திலும், மெல்லிய பழுப்பு நிறத்திலும், சில இலைகள் பச்சையும் மஞ்சளுமாக இருந்தன. அவனுக்கு இப்போது மரத்தைப் பார்க்கச் சோகமாக இருந்தது. மொட்டையாகத் தெரிந்தது. இலைகள் உதிர்ந்தால் மரம் அழுமோ.  கீழே மரத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் மாலை மாதிரி இலைகள் கிடந்தன. அவன் புங்கை மரத்தடிக்கு வரும்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குள்ளிருந்து அவனைக் கவனித்துக் கொண்டேயிருப்பார்.  பின்வாசலில் நின்று கொண்டு அவர், “ அரவிந்த் கண்ணு! இதுதான் இயற்கை.. பழுத்த இலைகள் உதிர்ந்திரும்.. சில சமயம் நோய்வாய்ப்பட்ட இலைகளும் உதிரும்.. அப்புறம் புது இலைகள் வளரும்..” என்றார். அரவிந்த் நிமிர்ந்து பாட்டியைப் பார்த்தான். பாட்டியும் மரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். “ உன் அம்மா ஒரு நோய்வாய்ப்பட்ட இலை.. அது தான் உதிர்ந்துட்டா.. இனி அவ வரமாட்டா.. மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு.. என்ன செய்ய முடியும்? பழுத்த பிறகும் நான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. எங்கண்ணு….. புது இலையா நீ இருக்கீல்ல.. ” என்று உறுதியான குரலில் சொன்னார்.. அந்தக் குரலில் கவலை இல்லை. நம்பிக்கை இருந்தது. அரவிந்துக்கு ஏதோ புரிந்ததைப் போலிருந்தது. அவன் மெல்ல எழுந்து பாட்டியை நோக்கிப் போனான். பாட்டி அவனை அணைத்துக்கொண்டார். அன்று இரவு அரவிந்துக்கு தூக்கத்தில் ஏதேதோ கனவுகள். ஒரு கனவில் அம்மாவும் சிரித்துக் கொண்டே வந்தார். தூங்கி எழுந்து பின்வாசலுக்கு வந்தான்.  என்ன ஆச்சரியம்!  புங்கை மரத்தில் புதிய தளிரிலைகள் தோன்றியிருந்தன. இளம் பச்சை நிறத்தில் மரத்தின் உடல் முழுவதும் அலங்காரம் செய்ததைப் போல இருந்தது. அரவிந்தைப் பார்த்து புங்கை மரம் சிரித்தது.  அரவிந்தின் உதடுகளும் புன்னகை பூத்தன. அந்தப் புன்னகையின் ஓரத்தில் அவனுடைய அம்மாவின் நினைவுகளும் ஒட்டியிருந்தன. உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • ஆனைப்பாறை

    மணிராசு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கணக்குப்பாடம் என்றாலே அட்டகோணலாய் முகம் சுழிக்கும். அதென்ன வேப்பங்காயா கசப்பதற்கு… ‘எனக்கு கணக்கு போட வரலை. படிப்பு ஏறலை’ என்று உறங்கும்போதும் தன்னையறியாமல் பேசிக்கொண்டிருந்தான். கணக்கு மட்டுமில்லை தமிழ் இலக்கண வகுப்பிலும் ஆங்கில வகுப்பிலும் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென முழிப்பான். ஆசிரியருக்கும் கேள்வி கேட்பதென்றதால் மணிராசு முகம்தான் ஞாபகத்தில் வருகிறது. வகுப்பில் முதல் கொட்டுக்காய் இவனுக்குத்தான் விழுகும். இவனைப்போலவே இன்னும் இரண்டுமூன்று பேர் இருந்தாலும் எதையெதையோ பதிலாக சொல்லி சமாளித்துக்கொண்டிருப்பார்கள். இவனுக்கு அதுவும் தெரியாது. குட்டுக்கள் வாங்குவதற்கென்றே பிறவி எடுத்தது போல் நின்று கொண்டிருப்பான். மற்றவர்கள், “மணிராசு இருக்காம்ல. மொத்த அடிகளும் அவனுக்குத்தான் விழும். நம்ம தப்பிச்சிரலாம்” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.   மணிராசுக்கு பள்ளிக்கூடம் போவதை நினைத்தாலே கொட்டுக்காயும் பிரம்பும்தான் முன்னால் வந்து நிற்கிறது. இப்படியே எத்தனை நாள்தான் அடிகள் வாங்கிக்கொண்டிருப்பது. பள்ளிக்கு மட்டம் போட யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் பள்ளிக்கூடம் போவது போல் போய் வழியிலிருக்கும் பூங்காவில் போய் இருந்துகொள்வான். பள்ளிவிடும் நேரத்தில் நல்லபிள்ளையாக வீட்டுக்கு வந்துவிடுவதுமாக இருந்தான். அதுவும் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. இந்த விசயம் யாரோ சொல்லி அவன் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது.  மறுநாள் அதே போல பைக்கூடை தோளில் மாட்டிக்கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தான். பூங்காவின் இன்னொரு வாயில் வழியாக கையில் ஒரு குச்சியை பிடித்தபடி அவனது அம்மா எதிரில் வந்துகொண்டிருந்தார்.  “ஆஹா.. இங்கேயும் குச்சிக்கம்பு வருகிறதே” என்று திகைத்து நிற்கும்போதே பிட்டத்தில் ஒரு கொடுப்பு வைத்தார் அம்மா. “ஒழங்கு மரியாதையாக பள்ளிக்கூடம் போவாயா” என்று அடுத்த அடிக்கு குச்சியை ஓங்கிப்பிடித்தார். “வேண்டாம்.. வேண்டாம். நான் பளள்ளிக்கூடம் போகிறேன்” அடிவிழுந்த இடத்தில் தடவிக்கொண்டே திரும்பி நடந்தான்.  “ராஸ்கோல்.. இனிமேல் பூங்காவுக்குள்ள பார்த்தேன்… முதுகுத்தொலியை உரிச்சிப்போடுவேன்.. உரிச்சி” அதட்டல் சத்தம் அவனை துரத்திக்கொண்டு போனது. “இதென்ன.. படிக்கவில்லை என்றாலும் குட்டுகள் விழுகிறது. விளையாடப்போனாலும் குட்சிக்கம்பு மிரட்டுது. என்னதான் செய்ய” என்று மிரண்டு போய்விட்டான். வகுப்பில் நன்றாகப்படித்து முதல் மதிப்பெண் வாங்கும் நடேசனின் சிநேகிதம்தான் இவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.  “மணிராசு.. பள்ளிக்கூடத்திற்கு ரெண்டு நாள் லீவு விட்டாச்சி. பக்கத்துல இருக்கிற கருமலை காட்டிற்கு அப்பிடியே போயிட்டு வருவோம். வா.. போவோம்” என்று நடேசன்தான் கூப்பிட்டான். “வீட்டுப்பாடம் படிக்கலைன்னா வாத்தியார் திட்டுவாரு. நான் வரலை” “ஏய்… பாடத்தையும் உன் பயத்தையும் தூக்கி ஓரமாக வையி. உனக்கு நான் சொல்லித்தாரேன்" என்றதும் கொஞ்சம் சமாதானமாகி சம்மதித்தான்.  ஊரிலிருந்து கொஞ்சதூர நடையிலேயே காட்டின் எல்லை ஆரம்பமானது. புதர்ச்செடிகளின் ஊடாகப் போன செம்மண் தடத்தில் நடந்து போகையில் புள்ளிமான்கள் பாதையின் குறுக்கே தாவி மறுபக்கமாய் ஓடியது. அவை முட்புதர்கள் பக்கமாய் போய் நின்றுகொண்டு இவர்களையே உற்றுப்பார்த்தன. கிளுவைச்செடிகளும் கள்ளிப்புதர்களும் அவற்றின்மேல் படர்ந்த பிரண்டைக்கொடிகளும் இருபுறமும் அடர்ந்து நின்றன. மலையடிவாரத்தை அடைந்த போது அங்கே ஒரு பெரிய அத்திமரம் கிளைகள் பரப்பி நின்றது. நீண்டு விரிந்த அதன் வேர்கள் தரைக்கு மேல் தலையை நீட்டி  வந்திருப்பவர்கள் யாரென்று முகம் பார்த்தது. அங்கே மயில்களின் அகவல் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருந்தது. இவர்கள் நின்ற இடத்திற்கு மிக அருகில் ஒரு புளியமரத்தடியில் கொம்புகளோடு நின்ற ஒரு ஆண்மான் புளியம்பழங்களை தின்றுகொண்டிருந்தது. குளிர்ச்சியான அத்திமரக்காற்று சன்னமாக வீசி மேலெல்லாம் தொட்டுக்கொண்டுபோனது. கரும்பச்சை நிறத்தில் தடித்த அத்தி இலைகளும் அதன் சிவந்த பழங்களும் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அந்த மரத்தடியில் நடந்து வந்த அலுப்புத்தீர காற்று வாங்கியபடி ‘உஸ்.. அப்பாடா’ என்று உட்கார்ந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார்கள்.  மணிராசுக்கு பாடாய் படுத்திய கணக்குப்பாடமும்  கொட்டுக்காய்களும் இப்போது எங்கே போனதென்ற மாயம் தெரியவில்லை. மரநிழலின் குளிர்ச்சியும் காற்று வந்து வருடிப்போகும் ஸ்பரிசமும் புத்துணர்வின் ஊட்டமாய் இருந்தது. அருகிலிருந்த குளத்திற்குப் போய் அதில் பூத்திருந்த அல்லி மலர்களை பறித்துக்கொண்டு வந்தார்கள். மனமெல்லாம் அல்லிப்பூக்களாய் மலர்ந்து சிரித்தது.  “வா.. காட்டுக்குள்ளே இன்னும் கொஞ்சதூரம் போவோம்” என்று நடேசன் கூப்பிடவும் எழுந்து நடந்தார்கள். தண்ணீர் தாகமாக இருந்தது. ஓரிடத்தில் அழகிய நீர்ச்சுனை ஒன்று தென்பட்டது. அதில் ஊற்றெடுத்துப் பொங்கிய நீர் வாய்க்கால்வழியாக ஓடி அல்லிக்குளத்திற்கு போய்க்கொண்டிருந்தது.    தாகம்தீர சுனைநீரை உள்ளங்கைகளை குவித்து பருகினால் அதன் சுவை இதுவரை கண்டிராத வகையில் தேங்காய்ப்பாலாய் இனித்தது. உடலோடு மனதெல்லாம் அந்த சுவை நிறைந்து தளும்பியது. இன்னும் கொஞ்சதூரம் காட்டுக்குள் போனபோது நரிகள் ஊளையிடும் சத்தம் அருகில் கேட்டது. ஒரு பெரிய பாறை ஒன்று யானைத்தலை, துதிக்கை பெருத்த உடலுடன் படுத்திருப்பதைப் போல ஓரிடத்தில் இருந்தது. “அய்.ய்.யா..ஆனைப்பாறை” என்று உற்சாகத்தில் துள்ளிக்குதித்து அந்தப்பாறை மீது ஏறிப்போனார்கள்.  அங்கிருந்து சுற்றிலும் பார்த்தால்  அவர்களது ஊரும் பள்ளிக்கூடமும் தெரிந்தது. இப்போது பள்ளிக்கூடத்தைப் பற்றிய பயம் விட்டுப்போயிருந்தது. கணக்கு வாத்தியார் ஒரு எலியைப் போன்ற உருவத்தில் ஓடுவது போலிருந்தது. கடினமான கணக்குகளுக்கும் எளிதாக விடை வந்தது போல் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.  வானத்தில் திட்டுதிட்டாய் மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அதன் நிழல் ஆனைக்கல்லை தொட்டுக்கொண்டு போனது. செடிகளில் பூத்திருந்த வண்ணப்பூக்களுக்கு மேல் பட்டாம்பூச்சிகள் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. “குழந்தைகளே.. நன்றாகப்படிக்கிறீர்களா..” யாரோ பேசும் சத்தம் கேட்டது. மனிதர்களே இல்லாத காட்டில் இப்போது யார் பேசுகிறார்கள் என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். ‘கணக்கு வாத்தியார்தான் இங்கேயும் வந்தவிட்டாரோ’ மணிராசுக்கு மின்னலாய் ஒரு எண்ணம் வந்து போனது. பார்த்தால் அருகில் ஒருவருமே இல்லை.  ‘அப்பாடா.. தப்பித்தேன்’ லேசாக மூச்சு வந்தது.  “மணிராசு.. நடேசா.. உங்களைத்தான் கேட்கிறேன்” மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.    இலேசாக பயம் வரவும் “வா.. போயிருவோம்” என்று எழுந்தனர். “அட.. நான் ஆனைக்கல் பேசுகிறேன். தைரியமாக இருங்க” மணிராசும் நடேசனும் ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.  “மணிராசு.. கவலைப்படாதே. நடேசனை மாதிரி நீயும் நன்றாகப் படிப்பாய். நீங்கள் அடிக்கொரு தடவை இங்கே வந்து போங்க. நான் உங்கள் நண்பன்” என்று சொல்லி மறுபடியும் அமைதியாகப் படுத்துக்கொண்டது. ஆனைக்கல் சொன்னது மாதிரியே இருவரும் அடிக்கொருதடவை அங்கே வருவதும் அதன் மேல் ஏறி விளையாடுவதுமாக இருந்தார்கள். அவர்களுடைய நட்பில் ஆனைக்கல்லும் சந்தோசமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் வாத்தியார் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் மின்னல்வெட்டுப்போல பதில் சொல்கிறான் மணிராசு. கணக்கு வாத்தியாருக்கு ஆச்சரியமாக இ ரு ந்தது.          “மணிராசு.. எப்படி படிப்பாளி பையனாக மாறினாய். ஞாபகசக்தியும் ரொம்ப நன்றாக இருக்கிறதே. சொல்லிக்கொடுக்கிற பாடங்களை அப்படியே ஒப்பிக்கிறாய்.” “எல்லாம் ஆனைக்கல் கொடுத்த தைரியம்தான்” என்று மணிராசு நடேசனைப் பார்த்து மெளனமாகச் சிரித்துக்கொண்டான்.  அத்திமரக்காற்றும் நீர்ச்சுனையும் ஆனைப்பாறையும் சொல்லிக்கொடுத்த பாடத்தில் கொட்டுக்காய்களும் பிரம்புகளும் எங்கேயோ ஓடிப்போய் ஒளிந்துகொண்டன.       ஜெ.பொன்னுராஜ்  1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2

  • சுதந்தர நதியில் நண்பன்

    ஆங்கிலம் : Gloria Whelan தமிழில் : சுகுமாரன் கடைசி வாத்துகளும் எழுந்து பறப்பதை லூயிஸ் கவனித்தான். டெட்ராய்ட் நதி சீக்கிரத்தில் உறையப் போகிறது. மீன் பிடிக்கும் படகை பாதுகாக்க லூயிஸ் திருப்பினான். இதை எப்போதும் அவனுடைய அப்பா செய்வதுதான். அப்பா வடக்கே வேலையாக சென்று விட்டார். அப்பா போவதற்கு முன்பு அவனிடம் சொல்லியிருந்தார். 'மகனே, தோட்டம் உன்னுடைய பொறுப்பு, நான் என்ன செய்தேனோ அதை நீ செய்தால் போதும்' என்றார். குளிரான டிசம்பர் மாத காற்று 'பியர்ஸ்' மரத்தின் இலைகளை சுருள வைத்திருந்தது. லூயிஸ்-யின் தாத்தா பிரான்சிலிருந்து அமெரிக்கா வந்த போது கொண்டு வந்த மரங்கள் அவை. டெட்ராய்ட் நதியின் ஓட்டத்திலேயே எஞ்சின் படகுகளும் பாய்மர படகுகளும் கடலுக்கு செல்வதை லூயிஸ் பார்த்தான். புதரில் அசைவு ஏற்பட்டது. மானா அல்லது நரியா, எதுவென தெரியவில்லை லூயிஸ் நினைத்தான். 'நீ நண்பனா?' ஒரு குரல் கேட்டது. லூயிஸ் படகை நிறுத்தினான். தப்பித்து ஓடுகிற அடிமைகளின் வார்த்தைகள் அவை, நண்பர்களை அடையாளம் கண்டுக் கொள்வதற்காக அடிமைகள் சொல்வதாக அவனுடைய அப்பா சொல்லி இருக்கிறார். 'என்ன வேண்டும்?' என்று அவன் கேட்டான். 'சுதந்தரம்'  நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டான் 'நம்பிக்கை இருக்கிறது' என்று பதில் வந்தது. மூடியிருந்த சால்வையை விலக்கிக் கொண்டு ஒரு கருப்பின பெண் புதரிலிருந்து வெளிப்பட்டாள். ஒரு சிறுமி அவளுடன் இருந்தாள். ஒரு பையனும் வந்தான். அவனுக்கு லூயிஸ் வயது, 12 அல்லது 13 இருக்கும். 'கடவுள் உன்னை காப்பாராக' என்று அந்தப் பெண் சொன்னாள். 'என் பெயர் சாரா, என் மகள் லூசி, என் மகன் டெய்லர்' என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். டெட்ராய்டு பாப்டிஸ்ட் ஆலயத்தில் லூயிஸ்சின் தந்தையைப் பார்த்த போது அவர் உதவுவதாகச் சொன்னார். தப்பித்து ஓடும் அடிமைகளைப் பிடிப்பதற்காக இரத்த வெறி பிடித்தவர்கள் எங்களைத் தேடுகிறார்கள். இந்த நதியைக் கடந்து கனடா நாட்டிற்கு சென்று விட்டால் சுதந்தரம் கிடைத்து விடும் என்று அந்த பெண் கூறினாள். இரவு நேரத்தில் இந்த நதியைக் கடப்பது ஆபத்தானது. அடிமைகள் தப்பித்துக் செல்வதற்கு உதவி செய்தால் சட்டப்படி உதவுபவர்களுக்கும் தண்டனை உண்டு. அதனால் அப்பாவை அம்மா உதவ வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டது லூயிஸ்க்குத் தெரிந்திருந்தது. ஆனால் எவ்வளவு சொன்னாலும் அப்பா கேட்பதில்லை. ஒரு ஆத்மா அடிமை வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது என்று கேட்பார். 'அப்பா இங்கே இல்லை. நதி ஐஸ்-யாக உறைந்து விட்டது. காற்றும் பலமாக அடிக்கிறது. மூன்று மணி நேரம் பயணமாக வேண்டும்' என்றான் லூயிஸ். 'தண்ணீர் அதிக குளிராக இல்லை, காற்றும் பலமாக வீசவில்லை. நாங்கள் ஏற்கனவே இரண்டு நதிகளைக் கடந்து வந்தோம். டெட்ராய்ட் நதி சுதந்தர நதி. இதுதான் எங்கள் கடைசி வாய்ப்பு. எங்கள் எஜமானர் இந்த குழந்தைகளை விற்று விட்டார். என் பையன் டெய்லர் ஒரு குதிரை அல்லது மாடு மாதிரி அவர்களால் நடத்தப்படுகிறான். நீ எங்களை அழைத்துக் செல்லாவிட்டால் இந்த நதியில் குதித்து இறந்துப் போவோம்' என்றார் சாரா. அந்தப் பையன் லூயிஸிடம் முகம் சுளித்தான். 'நான் பந்தயம் வைக்கிறேன். என்னால் படகில் இந்த நதியை கடக்க முடியும்' என்றான். அந்தப் பையனின் சவால் லூயிஸ்-யைக் குத்தியது. 'உன்னால் முடியாது. எங்கெங்கே நீரோட்டம் மற்றும் ஆழமற்ற பகுதிகள் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்' என்றான். அந்தப் பெண்மணி நடுங்கினாள். அந்த சிறுமி சத்தமில்லாமல் அழுதாள். 'யாருக்கும் சத்தம் கேட்காமல் எப்படி அழுவது என்பதை அவள் கற்று வைத்திருக்கிறாள்' என்று லூயிஸ் நினைத்தான். அப்பா இப்போது இருந்தால் என்ன செய்திருப்பார் என்பது லூயிஸ்க்குத் தெரியும். 'இங்கே காத்திருங்கள்' என்றான் அவன். வெதுவெதுப்பான மேலாடையைப் போல் இருந்த சமையலறையின் சூடு லூயிஸ்யைச் சூழ்ந்தது. கனலாக இருந்த கரிகளுக்கு மேல் 'கெட்டில்' தொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை மீனின் குழம்பு வாசனை அவனின் மூக்கை துளைத்தது. அந்த வெள்ளை மீன் அவன் பிடித்தது. 'கிட்டதட்ட இரவு உணவு தயாராகி விட்டது, லூயிஸ்' என்று அம்மா சொன்னார். 'படகில் ஒரு நிமிட வேலையிருக்கிறது. என்னுடைய 'ஸ்கார்ப்'யை எடுக்க வந்தேன்' என்றான் அவன். லூயிஸ் படுக்கையறைக்குப் போனான். படுக்கையில் கிடந்த ஸ்வெட்டரையும் மேலாடையையும் எடுத்துக் கொண்டான். பிறகு அவன் சமையலறைக்கு வந்தான். லூயிஸ் அம்மாவுடன் உரத்த குரலில் பாடி மேசையை சுற்றி நடனமாடினான். நடனத்தின் போது அம்மா சிரித்துக் கொண்டாள். உடம்பு வலியால் சிறிது முணங்கவும் செய்தாள். அவளுக்கு குளிராகவும் இருந்தது. அவன் கதவை சிறிது அம்மாவுக்கு நேராக திறந்தான். 'கவலை வேண்டாம் அம்மா, என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருள் என்பது பகல் வெளிச்சத்தை உள்ளே திருப்பும்' என்றான். அம்மா புன்னகையுடன், 'உன் அப்பா எப்போதும் இப்படித்தான் சொல்வார்' என்றாள். கம்பளி உடைகள், சாக்லேட், ரொட்டி ஆகியவற்றை லூயிஸ் சாராவுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்தான். லூயிஸ்யைப் போலிருந்த டெய்லர் மேலாடையை போடவில்லை. லூயிஸ் அவனை போட சொன்னான். 'அதைப் பற்றி கவலை வேண்டாம். அவன் வலுவானவன்' என்றார் சாரா. வெள்ளையினத்தவர்களில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள் என்று நான் அவளிடம் சொல்லியிருக்கிறேன்' என்றும் சொன்னார். இரண்டு பையன்களும் படகை தண்ணீரில் தள்ளினார்கள். சாராவும் லூசியும் படகில் தாவி ஏறினார்கள். 'உனக்கு துடுப்பு போட தெரியுமா?' என்று லூயிஸ் டெயிலரிடம் கேட்டான். 'என்னால் முடியும், எஜமானர் ஹார்மன்னுடன் மீன் பிடிக்கச் செல்லும் போது துடுப்பு போட்டிருக்கிறேன். சகதியான ஏரியில் கூட செலுத்தியிருக்கிறேன்' என்றான் டெயிலர். லூயிஸ்யும் டெயிலரும் துடுப்புகளை எடுத்தனர். பலமான நீரோட்டத்திலும் வலிமையான கரங்களால் துடுப்பு போட்டார்கள். அந்த நதி லூயிஸ்க்கு பகலைப் பொறுத்த வரை நண்பன், இரவிலோ ஆபத்தானவன். துடுப்புகளை நீரோட்டத்தை எதிர்த்து மேலும் கீழும் அசைக்கும்படி லூயிஸ் சொன்னான். குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தில் அடித்தது. தோட்ட வீட்டின் வெளிச்சம் மங்கலாகத் தெரிந்தது. 'எப்படி இங்கே வந்தீர்கள்?' என்று சாராவை லூயிஸ் கேட்டான். 'முதலில் ஓஹியோ நதியைக் கடந்தோம். ஒவ்வொரு இடமாக பாதாள ரயிலில் வந்தோம்' என்றாள் சாரா. 'தப்பியோடும் அடிமைகளைப் பிடிப்பவர்கள் எங்களை தொடந்தார்கள்' என்றாள் லூசி. 'மோப்பம் பிடிக்க அவர்கள் நாய்களையும் அனுப்பினார்கள்' என்றான் டெய்லர். 'சில நல்ல மனம் படைத்தவர்களால் நாங்கள் இங்கு வரைக்கு வந்தோம்' என்றாள் சாரா. படகு மெல்லிய ஐஸ் கட்டிகளுக்கிடையே செல்ல தடுமாறியது. பகல்நேரமென்றால் லூயிஸ்க்குத் துணையாக மீன் பிடிக்கும் படகுக் காரர்களும் இருப்பார்கள். லூயிஸ்-சின் பற்கள் கிட்டித்தன. விரல்கள் மரத்தன. சாரா லூசியை குளிர் காற்றிலிருந்து காப்பாற்ற துணியால் போத்தினார். தோட்ட வீட்டின் விளக்கு வெளிச்சம் மறைந்து விட்டது. ஆனால் வேறொரு வெளிச்சம் நதியில் தெரிந்தது. அது கண்காணிப்பு படகிலிருந்து வந்தது. கண்காணிப்பு படகிலுள்ளவர்கள் கண்டு பிடித்தால் லூயிஸ் ஜெயிலுக்கு அனுப்பப்படுவான். சாராவும் அவளுடைய பிள்ளைகளும் மறுபடி அடிமைகளாக்கப்படுவார்கள். 'படகை நிறுத்து. எல்லோரும் அமைதியாக இருங்கள்' என்றான் லூயிஸ். படகு நிறுத்தப்பட்டு நதி நீரில் மிதந்துக் கொண்டிருந்தது. ஆண்களின் பேச்சு சத்தம் கண்காணிப்பு படகிலிருந்து வந்தது. ஆனால் கண்காணிப்பு படகின் வெளிச்சம் அவர்கள் மீது படவில்லை. இப்போது பேச்சு சத்தம் கேட்கவில்லை. கண்காணிப்பு படகு தொலைவுக்கு சென்றிருந்தது. பையன்கள் மீண்டும் துடுப்பு போடத் தொடங்கினர். அவர்களின் தோள்கள் வலியெடுக்கத் தொடங்கின. டெய்லர் லூயிஸ்க்காக வருந்தினான். அங்கிருந்த மெளனத்தைக் கலைக்க டெய்லர் லூயிஸ்யிடம் கேட்டான். 'இந்த நதியில் எந்த மாதிரியான மீன்கள் பிடிப்பாய்?' 'வெள்ளை மீன், ஹெரிங், பெர்ச், ஸ்டெர்ஜன் வகை மீன்களைப் பிடிப்போம். அப்பா 80 பவுண்டு எடையுள்ள ஸ்டெர்ஜன் மீனைக் கூட பிடித்திருக்கிறார்' என்றான் லூயிஸ். 'அது பெரிய மீன். அதைப் பிடிக்க தனி பலம் வேண்டும். ஏரிகளில் மீன்களைப் பிடிக்க வலைகளை அமிழ்த்தி வைப்பார்கள்' என்றான் டெய்லர். 'காற்று அவர்களுக்கு எதிராக இருந்தது. தண்ணீர் ஐஸ் கட்டிகளாக வலுப்பெற்றிருந்தது. நதியில் படகு வலுக்கி செல்வது போலிருந்தது. படகில் இருப்பவர்களை பத்திரமாக கரை சேர்க்க லூயிஸ் அப்பாவை நினைத்துக் கொண்டான். சாரா ஒரு பாட்டு பாடத் தொடங்கினார். பிள்ளைகளும் சேர்ந்துப் பாடினார்கள். 'ஓ! கடவுளே, எங்களை மூழ்குவதிலிருந்து காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!'  படகு மேலும் கீழும் தாழ்கிறது. மூழ்குவதிலிருந்து காப்பாற்றுங்கள் தேவதைகள் வருவதைப் பார்க்கிறேன். காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!' என்று அவர்கள் பாடினார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு லூயிஸ்யும் சேர்ந்து பாடினான். காற்று பாட்டின் வார்த்தைகளை அவர்களுக்குப் பின்னால் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் அவர்கள் வெளிச்சத்தைப் பார்த்தார்கள். 'இன்னொரு கண்காணிப்பு படகா?' என்று டெய்லர் திகைத்தான். ஆனால் அந்த வெளிச்சம் நிலையாக தெரிந்தது. 'அது கனடா' என்று லூயிஸ் கத்தினான். அவர்கள் கனடாவின் கரைக்கு வந்து விட்டார்கள். லூயிஸ்யும் டெய்லரும் வெளியே குதித்து படகை கரைக்கு இழுத்தார்கள். அருகிலுள்ள ஒரு தோட்ட வீட்டின் கதவைத் தட்டினான் லூயிஸ். வீட்டிலுள்ளவர்கள் அவர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டால் என்ன செய்வது? லூயிஸ்க்கு மூச்சே நின்றது. ஆனால் வீட்டின் உள்ளேயிருந்து வந்த ஆணும் பெண்ணும் வரவேற்றார்கள். உணவளித்தார்கள். அன்றிரவு லூயிஸ்யை தங்கச் சொன்னார்கள். 'உன்னால் இந்த இரவில் திரும்பி போக முடியாது' என்றான் அந்த மனிதன். 'நான் போக வேண்டும். நான் படகில் சென்றிருப்பது அம்மாவுக்குத் தெரியும். நான் திரும்பி போகாவிட்டால் மூழ்கி விட்டதாக அம்மா நினைப்பார்கள்' என்றான் லூயிஸ். சாரா அவனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். லூசி அவனின் கால்களைத் தழுவிக் கொண்டாள். இரு பையன்களும் கைகுலுக்கிக் கொண்டார்கள். 'நான் திரும்ப வருவேன். இருவரும் சேர்ந்து கோடையில் ஸ்டெர்ஜன் மீனைப் பிடிப்போம்' என்று லூயிஸ் உறுதியளித்தான். அவர்களை சுதந்தரமாக விட்டுவிட்டு லூயிஸ் கிளம்பினான். லூயிஸ்சின் முகத்தில் குளிர் காற்று அடித்தது. துடுப்பால் ஐஸ் கட்டிகளை உடைத்துக் கொண்டு லூயிஸ் படகைச் செலுத்தினான். இப்போது படகு எடையற்று இருந்தது. ஓட்டுவது சுலபமாக இருந்தது. அவன் மட்டும் தனியாக இருந்தது பயமுறுத்தியது. டெய்லரின் துணையை நினைத்துக் கொண்டான். அவன் பாடினான். அது துணையாக இருந்தது. 'படகு கவிழாமல் காப்பாற்றுக' என்ற வார்த்தைகள் காற்றில் கலந்து படகைத் தொடர்ந்தது. சாராவின் குரலையும் பிள்ளைகளின் குரலையும் கேட்டான். இருட்டில் தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. காற்று கூட அவன் வருகையை தெரிவித்துக் கொண்டிருந்தது. ஐஸ் கட்டிகளை உடைத்துக் கொண்டு படகு முன்னேறியது. அவனுடைய அம்மா கரையில் காத்திருந்தார். கரையில் இறங்கியதும் அம்மா அவனை அணைத்துக் கொண்டார். அவன் சாராவையும் லூசியையும் டெய்லரையும் பற்றி அம்மாவிடம் சொன்னான். 'அப்பா திரும்பி வந்தவுடன் சொல்வேன். அப்பா, நீங்கள் நினைத்ததை நான் செய்துவிட்டேன்' லூயிஸ் இதை அம்மாவிடம் சொன்னான். பின் குறிப்பு: 1850 டிசம்பர் மாதம். டெட்ராய்ட் நதி பனியால் உறைந்து விடும். அதில் படகுப் பயணம் தடை செய்யப்படும். இந்நிலையில் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற கனடாவிற்கு தப்பியோடும் சாரா, அவளுடைய இரண்டு பிள்ளைகளைப் படகில் ஏற்றுக் கொண்டு ஆபத்தான படகுப் பயணம் செய்கிறான். 15 வயது சிறுவன் லூயிஸ். அவன் வெள்ளை இனத்தவன். லூயிஸ்சின் அப்பா படகோட்டி. வெளியூர் சென்றிருந்தார். அப்பா இருந்திருந்தால் அடிமைகள் விடுதலை பெற உதவியிருப்பார் என்று நினைத்து ஆபத்தான இந்த முடிவை லூயிஸ் எடுக்கிறான். 'சுதந்தரநதியில் நண்பன்' இச்சிறுகதை உணர்ச்சிவேகம், இரக்கம், தைரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இக்கதையை எழுதிய குளோரியா வீலன் விருதுப் பெற்ற பெண் எழுத்தாளர். அவருடைய இன்னொரு நூலான Homeless Bird தேசிய விருதை வென்றது. அவர் தனது கணவர் ஜோவுடன் வட மிச்சிகனில் வசிக்கிறார். சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்.

  • பேசும் கடல் - 8

    குழந்தைகளுக்கு இயல்பாகவே கேள்வி கேட்கும் இயல்பு உண்டு.  அமுதாவும் இனியனும் இதில் விதிவிலக்கு இல்லை.  கேள்விகள் கேட்பதால்  அவர்களுக்கு பலத்தெளிவுகள் கிடைக்கிறது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. பல நேரங்களில் குழந்தைகளின் கேள்வியை அலட்சியப்படுத்தி விடுகிறோம். கேள்வி கேட்கும் போது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி மேம்படுகிறது. சரியான, வியப்பான பதில் கிடைக்கும்போது நம்பிக்கை கூடுகிறது.  கடல் பாட்டியை இனியனும் அமுதாவும் அதிகம் தேடத் தொடங்கிவிட்டார்கள். தினமும் கடற்கரைக்கு வருவது, கடல் பாட்டியோடு உரையாடுவது, கேள்வி கேட்பது அவர்களுக்கு பிடித்தமானதும், நெருக்கமானது என்றாகிவிட்டது. "இனியன் நம்ப அப்பாவுக்கு 'பாடே' இல்லையாம், அம்மா சொன்னாங்க, அப்போ நமக்கு காசு கிடைக்காதுல்ல......" அமுதா இனியனிடம் கேட்டாள். " ஆமாம் அமுதா..... இந்த மாதம் முழுவதும் 'பாடே' இல்ல. கடல்ல மீன்கள் எல்லாம் வெலங்க போயிடும். குளிர், மழை, காற்று இருப்பதால் நம்ம அப்பாவால வெலங்க போக முடியாது அதான் 'பாடு' இல்ல. இனியன் நீண்ட விளக்கம் கொடுத்தான் .  என்ன பேரப்பிள்ளைகளா? இப்பெல்லாம் நீங்க இரண்டு பேருமே கேள்வி பதில முடித்துக் கொள்கிறீர்களா? பெரும் இரைச்சலுடன் அலையடித்து ஓய்ந்தது. " பாட்டி...... பாட்டி உங்க மேல எங்களுக்கு கோபம்....."  அமுதா செல்லமாக கூறினாள்.  அவள் முகத்தை திருப்பியும் கொண்டாள். காற்றில் முடி  பறந்தது. " ஆஹ.... கோபமா... ஏன் ?" எங்க அப்பா தொழிலுக்கு வந்த இந்த மாசம் 'பாடே' இல்ல தெரியுமா? டிசம்பர் மாதம் தான் அரையாண்டு விடுமுறை. கிறிஸ்மஸ் புத்தாண்டு புது டிரஸ் எல்லாம் எடுக்கிற மாசம், பாடே இல்ல..... நீங்க எங்களுக்கு நிறைய பாடு தரலாம் தானே". படபடவென வெடித்தாள் அமுதா. " ஆமாம் பாட்டி...... தினம் தினம் உழைக்கிற அப்பாவுக்கு பாடு இல்லன்னா கஷ்டம் தானே?  நிதானமாக கேட்டான் இனியன். " அது சரி..... ரெண்டு பேரும் அதான் கோபமா இருக்கீங்களா?  நாம கொஞ்சம் பேசுவோமா? " சரி சரி ....."கோரஸாக கூறினார்கள். "  நாமெல்லாம் யாரு? கடல் பாட்டி கேள்வியைத் தொடங்கினாள். " மீனவர்கள்" அமுதா பட்டென  கூறினாள். " very good மீனவர்கள் கடல்ல என்ன செய்வாங்க...." " மீன்பிடிப்பாங்க, என்ன பாட்டி நீ இப்படி கேக்குற இனியன் உரிமையோடு கேட்டான். " இல்ல....."  'அய்யோ பாட்டி..... குழப்புறீங்க' இருவரும் மணல்ல அமர்ந்து கொண்டார்கள். "நெய்தல் பூர்வகுடி  மீனவர்கள் கடலில் மீன்களை தேடிச் சென்று பிடிப்பதில்லை. மலையும் மலை சார்ந்த வாழ்வும் வாழும் காட்டுவாசிகள் மரங்களை வெட்டுவதில்லை. மரங்களிலிருந்து விழும் குச்சிகளை தான் பொறக்குவார்கள். அது போல மீனவர்கள் என்னிடம் (கடல்) மீன்களை பிடிக்க வேண்டும் என்று வருவதில்லை. " மீன்பிடிக்க வரமாட்டாங்களா? அமுதா குறுக்கிட்டாள். " ஆமாம்..... அவர்கள் வலைகளைப் போடுவார்கள் எது 'படுகிறதோ' அதை மட்டும் தமக்கு எடுத்து வருவார்கள். மீனவர்கள் தங்கள் தொழிலில்  இலாப நட்டம் பார்க்க மாட்டார்கள்.  "பாடு உண்டா" என்று தான் பார்ப்பார்கள்". கடல்பாட்டி உணர்வுபூர்வமாக விளக்கினாள். " பாடு..... விரிவாக சொல்லுங்க பாட்டி" அமுதா  "எவ்வளவு மீன் பிடிச்சீங்கன்னு யாரும் கேட்க மாட்டோம். 'என்ன பாடு'  'என்ன பட்டிருக்கு என்று தானே கேட்போம்." " ஆமாமா.. ஆமாம்.... " மீனை நாம் பிடித்தால் இயற்கையை நாம் வெல்வது என்று பொருள்.  மீன் அதுவாக வலைகளில் பட வேண்டும், அதுதான் நமக்குரியது.  இயற்கையை நம்பி வாழ்பவர்கள் எப்போதும் இயற்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். நமக்கு கிடைப்பது இயற்கையின் கொடை என்று நம்புவார்கள். அதனால் தான் கிடைத்ததை 'பாடு' என்கிறார்கள். " பாட்டி சூப்பர்......" " 'படு... படுவது... பாடு' என்று பொருள். என்ன படுக்கிறதோ அதுதான் பாடு. அதற்குமேல் அவர்கள் சலிப்படைவது இல்லை.  மறுநாள் மீண்டும் கடலுக்கு செல்வார்கள். " உண்மைதான் பாட்டி, சில நேரம் நிறைய மீன்பட்டால் வலுத்த பாடு என்று அப்பா சொல்வார், மீன் படவில்லை என்றால் சுருக்கப்பாடு என்பார்கள்." இனியன் கூறினான். " எனக்கு புரிஞ்சத சொல்லட்டுமா?" அமுதா கேட்டாள். " பாடு உண்டா? என்றால் படுதல் உண்டா என்று அர்த்தம்.  மீன் பிடிக்கிறோம் என்றால் நாம் பிடிக்கிறோம் என்று பொருள்.  மீன் பட்டிருக்கிறது என்றால் இயற்கையே கொடுக்கிறது என்று பொருள்‌."  இப்போ புரியுதா கடலை நம்பி வாழ்பவர்கள் தங்கள் சொல்லில் கூட எவ்வளவு நன்றி உணர்வோடு வாழ்கிறார்கள். அதான் என் மக்கள். கடல்ல பாடு இல்லனா சேர்ந்து போவார்கள் ஆனால் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்."  என்று பூரிப்புடன் கடல் பாட்டி பேச ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அமுதாவும், இனியனும். – கடல் பேசும்

  • வெல்லம் தின்னால் ஜாலி (நட)

    1 மேல ஏறுனா மலை கீழ விழுந்தா மழை 2 வெல்லம் தின்னால் ஜாலி  வெள்ளம் வந்தால் காலி 3 கொழம்புல கொதிக்குது கோழி  கூட்டமாய் ஆடலாம் கோலி  4 நிறைய தின்னு பழம் அப்பதான் கிடைக்கும் பலம் 5 நாரை மூக்கு அலகு  நாந்தான் எப்பயும் அழகு 6 பாதியா பிச்சா அரை படுத்துத் தூங்குவது  அறை  7 சுவற்றில் போவது பல்லி  படிக்கப் போனா பள்ளி 8 மனுசனுக் கிருப்பது தலை மரத்தில்  இருப்பது தழை 9 விட்டெறிவது கல் ஊத்திக் குடிப்பது கள் சாலை செல்வம் பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார். புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

  • சறுக்கு ரயில் சாகசத்தில் ஒரு கணிதப் பாடம்!

    புத்தகங்களோடு ஒரு இன்பச் சுற்றுலா - 4 நம்ம ஊர்ல திருவிழா நடக்கிற நேரத்துல ராட்டினம், குடைராட்டினம் எல்லாம் பார்க்லாம். இப்பவும் கடற்கரைகள்லேயும் சிறுவர் பூங்காக்கள்ளேயும் பார்க்க முடியுது. தெருவுக்கே கூட சின்ன அளவு குடைராட்டினத்தைத் தள்ளிட்டு வர்றாங்க. செங்குத்தா மேலே போயிட்டு, கீழே  இறங்குற ராட்டினத்தில அடியிலே இருக்கிறப்ப கைக்குட்டையையோ வேற ஏதாச்சும் ஒரு பொருளையோ தரையில போட்டுட்டு, மறுபடி பெட்டி கீழே வர்றப்ப அதை எடுக்கிறதே ஒரு சாகசமா இருக்கும். இப்ப, சுற்றுலா மையங்களா இருக்கிற மனமகிழ் பூங்காக்கள்ல தொடர்வண்டி போலவே பல பெட்டிகளோட இருக்கிற ரோலர் கோஸ்டர்  எல்லாரையும் கவர்ந்து இழுக்குது. திறந்த நிலையில் இருக்கும் பெட்டிகளோட இருக்கைகள்ல உட்கார்ந்துகிட்டா, வண்டி புறப்பட்டு, வளைஞ்ச வளைஞ்சு திரும்புற தண்டவாளங்கள்ல வேகமாகப் போகும். ஏறி இறங்குற இடங்கள் நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கும். பயமா இருந்தாலும் அந்தச் சவாரி வேணாம்னு  மறுக்கிறவங்க  ரொம்பக் கொஞ்சம் பேர்தான் இருப்பாங்க. ஆ…ஈ… ஊ… ஏ… ஓ… என்று கூச்சல் போட்டுக்கிட்டே அதிலே பயணம் செய்யத்தான் பொதுவா எல்லாரும் விரும்புவாங்க. அந்த ரோலர் கோஸ்டர் பயணத்தை கணினிக் கணித முறையில் நிரலாக்குவது பற்றி ஒரு சுவையான புத்தகம் வந்திருக்கிறது. நம்ம கைப்பேசியிலோ, இல்லாட்டி தொலைக்காட்சி விளையாட்டுக்கு உள்ளேயோ நுழையுறதுக்கு ஒரு கடவுச் சொல் பயன்படுத்துறோம். அந்தக் கடவுச்சொல் ஒரு கோட், இல்லைன்னா நிரலாக்கம்னு சொல்லலாம். நாம பயன்படுத்துற எல்லாத்தையுமே ஒரு முறையான வரிசைப்படியான செயலுக்கு உட்படுத்த முடியும். அதாவது நிரலாக்கம் அல்லது கோட் செய்ய முடியும். என்ன பயன்? அப்படி கணினி வழியில் செய்கிற நிரலாக்கத்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? அதைப் பத்திப் பேசுற புத்தகம்தான் ‘ஹவ் டு கோட் எ ரோலர் கோஸ்டர்’. தமிழ்ல சொல்றதுன்னா, ‘ஒரு சறுக்கு ரயிலை நிரலாக்கம் செய்வது எப்படி’. இந்த அறிவியல், தொழில்நுட்பத் புத்தகத்தை, ஒரு கதைப் புத்தகம் போல சுவைபட  எழுதியிருப்பவர் ஜோஷ் ஃபங்க்.  சிறார் அறிந்துகொள்ள வேண்டிய நடைமுறை அறிவியலுக்கு எளிதான கதவைத் திறந்துவிடுதுன்னு இந்தப் புத்தகம் பத்திச் சொல்றாங்க.  “கோடிங்” –இப்படி ஆங்கிலத்திலேயும் “கணினி நிரலாக்கம்” –இப்படித் தமிழ்லேயும் சொல்றோமே, இது எதிர்காலத்துல கண்டிப்பா தெரிஞ்சி வைச்சிருக்க வேண்டிய அடிப்படையான, இன்றியமையாத ஒரு திறன். அதை சலிப்பூட்டாமல், ரோலர்கோஸ்டர்  சவாரி எப்படி சிலிர்ப்பும் சுவையுமாக இருக்குமோ அதையே தலைப்பாகவும் வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஃபங்க்.  புத்தகத்தின் ஒரு சிறப்பாக, “இப்படி இருக்குமானால்” (இஃப்), “அதன் பின்” (தென்) என்ற கூற்றுகளை நூலாசிரியர்   வரிசைப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டுறாங்க நூல் திறனாய்வாளர்கள். அவ்வாறு வரிசைப்படுத்துற செயலையும், அதற்குப் பிறகு ஏற்படும் சுழற்சி (லூப்) எனும் அடிப்படைக் கூறுகளையும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த நூல் விளக்குறதா அவங்க சுட்டிக்காட்டுறாங்க. அன்றாட வாழ்க்கையிலேயே கணினி நிரலாக்கம எப்படிப்  பயன்படுதுன்னு விளக்குறதன் மூலம், தொழில்நுட்பம் என்பது வெறும் கணினித் திரை அல்ல, அது நம்மைச் சுற்றியுள்ள உலகம்னு இந்தப் புத்தகம் புரிய வைக்குது. இதுவும் புத்தகத்தோட ஒரு சிறப்புதான்னு  சொல்றாங்க.                             ரோலர் கோஸ்டர் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்தானே? அதையே பின்னணியா வைச்சிக்கிட்டு, அதன் பாதுகாப்பை உறுதி செய்றதுக்கும், சரியான நேரத்தில் சவாரியைத் தொடங்குறதுக்கும்,  வேகத்தைக் கட்டுப்படுத்துறதுக்கும் இந்தக் கணினி நிரலாக்கம் மிக முக்கியமானது. இது போன்ற வெற்றிகரமான நூல்களின் வெற்றிக்குப் பெரும்பாலும் எளிய மொழியும், வண்ணமயமான ஓவியங்களும் முக்கியமா பங்களிக்கும். இந்த நூலும் அப்படிப்பட்ட தெளிவான விளக்கப் படங்களைக் கொண்டிருக்குது. இது கடினமான கருத்துகளைக் கூட சிறுவர்கள் புரிந்துகொள்ள உதவுதுன்னும் பாராட்டியிருக்காங்க. குழந்தைகளை வெறும் வாசகர்களாக நிறுத்திவிடாமல், இளம் கண்டுபிடிப்பாளர்களாக  மாற்றத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதப்பட்டிருக்குதுன்னு சொல்றாங்க. எல்லாருக்குமான புத்தகம் புத்தகத்துல இருக்கிற இன்னொரு முக்கியமான சிறப்பு என்ன தெரியுமா? பொதுவா நம்ம ஊர்லேயும் மத்த எல்லா நாடுகள்லேயும் பெண், ஆண் ஆகிய இரண்டு பாலினங்களை மட்டும்தான் அடையாளப்படுத்துவாங்க. ஆண்–பெண் சமத்துவம்னு அவங்களை அறியாமலே ஆணைத்தான் முதல்ல குறிப்பிடுவாங்க. இந்தப் புத்தகம், இந்த இரண்டு பாலின வரையறுகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக்க விரும்பாதவங்க இருக்காங்க. இருவகைப் பாலினமும் அல்லாதவங்களா வாழுற “நான்–பைனரி” மனுசங்களும் தொழில்நுட்பத்தைக் கத்துக்கிட மாதிரி, அவங்களையும் உள்ளடக்கியதா  எழுதப்பட்டிருக்காம். அதுக்காகவே ஜோஷ் ஃபங்க்கைப் பாராட்டலாம்னு தோணுதுல்ல? சரி, இப்படிப்பட்ட பாலின சமத்துவ எண்ணம் எப்படி வந்திருக்கும்? “நிரலாக்கம் செய்திடும் சிறுமிகள்” (கேர்ஸ் ஹூ  கோட்) என்ற கருத்துடன் ஒரு திட்டத்தை அமெரிக்காவிலே தொடங்கினாங்களாம். படிப்படியா அது மத்த நாடுகளுக்கும் பரவியிருக்காம். நம்ம நாட்டிலேயும் இதைப் பல இயக்கங்கள் ஏற்றுக்கொண்டு, பாலினப் பாகுபாடு இல்லாத சமத்துவம் என்ற கருத்தைப் பரப்பிட்டு இருக்காங்க. அந்த இயக்கத்தோட ஒரு பகுதியாத்தான், நான்–பைனரி மக்களையும் சேர்த்துக்கிடணுன்னு வலியுறுத்துறாங்க. அதை ஏத்துக்கிட்டுதான்  ஜோஷ் ஃபங்க் தன் புத்தகத்தை எல்லாருக்கும் பொருந்துற மாதிரி எழுதியிருக்கிறாராம். இந்த நூல் 2019ஆம் ஆண்டுல வெளிவந்துச்சு. முதல்ல சொன்ன திட்டத்துல பல புத்தகங்களைத் தொடர்ச்சியா வெளியிட்டுட்டு வர்றாங்க. இதை வெளியிட்டிருக்கிற பதிப்பகத்தோட பெயர் ‘பெங்குயின் யங் ரீடர்ஸ்’. உலகம் முழுக்க இந்த இயக்கத்தோட புத்தகங்கள் பல லட்சக்கணக்கான படிகள் வித்திருக்காம். ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை உலக அளவில் அதிக விற்பனையான புத்தகங்களோட பட்டியல்ல, இந்தத் தொடரையும் சேர்த்திருக்காங்க. பேர்ளும் பாஸ்கலும் கதைப் புத்தகம் இல்லைன்னாலும் கூட, இதிலே  ஒரு பொண்ணு வர்றாங்க. அவங்க பேரு பேர்ள். அவங்களுக்குத் துணையா ஒரு ரோபோ வருது.  அதோட பேரு பாஸ்கல். அவங்க ரெண்டு பேரும் ஒரு மனமகிழ் பூங்காவுல இருக்கிற ரோலர் கோஸ்டரிலே ஒரு சுத்து சவாரிக்கு  எவ்வளவு பேரை ஏத்திக்கிடறது, எத்தனை அடையாள வில்லை விக்கிறது, அடுத்த  சவாரியைத் தொடங்குறதுக்கு எத்த நேரம் எது அப்படீங்கிறதையெல்லாம், கணினியைப் பயன்படுத்தி நிரலாக்கம் செய்றாங்க.  சறுக்கு ரயிலை இயக்குறவங்களுக்கும், அதிலே பயணம் செய்ய விரும்புறவங்களுக்கும் இவங்களோட நிரலாக்கம் ரொம்ப உதவியா இருக்கு. இதைச் சொல்றப்பவே, நிரலாக்கம்னா என்ன, அது எங்கேயெல்லாம் பயன்படுது, இதை எப்படி சிரமமில்லாம கத்துக்க முடியும்கிற  விளக்கங்கள் கணினித் தரவுத்தளங்களின் தகவல்கள் போல அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்குது. கதை வாசிக்கிறது போலவே சுவையாவும் இருக்கின்றன. அந்த ரோபோவுக்கு பாஸ்கல்னு பெயர் வைச்சிருக்காங்க இல்ல? பிரெஞ்சு நாட்டவரான பிளேஸ் பாஸ்கல் என்ற கணித மேதையின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்குது. 17ஆம் நூற்றாண்டுல வாழ்ந்தவரான அவர் கணித ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய பங்களித்தவர்.  இன்றைய கணினிக்கெல்லாம் முன்னோடியாக இயந்திரவியல் கணக்குக் கருவியை உருவாக்கியவர். நூலாசிரியர் ஜோஷ் ஃபங்க் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்குமான படைப்புகளுக்குப் புகழ்பெற்றிருப்பவர். மிகவும் அனுபவம் வாய்ந்த ஓர் எழுத்தாளர். கல்வி சார்ந்த, அறிவியல் தொடர்பான, வரலாறு பேசுகிற, கணிதத்தை விளக்குகிற புத்தகங்களை ஏராளமா எழுதியிருக்கிறாராம். வாய்ப்பு உள்ளவங்க, இணையத்தளத்திலே ஒரு சிற்றுலா போய் இந்தப் புத்தகத்தைப் பெற்றுப் படித்துப் பயனடையலாம். அ.குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.

  • நெல்லிக்காய்

    அழகு குண்டு நெல்லிக்காய் ! மெழுகு பளிங்கு நெல்லிக்காய் ! வெளிர் பச்சை நெல்லிக்காய் ! களிப்பாய் உண்ண நெல்லிக்காய்! அரிஅரியாய் நெல்லிக்காய் ! எளியோர் ஆப்பிள் நெல்லிக்காய்! சாறு குடிக்க நெல்லிக்காய் ! சாதம் செய்ய நெல்லிக்காய் ! சத்து நிறைந்த நெல்லிக்காய் ! ரத்தம் கூட்டும் நெல்லிக்காய் ! தித்திக்கும் நெல்லிக்காய் ! தினமும் தின்ன நெல்லிக்காய் ! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

  • யூனிசெப் பிரகடனம் - சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் - 9

    ஒரு குடும்பம். சிறியது; ஆனால் அழகானது. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளம் இணையரின் குடும்பம் அது. இருவருமே படித்தவர்கள். இருவரும் நவீனமான பெரிய தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளில் பணி செய்பவர்கள். கை  நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள்;ஆனால், அதற்குப் பல மடங்கு அதிகமாக ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி  நேரத்திற்கும் மேலாகப் பணிகளில் கடும் உழைப்பைச் செலுத்தியாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள். எப்போதும் மனமும்,உடலும் அழுத்தம் தாங்காமல் துவண்டு போகும் நிலையில் இருப்பவர்கள்.  பணப் பற்றாக்குறை இல்லைதான்; ஆனால், தாங்கமுடியாத வேலைப்பளு, உடல்-மன அழுத்தங்களின் விளைவாக இருவருக்குமிடையே அவ்வப்போது சிறு சிறு பூசல்கள் வரும் தமிழ் இலக்கிய மொழியில் சொன்னால், 'ஊடல்'கள் வரும்! திருமணமாகி இரண்டாவது ஆண்டில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. மிக அழகான பெண் குழந்தை. குறுகுறு நடந்து, சிறு கைகள் நீட்டி மழலை மொழியில் பேசிக் களிப்பூட்டும் சிறுமியாக அக்குழந்தை வளரத் தொடங்கியது. பெண் குழந்தை என்பதால் கணவனுக்குச் சற்றே ஏமாற்றம்;வருத்தம்;ஏக்கம். அந்த உணர்வுகள் அவரின் தாயாரின் தூபம் போடுதலால் கொஞ்சம் கொஞ்ச மாகப் பெருகி வளர்ந்தன.  அலுவலகம் விட்டு வரும் போதே அலுப்பும் சலிப்புமாக வரும் கணவன்; வீட்டிலோ குழந்தையைப் பார்த்துக்கொண்டு சமையலில் கவனம் செலுத்தியவாறு பரபரவென்று இயங்கும் மனைவி. "இவ்வளவு நேரமாகுது, ஒரு காப்பி குடுக்கக்கூட உன்னால முடியலையா?" என்பான் கணவன். முதலில் கொஞ்ச நாள்கள் வரை ஒரு பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே, " இதோ கொண்டு வர்றேங்க" என்று காப்பியுடன் போய்க் கொண்டிருந்த மனைவிக்கு, ஓரிரு சந்தர்ப்பங்களில் இயலாமை காரணமாகக் கோபம் வந்தது. முதலில் இலேசான முணுமுணுப்புடன் நின்று போன அந்தக் கோபம், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகியது.  போதாக்குறைக்கு மனைவியின் நிறுவனத்தில் வேலை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. பெண்களை இரவு ஷிப்டுகளிலும் வேலைக்கு வருமாறு செய்யலாம் என ஒரு நீதிமன்றத்தீர்ப்பு வந்தாலும் வந்தது, அந்தப்பெண்ணின் நிறுவனம் அவளது வேலை நேரத்தை மாலை நான்கு  மணியிலிருந்து இரவு மூன்று மணி வரை என மாற்றியது. வீட்டில் பூகம்பம். பெண்ணுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. குழந்தை அம்மாவுக்காகத் தவித்தது. கணவன் வேலை முடிந்து வரவே இரவு ஏழு மணி கூட ஆகி விடும்; ஆனால், மனைவி நான்கு மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தார் கள். கணவனின் மனதில் ஆயிரத்தெட்டுச் சந்தேகங்கள்.  இதற்கு மேல் விவரிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் சண்டைகள். முடிவுறாத வாக்குவாதங்கள். மனைவிக்குத் தெரியாமலேயே கணவன் வெளி நாட்டு வேலைக்கு விண்ணப்பித்து திடுதிப்பென்று கிளம்பிப் போவதற்கும் தயாராகி விட்டான். மனைவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எவ்வளவோ பேசியும் கணவனின் முடிவில் மாற்றமில்லை. அதை விட மோசம், குழந்தையைத் தானே அழைத்துக் கொண்டு போகப்போவதாகச் சொன்னான் அவன். இரகசியமாகத் திட்டம் தீட்டி அவனும்,அவனின் குடும்பத்தினரும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.குழந்தை யைக் குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தன் அம்மா, அப்பா இருவரையும் கூடவே வெளிநாட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டான் கணவன்.  குழந்தை,கணவன் இருவரையும் பிரிந்த பெண், முதலில் நிலைகுலைந்து போய் அலுவலகத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தாள். தன்னை ஒரு வழியாக உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் சொன்னார் : "பெற்றோரில் ஒருவரது சம்மதம் இல்லாமல், அவருக்குத் தகவல் கூட த் தெரிவிக்காமல் ஒரு குழந்தையைக் கணவனோ அல்லது மனைவியோ எவர் ஒருவரும் நாட்டை விட்டு வெளியே கொண்டு போகக்கூடாது, சட்டப்படி அது தவறு. நீங்கள் உங்கள் கணவன் மீதும், மாமனார்-மாமியார் மீதும் வழக்குத் தொடரலாம். யூனிசெப் பிரகடனத்தின்படி, ஒரு குழந்தையை, அந்தக் குடும்பத் திற்குத் தொடர்பேயில்லாத வெளி நபர் ஒருவரோ அல்லது கணவன்- மனைவி இருவரில் எவர் ஒருவரோ மற்றவரின் அனுமதியில்லாமல்,அவருக்குத் தகவல் சொல்லாமல் வெளிநாட்டிற்கு அழைத்துப் போவது முடியாது. அது சட்டப்படி குற்றம்!" என்று விரிவாக விளக்கினார் வழக்கறிஞர்.  இப்போது மனைவியின் நிலைமை பரிதாபமாக இருந்தது.'கணவன் மீதும், மாமனார் மாமியார் மீதும் வழக்குத் தொடுக்கலாமா? உலகம் என்ன சொல்லும்?ஏற்கெனவே நம் மீது கணவனுக்கு நம்பிக்கையில்லை. இப்போது என்ன செய்வது?' என்று குழம்புகிறாள் மனைவி.  இது கதையல்ல; நிஜம். நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தின் பல குடும்பங்களில் இம்மாதிரிப் பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன. யுனிசெப் நிறுவனம் இது பற்றிய விதி எண் -11 இல் மேற்கண்ட விளக்கத்துடன் இன்னொரு விஷயத்தை யும் சேர்த்தே சொல்கிறது. அதன்படி, "குழந்தைகளை உரியவர்கள் அனுமதியின்றி அல்லது அவர்களுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஒரு நாட்டை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு போக யாருக்கும் உரிமையில்லை. அவ்வாறு யாரேனும் செய்தால் அது சட்டத்திற்கு எதிரானது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி எந்தக் குழந்தையையும் வெளியே கடத்திக் கொண்டு போக முடியாதபடி கவனித்து தடை  செய்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்." கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

bottom of page