top of page

இயலில் தேடலாம்!

211 results found with an empty search

  • 2025 – கவனிக்க வேண்டிய சிறார் புத்தகங்கள்

    உதயசங்கர் நூல்கள் கொழுக்கட்டை மழை பெய்த நாள் – நிவேதிதா பதிப்பகம்  டாங்கோவின் எரியும் இதயம் – நூல்வனம் பதிப்பகம் யுஷ்கா எனும் பூனை – குப்ரின் – வானம் பதிப்பகம்  காக்கா கொண்டு போச்சு – அஷீதா – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்  பாப்பி பள்ளிக்கூடம் போகிறது – இயல் பதிப்பகம் பாப்பி வாசிக்கிறது – இயல் பதிப்பகம் எனக்குப் பிடித்ததை நான் சாப்பிடுவேன் – இயல் பதிப்பகம் உலகம் சுற்றும் பாப்பி – இயல் பதிப்பகம் உழைக்க வேண்டும் – இயல் பதிப்பகம் கனவு காணுங்கள் – இயல் பதிப்பகம் தீரன் ஹாய் வா – இயல் பதிப்பகம் மாயக்காடு – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்  Magic Hat – Nivethitha Pathippagam  அழகிய பன்றிக்குட்டி – வானம் பதிப்பகம்  கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் – இந்து தமிழ் திசை  விழியன் நூல்கள் தேநீரில் மிதக்கும் கணிதம் – புக் ஃபார் சில்ட்ரென் ஆகா மரம் – இயல்வாகை கணிதக்கற்றலும் கற்பித்தலும் – சுட்டி மீடியா மாயமான கருப்புத்தொப்பி – வேக் அப் புக்ஸ் புத்தகக்கண்காட்சி எனக்கு எதற்கு? – குட் லக் ப்ளிகேஷன்ஸ் அம்கா – புக் ஃபார் சில்ட்ரென்  மகிழ் கணிதம் – சுட்டி யானை சிங் மங் டுங்  - நம் கிட்ஸ் மூன்றாவது மொழி – பாரதி புத்தகாலயம் ட டாங் – புக் ஃபார் சில்ட்ரென் கொ.மா.கோ.இளங்கோ நூல்கள் மொகாபாத் மர்ம ம் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 1 - சாகித்ய அகாடமி சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 2 - சாகித்ய அகாடமி பூ பூவனம் – சாகித்ய அகாடமி ஆயிரம் வாசல் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் தேனி சுந்தர் நூல்கள் 1.நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : புக்ஸ் ஃபார் சில்ரன் 2.நட்சத்திரக் குழந்தை : புக்ஸ் ஃபார் சில்ரன் 3.திட்டமிடாத வகுப்பறைகள்: பாரதி புத்தகாலயம்  4.உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - வாசல் பதிப்பகம் ஞா.கலையரசி நூல்கள் வைக்கம் வீரர் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் பண்டித ரமாபாய் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் கல்வியாளர் வசந்தி தேவி – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் காணாமல் போன ஓவியம் – பாடநூல் கழகம் வேலை நிறுத்தம் வெற்றி – பாடநூல் கழகம் மல்லியும் பல்லியும் – நிவேதிதா பதிப்பகம் சிறகு விரித்த சிறார் கதைகள் – நிவேதிதா பதிப்பகம்  A journey to the Blue Mountain – Book For Children ஆதி வள்ளியப்பன் நூல்கள் எப்படிப் பேசினார்கள்? – பாடநூல் கழகம் கடலுக்குள்ளே என்ன இருக்கு? – பாடநூல் கழகம் நாம் வாழ உதவுபவர்கள் – பாடநூல் கழகம் அது என்ன பறவை? – பாடநூல் கழகம் பாலூட்டிகள்  - பாடநூல் கழகம் நான் ஆறு – பாடநூல் கழகம் இது என்ன மரம்? – பாடநூல் கழகம் குடுவை மனிதன் – வாசிப்பு இயக்கம்  வானில் பறந்த மகிழ் – புக் பார் சில்ட்ரென் அலங்குப் பாதுகாவலர்கள் – ப்ரதம் புக்ஸ் விஷ்ணுபுரம் சரவணன் இடம் – சால்ட் பதிப்பகம் சரிதா ஜோ காட்டுக்குள் மர்ம விலங்கு – இயல் பதிப்பகம் குருங்குளம் முத்துராஜா நூல்கள் 1.மாதியும் பூனையும் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் 2.பூ பூ பூசணிப்பூ – மேஜிக் லேம்ப் வெளியீடு  3.தாட் பூட் வாட் – வாசிப்பு இயக்கம் ராஜலட்சுமி நாராயணசாமி நூல்கள் தங்கப்பறவையும் கழுகும் – கவிநயா பதிப்பகம் கனலின் பயணம் – ஹெர் ஸ்டோரிஸ் பாரதிக்குமார் காஷ்குமரி – நிவேதிதா பதிப்பகம்  உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • லண்டனிலிருந்து அன்புடன் - 9

    புத்தாண்டில் குதூகலமான புத்தகப் பயணம்: காத்தரீன் ரெய்னருடன்... குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களில் அதுவும் குறிப்பாக படக் கதைப் புத்தகங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கே ஓவியர்கள் கதைகளுக்குப் படம் வரைவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் தாங்களே எழுதுகிறார்கள். தமிழில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளுக்கே ஓவியர்கள் படங்கள் வரைகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில், ஓவியர்கள் பலரும் எழுத்தாளர்களாகவும் இருக்கின்றனர். படக் கதைகள் உருவான காலம் முதல் இன்று வரை, ஓவியர்கள் குழந்தைகளுக்காக எண்ணற்ற புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இந்தக் கதைகளில் படங்களும் வார்த்தைகளும் ஒன்றோடொன்று சேர்ந்து, குழந்தைகளின் கற்பனை உலகை இன்னும் விரிவாக்குகின்றன. ஓவியர்களே எழுத்தாளர்கள் என்பதால், பல புதிய முயற்சிகளை அவர்கள் ஓவியங்களிலும், எழுத்தோவியங்களிலும், வடிவமைப்பிலும் செய்ய்கிறார்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவரான, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காத்தரீன் ரெய்னர் (Catherine Rayner) அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சமீபத்தில் நான் நூலகம் சென்ற போது, காத்தரீன் ரெய்னர் அவர்களின் Ernest என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எர்னஸ்ட் என்று பெயரிடப்பட்ட மூஸ் மான் (moose) பற்றிய கதை. எர்ன்ஸ்ட் அளவில் மிகவும் பெரிய விலங்கு. நம்மூர் எருமை மாட்டைவிட பெரியது என்று வைத்துக்கொள்ளலாம். அதனால், அது புத்தகத்தினுள் வர முடியாமல் தவிக்கிறது. ஆனால் எப்படியாவது புத்தகத்தினுள் வந்து குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று அது ஆசைப்படுகிறது. எர்னஸ்ட்டுக்கு சிம்பக் என்ற அணில் நண்பன் இருக்கிறது. அதனிடம் சென்று யோசனை கேட்கிறது. சிம்பக், “குனிந்து பாரு”, “வளைய்ந்து பாரு” என்று சொல்கிறது. எர்னஸ்ட் எல்லாவற்றையும் முயற்சி செய்கிறது. ஆனால் எது செய்தாலும், அது புத்தகத்தினுள் வர முடியுமா? முடியாதல்லவா! இறுதியில், எர்ன்ஸ்ட் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்பதை கடைசிப் பக்கத்தில் தான் பார்க்க முடியும். எப்படித் தெரியுமா? நீங்களே சற்று கண்களை மூடி யோசித்துப் பாருங்கள்… இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், எர்னஸ்ட்டின் உடலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஓவியமாக இருக்கும். ஆனால் புத்தகத்தின் கடைசி பக்கத்தில், பெரிய அளவிலான ஒரு பக்கத்தை எட்டாக மடித்து வைத்திருப்பார்கள். அதை விரித்தால், எர்னஸ்ட்டின் முழு ஓவியம் தெரியும்! இப்போது புரிகிறதா? எர்னஸ்ட் என்ற பெரிய மிருகம் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்று? இப்போது, ஓவியர் காத்தரீன் ரெய்னர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அவர் ஸ்காட்லாந்தின் முக்கிய நகரமான எடின்பராவைச் சேர்ந்தவர். இவரது முதல் படக் கதைப் புத்தகமான Augustus and His Smile 2007ஆம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு Harris Whose Feet Are Too Big, Abigail, a Giraffe Who Loves Counting, Iris and Isaac போன்ற பல புத்தகங்களை அவர் எழுதியும் வரைந்தும் உள்ளார். இவரது புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் விலங்குகளே. அது பற்றி அவர் சொல்வது என்ன தெரியுமா? “விலங்குகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என் ஓவியங்களிலும் பெரும்பாலும் விலங்குகளையே வரைகிறேன்,” என்று காத்தரீன் ரெய்னர் கூறுகிறார். இந்த ஆர்வம் அவருக்கு சிறுவயதிலிருந்தே இருந்ததாம். அவர் குழந்தையாக இருந்தபோது வீட்டில் பல செல்லப்பிராணிகள் இருந்தன. முயல், நாய், ஹாம்ஸ்டர், தங்கமீன் என்று நிறைய! அவர் 13 வயதாக இருந்தபோது, குதிரை ஒன்றை பராமரித்தாராம். இன்றும் அவரிடம் ஒரு குதிரை இருக்கிறதாம். புதிய ஒரு விலங்கு கதாபாத்திரத்தை வரைய வேண்டுமென்றால், அவர் முதலில் அந்த விலங்கை நன்றாக கவனிப்பாராம். முடிந்தால், நேரில் சென்று அந்த விலங்கைக் காண்பாராம். Augustus என்ற புத்தகத்துக்காக, அவர் ஒரு பூங்காவில் புலியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாராம். ஒரு கதாபாத்திரம் சரியாக உருவாகும் வரை, அவர் அதை மீண்டும் மீண்டும் பென்சிலால் வரைவாராம். சில நேரங்களில் 30 அல்லது 40 முறை வரை முயற்சி செய்வார்! பிறகுதான் அதற்கு வண்ணம் தீட்டுவார். அதுவே டிராகன் போன்ற கற்பனையான விலங்கு என்றால், இரண்டு-மூன்று விலங்குகளின் குணங்களை கவனித்து அதனை ஒன்று சேர்ப்பார். அதே போல், மிருகங்களுக்குத் தகுந்தாற் போல் liquid acrylic அல்லது water colour pencil crayon போன்ற முறைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டுவார். அவர் சொல்வது போல், நீங்களும் ஒரு விலங்கை கவனித்து பிறகு வரைந்து பாருங்களேன்! சரி குழந்தைகளே! இந்தப் புத்தாண்டை நாம் ஒரு குதூகலமான புத்தகத்துடன் தொடங்கி இருக்கிறோம். 2026 நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வாசிப்பு ஆர்வமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும். உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.

  • டி-3

    ( ஒரு சை-ஃபை[Sci-Fi] கதை ) சென்னை நகரம் ஒரு நாள் காலையில் கொஞ்சம் வித்தியாசமாக விழித்தது. சூரியன் உதித்ததும், வானத்தில் பறவைகளுக்கு நடுவில் “வீ…வீ…வீ…” என்ற சத்தம் கேட்டது. மக்கள் மேலே பார்த்தார்கள். அங்கே… ட்ரோன்கள்! நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், வானத்தில் பறந்து கொண்டிருந்தன. ஆனால் அவை சாதாரண ட்ரோன்கள் அல்ல. ஒவ்வொரு ட்ரோனும் ஒரு வேலை செய்தது. “அம்மா! அந்த ட்ரோன் பால் கொண்டு வருது!” என்று பத்து வயது குட்டிக் கண்ணன் கத்தினான். “அந்த ட்ரோன் மருந்து!” “இந்த ட்ரோன் காய்கறி!” “ஹை! அது ஐஸ்க்ரீம் ட்ரோன்!” ஆம்! சென்னை நகரத்தில் ‘வான விநியோகத் திட்டம்’ தொடங்கப்பட்டிருந்தது. மக்கள் கடைக்குப் போக வேண்டியது இல்லை. டிரோன்களே வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்துக் கொடுக்கும். மக்களுக்கு அது ஒரு சுவாரசியமான விஞ்ஞான அதிசயம் போல தோன்றியது.  ஒரு நாள், கண்ணன் வீட்டின் பால்கனியில் ஒரு சிறிய ட்ரோன் வந்து இறங்கியது. “ஹலோ, கண்ணன்!” என்று அது பேசியது. “அப்பா! அம்மா! இங்க ஒரு டிரோன் வந்திருக்கு, இந்த ட்ரோன் பேசுது!” என்று கண்ணன் குதித்தான். அந்த ட்ரோன் சிரித்தது  “என் பெயர் டி-3. (Drone Number 3) நான் உங்களுக்கு உதவ வந்தேன்,” என்றது. கண்ணனின் கண்கள் சந்தோஷத்தில் பளபளத்தன. “உங்களுக்கு பெயர் எல்லாம் இருக்கா? நீ எப்படி பேசுற?” அவனுக்குப் படு ஆச்சரியம். “Artificial Intelligence! அதாவது செயற்கை நுண்ணறிவு,” டி-3 விளக்கியது. “எனக்கு யோசிக்கவும், பேசவும், வழி கண்டுபிடிக்கவும் தெரியும்.” ஒரு மாலை, நகரம் முழுக்க ஒரே பரபரப்பு. வானத்தில் பெரிய குழப்பம் நேர்ந்தது. ட்ரோன்கள் எல்லாம் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி பறந்தன. “பால் வரல!” “மருந்து வரல!” “என் ஐஸ்க்ரீம் எங்கே?”  ஒரே தேடல்கள்!! கண்ணன் உடனே டி-3யை அழைத்தான். “என்ன ஆச்சு?” டி-3 கவலையுடன் சொன்னது: “ஜிபிஎஸ் செயற்கைக்கோளில் ஏதோ கோளாறு போல. நாங்க வழி தவறிட்டோம், சரியான பாதையைக் கண்டு பிடிக்க முடியல.” கண்ணன் யோசித்தான். “ஜிபிஎஸ் இல்லாமல் நீங்க வழி கண்டுபிடிக்க முடியாதா?” டி-3 சிரித்தது. “முடியும்… மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இருந்தால்!” கண்ணன் ஒரு காகிதத்தில் நகர வரைபடம் வரைந்தான். “இது என் பள்ளி.” “இது மருத்துவமனை.” “இது மார்க்கெட்.” “நீங்க இதைப் பார்த்துப் பறக்கலாமே?” என்றான். டி-3 மகிழ்ச்சியடைந்தது. “மிகச் சிறந்த யோசனை, குட்டி விஞ்ஞானியே!!” அது அந்த வரைபடத்தை ஸ்கேன் செய்தது. “கவனிக்கவும்! எல்லா டிரோன்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!” என்று டி-3 அறிவித்தது. “இந்த வரைபடத்தைப் பின்பற்றுங்கள்!” கண்ணன் வரைந்த படத்தைக் காட்டியது. உடனே எல்லா ட்ரோன்களும் நேராக, சரியாகப் பறக்க ஆரம்பித்தன. சில நிமிடங்களில்… பால் வந்தது. மருந்து வந்தது. ஐஸ்க்ரீமும் வந்தது! 🍦 மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். நகர மேயர் கண்ணனைப் பாராட்டினார், “நீ பெரிய விஞ்ஞானியாக வருவாய்!” கண்ணன் சிரித்தான். “நான் என் ட்ரோன் நண்பனுக்கு உதவி செய்யவே இதைச் செய்தேன்!” “தொழில்நுட்பம் சக்திவாய்ந்தது. ஆனால் மனிதர்களின் அறிவும் கருணையும் சேரும்போது தான் அது சிறப்பாக வேலை செய்யும்.” டி-3 கண்ணனுக்கு ஹை-ஃபை காட்டியது. அந்த நாளுக்குப் பிறகு, சென்னை வானம் இன்னும் வண்ணமயமாக இருந்தது. பறவைகளும் ட்ரோன்களும் சந்தோஷமாக பறந்தன.  கண்ணன் மேலே பார்த்து உற்சாகமாகச்   சொன்னான்: “ஒரு நாள் நானும் ட்ரோன்கள் போல பறக்கப் போகிறேன்!” ஸ்ரீஜோதி விஜேந்திரன் விஜோஸ் புக்ஸ் பார்ன் (ViJos Books Barn) என்ற நூலகத்தின் நிறுவனர் ஆங்கில மொழிப் பயிற்சியாளர் மென் திறன் பயிற்சியாளர் (Soft skills trainer) விருது பெற்ற சிறார் எழுத்தாளர்.

  • கடல் எவ்வளவு ஆழமானது?

    கடல் ஆழமானது என்று நமக்குத் தெரியும். "ஆழ்கடல்" என்றுகூட ஒரு பதம் உண்டு. ஆனால் கடல் எவ்வளவு ஆழம் இருக்கும்? அதை எப்படி அளக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்.  சராசரியாக கடல் 3700 மீட்டர் ஆழம் இருக்கும். அதாவது 12,000 அடி. இதை எப்படிப் புரிந்துகொள்வது? கோயில் கோபுரம் பார்த்திருக்கிறீர்களா? அது உயரமாக இருக்குமே? அதுபோல 45 கோபுரங்களை ஒன்றன்மீது  ஒன்றாக அடுக்கினால்  என்ன அளவு வருமோ, அந்த அளவுக்குக் கடல் ஆழமாக இருக்கும். சரி, இது சராசரி ஆழம்.... கடலின் அதிகபட்ச ஆழம் எவ்வளவு? பசிபிக் பெருங்கடலில் மரியானா பள்ளம் (Mariana Trench) என்ற பகுதியில்  சாலஞ்சர்  டீப் என்ற இடம் இருக்கிறது. அங்குதான் கடலின் ஆழம் மிகவும் அதிகமாக இருக்கும். அங்கு கடலின் ஆழம் 11,928 மீட்டர். என்ன? புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறதா? 11 கிலோமீட்டர் ஆழம்! இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்லட்டுமா? எவரெஸ்ட் சிகரம் இருக்கிறதே, அந்த சிகரத்தை அப்படியே சாலஞ்சர்  டீப்பில் போட்டால்  அது முழுமையாக மூழ்கிவிடும். அதற்கும் மேல் 3 கிலோமீட்டர் அளவுக்கு நீர் இருக்கும்! இந்த ஆழங்களை எல்லாம் எப்படி அளந்தார்கள்? அந்த காலத்தில் Lead line என்ற ஒருவகை கயிறை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு ஆறு அடிக்கும் அதில் ஒரு முடிச்சு இருக்கும், இந்தக் கயிறின் முனையில் ஒரு காரீய உருளை இருக்கும். கப்பல் மேல் நின்றுகொண்டு இந்தக் கயிறை கடலுக்குள் விடுவார்கள். அந்தக் கயிறு  அப்படியே  கீழே போகும். ஒரு கட்டத்தில் காரீய உருளை கடல் தரையில் இடிக்கும்போது எத்தனை முடிச்சு உள்ளே போயிருக்கிறது என்பதைக் கணக்கிட்டால் ஆழம் தெரிந்துவிடும். இப்போது தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது என்பதால் ரேடார், சோனார் போன்ற கருவிகள்  பயன்படுத்தப்படுகின்றன.  நீங்கள் பார்த்த மிக உயரமான கட்டிடம் எது? அது எவ்வளவு உயரமாக இருந்தது? எங்களுக்கு சொல்லுங்கள்.  நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக  பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்  பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி  கல்விக்குழுமத்தின்   படைப்பூக்க   விருது ,பாவை  விருது  ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும்  மனிதரும் , விலங்குகளும்  பாலினமும் , ஆழ்கடல், சூழலும்  பெண்களும் , நெய்தல் மீன்கள்  உள்ளிட்ட   பதினைந்து     நூல்களை எழுதியுள்ளார்.

  • வரலாற்றின் இடைவெளிகளை இலக்கியத்தால் நிரப்பமுடியும். – மருதன்

    நேர்காணல் – கமலாலயன் வரலாறு என்பது என்ன? வரலாறு என்பது இறந்த காலத்தை ஆராயும் துறை என்பது மிக அடிப்படையான, மிக எளிமையாக ஒரு விளக்கம். ஆனால் இறந்த காலம் என்றொன்று உண்மையில் இருக்கிறதா? அதை நாம் முழுக்கக் கடந்து வந்துவிட்டோமா? வந்துவிட்டோம் என்றால் எதற்காக நாம் இன்னமும் கீழடி, சிந்து சமவெளி, சோழர்கள், முகலாயர்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? புதிய சுதந்தர இந்தியா பிறந்தபோது, புதிய இந்தியாவுக்கு ஒரு தேசியச் சின்னம் தேவைப்பட்டபோது ஜவாஹர்லால் நேருவுக்கு ஏன் அசோகரின் நினைவு வந்தது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அசோகரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்வவதற்கு இன்னமும் ஏதேனும் இருக்கிறதா என்ன? ஆம் என்றால் அவர் இறந்த காலத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கிடையாதா? நமக்கு அசோகர் தேவை என்றால் இறந்த காலம் நமக்குத் தேவை என்றுதானே பொருள்? இறந்த காலம் என்பது மண்ணோடு மண்ணாகிப்போன பழங்கதை என்றால் உலகெங்கும் ஏன் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்? எகிப்தையும் கிரேக்கத்தையும் மெசபடோமியாவையும் ஏன் வரலாற்றாசிரியர்கள் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்? சாக்ரடீஸ், பிளேட்டோ, புத்தர், கன்ஃபூஷியஸ் ஆகியோர் குறித்து புதிய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பது ஏன்? வள்ளுவரும் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் டால்ஸ்டாயும் பாரதியும் புதுமைப்பித்தனமும் இறந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களிடமிருந்து நாம் இன்றும் புதிது, புதிதாகக் கற்றுக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? ஒன்றுதான். காலம் ஒருபோதும் இறப்பதில்லை. நினைவுகள் ஒருபோதும் மறைவதில்லை. நாம் வாழும் காலம் என்பது வானத்திலிருந்து திடீரென்று வந்து விழுந்த ஒரு மாயம் அல்ல. அது கடந்த காலத்தின் தொடர்ச்சி. உண்மையில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்ற பிரிவினைகள்கூட ஒரு வசதிக்காக நாமே உருவாக்கியவைதாம். ஆற்று வெள்ளம்போல் காலம் தொடர்ச்சியாக முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது. அந்த ஓட்டம்தான் காலம். இன்றைய உலகைப் புரிந்துகொள்ள நேற்றைய உலகை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நேற்றைய உலகம் என்பது அதற்கு முந்தைய தினத்தின் தொடர்ச்சி. எப்போதோ வாழ்ந்த மனிதர்களை அல்ல, இப்போதும் வாழும் நம்மைதான் வரலாறு ஆராய்கிறது. வரலாறு என்றால் என்ன எனும் கேள்விக்கு நான் அளிக்க விரும்பும் மூன்று சொல் பதில், 'அது நம் கதை' என்பதுதான். வரலாற்றுச் செய்திகளைக்குழந்தை இலக்கியங்களில் எப்படிப் பொருத்தமாக இணைப்பது? வரலாற்றில் கதைகள் மலை மலையாகக் கொட்டிக்கிடக்கின்றன. கனவை விஞ்சும் பல சாகசங்கள் நிஜத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இலக்கியம் ஒரு வகையில் வரலாற்றைச் சார்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். வரலாறு உண்மை சார்ந்தது. இலக்கியம் கற்பனை சார்ந்தது. என்றாலும் இந்த இரண்டும் தொடர்ந்த உரையாடிக்கொண்டிருக்கின்றன. வரலாற்றிலிருந்து இலக்கியம் நிறைய கற்றுக்கொண்டதுபோல் இலக்கியத் தரவுகளிலிருந்தும் வரலாறு நிறையவே பலனடைந்திருக்கிறது.  எடுத்துக்காட்டுக்கு, தொன்மக்கதைகளை எடுத்துக்கொள்வோம். எல்லாப் பண்டையச் சமூகங்களிலும் இலியட், ஒடிசி, ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எல்லாம் காலம் காலமாக வாய்மொழி இலக்கியங்களாகக் கடத்தப்பட்டவை. இவற்றில் கற்பனை மிகுதி என்றாலும் வரலாற்று ஆசிரியர்கள் இவற்றை ஆழ்ந்த வாசிக்கிறார்கள். விரிவாக ஆராய்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வரலாறும் கற்பனையும் வாய்வழிக் கதைகளும் அழகாக ஒன்று கலந்திருக்கின்றன. தேவதைக் கதைகளையும் நீதிக்கதைகளையும் அற நூல்களையும் சங்க இலக்கியங்களையும் முழுக்கற்பனை என்று சொல்லிவிடமுடியுமா? காலம் கடந்து இன்றும் இக்கதைகள் நம்மோடு உயிர்த்திருப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? இக்கதைகள் எங்கிருந்து தோன்றின, எப்படிப் பரவின? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும்போது இலக்கியமும் வரலாறும் கைகோர்த்துக்கொள்கின்றன. டால்ஸ்டாயின் பிரமாண்ட படைப்பான போரும் அமைதியும் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல். அதில் கற்பனையும் உண்மையும் பிரிக்கமுடியாத ஒன்று கலந்திருக்கின்றன. வரலாற்றிலிருந்து எதை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்? எது குழந்தைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்? எது பொது வாசகர்களுக்கான கதை? எதைச் சிறுகதையாக மாற்றலாம், எது நாவலுக்கான பொருள் போன்றவற்றை ஓர் இலக்கியவாதிதான் தீர்மானிக்கிறார். ஒரு நல்ல இலக்கியவாதியால் எதையும் நல்ல கதையாக மாற்றமுடியும். கடந்த காலத்திலிருந்து தனது நாடகத்துக்கு ஏற்றதை ஷேக்ஸ்பியரும் தனது நாவலுக்கு ஏற்றதை டால்ஸ்டாயும் சரியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். இன்று ஒருவர் கதையோ நாடகமோ கவிதையோ நாவலோ எழுதும்போது அதேபோல் தனக்கானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும். 3. வரலாற்றையும் புனைவையும் கலந்து நாம் எழுதுகிறோம் என்றால், பிற்காலத்தில் அவற்றை  ஆய்வு செய்பவர்கள் எப்படி அவற்றைப் பிரித்து இனங்காண முடியும்? நெப்போலியனைக் கற்றவர்கள், ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான போரின் பின்னணியைத் தெரிந்துகொண்டவர்கள் டால்ஸ்டாயை வாசிக்கும்போது அவர் எங்கெல்லாம் கற்பனை செய்திருக்கிறார், எங்கெல்லாம் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஓர் இலக்கியப் படைப்பை வாசிக்கும்போது அதிலுள்ளவை அனைத்தும் உண்மை என்று நாம் எடுத்துக்கொள்வதில்லை.  சாக்ரடீஸ் எப்படி இருப்பார்? அசோகர் எப்படிப் பேசுவார்? புத்தர் இருபத்து நான்கு மணி நேரமும் புன்முறுவல் பூத்த முகத்தோடுதான் காட்சியளிப்பாரா? ஒரு வரலாற்று ஆசிரியரிடம் சென்று கேட்டால், என்னிடம் தரவுகள் இல்லை. எனவே தெரியாது என்றுதான் சொல்வார். அவர் சொல்வதுதான் உண்மை. ஆனால் அதற்காக நாம் புத்தரை, அசோகரை, சாக்ரடீஸை, இன்னபிறரைக் கற்பனை செய்யாமல் இருக்கமுடியுமா? வரலாறு வந்து சொல்லட்டும் என்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு காத்திருக்கமுடியுமா? முடியாது. வரலாறு விட்டுச் செல்லும் இத்தகைய இடைவெளிகளை இலக்கியம் கற்பனையைக் கொண்டு அழகாக இட்டு நிரப்புகிறது.  எழுதியவர் யார், அது எத்தகைய நூல் என்பதைக் கொண்டு எது வரலாறு, எது கற்பனை என்பதைப் பிரித்தறிய முடியும். எனக்குத் தரவுகளோடு கூடிய ஆய்வுகள் மட்டுமே தேவை என்போர் வரலாற்றை நாடலாம். கடந்த காலத்தைக் கண்மூடி கற்பனை செய்து பார்க்க விரும்புகிறவர்கள் இலக்கியத்தை நாடலாம். நான் படித்த கதையில் எது உண்மை, எது கற்பனை என்று மயக்கம் கொள்வோர் மீண்டும் வரலாற்றை நாடி உண்மையைத் தெரிந்துகொள்ளலாம்.  4. தமிழில் சிறார் இலக்கியங்களில் எந்த அளவுக்கு வரலாறு இடம் பெற்றிருக்கிறது? இன்றைய தமிழ் சிறார் இலக்கியங்களின் நிலை   நான் பார்த்தவரை மிக மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளது. கதை எழுதுபவர்கள் கதையல்லாத துறைகளைச் சேர்ந்த நூல்களை நிறைய வாசிக்கும்போது அவற்றிலிருந்து பெற்றதைக் கதைகளில் செலுத்தமுடியும் என்று நம்புகிறேன். படக்கதை, சிறுகதை, நாவல் என்று பல வடிவங்களில் வரலாற்றைக் கற்பனை கலந்து அழகாகக் கொண்டு செல்லமுடியும். அதற்கான சாத்தியங்கள் கடலளவு விரிந்து கிடக்கிறது. மருதன் - தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். இதழியலாளர்,கல்கி, கோகுலம் ஆனந்தவிகடன், சுட்டி விகடன், அவளவிகடன், ஜூனியர் விகடன் குங்குமம், இந்து தமிழ்திசை போன்ற பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியிருக்கிறார். தற்சமயம் கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். மாயாபஜாரில் இவர் எழுதிய இளம் வாசகர்களுக்கான இடம்,பொருள், மனிதர், விலங்கு, மாய உலகம், தேன் மிட்டாய் போன்ற தொடர்களின் மூலம் குழந்தைகளைக் கவர்ந்தவர். பிற முக்கியமான படைப்புகள் அசோகர், ரோமிலா தாப்பர், இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை. கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • கிளிக்கூடு

    அப்பொழுதுதான் ஒரு பாட்டம் மழை பெய்து வெறித்திருந்தது. உச்சி மதிய நேரத்தில் ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்தது. ஊருக்கு மேல்புறம் ஓடைக்கரையில் நின்றுகொண்டிருந்த பனைமரக்கூட்டத்தில் உட்கார்ந்துகொண்டு “க்.கிய்..க்.கிய்..கீ..” என கிளிகள் சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. ஓலைகள் காய்ந்து விழுந்து நின்ற ஒரு மொட்டைப்பனையின் பொந்திலிருந்து இரண்டு கிளிக்குஞ்சுகள் தலையை நீட்டி வெளியே எடடிப்பார்த்தன. சிற்றோடையில் மழைநீர் பெருக்கெடுத்து சுழித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. அதில் காய்ந்த மரக்குச்சிகளும் இலைகொடிகளும் சலசலத்தபடி மிதந்துகொண்டு போவதைப் பார்த்து குஞ்சுகள் அதன் பொந்து வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டன. அவற்றின் தாய்க்கிளி எங்கெல்லாமோ தொலைவில் பறந்து திரிந்து தட்டாங்காய், மிளகாய், நாவல்பழம் என உண்பதற்கு கொண்டுவந்து கொடுத்தது.  குஞ்சுக்கிளிகள் சந்தோசமாக வளர்ந்துவந்தன. அதற்கு இறக்கைகள் முளைத்து பறக்கவேண்டிய நேரமும் நெருங்கி வந்தது. அன்றைக்கு தாய்க்கிளி குஞ்சுகளைப் பார்த்து, “குழந்தைகளே.. உங்களுக்கு நெய்த்தக்காளி பழங்களை கொண்டு வாரேன். ஆசையாய் தின்னலாம். அதுவரை கூட்டுக்குள்ளேயே விளையாடிக்கிட்டு இருங்கள்” என்று தன் இணையோடு வெகுதொலைவிற்கு பறந்து போனது.  அவை இறக்கை தட்டிப்பறந்து தொடுவானத்திற்கப்பால் மறைவதுவரை பார்த்துக்கொண்டிருந்த குஞ்சுகள் கூட்டிற்குள் போய் இருந்துகொண்டன. எங்கிருந்தோ பறந்தவந்த மின்மினிப்பூச்சி கூட்டிற்குள் எட்டிப்பார்த்தது. கூட்டில் வெளிச்சம் படரவும் குஞ்சுகள் “நீ  யார்” என்று கேட்டது.  “நான் உன் தாய்க்கிளியின் நண்பன். நான் வசிக்கும் மாமரத்திற்கு பழங்களை உண்ணவரும்போது எங்களுக்குள் நட்பு உண்டானது” “நீ எங்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து பிரகாசமாய் ஜொலிக்கிறாய். எங்கள் கூடு  இப்பொழுது வெளிச்சத்தில் மிணுங்குகிறது. உன்னை எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இவ்வளவு நாட்களாக எங்கே போயிருந்தாய்” “நாங்கள் குளிர்நேரத்தில் மண்ணுக்குள்ளே போய் இருந்துகொள்வோம். கோடை நேரத்தில்தான் வெளியே வருவோம்” “அம்மா நெய்த்தக்காளி கொண்டு வாரேன் என்று போயிருக்கிறது. நீயும் இருந்து சாப்பிட்டுப்போ” “அதெல்லாம் எனக்கு பிடிக்காது. நத்தை, புழு, பூச்சிகளைத்தான் சாப்பிடுவேன். சரி குழந்தைகளே.. பத்திரமாக இருந்துகொள்ளுங்கள். வேடர்கள் வரும் சத்தம் கேட்டது. அதுதான் உங்களை எச்சரிக்கை செய்ய வந்தேன். கூட்டுக்கு வெளியே எட்டிப்பார்க்காதீர்கள். பிடிச்சிட்டுப்போயிருவான். நான் வாரேன்” என்று மினுக்மினுக்கென பறந்து போனது. கூட்டுக்குள் லேசான இருட்டு படர்ந்தது.  ஓடைக்கரையில் சிறுவர்களின் பேச்சு சத்தம் கேட்டது. மின்மினியின் எச்சரிக்கையை மறந்து கிளிக்குஞ்சுகள் பொந்துக்கு வெளியே வந்து எட்டிப்பார்த்தன.  “ஏய்.. அங்கே பாரு. கிளிக்குஞ்சுகள்” மால்ராசுக்கு கையை நீட்டி உணர்த்தி பனைமரத்தின் பொந்தை காட்டினான் மல்லையா. குஞ்சுகளும் பயமறியாமல் குனிந்து கீழே பார்த்தன. “அ..ய்.ய்.யா…” உற்சாகத்தில் ஆர்ப்பரித்தான் மால்ராசு. சிறுவர்கள்  இருவரும் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். விடுமுறை நாள் என்பதால் காடை கதுவாலி பிடிக்க வந்தவர்கள் கிளிகளை பார்த்துவிட்டார்கள். மல்லையா சரசரவென மொட்டைப்பனையில் ஏறினான். தம் கூட்டைப் பார்க்க ஒருவன் ஏறுவதைப் பார்த்து கிளிகள் பொந்துக்குள் போய் ஒளிந்துகொண்டன. பாதிப்பனை உயரத்தில் இருந்த கிளிக்கூட்டில் கையைவிட்டு அந்தக்கிளிகளை பிடித்து டவுசர்பைக்குள் திணித்து மெதுவாக பனையைவிட்டு இறங்கினான்.  உள்ளங்கைகளில் குஞ்சுகளை எடுத்துவைத்து அதை மால்ராசுக்கு காட்டினான். அதன் இளம்பச்சை இறகுகளை நீவிவிட்டான். வளைந்து சிவந்த அலகை ஆட்காட்டிவிரலால் தடவிப்பார்த்தான். கிளிகள் இறக்கைகளை தட்டி பறக்க எத்தனித்தன. பொத்திப் பிடித்துக்கொண்டான். கிளிகள் ஒன்றும் செய்ய இயலாமல் மிரண்டுபோய் பார்த்தன.  மல்லையா கிளிகளை வீட்டிற்கு கொண்டுவந்து ஒரு கம்பிவலைக்கூண்டிற்குள் அடைத்து கூரைவிட்டத்தில் தொங்கவிட்டான். பாசிப்பயறும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுபோய் “சாப்பிடு” என்று வைத்தான். கிளிகள் தன் தாய்தந்தையை நினைத்து கலங்கின. அவற்றின் கண்களில் பிரிவின் ஏக்கம் தெரிந்தது. மல்லையா வைத்த பயிரையும் தண்ணீரையும் முகர்ந்துகூட பார்க்கவில்லை. தன் பொந்துக்கூட்டில் இருந்தபோது பனையோலைகள் அசைந்து விசிறிய காற்று வருடிக்கொடுத்து உறங்கச்செய்ததை நினைத்துப் பார்த்தன. இப்போது கூண்டை தொங்கவிட்டிருந்த  வீட்டில் காற்று உள்ளே வராமலும் அடுப்பங்கரைப் புகை வந்து மண்டியும், மனிதர்கள் சப்தமாக பேசும் ஒலிகளும் அதற்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் கூண்டின் வலைக்கம்பிகளில் கொத்திக்கொத்தி சோர்ந்து போய்விட்டன.  நெய்த்தக்காளிப்பழங்களை தேடிப்போன கிளிகள் தன் கூட்டிற்கு திரும்பி வந்தன. அதன் அலகுகளில் வரிவரியான கோடுகளுடன்  பழுப்பு நிறத்தொலிகள் மூடிய நெய்த்தக்காளிப் பழங்கள் வெளிர் ஆரஞ்சு வண்ணத்தில் பளப்பாய் இருந்தன. ஆவலாய் இரை கொண்டுவந்த கிளிகள் தன் குஞ்சுகளைக் காணாமல் பரிதவித்துப் போய் அந்தப் பனைமரங்களை சுற்றிச்சுற்றிப் பறந்தன. காடெல்லாம் வட்டமடித்துப் போய் தன் குஞ்சுகளை தேடித்தேடிப்பார்த்தன. பொழுது இருட்டும்வரை எங்கு தேடினாலும் கிடைக்காமல் துயரத்தோடு கூட்டிற்குத் திரும்பின. இரவெல்லாம் தூங்காமல் தன் குஞ்சுப்பறவைகளை நினைத்து கத்திக்கொண்டிருந்தன. தோலுரிந்த நெய்த்தெக்காளிப்பழம் கண்களை உருட்டிப்பார்த்து பேசியது.  “கிளியே… நீ காடு மேடெல்லாம் பறந்து போய் தேடிப்பார்த்தாய். கொஞ்சம் ஊருக்குள்ள போய் பாரு. மனிதர்கள் யாராவது இங்கே வந்து பிடிச்சிட்டுப்போயிருப்பாங்க” “பழமே… நீ சொல்வதும் சரிதான்” என்று கூட்டிலிருந்து தன் இணையோடு மறுபடியும் குஞ்சுகளைத் தேடிப்பறக்கும்போது பொழுது விடிந்திருந்தது.  ஊருக்குள் போய் வீட்டுக்கூரைகளிலும் மரக்கிளைகளிலும் போய் உட்கார்ந்துகொண்டு ஜோடிக்கிளிகள் சத்தம் கொடுத்தன. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குஞ்சுகள் இது தன் தாய் கூப்பிடுவது போல் உள்ளதே என பதிலுக்கு “க்.கிய்.கிய்…”யென சத்தம் கொடுத்தன.  “ஆஹா… தன்னோட குஞ்சுகள் இங்கேதான் இருக்கிறது” என சன்னல் வழியாக சத்தம்வந்த வீட்டிற்குள் எட்டிப்பார்த்தது. உள்ளே போய் கொக்கி போல் வளைந்த கால்நகங்களால் கூண்டின் கம்பிகளில் பிராண்டியது. குஞ்சுகள் பறக்கமுயன்று  முடியாமல் தன் அலகுகளால் தாய்க்கிளியை தொட்டுத்தொட்டுப் பார்த்தது. மனிதர்களின் நடமாட்டம் தெரியவும் பறந்துபோய் அருகிலிருந்த மரத்தில் போய் உட்கார்ந்த ஜோடிக்கிளிகளை குஞ்சுகள் ஏக்கத்தோடு பார்த்தன. அதன்பிறகான நாட்களில் ஆள்அருவமற்ற வேளைகளில் பழம், கொட்டைகள் என கொண்டுவந்து கொடுத்து தன் குஞ்சுகளோடு கொஞ்சநேரம் பேசிவிட்டுப் போனது.  இப்போதெல்லாம் மல்லையா பெற்றோர் சொல்படி கேட்பதில்லை. அவனுக்கு சேட்டைகள் அதிகமாகிப்போனது என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் அவனை வெளியூரிலுள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து அங்கேயே மாணவர்விடுதியில் தங்கவைத்துவிட்டனர். மல்லையாவுக்கு அந்தப் புதிய இடம் பிடிக்கவேயில்லை. எப்போது பார்த்தாலும் பிரம்பை கையில் வைத்தபடி கண்டிப்பு காட்டும் ஆசிரியர்கள், திருக்கு மீசை உருட்டும் விழிகளுடன் இருக்கும் விடுதி வார்டன்களை பார்த்து தன் சுதந்திரம் பறிபோனதுபோல் உணர்ந்தான். சிநேகிதர்களை சேர்த்துக்கொண்டு சில்லான் பிடிக்கப்போக முடியலை, மரமேறிக்குரங்கு விளையாட முடியவில்லை என்று அந்நியப்பட்டுப்போய் ஒடுங்கிப்போயிருந்தான். வேகாத சாதமும் பிடிக்காத குழம்பும் அடிக்கடி வீட்டை ஞாபகப்படுத்தியது.  புதிய இடத்தில் உற்சாகமின்றி இறுக்கமாய் நாட்கள் நகர்ந்து போனது. தான் மொட்டைப்பனையில் பிடித்து வந்து கூண்டில் அடைத்து வளர்த்த கிளிகளைப் பற்றி  இப்போது நினைவிற்கு வந்தது.  பள்ளிக்கு காலாண்டுத் தேர்வுக்குப் பின்  விடுமுறை விட்டிருந்தார்கள். மகிழ்ச்சியாக வீட்டிற்குப் போனதும் நேராக கிளிக்கூண்டிற்கு அருகில்தான் போனான். கிளிகளுக்கு அழகிய பச்சை வண்ணத்துடன்  இறக்கைகள் முளைத்து நன்றாக வளர்ந்திருந்தன. அதன் மூக்கு கோவைப்பழமாய் சிவந்து  வசீகரம் செய்தது. “இன்று உங்களுக்கு விடுதலை” என்று மெல்ல கூண்டின் கதவுகளை திறந்தான். அந்த நேரத்தில் விருட்டென வெளியேறிய கிளிகள் இறக்கைகளை அசைத்துப் பறந்தன. அவை மேகாட்டு ஓடைக்கரை பனங்காட்டைப்பார்த்துதான் சப்தம் கொடுத்தபடியே சென்றன. பனங்காட்டிலிருந்து ஜோடிக்கிளிகள் எழுப்பிய சப்தம் எதிரொலியாய் கேட்டு காற்றோடு கலந்தது. மல்லையா கிளிகள் பறந்துசென்ற திசையை பார்த்து தன் கைகளை மடக்கி இறக்கைகளை அசைப்பதுபோல் தட்டிக்கொண்டிருந்தான். ஜெ.பொன்னுராஜ்  1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2

  • அணில் செய்த உதவி

    பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மாமரம் பல உயிர்களின் இல்லமாக இருந்தது. அதில் ஒரு கிளையில் சின்ன குருவியும் அதன் குஞ்சுகளும் வாழ்ந்து வந்தன. அதே மரத்தில் கொஞ்சம் மேலே, சுறுசுறுப்பான ஒரு அணிலும் தன் வீட்டை கட்டியிருந்தது. அணிலும் குருவியும் நண்பர்களாக இருந்தனர், குருவி 'கீச்... கீச்...' என்று பாடினால், அணில் வாலை ஆட்டிக் கொண்டு அதனுடன் விளையாடும்'. ஒரு நாள் மதியம். திடீரென்று வானத்தில் கரு மேகங்கள் சூழந்தன. பலத்த காற்று வீசியது. மாமரத்தின் கிளைகள் எல்லாம் சுழன்று சுழன்று ஆடின. 'குருவியே! கூடு கவனம். காற்று அதிகமாக வீசுது.' என்று அணில் எச்சரித்தது. குருவியும் தன் கூடு குலுங்குவது கண்டு பயந்தது. குஞ்சுகளும் அஞ்சி ஒடுங்கின. அடுத்த நிமிடம், ஒரு பலத்த காற்று அடித்ததில் குருவியின் கூடு 'தொப்'யென்று தரையில் விழுந்தது. அதில் இருந்த இரண்டு சிறிய குஞ்சுகளும் பயந்து 'கீச்... கீச்...' என்று சத்தமிட்டன. குருவி பதறிப் போய் கீழே இறங்கி, 'அய்யோ! என் குஞ்சுகள்...' என்று அழுதது. அந்த நேரம் அணில் விரைவாக கீழே பாய்ந்து வந்தது. 'குருவியே! கவலைப்படாதே... உன் குஞ்சுகளை நான் காப்பாத்துறேன்' என்று தைரியம் சொன்னது. மழை கொட்டியது. காற்று இன்னும் நிற்கவில்லை. குச்சிகளாலும் பஞ்சாலும் ஆன கூடு நனைந்துக் கிடந்தது. அணில் தன் கூர்மையான பற்களாலும் வலிமையான முன்னங்கால்களாலும் கூட்டை நன்றாகப் பிடித்து மரத்தில் ஏறத் தொடங்கியது. குருவி கூடவே பறந்தது. 'மெதுவா... இங்கே வா... இந்த கிளைதான் பாதுகாப்பா இருக்கும்' என்று கூறி வழிகாட்டியது. பல சிரமங்களுக்குப் பிறகு, அணில் கூட்டையும் குஞ்சுகளையும் பத்திரமாக கிளையில் வைத்தது. அணிலுக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. குருவி நிம்மதியானது. 'நன்றி நண்பா! நீ செய்த உதவியால் என் குஞ்சுகள் காப்பாற்றப்பட்டன. இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்' என்றது குருவி கண்ணீர் விட்டது. கண்ணீர்த்துளிகள் மழைத்துளிகளோடு கலந்தன. ஆனால் அணில் உதவி செய்த போது அதற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. கூட்டை தூக்கிச் செல்லும்போது அணிலின் வால் ஒரு கூர்மையான கிளையில் சிக்கி காயம்பட்டது. அணில் வலியால் கத்தியது. மரத்தில் சமநிலை வைத்துக் கொள்வது அதற்குக் கடினமானது. 'அய்யோ!... என் வால்!... வாலை அசைத்தாலே வலிக்கிறது. எப்படி நான் மரத்தில் ஓடப் போகிறேன்? என்று அணில் கவலைப்பட்டது. அடுத்த நாள் அது வழக்கம் போல் மரக்கிளைகளில் ஓட முடியவில்லை. அப்படி ஓடாமல் இருந்தால் உணவு, தண்ணீர் எங்கே கிடைக்கும்? அணிலின் நிலையைப் பார்த்து குருவி வருந்தியது. 'அணில் என் குஞ்சுகளைக் காப்பாற்றியது. இப்போ அது சிக்கலில் இருக்கிறது. நான் எப்படி உதவப் போகிறேன்?' என்று யோசித்தது. அடுத்தநாள் காலை. குருவி அருகிலிருந்த வயலுக்குப் பறந்துச் சென்றது. ஒரு தோட்டத்திற்கும் சென்றது. தானியங்களையும் சிறு பழங்களையும் தன் அலகில் எடுத்துக் கொண்டு வந்தது. அவற்றை அணிலின் அருகில் வைத்தது. 'நண்பா, நீ ஓட வேண்டாம், இங்கேயே ஓய்வு எடு. உனக்குத் தேவையான உணவுகளை நான் கொண்டு வந்து தருகிறேன்' என்றது குருவி. அணில் ஆச்சரியப்பட்டது. 'நீ சின்ன பறவை! உனக்கும் உன் குஞ்சுகளுக்கும் உணவு தேவை. எனக்கும் சேர்த்து உழைக்க முடியுமா?' என்று கேட்டது. குருவி சிரித்தபடி, 'நண்பர்கள் என்றால் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். நீ என் குஞ்சுகளைக் காப்பாற்றினாய். இப்போது நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன்.' என்றது.  சில நாட்கள் கழிந்தன. குருவியின் உதவியால் அணில் ஓய்வெடுத்தது. அதனால் அணிலின் வால் குணமாகியது. மீண்டும் அது மரக்கிளைகளில் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கியது. அந்த நாளிலிருந்து அணிலும் குருவியும் நெருக்கமான நண்பர்களானார்கள். எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர். சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்.

  • பப்புவின் நண்பன்

    அழகாபுரம் கிராமத்தில் பப்பு என்ற சிறுவன் வசித்து வந்தான்.எப்போதும் குறும்புத்தனம் செய்தபடியே பல சேட்டைகள் செய்து வருவான். அதனால் மற்ற குழந்தைகளை பப்புவோடு விளையாட அவர்களின் பெற்றோர் அனுப்ப மாட்டார்கள்.         பப்புவின் வீட்டில்  தோட்டம் ஒன்று இருந்தது.பப்பு அந்த தோட்டத்தில் தான் எப்போதும் விளையாடுவான்  அங்கிருந்த ஒரு மாமரம் தான் பப்புவின் நண்பனாக இருந்தது.அந்த மரத்திடம் பேசி விளையாடுவான் பப்பு.            ஒரு நாள் இரவு நல்லமழைபெய்யதது. மழையோட சேர்த்து இடியும் மின்னலும் வெட்டியது. அந்த கனமழையால் வந்த இடி பப்புவோட நண்பனான மா மரத்தில் விழவும் மரம் சிதைந்துபோனது.          காலையில் தோட்டத்துக்கு சென்ற பப்புவின் அப்பா மரத்தை கண்டதும் வருந்தினார். இனி இந்த மரத்தால் பயனில்லை அதனால் இதை வெட்டிடலாம் என்று நினைத்தார். மரத்தை வெட்ட ஆட்களை வரச் சொன்னார்.         பப்புவுக்கோ ரொம்ப வருத்தமாகிடுச்சு " அப்பா தயவுசெய்து மரத்தை வெட்டாதீங்க. அது என்னோட நண்பன் அத விட்டுட்டுங்கனு".             "தம்பி சொன்னா கேளு இந்த மரத்துல இடி விழுந்துட்டு இனி இந்த மரம் வளராது. இதால நமக்கு எந்த பயனும் இருக்காது .அப்பா உனக்கு இந்த மரத்துக்கு பதிலா வேர மரம் நட்டுவைக்கிறேன் " அப்படினு சொன்னார்.          "  இல்லப்பா நீங்க என்ன சொன்னாலும். சரி எனக்கு வேற மரம் எல்லாம் வேண்டாம் எனக்கு இந்த மரம் தான் வேணும்" னு அடம்புடிச்சான் பப்பு.          பப்புவோட அப்பாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனோட அழுகைய பாத்துட்டு இப்ப மரத்த வெட்ட வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்னு முடிவு பண்ணி மரத்தை வெட்ட வந்த  ஆட்களைபோக சொல்லிவிட்டார் .        நாட்களும் போச்சு பப்பு தினமும் அந்த மரத்துக்கிட்ட போய் பேசுவதும்,  அதற்கு தண்ணீர் ஊற்றுவதுமா இருந்தான்.          இடிவிழுந்த மரம் இனி வளராதுனு அப்படினு பப்புவோட அப்பா தினமும் சொல்லிக்கிட்டே இருந்தார்.        சில மாதங்களுக்கு பிறகு மரத்தவெட்ட ஆட்களை கூட்டிக்கிட்டு பப்புவோட அப்பா தோட்டத்துக்கு வந்தாரு. வந்தவர் மரத்த பாத்து பிரமிச்சுபோயிட்டாரு.               அந்த பட்ட மரத்தில்  ஆங்காங்கே சில தளிர்கள் துளிர்விட்டு இருந்தது.பப்பு அந்த மரத்திடம் காட்டிய அன்பு துளிராக வெளிப்பட்டிருந்தது.           பப்புவோட அப்பாக்கு தன்னோட கண்ணையே நம்ப முடியவில்லை. மரத்த வெட்ட வந்த ஆட்களை போக சொல்லிவிட்டு அந்த மரத்துக்கு உரம் வைக்க ஆட்களை வர சொன்னார்.         நாம காட்டுற அன்பு  பட்ட மரத்தையும் துளிர்க்க வைக்கும் என்பதை பப்பு அப்பா புரிஞ்சிக்கிட்டாரு. ரா.சண்முகவள்ளி சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார். முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 8

    பொங்கலை ஏன் தமிழர் திருநாள் என சொல்றாங்க? அப்புறம் உழவர் திருநாள்னு சொல்றாங்க, ஆனா தமிழ்நாட்டுல எல்லாரும் இதைக் கொண்டாடுறாங்களே, ஏன்? அப்புறம் இன்னொரு கேள்வி ஜல்லிகட்டுல காளையை எல்லாம் துன்புறுத்துறாங்க, சிலர் காயமும் அடையுறாங்க. இப்படி ஒரு ஜல்லிக்கட்டை எதுக்கு நடத்தணும்? - கி.தினேஷ்குமார், 9ஆம் வகுப்பு, அசோக் நகர், சென்னை தினேஷ்குமார் வணக்கம். நான் புத்தகப் புழு பேசுறேன். பொங்கல் திருநாள் நேரத்துல நீங்க கேட்டிருக்கிற கேள்வி நல்லா இருக்கு. இதுக்கு நான் பதில் சொல்றதை விடவும், பேராசிரியர் தொ.பரமசிவனோட பதிலை சொன்னா சரியா இரக்கும். பேராசிரியர் தொ.பரமசிவன்னு ஒரு தமிழ்-பண்பாட்டு அறிஞர் இருந்தார். அவர் நம்முடைய பண்பாடு பத்தி நிறைய ஆராய்ச்சி செஞ்சு பேசியிருக்கார். எழுதியிருக்கார். பொங்கல், ஜல்லிக்கட்டு பத்தியெல்லாம் அவர் சிறப்பா குறிப்பிட்டு எழுதியிருக்கார். அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்: தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப்பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்கு உரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது. பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் மிக விரைவாக வீட்டைச் சுத்தம் செய்து இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன் தைப்பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம்.  பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகளை (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) தமிழ்நாட்டில் ஒரு சாதியினரும், பெருங் கோயில்களும் காலங்காலமாக விலக்கி வைக்கப்பட்ட உணவு வகைகளாகக் கருதுகின்றன. மேற்குறித்த இரண்டு செய்திகளாலும் தைப் பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும் அது ஆரியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என்பதனையும் உணர்ந்துகொள்ளலாம். அதேபோல, ஜல்லிகட்டு  என்பது  ஒரு  வேட்டை சமூகத்தை சார்ந்த விளையாட்டு. மாட்டின்  திமிலைப் பிடித்துக்கொண்டு  30 அடிக்கு ஒருவர் ஓடினாலே  அவர் வெற்றி பெற்றவர்தான். அவருக்குப் பரிசு உண்டு. இதில் மாடு அடக்குதல்  என்பதைவிட  மாட்டை  அணைத்தல்  என்பதுதான் சரி. இதை  wild animal  என்று  யார் சொன்னது? ஜல்லிக்கட்டு மாடு  என்ன காட்டிலா பிறந்து  வளருது, அது  வீட்டிலே  பிறந்து மனிதனோடு  வாழ்கிறது.  ஜல்லிக்கட்டு  வீர விளையாட்டு, பண்பாடு, மரபு சார்ந்தது. இதில்  மாட்டை துன்புறுத்துதல் என்பது இல்லை. ஜல்லிகட்டு மாடு  வளர்ப்பவர்கள்  யாரும்  மாட்டுக்கறி  சாப்பிடமாட்டார்கள். மேலும் ஜல்லிகட்டு மாடு  யார்  வயலிலும்  போய்  பயிர் பச்சையைச்  சாப்பிட்டாலும்,  அதை  யாரும்  விரட்டக்கூட மாட்டார்கள்.    அயல்  நாடுகளில்  thanks  giving  day, harvesting  day, easter  day என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். இவை எல்லாம் அறுவடைத் திருவிழா தானே. நாம்  வெப்ப  மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அதனால்  சூரியனுக்கு நன்றி  செலுத்துகிறோம். மாடுகளுக்கும்  நன்றி  செலுத்துகிறோம். இது  தமிழ்ப் பண்பாடு. நாம் விலங்குகளை, இயற்கையை, சூரியனை, நிலத்தை, நீரை வணங்குபவர்கள்.

  • பேசும் கடல்-9

    "பாட்டி, பாட்டி உனக்கு எங்க மேல ரொம்ப அன்பு, அதான் நாங்க என்ன செய்தாலும்  மீண்டும் மீண்டும் எங்களை எட்டி பார்த்துவிட்டு போறீங்க"  அமுதா கடல் பாட்டியிடம் கொஞ்சல் மொழியில் கேட்டாள்‌  இனியனுக்கும் அமுதாவுக்கும் கடற்கரையும் கடற்கரை மணலும் இன்னொரு தாய்மடி போல் மகிழ்வை தந்தது.  மணலில் வீடு கட்டுவார்கள் ஈர மணலில் ஒரு காலை மட்டும் வைத்து பெரிய கோபுரம் கட்டுவார்கள். தங்களுக்கு தெரிந்த வடிவங்களில் பல உருவங்களைச் செய்வார்கள். எத்தனை உருவங்களைச் செய்தாலும் அத்தனையும் சில நிமிடங்களில் அலை வந்து  கரைத்துவிடும்.       கடற்கரை மணலில் ஓடும் குட்டி நண்டுகளைப் பிடிப்பது, அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு. மணலைத் தோண்டி குழி  பறித்து நண்டுகளைப் பிடிப்பார்கள். பிடித்த நண்டுகளையும் அலை வந்து இழுத்துச் சென்று விடும். முன்பெல்லாம் அலை மீது கோபப்படும் அமுதா இப்போது கடல்பாட்டியின் மீது அன்பை அதிகப்படுத்தி விட்டாள்‌. காரணம் கலந்துரையாடல். அன்பின் ஆணிவேரே மனம் திறந்த உரையாடல் தானே. " பாட்டி பாட்டி...... எவ்வளவுதான் மன அழுத்தம், சோர்வு, கவலை, தனிமை இருந்தாலும் கடற்கரை மணலில் அமர்ந்து கடல் காற்றை சுவாசித்தால் எல்லாம் போய் விடுகிறது. எப்படி? இனியன் கேள்வியை தொடங்கினான். " அண்ணா சூப்பர்....கேள்வி நானும் ஒன்னு கேட்கணும் ......பிறகு கேட்கிறேன் ." என்று  குறிக்கிட்டாள் அமுதா.  பயிற்சிகளில் மிகச் சிறந்தது கேள்வி கேட்கத் தூண்டுவது, கேள்விகள் மனதில் தோன்றினால் பகுத்தறிவு வளரும். எல்லாரும் எல்லோரையும் நேசிப்பார்கள்." என்று பாட்டி தன் பஞ்ச் டயலாக்கோடு பேசத் தொடங்கினார். " பேரப்பிள்ளைகளா! யாரெல்லாம் புதிதாக உற்பத்தி செய்கிறார்களோ அவர்கள் அனைவருமே நேர்மறையாளர்கள். அல்லது நம்பிக்கையாளர்கள். தாய் குழந்தையை பெற்றெடுக்கும் போது உலகிற்கு புது நம்பிக்கை தருகிறார்."   " பாட்டி இன்னைக்கு ரொம்ப சுத்தி வளைக்கிறீங்க புரியும்படி சொல்லுங்க" அமுதா அவசரப்பட்டாள்.  "அமுதா.... கடல் தான் மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. பூமி பந்தின் காற்றுச் சமநிலையை ஏற்படுத்துவது கடல்தான். பூமி முழுவதும் காற்று நிரம்பி இருக்க வேண்டும் என்றால் கடல் இருந்தால் தான் அது சாத்தியம்." " உலகம் இயங்க நீங்கதானே காரணம் பாட்டி ?" இனியன் சட்டென கேட்டான்.  " ஆமாம் என்றால் தலைக்கனம், இல்லையென்றால் உண்மைக்கு புறம்பாகிவிடும். நீயே சிந்தனை செய்து கொள் இனியன். " "சரி சரி ........கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே, ஏன் கடற்கரைக்கு வந்தா கவலையெல்லாம் போகுது .....?" தொடர் கேள்விகளை தொடுத்தாள் அமுதா. " தூய காற்று, தூய நீர் ,தூய மணல் இந்த மூன்றும் இன்னும் கடலோரத்தில் தான் மிஞ்சி இருக்கிறது. நல்ல காற்றை சுவாசித்தாலே மனிதர்கள் நேர்மறையாக சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் .ஓயாது அடிக்கும்  காற்றும், நொடிக்கொரு முறை சுழன்று வரும் அலையும் மனித நம்பிக்கையை கூட்டும். " அது உண்மைதான் கடலம்மா..... வெளியூருக்கெல்லாம் போனா எங்களால் வாழவே முடியாது. கடல் தான் எங்க நம்பிக்கையைக் கூட்டுகிறது." என்று இனியனின்   அப்பா பேசினார். நீண்ட நேரம் குழந்தைகள் கடல் பாட்டியோடு பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் உரையாடலில் இணைந்து கொண்டார். " கடலம்மா...... எங்க வாழ்வாதாரம் நீங்க.... மத்தவங்க வந்து கடலை வேடிக்கை பார்க்க நாங்க விடனுமா?" இனியனின் அப்பாவும் கேள்வி கேட்க தொடங்கி விட்டார். " அவங்க வேடிக்கை மட்டும் பார்க்க வரவில்லை உயிரினங்களின் தோற்றமே கடல்தானே. அதனால் மூதாதையர்கள் தோன்றிய இடத்தைப் பார்த்து புது நம்பிக்கை பெறுகிறார்கள். " பாட்டி.... பாட்டி குரங்கிலிருந்துதானே மனிதன் வந்தான் என் டீச்சர் சொல்லித் தந்தாங்க.." அமுதா...  "அதுதான் அறிவியல் உண்மை". இது இனியன் . " குரங்குகள் தோன்றுவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இது நடந்துள்ளது. உயிரினங்களின் தோற்றத்தில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கும். 'நீரின்றி அமையாது உலகு'. உயிரினங்களின் தோற்றம் கடல் தான், ஆகவே மக்கள் தாய்மடி தேடி வருகிறார்கள்"  "Excelent பாட்டி...." அமுதா கூறினாள். "Thankyou அமுதா.... உங்க அப்பா தனியா மீன்பிடிக்க போவதில்லை ஏன் என்று கேள்? இப்போது கடல் பாட்டி கேள்வியை தொடர்ந்தாள். " அப்பா..... பாட்டிக்கு பதில் சொல்லுங்க" " நாங்க குடும்பமா தான் தொழில் செய்வோம். அப்பா, அண்ணன் தம்பி, சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளோடுதான் தொழில் செய்வோம். அப்பதான் கடல்ல எதுனாலும் பாதுகாப்பு இருக்கும். சற்று குரலை உயர்த்தியே பேசினார். நீங்க முத்துகுளிப்பு செய்வீங்க அதையும் குழந்தைகளுக்கு சொல்லுங்கப்பா...."  முத்துக்குளிப்பா..... அது என்னப்பா..."  முத்து குளிக்க... ஆழ்கடல்ல மூழ்கி செல்ல வேண்டும். அப்போது தன் இடுப்பில் கயிறு கட்டி ஒருவர் கடலுக்குள் குதித்தால், மற்றொருவர் மேலிருந்து கயிறை பிடித்துக் கொள்வார்." அப்பா கூறவும் ...இனியன், அந்த ஒருவர் யார்? மற்றொருவர் யார்? 'மச்சான், மாப்பிள்ளை'  'அப்பா, மகன்' ' அண்ணன், தம்பி' இப்படி ஆழமான உறவுகளை நம்பிதான் முத்து குளிப்பார்கள்.  இதுதான் என் மக்கள். உயிர் தோன்றிய கடலில் உறவோடு தொழில் செய்து கொண்டிருக்கும் கடைசி சமூகம் மீனவ சமூகம், கடலோடிகள் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். கடலம்மா உணர்ச்சி கொந்தளிப்பில் ஓங்கி அலையாக  வந்து போனாள். " அதான் அப்பாவும், சித்தப்பாவும் சேர்ந்து கடல் தொழிலுக்கு போறாங்களா?" அமுதா.  "சேர்ந்து தொழில் மட்டுமல்ல சேர்ந்தே வாழ்கிறார்கள் அமுதா" என்று இனியன் கூற  கடல் பாட்டி பூரிப்படைந்தாள்.         – கடல் பேசும்

  • வாஸா அருங்காட்சியகம் - ஸ்டாக்ஹோம், சுவீடன்

    வாஸா - முதல் பயணத்திலேயே மூழ்கிப்போன கப்பல். முன்னூறு வருடம் மூச்சடக்கிய பின் முழுதாய் மீட்கப்பட்ட கப்பல். ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கடலோரக் குடிலில் கம்பீரமாய்க் குடியிருக்கும் கப்பல்.இந்தக் கப்பல் பிறந்த கதை, கடலில் மூழ்கிய கதை, மீட்கப்பட்ட கதை , தற்போதைய அருங்காட்சியக வாழ்க்கைக் கதை - எல்லாக் கதைகளையும் விரிவாய்ப் பார்க்கலாம்.கி. பி. 1624. ஸ்வீடனின் மன்னராக ஆட்சி செய்து கொண்டிருந்தவர் குஸ்தவ் II அடோல்ப் என்பவர். தனது பதினேழு வயதிலேயே மன்னரானவராம். பின்லாந்தும் ஸ்வீடனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மன்னர், நாடு என்றாலே போர்கள் தானே வரலாறு? குஸ்தவ் II-ம் அதற்கு விதிவிலக்கல்ல. அண்டை நாடான டென்மார்க், ரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் போர்களில் ஈடுபட்டார். இத்தனைக்கும் போலந்து நாட்டை ஆட்சி செய்தவர் இவரது உறவினரே. இருந்தாலும் மண்ணாசை யாரை விட்டது? அடிக்கடி போர்கள் புரிந்ததனால் படைகளும் கப்பல்களும் சேதமாயின. இருந்த கப்பல்களும் பழையதாய் இருந்தன. எனவே புதிதாகக் கப்பல் செய்ய மன்னர் உத்தரவிட்டார். ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் (Henrik Hybertsson) எனும் டச்சுக்காரர் கப்பல் கட்டுவதில் புகழ்பெற்றவராம். இரண்டு பெரிய கப்பல்களையும் ஏராளமான சிறிய ரகக் கப்பல்களையும் கட்டும்படி தளபதியிடமிருந்து உத்தரவு வரவும் கப்பல்கள் கட்டும் பணியினைத் தொடங்கினார். இரவும் பகலும் வேலைகள் தொடர்ந்தன.கப்பல்கள் செய்வதற்கு ஸ்வீடனின் காடுகளிலிருந்து சுமார் ஆயிரம் ஓக் மரங்கள் வெட்டப்பட்டன. ஓக் மரங்கள் சற்று எடை அதிகமானவை, உறுதியானவை. இரண்டு பெரிய கப்பல்களுள் ஒன்றினுக்கு வாஸா என்றும் மற்றொன்றிற்கு மூன்று கிரீடங்கள் (Tre Kronar) என்றும் பெயர் சூட்டப்பட்டது. வாஸா என்பது மன்னரின் பரம்பரையைக் குறிப்பது (Vasa Dynasty). சுமார் நான்கு வருடங்களில் கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டன. வாஸா, ஸ்டாக்ஹோம் நகரக் கடற்கரையில் கம்பீரமாய் நின்றது. மரக்கப்பலில் வண்ணம் பூசப்பட்டது. கப்பலின் முகப்பில் மர வேலைப்பாடுகளாலான சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இது ஒரு நான்கடுக்குக் கப்பல். கப்பலின் எடை ஆயிரத்து இருநூறு டன்கள். கப்பல் கடலின் காற்றில் கவிழ்ந்துவிடாமல் பாதுகாக்க (கப்பலைச் சமநிலைப்படுத்தும் எடைக் கற்கள் - Ballast) நூற்று இருபது டன் கற்கள். கப்பலின் இரு தளங்களில் ஆயுதங்களும் பிற போர்க்கருவிகளும் ஏற்றப்பட்டன. எழுபது மீட்டர் நீளம் கொண்டது. கப்பலின் தடித்த நடுப்பகுதி பதினோறு மீட்டர் அகலம் உடையது. நான்கு அடுக்குகளில் கீழ்தட்டில் உணவுப்பொருட்கள் அடுக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கை சுற்றி சிறியரக பீரங்கிகளைத் தாங்கும் மேடைகள் அமைக்கப்பட்டன. போர்வீரர்கள் படுத்து உறங்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இரு தளங்களையும் பயன்படுத்திக் கொண்டனராம்.கப்பலைச் சுற்றிலும் மர வேலைப்பாடுகளைக் கொண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை ஐநூறு இருக்குமாம். இப்படியாய் நான்கு ஆண்டுகளில் முழுமை பெற்ற இக்கப்பலை நீரில் மிதக்கவிட்டனர். அந்த நேரத்தில் மன்னர் போலந்து நாட்டின்மீது போர் புரியச் சென்றிருந்தார். அவருக்கு போரில் உதவி செய்ய ஆயுதங்களும் வீரர்களும் தேவைப் பட்டனர். வாஸா தயாராகி விட்டதா என்று கேட்டு விரைவாகக் கட்டி முடிக்கவும் ஆணையிட்டார். கப்பல் கட்டி முடித்து வெள்ளோட்டம் பார்க்கும் முன்னர் கப்பலை அனுப்ப மன்னர் மீண்டும் அவசரப் படுத்தினார். 1628-ஆம் வருடம் ஆகஸ்ட் மாத மதிய நேரம் ஒன்றில் வாஸா கடற்பயணம் மேற்கொள்ளத் தயாரானது. இருநூரு படை வீரர்களையும் ஏராளமான ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு குண்டுகள் முழங்க தனது முதற்பயணத்தைத் தொடங்கியது. பயணம் மேற்கொண்ட சில நிமிடங்களில் பலத்த காற்று வீச ஆரம்பிக்க, காற்றில் நிலை கொள்ளாது தள்ளாடி கடலில் கவிழ ஆரம்பித்தது.கப்பலில் இருந்தவர்களுள் பலர் நீந்தித் தப்பித்தனர். சுமார் ஐம்பது பேர் மூழ்கி மாண்டனர். முழுவதுமாய் மூழ்கி சுமார் முப்பது மீட்டர் ஆழத்தில் புதைந்து போனது. வாஸா மூழ்கியபின் அதனைத் தேடி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவுற்றன. அவ்வளவு எடையுள்ள கப்பலை மீட்பது சவாலான காரியந்தான். வாஸா மூழ்கி சுமார் முன்னூற்று முப்பது ஆண்டுகளுக்குப் பின்பே இம்முயற்சி செயல் வடிவம் பெற்றது. ஆன்டர்ஸ் ஃப்ரென்ஸீன் என்பவர் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவராவார். வாஸா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தபின் அதை எவ்வாறு மீட்பது என்பது குறித்து, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வகையில் திட்டமிட்டார். கடலுள் ஆய்வு செய்யும் இருவர் துணையுடன் வாஸா மூழ்கியிருக்கும் நிலை பற்றி ஆய்வு செய்தார். நல்ல வேளையாக வாஸா தலைகீழாய்க் கவிழாமல் நேராகவே கடலுக்குள் அமர்ந்திருந்தது. எனவே கப்பலை அப்படியே தூக்குவது என முடிவானது. தூக்குவது என்ன பத்து கிலோவா? டன் கணக்கில் எடை. கப்பலைத் தூக்குகையில் முன்னூறு வருடங்களாய் கடல்நீரில் ஊறிய மரங்கள் உடையவும் வாய்ப்பிருந்தது. சற்றுக் கடினமான செயல்தான். செலவு அதிகம் வைக்கும் திட்டம் இது. அனைத்துச் செலவுகளையும் ஸ்வீடனின் கடற்படையும் ஒரு தனியார் நிறுவனமும் ஏற்றுக்கொண்டன. முதலில் கப்பல் அமர்ந்திருந்த கடல்தரையில் (கடல் மட்டத்திலிருந்து முப்பது மீட்டர் ஆழம்) ஆறு சிறிய சுரங்கங்கள் தோண்டப்பட்டன. அதாவது , தடிமனான வளையும் இரும்பு கம்பிகளை ஒருபுறம் செலுத்தி மறுபுறம் எடுத்து அப்படியே மேலே உயர்த்தும் திட்டத்துடன் இந்தத் துளைகள் இடப்பட்டன. தடிமனான இரும்புக்கம்பிகளை துளைகளில் செலுத்தி இயந்திரங்களின் உதவியுடன் சிறிது சிறிதாக கப்பல் மேலே உயர்த்தப்பட்டது. இந்தப்பணிகளெல்லாம் சுமார் ஐந்து வருடங்கள்( 1956 முதல் 1961 வரை) தொடர்ந்தன. ஏப்ரல் 24, 1961. மூழ்கிய கப்பல் மீண்டும் மூச்சு வாங்க வெளியுலகம் வரும் நாள். இச்செய்தி உலகெங்கும் பரவிவிட செய்தியாளர்களும் பார்வையாளர்களும் ஸ்டாக்ஹோமை முற்றுகையிட ஆரம்பித்தனர். நாடெங்கும் இதே பேச்சு. ஸ்வீடனின் தொலைக்காட்சியும் இந்நிகழ்ச்சியை நேரடியாய் ஒளிபரப்பு செய்தது. சரியாய் காலை ஒன்பது மணிக்கு வாஸாவின் மேல்தளம் கண்ணுக்குப் புலப்பட ஆரவாரக்கூச்சல்களில் கடலே அதிர்ந்ததாம். படம்: 1961-ல் கப்பல் மீட்கப்பட்டு தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தபோது. பின்னர் கப்பல் மூழ்கிய இடத்தைச்சுற்றிலும் சிதறிக்கிடந்த மரப்பலகைகள், ஆணிகள், இறந்தவர்களின் எலும்புகள் , சிதறிய ஆயுதங்கள் , உடைந்த சிற்பங்கள் முதலியன தேடி எடுக்கப்பட்டன. கப்பலை மீட்டெடுத்த பின் அதைச் செப்பனிடும் வேலை ஆரம்பமானது. அவ்வேலை, கப்பலைத்தூக்கி எடுக்கும் வேலையை விடச் சிரமமானதாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் இருந்தது. இவ்வளவு ஆண்டுகள் கடல் நீரைக் குடித்த மரப்பலகைகள் , பல ஆண்டுகள் கெட்டுப்போகாதவாறு பதப்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. மரங்கள் கெடாதவாறு பாதுகாக்கும் பாலிஎதிலின் கிளைகால் எனும் வேதிப்பொருள் கப்பல் முழுதும் தடவப்பட்டது. மரங்கள் இற்றுப்போகா வண்ணம் இருக்க போரிக் அமிலம் கலந்த கலவையும் பூசப்பட்டதாம். உடைந்த சிற்பங்கள் மீண்டும் செப்பனிடப்பட்டு கப்பலில் பொருத்தப்பட்டன. தளர்ந்த ஆணிகள் முடுக்கப்பட்டன.செப்பனிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற தற்காலிகமாய் ஒரு இடத்தில் பார்வைக்கென வைக்கப்பட்டது. இப்பணிகள் எல்லாம் நிறைவடைந்தபோது 1990 ஆம் ஆண்டு பிறந்திருந்தது. பின்னர் ஸ்டாக்ஹோமின் யூர்காடன் (Djurgarten) எனும் தீவில் நிரந்தரமாய்க் குடியேறியது வாஸா. சுவீடனில் நாங்கள் வசித்தபோது, 2004 ஆம் ஆண்டின் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஸ்டாக்ஹோம் பயணித்தோம். நாங்கள் வசித்தது லுண்ட் எனப்படும் தென்பகுதி நகரம். லுண்டிலிருந்து  ஸ்டாக்ஹோம் சுமார் ....வாஸா மியூசியத்தைப் பார்வையிடச் (நானும் எனது மனைவியும்) சென்றோம். ஸ்டாக்ஹோம் சென்றுவரத் திட்டமிட்டால், பயணத்தின் முதல் நிறுத்தம் வாஸா கப்பல் தான். வாஸா அருங்காட்சியகத்தில் நுழைந்ததும் மெல்லிய வெளிச்சம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. மெல்லிய வெளிச்சத்தைத் தொடர்ந்து செல்ல, பிரம்மாண்டமான கப்பல் எதிர்ப்பட்டது. கப்பலின் முகப்புப் பகுதியை அண்ணாந்து பார்த்ததில் கழுத்து வலித்தது. கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல்தளம் வரை , கப்பலின் ஒவ்வொரு பகுதியாய்ச் சென்று பார்ப்பதற்கு ஏழு தளங்கள். கப்பலின் முன்பகுதியில் மூக்கு போல் நீட்டிக்கொண்டிருந்த அலகு (Beak) அதில் ரோம் மன்னன் நீரோவின் உருவம் பொறித்த சிலை. தண்ணீரில் மூழ்கி இற்றுப் போயிருந்த அச்சிலையை மீண்டும் புதுப்பித்திருந்தார்கள். மன்னர் குஸ்தவ் இள வயதில் முடி சூட்டிக்கொள்வது போல் ஒரு சிலை. மரத்தில் இழைத்துச் செய்யப்பட்டிருந்த அனைத்து சிலைகளும் அதிசயமாய் இருந்தன. கப்பலின் மேலிரு தளங்களில் அமைக்கப்பட்டிருந்த பீரங்கி மேடைகளும் சுற்றிலும் அமைக்கப்பட்ட அறுபத்தி நான்கு துளைகளும் இருந்தன. கப்பல் மூழ்குவதற்கு இந்த ஈரடுக்குப் பீரங்கித் துளைகளும் ஒரு காரணம். அருங்காட்சியகத்தின் உள்ளே ஒரு திரையரங்கு. மணிக்கொருதரம் காட்டப்படும் குறும்படத்தில் வாஸாவை மீட்கப்பட்ட காட்சி முதல் அதைச் செப்பனிட்டு எவ்வாறு தற்போதுள்ள அருங்காட்சியகத்தின் வைக்கப்பட்டது என விரியும் காட்சி வரை விளக்கமாய்க் காணலாம். படம் சுவீடிய மொழியில் தான்; நல்லவேளையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு திரைமேல் சிவப்பு எழுத்துக்களில் ஓடுகிறது. மூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் காட்சிகளும் , கப்பல் மூழ்கிய இடத்தைச் சுற்றிலும் இறைந்து கிடந்த மரப் பலகைகளும் ஆணிகளும் பிற பொருட்களும் மீட்கப்பட்டு , எவ்வாறு அதே ஆணிகளைக் கொண்டு அப்பலகைகள் மீண்டும் பொருத்தப்பட்டன என்பதை விளக்கும் காட்சிகளும், கப்பல் மீண்டவுடன் அதனுள் குவிந்து கிடந்த சகதியை வெளியேற்றி, கப்பல் சுத்தப்படுத்தப்பட்டு , வேதிப்பொருட்கள் கொண்டு கப்பல் புதுப்பிக்கப்பட்ட காட்சிகளும் சுவையாய் இருந்தன. நிஜக் கப்பலின் அருகே அதன் மாதிரி வடிவமொன்று சிறியதாய் வைக்கப்பட்டிருந்தது. கடலினடியில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு வகையான பொருட்களும் பார்வைக்குக்கிடைத்தன. கப்பலில் சென்ற போர் வீரர்கள் பயன்படுத்திய தோலாலான உடைகள் மற்றும் காலணிகள் , பீரங்கிகள் உபயோகப்படுத்திய பாத்திரங்கள் , போர்க்கருவிகள் என எண்ணிலடங்காப் பொருட்கள் அங்கே காட்சிக்குக் கிடைக்கின்றன. "கப்பல் ஏன் மூழ்கியது?" என்ற கேள்விக்கு மியூசியத்தின் ஒரு சிறிய அறையில் விடை கிடைக்கிறது. அசையாப் படங்களை (Slide Show) ஒரு திரையில் காண்பித்து , அப்படத்திற்கேற்ப விளக்க உரை பின்னணியில் வழங்கப்படுகிறது. அறையிலுள்ள ஒலிபெருக்கிகள் ‘டால்பி’  ஒலிமுறையில் அமைக்கப்பட்டிருந்தன. கப்பல் மூழ்கியபோது ஏற்பட்ட விளைவினை நம் கண்முன் நிறுத்த, கப்பல் மூழ்குவது போன்ற ஒரு ஓவியமும் அதன் பின்னணியில் கப்பல் மூழ்கும்போது எழும் ஓசையை விட அதிக அதிர்வை ஏற்படுத்தும் இசையையும் தந்து பிரமிப்பு ஏற்படுத்தினார்கள். கப்பல் மூழ்கியபோது மன்னர் போலந்து நாட்டில் இருந்ததால் அமைச்சர் ஒருவரது தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு இதற்கான காரணம் ஆராயப்பட்டதாம். இயற்கையின் விளையாட்டு என ஒரு சிலர் எண்ணினர். எவரோ செய்த சதி என்று சிலர் சந்தேகித்தனர். கப்பலிலிருந்து தப்பித்தவர்கள், கப்பல் கட்டிய தொழிலாளர்கள், கப்பலைக் கட்டிய ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் என அனைவரும் விசாரிக்கப்பட்டனர். முடிவில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. யாரும் தண்டிக்கப்படவுமில்லை. பின் ஏன் கப்பல் மூழ்கியது? மன்னரின் விருப்பப்படி ஈரடுக்குப் பீரங்கித்துளைகள் கப்பலில் அமைக்கப்பட்டதால், அத்துளைகள் கப்பலின் கீழ்தளத்தில் சமநிலைப்படுத்தும் கற்கள் (Ballasts) நிரப்பும் இடத்தைப் பெரிதும் பாதித்தன. எனவே போதிய கற்கள் எடுத்துச் செல்லாமல் குறைவான கற்களே நிரப்பப் பட்டன. காற்று பலமாக வீசியதால் கப்பல் தனது எடையச் சமன் செய்து கொள்ள முடியாது கவிழ்ந்து விட்டது. கப்பலின் அடிப்பகுதி முதல் மேல்பகுதி வரை ஒவ்வொரு தளமாய்ப் பார்த்து வியந்தோம். ஒவ்வொரு தளத்திலும் இது தவிர வேறு எதாவது காட்சியோ , குறிப்புகளோ அல்லது மீட்டெடுக்கபட்ட பொருட்களோ வைக்கப்பட்டு மேலும் சுவை சேர்த்தன. மூழ்கிய கப்பலை மேலே உயர்த்த கப்பலினடியில் துளைகள் இட்டு, வளையும் கம்பிகள் செலுத்தித் தூக்கியதைக் கண்முன் நிறுத்தும் ஒரு மாதிரியும் ஒரு தளத்தில் இருந்தது. கப்பலின் மீது செதுக்கிய சில சிலைகளையும் தனியாக ஒரு தளத்தில் காண முடிந்தது. சிற்பங்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. மியூசியம் விட்டு வெளிவந்த பின்னும் வாஸாவின் பிரம்மாண்டம் கண்களுக்குள் புகுந்து தொடர்ந்து கொண்டேயிருந்தது. எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’  ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • கிராமத்து விடுகதைப்பாட்டு

    தாரைத்தொட்டேன் ஒட்டுல சீப்பை எடுத்தேன் சீவுல ஒன்னைப்பிய்ச்சேன் எதிர்க்கல தோலை உரிச்சேன் அழுவுல - அந்த வாழைப்பழம் திகட்டுல! 2.பெயரும் வினையும் நாட்டு நாட்டு நாட்டு நாட்டுக்கொடியை நாட்டு காட்டு காட்டு காட்டு காட்டு யானையைக் காட்டு பூட்டு பூட்டு பூட்டு பூட்டை நல்லா பூட்டு தட்டு தட்டு தட்டு தட்டில் தாளம் தட்டு கட்டு கட்டு கட்டு கட்டுக்கட்டா கட்டு சொல்லு சொல்லு சொல்லு நல்ல சொல்லை சொல்லு அடுக்கு அடுக்கு அடுக்கு அடுக்கு அடுக்கா அடுக்கு முறுக்கு முறுக்கு முறுக்கு முறுக்கி சுட்ட முறுக்கு ஓடு ஓடு ஓடு ஓட்டு வீட்டுக்கு ஓடு ஏழை படும்பாடு - அதை உடைத்தெறிய பாடு குருங்குளம் முத்துராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்  பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.  இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

bottom of page