இயலில் தேடலாம்!
178 results found with an empty search
- வன ராணி
மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை. தேன்மொழி மிக குதூகலமாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். படித்து கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்திவிட்டு "தேனு..பக்கத்து வீடு பால் வண்ணம் மாமா வீட்டுக்கு நாறும்பூ மாமா வந்துருக்காங்க . உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் "என்று அம்மா கூறினாள். தேன்மொழிக்கு சந்தோசம் தாங்கல .."மாமா எப்போ வந்தாலும் நிறைய கதை சொல்லுவாங்க,மாமா சொல்ற கதை எல்லாம் புதுசா இருக்கும் " மாமவ பார்க்க போனாள். மாமா இவள பார்த்ததும் "தேனு எப்படிம்மா இருக்க" என்று கேட்டாங்க,ரெண்டு பேரோட பேச்சு அப்படியே போகும் போது "மாமா ஒரு கதை சொல்லுங்க" என்று கேட்க... மாமாவும் கதை சொல்ல தொடங்கினார். "ஒரு அடர்ந்த வனம்.அந்த வனத்தை ஆண்டது ஒரு ராணி " 'ராணியா 'என்று தேன்மொழி கேட்க "ஆமா, அந்த காலத்தில் ராணியும் ஆட்சி செய்தார்கள். அவ பெயர் மீனாட்சி.. காட்டை அந்த ராணி ரொம்ப சிறப்பாக ஆட்சி செய்தாள். அங்குள்ள பழங்குடி மக்களும் மகிழ்ச்சியாக,அன்புடன் அனைவரும் கூடி வாழ்ந்தார்கள். எந்த ஒரு ஏற்ற தாழ்வும் கிடையாது. காடு தனக்கே உரியது என நினைக்காமல் விலங்குகளுக்கும் உரிமை உண்டு என உயிர்மெய்நேயம் உடையவர்கள். ஒரு நாள் மூன்று நபர்கள் வெளிநாட்டில் இருந்து அந்த காட்டிற்கு வந்து ராணியின் அனுமதி இல்லாமல் ஒரு குடில் போட்டாங்க." ' குடில்னா 'யோசனையா கேட்டா தேன்மொழி "குடில்னா தங்குறதுக்கு ஒரு ஓலை வீடு அப்டினு அர்த்தம்" மாமா சிரிச்சிகிட்டே சொன்னாங்க "இது ஒற்றர்கள் மூலம் ராணிக்கு தெரிந்தது.உன் வீட்டில் உன்கிட்ட கேட்காமல் யாரவது வந்தா " தங்க விடுவியா!! யாரு நீங்க என்ன ஏதுன்னு விசாரிப்பல்ல அந்த ராணியும் அதைத்தான் பண்ணாங்க ஒரு மந்திரியை அனுப்பி "ராணிக்கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் தங்கணும்"என்று சொல்ல சொன்னாள். ஆனால் அந்த மந்திரியை அடித்து அனுப்பினர். இதனால் கோவம் அடைந்த ராணி நேராக சென்று பேசினாள். அவர்களோ அதிகார தொனியில் பேசினார்கள். இது ஒரு வாக்குவாதமாக மாறி, அந்த மூவரில் ஒருவன் வில்லை எடுத்து ராணியின் மூக்கு, காது, மார்பை அறுத்தான்." 'இது என்ன கொடூரம், இதை யாரும் தட்டி கேட்கலையா' "பழங்குடிகள், ஏழைகளுக்கு நடக்கும் குற்றங்களை யாரும் தட்டி கேட்க மாட்டார்கள். அதிகார வர்க்கம் எப்போவும் அடிமைப்படுத்ததான் நினைக்கும்." 'மாமா, இது சூர்ப்பணகை கதை மாதிரியே இருக்கு' சிரித்துக்கொண்டே"கண்டு பிடிச்சிட்டியா " 'ஆனால், நான் சூர்ப்பணகையை வஞ்சி மகளுன்னு படிச்சேன்.. அவ அரக்கி தானே, அழகா இருப்பானு சொல்றிங்க, மீனாட்சினு வேற சொன்னிங்க'என கேள்வியை அடுக்கிக்கொண்டே இருந்தாள். மாமா.. "பொறுமையா இரு. சொல்றேன். சூர்ப்பனகையை விகாரத் தோற்றம் உடையவளாகவும் துர்க்குணம் நிறைந்தவளாகவும் நம் மனம் சித்தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையில் சூர்ப்பணகை அழகானவள். பிறக்கும் போதே அவள் தன் தாய் கேசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களை அழகில் விஞ்சியிருந்தாளாம். அவள் கண்களின் அழகுக்காக மீனாட்சினு lபெயர் வச்சாங்க .. 'ச்சே, எவ்வளவு தப்பா புரிஞ்சி வச்சிருக்கேன், ஏன் அவளை அரக்கி என்று சொல்றோம்'தேன்மொழி வருத்தப்பட்டாள். "சூர்ப்பணகை போராட்ட குணம் படைத்தவள்... தங்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வுடன் இருந்தவள். அதை பயமின்றி சொன்னவள்.. வெறும் கொலு பொம்மை போலின்றி அறிவுள்ளவளாகவும் இருந்தாள்.. ,. அதனால் அவர்கள் கெட்ட குணங்களை படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டு விட்டார்கள்." ' எப்போவுமே கதை கதாநாயகன், கதாநாயகி, பார்வையில் தான் இருக்கிறது. கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து சொல்ல படுவது இல்லை' " இது கற்பனை இதிகாசங்களில் மட்டும் இல்லை, இப்போதும் அடக்குமுறை இருக்கிறது "மாமா சொன்னாங்க. ' இப்போதுமா'..'தேன்மொழி ஆச்சிரியமாக கேட்க.. "பல உலக நாடுகள், இந்தியா உட்பட பழங்குடிகளை காட்டில் இருந்து தள்ளி நகரங்களாக மாற்றுகிறது. ஒரு கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதியில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம்.தான்" என்று மாமா சொல்ல 'மாமா இன்னும் அவங்கள பத்தி சொல்லுங்க மாமா 'என்று ஆவலுடன் தேன்மொழி கேட்டாள் "உலகெங்கிலும் 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடி மக்கள் இருககாங்க.., இதில் 476 மில்லியன் மக்கள் உள்ளனர் - இது உலக மக்கள் தொகையில் சுமார் 6.2% தான். 4,000 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள். அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டிருக்கலாம் என்றாலும், பழங்குடி மக்கள் உலகம் முழுவதும் அதே கடுமையான யதார்த்தங்களை அனுபவிக்கின்றனர். அவர்களின் மனித உரிமைகள் தொடர்ந்து அரசு அதிகாரிகளால் மீறப்படுகின்றன, மேலும் அவர்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறார்கள்.. . பழங்குடியின் கையில் இருந்த சோலைவனம் இப்போது நம்மிடம் பாலைவனமாக உள்ளது."என்று மாமா சொல்ல .. 'இதுக்கு நம்ம என்ன செய்யலாம்' தேன்மொழி கேட்டாள் "இதை உன் நண்பர்கள் கிட்ட பகிரலாம், சமூக வலைத்தளங்களில் இது போன்ற நல்ல கருத்துகளை பதிவிடலாம்." 'கண்டிப்பாக செய்வேன், ரொம்ப நன்றி மாமா' என்று கூறிவிட்டு தேன்மொழி வெளியே வந்தாள். கருமேகங்கள் நகர்ந்து சூரிய ஒளி பிரகாசமாக தெரிந்தது, வானில் மட்டும் அல்ல தேன்மொழியின் மனதிலும் தான்... மிக விரைவில் அவள் அதைப் பற்றி ஒரு குழந்தைகள் புத்தகத்தில் ஒரு கதையை எழுதுவாள், நாம் அனைவரும் ஒரு நாள் அதைப் படிப்போம் சூடாமணி மு.சூடாமணி, வயது 15 ,11ம் வகுப்பு மாணவி, திருநெல்வேலி கதைசொல்லி, இளம் ஓவியர் இளம் எழுத்தாளர், இளம் கவிஞர், இளம் சொற்பொழிவாளர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், உள்ளிட்ட 6 புத்தகங்களை எழுதியிருக்கும் சூடாமணி ஓவியரும் கூட..
- மந்திரப்பேனா
அறிவழகி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வந்தாள். அப்பொழுது அவள் வீட்டிற்கு அவளுடைய பாட்டி வந்திருந்தார். பாட்டியோ பேத்தியை பார்த்த மகிழ்ச்சியில் வாரி அணைத்து கொண்டார். பிறகு அவளுக்கு பரிசாக ஒரு பேனாவை தந்தார். இதனால் அறிவழகி ஏமாற்றம் அடைந்தாள் "என்ன பாட்டி நீங்க பொம்மை வாங்கிட்டு வருவீங்கன்னு நினைச்சேன்" என்று வருந்தினாள் அதற்குப் பாட்டி"என் செல்லக்குட்டியே இது சாதாரண பேனா இல்ல மந்திர பேனா"என்றார் "எது மந்திர பேனாவா?…"என்று ஆச்சரியமடைந்தாள். சிரித்தபடி ஆமாம் என்று தலையசைத்தார் பாட்டி. பாட்டியோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தூக்கம் வந்துவிட்டது எனவே அவரது மடியில் படுத்து உறங்கினாள். சிறிது நேரம் கழித்து எழுந்த பொழுது தெரிந்தது மணி ஆறு ஆகிவிட்டது என்று. ஏனெனில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுப் பாடத்தை முடித்து, சாப்பிட்டுவிட்டு 8:00 மணிக்கே தூங்கி விடுவாள் ஆனால் இன்றோ வழக்கத்துக்கு மாறாக சாயந்திரமே தூங்கியதால், வீட்டுப் பாடத்தை எழுத மறந்திருந்தாள். அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. வீட்டுப் பாடத்தின் கேள்விகளை எடுத்துப் பார்த்த பொழுது மிகவும் கடினமாக உணர்ந்தாள்.பாட்டி பரிசாக தந்த மந்திர பேனாவை வைத்து நோட்டில் முதல் கேள்வியை எழுதினாள் 'மரங்களின் பயன்கள் என்ன?' அட என்ன ஆச்சரியம்! அவள் எழுதியதும் பேனாவுடைய மை அவளை இழுத்து ஒரு அடர்ந்த காட்டிற்குள் விட்டது அங்கே இருந்த ஒரு பெரிய மரம் பேச ஆரம்பித்தது "மரங்கள் ஆகிய நாங்கள் உயிர்களை வாழ வைக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறோம், மேலும் பறவைகளுக்கு வீடுகளாக அவைகள் சாப்பிடும் பழங்களை உண்டு பண்ணுகிறோம்.. "என்று பேசி முடித்தவுடன் மீண்டும் அவள் வீட்டிற்குள் இருந்தாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அறிவழகி மரம் கூறிய விஷயத்தை ஞாபகப்படுத்தி எழுதினாள் பிறகு இன்னொரு கேள்வியை எழுத ஆரம்பித்தாள் 'உலகின் மிக உயரமான சிகரம் எந்த மலையில் உள்ளது?' என்றும் எழுதி முடித்தவுடன் இமயமலையில் இருந்தாள் இமயமலை பேச ஆரம்பித்தது "நான் தான் இமயமலை, என்னிடம் தான் உலகின் உயரமான சிகரம் உள்ளது அதன் பெயர் எவரெஸ்ட்." என்று பேசி முடிக்க மீண்டும் அவள் வீட்டிற்கு வந்தாள் மிகவும் குளிராக இருந்ததால் அருகில் உள்ள கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். அடுத்த கேள்விக்கு எழுத ஆரம்பித்தாள் 'சுற்றுச்சூழலுக்கு தீங்காக இருப்பது எது?' என்ற உடன் அவள் மிகவும் ஒரு மோசமான நிலத்தில் இருந்தாள். அந்த நெகிழி நிறைந்த மண் பேச ஆரம்பித்தது "என்னை மட்டுமல்ல கடல் காற்று மற்றும் பல விஷயங்களை இந்த நெகிழி போன்ற பொருட்களால் பாதிப்பை அடைகின்றோம் அதுமட்டுமின்றி நெகிழி மக்குவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாத காரியம் ஆகும் அது மண்ணில் மக்கி போவது மிகவும் சிரமம் நெகிழியை உண்ட விலங்குகள் பல உயிரிழந்துள்ளது எனவே நெகிழி பயன்ப்படுத்தாதீங்க" என்று அழுதது. இந்த காட்சியை கண்ட பின் நெகிழியை இனி குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினாள். மறுநாள் காலை வீட்டு பாடத்தை முடித்த அறிவழகி ஆசிரியையிடம் காட்டினாள். அவளைப் பாராட்டும் விதமாக ஒரு மிட்டாயை அன்பளிப்பாக அளித்தார் . வீட்டில் தனது பாட்டியிடம் காட்டுவதற்காக காத்துக் கொண்டிருந்தாள் அறிவழகி. அவள் பையில் ஓரமாக இருந்த பேனா மகிழ்ந்தது மீனா மீனா சென்னை மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் இவருக்கு சிறுவயதில் இருந்தே கதை எழுதவும் கதை புத்தகங்கள் படிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது பத்து சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் என்ற நூலை நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார் விரைவிலேயே இவருடைய நாவல் ஒன்று வெளிவர இருக்கிறது
- கய்மூது
"ஹரி ... உன்ன குளிக்க சொல்லி அரை மணி நேரம் ஆச்சு.இன்னும் அப்படியே உக்கார்ந்து இருக்க. இப்ப குளிக்க போரியா-இல்லையா ?" ஹரி ஏழு வயது சுட்டி பையன். அவன் அம்மா அவனை குளிக்க சொல்கிறார். ஆனால் ஹரியோ கண்கள் சிமிட்டாமல் அம்மா சொல்லை காதில் வாங்காமல் ஆர்வமாக டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். சிறிது கோபமடைந்த அம்மா டிவியை அணைத்தார். உடனே பொங்கி எழுந்த ஹரி "அம்மா எதுக்கு இப்போ டிவியை ஆஃப் பண்ணீங்க ? நான் பாட்டுக்கு பார்த்துகிட்டு தானே இருந்தேன் ? " என்று சண்டை போட தொடங்கினான். "டேய் உன்ன அடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன், அடிக்க வச்சிறாத. ஒழுங்காப் போய் குளி. " என்று அம்மா கத்தியவுடன் வேகமாக பாத்ரூமை நோக்கி ஓடினான். பத்து நிமிடம் கழித்து, "அம்மா டவல் கொடு மா!" என்று ஹரியின் குரல் கேட்டது. அம்மா, "ஒரு வேலை கூட உருப்படியாக செய்ய விடுவதில்லை!" என்று புலம்பிக் கொண்டே டவலை எடுத்து கொடுத்தார். குளித்து முடித்து மீண்டும் டிவி பார்க்கலாம் என்று நினைத்து ஹரி டிவியிடம் நெருங்கினான். கிச்சனிலிருந்து அவன் அம்மா கத்தினார் " டேய் டிவி போட்டின்னா அவ்வளவுதான் ஒழுங்கா போய் வேற வேலை இருந்தா பாரு. " ஹரி என்ன செய்வது என்று தெரியாமல், அலமாரியில் இருந்த பழைய பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தான். அப்போது அவன் கண்ணில் மூன்று குரங்கு பொம்மைகள் தென்பட்டன. "ஐ! ஐ! இது என்ன புது பொம்மை , அழகா இருக்கு!" என்று கைகளில் எடுத்து பார்க்கையில் அது கீழே விழுந்து உடைந்து விட்டது. "ஐயையோ! அம்மாக்கு தெரிந்தால் திட்டுவார்களே , இப்போது என்ன செய்வது?" என்று ஹரி முனகினான். அலமாரியைப் பூட்டிவிட்டு அந்த பொம்மையை கட்டிலுக்கு அடியில் தள்ளினான். அப்போது அவனுக்கு ஏதோ ஷாக் அடித்தது போல ஒரு உணர்வு வந்தது. ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல் உணர்ந்தான். அச்சமயம் அம்மா செய்யும் பிரியாணி வாசனை அவனைத் தூண்டியது , எல்லாவற்றையும் மறந்து விட்டு சோபாவில் அமர்ந்தான். " அம்மா எப்போ மா சாப்பாடு போடுவீங்க ரொம்ப பசிக்குது! என்றான். உடனே "அய்யய்யோ" என்று கத்தினான். உடனே அம்மா ஓடி வந்தார், "என்னடா ஆச்சு?" என்று பதறினார் . அம்மா வந்து பார்த்த போது தான் தெரிந்தது அவன் தன் கண்களால் பேசினான் என்று . அவரால் தன்னை நம்ப முடியவில்லை. "என்னடா ஆச்சு கண்ணால பேசுற?. கண்ணால பேசுறத கேள்விதான் பட்டிருக்கேன் ஆனா இப்போதான் பார்க்கிறேன்." என்றார் அம்மா. "ஆமாம்மா என்னன்னே தெரியல என் கண்ணு தானே அசைஞ்சு பேசுது" என்று கண்ணாலேயே பதில் சொன்னான் . "சரி கண்ணால பேசுற கண்ணால பார்க்க முடியுதா? " என்று கேட்டார் அம்மா. " இல்லம்மா நான் வாயால தான் உன்னை பார்க்கிறேன் " என்றான் ஹரி. "என்னடா உளர்ற " என்று அம்மா குழம்பினார். " சரி காது ஆச்சு ஒழுங்கா கேக்குதானு பாரு பிரியாணி வாசனை வருதா ? " என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டார் அம்மா. "அம்மா காது கேக்குது ஆனா லைட்டா தான் கேக்குது வாசனையும் சைடுல இருந்து வர மாதிரி இருக்கு " என்றான். "டேய் உன் காதும், மூக்கும் மாறி இருக்குடா கண்ணும் வாயும் மாறி இருக்குடா என்னத்த டா பண்ணி தொலச்ச ? "என்றார் அம்மா. "அம்மா , நான் எதுவும் பண்ணல மா பயமா இருக்குமா "இன்று அழத் தொடங்கினான் ஹரி. அவன் வாயிலிருந்து கண்ணீர் கொட்டியது . என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவும், பையனும் குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது அவர்கள் முன்னே ஒரு சிறு வெளிச்சத்துடன் மூன்று குரங்குகள் தோன்றின. அந்த மூன்று குரங்குகளும் ஹரி பார்த்த அந்த பொம்மைகளைப் போலவே இருந்தன. ஒரு குரங்கு கண்களை மூடியபடி இருந்தது. மற்றொன்று வாயை மூடி இருந்தது. மூன்றாவது குரங்கு காதை மூடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஹரி பதட்டத்தில் அம்மாவிடம் உண்மையை கூறினான். " அம்மா நான்தாம்மா இந்த குரங்குகள் மாதிரி அலமாரியில் இருக்கிற பொம்மைகளை உடைச்சேன். ஒருவேளை அதனாலதான் இப்படி எல்லாம் ஆயிருக்குமோ ? " என்றான். "பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து அழறதை பாரு. " என்றார் அம்மா. அந்த மூன்று குரங்குகளும் ஹரி இடம் வந்து அழாத தம்பி என்று சமாதானம் படுத்தின . "நான் உங்கள மாதிரி இருக்கும் பொம்மையை உடைச்சதுக்கு சாரி இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன் அதுக்கு என்ன பழி வாங்காதீங்க என்ன பழைய படி மாற்றுங்கள். " என்றான் ஹரி . "சரி சரி அழாத நீ எங்களைப் போல இருப்பாய் என்றால் நாங்கள் உன்னை பழையபடி மாற்றுகிறோம்" என்றனர் மூவரும் . "எனக்கு நீங்க சொல்றது புரியல!" என்றான் ஹரி. "நீ எங்களைப் போலவே கெட்டதை பார்க்க கூடாது, கெட்டதை பேசக்கூடாது கெட்டதை கேட்கக் கூடாது . சத்தியம் செய்து கொடு " என்றனர். ஹரியும் சரி என்று ஒப்புக்கொண்டு சத்தியம் செய்தான். தான் கெட்டதை பார்க்க மாட்டேன், கெட்டதை கேட்க மாட்டேன், கேட்டதை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தான். நல்ல பையன் என்று ஹரியை பாராட்டி தாங்கள் ஹரியை மாற்றுவதாக முன் வந்தனர் . "உனக்கு கண்ணும் வாயும் மாறி இருக்கின்றதல்லவா ஆகையால் காய் என்று கூறு . அதுபோல் காதும் மூக்கும் மாறி இருக்கின்றது அல்லவா அதற்கு மூது என்று கூறு. இப்போது இரண்டையும் சேர்த்து காய்மூது என்று மூன்று முறை உச்சரி என்றனர். இந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தனர் மூவரும். அந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்ததும், ஹரிக்கு எல்லாம் பழையபடி மாறிவிட்டது. அவனுக்கு பயங்கர சந்தோஷம். தான் செய்த சத்தியத்தை என்றைக்கும் மீறமாட்டேன் என்றும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி என்றும் கூறி வழி அனுப்பினான். அவர்கள் சென்றவுடன் அம்மாவிடம் " அம்மா எங்கேம்மா அந்த பொம்மையை வாங்குன ? "என்று கேட்டான். அதற்கு அம்மா," எனக்கு எதுவும் தெரியாதுடா , நான் எல்லாம் அந்த பொம்மையை வாங்கல . நீ எந்த பொம்மையை சொல்ற ? "என்றார். அவன் சாட்சிக்காக கட்டிலுக்கு அடியில் பொம்மையை தேடினான். ஆனால் அது அங்கு இல்லை . இது அந்த மந்திர குரங்குகளின் வேலை, எல்லா பிள்ளைகளும் நல்ல குழந்தைகளாக இருக்க அவர்களிடம் இருந்து சத்தியம் வாங்க உருவாக்கிய திட்டம் எது . சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டு குட்டி பெண் அம்மா என்று அலறிய சத்தம் கேட்டது . அனுக்ரஹா கார்த்திக் தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அனுக்ரஹா கார்த்திக் சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் நாட்டம் கொண்டவர். பத்து வயதில் இவர் எழுதிய 'காணாமல் போன சிறகுகள்' என்ற கதை, 'சுட்டி உலகம்' வலைத்தளம் நடத்திய சிறார்க்கான கதைப் போட்டியில் முதல் பரிசு வென்றது. 'நாலு கால் நண்பர்கள்,' 'தப்பித்து ஓடு' என்ற இரு சிறார் நூல்களைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் இவர் 'பூஞ்சிட்டு' குழந்தைகள் மாத மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
- கலங்காதே கண்ணம்மா
துள்ளி ஓடும் கண்ணம்மா உன் கண்ணில் கண்ணீர் ஏனம்மா? குறைகளை கண்டு கலங்காதே குறையும் நிறைதான் வருந்தாதே! வெண்ணிற மேகம் கருத்தது வான் மழை எங்கும் கொட்டியது! கூட்டுப்புழுவும் சுருங்கியது பட்டாம் பூச்சியாய் பறந்தது! மின்னல் மண்ணில் முட்டியது காளான் அங்கே பிறந்தது! ஜன்னல் கொஞ்சம் திறந்தது அதில் பரந்த வானம் தெரிந்தது! பசுவின் மடியோ கனத்தது கன்றின் வயிறோ நிறைந்தது! முட்டை உள்ளே உடைந்தது அழகிய குஞ்சும் பிறந்தது! விதையும் மண்ணில் புதைந்தது மரமும் ஒன்று துளிர்த்தது! நெல்லும் ஆலையில் வெந்தது நாம் உண்ணும் உணவாய் வந்தது! இடர்களை கண்டு கலங்காதே புது விடியலும் பிறக்கும் வருந்தாதே! ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார். முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.
- பள்ளிக்குப் போகலாம்!
1. பள்ளிக்குப் போகலாம்! புத்தகங்கள் படிக்கலாம்! ஏனென்று கேள் நீ! பதில் தரும் கல்வி! பாடல் வழிச் சொல்லி பலதும் கற்கச் செல் நீ! 2. அகரம் கற்கத் தொடங்கு! ஆகச் சிறந்த அமுது! அறிவை வளர்க்கும் கல்வி! ஆதாரமே உணர் நீ! இறகை விரிக்க அறிந்து பறந்து வானில் பழகு! 3. கற்றலிலே இன்பம்! கற்போமே என்றும்! எழுதப் படிக்கப் பேச முனைவோமே கற்க! அறவழியே நிற்க இன்றே செல்வோம் கற்க! 4. சிந்திக்கத் தொடங்கு! சிறிதாகத் தொடங்கு! இருக்கும் நம் உலகில் இன்று என்ன புதிது? அறிவியலைப் படித்தால் அறியலாம் புதிது! 5. பள்ளி செல்ல விரும்பு! பாடம் இனிக்கும் கரும்பு! கற்றல் என்பது எளிது! கற்போம் அதனை உணர்ந்து! சிற்பம் போல நம்மைச் செதுக்கும் உளி கல்வி!
- குழந்தைகளின் உரிமைகள் - 8
யூனிசெப் சர்வதேசப் பிரகடனம் ஒரு குழந்தைக்கு இருக்கும் உரிமைகள் என யூனிசெப் அமைப்பு வரையறுத்துள்ள பிரகடனத்தில் அடுத்து நாம் பார்க்க இருப்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோருடனேயே சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை. "இது என்ன வினோதம்? குழந்தை தனது பெற்றோருடன்தானே வசிக்கும், வேறு எங்கே அது போகும்?" என மேற்கண்ட உரிமையைப் பற்றி நாம் வியப்படையக் கூடும். பொதுவாகப் பார்த்தால், ஒவ்வொரு குழந்தையும் அதன் பெற்றோருடன்தான் வசிக்கும்; அதில் எவ்வித ஐயமும் இல்லைதான். ஆனால், பல்வேறு காரணங்களால், பல குழந்தைகள் தமது பெற்றோர் வாழும் இடங்களில், அவர்களுடனேயே சேர்ந்து பாதுகாப் பாகவும், மகிழ்ச்சியுடனும் வாழும் சூழ்நிலை அமையாமல் போய்விடுகிறது. குறிப்பாகப் போர், இயற்கைச் சீற்றங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் ஓர் இடத்திலும், அவர்களின் பெற்றோர் வேறிடத்திலும் வாழும்படியான நிலை இன்று பல நாடுகளில் நிலவுகிறது. பெரும்பாலும், ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் மக்களின் குடியுரிமைகள் தொடர்பான பிரச்னைகள் எழும் பட்சத்தில், இந்த மாதிரியான பிரிந்து வாழும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. நமது இந்தியாவிலேயே, இப்போது குடியுரிமை என்ற பிரச்னை மிகவும் தீவிரமான பரிமாணங்களை எடுத்துக் கொண்டு வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றை நிறைவேற்றியுள்ள ஒன்றிய அரசு, அந்தச் சட்டத்தின்படி, பல கோடிப்பேரை,"நீங்கள் இந்தியர்கள் அல்லர்; பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்" என்று முத்திரை குத்தி, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. எனினும், நாடு முழுக்க இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக நடந்ததால், தற்போதைக்கு அந்த வெளியேற்றம் நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கிறோம் என்று பீகார் மாநிலத்தில் சுமார் 65 இலட்சம் மக்களுக்கு வாக்குரிமையை இல்லாமல் செய்திருக்கிறது ஒன்றிய அரசு. இதன் மூலம், மறைமுகமாகக் குடியுரிமையை மறுத்து விடவும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறாகக் குடியுரிமை இல்லாமற் போகும் போதும், போரினால் பெற்றோரை இழக்கும் போதும், உள்நாட்டுக்கலவரங்களால் மொத்தமாக ஒரே சமயத்தில் ஏராளமான மக்கள் ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து போகும் போதும் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து விடுகின்றனர். சுனாமி, பூகம்பம் போன்ற பெரும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போதும் முதலில் பாதிக்கப்படுவோர் குழந்தைகளே. பெற்றோரின் அன்பும்,அரவணைப்பும், பாதுகாப்பும் ஒரு குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு அடிப்படையான அம்சங்களாக உள்ளன. புறக்காரணங்களால் மட்டுமன்றி, பெற்றோருக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை, பிரிவு, மண விலக்கு, மண முறிவு போன்ற அகக் காரணங்களாலும் குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழும் நிலை ஏற்படுவதை நாம் இன்று பெரும் அளவில் காண்கிறோம். இத்தகைய பிரிவுகளால் அநாதைகளாக ஆகி விடும் / ஆக்கப்பட்டு விடும் குழந்தைகள் அந்தத் துயரினால் அடையும் மன அழுத்தங் கள் மிகவும் கொடுமையானவை. குறிப்பாகப் போர்களினாலும், உள்நாட்டுக் கலவரங்களாலும் பெற்றோரை இழந்து தனித்து வாழும் குழந்தைகளின் நிலை மிக மிகப் பரிதாபமானது. அத்தகைய குழந்தைகள், கிடைக்கும் வாய்ப்புக ளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குத் தப்பியோட முயல்கின்றனர். எல்லைகளைத் தாண்டி, உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செல்லுகையில், அந்த வேற்று நாட்டு இராணுவமும், காவல் துறையும் இவர்களைக் குழந்தைகளாயிற்றே என எந்தக் கருணையும் காட்டுவதில்லை. சமீப காலங்களில், இஸ்ரேல் நாட்டு இராணுவம், பலஸ்தீன மண்ணில் காஸா பகுதியிலும் பிற இடங்களிலும் நிகழ்த்தும் படு கொலைகளை, ஒட்டு மொத்த உலகமும் வேடிக்கை பார்ப்பதை நாம் அனுதினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? இலங்கையிலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற சமயம் எத்தனை ஆயிரம்/ இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது பற்றிய விவரங்களை அந்த நாடு இன்று வரை வெளியிடவில்லை என்பது மற்றொரு உதாரணம். யூனிசெப் பிரகடனம், இதைப்பற்றிய விதியின் கீழ், ஒரு குழந்தை,தனது பெற்றோரை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டில் வாழ நேரும் பட்சத்தில், அந்தக் குழந்தையும், பெற்றோரும் பயணங்களை மேற்கொண்டு ஒருவரோடொருவர் மீண்டும் இணைவதற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தவறாமல் செய்துதர வேண்டும் என்கிறது. அவ்வாறு செய்தால் தான், அந்தக் குழந்தையும், அதன் பெற்றோரும் பரஸ்பரம் தொடர்பில் இருக்க முடியும் என்றும், ஒன்றிணைந்து வாழ முடியுமென்றும் கூறுகிறது. நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பல்வேறு கொடுமைகளைப் பார்க்கும் போது, இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருக்கும் அத்தனை நாடுகளும் இந்த விதிகளை உண்மையிலேயே மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்விதான் நமக்கு எழுகிறது. வார்த்தைகளில் இந்த உரிமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டிருக்கும் உலக நாடுகள், உண்மையிலேயே அவற்றை முழு மனதுடன் நடைமுறைப்படுத்தினால், எத்தனையோ இலட்சம் குழந்தைகளின் இருண்டு போன வாழ்க்கை ஒளிமயமாகும். அவ்வாறு செய்யுமா அந்த நாடுகள்? கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- என் இனிய பறவையே
புத்தக வாசிப்பும்,பறவை நோக்கலும்,எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். எனக்கு வாசிப்பின் மீதும், பறவை நோக்கலிலும் ஆர்வத்தை வர வைத்தவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான். என்னுடைய அம்மா நிறைய புத்தகங்கள் வாசித்துக் கொண்டே இருப்பார்.. வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த புத்தகங்கள் பற்றி என்னிடமும் என் தங்கை மதியிடமும் கதையாக சொல்வார். புத்தகங்களின் அறிமுகம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் கொண்டு வந்தது. அதேபோல் அப்பாவுக்கு இயற்கை மேல் இருக்கும் ஆர்வம், பறவைகள் பற்றியும் , மரங்களைப் பற்றியும் தேடலை எனக்குள் விதைத்தது. இந்த மாற்றங்கள் நிகழ்ந்த காலம், கொரோனா காலகட்டம். அந்த நாட்களில் பள்ளிக்குச் செல்லாததால் எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. முன்பே நூல்கள் வாசித்தாலும், அப்போது நிறைய நூல்கள் வாசித்தேன். குடும்பத்தோடு செலவிட நிறைய நேரமும் கிடைத்தது. ஒரு நாள் பால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது பக்கத்து வீட்டு மதில் சுவரில் குரங்கு ஒன்று அமர்ந்து இருப்பதைப் பார்த்தோம். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்தோம். தினமும் வருமா? என்று பார்க்கும் ஆவலில் பால்கனியில் . தினமும் அமர ஆரம்பித்தோம். அப்போதுதான் எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய பறவைகள் வருவதை கவனித்தோம். அதற்கு முன்பு பள்ளி செல்லும் அவசரத்தில் இத்தனை பறவைகள் வருவதை கவனிக்காமல் இருந்தோம். முதன்முதலில் நாங்கள் பார்த்த பறவை பச்சைக்கிளி. பறவை பார்ப்பதில் எங்கள் ஆர்வத்தை உணர்ந்த அப்பா, நிறைய பறவைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். செம்பருந்து, கானாங்கோழி, சிறிய நீர்காகம், வக்கா, தகைவிலான், சின்னான் , சிலம்பன், கரிச்சான், குயில், வால் காகம் போன்ற பறவைகளைப் பார்த்தோம் அதைப் பற்றிய தகவல்களை அப்பா நிறைய சொன்னார். அப்படி ஆரம்பித்தது பறவை நோக்கல் ஆர்வம். பச்சைக்கிளியில் ஆரம்பித்த எங்கள் பறவை பார்த்தல் பயணம், தற்போது பூமன் ஆந்தை வரை, கிட்டத்தட்ட 194 பறவைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம். சரணாலயங்கள், ஏரிகள் குளங்கள், மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகள், எங்கள் தோட்டத்தின் அருகே உள்ள புதர்கள் புல்வெளிகள் போன்ற பல்வேறு இடங்களில் பறவைகளை அவதானித்திருக்கிறோம். பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடு ஆரம்பகட்டத்தில் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாய் இருந்தது. அதற்குப் பிறகு பறவைகள் சார்ந்து நிறைய நூல்களை வாசித்தேன். அதில் தெரிந்து கொண்ட அடையாளங்களை வைத்து பறவைகளின் பெயர்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். தற்போது பறவைகளின் குரலை வைத்து அடையாளப்படுத்தத் துவங்கி இருக்கிறேன். இந்தப் பறவை பார்த்தல் பயணத்தை எங்கள் மொத்த குடும்பமும் ஈடுபாட்டோடு செய்கிறோம். பொதுவாக பறவை ஆர்வலர்கள் அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு பறவை உண்டு. அந்தப் பறவை தான் என் இனிய பறவையும் கூட. அந்தப் பறவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் கருப்பு வெள்ளைஇருவாச்சி பறவை தான். அந்தப் பறவையை நாங்கள் பார்த்த அனுபவம் அலாதியானது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் ஒரு நாள் பயணமாக , மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறைக்கு சென்று இருந்தோம். என் இனிய பறவையை அன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் தான் அந்தப் பயணத்தை திட்டமிட்டு இருந்தோம். அதற்கு முன்பு மிக அருகில் இருவாச்சியின் குரலை கேட்டும் கூட எங்களால் அந்த பறவையை பார்க்க இயலாமல் திரும்பி இருக்கிறோம். பயணம் ஆரம்பித்தபோது இன்று கண்டிப்பாக பார்ப்போம் என்று மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது. சீகாரப் பூங்குருவி, நாட்டு உழவாரன், காட்டுச் சிலம்பன் போன்ற புதிய ப் பறவைகளை பார்த்தோம். ஆனால் இருவாச்சியை மட்டும் பார்க்க இயலவில்லை. வால்பாறையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தோம். திடீரென ஒரு திருப்பத்தில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மரத்தின் உச்சியில் ஒரு பெரிய பறவை பறந்ததை பார்த்தேன். உடனே எங்கள் மகிழுந்தை அந்த திருப்பத்தில் நிறுத்திவிட்டு காத்திருந்தோம். அடர்ந்த மரம் என்பதால் அந்தப் பறவை அமர்ந்திருந்தது முதலில் தெரியவில்லை. ஆனால் இலைகளுக்கிடையே அதன் தனித்துவமான அலகு தெரிந்தது. அப்போதே அது இருவாச்சி தான் என்று அறிந்து கொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் வால் பகுதி தெரிந்தது. இரு கண்ணோக்கியைக் கொண்டு பார்த்ததில், நாங்கள் மூன்று வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் என் இனிய பறவை தான் என்பதை அறிந்தேன். சிறிது நேரத்தில் அதன் பெரிய இறக்கைகளை விரித்துக்கொண்டு மேல் நோக்கி மிக அழகாய் பறக்கத்துவங்கியது.. அது ஒரு ஆண் இருவாச்சிப் பறவை. அதன் பிரம்மாண்டமான அழகிய தோற்றம் கண்ணுக்குள் சித்திரமாய் தங்கி விட்டது. இன்றும் கூட இருவாச்சிப் பறவையைப் பற்றி நினைக்கும் போது அந்தக் காட்சி தான் கண்ணுக்குள் வரும். மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு எங்கள் மகிழுந்தை இயக்கிக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? என்பது போல நம் மாநில விலங்கான வரையாடு அங்கே ஒரு கொண்டை ஊசி வளைவில் மெல்ல சாவகாசமாய் இறங்கி கொண்டிருப்பதைப் பார்த்தோம். அதை சிறிது நேரம் நின்று ரசித்துப் பார்த்துவிட்டு கீழே இறங்கினால் அதே திருப்பத்தில் மற்றுமொரு வரையாடு. அன்றே மேற்கு தொடர்ச்சி மலையில் மிகக் குறைந்த அளவில் எண்ணிக்கையில் உள்ள சோலை மந்தியையும் பார்த்தோம். பறவை பார்த்ததில் எங்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை தந்த அந்த நாளை இன்று வரை கூட மறக்க இயலாது. தரை பறவைகள், மரத்தில் வாழும் பறவைகள், நீர்ப்பறவைகள், வான்வெளிப் பறவைகள், வேட்டையாடி பறவைகள் என பல்வேறு வகையான பறவைகள் இந்த பூமியில் இருக்கின்றன. இந்த பூமியில் இருக்கின்ற பெரும்பான்மையான காடுகள் இந்த பறவைகளின் எச்சத்தால் உருவானவை தான். எனவே பறவைகளைப் பாதுகாத்தால் மரங்களை அதிக அளவில் பாதுகாக்க முடியும். மரங்கள் அதிக அளவில் இருந்தால் நாட்டின் இயற்கை வளமும் அதிகரிக்கும். சூழலும் பாதுகாக்கப்படும். பறவை பார்த்தல் என்ற இந்த இனிய அனுபவமானது, இயற்கையின் மீதான காதலை வரவைத்து, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை தந்தது. அலைபேசியிலும், தொலைக்காட்சியிலும் மூழ்க விடாமல் இயற்கையை நோக்கி எங்களை மடை மாற்றியது வாசிப்பும் பறவை பார்த்தலும் தான். செல்வ ஸ்ரீராம். பா எட்டாம் வகுப்பு படிக்கிறார். மூன்று புத்தகங்கள் கரிச்சான்குஞ்சும் குயில்முட்டையும், என்ன சொன்னது லூசியானா? அற்புத எறும்பு , எழுதி இருக்கிறார். பறவை பார்த்தலும், புத்தக வாசிப்பும் மிகப் பிடித்த விஷயங்கள்.
- சனிக்கோளும் எரிகல்லும்
ஒரு அழகான பூமி இருந்தது திடீரென்று அந்த பூமியில் வெள்ளம் வந்தது பூமியிலிருந்து எல்லா மக்களும் ஏவுகணையில் ஏறி சனி கிரகத்திற்குச் சென்றனர் அப்போது ஒரு சிறுவன் சனியிலிருந்து கீழே விழுந்து விட்டான் அப்போது ஒரு பெரியவர் அந்த சிறுவனை காப்பாற்றுவதற்கு வந்தார் அந்த சமயம் ஒரு எரிகல் பூமியை நோக்கி போனது நீ மட்டும் கீழ விழாம கவனமா இருந்திருந்தா நம்ம எல்லாம் அந்த எரிகல்ல ஏறி பூமிக்கு போய் இருக்கலாம் என்று அனைவரும் அந்த சிறுவனை திட்டினர். ஏனெனில் அப்போது பூமியில் வெள்ளம் வடிந்து விட்டது. ஆனால் அந்த எரிகல் பூமியில் சென்று மோதி வெடித்து விட்டது. அப்போது அனைவரும் அந்த பையனுக்கு நன்றி சொன்னார்கள் "உன்ன தெரியாம திட்டிட்டோம். எங்கள மன்னிச்சிடு. உன்னால தான் லேட் ஆச்சு. இல்லாட்டி நேரா போய் இந்த எரிகல்ல ஏறி எல்லாரும் அந்த எரிகல்லோட சேர்ந்து வெடிச்சிருப்போம்" என்று அந்த பையனுக்கு நன்றி சொன்னார்கள். சு.ரா.கவின்கிருஷ்ணா 8 வயது மூன்றாம் வகுப்பு படிக்கிறார். நான்கு வயதில் இருந்தே கதைகள் சொல்கிறார். ஷார்க்கை அடித்த மின்னல், தங்கப்பறவையும் கழுகும், கவின் சொன்ன கதைகள் ஆகிய கதைத்தொகுப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன.
- புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 6
மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள் என்று அறிவியல், தொல்லியல் அறிஞர்கள் சொல்வதாகப் படித்தேன். ஆனால், நாம் மாநிறத்திலும், சீனர்கள்-ஜப்பானியர்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், ஐரோப்பியர்கள்-வட அமெரிக்கர்கள் வெள்ளையாகவும் இருக்கிறார்கள். நாம் அனைவரின் மூதாதையரும் ஆப்பிரிக்கர்கள் என்றால், நாம் அனைவரும் கறுப்பாகத்தானே இருக்க வேண்டும். இது நம்புற மாதிரி இல்லையே? கவின்மொழி, 10ஆம் வகுப்பு, திருநெல்வேலி வணக்கம் கவின்மொழி, நான் புத்தகப்புழு பேசுறேன். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய மொராக்கோ பகுதியிலும், இரண்டு லட்சம்-இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய எத்தியோப்பிய பகுதி, இன்றைய தென்னாப்பிரிக்க பகுதியிலும் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்ஸின் (Homo sapiens) புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. அதேபோல் இன்றைய போட்ஸ்வானா, நமீபியா, ஸிம்பாப்வே ஆகிய பகுதிகளிலும் ஹோமோ சேப்பியன்ஸ் வாழ்ந்ததற்கான மரபணுத் தடயங்கள் கிடைத்துள்ளன. நாம் எல்லாரும் ஹோமோ சேப்பியன்ஸ்தான். ஹோமோ சேப்பியன்ஸ் நவீன மனித இனம் என அழைக்கப்படுகிறது. இப்படி ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நவீன மனித இனம் 70,000 ஆண்டுகளுக்கு முன் வறட்சி, இயற்கை மாறுபாடுகளால் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டது. அப்போது அங்கிருந்து கால்நடையாகவே ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய கிழக்குப் பகுதிகள், பிறகு அங்கிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு மனிதர்கள் இடம்பெயர்ந்தார்கள். ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் ஒரேயடியாக வெளியேறி விடவில்லை. குழுகுழுவாகவே வெளியே வந்தார்கள். புதிய நிலப் பகுதிகளில் இந்த மனிதக் குழுவினர் வாழத் தொடங்கினார்கள். புதிய நிலத்தின் தட்பவெப்பநிலை, புவியியல் தன்மைகள் ஆப்பிரிக்காவைப் போல் இருக்கவில்லை. அவர்கள் குடியேறிய பகுதிகளுக்கு ஏற்ப மனிதர்கள் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படி வாழ்ந்தார்கள். ஒரு பகுதியின் தட்பவெப்ப நிலையும், புவியியல் தன்மைகள், அவர்கள் பார்க்கும் வேலைகள் போன்றவை அந்தப் பகுதி மக்களின் உடலமைப்பு, நிறம், முகத் தோற்றம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தக்கூடியவை. அப்படித் தகவமைத்துக்கொண்டால்தான் அந்தப் பகுதியில் மக்கள் வாழ முடியும். இப்படித்தான் நம்முடைய நிறம், உடலமைப்பு, முகத் தோற்றம் போன்றவை மாறின. பரிணாமவியல் கொள்கையின் ஒரு பகுதியாக தகவமைப்புக் கோட்பாடு பற்றி சார்லஸ் டார்வினும் விளக்கியிருக்கிறார். நட்சத்திரங்கள் எங்கோ தொலைவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரத்தில் இருந்து அவை மின்னுவது நமக்கு எப்படித் தெரிகிறது? முதலில் நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன, அதற்கு என்ன காரணம்? ஆதிரை, 6ஆம் வகுப்பு, செங்கல்பட்டு வணக்கம் ஆதிரை, நான் புத்தகப் புழு பேசுறேன். நட்சத்திரங்கள் கோடிக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ளன. பூமியின் மேலே உள்ள வளிமண்டலம் (காற்று) நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஓரிடத்தில் நிற்பதில்லை. அலைபோல் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் வழியாக ஊடுருவும் நட்சத்திர ஒளி, மின்னுவதுபோல நமக்குத் தோன்றுகிறது. உண்மையில் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. ஒளியை மட்டுமே வெளியிடுகின்றன. நம் தலைக்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தில் உள்ள காற்று இடையில் புகுந்து விளையாட்டு காட்டுகிறது. அப்போது மின்னுவதுபோலத் தோன்றுகிறது. நிஜத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. விண்வெளிக்குப் போய்விட்டால், மின்னாத நட்சத்திரங்களைப் பார்க்கலாம்.
- காணாமல் போன கடைசிப் பக்கம்
சொல்லவே முடியாத துயரத்தில் இருந்தேன் நான். எப்போதும் எல்லோரோடும் சேர்ந்தே இருப்பதுதான் என் வழக்கம். ஆனாலும் இப்போதெல்லாம் யாருடனும் சேர்ந்திருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. சுவர் ஓரத்தில் சாய்ந்துகொண்டு, ‘உம்’மென்று உட்கார்ந்து இருக்கிறேன். காற்று மெதுவாக வீசத் தொடங்கியது. மேசை மேலே, தரையில் இருந்தவை எல்லாம் லேசாக உடலைச் சிலிர்த்துக்கொண்டன. எனக்கு மட்டும் ஏனோ அவ்வாறு இருக்கப் பிடிக்கவில்லை. உடலை இறுக்கமாக்கிக்கொண்டு, அசையாமல் இருந்தேன். இந்த வீட்டிற்கு நான் வந்து முப்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். நல்லசிவன் தான் முதன்முதலாக இந்த வீட்டிற்கு என்னை அழைத்து வந்தார். என்னை அழைத்து வந்தவர் மேசை மேல் என்னை வைத்துவிட்டு, அவர் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். எனக்கோ ஏக்கமாக இருந்தது. ‘யாராவது என்னை எடுங்களேன்...’ என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது. என்ன கெஞ்சி, என்ன செய்வது? அவரவர் வேலை அவரவர்களுக்கு. வீட்டில் யாரும் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. திடீரென்று ஒரு நாள் நல்லசிவன் என்னைக் கையில் எடுத்தார். அப்படியே என்மேல் பார்வையை ஓட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை அப்படியே எனக்குள் உள்ளிழுத்துக் கொண்டேன். சில மணி நேரத்திற்குள் எனக்குள்ளேயே கரைந்துபோனார். காலை, மாலை, இரவு என எப்போது நேரம் கிடைத்தாலும் என்னிடமே தஞ்சம் அடைந்தார். சில வெளியூர்ப் பயணங்களுக்கும் அவர் கூடவே நானும் போனேன். அவர் தோளில் மாட்டி இருந்த ஜோல்னா பைக்குள் நான் இருந்தேன். சில நிமிடங்கள் கிடைத்தாலும் உடனே என்னை எடுத்துக்கொள்வார். “நேரமாச்சு... சாப்பிட வாங்க..!” என்று அழைத்தாலும் உடனே போக மாட்டார். “இதோ... வர்றேன்...” என்று சொல்வார். சில நிமிடங்களாவது என்னோடு தான் இருப்பார். அவரது ஆர்வம் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. என்னை மொத்தமாக அவர் உள்வாங்கிக்கொண்ட அந்த நாள் என் நினைவில் இன்னமும் இருக்கிறது. மே-1. காலையிலேயே மே தினப் பொதுக்கூட்டத்திற்கு கிளம்பிப்போனார் நல்லசிவன். கூட்டம் முடிந்து, மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டார். ஒரு குட்டித் தூக்கம் போடப் போகிறார் என்று நானும் நினைத்தேன். ஆனால், என்னைக் கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார். மாலை 4 மணி... 5 மணி... 6 மணி, இரவு 7 மணி... சரியாக இரவு 7.30 மணிக்கு என்னை முழுவதுமாக முடித்தார். என்னை மூடும்போது அவரது கண்கள் கலங்கி இருந்தன. அந்தக் கலங்கிய கண்களில் ஒளி தெரிந்தது. சற்றுநேரம் என்னை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். எனக்கு அது மிகவும் இதமாக இருந்தது. திரும்பவும் என்னை எடுத்து, முகத்துக்கு முன்னே தூக்கிப் பிடித்தார். அப்படியே அருகே கொண்டுசென்று, ஒரு முத்தம் வைத்தார். என் உடல் சிலிர்த்துப்போனது. நான் பிறந்த பயனை அடைந்த உணர்வு எனக்கு உண்டானது. அந்த நாளை இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பாக இருக்கும். நல்லசிவனுக்குத் திருமணம் ஆனது. வீடே ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஒருநாள் தனது மனைவி பார்வதியைக் கூப்பிட்டார். என் அருகே இருவரும் வந்தனர். என்னைக் கையில் எடுத்தார். பார்வதி கையில் என்னைக் கொடுத்தார். “எனக்கு ரொம்பவும் பிடிச்சது. இந்த உலகமே இப்படித்தான் என்று நான் மனம் உடைச்சு இருந்தேன். எனக்குள் நம்பிக்கையை விதைச்சது. என்னோட ஆத்மார்த்தமான நல்ல நண்பன். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீயும் இதோடு இரு..!” என்று சொன்னார் நல்லசிவன். பார்வதிக்கோ வீட்டு வேலைகள் ஏராளமாய் காத்திருந்தன. காலையில் 5 மணிக்கு எழுந்து விடுவார். வாசல் பெருக்குவது, கோலம் போடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, தேநீர் போடுவது, காலை உணவுக்காகச் சமைப்பது, பிறகு துணி துவைப்பது, மதிய உணவுக்குச் சமைப்பது... என நாள் முழுக்கவே அவருக்கு ஓயாத வேலைதான். பல நாள்கள் ஆகியும் அவரது கவனம் என் பக்கம் திரும்பவேயில்லை. அன்றொரு நாள். பார்வதியிடம் நல்லசிவன் கேட்டார்; “நான் உன்கிட்டே ஒன்னு கொடுத்தேனே... அதைப் பாத்தியா..?” இப்படிக் கேட்பார் எனப் பார்வதி எதிர்பார்க்கவே இல்லை. “இல்லீங்க, வீட்டு வேலையே எனக்குச் சரியா இருக்கு. இதுலே அதுக்கு எங்க நேரம்?”என்று சொன்னார் பார்வதி. “ஆமாம், உனக்கும் இங்க வேலை ரொம்ப அதிகமா இருக்கு...” என்றவர், சில நிமிடங்கள் யோசித்தார். “நான் நைட் டூட்டி முடிச்சிட்டு வர்ற நாள்ல, நீ துணி துவைக்க வேண்டாம். நானே துவைக்கிறேன். அதே மாதிரி இனி சமையல் வேலைகளை நானும் செய்யிறேன். கிடைக்கிற நேரத்திலே நீ அதுக்காகக் கொஞ்ச நேரத்தை ஒதுக்கு. சரியா?”என்றார் நல்லசிவன். அன்று சொன்னது வெறும் வார்த்தையாக இல்லை. அன்றிலிருந்தே அதைச் செயல்படுத்தினார். பார்வதிக்கும் கொஞ்ச நேரம் கிடைத்தது. அந்த நேரத்தைப் பார்வதி என்னோடு கழிக்கத் தொடங்கினார். என்னோடு இருப்பார். சட்டென மூடிவிட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக்கொள்வார். நல்லசிவனை விடவும் சீக்கிரமாகவே என்னை உள்வாங்கித் தொடங்கினார் பார்வதி. தூங்கும் நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் என் கூடவே இருந்தார். எனக்கும் நல்ல தோழி கிடைத்த மனநிறைவு ஏற்பட்டது. அன்றைக்குப் பார்வதி சீக்கிரமே எழுந்து கேசரி செய்தார். எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, என்னிடம் வந்தார். நிரம்பித் ததும்பிய பார்வதியின் மனம், என்னை என்னவோ செய்தது. கையில் என்னை எடுத்தார். இதோ... இதோ... ஐந்தே நிமிடத்தில் முழுவதுமாக என்னை நிறைவு செய்தார். “பார்வதி... சாப்பிடலாமா..?”என்று நல்லசிவன் கேட்டார். “ம்ம்... ரெடியா இருக்கு. வாங்க..!” என்று சொல்லிவிட்டு, என்னையும் கூடவே எடுத்துச் சென்றார். தட்டில் கேசரியைக் கண்ட நல்லசிவன், “என்ன விசேசம் இனிப்பெல்லாம் பலமா இருக்கு..!” என்றார். “நானும் முடிச்சிட்டேனே...” என்று என்னை கையில் உயர்த்திக் காட்டிய பார்வதி, “எனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டை அறிமுகப்படுத்தி வச்சதுக்கு நன்றி...” என்றார் பார்வதி. நல்லசிவனிடம் புத்தகம் கொடுக்கும்போது பார்வதியின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. இருவருக்கும் இடையில் நான் இருந்த அந்தச் சில நிமிடங்கள், என் வாழ்வின் வரங்கள் என்பேன். பிறகென்ன... என்னைப்போலவே பலரும் அந்த வீட்டிற்கு அவ்வப்போது வரத் தொடங்கினர். ஆனாலும், எனக்கு மட்டும் அந்த வீட்டில் சிறப்பான கவனிப்பு எப்போதும் இருந்தது. நல்லசிவன் - பார்வதி தம்பதியினருக்கு குழந்தைகள் பிறந்தனர். மூத்தவன் பெயர் அகிலன். அடுத்ததாகப் பிறந்த பெண் குழந்தைக்கு நீநிகா எனப் பெயர் சூட்டினர். தன் ஆண் பிள்ளைக்கு அழகான தமிழ்ப் பெயர். பெண் பிள்ளைக்கு மட்டும் ஏன் அர்த்தமில்லாத இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள்... நீநிகா என்று..? அந்தப் பெயருக்கான அர்த்தம் தெரியாமல் நானும் ரொம்பவே குழம்பிக் கொண்டிருந்தேன். அதற்கும் ஒரு நாள் விடை கிடைத்தது. நல்லசிவனின் அலுவலக நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். நண்பரிடம் தன் பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தார் நல்லசிவன். தேநீர் அருந்திக்கொண்டே, “அதென்னப்பா, நீநிகா..?”என்று கேட்டார் நண்பர். நானும் காதைக் கூர்த்தீட்டிக்கொண்டு கவனித்தேன். “வேறொண்ணுமில்லப்பா. இந்தப் பூமியே நீர், நிலம், காற்று ஆகிய மூன்று சக்திகளினால் தான் இன்னமும் நிலைச்சிருக்கு. அந்த மூன்றின் முதல் எழுத்தோட சேர்ப்புதான் நீநிகா...” என்றார் நல்லசிவன். “சூப்பர்ப்பா..!” என்றார் நண்பர். எனக்கு அந்தப் பெயரும், பெயருக்கான விளக்கமும் ரொம்பவும் பிடித்திருந்தது. காலச் சக்கரம் சுழன்றது. பிள்ளைகள் வளரத் தொடங்கினார்கள். பள்ளிக்கல்வி படிப்பை முடித்து, கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினான் அகிலன். ஒரு நாள், பார்வதி அகிலனை அழைத்தார். அகிலனின் கையில் என்னைக் கொடுத்தார். “தம்பி, உனக்கு எப்பவெல்லாம் நேரம் கிடைக்கிதோ, அப்பப்ப இதோட கொஞ்சம் நேரத்தைச் செலவளி...” என்றார். தன் மேசை மீது என்னையும் அகிலன் வைத்துக்கொண்டான். பாடப் புத்தகங்களைப் படிப்பான்; கொஞ்ச நேரம் எழுதுவான். தூங்கச் செல்லுமுன் என்னைக் கையில் எடுப்பான். ஏதோ யோசனையோடு பார்ப்பான். பிறகு மூடிவிட்டு, தூங்கப்போய் விடுவான். என்றாவது ஒரு நாள் எனக்கான நேரத்தைக் கொடுப்பான் என்று ஆவலோடு நானும் காத்திருக்கத் தொடங்கினேன். நாள்கள் நகர்ந்தன. சில மாதங்கள் கடந்தன. சில ஆண்டுகளும் கடந்து ஓடின. இப்போதெல்லாம் மேசையில் உட்காரும்போதே கையில் ஒரு குட்டிக் கருவியோடு தான் உட்காருகிறான் அகிலன். அதன் பெயரென்ன... ஏதோ ‘செல்பேசி’யாமே..? அம்மா, அப்பா ஏதாவது கேட்டாலும் ஒன்று, இரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவன் பதில் சொல்வதில்லை. சாப்பிடும் போதும், நடக்கும் போதும் கையில் அந்தச் ‘செல்பேசி’ கூடவே இருக்கிறது. அன்றைக்கு கழிவறைக்குச் சென்றான். அப்போதும் அதில் பேசிக்கொண்டே சென்றான். தூங்குவதற்காகப் படுக்கையில் படுப்பான். ஆனாலும் தூங்க மாட்டான். ரொம்ப நேரம் செல்பேசி பார்த்துக்கொண்டே இருப்பான். எப்போது தூங்குகிறான் என்றே தெரியாது. ஆனால், காலையில் மிகவும் தாமதமாகவே எழுவான். ‘எனக்கான நேரத்தை இவன் தருவான்…’ எனும் எனது எதிர்பார்ப்பு குறைந்துகொண்டே போனது. ஒரு நாள். நல்லசிவன் அகிலனின் மேசை அருகே வந்தார். மேசை மேல் இருந்த என்னை, அவரது கை விரல்கள் வாஞ்சையோடு வருடின. “ஏம்ப்பா, இதுக்கு உன்னால நேரத்தைக் கொடுக்க முடிஞ்சதா..?”என்று அகிலனிடம் கேட்டார். “இல்லைப்பா. என்னால முன்னை மாதிரி பாடப்புத்தகத்தைக் கூட படிக்க முடியலே. கண்ணு எரியிது. தலை வலிக்கிது. கண்ணில தண்ணீயா வருது...” என்றான் அகிலன். அடுத்த நாளே, கண் மருத்துவரிடம் அகிலனைக் கூட்டிப்போனார் நல்லசிவன். இப்போது அகிலன் கண்ணாடிப் போட்டுக்கொண்டு தான் எதையும் படிக்கிறான். ஆனாலும், செல்பேசி பார்ப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். அன்றைக்கு அகிலனின் நண்பன் வெங்கட் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அம்மா இருவருக்கும் தேநீர் கொடுத்தார். “ஒரு நிமிசம் இங்கே வா...” என அகிலனைக் கூட்டிப்போனார் அம்மா. தேநீர் குடித்துக்கொண்டிருந்த வெங்கட், கோப்பையைக் கீழே வைத்தான். வேகமாக வைத்ததில் தேநீர் இரண்டொரு சொட்டுக்கள் மேசை மேல் சிந்தின. அங்கும் இங்குமாகப் பார்த்த வெங்கட்டின் பார்வை, என் மேல் விழுந்தது. ஏனோ எனக்கு அவனது பார்வை அச்சத்தைத் தந்தது. ‘வெடுக்’கென என்னை எடுத்தான். ‘சரட்’டென எனது கடைசிப் பக்கத்தைக் கிழித்தான். “அய்யோ...” எனக்கு வலித்தது. சத்தம் போட்டேன். யார் காதிலும் விழவில்லை. என் கடைசிப் பக்கத்தைக்கொண்டு, தேநீர் சொட்டுகளைத் வேகமாகத் துடைத்தான். பின்னர் கசக்கி, குப்பைக்கூடையில் போட்டுவிட்டு போய்விட்டான். என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்தேன். இனி நான் யாருக்குப் பயன்படப் போகிறேன்..? ஒரு பயனும் இல்லாமல் இப்படிச் சும்மா இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இனி என்னை யார் தான் கையில் எடுப்பார்கள்? கடைசியாகக்கிழிந்திருக்கும் என்னை இனி என்ன செய்வார்கள்? நாளுக்கு நாள் என் குழப்பம் அதிகமாகிக்கொண்டே சென்றது. அன்றைக்கு வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் அம்மா. அகிலனின் அறைக்குள் வந்தார். கலைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கினார். மேசையைத் துடைத்தார். அதன் மேலிருந்த என்னைப் பார்த்தார். மெதுவாக என்னை வருடினார். கையில் எடுத்தார். கண்களில் ஈரம் கோர்த்தன. “என்னாச்சும்மா, அப்படியே நின்னுட்டே..?”என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் நீநிகா. எட்டாம் வகுப்பு படிக்கிறாள். அம்மாவின் கலங்கிய கண்களையும், கையில் இருந்த என்னையும் மாறி மாறிப் பார்த்தாள். “அவசியம் நீ இதுகூட உன் நேரத்தைச் செலவளிக்கணும்மா. உங்க அப்பாவுக்கும், எனக்கும் ரொம்ப பிடித்தமான நண்பன்...” என்ற அம்மா, தன் கையில் இருந்த என்னை நீநிகா கையில் கொடுத்தார். கையில் வாங்கிய என்னை அப்படியே புரட்டிப் பார்த்தாள் நீநிகா. “அட... என்னம்மா, கடைசிப் பக்கத்தைக் காணோம்..!” என்று நீநிகா சொன்னதும், “அச்சச்சோ... அப்படியா?”என்று அம்மா மனம் கலங்கியது. அம்மா சில நிமிடங்கள் பேச்சற்று நின்றார். “நீ நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதோட இரும்மா. இதை நீ முடிக்கப் போகும்போது கடைசியிலே என்னாங்கிறதை நா உனக்கு சொல்றேன். சரியா?”என்றார் அம்மா. “சரிம்மா...” என்று சொன்ன நீநிகா, என்னைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தாள். என் காயங்கள் எல்லாம் சட்டென ஆறின. எனக்குப் புத்துணர்வு பிறந்தது போலிருந்தது. நீநிகாவோடு சேர்ந்து நானும், என்னோடு சேர்ந்து நீநிகாவும் மெல்ல மெல்ல மேலேறிப் பறக்கத் தொடங்கினோம். எனது பக்கங்கள் எல்லாம் சிறகுகளெனப் படபடத்தன. மு.முருகேஷ்
- குட்டிப் பன்றியும் சிலந்திப் பூச்சியும்
புத்தக நண்பர்களோடு இன்பச் சுற்றுலா –3 சு ற்றுலாத் துணைவர்களே, இந்தத் தடவை ஒரு கதைப் புத்தகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம், சரியா? உங்களுக்கெல்லாம் நட்பு ரொம்பப் பிடிக்கும்தானே? நீங்களும் நட்புக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருப்பீங்கதானே? உங்களோட நண்பர்களும் அப்படித்தானே? அப்படிப்பட்ட நட்பைப் பத்தின கதைதான் ‘சார்லோட்‘ஸ் வெப்’ (சார்லோட்டின் வலை). இந்தக் கதையை எழுதியர் ஈ.பீ. ஒயிட். அமெரிக்காக்காரர். அவருடைய புகழ்பெற்ற கதைப் புத்தகங்கள்ல ஒண்ணுதான் இதுவும். 1952ஆம் ஆண்டுல ஹார்ப்பர் அன் பிரதர்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டாங்க. இப்ப அந்தப் பதிப்பகத்தோட பெயர் ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ். மொதமொதல்ல வந்த புத்தகத்திலே சித்திரங்கள் வரைந்திருந்j ஓவியரின் பெயர் கார்த் வில்லியம்ஸ். 1973ஆவது ஆணடுல அசையும் ஓவியத் திரைப்படமா (அனிமேஷன் மூவி) இந்தக் கதை வந்துச்சு. 2003இல அதனோட இரண்டாம் பாகமா இன்னோர் அனிமேஷன் படம் வந்துச்சு. 2006இல கதாபாத்திரங்கள்ல நடிகர்களும் விலங்குகளும் தோன்றிய நேரடித் திரைப்படமாவே வந்துச்சு. பாட்டிலேயே எல்லாரும் பேசுற இசை நாடகமாவும் இந்தக் கதை மேடையேறியிருக்கு. இப்ப அனிமேஷன் வடிவத்திலேயே ஒரு வலைத்தொடர் (வெப் சீரிஸ்) தயாரிச்சிக்கிட்டு இருக்காங்களாம். வாசகர்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் ரொம்பவும் பிடிச்சுப் போனதாலதான் இப்படி திரைப்டமாகவும் வலைத்தொடராகவும் தயாரிக்கிறாங்கன்னு புரிஞ்சிக்கலாம். அப்பேர்ப்பட்ட அந்தக் கதையை நாம தெரிஞசிக்க வேணமா? வலையில் பொறித்த வார்த்தைகள் ஒரு சின்னப்பொண்ணு. அவ பேரு ஃபெர்ன் ஆரபிள். அம்மாவும் அப்பாவும் ஒரு விலங்குப் பண்ணை வச்சி நடத்துறாங்க. அதிலே ரொம்ப சிறிசாகவும். உடம்பு வலிமை இல்லாமலும் இருக்கிற ஒரு குட்டிப்பன்னி மேல அவளுக்கு அன்பு ஏற்படுது. அந்தக் குட்டியோட பேரு வில்பர். ரொம்பவும் மெலிஞ்சிருக்கிற வில்பரைக் கொண்ணுடலாம்னு அப்பா பேசுறாரு. அதைக் கேட்ட ஃபெர்னுக்கு வருத்தமாகுது. அவனை எப்படியாச்சும் காப்பாத்தனும்னு அப்பாக்கிட்ட வாதாடுறா, போராடுறா. கடைசியில அவனைக் காப்பாத்தி, அவளே வளர்க்குறா. சில மாசங்கள் போனப்புறம் வில்பரை பக்கத்து வீட்டு மாமா பண்ணைக்கு வித்துடுறாங்க. புதுப் பண்ணையில வில்பருக்கு ஒரு மாதிரி தனிமை உணர்வு ஏற்படுது. பயமாவும் இருக்கு. அப்ப, அவனுக்கு ஒரு சாம்பல் சிலந்தி கூட நட்பு ஏற்படுது. ஆமா, நீங்க ஊகிச்சது சரிதான், அந்தச் சிலந்திப் பூச்சியோட பேருதான் சார்லோட். அவளுக்கும் வில்பரைப் பிடிச்சுப்போகுது. வரப்போற பண்டிகைக் கொண்டாட்டத்துக்காக வில்பரைக் கொல்றதுன்னு பண்ணைக்காரங்க பேசிக்கிட்டது அவ காதுல விழுது. வலையில் அதிசயம் வில்பரின் உயிரைக் காப்பாத்தணும்னு முடிவு செய்ற சார்லோட், அதுக்காக அருமையான ஒரு திட்டத்தை வகுக்கிறா. ராத்திரியோட ராத்திரியா தன்னோட வலையைப் பெரிசா பின்னி, அதுல ரொம்ப கவனமா சில வார்த்தைகளை எழுதுறா. மறுநாள் பண்ணைக்காரங்க சிலந்தி வலையில் இருக்கிற வார்த்தைகளைப் பார்த்து வியந்து போறாங்க. “சிறப்பான பன்னி”, “அட்டகாசப் பன்னி”, “ஒளிவீசும் பன்னி” – இப்படி எழுதியிருந்தா வியப்பு ஏற்படாதா என்ன? . இதை கடவுளோட அதிசச் செயல்னு நினைக்கிறாங்க. இயற்கைக்கு அப்பாற்பட்ட துன்னும் நினைக்கிறாங்க. அதுக்கப்புறம் வில்பரை ஒரு சாதாரணப் பன்னியா அல்லாமல், ஒரு மகத்துவமான விலங்குன்னு பார்க்குறாங்க. எப்பவுமே அவனைக் கொல்றதில்லைன்னும் முடிவு செய்றாங்க. பண்ணையில நடக்கிற ஒரு விழாவுல வில்பர் பரிசுகளை வெல்லுறான். அவனோட புகழ் பரவுது. பண்ணை விழாவுக்கு வரும் ஃபெர்ன் அங்கே வில்பரைப் பார்த்து மகிழ்ச்சியடையுறா. அவ முந்தி மாதிரியே தன் மேல பாசம் காட்டணும்னு வில்பர் ஆசைப்படுறான். ஆனாலும் இப்ப அவ பெரிய பொண்ணா வளர்ந்திட்டா,அவளுக்கு இன்னொரு பையன் கூட நட்பாப் பழகுறதுதான் ரொம்பவும் பிடிக்குது. ஏமாத்தமா இருந்தாலும் இது இயல்பான மனித உறவுதான்கிறதை வில்பர் பக்குவமாப் புரிஞ்சிக்கிடுறான். வயது முதிர்ந்த சார்லோட்டோட மனசு, மத்தவங்களுக்குப் பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்ததை நினைச்சு நிறையுது. தன்னோட அடுத்த தலைமுறைக்காக இட்ட முட்டைகளை வில்பர் பொறுப்பில் விட்டுட்டுக் கண்மூடுறாள். நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் வில்பர் அவளுடைய முட்டைக் கூடுகளை அக்கறையாப் பராமரிக்கிறான். அவற்றிலிருந்து வரும் சிலந்திக் குஞ்சுகளை ஒரு அண்ணன் போல வளர்த்து மகிழ்ச்சிகரமா வாழுறான். கருப்பொருள் கதையோட கருத்து என்னன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்வீங்கன்னு நான் சொல்லட்டுமா? “நட்பின் அருமையையும் தியாகத்தின் பெருமையையும் ஈ.பீ. ஒயிட் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்!” சார்லோட் முடிவு ஒரு சோகம்தான்னாலும், இயற்கையோட சுழற்சி இப்படித்தான் இருக்குதுன்னும் புரியுதுல்ல? அதிசய நிகழ்வுன்னு எல்லாரும் நினைச்சாலும் உண்மையில் நமக்கு, வலையிலே அந்த வார்த்தைகள் வந்தது எப்படின்னு தெரியும்கிறதால இயற்கைக்கு அப்பாற்பட்டதுன்னு எதுவும் இல்லைங்கிறதும் தெளிவாகுதுல்ல? அப்புறம் ஒரு தகவல் – நீங்க திரையரங்கத்துலேயும் ஓடிடி–யிலேயும் ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ சினிமா பார்த்திருப்பீங்க. ஒரு துறுதுறு சுண்டெலியைத் தத்தெடுத்து வளர்க்கும் குடும்பத்தைப் பத்திய அந்தக் கதையை எழுதினவரும் இவர்தான். இது மாதிரி நிறைய சிறார் கதைகள் அவர்ட்டயிருந்து நமக்கு வந்திருக்கு. நல்லது, நம்ம சுற்றுலாப் பயணத்துல அடுத்த மாசம் வேற ஒரு சூப்பர் புத்தகத்தைப் பார்க்கலாம், ஓகே–யா? அ. குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.
- சுறாவும்... டால்பினும்....
ஒரு கடல் நாடு இருந்தது. ஒரு நாள் ஒரு சுறா (shark) வழி தெரியாம டால்பின் கடல்ல வந்து விழுந்துடுச்சு. அதுக்கு ரொம்ப பசிச்சது. அது சாப்பிட குட்டி குட்டி மீனெல்லாம் தேடி போனது. அப்ப தெரியாம திமிங்கலம் (killer whale) இருக்கற கடலுக்குள்ள குதிச்சிடுச்சி. அங்க போய் மீன் தேடிச்சு. அத பார்த்த திமிங்களமெல்லாம் அத சாப்பிட வந்தது. சுறா மீன் ரொம்ப பயந்துடுச்சு. யாராவது என்னைய காப்பாத்துங்க யாராவது என்னைய காப்பாத்துங்க அப்டின்னு கத்துச்சி அப்ப ஒரு மனுசன் மீன் பிடிக்க வந்தாரு. அவரு வலைய விரிச்சு சுறாவ (shark) பிடிச்சிட்டாரு. அப்பறம் அதுக்கு தேவையான மீன் சாப்பிட குடுத்தாரு. ஷார்க் நல்லா சாப்பிட்டது. திரும்ப சுறாவ கொண்டு போய், சுறா கடல்ல விட்டுட்டாரு. ஷார்க்கும் ஹேப்பி மனிதரும் ஹேப்பி.. தருண்கிருஷ்ணா 6 வயது. ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். அண்ணனைப் பார்த்து தானும் கதை சொல்லத் துவங்கினார். தருண் சொன்ன கதைகள்,ஊஞ்சல் மரம் ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது பெரும்பான்மையான கதைகளின் சாரம் "பசி" யாக இருக்கிறது.












