இயலில் தேடலாம்!
361 results found with an empty search
- கோமாளி ராஜா
காலை நேரம் வந்ததுமே அரண்மனை வாசல் சங்கு முழக்கம் ஒலித்தது. "அரபு நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த நம் மாமன்னன் - கோணாங்கி நாடு திரும்பி தேரில் வந்து கொண்டிருக்கிறார்" என்று குதிரையில் அறிவிப்பு சொல்லியபடியே காவலாளி செல்ல, பின்னால் குதிரையில் படை வீரர்கள் செல்ல, அழகிய புதிய அரபு நாட்டு தேரில் மன்னர் திரையை விளக்கி மக்களை கவனித்து கையசைத்தபடியே வந்தார். சாலையில் இருபுறமும் நின்றிருந்த மக்கள், "வணக்கம்...வணக்கம்" என்று சந்தோஷம் இல்லாமல் வணங்கி நின்றார்கள். ஆனால் தனது புதிய தேரைத் தான் மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என்று நினைத்து வந்தார். சிலர் கிழிந்த உடையுடன் கூட்டத்தில் நிற்பதை மன்னர் கண்டுகொள்ளாமலே வந்தார். உடன் அமைச்சர் நெடுமுடியும் அமர்ந்திருந்தார். "அரசே, மக்களை கவனித்தீர்களா?", என்றார் அமைச்சர் நெடுமுடி. அவர்களை நோக்கி மகிழ்ச்சியாக கையசைத்தபடி, " எல்லாரும் என்னை உற்சாகமாக வரவேற்கிறார்கள். எனக்கு பரிசாக அரபு நாட்டு மன்னன் அக்கிம் கொடுத்த தேரையும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். "நன்றாக பாருங்கள் அரசே! அவர்கள் உங்களை உற்சாகமாக வரவேற்கிறார்களா? இல்லை சோகமாக வரவேற்கிறார்களா ?" என்றார் அமைச்சர். எதையும் கண்டு கொள்ளாதது போல, "ஏன் அவர்கள் என்னை சோகமாக வரவேற்க வேண்டும் ?" என்று கேள்வி கேட்டார். "மன்னா, அரபு நாட்டு பயணம் முடிந்து வந்த உங்களிடம் எதிர்மறையாக பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணி விட வேண்டாம். கடந்த சில மாதங்களாக நாட்டில் கடும் தண்ணீர் பிரச்சனை, அதனால் விவசாயமும் இல்லை, போதிய இருப்பு தானியங்களும் இல்லாமல் போனதால், கடும் பஞ்சம் நிலவ தொடங்கியுள்ளது. நிலைமையை சரி செய்ய, நம் பக்கத்து நாட்டிடம் தண்ணீர் கேட்டும், அவர்கள் அணையில் தடுப்பு போட்டு விட்டார்கள். அணையில் இருந்து தண்ணீரை அனுப்பவில்லை .நம் நாடு பெரும் வறட்சிக்கு உள்ளாகி இருக்கிறது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. அரண்மனையிலும் இப்பொழுது வறட்சி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலைமை கை மீறி போய்விட்டது." அமைச்சர் தொடர்ந்தார், "இந்த நிலைமையை சரி செய்யாமல், நீங்கள் உல்லாசமாக அரபு நாட்டுக்கு சென்று வந்தது மக்களுக்கு சற்று பிடிக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நீங்கள் குதூகலமாக இருப்பதாக அனைவரும் உங்களை விமர்சிக்கிறார்கள். அதுவும் நீங்கள் முற்காலத்தில் ஒரு நாடக நடிகர். அரசி உங்களின் நடிப்பை பார்த்து உங்களை மணந்து கொண்டதால், கிடைத்த மன்னர் பதவியை வைத்து, மக்களை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று பல பெரும் வணிகர்கள் கூட விமர்சிக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை உங்களை 'கோமாளி அரசன்' என்று கூட உங்களை வர்ணிக்கிறார்கள்" என்று சற்று சிரித்தவாறு நெடுமுடி சொன்னவுடன், சட்டென்று கோபப்பட்டு, "மக்கள் கூறியதா?, இல்லை மனத்திற்குள் நீர் தேக்கி வைத்ததை என்னிடம் மக்கள் கூறுவதாக கூறுகிறாயா ?" என்றார். " தங்களை நான் ஏன் தரகுறைவாக சொல்ல போகிறேன் ?, மக்கள் சொல்வதை தான் நான் சொல்கிறேன் மன்னா!" என்றார். "அப்படியென்றால் என்னை 'கோமாளி ராஜா' என்று சொல்லி திரியும் ஆட்களை பிடித்து கைது செய்து சிறையில் அடையுங்கள்" என்றார். "மன்னா!, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், இது போன்று செய்தால் மக்கள் நம் மீதும், ஆட்சி மீதும் மிகுந்த கோபம் அடைவார்கள்" என்றார் அமைச்சர். கடுகடுப்பின் உச்சத்தில், "கள்ளி வள்ளி" என்றார் மன்னர். "அப்படி என்றால் என்ன மன்னா ?" என்று குழப்பத்தில் அமைச்சர் கேட்க, "அது அரபு சொல். அதற்கு அர்த்தம் போகப் போக புரியும்" "மன்னா...." என்றவாறு இழுத்த அமைச்சரின் பேச்சை நிறுத்தி, "சற்று பொறு. இப்போது தான் பயணம் முடித்து வந்திருக்கிறேன். முதலில் எனக்கு ஓய்வு தேவை. பின் மக்களின் தண்ணீர்ப் பிரச்சினையை போக்க ஆலோசனை செய்யலாம்" என்று மன்னர் வெறுப்பாக சொன்னவுடன், அமைச்சரும் அமைதியானார். மன்னன் அரண்மனைக்கு வந்து தன் மனைவி ராணி லட்சுமி, மகன்களை பார்த்து மகிழ்ந்தார். வெகு நாட்களுக்கு பிறகு அவர்களை பார்ப்பதால் சற்று நேரம் அரபு நாட்டு பயணத்தில் நடந்தவற்றை மனம் விட்டு பேசினார். ஆனாலும் ஓய்வெடுக்க இயலாமல், அவருக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது. மக்கள் உண்மையாகவே தன்னை, 'கோமாளி ராஜா' என்று தான் அழைக்கிறார்களா ?, இல்லை அமைச்சரின் சூழ்ச்சியா ? என்ற குழப்பம் தான். "சரி குழப்பத்திற்கு தீர்வு காண்போம்" என்று தீர்மானித்து, இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் செல்ல குதிரையில் ஏறி புறப்பட்டார். சில தூரம் பயணம் செய்து அருகிலிருந்த சிற்றூருக்கு வந்து சேர்ந்தார். குதிரையை சாவடி பக்கத்தில் கட்டி வைத்து, ஊருக்குள் நடைபயணமாக சென்றார். மக்கள் கூடும் இடங்களான கோவில், சந்தை என சுற்றினார். அப்போது பூங்கா வாசலில் பலர் பேசிக் கொண்டிருக்க, மெதுவாக சென்று நின்று கவனித்தார். அதில் அவர்கள் நாட்டு சமாசாரங்களை பேசினார்கள். அப்போது மன்னர் தெரியாமல் ஒருவரின் காலை மிதித்தார். உடனே அவன் "அறிவு கெட்டவனே, கண் இல்லாதவனை" என்று திட்டி கொண்டிருக்க, "மன்னித்து விடுங்கள்" என்று மன்னர் கூறியும் அடிப்பதற்கு கையை ஓங்கி பின் அடிக்காமல் விட்டு விட்டு சென்றான். ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த மன்னருக்கு மீண்டும் கோபம் அதிகமானது. "நான் மாறுவேடத்தில் இருப்பதால், என்னை யாரென்று உனக்கு தெரியவில்லை" என்று மனதில் நினைத்தவாறு சென்றார். அந்தக் கூட்டத்தில் ஒருவர், "கோமாளி ராஜாவின் அடுத்த பயணம் எங்கவோ?" என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது "சத்தமாக பேசாதே நண்பா, காலையில் தான் ஒரு செய்தி வந்தது. 'கோமாளி ராஜா' என்று மன்னரை யாராவது கிண்டலாக சொன்னால் உடனே அவர்களை கைது பண்ணி பாதாள சிறையில் அடைக்கிறார்களாம். அதனால அமைதியாக இருங்கள்" என்று ஒருவன் சொல்லி கொண்டிருக்க, ஓரத்தில் இதை கேட்டு கொண்டிருந்த மன்னனுக்கு ஒரே இறுமாப்பு ஏற்பட்டது. "மக்கள் பயந்து இனிமேல் யாரும் 'கோமாளி ராஜா' என சொல்ல மாட்டார்கள்" என்று அங்கிருந்து புறப்பட்டு சந்தை பகுதிக்கு வந்தார். அங்கு குதிரையும் ஓரிடத்தில் நின்றது. குதிரையில் அமர்ந்தவாரே மன்னன் மக்களின் நடவடிக்கைகளை கவனிக்க, சாலையோரத்தில் வெளிச்சத்திற்காக எரிபந்தங்களில் நெருப்பை பற்ற வைத்து ஏற்ற, நெருப்பு சிதறிஅருகில் நின்றிருந்த குதிரை முகத்தின் மீது பட்டது. சட்டென்று குதிரை தனது முன் கால்களைச் சட்டென்று தூக்கியது, மன்னர் கீழே விழுந்து கல்லில் தலை மோதி மயங்கிய நிலையில் கிடந்தார். சிலர் ஓடி வந்து தூக்கி விட்டு, பக்கத்தில் இருந்த கோவில் மண்டபத்தில் உட்கார வைக்க, மன்னருக்கோ தண்ணீர் தாகம் ஏற்பட்டு, "தண்ணீர்...தண்ணீர் கொடுங்க" என்று பரிதாபமாக கேட்டார். ஒருவன் தன் குடுவையைப் பார்த்தான். அது தண்ணீர் இல்லாமல் காலியாக இருந்தது. "என்னுடைய குடுவையில் தண்ணீர் இல்லை. இங்கு வேறு யாரிடமும் தண்ணீர் இல்லை. அந்த கடையில் தண்ணீர் இருக்கும். ஆனால் ஒரு குவளைத் தண்ணீர் ஒரு ரூபாய் சொல்லுவாங்க. எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே" என்றார். மன்னனின் தலையில் லேசாக இரத்தம் வந்தது. வயதான மூதாட்டி அதை துடைத்து விட்டு, தன் சுருக்கு பையில் இருந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்து, "இந்தா! தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல், நான் சாப்பிட்டு என்ன பண்ண போறேன். இந்தாப் புடி" என்று காசை அவனிடம் கொடுத்து தண்ணீர் வாங்கி வரச் சொன்னாள். அவரும் வேகமாக சென்று ஒரு குவளைத் தண்ணீர் வாங்கி வந்து மன்னருக்கு கொடுக்க அதைக் குடித்துவிட்டு கொஞ்சம் நிதானமாக அமர்ந்தார். அந்த பகுதியில் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருப்பதையும், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அளவுக்கு தன்னுடைய ஆட்சி நடைபெறுவதையும் எண்ணி மன்னர் மனதிற்குள் வருந்தினார். யாரென்று தெரியாத நபருக்காக தண்ணீர் வாங்கி வந்தவரையும், அதற்கு பணம் கொடுத்து உதவிய அந்த மூதாட்டியைப் பார்த்தும் மன்னர் கையெடுத்து கும்பிட்டார். "சாப்பிட்டியா" என்று மூதாட்டி கனிவாக கேட்க மன்னரின் கண்களோ கலங்கியது. அருகில் இருந்த நபர் தனது சோற்று பொட்டலத்தை சாப்பிடக் கொடுத்தார். மன்னரும் அதை வாங்கி, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உணவை உண்ண ஆரம்பித்தார். "யாரப்ப நீ ?, ஊருக்கு புதுசா ?" என்று கேட்டாள் அந்த மூதாட்டி. "ஆமாங்க" என்று சாப்பிட்டபடியே சொல்லி சுற்றி பார்த்தார். அந்த இடத்தில் பலர் ஆங்காங்கே படுத்துக் கிடந்தனர். "என்னப்பா அப்படி பார்க்குற" என்றாள். "பாட்டி, உங்களுக்கு வீடு இல்லையா ?" என்றார் மன்னர். "இருக்குப்பா, நான் இங்க பொருள் விற்பதற்காக வந்தேனப்பா, இரவு பொழுது ஆச்சுன்னு நான் இங்கேயே தங்கிட்டேன்" என்றாள் பாட்டி. மூதாட்டியைப் போலவே பலரும் வெவ்வேறு தொழில் செய்வதற்காக வந்து இரவு அங்கு தங்கியிருந்தனர். மன்னரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, மூதாட்டியின் அருகிலேயே அமர்ந்தார். அப்போது பக்கத்தில் ஒருவர், மற்றவரிடம் "என்ன பண்ண பொழப்புக்காக நான் இப்படி மாறி மாறி அலைஞ்சுகிட்டு இருக்கேன். எல்லாம் விலைவாசி ஏறிடுச்சு. தண்ணி பஞ்சம்.அதனால விவசாயம் பண்ண முடியல. நானும் வேற வேற பக்கம் வேலை தேடி போயிட்டு இருக்கேன். ஒரு கோமாளி அரண்மனைக்கு சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. மாறாக அரண்மனை வட்டரங்கு (சர்க்கஸ்) கூடாரமாகிவிடும்ன்னு பழமொழி சொல்ற மாதிரி இருக்கு நம்ம மன்னர் ஆட்சி " என்று வருத்தமாக சொல்லி கொண்டிருக்க மன்னர் அதை கேட்டு வருந்தினார். "ஆமாங்க இப்ப கோமாளி ராஜான்னு சொன்னா கூட கைது பண்றாங்க. அதனால அந்த வார்த்தையை பயன்படுத்தவே பயமா இருக்கு. மக்களுக்கு நல்லது பண்ணினா, அந்த பேரு மாறிட்டு போகுது" என்று கிண்டலாக இன்னொருவர் சொன்னார். "தலைமுறை தலைமுறையா, மன்னர் வம்சம் இல்லாம, நம்மில் இருந்த மனிதன், நாடக நடிகராக இருந்து இப்போ மன்னர் ஆகிருக்காரு. ஒவ்வொரு நாடகத்திலேயும் நல்லது செய்ற மாதிரி தான் நடிப்பாரு. நிஜத்திலும் கண்டிப்பா நல்லது செய்வார். கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா" என்று அவர்களிடம் மூதாட்டி சொன்னார். மூதாட்டி சொன்னதைக் கேட்டு மன்னருக்கு மனதில் ஒரு உத்வேகம் உண்டானது. அந்த மூதாட்டியை பார்த்து, "எனக்கு மிகவும் பெரிய வேலை வந்துவிட்டது. மிகப் பெரிய பொறுப்பு எனக்கு இருப்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். அந்த பொறுப்பை முடித்துவிட்டு நான் ஓய்வெடுக்க பார்க்கிறேன்" என்று மூதாட்டியை வணங்கி விட்டு, தனது குதிரையை லேசாக தட்டிக் கொடுத்து, ஏறி அரண்மனைக்கு புறப்பட்டார். குதிரையில் செல்லும் போது, அந்த மூதாட்டியின் வார்த்தை மன்னனின் மனதை ஏதோ செய்தது. விடியற்காலை பொழுதில் அரண்மனை வந்து சேர்ந்தார். பக்கத்து நாடு, கரிநாடக மன்னன் விஷ்ணு வர்மனின் பிறந்தநாள் விழாவிற்கு கோணங்கி மன்னனையும் அழைத்திருந்தார்கள். அந்த விருந்திற்கு மன்னனும் சென்றார். "பக்கத்து நாட்டு மன்னன் தான், அணையில் நீரை தடுத்து தண்ணீர் வரவிடாமல் செய்துள்ளார். அவர் அழைப்புக்கு நம் மன்னரும் சென்றுள்ளார்..!" என்ற செய்தி நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது. மன்னன் கோணங்கிக்கு கரிநாடாக நாட்டில் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. 64 வகையான உணவு பரிமாறி விருந்து வழங்கப்பட்டது. மன்னர் கோணங்கியும் மகிழ்ச்சியாக விருந்து உணவை உற்சாகமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அவர் சற்று வேகமாக சாப்பிட்டதாலோ என்னவோ விக்கல் ஏற்பட ஆரம்பித்தது. பதறிய மன்னன் விஷ்ணு, "அடடே மன்னருக்கு தண்ணீர் கொடுங்கள்" என்றார். மூன்று நான்கு வேலைக்காரர்கள் குடுவையில் தண்ணீரோடு அவர் முன்னால் வந்து நின்றார்கள். ஆனால் கோணங்கி தண்ணீரை குடிக்காமல் விக்கி கொண்டே இருந்தார். "தண்ணீர் ஏன் குடிக்காமல் இருக்கிறார்" என்று விஷ்ணுவுக்கு கோணங்கியின் செயல் ஒன்றும் புரியாமலே இருந்தது. "விருந்து போதும் நண்பா" என்று விக்கியபடியே கூறிவிட்டு வெளியில் கோணங்கி வந்தார். விஷ்ணுவிற்கும், அவரது அம்மாவிற்கும் பெரும் மனக்கசப்பு ஆகியது. "விருந்துக்கு வந்தவர், விக்கல் எடுத்தும் நம் நாட்டு தண்ணீரை குடிக்காமல் செல்கிறாரே" என்று அந்த தாய் புஷ்பா அம்மாள் கோணங்கியை நிறுத்தி, "தண்ணீர் இருந்தும் ஏன் குடிக்காமல் செல்கிறீர்கள்?" என்றாள். "அம்மா, எனக்கு விக்கல் எடுக்கிறது. நீங்கள் தண்ணீர் கொடுத்து விடுவீர்கள். ஆனால் என் நாட்டு மக்கள் தண்ணீர் இல்லாமல் எத்தனையோ கவலைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி தண்ணீர் கொடுப்பது?, நீங்கள் அணையில் தண்ணீர் விடாமல் தடுத்து, அங்கு பெரும் துன்ப சூழல் நிலவிக் கொண்டிருக்கும்போது நான் எப்படி அம்மா உங்கள் தண்ணீரை குடிக்க முடியும்?, நான் பொறுத்துக் கொண்டு என் நாட்டிற்கு சென்று தண்ணீர் குடிக்கிறேன்" என்று வருத்தமாக கோணங்கி சொன்னது. விஷ்ணுவிற்கு தூக்கி வாரிப் போட்டது. "என் நாட்டு மக்களின் எதிர் காலத்திற்காகதான் தண்ணீரைத் தடுத்தேன். அதை எங்கள் நாட்டில் வேறு பகுதிக்கு திருப்பி பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார் விஷ்ணு. "இயற்கை நமக்கு தந்த பெரும் கொடையை, என் தண்ணீர், உன் தண்ணீர் என்று நாம் பிரித்துப் பார்ப்பது பெரும் தவறு. தங்கள் நாட்டில் வெளிச்சத்திற்கு பயன்படுத்தும் விளக்கு, எண்ணெய் பொருட்கள் எங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள். அதை நாங்கள் உங்களுக்கு தர மறுத்தால், உங்கள் நாடு இருளிலே மூழ்கிவிடும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. நட்போடு இருக்கிறோம்.. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம்" என்று விக்கியபடி கோணங்கி சொல்ல, "நான் பெரும் தவறு இழைத்து விட்டேன். நீங்கள் தண்ணீர் குடியுங்கள். இந்த கணம் முதல் உங்கள் நாட்டிற்கு தண்ணீர் பாயும். இனி அணையில் தண்ணீரை தடுக்கமாட்டேன்" என்று சொல்லியபடி, அமைச்சரிடம், தண்ணீரை திறந்து விட விஷ்ணு உத்தரவிட்டார். மன்னன் கோணங்கியும் மகிழ்ச்சியாக தண்ணீரை வாங்கி குடித்தார். விருந்தும் சிறப்பாக முடிந்தது. நடந்த இந்த மனக்கசப்பான விஷயத்திற்கு கோணங்கி, விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். பின் தான் அரபு நாட்டில் இருந்து கொண்டு வந்த பேரிச்சம் பழங்களை அவருக்கு கொடுத்தார். அவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். விஷ்ணு தன் நாட்டின் சிறந்த இனிப்புகளை அவருக்கு பரிசாக கொடுத்தார். நட்புறவாக இருவரும் கைக்குலுக்கிக் கொண்டு விடை பெற்றார் கோணங்கி. மூன்று நாட்கள் கழித்து அரண்மனை சங்கு ஒலித்தது. மன்னர் வந்து கொண்டிருக்கிறார் என அரண்மனை கதவு திறந்தது. பொது மக்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்றார்கள். சந்தோஷத்தில் மன்னருக்கு வணக்கம் தெரிவித்தும், சிலர் கைகுலுக்கியும் வரவேற்றார்கள். அமைச்சர் நெடுமுடி, மக்களின் மகிழ்ச்சியை கண்டு திக்குமுக்காடினார். அமைச்சரை அழைத்து, "உடனே நாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள் அனைத்தையும் தூர் வாருங்கள். நிறைய மரக்கன்றுகளை நடுங்கள். முக்கியமாக பனை மரங்களை நடுங்கள் இதை துரிதப்படுத்துங்கள்" என்றார். நெடுமுடி மன்னரிடம், "மன்னா, கள்ளி வள்ளி என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் பிறகு சொல்வதாக சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள்" என்றார். சிரித்தவாரே, "அது இருக்கட்டும் விடுங்கள்" என்றார். கார்த்திக் கிருபாகரன் அபுதாபியில் இயந்திரப் பொறியாளராகப் பணிபுரியும் கார்த்திக் கிருபாகரன் (எ) சீனிவாசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். கணையாழி, குமுதம், தீராநதி போன்ற அச்சிதழ்களிலும், சொல்வனம், பதாகை உள்ளிட்ட இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 2019-இல் 'தீதும் நன்றும்' என்ற இவரது நாவலும், 2024-இல் 'ஒரு கோடி' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் புத்தகமாக வெளிவந்துள்ளன.
- குழந்தைகளுக்கான நாடக அரங்கேற்ற நிகழ்வு
தூத்துக்குடி நகரில் குழந்தைகளுக்கான நாடக அரங்கேற்ற நிகழ்வு. தேடல் கலைக் குழுவினர் 7/7/26 செவ்வாய் கிழமை மாலை 7மணியளவில் எழுத்தாளர் விழியன் அவர்கள் எழுதிய 'மாகடிகாரம்' என்ற நாவலை நாடகமாக மிகச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்கள். இந்நிகழ்வானது தூத்துக்குடி ஆகம் நாடக வெளி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் குழந்தைகள், பெரியவர்கள் கலைஞர்கள் என வெளியூர்களிலிருந்தும் கலந்து கொண்டனர். சமூகத்தில் இன்னும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான பல மூட நம்பிக்கைகளைக் கண்டு குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டும் விதமாக இந்நாடகம் அமைந்தது. இதில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் 'மாகடிகாரம்' நாவலுக்குள் எழுதப்பட்ட அந்த இடத்திற்கே பார்வையாளர்களை அழைத்துச் சென்று விட்டனர். அவர்கள் வடிவமைத்த அரங்கு, பயன்படுத்திய பொருள்கள், எழுப்பிய ஒலிகள் அனைத்தும் அந்த நாவலில் குறிப்பிட்டிருந்த இடத்திற்குள் நேரடியாக சென்று வந்த உணர்வையே கொடுத்தது. அடம்பிடித்து அழும் குழந்தையாகட்டும், காலில் காயம் பட்டு வருந்தும் யானையாகட்டும், பாம்பு, மீன் தவழ்வதாகட்டும் அத்தனை நிகழ்வுகளும் வெகு இயல்பான நடிப்பில் அசத்தி விட்டார்கள். நாடகத்தினூடே அவர்கள் பாடிய குழந்தைகளுக்கான பாடல்களும், ஆடல்களும், உடல் மொழிகளும், நாடகம் பார்க்க வந்த குழந்தைகளையும் ஒருங்கிணைத்து ஆடியவிதமும் குழந்தைகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இந்நாடகத்தின் நோக்கமே அறிவியலுக்கு புறம்பாக நடக்கும் நிகழ்வுகளைக் குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும் என்பதே என்று நாடகத் தொடக்கத்தில் நாடக நெறியாளர் வசந்த் பா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதன்படி நாடகத்தின் இறுதியில் குழந்தைகளிடம் நாடகம் பற்றியும், தங்களுக்குள் எழும் கேள்விகள் பற்றியும் உரையாடினார்கள். குழந்தைகளும் அவர்கள் மனதில் உள்ள பல்வேறு கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றார்கள். காரணம் ஏதும் இல்லாமல், முன்னோர்கள் சொன்னார்கள் அதைப் பின்பற்றுகிறோம் என்ற பொதுப் புத்தியை மாற்ற சிறப்பாக வழி வகுக்கக் கூடிய மிகச் சிறப்பான நாடகம். அனைத்து தரப்பினரும் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் கண்டுகளித்த நாடகம். நாடகத்தை சிறப்பாக நடித்துக் காட்டி அதன்மூலம் குழந்தைகளிடம் சிறப்பாக உரையாடிய கலைஞர்கள் அனைவருக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தூத்துக்குடி கிளை மற்றும் ஆகம் நாடக வெளி சார்பாக புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டது. பார்வையிட வந்த குழந்தைகளுக்கு தேடல் நாடகவெளி கலைஞர்கள் புத்தகப் பரிசு வழங்கியும் மகிழ் வித்தார்கள். இதே போன்ற நிகழ்வு பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற வாழ்த்துகளுடன் நிழல்படம் எடுத்து நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
- வாசிப்புக்களம்
4/7/26 (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் தூத்துக்குடி சிறகுகள் சிறார் நூலகத்தில் வாசிப்புக்களம் - 58 ஆவது நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் புத்தகத் தூதுவர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வாசிப்பு இயக்கப் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. நினைவுத் திறனைக் கூர்மைப்படுத்தும் சிறிய விளையாட்டு விளையாடி குழந்தைகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஆத்தூர் அறிவுச் சுடர் நூலக ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முக வடிவு அவர்களும்,ஆத்தூர் வாசிப்பை நேசிப்போம் நூலக ஒருங்கிணைப்பாளர் பூஜா ஸ்ரீ அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புத்தகத் தூதுவர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்து குழந்தைகளிடம் சிறப்பாக கலந்துரையாடினார்கள். பூஜா ஸ்ரீ அவர்களின் பிறந்த நாள் (5/7/26) பரிசாக ஆத்தூர் அறிவுச் சுடர் நூலகம் சார்பாக வகுப்பறை புதிது புத்தகமும், சிறகுகள் சிறார் நூலகம் சார்பாக நூலக மனிதர்கள் புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து குழந்தைகளும் தங்கள் மனதில் பிறக்கும் வார்த்தைகள் மூலம் பூஜா ஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்தது புதுமையாக இருந்தது. கார்த்திக் சுதன் தன்னுடைய பிறந்த நாள் (3/7/26) பரிசாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பண்டித ரமாபாய் நூலகத்தின் பெயர் - அன்னை ரமாபாய் நூலகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய நூலக ஒருங்கிணைப்பாளர் 7ஆம் வகுப்பு முத்துமாரியிடம் புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேனா பரிசு வழங்கி நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
- முகமெனும் திரையில்
வானூர்தியின் சத்தம் கேட்கும் போது பேருந்தில் சிரிக்கும் குழந்தையை காணும் போது நட்டு வைத்தச்செடியில் பசுந்துளிரைப் பார்க்கும்போது நாளை மலர காத்திருக்கும் பூ மொட்டை கண்டபோது கோழிக்குஞ்சுகள் தாயுடன் குடுகுடுவென ஓடும்போது துள்ளிவரும் ஆட்டுக்குட்டியை காணும் போது தோள் மீது கை போட்டு நடக்கும் சிறுவர்களை நோக்கும்போது தந்தையின் கைபிடித்து குதித்து நடக்கும் சிறுவனை காணும் போது புழுக்கத்தை விரட்டும் காற்றின் உரசலின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் திரும்ப வரும் பொழுது அணிந்திருக்கும் புத்தாடை அழகு எனும் போது கடந்து செல்லும் வண்ணத்துப்பூச்சியை கண்டிட்ட போதும் இன்றும் உணவு கேட்டு காகம் கதவில் அமர்ந்த போதும் இயற்கையாய் இதழ்கள் விரிகின்றன என்முகமெனும் திரையில்.. ஷீலா ராஜன் தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியரான இவர், ஒரு கதைசொல்லி ஆவார். தமிழ்நாடு அரசின் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகக் கதைகளுக்கான காணொலிகளுக்குப் பின்னணிக் குரல் (Voice-over) கொடுத்துள்ளார். மேலும், பள்ளி ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் எழுத்தாளராகவும், குழந்தைகளுக்கான விழுமியக் கல்வி (Value Education) பாடப்புத்தகக் கதைகளின் ஆசிரியராகவும் பங்களித்துள்ளார்
- சிலந்தி சொன்ன இரகசியம்
"கண்ணா வாட்டர் பாட்டில் எங்க டா?!" என ஆச்சர்யமாக கேட்டார் அம்மா. "அது வந்து.. காணோம்" "காணோமா? நல்லா தேடுனியா?" "ம்ம்... தேடுனேன். இல்ல" "பெஞ்ச்ல பார்த்தயா?" "பெஞ்ச்ல, அப்றம் வேன்ல ஏறி பேக்ல பார்த்தேன். காணோம்" திருதிருவென விழித்தான் சுரேன். சுரேன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் ப்ரிகேஜியில் இருந்து பள்ளிக்கு போகிறான். ஆனால் இதுவரை எதையுமே தொலைத்தது இல்லை. பத்திரமாக வைத்திருப்பான். கோடை விடுமுறை முடிந்து இன்று தான் பள்ளிக்குச் சென்றான். முதல் நாளே பாட்டில் தொலைந்து விட்டது. அம்மா உடனே வகுப்பாசிரியருக்கு போன் செய்தார். "மேம், சுரேன் வாட்டர்பாட்டிலைக் காணோம்" என சொன்னார். சுரேனின் வகுப்பு ஆசிரியை மிகவும் பொறுமையாக பதிலளிப்பார். குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார். "சரி சுரேன் அம்மா. நான் தேடுகிறேன்" என்றார் ஆசிரியர். மறுநாள், பள்ளிக்கு வேறு ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுத்தார் அம்மா. "சுரேன், பள்ளியில் சென்று ஆசிரியரிடம் பாட்டில் கேக்கணும் சரியா?" என சொல்லி அனுப்பினார். ஆசிரியர் வகுப்பறை முழுவதும் தேடினார். வகுப்பு புத்தக அலமாரியில் தேடினார். மாணவர்களிடமும் கேட்டார். ஆனால் யாருக்குமே சுரேனின் வாட்டர் பாட்டில் எங்கு சென்றது எனத் தெரியவில்லை. மாலை பள்ளி முடிந்தது. சுரேன் அம்மா கொடுத்து விட்ட பாட்டிலை எடுத்தான். அதைப் பத்திரமாக உணவுப் பையில் வைத்தான். வேனில் ஏறி வீடு வந்தான். உணவுப் பையைத் திறந்த அம்மா ஆச்சர்யப்பட்டார். "சுரேன், இன்னிக்கு கொடுத்த பாட்டில் எங்க?!" "அம்மா நான் பாட்டில பேக்ல வச்சேன் மா. ஆனா இப்ப காணோம் மா" என்றான். "நிஜமா! பேக்கில் வச்சயா?" எனக் கேட்டார் அம்மா. “ஆமாம்.. ஆமாம்” என மாலை பள்ளி விட்டதில் இருந்து சொன்னதையே சொன்னான். வகுப்பாசிரியர் பாட்டில் கிடைக்கவில்லை என்று சொல்லி விட்டார். தண்ணீர் பாட்டில் எங்கே போயிருக்கும்?! ஒரே ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் இன்னொரு பாட்டில் கொடுத்து விட்டார் அம்மா. அந்தப் பாட்டிலும் காணாமல் போய் விட்டது. அம்மா கோபமாக சொன்னார், "நாளைக்கு உனக்கு பாட்டில் தர மாட்டேன். நீ உன் பாட்டில் எல்லாம் தேடி எடுத்துட்டு வரணும்" சுரேன் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். 'பாட்டில்கள் எல்லாம் எங்க போச்சு?' சுரேனின் நண்பர்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது. வகுப்பில் எல்லாரும் சுரேனின் பாட்டில்களைத் தேடினார்கள். ஒவ்வொரு பெஞ்சின் அடியிலும் தேடினார்கள். புத்தக அலமாரிகளில் தேடினார்கள். பக்கத்து வகுப்பறையில் தேடினார்கள். எங்கேயும் இல்லை. பார்த்தவர்களிடம் எல்லாம் கேட்டார்கள். "சுரேனோட பாட்டில பாத்தீங்களா?" யாருமே பார்க்கவில்லை. உணவு இடைவேளையில், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேன். "எட்டுக்கால் பூச்சி... என் பாட்டில நீ பாத்தியா? காணோம். ஒண்ணு இல்ல நிறைய. அம்மா திட்டுறாங்க" என சோகமாக சொன்னான் சுரேன். "ஓ உன் பாட்டிலா எனக்குத் தெரியும்" என சத்தம் கேட்டது. சுரேன் சுற்றிலும் பார்த்தான். அவன் நண்பர்கள் எல்லாம் வகுப்பிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்கள். வகுப்பில் சுரேன் மட்டும் தான் அமர்ந்திருந்தான். "யாரு யாரு பேசுறீங்க" குரல் நடுக்கத்தோடு கேட்டான் சுரேன். எழுந்து வகுப்பில் இருந்து வெளியே ஓடத் தயாராக இருந்தான். "நாந்தான் சிலந்தி. நீ என்கிட்ட தான கேட்ட. அதான் பதில் சொன்னேன்" மீண்டும் குரல் மட்டுமே கேட்டது. "சி..சி.. சிலந்தியா?" யாராவது விளையாடுகிறார்களா என சுற்றிலும் பார்த்தான். இல்லை. "ஆமா, இங்க மேல பாரு. சிலந்தி தான்" என்றது. சுரேனுக்கு பயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. "என் பாட்டில் எங்க இருக்கு?" எனக் கேட்டான் மெதுவாக. "உன் இருக்கைக்குப் பின்னால் ஒரு செடி இருக்கு இல்ல?" எனக் கேட்டது சிலந்தி. "ஆமா, செம்பருத்தி" "செம்பருத்தி.. அதுகிட்ட போய் கேளு" "என்ன செடிகிட்டயா? செடி பேசுமா?" ஐயத்தோடு கேட்டான் சுரேன். "சிலந்தி பேசும் போது, செம்பருத்தி பேசாதா?" எனக் கேட்டது சிலந்தி. சுரேன் மெதுவாக செடியின் பக்கம் போனான். அது அவனது வகுப்பறைக்கு வெளியே வளர்ந்தது. சில இலைகளும் ஒரு பூவும் மட்டும் வகுப்பறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தது. "செம்பருத்தி.. நீ என் வாட்டர் பாட்டில பார்த்தியா?" என மெதுவாகக் கேட்டான் சுரேன். "உன் ஒரு பாட்டில் மட்டும் இல்ல.. மூணு பாட்டிலும் என்கிட்ட தான் இருக்கு" என சொன்னது செம்பருத்தி. செம்பருத்திச் செடி பேசும் போது, அதற்கேற்ப அதன் பூ ஆடியது, யாரோ தலையை ஆட்டி ஆட்டி பேசுவது போல வேடிக்கையாக இருந்தது சுரேனுக்கு. "என்ன.. உன்கிட்ட இருக்கா?" மீண்டும் அதிசயமாகக் கேட்டான் சுரேன். "ஆமா. என்கிட்ட தான் இருக்கு.." என்றது செம்பருத்தி. "உன்கிட்ட எப்படி வந்தது?" "ஆமாம். நான் தான் எடுத்தேன்" "ஏன் எடுத்த?" "எனக்கு ஒரு நாள் தண்ணி கிடைக்குது. ஒரு நாள் தண்ணி கிடைக்கல. அதான் எடுத்தேன்" "ஓ அப்படியா! ஆனா வகுப்பில அத்தனை பேர் இருக்காங்க. நீ ஏன் தினமும் என் பாட்டிலயே எடுத்த? தினம் புதுசு குடுத்து விட்டாங்க அம்மா. இன்னிக்கு திட்டிட்டாங்க" சொல்லும் போதே அழுகை வந்து விட்டது சுரேனுக்கு. "ஐயோ அழாத அழாத.." என சமாதானம் சொன்னது செம்பருத்தி. "ஏன் என் பாட்டில மட்டும் எடுத்த?" மீண்டும் கேட்டான் சுரேன். "ஏன்னா, வகுப்பில் எல்லாரும் அவங்க தண்ணிய குடிக்கிறாங்க. எல்லார் பாட்டிலும் காலி ஆகிடும். நீ தான் தண்ணியே குடிக்கறது இல்ல. உன் பாட்டில் முழுசா இருக்கும். அதான் அத எடுத்தேன்" என்றது செம்பருத்தி. "நான் தண்ணி குடிப்பேன்" என்றான் சுரேன். "ஆமா சாப்பிடும் போது ஒரு மடக்கு குடிப்ப. அப்பறம் உன் பாட்டில்ல தண்ணி அப்படியே இருக்கும்" என்றது செம்பருத்தி. "சரி, என் பாட்டில்கள திரும்பக் கொடு. நான் உனக்கு தினமும் தண்ணீர் தெளிக்கிறேன்" என்றான் சுரேன். "வெயில் ரொம்ப ரொம்ப அதிகம். நீயும் அடிக்கடி நிறைய தண்ணி குடிக்கணும்" என சொன்னது செடி. "இனிமே நான் அம்மா சொன்ன மாதிரி, நீ சொல்ற மாதிரி நிறைய தண்ணி குடிப்பேன்" என்றான் சுரேன். "அது தான் நல்ல பையன்!" என்று மகிழ்ச்சியாகச் சொன்னது செம்பருத்திச் செடி. "நீ தண்ணீர் குடிச்சா உன் உடம்பு ஆரோக்கியமா இருக்கும். எனக்குத் தண்ணீர் ஊத்துனா நானும் ஆரோக்கியமா இருப்பேன்." தன் வேர்களுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த வாட்டர் பாட்டில்களை எடுத்து அவனிடம் கொடுத்தது செம்பருத்தி. சுரேன் மகிழ்ச்சியாக குதித்தான். பாட்டில்களை பத்திரமாக பைக்குள் வைத்தான். "அம்மா பாட்டில் கிடைச்சிருச்சு" என மகிழ்ச்சியோடு கத்திக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினான் சுரேன். எல்லா பாட்டில்களையும் அம்மாவிடம் கொடுத்தான். தினமும் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு சென்றான். ஒன்று சுரேனுக்கு. மற்றொன்று செம்பருத்திக்கு! அதற்குப் பிறகு, சுரேனின் வாட்டர் பாட்டில் காணாமல் போகவே இல்லை. ராஜலட்சுமி நாராயணசாமி ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார். பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார். இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. 'கனலின் பயணம்' நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது.
- வளரிளம் புதிர்ப்பருவம்-13 குழந்தைகளின் குரலைக் கேட்போம்.
காட்சி: 1 ஓர் ஊரில் திருவிழா. ஆடல்பாடல் நிகழ்ச்சி. பக்திப் பாடலுடன் நிகழ்வு தொடங்கும். பிறகு திரைப்படப் பாடல்களுக்கு நடனம். நேரம் செல்லச்செல்ல ஆடல் மகளிரின் ஆடைகள் குறையும். முக்கல் முனகல் பாடல்களுக்கு நடனம். ஆபாச நடனம் என்று பொதுவாகச் சொல்லப்படும் நடனங்களைக் குழந்தைகள், பெரியவர்கள் என ஊரே ரசிக்கும். பலரும் செல்பேசியில் படம் பிடிப்பார்கள். காட்சி: 2 புகழ்பெற்ற கதாநாயகன் நடித்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி. பேரல் பேரலாக ரத்தம் தெரிக்கும் சண்டைக் காட்சிகள். கதாநாயகன் கத்தியை வீசுகிறார். அடியாள் ஒருவரின் தலை துண்டாகி உருள்கிறது. கழுத்திலிருந்து ரத்தம் பீய்ச்சுகிறது. குழந்தைகள் கைதட்டி ரசிக்கிறார்கள். பெரியவர்கள் முகம் மலர்கிறார்கள். பொது இடத்தில் சிகரெட் பிடிப்பவர்கள், குடித்துவிட்டு ரகளை செய்பவர்கள், வீட்டிலும் வெளியிலும் பெண்களை அவமதிக்கும் பல்வேறு சூழல்களைப் பார்த்துப் பார்த்து வளர்கிறார்கள் குழந்தைகள். பெண்ணை என்ன வேண்டுனாலும் செய்யலாம் என்பதே ஆண்மை என்று ஆண் குழந்தைகள் நம்புகிறார்கள். பெண்ணைச் சக உயிராக மதிக்காமல் தனது ஆளுகைப் பொருளாகப் பார்ப்பது பழக்கமாகிறது. ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் பெண்ணும் விரும்பியே ஆகவேண்டும். இல்லையென்றால் மிரட்டுவது, பலாத்காரம் செய்வது, முகத்தில் ஆசிட் ஊற்றுவது, போன்ற பலாத்காரச் செயல்கள் இப்போது பெண்ணின் உயிரை வாங்குவதாகவும் மாறியிருக்கிறது. பொது இடங்களிலும் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஒரு செயலைச் செய்யும் போது சரியா தவறா என்று பகுத்து ஆராயும் திறனைக் குழந்தைகளிடம் நாம் உருவாக்கவே இல்லை. பெரும்பாலும் விதி மீறலையே திறனாக எண்ணுகிறார்கள். அதுவே பெருமிதமாகவும் மாறியுள்ளது. இதே உணர்வோடுதான் ஜேமியும் வளர்ந்தான். சமூக ஊடகத்தில் தன்னைக் கேலி செய்தது ஒரு பெண் என்பதே அவன் கோபத்தைத் தூண்டியது. நண்பர்கள் தூபம் போட்டனர். கத்தியை வைத்து மிரட்ட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். நேரில் சக மாணவி பேசிய முறை ஜேமிக்குள் வளர்த்திருக்கும் ஆதிக்க உணர்வைத் தூண்டியது. கொலை செய்தான். தவறு செய்தவன் தண்டனை அடைகிறான். அவனது குடும்பமே அதிகப் பாதிப்புகளை அடைகிறது. சமூகம் அவர்களையும் குற்றவாளிகளாகவே நடத்துகிறது. கேலி செய்கிறது. வெறுப்பை உமிழ்கிறது. அவமானப்படுத்துகிறது. அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு, பிள்ளையைச் சரியாக வளர்க்கவில்லையே என்ற குற்ற உணர்வில் பெற்றோர் தவிக்கின்றனர். அவர்களே அவர்களுக்கு ஆறுதல். பிள்ளையைச் சரியாக வளர்ப்பது எப்படி? குழந்தை வளர்ப்பு குறித்த புத்தகங்களுக்கும் காணொலிகளுக்கும் இப்போது மவுசு அதிகம். Parenting என்று இன்றைய இளம் தலைமுறையினர் குழந்தைகளைக் கவனிக்கிறோம் என்று செய்யும் செயல்களில் பலவும் முந்தைய /தலைமுறையை அதிர்ச்சியடைய வைக்கின்றன. பொதுவாக ஒழுக்கம் என்று பேசப்படுவது குழந்தைகளின் முடி, உடை மீதான குறைகளாகவே நின்றுவிடுகிறது. பேசும் முறை, நடத்தை போன்றவை பற்றிப் பேசுவோர் மிகவும் குறைவு. நீதியைப் பின்பற்றாத சமூகம், குழந்தைகளுக்கு நீதி நூல்கள், நீதிக்கதைகளைச் சொல்லித் தராததால் தான் இவ்வளவு சிக்கல்களும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறது. தவறு பெரிதாகி வெளியே தெரியும் வரை எல்லோருமே நான் சரி, மற்றவர்கள் தான் தவறு என்று பேசுகிறோம். இந்தத் தலைமுறை கெட்டுவிட்டது என்று குறைகளைப் பட்டியலிடுவதே முந்தைய தலைமுறையின் கடமையாக மாறிவிட்டது. இதுவே காலம்காலமாகத் தொடர்கிறது. குழந்தைகளுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். அவர்களின் இணையப் பயன்பாடு குறித்து விமர்சனம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்துவது பற்றிக் கலந்துரையாட வேண்டும். எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் குழந்தைகளும் நிறைய கலந்துரையாட வேண்டும். காலத்திற்கு ஏற்ற செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அவற்றைப் பழகும் இடங்களாகவே பள்ளியும் வீடும் சமுகமும் திகழவேண்டும். அப்போதுதான் நாம் வெறுமனே பேசிப் புளகாங்கிதம் அடையும் சமத்துவ சமூகம் மலரும். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்த உரையாடல்களை முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது Adolescence தொடர் . இங்கு அது அவ்வளவு ஆழமான பேசு பொருளாக மாறவே இல்லை. அதுதான் அத்தொடரின் முதல் மூன்று பாகங்களை விரிவாகவும் நான்காம் பாகத்தை மிகச் சுருக்கமாகவும் இங்கு எழுதக் காரணமாக அமைந்தது. Adolescence தொடர் தனிப்பட்ட உண்மை நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. உலகெங்கும் நடைபெற்ற பல்வேறு இளம்பருவக் குற்றச் செயல்களே இத்தொடரை உருவாக்கக் காரணமாக அமைந்தது. ஜேக் தார்ன், ஸ்டீபன் கிரகாம் இணைந்து கதையை உருவாக்கினர். நான்கு பாகங்களையும் இயக்கியவர் பிலிப் பராந்தினி. ஜேமியாக நடித்தவர் ஓவன் கூப்பர். அவரது தந்தையாக நடித்து கதை, தயாரிப்பு உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஸ்டீபன் கிரகாம். ஒளிப்பதிவாளர் மேத்யூ லூயிஸ். ஒவ்வொரு பாகமும் படத்தொகுப்பு இல்லாமல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. ஒத்திகையும் படப்பிடிப்பில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் தொடக்கத்திலிருந்து மீண்டும் படமாக்கியதும் இதனைச் சாத்தியமாக்கின. இது பார்வையாளர்களுக்கு நெருக்கமான உணர்வைத் தந்தது. இங்கிலாந்து நாட்டின் பிரதமர் Adolesence குழுவினரைச் சந்தித்து உரையாடினார். நாட்டிலுள்ள நடுநிலைப்பள்ளிகளில் இத்தொடரைத் திரையிட ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பேசுவோம்.
- வைரக்கல்
குளத்தில் நிறைய தண்ணீர் இருக்குது குட்டிப் பாப்பா தாமரைப்பூ பூத்திருக்குது சின்னப் பாப்பா பூவைச் சுற்றி இலைகள் மிதக்குது குட்டிப் பாப்பா வட்டத் தட்டென சூழ்ந்திருக்குது சின்னப் பாப்பா இலையில் உருளும் தண்ணீர்த் துளிகள் குட்டிப் பாப்பா வைரக் கல்போல் தகதகக்குது சின்னப் பாப்பா பாவண்ணன் இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.
- குழந்தைகளின் உரிமைகள் - 15
ஐக்கிய நாடுகளின் பிரகடனம் – சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் : குழந்தைகளுக்கும் தனிப்பட்ட - அந்தரங்க உரிமைகள் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் குடும்பம், வீடு, தகவல் தொடர்புகள் போன்று பல்வேறு விஷயங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வயது வந்த ஆணும்,பெண்ணும் பேசும் போது “என்னோட ‘பிரைவசி’யில் யார் தலையிடுவதையும் நான் விரும்புவதில்லை” என்று சொல்வதைக் கேட்டிருப்போம். அவர்களின் நெருங்கிய நண்பர்களோ,பெற்றாரோ,உறவினர்களோ,அண்டை-அயல் வீட்டுக்காரர்களோ யாருமே அவ்வாறு தலையிடுவதை, பொதுவாக ஆணோ பெண்ணோ யாரும் விரும்புவதில்லை. அவர்களாக விரும்பி, முன்வந்து சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு;அது வேறு விஷயம். ஆனால், அவர்கள் விரும்பாத போது, வேறு யாரும் அவர்களின் அந்தரங்க உலகில் பிரவேசிக்க அனுமதிக்க மாட்டார்கள். இப்படிக் குழந்தைகளுக்கும் அந்தரங்க உரிமைகள் உண்டு என்று ஐக்கிய நாடுகளின் சர்வதேசப் பிரகடனத்தின் 16-ஆவது பிரிவு கூறுகிறது. “என்னது?குழந்தைகளுக்கும் அந்தரங்க உரிமைகளா? அது எப்படிச்சாத்தியம்?” என்று முதலில் நாம் அதிர்ச்சியே அடைவோம். இதுதான் எண்றில்லை,எந்த ஓர் உரிமை என்றாலும் அது பெரியவர்களின் கவனத்திலேயே பதிந்திருப்பதில்லை. பெரியவர்களின் உரிமைகளைப் பற்றியே பலருக்கும் விழிப்புணரவோ, பரிச்சயமோ, புரிதலோ இன்று வரைக்கும் இல்லை எனும்போது, குழந்தைகளின் அந்தரங்க உரிமைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். குழந்தைகளுக்கு என்று அப்படியென்ன அந்தரங்கம் இருக்க முடியும் என்று உடனே ஒரு கேள்வியும் எழும். ஓர் எடுத்துக்காட்டைச் சொன்னால், ஓரளவுக்குப் புரிந்து விடும். சமீப காலங்களில், இரண்டு வயது மூன்று வயதேயான பெண் குழந்தைகள் முதல், 75 வயது நிரம்பிய மூதாட்டி வரை, வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் காம வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய செய்திகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் பெயர்கள்,புகைப்படங்கள், குடும்பம்,முகவரி போன்ற எந்த விவரத்தையும் செய்தி ஊடகங்களிலோ,காவல்துறை,நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான ஆவணங்களிலோ வெளியிடக் கூடாது என்று ஒரு சட்டவிதி உள்ளது. அவ்வாறு உண்மைத்தகவல்கள் வெளியானால்,அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு தொடர்புடையவர்களைப் பற்றி விவரங்களை வெளியிடக்கூடாது என்பதற்குக் காரணம், அவ்வாறு வெளியிடுவதால், வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு,ஏற்கெனவே கடும்மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருப்போர், மேலும் கடுமையான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அவ்வாறான மன அழுத்தங்களுக்கு, ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை ஆளாக்கிவிடக்கூடாது என்பதில் இன்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. குழந்தைகளின் மன உலகம் மிகவும் நுண்ணியதாக இருக்கும். நம் பார்வையில் மிக அற்பமானவையாகத் தோன்றும் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றக்கூடும். இன்றைய அவசர உலகில், அவர்களின் நுண் உணர்வுகளைக் கவனித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பொறுமையோ,புரிதலோ பெரியவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே முரட்டுத்தனமாகக் குழந்தைகளை அணுகும் நிலைக்குப் பெரியவர்கள் ஆளாகிறார்கள். ஓர் அரசுப்பள்ளியில்,சிறு மாணவியிடம் அவரின் ஆங்கிலத்திறனைப் பரிசோதிக்கிறேன் என்று ஓர் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவை நாம் சமூக ஊடகத்தில் காண முடிந்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய பெற்றோர்கள், ஒன்று, குழந்தைகளின் மனவுலகம் என்ன மாதிரியான தன்மையுடன், எந்தவிதமான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது என்பதைப் பற்றிய துளிக்கவனமும் இல்லாமல் தங்களுடைய விருப்பங்களைக் குழந்தைகள் மீது திணித்து, தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே குழந்தைகள் செய்தாக வேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்கள். குழந்தைகள் பொதுவாகப் பெரியவர்களின் வார்த்தைகளை மறுத்துப் பேச முடிவதில்லை;முயல்வதுமில்லை. இதற்கு நேர எதிர்நிலையில், வேறு சில பெற்றோர்கள் குழந்தை எதை விரும்பினாலும் மறு பேச்சே இல்லாமல்,அந்தக் குழந்தை விரும்பும் எது ஒன்றையும் உடனே வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள். அதன் விருப்பம் என்னவாக இருந்தாலும்,அது சரியா தவறா என்றெல்லாம் யோசனையே செய்யாமல் அதை நிறைவேற்றி விடுகிறார்கள். எடுத்துக்காட்டுக்காக, குழந்தை விரும்பிக் கேட்கிறது என்பதற்காக செல்போன் வாங்கிக் கொடுப்பதற்குக்கூட இந்த வகைப் பெற்றோர் தயங்குவதில்லை. செல்போனில் எந்தெந்த வகையான செயலிகள் இருக்கின்றன,அவற்றில் என்ன வகையான விஷயங்கள், செயல்பாடுகள் இடம் பெறுகின்றன என்பதைப் பற்றி அந்தப் பெற்றோர் எவ்விதப் புரிதலும், அறிதலும் இல்லாமலே குழந்தையின் கைகளில் விலையுயர்ந்த செல்போனைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகளின் இயல்பான துறுதுறுப்பின் விளைவாக குழந்தைகள்,தங்களின் வயதுக்கு மீறிய ஆட்சேபகரமான வன்முறைகள்,பாலியல் காட்சிகளைப் பாரக்கத்தொடங்கி அவற்றில் தங்களின் கவனம் முழுவதையும் செலுத்துகிறார்கள். அதன் விளைவுகளை நம் ஊடகங்களிலும், அண்டை வீடுகளிலும் பார்த்துக்கொண்டே இருந்தாலும், இன்னொருபுறம் பெற்றோர் அதே தவறுகளைச்செய்யும் போது இறுதியில் பாதிப்புகளால் சிதைவுறுவது அந்தக் குழந்தைகள்தாம். இத்தகைய ஒரு சூழலில், குழந்தையின் அந்தரங்க உரிமைகளை நாம் எப்படி அணுகுவது? இது ஒரு பெரிய உளவியல் சிக்கலாக மாறி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளின் பிரகடனம் சொல்லும் இந்த உரிமையின் அம்சங்களை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டால்தான் நமது குழந்தைகளை நாம் சரியாகக் கையாள முடியும். தொடர்ந்து சிந்திப்போம்... கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- ஆழியும் பேண்ட் சட்டையும்
ஆழி இந்த வருடம் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவள் தோழி கயலும் அதே வகுப்பு தான். அரசு பள்ளியில் தான் இருவரும் படிக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் சுமார் 7 கி. மீ தூரம். சென்ற வருடம் பள்ளி விடுமுறையில், இதற்காகவே தோழிகள் இருவரும் சைக்கிள் கற்றுக் கொண்டாரகள். வழக்கம் போல தோழி கயல் வீட்டின் முன் நின்று சைக்கிள் பெல் அடித்தாள் ஆழி. "வந்துட்டேன் ஆழி," என்ற கயல் "அம்மா கிளம்புறோம்' என்று சொல்லிவிட்டு, அவளின் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வரும் போது கயல் பாவாடை சைக்கிள் செயினில் மாட்டிக் கொண்டது. அதை கவனிக்காமல் அவர்கள் வர.... சிறிது தூரத்தில் பாவாடை இறுக்கி கயல் சைக்களோடு கீழே விழந்துவிட்டாள். பதறிய ஆழி சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினாள். அதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து கயலின் பாவாடையை சைக்கிளிலிருந்து எடுத்து விட்டார்கள். “பொட்ட புள்ளைங்களுக்கு சைக்கிள் எதற்கு? எப்ப பார்த்தாலும் இதே வேலை தான்” என புலம்பிவிட்டு கடந்து சென்றார்கள். ஆம் அவர்கள் சொல்வது சரிதான். ஒரு நாள் ஆழி, ஒரு நாள் கயல் இப்படி யாராவது ஒருவருக்கு இந்த பிரச்சனை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை வந்துவிடும். கயல் மெதுவாக சைக்கிளை சரி செய்தாள். பின்னர் இருவரும் கிளம்பினார்கள். கயல், "நமக்கு சைக்கிள் பிரச்சனை இல்ல பா....." என்றாள் ஆழி. "பின்ன என்ன பிரச்சனை?" என கயல் கேட்க, "நம்ம உடை தான் பிரச்சனை பா" என்றாள். "என்னது உடையா?" என ஆச்சிரியத்தோடு கயல் கேட்டாள். "ஆமாம் உடை தான் பா!. இதற்கு நாம் ஒர் தீர்வு கண்டே ஆக வேண்டும்." "இந்த வாரம் வெள்ளிக்கிழமை விருப்ப உடை அணிந்து செல்லலாம் இல்ல" "ஆமாம்" "அப்போ நாம நம்ம தோழிகள் அனைவரும் பேண்ட் சட்டை போட்டு போகலாம்", என்றாள் ஆழி. "என்னடீ.. என்ன சொல்லற? நம்ம அப்பா அம்மா எல்லாம் சம்மதிக்க மாட்டார்கள். பள்ளியிலும் நமக்கு அனுமதி கிடைக்காது" என்றாள். 'நாம முயற்சி செய்யலாம் டீ. இந்த வாரம் வெள்ளிக்கிழமை பேண்ட் சட்டை சீருடை அணிந்து தான் வரோம் " என்று முடிவு எடுத்தனர். PANTS DAY - வெள்ளி கிழமை என்ற பதாகையோடு ஆழி கூட்டாளிகள் ஒன்றாக பள்ளி உள்ளே நுழைந்தார்கள். "உடையில் சமத்துவம் வேண்டும் என்றால், அந்த மாற்றத்தை நாம் ஆரம்பிக்கவேண்டும். பேண்ட் சட்டை அணிந்து அதை துவங்கலாம் என பேசிக் கொண்டே சென்றார்கள். மற்ற வகுப்பு பெண்களும் இவர்களைப் பார்த்து வியந்து நின்றார்கள். "இங்கே விசேஷம் நடக்குது போல?"என வகுப்பு ஆசிரியர் வினவ, ஆழி தயக்கமில்லாமல் சொன்னாள். "ஆமாம் டீச்சர், வாரத்தில் ஒரு நாள் 'Pants Day' – பெண்கள் விருப்பமாக பேண்ட் சட்டை அணிவதற்கான தினம். அது ஒரு 'வாரியர் வீக்' ஆரம்பம் மாதிரி!" "தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு துவங்குங்கள்" என்றார். "சரிங்க டீச்சர்." என்று சொன்னதோடு, தலைமை ஆசிரியரை சந்தித்து அனுமதியும் பெற்று விட்டனர். வீட்டில் பெற்றோரிடம் அனுமதி பெறுவது அதைவிட பெரிய டாஸ்காக இருந்தது. வெள்ளிக்கிழமை வந்தது. Pants Day வந்து விட்டது. அன்று ஆழியும் அவளின் 11 தோழிகளும் அழகாக பேண்ட் சட்டை சீருடையில் பள்ளிக்கு சைக்களில் வந்தார்கள். எல்லோரிடமும் முக்கியமாக ஒரு அம்சம் இருந்தது: அது கம்பீரம்! அரங்கத்திலிருந்த வகுப்பு ஆசிரியர் பார்த்தவுடன் புன்னகைத்தார். சட்டென்று, "தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கினீர்களா?" என்றார். "இன்றைய விழா நாயகனே நமது தலைமை ஆசிரியர் தான் டீச்சர்" என்றாள் ஆழி. "அனுமதி பெற்று தான் இந்த பேண்ட் சட்டை அணிந்து வந்துள்ளோம் டீச்சர்" என்றார்கள். தலைமை ஆசிரியர் சிரித்தபடி அரங்கம் உள்ளே நுழைந்தார். அரங்கம் அமைதியானது. விழா துவங்கியது. அவரவர் விருப்ப உடையில் மாணவர்கள் மேடையில் வலம் வந்தார்கள். ஆழியும் அவளின் தோழிகளும் மிகவும் கம்பீரமாக மேடை ஏறி பேண்ட் சட்டை சீருடையில் ஒரு வெற்றி நடை போட்டார்கள். தலைமை ஆசிரியர், "நான் வழக்கமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவேன். ஆனா இப்போ நான் 'விழிப்புணர்த்தப்படுற' நிலைக்கு வந்திருக்கேன் போல இருக்கு! ஆடை அரசியல் வேண்டாம். இனிமேல், மாணவிகளும் ஒரு நாள் மட்டும் அல்ல எல்லா நாட்களும் பேண்ட் சட்டை சீருடை அணிந்து வரலாம் என புதிய அறிக்கை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." "அது மட்டுமல்லாமல் நமது இந்த அறிக்கையை பரிந்துரை செய்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பேண்ட் சட்டை அணிந்து வர சட்டம் நடைமுறைப்படுத்த அரசுக்கு கோரிக்கை சமர்ப்பிக்கிறேன்." என்று பேசினார். மாணவிகளிடமிருந்து வந்த பலத்த கைத்தட்டல் அரங்கத்தை அதிரச் செய்தது. "ஆழி ஒரு பேண்ட் சட்டை மட்டும் போட்டுத்தான் பள்ளிக்கு வந்தாள்… ஆனால் வருங்காலத்தில் இது ஒரு சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். ஒரு சீருடை மாற்றம், ஒரு சிந்தனை மாற்றத்துக்கு வித்தாய் இருக்கலாம்.” என்றார் தலைமை ஆசிரியர். பலத்த கைத்தட்டலோடு விழா நிறைவடைந்தது. ஆழியும் அவளின் தோழிகளும் பேண்ட் சட்டையில் பட்டாம்பூச்சி போல சைக்கிளில் பறந்து சென்றார்கள். இனி பாவாடை சைக்கிளில் மாட்டாது. மாற்றம் துவங்கியது. சாந்தி சரவணன் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, ஹைக்கூ மற்றும் சிறார் இலக்கிய தளங்களில் இயங்கி வருகிறார். ‘மலர் மேல் மழைத்துளி’, ‘முள்ளின் மொழி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். குழந்தைகளுக்காக கதை சொல்லி வருகிறார்.
- இருபது லட்சம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்த உலகம்
( 87ஆவது பிறந்த நாள் காணும் எரிக் கார்லேவுடன் ஒரு நேர்காணல் ) ( எரிக் கார்ல் (Eric Carle) சின்னக் குழந்தைகளுக்காக 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி, அவற்றுக்கான சித்திரங்களையும் வரைந்தவர் ஆவார். இதில் அவருடைய மிகவும் புகழ்பெற்ற படைப்பான 'தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்' (The Very Hungry Caterpillar) புத்தகமும் அடங்கும்! ) சந்திப்பு: ஸ்டோரி டாய்ஸ் இணைய தளம் ஸ்டோரி டாய்ஸ்: கேட்டர்பில்லர் (Caterpillar) செயலிகளை 15 லட்சத்திற்கும் (1.5 மில்லியன்) மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தி வருகிறார்கள். 'மை வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்' (My Very Hungry Caterpillar) செயலியில் மட்டுமே, குழந்தைகள் அரை பில்லியன் (50 கோடி) பழத் துண்டுகளை உண்ணச் செய்துள்ளனர், 18 ஆண்டுகளுக்கான சமமான நேரத்தை ஓவியம் வரைவதில் செலவிட்டுள்ளனர், மேலும் 20 லட்சத்திற்கும் (2 மில்லியன்) அதிகமான வண்ணத்துப்பூச்சிகளை உருவாக்கியுள்ளனர். உங்களுடைய படைப்புகளும், அனைவரும் நேசிக்கும் கதாபாத்திரங்களும் இப்போது டிஜிட்டல் உலகில் இவ்வளவு சிறப்பாக வலம் வருவதைப் பார்ப்பதற்கும், ஒரு புதிய தலைமுறையினரை புதிய வழிகளில் தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?" எரிக் கார்லே: கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதில் நான் இன்னும் என்னை ஒரு தொடக்கநிலையில் இருப்பவராகவே கருதுகிறேன் – ஆனால் தொழில்நுட்பமும் செயலிகள் (apps), மின்புத்தகங்கள் (ebooks) மற்றும் கணினிகளின் வளர்ச்சியும் நம் உலகப் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஆரம்பத்திலிருந்தே இது இப்படித்தான் இருந்து வருகிறது. குகை மனிதர்கள் ஒரு காலத்தில் கதைகளைக் கல்லில் படங்களாக எழுதினார்கள்; பின்னர் புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது, இப்படியே அது தொடர்கிறது. எனவே மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மேலும் எனது படைப்பு ரசிக்கப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 20 லட்சம் (2 மில்லியன்) வண்ணத்துப்பூச்சிகளா, எவ்வளவு அழகு! ஸ்டோரி டாய்ஸ்: உங்களுடைய முதல் படைப்பு வெளியானது முதலே, உங்களுடைய பார்வை, அழகியல் மதிப்புகள் மற்றும் கலை நுட்பங்கள் ஆகியவை உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரின் கற்பனைத் திறனையும் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. இப்போது நீங்கள் உங்களது 87-ஆவது பிறந்தநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுடைய தனித்துவமான பார்வை இவ்வளவு நீடித்த, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிவது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? எரிக் கார்லே: எனது புத்தகம் தலைமுறை தலைமுறையாக வாசகர்களாலும் குடும்பங்களாலும் வாசிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிவது எனக்குக் கிடைத்த பெரும் பெருமை. எனது புத்தகங்களைப் படித்து வளர்ந்த பெற்றோர், இப்போது அதே புத்தகங்களைத் தங்களது குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டிவிட்டு எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்களையும் கடிதங்களையும் பெறும்போது அது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு மனிதருக்குக் குழந்தைப் பருவத்தில் அர்த்தமுள்ளதாக இருந்த ஒரு விஷயத்தை, அவரே தன் சொந்தக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு: AI உதவியுடன் சுகன்யா ராமநாதன் சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- தத்துவம் அறிவோம் -16 : எனக்கு மட்டும் தான் எல்லாம் சொந்தம்
விவசாயத்தைக் கண்டுபிடித்த மனிதனின் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. என்னென்ன மாற்றங்கள் நடந்தன? வேட்டைச் சமூகமாக உணவைத்தேடிக் காடு காடாக அலைந்து கொண்டிருந்த மனிதர்கள் ஒரே இடத்தில் தங்கி வாழத் தொடங்கினார்கள். புலம்பெயர் வாழ்க்கை நிலையான வாழ்க்கையாக மாறியது. அதாவது முன்பு அடுத்தவேளை உணவு கிடைக்குமா? என்று தெரியாது. இப்போது உணவைத் தாங்களே உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலையை விவசாயம் உருவாக்கியது. தானியங்களை உற்பத்தி செய்ய முடிந்ததால் மனிதர்கள் ஆண்டு முழுவதும் பசி, பட்டினி இல்லாமல் வாழத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல. விவசாயம் தேவைக்கு அதிகமான உணவுப் பொருளைக் கொடுத்தது. அதிகமாக உற்பத்தியான தானியங்களைப் பாதுகாக்க வேண்டும் இல்லையா? ஒரே இடத்தில் நிலையாக இருந்தால் தானே பாதுகாக்க முடியும். ஆகவே மனிதன் ஒரே இடத்தில் நிலையாக வாழத் தொடங்கினான். இன்னொரு மாற்றமும் நிகழ்ந்தது. அதுவரை, கிடைத்த அத்தனை விலங்குகளையும் வேட்டையாடிச் சாப்பிட்டார்கள். இப்போது சில விலங்குகளை குட்டிகளிலிருந்தே வளர்க்கவும் பழக்கவும் தொடங்கினார்கள். காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக்கினார்கள். உதாரணத்துக்கு நாய், குதிரை, மாடு, பன்றி, ஆடு, கோழி போன்றவற்றைப் பிடித்து தாங்கள் இருந்த இடத்தில் வளர்த்துப் பழக்கினார்கள். இதனால் அவர்களுடைய இன்னொரு பிரச்சினையும் தீர்ந்தது. அலைந்து திரிந்து விலங்குகளை வேட்டையாடி மாமிசம் சாப்பிட்ட மனிதர்களுக்கு இப்போது இருந்த இடத்திலேயே மிருகங்களைச் சாப்பிட முடிந்தது. ஆக,அலைந்து திரிந்த வாழ்க்கை முடிந்து ஒரே இடத்தில் நிலையாக வாழும் வாழ்க்கை தொடங்கியது. மனித குல வாழ்க்கை வரலாற்றில் இது தான் மிக முக்கியமான மாற்றம். இந்த மாற்றம் அன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொடுத்தது. ஆனால் அதே நேரம் சில பல கெடுதல்களையும் கொண்டு வந்தது. அவைகளும் மாற்றங்கள் தான். முன்பு வேட்டைச் சமூகமாக இருந்தபோது கிடைத்ததைத் தன்னுடைய கூட்டத்துடன் பகிர்ந்து சாப்பிட்டார்கள். உணவைப் பகிர்ந்து கொள்வதில் சமத்துவம் இருந்தது. தனிநபர்களை விட கூட்டம் அல்லது குழு முக்கியம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அதையே ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் என்று ஆய்வாளர்கள் அழைத்தனர். பொதுவுடமை என்றால் என்ன? இதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்க்கலாம். இப்போதைக்கு ஒரு சமூகத்தில் மனிதர்களின் உழைப்பு, அதன் பலன்கள், நன்மைகள், வசதிகள், முன்னேற்றங்கள் எல்லாம் அந்த மொத்தக் கூட்டத்துக்குச் சொந்தம். கூட்டம் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும். அங்கே அம்பானியும் கிடையாது. அதானியும் கிடையாது. எல்லாரும் ஓர் நிறை. எல்லோரும் சமம். ஆதிப்பொதுவுடமைச் சமூகத்தில் இந்த நிலைமை இருந்தது. ஆனால் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டபோது என்ன நடந்தது? இப்போது ஒரு சிலர் நிலத்தைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். வலுத்தவர்கள் எளியவர்களை அடிமைகளாக்கினார்கள். அவர்களை நிலத்தில் வேலை செய்ய வைத்தார்கள். சொந்தமாக நிலம் வைத்திருந்தவர்கள் அந்த நிலத்தில் விளைந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள். வேலை செய்தவர்களுக்கு உணவு அல்லது கூலி கொடுத்தார்கள். கூலி என்றால் விளைச்சலில் சமபங்கு கிடையாது. நிலத்தில் வேலை பார்த்தவர்களின் உழைப்பை மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார்கள். உழைப்பை விலைக்கு விற்றவர்களுக்கு அதற்கு மேல் எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் கிடைத்த கூலியை வைத்து வாழ்க்கை நடத்த வேண்டும். நிலம் வைத்திருப்பவர் நிலத்தில் விளைந்த மொத்தப்பலனையும் எடுத்துக் கொள்வார். அதனால் அவர் வசதியாக வாழ்வார். புரிந்து விட்டதா? அமெரிக்கா, செவ்விந்தியாவின் மீது போர் தொடுத்தபோது அமெரிக்கப்படைத் தளபதி, “ இன்றிலிருந்து இந்த நிலம் எங்களுக்குச் சொந்தம்.. ” என்று சொன்னானாம். அதைக் கேட்ட செவ்விந்தியப் பழங்குடி மக்களின் தலைவன், “ நாம் தான் பூமிக்குச் சொந்தமானவர்கள். பூமி நமக்குச் சொந்தமானது இல்லை..” என்று சொல்லிச் சிரித்தாராம். இப்படியொரு கதை உலவுகிறது. யோசித்துப்பாருங்கள். நாம் வாழும் பூமியை யாராவது நிரந்தரமாய்ச் சொந்தம் கொண்டாடமுடியுமா? மனிதர்கள் மட்டுமல்ல… எல்லா உயிர்களுமே உயிரோடு வாழும்வரை மட்டுமே இது என் நிலம், இது என் தெரு, இது என் ஊர், இது என் நாடு, என்று சொந்தம் கொண்டாட முடியும். உயிர்கள் மறைந்த பிறகு நாம் அனைவருமே பூமிக்குச் சொந்தமானவர்களாகி விடுவோம். இல்லையா? அப்படியென்றால் பூமிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்த மனிதன் என்ன செய்திருக்க வேண்டும்? அனைவரும் உழைப்போம். கிடைக்கின்ற விளைச்சலை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம். என்று சொல்லியிருக்க வேண்டுமா? இல்லையா? நீங்களே சொல்லுங்கள். மனிதன் அப்படிச் செய்யவில்லை. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? தனக்கு மட்டுமே அனைத்தும் வேண்டும் என்ற ஆசை. அதற்கு இன்னொரு பெயர் தான் சுயநலம். இதுவரை உலகில் தோன்றிய தத்துவங்களும் இந்த வார்த்தையை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. இந்தச் சுயநலம் என்ன செய்தது? மனிதகுலத்தை என்ன பாடுபடுத்தியது? பார்க்கலாம். ( அறிவோம் தத்துவம்) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- படிக்கப் பழகு
பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! பைய பைய அகரவரிசை படிக்கப் பழகு பாப்பா ! பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! படம் பார்த்து சொற்களை படிக்கப் பழகு பாப்பா ! பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! எழுத்துக் கூட்டி சத்தமாக படிக்கப் பழகு பாப்பா ! பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! குட்டிக் குட்டிக் கதைகளைப் படிக்கப் பழகு பாப்பா பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! எளிய இனிய திருக்குறளை படிக்கப் பழகு பாப்பா ! பழகு பாப்பா பழகு ! படிக்கப் பழகு பாப்பா ! அருமையான ஆத்திசூடி படிக்கப் பழகு பாப்பா ! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.













