top of page

இயலில் தேடலாம்!

361 results found with an empty search

  • நெத்திலி

    குழந்தைகளே! நான் நெத்திலிமீன் பேசுகிறேன். என்னை நீங்கள் மீன் சந்தைகளில் பார்த்திருக்கலாம். குட்டியாக, நீளமாக இருக்கும் மீன் இனம் நான். ஆங்கிலத்தில் என்னை Anchovy என்று அழைப்பார்கள். மலையாளத்தில் என் பெயர் நெத்தோலி. ஒரு சில நெத்திலி இனங்களைப் பொருவா என்றும் மீனவர்கள் அழைப்பார்கள். என் இனத்தில் 140 உறுப்பினர்கள் உண்டு. பெரும்பாலும் எங்கள் இனத்தவர்கள் 2 முதல் 40 சென்டிமீட்டர் நீளம்தான் இருப்போம். பெரும்பாலும் நீண்ட உடலுடன் இருப்போம். என் மூக்குப் பகுதியில் ஒரு சிறு உறுப்பு உண்டு. இது மின்சாரத்தை உணரும் உறுப்பு என்று சொல்கிறார்கள், ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு இது இன்னும் உறுதியாகத் தெரியவில்லையாம்.நீங்கள் வளர்ந்தபிறகு ஆராய்ச்சியாளராகி இந்த உறுப்பின் வேலை என்ன என்று கண்டுபிடிப்பீர்கள்தானே? நாங்கள் பெரும்பாலும் வெப்பமான கடல்களில்தான் வாழ்வோம். குளிர் கடல்களில் எங்களால் தாக்குப் பிடிக்க முடியாது. 12 டிகிரி செல்சியஸுக்கும் கீழே கடல் வெப்பநிலை இருந்தால் எங்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. சிறு சிறு மிதவை உயிர்களை சாப்பிட்டு நாங்கள் உயிர்வாழ்வோம். நாங்கள் எப்போதுமே கூட்டம் கூட்டமாக வாழ்வோம். கூட்டமாக நீந்தும் எங்களைப் பார்ப்பதே அழகான காட்சியாக இருக்கும். கூட்டமாக வாயைத் திறந்துகொண்டே நீந்தி மிதவை உயிர்களை சாப்பிடுவோம். பார்ப்பதற்குக் குட்டி மீனாக இருக்கிறேனே என்று என்னைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். நாங்கள் மிக முக்கியமான வணிக மீன் இனங்கள். பெருவில் இருக்கும் நெத்திலி இனங்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கிப் பிடிக்கின்றனவாம். நெத்திலிகளின் விலை குறைவு என்பதால் வறுமையில் இருப்பவர்களும் வாங்கி சாப்பிட முடியும், அவர்களுக்கான புரதச் சத்து இதன்மூலம் எளிதில் கிடைக்கும். அடுத்தமுறை மீன் சந்தைக்கு வரும்போது நெத்திலி மீன் இருக்கிறதா என்று பாருங்களேன். நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.

  • வாசிப்புக்களம்

    4/7/26 (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் தூத்துக்குடி சிறகுகள் சிறார் நூலகத்தில் வாசிப்புக்களம் - 58 ஆவது நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் புத்தகத் தூதுவர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வாசிப்பு இயக்கப் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. நினைவுத் திறனைக் கூர்மைப்படுத்தும் சிறிய விளையாட்டு விளையாடி குழந்தைகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஆத்தூர் அறிவுச் சுடர் நூலக ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முக வடிவு அவர்களும்,ஆத்தூர் வாசிப்பை நேசிப்போம் நூலக ஒருங்கிணைப்பாளர் பூஜா ஸ்ரீ அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புத்தகத் தூதுவர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்து குழந்தைகளிடம் சிறப்பாக கலந்துரையாடினார்கள். பூஜா ஸ்ரீ அவர்களின் பிறந்த நாள் (5/7/26) பரிசாக ஆத்தூர் அறிவுச் சுடர் நூலகம் சார்பாக வகுப்பறை புதிது புத்தகமும், சிறகுகள் சிறார் நூலகம் சார்பாக நூலக மனிதர்கள் புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து குழந்தைகளும் தங்கள் மனதில் பிறக்கும் வார்த்தைகள் மூலம் பூஜா ஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்தது புதுமையாக இருந்தது. கார்த்திக் சுதன் தன்னுடைய பிறந்த நாள் (3/7/26) பரிசாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பண்டித ரமாபாய் நூலகத்தின் பெயர் - அன்னை ரமாபாய் நூலகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய நூலக ஒருங்கிணைப்பாளர் 7ஆம் வகுப்பு முத்துமாரியிடம் புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேனா பரிசு வழங்கி நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

  • இலண்டனிலிருந்து அன்புடன் – 13

    குவெண்டின் பிளேக் (Quentin Blake) ஆங்கிலச் சிறார் இலக்கியத்தில் எழுத்தாளர் ரோல்ட் டால் (Roald Dahl) மிகவும் புகழ்பெற்றவர். அவரது Matilda, Charlie and the Chocolate Factory போன்ற புத்தகங்கள் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. ரோல்ட் டாலின் கதைகள் பல திரைப்படங்களாகவும் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இவரது புத்தகங்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. எழுத்தாளர் ரோல்ட் டால் எவ்வளவு பிரபலமானவரோ, அவருக்கு இணையாக ஓவியர் குவெண்டின் பிளேக் அவர்களும் எல்லோராலும் அறியப்பட்டவர். ஏனெனில், ரோல்ட் டாலின் பெரும்பாலான புத்தகங்களுக்கு இவர்தான் ஓவியங்கள் வரைந்துள்ளார். ரோல்ட் டாலின் எழுத்துகள் நமக்குக் கடத்தும் அதே சுவாரசியத்தை பிளேக்கின் ஓவியங்களும் நமக்குத் தரும். 1932இல் பிறந்த பிளேக், கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு ஆசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் ஓவியம் பற்றி முறையான கல்வி ஏதும் பெறாமலேயே, அவர் ஒரு சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார். பின்னாட்களில், ஓவியக் கல்லூரியில் பகுதி நேரமாகப் படித்துத் தன் திறமையை வளர்த்துக் கொண்டார். இவரது ஓவியங்கள் முதன்முதலில் The Wonderful Button என்ற புத்தகத்தில் வெளிவந்தன. தற்போது 90 வயதைத் தாண்டியும் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களுக்கு இவர் ஓவியங்கள் வரைந்துள்ளார். அதில் ரோல்ட் டாலின் புத்தகங்கள் மட்டும் 18 ஆகும். ஓவியம் வரைவதுடன் நின்றுவிடாமல், அவரே சொந்தமாக 35 புத்தகங்களையும் எழுதியுள்ளார். சிறார் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான 'ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருது' (Hans Christian Andersen Award) பெற்றார். அதுமட்டுமல்லாமல், பிரித்தானிய குழந்தைகள் இலக்கியத்திற்கான முதல் 'Children's Laureate' என்ற பெருமையும் இவரையே சேரும். அவரது ஓவியங்களுக்காகவும், ஓவியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அவர் கடந்த மாதம் (05/06/2026) ஓவியங்களுக்கான அருங்காட்சியகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஓவியங்களுக்கென இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுவே ஆகும். "உலகை மாற்றும் பெரும் சக்தி ஓவியங்களுக்கு உண்டு; அதனை உலகிற்கு வலியுறுத்துவதற்காகவே இந்த அருங்காட்சியகம் செயல்படும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார். சரி வாருங்கள்! இவ்வளவு சிறப்புகள் மிக்க பிளேக் எழுதிய புத்தகங்களில் ஒன்றான Never Grow Up என்ற புத்தகத்தைப் பற்றி இனிப் பார்ப்போம். “Never Grow Up” – ரோல்ட் டாலின் புகழ்பெற்ற வாசகம் இது. இந்த வாசகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பிளேக் அவர்கள் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளார். பிளேக் அவர்களின் ஓவியங்கள் மிகவும் தனித்துவமானவை. ஒரு தேர்ந்த ஓவியக் கலைஞரின் ஆற்றலுடன், குழந்தைத்தனமும் இதில் வெளிப்படும். இவரது ஓவியங்கள் 'Scribble' (அதாவது, கிறுக்கல் போன்ற) வகைமையைச் சார்ந்தது. அதனால், குழந்தைகள் நீங்கள் வரைவது போன்றே இது இருக்கும். இந்தப் புத்தகம், “நீங்கள் சமத்தாக இருக்கும் குழந்தையா? பெரியவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்பவரா? அப்படியென்றால் இந்தப் புத்தகத்தை வாங்கி, நீங்கள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள்” என்று முதல் பக்கமே மிகவும் அதிரடியாகத் தொடங்குகிறது. அதன் இரண்டாவது பக்கத்தில், “நீங்கள் தற்போது இரண்டாவது பக்கத்திற்கு வந்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால், இந்தப் புத்தகம் உங்களுக்கானது இல்லை. தயவுசெய்து புத்தகத்தை மூடிவிடுங்கள்” என்று மேலும் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. “நான் சொல்லியும் கேட்காமல் நான்காவது பக்கத்திற்கு வந்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் குறும்பான சேட்டைகள் செய்யும் ஒரு சுட்டிதான்!” என்று இந்தப் புத்தகம் உங்களை வரவேற்கிறது. அடுத்த சில பக்கங்களில், குழந்தைகள் நீங்கள் செய்யும் சேட்டைகளையெல்லாம் அழகான ஓவியங்களுடன் படம் பிடித்துக் காட்டுகிறது. அதன் பிறகு, "பெரியவர்கள் பெரும்பாலும் வளர்ந்த பிறகு ஏன் சுவாரசியமற்ற விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்? ஆனால், வெகு சிலரே வாழ்வில் சுவாரசியமான விஷயங்களைச் செய்து, தங்களையும் தங்கள் சுற்றத்தாரையும் மகிழ்விக்கிறார்கள். அவர்கள்தான் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருகிறார்கள்; அவர்கள்தான் புதிய இனிப்புகளை உருவாக்குகிறார்கள்; அவர்கள்தான் அழிந்து போகும் உயிரினங்களைக் கூட மீட்கிறார்கள்; அவர்கள்தான் பெரிய அளவிலான சாக்லேட் கேக்குகளைத் தயாரிக்கிறார்கள்" எனப் பெரிய பட்டியலையே தருகிறார். எனவே, நீங்களும் அந்தச் சிலரைப் போல் இருங்கள்; நிறைய சேட்டைகள் செய்யுங்கள்; நிறைய குறும்புத்தனம் செய்யுங்கள். ஒரே மாதிரியான உலகத்தில் புதிய, சுவாரசியமான நல்ல விஷயங்களைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, தலைகீழாக நிற்கும் ஒரு குழந்தையின் ஓவியத்துடன் இந்தப் புத்தகத்தை நிறைவு செய்கிறார். இந்தப் புத்தகம் “Never Grow Up, always down!” என்ற வாசகத்துடன் நிறைவடைகிறது. (நாம் தலைகீழாக நிற்கும்போது, 'கீழ் நோக்கி வளருங்கள்' என்று சொல்வதுதானே சரி! அதாவது, மாற்றி யோசியுங்கள் என்கிறார்.) பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.

  • புறக்கோள்கள்: சூரியக் குடும்பத்திற்கு அப்பால்...

    இரவு நேர வானத்தை எண்ணற்ற விண்மீன்கள் கண்களில் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். "பரந்த இந்தப் பேரண்டத்தில் பூமியைப் போன்ற உலகங்கள் வேறு எங்காவது உள்ளனவா? அங்கேயும் உயிர்கள் வாழ்கிறார்களா?" இந்தக் கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனைச் சிந்திக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் வானியல் அறிவியல் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் பயணத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இன்று நமது சூரியனைத் தவிர பிற விண்மீன்களைச் சுற்றியும் ஆயிரக்கணக்கான கோள்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவையே புறக்கோள்கள் (Exoplanets) என்று அழைக்கப்படுகின்றன. புறக்கோள் என்றால் என்ன? நமது பூமி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றுகின்றன. ஆனால் சூரியனை அல்லாமல், வேறு ஏதாவது ஒரு விண்மீனைச் சுற்றிவரும் கோள் புறக்கோள் எனப்படுகிறது. ஒவ்வொரு விண்மீனும் ஒரு புதிய சூரியனாகக் கருதலாம். அவற்றைச் சுற்றியும் கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் போன்றவை இருக்கலாம். ஒரு காலத்தில் சூரியக் குடும்பம் மட்டுமே கோள்களைக் கொண்ட அமைப்பு என்று கருதப்பட்டது. இன்று அந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. வானியலாளர்கள், நமது பால்வெளி மண்டலத்தில் மட்டுமே நூற்றுக்கணக்கான பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று மதிப்பிடுகின்றனர். அதாவது, நாம் வானில் காணும் பெரும்பாலான விண்மீன்களுக்கும் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது. புறக்கோள்களின் கண்டுபிடிப்பு 1992 ஆம் ஆண்டில் முதல் முறையாக சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அவை ஒரு துடிப்பு விண்மீனைச் சுற்றி வந்தன. பின்னர் 1995 ஆம் ஆண்டு 51-பெகாசி-b என்ற கோள், சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுவதாகக் கண்டறியப்பட்டது. இது வானியலில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக மைக்கேல் மேயர் மற்றும் திதியர் கியூலோஸ் ஆகியோர் 2019-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர். அதன்பிறகு புறக்கோள்களைத் தேடும் ஆய்வுகள் வேகமடைந்தன. இன்று ஆயிரக்கணக்கான புறக்கோள்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன; மேலும் புதிய கோள்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. புறக்கோள்களைக் கண்டுபிடிப்பது எப்படி? புறக்கோள்களை நேரடியாகப் பார்ப்பது மிகவும் கடினம். அவை தங்களது விண்மீனின் பிரகாசத்தில் மறைந்து விடுகின்றன. எனவே விஞ்ஞானிகள் பல நுட்பமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். கடத்தல் முறை (Transit Method):ஒரு கோள் தனது விண்மீனின் முன்னால் கடந்து செல்லும்போது, அந்த விண்மீனின் ஒளி மிகச் சிறிதளவு மங்குகிறது. இந்த மங்கலை மிகத் துல்லியமாக அளந்து கோளின் இருப்பை உறுதிப்படுத்துகின்றனர். ஆரவியல் வேக முறை (Radial Velocity):ஒரு கோளின் ஈர்ப்பு விசையால் அதன் விண்மீன் மிகச் சிறிது அசைகிறது. அந்த அசைவின் வேக மாற்றத்தை அளந்து, கோளின் நிறை மற்றும் சுற்றுப்பாதையை கணக்கிடுகின்றனர். நேரடிப் படமெடுத்தல் (Direct Imaging):சில அரிய சந்தர்ப்பங்களில், விண்மீனின் ஒளியை மறைத்து அதன் அருகிலுள்ள கோளை நேரடியாகப் படம் எடுக்க முடிகிறது. ஈர்ப்புக் கண்ணாடி முறை (Gravitational Microlensing):ஈர்ப்புப் புல ஒளிவிலகல் என்ற நிகழ்வைப் பயன்படுத்தி, தொலைவில் இருக்கும் கோள்களையும் கண்டறிய முடிகிறது. புறக்கோள்களின் பல்வேறு வகைகள் எல்லாப் புறக்கோள்களும் பூமியைப் போல இருப்பதில்லை. பாறைக் கோள்கள் – பூமி, செவ்வாய் போன்ற திடமான மேற்பரப்பைக் கொண்டவை. பெருவாயுக் கோள்கள் – வியாழன், சனி போன்ற வாயுக்களால் ஆன மாபெரும் கோள்கள். சூடான வியாழன்கள் (Hot Jupiters) – தங்கள் விண்மீனை மிக அருகில் சுற்றுவதால் ஆயிரக்கணக்கான டிகிரி வெப்பநிலையைக் கொண்டவை. மிகப் பெரிய பூமிகள் (Super-Earths) – பூமியைவிடப் பெரியதாக இருந்தாலும் பாறை உலகங்களாக இருக்கக்கூடியவை. சிறிய நெப்டியூன்கள் (Mini-Neptunes) – பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடைப்பட்ட அளவுடைய கோள்கள். இந்த உலகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான இயற்கை அமைப்புகளைக் கொண்டுள்ளன. வியப்பூட்டும் சில புறக்கோள்கள் கெப்ளர்-186f பூமியை ஒத்த அளவுடைய முதல் முக்கியமான புறக்கோள்களில் ஒன்றாகும். அது தனது விண்மீனின் வாழ்வதற்கேற்ற வளையத்தில் அமைந்துள்ளது. புராக்ஸிமா சென்டவுரி-b நமது சூரியக் குடும்பத்திற்கு மிகவும் அருகிலுள்ள விண்மீனைச் சுற்றிவருகிறது. வருங்காலத்தில் மனிதன் முதலில் ஆராயக்கூடிய புறக்கோள்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். டிராப்பிஸ்ட்-1 உலகம் முழுவதும் வானியலாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இதில் பூமியின் அளவுக்கு ஒத்த ஏழு கோள்கள் உள்ளன. அவற்றில் மூன்று கோள்கள் வாழ்வதற்கேற்ற வெப்பநிலை கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கற்பனைக்கும் எட்டாத உலகங்கள் புறக்கோள்களில் சில மனிதக் கற்பனையையும் மிஞ்சுகின்றன. சில கோள்களில் இரும்புத் துகள்கள் மழையாகப் பொழிகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சில உலகங்கள் முழுவதும் உருகிய பாறைக் கடல்களால் மூடப்பட்டிருக்கலாம். சில கோள்களில் ஒரு பக்கம் எப்போதும் பகலும், மறுபக்கம் எப்போதும் இரவும் நிலவுகிறது. சிலவற்றில் மணிக்கு பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. சில கோள்களில் இரண்டு அல்லது மூன்று சூரியன்கள் உதயமாகும். அங்கு சூரிய அஸ்தமனம் கூட பூமியில் நாம் காணாத வண்ணங்களில் தோன்றக்கூடும். உயிர்கள் வாழும் உலகங்களைத் தேடும் மனிதன் புறக்கோள்களை ஆய்வு செய்வதன் மிக முக்கியமான நோக்கம், பூமியைப் போன்ற மற்றொரு உலகைக் கண்டுபிடிப்பதே ஆகும். ஒரு கோளில் திரவ நீர், ஏற்ற வெப்பநிலை, வளிமண்டலம் ஆகியவை இருந்தால் அங்கே உயிர்கள் தோன்றும் வாய்ப்பு இருக்கலாம். இதற்காக விஞ்ஞானிகள் வாழ்வதற்கேற்ற மண்டலமாகக் கருதப்படும் பகுதிகளை அதிகமாக ஆராய்கின்றனர். ஆனால், ஒரு கோள் அந்த மண்டலத்தில் இருப்பதால் மட்டுமே அங்கு உயிர்கள் இருக்கும் என்று கூற முடியாது. அதேபோல், அந்த வளையத்திற்கு வெளியே உயிர்கள் இருக்கவே முடியாது என்றும் கூற முடியாது. பூமியில் கடுமையான வெப்பம், கடும் குளிர், ஆழ்கடல், எரிமலைப் பகுதிகள் போன்ற இடங்களிலும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. எனவே உயிரின் எல்லைகளைப் பற்றிய நமது புரிதல் இன்னும் முழுமையடையவில்லை. புதிய தலைமுறை விண்வெளித் தொலைநோக்கிகள் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி, ஆயிரக்கணக்கான புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்து வானியலில் புரட்சியை ஏற்படுத்தியது. 2009 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி, ஒரே நேரத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் விண்மீன்களின் ஒளியைத் தொடர்ந்து கண்காணித்தது. ஒரு கோள் தனது விண்மீனின் முன் கடந்து செல்லும்போது ஏற்படும் மிகச் சிறிய ஒளிக்குறைவைக் கண்டறிந்து, ஆயிரக்கணக்கான புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்தது. புறக்கோள்கள் பிரபஞ்சத்தில் அரிதானவை அல்ல, மாறாக மிகவும் பொதுவானவை என்பதை உலகிற்கு நிரூபித்தது இந்தத் தொலைநோக்கியே. அதைத் தொடர்ந்து புறக்கோளாய்வு விண்கலம் (TESS) புதிய கோள்களைத் தொடர்ந்து தேடி வருகிறது. கிட்டத்தட்ட முழு வானத்தையும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆய்வு செய்து, பூமிக்கு அருகிலுள்ள ஆயிரக்கணக்கான விண்மீன்களை ஆராய்ந்து புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்து வருகிறது. இப்போது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளது. இது சில புறக்கோள்களின் வளிமண்டலத்தில் நீராவி, கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து வருகிறது. எதிர்காலத்தில் அந்த வளிமண்டலங்களில் உயிரினங்களின் செயல்பாட்டைக் குறிக்கக்கூடிய வேதியியல் தடயங்களைக் கண்டறியவும் இந்தத் தொலைநோக்கி உதவலாம். விண்வெளித் தொலைநோக்கிகள் மட்டுமல்லாமல், பூமியிலும் மிகப் பெரிய தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன. மிகப்பெரும் தொலைநோக்கி, கெக் ஆய்வு மையம் போன்றவை பூமியில் இருந்து கொண்டே புறக்கோள்களின் நிறை, சுற்றுப்பாதை மற்றும் பிற இயற்பியல் பண்புகளைத் துல்லியமாக அளக்கின்றன. விரைவில் செயல்படவுள்ள அளப்பரிய தொலைநோக்கி தனது 39 மீட்டர் விட்டமுள்ள பிரதானக் கண்ணாடியின் உதவியுடன், பூமியை ஒத்த சிறிய புறக்கோள்களையே நேரடியாகப் படம்பிடிக்கும் திறனைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதன் அங்கு செல்ல முடியுமா? இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்கள் அனைத்தும் நம்மிடமிருந்து பல ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. ஒளி ஒரு வினாடிக்கு சுமார் மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தாலும், அருகிலுள்ள சில புறக்கோள்களிலிருந்து வரும் ஒளியே பூமியை அடைய நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இன்றைய விண்கலங்களின் வேகத்தில் அங்கு செல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். எனவே மனிதன் தற்போது அவற்றை நேரில் சென்றடைவதைவிட, சக்திவாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியால் தொலைவிலிருந்தே அவற்றைப் பற்றி அறிந்து வருகிறது. ஒரு காலத்தில் பூமி மட்டுமே உயிர்கள் வாழும் உலகம் என்று மனிதன் நம்பினான். இன்று அந்த எண்ணம் மாறியுள்ளது. பேரண்டம் எண்ணிலடங்கா விண்மீன்களாலும், அவற்றைச் சுற்றும் கோள்களாலும் நிரம்பியுள்ளது என்பதை அறிவியல் வெளிப்படுத்தியுள்ளது. அந்த உலகங்களில் எங்காவது உயிர்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த விடையைத் தேடும் பயணமே மனித அறிவியலின் மிகப் பெரிய சாகசங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. எதிர்வரும் காலத்தில் ஒருநாள், தொலைவில் உள்ள ஒரு சிறிய நீல நிறக்கோளின் வளிமண்டலத்தில், உயிரின் முதல் உறுதியான சான்றை மனிதன் கண்டுபிடிக்கலாம். அந்நாள், வானியல் வரலாற்றில் மட்டுமல்ல, மனித வரலாற்றிலேயே மறக்க முடியாத நாளாக இருக்கும். எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • முகமெனும் திரையில்

    வானூர்தியின் சத்தம் கேட்கும் போது பேருந்தில் சிரிக்கும் குழந்தையை காணும் போது நட்டு வைத்தச்செடியில் பசுந்துளிரைப் பார்க்கும்போது நாளை மலர காத்திருக்கும் பூ மொட்டை கண்டபோது கோழிக்குஞ்சுகள் தாயுடன் குடுகுடுவென ஓடும்போது துள்ளிவரும் ஆட்டுக்குட்டியை காணும் போது தோள் மீது கை போட்டு நடக்கும் சிறுவர்களை நோக்கும்போது தந்தையின் கைபிடித்து குதித்து நடக்கும் சிறுவனை காணும் போது புழுக்கத்தை விரட்டும் காற்றின் உரசலின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் திரும்ப வரும் பொழுது அணிந்திருக்கும் புத்தாடை அழகு எனும் போது கடந்து செல்லும் வண்ணத்துப்பூச்சியை கண்டிட்ட போதும் இன்றும் உணவு கேட்டு காகம் கதவில் அமர்ந்த போதும் இயற்கையாய் இதழ்கள் விரிகின்றன என்முகமெனும் திரையில்..

  • அறிவோம் ஆளுமை - 16

    பெண்களின் ஒளி விளக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நகுலன் : ஜோ அத்தை... நேற்று அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க. ஜோ : என்ன சொன்னாங்க? நகுலன் : என் திருமணத்தின் போது, "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்" மூலம்தான் எனக்குப் பண உதவி கிடைச்சது என்றாங்க. ரதி: ஆனால்,என்னோட பக்கத்து வீட்டில் இருக்கிற 11ஆம் வகுப்பு படிக்கிற சிந்து அக்கா அவருக்கு அந்தத் திட்டத்தின் வழியாக மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகக் கூறினார்களே. படிப்பதற்குப் பணமும் கொடுத்து திருமணத்திற்கும் பணம் கொடுக்கிறார்களா? ஜோ : பரவாயில்லையே இவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறீர்களே மகிழ்ச்சி. இந்த கேள்வி கூட மிகச் சரியான கேள்விதான். இத்திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு திருமணத்தின் போது நிதியுதவியும் இத்துடன் தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்க்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் ஆக மாற்றி அமைக்கப்பட்டது. நகுலன் : அவர் என்ன செய்தார் அத்தை? ஜோ : அவர் வாழ்க்கையே ஒரு போராட்டம். பிறருக்காக மட்டுமல்ல... முதலில் தன்னுடைய வாழ்க்கையை மீட்டெடுத்தவர். ரதி : எப்படி? ஜோ : 1883-ல் திருவாரூர் பகுதியில் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். குடும்பம் மிகவும் ஏழ்மை. அந்தக் காலத்தில் பெண்களின் வாழ்க்கை இன்று போல இல்லை. ஐந்து வயது குழந்தையாக இருந்தபோதே, வறுமையால் அவருடைய அம்மாவே அவரை இன்னொரு தேவதாசி பெண்ணிடம் பத்து ரூபாய்க்கும் ஒரு பழைய சேலைக்கும் விற்றுவிட்டார். நகுலன் : என்ன? ஐந்து வயசு குழந்தையையா? ஜோ : ஆமாம். அது அவர் விருப்பம் இல்லை. அக்காலத்தில் பல ஏழைப் பெண்களுக்கு நடந்த கொடுமைகளில் இதுவும் ஒன்று. நகுலன் : தேவதாசி முறை என்பது குழந்தைகளை ஒருவருக்கு விற்றுவிடுவது அல்ல கோயிலுக்குக் கொடுப்பது தானே? ரதி : அந்தக் காலத்தில் சில சிறுமிகளை கோவிலுக்கு "கடவுளின் சேவகி" என்று அர்ப்பணித்து விடுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சுதந்திரமாக வாழ முடியாது. தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளவும் முடியாது. சரிதானே அத்தை? ஜோ : சரிதான். அது மட்டும் இல்லாமல் சமூகத்தில் அதிகாரம் கொண்டவர்கள் அவர்களைச் சுரண்டினர். அந்த முறை பெண்களுக்கு மிகப் பெரிய அநீதி. உனக்கு இது எப்படித் தெரியும்? ரதி : அத்தை மறந்து விட்டீர்களா நீங்கள் தானே முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றிக் கூறும் போது இது பற்றிக் கூறினீர்கள். ஜோ : மகிழ்ச்சி. பரவாயில்லையே. நான் கூறியதை நினைவில் வைத்திருக்கிறீர்களே! நகுலன் : அவர் எப்படி அதிலிருந்து வெளியே வந்தார்? ஜோ : அவரை வளர்த்த ஆச்சிக்கண்ணு என்ற தேவதாசி, அவருக்கு இசை, நடனம், சமஸ்கிருதம் எல்லாம் கற்றுக் கொடுத்தார். பத்து வயதிலேயே நல்ல கலைஞராக வளர்ந்தார். ஆனால் பதினேழு வயதில் அறுபத்தைந்து வயது மனிதருடன் திருமணம் செய்து வைக்க முயன்றபோது அவர் உறுதியாக மறுத்துவிட்டார். ரதி : என்னது இவருக்குப் பத்து வயது. 60 வயது இருக்கும் கிழவனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்களா? பரவாயில்லை எப்படியோ மறுத்துவிட்டார். ஜோ : அந்தக் காலத்தில் மறுப்பது பெரிய துணிச்சல். பிறகு அவருக்கு இசை கற்றுக் கொடுத்த சுயம்பு பிள்ளையைத் தன் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார். மதச் சடங்குகள் இல்லாமல், மிக எளிமையாக நடந்த அந்தத் திருமணம் பின்னாளில் "சுயமரியாதைத் திருமணங்களுக்கு" ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டது. நகுலன் : அதாவது, அவர் தன் வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஆரம்பித்தார். ஜோ : சரியாகச் சொன்னாய். பிறகு, தான் மட்டும் தப்பித்தால் போதாது. மற்ற பெண்களும் விடுதலை பெற வேண்டும். என்று முடிவு செய்தார். ரதி: அதன் பிறகு தேவதாசி முறைக்கு எதிராகப் போராடினாரா? ஜோ : ஆமாம். 1917–1918 காலத்திலிருந்தே அவர் தேவதாசி ஒழிப்புப் பணியைத் தொடங்கினார். தேவதாசி பெண்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, இந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வாருங்கள். என்று அவர்களிடம் பேசினார். நகுலன் : அவர்கள் உடனே சம்மதித்தார்களா? ஜோ : எல்லோரும் இல்லை. சிலர் பயந்தார்கள். சிலர் இதுதான் வாழ்வாதாரம் என்று நினைத்தார்கள். சிலர் எதிர்த்தார்கள். ஆனாலும் அவர் விடவில்லை. ரதி : பிறகு? ஜோ : வெளியே வர விரும்பிய பெண்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, புதிய வாழ்க்கை தொடங்க உதவினார். நகுலன் : அதெல்லாம் அவர் ஒருத்தரே செய்தாரா? ஜோ : ஆரம்பத்தில் பெரும்பாலும் தனியாகத்தான் செய்தார். பிறகு அந்தப் பெண்களையே உறுப்பினர்களாகக் கொண்டு நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பையும் உருவாக்கினார். பின்னர் அது தேவதாசி ஒழிப்புப் போராட்டத்தின் முக்கிய அமைப்பாக வளர்ந்தது. ரதி : சாவித்திரிப்பாய் பூலேவை எப்படி எதிர்த்தார்களோ! அப்படி இவருக்கும் எதிர்ப்பு வந்திருக்கும் தானே அத்தை? ஜோ : ஆமாம். நிலக்கிழார்கள், சில பூசாரிகள், அதிகாரம் படைத்தவர்கள், தேவதாசி முறையை ஆதரித்தவர்கள் பலரும் எதிர்த்தார்கள். மிரட்டினார்கள். சமூகமாக ஒதுக்கினார்கள். ஆனாலும் அவர் அஞ்சவில்லை. நகுலன் : அஞ்சாமல் இருந்ததனால்தான், சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார். அவர் ஏதாவது கட்சியில் இருந்தாரா? ஜோ : ஆமாம். இந்திய விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். காந்தியின் கதர் இயக்கத்தை முழு மனதுடன் ஆதரித்தார். தெருத்தெருவாகச் சுமந்து சென்று விற்றார். அவரும் கதர் ஆடையே அணிந்தார். தேவதாசி பெண்களையும் கதர் அணியச் செய்தார். நகுலன் : அவர் வீட்டிலேயே ஒரு அறிவிப்பு பலகை வைத்திருந்தாராமே? ஜோ : கதர் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே வரலாம் என்று எழுதி வைத்திருந்தார். ஒருமுறை காவல்துறை அதிகாரி வந்தபோது, அவர் கதர் அணியாததால் முன்வாசல் வழியாக வரத் தயங்கியதாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அது சரி இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்? நகுலன் : அத்தை என் அம்மாவிடம் கேட்டேன் அவர் இவரைப் பற்றி நிறைய கூறினார். நானும் ரதியும் இதைப்பற்றி நிறைய உரையாடி இருக்கிறோம். ஜோ : பரவாயில்லையே இதைப் பற்றி எல்லாம் கூட உன் அம்மா கூறி இருக்கிறாரே. மகிழ்ச்சி. இன்னும் ஒன்று. காகிநாடா காங்கிரஸ் மாநாட்டில் தேசியக் கொடியைப் பிடித்து வரக் கூடாது என்று ஆங்கிலேய அரசு தடை விதித்தது. அப்போது அவர் பல தேசியக் கொடிகளைத் தைத்து ஒரு சேலையாக அணிந்துகொண்டு ஊர்வலத்தில் நடந்தார்! ரதி : வாவ்! அப்படியும் யோசிக்கலாமா? என்ன ஒரு புத்திசாலித்தனம்! ஜோ : அதனால்தான் காந்தியும் அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். பின்னர் அண்ணாதுரை, காந்தி சமூகப் பணிக்காகத் தேடிய பெண் மூவலூர் அம்மையார்தான் என்று புகழ்ந்தார். ரதி : பெரியாருடனும் சேர்ந்து பணியாற்றினாரா? ஜோ : ஆமாம். திரு.வி.க., பெரியார், நீலாம்பிகை, முத்துலட்சுமி ரெட்டி போன்றோருடன் இணைந்து தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டார். சுயமரியாதை இயக்கத்தின் அறிக்கையை உருவாக்குவதிலும் பங்கு பெற்றார். கிராமங்களில்கூட தேவதாசி முறை ஒழிய வேண்டும் என்று தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். சட்டம் மட்டும் போதாது, பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ரதி : அவர் ஏதோ ஒரு நாவல் எழுதி இருக்கிறார் தானே அத்தை? ஜோ : ஆமாம். தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதினார். அது தேவதாசி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்ட முக்கியமான நாவல். கட்டுரைகளும் எழுதினார். பெண்கள் விடுதலை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, தமிழ்ப்பற்று ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து எழுதினார். நகுலன் : அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் இருந்தாராமே? ஜோ : ஆமாம். 1938-ல் 577 மைல் நடந்தார். வழியிலேயே 87 பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கியமான பெண்களில் ஒருவராக இருந்தார். ரதி : அவர் நிறைய நல்ல வேலை செய்திருக்கிறார். அப்படியிருக்க அவரைப் பற்றி ஏன் அதிகம் பேசவில்லை? ஜோ : அதைத்தான் பல ஆய்வாளர்களும் கேட்கிறார்கள். சாதி, பாலினம், சமூகப் பின்னணி போன்ற காரணங்களால் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று பலர் கருதுகிறார்கள். நகுலன் : ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அது ஒரு சாதாரண பெயர் இல்லை.... சரித்திரத்தை மாற்றிய பெயர் என்று அவர் வாழ்க்கைக் கதையை என்னுடைய நண்பர்களிடம் கூறுவேன். ரதி : அத்தை எத்தனையோ பேரைப் பற்றிக் கூறி இருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் சமூகத்திற்காக எவ்வளவு செய்திருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையைக் கேட்கும்போது எனக்கும் நான் வளர்ந்த பிறகு சமூகத்திற்காக என் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஜோ : அதுதான் வரலாற்றின் உண்மையான பயன். ஒரு பெயரை மனப்பாடம் செய்வது அல்ல. அந்தப் பெயருக்குப் பின்னால் இருந்த மனிதரின் தைரியத்தையும் மனிதநேயத்தையும் அவர்களின் சமூகப் பங்களிப்பையும் நினைவில் வைத்துக் கொள்வதுதான். அதோடு நாமும் சமூகத்திற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். நகுலன் : கண்டிப்பாக செய்வோம் அத்தை என்ன ரதி சரியா? ரதி : சரிதான்! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும்

    தலகோதும் இளங்காத்து சேதி கொண்டுவரும் மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காதே கலங்காதே நீயும் நெஞ்சுக்குள்ளே இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல … வணக்கம் குழந்தைகளே! என்ன இது. படிச்ச புத்தகம் பத்தி சொல்லாம சினிமா பாட்டு படிக்கிறேன்னு நினைக்கறீங்களா? இல்ல குழந்தைகளே! இந்த பாட்டு வரியிலதான் நான் படித்த புத்தகத்தின் பெயரே இருக்குது. அது என்ன பெயர் தெரியுமா? விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி? அடடே! நீங்க நினைக்கிறது தெரியுது. இரண்டு புத்தகம் இல்ல… ஒரே புத்தகம் தான். ஆனா, இரண்டு பேரு. ஏன் அப்படீன்னு தெரிஞ்சுக்கனுமா? இந்த புத்தகம் பள்ளி பாடங்களைப் படிப்பது எப்படீங்கற விசயத்தை அறிவியல்பூர்வமான தகவல்களோடு சேர்த்துத் தந்திருக்காங்க. அதேசமயம், முழுவதும் தகவலாகவே இல்லாம, விரும்பி படிக்கும்படியாக ஒரு கதையாக கொடுத்திருக்காங்க. அப்ப, இதுல கதையும் இருக்கு கூடுதல் அறிவியல் உண்மைகளும் இருக்கு. அதுனாலதான் இரண்டு பெயர்கள். புரிஞ்சுதா! வாங்க, இனி புத்தகத்துக்குள்ளே போவோம். “படிப்பில் சுமாரான மாணவன் - என்பதே என்னைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கூற்று” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் நூலாசிரியர் கூறியுள்ள கற்பித்தல் உத்திகள் அடங்கியுள்ள நூல் இது. நூலாசிரியரை போலத்தான் இந்த புத்தகத்தில் வரும் கதிர் என்கிற சித்தப்பாவும். இந்த நூலும் முழுவதும் கற்றலில் சிறக்க நிறைய அறிவியல்பூர்வமான வழிகளை தளிர் என்கிற குழந்தைக்கு கற்றுத் தருகிறார். ஆனாலும் தளிர் பள்ளி இடைத்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்று மனச் சோர்விற்கு உள்ளாகிறாள். பிறகென்ன நடந்தது என்பதை அவசியம் நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களில் ஒரு புதிய மாற்றத்தை உணர்வீர்கள், குழந்தைகளே! இன்னமும் பழைய பாணியிலேயே கல்வியை அணுகும் அப்பா; தனது விருப்பங்களை சிதைத்து விடாது படிப்பில் முன்னேறத் துடிக்கும் மகள்; இவர்கள் இருவருக்கும் இடையில் தன் சுயத்தை கரைத்துக் கொண்ட அம்மா என பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகள் உள்ள குடும்பத்தை அப்படியே இந்நூல் பிரதிபலிக்கிறது. இவர்களுக்கிடையே தான் கற்ற அறிவியல் கோட்பாடுகளின்படி தீர்வு காண முனையும் சித்தப்பா கதாபாத்திரத்தின் வழியேதான் தளிருக்கு மட்டுமின்றி இந்நூலை வாசிக்க இருக்கிற அனைத்து குழந்தைகளுக்கும் புதிய வெளிச்சம் கிடைக்கிறது. சித்தப்பாவோடு நெருங்கிய தோழனைப்போல பழகத் தொடங்கும் தளிர் அவரின் வழியே கற்றலுக்கான நிறைய உத்திகளை கற்றுக்கொள்கிறாள். ஆனால், இவையனைத்தும் படிக்கும் மேசையில் அல்ல. ஐஸ்கிரீம் வாங்கும் போதும், சமையலறையில் காளிபிளவர் சமைக்கும்போதும் வேப்பமரத்தடி நிழலிலும். இப்படி கற்றுக்கொள்ளும்போதுதான் அவை தளிருக்கு படிப்பின் சுவை புரிகிறது. தனது மூளையை selfie எடுப்பது, படிப்பதற்கான தக்காளி முறை, பாடத்தை குறிப்பெடுப்பதில் உள்ள உத்தி, குறிப்புகளைக் கொண்டு தேர்விற்கு தயாராவதற்கான வழிமுறைகள் என பல விசயங்களை கற்றுக் கொள்ளும் தளிர் அதை இன்றைய தேர்வுமுறைகளின் தன்மை அறிந்து பயன்படுத்தவும் கற்றுக் கொள்கிறாள். இப்படி கற்கத் தொடங்கும்போது அவளது பாடங்களில் ஆழமான புரிதல் அவளுக்கு கிடைப்பதை வாசிப்பவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். ஒருமுறை தளிர் தனது சித்தப்பாவுடன் அவரது ஓவிய நண்பரின் வீட்டிற்கு செல்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அவர்களிடையே அங்கு நடக்கும் உரையாடலை தளிர் வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் கேட்கவும் பார்க்கவுமான வாய்ப்புகள் அமையுமானால் அது அதியற்புதமான தருணமாக அமையும். தோல்வி என்பது நிரந்தரமானதல்ல. தோல்வியைக் குறித்து நாம் யோசிக்கத் தொடங்கும்போதே வெற்றியின் வெளிச்சம் நம்மை நெருங்கத் தொடங்கிவிடும். தோல்வியை நாம் எப்படி அணுகப் போகிறோம் என்பதில்தான் தீர்வு அமைகிறது என்பதை அவர்களின் உரையாடலில் மகிழ்வாக நாம் கற்றுக் கொள்ள முடியும். அவர்களது உரையாடலில் வரும் ‘failcon' போன்ற கொண்டாட்டங்கள் குழந்தைகளுக்கு தோல்வியின் மீதான அச்சத்தை இல்லாமல் செய்துவிடக்கூடியது. யானையையும் பூனையையும் கொண்டு நமது மூளையின் செயல்பாட்டு இரகசியங்களை புரிந்துகொள்ளச் செய்வதுதான் இந்த நூலின் முதன்மையான பகுதி. தளிரின் வழியாக எழுப்பப்படும் நினைவுத்திறன் பற்றிய வினாக்கள் எல்லோரிடமும் எப்போதும் இருக்கக்கூடியவைதான். அதற்கான அறிவியல்பூர்வமான விளக்கங்களை இந்நூலின் வழியாக எளிதாக அறிந்து கொள்ள முடியும். புனைவாகவும் அல்புனைவாகவும் தலைப்பிட்டுள்ளதைப் போலவே இந்நூலை நாம் இரண்டு வழிகளிலும் அணுகலாம். இரண்டு வகைகளிலுமே நமது மனதிற்கு நெருக்கமாக இந்நூல் அமைந்திருக்கிறது. தன்னை சுமாரான மாணவன் என்கிற வரிகளுக்கு ஏற்புடையவனல்ல என கூறியபடி அறிமுகப்படுத்திக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் பயணிதரன் அவர்கள் இந்திய வெளியுறவுத்துறையின் உயர்பதவிகளில் பணியாற்றியவர். இந்தியத் தூதராக அஜர்பைஜான் போன்ற நாடுகளில் மதிப்பு பெற்றவர் என்பது இந்நூலின் உள்ளடக்கத்திற்கு சான்று அளிப்பதாக அமைந்திருக்கிறது. இப்படியொரு நூலை உருவாக்கவும் மாணவர்களின் உளவியலை நன்கு உணர்ந்தவர்களாகவும் கல்வியின் சிக்கல்களைக் களைய கவனம் செலுத்துபவர்களாகவும் தங்களது கல்விப் பணிகளை சீரமைத்து செயல்பட்டுவரும் SRV கல்வி நிறுவனத்தின் மதிப்பு மிக்க படைப்பு இது. இப்படியொரு படைப்பு ஒவ்வொருவர் கைகளிலும் தவழட்டும். வாங்கி படியுங்கள் குழந்தைகளே. க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.

  • சிலந்தி சொன்ன இரகசியம்

    "கண்ணா வாட்டர் பாட்டில் எங்க டா?!" என ஆச்சர்யமாக கேட்டார் அம்மா. "அது வந்து.. காணோம்" "காணோமா? நல்லா தேடுனியா?" "ம்ம்... தேடுனேன். இல்ல" "பெஞ்ச்ல பார்த்தயா?" "பெஞ்ச்ல, அப்றம் வேன்ல ஏறி பேக்ல பார்த்தேன். காணோம்" திருதிருவென விழித்தான் சுரேன். சுரேன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் ப்ரிகேஜியில் இருந்து பள்ளிக்கு போகிறான். ஆனால் இதுவரை எதையுமே தொலைத்தது இல்லை. பத்திரமாக வைத்திருப்பான். கோடை விடுமுறை முடிந்து இன்று தான் பள்ளிக்குச் சென்றான். முதல் நாளே பாட்டில் தொலைந்து விட்டது. அம்மா உடனே வகுப்பாசிரியருக்கு போன் செய்தார். "மேம், சுரேன் வாட்டர்பாட்டிலைக் காணோம்" என சொன்னார். சுரேனின் வகுப்பு ஆசிரியை மிகவும் பொறுமையாக பதிலளிப்பார். குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார். "சரி சுரேன் அம்மா. நான் தேடுகிறேன்" என்றார் ஆசிரியர். மறுநாள், பள்ளிக்கு வேறு ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுத்தார் அம்மா. "சுரேன், பள்ளியில் சென்று ஆசிரியரிடம் பாட்டில் கேக்கணும் சரியா?" என சொல்லி அனுப்பினார். ஆசிரியர் வகுப்பறை முழுவதும் தேடினார். வகுப்பு புத்தக அலமாரியில் தேடினார். மாணவர்களிடமும் கேட்டார். ஆனால் யாருக்குமே சுரேனின் வாட்டர் பாட்டில் எங்கு சென்றது எனத் தெரியவில்லை. மாலை பள்ளி முடிந்தது. சுரேன் அம்மா கொடுத்து விட்ட பாட்டிலை எடுத்தான். அதைப் பத்திரமாக உணவுப் பையில் வைத்தான். வேனில் ஏறி வீடு வந்தான். உணவுப் பையைத் திறந்த அம்மா ஆச்சர்யப்பட்டார். "சுரேன், இன்னிக்கு கொடுத்த பாட்டில் எங்க?!" "அம்மா நான் பாட்டில பேக்ல வச்சேன் மா. ஆனா இப்ப காணோம் மா" என்றான். "நிஜமா! பேக்கில் வச்சயா?" எனக் கேட்டார் அம்மா. “ஆமாம்.. ஆமாம்” என மாலை பள்ளி விட்டதில் இருந்து சொன்னதையே சொன்னான். வகுப்பாசிரியர் பாட்டில் கிடைக்கவில்லை என்று சொல்லி விட்டார். தண்ணீர் பாட்டில் எங்கே போயிருக்கும்?! ஒரே ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் இன்னொரு பாட்டில் கொடுத்து விட்டார் அம்மா. அந்தப் பாட்டிலும் காணாமல் போய் விட்டது. அம்மா கோபமாக சொன்னார், "நாளைக்கு உனக்கு பாட்டில் தர மாட்டேன். நீ உன் பாட்டில் எல்லாம் தேடி எடுத்துட்டு வரணும்" சுரேன் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். 'பாட்டில்கள் எல்லாம் எங்க போச்சு?' சுரேனின் நண்பர்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது. வகுப்பில் எல்லாரும் சுரேனின் பாட்டில்களைத் தேடினார்கள். ஒவ்வொரு பெஞ்சின் அடியிலும் தேடினார்கள். புத்தக அலமாரிகளில் தேடினார்கள். பக்கத்து வகுப்பறையில் தேடினார்கள். எங்கேயும் இல்லை. பார்த்தவர்களிடம் எல்லாம் கேட்டார்கள். "சுரேனோட பாட்டில பாத்தீங்களா?" யாருமே பார்க்கவில்லை. உணவு இடைவேளையில், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேன். "எட்டுக்கால் பூச்சி... என் பாட்டில நீ பாத்தியா? காணோம். ஒண்ணு இல்ல நிறைய. அம்மா திட்டுறாங்க" என சோகமாக சொன்னான் சுரேன். "ஓ உன் பாட்டிலா எனக்குத் தெரியும்" என சத்தம் கேட்டது. சுரேன் சுற்றிலும் பார்த்தான். அவன் நண்பர்கள் எல்லாம் வகுப்பிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்கள். வகுப்பில் சுரேன் மட்டும் தான் அமர்ந்திருந்தான். "யாரு யாரு பேசுறீங்க" குரல் நடுக்கத்தோடு கேட்டான் சுரேன். எழுந்து வகுப்பில் இருந்து வெளியே ஓடத் தயாராக இருந்தான். "நாந்தான் சிலந்தி. நீ என்கிட்ட தான கேட்ட. அதான் பதில் சொன்னேன்" மீண்டும் குரல் மட்டுமே கேட்டது. "சி..சி.. சிலந்தியா?" யாராவது விளையாடுகிறார்களா என சுற்றிலும் பார்த்தான். இல்லை. "ஆமா, இங்க மேல பாரு. சிலந்தி தான்" என்றது. சுரேனுக்கு பயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. "என் பாட்டில் எங்க இருக்கு?" எனக் கேட்டான் மெதுவாக. "உன் இருக்கைக்குப் பின்னால் ஒரு செடி இருக்கு இல்ல?" எனக் கேட்டது சிலந்தி. "ஆமா, செம்பருத்தி" "செம்பருத்தி.. அதுகிட்ட போய் கேளு" "என்ன செடிகிட்டயா? செடி பேசுமா?" ஐயத்தோடு கேட்டான் சுரேன். "சிலந்தி பேசும் போது, செம்பருத்தி பேசாதா?" எனக் கேட்டது சிலந்தி. சுரேன் மெதுவாக செடியின் பக்கம் போனான். அது அவனது வகுப்பறைக்கு வெளியே வளர்ந்தது. சில இலைகளும் ஒரு பூவும் மட்டும் வகுப்பறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தது. "செம்பருத்தி.. நீ என் வாட்டர் பாட்டில பார்த்தியா?" என மெதுவாகக் கேட்டான் சுரேன். "உன் ஒரு பாட்டில் மட்டும் இல்ல.. மூணு பாட்டிலும் என்கிட்ட தான் இருக்கு" என சொன்னது செம்பருத்தி. செம்பருத்திச் செடி பேசும் போது, அதற்கேற்ப அதன் பூ ஆடியது, யாரோ தலையை ஆட்டி ஆட்டி பேசுவது போல வேடிக்கையாக இருந்தது சுரேனுக்கு. "என்ன.. உன்கிட்ட இருக்கா?" மீண்டும் அதிசயமாகக் கேட்டான் சுரேன். "ஆமா. என்கிட்ட தான் இருக்கு.." என்றது செம்பருத்தி. "உன்கிட்ட எப்படி வந்தது?" "ஆமாம். நான் தான் எடுத்தேன்" "ஏன் எடுத்த?" "எனக்கு ஒரு நாள் தண்ணி கிடைக்குது. ஒரு நாள் தண்ணி கிடைக்கல. அதான் எடுத்தேன்" "ஓ அப்படியா! ஆனா வகுப்பில அத்தனை பேர் இருக்காங்க. நீ ஏன் தினமும் என் பாட்டிலயே எடுத்த? தினம் புதுசு குடுத்து விட்டாங்க அம்மா. இன்னிக்கு திட்டிட்டாங்க" சொல்லும் போதே அழுகை வந்து விட்டது சுரேனுக்கு. "ஐயோ அழாத அழாத.." என சமாதானம் சொன்னது செம்பருத்தி. "ஏன் என் பாட்டில மட்டும் எடுத்த?" மீண்டும் கேட்டான் சுரேன். "ஏன்னா, வகுப்பில் எல்லாரும் அவங்க தண்ணிய குடிக்கிறாங்க. எல்லார் பாட்டிலும் காலி ஆகிடும். நீ தான் தண்ணியே குடிக்கறது இல்ல. உன் பாட்டில் முழுசா இருக்கும். அதான் அத எடுத்தேன்" என்றது செம்பருத்தி. "நான் தண்ணி குடிப்பேன்" என்றான் சுரேன். "ஆமா சாப்பிடும் போது ஒரு மடக்கு குடிப்ப. அப்பறம் உன் பாட்டில்ல தண்ணி அப்படியே இருக்கும்" என்றது செம்பருத்தி. "சரி, என் பாட்டில்கள திரும்பக் கொடு. நான் உனக்கு தினமும் தண்ணீர் தெளிக்கிறேன்" என்றான் சுரேன். "வெயில் ரொம்ப ரொம்ப அதிகம். நீயும் அடிக்கடி நிறைய தண்ணி குடிக்கணும்" என சொன்னது செடி. "இனிமே நான் அம்மா சொன்ன மாதிரி, நீ சொல்ற மாதிரி நிறைய தண்ணி குடிப்பேன்" என்றான் சுரேன். "அது தான் நல்ல பையன்!" என்று மகிழ்ச்சியாகச் சொன்னது செம்பருத்திச் செடி. "நீ தண்ணீர் குடிச்சா உன் உடம்பு ஆரோக்கியமா இருக்கும். எனக்குத் தண்ணீர் ஊத்துனா நானும் ஆரோக்கியமா இருப்பேன்." தன் வேர்களுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த வாட்டர் பாட்டில்களை எடுத்து அவனிடம் கொடுத்தது செம்பருத்தி. சுரேன் மகிழ்ச்சியாக குதித்தான். பாட்டில்களை பத்திரமாக பைக்குள் வைத்தான். "அம்மா பாட்டில் கிடைச்சிருச்சு" என மகிழ்ச்சியோடு கத்திக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினான் சுரேன். எல்லா பாட்டில்களையும் அம்மாவிடம் கொடுத்தான். தினமும் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு சென்றான். ஒன்று சுரேனுக்கு. மற்றொன்று செம்பருத்திக்கு! அதற்குப் பிறகு, சுரேனின் வாட்டர் பாட்டில் காணாமல் போகவே இல்லை. ராஜலட்சுமி நாராயணசாமி ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார். பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார். இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. 'கனலின் பயணம்' நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது.

  • வளரிளம் புதிர்ப்பருவம்-13 குழந்தைகளின் குரலைக் கேட்போம்.

    காட்சி: 1 ஓர் ஊரில் திருவிழா. ஆடல்பாடல் நிகழ்ச்சி. பக்திப் பாடலுடன் நிகழ்வு தொடங்கும். பிறகு திரைப்படப் பாடல்களுக்கு நடனம். நேரம் செல்லச்செல்ல ஆடல் மகளிரின் ஆடைகள் குறையும். முக்கல் முனகல் பாடல்களுக்கு நடனம். ஆபாச நடனம் என்று பொதுவாகச் சொல்லப்படும் நடனங்களைக் குழந்தைகள், பெரியவர்கள் என ஊரே ரசிக்கும். பலரும் செல்பேசியில் படம் பிடிப்பார்கள். காட்சி: 2 புகழ்பெற்ற கதாநாயகன் நடித்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி. பேரல் பேரலாக ரத்தம் தெரிக்கும் சண்டைக் காட்சிகள். கதாநாயகன் கத்தியை வீசுகிறார். அடியாள் ஒருவரின் தலை துண்டாகி உருள்கிறது. கழுத்திலிருந்து ரத்தம் பீய்ச்சுகிறது. குழந்தைகள் கைதட்டி ரசிக்கிறார்கள். பெரியவர்கள் முகம் மலர்கிறார்கள். பொது இடத்தில் சிகரெட் பிடிப்பவர்கள், குடித்துவிட்டு ரகளை செய்பவர்கள், வீட்டிலும் வெளியிலும் பெண்களை அவமதிக்கும் பல்வேறு சூழல்களைப் பார்த்துப் பார்த்து வளர்கிறார்கள் குழந்தைகள். பெண்ணை என்ன வேண்டுனாலும் செய்யலாம் என்பதே ஆண்மை என்று ஆண் குழந்தைகள் நம்புகிறார்கள். பெண்ணைச் சக உயிராக மதிக்காமல் தனது ஆளுகைப் பொருளாகப் பார்ப்பது பழக்கமாகிறது. ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் பெண்ணும் விரும்பியே ஆகவேண்டும். இல்லையென்றால் மிரட்டுவது, பலாத்காரம் செய்வது, முகத்தில் ஆசிட் ஊற்றுவது, போன்ற பலாத்காரச் செயல்கள் இப்போது பெண்ணின் உயிரை வாங்குவதாகவும் மாறியிருக்கிறது. பொது இடங்களிலும் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஒரு செயலைச் செய்யும் போது சரியா தவறா என்று பகுத்து ஆராயும் திறனைக் குழந்தைகளிடம் நாம் உருவாக்கவே இல்லை. பெரும்பாலும் விதி மீறலையே திறனாக எண்ணுகிறார்கள். அதுவே பெருமிதமாகவும் மாறியுள்ளது. இதே உணர்வோடுதான் ஜேமியும் வளர்ந்தான். சமூக ஊடகத்தில் தன்னைக் கேலி செய்தது ஒரு பெண் என்பதே அவன் கோபத்தைத் தூண்டியது. நண்பர்கள் தூபம் போட்டனர். கத்தியை வைத்து மிரட்ட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். நேரில் சக மாணவி பேசிய முறை ஜேமிக்குள் வளர்த்திருக்கும் ஆதிக்க உணர்வைத் தூண்டியது. கொலை செய்தான். தவறு செய்தவன் தண்டனை அடைகிறான். அவனது குடும்பமே அதிகப் பாதிப்புகளை அடைகிறது. சமூகம் அவர்களையும் குற்றவாளிகளாகவே நடத்துகிறது. கேலி செய்கிறது. வெறுப்பை உமிழ்கிறது. அவமானப்படுத்துகிறது. அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு, பிள்ளையைச் சரியாக வளர்க்கவில்லையே என்ற குற்ற உணர்வில் பெற்றோர் தவிக்கின்றனர். அவர்களே அவர்களுக்கு ஆறுதல். பிள்ளையைச் சரியாக வளர்ப்பது எப்படி? குழந்தை வளர்ப்பு குறித்த புத்தகங்களுக்கும் காணொலிகளுக்கும் இப்போது மவுசு அதிகம். Parenting என்று இன்றைய இளம் தலைமுறையினர் குழந்தைகளைக் கவனிக்கிறோம் என்று செய்யும் செயல்களில் பலவும் முந்தைய /தலைமுறையை அதிர்ச்சியடைய வைக்கின்றன. பொதுவாக ஒழுக்கம் என்று பேசப்படுவது குழந்தைகளின் முடி, உடை மீதான குறைகளாகவே நின்றுவிடுகிறது. பேசும் முறை, நடத்தை போன்றவை பற்றிப் பேசுவோர் மிகவும் குறைவு. நீதியைப் பின்பற்றாத சமூகம், குழந்தைகளுக்கு நீதி நூல்கள், நீதிக்கதைகளைச் சொல்லித் தராததால் தான் இவ்வளவு சிக்கல்களும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறது. தவறு பெரிதாகி வெளியே தெரியும் வரை எல்லோருமே நான் சரி, மற்றவர்கள் தான் தவறு என்று பேசுகிறோம். இந்தத் தலைமுறை கெட்டுவிட்டது என்று குறைகளைப் பட்டியலிடுவதே முந்தைய தலைமுறையின் கடமையாக மாறிவிட்டது. இதுவே காலம்காலமாகத் தொடர்கிறது. குழந்தைகளுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். அவர்களின் இணையப் பயன்பாடு குறித்து விமர்சனம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்துவது பற்றிக் கலந்துரையாட வேண்டும். எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் குழந்தைகளும் நிறைய கலந்துரையாட வேண்டும். காலத்திற்கு ஏற்ற செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அவற்றைப் பழகும் இடங்களாகவே பள்ளியும் வீடும் சமுகமும் திகழவேண்டும். அப்போதுதான் நாம் வெறுமனே பேசிப் புளகாங்கிதம் அடையும் சமத்துவ சமூகம் மலரும். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்த உரையாடல்களை முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது Adolescence தொடர் . இங்கு அது அவ்வளவு ஆழமான பேசு பொருளாக மாறவே இல்லை. அதுதான் அத்தொடரின் முதல் மூன்று பாகங்களை விரிவாகவும் நான்காம் பாகத்தை மிகச் சுருக்கமாகவும் இங்கு எழுதக் காரணமாக அமைந்தது. Adolescence தொடர் தனிப்பட்ட உண்மை நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. உலகெங்கும் நடைபெற்ற பல்வேறு இளம்பருவக் குற்றச் செயல்களே இத்தொடரை உருவாக்கக் காரணமாக அமைந்தது. ஜேக் தார்ன், ஸ்டீபன் கிரகாம் இணைந்து கதையை உருவாக்கினர். நான்கு பாகங்களையும் இயக்கியவர் பிலிப் பராந்தினி. ஜேமியாக நடித்தவர் ஓவன் கூப்பர். அவரது தந்தையாக நடித்து கதை, தயாரிப்பு உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஸ்டீபன் கிரகாம். ஒளிப்பதிவாளர் மேத்யூ லூயிஸ். ஒவ்வொரு பாகமும் படத்தொகுப்பு இல்லாமல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. ஒத்திகையும் படப்பிடிப்பில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் தொடக்கத்திலிருந்து மீண்டும் படமாக்கியதும் இதனைச் சாத்தியமாக்கின. இது பார்வையாளர்களுக்கு நெருக்கமான உணர்வைத் தந்தது. இங்கிலாந்து நாட்டின் பிரதமர் Adolesence குழுவினரைச் சந்தித்து உரையாடினார். நாட்டிலுள்ள நடுநிலைப்பள்ளிகளில் இத்தொடரைத் திரையிட ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பேசுவோம்.

  • வைரக்கல்

    குளத்தில் நிறைய தண்ணீர் இருக்குது குட்டிப் பாப்பா தாமரைப்பூ பூத்திருக்குது சின்னப் பாப்பா பூவைச் சுற்றி இலைகள் மிதக்குது குட்டிப் பாப்பா வட்டத் தட்டென சூழ்ந்திருக்குது சின்னப் பாப்பா இலையில் உருளும் தண்ணீர்த் துளிகள் குட்டிப் பாப்பா வைரக் கல்போல் தகதகக்குது சின்னப் பாப்பா பாவண்ணன் இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.

  • குழந்தைகளின் உரிமைகள் - 15

    ஐக்கிய நாடுகளின் பிரகடனம் – சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் : குழந்தைகளுக்கும் தனிப்பட்ட - அந்தரங்க உரிமைகள் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் குடும்பம், வீடு, தகவல் தொடர்புகள் போன்று பல்வேறு விஷயங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வயது வந்த ஆணும்,பெண்ணும் பேசும் போது “என்னோட ‘பிரைவசி’யில் யார் தலையிடுவதையும் நான் விரும்புவதில்லை” என்று சொல்வதைக் கேட்டிருப்போம். அவர்களின் நெருங்கிய நண்பர்களோ,பெற்றாரோ,உறவினர்களோ,அண்டை-அயல் வீட்டுக்காரர்களோ யாருமே அவ்வாறு தலையிடுவதை, பொதுவாக ஆணோ பெண்ணோ யாரும் விரும்புவதில்லை. அவர்களாக விரும்பி, முன்வந்து சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு;அது வேறு விஷயம். ஆனால், அவர்கள் விரும்பாத போது, வேறு யாரும் அவர்களின் அந்தரங்க உலகில் பிரவேசிக்க அனுமதிக்க மாட்டார்கள். இப்படிக் குழந்தைகளுக்கும் அந்தரங்க உரிமைகள் உண்டு என்று ஐக்கிய நாடுகளின் சர்வதேசப் பிரகடனத்தின் 16-ஆவது பிரிவு கூறுகிறது. “என்னது?குழந்தைகளுக்கும் அந்தரங்க உரிமைகளா? அது எப்படிச்சாத்தியம்?” என்று முதலில் நாம் அதிர்ச்சியே அடைவோம். இதுதான் எண்றில்லை,எந்த ஓர் உரிமை என்றாலும் அது பெரியவர்களின் கவனத்திலேயே பதிந்திருப்பதில்லை. பெரியவர்களின் உரிமைகளைப் பற்றியே பலருக்கும் விழிப்புணரவோ, பரிச்சயமோ, புரிதலோ இன்று வரைக்கும் இல்லை எனும்போது, குழந்தைகளின் அந்தரங்க உரிமைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். குழந்தைகளுக்கு என்று அப்படியென்ன அந்தரங்கம் இருக்க முடியும் என்று உடனே ஒரு கேள்வியும் எழும். ஓர் எடுத்துக்காட்டைச் சொன்னால், ஓரளவுக்குப் புரிந்து விடும். சமீப காலங்களில், இரண்டு வயது மூன்று வயதேயான பெண் குழந்தைகள் முதல், 75 வயது நிரம்பிய மூதாட்டி வரை, வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் காம வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய செய்திகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் பெயர்கள்,புகைப்படங்கள், குடும்பம்,முகவரி போன்ற எந்த விவரத்தையும் செய்தி ஊடகங்களிலோ,காவல்துறை,நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான ஆவணங்களிலோ வெளியிடக் கூடாது என்று ஒரு சட்டவிதி உள்ளது. அவ்வாறு உண்மைத்தகவல்கள் வெளியானால்,அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு தொடர்புடையவர்களைப் பற்றி விவரங்களை வெளியிடக்கூடாது என்பதற்குக் காரணம், அவ்வாறு வெளியிடுவதால், வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு,ஏற்கெனவே கடும்மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருப்போர், மேலும் கடுமையான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அவ்வாறான மன அழுத்தங்களுக்கு, ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை ஆளாக்கிவிடக்கூடாது என்பதில் இன்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. குழந்தைகளின் மன உலகம் மிகவும் நுண்ணியதாக இருக்கும். நம் பார்வையில் மிக அற்பமானவையாகத் தோன்றும் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றக்கூடும். இன்றைய அவசர உலகில், அவர்களின் நுண் உணர்வுகளைக் கவனித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பொறுமையோ,புரிதலோ பெரியவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே முரட்டுத்தனமாகக் குழந்தைகளை அணுகும் நிலைக்குப் பெரியவர்கள் ஆளாகிறார்கள். ஓர் அரசுப்பள்ளியில்,சிறு மாணவியிடம் அவரின் ஆங்கிலத்திறனைப் பரிசோதிக்கிறேன் என்று ஓர் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவை நாம் சமூக ஊடகத்தில் காண முடிந்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய பெற்றோர்கள், ஒன்று, குழந்தைகளின் மனவுலகம் என்ன மாதிரியான தன்மையுடன், எந்தவிதமான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது என்பதைப் பற்றிய துளிக்கவனமும் இல்லாமல் தங்களுடைய விருப்பங்களைக் குழந்தைகள் மீது திணித்து, தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே குழந்தைகள் செய்தாக வேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்கள். குழந்தைகள் பொதுவாகப் பெரியவர்களின் வார்த்தைகளை மறுத்துப் பேச முடிவதில்லை;முயல்வதுமில்லை. இதற்கு நேர எதிர்நிலையில், வேறு சில பெற்றோர்கள் குழந்தை எதை விரும்பினாலும் மறு பேச்சே இல்லாமல்,அந்தக் குழந்தை விரும்பும் எது ஒன்றையும் உடனே வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள். அதன் விருப்பம் என்னவாக இருந்தாலும்,அது சரியா தவறா என்றெல்லாம் யோசனையே செய்யாமல் அதை நிறைவேற்றி விடுகிறார்கள். எடுத்துக்காட்டுக்காக, குழந்தை விரும்பிக் கேட்கிறது என்பதற்காக செல்போன் வாங்கிக் கொடுப்பதற்குக்கூட இந்த வகைப் பெற்றோர் தயங்குவதில்லை. செல்போனில் எந்தெந்த வகையான செயலிகள் இருக்கின்றன,அவற்றில் என்ன வகையான விஷயங்கள், செயல்பாடுகள் இடம் பெறுகின்றன என்பதைப் பற்றி அந்தப் பெற்றோர் எவ்விதப் புரிதலும், அறிதலும் இல்லாமலே குழந்தையின் கைகளில் விலையுயர்ந்த செல்போனைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகளின் இயல்பான துறுதுறுப்பின் விளைவாக குழந்தைகள்,தங்களின் வயதுக்கு மீறிய ஆட்சேபகரமான வன்முறைகள்,பாலியல் காட்சிகளைப் பாரக்கத்தொடங்கி அவற்றில் தங்களின் கவனம் முழுவதையும் செலுத்துகிறார்கள். அதன் விளைவுகளை நம் ஊடகங்களிலும், அண்டை வீடுகளிலும் பார்த்துக்கொண்டே இருந்தாலும், இன்னொருபுறம் பெற்றோர் அதே தவறுகளைச்செய்யும் போது இறுதியில் பாதிப்புகளால் சிதைவுறுவது அந்தக் குழந்தைகள்தாம். இத்தகைய ஒரு சூழலில், குழந்தையின் அந்தரங்க உரிமைகளை நாம் எப்படி அணுகுவது? இது ஒரு பெரிய உளவியல் சிக்கலாக மாறி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளின் பிரகடனம் சொல்லும் இந்த உரிமையின் அம்சங்களை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டால்தான் நமது குழந்தைகளை நாம் சரியாகக் கையாள முடியும். தொடர்ந்து சிந்திப்போம்... கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • ஆழியும் பேண்ட் சட்டையும்

    ஆழி இந்த வருடம் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவள் தோழி கயலும் அதே வகுப்பு தான். அரசு பள்ளியில் தான் இருவரும் படிக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் சுமார் 7 கி. மீ தூரம். சென்ற வருடம் பள்ளி விடுமுறையில், இதற்காகவே தோழிகள் இருவரும் சைக்கிள் கற்றுக் கொண்டாரகள். வழக்கம் போல தோழி கயல் வீட்டின் முன் நின்று சைக்கிள் பெல் அடித்தாள் ஆழி. "வந்துட்டேன் ஆழி," என்ற கயல் "அம்மா கிளம்புறோம்' என்று சொல்லிவிட்டு, அவளின் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வரும் போது கயல் பாவாடை சைக்கிள் செயினில் மாட்டிக் கொண்டது. அதை கவனிக்காமல் அவர்கள் வர.... சிறிது தூரத்தில் பாவாடை இறுக்கி கயல் சைக்களோடு கீழே விழந்துவிட்டாள். பதறிய ஆழி சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினாள். அதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து கயலின் பாவாடையை சைக்கிளிலிருந்து எடுத்து விட்டார்கள். “பொட்ட புள்ளைங்களுக்கு சைக்கிள் எதற்கு? எப்ப பார்த்தாலும் இதே வேலை தான்” என புலம்பிவிட்டு கடந்து சென்றார்கள். ஆம் அவர்கள் சொல்வது சரிதான். ஒரு நாள் ஆழி, ஒரு நாள் கயல் இப்படி யாராவது ஒருவருக்கு இந்த பிரச்சனை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை வந்துவிடும். கயல் மெதுவாக சைக்கிளை சரி செய்தாள். பின்னர் இருவரும் கிளம்பினார்கள். கயல், "நமக்கு சைக்கிள் பிரச்சனை இல்ல பா....." என்றாள் ஆழி. "பின்ன என்ன பிரச்சனை?" என கயல் கேட்க, "நம்ம உடை தான் பிரச்சனை பா" என்றாள். "என்னது உடையா?" என ஆச்சிரியத்தோடு கயல் கேட்டாள். "ஆமாம் உடை தான் பா!. இதற்கு நாம் ஒர் தீர்வு கண்டே ஆக வேண்டும்." "இந்த வாரம் வெள்ளிக்கிழமை விருப்ப உடை அணிந்து செல்லலாம் இல்ல" "ஆமாம்" "அப்போ நாம நம்ம தோழிகள் அனைவரும் பேண்ட் சட்டை போட்டு போகலாம்", என்றாள் ஆழி. "என்னடீ.. என்ன சொல்லற? நம்ம அப்பா அம்மா எல்லாம் சம்மதிக்க மாட்டார்கள். பள்ளியிலும் நமக்கு அனுமதி கிடைக்காது" என்றாள். 'நாம முயற்சி செய்யலாம் டீ. இந்த வாரம் வெள்ளிக்கிழமை பேண்ட் சட்டை சீருடை அணிந்து தான் வரோம் " என்று முடிவு எடுத்தனர். PANTS DAY - வெள்ளி கிழமை என்ற பதாகையோடு ஆழி கூட்டாளிகள் ஒன்றாக பள்ளி உள்ளே நுழைந்தார்கள். "உடையில் சமத்துவம் வேண்டும் என்றால், அந்த மாற்றத்தை நாம் ஆரம்பிக்கவேண்டும். பேண்ட் சட்டை அணிந்து அதை துவங்கலாம் என பேசிக் கொண்டே சென்றார்கள். மற்ற வகுப்பு பெண்களும் இவர்களைப் பார்த்து வியந்து நின்றார்கள். "இங்கே விசேஷம் நடக்குது போல?"என வகுப்பு ஆசிரியர் வினவ, ஆழி தயக்கமில்லாமல் சொன்னாள். "ஆமாம் டீச்சர், வாரத்தில் ஒரு நாள் 'Pants Day' – பெண்கள் விருப்பமாக பேண்ட் சட்டை அணிவதற்கான தினம். அது ஒரு 'வாரியர் வீக்' ஆரம்பம் மாதிரி!" "தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு துவங்குங்கள்" என்றார். "சரிங்க டீச்சர்." என்று சொன்னதோடு, தலைமை ஆசிரியரை சந்தித்து அனுமதியும் பெற்று விட்டனர். வீட்டில் பெற்றோரிடம் அனுமதி பெறுவது அதைவிட பெரிய டாஸ்காக இருந்தது. வெள்ளிக்கிழமை வந்தது. Pants Day வந்து விட்டது. அன்று ஆழியும் அவளின் 11 தோழிகளும் அழகாக பேண்ட் சட்டை சீருடையில் பள்ளிக்கு சைக்களில் வந்தார்கள். எல்லோரிடமும் முக்கியமாக ஒரு அம்சம் இருந்தது: அது கம்பீரம்! அரங்கத்திலிருந்த வகுப்பு ஆசிரியர் பார்த்தவுடன் புன்னகைத்தார். சட்டென்று, "தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கினீர்களா?" என்றார். "இன்றைய விழா நாயகனே நமது தலைமை ஆசிரியர் தான் டீச்சர்" என்றாள் ஆழி. "அனுமதி பெற்று தான் இந்த பேண்ட் சட்டை அணிந்து வந்துள்ளோம் டீச்சர்" என்றார்கள். தலைமை ஆசிரியர் சிரித்தபடி அரங்கம் உள்ளே நுழைந்தார். அரங்கம் அமைதியானது. விழா துவங்கியது. அவரவர் விருப்ப உடையில் மாணவர்கள் மேடையில் வலம் வந்தார்கள். ஆழியும் அவளின் தோழிகளும் மிகவும் கம்பீரமாக மேடை ஏறி பேண்ட் சட்டை சீருடையில் ஒரு வெற்றி நடை போட்டார்கள். தலைமை ஆசிரியர், "நான் வழக்கமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவேன். ஆனா இப்போ நான் 'விழிப்புணர்த்தப்படுற' நிலைக்கு வந்திருக்கேன் போல இருக்கு! ஆடை அரசியல் வேண்டாம். இனிமேல், மாணவிகளும் ஒரு நாள் மட்டும் அல்ல எல்லா நாட்களும் பேண்ட் சட்டை சீருடை அணிந்து வரலாம் என புதிய அறிக்கை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." "அது மட்டுமல்லாமல் நமது இந்த அறிக்கையை பரிந்துரை செய்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பேண்ட் சட்டை அணிந்து வர சட்டம் நடைமுறைப்படுத்த அரசுக்கு கோரிக்கை சமர்ப்பிக்கிறேன்." என்று பேசினார். மாணவிகளிடமிருந்து வந்த பலத்த கைத்தட்டல் அரங்கத்தை அதிரச் செய்தது. "ஆழி ஒரு பேண்ட் சட்டை மட்டும் போட்டுத்தான் பள்ளிக்கு வந்தாள்… ஆனால் வருங்காலத்தில் இது ஒரு சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். ஒரு சீருடை மாற்றம், ஒரு சிந்தனை மாற்றத்துக்கு வித்தாய் இருக்கலாம்.” என்றார் தலைமை ஆசிரியர். பலத்த கைத்தட்டலோடு விழா நிறைவடைந்தது. ஆழியும் அவளின் தோழிகளும் பேண்ட் சட்டையில் பட்டாம்பூச்சி போல சைக்கிளில் பறந்து சென்றார்கள். இனி பாவாடை சைக்கிளில் மாட்டாது. மாற்றம் துவங்கியது. சாந்தி சரவணன் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, ஹைக்கூ மற்றும் சிறார் இலக்கிய தளங்களில் இயங்கி வருகிறார். ‘மலர் மேல் மழைத்துளி’, ‘முள்ளின் மொழி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். குழந்தைகளுக்காக கதை சொல்லி வருகிறார்.

bottom of page