top of page

இயலில் தேடலாம்!

292 results found with an empty search

  • பட்டுக்குட்டி

    யேய்…. யேய்… என்றுதான் அவளை அழைப்பார்கள். யேய் இங்க வா. யேய் அங்க போ. யேய்.. இதை எடுத்துட்டுப் போ. யேய்.. அதை எடுத்துட்டுப் போ. என்று யார் யாரோ வேலைகளைச் சொல்வார்கள். யேய்,, என்பது அவள் பெயர் இல்லை. ஆனால், அப்படித்தான் அழைப்பார்கள். அவளுக்கு என்று ஒரு பெயர் உண்டு. ஆனால், அவளுக்கே அது தெரியாது. அவள் பாட்டி மட்டும் அவளை “செல்லக்குட்டி” என்று கூப்பிடுவார். அவளுக்கு ஏழு வயதிருக்கும். அவளுக்கு அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. அவளும் பாட்டியும் தூரத்தில் சின்னக் குடிசையில் வாழ்கிறார்கள்.  அவள் முகம், கை காலெல்லாம் அழுக்காகவே இருக்கும். அவள்  தலை முடி பரட்டையாக இருக்கும். எப்பொழுதும் இரண்டு அழுக்கான சட்டையும், இரண்டு பாவாடையும் உடுத்தியிருப்பாள். மேல் சட்டை கைப் பக்கம் கிழிந்திருக்கும். அப்படியே தான் அவள் ஊர் முழுவதும் சுற்றுவாள். தோளில் ஒரு பெரிய பிளாஸ்டிக் சாக்குப்பை போட்டிருப்பாள். நீளமாக ஒரு கம்பை வலது கையில் பிடித்திருப்பாள். கம்பின் நுனியில் ஒரு வளைந்த கம்பி கட்டியிருப்பாள். அதைக் கொண்டு, எதையும் பிடித்து இழுத்து விடுவாள்.  குப்கைளை விலக்கி பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் பொறுக்குவாள். அட்டைப் பெட்டிகள். வேண்டாத இரும்பு சாமான்கள். கிழிந்த பிளாஸ்டிக் பைகள். இப்படி பல வேண்டாத பொருட்களை அவள் பை முழுக்க நிரப்புவாள். பழைய பொருட்களைக் கடையில் கொண்டு சேர்ப்பாள். கொஞ்சம் பணம் கிடைக்கும். பாட்டியிடம் சரியாக எண்ணிக் கொடுப்பாள். இரவு வருவதற்கு முன்பே வீட்டுக்கு வந்து விடுவாள்.  அவள், காலையிலிருந்து மாலை வரை குப்பைகளை பரசும் போது, சில நேரம் அழகான கிழிந்த பொம்மைகள் கிடைக்கும். அவைகளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து விடுவாள். கிழிந்து போன அந்த பொம்மைகளை ஊசி நூலால் பாட்டி தைத்து தருவார். அப்புறம் பொம்மைகள் சரி ஆகி விடும். பழைய துணியால் அந்த பொம்மைகளுக்கு கலர்கலராக சட்டை, பாவாடை பாட்டி தைப்பார். பொம்மைகள் அழகாய் மாறிவிடும். அந்த பொம்மைகளோடு இரவில்  பேசிக்கொண்டடே தூங்கி விடுவாள். அவள், ஒரு நாள் பகலில் குப்பைகளை பரசிக் கொண்டிருந்தாள். அது  பெரிய பெரிய வீடுகள் உள்ள தெரு. ஒரு வீட்டின் சாளரத்தில் உட்கார்ந்திருந்த, ஒரு குட்டிப் பாப்பா அழுது கொண்டிருந்தாள். முதலில் இவள் கவனிக்கவில்லை. கொஞ்சம் உன்னிப்பாக கேட்டாள். அழும் சத்தம் இவள் காதில் நன்றாகவே கேட்டது. அது குட்டிப்பாப்பாவே தான். அந்த குப்பைகளையே பார்த்து அழுது கொண்டிருந்தாள். இவள் ஒரு நிமிடம் பயந்து விட்டாள். தன்னைத்தான் பார்த்து அழுகிறாளோ…. என்று நினைத்தாள். அவள், குட்டிப்பாப்பாவை விட்டு கொஞ்சம் விலகி நின்றாள். ஆனாலும், குட்டிப்பாப்பா அழுதாள். அவள் புரிந்து கொண்டாள். தன்னைப் பார்த்து அழவில்லை என்று. அவள் குட்டிப் பாப்பாவிடம் என்ன? என்று கேட்டாள். ஆனால், குட்டிப்பாப்பா எதுவும் சொல்லவும் இல்லை. அழுகையையும் நிறுத்தவில்லை. அவள் மறுபடியும் கேட்டாள். இப்பொழுதும் அழுதாள். ஆனால், ஏம்… பொம்மை… என்று சொல்லிக் கொண்டே அழுதாள். அப்போது தான் அவளுக்கு டக்கென்று உறைத்தது. குட்டி பாப்பாவிடம் “ என்ன பொம்மை ” என்று கேட்டாள். குட்டி பாப்பா அழுகையை நிறுத்தினாள். அவளிடம் என் எல்லோ கலர் குட்டி நாய் பொம்மை…. என்றாள். அவள் சுற்றி சுற்றி பார்த்தாள். எங்கும் நாய்க் குட்டி பொம்மை இல்லை.  அவள் தேடுவதைப் பார்த்ததும் குட்டிப் பாப்பா அழுகையை நிறுத்தினாள். ஆனால், சாளரத்தின் வழியே மஞ்சள் நிற நாய் குட்டி பொம்மை தெரிகிறதா…? தேடினாள். எங்குமே இல்லை. குட்டிப் பாப்பா முகம் வாடியது. அவள், குட்டிப்பாப்பாவிடம் “எங்கேயாவது உன் நாய்குட்டி பொம்மை கிடைத்தால் கொண்டு வருகிறேன்” என்றாள். குட்டிப் பாப்பாவும்   தலை அசைத்தாள். அவள் அங்கிருந்து சென்றாள். அதன்பின், ஊருக்குள் எங்கெல்லாமோ சென்றாள். சென்ற இடமெல்லாம் குட்டிப்பாப்பாவின் நாய்க்குட்டி பொம்மையைத் தேடினாள். எங்கும் மஞ்சள் நிற நாய்க்குட்டி பொம்மை இல்லை. அவள் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள். அன்று இரவு பொம்மைகளோடு விளையாடி பேசிக் கொண்டிருந்தாள். ஆனால், அவளுக்கு நினைவெல்லாம் குட்டிப் பாப்பாதான். குட்டிப்பாப்பா அழுததையே நினைத்துக் கொண்டிருந்தாள். அவளிடமும் ஒரு நாய்க்குட்டி பொம்மை இருந்தது. அது கிழிந்து போன, நாய்க்குட்டி பொம்மை. அந்த பொம்மையைப் பாட்டி ஊசி நூலால் தைத்திருந்தாள். அதற்கு ஒரு பட்டுச் சட்டையும் தைத்துப் போட்டிருந்தாள். ஆனால் அது குட்டிப்பாப்பாவின் நாய்க்குட்டி பொம்மை இல்லையே. அவள் நாளையும் அழுவாளே…  நினைத்துக் கொண்டே தூங்கி விட்டாள். மறுநாள் காலையில் அவள் சாப்பிட்டு, பாட்டியிடம் சொல்லி விட்டு பிளாஸ்டிக் சாக்கு, கையில் கொக்கிக் கம்புடன் கிளம்பினாள். ஆனால், இன்று முகத்தை தண்ணீரால் துடைத்தாள், தலையை சீவினாள். அவளுக்குள் ஒரு சந்தோசம். பெரிய வீடுகள் உள்ள தெருவிற்குள் சென்றாள். சில வீடுகளைக் கடந்து சென்றாள். குட்டிப்பாப்பாவின் வீடு மூன்றாவது தெரு. கடைசி வீடு. இரண்டு தெருவைக் கடந்தாள். மூன்றாவது தெருவுக்கு சென்றாள். எப்படியும் குட்டிப்பாப்பா அழுகையை நிறுத்தி விடலாம் என நினைத்து சிரித்துக் கொண்டாள். குட்டிப்பாப்பா வீட்டை நெருங்கினாள். அந்த வீட்டின் சாளரத்தில் பார்த்தாள். ஆனால், குட்டிப் பாப்பா அங்கு இல்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்தாள். ஒரு வேளை குட்டிப் பாப்பா வீட்டிற்குள் இருக்கலாம். பிறகு பார்ப்போம்… என்று அவள் திரும்பினாள். “அக்கா..அக்கா… என் நாய்க்குட்டி பொம்மையை பார்த்தாயா,,?” என்று குட்டிப்பாப்பா அவள் கையை பிடித்தாள்.   அவள் கையை பிடித்து “அக்கா” என்று அழைத்ததில் ஒரு சந்தோசம்.  உடனே, அவள் பிளாஸ்டிக் சாக்கை திறந்தாள். குட்டிப்பாப்பா அவள் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளிருந்து ஒரு நாய்க்குட்டி பொம்மையை வெளியே எடுத்தாள். குட்டிப் பாப்பா முகத்தில் சிரிப்பு பொங்கியது. அந்த நாய்க் குட்டி பொம்மை பட்டு போல் மினிங்கியது. அது குட்டிப் பாப்பா பொம்மை இல்லை. ஆனால் அதை விட அழகாக இருந்தது. குட்டிப்பாப்பா அந்த பொம்மையை அவளோடு சேர்த்து அணைத்தாள். கன்னத்தோடு ஒட்டிக் கொண்டாள். “ அக்கா………எனக்கு இந்த நாய்குட்டி பொம்மை ரொம்ப பிடிச்சிருக்கு இது பட்டுக்குட்டி என்றாள். குட்டிப்பாப்பா செய்வதைப் பார்த்து அவளும் சந்தோசத்தில் சிரித்தாள்.

  • எங்கள் வீட்டின் காலை விருந்தாளிகள்!

    குருவிகளும் புறாக்களும் காக்கைகளும் எவ்விப் பறந்து வானத்தில்  ஏறுவதைப் பார்த்தால் எல்லோருக்குமே கொஞ்சம் ஏக்கம் பிறக்கும். நம்மாலும் அப்படிப் பறக்க முடியவில்லையே! எனக்கோ, அதே பறவைகள் எங்கள் பக்கத்து வீட்டு மாடித் தரையில் இறங்குவதைப் பார்த்தாலே கூட ஏக்கம் ஏற்படும். நம்ம மாடிக்கு அந்தப் பறவைகள் வரவில்லையே! அந்த வீட்டில் குடியிருப்பவர் ஒவ்வொரு நாளும் காலையில் மாடிக்கு  வருவார். மடியில் முடிந்து வைத்திருக்கும் ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரிப்பார். அதிலே இருக்கிற ஏதோ ஒரு பொருளைக் கையில் அள்ளியெடுத்துத் தரையில்  தூவுவார். இங்கேயிருந்து பார்க்கிறபோது அது என்ன என்று தெரிவதில்லை. சில நொடிகளில் எங்கிருந்தோ புறாக் கூட்டம் வரிசையாக வந்து இறங்கும். தரையில் சுற்றிவந்து கீழே கிடப்பதை முழுதாகக் கொத்தித் தின்ற பிறகு திரும்பிப் பறந்துவிடும். புறாக்களோடு கொஞ்சம் காக்கைகளும் சேர்ந்துகொள்ள, அந்தக் காட்சியை விட்டுக் கண்களை விலக்குவதே எனக்குக் கடினமாக இருக்கும். "அவங்க இங்கேயும் வந்துட்டுப் போனா நல்லா இருக்குமே!" இந்த எண்ணம் என் மனசுக்குள் சிறகடிக்கும். ஒருநாள் அவரிடம் கேட்டேன்: “பறவைகளுக்கு என்ன தீவனம் போடுகிறீர்கள்? அரிசியா, நெல்லா அல்லது வேற ஏதாச்சும் தானியமா?” அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு வியப்பும் குழப்பமும் கலந்த உணர்வு ஏற்பட்டது. “காரச்சேவு வாங்கி வைத்திருக்கிறேன். அதைத்தான் சின்னச் சின்னத் துண்டுகளாக உடைத்துக் கொண்டுவந்து போடுகிறேன்,” என்றார் அவர். பறவைகளுக்கு இப்படி எண்ணெயில் பொரித்த, உப்பும் காரமும் மிகுந்த உணவுகளைத் தீவனமாகக் கொடுக்கலாமா? கூடாது என்று முன்பு விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. பறவைகளின் செரிமான மண்டலம் மனிதர்களுக்கு இருப்பதைப் போன்றதல்ல; உப்பு, எண்ணெய் வகையறா உணவுகள் அவற்றின் சிறுநீரகத்தையே கூட பாதித்துவிடும். நம் கண்ணில் படாத இடத்தில் இருந்துகொண்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கும். பறவைகளை வரவழைக்கும் ஆர்வம் தொடர்ந்தது. காலை நடைப்பயிற்சிக்குப் போகும்போது, வழியில் இன்னொரு வீட்டு மாடிக்கும்  பறவைகள் ஏதோ சொந்தக்காரர்கள் போலக் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். கூச்சத்தை ஒதுக்கிவைத்தேன், அந்த வீட்டின் முன் நின்று பறவைகளைக் கவனித்துக்கொண்டிருந்த பெண்மணியிடம்  கேட்டேன். அவர் சரியான வழியைக் காட்டினார். "அய்யா, பறவைகளுக்குக் கோதுமை, சோளம், கம்பு இன்னும் அது போல இயற்கையான தானியங்களைத்தான் தரணும். அதுதான் அவங்களோட ஆரோக்கியத்திற்கு நல்லது. நான் அப்பப்ப கீரைத் தண்டுகளையும் துண்டு துண்டா நறுக்கிப் போடுவேன்," என்றார். என்னைப் போலவே அவரும் பறவைகளை “அவங்க” என்று குறிப்பிட்டதைப் பாராட்டிவிட்டு விடைபெற்றேன். மறுநாளே எங்கள் வீட்டு மாடித் தரையின் ஒரு பகுதியைப் பெருக்கித் தூய்மைப்படுத்தினேன். வீட்டிலிருந்த கோதுமையைக் கைப்பிடி அளவு எடுத்து வந்து  தூவினேன். சாப்பிட்ட பிறகு தாகம் எடுக்குமே? இதற்கென்றே முதல் நாள் மாலையில் வாங்கி வந்திருந்த ஓரடிக்கு ஓரடி சதுர வடிவ, நான்கு அங்குல உயரமுள்ள மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி ஓர் ஓரமாக வைத்தேன். ஒரு புறாவும் வரவில்லை. காரச்சேவு சுவைக்குப் பழகிவிட்டார்கள்  போலும் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலை நடைப் பயிற்சி நேரத்தில், அந்த வீட்டின் முன்பாக நின்றேன். என்னைக் கவனித்துவிட்டவராக அந்தப் பெண் உள்ளிருந்து வந்தார். “நீங்க சொன்ன மாதிரிதான் செஞ்சேன். ஆனா புறா வரலையேம்மா,” என்று கேட்டேன். அவர் புன்னகைத்தார். “உடனே வந்துட மாட்டாங்கய்யா. தினமும் அங்கே இரை கிடைக்கும்னு உறுதிப்படுத்திட்டு வருவாங்க. நாலைஞ்சு நாள் கூட ஆகும். பொறுமையா காத்திருங்க, ஆனா தினமும் புதுசா தானியம் வைக்கணும். தண்ணீர் மாத்தணும். அப்புறம், தானியம் வைச்சுட்டு அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கக்கூடாது… தள்ளிப் போயிடணும்,” என்று கூறினார். இந்த ஆலோசனையைப் பின்பற்றினேன். சில நாட்களில் அருமையான அந்த மாற்றம் நடந்தது! முதலில் மூன்று புறாவினர் வந்தார்கள். சில நிமிடங்களில் மேலும் மேலும் பலர் வந்தார்கள். சாம்பல் வண்ணமும் வெள்ளையுமாக இருந்த புறாக்களோடு காக்கைகள் சேர்ந்தபோது ஏதோ ஒரு நவீன ஓவியம் தீட்டப்பட்ட திரை போல இருந்தது. இப்படியே சில நாட்கள் போன பிறகு, மைனாக்கள் இணைந்தார்கள்.  இவற்றைத் தொடர்ந்து சிட்டுக்குருவிகள் வந்து இறங்கினார்கள். ‘அட, நகரத்திலே சிட்டுக்குருவிகள் குறைந்துபோய்விட்ட நிலைமையில் இவர்கள் நம் இடத்திற்கு வந்திருக்கிறார்களே,’ என்ற பரவசத்தை அவர்கள் மனதில் இறக்கினார்கள்! அவர்கள்  தானியங்களைக் கொறித்துவிட்டுப் போய்விடுவதில்லை, குட்டிக் குளம் போன்ற அந்த மண் சட்டியில் இறங்கி உல்லாசமாகக் குளியல் போட்டுச் செல்கிறார்கள்! சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டும் தலையை நீரில் மூழ்கியெடுத்துச் சிலுப்பிக்கொண்டும் அவர்கள் ஆட்டம் போடுவதைப் பார்ப்பது நமக்கே ஒரு புத்துணர்ச்சிதான்!  அந்தப் பெண்மணி தன் குடும்பத்தாருடன் ஒருநாள் எங்கள் வீட்டு வழியாகச் சென்றபோது என்னைப் பார்த்துக் கையசைத்தார். நான் அவர்களை உள்ளே அழைத்து, எல்லோருக்கும் இனிப்பு–காரம்–தேநீர் கொடுத்துவிட்டு, பறவை விருந்தினர்கள் வருகை பற்றி உற்சாகத்தோடு சொன்னேன். அவர்கள் மேலும் சில முக்கியமான குறிப்புகளைக் கொடுத்தார்கள். பறவைகள் மீது அவர்கள் எல்லோருக்குமே அன்பும் அக்கறையும் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்கள் தெரிவித்த தகவல்களையும், ஆலோசனைகளையும் இங்கே தொகுத்துச் சொல்கிறேன்:  பொதுவாகப் பறவைகள் காலை 6 மணியிலிருந்து 11 மணி வரை இரை தேடும். மாலை நேரத்திலும் சில பறவைகள் இரை தேடிச் செல்லும் என்றாலும் காலையில் மட்டும் நாம் தீவனம் வைப்பதே போதுமானது. மாலையிலும் உணவிட விரும்பினால் அளவு குறைவாக வைக்கலாம்.  பறவைகளுக்கு ஒரு நினைவாற்றல் உண்டு. பாதுகாப்பான நிலைமை இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள் என்றால் அவர்கள் நாள்தோறும் நம்மை நாடித் தவறாமல் வருவார்கள். சிட்டுக்குருவிகள் பொதுவாகக் கூட்டமாக வந்து குளிப்பதைப் பார்த்து ரசிக்கலாம். அமைதிச் சின்னம் என்று நாம் சொல்கிற புறாக்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்ளத்தான் செய்யும். அதைப் பார்த்துக் கவலைப்பட வேண்டியதில்லை. விரைவில் சமாதானமாகிவிடும். காக்கைகள் உணவை உண்பதோடு தொண்டையில் சேகரித்து வைத்துக் குஞ்சுகளுக்காக எடுத்துக்கொண்டும் போவார்கள். பெரும்பாலான பறவைகளும் அப்படித்தானே… உணவை விட பறவைகளுக்குத் தண்ணீர் முக்கியம். அதுவும் நகரச் சூழலில் அந்த வசதியை நாம் ஏற்படுத்திக்கொடுப்பது பறவைகளுக்குப் பேருதவியாக இருக்கும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் அல்லாமல் மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி வைப்பது நல்லது. அது தண்ணீரைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். நம்மைப் போலவே பறவைகளுக்கும் அந்த இயற்கையான குளிர்ந்த நீர் மிகவும் பிடிக்கும். அதற்கு ஏற்ற வகையில், தண்ணீர்ச் சட்டியை, வெயில் படாத நிழலான இடத்தில் வைக்க வேண்டும். தண்ணீர் மாற்றும் வேலையை மாலை நேரத்தில் செய்யலாம். பறவைகளிடம் பாசம் காட்டலாம், ஆனால் சட்டியில் படியும் பாசத்தை அவ்வப்போது கழுவித் துடைத்து பளிச்சென வைத்திருக்க வேண்டும். நாம் போடும் கோதுமை, சோளம், கம்பு ஆகிய மூன்றும் புறாக்களுக்குத் தேவையான  கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தையும், ஆற்றலையும் வழங்கக்கூடிய சிறந்த தானியங்களாகும். இருப்பினும்,  சரிவிகித உணவிற்காக  வாரத்தில் ஓரிருமுறை  சிறிதளவு பச்சைப் பயறு அல்லது உளுந்து கலந்து கொடுக்கலாம். இது பறவையினரின் தசை வளர்ச்சிக்கும் இறக்கை வலிமைக்கும் துணையாகும். ஒரு நாள் ஒரு தானியம் என்று சிலர் வைக்கிறார்கள். அப்படியில்லாமல் ஒவ்வொரு முறையும் இந்த தானியங்களைக் கலவையாக வைப்பதே நல்லது. பறவையாருக்குப் பற்கள் கிடையாது என்பதால், தானியங்களை வயிற்றுக்குள்ளேதான் அரைக்க வேண்டும். அதற்குச் சிறிய கற்கள் தேவைப்படும். உணவுக்கு அருகிலேயே பெரு மணல், சிறு கற்கள், செங்கல் பொடி, முட்டை ஓடு என வைப்பது செரிமானத்திற்கு உதவும். மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் சிறிதளவு கருப்பு எள்,  கடுகு சேர்த்துக் கொள்ளலாம். இவற்றின் துணையோடு பறவையன்பர்கள் தங்களின் உடல் வெப்பநிலையைப் பராமரித்துக்கொள்வார்கள். தானியங்களையும் பயறுகளையும் சிலர் ஊறவைத்து இடுகிறார்கள். பறவைகள் இயற்கையாக உலர்ந்த தானியங்களையே சாப்பிட்டுப் பழகியிருக்கின்றன. ஊறவைத்துப் பரிமாறுகிறபோது, நொதித்தல் விளைவுகள் ஏற்பட்டுப் பறவைகளின் வயிற்றில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக குஞ்சுகள் மிகவும் சிரமப்படும். ஆகவே உலர்ந்த தானியங்களைப் பரிமாறுவதே ஏற்றது. இந்த வழிகாட்டல்களை எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் குழந்தைகள் எல்லோருமே போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுத்துகிறோம். புறாக்களும் காக்கைகளும் குருவிகளும் மைனாக்களும் எங்களை வாஞ்சையோடு பார்ப்பது போல உணர்கிறோம். முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கூண்டில் அடைத்து வைத்து, வேளாவேளைக்கு இரையும் தண்ணீரும் வைத்து அன்பாகப் பராமரிப்பதாக நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் பறவைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே செய்கிறோம். அந்தக் கொடுமையை நாங்கள் செய்யவில்லை என்பதால் காலை நேர மாடி நண்பர்கள் கூடுதல் அன்புடன் வந்து செல்கிறார்கள். விரைவில் இந்த இறக்கை விருந்தாளிகளுடன் பச்சைக் கிளிகளும், வீட்டின் பின்னால் உள்ள மரத்தில் அமர்ந்து செல்லும் பெயர் தெரியாத வேறு சில வண்ணப் பறவைகளும் சேர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். வரவேற்கக் காத்திருக்கிறோம். இப்போதெல்லாம் மாடியில் உணவை வைத்த பிறகு, நான் அந்த வழியாக அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தாலும்  பறவை நண்பர்கள் பதறிப் பறப்பதில்லை. "நம்ம ஆள்தான்" என்று இயல்பாகத் தானியங்களைக் கொத்தி எடுத்துக்கொள்கிறார்கள். தானியக் கலவையைத் தாம்பாளம் போன்ற ஒரு அகலமான மரத்தட்டில் வைக்கிறோம்.  இன்னொரு சுவையான செய்தி –பக்கத்து வீட்டு நண்பரும் தானிய விருந்தளிக்கத் தொடங்கிவிட்டார். “காக்கை குருவி எங்கள் ஜாதி” – இது நம் மகாகவி பாரதி பாட்டு. அவருடைய அனுமதியோடு எனது மாற்று: “காக்கை குருவிகளின் ஜாதி நான்.” அ. குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.

  • இலண்டனிலிருந்து அன்புடன் – 11

    உலகின் மோசமான விண்வெளி வீரர் ‘லண்டனிலிருந்து அன்புடன்’ தொடரில், இம்மாதம் “The Long-Lost Secret Diary of the World’s Worst Astronaut” என்ற ஒரு கலக்கலான புத்தகத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். “என்ன இது? புத்தகத்தின் பெயர் இவ்வளவு நீளமாக இருக்கிறது?” என்று யோசிக்கிறீர்களா? இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் டிம் காலின்ஸ் (Tim Collins), இதுபோல ‘The Long-Lost Secret Diary of the World’s Worst...’ (Pirate, Samurai, Knight) எனப் பல வேடிக்கையான புத்தகங்களை எழுதியுள்ளார். அழகிய ஓவியங்கள், பெரிய எழுத்துக்கள் என இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பும், கதை சொல்லும் விதமும் மிகவும் சுவாரசியமாக இருக்கும். 200 பக்கங்கள் இருந்தாலும், ஒரு பக்கத்தில் சில வரிகளே இருப்பதால் உங்களால் மிக எளிதாக வாசிக்க முடியும். இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது ஒரு நாட்குறிப்பு (Diary) வடிவில் எழுதப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும் அல்லவா? ஒவ்வொரு நாளும் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அதில் குறித்து வைப்போம் அல்லவா? அதே போன்ற ஒரு டைரிதான் இந்த நாவல். இது “எல்லி” (Ellie) என்ற 12 வயது சிறுமியின் ரகசிய டைரி. எல்லி தனது டைரியில் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று வரிகள் மட்டுமே எழுதுவாள். சில நாட்களில் டைரி எழுதாமல் சோம்பேறித்தனமாகக்கூட இருந்துவிடுவாள்! எல்லியின் டைரி ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது. (வருடம் ஏதும் குறிப்பிடவில்லை, ஏனென்றால் இது எதிர்காலத்தில் நடக்கும் கதை என்று ஆசிரியர் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்.) அன்றுதான் அமெரிக்காவின் நாசா (NASA) நிறுவனம், செவ்வாய் கிரகத்திற்கு (Mars) ஒரு விண்கலத்தை அனுப்புகிறது. எல்லியின் தந்தை நாசாவில் வேலை பார்ப்பவர். அதனால் அந்த விண்கலம் விண்ணில் பாய்வதை மிக அருகில் இருந்து பார்க்கும் அருமையான வாய்ப்பு எல்லிக்குக் கிடைக்கிறது. அதன் பிறகு, கோடை விடுமுறையில் அப்பாவுடன் நாசா அலுவலக நூலகத்திற்கு எல்லி தொடர்ந்து செல்கிறாள். அங்கே அவள் செய்யும் குறும்புத்தனங்கள், அதனால் நாசாவில் ஏற்படும் சிக்கல்கள், அதைச் சரி செய்ய நாசா எடுக்கும் அதிரடி முடிவுகள் எனப் புத்தகம் விறுவிறுப்பாகச் செல்கிறது. இறுதியில் எல்லி வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்திற்குச் செல்கிறாள். "செவ்வாய் கிரகத்தில் தரைஇறங்கிய முதல் மனிதர்" எனும் பெருமையையும் பெறுகிறாள்! எல்லியுடன் வேறு சில மாணவர்களும் இந்தப் பயணத்தில் இணைகின்றனர். அதில் தேவ் எனும் இந்தியச் சிறுவனும் உண்டு. மொத்தம் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவல், விண்வெளிப் பயணத்தில் இருக்கும் அறிவியலை மிகவும் சுவாரசியமாகவும் துல்லியமாகவும் நமக்குச் சொல்கிறது. இது ஒரு கற்பனைக் கதை என்றாலும், ஒரு விண்வெளி வீரராக என்னென்ன பயிற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை எல்லி வழியாக ஆசிரியர் மிகவும் நகைச்சுவையாக விளக்குகிறார். புத்தகத்தில் ஆங்காங்கே, “Get Real” எனும் தலைப்பில் சில உண்மைத் தகவல்களை ஆசிரியர் பகிர்ந்து கொள்கிறார். எது கற்பனை, எது அறிவியல் உண்மை என்பதை இது விளையாட்டாகப் புரியவைக்கும். அதேபோல், புத்தகத்தின் முடிவில் “Mission to Mars” எனும் தலைப்பில் செவ்வாய் கிரகப் பயணம் குறித்த அறிவியல் மற்றும் வரலாற்று முயற்சிகளையும், மனித இனத்தின் விண்வெளிச் சாதனைகளையும் ஆசிரியர் எளிமையாக அறிமுகப்படுத்துகிறார். விண்வெளி குறித்து அறிய ஆர்வமுள்ள குட்டீஸ் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. உங்களைப் போன்ற மாணவர்களின் பார்வையிலிருந்து மிகவும் குறும்புத்தனமாகவும், அதே சமயம் அக்கறையுடனும் இந்தப் புத்தகம் பேசுகிறது. பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.

  • கௌதுக்

    இந்தி:   மானவ் கௌல் தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ   அம்மாவுடன் புதிய ஊருக்கு மாறிவந்ததும் கௌதுக்க்கு  எல்லாமே புதிராக இருந்தது. அந்நிய மனிதர்களின் கண்கள், அறிமுகம் இல்லாத பறவைகளைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தன.  ஒவ்வொரு வீட்டின் சன்னல் திரைக்குப் பின்னாலும் ஏதோ ரகசியம் ஒளிந்திருப்பது போலத் தோன்றியது.  கௌதுக்கின் அம்மாவுக்கோ மகளைச் சீக்கிரம் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற பதட்டம். பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது அவசரத்தில் அவர் ஒரு தவறு செய்தார். மகளின் முழுப் பெயரை எழுத மறந்துவிட்டார். வெறும் 'கௌதுக்' என்று மட்டும் எழுதினார். ஒரு சிறு தவறு, மகளின் அடையாளத்தையே மாற்றிவிடும் என்று அப்போது அவருக்குத் தெரியாது. அன்று முதல், பள்ளியின் பதிவேடுகளில் அவள் வெறும் 'கௌதுக்'காகவே ஆகிப்போனாள். வகுப்பாசிரியர், மாணவர்களின் பெயரை அழைக்கும்போது, பெயருக்குப் பின்னால் இருக்கும் முழுப்பெயரையும் சேர்த்து அழைப்பார். எல்லோருக்கும் தந்தையின் பெயரோ, குலப்பெயரோ ஒரு நிழலைப் போலத் தொடர்ந்து வரும். ஆனால் கௌதுக்கின் முறை வந்தபோது ஆசிரியர் தடுமாறினார்.  "கௌதுக்!" என்று அழைத்துவிட்டு, அதற்குப் பின்னால் இன்னும் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று தாள்களைத் தேடிப் பார்த்தார். அந்தப் பெயர் முழுமையடையாமல் இருப்பதை உணர்ந்த ஆசிரியர், மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள "கௌதுக்... கௌதுக்..." என்று இரண்டு முறை அழைத்தார்.  அமைதியான வகுப்பில் அது ஒரு பெயரைப் போல ஒலிக்கவில்லை. ஏதோ ஒரு காட்டுப் பறவையின் அழைப்பைப் போல எதிரொலித்தது. உடனே, வகுப்பில் இருந்த எல்லாத் தலைகளும் கௌதுக்கின் பக்கம் திரும்பின. மாணவர்கள் கைகளை வாயால் பொத்திக்கொண்டு கிண்டலாகச் சிரித்தனர் "இவளது பெயருக்குப் பின்னால் இனிஷியல் இல்லையா?" என்று முணுமுணுத்தார்கள்.  கௌதுக் அப்படியே கூனிக்குறுகிப் போனாள். வகுப்பில், எல்லா ஜோடிக் கண்களும் ஈட்டிகளைப் போலத் தன்னைத் துளைப்பதை அவளால் தாங்க முடியவில்லை. இருக்கையில் உட்கார்ந்தபடி தலையைக் கவிழ்த்திக் கொண்டாள். 'ஏன் எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்? இந்தப் பெயர் அவ்வளவு வேடிக்கையானதா?' என்று யோசித்தாள். இதயம் படபடத்தது.  சிரிப்பொலி அடங்கும் வரை, அவளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போலத் தோன்றின. தனக்கு முழுப் பெயர் இல்லாதது இவ்வளவு இடஞ்சலை ஏற்படுத்தும் என்று அதற்கு முன்பு அவளுக்குத் தெரியாது. பள்ளியிலும் வெளியிலும் கௌதுக் தனது பெயருடன் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. வகுப்பில் சிரிப்புச் சத்தம் அதிகரித்தால் கெளதுக் சட்டென்று தனது தடிமனான கண்ணாடியைக் கழற்றிவிடுவாள். அடுத்த நொடியே உலகம் மாறிவிடும். பிறகு மனிதர்கள் தெரியமாட்டார்கள். மங்கலான வண்ண நிழல்கள் தெரியும். ஆசிரியர், நீல நிற மேகம் போலவும், மாணவர்கள் சிறிய வண்ணப் பூச்சிகள் போலவும் தெரிவார்கள். சில நேரங்களில், இந்த மங்கலான உலகம் நிஜ உலகத்தை விட அழகாக இருப்பதாகத் தோன்றும். கௌதுக், எப்போதும் பையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்திருப்பாள். அதில், ‘நான் உனக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க முடியும்’ என்று எழுதி வைத்திருந்தாள். இந்த ஊருக்கு புதிதாக வந்ததிலிருந்தே அதைப் பையில் வைத்துப் பாதுகாத்து வந்தாள். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் கௌதுக், பின் வரிசையில் குறும்பு செய்யும் குழந்தைகளுடன் உட்கார ஆசைப்பட்டாள். அவர்கள் அரட்டையடிக்கும்போது யாரிடமாவது அந்தச் சீட்டைக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தாள். இல்லையென்றால் யாருடைய பையிலாவது போட்டுவிடலாம், யாருடைய சாப்பாட்டு டப்பாவில் சப்பாத்திக்கு அடியில் மறைத்து வைத்துவிடலாம் என்றும் யோசித்திருந்தாள்.   ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவள் சிறுமி என்பதால் பின் வரிசை இருக்கை மறுக்கப்பட்டது. அத்துடன் அவள் குட்டையாகவும் இருந்தாள். அதனால் முன் வரிசையில் உட்கார வேண்டியிருந்தது. முன் வரிசையில் உட்காரும் குழந்தைகளுக்கு மட்டும், ஆசிரியர்கள் ஏன் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அவளுக்குப் புரியவே இல்லை. ‘முன்னால் உட்கார்ந்தால் ஆசிரியர் மட்டும்தான் தெரிவார். ஆனால் பின்னால் உட்கார்ந்தால் முழு வகுப்பையும் பார்க்க முடியும். புவியியல் ஆசிரியருக்குக் கூட, புவி அமைப்பின் ரகசியம் தெரியவில்லையே’ என்று கௌதுக் வியந்தாள். முன்னால் உட்கார்ந்தபடி, அவள் அடிக்கடி பின்னால் திரும்பிப் பெருமூச்சு விடுவாள். ஒவ்வொரு முறையும் பையில் கைவிட்டுத் தடவி, எழுதிவைத்த சீட்டைத் தொட்டுப் பார்ப்பாள்.  ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில், கௌதுக் ஓர் அரச மர நிழலில் உட்கார்ந்திருந்தாள். தூரத்தில் சிறுவர்கள் குழுவாகச் சேர்ந்து சிரித்துப் பேசியபடிச் சாப்பிடுவதைப் பார்த்தாள். குழுவுக்கு அருகில் சென்று நின்று பார்த்தாள். யாரும் அவளுக்கு இடம் தவில்லை. அதனால் கெளதக் அரச மரத்தையே வீடாக மாற்றிக்கொண்டாள். மரத்தின் ஒரு தடிமனான கிளை, மரத்தண்டோடு சேரும் இடத்தில்தான் அவள் உட்காருவாள். அது அவளுக்காகவே செதுக்கப்பட்டது போலத் தோன்றும். அந்தக் கிளைக்கும் மரத்தண்டிற்கும் நடுவில் ஓர் அணில் பொந்து இருந்தது.  அவ்வப்போது தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்க்கும் அணில் கௌதுக்கைப் பார்த்துச் சாத்தம் எழுப்பும். வேறு யாரும் பழகத் தயாரில்லை என்றாலும், தன்னோடு சேர்ந்து சாப்பிட ஓர் அணிலாவது இருக்கிறதே என்று ஆறுதல் அடைவாள். ஒரு துண்டுச் சப்பாத்தியைப்  பிட்டு அணில் வளையின் வாசலில் வைத்துவிட்டுத் தான் கெளதுக் சாப்பிடுவாள். அன்று அவள், இரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிட்டுவிட்டு டப்பாவை மூடிவிட்டாள். அவளுக்கு வெண்டைக்காய் பொரியல் பிடிக்காது. பிறகு பையிலிருந்து அந்தச் சீட்டை எடுத்தாள். பையிலேயே இருந்ததால் சீட்டு கசங்கிப் போயிருந்தது. ஈரமான கையால் அடிக்கடித் தொட்டதால் கிழிந்துவிடும் நிலையில் இருந்தது. சீட்டின் நுனியை இரண்டு விரல்களால் பிடித்து, வெயிலில் காட்டுவதற்காகக் கையை மேலே தூக்கினாள். உஷ்ணக காற்று பட்டதும் சிறிது நேரத்தில் அது காய்ந்துபோனது. அவளுக்கு நிம்மதி திரும்பியது.  அதே நேரத்தில் அவளுக்கு ஒரு யோசனை வந்தது. மரத்தைச் சுற்றி தேடியவள், ஒரு சிறிய தட்டையான கல்லை எடுத்தாள். கையிலிருந்த சீட்டை மடித்து அணில் பொந்துக்குள் வைத்தாள். சீட்டு பறந்துவிடாமல் இருக்க அதன் மேல் கல்லை வைத்தாள். உள்ளே இருந்த அணில், அவளது நடவடிக்கைகளை ஆச்சரியத்துடன் பார்த்தது.  அப்போது அருகில் இருந்த ஒரு சிறுவனின் குரல் கேட்டது. "ஏய்!" கெளதுக் திரும்பிப் பார்த்தாள். டிட்டு நின்று கொண்டிருந்தான். அவனும் வகுப்பில் முன் வரிசையில் உட்காருபவன் தான். படுசுட்டி. கௌதுக்கைப் போலவே தடிமனான கண்ணாடி அணிந்திருந்தான். கௌதுக் பேசாமல் அமைதியாக இருந்தாள்.  "அங்கே என்ன செய்கிறாய்?" என்று டிட்டு கேட்டான்.  கௌதுக் தோள்களை உயர்த்தி ஒன்றும் இல்லை என்று சைகை செய்தாள்.  "உனக்கு ஏன் இனிஷியல் இல்லை?" என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான். கௌதுக் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். பிறகு டிட்டு அவளை நெருங்கி வந்தான்.  கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "நான் எனது இனிஷியலைச் சாப்பிட்டுவிட்டேன்" என்றாள் கௌதுக். டிட்டு ஆச்சரியத்துடன் "யாராவது அதைச் செய்ய முடியுமா?" என்று கேட்டான்.  "நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது வயிற்றில் புழுக்கள் இருந்தன. அவை வெள்ளை நிறத்தில் இருந்த நீளமான புழுக்கள். வயிற்றில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும். ஒரு நாள், ஆசிரியர் எனது பெயரைத் கேட்டபோது முழுப்பெயரும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் கீழே குனிந்து வயிற்றைப் பார்த்தபோதுதான் ஓர் உண்மை புரிந்தது. அந்தப் புழுக்கள் எனது மிச்சப் பெயரை சாப்பிட்டுவிட்டன என்று புரிந்தது" டிட்டு கண்களை விரித்துப் பார்த்தான்.  "இப்போதும் வயிற்றில் புழுக்கள் இருக்கிறதா?" "அம்மா மருந்து கொடுத்தார். இப்போது அவை வயிற்றுக்குள் ஆழ்ந்து உறங்குகின்றன” என்று டிட்டுவின் காதருகில் வந்து ரகசியமாகச் சொன்னாள் கௌதுக். மணி அடித்தது. டிட்டு வகுப்புக்கு ஓடினான். கௌதுக், அந்தச் சீட்டை மடித்துவைத்தபடி அணிலிடம், "எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைக்கும் வரை இந்தச் சீட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்றாள்.  அணில் பொந்திலிருந்து 'சக்..சக்...' என்ற சத்தம் கேட்டது. அணில், 'சரி' என்கிறதா, 'இல்லை' என்கிறதா என்ற யோசனையில் வகுப்பை நோக்கி நடந்தாள்.  எது எப்படியோ, நாளை மதிய உணவு இடைவேளையில் அதற்கான பதில் அவளுக்குக் கிடைத்துவிடும். கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

  • வளரிளம் புதிர்ப்பருவம் - 10

    மாணவர்களுக்கான வினாத்தாளில், 1. நீங்கள் காதலிக்கிறீர்களா?  ஆம் / இல்லை. 2. ஆம் எனில் அவர் பெயர், வகுப்பு, பள்ளி  3. அவரோடு பேசியது உண்டா? 4. தினமும் பேசுவீர்களா? 5. நேரில், செல்பேசியில் எவ்வளவு நேரம் பேசுவீர்கள்? 6. பெண் நண்பர்கள் உண்டா? எத்தனை பேர்? 7. அவர்களோடு எப்படிப் பேசுவீர்கள்? போன்ற கேள்விகள் இருந்தன. மறுநாள் வகுப்பறைக்குச் சென்றதும் வினாத்தாளை அனைவருக்கும் கொடுத்தேன்.  தம்பிகளா, இதிலுள்ள கேள்விகளுக்கு கவனமா பதில் எழுதிக் கொடுங்க. உங்க பெயர் தேவையில்லை. உண்மையை எழுதுங்க. நிச்சயமாகத் தனிப்பட்ட எந்த பதிலையும் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றேன். மாணவர்கள் அதிக ஆர்வமுடன் எழுதினார்கள். வகுப்பறை மெல்லிய சிரிப்பொலிகளால் நிரம்பியது. பக்கத்தில் இருப்பவன் எழுதுவதை எட்டிப்பார்ப்பதும் மறைப்பதும்  "ஐயா, எட்டிப் பாக்குறான்!" என்ற குரல்களுமாக வகுப்பறை கலகலப்பாக இருந்தது. பாடவேளை முடிந்ததும் மாணவர்கள் எழுதித் தந்தவற்றை வாசிக்கத் தொடங்கினேன்.  இதுவரை கலந்துரையாடிவற்றையும் வினாத்தாளையும் மனது ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது. பாவம் இவர்கள். கற்பிதங்களின் கனவுகளுக்குள் வாழ்கிறார்கள் என்ற எண்ணம் எழுந்தது.  தொடர்ந்து அனைவரின் பதில்களையும் வாசித்து முடித்தேன். கவலை தோய்ந்த புன்னகை என் முகமெங்கும் நிரம்பியது. நாற்பது சதவீதம் பேருக்குக் 'காதலி' உண்டு. இருபது சதவீதம் பேர் செல்பேசியிலும் நேரிலும் பேசிக்கொள்கிறார்கள். பதினைந்து சதவீதம் பேர் பார்ப்பது மட்டும். ஐந்து சதவீதம் பேர் 'உன் பெயர் என்ன?' என்பது போன்ற சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்கள்.  அடுத்ததாக ஒன்றைக் கேட்கத் தோன்றியது. ஒரு பெண்ணைப் பார்த்ததும் உன் மனதில் என்ன தோன்றுகிறது? கடகடன்னு எழுதுங்க" என்றேன். வகுப்பறை வேகமாக எழுதத்தொடங்கியது. பெண்ணைப் பார்த்ததும் மனதில் எழும் உணர்வுகளை அப்படியே எழுதிவிடுவார்களா? என்று ஒரு கேள்வி மனதில் தோன்ற ஆரம்பித்தது. ஏடாகூடமாக ஏதாவது எழுதிவிட்டால் என்ன செய்வது? என்று ஒரு குரல் எனக்குள் எழுந்தது. மாணவர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையை அவர்களது பதில்கள் காட்டும் என்ற எண்ணம் எழுந்து மற்ற ஐயங்களைச் சற்றே தள்ளி வைத்தது. எனக்குள் நான் உரையாடிக் கொண்டிருந்த போதே  எழுதி முடித்தவர்கள் கொடுக்கத் தொடங்கினர். எதிர்பார்ப்போடு வாசிக்கத் தொடங்கினேன். நான் ஒரு பெண்ணைப் பார்த்தால், அந்தப்பெண் என்னைப் பார்த்தால் இதயம் வேகமாகத் துடிக்கும். உடல் எல்லாம் நடுங்கத் தொடங்கும். அத்துடன் அந்த இடத்தைவிட்டுச் சென்று விடுவேன். முதல் பதிலை வாசித்ததும் உணர்வை அப்படியே எழுதியிருப்பது குறித்து மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை வயதானாலும் நான் உட்பட பலருக்கும் இதே உணர்வு இருக்கத்தானே செய்கிறது என்று நினைத்துச் சிரித்தபடியே அடுத்தடுத்து வாசிக்கத் தொடங்கினேன். பெண்ணைப் பார்த்ததும் அழகா இருக்கிறார்களா என்று பார்க்கத் தோன்றும். அந்தப் பெண்ணிடம் போய் பேச வேண்டும் என்று தோன்றும். கூடவே இருக்கணும்னு தோணும். காதல் வரும். கவிதை எழுதவேண்டும் என்று மனது ஏங்கும். பார்த்ததும் காதல் தோன்றும். வித்தியாசமான உருவமாக, அழகாக இருந்தால் காதலித்துக் கல்யாணம் பண்ணத் தோன்றும். எந்த ஊரு? எந்தப் பள்ளி? என்று கேட்டுப் பேசத் தோன்றும். என் வயதா என்று தோன்றும். மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். பழகத் தோன்றும். நான் ஏன் பெண்ணைப் பார்த்து யோசிக்க வேண்டும்? சிலரைப் பார்த்ததும் மதிக்கத் தோன்றும். நமக்கு ஏற்ற பெண் என்றால் மட்டுமே யோசிக்கத் தோன்றும்.  புத்துணர்ச்சியா இருக்கும். பேசத் தோன்றும். ஆனா பேசியது இல்லை. நான் பார்க்கும் போது அந்தப் பொண்ணு என்னைப் பார்த்தால் எனக்கு வெட்கம் வரும். தம்பிகளா, உங்களோடு தொடர்ந்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி. பல பேர் மனதில் இருப்பதை நம்பிக்கையா பகிர்ந்திருக்கீங்க. உங்களுக்கு ஒரு சில செய்திகளை மட்டும் சொல்றேன். காதல் என்று இங்கே சொல்லப்படும் விளக்கங்கள் பெரும்பாலும் உண்மை இல்லை. உங்கள் வயசுக்கு ஏத்தபடி உடலில் மாற்றங்கள் வரும். அறிவியல் பாடத்தில் விரிவா படிப்பீங்க.  உங்க உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களை கவனிச்சுப் பாருங்க. பெண்களின் முகத்தைப் பார்த்துப் பேசுங்க. நண்பர்களோடு பேசும்போது, குழுவாக இருக்கும் போது கவனமா இருங்க.  காதல் என்று உருகிப் பேசுவதைத் தாண்டி எதையுமே செய்ய முயற்சிக்காதீங்க. எப்போதும் பெண்ணைக் கேலி செய்யக்கூடாது என்பதில் உறுதியா இருங்க. இப்பதான் பெண்கள் வெளியே வராங்க. சிறு அசம்பாவிதமும் அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிவிடும். பெண் சக உயிர் என்று மதிப்பது மனிதத்தன்மை. என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தேன்.  இந்தச் சமூகம் குழந்தைகள் மீது பல முனைத் தாக்குதலை நடத்துகிறது.  அது சுழலாகி இவர்களை இழுத்து மூழ்கடித்து விடாமல் கை கொடுத்துத் தூக்கும் கரங்களே இன்றைய தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது.  தொடர்ந்து சில வாரங்கள் காதல், பெண்ணைச் சக உயிராக மதித்தல் குறித்தே வகுப்பறையில் உரையாடல்கள் நிகழ்ந்தன. பெண், ஆணுக்கு அடங்கி இருக்கவேண்டும். அவனது விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற பாடம் வீட்டிலிருந்தே ஓர் ஆண்குழந்தை கற்கத் தொடங்குகிறது. கலைகள், ஊடகங்கள் வழியே இந்த 'ஆண்மை' வலுவடைகிறது.  குழந்தைகளுக்கான கலைகள், இலக்கியம்,கொண்டாட்ட வெளிகள், சுதந்திரமாக இருக்கும் நேரம், தனது தோழர்களுடன் செலவழிக்கும் நேரம் ஆகிய எல்லாமே இப்போது அரிதாகியிருக்கிறது.  வளரிளம்பருவக் குழந்தைகளின் மனதுள் இயல்பாக எழும் கேள்விகளைக் கேட்டறியும் நம்பிக்கையான பெரியவர்கள் இல்லை. காலம் காலமாகப் பல்வேறு வழிகளில் கிடைத்துவரும் ரகசியக் கதைகளை உண்மை என்றே நம்பத் தொடங்குகிறார்கள். ஆணின் வாழ்நாளெல்லாம் இந்த நம்பிக்கை தொடர்கிறது.  அதுதான் பெண்களின் மீதான மீறல்களை நியாயப்படுத்துகிறது. கலாச்சாரம், பண்பாடு என்று பல்வேறு கூறுகளின் உதவியால் பெண்மையை ஆண்மையே வரையறுக்கிறது. உலகெங்கும் ' ஆண்மை' என்று கற்பிக்கப்பட்ட ஆணாதிக்க சமூகத்தின் குரலாகவே ஜேமி இருக்கிறான்.  தொடர்ந்து பேசுவோம்!

  • மாடியில் கானுலா!

    காலையிலேயே கதைப்புத்தகத்தோடு மொட்டை மாடிக்குச் சென்றான் கதிர். பகலிலும் வீட்டு மாடி குளிர்ச்சியாக இருந்தது. கதிரின் தங்கை கோதையின் விருப்பப்படி, பெற்றோர் மாடித்தோட்டம் அமைத்திருந்தார்கள்.  தினமும் செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி பராமறிக்கிறாள் கோதை. உதிர்ந்த இலைகளைச் சேகரிப்பதும், களைகளை அகற்றுவதும் கதிரின் வேலை.  மேற்குத்தொடர் மலையும், செண்பகக் காடுகளும் மாடியில் இருந்து பார்த்தால் வெகு அருகில் இருப்பதாகத் தெரியும்.  இரவில் எல்லோரும் மாடியில் உட்கார்ந்து நிலாச் சோறு சாப்பிடுவார்கள். மஞ்சள் விளக்கொளியில் மின்னும் ஊரில் பல பகுதிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.  சூரியன் உச்சி வானத்துக்கு ஏறியிருந்தது. மொட்டைமாடியில் இருந்த கதிர், தெருவை எட்டிப்பார்த்தான். பிறகு புத்தகத்தைத் திறந்து ஆர்வத்துடன் கதை வாசித்தான்.  “காட்டில் ஒரு யானை….” திடீரென்று கண்ணெதிரே ஓர் அதிசயத்தைக் கண்டான்.  எதிர்வீட்டுச் சுவரில் யானையின் நிழற்படம் தெரிந்தது. அதில் ஒரு காட்டு யானை! மேற்குமலை காடுகளில் வாழும் யானை, ஊருக்குள் வந்திருந்ததா என்ன? வெயில் நேரத்தில் யானையின் நிழல் அங்கெப்படி வந்தது? கண்ணுக்கெதிரில் மாயாஜாலம் நிகழ்கிறது என்று புரிந்தது.  கதிர், “யானை, தனது கன்றுடன் குளத்தில் இறங்கியது” என்று அடுத்த வரியை வாசித்தான்.  சட்டென, கண்கள் எதிர்வீட்டுச் சுவரைச் சுற்றி சுழன்றது. அதில் ஒரு குட்டி யானையின் நிழற்படம்.  நிழற் யானைகளை கண் வாங்காமல் பார்த்தான் கதிர்.  அப்போது, பூப்பறிக்க மாடிக்கு வந்த கோதை, எதிர்வீட்டுச் சுவற்றில் தெரிந்த நிழற்படத்தை பார்த்து வியந்தாள். உற்சாகம் தொற்றிக்கொண்டது.   “அண்ணா! புத்தகத்தை மூடி வை. நிழற்படங்களைப் பார்த்து நாமே கதை சொல்லலாம்” என்றாள். கதிர் சம்மதித்தான்.  “செண்பகக் காட்டில், ஒரு யானை தனது குட்டியுடன் குளத்துக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றது. காட்டு மரங்களைச் சுற்றி விளையாடியபடியே குட்டியானை சென்றது. தும்பிக்கையில் நீரையள்ளி அம்மா முகத்தில் பீய்ச்சி அடித்தது. அம்மா யானை, முழுவதுமாக நனைந்து போனது” என்று அவள் சொன்ன கதைக்கு ஏற்றபடி, எதிர்வீட்டுச் சுவரில் பிரதிபலித்த நிழற்படத்தின் காட்சிகள் மாறின.  இருவரும் திகைப்பில் ஆழ்ந்தனர். கதையை நிறுத்தாமல் சொன்னால் நிழற்படம் தொடர்ந்து மாறுமா என்ற சந்தேகம். கோதை தொடர்ந்தாள்.   கீழே இருந்த அப்பாச்சி, “கோதை! தொட்டிச் செடியில் இரண்டு தக்காளிகளைப் பறிச்சிட்டு வா. சமைக்கணும்” என்று கத்தியதை இருவரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.  திடீரென்று, கதையில் புலி வந்தது. யானைகள் ஒரு கரையிலும், புலி எதிர்க் கரையிலும் நின்றிருந்தன என கோதை சொல்ல, கதை விறுவிறுப்பாகத் தொடர்ந்தது. “யானை, புலி, செந்நாய், கரடி, வரையாடு, மான், குரங்கு என எல்லா விலங்குகளும் குளக்கரைக்கு வந்து சேர்ந்தன” என்றாள் கோதை.   அடுத்த என்ன நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தான் கதிர்.  கதைக்கு ஏற்றபடி, நிழற்படக் காட்சிகள் மாறின. அண்ணன் தங்கை இருவரும் வீட்டிலிருந்தபடியே கானுலா சென்றதாக உணர்ந்தார்கள். மகிழ்ச்சி அடைந்தார்கள். “குளம் வற்றியிருக்குமோ?” இது கதிர்.  கதை சூடு பிடிக்கத் தொடங்கியது. “குளக்கரையில் என்ன நடக்குதுன்னு தெரியுமா? தண்ணீரில் வாழும் விலங்குகள் ஏதோ புகார் கொடுக்கக் கூடியிருந்தன” என்றாள்.  “அதென்ன புகார்?” “கோடை காலத்தில், குளம் வறண்டு விடுவதாகவும் தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் இறப்பதாகவும் புகார்” “குளத்தை நம்பியே இருக்கிற வாத்துகளும் தவளைகளும் அளிக்கிற புகாரில் நியாயம் இருக்கிறதுதானே. அவற்றுக்கான தீர்வு கிடைக்கத்தானே வேண்டும்” என்றான் கதிர்.  “தலைமை யானை அதற்கு ஒரு வழி சொன்னது” “ஓ, அப்படியா?”  “போர்க்கால அடிப்படையில் குளக்கரையைப் பலப்படுத்தணும். கரையில் மணல் கொட்டி உயரத்தை எழுப்பணும். மழைக்காலம் வருவதற்குள் காட்டாறுப் பாதையை அகலப்படுத்தணும் என்ற யானையின் அக்கறை, மற்ற விலங்குகளுக்குப் புரிந்தன. உடனடியாக பணிகளைத் தொடங்க சம்மதித்தன”  என்றாள் கோதை.  “க்ராக்! க்ராக்!! குவாக்! குவாக்!!”  “இதென்ன சத்தம்?” “அண்ணா! தவளைகளும், வாத்துக்களும் தலைமை யானைக்கு நன்றி தெரிவிக்கின்றன” என்று கதையை முடித்தாள் கோதை.  அப்போது வானத்தில் லேசாக இருட்டிக்கொண்டு வந்தது. பகல் வெளிச்சம் மங்கத் தொடங்கியவுடன் எதிர் வீட்டுச் சுவற்றில் தெரிந்த நிழற்படம் மறைந்து போனது.  நிழற்படம் முடிந்த பிறகு கதிர் யோசித்தான். இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது? சட்டென்று ஒரு யோசனை. “அப்பாச்சி சிறு வயதில் கிராமத்தில் நடக்கும் பாவைக்கூத்து நாடகங்கள் பற்றி நிறையச் சொல்லி இருக்கிறார். ஆமாம்! இதுவும் புதுமையான பாவைக்கூத்து மாதிரியே இருந்தது” என்றான்.  “ஆமாண்ணா!” என்ற கோதை பின்னால் திரும்பிப் பார்த்தாள். காய்கறிப் பந்தல் கொடிகளின் இலைகளை அசைத்துக்கொண்டிருந்த அம்மா பிடிபட்டார். அவரால் உடனடியாக வேறெங்கும் ஓடி ஒளிய முடியவில்லை.  குபீரென்று சிரித்த கதிருக்கும், கோதைக்கும் உண்மை புரிய வந்தது. நிழற்படக் கானுலா புதுமையான விளையாட்டு. மனம் நிறைந்தது.  இதுபற்றி நண்பர்களிடன் சொல்ல, இருவரும் மாடியிலிருந்து இறங்கிச்  சென்றார்கள். கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

  • முள்ளம்பன்றியும் கள்வர்களும்

    அது ஒரு அடர்ந்த காடு. பெருங்கொண்ட மரங்களும் செடிகொடிகளும்  செழிப்பாக வளர்ந்து பசுமையாக இருந்தது. அந்தக்காட்டின் மலைக்குகையில் ஒரு முள்ளம்பன்றி தன் குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. பகல் முழுவதும் தன் குகை வீட்டில் குட்டிகளோடு பொழுதைக் கழித்து மகிழ்ச்சியாக இருந்தது. பொழுது இருட்டும் வேளையில் குட்டிகளோடு வெளியேறி கிழங்குகள், காய், பழங்களை தின்று வயிறு நிறைக்கும். அதுவும் கோரைக்கிழங்கு, கோவைக்கிழங்கு என்றால் அதற்கு ரொம்ப பிரியம். சில சமயம் பத்து அடி ஆழத்திற்கு மண்ணை கிளறித் தோண்டி கிழங்கை எடுத்துவிடும். அப்படி ஒரு நாள் குட்டிகளுடன் கிழங்கு தோண்டி சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த புதரில் ஒரு சிறுத்தைப்புலி பதுங்கியிருந்ததை பார்த்தது.  அது குட்டிகள் மீது பாய்ந்து கவ்விக்கொண்டுபோக எத்தனித்தது. முள்ளம்பன்றி தன் வால்பகுதியின் குட்டையான முட்களுக்கு இடையிலிருந்த கிலுகிலுப்பை முட்களை ‘ஸ்.சிர்.ர்…ஸ்.சிர்.ர்’ரென அசைத்து ஒலியெழுப்பியது. சிறுத்தை பயமின்றி அசையாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. குட்டிகள் தாய்ப்பன்றிக்கு பின்னால் பதுங்கின. சிறுத்தையும் பன்றியை சுற்றிசுற்றி வந்தது. சந்தர்ப்பம் பார்த்து குட்டிகள் மீது சிறுத்தை பாய்ந்தது. பன்றி ஆக்ரோசமாக தன் கழுத்து, தோள் மீதிருந்த நீண்ட முட்களை மயில்தோகை போல விரித்து குட்டிப்பன்றிகளுக்கு கவசமாய் நின்றது. சிறுத்தையும் அங்கிருந்து நகர்வதாக இல்லை. பன்றி சட்டெனத் திரும்பி வலுவான முட்களால் சிறுத்தையின் முதுகில் குத்திக்கிழித்தது. சில தடித்த முட்கள் ஒடிந்து சிறுத்தையின் உடலில் இருந்துகொண்டன. அது இரத்தம் வடிய வலியில் அலறிக்கொண்டு காட்டிற்குள் ஓடி மறைந்தது. பன்றி விரித்த முட்களை ஒடுக்கி, தன் குட்டிகளை பார்த்தது. அங்கிருந்து இடம்பெயர்ந்து மலைச்சரிவின் வழியாக நடந்துகொண்டிருந்தது. சண்டையிட்டு சிறுத்தையை விரட்டிய அது தண்ணீர் தாகத்தில் தவித்தது. சற்று தொலைவில் ஒரு குடிசையும் அதில் விளக்கு வெளிச்சமும் தெரிந்தது. சரி.. அங்கே போய் பார்ப்போம் என்று அந்தக்குடிசையை பார்த்து போனது. குடிசையின் வாயிலில் மூங்கில் கதவு திறந்தே இருந்தது. பன்றி மெதுவாக உள்ளே எட்டிப்பார்த்தது. கிலுகிலுப்பை முட்களை சிலுசிலுவென ஆட்டி ஒரு சத்தம் கொடுத்தது.  அந்தக்குடிசையில் வயதான ஆச்சியும் சிறுமியான அகிலாவும் வசித்து வந்தனர். இந்நேரம்.. என்ன சப்தம் என்று எழுந்த பாட்டி வாசலில் முள்ளம்பன்றிகள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். “பாட்டி.. தாகமாக இருக்கிறது. குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுப்பீர்களா” என்று ஏக்கத்துடன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது. அகிலாதான் முந்திக்கொண்டு, “வாருங்கள்” என்று கைச்சாடை காட்டி குடிசைக்குப் பின்புறமாக கூட்டிச்சென்றாள். அங்கு உவர்மண்ணும் வரகுச்சக்கையும் கலந்து செய்த வாயகன்ற நீளமான தண்ணீர்தொட்டி இருந்தது. அருவிநீர் கொண்டு நிரப்பிய தொட்டியில் காற்று நீரலைகளை தவழவிட்டுக்கொண்டிருந்தது.  உடைந்த முட்களுடனும் சிறுத்தை ஏற்படுத்திய காயங்களுடனும் களைத்துப்போயிருந்த பன்றி தண்ணீரை உறிஞ்சிக்குடித்து ஆசுவாசமானது. “யாருமேயில்லாத இந்தக்காட்டிற்குள் நீங்கள் தனியாக வசிக்கிறீர்களே. நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்” பன்றி விசாரித்தது.  “அதை கேட்கிறாயா.. இந்தக்காட்டில் ஆச்சா மரங்கள் நிறைய உள்ளது. இந்த மரத்தின் பாலில் இருந்து வரும் பிசினை எடுத்து சேகரிப்போம். இந்தப் பிசின்தான் சாம்பிராணிப் புகை போடுகிறோமில்லையா.. அந்தக்குங்கிலியம். இதை அருகிலுள்ள நகரத்தில் போய் விற்றுப் பிழைக்கிறோம்” “அதோ அங்கே தெரிகிறதே.. மலைச்சரிவிலுள்ள பாறைகள். அங்குதான் நாங்கள்  வசிக்கும் குகைவீடு இருக்கிறது. அங்கு நீங்கள் வரலாம். கிழங்கு வகைகளை உண்பதற்கு கொடுப்பேன்” என பன்றி பிரியத்துடன் கூப்பிட்டது. “நீங்கள் என் நண்பர்களாகிவிட்டீர்கள்.. அதனால் உங்களைப் பார்க்க வருவோம்”  “உங்களுடனான உரையாடல் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போது களைப்பாக இருப்பதால் இந்த குடிசை வீட்டில் இன்று இரவு தங்கி காலையில் செல்லலாமா…” “ஓ… தாராளமாக. உள்ளே வாருங்கள்” என்று காய்ந்த சீகம்புல்லும் வரகு வைக்கோலும் சேர்த்து பின்னிய படுக்கையை காண்பித்து ஓய்வெடுக்கச் சொன்னாள் அகிலா. அயர்ந்து போய் உறங்கிக்கொண்டிருந்த இரவுப்பொழுதின் நடுஜாமத்தில் குடிசைக்கு வெளியே ஏதோ அருவம் கேட்டு அகிலாவும் ஆச்சியும் எழுந்து உட்கார்ந்தார்கள். பன்றியும் விழித்துக்கொண்டு நடப்பதை என்னவென்று கவனித்தது. காட்டில் இதுவரை இல்லாத புதிய சப்தமாக அது இருந்தது. பூட்டு இல்லாத தட்டிக்கதவை திறந்துகொண்டு வீட்டிற்குள் கள்வர்கள் நுழைந்தார்கள். ஆச்சி அகல் விளக்கின் திரியை தூண்டவும் வெளிச்சம் வாசலுக்கு வெளியே படர்ந்தது. கள்வர்களின் கைகளில் கம்புகளும் கத்தியும் இருந்தது. ஊருக்குள் குற்றங்கள் செய்து காவலர்களிடம் அகப்படாமல் இருப்பதற்கு காட்டுக்குள் ஒளிந்துகொள்ள வந்தவர்கள். அவர்கள் கரேலென்ற திருக்கு மீசைகளுடன் கடுகடுத்த முகங்களுடன் அமைதியற்று இருந்தார்கள். இந்த நேரத்தில் என்ன செய்வார்களோ என்ற லேசான பயத்துடன் அவர்களைப் பார்த்து பயந்தபோது, முள்ளம்பன்றி ஒரே பாய்ச்சலாக வாயிலுக்கு வந்தது. தன் கிலுகிலுப்பை முட்களை அசைத்து அதிர்வொலி எழுப்பியது. கள்வர்கள் ஒரு அடி பின்வாங்கி வாயிலுக்கு வெளியே கால்வைத்தனர். பன்றி முதுகு காட்டி நீண்ட திடமான முட்களை விரித்து சிலிர்த்தது. அவ்வளவுதான் கள்வர்கள் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தார்கள். இருட்டுக்குள் எங்கே போகிறோம் என்று தெரியாமல் விழுந்தடித்துக்கொண்டு திசைக்கொருவராய் சிதறி ஓடி மறைந்தார்கள். “பன்றி நண்பா… இன்று இராத்திரிப் பொழுது எங்களோடு நீ இருந்ததும் நல்லதாகப் போச்சி.” படபடவென மூச்சு வாங்கிக்கொண்டிருந்த ஆச்சி ஒரு நிதானத்திற்கு வந்தார். சூரியஉதயத்திற்கு முன்பே அதிகாலைப்பொழுதின் மெல்லிய இருட்டில் பன்றிக்கூட்டம் தம் குகைவீட்டைப் பார்க்க நடந்தன. ஜெ.பொன்னுராஜ் 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2

  • அறிவோம் ஆளுமை – 13

    பகத் சிங் – இந்திய விடுதலையின் வீர முழக்கம் நகுலன் : அத்தை, நம்ம நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்களில் உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தர் அப்படின்னா யாரைச் சொல்லுவீங்க?  ஜோ : நிறையப் பேரைப் பிடிக்கும்... ஒருத்தர் அப்படின்னா!  நான் பகத்சிங்கைத் தான் சொல்வேன்.. அவரை ரொம்ப ப் பிடிக்கும். ரதி : எனக்கும் பகத்சிங்கை ரொம்ப ப் பிடிக்கும் அத்தை. அவர் நாட்டு விடுதலைக்காக 23  வயதிலே தூக்குமேடைக்குப் போன போராளி…. ஜோ : உண்மை தான் ரதி.. நீ சொன்னது சரி தான். ஆனால் பகத்சிங் சாதாரண விடுதலைப்போராட்ட வீர்ர் மட்டும் இல்லை.  அவர் ஒரு புரட்சியாளர், சிந்தனையாளர். “ இந்தப் போர் எங்களுடன் தொடங்கவில்லை… எங்களுடன் முடியப்போவதுமில்லை இன்குலாப் ஜிந்தாபாத்! ”  அந்த நேரத்தில் அவர் சொன்னது இன்றும் பலரையும் சிந்திக்க வைக்கிறது. ரதி :‌ அத்தை… அவர் பஞ்சாபில் தானே பிறந்தார். ஜோ :   1907 செப்டம்பர் 27-ஆம் தேதி, இப்போது பாகிஸ்தானில் இருக்கும் பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய அப்பா கிஷன் சிங், அம்மா வித்யாவதி.அவர் பிறந்த நேரத்திலேயே, அவருடைய அப்பா சிறையில் இருந்தார். அவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். நகுலன் :‌ அப்படின்னா… வீட்டிலேயே போராட்டச் சூழல் இருந்திருக்கும் இல்லையா? ஜோ : ஆமாம். அவருடைய குடும்பமே சுதந்திரப் போராட்ட த்தில் ஈடுபட்டார்கள்.. அவருடைய தாத்தாவிடம் தான் பகத்சிங் வளர்ந்தார்.. தாத்தா ஒரு ஆன்மீகவாதி. அதனால் தானோ என்னவோ பகத்சிங்கும் சிறு வயதில் ஆன்மீகவாதியாக இருந்தார்..  ரதி :‌ அப்படியிருந்தவர் எப்படி புரட்சியாளரா மாறினார்? ஜோ : ‌அப்போது இந்தியாவில் இருந்த சூழல், அவர் வாசித்த புத்தகங்கள், ஒரு விஷயம் தெரியுமா குழந்தைகளா? சிறுவயதில் ஆன்மீகவாதியாக இருந்த பகத்சிங் தான் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்று ஒரு புத்தகமும் எழுதினார்… வாசித்துப் பாருங்கள்.. நகுலன்  – வாவ்.. கட்டாயம் வாசிக்கிறோம்.. அவர் எப்படி விடுதலைப் போராட்ட வீர்ர் ஆனார் அத்தை? ஜோ  – நாடு ஏன் அடிமைப்பட்ட து? யார் இந்த பிரிட்டிஷ்காரர்கள்? ஏன் நமது நாட்டில் இருக்கிறார்கள்? நாம் ஏன் போராட வேண்டும் என்று தன் அப்பாவிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு அவருடைய அப்பாவும் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டே  இருந்தார்.‌ அவருடைய கேள்விகளுக்கு கிடைத்த பதில் அவரை விடுதலைப் போராட்ட வீரராக மாற்றியது. நகுலன் :‌   என் அப்பா ஒரு முறை பகத்சிங்கைப்  பற்றிக் கூறும் போது  ஜாலியன் வாலாபாக் படுகொலை தான் பகத்சிங்கை விடுதலைப் போரில் ஈடுபடச் செய்த து என்று சொன்னார் அத்தை. அப்படியா அத்தை? ஜோ : ஒரு வகையில் அது உண்மைதான். 1919-ல் பிரிட்டிஷ் அரசு ரவுலட் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்ட த்தைக் கொண்டு வந்த து.  பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட மிகக் கொடூரமான சட்டம். முதலாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவில் வளர்ந்த புரட்சிகர மற்றும் விடுதலை இயக்கங்களை நசுக்க கொண்டுவரப்பட்ட சட்டம். சந்தேகத்தின் பேரில் யாரையும் விசாரணையின்றி, பிணையின்றி 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். வக்கீல் இல்லை, வாதம் இல்லை, மேல்முறையீடு இல்லை. என்றது இந்த சட்டம்.  அதற்கெதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அமிர்தசரசில் 1919 மார்ச் 30  வேலைநிறுத்தம் நடந்தது.‌ போராட்டம் தீவிரமானது.  பிரிட்டிஷ் அரசு அமிர்தசரசில் ஊரடங்கு உத்தரவு போட்டது. நான்கு பேருக்கு மேல் கூடினால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்  என்ற உத்தரவையும் போட்டது. ரதி :  இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் மறக்க முடியாத இடம் இல்லையா அத்தை?   ஜோ : ஆமாம்… 1919 ஏப்ரல் 13.  ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் அரசியல்  கூட்டம் நடைபெற்றது.  அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.   மைதானத்திற்கு ஒரே வழி மட்டுமே இருந்தது. அதுவும் மிகக்குறுகிய வழி. அந்த மைதானத்திற்குள் ஒரு கிணறு ஒன்றும் இருந்தது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அப்போது போலீஸ் ஜெனரல் டயர் ஒரு படையுடன் வந்தான்…‌ எந்த அறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நட த்தினான். மக்கள் தப்பித்துச் செல்லக் கூடியக் குறுகிய வழியையும் அடைத்தான்… நகுலன்  – கேட்கவே பயங்கரமா இருக்கே அத்தை…  ஜோ   அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டான்.. அந்த த் துப்பாக்கிச்சூட்டில் 379 பேர் இறந்ததாகவும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அரசு சொன்னது.. . ஆனால் உண்மையில் அதைவிட அதிகம். அப்போது பகத்சிங்கிற்கு வயது 12 தான். இந்த சம்பவம் தான் அவரை புரட்சியின் பக்கம் திருப்பியது .  நகுலன் :‌ அவரும்  அங்கே போயிருந்தாரா? ஜோ :   ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து சில மாதங்கள் கழித்து அங்கு சென்றார். அங்கே ரத்தம் தோய்ந்த மண்ணை… ஒரு சிறிய பாட்டிலில் சேகரித்துக் கொண்டார்.. அது அவருடைய வாழ்க்கையை முழுவதும் மாற்றியது. ரதி : அதன் பிறகு அவர் பள்ளி சென்று படிக்கவில்லையா?  ஜோ : அதுக்குப் பிறகு அவருக்கு பள்ளியைவிட நூலகம் தான் பிடித்த இடமாக இருந்தது. லெனின், கார்ல் மார்க்ஸ், கம்யூனிசம் அனைத்தையும் படித்தார் பிறகு வீட்டை விட்டு வெளியேறிப் புரட்சிக்குழுவில் சேர்ந்தார். நகுலன் : பகத்சிங்கை எதற்காகக் கைது செய்தார்கள்? ஜோ : 1928 சைமன் கமிஷன் இந்தியா வந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  லாகூரில் லாலா லஜபதிராய் தலைமையில் நடந்த போராட்டத்தில்  லாலா லஜபதிராய் சாண்டர்ஸ் என்ற இன்ஸ்பெக்டரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலின் விளைவாக அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அதற்குப் பதிலடியாக பகத்சிங்கும் மற்றும் அவரது தோழர்களும் லாலா லஜபதி ராய் இறப்பிற்கு காரணமான சாண்டர்ஸைச் சுட்டுக் கொன்றனர். நகுலன் : அதற்காகத் தான் கைது செய்தார்களா? ஜோ : அது மட்டுமில்லை. இன்னொரு முக்கிய சம்பவம். 1929 ஏப்ரல் 8 – டெல்லி மத்திய சட்டமன்றத்தில்  தொழிலாளர்களுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற அதிகாரிகள் கூடியிருந்தார்கள். பார்வையாளர் இருக்கையில் இருந்த பகத்சிங் மற்றும் பட்டுகேஷ்வர் தத் ஆகிய இருவரும் ஆளில்லாத இடத்தில் வெடிகுண்டுகளை வீசினர். ரதி : ஆள் இல்லாத இடத்தில் எதற்கு வெடிகுண்டுகளை வீசினார்கள்? ஜோ : யாரையும் கொல்வது எங்கள் நோக்கமல்ல. தொழிலாளர்களுக்கு எதிரான மசோதா மீதான எதிர்ப்பைத் தெரிவிக்கவே நாங்கள் குண்டு வீசினோம் என்று பகத்சிங் நீதிமன்றத்தில் சொன்னார். குண்டுகளை வீசி விட்டு அவர்கள் தப்பித்துச் செல்லவில்லை. அங்கே நின்று, இன்குலாப் ஜிந்தாபாத் தொழிலாளர் வர்க்கம் வாழ்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக என்று முழக்கமிட்டனர். துண்டு பிரசுரங்களை வீசினர். பிறகு…தாமாகவே சரணடைந்தனர். நகுலன் : அவர்களோட துணிச்சல் வேற லெவல் அத்தை… ஜோ : ஆமாம்… அந்த இளைஞர்களின் துணிச்சல் மக்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தைக் கொடுத்த து. அவர்களுக்கு ஆதரவு அதிகரித்தது. பிரிட்டிஷ்காரர்கள் பயந்தார்கள். ரதி : பிரிட்டிஷ்காரர்களையே பயப்பட வைத்தார் என்றால் எவ்வளவு பெரிய ஆளு அவரு. ஜோ : மிகச் சரியாகச் சொன்னாய்.  விட்டு வைப்பார்களா? சிறையில் அடைத்தார்கள். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூன்றுபேருக்கும் தூக்குதண்டனை விதித்தார்கள்.  1931 மார்ச் 23. லாகூர் மத்திய சிறை. மாலை 7:30. பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – மூவரும் தூக்கிலிடப்பட்டனர். நகுலன் : அவர் இறக்கும் முன்வரை புத்தகம் படித்துக் கொண்டுதானே இருந்தார்? ஜோ : ஆமாம். லெனின் எழுதிய அரசும் புரட்சியும்  என்ற புத்தகத்தை அவர் படித்துக் கொண்டிருந்தார்… தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்த  போது ஒரு புரட்சியாளர் இன்னொரு புரட்சியாளனோடு பேசிக்கொண்டு இருக்கிறான்… கொஞ்சம் காத்திருங்கள்… வருகிறேன் என்றாராம். ரதி: கேட்கும்போதே உடல் புல்லரிக்கிறது.. அத்தை… வாசிப்பை எவ்வளவு நேசித்திருக்கிறார்..பகத்.. ஜோ  – தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல வந்த காவலர் கேட்டாராம்.. இதோ இன்னும் கொஞ்சநேரத்தில் நீங்கள் இறக்கப்போகிறீர்கள்.. இப்போது வாசிப்பதில் என்ன நடந்து விடப் போகிறது?  நகுலன்  – நம்ம பகத் என்ன சொன்னார் அத்தை?  ஜோ  – உண்மை தான். எதுவும் நடந்து விடாது தான்… ஆனால் இப்போதிருப்பதை விட எனக்கு இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொண்ட மனிதனாக இறப்பேன் அல்லவா? என்று சொன்னார்.  ரதி  – எப்பேர்ப்பட்ட மனிதராக பகத் இருந்திருக்கிறார்! எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கை… வாழ்ந்திருக்கிறார்.. நகுலன்  -  23 வயதில்  முடிந்த அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? . ஜோ ஆமாம் குழந்தைகளே! பகத்சிங்கின் வாழ்க்கை தான் அவர் சொல்லும் செய்தி. : ” “ இந்தப் போர் எங்களுடன் தொடங்கவில்லை… எங்களுடன் முடியப்போவதுமில்லை இன்குலாப் ஜிந்தாபாத்! ” .   ரதி : நகுலன் :   இன்குலாப் ஜிந்தாபாத்!… சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • கருப்பு என்றால்....

    கருப்பு என்றால் அழுக்கு இல்லை கண் கவரும் நிறம் தான்- அதைக் கண்டவுடன் வெறுப் பெதற்கு காட்சிக்கு அது வரம்தான்! கருப்பு என்றால் தாழ்வு இல்லை கார்மேகம் பார் மேலே - அது கனிவுடனே மழை பொழிந்து பார் முழுதும் காக்கும் ! கருப்பு என்றால் எளிமையில்லை கரியில் பிறக்கும் வைரம்- தன் வலிமை காட்டி சுடரெனவே வையகத்தில் ஒளிரும்! கருப்பு என்றால் துக்கம் இல்லை கருங்குயிலின் பாட்டு கரை புரளும் மகிழ்ச்சி - அதை காதுகளில் கேட்டு! கருப்பு என்றால் இகழ்ச்சி இல்லை கண்டோம் மண் டேலா அதிபர் ஆகி நோபல் வென்று அடைந்த புகழின் உச்சி! குருங்குளம் முத்து ராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்  பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.  இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

  • குடை ராட்டினம்

    குதிரை புலி சிங்கம் எல்லாம் ஒன்றை ஒன்று விரட்டுது! இதில் எவரும் முந்தி போகவில்லை இருந்த இடத்தில் இருக்குது! சுற்றிச் சுற்றி வருகுது பார் குடைராட்டினம் - இதில் விட்ட இடம் தொட்ட இடம் எதுவும் தெரியல! வட்டமான சக்கரத்தில் முன்னே பின்னே ஏது விளையாட்டில் எப்போதும் மகிழ்ச்சியையே தேடு! குதிரை மேலே போகும் குழந்தை குதிச்சு குதிச்சு சிரிக்குது! புலிக்காதை திருகி ஒன்னு போபோன்னு விரட்டுது ! சுற்றி முடித்து வந்த பின்னே இறங்கிப் போகலாம் - இதில் வெற்றி தோல்வி எதுவும் இல்லை கொண்டாட்டம்தான்! குருங்குளம் முத்துராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்  பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.  இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

  • நம்மீதும் பொழியட்டும் எழுத்து மழை

    மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கவுள்ள காலத்தில் அதற்கு ஏதுவான ஒரு நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சிதான். அப்படியென்ன புத்தகம்? என்றுதானே யோசிக்கிறீர்கள். இயல் வாகை பதிப்பகத்திலிருந்து வெளியாகியுள்ள ‘ குட்டி இயலும் சுட்டி யானையும்’ என்கிற நூல்தான் அது. கோடை விடுமுறை என்பது இப்போதெல்லாம் முன்பு போலல்ல. வெகு ஆர்வத்தோடு இவ்விடுமுறையை எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கு சில நாட்களிலேயே அவை அவ்வளவு உவப்பானதாக இருப்பதில்லை. வீட்டிலிருந்து வெளியே வந்து கூடி விளையாட வாய்க்காத தருணம், உறவினர் இல்லங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல், அப்படியே சென்றாலும் உரையாடல்களற்று தொலைபேசியிலும் தொலைக்காட்சிகளிலும் கழியும் காலம் என இப்போதைய குழந்தைகளின் விடுமுறைக் காலங்கள் இயல்புகள் திரிந்து காணப்படுகின்றன. பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறிய குழந்தைகள், விடுமுறை காலம் முழுவதும் வீட்டுச் சிறையினில் அடைபடும் துயரமே எஞ்சுகிறது. குழந்தைகள் தனது சிறகுகளை விரிக்க இயலாத அழுத்தத்தினை பிடிவாதமாகக், குறும்புகளாக வெளிப்படுத்திக் கொள்ள முனையும்போது பெற்றோர்கள் ‘சம்மர் களாஸ்’ என்கிற அஸ்திரத்தை பிரயோகிக்கத் துவங்கிவிடுகின்றனர். நாடுகளுக்கிடையேயான போரினை விட்டு விடுவோம். வீட்டில் நடைபெறும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான கண்ணுக்குத் தெரியாத இப்போரினை சச்சரவுகள் ஏதுமின்றி தீர்த்துக் கொள்ள எளிய வழியொன்று உள்ளது. வேறொன்றுமில்லை, அது குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவதும், வாய்ப்புள்ள தருணங்களில் குழந்தைகளோடு அமர்ந்து பற்பல கதைகளைக் கூறி ஈர்ப்பதும்தான். ‘ குட்டி இயலும் சுட்டி யானையும்’ என்கிற சிறார் நாவல் இந்த சிக்கலைத்தான் கதையின் மையமாக வைத்து சூழலியல் பின்னணியோடு பேசுகிறது. நாவலின் முதல் அத்தியாயத்திலேயே சுட்டிக் குழந்தையான இயல் தனது ஒருநாளில் மிச்சமிருக்கும் பொழுதை என்ன செய்வதென்று தெரியாது பெற்றோர்களை இம்சிக்கிறாள். நல்லவேளை அவளின் பெற்றோர்கள் அவளின் வயதிற்கேற்ற புத்தகங்களை வைவசம் வைத்திருக்கிறார்கள். நடுத்தர வர்க்க குடும்பத்தை சார்ந்தவர்களாக காட்சிப்படுத்தப்படும் அவளின் பெற்றோர்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு பாதிப்பில்லாமல் தனது குழந்தையினையும் கவனித்துக் கொள்கிற பாங்கு ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி கதையின் தொடக்கத்தில் அவளின் அம்மா கணினியில் பணியாற்றிக் கொண்டிருக்க அவளது அப்பா சமையலறையிலிருந்து வெளிப்படுகிறார். இது குழந்தைகளின் மனதில் அவசியம் படிய வேண்டிய காட்சி பிம்பம்தானே! கதையின் தொடக்கத்தில் இயல், நேரம் போவதே தெரியாதபடி மாலை வரை விளையாடிக் கழித்துவிட்டுத்தான் வீடு திரும்புகிறாள். இப்பதிவின் முதலிலேயே குறிப்பிட்டதைப் போல இன்றைய குழந்தைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு இயலுக்கு கிடைத்திருப்பதே கதையாசிரியரின் கருணை என்றே எண்ணத் தோன்றுகிறது. வாசிப்பின் சுவையை குழந்தைகள் அறிய முடியாதபடி செய்வதே, பள்ளிகளும் அவை தரும் பாடபுத்தகங்களும் குழந்தைகளுக்குச் செய்யும் முதல் துரோகம் எனலாம். அப்படி புத்தகங்களின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் குழந்தைகளை மெல்ல வாசிப்பின் பக்கம் நகர்த்துவதற்கு கோடை விடுமுறை்நாட்கள் பயனுள்ளவை ஆகும். குழந்தைகளில் கண்ணில் படும்படியாக அவர்களின் வாசிப்பிற்கேற்ற புத்தகங்கள் உள்ளவாறு வீட்டுச்சூழலை மாற்றுவதே பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்க வேண்டும். இந்நாவலில் வரும் பெற்றோர்கள் அதை சரியாகவே செய்திருக்கிறார்கள். வேறு வாய்ப்புகளின்றிப் போனதால் கையிலொரு புத்தகத்தை எடுத்துக் கொண்ட இயலின் உலகம் அதிலிருந்து வேறொன்றாக மாறிவிடுவதை ஒவ்வொரு அத்தியாயங்களுக்குள்ளும் புகுந்து நாம் ஒற்றறிந்து கொள்கிறோம். இயலின் பின்னாகவே பயணிக்கும் நமக்கும் இதுவொரு நல்ல அணுபவமாகவே அமைகிறது. வாசிப்பின் வழியே ஐவகை நிலங்களுக்குள்ளாக பயணமாகும் இயல் ஒவ்வொரு சூழலிலும் நெகிழி ஏற்படுத்தியிருக்கும் அபாயங்களை உணர்கிறாள். ஓ! இது வழமையான வடிவில் குழந்தைகளை சூழலியல் பாடங்களைச் சொல்லி அச்சுறுத்தும் நூல்தானோ? என எண்ணிட அவசியமில்லை. குழந்தைகளின் மனம் ஈர்க்கும் கற்பனைகள் நிறைந்ததாக இந்நூல் அமைந்திருக்கிறது. இயல்பிற்கு முரணாகச் சிந்திப்பதே குழந்தைகளுக்கு தனது அகவுலகை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. அப்படித்தான் இந்நூலில் வெளிப்படும் பறக்கும் யானைகளும் பெரிய பெரிய எறும்புகளும் எழுத்து மழையும் வாகனத்தில் பறக்கும் பென்சில்களுமென நூல் முழுவதும் காட்சிப்படும் உலகம் குழந்தைகளின் கற்பனைகளுக்கு சரியான தீனியாகின்றன. கதையின் போக்கில் கெளரவ வேடத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் சமகால சிறார் எழுத்தாளர்களான உதயசங்கர், விழியன், சரிதா ஜோ போன்றவர்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களாக மிளிர்கிறார்கள். எதனோடும் பொருத்திப் பார்க்க முடியாத புதிய தமிழ் கார்ட்டூன் சித்திரங்களாக இவர்களை வாசிப்பவர்கள் தம் மனதில் இருத்திக் கொள்வார்கள். புதிய வடிவில் சமகால சிறார் எழுத்தாளர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இப்படியான உத்திகள் உதவக்கூடும். இச்சிறார் நாவலை வாசித்து மிடித்த தருணத்தில் ஒவ்வொரு நிலப்பகுதிகளுக்காக இயல் இடம்பெயரும்போதும் கூடுதல் தகவல்களோடு அப்பகுதியினை அறிமுகப்படுத்தி இருக்கலாமோ எனத் தோன்றியது. அதேசமயம் இறுதியாக தர்க்கரீதியாக பொருந்தாத தீர்வினை சொல்லாமல் தவிர்த்தது; நெகிழி குறித்த செய்திகளை இறுதியில் தகவல்களாக அளித்தது போன்றன நல்ல கூறுகள் உள்ளடங்கி இருப்பதையும் கவனிக்க முடிந்தது. பல வண்ண காகிதங்கள், கதையின் போக்கை காட்சிப்படுத்தும் அழகான ஓவியங்கள், வாசிப்பிற்கேற்ற எழுத்துரு, புத்த வடிவம் என நேர்த்தியான படைப்பு இது. ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கான சிறப்பானதொரு நூலினை வெளியிடும் இயல் வாகை பதிப்பகத்தின் மற்றுமொரு சிறந்த உருவாக்கம் இந்நூல். அதுபோலவே, தனது முதல் நூலிலிருந்தே பலரின் கவனத்திற்கு உள்ளான பிரசாந்த் வே அவர்களின் நான்காவது படைப்பு இந்நூல். இந்த கோடை விடுமுறைகாலத்தில் வாசிப்பின் அவசியத்தை நமது குழந்தைகளிடமும் கடத்திட இந்த புத்தகத்தை முதலில் நாம் வாசிப்போம். பிறகு குழந்தைகளுக்கு அளித்திடுவோம். இயலுக்குப் பெய்த எழுத்தின் மழை இக்கோடையில் நம் குழந்தைகளின் மீதும் பொழியட்டும். க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.

  • பெர்லின் சுவர் (ஜெர்மனி)

    நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது (1989) பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் வண்ண வண்ணப் படங்கள் வெளிவந்தன. சுவரின் அருகே நிற்கும் காவலாளிக்குப் பெண் ஒருவர் பூச்செண்டு கொடுப்பது போல் ஒரு படமும் சுவரின் மீது ஏறி சிலர் இடித்துக் கொண்டிருந்த இன்னொரு படமும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன. அப்போதைக்கு இரண்டு ஜெர்மனிகளும் இணைகின்றன; இரு நாடுகளையும் பிரித்து வைத்த சுவர் உடைக்கப்பட்டது என்ற அளவிலேயே என் புரிந்துகொள்ளுதல் இருந்தது. பெர்லின் சுவர் இருந்த இடங்களைப் பார்த்துவிடுவேன் என்று கனவில் கூட நான் எண்ணியதில்லை. 2003ஆம் ஆண்டின் இறுதியில் ஜெர்மனி வாசம் முடிந்து ஸ்வீடனுக்குக் குடியேற (குடியேற்ற உரிமை பெற) பெர்லினில் இருந்த ஸ்வீடன் தூதரகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த வேலை முடிந்ததும் மூன்று நாட்கள் பெர்லினையும் சுற்றிவரத் (நானும் எனது மனைவியும்) தீர்மானித்தோம்.பெர்லின் சுவர் இருந்த சுவடு தெரியாமல் முற்றிலும் மறைந்து விட்டாலும் சுவரின் மிச்சங்கள் இன்றும் ஓரிரு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவும் நினைவுச் சின்னமாகவும் பாதுகாக்கப் பட்டுள்ளன. இது பற்றிய ஒரு அருங்காட்சியகமும் உண்டு. இவற்றையெல்லாம் காணும் முன் வரலாற்றைச் சற்றே புரட்டிப் பார்த்துவிட்டு வரலாம், வாருங்கள். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் அழிவுக்குப்பின் ஜெர்மனியில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரு புதிய நாடுகள் உதயமாயின. அன்றிலிருந்து பெர்லின் நகரம் பிரச்சனைக்குரிய பகுதியானது. அன்றைய பெர்லின் நகரம் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அதன் நிர்வாகம் நேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரஷ்யா வசம் இருந்த கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகராகவும் ஆனது. முதலில் இரு நாடுகளுக்குமிடையே எல்லை கடந்து செல்வது பிரச்சினையாக இல்லை. நாளடைவில் "மேற்கு பெர்லினில் இருக்கும் நேச நாடுகள் விலகிக் கொண்டு மேற்கு பெர்லினை சுதந்திரப்பகுதியாக்க வேண்டும்" என்ற கிழக்கு ஜெர்மனியின் வாதம் கேட்க ஆரம்பித்தது. அமெரிக்க , பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் இதற்கு உடன்படவில்லை. மேற்கு பெர்லினின் சுதந்திரத்தைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள அங்கே தொடர்ந்து இருப்பதாகக் கூறிவிட்டார்கள். படம்: பெர்லின் நகர் - 1961 ஆம் வருடத்தில், நான்கு கட்டுப்பாட்டுப்பகுதிகளுடன். மஞ்சள் வண்ணப் பட்டை - பெர்லின் சுவர் கட்டப்பட்ட பகுதி. இதனால் வெறுப்படைந்த கிழக்கு ஜெர்மனி அரசு, மேற்கு ஜெர்மனியிலிருந்து எல்லை கடந்து வருவதற்குப் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது. இரு பகுதிகளையும் இணைக்கும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அப்போதைய ரஷ்ய அதிபராயிருந்த குருஷேவ், மேற்கு பெர்லினில் இருந்து நேச நாட்டுப்படைகள், ஒரு குறித்த நாளுக்குள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தார். இதற்கு நேச நாடுகள் மறுத்துவிட்ட நிலையில் இரு பகுதிகளுக்குள்ள ராஜ்ஜிய உறவு மேலும் சீர்கெட்டது. அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் குருஷேவிற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் பயனின்றிப் போய்விட்டன. கிழக்கு ஜெர்மனி அரசு அதன் பின்னர் எல்லை கடந்து செல்வதற்குத் தடை விதித்தது. தடை விதிக்கப்பட்ட அத்தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வெளியேறி மேற்கு ஜெர்மனியில் அடைக்கலமாயினராம். இதைத் தடுக்க இரு நாடுகளையும் பிரிக்கும் சுவர் ஒன்றைக் கட்ட அரசு திட்டமிட்டது. 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள், இரவு இரண்டு மணிக்கு காவல்படை இரு பகுதிகளையும் பிரிக்கும் இடத்தில் அணிவகுத்தது. வேலிகள் இடப்பட்டன. இரு பகுதிகளுக்கும் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அன்று காலையில் இதைக்கண்ட கிழக்கு பெர்லின் மக்கள் ஆத்திரமடைந்தனர். அரசை எதிர்த்துப் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. காவலர்கள் அறியா வண்ணம் மேற்கு பெர்லினுக்குப் பலர் தப்பித்துச் சென்றனர்.வேலிக்கு அருகே அதனைத் தொடர்ந்து அகழிகள் தோண்டப்பட்டன. சுவர் நெடுநெடுவெனக் கட்டப்பட்டு வளர்ந்தது. எல்லை நெடுகிலும் கண்காணிப்புக் கோட்டைகள் கட்டப்பட்டன. அரசிடமிருந்து அனுமதி (விசா) பெறாமல் எல்லை கடப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது.சுமார் நூற்றி ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் நீளமுள்ளது இச்சுவர். சுவரின் தடிமன் முப்பது சென்டிமீட்டர். பதிமூன்றே நாட்களில் இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கிழக்கு பெர்லின் மேற்குப் பகுதியிலிருந்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டது. இரண்டு பகுதிகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த இன்னலுற்றனர். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க இயலாது அவதியுற்றனர். பலர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்ல முயன்றனர். தப்பிச் செல்ல இயலா வண்ணம் காவல் பலமாயிருந்தது. இருப்பினும் இம்முயற்சியில் பலர் வெற்றி பெற்றனர். இவ்வாறு தப்ப முயற்சிப்பவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றே காவல் துறைக்கு ஆணையிடப்பட்டிருந்ததாம். ஆயினும் இறுதி நடவடிக்கையாக, தப்ப முயற்சிப்பவர்கள் எச்சரிக்கையை மீறினால் சுடலாம் என்று எல்லைப்படைக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. எச்சரிக்கையை மீறி எல்லை கடப்பவர்களைத் திரும்பச் சொல்லி வானை நோக்கி ஒருமுறை சுடுவார்களாம். அதனையும் மீறிச் சென்ற நூற்றுக் கணக்கான மக்கள் சுடப்பட்டு இறந்தனர். எவ்வளவு பேர் இறந்தனர் என்ற உண்மையான விவரம் அரசால் மறைக்கப்பட்டது. படம்: ப்ரான்டன்பர்க் நுழைவாயிலும் அதைச் சுற்றியிருந்த பெர்லின் சுவரும் (1969-ல்)சுவர் கட்டிய முதலாம் ஆண்டு நிறைவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சி நடைபெற்றது. பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் கிழக்கு ஜெர்மனிக்கு மேற்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சட்டங்கள் சற்றே தளர்த்தப்பட்டு உறவினர் திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளின் போது அனுமதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே வருபவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா இருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பெர்லினின் மேற்குப்பகுதியிலிருந்து கிழக்கே நுழைய நுழைவுச் சாவடிகள் உண்டு. அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதிலிருந்து கிழக்கு பெர்லின் நுழைய அமைந்த ஒரு சாவடி ப்ரைடுரிஹ்ஸ்ட்ராசே (Friedrichstrasse) எனும் இடத்தில் அமைந்திருந்தது. செக்பாயிண்ட் சார்லி (Check point Charlie) எனப்பெயரிடப்பட்ட இச்சாவடியில் இருந்து கிழக்கு பெர்லின் நுழைவதற்கு ஏராளமானோர் தினந்தோறும் வரிசையில் நிற்பது பல வருடங்களுக்கு வழக்கமாயிருந்தது. "அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து நீங்கள் வெளியேறுகிறீர்கள்" என அறிவுறுத்தும் பலகை (ஆங்கில, ஜெர்மன்,ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழிகளில்) அங்கு வைக்கப்பட்டு இருந்தது.செக்பாயிண்ட் சார்லி தற்போது சுவர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பெர்லின் சுவரின் பல்வேறு நிகழ்வுகளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது. அது குறித்துப் பின்னர் காண்போம்.இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த போராட்டம் நாளாக நாளாக வலுத்ததேயன்றிக் குறையவில்லை. கிழக்கு ஜெர்மனியிலும் அரசாங்கத்திற்குப் பல்வேறு நெருக்கடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. 1987-ல் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ரொனால்ட் ரீகன் ஜெர்மனிக்கு விஜயம் செய்தார். பெர்லின் நகரின் புகழ் பெற்ற பிரான்டன்பர்க் வாயில் முன் நிகழ்த்திய உரையில் சுவரைத் தரைமட்டமாக்குங்கள் என்று ரஷ்ய அதிபர் கார்பஷேவிடம் கேட்டுக்கொண்டார். ரஷ்ய அதிபரும் தனது திட்டமான பெர்ஸ்த்ரோய்கா - வை (Perestroika) அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகளுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் மாற்றம் ஏற்படும்படி சுதந்திர உரிமை வழங்கப்படும் என்று அறிவித்தார். எண்பதுகளின் இறுதியில் ஐரோப்பாவில் ஏகாதிபத்யம் வீழ்வுற்று ஜனநாயகப்பாதையில் சில நாடுகள் அடியெடுத்து வைத்தன. கிழக்கு ஜெர்மனியிலும் போராட்டங்கள் தொடர்ந்தன. 1989-ல் ஹங்கேரி தனது எல்லைகளைக் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வரும் அகதிகளுக்குத் திறந்துவிட்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. இறுதியாக வேறு வழியின்றி 1989 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் நாள், கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனி செல்ல இனி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று அரசு அறிவித்தது. மறுநாள் முதல் சுவரின் கதவுகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு அதுவரை காத்திருக்கப் பொறுமை இல்லை. அன்றிரவே ஆயிரக்கணக்கான மக்கள் சுவரின் இருமருங்கும் கூடினர். கிழக்கு ஜெர்மன் காவலாளிகளுக்கு வாசலைத் திறந்து விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சந்தோஷ ஆர்ப்பரிப்பில் மக்கள் மேலும் திரண்டனர். சுவர்கள் மீது ஏறினர். சுவரை உடைத்தனர். சுவர் இருந்த சுவடு சில நாட்களில் மறைந்தது. இரு நாடுகளும் இணைந்தன. உலகம் வாழ்த்தியது. நெய்டர்கிர்ஹ்னெர் ஸ்ட்ராசே (Niederkirchner Strasse) என்னும் தெருவில் பெர்லின் சுவரின் மிச்சங்கள் இருக்கும் விவரத்தை பெர்லின் சுற்றுலாத்தகவல் மையத்தில் கேட்டறிந்து அவ்விடத்திற்குப் புறப்பட்டோம். பெர்லின் சுவர் முற்றிலுமாக நகர மக்களின் பார்வையிலிருந்து மறைந்து விட்டாலும் ஒரு சில இடங்களில் இன்னும் நினைவுச் சின்னமாகப் பாதுகாப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும். நான் மேலே குறிப்பிட்ட தெருவை (எங்கே, அந்தப் பெயரை இன்னும் ஒருமுறை உச்சரியுங்கள் பார்ப்போம்) அடைந்து சுவரைத் தேடி நடந்தோம். சுவரைக் காணவில்லை. தவறுதலாய் வேறு இடத்திற்கு வந்து விட்டோமா என்று ஐயுற்று, தெருப்பெயரைச் சரிபார்த்ததால், அந்தத் தெருதான். அவ்வழி சென்ற ஒருவரைப் பார்த்து சுவர் எங்கே என்று விசாரித்தால் சற்றுத் தள்ளியிருந்த ஒரு குட்டிச் சுவரைக் காண்பித்தார். அருகில் சென்றபிறகுதான் அது குட்டிச் சுவரல்ல, வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்லின் சுவர் என்று தெரிந்தது. சுமார் இருநூறு மீட்டர் நீளம் மட்டும் தற்போது எஞ்சியுள்ளது. எனது மேலாளராக மியூனிக்-கில் பணிபுரிந்தவர் எரிக் எனும் அமெரிக்கர். அவரது மனைவி ஜெர்மானியர். இருவரையும் நாங்கள் பெர்லினில் சந்தித்தோம் (அப்போது அவர் அங்குதான் பணிபுரிந்தார்). பெர்லின் சுவர் கண்டு வந்ததைப் பற்றி அவரிடம் சொன்னபோது 1989-ல் சுவர் இடிப்பதற்கு சில நாட்கள் முன் அவர்கள் இருவரும் பெர்லின் சுவரைக் காண வந்ததை நினைவு கூர்ந்தார். ஏராளமான காவலாளிகள் இருபுறமும் வரிசை கோர்த்திருக்க, பெர்லின் சுவர் நகரை இரண்டாகப் பிரித்திருந்த காட்சிகள் இன்னும் நினைவில் ஓடுவதாய்க் குறிப்பிட்டார்கள். அவர்கள் வந்து சென்ற சில நாட்களில் சுவர் தரைமட்டமாகியதில் மகிழ்ச்சியடைந்ததாய்க் கூறினார்கள் முந்தைய மேற்குப்பகுதியிலிருந்து தற்போது சுவரைப் பார்த்தால் அதன் முக்கியத்துவம் ஒன்றும் புலப்படவில்லை. மிகவும் சாதாரணமான சற்றுப் பாழடைந்த சுவர் என்று மட்டுமே எண்ணம் வரும். ஆனால் கிழக்குப் பகுதியிலிருந்து பார்க்கையில் மற்றுமொரு நினைவிடமும் சுவரை ஒட்டிக் காணப்பட்டது. பயங்கரவாதப் புவியமைவு (Topography of Terror) எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சியின் நோக்கம் ஹிட்லர் காலத்துத் தீவிரவாதத்தை இன்றைய தலைமுறைக்கு உணர்த்தி இத்தகு போக்கை விட்டு அமைதிக்கும் சமாதானத்திற்கும் செல்லும் பாதையினைக் காட்டுவதற்குத்தான்.1935-க்குப்பின் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் புகைப்படங்களாக இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை ஹிட்லரின் படையினர் ஈவிரக்கமின்றிச் சுடும் காட்சிகள் மனதை உலுக்கும். ஹிட்லரின் முதன்மைக் காவல் அதிகாரி ஹிம்லெரின் அலுவலகம் மற்றும் ஹிட்லரின் சோஷலிச அரசின் முக்கிய அலுவலகங்கள் இந்த இடத்தில் அமைந்திருந்தனவாம். அரசியல் எதிரிகளையும் யூதர்களையும் கொன்றுகுவிக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டதும் இங்குதான். இக்கட்டடங்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மண்ணோடு மண்ணாயின. 1970-க்குப்பின், மறைந்த இச்சின்னங்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மக்களறியும் வண்ணம் அருங்காட்சியகங்களாகவும், கண்காட்சிப் புகைப்படக் கூடமாகவும் மாற்றப்பட்டன. இந்நிகழ்வுகளைப்பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.இது தவிர கிழக்குப்பக்க ஓவியக்காட்சி (East Side Gallery) ஒன்றும் உண்டு. கிழக்கு பெர்லினின் பகுதியிலிருந்த சுமார் 1.3 கிலோமீட்டர் நீளச் சுவரில் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த ஓவியர்களால் சுவர்ச் சித்திரங்கள் தீட்டப்பட்டன.வன்முறையையும் அடக்குமுறையையும் எதிர்த்துக்குரல் கொடுத்து அன்புக்கும் அமைதிக்கும் ஆதரவாக மௌனமொழி பேசுகின்றன இவ்வோவியங்கள். 1990-ல் தீட்டப்பட்ட இவை பத்தாண்டுக்குப்பின் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.செக் பாயிண்ட் சார்லி - கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குள் நுழைய அனுமதி பெறும் இடம். இங்கு சுவர் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. சுவர் கட்டப்பட்ட பின்னும் அங்கிருந்து தப்பித்தவர்களைப்பற்றிய பல குறிப்புகளும் தப்ப உதவிய பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. சுமார் ஐயாயிரம் பேர் கிழக்கு ஜெர்மனி காவலாளிகளின் கண்களில் மண்தூவித் தப்பித்தனர். தப்பிய கதைகளையும் தப்புவதற்குதவிய பொருட்களையும் சேகரித்து அருங்காட்சியகமாக வைக்கும் வேலைகள் 1960-களின் இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டனவாம்.  செக் பாயிண்ட் சார்லி அருங்காட்சியகம். உள்ளே நுழைந்தவுடன் வண்ண வண்ண பாஸ்போர்ட்கள் வரவேற்றன. இவையனைத்தும் போலி பாஸ்போர்ட்டுகளாம். கிழக்கு ஜெர்மனியிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனி வருவதற்கு போலியாகப் பல பாஸ்போர்ட்டுகள் தயாரித்து காவலாளிகளை ஏமாற்றினராம். அவர்கள் பயன்படுத்திய பாஸ்போர்ட்டுக்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளனர். அருங்காட்சியகம் முழுவதும் பெரிய பெரிய கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் அவற்றுக்கருகே அப்புகைப்படங்கள் பற்றிய குறிப்புக்களும் நிறைந்துகிடக்கின்றன. ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்ய மற்றும் பிரஞ்சு மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன..ஒரு பழைய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இஸெட்டா (Isetta) என்னும் சிறிய ரகக்கார் அது. அந்த வண்டியின் பெட்ரோல் நிரப்பும் டேன்க்-கை ஒருவர் ஒளிந்துகொள்ளும் வகையில் மாற்றி அமைத்தார் அந்தக் காரின் சொந்தக்காரரான ப்ரீஸ்டோபர் என்பவர். இதை மாற்றி அமைக்க இரண்டு மாத காலமானதாம். தபால் எடுத்துச் செல்லும் வேலை செய்துகொண்டிருந்த இவர் இக்காரில் ஒன்பது பேரை கிழக்கு ஜெர்மனியிலிருந்து மீட்டு மேற்கே அழைத்து வந்தார். பத்தாவது முறை மாட்டிக்கொண்டாராம். 1964 ஆம் வருடத்து மாடலான இந்தக்கார் இன்னும் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.லாரிகளை வேகமாக ஓட்டி வந்து சுவர்களை இடிக்கும் முயற்சியும் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முயற்சிகளைத் தடுக்கும் வண்ணம் சுவரின் அருகே அகழிகள் தோண்டப்பட்டு வேலி அமைத்துக் காவல் பலப்படுத்தப்பட்டது. துணிகள் தைக்கும் தையல்காரர் ஒருவர் தினமும் மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே செல்வது வழக்கம். தையல் எந்திரத்தை ஒரு பெரிய மர டப்பாவினுள் எடுத்துச் செல்வாராம். கிழக்கு பெர்லினைச் சேர்ந்த ஒரு பெண் தப்பிக்க உதவும்படி கேட்டுக்கொள்ளவே அந்த மர டப்பாவினுள் தையல் எந்திரத்துக்குப்பதில் அப்பெண்ணை அடைத்துத் தனது சைக்கிளில் ஏறி ஓட்டிக்கொண்டே எல்லை கடந்தாராம். தினசரி அவர் செல்கையில் சோதனை செய்யும் காவலர்கள் சில நாட்களில் சோதிக்காமலே விட்டுவிடுவது வழக்கம். அன்றும் அதிர்ஷ்டம் அவருக்குக் கை கொடுத்தது. அப்பெண்ணும் தப்பித்தாள். சில நாட்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனராம்சுவரின் கீழ்வழியாக சுரங்கம் தோண்டித் தப்பித்த கதைகளும் உண்டு. கிழக்கு பெர்லினில் இருந்த சில மாணவர்கள் ஒரு வீட்டின் குளியலறையிலிருந்து சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். நூற்றி நாற்பத்தைந்து மீட்டர் நீளமான இச்சுரங்கம் மேற்கு பெர்லினில் ஒரு பேக்கரியில் முடிவடைந்தது. இச்சுரங்கம் வழியாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தப்பித்தனர். ஆனால் இச்சுரங்கம் சில நாட்களிலேயே கிழக்கு பெர்லின் காவலாளிகளால் கண்டு பிடிக்கப்பட்டு மூடப்பட்டது. இதே போல் கிழக்கு பெர்லினில் மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டதாம். கல்லறையினருகே தொடங்கிய இச்சுரங்கத்தைப் பயன்படுத்தியும் பலர் தப்பித்தனர். பெரிய ராட்சத பலூன்களில் காற்று நிரப்பி அதில் மிதந்தபடி வனவீதியின் வழியே தப்பிய ஒரு சம்பவமும் உண்டு. மற்றுமொருவர் ஒரு சிறிய க்ளைடர் விமானத்தை உருவாக்கி அதில் பறந்து தப்பினாராம். ரஷ்ய நாட்டு ராணுவ வீரர்கள் போல் சீருடை அணிந்த சிலர் எல்லை கடந்து செல்கையில், அவர்கள் உண்மையிலேயே ரஷ்ய வீரர்கள் என எண்ணிய கிழக்கு பெர்லின் காவலாளிகள் விரைப்பான சல்யூட் அடித்தனரம். மரியாதையை ஏற்றுக்கொண்டே அவர்கள் மேற்கு பெர்லினில் தஞ்சமானார்களாம். சுவரை ஒட்டியிருந்த வீடுகளும் தப்பிக்க உதவியிருக்கின்றன. மேற்குப் பகுதியிலிருந்த ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் ஜன்னலில் கட்டப்பட்ட கயிறு ஒன்றைப்பிடித்து கிழக்குப்பகுதியிலிருந்து சுவர் ஏறித் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு. சுமார் ஐயாயிரம் பேருக்கு மேல் தப்பித்த நிகழ்ச்சிகள் வரலாறு ஆகியுள்ளன. இது தவிர கிழக்கு ஜெர்மனி ராணுவத்தைச் சேர்ந்த எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்களும் தப்பித்து மேற்கு பெர்லினில் அடைக்கலமாயினர். பெர்லின் சுவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை விளக்கும் பல ஒளி-ஒலிக் காட்சிகள் சிறு சிறு அறைகளில் காட்டப்படுகின்றன. அஹிம்சை வழிப்போராட்டம்- காந்தி முதல் வலசா (போலந்து நாட்டு அமைதிப்புரட்சியாளர்) வரை என்ற ஒரு விவரணப்படமும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. பெர்லின் சுவர் பற்றிய நினைவுப் பொருட்கள் வாங்கும் சிறு கடையில் உடைந்த சுவரின் துண்டுகள் தற்போது விலைக்குக் கிடைக்கின்றன. ஏராளமான நினைவுகளைச் சுமந்து கொண்டு அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறினோம். எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’  ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

bottom of page