இயலில் தேடலாம்!
268 results found with an empty search
- அறிவியல் கற்பேன்
அறிவியல் கற்பேன் - நான் அனுதினம் கற்பேன் பெரிய விஞ்ஞானி - எனும் பெயரும் வாங்குவேன் . ராக்கெட் ஏறுவேன் - வான ரகசியம் கற்பேன் பார்க்க அரியவை பல பார்த்துத் திரும்புவேன். சந்த்ர மண்டலம் நான் சென்று மீளுவேன் வந்து சந்த்ரனின் -பல விந்தை சொல்லுவேன். செவ்வாய் செல்லுவேன் - புதிய சேதி சொல்லுவேன் எவ்வாய் ஆயினும் - பிறகு என்புகழ் பாடும்
- சீனா பாடாவின் ஆபக்
இந்தியில்: ஃபயாஸ் அகமது தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ தினமும் காலையில் சில பழக்கமான சத்தங்களைக் கேட்டுத்தான் எனது கண்கள் திறக்கும். தூக்கம் வழியும் கண்களைத் துடைத்துக்கொண்டு, கையில் வாளியைத் தூக்கிக் கொண்டு தெருமுனைப் பொதுக் குழாய்க்கு ஓடுவேன். அங்கே மனிதர்களின் நீண்ட வரிசை ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து நிற்கும். அதைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும்! எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மனிதர் வசித்தார். சுற்றி இருப்பவர்கள் அவரை 'ஆபக்' என்று அழைப்பார்கள். அந்தப் பெயர் எனக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றும். ‘ஒரு இந்தியருக்கு எப்படி இப்படி ஒரு பெயர் இருக்க முடியும்?’ என்று நான் அடிக்கடி யோசிப்பேன். நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. உண்மையில், ஆபக் இந்தியர் அல்ல. அவர் சீன நாட்டைச் சேர்ந்தவர். நான் குடியிருந்த அதே கட்டிடத்தில்தான் அவரும் வசித்தார். எங்கள் பகுதியில் தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு இருந்தது. தெருவோரக் குழாயில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தண்ணீர் பிடிப்பார்கள். வழிப்போக்கர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், தள்ளுவண்டி இழுப்பவர்கள் என எல்லோரும் அங்கேதான் வருவார்கள். கொல்கத்தாவில், நாங்கள் வசித்த பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அங்கு வசிப்பவர்கள், பொதுவாக அவர்களைச் 'சீனா' என்று கூப்பிடுவார்கள். அதனால்தான் அந்த இடத்திற்கு 'சீனா பாடா' (சீனா குடியிருப்பு) என்று பெயர் வந்தது. சீன மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் எங்களது வீட்டருகில் தாராளமாகக் கிடைக்கும். சீன நாட்டவருக்கு வீடுகள், ஹோட்டல்கள், கடைகள், பள்ளிக்கூடம் என எல்லாமே அங்கு உண்டு. அவர்களுக்கு ஒரு கோயிலும் இருந்தது. ஆனால், சில வியாபாரிகள் சேர்ந்து அந்தக் கோயிலை ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு மாற்றிவிட்டார்கள். கீழே கோயில் இருந்த இடத்தை ஒரு பாதுகாப்புக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். சாமி கும்பிடும் இடத்தை இப்படி மாற்றிவிட்டார்களே என்று யாரும் சண்டை போடவில்லை. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது எனக்குச் சிறு வயது என்பதால் அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு குழப்பமான விஷயமாகத் தெரிகிறது. ஆபக் ஒரு சீனக்காரர். மொட்டை மாடிக்கு மாற்றப்பட்ட அந்தக் கோயிலின் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த ஒரு சிறிய இடத்தில்தான் அவர் தங்கியிருந்தார். அதிகாலையிலேயே அவர் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார். “நீ சீனா, உன் அப்பா சீனா, உன் குடும்பமே சீனா” என்று அவர் சொல்லும்போது புருவங்கள் கோபத்தில் சுருங்கும், முகம் சிவக்கும். இதற்கெல்லாம் காரணம் ‘தபாரக் அலி' என்பவர்தான். தபாரக் அலியும் எங்கள் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் தான். அவர் ஆபக்கை அடிக்கடி சீண்டிப் பார்ப்பார். சும்மா இருக்காமல், “ஏய் ஆபக்! நீ ஒரு சீனாக்காரன்” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவ்வளவுதான், ஆபக்கிற்குப் பயங்கர கோபம் வந்துவிடும். இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடக்கும். இது தினமும் நடக்கும் ஒரு விஷயம். “நீ ஒரு சீனாக்காரன்” என்று தபாரக் அலி சொல்வது, ஆபக்கிற்கு ஒரு கெட்ட வார்த்தையை விட அதிக வலியைத் தரும். அந்த வேதனை அவர் முகத்திலேயே தெரியும். அவர் கோபத்தில் துடிப்பார். அருகில் நிற்பவர்கள் இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர் திட்டிக் கொண்டே குழாயில் தண்ணீர் பிடித்துவிட்டு, வேகமாகத் தன் வீட்டிற்குள் சென்றுவிடுவார். அவர் தங்கியிருந்த இடத்தை ஒரு 'வீடு' என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. மாடிக்குச் போகும் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த அந்தச் சிறிய இடம்தான் அவருடைய உலகம். ஆபக், சண்டை போட்டு ஓய்ந்த பிறகு, சில அலுமினியக் கம்பிகளை எடுத்துப் பறவைக் கூண்டுகள் செய்யத் தொடங்குவார். அவர் தன் மனதில் உள்ள கவலைகளை எல்லாம் அந்தக் கம்பிகளை வளைப்பதன் மூலமே தீர்த்துக் கொள்வார் போலத் தோன்றும். கோயிலைப் பாதுகாப்பதும், கூண்டுகள் செய்வதும்தான் அவருடைய வேலை. கோயிலுக்கு வரும் மக்கள், அன்போடு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வார். ஆனால், அவர் யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார். ஆபக் தயாரிக்கும் கூண்டுகள் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். மக்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து ஆசையோடு வாங்கிச் செல்வார்கள். அவருக்கு நிறையப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. அன்றைய சாப்பாட்டிற்குப் பணம் கிடைத்தால் போதும் என்று நினைப்பார். கொல்கத்தாவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவருடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, மனைவி மற்றும் குழந்தைகள் என எல்லாரும் சீனாவில் இருந்தார்கள். பாவம், அவரால் யாரையும் போய்ப் பார்க்க முடியாது. அங்கிருந்து யாரும் இவரைத் தேடி வரவும் முடியாது. உண்மையில் ஆபக் ஒரு போர்க்கைதி. 1962 இல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்தது. மற்ற போர்களைப் போலவே இதிலும் நிறைய பேர் உயிரிழந்தார்கள். இரண்டு நாடுகளுக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. போரில் சில வீரர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். சீன வீரராகச் சண்டை போட்ட ஆபக்கையும் இந்திய வீரர்கள் பிடித்துவிட்டார்கள். போர் முடிந்த பிறகு, இரண்டு நாடுகளும் கைதிகளைத் திருப்பி அனுப்பினார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஆபக் மட்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை. அவரே இதைச் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். ஆபக்கைப் போலவே கொல்கத்தாவிலேயே தங்கிவிட்ட சீன வீரர்கள் இன்னும் பலர் இருந்தார்கள். சீன அரசாங்கம் அவர்களைத் திரும்பக் கூப்பிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை முயற்சி செய்திருந்தாலும், அதன் பலன் ஆபக் போன்ற ஏழை வீரர்களுக்குக் கிடைக்கவில்லை. தபாரக் அலி கிண்டல் செய்யும்போது ஆபக் யாரைத் திட்டியிருப்பார்? தன் நாட்டு அரசாங்கத்தையா, தன் நாட்டு மக்களையா? தன் குடும்பத்தையா? தெரியவில்லை. ஆபக் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தாலும், அவரால் கொல்கத்தாவை விட்டு வெளியே எங்கும் போக முடியாது. கடந்த முப்பது வருஷங்களாக, ஆபக் கடையில் இருந்து கம்பிகளை வாங்கி வருகிறார். நாள் முழுவதும் உட்கார்ந்து பொறுமையுடன் பறவைக் கூண்டுகள் செய்து கொண்டிருப்பார். களைப்பாக இருந்தால் சுவரில் சாய்ந்தபடி அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவார். இதுதான் அவருடைய தினமும் நடக்கும் வாழ்க்கை. ஆபக்கைப் பார்க்கும்போது எனக்கு இந்திய 'ஆபக்'களின் ஞாபகம் வருகிறது. சீனாவின் ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு தெருக் குழாயடியில், இந்திய வீரர்கள் யாராவது தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அங்கே இருக்கும் ஒரு சீனக்காரர் அவர்களைக் கிண்டல் செய்யும்போது, அவர்கள் முகமும் இதேபோலக் கோபத்தில் சுருங்கும். அதில் ஒருவர் காலையில் எழுந்ததும் சத்தமாகப் பேசுவார். “நீ இந்தியன், உன் அப்பா இந்தியன், உன் குடும்பமே இந்தியன்” கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- குழந்தைகளின் உரிமைகள் - 9
குழந்தைகளுக்குக் குரலெழுப்பும் உரிமை - யூனிசெஃப் பிரகடனம் காலங்காலமாகக் குழந்தைகள், தங்களைப் பாதிக்கும் அல்லது தாங்கள் எதிர் கொள்ளும் ஏதேனும் ஒரு பிரச்னையில் தங்களின் கருத்தைக் கூற பெரியவர்கள் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள்; ஏழைகள் - பணக்காரர்கள்; அதிகாரிகள் - சாதாரணக் கூலி உழைப்பாளிகள்; ஆண்கள் - பெண்கள்; கிராமத்தவர் - நகர மக்கள் - என்று எந்த வித வேறுபாடும் கிடையாது. உலகம் முழுவதிலும், எல்லா இடங்களிலும், எல்லா மக்களிடை யே யும் இந்த ஒரு விஷயத்தில் பரிபூரண ஒற்றுமை நிலவுகிறது. "நீ சின்னப்பொண்ணு, ஒனக்கு என்ன தெரியும்?" "மொளச்சு மூணு எல உடல, அதுக்குள்ள பெரியவங்ககிட்டயே யோசன சொல்றியா நீ?" "பெரியவங்க பேசிக்கிட்டிருக்கறப்ப நீ என்ன பெரிசாக் கருத்துச் சொல்ல வந்துட்ட?" "பெரியவங்க சொன்னாங்கன்னாக் கேட்டுக்கணும்…ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிர் வார்த்தை பேசக்கூடாது…" "பெத்தவங்க நாங்க, ஒனக்கு எது நல்லதுன்னு எங்களுக்குத் தெரியாதா? நாங்க சொல்றபடி செய்யி, போ!" – இப்படிப்பட்ட வசனங்களை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் வலியுறுத்தும் எல்லா 'அறங்'களும் இந்த ஒற்றைத் தொனியிலேயே எவ்வித மாறுதலும் இன்றிக் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நம்மில் யாரேனும் மறுக்க முடியுமா? குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐ.நா. அமைப்பின் பிரகடனமும், சர்வதேச நாடுகளின் கூட்டு மாநாட்டில் அனைத்து நாடுகளும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், இன்னும் இவை போன்ற பிற ஆவணங்களும் மேற்கண்ட 'பெரிய'வர்களின் கருத்துகளைத் தீர்மானகரமாக மறுக்கின்றன. "தங்களைப் பாதிக்கும் எந்த ஒரு பிரச்னையைப்பற்றியும் கருத்துக் கூறுவதற் குக் குழந்தைகள் அனைவருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. தங்களின் கண்களில் படும் எந்த ஒரு விஷயம் குறித்தும் குழந்தைகள் ஏதேனும் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளவே செய்கின்றன. அது முற்றிலும் சரியான கருத்தாக இருந்தாக வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை. தவறான கருத்தாகவே கூட இருக்கலாம். அல்லது சரியான கருத்தையும் ஒரு குழந்தை கூறக் கூடும். 'பெரியவர்'கள் .மட்டும் எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்க ளிலும் மிகவும் சரியான கருத்துகளைக் கூறி விடுகிறார்களா, என்ன? எனவே, தன்னைப் பாதிக்கும் அல்லது தன் கண்களில் படும் எந்த ஒரு விஷயம் குறித்தும் தனக்குத் தோன்றும் எந்த ஒரு கருத்தையும் எவ்விதத் தயக்கமுமின்றி, சுதந்திரமாக எந்த ஒரு குழந்தையும் கூற வேண்டும். அவ்வாறு குழந்தைகள் கூறும் எந்த ஒரு கருத்தையும் யாரும் தடை செய்யக்கூடாது என்கிறது யூனிசெஃப் பிரகடனம். குழந்தைகளின் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்டுக்கொள்வதும், அவர்களின் கருத்துகள் சரியானவைதாம் எனில் அவற்றை மனதார ஏற்றுக் கொள்வதும் நமது கடமை. அரசாங்கங்களின், ஆளுவோரின் கடமை. பெற்றோரின், ஆசிரியர்களின், அதிகாரிகளின், ஏன், நம் அனைவரின் கடமையுமாகும். வயது வந்த பெரியவர்கள், குழந்தைகள் கூறும் கருத்துகளைத் தீவிர கவனம் கொடுத்துக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்ற இந்த விதியை உலகம் மதிக்கிறதா? பெரிய ஏமாற்றமே நமக்குக் காத்திருக்கிறது. கொஞ்ச நாள்களுக்கு முன்னாள், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிய ஜெனீவா உச்சி மாநாட்டில், கிரெட்டா துன்பர்க் என்னும் பெண் உலக நாடுகளின் தலைவர்கள் அத்தனை பேரையும் நோக்கிக் கேள்விகளை அடுக்கினாள். "சுற்றுச்சூழலும், உலகளாவிய வெப்பமய மாதல் நிலைமைகளும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகின்றனவே, உலக நாடுகளும், அவற்றை ஆளும் இத்தனை தலைவர்களும் நம்மைச் சுற்றி லும் என்ன நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப்பற்றி என்றேனும் கொஞ்ச நேரமாவது யோசிக்கிறீர்களா? எங்களைப்போன்ற குழந்தைகளுக்கு நாளை நீங்கள் எந்த மாதிரியான உலகத்தை விட்டு விட்டுப்போவீர்கள்?" என்று கேட்டாள் அந்தப்பெண். முதன்முதலில் இதே கேள்விகளை அவள் தன் பெற்றோரிடம் எழுப்பினாள். அவர்கள் சொன்ன மறுமொழிகளும், சமாதானங்களும் கிரெட்டாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை. பள்ளியில், சக மாணவிகளிடம் பேசினாள். ஆசிரியர்களைக் கேட்டாள். கண்களில் படும் அத்தனை மனிதர்களிடமும் இதே கேள்விகளைக் கேட்டாள். சரியான பதிலை யாரும் அவளுக்குத் தர முடிய வில்லை. பள்ளியில் சக மாணவிகளைத் திரட்டிக்கொண்டு நேரடி நடவடிக்கைகளில் இறங்கினாள். பள்ளிகளின் முன்னால், அரசு அலுவலகங் களின் முன்னால், பொது மன்றங்கள்- சட்டமன்றங்கள்- நாடாளுமன்றங்கள் அனைத்தின் முன்னாலும் இத்தகைய முற்றுகைப்போராட்டங்களை சாத்தியமான எல்லா நாடுகளிலும் அவள் முன்னெடுத்தாள். முதலில் எந்த இடத்திலும், யாரும் கிரெட்டாவையோ அல்லது அவளைப் போல் கேள்விகளை எழுப்பிய பிற குழந்தைகளையோ சட்டை கூடப் பண்ணவில்லை. அவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்குப் போகாமலே இருந்தார்கள். தேர்வுகளை எழுத மறுத்தார்கள். பயணங்கள் எவற்றையும் மேற்கொள்ளாமல் தவிர்த்தார்கள். ஒரு சிறு புள்ளியில் தோன்றிய இந்த இயக்கம், பெரும் சூறாவளியாய்ச் சுழன்று பெரிதான பிறகுதான் உலகம் அவர்களின் குரல்களைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கியது. சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொடர்பான எல்லா சர்வதேச மாநாடுகளுக்கும் கிரெட்டா துன்பர்க் அழைக்கப்பட்டாள். அவள் கேட்ட பல கேள்விகள், அமெரிக்க நாட்டின் செயல்களைப் பற்றியதாக இருந்தது. உலக வெப்பமயமாதலுக்கு அந்த நாடுதான் உலகிலேயே அதிக சதவீத அளவுக்குக் காரணமாக இருக்கிறது என்னும் உண்மையைக் கிரெட்டா புள்ளிவிவரங்களுடன் நிறுவினாள். இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முந்தைய ஆட்சியின் போது, அவரே எரிச்சலடைந்து 'இந்தப்பெண் சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொண்டிருக்கிறாள்" என்று கத்திய செய்தியைப் பத்திரிகைகளில் நாம் படித்திருப்போம். இதுதான் நாம் குழந்தைகளின் உரிமைக்குரல்களுக்குக் கொடுக்கும் மரியாதை! ஆரம்பத்தில் கிரேட்டாவின் முரல் அலட்சியப்படுத்தப்பட்டது. அவள் ஒரு தனியாளாக இருக்கவில்லை; அவளுக்குப் பின்னால் பல்லாயிரம், பல லட்சம் குழந்தைகள் திரண்டு குரல்களை எழுப்பியபின், உலக நாடுகள் கொஞ்சம் அசைந்தன. ஒரு சில உறுதிமொழிகளை அந்தக்குழந்தைகளுக்கு அரசாங்கங் களின் தலைவர்கள் கொடுத்தார்கள். பெரியவர்கள் அளிக்கும் உறுதிமொழி களை எவ்வளவு தூரத்திற்கு அவர்களே மதிப்பார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்தவைதானே? ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய குரல்கள் ஓய்ந்து விட்டன. இப்போது கிரெட்டா துன்பர்க் என்ன செய்கிறாள்? யாருக்கேனும் தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- குழந்தைகளின் உளவியலைக் கட்டமைக்கும் புத்தகங்கள்
மூ.அப்பணசாமி, ஆலோசகர், தமிழ்நாடு பாடநூல் கழகம். நேர்காணல் - சாலை செல்வம் 1.தங்கள் பொறுப்பில் செயல்பட்டுவரும் இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து.... கொரோனா பெரு முடக்கம் உலகம் முழுவதும் மழலையர் வகுப்பு குழந்தைகளில் இருந்து மேனிலை மாணாக்கர் வரை குழந்தைகளிடம் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தின. இதனால் உருவான கற்றல் இடைவெளியால் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் கொண்டு வருவது சவாலாக இருந்தது. ஏற்கனவே, பாடத்திட்டம் கடந்த வாசிப்பு மற்றும் கலை முயற்சிகள் மாணாக்கர் இடையே குறைந்து வருகிறது. கடந்த 20 -30 ஆண்டுகளில் வாசிப்பு தொடர்பாக எதிர்மறை தலைமுறை இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளை மீண்டும் கற்றல் செயல்பாடுகளுக்குள் கொண்டுவருதலையும் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவித்தலையும் இணைக்கும் வகையிலும் அரசு அறிவித்த திட்டம் இளந்தளிர் இலக்கியத் திட்டம். கடந்த நான்காண்டுகளாக செயபடுத்தி வருகிறோம். சிறார் மனதை கதைகளாலும் பாடல்களாலும், நாடகங்களாலும் காமிக்ஸ்களாலும் வண்ணங்களைக் கொண்டு அழகூட்டும் முயற்சியே இத் திட்டம். சிறார்களின் படைப்பூக்கத்தினையும் சமூகத் திறன்களையும் ஊக்கப்படுத்தும் முயற்சியாக சிறார்களுக்கான நூல்களை ஒரு கதை – ஒரு புத்தகம் என்ற அளவில் தமிழ்நாட்டின் தலை சிறந்த சிறார் படைப்பாளிகளைக் கொண்டு எழுதச் செய்து சிறந்த ஓவியர்களின் கலை வண்ணத்தில் அனைத்தும் வண்ணங்களாக வெளியிடப்படுகின்றன. ஒரு அரசு இதுபோன்று பாடத்திட்டம், மதிப்பெண் போன்ற இலக்குகளோடு சிறார்களின் படைப்பாற்றலையும் வாசித்தலையும் கவனப்படுத்துகிறது என்ற வகையில் இது ஒரு முன்னோடித் திட்டம் ஆகும். ஏனெனில் இதுபோன்ற பணிகள் வேறு மாநிலங்களில் அரசால் மேற்கொள்ளபடுகிறதா என்று தெரியவில்லை. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தில் எந்த மாதிரியான சிறார் புத்தகங்கள் கொண்டுவரப்படுகின்றன. 5-8, 9 -11- 12 -14, பதின் பருவத்தினர் ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளாகப் பிரித்து அக்குழந்தைகளுக்குப் பொருத்தமான கதைகளும் ஓவியங்களும் தீட்டப்படுகின்றன. அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கி என்ற அடிப்படையில் கதைக்கருக்கள் உருவாக்கப்பட்டு பன்மையம், சமூக நீதி, சமத்துவம், சுற்றுச்சூழல் தூய்மை ஆகிய விழுமியங்களில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ் சிறார் புத்தகங்களின் பயன்பாடு குறித்து... ஒரு கதைக்கு அதிகபட்சம் 500 – 600 சொற்கள்; 25 - 40 விழுக்காட்டுக்குள் எழுத்து; 60 – 75 விழுக்காடு வண்ண ஓவியங்கள் என வடிவமைக்கப்பட்டன. எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஓவியர்களுக்கும் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு படைப்பாளிகளும் ஓவியர்களும் இணைந்து இளஞ்சிறார்களுக்கான படைப்புகளை உருவாக்கினர். அரசுப்பள்ளி மாணவர்களின் ஆளுமை மேம்பாடு, சிக்கல்களைத் தீர்த்தல், பற்றுதலை உருவாக்குதல்,தாமாகவே கதைசொல்லக்கற்றல் கதை சொல்லியாதல்,கற்றல் திறன் மேம்பாடு போன்ற திறன்கள் மேம்பட்டால் மகிழ்வோம். இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ் வெளியாகும் புத்தகங்களுக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? குழந்தைகள் தாமாகப் புதிய சொற்பிரயேகங்களைப் பயன்படுத்துதல், மாற்றி யோசிக்கும் திறன், பகுத்தாய்வை வளர்த்தல், உணர்ச்சிகர சூழலைத் தாமே கையாளுதல்; நினைவுகளை மீட்டுதல், கற்பனையைப் படைப்பாக்குதல்; அறம் வளர்த்தல்; பண்பாட்டை அறிதல்; உணர்ச்சிகளைக் கையாளுதல், எப்போதும் பற்றுணர்வை உருவாக்குதல்; நகைச்சுவை, பகடி ஆற்றலை வளர்த்தல். இதற்காக சமத்துவம், பன்மையம், சிறார் உரிமைகள், பால் பாகுபாடு அகற்றல், உடலியல் மாற்றங்கள், சமூக நீதி, சுற்றுச்சூழல், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகம்,உள்ளூர் வரலாறு என பல்வேறு பொருண்மைகள் முடிவு செய்யப்பட்டன. பொதுவாக நமது சிறார்களுக்கு அறிமுகமாகும் கதைகள், ஓவியங்கள் ஒன்று ஐரோப்பிய முகங்களும் பண்பாடும் சூழலும் கொண்டதாக இருக்கிறது. அல்லது இந்திய பெருங்கதையாடலை ஒட்டியதாக அமைகிறது. நமது குழந்தைகளுக்கான கதைகளோ ஓவியங்களோ தமிழ் பண்பாட்டையோ சூழலையோ காண்பிக்கிறதா என்பது கேள்விதான். மேலும், ஒரு குடும்பம் என்றால் Stereotype ஆக அப்பா, அண்ணன்கள் புத்தகம் படிப்பார்கள், கணினியில் அமர்ந்திருப்பார்கள். அம்மா, அக்கா, அத்தை, பாட்டி யாராக இருந்தாலும் பெண் என்றால் வீட்டு வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல, சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள், ஒற்றைப் பெற்றோரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், சிறுபான்மையினர் இணைந்ததுதான் சமூகம், பள்ளி, பொது வெளிகள். இதுபோன்ற பன்மைத்துவம் எங்களது படைப்புகளில் மிளிர்கின்றன. இந்த பொருண்மைகளை முன்பே தீர்மானம் செய்து அதைப்படைப்பாக்க எழுத்தாளர்களுக்கு அனைத்து சுதந்தரமும் காலமும் அளிக்கப்படுவதால் இது சாத்தியம் ஆகிறது. படைப்புச் சுதந்தரமும் பயிற்சியும் இங்கு அபூர்வமாக இசைவு (Fusion) பெறுகிறது. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் வருங்கால திட்டங்கள் குறித்து… கடந்த 4 ஆண்டுகளில் 200க்கும் அதிகமான சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன. இந்த அனைத்து நூல்களும் தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளி நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொறு புத்தகமாகப் பார்க்கையில்.. நான்காண்டுகள் தொடர்ந்து மாராத்தான் பயிலரங்குகள்.. புது முயற்சியாக பொருண்மை அடிப்படையில் தலைப்புகள் கொடுத்து அதில் விருப்பமான பொருண்மைகளைத் தேர்வு செய்து ஈடுபட்டனர். படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது போல தெரிந்தாலும் காலத்தின் தேவை கருதி படைப்புகளை எழுத மூத்த எழுத்தாளர்கள் முதல் முதல் முறை எழுத்தாளர் வரை சுமார் 50 எழுத்தாளர்கள் பங்கேற்றனர். எழுத்து தெரியாத குழந்தையில் இருந்து உயர்நிலை மாணாக்கர் வரை படைப்புகள் உருவாக்கப்பட்டன. இது ஒரு அபூர்வமான Fusion ஆகும். இன்னும் பல நூறு புத்தகங்கள் வெளியாக உள்ளன. ஆண்டுக்கு 100 சிறார் நூல்களகவது உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்ப்பண்பாட்டின் வரலாற்றினை சிறார்கள் அறியச்செய்யும் வகையிலான காமிக்ஸ் தொடர் நூல்கள் புது முயற்சியாக அமையும், மேலும். உலக கிளாசிக்ஸ் நாவல்களின் குழந்தைகளுக்கான தமிழ் பதிப்பு, மாங்கா காமிக்ஸ் போன்ற புகழ்பெற்ற சிறார் காமிக்ஸ் தமிழாக்கம், ஈரான், துருக்கி சிறார் கதைகள் தமிழாக்கம், 5 வயதுக்குக் கீழான மழலைகளுக்கான படப் புத்தகங்கள் இவற்றில் உள்ளடக்கம். சாலை செல்வம் பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார். புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
- ஒரு லட்சம் கோழிக்குஞ்சுகள்!
'அதிசயங்கள் தற்காலத்தில் நடைபெறுவதில்லை என்று பெர்னாட் ஷா சொன்னதாகப் படித்திருந் தான் பழனி என்னும் பழனியப்பன். ஆனால் அவன் கண்முன்னே நடந்த அதிசயத்தை அவன் பார்த்தானே! அவன் மட்டுமா? டவுன்ஹால் அருகே அன்றிருந்த நூற்றுக்கணக்கானோர் பார்த்தார்களே! அப்படிப்பட்ட அதிசயத்தை அதற்குமுன் யாரும் பார்த்ததில்லை என்றார்களே! அப்படி என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். பழனி டவுன்ஹால் அருகே சாலையைக் கடப்ப தற்காக நின்றிருந்தான். அதைக் கடந்து ராஜவீதியின் நடுவே உள்ள தேர்முட்டிக்குச் செல்லவேண்டும். அங்கேதான் அவன் வீடு. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் வேகமாக - வேகமாகக்கூட இல்லை - மெதுவாகக் கூட இயங்க முடியாமல் நின்றுவிட்டன. பழனி வாகனங்களைப் பார்த்தான். அவனுக் கருகே ஒரு லாரியில் முட்டைகள் ! முட்டைகள் வைக்கும் அட்டைகளில் அடுக்கப்பட்ட தூய வெள்ளை முட்டைகள்! முட்டைகள் அடுக்கிய அட்டைகள் பதினைந்தோ, இருபதோ ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன! அப்படிப்பட்ட அடுக்குகள் ஐம்பது அறுபதுக்கு மேலே! ஒரு அட்டைக்கு ஒரு நூறு முட்டைகள்! கண்ணாலேயே எண்ணிப் பார்த்தான்! மொத்தம் ஒரு லட்சத்துக்கு மேலே இருக்கலாம்! பழனி வண்டிகள், நெரிசல் சீர் செய்யப்பட்டு ஒடத் தொடங்கும் நேரம்! திடீரென்று 'சிக் சிக் சிக் சிக் என்ற சத்தம்! பெருஞ் சத்தம்! முட்டை லாரியிலிருந்த எல்லா முட்டைகளும் ஒரே சமயம் கோழிக்குஞ்சு களாக- வெள்ளை வெளேர் குஞ்சுகளாக மாறிக் கத்தின! அட்டையிலிருந்து நழுவி லாரியிலும், லாரி யிலிருந்து நழுவிச் சாலையிலும் விழுந்து சிதறின! கைப்பிடியளவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வெள்ளைக் கோலிக்குண்டுகளை நடுச்சாலையில் கொட்டியதைப் போன்ற கண்கொள்ளாத காட்சி! நெரிசல் சரியானாலும் சாலையில் குட்டிக் குட்டி வெண்பஞ்சு மேகங்கள் போன்ற கோழிக்குஞ்சுகள் நிறைந்துவிட்டதால் எந்த வண்டியும் அசையவில்லை! முட்டை லாரிக்காரன் கேபினிலிருந்து எட்டிப் பார்த்தான்! அடுக்கிய அட்டைகளைத் தள்ளிக் கொண்டு குஞ்சுகள் கீழே விழுந்து. சாலையை நிறைத்துக் கொண்டிருந்தன. லாரி - கார் - ஸ்கூட்டர்-என்று எல்லா வாகனங்களின் முன்னும் பின்னும் அடியிலும் கோழிக்குஞ்சுகள்! கோழிக்குஞ்சுகள் வெள்ளமாய் ஓட அதன் நடுவே வாகனங்கள் மிதப்பது போன்ற தோற்றம்! பார்த்தவர்கள் பிரமித்தார்கள்! லட்சக்கணக்கான கோழிக்குஞ்சுகள் ஏதோ ஒரு கோரிக்கைக்காகச் சாலை மறியலில் ஈடுபட்டது போன்ற காட்சி! அவசரமாகப் போக வேண்டியதை மறந்து எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு ரசிக்க - வியக்க, போலீஸார் கோழிக்குஞ்சுகளை அப்புறப்படுத்த முயல்... அட்டா, உலக அதிசயங்கள் ஒன்று சேர்ந்தாலும் இப்படி ஒரு அதிசயத்தை உண்டாக்கியிருக்க முடியுமா! பக்கத்திலிருந்த மாலை முரசு புகைப்படக்காரர் கேமராவோடு வந்துவிட்டார்! உள்ளூர் தொலைக் காட்சியினர் கூடிவிட்டனர்! நிருபர்கள் கூடி விட்டனர்! அவர்களைப் போலவே, கோழிக்குஞ்சுகளை அகற்ற வந்தவர்களும் அதிசயக் காட்சியில் லயித்துப் போனார்களே தவிர, தமது வேலையில் முழுமையாக ஈடுபடவில்லை. சுமார் மூன்று மணி நேரம் டவுன்ஹால் பகுதியில் கோழிக்குஞ்சுகளின் நீடித்தது! ஆக்ரமிப்பு நீடித்தது. பழனி, அவ்வளவு நேரமும் அங்கே நின்று இந்த அதிசயத்தைக் கண்டு ரசித்தான்! முட்டைகள் எப்படித் திடீரென்று குஞ்சு களாயின! சில முட்டைகள் இப்படி மாறலாம். லட்சக் கணக்கான முட்டைகள் ஒரே சமயத்தில் எப்படிக் குஞ்சுகளாயின! குஞ்சாக மாறாத ஒரே ஒரு முட்டை கூட இல்லையே! ஏன்? பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கேள்விகள் கேட்டன! ஆனால் யாருக்கும் சரியான-பொருத்தமான பதில் தெரியவில்லை! உண்மையான பதில் பழனிக்குத் தெரியும்! ஆனால் அவன் யாருக்கும் சொல்லவில்லை. "என்ன பதில்? எப்படி எல்லா முட்டைகளும் ஒரு நொடியில் குஞ்சுகளாயின! கொஞ்சம் சொல்லுங்கள்?" என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்! உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்! மூன்று நாளுக்கு முன்னே பள்ளி மாணவர் களோடு பழனி ஊட்டிக்குப் பயணமானான். குன்னூர் நெருங்கும்போது பயணம் தடைப்பட்டது. இரண்டு நாளுக்கு முன்னே பெய்த பெருமழையில் மண் சரிவு இருந்தது; பழனி புறப்பட்ட அன்று அதிகாலை, பேரளவில் ஒரு நிலச்சரிவு! குடிசை களோடு கூடிய ஒரு பகுதி பெயர்ந்து சரிந்து மலைப் பாதையில் நிறைந்து விட்டது. மாணவர்கள் ஊட்டிக்குச் செல்ல முடிய வில்லை! ஆனால் சரிவுக்கு முன்னாலே ஒரு சிற்றருவி! அங்கே பஸ்ஸை நிறுத்தவும், மாணவர்கள் ஓய்வு கொள்ளவும் போதுமான இடம் இருந்தது! அதனால் அங்கே தங்கி, மதிய உணவு உண்ட பிறகு புறப்பட்டனர்! நீர் பழனி அங்கே தங்கிய போது, சிற்றருவியிலே முகம் கழுவச் சென்றான். அப்போது மலைச்சரிவி லிருந்து பெயர்ந்து அருவி விழும் இடத்தில் ஒரு மண்கட்டி விழுந்திருப்பதைப் பார்த்தான். விழவிழ, அதில் ஏதோ மின்னுவது போலத் தெரிந்தது. பழனி அதை எடுத்தான். எலுமிச்சைப் பழ அளவில் ஒரு கண்ணாடி உருண்டை! பெரிய கோலி என்றும் சொல்லலாம்! அதைத் தண்ணீரில் கழுவி, கால்சட்டைப் பையில் போட்டுக்கொண்டான். அன்று அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள்; அதுவும் ஒரு பலா மரத்தடியிலே! மரத்தில் பழங்கள்! பழனி ஏறிட்டுப் பார்த்தபடி, "ஒரு நல்ல பழம் விழுந்தா, மாணவர்கள் மேலே விழாம கொஞ்சம் தள்ளி விழுந்தா எவ்வளவு நல்லது!" என்று நினைத்தான். இதுதான் பழனியின் பழக்கம். அடிக்கடி 'இப்படி இருந்தா, இப்படி நடந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நினைப்பது வழக்கம். நினைப்பான். ஆனால் நினைத்தபடி நடக்காது! இப்போது அவன் நினைத்ததும்,தொப்பென்று ஒரு பழம் மாணவர் அருகே விழுந்தது! பழனி திகைத்து விட்டான்! அவன் நினைத்தது நடந்து விட்டதே! எப்படி? தற்செயலாய் நடந்ததா? ஒருவேளை அருவியில் கண்டெடுத்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட கண்ணாடி உருண்டை இப்படிச் செய்ததா? பழனி எழுந்து நடந்தான். மாணவரை விட்டு விலகி நடந்தான். தன்னிடமிருந்த கண்ணாடி உருண்டையை எடுத்து ஒரு மரத்தடியில் வைத்தான். பிறகு தள்ளி நின்று "இங்கே இருக்கும் பலா மரத்தி லிருந்து ஒரு பழம் விழுந்தா சாப்பிடலாமே!" என்று நினைத்தான். பழம் விழவில்லை! மீண்டும் நினைத் தான். அப்போதும் பழம் விழவில்லை! அவன் கீழே வைத்த கண்ணாடி உருண்டையை எடுத்துச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். பிறகு ஒரு பழம் விழுந்தா சாப்பிடலாமே' என்று நினைத்தான்.உடனே ஒரு பழம் விழுந்தது. பழனிக்குக் கண்ணாடி உருண்டை ஏதோ மந்திரப் பொருள் என்பது புரிந்தது. அது நிலத்தடியிலிருந்து. நிலச்சரிவால் வெளிப்பட்டது போலும். பழனி இனி எது நினைத்தாலும் நடக்கும்! இதை உணர்ந்ததும், அவன் பயந்தான். குன்னூரிலிருந்து திரும்பிய பிறகு பழனி தன் இயல்புக்கு மாறாக எதையும் நினைக்கவில்லை. இன்று முட்டை லாரியைப் பார்த்ததும், தன்னை யறியாமல் "எல்லா முட்டைகளும் குஞ்சாக வேண்டும்" என்று நினைத்து விட்டான். "இப்படி வேறு ஏதாவது தவறாக நினைத்து அது நடந்துவிட்டால் என்ன செய்வது?" பழனி பயந்தான். உடனே கண்ணாடி உருண்டையைக் கையில் எடுத்துப் பார்த்தான்! இதை வீசியெறியலாமா? யாராவது அயோக்கியனிடம் கிடைத்தால் என்ன ஆகும்? அப்படி கிடைக்காமல் இருக்க என்ன செய்வது? பழனி இன்னும் டவுன்ஹால் அருகே, கையில் அந்தக் கண்ணாடி உருண்டையோடு நின்று யோசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று யாரோ ஒருவன் அவன்மீது மோதிக் கொள்ள, அவன் கையிலிருந்த கண்ணாடி உருண்டை கீழே விழுந்து சாலையில் உருண்டது. அதேசமயம் அங்கே வந்து கொண்டிருந்த ரோடுரோலர் முன்னே சென்றது. ஒரு நொடிக்குள். 'கடகட' சத்தத்துடன் அந்த ரோடுரோலர் கண்ணாடி உருண்டையைப் பொடியாய் நசுக்கிவிட்டு நகர்ந்தது. மாயக் கண்ணாடி தார்ச்சாலையில் பொடியாகி மின்னியது. பழனி அதைப் பார்த்து மகிழ்ந்தான். நினைத்ததை நடக்கச் செய்யும் கண்ணாடி உருண்டை இனி யாருக்கும் பயன்படாதல்லவா! நிம்மதியோடு வீடு நோக்கி நடந்தான், பழனி. ஆனால், "லட்சக்கணக்கில் கோழிமுட்டைகள் திடீரென்று குஞ்சுகளானது எப்படி?' என்பதைப்பற்றி கோவை நகரம் இன்னும் விவாதம் செய்து கொண்டிருக்கிறது! ( காலப்பெட்டகம் )
- அறிவோம் ஆளுமை – 11
கல்வி தான் அமைதியின் சக்தி – மலாலா ஜோ :-- குழந்தைகளே! இன்று நாம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு துணிச்சலான பெண் குழந்தையைப் பற்றி பேசப் போகிறோம். அவர் பெயர் மலாலா யூசுப் சாய். நகுலன்:-- நோபல் பரிசு வாங்கியவர் தானே? ரதி: -- பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காககப் போராடியவர் தானே அவர்? ஜோ:-- அவரேதான்! மலாலா 12 ஜூலை 1997 அன்று பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மிஙோரா என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஜியாவுத்தீன் யூசுப் சாய், தாயார் தூர் பேகை. அவரது தந்தை ஒரு ஆசிரியர். பெண்கள் படிக்க வேண்டும் என்று நம்பியவர். அதற்காகவே ஒரு பள்ளியையும் நடத்தினார். அவர் வாழ்ந்த சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் வருத்தப்படுவார்கள். ஆனால்… மலாலா பிறந்த போது மலாலாவின் அப்பா மிகவும் மகிழ்ந்தார். “இந்தக் குழந்தை சாதாரண குழந்தை இல்லை… ஒரு நாள் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறாள்!” என்று கூறினார். அவர் குடும்ப மரத்தில் (Family Tree) பெண் குழந்தைகளின் பெயர் எழுதப்படுவதில்லை. மலாலாவின் பெயரை அவருடைய அப்பா பெருமையாக எழுதினார். நகுலன்:-- அது ரொம்ப அழகான விஷயம் அத்தை! மலாலா என்ன படித்திருக்கிறார்? ஜோ --- மலாலாவுக்குச் சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம். எப்போதும் பள்ளியில் முதல் மாணவியாக இருப்பார். வாசிப்பதையும் பேசுவதையும் மிகவும் விரும்பினார். “புத்தகம் தான் எனக்கு சக்தி தரும் நண்பன்” என்று கூறுவார். இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரத்தில் பள்ளியில் படித்தார். பிறகு உலகப் புகழ்பெற்ற Oxford University-யில் Philosophy, Politics, Economics போன்ற பாடங்களில் பட்டம் பெற்றார். ரதி : --- அத்தை! மலாலா நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராமே? ஜோ -- ஆமாம்! நீங்கள் என்னிடம் எத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்! உங்களைப் போலவே தான் மலாலாவும். சிறு வயதிலிருந்தே தன் தந்தையிடம் நிறையக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராம். அவர் தந்தையும் அதற்குச் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருப்பாராம். நகுலன்: -- என்ன மாதிரி கேள்விகள் அத்தை? ஜோ :-- அவர் கேட்ட கேள்விகள் மிகவும் சிந்திக்க வைக்கும். “ஏன் குடும்ப மரத்தில் பெண்கள் பெயர் இல்லை?” “ஏன் பெண்கள் பர்தா போட வேண்டும்?” “ஏன் சில பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது?” “ஏன் பெண்கள் தனியாக வெளியே போகக் கூடாது?” “நான் படிக்கிறேன்… ஆனால் வீதியில் இருக்கும் அந்த சிறுவன் ஏன் பிச்சை எடுக்கிறான்?” “ஏன் சில குழந்தைகள் குப்பை பொறுக்குகிறார்கள்?” இப்படித் தன்னைச் சுற்றி சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றிக் கேள்விகளைக் கேட்பாராம். ரதி : -- என்னுடன் படிக்கும் சஜினா மட்டும் பர்தா அணிந்து வருவாள். முகத்தை கூட காட்ட மாட்டார். எனக்கு அவளைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தில் படிக்க வரும் முதல் பெண் அவள் தான் என்று கூறினாள். அது மட்டுமல்ல பரம்பரையைப் பற்றிப் பேசும்போது அப்பா என் பாட்டியின் பெயரையோ அம்மாவின் பெயரையோ சொன்னதில்லை என்று சொன்னாள். இப்போது நானும் அதை யோசிக்கிறேன். பரம்பரையில் என் அம்மாவையும் பாட்டியையும் என்னையும் சேர்க்க வேண்டும் என்று நானும் அப்பாவிடம் சொல்லப் போகிறேன். இனிமேல் பரம்பரை என்று கூறும்போது நான் எல்லோரையும் சேர்த்து தான் சொல்வேன் அது சரி அத்தை. மலாலாவுக்கு எப்படி இவ்வளவு கேள்விகள் கேட்கும் அளவிற்கு தைரியம் வந்தது? ஜோ-- ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்த அவர்களுடைய நகரத்தை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தபோது எல்லாமே மாறியது. தீவிரவாதிகள் தொலைக்காட்சி வைத்திருப்பது, இசை வாசிப்பது மற்றும் பெண்கள் படிப்பது போன்ற பல விஷயங்களைத் தடை செய்தனர். மேலும் தங்கள் உத்தரவுகளை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளையும் விதித்தனர். மலாலாவின் தந்தை பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளும் படித்தனர். ஆனால் தீவிரவாதிகள் பள்ளியை மூடச் சொல்லி மலாலாவின் தந்தையை அச்சுறுத்தினர். ஆனால் அவரோ பயப்படாமல் தொடர்ந்து பள்ளியை நடத்தினார். அவரின் துணிச்சல் மலாலாவுக்கும் வந்தது என்று நினைக்கிறேன். நகுலன் : அத்தை! மலாலாவை எதற்காகச் சுட்டார்கள்? ஜோ -- ஒரு முறை BBC செய்தி நிறுவனம், “இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஒரு பெண் குழந்தை கட்டுரை எழுத வேண்டும்” என்று மலாலாவின் தந்தையிடம் கேட்டது. முதலில் மலாலாவின் தந்தை ஆயிஷா என்ற மாணவியை முன்மொழிந்தார். ஆனால் அந்தக் குழந்தையின் குடும்பம் தீவிரவாதிகளுக்குப் பயந்து மறுத்துவிட்டது. அப்போது ஒன்பது வயதான மலாலா எழுத முன்வந்தார். முதலில் அவள் “குல் மக்காய்” (Gul Makai) என்ற புனைபெயரில் எழுதினார். குல் மகாய் என்றால் சோளப்பூ என்று அர்த்தம்.. அந்தக் கட்டுரைகளில் அவர் பெண்கள் படிக்க முடியாத துயரத்தையும், அச்சத்தையும் எழுதினார். அந்த பள்ளத்தாக்கை தீவிரவாதிகள் ஆக்கிரமித்து எல்லோரையும் கொடுமைப்படுத்துவதைப் பற்றியும் எழுதினார். இது உலக நாடுகளில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியது. தீவிரவாதிகள் அதை எழுதிக் கொண்டிருப்பது யார் என்று தேட ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் தான் கொஞ்சம் தைரியம் பெற்று தன் சொந்த பெயரிலேயே எழுதத் தொடங்கினார் மலாலா. அதை கண்டுபிடித்த தீவிரவாதிகள் ஒரு நாள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது பள்ளி வாகனத்திற்குள் உட்கார்ந்து இருந்த மலாலாவைச் சுட்டனர். அப்போது அவருக்கு வயது 15. ஆனால்…மலாலா உயிர் தப்பினார். சிகிச்சை பெற்று மீண்டு எழுந்தார். ஸ்வார்ட் பள்ளத்தாக்கில் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த “பெண்கள் படிக்க வேண்டும்” என்ற அவர் குரல் உலகம் முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தது. 2014 ஆம் ஆண்டு…அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 17. மிக இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் மலாலா.. ரதி : -- ஐ.நா. சபையில் மலாலா பேசினார் இல்லையா அத்தை? ஜோ :-- ஆமாம். மிக முக்கியமான விஷயம் மலாலா தனது 16வது பிறந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபை மேடையில் (United Nations) பேசினார். அந்த நாள் உலகம் முழுவதும் “Malala Day” என்று கொண்டாடப்பட்டது. அவர் அங்கு என்ன சொன்னார் தெரியுமா? “என்னை தாக்கியவர்கள் என் குரலை மௌனமாக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை.” “கல்வி தான் அமைதியின் சக்தி.” “ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா… உலகத்தை மாற்ற முடியும்.” அந்த உரையை கேட்ட பிறகு உலகம் முழுவதும் மக்கள் கண்ணீர் விட்டார்கள்… பெருமையோடு கைத்தட்டினார்கள். நகுலன் - தற்போது மலாலா என்ன செய்கிறார் அத்தை? மலாலா தற்போது உலகம் முழுவதும் பெண்கள் கல்வி பெற வேண்டும் என்று வேலை செய்து வருகிறார். “Malala Fund” என்ற அமைப்பை தொடங்கி பல நாடுகளில் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார். அவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். இப்போது எழுத்தாளர், சமூகப் போராளி, கல்வி உரிமை குரல் கொடுப்பவர் என்ற பன்முக செயல்பாட்டாளராக விளங்குகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பல நாடுகளில் பெண் குழந்தைகள் படிக்க உதவி செய்கிறார். அகதிகள், ஏழை குழந்தைகள், போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். இவர்களுக்காக கல்வி உதவித்திட்டங்கள் செய்கிறார். உலகத் தலைவர்களைச் சந்தித்து பெண் கல்வி உரிமை பற்றிப் பேசுகிறார். தனது வாழ்க்கையைப் பற்றி “I Am Malala” என்ற புத்தகமும் எழுதியுள்ளார். ரதி -- அவரைப் பார்க்க ஒரு போராளி மாதிரி இல்லையே அத்தை? ஜோ : போராளி என்றால் ஆயுதம் ஏந்தித் தான் போராட வேண்டுமா? ஆயுதம் இல்லாமல் போராடும் கல்விப்போராளி அவர். மலாலா எப்போதும் கோபத்தோடு பேச மாட்டார். “நான் யாரையும் வெறுக்க மாட்டேன். என்னைக் காயப்படுத்தியவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும்.” என்று சொன்னார். அது தான் அவரின் உண்மையான பெருமை. நகுலன்: நாமும் கேள்விகள் கேட்கணும்… படிக்கணும்… மற்றவர்களையும் படிக்க வைக்கணும். ஜோ : நகுலா! நீ சொல்வது சரிதான்தான்! மலாலா நமக்குச் சொல்லும் பாடம் என்ன தெரியுமா? பயப்படாமல் உண்மை பேச வேண்டும். கல்வி எல்லோருக்குமான உரிமை. ஒரு குழந்தையின் குரலும் உலகத்தை மாற்றும். மலாலா ஒரு பெரிய தலைவர் அல்ல… ஒரு சாதாரணப் பெண் குழந்தை. ஆனால் அவர் கேட்ட கேள்விகள், அவர் காட்டிய துணிவு, அவர் சொன்ன வார்த்தைகள் இன்று உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுக்கிறது. “படிக்க வேண்டும்” என்ற கனவு இருந்தால்… அந்தக் கனவு உலகையே மாற்றும்! ரதி, நகுலன் : ஆம்! கனவு காணுவோம்! உலகத்தையே மாற்றுவோம்! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- சிறுவர் நாடகம் - நேற்று இன்று நாளை.
மீசையை முறுக்கிக்கொண்டு பேசு இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இன்றும் பள்ளி வளாகங்களில் நாடகமாக பார்க்க முடிகிறது. பள்ளிகளில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் மூலமாக ஒரு குழந்தைக்கு நாடகம் என்கிற கலை அறிமுகம் ஆகிறது... நம்மில் பலருக்கும் இந்த கலை அவ்வாறே அறிமுகமாகிறது. எவ்வாறு கணிதம், அறிவியல், ஆங்கிலம் என அனைத்தும் துறைகளும் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறதோ , அதேபோல் கலைகளும் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்றவை அடிப்படையில் இருந்து எவ்வளவு தெளிவாகவும் கவனமாகவும் மிகுந்த தேர்ந்த தகுதியுடைய ஆசிரியர்கள் கொண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது... ஆனால், கலைகள் அவ்வாறு அறிமுகப்படுத்தபடுவதில்லை. எப்போதும் பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆர்வமிகு ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிறது. இந்த நாடகங்களின் நோக்கம் வளாகத்தில் நடக்கின்ற சடங்கு செயல்பாடுகள் அதாவது பள்ளியின் ஆண்டு விழாக்கள் அல்லது பள்ளியில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் கலை நிகழ்வுகள் மட்டுமே என்று இருந்தபோதிலும் இவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் , ஏனென்றால் சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கும் இந்த பள்ளி வளாக நாடகங்களில் வழியாகவே கலைகளும், நாடக அறிமுகமகிறது.. அவ்வாறு அறிமுகமாகின்ற நாடகக்கலை எப்படி அறிமுகப்படுத்தப்படுகிறது?... பள்ளி வளாகங்களில் நடத்தப்படும் நாடகங்களும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும் அந்த நாடகங்களிலும் பகுத்தறிவுக்கு புறம்பான அறிவியலுக்கு எதிரான உயர்வு தாழ்வை போதிக்கின்ற கருத்துக்கள், கொண்டாட்டங்கள் என்கிற பெயரிலோ, புராணங்கள், என்ற பெயர்களோ நிகழ்த்தப்படுவது சமூகத்தில் விஷத்தை விதைப்பதற்கு சமமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்... ஏனென்றால் குழந்தைகளை பொறுத்தவரை பள்ளி வளாகங்களில் நடப்பவை அனைத்தும் உண்மையானவை, மேன்மையானவை. உள்ளடக்கம் அடிப்படையில் மட்டுமே அல்லாமல் அதனை நிகழ்த்த திறன் அடிப்படையிலும் வளாக நாடகங்களில் பெரும்பான்மையான நாடகங்கள் ஓதாமையை கொண்டிருக்கிறது இந்தப் போதாமைகளோடு நிகழ்த்தப்படும் நாடகங்கள் முழு நாடகங்கள் அல்ல! முழு நாடக வடிவங்கள் அல்ல!. இன்று வரை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் நாடகங்கள் தமிழ்நாடு பொறுத்த வரை இவ்வாறாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு தங்கள் கதைகளை சொல்வதற்கான ஒரு கலையாக, தங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை பேசும் இடமாக, தங்களின் கற்பனைக்குஉருவம் கொடுக்கும் ஒரு கலையாக, நாடகம் அறிமுகப்படுத்தப்படாமல் வெறும் சடங்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுவது மிகப்பெரிய ஆபத்தை நாடகக் கலைக்கு உருவாக்கியிருக்கிறது வரி வடிவ அடிப்படையிலும் தமிழில் இருக்கும் நாடகங்கள் வெறும் உரையாடல்களாகவே துவங்குகிறது ஆங்கிலத்தில் இருக்கும் நாடகங்களில் மேடை வர்ணனை என்கிற முழு வர்ணனைக்குறிப்புகளும் தெளிவாக இடம்பெறுகிறது இலக்கிய வரி வடிவ அடிப்படையிலும் நாடகம் மிகவும் மேம்போக்காகவே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடகக்கலை நேற்று* என்று நாம் பேசுகின்ற பொழுது பள்ளி பாடத்திட்டத்தில் மற்றும் வளாக நாடகங்களில் இன்று வரையும் தீர்க்கப்படாமலும் தொடர்ந்து கொண்டும் இருக்கின்ற பிரச்சனைகளைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் நாடக ஆசிரியர்கள் பற்றிய கோரிக்கை மிகவும் முக்கியமானது. எவ்வாறு ஒரு திறமை இல்லாத ஆசிரியர் கணிதம், அறிவியல் போன்றவற்றை சிறப்பாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட முடியாதோ அதேபோல் ஒரு துறை சார்ந்த திறனற்ற ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்படும் கலையும் போதாமைகளுடைய புரிந்து கொள்ளப்படும் அந்தப் போதாமைகளோடு புரிந்து கொள்ளப்படுகின்ற கலை குழந்தைகளின் திறன் சார்ந்த வெளிப்பாட்டில் மிக முக்கியமானதாக இருக்கும் பொழுது அவர்களால் அந்தத் துறையில் திறன்மிகு சமூக மனிதர்களாக உருவாக முடிவதில்லை. ஒரு துறையில் ஆர்வம் கொண்டு கற்றுக்கொள்ள விரும்பும் குழந்தை கல்லூரியை தாண்டித்தான் கற்றுக் கொள்ள வேண்டியதாக மாறுகிறது. கல்லூரியை தாண்டி கற்றுக் கொள்வதற்கான சமூக பொருளாதார சூழ்நிலைகள் இல்லாத பல திறமை மிக்க குழந்தைகள் தங்களுடைய கனவுகள் பள்ளிகளிலேயே நசுக்கப்படுவதை காண்கிறோம் குழந்தைகளில் இருக்கும் திறமைகளை முறையாக கண்டுகொள்ளப்படவும், குழந்தை பருவத்திலிருந்தே பயிற்சி எடுத்துக் கொண்டு இலக்கிய அனுபவம் பெற்று உருவாகின்ற குழந்தைகள் கலை அனுபவம் பெற்று உருவாகின்ற சமூகங்களின் மனிதர்கள் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய பேராளுமையோடு மிளிர்வதை நாம் பல்வேறு நாடுகளின் சமூகங்களில் கல்விமுறையை உற்று கவனிக்கும்போது தெரிய வருகிறது. அரசு நடத்துகின்ற கலைத் திருவாக்கல் திருவிழாக்களில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கும் அல்லது கலை சார்ந்த திறமைகள் இருக்கும் மாணவர்களுக்கும் அதையே முதன்மையாக கொண்டு படிக்க வேண்டும் என்று விரும்புகின்ற மாணவர்களுக்கும் அரசு பள்ளிகளில் எவ்வாறு 11ஆம் வகுப்புகளுக்கு மேல் அறிவியல் கணிதம் கணிப்பொறியியல் போன்றவற்றிற்கு தனிப்பிரிவுகள் இருக்கிறதோ அதேபோல் கலை பிரிவுகளுக்கும் தனி பிரிவுகள் இருக்க வேண்டும், அது எல்லாப்பகுதி குழந்தைகளுக்கும் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கப்பட வேண்டும். வளாகங்களில் நாடகக் குழுக்கள் அமைத்து அந்த குழுக்கள் தொடர்ந்து பல்வேறு தளங்களில் சடங்கு ஆக நடத்தப்படும் நாடக விழாக்களை தாண்டி அவ்வப்போது அந்த குழு விரும்பும் கருத்திலோ தலைப்பிலோ நாடகம் நடத்தி தங்களின் வெளிப்பாட்டு திறனை வெளிப்படுத்த வாய்ப்புகள் செய்யப்பட வேண்டும். வளாகங்களைத் தாண்டி நாடகக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்ற சிறுவர் நாடகங்களை நாம் மூன்று பிரிவாக பிரிக்கலாம். குழந்தைகள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் வகை,பெரியவர்கள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் வகை, குழந்தைகள் பெரியவர்களுக்காக நிகழ்த்தும் நாடகங்கள். இந்த மூன்று வகைகளையும் செய்வதற்கான மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டு தமிழில் நவீன நாடக கலைஞர்கள் பல நாடகங்களை நிகழ்த்தி வந்திருக்கின்றனர். ஆனாலும் கதைகளில் இலக்கியங்களில் நிகழ்ந்தது போலவே இதற்கு முந்தைய நாடக நிகழ்வுகளும் அல்லது பெரும்பான்மையான நாடக நிகழ்வுகள் தெனாலிராமன் கதைகளையோ அல்லது ராஜாக்கள் பற்றிய கதைகளையும் அல்லது கடவுள் பற்றிய கதைகளையோ குழந்தைகளை வைத்து நிகழ்த்துவதாகவே இருந்திருக்கிறது அதிலிருந்து விலகி புதிய நாடக வகைகள் அதன் நிகழ்த்துதல் அடிப்படையிலும், உள்ளடக்கம் அடிப்படையிலும் உருவாக வேண்டும்... அவ்வாறான பல முயற்சிகள் தமிழில் நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் வலுப்பெற வேண்டும். குழந்தைகள் நாடகத்தில், பேசப்படாமல் இருக்கின்ற பெண் குழந்தைகளின் பிரச்சனைகள் , சமூக நீதிக் கருத்துக்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கணித ஆய்வுகள், அறிவியல் பூர்வமான நிகழ்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், குழந்தைகளுக்கு இருக்கின்ற மன அழுத்தங்கள் போன்றவற்றை உரத்து பேசுகின்ற, குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி நிகழ்த்தி மேடையை அமைத்தோ, மேடையை மாற்றாக பயன்படுத்தியோ உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு நாடகங்கள் உருவாக வேண்டும் என்றால் நாடகக் கலையின் தேவையை சமூகம் உணர்ந்து அதற்கான ஆதரவை வழங்க வேண்டும். குழந்தைகள் நாடக குழுக்களுக்கு ஒத்திகை பார்க்க இடங்களும், குழந்தைகளும் பெற்றோரும் வந்து போகின்ற நாடகபொது வெளியை உருவாக்க வேண்டும். குழந்தைகள் நாடக கலைஞர்களுக்கு அரசு குழந்தைகள் நாடக கலைஞர் விருதை அறிவிக்க வேண்டும், குழந்தைகள் நாடகக் கலைஞர்களுக்கு அவரவர் பகுதிகளில் நாடக விழாக்களை ஒருங்கிணைப்பதற்கான ஆதரவை மாவட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும்! குழந்தைகள் நாடகத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய பட்டய படிப்பையும் பயிற்சி மையத்தையும் உருவாக்க வேண்டும். இந்த சமூக ஆதரவு தொடர்ந்து நிகழும் பொழுது குழந்தைகள் நாடகக்கலை வடிவ அடிப்படையிலும், உள்ளடக்க அடிப்படையிலும், மிகப்பெரிய சமூகத் தாக்கத்தை உருவாக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை தரும் நாளை இருக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. சந்திரமோகன் இளங்கலை வணிகவியல் சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டயில் பயின்றவர். தேசிய நாடகப் பள்ளி ,காலச்சுவடு இணைந்து நடத்திய ஒரு மாதகால நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் மூலம் நவீன நாடக உலகில் 2007 நுழைந்தவர். நிகழ் நாடக மையத்தில் முழுநேர நாடகம் ஊழியராக தன் வாழ்க்கையைத் துவங்கி, நிகழ் நாடக மையத்தில் நாடக நிகழ்வுகள், நாடக உருவாக்கம், வடிவமைப்பு மற்றும் கல்வியில் நாடகம் போன்ற நுணுக்கங்களை பல்வேறு அயல்நாட்டு அறிஞர்கள் மூலம் அறிமுகமும் பயிற்சியும் பெற்று நான்காண்டு காலம் பணியாற்றினார். திருமிகு. பாலுமகேந்திரா அவர்களின் சினிமா பட்டறையில் நடிப்புத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.
- நீர்வாழ் விலங்குகள் எப்படித் தூங்கும்?
மிகவும் சோர்வாக உணரும்போது, தூக்கம் வருகிற வேளையில் முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவிக்கொண்டால் தூக்கம் போய்விடுகிறது. அப்படியென்றால் தண்ணீருக்குள்ளேயே இருக்கும் விலங்குகள் எப்படித் தூங்குகின்றன? முதலில் முகத்தில் நீரை அடித்தால் நமக்கு ஏன் தூக்கம் போகிறது என்று தெரிந்துகொள்வோம். காற்றில் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்கும் நம்மைப் போன்ற விலங்குகளின் முகத்தில் நீர் பட்டுவிட்டால் மூளை சுறுசுறுப்பாகிவிடும். "இவர் நீருக்குள் இருக்கிறார்" என்று மூளை யோசிக்கும். "நீருக்குள் இருப்பவர் விழிப்புடன் கவனமாக இருந்தால்தான் அவர் சரியாக சுவாசிப்பார், விழிப்பாக இருந்தால்தான் அவர் உயிர் பிழைப்பார்" என்று யோசிக்கும். உடனே கவனம் மற்றும் விழிப்புநிலையை உருவாக்கும். நமக்குத் தூக்கம் கலைந்துவிடும். காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் விலங்குகளுக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதால் நீருக்குள்ளேயே வாழும் விலங்குகளைத் தண்ணீர் எதுவும் செய்யாது. ஆனால் இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. நீரில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கவேண்டும் என்றால் தொடர்ந்து நீந்திக்கொண்டே இருக்கவேவேண்டும். ஆகவே நீர்வாழ் விலங்குகளால் மனிதர்களைப் போல ஆடாமல் அசையாமல் தூங்க முடியாது. பல மீன்கள் தூங்கும்போதும் மெதுவாக நீந்திக்கொண்டோ ஆடிக்கொண்டோ இருக்கின்றன. இன்னும் சில மீன்கள் தூங்குவதே இல்லை! இவற்றுக்குத் தூக்கம் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதே கடலுக்குள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கும் பாலூட்டிகள்கூட இருக்குமே! அவை எப்படித் தூங்குகின்றன? பாலூட்டிகளின் மூளையில் இரண்டு கோளங்கள் (Hemispheres) இருக்கும். தூங்கும்போது இவற்றின் ஒரு மூளைக்கோளம் மட்டுமே ஓய்வெடுக்கும். இன்னொரு கோளத்தின் உதவியால் இவை நீந்திக்கொள்ளும். நீர்ப்பரப்புக்கு மேலே வந்து சுவாசித்துக்கொள்ளும்! இன்னும் சில பாலூட்டிகள் மூச்சை தம்கட்டிக்கொண்டு தூங்குகின்றன, சுவாசிக்கும் நேரம் வரும்போது விழித்துக்கொள்கின்றன. இதை நுண் தூக்கம் (Micro sleep) என்று அழைக்கிறார்கள். உங்களுக்குத் தூக்கம் பிடிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தூங்குகிறீர்கள்? நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது ,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும் , விலங்குகளும் பாலினமும் , ஆழ்கடல், சூழலும் பெண்களும் , நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.
- வளரிளம் புதிர்ப்பருவம் - 8
"என்னால் இங்கே இருக்க முடியவில்லை!" என்று ஜேமி கத்தத் தொடங்குகிறான். தொடர்ந்து கத்துகிறான் "ஜேமி, உட்காரு, உட்காரு " என்று பிரையோனி சொல்கிறார். அதை அவன் கேட்பதாகவே இல்லை. கத்திக் கொண்டே இருக்கிறான். நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்க? என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறீங்க. என்னால் முடியாது. இங்கே இருக்கவே முடியல. என்னால் உட்காரவே முடியாது. நான் என்ன செய்யணும்னு நீங்க எனக்குச் சொல்லாதீங்க. நீங்க என்னைக் கட்டுப்படுத்தாதீங்க. உங்களால் அது முடியவே முடியாது. ஜேமி கத்திக் கொண்டே அருகில் வருகிறான். பிரையோனி திகைத்து அமர்ந்திருக்கிறார். முகத்தில் சிறிது பயமும். காவலர் உள்ளே வருகிறார். ஏதாவது பிரச்சினையா என்று கேட்கிறார். ஏதும் இல்லை என்று பிரையோனி சொல்கிறார். நான் கத்திட்டேன் என்று ஜேமி சாதாரணமாகச் சொல்கிறான். வெளியே போய் ஒரு டீ எடுத்து வருகிறேன் என்று பிரையோனி அந்த அறையை விட்டு வெளியேறுகிறார். சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார். வளர் இளம்பருவக் குழந்தைகளின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. தான் நினைப்பது, செய்வது மட்டுமே சரி என்ற மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். உடனுக்குடன் முடிவுகளை எடுப்பதும் உடனுக்குடன் மாற்றிக் கொள்வதும் எளிதாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்களின் கவனம் இருக்கிறது. அல்லது ஏன், எதற்கு என்ற கேள்விகளே இல்லாமல் பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். சமூக நிகழ்வுகளாகத் திருமணம், குடும்பம் என்று மாற்றம் வந்த பிறகு பொருளின் பின்னே இன்னும் வேகமாக ஓடத்தொடங்குகிறோம். பிள்ளைகள் பிறந்து விட்டால் வேகத்தையும் நேரத்தையும் அதிகரிக்கிறோம். ஏன் இப்படி இருக்கிறோம்? வாழ்க்கை என்றால் என்ன? என்பன போன்ற கேள்விகள் நம் வாழ்வில் அத்திப்பூக்கள். நம் ஓட்டத்தில் தடங்கல், சிக்கல் ஏற்பட்டால் திகைக்கிறோம், புலம்புகிறோம், செய்வதறியாது தடுமாறுகிறோம். இத்தகைய சூழலில் பிள்ளைகளை எப்படிக் கவனிக்கிறோம்? பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்தால் போதும், நல்ல பெற்றோர். ஊரின் சிறந்த பள்ளி என்று சொல்லிக் கொள்ளும் பள்ளியில் எப்பாடுபட்டேனும் பிள்ளையைச் சேர்த்துவிட்டால், சிறந்த பெற்றோர். நம் குழந்தைப் பருவத்தில் நமக்குக் கிடைக்காதது எல்லாம் நம் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே நமது கடமை. இதையெல்லாம் இன்னும் விரிவாகச் சில வாரங்கள் கழித்துப் பேசலாம். இப்போது ஜேமியிடம் வருவோம். சமூகம் உருவேற்றி வைத்திருக்கும் 'ஆண்மை' குணங்கள் தனக்கு இருப்பதாக நம்பும் குழந்தை, ஜேமி. அவனுக்குச் சரி என்று நினைப்பதை மற்றவர்கள் தவறு என்று சொல்லும்போது துடித்துப்போகிறான். கோபப்படுகிறான். ஒரு வீட்டில் கோபப்படும் குழந்தை இருந்தால் கவனித்துப் பாருங்கள். அந்தக் குடும்பத்தலைவர் மற்றும் பெரியவர்கள் மற்றவர்களிடம், 'அவன் கோவக்காரன், அவனை ஏதும் சொல்லாதீங்க' என்பார்கள். அதே குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளும் கோபக்காரனிடம் விட்டுக் கொடுத்த விட்டுக் கொடுத்தே போக வேண்டும். வேறு யாராவது எழியவர்களிடம் இது பற்றிப் பேச முயற்சி செய்தாலும் ' அவன் அப்படித்தான். பெரியவன் ஆனதும் சரி ஆகிவிடுவான்' என்று சமாளிப்பார்கள். கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு, 'கட்டுத்தறி மாடு' என்று. அதைப்போலத்தான் இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள். வீட்டிற்குள் செயலில் வீரம், வெளியே சொல்லில் வீரம். உணர்வெழுச்சியால் தன்னிலை அறியாமல் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். அது தவறுதான் என்று உணர்ந்து வருந்தும் நிலை அவர்களிடம் ஏற்படுவது இல்லை. தன் செயலின் விளைவு பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் நான் செய்ததே சரி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்த குற்றத்தின் ஆழத்தை எவ்வாறு புரிய வைப்பது? அதுதான் பிரையோனிக்கு முன் நிற்கும் சவால். பிரையோனி கண்காணிப்பு அறைக்குச் சென்று CCTV மூலம் ஜேமி என்ன செய்கிறான் என்று சிறிது நேரம் கவனித்துப் பார்க்கிறார். சற்றே புன்னகைத்து விட்டு விசாரணை அறைக்குச் செல்கிறார். "ஜேமி, நான் போலீஸ் இல்லை. உன்னிடம் எதையும் போட்டு வாங்க நினைக்கல. நடந்ததைப் பற்றி நீ என்ன புரிஞ்சு வச்சிருக்கே என்று தெரிஞ்சுக்கத்தான் நான் இங்கே வந்திருக்கேன்" என்று பிரையோனி அழுத்தமாகச் சொல்கிறார். ஜேமி, "எனக்குப் புரியுது. கேளுங்க, என்ன தோணுதோ கேளுங்க. இப்போ சரியா சொல்றேன்"என்கிறான். "ஆண்மை என்ற வார்த்தையைப் பற்றி நினைக்கும் போது எனக்கு என்ன தோணுதுன்னா, பொண்ணுங்க விஷயத்துல பசங்க எந்த அளவுக்கு ஆண்மையா உணர்வாங்க என்றுதான்." பிரையோனி சொல்கிறார். "நான் பெண்களை எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கேன்னு நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்." என்கிறான் ஜேமி. சரி. உன் அப்பா உங்க அம்மாவிடம் அன்பா நடந்துக்குவாரா? சண்டை போடுவாங்களா? எங்க அப்பா கோபப்படுவாரு. எதையாவது உடைப்பாரு. ஆனா அம்மாவை அடிச்சதே இல்லை. அவங்க மேல அன்பு வச்சிருக்காரு. உங்க அப்பாவுக்கு பெண் தோழிகள் உண்டா? இல்லை. அவர் தப்பானவர் இல்லை. நானும் அப்படிச் சொல்லல. நட்பாக பெண்கள் இல்லையா? இல்லை. அவர் நண்பர்கள் எல்லோருமே ஆண்கள் தான். உனக்குப் பெண் நண்பர்கள் இருக்காங்களா? இல்லை. ஏன், பெண்களைப் பிடிக்காதா? பிடிக்கும். பிறகு ஏன் நட்பாக யாரும் இல்லை? நான் பயந்தாங்கொள்ளி இல்லை. சரி. உனக்கு ஒரு தோழி இருந்தா என்ன செய்வாய், எங்கே கூட்டிட்டுப் போவாய். சினிமாவுக்கு. வளர் இளம்பருவத்தை, ஜேமியைப் புரிந்து கொள்ளுதலை நோக்கிய உரையாடல் தொடர்கிறது. ( உரையாடுவோம் )
- 2025 – கவனிக்க வேண்டிய சிறார் புத்தகங்கள்
உதயசங்கர் நூல்கள் கொழுக்கட்டை மழை பெய்த நாள் – நிவேதிதா பதிப்பகம் டாங்கோவின் எரியும் இதயம் – நூல்வனம் பதிப்பகம் யுஷ்கா எனும் பூனை – குப்ரின் – வானம் பதிப்பகம் காக்கா கொண்டு போச்சு – அஷீதா – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் பாப்பி பள்ளிக்கூடம் போகிறது – இயல் பதிப்பகம் பாப்பி வாசிக்கிறது – இயல் பதிப்பகம் எனக்குப் பிடித்ததை நான் சாப்பிடுவேன் – இயல் பதிப்பகம் உலகம் சுற்றும் பாப்பி – இயல் பதிப்பகம் உழைக்க வேண்டும் – இயல் பதிப்பகம் கனவு காணுங்கள் – இயல் பதிப்பகம் தீரன் ஹாய் வா – இயல் பதிப்பகம் மாயக்காடு – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் Magic Hat – Nivethitha Pathippagam அழகிய பன்றிக்குட்டி – வானம் பதிப்பகம் கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் – இந்து தமிழ் திசை விழியன் நூல்கள் தேநீரில் மிதக்கும் கணிதம் – புக் ஃபார் சில்ட்ரென் ஆகா மரம் – இயல்வாகை கணிதக்கற்றலும் கற்பித்தலும் – சுட்டி மீடியா மாயமான கருப்புத்தொப்பி – வேக் அப் புக்ஸ் புத்தகக்கண்காட்சி எனக்கு எதற்கு? – குட் லக் ப்ளிகேஷன்ஸ் அம்கா – புக் ஃபார் சில்ட்ரென் மகிழ் கணிதம் – சுட்டி யானை சிங் மங் டுங் - நம் கிட்ஸ் மூன்றாவது மொழி – பாரதி புத்தகாலயம் ட டாங் – புக் ஃபார் சில்ட்ரென் கொ.மா.கோ.இளங்கோ நூல்கள் மொகாபாத் மர்ம ம் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 1 - சாகித்ய அகாடமி சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 2 - சாகித்ய அகாடமி பூ பூவனம் – சாகித்ய அகாடமி ஆயிரம் வாசல் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் தேனி சுந்தர் நூல்கள் 1.நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : புக்ஸ் ஃபார் சில்ரன் 2.நட்சத்திரக் குழந்தை : புக்ஸ் ஃபார் சில்ரன் 3.திட்டமிடாத வகுப்பறைகள்: பாரதி புத்தகாலயம் 4.உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - வாசல் பதிப்பகம் ஞா.கலையரசி நூல்கள் வைக்கம் வீரர் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் பண்டித ரமாபாய் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் கல்வியாளர் வசந்தி தேவி – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் காணாமல் போன ஓவியம் – பாடநூல் கழகம் வேலை நிறுத்தம் வெற்றி – பாடநூல் கழகம் மல்லியும் பல்லியும் – நிவேதிதா பதிப்பகம் சிறகு விரித்த சிறார் கதைகள் – நிவேதிதா பதிப்பகம் A journey to the Blue Mountain – Book For Children ஆதி வள்ளியப்பன் நூல்கள் எப்படிப் பேசினார்கள்? – பாடநூல் கழகம் கடலுக்குள்ளே என்ன இருக்கு? – பாடநூல் கழகம் நாம் வாழ உதவுபவர்கள் – பாடநூல் கழகம் அது என்ன பறவை? – பாடநூல் கழகம் பாலூட்டிகள் - பாடநூல் கழகம் நான் ஆறு – பாடநூல் கழகம் இது என்ன மரம்? – பாடநூல் கழகம் குடுவை மனிதன் – வாசிப்பு இயக்கம் வானில் பறந்த மகிழ் – புக் பார் சில்ட்ரென் அலங்குப் பாதுகாவலர்கள் – ப்ரதம் புக்ஸ் விஷ்ணுபுரம் சரவணன் இடம் – சால்ட் பதிப்பகம் சரிதா ஜோ காட்டுக்குள் மர்ம விலங்கு – இயல் பதிப்பகம் குருங்குளம் முத்துராஜா நூல்கள் 1.மாதியும் பூனையும் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் 2.பூ பூ பூசணிப்பூ – மேஜிக் லேம்ப் வெளியீடு 3.தாட் பூட் வாட் – வாசிப்பு இயக்கம் ராஜலட்சுமி நாராயணசாமி நூல்கள் தங்கப்பறவையும் கழுகும் – கவிநயா பதிப்பகம் கனலின் பயணம் – ஹெர் ஸ்டோரிஸ் பாரதிக்குமார் காஷ்குமரி – நிவேதிதா பதிப்பகம் உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- லண்டனிலிருந்து அன்புடன் - 9
புத்தாண்டில் குதூகலமான புத்தகப் பயணம்: காத்தரீன் ரெய்னருடன்... குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களில் அதுவும் குறிப்பாக படக் கதைப் புத்தகங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கே ஓவியர்கள் கதைகளுக்குப் படம் வரைவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் தாங்களே எழுதுகிறார்கள். தமிழில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளுக்கே ஓவியர்கள் படங்கள் வரைகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில், ஓவியர்கள் பலரும் எழுத்தாளர்களாகவும் இருக்கின்றனர். படக் கதைகள் உருவான காலம் முதல் இன்று வரை, ஓவியர்கள் குழந்தைகளுக்காக எண்ணற்ற புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இந்தக் கதைகளில் படங்களும் வார்த்தைகளும் ஒன்றோடொன்று சேர்ந்து, குழந்தைகளின் கற்பனை உலகை இன்னும் விரிவாக்குகின்றன. ஓவியர்களே எழுத்தாளர்கள் என்பதால், பல புதிய முயற்சிகளை அவர்கள் ஓவியங்களிலும், எழுத்தோவியங்களிலும், வடிவமைப்பிலும் செய்ய்கிறார்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவரான, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காத்தரீன் ரெய்னர் (Catherine Rayner) அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சமீபத்தில் நான் நூலகம் சென்ற போது, காத்தரீன் ரெய்னர் அவர்களின் Ernest என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எர்னஸ்ட் என்று பெயரிடப்பட்ட மூஸ் மான் (moose) பற்றிய கதை. எர்ன்ஸ்ட் அளவில் மிகவும் பெரிய விலங்கு. நம்மூர் எருமை மாட்டைவிட பெரியது என்று வைத்துக்கொள்ளலாம். அதனால், அது புத்தகத்தினுள் வர முடியாமல் தவிக்கிறது. ஆனால் எப்படியாவது புத்தகத்தினுள் வந்து குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று அது ஆசைப்படுகிறது. எர்னஸ்ட்டுக்கு சிம்பக் என்ற அணில் நண்பன் இருக்கிறது. அதனிடம் சென்று யோசனை கேட்கிறது. சிம்பக், “குனிந்து பாரு”, “வளைய்ந்து பாரு” என்று சொல்கிறது. எர்னஸ்ட் எல்லாவற்றையும் முயற்சி செய்கிறது. ஆனால் எது செய்தாலும், அது புத்தகத்தினுள் வர முடியுமா? முடியாதல்லவா! இறுதியில், எர்ன்ஸ்ட் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்பதை கடைசிப் பக்கத்தில் தான் பார்க்க முடியும். எப்படித் தெரியுமா? நீங்களே சற்று கண்களை மூடி யோசித்துப் பாருங்கள்… இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், எர்னஸ்ட்டின் உடலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஓவியமாக இருக்கும். ஆனால் புத்தகத்தின் கடைசி பக்கத்தில், பெரிய அளவிலான ஒரு பக்கத்தை எட்டாக மடித்து வைத்திருப்பார்கள். அதை விரித்தால், எர்னஸ்ட்டின் முழு ஓவியம் தெரியும்! இப்போது புரிகிறதா? எர்னஸ்ட் என்ற பெரிய மிருகம் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்று? இப்போது, ஓவியர் காத்தரீன் ரெய்னர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அவர் ஸ்காட்லாந்தின் முக்கிய நகரமான எடின்பராவைச் சேர்ந்தவர். இவரது முதல் படக் கதைப் புத்தகமான Augustus and His Smile 2007ஆம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு Harris Whose Feet Are Too Big, Abigail, a Giraffe Who Loves Counting, Iris and Isaac போன்ற பல புத்தகங்களை அவர் எழுதியும் வரைந்தும் உள்ளார். இவரது புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் விலங்குகளே. அது பற்றி அவர் சொல்வது என்ன தெரியுமா? “விலங்குகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என் ஓவியங்களிலும் பெரும்பாலும் விலங்குகளையே வரைகிறேன்,” என்று காத்தரீன் ரெய்னர் கூறுகிறார். இந்த ஆர்வம் அவருக்கு சிறுவயதிலிருந்தே இருந்ததாம். அவர் குழந்தையாக இருந்தபோது வீட்டில் பல செல்லப்பிராணிகள் இருந்தன. முயல், நாய், ஹாம்ஸ்டர், தங்கமீன் என்று நிறைய! அவர் 13 வயதாக இருந்தபோது, குதிரை ஒன்றை பராமரித்தாராம். இன்றும் அவரிடம் ஒரு குதிரை இருக்கிறதாம். புதிய ஒரு விலங்கு கதாபாத்திரத்தை வரைய வேண்டுமென்றால், அவர் முதலில் அந்த விலங்கை நன்றாக கவனிப்பாராம். முடிந்தால், நேரில் சென்று அந்த விலங்கைக் காண்பாராம். Augustus என்ற புத்தகத்துக்காக, அவர் ஒரு பூங்காவில் புலியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாராம். ஒரு கதாபாத்திரம் சரியாக உருவாகும் வரை, அவர் அதை மீண்டும் மீண்டும் பென்சிலால் வரைவாராம். சில நேரங்களில் 30 அல்லது 40 முறை வரை முயற்சி செய்வார்! பிறகுதான் அதற்கு வண்ணம் தீட்டுவார். அதுவே டிராகன் போன்ற கற்பனையான விலங்கு என்றால், இரண்டு-மூன்று விலங்குகளின் குணங்களை கவனித்து அதனை ஒன்று சேர்ப்பார். அதே போல், மிருகங்களுக்குத் தகுந்தாற் போல் liquid acrylic அல்லது water colour pencil crayon போன்ற முறைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டுவார். அவர் சொல்வது போல், நீங்களும் ஒரு விலங்கை கவனித்து பிறகு வரைந்து பாருங்களேன்! சரி குழந்தைகளே! இந்தப் புத்தாண்டை நாம் ஒரு குதூகலமான புத்தகத்துடன் தொடங்கி இருக்கிறோம். 2026 நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வாசிப்பு ஆர்வமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும். உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.
- டி-3
( ஒரு சை-ஃபை[Sci-Fi] கதை ) சென்னை நகரம் ஒரு நாள் காலையில் கொஞ்சம் வித்தியாசமாக விழித்தது. சூரியன் உதித்ததும், வானத்தில் பறவைகளுக்கு நடுவில் “வீ…வீ…வீ…” என்ற சத்தம் கேட்டது. மக்கள் மேலே பார்த்தார்கள். அங்கே… ட்ரோன்கள்! நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், வானத்தில் பறந்து கொண்டிருந்தன. ஆனால் அவை சாதாரண ட்ரோன்கள் அல்ல. ஒவ்வொரு ட்ரோனும் ஒரு வேலை செய்தது. “அம்மா! அந்த ட்ரோன் பால் கொண்டு வருது!” என்று பத்து வயது குட்டிக் கண்ணன் கத்தினான். “அந்த ட்ரோன் மருந்து!” “இந்த ட்ரோன் காய்கறி!” “ஹை! அது ஐஸ்க்ரீம் ட்ரோன்!” ஆம்! சென்னை நகரத்தில் ‘வான விநியோகத் திட்டம்’ தொடங்கப்பட்டிருந்தது. மக்கள் கடைக்குப் போக வேண்டியது இல்லை. டிரோன்களே வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்துக் கொடுக்கும். மக்களுக்கு அது ஒரு சுவாரசியமான விஞ்ஞான அதிசயம் போல தோன்றியது. ஒரு நாள், கண்ணன் வீட்டின் பால்கனியில் ஒரு சிறிய ட்ரோன் வந்து இறங்கியது. “ஹலோ, கண்ணன்!” என்று அது பேசியது. “அப்பா! அம்மா! இங்க ஒரு டிரோன் வந்திருக்கு, இந்த ட்ரோன் பேசுது!” என்று கண்ணன் குதித்தான். அந்த ட்ரோன் சிரித்தது “என் பெயர் டி-3. (Drone Number 3) நான் உங்களுக்கு உதவ வந்தேன்,” என்றது. கண்ணனின் கண்கள் சந்தோஷத்தில் பளபளத்தன. “உங்களுக்கு பெயர் எல்லாம் இருக்கா? நீ எப்படி பேசுற?” அவனுக்குப் படு ஆச்சரியம். “Artificial Intelligence! அதாவது செயற்கை நுண்ணறிவு,” டி-3 விளக்கியது. “எனக்கு யோசிக்கவும், பேசவும், வழி கண்டுபிடிக்கவும் தெரியும்.” ஒரு மாலை, நகரம் முழுக்க ஒரே பரபரப்பு. வானத்தில் பெரிய குழப்பம் நேர்ந்தது. ட்ரோன்கள் எல்லாம் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி பறந்தன. “பால் வரல!” “மருந்து வரல!” “என் ஐஸ்க்ரீம் எங்கே?” ஒரே தேடல்கள்!! கண்ணன் உடனே டி-3யை அழைத்தான். “என்ன ஆச்சு?” டி-3 கவலையுடன் சொன்னது: “ஜிபிஎஸ் செயற்கைக்கோளில் ஏதோ கோளாறு போல. நாங்க வழி தவறிட்டோம், சரியான பாதையைக் கண்டு பிடிக்க முடியல.” கண்ணன் யோசித்தான். “ஜிபிஎஸ் இல்லாமல் நீங்க வழி கண்டுபிடிக்க முடியாதா?” டி-3 சிரித்தது. “முடியும்… மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இருந்தால்!” கண்ணன் ஒரு காகிதத்தில் நகர வரைபடம் வரைந்தான். “இது என் பள்ளி.” “இது மருத்துவமனை.” “இது மார்க்கெட்.” “நீங்க இதைப் பார்த்துப் பறக்கலாமே?” என்றான். டி-3 மகிழ்ச்சியடைந்தது. “மிகச் சிறந்த யோசனை, குட்டி விஞ்ஞானியே!!” அது அந்த வரைபடத்தை ஸ்கேன் செய்தது. “கவனிக்கவும்! எல்லா டிரோன்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!” என்று டி-3 அறிவித்தது. “இந்த வரைபடத்தைப் பின்பற்றுங்கள்!” கண்ணன் வரைந்த படத்தைக் காட்டியது. உடனே எல்லா ட்ரோன்களும் நேராக, சரியாகப் பறக்க ஆரம்பித்தன. சில நிமிடங்களில்… பால் வந்தது. மருந்து வந்தது. ஐஸ்க்ரீமும் வந்தது! 🍦 மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். நகர மேயர் கண்ணனைப் பாராட்டினார், “நீ பெரிய விஞ்ஞானியாக வருவாய்!” கண்ணன் சிரித்தான். “நான் என் ட்ரோன் நண்பனுக்கு உதவி செய்யவே இதைச் செய்தேன்!” “தொழில்நுட்பம் சக்திவாய்ந்தது. ஆனால் மனிதர்களின் அறிவும் கருணையும் சேரும்போது தான் அது சிறப்பாக வேலை செய்யும்.” டி-3 கண்ணனுக்கு ஹை-ஃபை காட்டியது. அந்த நாளுக்குப் பிறகு, சென்னை வானம் இன்னும் வண்ணமயமாக இருந்தது. பறவைகளும் ட்ரோன்களும் சந்தோஷமாக பறந்தன. கண்ணன் மேலே பார்த்து உற்சாகமாகச் சொன்னான்: “ஒரு நாள் நானும் ட்ரோன்கள் போல பறக்கப் போகிறேன்!” ஸ்ரீஜோதி விஜேந்திரன் விஜோஸ் புக்ஸ் பார்ன் (ViJos Books Barn) என்ற நூலகத்தின் நிறுவனர் ஆங்கில மொழிப் பயிற்சியாளர் மென் திறன் பயிற்சியாளர் (Soft skills trainer) விருது பெற்ற சிறார் எழுத்தாளர்.













