இயலில் தேடலாம்!
268 results found with an empty search
- மாயப்புத்தகம்
மாயஜாலங்கள் இயல்பாக இருந்த ஒரு காலத்தில் தாமஸ் என்ற ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். புத்தகங்கள் வாசிப்பது என்றால் அவனுக்கு அலாதியான ஆர்வம் இருந்தது. ஒரு நாள் நூலகத்திற்கு போன போது அங்கே மறைந்திருந்த ஒரு விசித்திரமான மாயப்புத்தகத்தை பார்த்து மகிழ்ச்சி இவ்வளவுதான் என்றில்லை. இது என்ன… இதுவரை இப்படி ஒன்றை பார்த்ததில்லையே என்று அதை ஆர்வமாக தொட்டான். புத்தகத்தை கைவிரல்களால் தொட்ட அடுத்த விநாடியில் ஒரு வானுலக வெளிச்சம் அறை முழுவதும் பிரகாசித்தது. அவன் புரட்டிய புத்தகத்தில் விநோதமான அடையாளக்குறிகள் தோன்றி காற்றில் நடனமாடின. “ஆஹா… என்ன ஒரு வசீகரிக்கும் ஒளி. புதியதாக இருந்தாலும் இந்த நடனமாடும் அடையாளங்கள் நெடுநாட்கள் பழகிய நண்பனைப்போல் வசீகரம் செய்கிறதே” என்று ஆச்சரியமுற்றான். கொஞ்ச நேர அசைவுகளுக்குப் பிறகு அடையாளங்கள் அவைகளுக்குள் இடம்மாறி அமைந்து ஒரு வாக்கியமாக மாறியது. “வரவேண்டும் இளஞ்சிறுவனே… இப்பொழுது உனக்கு சில இரகசியங்களை அறிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது” “எனக்கு எதைப்பற்றி சொல்லப்போகிறாய்” தாமசின் மனதில் கிசுகிசுவென கேள்வி படர்ந்தது. “இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்” அடையாளக்குறிகள் வேகமாகச் சுழன்று கிசுகிசுப்பு சப்தமாக மாறியது. “பிரபஞ்ச வெளியில் பயணிக்க இப்போது என்னோடு புறப்படு” அறை முழுவதும் பலவிதமான வண்ணங்களில் நட்சத்திரங்கள் சுழன்று கொண்டிருந்தன. தாமசுக்கு விண்ணுலகின் அதிசயத்தில் மிதப்பது போலிருந்தது. திடீரென ஒரு எரிநட்சத்திரம் ஒளிரும் விண்மீன் படலமாக வானத்தில் கோடு கிழித்துக்கொண்டு போனது. தாமஸ் அந்த விண்மீன் பாதையில் இழுத்துச்செல்லப்படுவதை உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் அதன் போக்கிற்கு இசைந்தான். அந்த பாதையில் தொடர்ந்து சென்றபோது அது விண்ணுலகப் பறவை வடிவத்திலிருந்த ஒரு அற்புதமான விண்வெளி ஓடத்திற்கு கூட்டிச்சென்றது. அதன் இருபுறமும் ஒளிரும் இரத்தினக்கற்கள் பதித்த இறக்கைகள் அலங்கரித்துக்கொண்டிருந்தன. “வாருங்கள் இளம் ஆராய்ச்சியாளரே” அதன் மெல்லிய வரவேற்புக்குரல் கேட்டது. விண்வெளி ஓடத்தின் கதவுகள் பக்கவாட்டில் சறுக்கியபடி திறந்தன. அதன் வசதியான உட்புறத்தில் நட்சத்திர வரைபடங்கள், விண்ணுலக விளக்கப்படங்கள் மற்றும் கட்டுப்பாட்டக பலகத்துடன் வானுலக சக்தியின் ரீங்காரம் இசைத்துக்கொண்டிருந்தது. “இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதில் அமர்ந்து பறக்கும் அனுபவம் எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்” என்று ஆவலுடன் ஓடத்தில் ஏறியதும் வண்ணவண்ண நட்சத்திர ஒளிகள் ஏற்படுத்திய உணர்வில் தாமசின் கண்கள் மினுமினுத்தன. கட்டுப்பாட்டு பலகத்தை தொட்டதும் விண்கலம் உயிர்பெற்று அதன் இறக்கைகள் ஒளிர்ந்தன. “ஹூஷ்.ஷ்” என மெல்லியதாக ஒலியெழுப்பியபடி கலம் பிரபஞ்சவெளியில் ஊடுருவிப்பறந்தது. எல்லையில்லாத விண்வெளிப்பரப்பில் மிதந்து போகும் தாமசுக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக இருந்தது. நட்சத்திரங்களும் விண்மீன் திரள்களும் வானுலக அதிசயங்களை காண்பித்து விண்ணில் சுழன்று கொண்டிருந்தன. இப்போது நிறங்களை மாற்றிக்கொண்டு உயிரோட்டமான ஒன்றாக சுழன்று கொண்டிருந்த நெபுலா கோளை விண்கலம் நெருங்கியது. வாயுக்கள் மற்றும் தூசிகளால் ஆன சுழலும் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்த நெபுலாவில் சறுக்கியபடி கலம் மெதுவாக தரையிறங்கியது. மினுக்மினுக்கென தோன்றி ஒளிரும் நட்சத்திரங்களின் பிரபஞ்ச நடனம் காணுவதற்கினிய காட்சியாக அமைந்தது. நெபுலாவில் நெடுந்தொலைவு பயணம் செய்து பாலைவனச்சோலை போன்ற ஓர் இடத்தை அடைந்தார்கள். அப்போது அங்கே ஒரு ஒளி உருவம் தோன்றி, “உன்னை எதிர்பார்த்துதான் காத்திருக்கிறேன். நான் இந்த சோலையின் பாதுகாவலன். என் பெயர் பயஸ். உனக்கு இதுவரை பலரும் அறியாத பிரபஞ்ச ரகசியங்களை தெரிந்து கொள்ளவேண்டுமா” என்று கேட்டது. “ஆமாம். அதற்காகத்தான் வந்திருக்கிறேன்” ஆர்வம்கூட பதில் சொன்னான். “சரி. என்னோடு வா” என்று பழங்கால கலைப்பொருட்களும் வான்ஒளிக்கோளங்களும் நிரம்பிய ஒரு அறைக்கு பயஸ் கூட்டிச்சென்றது. “இரகசியங்கள் இந்த ஒளிக்கோளங்களில் அறிவாக பொதிந்து கிடக்கிறது. ஒவ்வொரு கோளத்திலும் ஒவ்வொரு பிரபஞ்ச உண்மை அடங்கியிருக்கிறது. அவற்றை உனக்கு சொல்லவேண்டுமென்றால் நீ மூன்று பழந்தமிழர்கால புதிர்களுக்கு விடை சொல்ல வேண்டும்” என்று ஒளி உருவமான பயஸ் சொன்னது. “சரி கேள்” என்று தயாரானான் தாமஸ். “உடைக்க முடியும் ஆனால் ஒரு போதும் பற்றிக்கொள்ள முடியாது. அது என்ன” ஒரு ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு சட்..டென பதில் சொன்னான். “வாக்குறுதி. ஒரு வாக்குறுதியை மீறலாம். ஆனால் அதை கைகளால் பிடித்துப் பார்க்க முடியாது” அந்த பதிலை கேட்ட பயசின் முகம் அன்பான புன்னகையுடன் பிரகாசித்தது. “சரியாகச் சொன்னாய்” என்று அடுத்த புதிரை போட்டது. “எது எப்போதும் வரும். ஆனால் ஒரு போதும் வராது” ‘என்ன இது. சினிமாவில் வரும் காமெடி போல் உள்ளதே. இதற்கு என்ன பதில் சொல்வது’ என்று சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான். “நாளை என்பது இதன் விடை” பயஸ் அதை சரியென்று ஆமோதித்து தலையசைத்தது. “ஆம். நாளை எப்போதும் வருகிறது. ஆனால் அது உண்மையில் ஒரு போதும் வராது. ஏனென்றால் அது வரும் போது, அது ‘இன்று’ என அர்த்தம் ஆகிவிடுகிறது. இந்த சின்னவயதில் புத்திசாலியாக இருக்கிறாய்” என்று கடைசி புதிரை போட்டது. “தலையும் வாலும் இருக்கும். ஆனால் உடல் இல்லை. அது என்ன… சொல் பார்ப்போம்” தாமஸ் இமைகளை சுருக்கி விடையை தேடியதும் ‘பட்…’டென பதில் வந்தது. “நாணயம் என்பது இந்த புதிருக்கான விடை”. பயஸ் மகிழ்ச்சியில் இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது. “நீ மிகவும் புத்திசாலி. நாணயத்தின் ஒருபுறம் தலையும் மறுபுறம் வாலும் இருக்கும். ஆனால் அதற்கு உடல் இல்லை” பயஸ் கைகளை அசைக்கவும் அறிவுக்கோளங்கள் ஒளிரத்துவங்கி அறை முழவதும் தங்கம் போல் தகதகவென மின்னியது. அந்த அறிவுக்கோளங்கள் தாமசை நோக்கி மிதந்து வந்தன. அவை ஒவ்வொன்றிலும் பண்டைய கால அறிவுப்புதையல் நிரம்பியிருந்தது. தாமஸ் அவை சொன்ன இரகசியங்களை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தான். பூமியிருந்து கலத்திற்கு ஒரு சமிக்ஞை வந்தது. கட்டுப்பாட்டுப் பலகம் ‘பீப்..பீப்…” என பதில் சமிக்ஞை அனுப்பியது. “உன் பயணம் இன்னும் வெகுதொலைவிற்கு உள்ளது. இங்கு தெரிந்து கொண்டதை பூமியின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்துவாயாக” என்று பயஸ் புன்முறுவல் செய்து விடை கொடுத்தது. கலத்தின் இயந்திரம் சலசலப்புடன் இயங்கத் தொடங்கியது. விண்ணுலகப்பறவை பூமியைப் பார்க்க இறங்கியது. விசித்திரமான உயிரினங்களை சந்தித்தது, பிரபஞ்ச இயக்கத்தின் காட்சிகளை பார்த்தது, விண்ணுலக இகசியங்களை அறிந்துகொண்டது என புதிய அனுபவங்களோடு தாய்மண்ணில் வந்து இறங்கினான். பயஸ் சொன்னது போல அவனுக்கு இன்னும் நிறைய வேலைகள் காத்திருந்தன. மாயப்புத்தகத்தின் பக்கங்கள் படபடவென அசைந்து, ஒரு பறவை இறக்கைகளை ஒடுக்கி மரக்கிளையில் அமர்வது போல அடுக்குப்பலகையில் போய் அமைதியாக உட்கார்ந்து கொண்டது. ஜெ.பொன்னுராஜ் 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2
- மணல் வீடு
கோடி கோடி பணத்தினால் மாடி வீடு கட்டுவர் ; கோடி கோடி மணலினால் வீடு நாங்கள் கட்டினோம். செங்கல் தேவை யில்லையே ! சிமிண்டும் தேவை யில்லையே எங்கள் வீட்டைக் கட்டிட இரும்பும் தேவை யில்லையே ! ஐந்து நிமிட நேரத்தில் அழகு மிக்க வீட்டினைச் சந்து பொந்து இன்றியே குந்தி நாங்கள் கட்டினோம். கடலின் அலைகள் வீட்டினைக் கரைத்திட் டாலும் பயமிலை. உடனே புதிய வீட்டினை உவகை யோடு கட்டுவோம். ஏடு படிக்கும் யாவரும் கூடி வீடு கட்டினோம்) வீடு உடைந்து போகுமுன் ஒடி வந்து பாருங்கள்
- பூமி பார்த்துக் கொண்டுதானிருக்கிறது
மோகன் குளிரூட்டப்பட்ட கவச உடை அணிந்திருந்தான். தலையில் விண்வெளிவீரர்களைப் போல தலைக்கவசம். அந்தக் கவசத்துக்குள் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர். இடுப்புப்பட்டையில் இன்னொரு ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தது. பள்ளியின் காத்திருப்பு அறையில் இருந்து வெளியே பார்த்தான். . வானம் வெள்ளைவெளேரென்று இருந்தது. மேகங்கள் இல்லை. மரங்கள் இல்லை. செடி, கொடிகள் இல்லை. மலைகள் இல்லை. அருவிகள் இல்லை. நதிகள் இல்லை. கடல்கள் இல்லை. காற்று இல்லை. பூமி வெள்ளைவெளேரென்று இருந்தது. வேறு என்ன இருந்தது? வானாளவிய பாலங்கள் சிலந்தி வலைப்பின்னலைப் போல பின்னிக் கிடந்தன. மேகங்கள் இல்லாத தினால் பெரிய சிறிய டிரோன்கள் குறுக்குமறுக்கும் பறந்து கொண்டிருந்தன. மோகனை அழைத்துச் செல்லும் டிரோன் இன்னும் வரவில்லை. டிராபிக் ஜாம் என்ற செய்தி அவனுடைய மூளையில் நேரடியாக டெலிவரி ஆகியிருந்தது. மோகன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். எங்கு பார்த்தாலும் வாகனங்கள்.. தரையில் செல்லும் வாகனங்கள் உண்மையில் தரையில் செல்லவில்லை. அவை தரைக்கு மேலே ஒரு அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை சற்று விலை குறைவானவை. வாடகையும் குறைவு. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் ஊர்ந்து கொண்டிருந்தன. மோகனைப் போன்ற வசதியான குழந்தைகள் வானில் பறக்கும் டிரோன்களில் பறப்பார்கள். அவன் பள்ளிக்கூட த்துக்குப் போகும்போதும் சரி வரும்போதும் சரி. சாலைகளிலோ, தெருக்களிலோ மனிதர்களைத் தவிர எந்த உயிரினத்தையும் பார்த்ததில்லை. ஒரு பூவையோ, காயையோ, பழத்தையோ செடியையோ மர த்தையோ பார்த்த தில்லை. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எதையும் பார்த்த தில்லை. அவ்வளவு ஏன்? அவை எல்லாம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. அவனுடைய கணினியில் பூச்சிகள் விலங்குகள் பறவைகள் செடிகள் மரங்கள் எல்லாம் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று சொல்லப்பட்டிருந்த து. அவ்வளவு ஏன் தண்ணீர் கூட ஹைஜீனிக் இல்லை என்று வேதியியல் விவரங்களுடன் மனப்பாடப்பகுதியில் இருந்த து. எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் தண்ணீர், ஆக்சிஜன், உணவுப்பொருட்கள் எல்லாம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. அதற்கென்றே கே.எப்.சி, மெக்னோல்டு, ரிலையன்ஸ், டி மார்ட், போன்ற கம்பெனிகள் 1000 மாடிக்கட்டிடங்களைக் கட்டி ரோபோக்களை வைத்து உற்பத்தி செய்தார்கள். சாப்பிட நேரமோ, பொறுமையோ இல்லாதவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. அவற்றைச் சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் எடுக்காது. பசி இருக்காது. சோர்வு இருக்காது. உறக்கம் வராது. மரணமும் கிடையாது. எனவே மனிதர்கள் எல்லோரும் அந்தக் கம்பெனிகளில் ஆயுள் காலச் சந்தாக்களைக் கட்டினார்கள். மோகனின் அம்மா ஒரு கம்பெனி, அப்பா ஒரு கம்பெனி, தங்கை ஒரு கம்பெனி, அவன் ஒரு கம்பெனி. எனவே எல்லாக்கம்பெனிகளின் ஆபர்களும் கழிவுகளும் இலவசங்களும் அவர்களுக்குக் கிடைத்தன. மோகனுக்குப் பசிப்பது போல இருந்தது. உடனே அவனுடைய கையில் இருந்த உடல் கண்காணிப்புத் திரையில் சிவப்பு விளக்கு எரிந்த து. எத்தனை கலோரி குறைந்திருக்கிறது? எத்தனை கலோரி தேவை? அதற்கு எந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று திரையில் காட்டியது. உடனே அவன் அவனுடைய கால்சட்டைப்பைக்குள் கையை விட்டான். ரோஸ் நிற மாத்திரையை எடுத்து வாயின் அருகில் கொண்டு போனான். உடனே அது காந்தசக்தி ஈர்ப்பைப் போல வயிற்றுக்குள் போய்விட்டது. உடனே சிவப்பு விளக்கு அணைந்து விட்டது. மனிதர்களைத் தவிர யாருமில்லாத உலகத்தில் மீண்டும் மீண்டும் கணினித் திரைகளைப் பார்த்துப் பார்த்துச் சலிப்படைந்து விட்டான். அம்மா சொன்னார். நூறாண்டுகளுக்கு முன்னால் ஹிஸ்டரி சேனலில் ஒரு கரப்பான் பூச்சி ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட து. உடனே பன்னாட்டுப்படைகள் அதன் மீது மிகப்பெரிய தாக்குதல் தொடுத்து அழித்து விட்டார்கள். அதன் பிறகு ஒரு ஈ, எறும்பைக் கூடப் பார்க்க முடியவில்லை என்று சொன்னார். மோகனுக்கு அன்று முதல் ஒரு ஆவல் தோன்றி, ஆசையாகி, அதன்பிறகு இலட்சியமாகவே மாறிவிட்ட து. மனிதர்கள் மட்டுமே வாழும் இந்தப் பூமியில் அனைத்து உயிர்களும் வாழும்படி மாற்ற வேண்டும். மறைந்த இயற்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும். எல்லா உயிர்களும் சம மென்று மனிதர்கள் உணரவேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதற்காக அவன் இரவு உறங்கும்போது வேண்டிக் கொண்டேயிருந்தான். அவனுடைய இந்த வேண்டுதலைப் பூமியின் உள்ளே மறைந்திருந்த இன்னொரு இயற்கைக் கேட்டது. அதற்கு அந்தக் குழந்தையின் வேண்டுதலைக் கேட்டு மனம் இளகி விட்ட து. அதற்கு முன்புவரை எல்லோரையும் அழிக்கும் மனித இனம் விரைவில் மறைந்து விடும். பிறகு புதிய உலகத்தை, பறவைகளை, விலங்குகளை, பூச்சிகளை, மரம் செடி கொடிகளை, மலைகளை, அருவிகளை எல்லாம் படைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தது. மோகனின் வேண்டுதல் பூமியின் மனதை இளக்கி விட்டது. மறுநாள் காலையில் பாலங்களுக்குக் கீழிருந்து மலைகள் முளைத்து வந்தன. மலைகளில் அருவிகள் விழுந்தன. மலைகளிலிருந்து காடுகள் விரிந்தன. செடிகள் பூத்தன. கொடிகள் பின்னிப்படர்ந்தன. மரங்களில் காய்களும் கனிகளும் தோன்றின. காடுகளிலிருந்து விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், பூமி முழுவதும் பரவின. கடல்கள் தோன்றின. கடலிலிருந்து மேகங்கள் தோன்றின. மேகங்கள் மழை பொழிந்தன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் தோன்றின. நீர்நிலைகள் தோன்றின. மனிதர்களின் அத்தனை கவசங்களும் கழன்று விழுந்தன. மனிதர்கள் அந்தப் புதிய உலகை வியப்புடன் பார்த்தனர். மோகன் கண்விழித்ததும் ஒரு குயிலின் சத்தத்தைக் கேட்டான். 350 ஆவது மாடி சன்னல் வழியே பார்த்த போது ஒரு சொர்க்கம் தெரிந்த து. மோகனின் முகத்தில் புன்னகை விரிந்தது. உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- ஹன்ஸ் குகைகள், பெல்ஜியம்
பெல்ஜியம், லக்ஸம்பெர்க் மற்றும் நெதெர்லாந்து (ஹாலந்து) ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய நாடுகள். மூன்று நாடுகளையும் இணைத்து பீனலக்ஸ் (Benelux) என்று சொல்லுவார்கள். பெல்ஜியத்தின் தலைநகரம் (ஐரோப்பாவின் தலைநகரமும் கூட) பிரஸல்ஸ் (Brussles) நகரிலிருந்து லக்ஸம்பர்க் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது ஹன்ஸ் குகை. இந்தக் குகை, ப்ரஸல்ஸ் நகரிலிருந்து சுமார் நூற்று இருபது கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்திருக்கிறது. குகைக்கு அருகே அமைந்த பெரிய நகரம் நாமுர் (Namur). நாமூரைக் கடந்து சிறிது நேரத்தில் இரயில் யெமிலி (Jemille) என்ற சிற்றூரில் நிற்கும்போது இறங்கிக் கொள்ள வேண்டும். யெமிலியிலிருந்து பேருந்துப் பயணம். சுமார் பத்து கிலோமீட்டர் கடந்தால் வரவேற்கிறது ஹன்ஸ் சுர் லெஸ்ஸி (Hans-Sur-Lesse). நானும் என் நண்பனும் அங்கே சென்ற நேரம் நல்ல கோடைகாலம் (2001ஆம் வருடம்) என்றாலும் வழக்கத்திற்கு மாறான குளிரும் மழையும் அன்றைய பயணத்திற்கு இடையூறாய் இருந்தன. குகைச் சுற்றுலா செல்ல அனுமதிச்சீட்டு வாங்கி, தயாராக நின்றிருந்த சிறிய செந்நிற ட்ராம் வண்டியில் அமர்ந்தோம். சில்லென்ற குளிர்காற்று முகம் வருட, வண்டி புறப்பட்டது. சரிவான பாதை. குகையின் வாசலை அடையப் பத்து நிமிடப் பயணம் ஆனது. செல்லும் வழியில் பச்சைப் பசேலென்ற புல்வெளியும், புல் மேய்ந்துகொண்டிருந்த மான்கூட்டங்களும், வழியெங்கும் அணிவகுத்த உயரமான மரங்களும் மனதை மயக்கின. கீழேயுள்ள படத்தில் காண்பது நாங்கள் பயணம் செய்த ட்ராம் வண்டி. குகை வாசலில் நிற்கிறது. அனைவரும் இறங்கியவுடன் வழிகாட்டிகள் வரவேற்கிறார்கள். ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, பிரெஞ்சு என மொழிக்கு ஒரு வழிகாட்டி. சில சமயத்தில் இரு மொழிகட்கு ஒரு வழிகாட்டியும் அமைவதுண்டு. பயணிகளை மொழிவாரியாகப் பிரித்து சிறுசிறு குழுக்களாய்க் குகைக்குள் அனுப்புகிறார்கள். எங்களுக்கமைந்த வழிகாட்டி ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் குறிப்புகள் அளித்தார். குகைக்குள்ளே குளிர் அதிகம் இருக்கும் என்றார். சற்றே இருட்டாயிருந்த குகைக்குள் ஒவ்வொருவராய் நுழைந்தோம். வெளிச்சம் குறைந்த பல மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. சிறு சிறு மரப்படிகள் அமைக்கப்பட்டிருக்க, கீழே இறங்கினோம். இந்தக் குகை செயற்கையாய்ச் செய்த குகை அல்ல. இயற்கையே அமைத்த குகை. உள்ளே நிறையப் பாறைகள். கற்பாறைகள் அல்ல, அனைத்தும் சுண்ணாம்புப் பாறைகள். வெளிச்ச நிறத்தில் பளிங்கு போல் பளபளத்தன. இவையனைத்தும் மனிதன் போல் வளரும் பாறைகள். குகைக்குள் ஈரக்கசிவு இருப்பதால் பாறைகள் மீது ஈரம் சேர்ந்து பல நூறாண்டுகளாய் வளர்ந்து ஆச்சரியம் கொடுத்தன. குகையின் தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வன பொங்கூசிப் பாறைகள் (stalagmites); குகையின் கூரையிலிருந்து கீழ்நோக்கி வளர்ந்து, விழுதுகளாய்த் தொங்குவன தொங்குபாறைகள் (stalactites); திரைச்சீலை போல அடுக்கடுக்காய், வளைவு வளைவாய் அமைவன, கண்ணாடிபோல் பளபளக்கும் படிவுப்பாறைகள், ஈரக்கசிவினால் மினுமினுத்து பாறையின் நுனியில் ஈரம் உறைந்த (பாதி நீர்த்துளியாகவும் பாதி பாறையாகவும்) பாறைகள், கத்திபோல் வளர்பவை, செய்து வைத்த சிலைபோல் உருவங்கொண்ட பாறைகள், யானைத்தந்தம் போல அமைந்தவை என எண்ணிலடங்காப் பாறைகள். இந்தக் குகையின் மொத்த நீளம் பதினோரு கிலோமீட்டர்கள். ஆனால் பாதுகாப்புக்காரணம் கருதி, சுமார் நான்கு கிலோமீட்டர் நீளக்குகைதான் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. குகை முழுவதும் சுற்றுவதற்கு மரத்திலமைக்கப்பட்ட சிறு சிறு படிகள், சில இடங்களில் ஏறுவதற்கும் சில இடங்களில் இறங்குவதற்கும் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 400 படிகள் உண்டு. சில இடங்களில் குறுக்கிடும் சிறு நீரோடைகளைக் கடப்பதற்கு குறுகிய மரப்பாலங்களும் உண்டு. சுண்ணாம்புப் பாறைக்குகைகளின் அமைப்பும் வளர்ச்சியும் அங்குள்ள நீரின் ஓட்டம் மற்றும் கசிவினைப் பொருத்தது. குகையின் கூரையில் கசியும் நீர் இறுகி தொங்கு பாறைகள் வளருகின்றன. தொங்கு பாறைகள் சிந்தும் நீர் தரையில் பட்டு இறுகி தரையிலிருந்து கொம்புகளைப் போன்ற பொங்கூசிப்பாறைகள் வளர்கின்றன. பாறைகளின் நிறம் அதில் படும் நீரின் மாசு அளவைப் பொருத்து அமையும். எண்ணற்ற இப்பாறைகள் அனைத்தையும் தொடர்ந்து பார்வையிட்டுக்கொண்டே அங்கிருந்த மரப்படிகளில் மேலேயேறியும் கீழிறங்கியும் வளைந்து நெளிந்த பாதையில் நடந்தோம். ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாய்ச் சற்று விசாலமானதாகவும் உயரமாகவும் இருந்தது. அங்கே அமர்வதற்கு பல மர இருக்கைகள் இடப்பட்டிருந்தன. வெகுநேரம் நடந்தவர்கள் சற்று இளைப்பாற அமைக்கப் பட்டவை என எண்ணினேன், ஆனால் வழிகாட்டி எங்கள் அனைவரையும் அழைத்து அவ்விருக்கைகளில் அமரச் சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மங்கலாய் எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் திடீரென்று இருட்டாயின. சற்று நேரத்தில் குகைக்குள் மெல்லிய சிம்பொனி இசை பரவியது. இசையின் ஒலி பெரிதாகிக் கொண்டே வர, எங்கிருந்தோ வந்த ஒரு லேசர் ஒளிக்கற்றை குகையின் கூரையின் மீதமர்ந்த ஒரு வித்தியாசமான தொங்கு பாறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அடுத்து வந்த மற்றொரு ஒளிக்கற்றை குகையின் பக்கவாட்டுச் சுவரில் படிந்திருந்த இன்னொரு பாறையைத் தாக்கியது. இப்படியாய் இசையும் ஒளியும் இணைந்து அங்கிருந்த விதவிதமான பாறைகளைக் கண்களுக்கு விருந்தாக்கின. வெவ்வேறு வண்ணங்களில் சிந்திய ஒளியும், ஏறி இறங்கிய இசையின் ஒலியும் ஒன்றோடொன்று இயைந்து ஓர் ஒளி-ஒலிக்காட்சியைக் கண்ட உணர்வினை உண்டாக்கின. சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்தது இந்நிகழ்ச்சி. அரங்கத்தைக் கடந்து சென்றவுடன் ஒரு பெரிய நீரோடை. இது ஒரு குற்றாறு. இதன் பெயர் லெஸ்ஸி. குகையடி வழியாக எவ்வாறு இதன் பயணம் நிகழ்கிறது என எண்ணும்போது வியப்பாயிருந்தது. ஹன்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள மலையின் ஓரிடத்தில் யார் கண்ணிற்கும் படாமல் மறைந்து கொள்ளும் லெஸ்ஸி, இந்த இடத்தில்தான் மறுபடியும் முகம் காட்டுகிறது. இதன் பாதையைத் தேடி மலைக்குகைக்குள் புகுந்தவர்கள் சிலர் அதன் பிறகு வெளிவரவே இல்லையாம். நதிநீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. நான்கு பாகை செல்சியஸ் குளிர்நிலை. நிலமட்டத்திலிருந்து 60 மீட்டர் ஆழத்தில் ஓடும் ஆறு இது. சிறிய படகுகள் மிதந்துகொண்டிருந்தன. அனைவரும் அதில் ஏறி அமர்ந்தோம். பார்ப்பதற்குச் சிறிய படகு போல் தெரிந்தாலும், நிறைய இருக்கைகள் (நீட்டி மடக்கும் மரப்பலகைகள்) இருந்தன. படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய, வெளியுலகு புலப்பட்டது. அந்நேரத்தில் "படார்" என ஒரு வெடியொலி. திடுக்கிட்டுத் திரும்பினால் "குகை சென்று மீண்டதை" உணர்த்தும் வகையில் வெடிக்கப்படும் வெடி என்றனர். நீள நீளமான குகைப்பாறைகள் இன்னமும் கண்முன் விரிந்துகொண்டிருக்க எங்களது பயணம் நிறைவுற்றது. இம்மலைக்குகைகள் பற்றிய காட்சியகம் ஒன்றும் இங்கே உண்டு. இந்த மலைக்குகையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் உண்டு. கூண்டுகளுக்குள் அடைத்து வைத்த விலங்குகள் இல்லை அவை. சுதந்திரமாய் வனப் பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகள். பெரிய வேன் ஒன்றில் பார்வையாளர்களை அடைத்துக் கொண்டு அவ்வனப் பகுதியைச் சுற்றிக் காட்டுகிறார்கள். சரி, இதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி சவாரி மேற்கொண்டோம். முதலில் நாங்கள் சந்தித்த அதிசய விலங்கு எது தெரியுமா? பன்றிகள். அடுத்து வந்தவை ஆடுகள். பின்னர் மாடுகள், காட்டு நாய்கள், மான்கள், குதிரைகள் என வரிசையாய்ப் பல அரிய விலங்கினங்களைக் கண்டு களித்தோம். உடன் வந்தவர்கள் மிகவும் குதூகலித்துக் கொண்டு "வாவ்" என வாய் பிளந்தனர். நானும் என் நண்பனும் "ஆவ்" என்று கொட்டாவி விட்டோம். இதையெல்லாம் விட பெரிய அதிசயம், அந்த வனவிலங்ககம் பற்றி எங்களுக்குத் தரப்பட்டிருந்த கையேட்டில் "வன விலங்கில் புது வரவு, அழகான அரிய வகைக் கழுதைகள்" என்று குறிப்பிட்டிருந்ததுதான். தொடர்ந்த பயணத்தில் பசுந்தோல் போர்த்திய வனப்பகுதி, குறுகலாய் வளைந்த பாதைகள் மற்றும் உயர்ந்தோங்கிய மரங்கள் போன்றவை கண்ணுக்குக் குளுமை சேர்த்தன. நாங்கள் சென்றிருந்த அவ்வேளை "நாட்டுப்புற வாரம் " கொண்டாடப்பட்ட நேரம். மாடு மேய்ப்பவர்களைப் போல் உடையணிந்த பலரும் குதிரைகளில் ஏறி உலா வந்துகொண்டிருந்தார்கள். மாடு மேய்ப்பவர்கள் பயன்படுத்தும் தோலாடைகள், இடைவார்கள், தொப்பிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளும் அங்கிருந்தன. உள்ளூர்க் குழுவினர் நாட்டுப் பாடல்களைப் பாடினார்கள். பகல் முழுதும் சுற்றித்திரிந்து களைத்து நாங்கள் இனிய நினைவுகளுடன் திரும்பினோம் எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி
- அறிவோம் ஆளுமை – 11
கல்வி தான் அமைதியின் சக்தி – மலாலா ஜோ :-- குழந்தைகளே! இன்று நாம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு துணிச்சலான பெண் குழந்தையைப் பற்றி பேசப் போகிறோம். அவர் பெயர் மலாலா யூசுப் சாய். நகுலன்:-- நோபல் பரிசு வாங்கியவர் தானே? ரதி: -- பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காககப் போராடியவர் தானே அவர்? ஜோ:-- அவரேதான்! மலாலா 12 ஜூலை 1997 அன்று பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மிஙோரா என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஜியாவுத்தீன் யூசுப் சாய், தாயார் தூர் பேகை. அவரது தந்தை ஒரு ஆசிரியர். பெண்கள் படிக்க வேண்டும் என்று நம்பியவர். அதற்காகவே ஒரு பள்ளியையும் நடத்தினார். அவர் வாழ்ந்த சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் வருத்தப்படுவார்கள். ஆனால்… மலாலா பிறந்த போது மலாலாவின் அப்பா மிகவும் மகிழ்ந்தார். “இந்தக் குழந்தை சாதாரண குழந்தை இல்லை… ஒரு நாள் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறாள்!” என்று கூறினார். அவர் குடும்ப மரத்தில் (Family Tree) பெண் குழந்தைகளின் பெயர் எழுதப்படுவதில்லை. மலாலாவின் பெயரை அவருடைய அப்பா பெருமையாக எழுதினார். நகுலன்:-- அது ரொம்ப அழகான விஷயம் அத்தை! மலாலா என்ன படித்திருக்கிறார்? ஜோ --- மலாலாவுக்குச் சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம். எப்போதும் பள்ளியில் முதல் மாணவியாக இருப்பார். வாசிப்பதையும் பேசுவதையும் மிகவும் விரும்பினார். “புத்தகம் தான் எனக்கு சக்தி தரும் நண்பன்” என்று கூறுவார். இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரத்தில் பள்ளியில் படித்தார். பிறகு உலகப் புகழ்பெற்ற Oxford University-யில் Philosophy, Politics, Economics போன்ற பாடங்களில் பட்டம் பெற்றார். ரதி : --- அத்தை! மலாலா நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராமே? ஜோ -- ஆமாம்! நீங்கள் என்னிடம் எத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்! உங்களைப் போலவே தான் மலாலாவும். சிறு வயதிலிருந்தே தன் தந்தையிடம் நிறையக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராம். அவர் தந்தையும் அதற்குச் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருப்பாராம். நகுலன்: -- என்ன மாதிரி கேள்விகள் அத்தை? ஜோ :-- அவர் கேட்ட கேள்விகள் மிகவும் சிந்திக்க வைக்கும். “ஏன் குடும்ப மரத்தில் பெண்கள் பெயர் இல்லை?” “ஏன் பெண்கள் பர்தா போட வேண்டும்?” “ஏன் சில பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது?” “ஏன் பெண்கள் தனியாக வெளியே போகக் கூடாது?” “நான் படிக்கிறேன்… ஆனால் வீதியில் இருக்கும் அந்த சிறுவன் ஏன் பிச்சை எடுக்கிறான்?” “ஏன் சில குழந்தைகள் குப்பை பொறுக்குகிறார்கள்?” இப்படித் தன்னைச் சுற்றி சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றிக் கேள்விகளைக் கேட்பாராம். ரதி : -- என்னுடன் படிக்கும் சஜினா மட்டும் பர்தா அணிந்து வருவாள். முகத்தை கூட காட்ட மாட்டார். எனக்கு அவளைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தில் படிக்க வரும் முதல் பெண் அவள் தான் என்று கூறினாள். அது மட்டுமல்ல பரம்பரையைப் பற்றிப் பேசும்போது அப்பா என் பாட்டியின் பெயரையோ அம்மாவின் பெயரையோ சொன்னதில்லை என்று சொன்னாள். இப்போது நானும் அதை யோசிக்கிறேன். பரம்பரையில் என் அம்மாவையும் பாட்டியையும் என்னையும் சேர்க்க வேண்டும் என்று நானும் அப்பாவிடம் சொல்லப் போகிறேன். இனிமேல் பரம்பரை என்று கூறும்போது நான் எல்லோரையும் சேர்த்து தான் சொல்வேன் அது சரி அத்தை. மலாலாவுக்கு எப்படி இவ்வளவு கேள்விகள் கேட்கும் அளவிற்கு தைரியம் வந்தது? ஜோ-- ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்த அவர்களுடைய நகரத்தை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தபோது எல்லாமே மாறியது. தீவிரவாதிகள் தொலைக்காட்சி வைத்திருப்பது, இசை வாசிப்பது மற்றும் பெண்கள் படிப்பது போன்ற பல விஷயங்களைத் தடை செய்தனர். மேலும் தங்கள் உத்தரவுகளை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளையும் விதித்தனர். மலாலாவின் தந்தை பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளும் படித்தனர். ஆனால் தீவிரவாதிகள் பள்ளியை மூடச் சொல்லி மலாலாவின் தந்தையை அச்சுறுத்தினர். ஆனால் அவரோ பயப்படாமல் தொடர்ந்து பள்ளியை நடத்தினார். அவரின் துணிச்சல் மலாலாவுக்கும் வந்தது என்று நினைக்கிறேன். நகுலன் : அத்தை! மலாலாவை எதற்காகச் சுட்டார்கள்? ஜோ -- ஒரு முறை BBC செய்தி நிறுவனம், “இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஒரு பெண் குழந்தை கட்டுரை எழுத வேண்டும்” என்று மலாலாவின் தந்தையிடம் கேட்டது. முதலில் மலாலாவின் தந்தை ஆயிஷா என்ற மாணவியை முன்மொழிந்தார். ஆனால் அந்தக் குழந்தையின் குடும்பம் தீவிரவாதிகளுக்குப் பயந்து மறுத்துவிட்டது. அப்போது ஒன்பது வயதான மலாலா எழுத முன்வந்தார். முதலில் அவள் “குல் மக்காய்” (Gul Makai) என்ற புனைபெயரில் எழுதினார். குல் மகாய் என்றால் சோளப்பூ என்று அர்த்தம்.. அந்தக் கட்டுரைகளில் அவர் பெண்கள் படிக்க முடியாத துயரத்தையும், அச்சத்தையும் எழுதினார். அந்த பள்ளத்தாக்கை தீவிரவாதிகள் ஆக்கிரமித்து எல்லோரையும் கொடுமைப்படுத்துவதைப் பற்றியும் எழுதினார். இது உலக நாடுகளில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியது. தீவிரவாதிகள் அதை எழுதிக் கொண்டிருப்பது யார் என்று தேட ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் தான் கொஞ்சம் தைரியம் பெற்று தன் சொந்த பெயரிலேயே எழுதத் தொடங்கினார் மலாலா. அதை கண்டுபிடித்த தீவிரவாதிகள் ஒரு நாள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது பள்ளி வாகனத்திற்குள் உட்கார்ந்து இருந்த மலாலாவைச் சுட்டனர். அப்போது அவருக்கு வயது 15. ஆனால்…மலாலா உயிர் தப்பினார். சிகிச்சை பெற்று மீண்டு எழுந்தார். ஸ்வார்ட் பள்ளத்தாக்கில் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த “பெண்கள் படிக்க வேண்டும்” என்ற அவர் குரல் உலகம் முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தது. 2014 ஆம் ஆண்டு…அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 17. மிக இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் மலாலா.. ரதி : -- ஐ.நா. சபையில் மலாலா பேசினார் இல்லையா அத்தை? ஜோ :-- ஆமாம். மிக முக்கியமான விஷயம் மலாலா தனது 16வது பிறந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபை மேடையில் (United Nations) பேசினார். அந்த நாள் உலகம் முழுவதும் “Malala Day” என்று கொண்டாடப்பட்டது. அவர் அங்கு என்ன சொன்னார் தெரியுமா? “என்னை தாக்கியவர்கள் என் குரலை மௌனமாக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை.” “கல்வி தான் அமைதியின் சக்தி.” “ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா… உலகத்தை மாற்ற முடியும்.” அந்த உரையை கேட்ட பிறகு உலகம் முழுவதும் மக்கள் கண்ணீர் விட்டார்கள்… பெருமையோடு கைத்தட்டினார்கள். நகுலன் - தற்போது மலாலா என்ன செய்கிறார் அத்தை? மலாலா தற்போது உலகம் முழுவதும் பெண்கள் கல்வி பெற வேண்டும் என்று வேலை செய்து வருகிறார். “Malala Fund” என்ற அமைப்பை தொடங்கி பல நாடுகளில் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார். அவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். இப்போது எழுத்தாளர், சமூகப் போராளி, கல்வி உரிமை குரல் கொடுப்பவர் என்ற பன்முக செயல்பாட்டாளராக விளங்குகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பல நாடுகளில் பெண் குழந்தைகள் படிக்க உதவி செய்கிறார். அகதிகள், ஏழை குழந்தைகள், போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். இவர்களுக்காக கல்வி உதவித்திட்டங்கள் செய்கிறார். உலகத் தலைவர்களைச் சந்தித்து பெண் கல்வி உரிமை பற்றிப் பேசுகிறார். தனது வாழ்க்கையைப் பற்றி “I Am Malala” என்ற புத்தகமும் எழுதியுள்ளார். ரதி -- அவரைப் பார்க்க ஒரு போராளி மாதிரி இல்லையே அத்தை? ஜோ : போராளி என்றால் ஆயுதம் ஏந்தித் தான் போராட வேண்டுமா? ஆயுதம் இல்லாமல் போராடும் கல்விப்போராளி அவர். மலாலா எப்போதும் கோபத்தோடு பேச மாட்டார். “நான் யாரையும் வெறுக்க மாட்டேன். என்னைக் காயப்படுத்தியவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும்.” என்று சொன்னார். அது தான் அவரின் உண்மையான பெருமை. நகுலன்: நாமும் கேள்விகள் கேட்கணும்… படிக்கணும்… மற்றவர்களையும் படிக்க வைக்கணும். ஜோ : நகுலா! நீ சொல்வது சரிதான்தான்! மலாலா நமக்குச் சொல்லும் பாடம் என்ன தெரியுமா? பயப்படாமல் உண்மை பேச வேண்டும். கல்வி எல்லோருக்குமான உரிமை. ஒரு குழந்தையின் குரலும் உலகத்தை மாற்றும். மலாலா ஒரு பெரிய தலைவர் அல்ல… ஒரு சாதாரணப் பெண் குழந்தை. ஆனால் அவர் கேட்ட கேள்விகள், அவர் காட்டிய துணிவு, அவர் சொன்ன வார்த்தைகள் இன்று உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுக்கிறது. “படிக்க வேண்டும்” என்ற கனவு இருந்தால்… அந்தக் கனவு உலகையே மாற்றும்! ரதி, நகுலன் : ஆம்! கனவு காணுவோம்! உலகத்தையே மாற்றுவோம்! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- சிறுவர் நாடகம் - நேற்று இன்று நாளை.
மீசையை முறுக்கிக்கொண்டு பேசு இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இன்றும் பள்ளி வளாகங்களில் நாடகமாக பார்க்க முடிகிறது. பள்ளிகளில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் மூலமாக ஒரு குழந்தைக்கு நாடகம் என்கிற கலை அறிமுகம் ஆகிறது... நம்மில் பலருக்கும் இந்த கலை அவ்வாறே அறிமுகமாகிறது. எவ்வாறு கணிதம், அறிவியல், ஆங்கிலம் என அனைத்தும் துறைகளும் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறதோ , அதேபோல் கலைகளும் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்றவை அடிப்படையில் இருந்து எவ்வளவு தெளிவாகவும் கவனமாகவும் மிகுந்த தேர்ந்த தகுதியுடைய ஆசிரியர்கள் கொண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது... ஆனால், கலைகள் அவ்வாறு அறிமுகப்படுத்தபடுவதில்லை. எப்போதும் பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆர்வமிகு ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிறது. இந்த நாடகங்களின் நோக்கம் வளாகத்தில் நடக்கின்ற சடங்கு செயல்பாடுகள் அதாவது பள்ளியின் ஆண்டு விழாக்கள் அல்லது பள்ளியில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் கலை நிகழ்வுகள் மட்டுமே என்று இருந்தபோதிலும் இவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் , ஏனென்றால் சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கும் இந்த பள்ளி வளாக நாடகங்களில் வழியாகவே கலைகளும், நாடக அறிமுகமகிறது.. அவ்வாறு அறிமுகமாகின்ற நாடகக்கலை எப்படி அறிமுகப்படுத்தப்படுகிறது?... பள்ளி வளாகங்களில் நடத்தப்படும் நாடகங்களும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும் அந்த நாடகங்களிலும் பகுத்தறிவுக்கு புறம்பான அறிவியலுக்கு எதிரான உயர்வு தாழ்வை போதிக்கின்ற கருத்துக்கள், கொண்டாட்டங்கள் என்கிற பெயரிலோ, புராணங்கள், என்ற பெயர்களோ நிகழ்த்தப்படுவது சமூகத்தில் விஷத்தை விதைப்பதற்கு சமமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்... ஏனென்றால் குழந்தைகளை பொறுத்தவரை பள்ளி வளாகங்களில் நடப்பவை அனைத்தும் உண்மையானவை, மேன்மையானவை. உள்ளடக்கம் அடிப்படையில் மட்டுமே அல்லாமல் அதனை நிகழ்த்த திறன் அடிப்படையிலும் வளாக நாடகங்களில் பெரும்பான்மையான நாடகங்கள் ஓதாமையை கொண்டிருக்கிறது இந்தப் போதாமைகளோடு நிகழ்த்தப்படும் நாடகங்கள் முழு நாடகங்கள் அல்ல! முழு நாடக வடிவங்கள் அல்ல!. இன்று வரை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் நாடகங்கள் தமிழ்நாடு பொறுத்த வரை இவ்வாறாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு தங்கள் கதைகளை சொல்வதற்கான ஒரு கலையாக, தங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை பேசும் இடமாக, தங்களின் கற்பனைக்குஉருவம் கொடுக்கும் ஒரு கலையாக, நாடகம் அறிமுகப்படுத்தப்படாமல் வெறும் சடங்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுவது மிகப்பெரிய ஆபத்தை நாடகக் கலைக்கு உருவாக்கியிருக்கிறது வரி வடிவ அடிப்படையிலும் தமிழில் இருக்கும் நாடகங்கள் வெறும் உரையாடல்களாகவே துவங்குகிறது ஆங்கிலத்தில் இருக்கும் நாடகங்களில் மேடை வர்ணனை என்கிற முழு வர்ணனைக்குறிப்புகளும் தெளிவாக இடம்பெறுகிறது இலக்கிய வரி வடிவ அடிப்படையிலும் நாடகம் மிகவும் மேம்போக்காகவே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடகக்கலை நேற்று* என்று நாம் பேசுகின்ற பொழுது பள்ளி பாடத்திட்டத்தில் மற்றும் வளாக நாடகங்களில் இன்று வரையும் தீர்க்கப்படாமலும் தொடர்ந்து கொண்டும் இருக்கின்ற பிரச்சனைகளைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் நாடக ஆசிரியர்கள் பற்றிய கோரிக்கை மிகவும் முக்கியமானது. எவ்வாறு ஒரு திறமை இல்லாத ஆசிரியர் கணிதம், அறிவியல் போன்றவற்றை சிறப்பாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட முடியாதோ அதேபோல் ஒரு துறை சார்ந்த திறனற்ற ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்படும் கலையும் போதாமைகளுடைய புரிந்து கொள்ளப்படும் அந்தப் போதாமைகளோடு புரிந்து கொள்ளப்படுகின்ற கலை குழந்தைகளின் திறன் சார்ந்த வெளிப்பாட்டில் மிக முக்கியமானதாக இருக்கும் பொழுது அவர்களால் அந்தத் துறையில் திறன்மிகு சமூக மனிதர்களாக உருவாக முடிவதில்லை. ஒரு துறையில் ஆர்வம் கொண்டு கற்றுக்கொள்ள விரும்பும் குழந்தை கல்லூரியை தாண்டித்தான் கற்றுக் கொள்ள வேண்டியதாக மாறுகிறது. கல்லூரியை தாண்டி கற்றுக் கொள்வதற்கான சமூக பொருளாதார சூழ்நிலைகள் இல்லாத பல திறமை மிக்க குழந்தைகள் தங்களுடைய கனவுகள் பள்ளிகளிலேயே நசுக்கப்படுவதை காண்கிறோம் குழந்தைகளில் இருக்கும் திறமைகளை முறையாக கண்டுகொள்ளப்படவும், குழந்தை பருவத்திலிருந்தே பயிற்சி எடுத்துக் கொண்டு இலக்கிய அனுபவம் பெற்று உருவாகின்ற குழந்தைகள் கலை அனுபவம் பெற்று உருவாகின்ற சமூகங்களின் மனிதர்கள் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய பேராளுமையோடு மிளிர்வதை நாம் பல்வேறு நாடுகளின் சமூகங்களில் கல்விமுறையை உற்று கவனிக்கும்போது தெரிய வருகிறது. அரசு நடத்துகின்ற கலைத் திருவாக்கல் திருவிழாக்களில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கும் அல்லது கலை சார்ந்த திறமைகள் இருக்கும் மாணவர்களுக்கும் அதையே முதன்மையாக கொண்டு படிக்க வேண்டும் என்று விரும்புகின்ற மாணவர்களுக்கும் அரசு பள்ளிகளில் எவ்வாறு 11ஆம் வகுப்புகளுக்கு மேல் அறிவியல் கணிதம் கணிப்பொறியியல் போன்றவற்றிற்கு தனிப்பிரிவுகள் இருக்கிறதோ அதேபோல் கலை பிரிவுகளுக்கும் தனி பிரிவுகள் இருக்க வேண்டும், அது எல்லாப்பகுதி குழந்தைகளுக்கும் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கப்பட வேண்டும். வளாகங்களில் நாடகக் குழுக்கள் அமைத்து அந்த குழுக்கள் தொடர்ந்து பல்வேறு தளங்களில் சடங்கு ஆக நடத்தப்படும் நாடக விழாக்களை தாண்டி அவ்வப்போது அந்த குழு விரும்பும் கருத்திலோ தலைப்பிலோ நாடகம் நடத்தி தங்களின் வெளிப்பாட்டு திறனை வெளிப்படுத்த வாய்ப்புகள் செய்யப்பட வேண்டும். வளாகங்களைத் தாண்டி நாடகக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்ற சிறுவர் நாடகங்களை நாம் மூன்று பிரிவாக பிரிக்கலாம். குழந்தைகள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் வகை,பெரியவர்கள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் வகை, குழந்தைகள் பெரியவர்களுக்காக நிகழ்த்தும் நாடகங்கள். இந்த மூன்று வகைகளையும் செய்வதற்கான மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டு தமிழில் நவீன நாடக கலைஞர்கள் பல நாடகங்களை நிகழ்த்தி வந்திருக்கின்றனர். ஆனாலும் கதைகளில் இலக்கியங்களில் நிகழ்ந்தது போலவே இதற்கு முந்தைய நாடக நிகழ்வுகளும் அல்லது பெரும்பான்மையான நாடக நிகழ்வுகள் தெனாலிராமன் கதைகளையோ அல்லது ராஜாக்கள் பற்றிய கதைகளையும் அல்லது கடவுள் பற்றிய கதைகளையோ குழந்தைகளை வைத்து நிகழ்த்துவதாகவே இருந்திருக்கிறது அதிலிருந்து விலகி புதிய நாடக வகைகள் அதன் நிகழ்த்துதல் அடிப்படையிலும், உள்ளடக்கம் அடிப்படையிலும் உருவாக வேண்டும்... அவ்வாறான பல முயற்சிகள் தமிழில் நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் வலுப்பெற வேண்டும். குழந்தைகள் நாடகத்தில், பேசப்படாமல் இருக்கின்ற பெண் குழந்தைகளின் பிரச்சனைகள் , சமூக நீதிக் கருத்துக்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கணித ஆய்வுகள், அறிவியல் பூர்வமான நிகழ்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், குழந்தைகளுக்கு இருக்கின்ற மன அழுத்தங்கள் போன்றவற்றை உரத்து பேசுகின்ற, குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி நிகழ்த்தி மேடையை அமைத்தோ, மேடையை மாற்றாக பயன்படுத்தியோ உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு நாடகங்கள் உருவாக வேண்டும் என்றால் நாடகக் கலையின் தேவையை சமூகம் உணர்ந்து அதற்கான ஆதரவை வழங்க வேண்டும். குழந்தைகள் நாடக குழுக்களுக்கு ஒத்திகை பார்க்க இடங்களும், குழந்தைகளும் பெற்றோரும் வந்து போகின்ற நாடகபொது வெளியை உருவாக்க வேண்டும். குழந்தைகள் நாடக கலைஞர்களுக்கு அரசு குழந்தைகள் நாடக கலைஞர் விருதை அறிவிக்க வேண்டும், குழந்தைகள் நாடகக் கலைஞர்களுக்கு அவரவர் பகுதிகளில் நாடக விழாக்களை ஒருங்கிணைப்பதற்கான ஆதரவை மாவட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும்! குழந்தைகள் நாடகத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய பட்டய படிப்பையும் பயிற்சி மையத்தையும் உருவாக்க வேண்டும். இந்த சமூக ஆதரவு தொடர்ந்து நிகழும் பொழுது குழந்தைகள் நாடகக்கலை வடிவ அடிப்படையிலும், உள்ளடக்க அடிப்படையிலும், மிகப்பெரிய சமூகத் தாக்கத்தை உருவாக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை தரும் நாளை இருக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. சந்திரமோகன் இளங்கலை வணிகவியல் சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டயில் பயின்றவர். தேசிய நாடகப் பள்ளி ,காலச்சுவடு இணைந்து நடத்திய ஒரு மாதகால நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் மூலம் நவீன நாடக உலகில் 2007 நுழைந்தவர். நிகழ் நாடக மையத்தில் முழுநேர நாடகம் ஊழியராக தன் வாழ்க்கையைத் துவங்கி, நிகழ் நாடக மையத்தில் நாடக நிகழ்வுகள், நாடக உருவாக்கம், வடிவமைப்பு மற்றும் கல்வியில் நாடகம் போன்ற நுணுக்கங்களை பல்வேறு அயல்நாட்டு அறிஞர்கள் மூலம் அறிமுகமும் பயிற்சியும் பெற்று நான்காண்டு காலம் பணியாற்றினார். திருமிகு. பாலுமகேந்திரா அவர்களின் சினிமா பட்டறையில் நடிப்புத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.
- அறிவியல் கற்பேன்
அறிவியல் கற்பேன் - நான் அனுதினம் கற்பேன் பெரிய விஞ்ஞானி - எனும் பெயரும் வாங்குவேன் . ராக்கெட் ஏறுவேன் - வான ரகசியம் கற்பேன் பார்க்க அரியவை பல பார்த்துத் திரும்புவேன். சந்த்ர மண்டலம் நான் சென்று மீளுவேன் வந்து சந்த்ரனின் -பல விந்தை சொல்லுவேன். செவ்வாய் செல்லுவேன் - புதிய சேதி சொல்லுவேன் எவ்வாய் ஆயினும் - பிறகு என்புகழ் பாடும்
- நீர்வாழ் விலங்குகள் எப்படித் தூங்கும்?
மிகவும் சோர்வாக உணரும்போது, தூக்கம் வருகிற வேளையில் முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவிக்கொண்டால் தூக்கம் போய்விடுகிறது. அப்படியென்றால் தண்ணீருக்குள்ளேயே இருக்கும் விலங்குகள் எப்படித் தூங்குகின்றன? முதலில் முகத்தில் நீரை அடித்தால் நமக்கு ஏன் தூக்கம் போகிறது என்று தெரிந்துகொள்வோம். காற்றில் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்கும் நம்மைப் போன்ற விலங்குகளின் முகத்தில் நீர் பட்டுவிட்டால் மூளை சுறுசுறுப்பாகிவிடும். "இவர் நீருக்குள் இருக்கிறார்" என்று மூளை யோசிக்கும். "நீருக்குள் இருப்பவர் விழிப்புடன் கவனமாக இருந்தால்தான் அவர் சரியாக சுவாசிப்பார், விழிப்பாக இருந்தால்தான் அவர் உயிர் பிழைப்பார்" என்று யோசிக்கும். உடனே கவனம் மற்றும் விழிப்புநிலையை உருவாக்கும். நமக்குத் தூக்கம் கலைந்துவிடும். காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் விலங்குகளுக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதால் நீருக்குள்ளேயே வாழும் விலங்குகளைத் தண்ணீர் எதுவும் செய்யாது. ஆனால் இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. நீரில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கவேண்டும் என்றால் தொடர்ந்து நீந்திக்கொண்டே இருக்கவேவேண்டும். ஆகவே நீர்வாழ் விலங்குகளால் மனிதர்களைப் போல ஆடாமல் அசையாமல் தூங்க முடியாது. பல மீன்கள் தூங்கும்போதும் மெதுவாக நீந்திக்கொண்டோ ஆடிக்கொண்டோ இருக்கின்றன. இன்னும் சில மீன்கள் தூங்குவதே இல்லை! இவற்றுக்குத் தூக்கம் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதே கடலுக்குள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கும் பாலூட்டிகள்கூட இருக்குமே! அவை எப்படித் தூங்குகின்றன? பாலூட்டிகளின் மூளையில் இரண்டு கோளங்கள் (Hemispheres) இருக்கும். தூங்கும்போது இவற்றின் ஒரு மூளைக்கோளம் மட்டுமே ஓய்வெடுக்கும். இன்னொரு கோளத்தின் உதவியால் இவை நீந்திக்கொள்ளும். நீர்ப்பரப்புக்கு மேலே வந்து சுவாசித்துக்கொள்ளும்! இன்னும் சில பாலூட்டிகள் மூச்சை தம்கட்டிக்கொண்டு தூங்குகின்றன, சுவாசிக்கும் நேரம் வரும்போது விழித்துக்கொள்கின்றன. இதை நுண் தூக்கம் (Micro sleep) என்று அழைக்கிறார்கள். உங்களுக்குத் தூக்கம் பிடிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தூங்குகிறீர்கள்? நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது ,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும் , விலங்குகளும் பாலினமும் , ஆழ்கடல், சூழலும் பெண்களும் , நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.
- வளரிளம் புதிர்ப்பருவம் - 8
"என்னால் இங்கே இருக்க முடியவில்லை!" என்று ஜேமி கத்தத் தொடங்குகிறான். தொடர்ந்து கத்துகிறான் "ஜேமி, உட்காரு, உட்காரு " என்று பிரையோனி சொல்கிறார். அதை அவன் கேட்பதாகவே இல்லை. கத்திக் கொண்டே இருக்கிறான். நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்க? என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறீங்க. என்னால் முடியாது. இங்கே இருக்கவே முடியல. என்னால் உட்காரவே முடியாது. நான் என்ன செய்யணும்னு நீங்க எனக்குச் சொல்லாதீங்க. நீங்க என்னைக் கட்டுப்படுத்தாதீங்க. உங்களால் அது முடியவே முடியாது. ஜேமி கத்திக் கொண்டே அருகில் வருகிறான். பிரையோனி திகைத்து அமர்ந்திருக்கிறார். முகத்தில் சிறிது பயமும். காவலர் உள்ளே வருகிறார். ஏதாவது பிரச்சினையா என்று கேட்கிறார். ஏதும் இல்லை என்று பிரையோனி சொல்கிறார். நான் கத்திட்டேன் என்று ஜேமி சாதாரணமாகச் சொல்கிறான். வெளியே போய் ஒரு டீ எடுத்து வருகிறேன் என்று பிரையோனி அந்த அறையை விட்டு வெளியேறுகிறார். சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார். வளர் இளம்பருவக் குழந்தைகளின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. தான் நினைப்பது, செய்வது மட்டுமே சரி என்ற மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். உடனுக்குடன் முடிவுகளை எடுப்பதும் உடனுக்குடன் மாற்றிக் கொள்வதும் எளிதாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்களின் கவனம் இருக்கிறது. அல்லது ஏன், எதற்கு என்ற கேள்விகளே இல்லாமல் பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். சமூக நிகழ்வுகளாகத் திருமணம், குடும்பம் என்று மாற்றம் வந்த பிறகு பொருளின் பின்னே இன்னும் வேகமாக ஓடத்தொடங்குகிறோம். பிள்ளைகள் பிறந்து விட்டால் வேகத்தையும் நேரத்தையும் அதிகரிக்கிறோம். ஏன் இப்படி இருக்கிறோம்? வாழ்க்கை என்றால் என்ன? என்பன போன்ற கேள்விகள் நம் வாழ்வில் அத்திப்பூக்கள். நம் ஓட்டத்தில் தடங்கல், சிக்கல் ஏற்பட்டால் திகைக்கிறோம், புலம்புகிறோம், செய்வதறியாது தடுமாறுகிறோம். இத்தகைய சூழலில் பிள்ளைகளை எப்படிக் கவனிக்கிறோம்? பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்தால் போதும், நல்ல பெற்றோர். ஊரின் சிறந்த பள்ளி என்று சொல்லிக் கொள்ளும் பள்ளியில் எப்பாடுபட்டேனும் பிள்ளையைச் சேர்த்துவிட்டால், சிறந்த பெற்றோர். நம் குழந்தைப் பருவத்தில் நமக்குக் கிடைக்காதது எல்லாம் நம் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே நமது கடமை. இதையெல்லாம் இன்னும் விரிவாகச் சில வாரங்கள் கழித்துப் பேசலாம். இப்போது ஜேமியிடம் வருவோம். சமூகம் உருவேற்றி வைத்திருக்கும் 'ஆண்மை' குணங்கள் தனக்கு இருப்பதாக நம்பும் குழந்தை, ஜேமி. அவனுக்குச் சரி என்று நினைப்பதை மற்றவர்கள் தவறு என்று சொல்லும்போது துடித்துப்போகிறான். கோபப்படுகிறான். ஒரு வீட்டில் கோபப்படும் குழந்தை இருந்தால் கவனித்துப் பாருங்கள். அந்தக் குடும்பத்தலைவர் மற்றும் பெரியவர்கள் மற்றவர்களிடம், 'அவன் கோவக்காரன், அவனை ஏதும் சொல்லாதீங்க' என்பார்கள். அதே குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளும் கோபக்காரனிடம் விட்டுக் கொடுத்த விட்டுக் கொடுத்தே போக வேண்டும். வேறு யாராவது எழியவர்களிடம் இது பற்றிப் பேச முயற்சி செய்தாலும் ' அவன் அப்படித்தான். பெரியவன் ஆனதும் சரி ஆகிவிடுவான்' என்று சமாளிப்பார்கள். கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு, 'கட்டுத்தறி மாடு' என்று. அதைப்போலத்தான் இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள். வீட்டிற்குள் செயலில் வீரம், வெளியே சொல்லில் வீரம். உணர்வெழுச்சியால் தன்னிலை அறியாமல் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். அது தவறுதான் என்று உணர்ந்து வருந்தும் நிலை அவர்களிடம் ஏற்படுவது இல்லை. தன் செயலின் விளைவு பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் நான் செய்ததே சரி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்த குற்றத்தின் ஆழத்தை எவ்வாறு புரிய வைப்பது? அதுதான் பிரையோனிக்கு முன் நிற்கும் சவால். பிரையோனி கண்காணிப்பு அறைக்குச் சென்று CCTV மூலம் ஜேமி என்ன செய்கிறான் என்று சிறிது நேரம் கவனித்துப் பார்க்கிறார். சற்றே புன்னகைத்து விட்டு விசாரணை அறைக்குச் செல்கிறார். "ஜேமி, நான் போலீஸ் இல்லை. உன்னிடம் எதையும் போட்டு வாங்க நினைக்கல. நடந்ததைப் பற்றி நீ என்ன புரிஞ்சு வச்சிருக்கே என்று தெரிஞ்சுக்கத்தான் நான் இங்கே வந்திருக்கேன்" என்று பிரையோனி அழுத்தமாகச் சொல்கிறார். ஜேமி, "எனக்குப் புரியுது. கேளுங்க, என்ன தோணுதோ கேளுங்க. இப்போ சரியா சொல்றேன்"என்கிறான். "ஆண்மை என்ற வார்த்தையைப் பற்றி நினைக்கும் போது எனக்கு என்ன தோணுதுன்னா, பொண்ணுங்க விஷயத்துல பசங்க எந்த அளவுக்கு ஆண்மையா உணர்வாங்க என்றுதான்." பிரையோனி சொல்கிறார். "நான் பெண்களை எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கேன்னு நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்." என்கிறான் ஜேமி. சரி. உன் அப்பா உங்க அம்மாவிடம் அன்பா நடந்துக்குவாரா? சண்டை போடுவாங்களா? எங்க அப்பா கோபப்படுவாரு. எதையாவது உடைப்பாரு. ஆனா அம்மாவை அடிச்சதே இல்லை. அவங்க மேல அன்பு வச்சிருக்காரு. உங்க அப்பாவுக்கு பெண் தோழிகள் உண்டா? இல்லை. அவர் தப்பானவர் இல்லை. நானும் அப்படிச் சொல்லல. நட்பாக பெண்கள் இல்லையா? இல்லை. அவர் நண்பர்கள் எல்லோருமே ஆண்கள் தான். உனக்குப் பெண் நண்பர்கள் இருக்காங்களா? இல்லை. ஏன், பெண்களைப் பிடிக்காதா? பிடிக்கும். பிறகு ஏன் நட்பாக யாரும் இல்லை? நான் பயந்தாங்கொள்ளி இல்லை. சரி. உனக்கு ஒரு தோழி இருந்தா என்ன செய்வாய், எங்கே கூட்டிட்டுப் போவாய். சினிமாவுக்கு. வளர் இளம்பருவத்தை, ஜேமியைப் புரிந்து கொள்ளுதலை நோக்கிய உரையாடல் தொடர்கிறது. ( உரையாடுவோம் )
- 2025 – கவனிக்க வேண்டிய சிறார் புத்தகங்கள்
உதயசங்கர் நூல்கள் கொழுக்கட்டை மழை பெய்த நாள் – நிவேதிதா பதிப்பகம் டாங்கோவின் எரியும் இதயம் – நூல்வனம் பதிப்பகம் யுஷ்கா எனும் பூனை – குப்ரின் – வானம் பதிப்பகம் காக்கா கொண்டு போச்சு – அஷீதா – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் பாப்பி பள்ளிக்கூடம் போகிறது – இயல் பதிப்பகம் பாப்பி வாசிக்கிறது – இயல் பதிப்பகம் எனக்குப் பிடித்ததை நான் சாப்பிடுவேன் – இயல் பதிப்பகம் உலகம் சுற்றும் பாப்பி – இயல் பதிப்பகம் உழைக்க வேண்டும் – இயல் பதிப்பகம் கனவு காணுங்கள் – இயல் பதிப்பகம் தீரன் ஹாய் வா – இயல் பதிப்பகம் மாயக்காடு – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் Magic Hat – Nivethitha Pathippagam அழகிய பன்றிக்குட்டி – வானம் பதிப்பகம் கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் – இந்து தமிழ் திசை விழியன் நூல்கள் தேநீரில் மிதக்கும் கணிதம் – புக் ஃபார் சில்ட்ரென் ஆகா மரம் – இயல்வாகை கணிதக்கற்றலும் கற்பித்தலும் – சுட்டி மீடியா மாயமான கருப்புத்தொப்பி – வேக் அப் புக்ஸ் புத்தகக்கண்காட்சி எனக்கு எதற்கு? – குட் லக் ப்ளிகேஷன்ஸ் அம்கா – புக் ஃபார் சில்ட்ரென் மகிழ் கணிதம் – சுட்டி யானை சிங் மங் டுங் - நம் கிட்ஸ் மூன்றாவது மொழி – பாரதி புத்தகாலயம் ட டாங் – புக் ஃபார் சில்ட்ரென் கொ.மா.கோ.இளங்கோ நூல்கள் மொகாபாத் மர்ம ம் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 1 - சாகித்ய அகாடமி சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 2 - சாகித்ய அகாடமி பூ பூவனம் – சாகித்ய அகாடமி ஆயிரம் வாசல் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் தேனி சுந்தர் நூல்கள் 1.நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : புக்ஸ் ஃபார் சில்ரன் 2.நட்சத்திரக் குழந்தை : புக்ஸ் ஃபார் சில்ரன் 3.திட்டமிடாத வகுப்பறைகள்: பாரதி புத்தகாலயம் 4.உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - வாசல் பதிப்பகம் ஞா.கலையரசி நூல்கள் வைக்கம் வீரர் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் பண்டித ரமாபாய் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் கல்வியாளர் வசந்தி தேவி – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் காணாமல் போன ஓவியம் – பாடநூல் கழகம் வேலை நிறுத்தம் வெற்றி – பாடநூல் கழகம் மல்லியும் பல்லியும் – நிவேதிதா பதிப்பகம் சிறகு விரித்த சிறார் கதைகள் – நிவேதிதா பதிப்பகம் A journey to the Blue Mountain – Book For Children ஆதி வள்ளியப்பன் நூல்கள் எப்படிப் பேசினார்கள்? – பாடநூல் கழகம் கடலுக்குள்ளே என்ன இருக்கு? – பாடநூல் கழகம் நாம் வாழ உதவுபவர்கள் – பாடநூல் கழகம் அது என்ன பறவை? – பாடநூல் கழகம் பாலூட்டிகள் - பாடநூல் கழகம் நான் ஆறு – பாடநூல் கழகம் இது என்ன மரம்? – பாடநூல் கழகம் குடுவை மனிதன் – வாசிப்பு இயக்கம் வானில் பறந்த மகிழ் – புக் பார் சில்ட்ரென் அலங்குப் பாதுகாவலர்கள் – ப்ரதம் புக்ஸ் விஷ்ணுபுரம் சரவணன் இடம் – சால்ட் பதிப்பகம் சரிதா ஜோ காட்டுக்குள் மர்ம விலங்கு – இயல் பதிப்பகம் குருங்குளம் முத்துராஜா நூல்கள் 1.மாதியும் பூனையும் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் 2.பூ பூ பூசணிப்பூ – மேஜிக் லேம்ப் வெளியீடு 3.தாட் பூட் வாட் – வாசிப்பு இயக்கம் ராஜலட்சுமி நாராயணசாமி நூல்கள் தங்கப்பறவையும் கழுகும் – கவிநயா பதிப்பகம் கனலின் பயணம் – ஹெர் ஸ்டோரிஸ் பாரதிக்குமார் காஷ்குமரி – நிவேதிதா பதிப்பகம் உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- லண்டனிலிருந்து அன்புடன் - 9
புத்தாண்டில் குதூகலமான புத்தகப் பயணம்: காத்தரீன் ரெய்னருடன்... குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களில் அதுவும் குறிப்பாக படக் கதைப் புத்தகங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கே ஓவியர்கள் கதைகளுக்குப் படம் வரைவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் தாங்களே எழுதுகிறார்கள். தமிழில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளுக்கே ஓவியர்கள் படங்கள் வரைகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில், ஓவியர்கள் பலரும் எழுத்தாளர்களாகவும் இருக்கின்றனர். படக் கதைகள் உருவான காலம் முதல் இன்று வரை, ஓவியர்கள் குழந்தைகளுக்காக எண்ணற்ற புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இந்தக் கதைகளில் படங்களும் வார்த்தைகளும் ஒன்றோடொன்று சேர்ந்து, குழந்தைகளின் கற்பனை உலகை இன்னும் விரிவாக்குகின்றன. ஓவியர்களே எழுத்தாளர்கள் என்பதால், பல புதிய முயற்சிகளை அவர்கள் ஓவியங்களிலும், எழுத்தோவியங்களிலும், வடிவமைப்பிலும் செய்ய்கிறார்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவரான, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காத்தரீன் ரெய்னர் (Catherine Rayner) அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சமீபத்தில் நான் நூலகம் சென்ற போது, காத்தரீன் ரெய்னர் அவர்களின் Ernest என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எர்னஸ்ட் என்று பெயரிடப்பட்ட மூஸ் மான் (moose) பற்றிய கதை. எர்ன்ஸ்ட் அளவில் மிகவும் பெரிய விலங்கு. நம்மூர் எருமை மாட்டைவிட பெரியது என்று வைத்துக்கொள்ளலாம். அதனால், அது புத்தகத்தினுள் வர முடியாமல் தவிக்கிறது. ஆனால் எப்படியாவது புத்தகத்தினுள் வந்து குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று அது ஆசைப்படுகிறது. எர்னஸ்ட்டுக்கு சிம்பக் என்ற அணில் நண்பன் இருக்கிறது. அதனிடம் சென்று யோசனை கேட்கிறது. சிம்பக், “குனிந்து பாரு”, “வளைய்ந்து பாரு” என்று சொல்கிறது. எர்னஸ்ட் எல்லாவற்றையும் முயற்சி செய்கிறது. ஆனால் எது செய்தாலும், அது புத்தகத்தினுள் வர முடியுமா? முடியாதல்லவா! இறுதியில், எர்ன்ஸ்ட் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்பதை கடைசிப் பக்கத்தில் தான் பார்க்க முடியும். எப்படித் தெரியுமா? நீங்களே சற்று கண்களை மூடி யோசித்துப் பாருங்கள்… இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், எர்னஸ்ட்டின் உடலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஓவியமாக இருக்கும். ஆனால் புத்தகத்தின் கடைசி பக்கத்தில், பெரிய அளவிலான ஒரு பக்கத்தை எட்டாக மடித்து வைத்திருப்பார்கள். அதை விரித்தால், எர்னஸ்ட்டின் முழு ஓவியம் தெரியும்! இப்போது புரிகிறதா? எர்னஸ்ட் என்ற பெரிய மிருகம் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்று? இப்போது, ஓவியர் காத்தரீன் ரெய்னர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அவர் ஸ்காட்லாந்தின் முக்கிய நகரமான எடின்பராவைச் சேர்ந்தவர். இவரது முதல் படக் கதைப் புத்தகமான Augustus and His Smile 2007ஆம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு Harris Whose Feet Are Too Big, Abigail, a Giraffe Who Loves Counting, Iris and Isaac போன்ற பல புத்தகங்களை அவர் எழுதியும் வரைந்தும் உள்ளார். இவரது புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் விலங்குகளே. அது பற்றி அவர் சொல்வது என்ன தெரியுமா? “விலங்குகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என் ஓவியங்களிலும் பெரும்பாலும் விலங்குகளையே வரைகிறேன்,” என்று காத்தரீன் ரெய்னர் கூறுகிறார். இந்த ஆர்வம் அவருக்கு சிறுவயதிலிருந்தே இருந்ததாம். அவர் குழந்தையாக இருந்தபோது வீட்டில் பல செல்லப்பிராணிகள் இருந்தன. முயல், நாய், ஹாம்ஸ்டர், தங்கமீன் என்று நிறைய! அவர் 13 வயதாக இருந்தபோது, குதிரை ஒன்றை பராமரித்தாராம். இன்றும் அவரிடம் ஒரு குதிரை இருக்கிறதாம். புதிய ஒரு விலங்கு கதாபாத்திரத்தை வரைய வேண்டுமென்றால், அவர் முதலில் அந்த விலங்கை நன்றாக கவனிப்பாராம். முடிந்தால், நேரில் சென்று அந்த விலங்கைக் காண்பாராம். Augustus என்ற புத்தகத்துக்காக, அவர் ஒரு பூங்காவில் புலியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாராம். ஒரு கதாபாத்திரம் சரியாக உருவாகும் வரை, அவர் அதை மீண்டும் மீண்டும் பென்சிலால் வரைவாராம். சில நேரங்களில் 30 அல்லது 40 முறை வரை முயற்சி செய்வார்! பிறகுதான் அதற்கு வண்ணம் தீட்டுவார். அதுவே டிராகன் போன்ற கற்பனையான விலங்கு என்றால், இரண்டு-மூன்று விலங்குகளின் குணங்களை கவனித்து அதனை ஒன்று சேர்ப்பார். அதே போல், மிருகங்களுக்குத் தகுந்தாற் போல் liquid acrylic அல்லது water colour pencil crayon போன்ற முறைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டுவார். அவர் சொல்வது போல், நீங்களும் ஒரு விலங்கை கவனித்து பிறகு வரைந்து பாருங்களேன்! சரி குழந்தைகளே! இந்தப் புத்தாண்டை நாம் ஒரு குதூகலமான புத்தகத்துடன் தொடங்கி இருக்கிறோம். 2026 நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வாசிப்பு ஆர்வமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும். உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.
- டி-3
( ஒரு சை-ஃபை[Sci-Fi] கதை ) சென்னை நகரம் ஒரு நாள் காலையில் கொஞ்சம் வித்தியாசமாக விழித்தது. சூரியன் உதித்ததும், வானத்தில் பறவைகளுக்கு நடுவில் “வீ…வீ…வீ…” என்ற சத்தம் கேட்டது. மக்கள் மேலே பார்த்தார்கள். அங்கே… ட்ரோன்கள்! நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், வானத்தில் பறந்து கொண்டிருந்தன. ஆனால் அவை சாதாரண ட்ரோன்கள் அல்ல. ஒவ்வொரு ட்ரோனும் ஒரு வேலை செய்தது. “அம்மா! அந்த ட்ரோன் பால் கொண்டு வருது!” என்று பத்து வயது குட்டிக் கண்ணன் கத்தினான். “அந்த ட்ரோன் மருந்து!” “இந்த ட்ரோன் காய்கறி!” “ஹை! அது ஐஸ்க்ரீம் ட்ரோன்!” ஆம்! சென்னை நகரத்தில் ‘வான விநியோகத் திட்டம்’ தொடங்கப்பட்டிருந்தது. மக்கள் கடைக்குப் போக வேண்டியது இல்லை. டிரோன்களே வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்துக் கொடுக்கும். மக்களுக்கு அது ஒரு சுவாரசியமான விஞ்ஞான அதிசயம் போல தோன்றியது. ஒரு நாள், கண்ணன் வீட்டின் பால்கனியில் ஒரு சிறிய ட்ரோன் வந்து இறங்கியது. “ஹலோ, கண்ணன்!” என்று அது பேசியது. “அப்பா! அம்மா! இங்க ஒரு டிரோன் வந்திருக்கு, இந்த ட்ரோன் பேசுது!” என்று கண்ணன் குதித்தான். அந்த ட்ரோன் சிரித்தது “என் பெயர் டி-3. (Drone Number 3) நான் உங்களுக்கு உதவ வந்தேன்,” என்றது. கண்ணனின் கண்கள் சந்தோஷத்தில் பளபளத்தன. “உங்களுக்கு பெயர் எல்லாம் இருக்கா? நீ எப்படி பேசுற?” அவனுக்குப் படு ஆச்சரியம். “Artificial Intelligence! அதாவது செயற்கை நுண்ணறிவு,” டி-3 விளக்கியது. “எனக்கு யோசிக்கவும், பேசவும், வழி கண்டுபிடிக்கவும் தெரியும்.” ஒரு மாலை, நகரம் முழுக்க ஒரே பரபரப்பு. வானத்தில் பெரிய குழப்பம் நேர்ந்தது. ட்ரோன்கள் எல்லாம் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி பறந்தன. “பால் வரல!” “மருந்து வரல!” “என் ஐஸ்க்ரீம் எங்கே?” ஒரே தேடல்கள்!! கண்ணன் உடனே டி-3யை அழைத்தான். “என்ன ஆச்சு?” டி-3 கவலையுடன் சொன்னது: “ஜிபிஎஸ் செயற்கைக்கோளில் ஏதோ கோளாறு போல. நாங்க வழி தவறிட்டோம், சரியான பாதையைக் கண்டு பிடிக்க முடியல.” கண்ணன் யோசித்தான். “ஜிபிஎஸ் இல்லாமல் நீங்க வழி கண்டுபிடிக்க முடியாதா?” டி-3 சிரித்தது. “முடியும்… மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இருந்தால்!” கண்ணன் ஒரு காகிதத்தில் நகர வரைபடம் வரைந்தான். “இது என் பள்ளி.” “இது மருத்துவமனை.” “இது மார்க்கெட்.” “நீங்க இதைப் பார்த்துப் பறக்கலாமே?” என்றான். டி-3 மகிழ்ச்சியடைந்தது. “மிகச் சிறந்த யோசனை, குட்டி விஞ்ஞானியே!!” அது அந்த வரைபடத்தை ஸ்கேன் செய்தது. “கவனிக்கவும்! எல்லா டிரோன்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!” என்று டி-3 அறிவித்தது. “இந்த வரைபடத்தைப் பின்பற்றுங்கள்!” கண்ணன் வரைந்த படத்தைக் காட்டியது. உடனே எல்லா ட்ரோன்களும் நேராக, சரியாகப் பறக்க ஆரம்பித்தன. சில நிமிடங்களில்… பால் வந்தது. மருந்து வந்தது. ஐஸ்க்ரீமும் வந்தது! 🍦 மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். நகர மேயர் கண்ணனைப் பாராட்டினார், “நீ பெரிய விஞ்ஞானியாக வருவாய்!” கண்ணன் சிரித்தான். “நான் என் ட்ரோன் நண்பனுக்கு உதவி செய்யவே இதைச் செய்தேன்!” “தொழில்நுட்பம் சக்திவாய்ந்தது. ஆனால் மனிதர்களின் அறிவும் கருணையும் சேரும்போது தான் அது சிறப்பாக வேலை செய்யும்.” டி-3 கண்ணனுக்கு ஹை-ஃபை காட்டியது. அந்த நாளுக்குப் பிறகு, சென்னை வானம் இன்னும் வண்ணமயமாக இருந்தது. பறவைகளும் ட்ரோன்களும் சந்தோஷமாக பறந்தன. கண்ணன் மேலே பார்த்து உற்சாகமாகச் சொன்னான்: “ஒரு நாள் நானும் ட்ரோன்கள் போல பறக்கப் போகிறேன்!” ஸ்ரீஜோதி விஜேந்திரன் விஜோஸ் புக்ஸ் பார்ன் (ViJos Books Barn) என்ற நூலகத்தின் நிறுவனர் ஆங்கில மொழிப் பயிற்சியாளர் மென் திறன் பயிற்சியாளர் (Soft skills trainer) விருது பெற்ற சிறார் எழுத்தாளர்.













