top of page

இயலில் தேடலாம்!

211 results found with an empty search

  • அறிவோ ஆளுமை -8

    நகுலன் : தென்னைமரத்தில் ஏறலாம். தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம். மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம், புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம். நெல்லிக் காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால், வழுக்கி வழுக்கி விழுகலாம் ! வழுக்கி வழுக்கி விழுகலாம்! ரதி :  அடடே! நகுலா! இது நம்ம சின்னப் பிள்ளையா இருக்கும் போது பாடுனது. அப்படியே ஞாபகம் வச்சிருக்கே? நகுலன்: ஆம்! இன்னும் ஒரு பாடல் இருக்கே! மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,  சேலத்து மாம்பழம். ரதி : நிறுத்துனதுக்கு அடுத்து மீதிய நான் பாடுறேன்.  அழகான மாம்பழம் அல்வா போன்ற மாம்பழம். தங்க நிற மாம்பழம்  உங்களுக்கு வேண்டுமா? இங்கே ஓடி வாருங்கள்  பங்கு போட்டுத் தின்னலாம். எப்படி எங்களுக்கும் ஞாபகம் இருக்குல்ல! ஜோ : வாவ்! என் குட்டி பாடகர்கள் என்ன அருமையாகப் பாடுறீங்க! உங்க இருவருக்கும் இந்தப் பாடல்கள் யார் எழுதினார்னு தெரியுமா? ரதி: எனக்குத் தெரியாது அத்தை! ஆனா  புத்தகத்தில் அந்தப் பாடலுக்கு கீழே 'அழ' ன்னு போட்டிருக்கும்.  என்னவோ பெயர் வரும் மறந்துட்டது அத்தை. ஜோ : அழ. வள்ளியப்பா!  நகுலன்: ஆமா அத்தை எனக்குப் புத்தகத்தில் படித்தது ஞாபகம் வந்துருச்சு.  அழ. வள்ளியப்பா. ரதி :  அத்தை! அவரு இந்தப் பாட்டெல்லாம்  எங்கள மாதிரி சின்ன வயசா இருக்கும் போதே எழுதிட்டாரா? ஜோ : இந்தப் பாட்டெல்லாம் அவர் வளர்ந்து பெரியவர் ஆனதுக்கு அப்புறம்தான் எழுதினார். ஆனால், அவர் சிறுவயதிலிருந்தே பாடல் பாடும் திறமை பெற்றவர். எப்போதும் துருதுருவென்று சுறுசுறுப்பாக இருந்தவர். வீட்டில் சேட்டை செய்து எல்லாரையும் சிரிக்க வைப்பார்! ரதி: அப்படியா!  அப்போ நகுலனோட தம்பி வினய் மாதிரி அப்படின்னு சொல்றீங்க. அப்படித்தானே அத்தை! அவன் தான் எப்பப் பார்த்தாலும் ஏதோ ஒன்னு கிண்டல் பண்ணி பாட்டு பாடிக்கிட்டே எல்லாரையும் சிரிக்க வச்சுக்கிட்டே இருப்பான். நகுலன் :    ஏன் உன்ன மாதிரி கூட சொல்லலாமே நீயும் எப்பவும் எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டுத் தானே இருக்கே? ரதி :  நான் எப்ப கிண்டல் பண்ணினேன். யாரக் கிண்டல் பண்ணேன். ஏதாவது பேசினா எனக்குச் சரியான கோபம் வந்துரும் நகுலன்.  ஜோ:    சரி சரி உங்க சண்டையை விடுங்க.  நகுலன் :  சரி சரி நீ அப்படி எல்லாம் ஒன்னும் சண்டை போடல நல்ல பிள்ளைதான்.  அவர் எந்த ஊருங்க அத்தை? ஜோ : அவர் புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் என்ற ஊரில் 1922-ல் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். அவருடைய முதல் கதை “ஆளுக்கு பாதி” என்ற பெயரில் வெளியானது. நகுலன் :‌  என்ன வேலை செய்தார்? ஜோ : அவர் வங்கியில் வேலை பார்த்தார்.  அவர் குழந்தைகளுக்காக எத்தனையோ இதழ்களில் பணியாற்றினார். பாலர் மலர், டமாரம், சங்கு இதழ்களில் கௌரவ ஆசிரியராகவும், கோகுலம் இதழின் ஆசிரியராகவும் இருந்தார். ரதி: அப்படின்னா அவர் குழந்தைகளுக்காக மட்டும் தான் எழுதினாரா? ஜோ : ஆம்! அவர் குழந்தைகளின் நலனுக்காகவே வாழ்ந்தார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். எளிமையும் இனிமையும் குழந்தைகள் சுலபமாகப் பாடுவதற்கு ஏற்ற இசையுடன் கூடிய பாடல்கள்.  அதுமட்டுமல்ல. 1950-ல் “குழந்தை எழுத்தாளர் சங்கம்” என்ற சங்கத்தையும் தொடங்கினார். அதின் முதல் தலைவர் வை. கோவிந்தன். பிறகு வள்ளியப்பா தலைவராக ஆனார். குழந்தை  எழுத்தாளர் சங்கத்தின் மூலம்  ஏராளமான புதிய எழுத்தாளர்களை உருவாக்கினார். நகுலன் : அப்படியா! அத்தை. ஜோ : கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். 300 எழுத்தாளர்கள் அந்தச் சங்கத்தின் மூலம் உருவாகியிருக்கிறார்கள். ஒரு வருடத்தில் 200 புத்த கங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.  ரதி :   அடேயப்பா….அத்தை இப்பவும் அந்த சங்கம் இருக்கா?  ஜோ இப்போ இல்ல. ஆனா தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பு 2021 இல் தொடங்கப்பட்ட து.  தற்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறார் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறார் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராகவும் தலைவராகவும் எழுத்தாளர் உதயசங்கர் உள்ளார். செயலாளராக எழுத்தாளர்.சாலைசெல்வம் இருக்கிறார்.    நகுலன் : அத்தை நான் கூட எழுதலாமா?  ஜோ :  தாராளமாக எழுதலாம்! இன்று தமிழில் ஏராளமான குழந்தைகள் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  புத்தக ங்களும்  வெளியிட்டிருக்கிறார்கள். கதை சொல்லிகளாகவும் குழந்தைகள்  இருக்கிறார்கள்.  ரதி :  இரு நகுலன் அவரைப் பற்றி முழுவதும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். அத்தை, அவர் எழுதிய நூல்கள் எத்தனை? ஜோ : அவர் 50-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்! அதோடு தொகுத்தும், மொழிபெயர்த்தும், பதிப்பித்தும் இருக்கிறார். ரதி: அவருக்கு விருதுகள் கிடைத்ததா அத்தை? ஜோ: 1963-ல் லக்னோவில் நடந்த அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் பதக்கமும் பாராட்டும் பெற்றார். அதோடு குழந்தை இலக்கிய முன்னோடி, பிள்ளை கவியரசு, மழலைக் கவிச்சம்மல்உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். 1982-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அவரை “தமிழ் பேரவை செம்மல்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. ரதி : அருமை! அவரை சந்திக்கணும்னு தோணுது! ஜோ : அவர் இப்போது நம்மோடு இல்லை, இந்த ஆண்டு அவருடைய் 103 ஆவது பிறந்த நாள் நூற்றாண்டு. ஆனால் அவருடைய கதைகள், அவருடைய பாடல்கள் இருக்கின்றன.  நீங்க இப்போ பாடினீங்களே அந்தப் பாடல்கள் வழியே  அவர் நம்மோடு இருக்கிறார். நகுலன்: அப்படின்னா நாம் அவருடைய பாடல்களையும் கதைகளையும் மற்ற குழந்தைகளுக்குச் சொல்லணும்! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • சாக்கில் உட்கார்ந்து படித்து...

    அம்பேத்கர் சினிமாவிற்குப் பள்ளியில் அழைத்துச் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு வந்தான் மணி. ஒவ்வொரு காட்சியும் அவன்  முன் வந்து வந்து போனது. அம்பேத்கர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்.இல்லை அம்பேத்கர் நம் நாட்டிற்கு எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார். கஷ்டத்தை அனுபவித்து நல்லதை செய்துள்ளார். ஆம் அதனால்தான் அவரைப் பற்றி சினிமா எடுத்துள்ளார்கள். அதனால்தான் அந்த சினிமாவிற்கு மாணவர்களை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அது எப்படி நியாயம்?...மணியின் சிந்தனையை நிறுத்த முடியவில்லை.   ‘வகுப்பறைக்கு வெளியில் உட்கார்ந்து எப்படிப் படித்திருப்பார்? அவரை எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளார்கள். அதுவும் பள்ளிக் கூடத்தில். வாசப்படியில் உட்கார்ந்து, சாக்கின் மேல்... அவர் அறிவாளிதான். அந்த சாக்கின்மேல் உட்கார்ந்து படித்ததால்தான் அவருக்கு அவ்வளவு படிப்பு வந்திருக்குமோ?...மணியின் மனம் கேள்விகளாலும் சினிமா காட்சிகளாலும் நிறம்பியிருந்தது.       அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்தான். “எனக்கு ஒரு சாக்கு வேண்டும்.“ அம்மாவிடம் கேட்டான்.  “சாக்கா? சாக்கு எதற்கு?   சாக்கு போக்குன்னு சொல்லிகிட்டு...” என்றார் அம்மா.  அதன் மேல் உட்கார்ந்து படிக்க என்று சொன்னால் திட்டுவார்கள். என்பதால் சொல்லவில்லை.  “நம் வீட்டில் சாக்கு இருக்கிறதா இல்லையா?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டான் மணி.  “அது எதுக்குடா இந்த வீட்டுக்கு?  மாடு வைத்திருக்கும் வீட்டில்தான் சாக்கு இருக்கும். எங்க அம்மா வீட்டில் இருந்தது. இப்ப, அங்கயும் மாடு இல்லை. நெல் மூட்டை வைத்திருக்கும் வீட்டில் இருக்கலாம். இப்ப யார் வீட்டிலும் நெல்லுமில்ல. மாடுமில்ல...” என்றார் அம்மா.  “மாடு வைத்திருக்கும் வீட்டில் சாக்கை என்ன செய்வார்கள்?”  “சாக்கை வைத்து ஆயிரம் செய்யலாம். மாட்டுத்தீவனம் கொட்டி வைக்கலாம். மாடு கண்ணுகுட்டி போட்டா, குட்டியை பத்திரமா அதில் கிடத்தி வைக்கலாம். மாட்டுக் கொட்டாய்க்கும் வீட்டுக்கும் இடையில் உள்ள வாசப்படியில் மிதியடியாய் போடலாம். குளிரடிச்சா மாட்டுக்கு மறைவு கட்டலாம்...சாக்கை வைத்து இப்படிதான் எதையாவது செய்யலாம்.” என்றார் அம்மா.  “அம்மா, அம்பேத்கர் பென்ச் மீது உட்காராமல் சாக்கு மீது உட்கார்ந்து எப்படிப் படித்தார். என்பதைத் தெரிந்து கொள்வதற்குதான்.” என்றான் மணி.    அம்மா அமைதியாய் இருந்தார்.பின், “அவர் எஸ் சி. அதனால்தான், அதெல்லாம் செய்தாங்க. போ! உனக்கெதுக்கு அதெல்லாம் போய் படி.” என்று முடித்தார். அடுத்து அவனுக்குத் தோன்றிய கேள்வியைக் கேட்க அம்மா அனுமதிக்கவில்லை. மணி எழுந்து போய்விட்டான். தானே தனக்குள் கேட்டுக் கொண்டான். ‘பாடம் நடத்தியது அவர் காதில் விழுந்திருக்குமோ? விழவில்லையென்றால் என்ன செய்திருப்பார். தினம் தினம் வாசப்படியில்தான் உட்கார்ந்திருப்பாரா? அவர் உட்கார்ந்திருந்த சாக்கை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு போயிருப்பார்களோ? சாக்கை மிதிப்பது போல் அவருடைய கை கால்களை, நோட்டுப் புத்தகங்களை மிதித்திருக்கலாம். நோட்டு பென்சில்களை எட்டித் தள்ளியிருக்கலாம். ஆமாம் நிச்சயமாக மிதித்திருக்கலாம். இன்றைக்கும்கூட மற்றவர்களை அடிக்கும் சீண்டும்  பையன்கள் இருக்கிறார்கள்தானே.  சாக்கில் உட்கார்ந்திருப்பதை பென்ச்சில் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் எப்படிப் பார்த்திருப்பார்கள்? அவர்களுக்கு பென்ச்சில் உட்கார்ந்திருப்பது பெருமையாக இருந்திருக்குமா? இப்படிக் கஷ்டப் படுபவர்களைப் பார்த்துக் கவலையாய் இருந்திருக்காதா?...    ஒரே கவலை. யோசனைமேல் யோசனை. கேள்வி மேல் கேள்வி... அந்த சினிமா பார்த்ததிலிருந்து அம்பேத்கர் நினைவுதான்.  சாக்கில் உட்கார்ந்து படிப்பதற்குப் பெயர்தான் தீண்டாமையா? – என்று கேள்வி கேள்வியாய் தோன்றிக் கொண்டிருந்தது.  பானையிலிருந்து தண்ணீர் குடிக்கக் கூடாது? எல்லாரும் குடிக்கும் தம்ளரில் குடிக்கக் கூடாது. என்றால் அம்பெத்கர் மட்டும் தனியா சாக்கில் உட்கார்ந்திருந்தாரா. அம்பேத்கர் மீது மட்டும்தான் எல்லாருக்கும் கோவமா?  ‘ லூசா நீ, சினிமாவை ஒழுங்கா பாத்தியா? அம்பேத்கருடன் இன்னும் இரண்டு பையன்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் எஸ் சி பசங்க. என்று மற்ற பசங்க பேசிக் கொண்டதை நீ கேட்கவில்லையா? ஒழுங்கா சினிமா பாரு.’ என்று தானே தனக்கு சொல்லிக் கொண்டான். அவனுக்கே அது புரிந்தது. சினிமாவில் சில காட்சிகள் பதிகிறது. மத்ததெல்லாம் மறந்து விடுகிறது.   அம்பேத்கர் பற்றி மணிக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. அது பற்றி பேசுவற்கு யாருமே இல்லை. சினிமா பற்றியும் பேச வேண்டும். தெரிந்தும் கொள்ள வேண்டும்.  அப்பாவிடம் கேட்கமுடியாது. அவருக்கு அறிவியல் அல்லது கணக்குப் பாட கேள்விகள் மட்டும்தான் கேட்க வேண்டும்.   அம்மாவிடம் கேட்டிருந்தால் அம்மா என்ன சொல்லியிருப்பார்கள்? “அது எஸ் சி. க்கானது. உனக்கெதுக்கு...” என்று சொல்லியிருக்கலாம். பாட்டியிடம் கேட்டிருந்தால், “டேய் ஒழுங்கா படி. இந்த மாதிரி அதையும் இதையும் பார்க்காத.” என்று சொல்லியிருப்பார்.  எந்த ஆசிரியரிடமாவது இது பற்றிப் பேச முடிந்தால்கூட நன்றாக இருக்கும். எந்த ஆசிரியரிடம் பேச முடியும்? “ஆனால் எனக்குப் பேசணும். கேக்கணும். என் கேள்விகளையெல்லாம் கேக்கணும். தீண்டாமை பற்றி நிறைய தெரிந்து கொள்ளணும்.      “இதுதான் தீண்டாமையோ!” என்று மணி தனக்குள் கேட்டுக் கொண்டான்.  சாலை செல்வம்

  • வளரிளம் புதிர்ப்பருவம் - 7

    இன்றைய குழந்தைகள் பள்ளிக்குள் செல்பேசி இல்லாததால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சத்தமாகவும் சத்தமில்லாமலும் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்திலிருந்து  என்ன கற்கிறார்கள்?  அவர்களின் கருத்து என்ன? போன்றவற்றை அறிய கலந்துரையாடலே சிறந்த வழி.  ஏதேனும் ஒரு பொருள் குறித்துக் குழந்தைகளுடன் எவ்வாறு கலந்துரையாடுவது? என்பது முக்கியம்.  என்ன கேள்வியைக் கேட்கலாம்? சம்பந்தமில்லாமல் வேறு ஏதேனும் பேசினால், வேண்டுமென்றே கேலியாக எதையாவது பேசினால் எப்படி அவர்களைப் பேசு பொருள் நோக்கித் திருப்புவது போன்றவை நெறியாளரின் திறன்கள்.   Adolescence தொடரின் மிக முக்கியப் பகுதி, உளவியலாளர் ஜேமியோடு உரையாடும் பகுதி. ஒரு பொருள் சார்ந்த  உரையாடலை இயல்பாக  நிகழ்த்துவது குறித்து நாம் இதிலிருந்து கற்கலாம்.  பிரையோனி ஆரிஸ்டன், ஓர் உளவியலாளர். ஜேமியைப் பார்க்க வருகிறார். ஜேமி சிறார் சீர்திருத்த  மையத்தில் இருக்கிறான்.  சூடான சாக்லேட், சாண்ட்விச் உடன் பிரையோனி உரையாடத் தொடங்குகிறார். என்ன சாப்பிடுவாய்? தாத்தா, பாட்டி பிடிக்குமா? எனப் பொதுவான உரையாடல். ஜேமி மகிழ்ச்சியாகப் பேசுகிறான். பாட்டி என்ன சொல்வாங்க என்பதை அவர் பேசுவது போலக் குரலை மாற்றிப் பேசுகிறான்.  பிரயோனி, ஜேமியின் தாத்தாவைப் பற்றிக் கேட்கிறார்.  உன் அப்பா, உங்க தாத்தா போல இருப்பாரா, ஆம்பளைத் தனமா? என்று கேட்கிறார்.  வெளியே சென்று குடிப்பாரா? எப்போதாவது போவார். தாத்தா அளவு இல்ல. ஆம்பளைத்தனம் என்ற வார்த்தை பற்றி என்ன நினைக்கற? நீங்க ஏதேதோ பேசுறீங்க. போன முறை வந்தப்போ இப்படித்தான் பேசுனீங்க. இந்த முறை ஆம்பளைத் தனம் என்று பேசுறீங்க. நீங்க ஏதாவது தந்திரம் பண்றீங்களா? இல்ல ஜேமி. நான் தந்திரம் பண்ணல. உனக்கு அப்படித் தோணினா சாரி! உங்களை நான் கடுப்பேத்திட்டேன்ல. இல்லை.  உங்க குறிப்புகளை நான் பார்க்கலாமா? என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கீங்க? இப்போ நான் எழுதிட்டா இருக்கேன்? இல்லை. ஆனா எழுதுவீங்கல்ல. அதைப் பார்க்கலாமா? எழுதுவேன். ஆனா பார்க்க முடியாது. நீங்க எனக்காக வேலை செய்றதா சொன்னாங்க. இல்லை. உங்க ஆட்களால் தான் நான் இங்கு வந்தேன். ஆனா சுதந்திரமா எனது அறிக்கையை எழுதறேன். அதைப் படிக்கும் போது உனது குற்றத்தை நீ எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கே என்று நீதிபதிக்கு ஒரு  தெளிவு கிடைக்கும். என்று பிரையோனி சொல்கிறார்.  நான் இங்கு வந்ததே  உன்னோடு கலந்துரையாடத் தான். நான் நேரடியான கேள்விகளை உன்னிடம் கேட்டிருக்கேன். போன முறை பேசியவற்றைப் பேசலாமா? போன முறை என்ன பேசினோம்? உன் நண்பர்கள், அம்மா பற்றிப் பேசினோம். அப்படியா, எனக்கு ஞாபகம் இல்ல.  உன் அக்கா என்ன நினைப்பா? அம்மா என்ன நினைப்பாங்க?  இதெல்லாம் எனக்குத் தேவையில்ல.  சரி ஜேமி. உனக்கு வேணும்னா இன்று என்னென்ன கேள்விகள் கேட்கணும்னு எழுதிட்டு வந்திருக்கேன். அதை வாசிக்கவா? சரி, வாசிங்க.  நீ சண்டை போட்டதை பற்றிப் பேசணும்.  ஓ… அதெல்லாம் சும்மா. நீ இங்கு ஒருத்தனோட ஏன் சண்டை போட்டாய் என்பதை நான் தெரிஞ்சுக்கணும்.  அது சண்டையே இல்ல. சும்மாதான். அதுக்கும் ஏதாவது தண்டனை இருக்கா? இருக்கலாம். நீ ஒரு ஆணாக எப்படி உணர்கிறாய்? என்றும் கேட்கணும்.  என் உறுப்புகளைப் பற்றித் தெரிஞ்சுக்கணுமா? இல்லை. உன்னைப் பொறுத்தவரை ஓர் ஆணா  இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று தெரிஞ்சிக்கணும். எனக்குத் தெரியல. இது பெரிய கேள்வியா தெரியுது. சண்டையைப் பற்றிக் கேட்டது சின்னதா தெரியுது. அதனாலதான் உன் அப்பா, தாத்தா பற்றித் தெரிஞ்சுக்கறது எனக்கு உதவியா இருக்கும். அவங்க எப்படிப்பட்ட ஆம்பளைங்க என்று நினைக்குற? என்பதை விட்டுட்டு பொதுவா, ஜேமி ஒரு  ஆணா இருப்பதைப் பற்றி என்ன நினைக்கற என்று கேட்டா நல்லா இருக்குமா?  ஜேமி, பிரையோனி பேசும் தொனியில் அவரது கேள்வியைச் சொல்லுகிறான்.  பிரையோனி சிரித்தபடி, “ இது தந்திரம் இல்லை. உரையாடல். இப்போ உங்க அப்பாவைப் பற்றிப் பேசலாமா?” என்று கேட்கிறார்.  “ குறிப்புகளை மட்டும் நான் பார்க்கலாமா? என்ன எழுதியிருக்கீங்க? எப்படி எழுதியிருக்கீங்க?” என்று ஜேமி ஆவலாகக் கேட்கிறான்.  இல்லை. அது மட்டும் முடியாது என்று பிரையோனி மறுக்கிறார்.  என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். என்னால் இங்கே இருக்க முடியாது. எந்த நேரமும் யாராவது கத்திக்கொண்டே இருக்கிறார்கள். என்று ஜேமியின் குரல் உயர்ந்து கொண்டே வருகிறது. அவனது கோபம் அதிகரிக்கிறது. எழுந்து நின்று கத்துகிறான். மேசையில் இருந்தவற்றைக் கீழே  தள்ளுகிறான். பிரையோனிக்கு அருகே செல்கிறான். அவரது முகம் மாறுகிறது. வீடியோவில் கவனித்துக் கொண்டு இருந்த  காவலர் அறைக்குள் விரைந்து வருகிறார். தொடர்ந்து பேசுவோம்!

  • பேசும் கடல் - 7

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத குழந்தைகளைத் தேடி கடற்கரைக்கு வந்துவிட்டார் மலர். " நேரமாகிட்டே                  வீட்டுக்கு     வரவில்லையா" கொஞ்சம் குரலை உயர்த்தி கோபத்துடன் கேட்டாள் மலர்.     அம்மாவைக் கண்டவுடன் அமுதாவும், இனியனும் நடந்தவைகளை எல்லாம் ஆச்சரியத்தோடு கூறினார்கள்.  இருவரும் அம்மாவின் கைப்பிடித்துக் கொண்டார்கள்.  " அம்மா....... அப்பாவை   கூப்பிடலையா?"  "அப்பாவுக்கு வலை கட்டுற வேலை இருக்கும்" " காலையில தொழிலுக்கு போறாங்க.... பிறகு வந்து வலைகட்டுறாங்க அவங்களுக்கு ரெஸ்ட்டே இல்லையே...." "அப்படி உழைச்சாதான் நாம சாப்பிட முடியும்" அம்மா தன் பிள்ளைகளிடம் பேசிக்கொண்ட  வீட்டை நோக்கி சென்றாள்.  அம்மா..... அப்பா ரொம்ப நேரம் கடல்ல கஷ்டப்பட்டாத்தான் நாம சாப்பிட முடியுமா?   - அமுதா கேட்டாள்.  'ஆமாம்' அமுதா.... நமக்கு என்ன சொத்தா இருக்கு.... கடன் தான் இருக்கு ” சலித்துக் கொண்டாள் மலர். " கடனா....... ஏன்? இவ்வளவு கஷ்டப்பட்டும் நமக்கு ஏன் கடன்"  இனியன் கேட்டான்.      " உங்க இரண்டுபேருக்கும் பதில் சொல்ல எனக்கு முடியாது, நீங்க சாப்பிட்டா போதும்" என்று கூறி உணவு பரிமாறினாள்.  இப்பொழுது இனியன் எந்த கேள்வி என்றாலும் கடல் பாட்டியிடம் கேட்டால்தான் சரியானப் பதில் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். சாப்பிட்டு முடித்ததும்  கடல் பாட்டியிடம் பேச விரைந்தான்.  பொங்கி எழும் அலை நீரில் காலை நனைத்தவாறு பாட்டியிடம் பேசத் தொடங்கினான். " பாட்டி பாட்டி......      "என்னப்பா சாப்பிட்டியா...... உங்க அம்மா வேகமா கூட்டிட்டு போனாங்களே....."  "நான் சாப்பிட்டேன். எனக்கொரு கேள்வி" இனியன் அவசரப்பட்டான். " என்னப்பா..... கேளு, கேள்வி கேட்பதுதான் குழந்தைகள் இயல்பு, எனக்கு தெரிந்ததைச் சொல்றேன்"  கடல் பாட்டி கூறியது. " எங்க அப்பா ......நாள் முழுவதும் உன்கிட்டதான் கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க...... அப்போ எதுக்கு கடன் இருக்கு?"  கடல் பாட்டி பதில் சொல்வதற்கு முன் அமுதா வேகமாக ஓடி வந்தாள். "பாட்டி பாட்டி என்னைய விட்டுட்டு வந்துட்டான். இப்போ சொல்லுங்க...." " என்னைய நம்பி வாழும் கடல் பழங்குடிகள், மீனவர்கள் சேமிக்க மாட்டாங்க,"  இருவரும் ஈர மணலில் அமர்ந்து கொண்டார்கள். ஆர்வமாய் கேட்க தொடங்கினார்கள். " உலகம் முழுவதும் வாழும் பழங்குடிகளுக்கு சேமிப்பு வழக்கமே இருக்காது" " ஏன் பாட்டியம்மா"- அமுதா முந்திக்கொண்டு கேட்டாள். " இயற்கையை நம்பி வாழ்பவர்கள் தங்களுக்கு தேவையானதை இயற்கை தரும் என்று நம்புவார்கள்" " பாட்டி இன்னும் விளக்கமா சொல்லுங்க...."அமுதா குறிக்கட்டாள். " அப்பா தினமும் கடலுக்கு போறாங்க தானே" " ஆமாம்" " தினமும் மீன் கிடைக்குமா....?"  கடல் பாட்டி  "ஆமாம்.... கிடைக்குமே" இனியனும் ,அமுதாவும் கோரசாகப் பதில் கூறினார்கள். " நான் (கடல்) வற்றிப் போவேனா?, என்னைய அழிக்க முடியுமா? நான் இல்லாம உலகம் இயங்குமா?" " இயங்காது, கடல் இல்லாட்டி பூமியோ, உயிரினங்களோ இல்லையே" இது இனியன். " நீங்க இல்லாட்டி எங்களுக்கு போரடிக்குது தெரியுமா?" அமுதா கொஞ்சல் மொழியில் கூறினாள். " யாருமே அழிக்க முடியாத கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களுக்கு, வாழ்வதற்கு தேவையான உணவும், பொருளும் தினம் தினம் கிடைக்கும் போது ஏன் அவர்கள் சேமிக்க வேண்டும்....?  "அதுசரி .....எங்கம்மா கடன் கடன்னு  தினமும் புலம்புறாங்க" அமுதா கேட்டாள். " குட்டி பிள்ளைகளா? சேமிப்பு என்பதே பொதுவுடமைக்கு எதிரானதுதான். சேமிப்புதான் தனிஉடமையின் தொடக்கம்." " தனிஉடமைன்னா என்ன?" இனியன்.  தன்னுடைய சொத்து, தன்னுடைய பொருட்கள், தனக்கு மட்டும் என்று சுயநலமாய் நினைப்பது தான் தனி உடமை "  "அய்யோ.... நீங்க இரண்டு பேரும் எனக்கு புரியாத மாதிரி பேசுங்க...." அமுதா  "பாட்டி எனக்குப் புரிஞ்சத சொல்லவா?" இனியன்  "சூப்பர் சொல்லுமா?" கடல் பாட்டி. "  இயற்கையை நம்பி வாழும் பழங்குடிகள் எதையும் சுயநலமாய் சேமிக்க மாட்டார்கள். இயற்கை தான் அவர்களின் சொத்து. கடல் எங்கள் சொத்து. தேவையானதைத் தினம் தினம் கடல் கொடுக்கும். கடல் பொதுவாக இருக்கும் வரை  நாம் சேமிக்க வேண்டாம். அதனால் மீனவர்கள் சேமிக்கவில்லை."  "சபாஷ் சரியாக புரிந்து கொண்டாய் தம்பி"  "பாட்டி எங்கிட்ட கேட்கவில்லை" அமுதா " சொல்லுமா" " நாங்க எவ்வளவு விளையாண்டாலும் அம்மா மூன்று வேளையும் உணவு தருகிறார்களே அதுபோல கடல் பாட்டி,  அதனால நாங்க பயப்படாம வாழ்றோம். ஏன் சேமிக்கனும்" " சூப்பர்..... இரண்டு பேரும் அருமை. ஆனால் கடல் நமக்கு உரிமை என்றால்தான் சேமிக்க தேவையில்லை,  கடல் நமக்கு உரிமை இல்லை என்றால் நாம் கடனாளிகள் ஆவோம்...  அய்யோ..... மறுபடியும் ஒரு புதிரா?         ‌ ‌               - கடல் பேசும்

  • குழந்தைக் கவிஞரின் குழந்தைப் பருவம்.

    ஒவ்வொருவர் வாழ்விலும்  குழந்தைப் பருவம் என்பது ரசிக்கத் தக்கது. குழந்தைப் பருவக் குறும்புகள் எண்ணி மகிழ ஏற்றவை.          புதுக்கோட்டை மாவட்டத்தில் இராயவரம் என்பது ஒரு சிறிய  ஊர். அந்த ஊரில் அழகப்பன், உமையாள் தம்பதியினர் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு 4 பிள்ளைகள். மூன்றாவது மகன் வள்ளியப்பன்.          வள்ளியப்பன் இரண்டு, மூன்று வயதில் அதிகம் பேசமாட்டான். யாருடனும் விளையாட மாட்டான். அந்த ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில்,  வீட்டின் நடுக் கூடம் திறந்த வெளியாக இருக்கும். அதனை வளவு என்பார்கள். மின்சாரம் இல்லாத காலமது. எனவே வளவின் நடுவில் விளக்கு வைப்பதற்கு ஒரு தூண் அமைத்திருந்தார்கள். வள்ளியப்பன்  அந்தத் தூணை இடது கையால் பிடித்துக் கொள்வான்.  வலது கையின் இரு விரல்களை வாயில் வைத்தபடி நிற்பான். எனவே அவனை அனைவரும் செல்லமாக "ரெட்டைக் கொம்பு ஊதி" என்று கேலி செய்வார்கள். அவன் அதற்கெல்லாம் கவலைப்பட மாட்டான்.              நான்கு வயதானதும் அவனது செயல்களில் மாற்றம் ஏற்பட்டது. வீட்டின் பின்புறமுள்ள கொய்யா மரத்தில் ஏறுவான். பழங்கள் பறிப்பான். அவற்றைக் கடித்துவிட்டு, அம்மா, அண்ணன்களிடம் கொடுப்பான்.  'ஏதோ கடித்தது போலுள்ளதே' என்று கேட்டால், 'அணில் கடித்த பழம். ருசியா இருக்கும்.' என்பான். அதை நம்பி, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துச் சிரிப்பான்.       அவர்கள் வீட்டின் பெரும்பகுதி ஓட்டுக் கூடமாக இருப்பதால், அடிக்கடி தேளைப் பார்க்கலாம்.  தேளைக் கண்டு வள்ளிப்பன் பயப்படுவான். ஒருநாள் அவனுடைய அம்மா, ' பயப்படாதே. தேள் உன்னை ஒன்றும் செய்யாது. நீ குழந்தையாக என் வயிற்றில்  இருந்த போது என்னைத் தேள் கொட்டிவிட்டது. அதனால் உன்னைத் தேள் கொட்டினாலும் பாதிப்பு ஏற்படாது.' என்று சொன்னார்கள். அதிலிருந்து வள்ளிப்பனுக்குத் தேள் பயமில்லை. ஆனால் பிறரைப் பயமுறுத்தத் தொடங்கினான். சமையல் வேலைக்கு வருபவர்கள் கண்ணில் படாமல் தீப்பெட்டியை ஒளித்து வைத்துவிடுவான். அவர்கள் கேட்கையில் தேளைத் தீப்பெட்டியில் போட்டுக் கொடுப்பான். அவர்கள் தீப் பெட்டியைத் திறந்ததும் தேள் வருவதைக் கண்டு பயப்படுவதைப் பார்த்து ரசிப்பான்.         ஆரம்பப் பள்ளிக்குச் சென்றான் வள்ளியப்பன். வீட்டில் குறும்புக்காரச் சிறுவனாக இருந்தாலும், பள்ளியில் பணிவான மாணவன். ஆசிரியர்கள் பாராட்டும் மாணவனாக இருந்தான். அவனுடைய தமிழாசிரியர்கள் பாரதியார், கவிமணியின் பாடல்களைத் தினமும் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால் வள்ளியப்பனுக்கும் பாடல் எழுதும் ஆசை வந்தது.          அவனுக்குள்ளே இருந்த கவிதை ஆசை ஒரு சோதனையைத் தந்தது.  வள்ளியப்பன் வீட்டிற்குச் சற்றுத் தொலைவிலுள்ள வீட்டிலிருந்து மூன்று சிறுவர்கள், சு.கதி. காந்தி பாட சாலையில் படித்தனர். ஒரு நாள் அந்தச் சிறுவர்களின் தாயார் பள்ளிக்கு வந்தார். வாசலில் நின்ற வள்ளியப்பனைப் பார்த்தார். மூன்று  பிள்ளைகளுக்கும் அழகழகான பெயர்களை வைத்திருந்தாலும்  அவர்களைச் செல்லமாக காளை, கூழை, ஊமை என்றுதான் அந்த அம்மா அழைப்பார் . வள்ளியப்பனிடம் 'காளை வந்துட்டானா? கூழையப் பார்த்தியா? அட ஊமையாவது வந்துட்டானா?'னு கேட்டார்கள். வள்ளியப்பன் 'பார்க்கவில்லை.' னு சொன்னான். 'சரி வந்தா, நான் தேடி வந்தேன்'னு சொல்லு என்றார்.    சிறிது நேரத்தில் 'ஊமை' என்று அந்த அம்மா குறிப்பிட்ட பையன் வந்தான்.வள்ளியப்பன் அவனிடம்,   " காளை, கூழை எங்கேடா?      ஊமை நீயும்  சொல்லடா" என்று பாடலாகக் கேட்டான். இந்தப் பாடல் சிறுவர்களைக் கவர்ந்தது. பள்ளியில் பலரும் இதைப் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.        மூன்று சிறுவர்களின் அம்மா, இந்தச் செய்தியைப் பிள்ளைகள் மூலம் தெரிந்துகொண்டார்.   அவர்    பள்ளிக்கு வந்தார். "எங்கடா அந்த வள்ளியப்பன்?    எம்புள்ளைகளைப் பாட்டுப் பாடி கேலி செய்யறானாமே! வெளிய வாடா" னு ரொம்பக் கோபமாகக் கூப்பிட்டாங்க. பயத்தில் நடுங்கிப் போன வள்ளியப்பன், பள்ளியின் பின் வாசல் வழியாகத் தப்பித்து ஓடிவிட்டான்.எங்கே தெரியுமா?  இராயவரத்தைக் காக்கும் தெய்வம் முத்துமாரியம்மன் கோயிலுக்குள்ளே தஞ்சம் புகுந்தான்.       வள்ளியப்பன் படித்த பள்ளியின் பெயரில் மட்டும் காந்தி என்றில்லாமல் அங்கே காந்தியின் கொள்கைகளையும் கற்பித்தனர். அசைவ உணவுகள் சாப்பிடாமல் இருப்பது, கதர் அணிவது போன்றவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.    வள்ளியப்பன் "இனிமேல் அசைவ உணவு சாப்பிடமாட்டேன்." என்று சொன்னான். அவன் அம்மா,  'அசைவம் சாப்பிடாவிட்டால் பிள்ளைக்குப் போதிய சக்தி கிடைக்காதே. இளைத்துவிடுவானே' என்று கவலைப்பட்டார்.  அம்மா வள்ளியப்பனிடம், ''நீ அசைவ உணவு சாப்பிடு. அந்த வாசம் தெரியாமல் இருக்கக் கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை மென்று தின்ற பின் பள்ளி சென்றால், யாருக்கும் நீ அசைவம் சாப்பிட்டது தெரியாது" என்றார்.  வள்ளியப்பன், " அசைவம் சாப்பிடுவது மட்டுமல்ல, பொய் சொல்வதும் தப்புத் தான். எனக்கு அசைவம் வேண்டவே வேண்டாம்." என்று மறுத்து விட்டான்.   அப்பாவிடம் கேட்டுக் கதர் உடைகளை வாங்கி அணிந்தான்.       இராயவரத்திற்குப் பக்கத்து ஊரான கடியாபட்டியில்  பூமீஸ்வரர் உயர்நிலைப் பள்ளி உள்ளது.  5 கி.மீ. தூரத்திலுள்ள அந்தப் பள்ளியில் உயர் நிலைக் கல்வியைக் கற்கச் சென்றான் வள்ளியப்பன்.        பிள்ளை நடந்து போய்ச் சிரமப்பட வேண்டாம் என்று வள்ளியப்பனின் அப்பா பேருந்தில் போகச் சொல்லிப் பணம் கொடுப்பார்.  வள்ளியப்பனும் காலையில் பேருந்தில் சென்று விடுவான். மாலை வீடு திரும்பும் போது ஊர்ப் பிள்ளைகளுடன் சேர்ந்து நடந்து வருவது வழக்கம்.                              ஒருநாள் நடந்து வரும் போது சிறுவர்கள் வழியிலே ஒரு சுவரொட்டியைப்  (போஸ்டர்) பார்த்தார்கள். அது ஓர் ஆங்கிலத் திரைப்படத்திற்கானது.  The Lost jungle என்ற ஆங்கிலப் படத்தைத் தமிழில் "காணாத காடு" என்று குறிப்பிட்டிருந்தனர். அதை வள்ளியப்பன் சத்தமாகப் படித்தான். அவனுக்குள் இருந்த கவிஞர் வெளியே வந்தார்.  " காணாத காடு    கண்டுவிட்டால் ஓடு." என்று எட்டாம் வகுப்பு மாணவன் வள்ளியப்பன் பாடிக் கொண்டே ஓடினான். உடன் வந்த ஊர்ப் பிள்ளைகளும்  " காணாத காடு   கண்டுவிட்டால் ஓடு" என்று மீண்டும் மீண்டும் பாடியபடி ஓடினர்.     வள்ளியப்பன்  தொடர்ந்து பாடினான்.  "காணாத காடு கண்டு விட்டால் ஓடு ஒளிய இடம்  தேடு. ஏழைகள் படுவதோ அரும்பாடு டிக்கெட் விலையோ பெரும்போடு!"       இப்படிப் பாடியபடி சிறுவர்கள் இராயவரத்தை அடைந்தனர். அன்று மட்டுமல்ல, இந்தப் பாடல் பல நாள்கள் சிறுவர்களின் வழி நடைப் பாடலானது!       வள்ளியப்பன் பத்தாம் வகுப்புப் படிக்கையில் ஒரு நிகழ்வு. வகுப்பிலே தமிழாசிரியர் கட்டுரை எழுதச் சொன்னார். மாணவர்கள் எழுதிய கட்டுரை ஏடுகளை வீட்டிலே கொண்டு போய்த் திருத்தம் செய்தார். மறுநாள் வகுப்புக்கு வந்தார்.  "நம் வகுப்பிலே ஒரு நாலடியார் இருக்கிறார்! யார் அவர்?" என்று புதிர் போட்டார் ஆசிரியர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒன்றும் புரியவில்லை.     ஆசிரியர் ஒவ்வொரு மாணவனாக அழைத்து நோட்டைக் கொடுத்தார். வள்ளியப்பனை அழைத்ததும் பயந்தபடி வந்தான். காரணம் கட்டுரையில் மேற்கோள் எழுத நினைத்தான் வள்ளியப்பன். ஒரு நாலடியார் பாடல் நினைவுக்கு வந்தது. எழுதத் தொடங்கினான். நாலாவது அடி நினைவுக்கு வரவில்லை. எனவே அவனாக ஒரு அடி எழுதிப் பாடலை நிறைவு செய்தான்.      அதனால் தயங்கியபடி ஆசிரியரிடம் சென்றான். "வாரும் நாலாவது அடியாரே!" என்று ஆசிரியர் அழைத்தார். "நேற்று எழுதும் போது இறுதி அடி மறந்து விட்டது." என்று மெல்லச் சொன்னான் வள்ளியப்பன்.        "பரவாயில்லை. நாலடியார்  எழுதிய சமணத் துறவிகளுக்கு நிகராக ஒரு அடி எழுதியிருக்கிறாரய். பாராட்டுக்கள்." என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். வள்ளியப்பனுக்கு மிகுந்த மகிழ்ச்சி .     அந்தத் தமிழாசிரியர்  பெயர் கோபாலகிருஷ்ணன். அவர் இப்போது நூற்றாண்டு காணும் குன்றக்குடி   அடிகளாரின் அண்ணன்.      இவ்வாறு குறும்பும் கவிதைக் கரும்புமாக    வளர்ந்தான் வள்ளியப்பன். அவன்தான் 'குழந்தைக் கவிஞர்' என்று உலகத்தோரால் போற்றப்படும்  வள்ளியப்பா.         அவர் குழந்தைகளுக்கு நிறையப் பாடல்கள் எழுதினார். குழந்தை இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளான கதை, நாவல், நாடகம், விடுகதை, வாழ்க்கை வரலாறு,  கவிதை, வாழ்வியல், பாட்டுப் பட்டிமன்றம் எனப் பல படைப்புகளைத் தந்தார்.     குழந்தை எழுத்தாளர் சங்கத்தைச் தொடங்கிப் பலரைக் குழந்தைகளுக்கு எழுதத் தூண்டினார்.  அச்சங்கத்தின் வழி பல சாதனைகளைப் புரிந்தார்.       எங்கள் தந்தையார், குழந்தை இலக்கிய முன்னோடி அழ.வள்ளியப்பா அவர்களின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதில்  பெருமகிழ்ச்சி. தேவி நாச்சியப்பன் இவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் இளைய மகள். 40 ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு எழுதி வருகிறார். குழந்தை இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கவிமணி குழந்தைகள் சங்கத்தை 30 ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தி வருபவர். வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்     பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, தமிழ்ச் செம்மல் விருது ஆகியவை இவரின் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.

  • தத்துவம் அறிவோம் - 8

    ஏன்? எதற்கு? எப்படி? தத்துவத்தின் அடிப்படைகள் தத்துவம் பிறப்பதற்கு எது காரணமாக இருந்தது?  மனித உழைப்பு.  இதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, சரியா?.  ஒரு விஷயம் தெரியுமா?  இன்று இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிரியல், வரலாற்றியல், பண்பாடு, இலக்கியம் என்று எத்தனையோ அறிவுத்துறைகள் இருக்கின்றன அல்லவா?   தொடக்கக் காலத்தில் இவற்றையும் இயற்கைத் தத்துவ இயல் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.  அதன்பிறகே அறிவியல் துறைகளிலிருந்து தத்துவத்தை பிரித்திருக்கிறார்கள்.  அதனால் என்ன? நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், தத்துவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அனைத்துத் துறைகளின் அடிப்படை அறிவையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.  அதாவது எல்லா அறிவுத்துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் ஒருங்கிணைந்தும் செயல்படுபவை.  இன்னொரு வகையில் இந்த உலகம், இயற்கை, மனிதர்களின் வாழ்க்கை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஒன்று பாதிப்படையும்போது, இன்னொன்றும் அதனால் தாக்கம் பெறும்.  எடுத்துக்காட்டுக்கு காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தியது யார்? மனிதர்கள்! இப்போது அதன் விளைவுகளை அனுபவிப்பது யார்? மனிதர்கள் மட்டுமா? நிச்சயமாக இல்லை. அதற்கு நேரடியாகக் காரணமாக இருக்காத அனைத்து உயிர்களும் தாக்கத்தை அனுபவிக்கின்றன.  இயற்கையின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது.  உயிர்ச்சங்கிலியில் மாற்றம் ஏற்படுகிறது.  மனிதர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது. எனவேதான் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று சொல்கிறோம். உலகில் எதுவும் தனியாக நிகழ்வதில்லை.  இந்த உலகத்தில் நடைபெறும் எல்லாச் செயல்களுக்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன. தத்துவம் என்பது இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான்.  தத்துவம் என்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலை அல்ல.  அந்தரத்தில் அரண்மனை கட்டுவதும் இல்லை. மாயாஜாலமும் இல்லை.  சரியா? தத்துவம் என்பது அனைத்து அறிவுத்துறைகளைப் போன்ற மற்றுமொரு அறிவுத்துறை. மூளை என்கிற உறுப்பின் செயல்பாடு. மனிதர்களின் மூளை வளர்ச்சியடையும்போது அதன் செயல்பாடுகளும் நுட்பமடைகிறது.  புதிய சிந்தனை முறைகள் உருவாகின்றன.  ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய விளக்கம் என்று சொல்லலாம். அவையும் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையவைதான். ஆனால், இலக்கியமும் தத்துவமும் மனிதர்களின் வாழ்க்கையில் தீவிரமான தாக்கம் செலுத்துகிற அறிவுத்துறை எனலாம்.     மனிதர்களிடம் பகுத்தறிவு தோன்றிய காலம் முதல் அவர்களிடம் கேள்விகள் உருவாகிவிட்டன.  நான் ஏன் பிறந்தேன்? எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு?  இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன?  இந்த வாழ்க்கையின் முடிவு என்ன? மனிதர்களிடையே பாகுபாடுகள் எப்படி வந்தன? கடவுள் இருக்கிறாரா? யார் கடவுள்? கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன? மதம் என்றால் என்ன? இவ்வளவு கடவுளர்கள் எப்படி உருவானார்கள்? இவ்வளவு மதங்கள் எப்படி உருவாயின? சாதி என்றால் என்ன? மேல்சாதி, கீழ்சாதி என்கிற வேறுபாடு எப்படி உருவானது? மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை உண்டா? மரணத்துக்குப் பிறகு மறுபிறவி உண்டா? மனிதனைவிட உயர்வான உயிரினம் தோன்றுமா? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் தோன்றின. தோன்றிக்கொண்டே இருக்கினறன. தோன்றிக்கொண்டேதான் இருக்கும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். யார், என்ன, எப்படிச் சொன்னார்கள்? அடுத்தடுத்து பார்ப்போம். (தத்துவம் பயில்வோம்) உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • ஈஸ்டர் தீவு (ராப்பா நூயி)

    தென்னமெரிக்க நாடான சிலி நாட்டிலிருந்து, மேற்கே மூவாயிரத்து எழுநூறு கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குப் பசுபிக் பெருங்கடலின் நடுவே ஒரு சிறிய தீவு அமைந்திருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் வெடித்துக் கிளம்பிய எரிமலை குளிர்ந்ததால் இந்தத் தீவு கடலுக்கு நடுவே உருவானது. முக்கோண வடிவிலான இந்தத் தீவு அறுபத்தி மூன்று சதுர மைல் பரப்பே உடையது. முழுத் தீவும் பெரும்பாலும் எரிமலைக் கற்களால் ஆனது. மூன்று முக்கிய எரிமலைகளான ரானோ காவு, தேரெவாகா மலை மற்றும் ரானோ அரேகா போன்றவை இந்தத் தீவின் வடிவமைப்பை உருவாக்கியிருக்கின்றன. இந்தத் தீவில் என்ன சிறப்பு? 1722 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, ஈஸ்டர் திருநாள் அன்று, டச்சு மாலுமியான ஜேக்கப் ரகவீன் என்பவர் இந்தத் தீவுக்கு முதன்முதலில் வந்திறங்கினார். இத்தீவுகளில் மனிதர்கள் வாழ்வதை வெளியுலகத்துக்கு அறிவித்தார். அவர் வந்திறங்கிய நாளின் நினைவாக அவர் இதற்கு ஈஸ்டர் தீவு என்று பெயரிட்டார். ஆனால் இங்கு வசித்துக் கொண்டிருந்த பூர்வகுடிகள் வைத்திருந்த பெயர் ராப்பா நூயி. இங்கு கண்ட நூற்றுக்கணக்கான பிரம்மாண்டக் கற்சிலைகளே ஜேக்கப் ரகவீன் கண்டறிந்த ஆச்சரியம். ஒவ்வொரு சிலையும் ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்தச் சிலைகளை மோவாய் என்று அழைக்கிறார்கள். மோவாய் சிலைகள் மனித முக வடிவமைப்புடன், நீண்ட காதுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைப்பகுதியில், சிலைகளுக்கு ஒரு சிவப்பு நிற 'தொப்பி' போன்ற அமைப்பு (புக்கவ்) வைக்கப்பட்டிருக்கும். இச்சிலைகள் பெரும்பாலும் மார்பளவு வரையிலான உருவங்களாகவே உள்ளன. இருப்பினும் சில முழு உருவச் சிலைகளும் காணப்படுகின்றன. பத்து மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலைகள் சுமார் 80 டன் எடை கொண்டவை. இதுவரை எண்ணூற்று எண்பத்து ஏழு சிலைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தச் சிலைகள் எப்படி உருவாகின? ஏன் உருவாகின? இந்தத் தீவுகளின் பூர்வகுடிகளான ராப்பா நூயி மக்கள் இச்சிலைகளை உருவாக்கியவர்கள் ஆவர். அவர்கள் பாலினேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழியும் ராப்பா நூயி என்றே அழைக்கப் படுகிறது. அவர்களது நாகரீகத்தில் இறந்த தங்களது மூதாதையரின் ஆவிகளைச் சிறப்பிக்கும் விதமாக இந்தச் சிலைகளை அமைத்தனர். தீவைக் காக்கும் தெய்வங்கள் போல இச்சிலைகள் கடலைப் பார்க்காமல், கடலுக்கு முதுகு காட்டி, தீவின் கிராமங்களைப் பார்க்கும் வண்ணம் வரிசையாக நிற்கின்றன. எரிமலைப் பாறைகளால் இந்தச் சிலைகளைச் செதுக்கினர். பின்னர் இச்சிலைகளைக் கயிறுகள் கொண்டு கட்டி, மரக்கட்டைகளைத் தரையில் அடுக்கி அவற்றின் மீது வைத்து நகர்த்தி, கடற்கரைப் பகுதிக்குச் சென்று கல்மேடைகளில் நிறுத்தி வைத்தனர். இந்தக் கல்மேடைகள் ‘ஆஹூ’ என்று அழைக்கப்படுகின்றன. கி.பி. 1200 முதல் 1500 வரையிலான காலகட்டத்தில் மோவாய் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ராப்பா நூயீ நாகரிகம், சில நூற்றாண்டுகளுக்குள் திடீரென வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளன. இருப்பினும், ஆய்வாளர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்: காடழிப்பு: மோவாய் சிலைகளை நகர்த்தவும், போக்குவரத்திற்காகவும் ராப்பா நூயீ மக்கள் தீவில் இருந்த அனைத்து பெரிய மரங்களையும் வெட்டித் தீர்த்தனர். மரங்கள் இழந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டது, விவசாயம் பாதிக்கப்பட்டது, படகு கட்ட முடியாமல் மீன்பிடித்தலும் தடைபட்டது. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. உள்நாட்டுப் போர்: பஞ்சம் தலைவிரித்தாடியபோது, குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சிலைகளைத் தூக்கி நிறுத்துவதைக் கைவிட்டு, ஏற்கனவே நிறுவப்பட்ட சிலைகளைச் சேதப்படுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. வெளியார் வருகை: ஐரோப்பியர்கள் தீவுக்கு வந்த பிறகு, அங்கு அடிமை வியாபாரம், தொற்றுநோய்கள் மற்றும் குடியேற்றவாதம் ஆகியவற்றால் பூர்வீக மக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இன்று, ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்பு மண்டலமாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சிலி நாட்டினர் தங்கள் கட்டுப்பாட்டில் இந்தத் தீவுகளைக் கொண்டுவந்தனர். இத்தீவுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்தே உள்ளது. மோவாய் சிலைகளைப் பார்க்க உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஈஸ்டர் தீவு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மோவாய் சிலைகளை எப்படி நகர்த்தினார்கள், அவற்றின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன, அந்த நாகரிகம் ஏன் வீழ்ச்சியடைந்தது போன்ற கேள்விகளுக்கு முழுமையான, ஏற்றுக்கொள்ளப்பட்ட பதில்கள் இன்னமும் இல்லை. இந்த மர்மங்களே ஈஸ்டர் தீவை இன்றுவரை உலகின் மிகவும் வியப்புக்குரிய இடங்களில் ஒன்றாக வைத்திருக்கின்றன. இவர்களது எழுத்துமொழியை எப்படிப் படிப்பது என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஸ்டர் தீவு மனிதக் கலைப்படைப்புகளுக்கு ஒரு அற்புதச் சான்று. இயற்கையும் மனிதக் கலைத்திறனும் இணைந்தது இந்த தீவு. பழங்கால நாகரிகங்கள் எவ்வளவு திறமையானவை என்பதை இன்றும் உலகுக்கு நினைவூட்டுகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இந்தத் தீவுகளுக்குச் சென்று பார்த்துவிட்டு பழைய நாகரீகத்துக்குள் பயணம் செய்யலாம்! (படங்கள் உதவி: விக்கிபீடியா) எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • மீன் உண்டியல்

    என் பிஞ்சுக் கையைப் பற்றித் தரத்தரவென்று இழுத்துச் செல்லும் என் அம்மாவின் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. பொது இடம் என்று பார்க்காமல் நான் ஆர்ப்பரித்து அழுதேன். அம்மா அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. நான் வீட்டிலும் அப்படித்தான். எனக்கு பிடித்த எதாவது கிடைக்கவில்லை என்றால் கத்திக்கூப்பாடு போட்டு அழுவேன். அம்மா எதையும் கண்டுகொள்ளாமல் அடுப்படியில் சமையல் செய்துகொண்டிருப்பாள். மீறி அழுதால், அங்கிருந்தவாறே திரும்பிப் பார்த்து முறைப்பாள். அதில் ஏராளமான அர்த்தம் பொதிந்திருக்கும். நான் அழுகையை அடக்கிக்கொள்வேன்.  ஒரு முறை, வாசலில் கிடந்த உடைந்துபோன கரண்டியை வைத்துக்கொண்டு கழுவி அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றின் மீதும் தட்டித் தட்டி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தேன். ’தட்டாதே’ என்றாள். அவளிடமிருந்து ஒற்றை வார்த்தைதான் தடித்து வெளியே வந்து விழுந்தது. நான் கண்டுகொள்ளவில்லை. அன்று எனக்கு நேரம் சரியில்லை போலும். நான் தட்டும்போது, ஒவ்வொரு பாத்திரங்களில் இருந்தும் வெளியாகும் ஓசை அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. என் தோள்களை உலுக்கித் ’தட்டாதே’ என்றபடி என் கையிலிருந்த உடைந்துபோன கரண்டியைப் பிடுங்கித் தெருவில் எறிந்தாள். நான் வீறிட்டு அழுதேன்.  உதட்டின் மீது விரலை வைத்து ‘உஷ்’ என்றாள். அதற்கு மேல் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அம்மாவின் கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்த்தேன். அவ்வளவுதான். அதன் பிறகு என் அழுகை, ஆர்ப்பாட்டம் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன். என் அம்மா முறைத்தால் என் சப்தநாடியும் அடங்கிவிடும். அழுகையை உடனே நிறுத்திக்கொண்டாலும், பெருமூச்சோடு கூடிய தேம்பல் நீண்ட நேரம் கழித்தே அடங்கும்.  நகரத்திற்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிவரப் பேருந்துக்குக் காத்திருந்தபோதுதான் இது நிகழ்ந்தது. பெரிய கண்ணாடிக் கதவுகளின் வழியே அழகழகான தொட்டிகளில் மீன்கள் நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, என் வயதுச் சிறுவனும் சிறுமியும் ஒரு வாலிபால் அளவுள்ள அழகான கண்ணாடிக் குடுவையில் சிவப்பு நிற மீன் குட்டியை வாங்கிக்கொண்டு வெளியே வந்தனர். வெள்ளைநிறக் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது. கதவு திறந்ததும் அவர்கள் ஏறிக்கொண்டார்கள். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். தலையை உயர்த்தி என் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். நான் விடுவதாய் இல்லை. எங்களது குட்டி வீட்டிற்குள் அந்தக் குடுவையை வைப்பதற்கு ஏதாவது ஒரு மூலை கிடைக்காதா என்ன?. நாங்கள் ஒரு ஓரத்திலும், குட்டி மீன் ஒரு ஓரத்திலும் இருந்துவிட்டுப் போகட்டுமே! என்று நினைத்தேன்.  நான் அம்மாவின் அருகில்தான் நின்றுகொண்டிருந்தேன். என் கைகளை அவள் பற்றியிருக்கவில்லை. நான் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவு இருக்கும் கடையின் முன்னால் போய் வேடிக்கை பார்க்கத்தான் நின்றேன். யாருமே இல்லாமல் கதவு மட்டும் தானே திறந்துகொண்டது. எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. என்னை யாரும் உள்ளேயும் அழைக்கவில்லை. வெளியே போ என்றும் சொல்லவில்லை.  என்னைக் கடந்து வேறொரு குடும்பம் உள்ளே சென்றது. நான் கொஞ்சம் நகர்ந்து நின்றுகொண்டேன். கதவு தானாக மூடிக்கொண்டது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் அம்மா நின்று கொண்டிருக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவள் பேருந்து வரப்போகும் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தேன். கதவு திறந்துகொண்டது. எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நான் உள்ளே சென்று ஒவ்வொரு குடுவைக்குள்ளும் நீந்திக்கொண்டிருக்கும் விதவிதமான மீன்களை ஆசை ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். உயரமான தொட்டிக்குள் வளைய வந்துகொண்டிருந்த வெள்ளை நிற மீனை வேடிக்கை பார்த்தேன். ‘எவ்வளவு பெரிய மீன். அந்தக் கண்ணாடித் தொட்டியை வைப்பதற்கு எங்கள் வீடு நிச்சயம் போதாது’. அந்த மீன் நான் நிற்பதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வளைந்து வளைந்து நீந்திக்கொண்டிருந்தது. சட்டென்று என் கைகளைப் பற்றி யாரோ வெடுக்கென்று இழுப்பது போல் இருந்தது. அது என் அம்மாதான். நான் கடைக்கு உள்ளே இருப்பதை எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டாள். தரத்தரவென்று என் கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றாள்.   என்னை மட்டும்தான் அந்தக் கடைக்குள்ளிருந்து இழுத்து வர முடிந்தது. என் மனதை அல்ல. எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அந்த கடைக்குள் இருந்த ஒளி, வண்ண வண்ண மீன்களின் அழகு, கண்ணாடித்தொட்டி, இது எதுவுமே என் கண்களைவிட்டு அகலவில்லை. எல்லா மீன்களும் என்னைப் பின் தொடர்ந்து வந்துவிடாதா என்று ஏங்கினேன். அதெல்லாம் கதைகளில்தான் நடக்கும் போலும். ஒவ்வொரு நாள் கனவிலும் தண்ணீர் இல்லாத தரையில் மீன்கள் என்னைத் தேடி வந்தன. நான் பயந்துவிடக்கூடாது என்பதற்காக மீன்கள் என் கைகளைப் பற்றிக்கொண்டன. நாங்கள் பெருந்திரளான கூட்டத்திற்கு நடுவே பேருந்தில் பயணித்தோம். தெருவோரத்தில் விற்ற கொய்யாப்பழங்களை ஆசை தீர வாங்கிச் சுவைத்தோம். ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டோம். என் உலகம் இப்படிப்பட்டதுதான் என்று சொன்னால் யாருக்கும் புரியவில்லை. என் அம்மாவிற்கே புரியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.  நான் ஏழை சிறுமி என்பதை என் மனம் நம்பவே இல்லை. நான் கூரை வீட்டிற்குள் இருக்கிறேன். ஆனால், ஏழை இல்லை. மீன்கள் இரவெல்லாம் விளையாடிவிட்டுப் பகலில் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவு போட்ட கடையில் இருக்கும் பெரிய பெரிய குடுவைகளில் சென்று நீந்தத் தொடங்கிவிடும். நான் இரண்டாவது முறை அங்கே சென்றபோது கடைக்கு வெளியில் இருந்து பார்த்தேன். எனக்குக் கவலையெல்லாம் என்னால் ஒரு நிஜமான மீன் வாங்கி வளர்க்க முடியவில்லை என்பதுதான். ஆனால், தினசரி கனவில் வண்ண வண்ண மீன்களோடு நான் வலம் வந்துகொண்டிருந்தேன்.  ஒரு நாள் வேலை முடித்து வீடு திரும்பும் என் அம்மா ஒரு மீன் வடிவ மண் உண்டியலை வாங்கி வந்தாள். அது உண்மையான மீன் போல இல்லை. ஆனாலும், அது எனக்குப் பிடித்திருந்தது.  பச்சை, நீலம், சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மீன் உண்டியல் அது. என் தினசரிக் கனவில் வந்த மீன்களைவிட இது அழகாக இருந்தது.  ”இது களிமண்ணால் செய்தது, ஜாக்கிரதை” என்று சொன்னாள் அம்மா. எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் முதுகில் நாணயங்களைப் போடுவதற்கு ஏதுவாக நீள்வாக்கில் ஒரு துளை இருந்தது. எனக்கு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு சேமிப்பது எப்படி என்று காண்பித்தாள்.  ஆனால், எனக்கு அது சேமிக்கும் ஒன்றாகத் தெரியவில்லை. தினசரி மீனின் வயிற்றுப்பசிக்குப் போடும் தீனியாக என் மனதிற்குப் பட்டது. அதைவிட, நான் போடும் காசு அதன் வால் பகுதிக்குள் எல்லாம் சென்று சேரவேண்டும் என்பதற்காக நாணயத்தைப் போட்டதும் அதை எல்லா கோணங்களிலும் அந்த மீன் உண்டியலைத் திருப்பித் திருப்பி குலுக்குவேன்.  ஆனால், என் அம்மாவிற்கு நான் எங்கே அந்த உண்டியலை உடைத்துவிடுவேனோ என்ற பயம் இருந்தது என்று நினைக்கிறேன். நான் அந்த மீன் உண்டியலைத் தொடும்போதெல்லாம் முறைத்துப் பார்ப்பாள். அவள் இல்லாத நேரமாகப் பார்த்து நான் அந்த மீன் உண்டியலோடு விளையாடுவேன். இரவில் படுத்து உறங்கும் போது கூட அதை என் அருகில் வைத்துக்கொண்டுதான் தூங்குவேன். நான் முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கியிருந்தேன். தினமும் அல்லது நாணயம் கிடைக்கும் போதெல்லாம் அந்த உண்டியலில் போட்டு வந்தேன். தினமும் அதனுடன் விளையாடுவதையும் நான் மறக்கவில்லை. ஒரு நாள் விடுமுறை தினத்தின் மதிய வேளையில், என் அம்மா நான் வைத்து விளையாடிக்கொண்டிருந்த மீன் உண்டியலைச் சுட்டிக்காட்டி, ”இது நிறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதில் உள்ள காசுகளைக் கொண்டு, வருகிற தீபாவளிக்குத் துணிமணி எடுக்கலாம்” என்றாள். நிறைய தின்றதால் மீனின் வயிறு நிரம்பிவிட்டதா? அது எப்படி அம்மாவுக்குத் தெரிந்தது? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  நமக்கெல்லாம் தினமும் தின்றால் வயிறு பசிக்கும்தானே? மீனின் வயிறு நிறைந்துவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனக்கும் புதுத்துணி அணிந்துகொள்ள ஆர்வம்தான். சென்ற வருட தீபாவளிக்குக் கூட நானும் சரி, என் அம்மாவும் சரி புதுத்துணி அணிந்துகொள்ளவில்லை.  நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அம்மா அந்த உண்டியலைத் தேங்காய் உடைப்பது போல் தரை அடித்தாள். மீன் உண்டியல் சிதறு தேங்காயைப் போல துண்டுதுண்டாக உடைந்தது. அவற்றிற்கு நடுவில் சில்லரைக் காசுகள் சிதறிக்கிடந்தன. எனக்கு அழுகை அழுகையாக வந்தது. இத்தனை நாட்கள் நான் ஆசை ஆசையாக வைத்திருந்த மீன் இப்பொழுது செத்துவிட்டது. இனி அவ்வளவுதான். நான் தேம்பித் தேம்பி அழுதேன். அதையெல்லாம் கண்டுகொள்ளாத அம்மா, சிதறிக்கிடந்த நாணயங்களைப்  எடுத்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து எண்ணிக் கொண்டிருந்தாள். நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். வே.சங்கர்  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது ”எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு”, “கானகத்தில் ஒரு கச்சேரி”, ”என் பெயர் ‘ஙு’”, “டுட்டுடூ”, “வட்டமாய் சுட்ட தோசை”, “திகில் பங்களா” ஆகிய நூல்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

  • "பேரன்பின் தேவதூதர்கள்"

    (நம் தோழி நம் தோழன் தொகுப்பை முன்வைத்து) சிறப்புக் குழந்தைகள் குறித்த தெளிந்த பார்வைக்கான திறப்பைக் கொடுப்பவைகள் "நம் தோழி நம் தோழன்" எனும் தொகுப்பு நூலில் உள்ள பத்துக் கதைகளின் கருப்பொருள்கள். இக்கதைகளின் சாரம்சத்தின் பொதுத்தன்மையை "கள்ளமின்மையின் பேரன்பு" என சொல்லலாம்.  "தன்னுள் ஆழ்ந்த ஒரு ஆசிரியர் இடமிருந்து நற்படைப்பென வருகிற நூலானது, எளிமையும் உண்மையும் நிரம்பிய எண்ணங்களை உள்ளடக்கியிருக்கும்" எனும் வார்த்தைகளை மெய்ப்பிக்கிறது "கீதா ஷ்யாம் சுந்தர்" அவர்களால்  தொகுத்து வழங்கப்பட்டுள்ள இந்நூல். தொகுப்பாசிரியர், பாண்டிச்சேரியில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர். இதற்கு முன்னர் இவருடைய, 'தூரிகை தீட்டிய வண்ணங்கள்', 'புதிய உத்திகள்', 'நட்புடன் நேசிப்போம்', 'Infinite Possibilities' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.   "தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும் போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுட ஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் குழந்தை மொழியைக் கற்றுக் கொள்ளும் போது உணரலாம்" என்பது நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள். மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு; அவர்களுடைய மொழியை, உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது 'மானுட ஞானம்' மற்றும் அன்பால் ஆன சமூகம் மலரும், என்பதை வெளிச்சப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன தொகுப்பிலுள்ள கதைகள்.   `சக குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் நேசிப்பில் சிறப்புக் குழந்தைகளிடம் இருந்து எவ்வாறு பல்வகை தனித்திறன்மிக்க பரிமாணக் கதிர்கள் வெளிப்படுகின்றன என்பதை வெளிச்சப்படுத்துகின்றன தொகுப்பிலுள்ள கதைகள்.   அறியப்பட்ட எல்லைகளைத் தாண்டி வாழ்வியலின் அறியப்படாத சகல திசைகளையும் பேசுகிறார்கள் இந்த நூலிலுள்ள கதாசிரியர்கள். அன்பான எளிய செயல்களின் மூலம் சிறப்புக் குழந்தைகளின் அகச்சோர்வை நீக்க முடியும் எனும் திசைவழியை வாழ்வியல் அனுபவமாக பேசியுள்ளார்கள் கதாசிரியர்கள்.   ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பூக்கள் பூக்கின்றன; அனைத்திலுமான பிரகாசமாய் ஒளிர்கிறது குழந்தைகளின் இதயம். பனி, நிலவு, பூக்கள் ஆகியவைகள் குழந்தைகளின் மொழியில் மலைகள், ஆறுகள், புற்கள், மரங்களின் சித்திரங்களாக காட்சி பெறுகின்றன. இத்தகைய உளவியல் வாய்க்கப் பெற்றவர்களே சிறப்புக் குழந்தைகளும் எனும் தரிசன உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் கதைப் பரப்பினைக் கொண்ட நூல் இது. தர்க்க சிந்தனை, அறிவகங்காரம், நீதி போதனை ஆகிய முட்கள் இல்லாத கருத்தியல் கொண்டவைகள் இந்த நூலிலுள்ள கதைகள்.   "இந்த நூலிலுள்ள ஒன்பது கதைகளும் ஒன்பது வகையான தெய்வக் குழந்தைகளின் மாறுபட்ட நிலையை எளிமையாக விளக்குகிறது. அந்தக் குழந்தைகளின் இயல்பைக் கண்டு அஞ்சுவதும் வெறுப்பதும் வேண்டாம்; அவர்களிடம் அன்பு பாராட்டி அவர்களின் திறமையை வளர்க்க வேண்டும்; போற்ற வேண்டும் என்பதைக் கதையாகக் குழந்தைகளுக்கு வழங்கி இருப்பது சிறப்பு. இந்நூலில் சிறந்த எழுத்தாளர்கள் சிறப்புமிகு கதைகளை படைத்துள்ளார்கள்" என தனது வாழ்த்துரை/முன்னுரையில் குறிப்பிடுகிறார் சாகித்திய பாலபுரஸ்கார் விருதாளர் 'தேவி நாச்சியப்பன்' அவர்கள். (தொகுப்பாசிரியரின் கதையை எண்ணிக்கையில் சேர்க்கவில்லை முன்னுரையாளர்).   இத்தொகுப்பிலுள்ள கதைகளை பெரியவர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் படித்து கதைகளின் பொருண்மைகளை குழந்தைகளிடம் கடத்த வேண்டும் என்பது என்னுடைய பெரும் ஆசை.   'கவின்மொழியின் வகுப்பறை' எனும் கார்த்திகா கவின் குமார் அவர்களின் கதை தொகுப்பின் முதல் கதையாக இடம்பெற்றுள்ளது. 'வாயில் எச்சில் ஒழுகும் குறைபாடுள்ள கவின்மொழி இக்கதையின் மையப்புள்ளி. அழகாக பாடும் திறமை மற்றும் கதை சொல்லும் திறமை ஆகியன இருந்தும் தன்னுடைய குறைபாட்டால் மற்ற குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறாள் கவின்மொழி. அவளுடைய தனிமை இருள் உலகத்தை, தன்னுடைய அன்பால் வண்ணமயமான உலகமாக மாற்றுகிறாள் அவளது தோழி தீபிகா. 'அன்பு என்னவெல்லாம் மாயம் செய்யும்' என்பதை அழகாகச் சொல்கிறது இக்கதை.   இதே போன்று அன்பு செய்யும் மாயத்தை வெளிச்சப்படுத்தும் மற்றொரு கதை 'அன்புச்செல்வி சுப்புராஜு' அவர்களின் 'கடவுளின் குழந்தைகள்'.   இத்தொகுப்பிலுள்ள கதைகளில் வித்தியாசமாகவும், கவன ஈர்ப்பையும் பெறும் விதத்தில் அமைந்திருப்பதாக எனக்குப்படுவது ஆறாவது கதையாக இடம் பெற்றிருக்கும் 'நீரோடை மகேஸ்' அவர்களின் 'அதர்வனாவும் ஏலியன் உளவாளிகளும்' கதை தான். குழந்தைகளுக்கான 'அறிவியல் புனைவுக் கதை' இது. இக்கதையின் நாயகி அதர்வனா எனும் அம்மு 'டிஸ்லெக்சியா' எனும் குறைபாடுள்ள குழந்தை. டிஸ்லெக்சியா எனும் கற்றல் குறைபாட்டிற்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பில்லை என்பதைக் காட்சிக் கட்டமைப்புகளால் நமக்கு விவரிக்கிறார் கதாசிரியர். 'செஸ்' விளையாட்டில் அபார திறன் பெற்ற அதர்வனா 'கிறிஸ்டல் கேலக்சி' எனும் புது வகையான ' செஸ்' விளையாட்டை கண்டுபிடிக்கிறாள். தன்னுடைய தோழி இனியாவுக்கு மட்டுமல்லாமல் பிற கிரகவாசிகளான 'ஏலியன்'களுக்கும் புது வகையான ' செஸ்' விளையாட்டை கற்றுக் கொடுக்கிறாள்.   சிறப்புக் குழந்தைகளின் தனித்துவமான சிந்தனைத் திறன். புத்திகூர்மை ஆகிய பரிமாணங்களை செறிவான மொழி, காட்சிக்கட்டமைப்பு ஆகியவைகளால் சிறப்புற நெய்துள்ளார் கதாசிரியர்.          டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். 1992 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையால் ஊக்குவிக்கப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்பு தினம் இது. உலகம் முழுவதும் பல்வேறு அளவிலான வெற்றிகளுடன் அனுசரிக்கப்படுகிறது இத்தினம். இதன் முக்கிய நோக்கம், மாற்றுத்திறனாளிகளை சமூகம் ஏற்றுக்கொள்ளுதல், அவர்களின் திறன்களை அங்கீகரித்தல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் அவர்களை ஈடுபடுத்துதல் ஆகும்; மற்றும் மாற்றுத்திறனாளிகளைத் தாழ்வாகப் பார்க்காமல், அவர்களுக்கு சமமான மரியாதையையும் வாய்ப்புகளையும் வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் ஆகும்   ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது இத்தினம். 1981-ஆம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டின் கருப்பொருள் "முழு பங்கேற்பு மற்றும் சமத்துவம்" என்பதாகும். இன்னும் சில மாதங்களே இருக்கின்றன இந்த ஆண்டின் இத்தினம் வருவதற்கு.   இத்தருணத்தில் "கீதா ஷ்யாம் சுந்தர்" அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள  "நம் தோழி நம் தோழன்" எனும் நூல் வெளிவந்துள்ளது. சிறப்புக் குழந்தைகளின் சிறப்புகளை வெளிச்சப்படுத்தும் இந்நூலை பெரியவர்களாகிய நாமும் வாசித்து, குழந்தைகளிடமும் சேர்த்து  சிறப்புக் குழந்தைகளின் உலகை வண்ணமயமாக்க உறுதிகொள்வோம். நூல் : "நம் தோழி நம் தோழன்" தொகுப்பாசிரியர் : "கீதா ஷ்யாம் சுந்தர்" வகைமை : சிறுகதைகள் பக்கங்கள் : 100 / விலை:140/- நூல் தேவைக்கு : 96593 96636 துரை.அறிவழகன்  1967-ல் பிறந்த தமிழ் மொழி எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான இவர் தற்போது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் காரைக்குடியில் வசிக்கின்றார்.  சிறார், பெரியவர்கள் ஆகியோருக்கான பத்துக்கும் மேற்பட்ட இவரது நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.   2023-ல் வெளிவந்த   கி.ராஜநாராயணனின் ஒன்பது தொகுதிகள் நூலாக்கத்தில் இவர் பதிப்பாசிரியராக செயல்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் இவரது சிறுவர் கதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. தமிழக அரசின் 2023-24-ஆண்டிற்கான, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக கலை இலக்கிய படைப்புகளை உருவாக்கிடும் எழுத்தாளருக்கான ரூ.1,00,000/- பரிசுத்தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும், இவரது "சுதந்திரவேங்கை ஒண்டிவீரன் பகடை"  எனும் நாவல்  பெற்றுள்ளது.

  • சாராவின் வண்ணத்துப்பூச்சி

    ஆங்கிலத்தில் – டிஒய். சாப்மேன் தமிழில் : சுகுமாரன்  என்னுடைய காலைப் பொழுது எல்லோரையும் போலத்தான் ஆரம்பித்தது. நான் காலையில் சாப்பிடுவதற்கு முன் கதவருகே ஓடிச் சென்று என் செல்லப் பிராணிகளுக்கு உணவளித்தேன்.  பூச்சிகள் சாப்பிட இலைகளைப் போட்டேன். எறும்புகளுக்கு என் பற்பசையைக் கொடுத்தேன். அவை அதை விரும்புகின்றன. இதை என் அப்பாவிடம் சொல்ல வேண்டாம். இப்படி ஒவ்வொன்றிற்கும் உணவளித்த பிறகு பள்ளிக்குப் புறப்பட தயாரானேன். அப்பா என் அறைக்கு வந்தார். இன்று நான் பள்ளிக்குப் போக வேண்டாம் என்றும் ஒரு போராட்டத்திற்குப் போகிறோம் என்றும் கூறினார். 'கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸ் கொன்று விட்டது' என்று அப்பா என்னிடம் கூறினார். 'நமக்கு சேவை செய்ய வேண்டிய, பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ் நம்மைத் தாக்குகிறது. நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம் உரிமைக்களுக்காக நிற்க வேண்டும்' என்றும் அப்பா கூறினார். நானும் அப்பாவும் போராட்டம் நடக்கும் இடத்திற்குப் போனோம். அங்கு நாங்கள் பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்தோம். அப்பா என் கையைப் பிடித்திருந்தார். நாங்கள் கூட்டத்திற்குள் சென்றோம். கூட்டம் சத்தம் போட்டது. பயம் தந்தது. நான் அப்பாவுடன் பத்திரமாக இருந்தேன். அப்பா என் கையை இறுக்கமாகப் பிடித்து இருந்தார். 'நீதி இல்லை. அமைதி இல்லை' என்று முழக்கம் கேட்டது. நானும் கூட்டத்தில் முழக்கமிட்டேன். ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி என்னைக் கடந்துப் பறந்தது. நான் வண்ணத்துப்பூச்சிக்குப் பின்னால் போனேன். ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன்பாக கூட்டம் இருந்தது. கூட்டத்திலிருந்த ஒரு போலீஸ்-யின் முகம் அருகே வண்ணத்துப் பூச்சி பறந்தது. போலீஸ்காரன் பின்னால் நகர்ந்தான். வண்ணத்துப்பூச்சியை நோக்கி கையை வீசினான். வண்ணத்துப்பூச்சி கீழே விழுந்தது. அது எழுந்துப் பறக்கவில்லை. நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். உயிர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் போராட வந்தவள் நான். வண்ணத்துப்பூச்சியை நோக்கி நான் ஓடினேன். போலீஸ்காரன் சத்தமிட்டான். 'பின்னால் போ' என்று கத்தினான். நான் ஏதோ தவறான ஒன்றை செய்வதாக அவன் நினைத்தான். நான் பயந்து கூட்டத்திற்குள் ஓடினேன். என் கைக்குள் வண்ணத்துப் பூச்சி இருந்தது. உயரமான மரங்களைப் போல் மக்கள் நின்றிருந்தனர். ஒரு போலீஸ்காரனின் வேலை எங்களைப் பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? நான் ஓடாவிட்டால் பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டேன். அப்பாவை பிரிந்து விட்டதை உணர்ந்தேன். எனக்குப் பயமாக இருந்தது. நான் ரொம்ப நேரம் அப்பா, அப்பா... என்று கத்தினேன். அப்பாவை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. திடீரென்று உயரமான பெண் என்னருகில் குனிந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். அவள் முகத்தில் சோகம் இருந்தது. நான் நடந்ததைச் சொன்னேன். அவள் என்னை தோள்களின் மீது உட்கார வைத்தாள். இப்போது நான் கூட்டத்தினரைப் பார்க்கும்படி உயரத்தில் இருந்தேன். நான் பாதுகாப்பாக உட்கார்ந்துக் கொண்டு தேடினேன். சத்தம் போட்டேன். அப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை. என் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டது. நான் அப்பாவை பார்த்து விட்டேன். நான் தோளிலிருந்து இறங்கி ஓடினேன். அப்பா என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருந்தோம். நான் அப்பாவின் கையை இறுக பிடித்து இருந்தேன். 'நீதி இல்லை... அமைதி இல்லை...' என்கிற கூட்டத்தின் முழக்கத்தோடு என் குரலும் கலந்தது. சூரியன் மறைவதற்கு முன்பாக நாங்கள் வீட்டுக்கு வந்தோம். இரவு உணவு சாப்பிட்டதும் நான் நேராக படுக்கைக்குச் சென்றேன். எனக்கு தூக்கம் வரவில்லை. 'இன்று மோசமான நாள்' என்று நினைத்தேன். ஆனால் அப்பா சொன்னார். 'எல்லாம் சரியாகும். நான் உன்னைப் பாதுகாப்பேன். நீ உன்னுடைய வண்ணத்துப்பூச்சியைப் பார்த்துக் கொண்டது போல்.' என்றார். அடுத்த நாள் காலை. நான் சாப்பிடுவதற்கு முன் கதவருகே ஓடிச் சென்று செல்லப் பிராணிகளுக்கு உணவளித்தேன். சில நாட்களுக்குப் பிறகு என் வண்ணத்துப்பூச்சி குணமாகியிருந்தது. நான் அதை வெளியே பறக்க விட்டேன். யாரும் துன்புறுத்தாத இடத்திற்கு பறந்து செல்லும் வரை கவனித்தேன். பின் குறிப்பு: இச்சிறுகதையை எழுதிய டி.ஒய்.சாப்மேன் (TY Chapman) ஒரு கவிஞர், நாடகாசிரியர். ஐரோப்பா வம்சாலவளியைச் சேர்ந்த நைஜீரியர். அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கைப் பற்றி பேசுவதில் ஆர்வமுடையவர். அமெரிக்காவில் வாழ்கிறார். போலீஸ்-யின் தாக்குதலில் கருப்பினத்தவர் ஒருவர் உயிரிழக்கிறார். அதைக் கண்டித்து கருப்பின சமூகத்தினர் நீதி வேண்டுமென்று போராடுகின்றனர். அப்போராட்டத்தில் சிறுமி சாராவும் அவளது தந்தையும் கலந்துக் கொள்கின்றனர். பிறரின் உயிரைக் காப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டுமென்பதை சாரா கற்றுக் கொள்கிறாள். அவள் ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுவது போல் என்று உருவகப்படுத்துவதின் மூலம் கதை கவிதையாகி இருக்கிறது. சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்

  • தத்துவம் அறிவோம் - 7

    நம் சிந்தனை நம் கைகளில்.... மனிதர்களுடைய சிந்தனை அவர்களுடைய விரல்களில்தான் தொடங்கியது. எப்படி? டார்வின் என்கிற அறிவியலறிஞர் பரிணாமவியல் கோட்பாட்டை முன்மொழிந்தார். அப்படி என்றால்? சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் குரங்குக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னவர் டார்வின். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம் என்றால், இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் எப்படி தோன்றின? எப்படி எல்லாம் உருமாறின? எவை எல்லாம் அழிந்தன? ஏன் அழிந்தன? எவை எல்லாம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன? இயற்கையின் விதிகள் என்ன என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சொன்னார் டார்வின்.. அப்படி என்றால் மனித இனத்தை, இந்த பூமியில் உள்ள விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள், மீன்கள் இன்னபிற உயிர்களை எல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத கடவுள் படைத்தார் என்று சொல்லப்படுகிறதே அது சரியா என்று நீங்கள் சந்தேகப்பட்டால், நீங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். அறிவியல் என்பது ஒன்றை ஆராய்ந்து நிரூபிக்கும் உண்மை. நம்பிக்கை என்பது எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்புவது அல்லது ஏற்றுக்கொள்வது என்று சொல்லலாம். டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டின்படி ஒவ்வோர் உயிரினமும் இயற்கைச் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துகொண்டது. அப்படி தகவமைத்துக்கொண்டதால் உயிர் வாழ்ந்தது. தகவமைத்துக்கொள்ள முடியாத உயிரினங்கள் அழிந்துவிட்டன. தகவமைத்துக்கொள்ளுதல் என்றால் என்ன? இயற்கையின் தட்பவெப்ப மாற்றம், கிடைக்கும் உணவுப்பொருட்கள், உணவுப்பொருட்களுக்கு ஏற்ற தனித்துவமான உடலமைப்பு, எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், இனப்பெருக்கத் திறன், இவற்றில் வெற்றி பெறுதலைத் தான் தகவமைத்துக்கொள்ளுதல் என்கிறோம். வெற்றிகரமாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்ட உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு பூமியின் முதல் உயிரினமான சயனோபாக்டீரியா இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு கோடி ஆண்டுகளுக்கு மேல் கரப்பான் பூச்சி வாழ்ந்துவருகிறது. ஒன்றரைக் கோடி ஆண்டுகளாய் இலைவெட்டி எறும்பு வாழ்ந்துவருகிறது. இப்படித் தாவரங்கள், பூச்சிகள், பிரைமேட் என்று அழைக்கப்படுகிற குரங்கின உயிரினங்கள் எல்லாம் பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றன. ஆனால் எந்த உயிரினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு, மனித இனத்துக்கு மட்டுமே உண்டு. அதுதான் சிந்தனை. மூளையின் செயல்பாடுகளில் ஒன்றான சிந்தனை, நம்முடைய கட்டைவிரலிலிருந்து பிறந்தது. என்னது கட்டை விரலா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆமாம். வாலில்லாக்குரங்குகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றின் கட்டைவிரல் மற்ற நான்கு விரல்களுடன் ஒட்டியே இருக்கும். வாலில்லாக்குரங்குகள் கட்டைவிரலை அதிகம் பயன்படுத்துவதும் இல்லை. ஆனால் எப்போது ஒட்டியிருந்த கட்டைவிரலை ஹோமோ சேப்பியன்ஸ் முதன்முதலாக விரித்தார்களோ, அப்போதே சிந்தனை தோன்றத் தொடங்கிவிட்டது. அது எப்படி? அதுவரை மரங்களில் ஏறித் தாவித் திரிந்த குரங்கின உயிரினங்கள், வாலில்லாக்குரங்குகளாக மாறி தரைக்கு வந்தபோது கைகளுக்கும் வாலுக்கும் பெரிய வேலையில்லை. அவை விடுதலை அடைந்தன. இயற்கையில் கிடைத்த பழங்கள், காய்கறிகள், கொட்டைகளை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹோமோ சேப்பியன்ஸ் கூட்டத்துக்கு உணவுப்பஞ்சம் வந்தபோது அதைச் சமாளிக்க வேறு ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தோன்றியது. அப்போது இயற்கையில் கீழே கிடக்கும் கற்களை எடுத்து எறிந்து சிற்றுயிர்களை கொன்று சாப்பிட்டார்கள். பிறகு கற்களைத் தீட்டிக் கூர்மையாக்கி எறிந்தார்கள். வேட்டை இன்னும் சிறப்பாக இருந்தது. இப்படி கல்லின் மீது தங்களுடைய உழைப்பைச் செலுத்தியபோது, இயல்பாக கட்டைவிரல் தனியாகப் பிரிந்தது. கட்டைவிரல் பிரிந்தவுடன் உழைப்பு இன்னும் எளிதானது, அதாவது கற்களைத் தீட்டி ஆயுதங்களை உருவாக்குவது எளிதானது. உணவுப் பஞ்சம் இல்லை. தாவர உணவைவிட இறைச்சி உணவில் உடலுக்குத் தேவையான சத்துகள் அதிகமாகவும் நேரிடையாகவும் கிடைத்தன. அதன் விளைவாக மூளையில் பல புதிய வேதி மாற்றங்கள் நடைபெற்றன. அந்த மாற்றங்களின் விளைவாக மனித இனம் சிந்திக்கத் தொடங்கியது. அதாவது மற்ற உயிரினங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தன. இயற்கை மற்ற உயிரினங்களைக் கட்டுப்படுத்தியது. இயற்கைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டன. அந்த உயிரினங்களும் வாழ்வதற்கான அடிப்படை செயல்பாடுகளை மட்டும் இயல்பூக்கமாக (instinct) கொண்டிருந்தன. ஆனால், மனித இனம் மட்டும்தான் இயற்கையை, ஆராய்ந்தது. அதன் காரண காரியங்களை ஆராய்ந்தது. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தது. இயற்கையின் விதிகளை அறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தியது. தான் வாழ்வதற்காக இயற்கையைத் தகவமைத்துக்கொண்டது. சிறிதுசிறிதாக தன் வாழ்வைத் தானே தீர்மானித்தது. அதற்குக் காரணம் மனித இனத்தின் சிந்தனை அல்லது பகுத்தறிவு. அது மனிதர்களையும் இந்த உலகத்தையும் சூழலையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க வைத்தது. இந்த உலகம் குறித்து ஒரு நோக்கு மனிதர்களுக்கு உருவானது. அவர்களுடைய வாழ்க்கை குறித்து யோசிக்க வைத்தது. பிறப்பு, இறப்பு குறித்து ஆராய வைத்தது. தத்துவம் பிறந்தது. இப்போது சொல்லுங்கள்! நம்முடைய சிந்தனை உருவானதற்கு எது காரணம்? கட்டைவிரல். அது மட்டுமா? மனித இனத்தின் உழைப்பும் சிந்தனைக்குக் காரணம். சரிதானே!. உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • வளரிளம் புதிர்ப்பருவம் - 6

    ஆதம், 80 சதவீத பெண்கள் விரும்புவது 20 சதவீத ஆண்களைத் தான் என்று  சொல்கிறான். "பெண்களைக் கவர்வது சாதாரணம் இல்லை. வித்தைகள் தெரிஞ்சிருக்கணும். அவனை அவ (incel)  வேஸ்ட்டுன்னு சொல்றா." என்று ஆதம் சொல்கிறான்.  "அவனுக்கு பதிமூன்று வயது. இந்த வயசுல பொண்ணுங்க விஷயத்தில் வேஸ்ட்டுன்னு சொன்னா, என்ன அர்த்தம்?" பாஸ்கம் அதிர்ச்சியாகக் கேட்கிறார். ஆமாம்ப்பா. அவங்க வேஸ்ட்டுன்னு சொன்னா அதான் அர்த்தம். அவன் வாழ்க்கை பூராவும் தனியாகவே இருக்கப்போறான் என்று அர்த்தம். அதுக்குப் பலர் ஹார்ட் போட்டிருக்காங்க. அவங்க கேட்டி சொல்ற எல்லாத்தையும் ஒத்துக்கறாங்க என்று அர்த்தம்.  அப்போ இதெல்லாம் கேலி செய்றதா? வெறும் கேலி கிண்டலா? கொஞ்சம்  அதிகமா இருக்கு ஆதம். "அப்பா, நான் சொல்றத நீங்க நம்பல இல்ல, ஓவரா இருக்குல்ல." என்று ஆதம் அறைவிட்டு வெளியேற முயல்கிறான். இல்ல ஆதம். இது எனக்குப் பயனுள்ளது. எனக்குத் தெரியாததால் கேட்டேன். வெறும் ரெண்டு சிம்பலை வச்சுக்கிட்டு இது எல்லாத்தையும் நம்பறது கஷ்டமா இருக்கு. மெசேஜ் அனுப்பும் போது ஹார்ட் போடுவீங்கல்ல. அது என்ன கலர்? சிவப்பு. ❤️ சிவப்பு இதயம்- காதல், 🤎 ஊதா இதயம்- காம உணர்வுத்தூண்டல். 💛 மஞ்சள் இதயம்- எனக்குப் பிடிச்சிருக்கு, உனக்குப் பிடிச்சிருக்கா? ❤️ இளஞ்சிவப்பு இதயம்- எனக்குப் பிடிச்சிருக்கு ஆனா செக்ஸ் வேண்டாம். 🧡ஆரஞ்ச் இதயம்- உனக்கு ஒன்றும் ஆகாது.  எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு அப்பா. ஜேமிக்கு அவ அனுப்பிய செய்திகளில் வேற வேற emoji. எல்லாமே வேற வேற அர்த்தம். அப்போ கேட்டி தான் ஜேமியை கேலி பண்ணினாளா?  "அப்பா, அவங்க என்னைவிடச் சின்னவங்க. எனக்கு அவங்களத் தெரியாது. இதெல்லாம் இன்ஸ்டாவில் அவங்க மெசேஜ் எல்லாம் பார்த்ததை வச்சு சொல்றேன்." என்று ஆதம் சொல்கிறான்.   பாஸ்கமிற்கு இது புதிய திறப்பு. இதய வடிவங்களுக்குப் பொதுவான அர்த்தம் வேறு. அந்தந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகள்  நட்பு வட்டங்களில் உள்ள அர்த்தங்கள் வேறு.   Insta பதிவுகளில் கேட்டியின் கருத்துகள் ஜேமியைக் கேலி செய்வதாக இருந்ததே கொலைக்கான அடிப்படைக் காரணம் என்று பாஸ்கம் புரிந்து கொள்கிறார். பாஸ்கம் தன்னுடன் வந்திருந்த துணை ஆய்வாளரரான பிராங்கிடம், நடந்தது Incel என்று சொல்கிறார். பாஸ்கம் ரயானைப் பார்க்க வேண்டும் என்று அவனது வகுப்பிற்குச் செல்கிறார். ரயான் ஜன்னல் வழியே வெளியே குதித்து ஓடுகிறான். பாஸ்கம் அவனைத் துரத்திச் செல்கிறார்.பள்ளிக்கு வெளியே சிறிது தூரத்தில் அவனைப் பிடிக்கிறார்.  கேட்டி தான் ஜேமியைக் கேலி செய்தாளா? என்று பாஸ்கம், ரயானிடம் கேட்கிறார்.  எனக்குத் தெரியாது என்று ரயான் சொல்கிறான்.  Incel என்று கேட்டி, ஜேமியைச் சொன்னதன் அர்த்தம் என்ன என்று கேட்கிறார். ரயான் தெரியாது என்று சொல்கிறான். பாஸ்கம், ஒரு பெண் குழந்தையின் உயிர் போயிருக்கு. கொலை செய்த கத்தி எங்கே என்று கேட்கிறார்.  கத்தி என்னுடையது. இப்போ எங்கே என்று தெரியாது என்று ரயான் கூறுகிறான். அதனால் அவனும் கைது செய்யப்படுகிறான்.  கொலைக்கான காரணம், சமூக வளைத்தளங்களில் செய்யப்படும் கேலி.  நம் சமூகத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண், தான் பெண்ணை விட மேலானவன் என்ற சூழலில் வளர்கிறான். ஆணாதிக்கச் சிந்தனையும் செயல்பாடுகளும் இயல்பாக அவனிடம் வெளிப்படுகின்றன.  இணையம் பரவலான போது சமூக ஊடகங்கள் பலருக்கும் பிடித்தவையாக மாறின. எண்ணங்களைப் சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடமாக அவை இயங்கின. வீடு, பள்ளி போலக் கட்டுப்பாடுகள் இல்லாத சமூக ஊடகங்கள் வளரிளம் பருவத்தினரையும் பெரிதும் கவர்ந்தன.  அதிகமான விருப்பக்குறிகளைப் பெறுவதற்காகப் பலவிதமான செய்திகளைப் பதிவிடுவதில் ஆர்வம் அதிகரித்தது . மாற்றுப் பாலினத்தவரைக் கவர்தலும் அது குறித்த கதைகளும் ஆர்வத்தை அதிகப்படுத்தின. இவற்றையெல்லாம் மையமாக வைத்துப் பல்வேறு கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றே '80 சதவீதப் பெண்கள் 20 சதவீத ஆண்களையே விரும்புகிறார்கள்' என்பது.  Incel என்பதும் ஆண்களை ‘ஆண்மையற்றவன்’ என்ற  குற்ற உணர்வுக்குள் தள்ளிக் கேலி செய்ய உருவாக்கப்பட்ட வார்த்தை. உன்னை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். வாழ்நாள் முழுவதும் நீ தனியாக அல்லது உன் போன்ற ஆணுடன்தான் வாழ வேண்டும் என்று கேலி செய்யும் வார்த்தை. அப்படி இணையத்தில் பெண்களாலும் பிற ஆண்களாலும் கேலி செய்யப்படுபவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தன்னைக் கேலி செய்பவர்கள் மீது ஏற்படும் கோபம் வெறியாக மாறுகிறது. இப்படியான வெறியில் உலகெங்கும் ஏராளமான வன்முறைகள் நிகழ்கின்றன. தொடர்ந்து பேசுவோம்.....

bottom of page