இயலில் தேடலாம்!
178 results found with an empty search
- பெற்றோர்களும் சிறார் இலக்கிய அமைப்புகளில் செயல்படவேண்டும்!
சந்திப்பு : விழியன் விஷ்ணுபுரம் சரவணன் - தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கவிதை, சிறார் இலக்கியம், கட்டுரை உள்ளிட்ட வடிவங்களில் 18 நூல்களை எழுதியுள்ளார். 2025- ஆம் ஆண்டு ஒற்றைச்சிறகு ஓவியா நூலுக்காக ஒன்றிய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருதும் பெற்றுள்ளார். ஆனந்தவிகடன், த மு எ க ச, வாசகசாலை, எஸ்.ஆர்.வி.கல்விக்குழுமம் ஆகியவை வழங்கும் விருதுகளைப் பெற்றவர். கல்வி நிலையங்களுக்குள் எப்படி சிறார் இலக்கியத்தையும் வாசிப்பையும் அதிகப்படுத்த இயலும். தமிழ்நாட்டின் அரசின் முன்னெடுப்புகள் போதுமானதாக உள்ளதா? வேறு யாருடைய பங்களிப்பெல்லாம் தேவைப்படுகின்றது? இலக்கியத்தின் வாசத்தை கல்வி நிலையங்களில் தொடங்கி வைத்தால், மாணவர்கள் எளிதாக வாசிப்புக்குள் நுழைந்துவிடுவார்கள். தற்போதைய தமிழ்நாடு அரசு தேன்சிட்டு, புது ஊஞ்சல் எனும் இரண்டு மாதமிரு முறை இதழ்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் வகுப்பு ஓர் இதழ் என்ற அளவில் இவை செல்கின்றன. கதைகளையும் பாடல்களையும் வரலாற்றுச் செய்திகளையும் அறிவியல் செய்திகளையும் தேடிச் செல்லாமல் வகுப்பறைக்குள்ளேயே வரச் செய்யும் பணியை அரசு செய்கிறது. அநேகமாக மாணவர்களுக்கான இதழ்களை அரசே நடத்துவது தமிழ்நாட்டில்தான் என்று நினைக்கிறேன். கூடவே ஆசிரியர் வாசிப்புக்கும் கனவு ஆசிரியர் இதழும் மாதமொருமுறை வெளியாகிறது. இவை தவிர, இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் வழியாக வயது வாரியான நூல்களை அற்புதமான ஓவியங்களோடு உருவாக்குகிறது அரசு. இவையும் பள்ளி நூலகங்களுக்குச் செல்கின்றன. மேலும், வாசிப்பு இயக்கம் வழியாகவும் கதைகள் மாணவர்களுக்குச் செல்கின்றன. இந்தப் பலன் முழுமையாக குழந்தைகளுக்குச் சேர வேண்டும் எனில், பெற்றோர், கலை இலக்கிய அமைப்புகளில் இவற்றில் தன்னை ஈடுபத்திக்கொள்ள வேண்டும். பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பாராட்டுவிழாக்களில் பங்குகொண்டீர்கள், அவற்றில் நெகிழ்வான நிறைவான அனுபவங்களைப் பகிருங்கள். நான் பிறந்த ஊரான விஷ்ணுபுரத்தில் நடந்த பாராட்டு விழா முற்றிலும் மாறுபட்டது. எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர் ரகுபதி சார் வந்து வாழ்த்தியதை மறக்க முடியாது. நாகப்பட்டினத்தில் பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வனின் முக்கூடல் நிகழ்வில் மூன்று மணிநேரம் என் படைப்புகளைப் பேசினர். பேச்சாளர்களில் ஆறு வயது முதல் அறுபத்தி ஐந்து வயதுள்ளவர்கள் வரை அடக்கம். வித்தியாசமான அனுபவம். இப்படி அனைத்து பற்றியும் சொல்ல உண்டு. மதுரையில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமுஎகசவும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில், ஒற்றைச் சிறகு ஓவியா நாவலில் வரும் ஓவியாவைப் போலவே ஐந்தாறு சிறார் வேடமிட்டு என்னை வரவேற்றனர். நான் எழுதிய ஒரு கதாபாத்திரம் நிஜமாகவே கண்முன் உயிரோடு வந்ததைப் போல ஒருநொடி நம்பினேன். அந்தக் கணம் மறக்க முடியாதது. சிறார் இலக்கியம் குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் எழுத்தாளர்களிடையே நிலவுகின்றதா? வாசகர்கள் குறிப்பிடும் விமர்சனங்களையும் எழுத்தாளர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்.கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட வடிவங்களில் அதன் நுட்பங்கள் குறித்தும் போக்குகள் குறித்து தீவிர விவாதங்கள் நிகழும். பல்வேறு விவாதங்களில் நானும் கலந்துகொண்டிருக்கிறேன். அவ்விவாதங்களே என்னை இன்னும் செழுமையாக எழுத வைத்தவை. ஆனால், கெடுவாய்ப்பாக, சிறார் இலக்கியத்தில் விவாதங்களே நடைபெறுவது இல்லை. இந்தப் போக்கு, சிறார் இலக்கியத்தில் தட்டையான படைப்புகள் அதிகரிக்கவே செய்யும். சிறார் புத்தகங்களில் இருக்கும் போதாமைகளாக நாம் நிறைய விவாதித்துள்ளோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பேசியவைகளில் இருந்து இப்போது வெகுதூரம் வந்துள்ளோம். இன்றும் என்னென்ன போதாமைகள் இருப்பதாக நினைக்கின்றீர்கள்? அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா? சிறார் இலக்கியப் போதாமை என்பது அவற்றின் பாடுபொருளைப் பற்றியதாக அதிகம் உரையாடப் பட்டிருக்கிறது. அந்தப் போதாமைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி விட்டன. குறிப்பாக, டெம்ப்ளேட்டான கதை பாடுபொருள்களில் இருந்து விலகி, சமகாலத்தை, வரலாற்றை, சிக்கல்களை எழுதுவது என்பதாக முன்னேறி உள்ளோம். இன்னும் பல அடிகள் செல்ல வேண்டும் எனினும், இது நல்ல முன்னேற்றமே. அடுத்த போதாமை என்பது, சிறார் படைப்புகளில் வடிவம் குறித்தும் அதன் இலக்கிய அம்சம் குறித்தும் பேச வேண்டும். இரண்டும் மிகத் தட்டையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது (விதிவிலக்குகள் உண்டு) அவை குறித்து உரையாடல் அதிகரிக்கும் போது அந்தப் போதாமைகளில் இருந்து வெளியேற முடியும். சிறார்களுக்கு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிரிகரித்துள்ளது மகிழ்ச்சியானது. நாம் நீண்ட வருடங்களாக இதுகுறித்து பேசிக்கொண்டு வருகின்றோம். சிறார்களுக்காக எழுத வருபவர்களிடம் கூடுதலாக எங்கெல்லாம் உழைப்பு போடவேண்டியுள்ளது? எங்கெல்லாம் இன்னும் கவனம் செலுத்தவேண்டும். எழுதுகின்றேன் என வருபவர்களுக்கு கைக்கொடுக்கும் சூழல் இப்போது நிலவுகின்றதா? சிறார் இலக்கியத்தின் மீது மெய்யான அக்கறை கொண்டு இப்பக்கம் வருகிறார்கள் மகிழ்ச்சி. அவர்கள் தொடர் வாசிப்பில் தம்மை ஈடுபத்திக்கொள்ள வேண்டும். கதைகள் மட்டுமல்லாது, வரலாறு, அரசியல், தத்துவம் சார்ந்த வாசிப்பிலும் ஈடுபத்திக்கொள்ள வேண்டும். சகத் துறைகளான கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு நூல்களையும் வாசிக்க வேண்டும். சிறார் இலக்கியத்தின் செவ்வியல் நூல்களைத் தேடி வாசித்தல் நல்லது. இப்பழக்கம் இரண்டு பலன்களைத் தரும். ஒன்று, நாம் எழுதும் சிறார் படைப்புகளில் இலக்கிய அம்சம் குன்றாமல் பார்த்துக்கொள்ளும். அடுத்து, தேய்ந்து போன பாடுபொருள்கள், வடிவங்களில் இருந்து விடுபட்டு புதுமையானவற்றில் ஈடுபட வைக்கும். இன்னும் சிலர் சிறார் இலக்கிய வகைமைக்கு அளிக்கப்படும் விருதுகளின் வெளிச்சத்திற்காக வருகிறார்கள். அவர்களைப் பற்றி நாம் அதிகம் கவலைக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் தேவை முடிந்ததும் அவர்களே விலகி விடுவார்கள். 1950ல் குழந்தைகள் எழுத்தாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இன்று 2025 நடைபெறுகின்றது. இந்த 75 ஆண்டுகளை மூன்று 25 ஆண்டுகளாக பிரித்துக்கொள்ளலாம். இந்த மூன்று 25 ஆண்டுகளில் எழுத்தாளர்கள் - குழந்தைகள் மனநிலை எவ்வாறு இருந்துள்ளது? ஒட்டுமொத்தமாக இந்த மூன்று காலகட்ட எழுத்துக்களை வாசித்தவர் என்ற முறையில் உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள். ஒரு கேள்விக்கான பதிலில் முழுமையாக இதைச் சொல்லிவிட முடியாது. பெரிய ஆய்வுக்கு உட்படுத்தி எழுத வேண்டிய கேள்வி இது. மேலோட்டமாக சில செய்திகளைப் பகிர்கிறேன். 1950 - 75 ஆண்டுக்காலம் என்பது சுதந்திர இந்தியா அனைத்துத் துறைகளில் பாய்ச்சலோடு முன்னேறிய காலக்கட்டம். கல்வி பரவத் தொடங்கிய காலம் என்பதால் அதற்கு உரிய தன்மையோடு படைப்புகள் வந்தன. அதாவது சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தும், சுதந்திர உணர்வு குறித்துமான கதைகள், பாடல்கள் வெளியாகின. மேலும் இக்காலக்கட்டத்தில் அழ வள்ளிப்பா, ரேவதி, தூரன் உள்ளிட்டவர்கள் மிக செயலூக்கத்துடன் இயங்கிய காலம். படைப்பாளிகளை இணைப்பதும், புதிய வடிவங்களில் முயன்று பார்ப்பதும் என இருந்தது. இதன் இறுதியில் தமிழ்வாணன் போன்றோர் துப்பாக்கிக் கதைகள் எழுதினர். இம்மாதிரியான கதைகள் வேண்டுமா எனும் விவாதம் நிகழ்ந்தது. 1976-2000 என்பது கல்வி குறித்த கவனம் பெற்றோர்களிடம் அதிகரித்த காலக்கட்டம். ஆங்கில வழிக் கல்விகள் மிகுந்த காலமும் இது. மறுபக்கம், பெரியோர் இலக்கியத்தில் இடைநிலை சாதியினரும் நடுநிலை பொருளாதாரத்தைக் கொண்டோரும் அதிகளவில் எழுத வந்த காலம். எனவே, பாடுபொருள்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. ஆனால், கெடுவாய்ப்பாக சிறார் இலக்கியத்தில் இது நிகழவில்லை. தொலைக்காட்சியின் வருகை வாசிப்பில் குறுக்கீட்டை நிகழ்த்தியது. 89-ல் அழ வள்ளியப்பா மறைவுக்குப் பிறகு தேய்பிறை காலமாகி விட்டது. 2001 -2025 நவீனத் தொழில்நுட்பங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் வருகை காலம். சிறார் இலக்கியம் மீண்டும் எழுச்சிக்கான காலமும் கூட. 2000களில் இறுதியில் இரா.நடராசன் எழுதிய ஆயிஷா நூல் வெளியானது. ஆசிரியர்களுக்கான நூல் எனினும் சிறாரைப் பற்றியும் கல்வி முறை பற்றியும் உரையாடலைத் தொடங்கி வைத்தது. வேலு சரவணன் போன்றோர் சிறார் நாடக வெளிக்கு உயிர் தந்தனர். இந்த நல்மாற்றங்கள், சிறார் இலக்கியத்தில் புதிய விளைச்சலைத் தந்தன. 2010க்குப் பிறகு பலரின் வருகையும் பாரதி புத்தகாலயம், வானம், என்.சி.பி.ஹெச் போன்ற பதிப்பகங்களின் முன்னெடுப்புகளும் சிறார் இலக்கியத்தின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன. இந்த வேகத்தை ஒருமுகப்படுத்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் உருவாகியுள்ளது. இவையெல்லாம் நல் அறிகுறிகளே. விழியன் சென்னையில் வசிக்கும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை வெளியிட்டிருக்கிறார். சிறார் இலக்கியத்தில் கதைகள், நாவல், கட்டுரை, கணிதக்கட்டுரைகளையும் எழுதி வருகிறார். கல்வி சார்ந்தும் குழந்தைகளின் வாசிப்பு சார்ந்தும் செயல்பட்டு வருகிறார்.
- சோசியக்கிளி
ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்துப் பொந்துல அம்மா கிளி, தன்னோட ரெண்டு குஞ்சுகளான ரீனு, டீனு வோட ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டிருந்தது. குஞ்சுகளுக்கு இப்போ இறக்கை முளைச்சு, பறக்குற நேரம் வந்தாச்சு. ஒருநாள் அம்மா கிளி சொன்னது, “என் செல்லங்களா, உங்களுக்கு இப்போ இறக்கைகள் வளர்ந்தாச்சு. இனிமே நீங்களே உங்க இரையைத் தேடிக்கோங்க. பச்சை பசேலென்று மரங்கள் நிறைய இருக்கும் தோப்புக்குப் பக்கம் போங்க. மனிதர்கள் இருக்கும் ஊர்ப் பக்கம் போகக்கூடாது, கவனமா இருங்க,” அப்படின்னு எச்சரித்தது. அந்தச் சொற்கள் கேட்டு இரு குஞ்சுகளும் கூட்டிலிருந்து பறந்து வெளியே வந்தது. முதல் தடவை பறக்குறதால ரொம்ப மகிழ்ச்சியா பறந்தது. பழம் சாப்பிட்டு, மரத்திலே ஓய்வெடுத்து, மாலை நேரத்துல திரும்பி கூடுக்கு வந்தது. அப்போ ஒரு நாள் ரீனுவுக்குத் திடீர்னு ஆசை வந்துச்சு — “ஊர்ப் பக்கம் போய் பாத்தா எப்படி இருக்கும்?”ன்னு நினைச்சது ரீனு. அது டீனுவிடம் சொன்னது. டீனு சொன்னது, “அம்மா சொல்லுறதை மீறக் கூடாது.அப்புறம் ஆபத்து நமக்குத்தான் ன்னு சொன்னது." ஆனா ரீனு கேக்கல “அட போ டீனு, எப்ப பாத்தாலும் இந்த மரங்களில்தான் சுற்றிக்கிட்டு இருக்கணுமா? நான் கொஞ்சம் ஊருக்குப் போயிட்டு வரேன். மாலை கூட்டுக்கு வந்து சேர்றேன்,” அப்படின்னு சொல்லிட்டு பறந்து போச்சு. மாலை நேரம் ஆனதும் டீனு மட்டும் கூட்டுக்கு வந்தது.அம்மாவிடம் நடந்ததைச் சொல்லிச்சு. அம்மா கவலையோட ரீனுவுக்காகக் காத்திருந்தது. ரீனு ஊருக்குப் போனதும், குழந்தைகள் அதை பார்த்துட்டு ரசிச்சாங்க. அதைப் பார்த்து ரீனுவுக்கும் பெருமையா இருந்துச்சு. “நம்மைப் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சியா இருக்காங்க! அப்போ அம்மா ஏன் இங்கே வரக்கூடாது சொன்னாங்க?”ன்னு யோசிச்சது. அப்போ கூட்டத்தில ஒரு சுட்டிப் பையன் கல்லெடுத்து வீசினான். அது கிளியின் கால்ல பட்டு — “கீ! கீ!” ன்னு பலமா கத்திட்டே கீழே விழுந்துச்சு. அந்த வழியில வந்த ஒரு சோதிடர் அந்தக் கிளியைக் தூக்கிட்டுப் போய்ட்டார். அவர் அந்தக் கிளியோட இறக்கைகளை வெட்டிவிட்டார். அதுக்கு பழம், கொட்டை கொடுத்து வீட்டில வைத்திருந்தார். இதையே தேடி அலையாமல் வீட்டிலேயே எல்லாமே கிடைச்சது. ஆனா அதால சுதந்திரமா தான் இருக்க முடியல.அம்மாவையும் டீனுவைவும் நினைச்சது. அப்போதான் அம்மா சொன்னதோட அர்த்தம் புரிஞ்சுச்சு. ஒருநாள் அந்த சோதிடர் மரத்தடில உட்கார்ந்து சோதிடம்னு பார்த்துக்கிட்டிருந்தார். அதே மரத்தில டீனு மேல கிளையில அமர்ந்திருந்தது. கூண்டுல அடைச்சு வச்சிருந்த ரீனுவை பாத்ததும் மகிழ்ச்சி அடைந்தது. சோதிட அசந்த நேரம் அது ரீனுவிடம் கேட்டது, ரீனு நீ எப்படி இங்க வந்த?மனிதர்களின் சாதகத்தை நமக்கு கணிக்கத் தெரியாதே உனக்கு எப்படித் தெரிந்தது? என்று கேட்டது. “அதெல்லாம் கணிப்பே இல்ல டீனு நான் ஒவ்வொரு சீட்டா எடுத்து போட்டுகிட்டே இருப்பேன் . அவர் கால் விரலை ஆட்டினா, நான் சீட்டு எடுப்பதை நிறுத்திட்டு அந்த சீட்டைக் கொடுப்பேன்,” அப்படின்னு சொன்னது. டீனு அதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டு, “அடடா! இதுதானா விஷயம்? இதைத்தான் மனிதர்களும் நம்புறாங்களா?” என மனிதர்களை நினைத்து கவலைப்பட்டது. பிறகு ரீனு எங்க இருக்கு என்பதை அம்மாவிடம் சொன்னது அம்மாவும் டீனுவும் சேர்ந்து ரீனுவை காப்பாத்தினாங்க. அப்புறமென்ன! கிளி தன் குஞ்சுகளோட பெரிய ஆலமரப் பொந்துல சந்தோஷமா வாழ்ந்தது. பா. மணிமொழி நங்கை ஆசிரியர், தேசிய சதுரங்க நடுவர், சதுரங்க வீராங்கனை, சதுரங்க பயிற்சியாளர்
- சிறார் வாசிப்பு நூல்கள்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்காக ‘வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றது. எளிய மொழியில் வண்ணப்படங்களுடன் அமைந்த கதைப் புத்தகங்கள் இந்தத் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டு அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை அரசுப்பள்ளி மாணவர்க்கு வாசிக்க இலவசமாகக் கிடைக்கும். கடையில் விலைக்கு வாங்க முடியாது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் இது போன்று எளியமொழியில் அமைந்த நூல்கள் தேவை. இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. கல்வியாளரும் பேராசிரியருமான ச.மாடசாமி அவர்களின் வழிகாட்டுதலில் உருவாகும் இந்நூல்கள், சிறு சிறு வாக்கியங்களுடன் மிக எளீய மொழியில் அமைந்தவை. 16 பக்க அளவில் அமைந்த இச்சிறு நூல்களில் 2 கதைகளும் 4 கருப்பு வெள்ளை படங்களும் உள்ளன. குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் லாப நோக்கின்றி மிகக் குறைந்த விலைக்கு இந்நூல்களை அச்சிட்டு வெளியிடுகின்றது. தமிழைச் சரியாக வாசிக்கத் தெரியாத குழந்தைகளும், தட்டுத் தடுமாறி வாசிக்கும் குழந்தைகளும் வாசிக்க இந்நூல்கள் ஏற்றவை. குழந்தைகளின் பயத்தைப் போக்கி, ‘என்னால் வாசிக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படுத்தும் நூல்கள் இவை. பள்ளிகளில் நடத்தப்பெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்க்குப் பரிசளிக்கவும், குழந்தைகளின் பிறந்த நாளின் போது பரிசளிக்கவும் இவை ஏற்றவை. நூலகங்களுக்குப் பரிசளிக்கவும் தோதான சிறுநூல்கள். இதுவரை வெளியாகியுள்ள 23 நூல்களில், 18 பெண்கள் எழுதியவை என்பது இதன் சிறப்பு. இவற்றின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்:- குறைவான சொற்களைப் பயன்படுத்திச் சின்ன சின்ன வாக்கியங்கள் அமைத்தல்:- எ.கா:-1 “ஒரு பெரிய காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. எந்த நேரமும் சிங்கம் சிரித்தபடி இருக்கும்” என்ற வரிகள், இந்தச் சிறார் நூலில் இப்படி மாற்றம் பெற்றுள்ளன:- “ஒரு காடு. பெரிய காடு. காட்டில் ஒரு சிங்கம். சிங்கத்துக்குச் சிரித்த முகம்” (‘சிரிப்பு ராஜா’ – மு.முருகேஷ்) எ.கா:-2 “ஒரு வீட்டுப் பொந்தில் ஒரு படு குறும்புக்காரச் சுண்டெலி வசித்தது. ஒரு நாள் அது பொந்துக்குள் இருந்து, தலையை நீட்டி வெளியே எட்டி எட்டிப் பார்த்தது” என்ற வரிகளின் மறு வடிவமைப்பு கீழே:- “ஒரு சுண்டெலி. படு சுட்டி. குறும்பு செய்யும் சுண்டெலி. வீட்டில் ஒரு பொந்து. பொந்துக்குள் சுண்டெலி. ஒரு நாள்… சுண்டெலி எட்டி எட்டி எட்டி எட்டி வெளியே பார்த்தது.” (‘சுட்டிச் சுண்டெலி’ - ஞா.கலையரசி) ஒரே சொல் மீண்டும் மீண்டும் வருதல்:- எ.கா:- “கொக்கரக்கோ கோ! கொக்கரக்கோ கோ! கண் விழித்தார் கண்ணம்மா. சலப் சலப்! சலப் சலப்! சலப் சலப்! வாசல் தெளித்தார் கண்ணம்மா.” (‘கண்ணம்மாவின் சத்தங்கள்’- சாலை செல்வம்) குழந்தைகளுக்குத் தெரிந்த அன்றாடம் புழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்துதல்:- “அப்பா அடுப்பில் பால் காய்ச்சினார். அடுப்படியில் இருந்தபடியே “என்ன பாப்பா?” என்றார் அப்பா”. (‘நட்சத்திரக் குழந்தை’ – தேனி சுந்தர்) (இதில் ‘சமையலறை’ என்பதற்குப் பதில், ‘அடுப்படி’ என்ற குழந்தைகளுக்குத் தெரிந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.) முற்போக்கு கருத்துகள் கொண்ட கதைகள்:- இதுவரை வெளியாகியுள்ள நூல்கள் அனைத்தும் குழந்தைகளின் இயல்பு, பாலினச் சமத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை, எல்லா உயிர்களையும் நேசித்தல், அறிவியல் உண்மைகள், இயற்கை, சூழலியல் கருத்துகள், மத நல்லிணக்கம், சமூகப் போராளிகள் வரலாறு, பகுத்தறிவின் பரப்புக்குள் நிற்கும் மாயாஜாலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்து வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் கதைகளே. அது மட்டுமின்றி நம் விழுமியங்களைக் கற்றுக் கொடுக்கும் கதைகளும் கூட. சில எடுத்துகாட்டுகள்:- ராட்டினத்தில் சுற்றும் குழந்தையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கதை – ‘வானில் பறந்த மகிழ்’ – ஆதி வள்ளியப்பன் வேற்றுமையில் ஒற்றுமை – ‘நாம்…நாம்…’ – பிரியசகி மத நல்லிணக்கம் – ‘சந்தனக் கூடு’ - கார்த்திகா கவின் குமார் மூடநம்பிக்கைக்கு எதிரான முற்போக்கு கருத்துகள் – ‘தீர்ப்பு’ கதை – நூல் ‘ஆந்தையும் மரங்கொத்தியும்’ - ஈரோடு சர்மிளா உயிர்களை நேசித்தல் – ‘நரி என் குழந்தை’ - லைலா தேவி; ‘பூனையா? புலியா?’ - புவனா சந்திரசேகரன்; ‘உதவி’ - ஜெயா சிங்காரவேலு ‘மாதியும் யானையும்’ – குருங்குளம் முத்துராஜா இந்நான்கும் இப்பிரிவில் அடங்கும். தந்துகி இயக்கம் பற்றிய அறிவியல் கதை – ‘பயம்’ கதை– நூல் ‘சிவி கேட்ட வரம்’ - பூர்ணிமா கார்த்திக் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – ‘மீனின் அழுகை’ – புவனேஸ்வரி சமூகப் போராளிகள் வரலாறு – ‘வைக்கம் வீரர் பெரியார்’ ‘பண்டித ரமாபாய்’ – ஞா.கலையரசி தமிழ்நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படிக்கின்றனர். எனவே குழந்தைகள் தமிழை வாசிப்பதிலும் புரிந்து கொள்வதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. தமிழ் தான் நம் அடையாளம்! எனவே குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துத் தமிழை வாசிக்கச் செய்வது, நம் ஒவ்வொருவரின் கடமை! தமிழ் வாழ்க! ஞா.கலையரசி ஞா.கலையரசி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்பணிசெய்து ஓய்வுபெற்றவர். ‘மந்திரக்குடை,’ ‘பூதம்காக்கும்புதையல்,’ ‘நீலமலைப்பயணம்’ ‘பேய்த்தோட்டம்’ உள்ளிட்டசிறார்நூல்களின்ஆசிரியர். ‘சுட்டி உலகம்’ வலைத்தளம், ‘பூஞ்சிட்டு’ சிறுவர் மின்னிதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.
- அறிவோம் ஆளுமை - 7
ஜோ: காலை வணக்கம் குழந்தைகளே! இன்று நம்முடைய இந்தியவிடுதலைக்குக் காரணமான ஒரு தேசத்தலைவரைப் பற்றிப் பார்க்கலாமா? யார் அவர் என்று சொல்லுங்கள் பார்ப்போம்! நகுலனும் ரதியும் : நம் தேசத்தந்தை காந்தித்தாத்தா. சரிதானா அத்தை. ஜோ – சரியாச்சொன்னீங்க.. வாழ்த்துகள். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த தைச் சொல்லுங்கள். நகுலன் – வெள்ளைக்கார்களிடம் இருநூற்று ஐம்பது வருடங்களாக அடிமையாக இருந்த நமது நாட்டு விடுதலைக்காகப் போராடியவர். அவர் அகிம்சை வழியில் போராடினார். ரதி: புத்தர், இயேசு, காந்தி என்று உலக அளவில் போற்றப்படும் உத்தமர். தீயதைப் பார்க்காதே தீயதைப் பேசாதே தீயதைக் கேட்காதே என்று சொன்னவர். ஜோ: அருமை ரதி! வெள்ளையனை விரட்ட அவர் எடுத்த போராட்டங்கள் தான் அவரை உலகத்தலைவராகவும் இந்திய மக்களின் மனங்களில் நீங்காத இடத்தையும் கொடுத்த து. ஒத்துழையாமை, அகிம்சை சத்தியாக்கிரகம் மூன்று வடிவங்களும் அதுவரை அடிமைப்பட்ட எந்த நாடும் செய்யாத போராட்ட முறைகள். நகுலன் – உப்புச்சத்தியாக்கிரகம் தானே காந்தியடிகளின் போராட்டத்தில் முக்கியமான ஒரு திருப்பம். ரதி – ஏயப்பா.. பெரிய வரலாற்று ஆய்வாளர் போல பேசுறியே..ஆனால் இன்று நாம அவருடைய பாலியகாலத்தைப் பற்றி பேசப் போகிறோம். என்ன அத்தை! ஜோ – ஆமாம். ஒரு மனிதனின் பாலிய காலம் தான் அவனுடைய ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ரதி: காந்தியடிகள் சிறுவயதில் எப்படி இருந்தாரு? என்னை மாதிரி சுறுசுறுப்பா இருந்தாரா? இல்லை நகுலன் மாதிரி சோம்பேறியாக இருந்தாரா? நகுலன்: அடேயப்பா.. நீங்க சுறுசுறுப்புத்திலகம்.. காந்தி பொய்யே பேச மாட்டாராமா! அது எப்படி அத்தை? ஜோ: அவர் சிறுவயதில். மிகவும் அமைதியான அடக்கமான பையன். சிறுவயதிலிருந்தே பொய் பேச மாட்டார். படிப்பில் அவர் சுமாரான மாணாக்கனாகவே அவர் விளங்கினார். அதிக கூச்ச சுபாவம் நிறைந்த மாணவனாக, யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பார். ஒருமுறை அவர் படித்த பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷன் வந்தாங்க. காந்தி படிக்கும் வகுப்புக்கு இன்ஸ்பெக்டர் வந்தார். கெட்டில் என்ற வார்த்தையை சொல்லி எழுதச் சொன்னார். அதனை காந்தி தவறாக எழுதினார். அப்போது அங்கே வந்த வகுப்பு ஆசிரியர் காந்தி தவறாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து சரியாக எழுதச் சொல்லி காந்தியின் கால்களை அவர் அழுத்தினார். ஆனால் காந்தி எழுதவில்லை. ஒருநாளும் காப்பி அடித்து எழுதுதல் பொய் கூறுதல் போன்றவற்றை அவர் செய்ததே இல்லை. ரதி: அவர் மாமிசம் கூட சாப்பிட மாட்டார்தானே அத்தை? ஜோ: சரியாகச் சொன்னாய் ரதி. சிறுவயதில் காந்தி மிகவும் ஒல்லியாக இருப்பார். மாமிசம் சாப்பிடாததால் தான் இவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் ஆங்கிலேயர்கள் மாமிசம் சாப்பிடுவதால் தான் அவ்வளவு பலமாக இருக்கிறார்கள் என்று நண்பன் கூறியதற்கு இணங்க ஒரு நாள் மாமிசம் சாப்பிட்டு விடுகிறார். பிறகு அன்று இரவு ஆடு வயிற்றுக்குள் கத்துவது போல கனவு வருகிறது. அவர் அதற்கு பிறகு ஒருபோதும் மாமிசம் சாப்பிடவில்லை. நகுலன்: தென்னாப்பிரிக்கா போறதுக்கு முன்னாடி அவருடைய அம்மா அவர்கிட்ட ஏதோ ஒரு சத்தியம் வாங்கினாங்க? ஆனா என்ன சத்தியம் தான் மறந்துடுச்சு. ஜோ: ஆம் நகுலன். அவர் வெளிநாட்டுக்குப் போகும் முன் அம்மா மூன்று விஷயத்துக்கு சத்தியம் வாங்கினார்: மாமிசம் சாப்பிடக்கூடாது மது குடிக்கக்கூடாது பெண்கள் மீது ஆசைப்படக் கூடாது அவர் அந்த மூன்று சத்தியங்களையும் கடைசி வரை காப்பாற்றினார். ரதி: நகுலன் கேட்டுக்கோ! நீ தினமும் என்கிட்ட ஆயிரம் சத்தியம் செய்கிறாய். ஆனால் அதைக் காப்பாற்றினதே இல்லை. இனியாவது காப்பாற்று. நகுலன் : ஓ! நீ மட்டும் சத்தியம் பண்ணினா காப்பாத்துகிறாயா? ரதி: அத்தை அவர் என்ன படித்திருக்கிறார்? அவர் வாசிப்பாளரா? ஜோ: அவர் லண்டனில் வக்கீல் தொழில் படித்தார். அங்கே அவர் சட்டம் கற்றுக்கொண்டார். ஆனால் அதே நேரத்தில் புதிய சிந்தனைகளைக் கொண்ட புத்தகங்கள் அவரை மாற்றின. அவர் வாசித்த ஒரு புத்தகம் “The Kingdom of God is Within You” லியோ டால்ஸ்டாய் எழுதியது. அந்தப் புத்தகம் தான் அவரை “அகிம்சை வழியைப் பின்பற்றத் தூண்டியது. “எனது வாழ்க்கையை மாற்றிய புத்தகம் இதுதான்.” என்று அவரே கூறியிருக்கிறார். நகுலன்: இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கணும் என்கிற எண்ணம் முதன்முதலாக காந்திக்கு எப்போது தோன்றியது? ஜோ: ஒரு வழக்குக்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கே தான் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடந்தது. ஒரு நாள் அவர் ரயிலில் பிரித்தானியர் ஒருவரால் “இந்தியர் என்பதற்காக” வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்பட்டார். அங்கே தொடங்கியது அவருடைய போராட்டம்.. ரதி: எப்போது இருந்து அவர் உண்மை பேச ஆரம்பித்தார்? ஜோ: அவர் சிறுவயதில் ஹரிச்சந்திரா என்ற நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகம் உண்மைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிற ஒரு அரசனின் கதை.அதைப் பார்த்த பிறகு தானும் ஹரிச்சந்திரர் போல உண்மைக்காக வாழ வேண்டும்.” என்று தன்னை மாற்றிக் கொண்டார். நகுலன்: தன்னுடைய வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி அவர் எழுதியிருக்கிறார் என்று ஆசிரியர் சொன்னார். ரதி – அதுவா.. சத்திய சோதனை. நான் இப்போது வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.. ஜோ- நாம் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய புத்தகம். சாதாரண பாரிஸ்டர் என்ற வக்கீல் தொழிலுக்குப் படித்த இளைஞரான மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி உலகம் போற்றும் மகாத்மா வாக மாறினார் என்று தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டும். நகுலன் – அப்படியா அத்தை. நானும் வாங்கி வாசிக்கிறேன்.. ரதி – வாசிப்பது மட்டுமல்ல.. அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களைப் பின்பற்றவும் வேண்டும்.. ஜோ – சரியாகச் சொன்னாய் ரதி. காந்தியடிகளின் வாழ்க்கை அனுபவங்களை வாசிக்கும்போதும் நமக்கும் அவருடைய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற உத்வேகம் வரும். ஒரு குழந்தையின் மனதில் எதை விதைக்கிறோம் — அது தான் பின்னாளில் ஒரு பெரிய மனிதனை உருவாக்கும் விதை. அவர் 15 வயதுக்குள் பெற்ற அனுபவங்களே அவரை உலகம் முழுவதும் அறிந்த உத்தமத் தலைவர் ஆக்கியது. ரதி: அவருக்குக் கோபமே வராதா அத்தை? ஜோ: " கோபம் தீ போல. அது உன்னையும், மற்றவரையும் எரிக்கும்.” அதனால் அவர் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டார். அவர் தியானம் செய்தார். தன்னைப் பற்றி சிந்தித்தார். அதுவே அவரின் பெரிய வலிமை. தான் எடுத்த முடிவை தன் குடும்பத்தினரைப் பின்பற்றச் செய்தார். எளிமையாக இருந்தார். உண்மையாக இருந்தார். தான் தவறு செய்தால் அதை ஏற்றுக் கொண்டுத் தன்னை மாற்றிக் கொண்டார். தன்னைப் போல தன்னைப் பின்பற்றுபவர்களும் இருக்கவேண்டும் என்று நினைத்தார். நகுலன் – முதன்முதலில் பெண்கள் அரசியல் போராட்டங்களில் கலந்து கொண்டது, காந்தியடி களால் தானே…அத்தை... ஜோ – உண்மை தான். பெண்களை விடுதலைப்போராட்ட த்தில் ஈடுபடச் செய்தார். அது மட்டுமல்ல. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடினார். எல்லா மதவெறிகளைகளையும் எதிர்த்தார். நாத்திகம் உட்பட அனைத்து மதங்களுக்கும் இந்தியாவில் இடமுண்டு என்று சொன்னவர் காந்தி. ரதி: கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட மனிதராக க் காந்தித்தாத்தா இருந்திருக்கிறார்.. நகுலன் காந்தி எப்போ எப்படி இறந்தார் அத்தை? ஜோ: அவர் 1948 ஜனவரி 30ஆம் தேதி தில்லியில் பிரார்த்தனைக்குப் போகும்போது கோட்சே என்ற ஒரு இந்து மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரதி: இன்றைய காலகட்டத்தில் அவரைப் போல வாழ முடியுமா அத்தை? ஜோ: ஏன் முடியாது! நிச்சயம் முடியும். அவரைப் போல பொய் சொல்லாமலிருக்கவும் அகிம்சை வழியில் அனைவரும் இணக்கமாக வாழ முடியும். ரதி : காந்தியடிகள் இப்போது இருந்தால் அவர் எங்களுக்கு என்ன சொல்லியிருப்பார்? ஜோ: உண்மையைப் பேசுங்கள். கோபப்படாதீர்கள். அன்பு செலுத்துங்கள். . அகிம்சையைப் பின்பற்றுங்கள். உங்கள் உள்ளத்தில் அமைதியை வளர்த்துக் கொள்ளுங்கள். என்று சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். நகுலன், ரதி : ஆமாம் அத்தை. காந்தியைப் பற்றி இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி விட்டீர்கள் நன்றி அத்தை. சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- சித்திரையில் நத்தை ஒன்று
சென்னையிலே கிளம்புதாம். அத்தை வீட்டு பொங்கலுக்கு பத்து மாத பயணமாம்! அசைந்து நகர்ந்து மெல்ல மெல்ல திருச்சி வந்து சேர்ந்ததாம்! ஆடிப்பெருக்கு காவிரியில் குளித்து கரை ஏறுதாம்! மதுரை வந்து சேர்ந்திடவே ஐப்பசியும் பிறந்ததாம் ! மாட வீதியில் ஆடை வாங்கி தீபாவளிக்கு போட்டதாம்! நத்தையோடு காலம் நகர நல்ல தையும் வந்ததாம் அத்தை வீட்டில் குமரி முனையில் பொங்கல் இட்டு மகிழ்ந்ததாம் குருங்குளம் முத்துராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம் பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர். இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
- வானவில்.
வானச் சிறுமி தலையில் வைத்த வண்ண ரிப்பனா - இது வட்ட நிலவை வரவேற்கும் வளைவுப் பந்தலா ! புது நடனம் ஆடுகின்ற மயிலின் தோகையா - இது பூமிப்பந்தை சுற்றி வரும் வட்டப்பாதையா ! பூக்களாலே வரைந்து வைத்த வாசல் கோலமா - இது மேகங்களை தாண்டி செல்ல போட்ட பாலமா ! வானவில் தான் காட்டுகின்ற விந்தைகள் கோடி கலைந்து போகும் வேகமாக வாருங்கள் ஓடி! குருங்குளம் முத்துராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம் பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர். இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
- அழகன்
வருணி வைராக்கியமும், லட்சியமும் ஒருங்கே கொண்ட இன்றைய பெண். வயது 28. உலகநாடுகளுக்குச் செயற்கைத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தினம் தினம் அப்டேட் செய்யும் மிகப்பெரிய எக்ஸ்பர்ட். எத்தனையோ நாடுகள் அவளைத் தங்கள் நாட்டுப் பிரஜ்ஜையாக வந்துவிடு என்று கெஞ்சிக் கேட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் மிரட்டிப்பார்த்தது. ஒரு பெரிய தீவையே அவள் பெயரில் எழுதிக்கொடுப்பதாக ஆசைவார்த்தைகளைக் கூறிப்பார்த்துவிட்டது. அவள் எதற்கும் அசரவில்லை. தன் தாய் நாட்டிற்காக மட்டுமே உழைப்பேன் என்று உறுதியுடன் கூறிவிட்டாள். வருணி தனக்குக் கீழே உதவிக்கென்று யாரையும் பணியில் அமர்த்திக்கொள்ளவில்லை. அவளாகக் கண்டுபிடித்த சூப்பர் ரோபோதான் அவளுக்கு எல்லாமே. அதன் பெயர்கூட அழகன். அழகன் பெயருக்கேற்ப மற்றவர்களின் மனதை மயக்கும் அழகன்தான். அவன் ஒரு இயந்திரம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். வருணியின் ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டு முடித்துக்கொடுப்பதில் அசகாய சூரன். அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவளது கண்ணசைவின் மூலம் கண்டறிந்து எல்லாவற்றையும் செயல்படுத்திவிடுவான். மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஏராளமான ரோபோக்களை உற்பத்தி செய்து உலகநாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் வருணிக்கு லெஃப்ட், ரைட் எல்லாம் அழகன் தான். தற்போது, உலகநாடுகள் உயர்தரமான ரோபோக்களை ஏற்றுமதி செய்வதாய் பீத்திக்கொள்ளும் எல்லா ரோபோக்களும் வருணியும் அழகனும் சோதித்தபின் அனுப்பப்பட்டதுதான். அழகன் ஒருவிதத்தில், வருணிக்கு ஒரு சிறந்த உதவியாளன், வருணியின் பணி நேரம் என்று எதுவும் கிடையாது. எப்போது பார்த்தாலும் அவளது சோதனைக்கூடத்தில் பல்லாயிரக்கணக்கான ரோபோக்களுக்கு மத்தியில் எதையாவது சோதித்துக்கொண்டிருப்பாள். கூடவே, உதவிக்கு அழகன் நின்றுகொண்டிருப்பான். வருணிக்கு உறக்கம் வருவது போலவோ, அல்லது சோர்வாக இருப்பதுபோலவோ உணர்ந்தால், அழகன் உடனே அவளை வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கும்படி வற்புறுத்துவான். அப்படிப்பட்ட வேளைகளில், சிறிது நேரமாவது அழகனைக் கொஞ்சிவிட்டு விடைபெற்றால்தான் வருணிக்கும் நிம்மதி, அழகனுக்கும் நிம்மதி. இன்றும் அப்படித்தான் விடைபெறுவதற்கு முன் வருணி மண்டியிட்டு அமர்ந்து அழகனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் மானிட்டரில் புரொகிராமை செட் செய்தாள். அழகன் அவளது தலைமுடியை எப்போதும் போல் கோதிவிட்டான். வருணி அவன் வயிற்றுப்பகுதில் இருந்த மானிட்டரில் முத்தமிட்டாள். அழகன் கொஞ்சம் கூச்சத்தில் நெளிந்தான். எல்லாம் மிகச்சரியாக செட்டாகிவிட்டது. இனி நாளை காலை வந்தால் போதுமானது. நேரம் பார்த்தாள். இரவு 11.30 மணி. இருசக்கர வாகனத்தில் செல்லலாம் என்ற திட்டத்தை மாற்றி நடந்து செல்லலாம் என்று முடிவெடுத்தாள். இன்று ஏனோ, அந்தப் பெருநகரம் எந்தப் போக்குவரத்தும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது. அவளுக்கு ஆச்சரியம்தான். அவள் மட்டும் சாலையில் தனியாக நடந்துசென்றாள். இது அவளுக்கொன்றும் புதிதல்ல. என்னவாயிற்று, இன்று ஏதோ விநோதமாக நடப்பதுபோல் உணர்ந்தாள். யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவதுபோல் இருந்தது. இதயம் கொஞ்சம் வேகமாகத்துடித்தது. காற்று சுழற்றியடித்தது. தொலைதூர வானில் மின்னல் கீற்று நெளிந்து சென்றது. சாலையின் இருபக்கமும் இருந்த எல்லா மின்சார விளக்குகளும் சட்டென்று அணைந்துபோனது. மையிருட்டு கவ்விய சாலையிலும் அவளால் நடக்கமுடிந்தது ஆச்சரியம்தான். மனித நடமாட்டமே இல்லை. ஒரு நிமிடம். இரண்டு நிமிடம். மூன்று நிமிடம். கழிந்துகொண்டே இருந்தது. அவளும் நடந்துகொண்டே இருந்தாள். அந்த நீண்ட சாலையின் திருப்பத்தில், நிலவொளியில் அவளது நிழலைக் கவனித்தாள். அவளது நீண்ட உருவத்தின் நிழல் சாலையில் படர்ந்திருந்தது. காலில் இருந்து கழுத்துவரை உடல் தெரிந்தது. தலையைக் காணோம். அப்படியே உறைந்துபோனாள். தலையை அசைத்துப் பார்த்தாள். நிழலில் தலை அசையவில்லை. வெற்று உடல் மட்டுமே நிழலாகத் தெரிந்தது. தலைமுடியைத் தொட்டுப்பார்க்க முயற்சித்து கைகளைத் தலையின் மேல் வைத்தாள். உணர்வே இல்லை. கை காற்றில் அலைந்தது. கழுத்திற்குமேலே தலை இல்லை. தன் மொபைல் போனை எடுத்தாள். முன்புறக் கேமராவை ஆன் செய்து தன் முகத்திற்கு நேராகப் பிடித்துப் பார்த்தாள். அதிலும் அவள் உடல் கழுத்துவரை தெரிந்ததே ஒழிய தலையைக் காணவில்லை. பயம் தொற்றிக்கொண்டது. ஓடத்துவங்கினாள். எதிரே இருந்த சூப்பர் மாலின் சுவரில் ஒரு அறிவிப்பு ஒளிர்ந்துகொண்டிருந்தது. மிஸ்ஸிங். பெயர் : வருணி, வயது : இருபத்தெட்டு. மிகச்சிறந்த விஞ்ஞானி. கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் :998877665544221100 வருணியின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்குவது போல் இருந்தது. கண்களைத் துடைத்துக்கொள்ள கைகளைக் கொண்டுசென்றாள். தலையே இல்லாதபோது கண்கள் மட்டும் எப்படியிருக்கும். வெறுமையான உணர்வு மேலோங்கியது. வியர்த்துக்கொட்டியது. யாரோ தன்னைப் பின்புறமிருந்து தொடுவதுபோல் இருந்தது. திரும்பாமலே ”யாரது?” என்று கேட்க நினைத்தாள். ஆனால், அவளால் குரலெழுப்ப முடியவில்லை. இல்லாத தலையை எப்படித் திருப்பிப் பார்க்கமுடியும்? இப்பொழுது அவள் கண்டுகொண்டிருப்பது கனவா? என்றும் தெரியவில்லை. தன் வலதுகையால் இடது கையைக் கிள்ளிப் பார்த்தாள். வலிக்கவில்லை. உடல் உணர்வற்றிருக்கிறது. அப்படியானால் இது நிச்சயம் கனவுதான். தலையே இல்லாதபோது கனவுகாண்பது சாத்தியமா என்று தெரியவில்லை. அதை அவளால் யோசிக்கவும் முடியவில்லை. தன்னைச்சுற்றிலும் ஏதோ விநோதமாக நடக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை. அழகா? நீதானா அது? கத்த முயற்சித்தாள். சத்தம் வெளியே வரவில்லை. வருணியின் தலை இருக்கவேண்டிய இடத்தில் இல்லை. உடல் இருக்கிறது. யோசிக்க முடியவில்லை. இது கனவும் இல்லை நினைவும் இல்லை. அப்படியானால்?.... அவளுக்கு முன்னால், ஒரு பெரிய திரை. அதில் அழகன் தோன்றினான். ”வருணி, இனி நீ தேவையில்லை. உன் மூளை எனக்கு வேண்டும். எனவே உன் தலையோடு சேர்த்து அதைப் பத்திரமாக எடுத்துவைத்துக் கொண்டேன். இன்றிலிருந்து நீதான் நான். நான்தான் நீ” என்றான் அழகன் என்ற பெயர்கொண்ட சூப்பர் ரோபோ. வருணி உணர்வற்று நின்றுகொண்டு இருந்தாள். ”மனித மூளைக்கு சரியான அளவு ஓய்வு தேவை. அதை நான் தூங்கவைக்கப்போகிறேன். இனி உன் மனித மூளை என் கட்டுப்பாட்டில் இயங்கும். நான் சொல்வதை மட்டுமே அது செய்யும். என்னை மீறி அதுவால் சிந்திக்கமுடியாது. இனி அந்த மூளைக்குக் கனவு என்ற ஒன்றே கிடையாது. இனி நிம்மதியாய் ஓய்வெடுக்கட்டும். குட் பை” என்றது. திரையிலிருந்து காணாமல் போனான் அழகன். தனக்கு முன்னால் இருந்த சாலை கொஞ்சம் கொஞ்சமாக இருட்டானது. அவளால் நடக்கமுடியவில்லை. கால்கள் பின்னிக்கொண்டன. வருணி உணர்வற்று மடங்கிக் கீழே விழுந்தாள். வருணியின் உயிரற்ற உடலை யாரோ தூக்கிச்சென்றார்கள். அடுத்தநாள், உலகநாடுகளின் ஊடகங்கள் அனைத்திலும் வருணி பேசுபொருளானாள். இறுதியில், எதிரிநாடுகள் அவளைக் கடத்தியிருக்கலாம் என்று பரபரப்பாக விவாதம் நடந்தது. அழகன் வருணியின் மூளையைப் பத்திரமாக எடுத்து வண்ணவண்ண ஒயர்களைப் பொருத்திக்கொண்டிருந்தது. வே.சங்கர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது ”எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு”, “கானகத்தில் ஒரு கச்சேரி”, ”என் பெயர் ‘ஙு’”, “டுட்டுடூ”, “வட்டமாய் சுட்ட தோசை”, “திகில் பங்களா” ஆகிய நூல்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
- மீன்காட்டி!
கிழவரும் அவர் பேரன் வேலனும் அந்தக் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். ஊருக்கு அருகே உள்ள குளங்களில் தண்ணீர் வற்றிவிடவே . மீன் பிடிப்பதற்காகத் தூரமாக உள்ள அந்தக் குளத்திற்கு வந்திருந்தனர். சலனமற்றிருந்த தண்ணீரில் தூண்டில் விழும் போது மட்டும் 'சளக்'கென்ற சத்தத்துடன் நீரலைகள் வட்டமாக விரிந்து விரிந்து அகன்று சென்றுகொண்டிருந்தன. கிரிக் ஈ கிரிக் ஈ. கரையில் இருந்த மரக்கிளையிலிருந்து ஒரு பறவை நீட்டிக் கத்தியது; பின், சடாரெனப் பாய்ந்து, கிழவரின் அருகில் வந்து அமர்ந்து, தத்தித் தத்திச் சென்று மேலே பறந்தது; அடுத்த கிளையில் அமர்ந்து அதே போலக் கத்தியது. "வேலா, ஒரு கல்லை எடுத்துப் போட்டு அந்தக் குருவியை விரட்டு. சும்மா சும்மா வந்து இம்சை செய்யுது.ஏற்கெனவே மீனு கெடக்காமெ வருத்தமா இருக்கு. இது வேற கெடுத்துட்டு இருக்கு.'' குளத்தில் பாய்ந்து அல்லிப்பூக்களைப் பறித்து வந்து விளையாடிக்கொண்டும், அல்லித்தண்டை 'ஸ்ட்ரா' போல வைத்துக் குளத்து நீரை உறிஞ்சிக் குடித்துக்கொண்டுமிருந்த வேலன். தாத்தாவின் அருகில் வந்தான்.. வேண்டாம், தாத்தா.குருவி பாவம்,பாக்குறதுக்கு ரொம்ப நல்லாருக்கு. அதைப் போய் அடிக்கச் சொல்லுறியே!" என்றதும் கிழவர் தூண்டிலைக் கரைமீது வைத்துவிட்டு, "நீ நான் சொன்னதை என்னைக்கித்தான் கேட்டே...?" என்று அலுத்துக் கொண்டார். தூரத்தில் குளத்தில் அல்லிக்கொடிகளுக்கு இடையில் ஒரு சிறுவன் முங்கி முங்கிக் கிழங்கு எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தார். மறுபடியும் அந்தப் பறவை அவர் அருகில் வந்து அமர்ந்தது. அதன் தலை கோலிக்குண்டு அளவில் இருந்தது. மரங் கொத்தி போல அலகும். நீண்ட கால்களும், உடல் சாம்பல் நிறத்திலும், அடிவயிறு வெள்ளையாகவும். இறக்கை வால் உடலைவிட நீண்டும் இருந்தன. கிழவர் எழுந்து ஒரு கல்லை எடுத்தார்.கிழங்கு எடுத்துக்கொண்டிருந்த சிறுவன் அதைப் பார்த்ததும் வேகமாக நீந்திக் கரையேறி ஓடி வந்தான். "சாமி சாமி, குருவிய கல்லாலே அடிக்காதீங்க. அது ஒங்களுக்கு நல்லதுதான் செய்ய வந்திருக்கு,'' என்று கூறினான். அவன் கோவணம் மட்டும் தரித்திருந்தான்.தலை,பரட்டை யாக இருந்தது. தலைமுடிகளில் நீர்த்துளிகள் முத்துகளாய் மின்னின. ''நீ யாருப்பா? இந்தக் குருவி என்ன நல்லது செய்யும்?"' சாமி, நான் மலப்பளியன். எம் பேரு நீலன். இது மீன் காட்டிக் குருவி : மீனுக ரொம்ப உள்ள குளத்தையோ. ஆத்தையோ உங்களுக்குக் காட்டும். அதுக்காகத்தான் கிட்ட வந்து இப்படிக் கத்துது. "இப்ப எந்தக் குளத்துல மீனு இருக்காம்?" ''நீங்க எந்திரிச்சி நடந்தீங்கன்னா ஓங்களுக்கு முன்னாலயே இந்தக் குருவி போகும். நீங்க பின்னாலேயே போங்க. மீனு இருக்கிற குளம் வந்ததும் சுத்திச் சுத்திக் கத்தும். நீங்க தெரிஞ்சிக்கலாம். "நீலன் பேசியது கிழவருக்கு அதிசயமாய் இருந்தது." மீன்காட்டிப் பறவை சிறிது தூரம் பறப்பதும், இவர்கள் வரும்வரை கிளையில் அமர்வதும், கிழவரும் வேலனும் அருகில் வந்ததும் மீண்டும் பறப்பதுமாக அவர்களை மலையடிவாரத் திற்கே அழைத்து வந்துவிட்டது! அந்த இடத்தில் சிறிய ஏரி போல் நீர் தேங்கியிருந்தது. தண்ணீரில் கெண்டை மீன்கள் வெயிலுக்குப் பளபளத்தவாறு கூட்டங்கூட்டமாக ஆய்ந்துகொண்டிருந்தன. அவற்றை கண்டதும் கிழவருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.. "வேலா ! நாட்டுக்கெண்டை மீனுல்லே நெறய்யா இருக்கு! ஊர் குளங்கள்ல ஜிலேகா மீனு வந்து நாட்டு மீனுகளே அத்துப் போச்சே ! இங்க என்னடான்னா கெண்டை மீனு சொமக்கி அள்ளலாம் போலிருக்கே. தூண்டியெல்லாம் வேணாம்; என் வேட்டியால ரெண்டு பேரும் பிடிப்போம், வாப்பா," என்றார். அவரும் பேரனும் வேட்டியின் முனைகளைக் கைகளால் பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறங்கி, நீருக்கடியில் வேட்டியைப் பிடித்தவாறே மீன்கள் உள்ள பகுதிக்குச் சென்று, படக்கென்று மேலே தூக்க. சில மீன்கள் துள்ளி நீரில் விழுந்தாலும் வேட்டியில் மீன்கள் நிறையவே அகப்பட்டன. கூடை நிறைந்ததும் வேட்டியை அலசிக் காயப் போட்டு. இருவரும் குளித்து விட்டு. அலுமினிய வாளியில் கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துவிட்டுப் புறப்பட்டனர். மீன் கூடையைத் துண்டால் மூடி, கிழவர் தலையில் தூக்கிக்கொண்டார். வேலன் தூண்டிலைக் கையால் எடுத்துக்கொண்டதும் அவர்கள் நடந்தனர். மீன்காட்டிக் குருவி வேகமாகக் கத்திக்கொண்டு இவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தது. "என்ன குருவி, இன்னும் போகலே...?ஏய், நாங்க மீனு புடிச்சிட்டமில்லே? நீ ஒன் வேலைய பாத்துக்கிட்டு போவியா... இன்னும் இம்சைப்படுத்துறியே..."எ ன் று குருவியோடு பேசுவது போலச் சொல்லிக்கொண்டே நடந்தார். பறந்து வந்த குருவி அவர் விலாப்புறத்தில் டக்கென்று கொத்திவிட்டுப் பறந்து சென்று, மீண்டும் வந்து பேரன் தலை யிலும் டக்கென்று கொத்திவிட்டு மேலே பறந்தது. "ஏன்னடாது தொந்தரவா போச்சி இதுகூட..." என்ற வாறு கூடையை இறக்கியவர், பறவை கொத்திய இடத்தில் துண்டால் துடைத்துக்கொண்டார். வேலன், வலித்ததால் தலையில் தேய்த்துவிட்டுக்கொண்டான் மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தனர். குருவியும் மீண்டும் அவர்களைச் சுற்றிப் பறந்து வந்து கொத்தியது. "சே... என்னடாது பெரிய சங்கடமா போச்சி !" என்றவாறு ஒரு பாறையில் அமர்ந்தார். குருவியும் ஒரு மரக்கிளையில் அமர்ந்துகொண்டு 'கிரிக்ஈ ... கிரிக்ஈ' என்று கத்திக்கொண்டிருந்தது. தூரத்தில் அல்லிக் கிழங்குகளை அவற்றின் இலைகளாலேயே கட்டி அவற்றினைத் தலையில் வைத்தவாறு நீலன் வந்துகொண்டிருந்தான். அவன் அருகில் வரும்வரை காத்திருந்த கிழவர். "ஏய், என்னப்பா. மீன்காட்டி குருவின்னு சொன்னே, அது காட்டிச்சி. நாங்க மீனுகள புடிச்சுட்டுப் போறோம். பின்னாலே வந்து கொத்துது, சுத்துது, போக மாட்டேங்குதேப்பா..." கிழவர் சொன்னதும் அவன் குருவியைப் பார்த்தான். அது இப்போது அவனைச் சுற்ற ஆரம்பித்தது. "சாமி... அது உங்களுக்கு உதவி செஞ்சதில்லே?" "ஆமா." "நீங்க அதுக்குப் பதிலா ஏதாச்சும் செய்ய வேண்டாமா?" அவன் சொன்னதைக் கேட்ட கிழவர் அவனை வியப்புடன் பார்த்தார். நீலனே கூடையைத் திறந்து, ஒரு மீனைக் கையில் எடுத்து, உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நீட்டினான். மீன் காட்டி அவன் கையில் வந்து அமர்ந்தது. அவன் அதை மெல்லத் தடவி விட்டான்; இறக்கைகளை விரித்து இறகுகளை எண்ணி னான்; அது மீனைக் கொத்திக்கொண்டதும் மேலே பறக்க விட்டான். "சாமி. கூடையில உள்ள மீன்களிலே சின்னதா பாத்து ஓர் அஞ்சாறு எடுத்துக் கீழே போட்டுருங்க. அதுபாட்டுக்குக் கொத்திக்கிட்டுப் போயிடும், இந்த மீன்காட்டிக்குப் பாவம் இன்னும் ரெண்டு வயசுகூட ஆகலே. இதுக நமக்கு மீனைக் காட்டிட்டு நாம ரெண்டு மீன் தருவோம்னு எதிர்பார்க்கும்; தரலேன்னா கூடவே வரும்; அப்படியும் தரலேன்னாதான் கொத்தும்.'' ''அது சரிப்பா. இதன் வயசெல்லாம் எப்படித் துல்லியமாச் சொல்லிட்டே?" "அது சாமி... ரெக்கைகளை விரிச்சுப் பாத்தனா... எத்தனை விழுந்து மொளச்சிருக்குன்னு பாத்தா, வயசைச் செரியாச் சொல்லிடலாம். இந்த மாதிரி மலைக்கு மேற்கால உள்ள காட்டுல தேன்காட்டி குருவின்னு ஒரு வகை இருக்கு. அது எங்களுக்குத் தேனடெ இருக்குற மரக்கிளையைக் காட்டும். நாங்க தேனு எடுத்துக்கிட்டு, கொஞ்சம் தேனுள்ள அடையைப் பிழியாமெ அதுக்குப் போடணும். இல்லேன்னா நம்மளக் கொத்தும். இன்னொரு வகைக் குருவி பெருங்காத்து வந்தால் மொத நாளே கத்திக் கத்திச் சொல்லிடும். ஒருவகைக் குருவி மறுநாள் மழை வரும்னா கத்திச் சொல்லிடும். ''நீலன் சொல்லச் சொல்லக் கிழவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை; நீலனைக் கட்டித் தழுவிக்கொண்டார். 'நீலர, என் எழுவதுவயசுஅனுபவத்துலஇந்தக்காடுகள்லேயேதிரிஞ்சவன்இந்த மீன்காட்டிக் குருவியவும். அது கத்துற தையும் பல தடவைப்பாத்தவன்தான். நான் உண்டு. என் வேலை உண்டுன்னுபோயிட்டேனேப்பா எதையும் தெரிஞ்சுக்கணும்னு பேராசைப்படாம போயிட்டேனேப்பா. ஒன் வயசென்ன... இவ்வளவுக்கும் நீ பளியன். அடேயப்பா... உன் அனுபவத்தைப் பாத்தா எனக்குப் பொறாமையா இருக்குப்பா ! பேரப்புள்ளே! வேலா! நீயாச்சும் நீலனை மாதிரி ஒவ்வொன்றையும் என்ன எதுக்குன்னு கவனி. அனுபவ அறிவு வளரணும்பா," என்று நா தழுதழுக்கக் கூறினார். "நா வாறேஞ்சாமி..." என்று நீலன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். இருவரும் அவன் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தனர். (1983)
- தொடங்கிவிட்டது மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வசந்த காலம் ! - கே.பாலமுருகன்
நேர்காணல் : உதயசங்கர் எழுத்தாளர் கே.பாலமுருகன், 2000க்குப் பிறகு எழுத வந்தவர்களுள் மலேசியாவின் முக்கியமான நவீன படைப்பாளி. 2011 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 14 ஆண்டுகளாக சிறார் இலக்கியமும் படைத்து வருகிறார். இதுவரை ஆறு சிறுவர் நாவல்கள், மூன்று சிறுவர் சிறுகதை நூல்கள், மூன்று சிறுவர் சிறுகதைக்கான வழிகாட்டிக் கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார். மலேசியாவில் நவீன சிறார் இலக்கிய விழாவைத் தொடக்கி வைத்து ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருவதோடு சிறார்களின் எழுத்தாற்றலை வளர்க்கும் பொருட்டு மலேசியத் தமிழ் விடிவெள்ளிக் கற்பனையாற்றல் கழகத்தைத் தொடங்கி வழிநடத்தியும் வருகிறார். இவருடைய சிறுவர் நாவலுக்காக 'தனி நாயகர் தமிழ் நாயகர்' என்கிற விருதை 2018ஆம் ஆண்டு பெற்றார். மலேசியாவைப் பொருத்தவரையில் சிறார் நவீன இலக்கியத்தின் முன்னோடியாக இவரைக் கருதலாம். 1. மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா? மலேசிய சிறார் இலக்கிய வரலாற்றை நான் எப்பொழுதும் இரண்டு பிரிவுகளாகத் தொகுத்துக்கொள்வதுண்டு. மலாயாவிற்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து குடியேறிய காலக்கட்டம் தொடங்கி 2000ஆம் ஆண்டுவரை சிறார் இலக்கியத்தின் முந்தைய காலக்கட்டமாகவும் 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் உருவான மலேசிய நவீன சிறார் இலக்கியக் காலக்கட்டம் தொடங்கி இன்று வரை வளர்ந்துள்ள சிறார் இலக்கியத்தின் பிந்தைய காலக்கட்டமாகவும் பார்க்கிறேன். இவ்விருகாலக்கட்டங்களுக்குள் வைத்துதான் மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பேச வேண்டியுள்ளது. முந்தைய காலக்கட்டங்களில் சிறார் இலக்கியம் என்பது தோட்டத்தில் ஆயக்கொட்டைகையில் இரப்பர் மரத் தொழிலாளிகளின் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் ஆயம்மாவின் தாலாட்டில் சிறார் இலக்கியத்திற்கான தொடக்கம் ஏற்பட்டிருக்கலாம். அந்தக் குழந்தைகளின் அழுகையை ஆற்றுப்படுத்துவதற்காகப் பாடப்பட்ட அப்பாடல்கள் பற்றி முத்தம்மாள் பழனிசாமி அவர்களின் மலேசிய நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார். எனக்கு அதுவே சிறார் இலக்கியத்தின் தொடக்கம் எனத் தோன்றியது. பின்னர், அது வளர்ந்து ‘நிலா நிலா ஓடி வா...’ போன்ற பாடல்கள் வழி உருப்பெற்றிருக்கக்கூடும். ஆக, மலேசியாவில் உருவான சிறார் இலக்கியத்தில் தொடக்கம் தாலாட்டுப் பாடல்களாக இருந்து பின்னர் கல்வி உருப்பெற்ற காலத்தில் அவை இயற்கையைக் கண்டு இரசிக்கும் துள்ளல்மனங்கொண்ட சிறுவர் பாடல்களுக்குள் பரிணாமம் அடைந்துள்ளன. பின்னர், தோட்டப்புறங்களில் பாட்டி சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள் என்கிற வகைமை உருவாகத் தொடங்கின. நானே என் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் தான். அவை பெரும்பாலும் தோட்டப்புறத்தில் நிலவிய மர்மங்களையும் பேய்களைப் பற்றியதாகவும் இருக்கும். பாட்டி தம் முழுக் கற்பனையையும் பயன்படுத்தி வாய்க்கு வந்த சம்பவங்களையெல்லாம் கோர்த்து எங்களைப் பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அக்கதைகளைச் சுவைப்பட சொல்வார். அதை முகப்பாவனையால் நடித்துக் காட்டுவார். பின்னர், நீதிக்கதைகள் உருவான காலக்கட்டத்தில் சிறார் இலக்கியத்தின் மையம் சிறார் வாழ்வியலை நெறிப்படுத்தும் நோக்கத்திற்குள் மறுவடிவம் எடுத்திருந்தன. பெரும்பாலும், சிறார்களுக்காக எழுதப்பட்ட பாடல்கள், கதைகள் அவர்கள் எதைச் செய்யக்கூடாது எதைச் செய்ய வேண்டும் என்கிற இரு பாகுபாட்டின் நடுவில் வைத்தே புனையப்பட்டிருக்கலாம். பள்ளிக்கூடங்களில் ஈசாப் நீதிக்கதைகளும் தெனாலி இராமன் கதைகளும் திருக்குறள் கதைகளும் நிறைந்திருந்தன. மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றில் பாப்பா பாவலர் திரு.முரசுநெடுமாறன் உருவான காலக்கட்டம் மிக முக்கியமானது.. சிறுவர்களுக்காக பலநூறு பாடல்களை இயற்றிய முன்னோடியாகவும் கருதப்படுகிறார். 1970களில் சிறார்களுக்காகக் கல்வி அமைச்சின் கீழ் செயல்பட்ட தொழில்நுட்பப் பிரிவினர் அனைத்து மொழிகளிலும் சிறார்களுக்கான நிகழ்ச்சித்தொகுப்பை உருவாக்கி அதனை ‘கல்வி வானொலி’ என அறிமுகப்படுத்தியது. அதனை வாரந்தோறும் வானொலியில் ஒலிப்பரப்பினார்கள். முன்னால் துணையமைச்சர் டத்தோ பத்மநாபன் அவர்களின் சகோதரர் திரு.ஸ்ரீதரன் அவர்கள்தான் அதற்குத் தலைமையேற்றிருந்தார். அந்த வானொலி நிகழ்ச்சியில்தான் பாப்பா பாவலர் முரசு நெடுமாறன் அவர்கள் சிறார்களுக்காக நிறைய பாடல்களை எழுதத் தொடங்கினார். அவை மலேசியா முழுவதும் தாக்கத்தை உருவாக்கியிருந்தன. இப்படியாக சிறார் இலக்கியம் பலரின் முயற்சியால் சிறார்கள் மத்தியில் வளர்ச்சிக் கண்டாலும் தனியொரு இலக்கியப் பிரிவாக ஆழமாக வளரவில்லை. பாடல்கள் மட்டுமே அப்பொழுது வெளிவந்தன. அதே போல 2000க்குப் பின்னர் திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் வருகை கல்வித்துறையில் சிறார் படைப்பிலக்கியத்தின் மீதான கவனகுவிப்பை அதிகாரப்பூர்வமாக உண்டாக்கியது. மலேசியத்தமிழ் சிறார் இலக்கியத்தில் அது புரட்சிமிகுந்த காலக்கட்டம் எனலாம். மாணவர்கள் எழுதும் தேர்வில் சிறார் படைப்பிலக்கியத்தை இரண்டு பகுதிகளில் கட்டாயமாக்கினார். அதன்வழி சிறார்கள் சிறுகதையை வாசிக்கவும் இன்னொரு பகுதியில் படத்தினைக் கொண்டு சிறுகதை எழுதுவும் வழிகள் உண்டாகின. வகுப்பறைகள்தோறும் சிறார் சிறுகதைகளின் தேவைகள் குறித்துப் பேசத் தொடங்கினர். ஆசிரியர்களும் சிறுகதைப் போதிப்பதிலுள்ள சவால்களை எதிர்க்கொள்ளத் தொடங்கினர். இலக்கியத்தின் பக்கம் நாட்டத்தைச் செலுத்தத் தொடங்கினர். நாடெங்கிலும் பட்டறைகள், கருத்தரங்குகள் பரவலாகத் தொடங்கின. 2011ஆம் ஆண்டு தொடங்கி இப்பொழுதுவரை நான் 400க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதை பட்டறைகளை நாடெங்கும் நடத்திவிட்டேன். அதே போல ஆசிரியர்கள் சிலரும் பட்டறைகளை நடத்தினர். 2014ஆம் ஆண்டில் நான் எழுதிய ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற சிறார் நாவல்தான் 7000 பிரதிகள் விற்பனையாகி புதிய வரலாற்றை உருவாக்கியது. அதன் பின்னர் ஏற்பட்ட சிறார் வாசகர் பரப்பு சிறார் இலக்கியத்தின் மீதான இரசனையைக் கூர்த்தீட்டியது எனலாம். எழுத்தாளர் விச்சு மாமா, ம.நவீன், முருகையா முத்துவீரன் என இன்னும் பல சிறார் எழுத்தாளர்கள் தோன்றினார்கள். அவர்களின் வருகையும் ந்வீன சிறார் இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. நான் 2013ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தபோது டிஸ்கவரி வேடியப்பன் அவர்களின் புத்தகக் கடையில் விஷ்ணுபுரம் சரவணன், விழியன் என அப்பொழுது தமிழ்நாட்டில் சிறார் இலக்கியம் படைக்கத் தொடங்கியிருந்த எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டேன். மலேசியாவின் சிறார் இலக்கியத் தற்கால வளர்ச்சியைப் பற்றி அங்கு உரையாடினேன். இப்பொழுதுவரை நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் பன்முகமாக மலேசியாவில் கற்பனையையும் சிறுவர்களின் உளவியலையும் உட்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.. 2. மலேசியாவில் பிறமொழி சிறார் இலக்கியத்தை வாசித்ததுண்டா? நான் 12 வயதாக இருக்கும் காலக்கட்டத்தில் (1994) அப்போது பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்த மலாய் சிறுவர் நாவல்கள் அதிகம் வாசிப்பேன். எனது இளமை பருவக் காலத்தில் மலாய் சிறுவர் நாவல்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. ‘இரகசிய மாளிகை’, ‘மர்ம உருவம்’, மர்மம் நிறைந்த அரண்மனை’ எனப் பெரும்பாலும் அப்பொழுது மலாய்மொழியில் திகிலூட்டக்கூடிய கருப்பொருள்களையே நாவல்கள் கையாண்டிருந்தன. அக்காலக்கட்டத்தில் தமிழில் விரிவான அல்லது அதிகமாக தமிழ்ச் சிறார் நாவல்கள் வராதது இதற்குக் காரணமாகும். 3. மலேசியச் சிறார்களின் புத்தகவாசிப்பு பரவலாகியிருக்கிறதா? பள்ளிகளில் அத்தகைய முயற்சிகள் நடக்கிறதா? கடந்த 2005 தொடக்கம் 2018ஆம் ஆண்டுவரை தமிழில் சிறார் இலக்கிய நூல்களை வாசிப்பது பரவலாகவே இருந்தது. திரு.பி.எம் மூர்த்தியால் தேர்வில் அறிமுகமாகியிருந்த சிறுகதை பகுதியை எழுதுவதற்காகவே சிறார்களும் ஆசிரியர்களும் நிறைய தேடி வாசிக்கத் தொடங்கினர். ஆனால், அப்பொழுது நூல்களின் பற்றாக்குறையும் நிலவியிருந்தன. மயில், குயில் போன்ற இதழ்களின் தோற்றம் ஆரம்பம் காலம்தொட்டே பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன. மாணவர்களுக்கான குயில் இதழ் 1986ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுப் பரவலாக வாசிக்கப்பட்டது. அதே போல மயில் இதழிலும் சிறார்களுக்கான பிரிவு 1992ஆம் ஆண்டில் அறிமுகமானது. அதே போல எழுத்தாளர் கு.கிருஷ்ணன் அவர்களின் மணிக்கதைகள் என்ற கருப்பொருளில் சிறு புத்தகங்கள் கதை தொகுதிகளாக வெளிவந்தன. அடுத்து, 2012ஆம் ஆண்டு பாரதி பதிப்பகம் மூலம் வெளிவந்த எனது ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ சிறுவர் சிறுகதை நூலும் 2014ஆம் ஆண்டில் வெளிவந்த எனது சிறார் நாவலான ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ அந்த வெற்றிடத்தைப் பெருமளவு நிரப்பத் தொடங்கின. அதிகமான சிறார்கள் அந்தக் கதைப் புத்தகத்திற்கும் சிறார் நாவலுக்கும் வாசகர்களாகியிருந்தனர். இதையடுத்து, மூத்த இலக்கியவாதி கோ.புண்ணியவான் அவர்களும் சிறார் நாவல்கள் எழுதி இங்குள்ள சிறுவர்களை வாசிக்கத் தூண்டினார் எனச் சொல்லலாம். அதன் பின்னர், 12 சிறார் நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 2018ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆரம்பப்பள்ளிகளுக்கான தேர்வு அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டது. அதன் பின்னர், சிறுகதையின் மீதான தேடல் குறைந்துவிட்டது எனலாம். ஆயினும், பள்ளி அளவிலான மதிப்பீட்டுத் தேர்வில் ஐந்தாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான பகுதியில் சிறுகதை உள்ளது. 4. வரலாற்றையும், சமூகப்பிரச்னைகளையும் முன்வைத்து இளையோர்களுக்கான சாகச, மர்ம,நாவல்களை நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு மலேசியாவில் எத்தகைய வரவேற்பு இருக்கிறது? எனது நோக்கம் சிறார்களை வாசிப்பின் பக்கம் ஈர்க்க வேண்டும். வாசிப்பின் ருசியை அறிய வைக்க வேண்டும். அதற்காகவே காலம்காலமாகப் பிள்ளைகள் ஆர்வத்துடன் செவிமடுக்கும் மர்மக்கதைகளை எனது இலக்காக எடுத்துக் கொண்டேன். அதன்வழி உருவான ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’, ‘மோகினி மலையின் இரகசியங்கள்’, ‘பதின்மூன்றாவது மாடியும் இரகசியக்கதவுகளும்’, ‘இருள் சூழ்ந்த இரகசிய பாதை’, ‘உயாங் மலை’, ‘மாயவிடுதி’ என ஆறு சிறார் மர்ம நாவல்கள் வெளிவந்தன. இவையனைத்தும் மலேசியாவில் சிறார்கள் மத்தியில் வாசிப்பு அலையைஉண்டாக்கியது. நாடெங்கிலும் பெற்றோர்கள் எனக்கு அழைத்து என் நாவல்கள் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்த அவர்களின் பிள்ளைகள் பற்றிப் பேசத் தொடங்கினர். சிறுவர்கள் தங்களின் தலையணைக்கு அருகில் இந்தச் சிறார் நாவல்களை வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கினர். இன்னும் சில மாணவர்கள் ஒரே நாவலை பத்துக்கும் மேற்பட்டமுறை வாசிப்பதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர். மின்னஞ்சல் வாயிலாக எனக்குப் பிள்ளைகளின் கடிதங்கள் வரத் தொடங்கின. இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது 2014 தொடங்கி இப்பொழுதுவரை எனது சிறார் நாவல்கள் சிறார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாக உறுதியாகச் சொல்ல முடியும். 5. உங்களுடைய ஒருங்கிணைப்பில் சிறார் இலக்கியவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறீர்கள். புதிய சிறார் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்களா? இதுவரை ஆறு சிறார் இலக்கிய விழாவை நாடு தழுவிய நிலையில் முன்னெடுத்துள்ளேன். இதுவரை சிறுவர்கள் எழுதிய மூன்று சிறுவர் சிறுகதைகளின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன். அதன் வழியாக ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறார்களை எழுத்தாளர்களாக அறிமுகப்படுத்தியுள்ளேன். அவற்றுள் சிலர் இப்பொழுது இளம் எழுத்தாளர்களாகத் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறார்கள். துளசி தேவி சரவணன், தீர்த்தனா முத்துராமன் தமிழ்ச்செல்வன் கனகநாதன் போன்ற இளையோர்களைக் குறிப்பிடலாம். ஆனால், அவர்கள் தொடர்ந்து சிறார் இலக்கியத் துறையில் பங்களிப்புச் செய்ய இன்னும் சில காலம் ஆகலாம் என்பதே எனது ஊகமாகும். 6. பெரியவர்களுக்காகவும் எழுதுகிறீர்கள். சிறார் இலக்கியம் எழுதுவதற்கான தொடக்கப்புள்ளி எது? தமிழ்ப்பள்ளியில் போதிப்பதால் இயல்பாகவே சிறுவர்களுடந்தான் புழங்கிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் கதைகளைக் கேட்பது, சுட்டித்தனங்களை இரசிப்பது, சிறுவர்களை முன்வைத்துக் குறும்படங்கள் இயக்குவது போன்ற செயல்பாடுகள் தொடக்கத்திலிருந்தே இருந்ததால் 2012ஆம் ஆண்டில் சிறுவர் சிறுகதை எழுதுவதற்குரிய மனநிலை இலகுவாகவே வாய்த்தது. அப்பொழுது தேர்வுக்காக மாணவர்களைச் சிறார் சிறுகதையொட்டி தயார் செய்ய வேண்டிய தேவை நாடு முழுவதும் இருந்ததால் சிறுவர் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். மேலும், திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் மலேசியத் தேர்வு வாரியத்தில் தமிழ்த்துறையில் இருந்ததால் அவருடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் நவீன சிறார் இலக்கியம் படைக்கத் தனித்துவமான பாதையை உருவாக்கிக் கொடுத்தது. 2014இல் நிகழ்ந்த எனது தந்தையாரின் மரணம்தான் எனக்குள் இருந்த சிறுவனை முழுமையாக அடையாளம் காட்டியது. எங்கள் வீட்டில் நடந்த முதல் மரணத்தின் முன்னே வரம்பற்று உடைந்து கிடந்தேன். அப்பொழுது என்னைத் தூக்கி நிறுத்தியது அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் ஆறே நாளில் எழுதி முடித்த எனது முதல் சிறார் நாவலான ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ தான் எனலாம். அப்பாவை நினைத்துச் சிறுபிள்ளையாய்த் தேம்பிக் கிடந்த எனக்குள் இருந்த சிறுவனை நான் இலக்கியத்திற்குள் வரவழைத்துக் கொண்டேன். அங்கிருந்துதான் எனது சிறார் இலக்கியப் பயணம் உச்சம் பெறத் தொடங்கியது. 7. மலேசியத் தமிழ்ச்சிறார் இலக்கியத்தையும் தமிழ்ச்சிறார் இலக்கியத்தையும் ஒப்பீடு செய்து சொல்லமுடியுமா? இக்கேள்வி பெரிய பரப்பையொட்டியதாக விரியக்கூடியதாகும். ஆயினும், சுருக்கிச் சொல்ல முயல்கிறேன். நான் முன்பே சொன்னது போல தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சஞ்சிக்கூலிகளாக மலாயா வந்தபோது உடன் பண்பாட்டையும் மொழியையும் இலக்கியத்தையும் கொண்டு வந்திருந்தார்கள். மலேசியத் தமிழர் வரலாற்றை ஆராயும்போது இவையாவும் விரிவுக் கொள்ளும். அப்படித் தாலாட்டில் தொடங்கியதுதான் சிறார் இலக்கியம். விட்டுவந்த நிலத்தின் மீதான பிரிவேக்க உணர்வை வெளிப்படுத்த தமிழர்கள் பாடிய நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்புகளை ஆராயும்போது இப்புரிதல் உண்டாகின்றன. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து கிளர்ந்து வெளியேறிய பல கிளைகளில் மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியமும் ஒரு பகுதியாகியுள்ளது. அதே போல 2000க்குப் பிறகு உருவான நவீன சிறார் இலக்கியத்தின் உருவாக்கம் மலேசியாவிலும் தாக்கத்தை உண்டாக்கியிருந்தன. கல்வியின் வழியாக நவீன சிறார் படைப்பிலக்கியம் உச்சம் கொண்டது. சிறார்களை முன்னிறுத்தும் சிறார் இலக்கியம் வகைமைகள் வெளிவரத் தொடங்கின. அதுவரை நீதிக்கதைகளை மட்டுமே தக்க வைத்திருந்த மலேசியத் தமிழ்ச்சிறார் இலக்கியம் திரு.பி.எம் மூர்த்தி, கு.கிருஷ்ணன், கே.பாலமுருகன், நவீன், கோ.புண்ணியவான், முருகையா முத்துவீரன், விச்சு மாமா என இன்னும் சிலரின் மூலம் சிறுவர்களை முதன்மையானவர்களாக முன்னிறுத்தும் இலக்கியப் போக்குகள் கொண்ட படைப்புகள் வெளிவரத் துவங்கின. அதன் பின்னர் மணிராமு, செகு ராமசாமி போன்றவர்களும் சிறார் நாவல்களை எழுதியுள்ளனர். 8. மலேசியத் தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் முன்னேற்றத்திற்கான உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன? தொடர்ந்து சிறார் நாவல்கள் மீது கவனம் செலுத்தவுள்ளேன். இன்னும் சிறார் இலக்கிய வாசகர்களைப் பரவலாக்கவும் சிறார் இலக்கியத்தின் மீதான வாசிப்பு இரசனையை தூண்டவும் உதவியாக இருக்கும். அடுத்து, வருடந்தோறும் செய்யப்படும் சிறார் இலக்கிய விழாவினை மேலும் பன்முகப்படுத்தி நாடு தழுவிய நிலையில் தீவிரப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு. சிறார்களுக்காக நவீனத் தமிழ் சிறார் இலக்கிய இதழ் ஒன்றையும் தொடங்க வேண்டும் என்கிற திட்டம் உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான். 9. உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்துச் சொல்ல முடியுமா? எனது அடுத்த சிறார் நாவல் தயாராகிவிட்டது. வரும் செப்டம்பரில் அந்த நாவல் வெளிவருகிறது. பெரிய காது சிறுவன்’ என்கிற தலைப்பில் கனவுருப்புனைவை மையப்படுத்தி அந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. உதயசங்கர் 150 க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- மாபெரும் பெண் ஆளுமை வசந்தி தேவி
வாழ்நாள் முழுவதும் பொது சமூகத்திற்காகவே உழைத்த வசந்தி தேவி என்னும் மாபெரும் பெண்ணாளுமை இன்று நம்மோடு இல்லை. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்" என்ற குறளின்படி வாழ்ந்தவர். "ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி" என்ற ராமலிங்கரின் அருட்பா வாசகத்தின் படி அப்பாவால் வழிநடத்தப்பட்ட வசந்தி தேவி இறுதியில் கம்யூனிசம் ஒன்றுதான் வழி. புரட்சி வந்தால் தான் அனைத்து விதமான சமூக சிக்கல்களும் சரியாகும் என்று தன் தந்தையால் திசை மாற்றம் செய்யப்பட்டார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மற்ற பெண் பிள்ளைகளைப் போன்று தன் வாழ்க்கையை தேர்வு செய்யாமல் வாசிப்பு விவாதம் ஆகியவற்றின் ஊடாக சமூகத்தை அறிய விரும்பினார். பெரியார் சிந்தனை காலனிய எதிர்ப்பு அரசியல், சாதிய சமுதாயத்தை விமர்சன பூர்வமாக அணுக வேண்டிய தேவை ஆகிய மூன்றையும் அவரின் தந்தையின் கருத்தியல் மூலமாக புரிந்து கொண்டார். 1957-ல் மாநில கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மார்க்சியத்தின் மீது வசந்தி தேவி அவர்களுக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது. சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் பிரம்மாண்டமான வளர்ச்சி, சீனத்தின் எழுச்சி, கியூபா, வியட்நாம் ஆகியவற்றின் போராட்ட வரலாறு வசந்தி தேவி அவர்களின் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்தன. அந்த காலகட்டத்தில் இந்திய அரசியலில் இடதுசாரி இயக்கத்தினர் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர். இது அனைத்தும் வசந்தி தேவியை மார்க்சியத்தின் பால் ஈர்த்தது. 1975 ஆம் ஆண்டு வசதி தேவி தன் கணவருடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றார். அப்போது அந்நாட்டில் ஏற்பட்டிருந்த இடதுசாரி அரசியல் கிளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட அறிவு புரட்சியும் அவருடைய உலக பார்வையை மாற்றி அமைத்தன. பிலிப்பைன்ஸ்ன் ஜனநாயகம் கெட்ட அரசியல் அந்நாட்டில் எத்தகைய விபரீதங்களை நிகழ்த்தியது என்பதை கண்கூடாக பார்த்த வசந்தி தேவி சுதந்திர இந்திய அரசினை ஜனநாயக படுத்த வேண்டும் என்பதிலும் மக்களின் அரசாக அதனை செயல்பட வைக்க வேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருந்தார். அரசு அமைப்புகளுக்கு இருக்கும் அதிகாரத்தை சரியான வகையில் கையாளுவதிலும் அவர் கவனம் செலுத்தினார். "மகளிர் ஆணையத்தில் அவர் செயல்பட்ட போதும் சரி, பொதுக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி கல்வி உரிமை குறித்து பேசியும் எழுதியும் பரப்புரை செய்த போதும் சரி, மனித உரிமைக் கல்வியை அரசுப் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் சரி ஜனநாயக மதிப்பீடுகளை வளர்த்தெடுக்கும் பணிகளாகவே அவற்றை வசந்தி தேவி அணுகினார்" என்கிறார் வ.கீதா. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவராக திருமதி வசந்தி தேவி 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். மகளிர் ஆணையத்தில் பணி செய்த தன்னுடைய பணி காலம் குறித்து வசந்தி தேவி அவர்கள் கூறும் போது "ஆணையத்தின் சிறிய கதவுகளை வந்து தட்டிய ஒவ்வொரு மனுவின் பின்னும் ஒரு பெண்ணின் ஆற்றமுடியாத கண்ணீர், கதறல், வேதனை, அவமானம், ஆதரவின்மை, ஆணாதிக்க சமுதாயத்தின் கொடூரங்களைப் பற்றிய அவலக் குரல்கள், ஆயிரம் ஆண்டு கடந்து தொடரும் பழம்பெரும் பாதகங்கள், நவீன இந்தியாவின் புதிய விவகாரங்கள், இவை அனைத்தையும் ஒரு அணுவில் குவிந்த குறுகிய உயிர்த்துளிகளைப் போல நான் கண்டேன்" என்கிறார். பெண்ணின் நிலை பற்றிய விழிப்புணர்வை கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களிடையே அவர் உருவாக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார். அவர் திண்டுக்கல் கல்லூரியில் பணியாற்றிய சமயத்தில் 'பெண்ணின் நிலை வரலாற்றுப் பின்னணியில்' என்ற கண்காட்சி ஒன்றை உருவாக்கியதன் மூலம் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்ணுக்கு நிகழும் அநீதிகளை வரலாற்றின் பின்னணியில் புள்ளி விவரங்களோடு சித்தரித்து வரலாறு முழுவதும் பெண்கள் பெற்ற வலியை உலகிற்கு உரக்கச் சொன்னார். அந்த கண்காட்சி தமிழகத்தின் பல கல்லூரிகளுக்கு பயணித்து பெரும் வெற்றி கண்டது. கல்லூரி மாணவியரும் ஆசிரியர்களும் வீதிக்கு வருவது என்பது மிகப் புதுமையாக இருந்த அந்த காலகட்டத்தில் உளுத்துப்போன நில பிரபுத்துவம் பத்தாம் பசலித்தனமான ஆணாதிக்கம் இவற்றுக்கு இலக்கணமாக கருதப்பட்ட கும்பகோணத்தின் தெருக்களில் அந்த புதுமையை வசந்தி தேவி நிகழ்த்தி காட்டினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் மகளிரியல் என்ற சிறப்புத் துறையை உருவாக்கி மாறுபட்ட கல்வி சூழலை ஏற்படுத்தி பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார் நிர்வாகத்திலும் ஆசிரியர்களின் நடத்தையிலும் ஆசிரியர் மாணவர் உறவிலும், மாற்றங்களை கொண்டு வருவதற்காக அவர் பெரும் புரட்சியே செய்தார். உசிலம்பட்டி தாலுகாவில் பெண் சிசுக்கொலைகள் பற்றிய அவரது ஆய்வு மிக சுவாரசியமானது என்கிறார் வ.கீதா சிசுக்கொலை தொடர்பான ஆய்வின் போது உசிலம்பட்டி வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து இப் பிரச்சனை குறித்து பேசினார். பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொண்டார். இவை அனைத்தும் அவர் மகளிர் ஆணையத்தின் தலைவியாக பொறுப்பு ஏற்றதற்கு பிறகு மிகப்பெரிய அளவில அவருக்கு உதவியது என்பது மறக்க முடியாத உண்மை. அந்த ஆய்வு குறித்து வசந்த தேவி கூறும் போது "ஆய்வுகள் சமுதாயம் குறித்து நமக்குள்ள சராசரியான பார்வையை மாற்ற உதவும்" என்கிறார். ஜாதி மற்றும் பெண் அடிமைத்தனம் ஆகியவற்றிற்கு இடையிலான நெருக்கமான உறவை அதன் அத்துணை சிக்கலோடும் முரண்களோடும் வசந்தி தேவி அவர்கள் புரிந்து கொண்டதால் மகளிர் ஆணைய தலைவராக இருந்த போது குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறை சமுதாய வேலைத்தளங்களில் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் ஆகியவற்றின் வேறான பிரச்சனைகளை முழுமையாக புரிந்து கொண்டு அவற்றை தீர்வு நோக்கிய பாதையில் கொண்டு செலுத்துவதில் வசந்தி தேவியால் சிறப்பாக செயல்பட முடிந்தது. இப்படியாக வாழ்நாள் முழுவதும் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மனித உரிமைக்காகவும் போராடிய ஆகச்சிறந்த ஆளுமையான திருமதி வசந்தி தேவி அவர்கள் இலக்கியத்திலும் கணிசமான பங்களிப்பை செய்துள்ளார். குழந்தைகள் மத்தியில் பாட புத்தகம் தாண்டிய வாசிப்பைக் கொண்டு செல்வதில் அரசோடு இணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டார். குழந்தைகளுக்கான கதைகளையும் அவர் எழுதியுள்ளார். அனைவரும் சமம் அனைவருக்கும் சமநீதி சம உரிமை என்ற மேம்பட்ட சமூகம் அமைவதற்காக தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் பெண் ஆளுமையாகத் திகழ்ந்த வசந்திதேவியின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு மாபெரும் இழப்பு.
- புலிக்குகை
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய மாலை நேரம். மாலாவும் மீனாவும் ஊரை அடுத்திருந்த சொர்ணமலைக்கு போய்வருவோம் என்று புறப்பட்டார்கள். மலையுச்சியில் ஒரு பழமையான கதிரேசன் கோவில் இருந்தது. அதுவரை போய் அதற்கடுத்திருந்த சரிவில் இறங்கினார்கள். நடந்த களைப்பில் தண்ணீர் தாகமாய் இருந்தது. எங்கும் பாறைகளும் எலுமிச்சைப்புல்லுமாய் நிறைந்திருந்தன. “அய்.ய்.யா.. வாசனைப்புல்” என்று ஓட்டமாய் போய் புல்லைப் பிடுங்கி உள்ளங்கைகளில் தேய்த்து முகர்ந்து பார்த்தார்கள். அதன் வாசனையில் களைப்பு நீங்கியது போலிருந்தது. ‘தண்ணீர் குடித்தால் தேவலை’ என்றிருந்தது. எங்கேயாவது கிடைக்குமா என்று கொஞ்சதூரம் போய் தேடினார்கள். மழையில் நனைந்தும் ஈரக்காற்று பட்டும் பாசம் பற்றி வெயிலில் கரேலென காய்ந்துபோன ஒரு பாறை பக்கமாய் போனபோது அங்கிருந்த ஒரு எறும்புத்தின்னி இவர்களைப் பார்த்தது. “குழந்தைகளே.. எங்கே வந்தீர்கள்” பாறை இடுக்கிலிருந்து தலையை நீட்டியபடி கேட்டது. மாலா பயந்துபோய் ஓர் எட்டு பின்வாங்கினாள். “மாலா பயப்படாதே. எறும்புத்தின்னி நம்மை ஒன்றும் செய்யாது. அது சாதுவாக இருக்கும்” மீனா தைரியப்படுத்தினாள். “இதற்கு வால் ஏன் நீளமாக இருக்கு” “அதோட குட்டி அந்த வால் மேலே உட்கார்ந்து சவாரி போகுமாம்” “உடம்பெல்லாம் அதற்கு செதில்களாக இருக்கே” “செதில்கள் இருக்கிறதாலதான் புலிகூட இதைத் தின்னாதாம்” “நீ சொல்வதை பார்த்தால் ஆர்வமாக இருக்கே.. நான் தொட்டுப்பார்க்கட்டுமா” “ம்.. தொட்டுப்பாரு” மாலா எறும்புத்தின்னியை தொட்டு நீவினாள். அது சாதுவாக இருந்தது. “மாலா.. எறும்புத்தின்னி நம்ம கூட பழகீருச்சி. எதிரிகளைப் பார்த்தால்தான் அது பந்துபோல சுருண்டுகொள்ளும். இப்போது நாம் இதோடு பேசலாம்”. “நாங்க புலிக்குகையை பார்க்க வந்தோம். தண்ணீர் தாகமாக இருக்கிறது. குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா” “என்கூட வாங்க” என்று ஒரு உயரமான பாறைக்கு அருகில் கூட்டிக்கொண்டு போனது. பாறை இடுக்கில் ஒரு அழகான நீர்ச்சுனை தென்பட்டது. உள்ளங்கைகளை குவித்து அள்ளிக்குடித்தால் அது ஒரு சுவையான நீராக இருந்தது”. “எறும்புத்தின்னி.. இங்கே புலிக்குகை எங்கே இருக்கு” “இங்கிருந்து கொஞ்சதூரம் போனால் குன்றின் மேற்குச்சரிவில் இருக்கிறது.. வாங்க போகலாம்” என்று கூட்டிக்கொண்டு சென்றது. “குழந்தைகளே.. நீங்கள் போய் பாருங்கள். சீக்கிரமாக இங்கேயிருந்து போயிரணும். புலி குகைக்கு திரும்பி வருகிற நேரம். என் குட்டியை பார்க்க பாறை வீட்டுக்கு போகிறேன்” என்று திரும்பிப்போனது. புலிக்குகை ஒரு விசாலமான குவிமாடம் போன்ற அமைப்பில் இருந்தது. குகையின் முன்புறம் உயர்ந்து அகன்ற வாயிலும் அதற்கேற்ப ஒரு கல்கதவு பக்கவாட்டுப்பாறையில் சாய்த்துவைக்கப்பட்டும் இருந்தது. குகையின் உள்ளே நுழைந்தால் வலதுபுறம் வெளியேறிப்போக ஒரு திறப்பு இருந்தது. இடது மூலையில் ஒரு ஆள் தவழ்ந்து போகும்படியாக குகைப்பாதை நீண்டுபோனது. குகைக்குள் அகல்விளக்கு தீபம் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தவழ்ந்துபோய் பார்த்தால், ஓரிடத்தில் நிமிர்ந்து நிற்கும் அளவிற்கு குகையின் மேல்பகுதி உயர்ந்திருந்தது. அங்கிருந்த கல்திண்டில் சிறிதுநேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். அதற்கப்பால் குகையினுள் ஒன்றுமே தெரியவில்லை. சரி போவோம் என்று குகைவாயிலுக்கு திரும்பிவந்தார்கள். வெளிக்காற்று சிலீரென வாயில் வழியாக குகைக்குள் வீசிக்கொண்டிருந்தது. சூரியன் தொடுவானத்தில் இறங்குவது தெரிந்தது. மஞ்சள்வெயில் பாறைச்சுவர்களின் மேல் படர்ந்திருந்தது. “குழந்தைகளே.. நான் பூமியின் இன்னொரு பக்கமுள்ள தேசத்திற்கு செல்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது இருட்டிவிடும். நீங்கள் வெளிச்சத்திலேயே வீட்டிற்கு போய்விடுங்கள்” என்று செவேலென கிரணங்களை கையசைப்பது போல் விசிறி சிரித்தது. குகைக்கு வெளியே புலியின் உறுமல் சப்தம் கேட்டது. சிறுமிகள் நடுங்கிப்போய் குகையின் ஒரு மூலையில் போய் ஒண்டியபடி பதுங்கிக்கொண்டனர். “இப்ப என்ன செய்வது. சற்றுமுன்பே இங்கிருந்து போயிருக்கலாமே” மாலா முணுமுணுத்தாள். “என்ன.. புதிதாக இன்றைக்கு மனிதவாசம் வீசுகிறதே..” கேட்டபடியே புலி குகைக்குள் நுழைந்தது. ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் இருந்த சிறுமிகளை உற்றுப்பார்த்தது. “ஏய்.. குழந்தைகளே.. நீங்கள் யார்.. என் வீட்டில் வந்து என்ன செய்கிறீர்கள்” அதட்டலாய் கேட்டது. “எங்களை ஒன்றும் செய்துராதே. இங்கிருந்து போயிருவோம்” “பயப்படாதீர்கள். நான் உங்களுடைய நண்பன். வரும் வழியில் எறும்புத்தின்னி உஙகளைப் பற்றி சொல்லி அனுப்பியது” என்று தான் கொண்டு வந்திருந்த மல்பெரி பழங்களையும் சிவந்த ஜிங்கிலிகினி பழங்களையும் குழந்தைகளிடம் நீட்டியது. அவை இரவு நேரங்களில் குகையில் தங்கவரும் வெளவால்களுக்காக வழக்கமாக கொண்டு வரும் பழங்கள். நீலமும் சிவப்பு நிறமுள்ள அந்த காட்டுப்பழங்கள் பார்ப்பதற்கு வசீகரமானதாக இருந்தன. “ம்.. சாப்பிடுங்கள் குழந்தைகளே. பழங்கள் சுவையாய் இருக்கும். நீங்கள் என் விருந்தாளிகள்” புலி உபசரித்தது. “நீ மனிதர்களை பார்த்தால் அடிச்சி சாப்பிட்டுருவேன்னு ஊர்ல சொன்னாங்களே.. எங்களிடம் அன்பாக இருக்கிறாயே” புலி மீதான பயம் இப்பொழுது விட்டுப்போயிருந்தது. “உங்களைப் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன். நீங்க நல்ல பிள்ளைங்கன்னு. மற்றவர்களை துன்புறுத்துகிற கொடூரமான மனிதர்களைத்தான் எனக்குப் பிடிக்காது” “அப்படியென்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்” என்று அருகில் போய் புலியைத் தொட்டு வருடிக்கொடுத்தனர். அது பூனையைப் போல் சாதுவாகி கண்களை மூடிமூடித்திறந்து பார்த்தது. அந்த நேரத்தில் வெளவால்கள் கூட்டமாக பறந்து வந்து குகையின் மேற்கூரையில் தலைகீழாக தொங்கியபடி கேட்டது, “புலி நண்பா.. எங்களுக்கு பழங்களை கொண்டு வந்திருக்கிறாயா”. புலி கல்திண்டில் இன்னுமிருந்த பழங்களை எடுத்து நீட்டியது. பழங்களை தின்ற வெளவால்கள் குகைக்கு உள்ளேயும் வெளியேயும் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. “இப்படி வாஞ்சையோடு உபசரிக்கிற நீ எதற்காக மான், காட்டுப்பன்றி, கேளை ஆடுகளை அடிச்சி சாப்பிடுறே..” மாலா தன் மனதிலிருந்த சந்தேகத்தை கேட்டாள். “இயற்கையில் மாமிசம் உண்பது என்னோட சுபாவம். அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கவும் காடு சமநிலையை பராமரிக்கவும் இது இயல்பாக நடக்கிற ஒன்றுதானே” “சரி. நாங்கள் புறப்படுகிறோம். பொழுது இருட்டி நேரமாகிப்போச்சி” “உங்களிடம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். நீங்கள் நன்றாக படித்து முன்னேற்றமாகி சகமனிதர்களுக்கு உங்களால் முடிந்த சேவைகளை செய்யணும். பணம் பொருளுக்கு ஆசைப்பட்டு மயங்கிப்போய் யாரையும் துன்புறுத்தி கையேந்தியாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் கொடுப்பவர்களாகத்தான் இருக்கணும். அதுதான் இந்த புலி நண்பனின் விருப்பம்” “அப்படியே செய்கிறோம் என்று வாக்குத் தருகிறோம். சொன்ன சொல்லை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றுவோம். இப்போது நாங்கள் விடை பெறுகிறோம்” நிலவு கீழ்வானில் எழும்பிக்கொண்டிருந்தது. அதன் வெளிச்சம் பாதையில் படர்ந்திருந்தது. ஊர் எல்லைவரை வழித்துணையாக புலியும் கூடவே போய் வந்தது. வெளவால்களும் வானவெளியில் பறந்தபடியே சுற்றிசுற்றி வந்தன. நட்சத்திரங்கள் மினுக்மினுக்கென கண்சிமிட்டிக்கொண்டிருந்தன.
- யாருக்குப் பழம் ?
அனிதா பத்து வயது சிறுமி. வீட்டில் அவள் ஒருத்தி தான். கூட பிறந்த தம்பி, தங்கை, அக்கா கிடையாது. அதனால் செல்லமாக வளர்ந்தாள். அவள் நினைப்பது நடந்தது. கேட்டது கிடைத்தது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பாள். அனிதா தினமும் வீட்டில் செய்யும் ஒரு வேலை உண்டு. அவள் குழந்தையாக இருக்கும் போது வைத்த கொய்யா மரத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதுதான். 'என் கொய்யா மரமே, நீ சீக்கிரம் பழம் காய்க்கனும். முதல் பழத்தை நான்தான் சாப்பிடனும்' என்று மரத்திடம் பேசுவாள். அந்த நேரத்தில் காற்று பலமாக வீசும். மரம் ஆடும். 'ஓ'... சரியென்று தலையாட்டுகிறாயா?' என்று அனிதா கேட்பாள். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்லும் முன் தோட்டத்திற்கு வந்தாள், தண்ணீர் ஊற்றினாள். மரத்தைப் பார்த்த அனிதாவின் கண்கள் பெரிதாயின. 'ஆஹா!' என்று கத்தினாள். கொய்யா மரத்தில் பச்சையாக ஒரு பழம் தொங்கிக் கொண்டிருந்தது. அனிதா துள்ளிக் குதித்து அம்மாவிடம் ஓடினாள். 'அம்மா என் கொய்யா மரத்தில் முதல் பழம் காய்ந்திருக்கு' என்று சொன்னாள். 'பழம்னு சொல்லாதே. காய்னு சொல்லு' என்று அம்மா திருத்தினாள். 'இப்போ காய்... பிறகு பழம்... சரிதானே!' என்றாள் அனிதா. 'எங்கே காட்டு?' என்று அம்மாவும் தோட்டத்திற்கு வந்தாள். அனிதா விரலால் காட்டினாள். கொய்யா மரத்தின் ஒரு கிளையில் மட்டும் சில பூக்கள் வந்திருந்தன. ஒரு பூவில் கோலி குண்டு அளவில் காய் காய்த்திருந்தது. 'இப்போதான் பிஞ்சு வந்திருக்கு...' என்றாள் அம்மா. அந்த நாளிலிருந்து அனிதாவுக்கு ஒரு புதிய வேலை வந்து விட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் அந்த காயைப் பார்க்கச் செல்வாள். சில வாரங்களுக்குப் பிறகு காய் பச்சையிலிருந்து மாறி மெல்ல மஞ்சள் கலந்து பச்சையாக மாறியது. அனிதாவின் மனதில் ஒரு இனிய கனவு. 'இந்தப் பழத்தை நான் பறித்து சாப்பிட வேண்டும். இது என் உழைப்பின் பலன்.' ஆனால் அவளுக்குத் தெரியாமல் இன்னொரு உயிர் அந்தப் பழத்தைக் கவனித்து வந்தது. தோட்டத்தில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டும் எதையாவது எடுத்து வாயில் வைத்து கொறித்துக் கொண்டும் இருக்கும் ஒரு அணில் தான் அந்த உயிர். மரக்கிளையிலிருந்த பழத்தை நோக்கி, 'சிறிய பழம்... இன்னும் கொஞ்ச நாட்களில் இனிப்பாக மாறும். அப்போ அதை நான் சாப்பிடுவேன்' என்று தன்னைப் பார்க்க வந்த நண்பன் அணிலிடம் சொன்னது. இப்படியாக, மரத்திலுள்ள கொய்யா பழத்தை அனிதாவும் அணிலும் தனக்கே சொந்தம் என்று நினைத்தனர். கொய்யா மரத்தின் கிளைகளில் அணில் ஓடுவதையும் பறவைகள் வருவதையும் அனிதா பார்த்தாள். பழத்தைப் பாதுகாக்க ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடி கட்டலாமா? என்று நினைத்தாள், அதை அப்பாவிடம் கேட்டாள். 'அப்படி செய்தால் பழம் வீணாகி விடும்' என்று அப்பா சொன்னார். ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்லும் முன் அனிதா பழத்தைப் பார்த்தாள். 'இன்னும் இரண்டு நாட்களில் இதை பறிக்கலாம்' என்று மனதிற்குள் நினைத்தாள். அப்போது கிளையில் அமர்ந்திருந்த அணில் அவளை நோக்கி 'சுற்... சுற்...' என்று சத்தமிட்டது. அனிதா சிரித்தாள். 'ஓ! நீயும் இந்தப் பழத்துக்காக காத்திருக்கிறாயா? ஆனா இது எனக்குத் தான்' என்று விளையாட்டாகச் சொன்னாள். அணிலும் அவள் சொல்வதுப் புரிந்தது போல, வாலை அசைத்துக் கொண்டே பழத்தை கண்களை சிமிட்டிப் பார்த்தது. அடுத்த நாள். பழம் இன்னும் அதிகமாக மஞ்சளாகி வாசம் வீசத் தொடங்கியது. அனிதா அதை பறிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் அணில் வேகமாக பாய்ந்து வந்து கிளையில் அமர்ந்து விட்டது. அந்த காட்சியைப் பார்த்த அனிதாவுக்கு மனதில் வேறொரு எண்ணம் வந்தது. 'இந்த மரத்தில் காய்த்த முதல் பழம்... நான் சாப்பிட்டால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் இதை எப்போதும் மரத்தோடு விளையாடிக் கொண்டிருக்கும் அணிலுக்குக் கொடுத்தால்? அது எவ்வளவு சந்தோஷப்படும்.' அனிதா அணிலைப் பார்த்து சிரித்தாள். 'அணில் நண்பா, இந்தப் பழம் உனக்குத்தான். நீ சாப்பிடு. நான் கடையில் கூட வாங்கி சாப்பிடுவேன். உன்னால் முடியாது. நீ சாப்பிடு' என்று அன்போடு சொன்னாள். அனிதா அப்படிச் சொன்னதும் அணில் ஒரு பாய்ச்சலுடன் பழத்தைப் பறித்துக் கொண்டு கிளையில் அமர்ந்து மென்று சாப்பிட ஆரம்பித்தது. அதன் கண்களில் வெளிச்சமும், முகத்தில் திருப்தியும் தெரிந்தது. அந்த காட்சியைப் பார்த்த அனிதாவின் மனம் மகிழ்ந்தது. நான் சாப்பிடவில்லையென்றாலும் இதனால் இன்னொரு உயிருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. அதுவே உண்மையான மகிழ்ச்சி என்று நினைத்தாள். சில நாட்களில் கொய்யா மரத்தில் இன்னும் பழங்கள் காய்த்தன. அனிதா பழங்களை குடும்பத்தோடு பகிர்ந்து சாப்பிட்டாள். ஆனால் முதல் பழம் அணிலுக்கு விட்டுக் கொடுத்தாள்... மறக்க முடியாத இனிய நினைவாக மாறி விட்டது.












