top of page

இயலில் தேடலாம்!

211 results found with an empty search

  • கலங்காதே கண்ணம்மா

    துள்ளி ஓடும் கண்ணம்மா உன் கண்ணில் கண்ணீர் ஏனம்மா? குறைகளை கண்டு கலங்காதே குறையும் நிறைதான்  வருந்தாதே! வெண்ணிற மேகம் கருத்தது வான் மழை எங்கும்  கொட்டியது! கூட்டுப்புழுவும் சுருங்கியது பட்டாம் பூச்சியாய் பறந்தது! மின்னல் மண்ணில் முட்டியது காளான் அங்கே பிறந்தது! ஜன்னல் கொஞ்சம் திறந்தது அதில் பரந்த வானம் தெரிந்தது! பசுவின் மடியோ கனத்தது கன்றின் வயிறோ நிறைந்தது! முட்டை உள்ளே உடைந்தது அழகிய குஞ்சும் பிறந்தது! விதையும் மண்ணில் புதைந்தது மரமும்  ஒன்று துளிர்த்தது! நெல்லும் ஆலையில் வெந்தது நாம் உண்ணும் உணவாய் வந்தது! இடர்களை கண்டு கலங்காதே புது விடியலும் பிறக்கும் வருந்தாதே! ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார். முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.

  • பள்ளிக்குப் போகலாம்!

    1. பள்ளிக்குப் போகலாம்! புத்தகங்கள் படிக்கலாம்! ஏனென்று கேள் நீ! பதில் தரும் கல்வி! பாடல் வழிச் சொல்லி பலதும் கற்கச் செல் நீ!   2. அகரம் கற்கத் தொடங்கு! ஆகச் சிறந்த அமுது! அறிவை வளர்க்கும் கல்வி! ஆதாரமே உணர் நீ! இறகை விரிக்க அறிந்து பறந்து வானில் பழகு!   3. கற்றலிலே இன்பம்! கற்போமே என்றும்! எழுதப் படிக்கப் பேச முனைவோமே கற்க! அறவழியே நிற்க இன்றே செல்வோம் கற்க!   4. சிந்திக்கத் தொடங்கு! சிறிதாகத் தொடங்கு! இருக்கும் நம் உலகில் இன்று என்ன புதிது? அறிவியலைப் படித்தால் அறியலாம் புதிது!   5. பள்ளி செல்ல விரும்பு! பாடம் இனிக்கும் கரும்பு! கற்றல் என்பது எளிது! கற்போம் அதனை உணர்ந்து! சிற்பம் போல நம்மைச் செதுக்கும் உளி கல்வி!

  • குழந்தைகளின் உரிமைகள் - 8

    யூனிசெப் சர்வதேசப் பிரகடனம் ஒரு குழந்தைக்கு இருக்கும் உரிமைகள் என யூனிசெப் அமைப்பு வரையறுத்துள்ள பிரகடனத்தில் அடுத்து நாம் பார்க்க இருப்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோருடனேயே சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை. "இது என்ன வினோதம்? குழந்தை தனது பெற்றோருடன்தானே வசிக்கும், வேறு எங்கே அது போகும்?" என மேற்கண்ட உரிமையைப் பற்றி நாம் வியப்படையக் கூடும். பொதுவாகப் பார்த்தால், ஒவ்வொரு குழந்தையும் அதன் பெற்றோருடன்தான் வசிக்கும்; அதில் எவ்வித ஐயமும் இல்லைதான். ஆனால், பல்வேறு காரணங்களால், பல குழந்தைகள் தமது பெற்றோர் வாழும் இடங்களில், அவர்களுடனேயே சேர்ந்து பாதுகாப் பாகவும், மகிழ்ச்சியுடனும் வாழும் சூழ்நிலை அமையாமல் போய்விடுகிறது.  குறிப்பாகப் போர், இயற்கைச் சீற்றங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் ஓர் இடத்திலும், அவர்களின் பெற்றோர் வேறிடத்திலும் வாழும்படியான நிலை இன்று பல நாடுகளில் நிலவுகிறது. பெரும்பாலும், ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் மக்களின் குடியுரிமைகள் தொடர்பான பிரச்னைகள் எழும் பட்சத்தில், இந்த மாதிரியான பிரிந்து வாழும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது.  நமது இந்தியாவிலேயே, இப்போது குடியுரிமை என்ற பிரச்னை மிகவும் தீவிரமான பரிமாணங்களை எடுத்துக் கொண்டு வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றை நிறைவேற்றியுள்ள ஒன்றிய அரசு, அந்தச் சட்டத்தின்படி, பல கோடிப்பேரை,"நீங்கள் இந்தியர்கள் அல்லர்; பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்" என்று முத்திரை குத்தி, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. எனினும், நாடு முழுக்க இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக நடந்ததால், தற்போதைக்கு அந்த வெளியேற்றம் நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.  இப்போது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கிறோம் என்று பீகார் மாநிலத்தில் சுமார் 65 இலட்சம் மக்களுக்கு வாக்குரிமையை இல்லாமல் செய்திருக்கிறது ஒன்றிய அரசு. இதன் மூலம், மறைமுகமாகக் குடியுரிமையை மறுத்து விடவும் வாய்ப்புகள் உள்ளன.  இவ்வாறாகக் குடியுரிமை இல்லாமற் போகும் போதும், போரினால் பெற்றோரை இழக்கும் போதும், உள்நாட்டுக்கலவரங்களால் மொத்தமாக ஒரே சமயத்தில் ஏராளமான மக்கள் ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து போகும் போதும் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து விடுகின்றனர்.  சுனாமி, பூகம்பம் போன்ற பெரும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போதும் முதலில் பாதிக்கப்படுவோர் குழந்தைகளே.  பெற்றோரின் அன்பும்,அரவணைப்பும், பாதுகாப்பும் ஒரு குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு அடிப்படையான அம்சங்களாக உள்ளன. புறக்காரணங்களால் மட்டுமன்றி, பெற்றோருக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை, பிரிவு, மண விலக்கு, மண முறிவு போன்ற அகக் காரணங்களாலும் குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழும் நிலை ஏற்படுவதை நாம் இன்று பெரும் அளவில் காண்கிறோம். இத்தகைய பிரிவுகளால் அநாதைகளாக ஆகி விடும் / ஆக்கப்பட்டு விடும் குழந்தைகள் அந்தத் துயரினால் அடையும் மன அழுத்தங் கள் மிகவும் கொடுமையானவை.  குறிப்பாகப் போர்களினாலும், உள்நாட்டுக் கலவரங்களாலும் பெற்றோரை இழந்து தனித்து வாழும் குழந்தைகளின் நிலை மிக மிகப் பரிதாபமானது. அத்தகைய குழந்தைகள், கிடைக்கும் வாய்ப்புக ளைப்  பயன்படுத்திக் கொண்டு ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குத் தப்பியோட முயல்கின்றனர். எல்லைகளைத் தாண்டி, உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செல்லுகையில், அந்த வேற்று நாட்டு இராணுவமும், காவல் துறையும் இவர்களைக் குழந்தைகளாயிற்றே என எந்தக் கருணையும் காட்டுவதில்லை.  சமீப காலங்களில், இஸ்ரேல் நாட்டு இராணுவம், பலஸ்தீன மண்ணில் காஸா பகுதியிலும் பிற இடங்களிலும் நிகழ்த்தும் படு கொலைகளை, ஒட்டு மொத்த உலகமும் வேடிக்கை பார்ப்பதை நாம் அனுதினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? இலங்கையிலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற சமயம் எத்தனை ஆயிரம்/ இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது பற்றிய விவரங்களை அந்த நாடு இன்று வரை வெளியிடவில்லை என்பது மற்றொரு உதாரணம்.  யூனிசெப் பிரகடனம், இதைப்பற்றிய விதியின் கீழ், ஒரு குழந்தை,தனது பெற்றோரை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டில் வாழ நேரும் பட்சத்தில், அந்தக் குழந்தையும், பெற்றோரும் பயணங்களை மேற்கொண்டு ஒருவரோடொருவர் மீண்டும் இணைவதற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தவறாமல் செய்துதர வேண்டும் என்கிறது. அவ்வாறு செய்தால் தான், அந்தக் குழந்தையும், அதன் பெற்றோரும் பரஸ்பரம் தொடர்பில் இருக்க முடியும் என்றும், ஒன்றிணைந்து வாழ முடியுமென்றும் கூறுகிறது.  நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பல்வேறு கொடுமைகளைப் பார்க்கும் போது, இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருக்கும் அத்தனை நாடுகளும் இந்த விதிகளை உண்மையிலேயே மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்விதான் நமக்கு எழுகிறது. வார்த்தைகளில் இந்த உரிமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டிருக்கும் உலக நாடுகள், உண்மையிலேயே அவற்றை முழு மனதுடன் நடைமுறைப்படுத்தினால், எத்தனையோ இலட்சம் குழந்தைகளின் இருண்டு  போன வாழ்க்கை ஒளிமயமாகும். அவ்வாறு செய்யுமா அந்த நாடுகள்?    கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • என் இனிய பறவையே

    புத்தக வாசிப்பும்,பறவை நோக்கலும்,எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள்.  எனக்கு  வாசிப்பின் மீதும், பறவை  நோக்கலிலும் ஆர்வத்தை வர வைத்தவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான்.     என்னுடைய அம்மா நிறைய புத்தகங்கள் வாசித்துக் கொண்டே இருப்பார்.. வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த புத்தகங்கள் பற்றி என்னிடமும் என் தங்கை மதியிடமும்  கதையாக சொல்வார். புத்தகங்களின் அறிமுகம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் கொண்டு வந்தது. அதேபோல் அப்பாவுக்கு இயற்கை மேல் இருக்கும் ஆர்வம், பறவைகள் பற்றியும் , மரங்களைப் பற்றியும் தேடலை எனக்குள் விதைத்தது.         இந்த மாற்றங்கள் நிகழ்ந்த காலம், கொரோனா காலகட்டம். அந்த நாட்களில் பள்ளிக்குச் செல்லாததால் எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது.  வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. முன்பே நூல்கள் வாசித்தாலும், அப்போது நிறைய நூல்கள் வாசித்தேன்.     குடும்பத்தோடு செலவிட நிறைய நேரமும் கிடைத்தது. ஒரு நாள் பால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது பக்கத்து வீட்டு மதில் சுவரில் குரங்கு ஒன்று  அமர்ந்து இருப்பதைப் பார்த்தோம். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்தோம். தினமும் வருமா? என்று பார்க்கும் ஆவலில் பால்கனியில் . தினமும் அமர ஆரம்பித்தோம். அப்போதுதான் எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய பறவைகள் வருவதை கவனித்தோம். அதற்கு முன்பு பள்ளி செல்லும் அவசரத்தில் இத்தனை பறவைகள் வருவதை கவனிக்காமல் இருந்தோம்.        முதன்முதலில் நாங்கள் பார்த்த பறவை பச்சைக்கிளி. பறவை பார்ப்பதில் எங்கள் ஆர்வத்தை உணர்ந்த அப்பா, நிறைய பறவைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். செம்பருந்து, கானாங்கோழி, சிறிய நீர்காகம், வக்கா, தகைவிலான், சின்னான் , சிலம்பன், கரிச்சான், குயில், வால் காகம் போன்ற பறவைகளைப் பார்த்தோம் அதைப் பற்றிய தகவல்களை அப்பா நிறைய சொன்னார். அப்படி ஆரம்பித்தது பறவை நோக்கல் ஆர்வம்.          பச்சைக்கிளியில் ஆரம்பித்த எங்கள் பறவை பார்த்தல் பயணம்,  தற்போது பூமன் ஆந்தை வரை, கிட்டத்தட்ட 194 பறவைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம். சரணாலயங்கள், ஏரிகள் குளங்கள், மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகள், எங்கள் தோட்டத்தின் அருகே உள்ள புதர்கள் புல்வெளிகள்  போன்ற பல்வேறு இடங்களில் பறவைகளை அவதானித்திருக்கிறோம்.           பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடு ஆரம்பகட்டத்தில் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாய் இருந்தது. அதற்குப் பிறகு பறவைகள் சார்ந்து நிறைய நூல்களை வாசித்தேன். அதில் தெரிந்து கொண்ட  அடையாளங்களை வைத்து பறவைகளின் பெயர்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். தற்போது பறவைகளின் குரலை வைத்து அடையாளப்படுத்தத் துவங்கி இருக்கிறேன். இந்தப் பறவை பார்த்தல் பயணத்தை எங்கள் மொத்த குடும்பமும் ஈடுபாட்டோடு செய்கிறோம்.          பொதுவாக பறவை ஆர்வலர்கள் அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு பறவை உண்டு. அந்தப் பறவை தான் என் இனிய பறவையும் கூட. அந்தப் பறவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் கருப்பு வெள்ளைஇருவாச்சி பறவை தான்.            அந்தப் பறவையை நாங்கள் பார்த்த அனுபவம் அலாதியானது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் ஒரு நாள் பயணமாக , மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறைக்கு சென்று இருந்தோம். என் இனிய பறவையை அன்று எப்படியும் பார்த்து விட வேண்டும்   என்ற ஆவலில் தான் அந்தப் பயணத்தை திட்டமிட்டு இருந்தோம். அதற்கு முன்பு மிக அருகில் இருவாச்சியின் குரலை கேட்டும் கூட எங்களால் அந்த பறவையை பார்க்க இயலாமல் திரும்பி இருக்கிறோம். பயணம் ஆரம்பித்தபோது இன்று கண்டிப்பாக பார்ப்போம் என்று மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது.       சீகாரப் பூங்குருவி,  நாட்டு உழவாரன், காட்டுச் சிலம்பன் போன்ற புதிய ப் பறவைகளை  பார்த்தோம். ஆனால் இருவாச்சியை மட்டும் பார்க்க இயலவில்லை. வால்பாறையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தோம். திடீரென ஒரு திருப்பத்தில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மரத்தின் உச்சியில் ஒரு பெரிய பறவை பறந்ததை பார்த்தேன். உடனே எங்கள் மகிழுந்தை அந்த திருப்பத்தில் நிறுத்திவிட்டு காத்திருந்தோம்.        அடர்ந்த மரம் என்பதால் அந்தப் பறவை அமர்ந்திருந்தது முதலில் தெரியவில்லை. ஆனால் இலைகளுக்கிடையே அதன் தனித்துவமான அலகு தெரிந்தது. அப்போதே அது இருவாச்சி தான் என்று அறிந்து கொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் வால் பகுதி தெரிந்தது. இரு கண்ணோக்கியைக்  கொண்டு பார்த்ததில், நாங்கள் மூன்று வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் என் இனிய பறவை தான் என்பதை  அறிந்தேன். சிறிது நேரத்தில் அதன்  பெரிய இறக்கைகளை விரித்துக்கொண்டு மேல் நோக்கி மிக அழகாய் பறக்கத்துவங்கியது.. அது ஒரு ஆண் இருவாச்சிப் பறவை. அதன் பிரம்மாண்டமான அழகிய தோற்றம் கண்ணுக்குள் சித்திரமாய் தங்கி விட்டது. இன்றும் கூட இருவாச்சிப் பறவையைப் பற்றி நினைக்கும் போது அந்தக் காட்சி தான் கண்ணுக்குள் வரும்.            மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு எங்கள் மகிழுந்தை இயக்கிக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். கண்ணா ரெண்டு லட்டு  தின்ன ஆசையா?  என்பது   போல நம் மாநில விலங்கான வரையாடு அங்கே ஒரு கொண்டை ஊசி வளைவில் மெல்ல சாவகாசமாய் இறங்கி கொண்டிருப்பதைப் பார்த்தோம். அதை சிறிது நேரம் நின்று ரசித்துப் பார்த்துவிட்டு கீழே இறங்கினால் அதே திருப்பத்தில் மற்றுமொரு வரையாடு. அன்றே மேற்கு தொடர்ச்சி மலையில் மிகக் குறைந்த அளவில் எண்ணிக்கையில் உள்ள சோலை மந்தியையும் பார்த்தோம். பறவை பார்த்ததில் எங்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை தந்த அந்த நாளை இன்று வரை கூட மறக்க இயலாது.      தரை பறவைகள், மரத்தில் வாழும் பறவைகள், நீர்ப்பறவைகள், வான்வெளிப்  பறவைகள், வேட்டையாடி பறவைகள் என பல்வேறு வகையான பறவைகள் இந்த பூமியில் இருக்கின்றன. இந்த பூமியில் இருக்கின்ற பெரும்பான்மையான காடுகள் இந்த பறவைகளின் எச்சத்தால் உருவானவை தான். எனவே பறவைகளைப் பாதுகாத்தால் மரங்களை அதிக அளவில் பாதுகாக்க முடியும். மரங்கள் அதிக அளவில் இருந்தால் நாட்டின் இயற்கை வளமும் அதிகரிக்கும். சூழலும் பாதுகாக்கப்படும்.         பறவை பார்த்தல் என்ற இந்த இனிய அனுபவமானது, இயற்கையின் மீதான காதலை வரவைத்து, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை தந்தது.  அலைபேசியிலும், தொலைக்காட்சியிலும் மூழ்க விடாமல் இயற்கையை நோக்கி எங்களை மடை மாற்றியது வாசிப்பும் பறவை பார்த்தலும் தான். செல்வ ஸ்ரீராம். பா எட்டாம் வகுப்பு படிக்கிறார். மூன்று புத்தகங்கள் கரிச்சான்குஞ்சும் குயில்முட்டையும், என்ன சொன்னது லூசியானா? அற்புத எறும்பு , எழுதி இருக்கிறார். பறவை பார்த்தலும், புத்தக வாசிப்பும் மிகப் பிடித்த விஷயங்கள்.

  • சனிக்கோளும் எரிகல்லும்

    ஒரு அழகான பூமி இருந்தது திடீரென்று அந்த பூமியில் வெள்ளம் வந்தது பூமியிலிருந்து எல்லா மக்களும் ஏவுகணையில் ஏறி சனி கிரகத்திற்குச் சென்றனர் அப்போது ஒரு சிறுவன் சனியிலிருந்து கீழே விழுந்து விட்டான் அப்போது ஒரு பெரியவர் அந்த சிறுவனை காப்பாற்றுவதற்கு வந்தார் அந்த சமயம் ஒரு எரிகல் பூமியை நோக்கி போனது நீ மட்டும் கீழ விழாம கவனமா இருந்திருந்தா நம்ம எல்லாம் அந்த எரிகல்ல ஏறி பூமிக்கு போய் இருக்கலாம் என்று அனைவரும் அந்த சிறுவனை திட்டினர். ஏனெனில் அப்போது பூமியில் வெள்ளம் வடிந்து விட்டது. ஆனால் அந்த எரிகல் பூமியில் சென்று மோதி வெடித்து விட்டது. அப்போது அனைவரும் அந்த பையனுக்கு நன்றி சொன்னார்கள் "உன்ன தெரியாம திட்டிட்டோம். எங்கள மன்னிச்சிடு. உன்னால தான் லேட் ஆச்சு. இல்லாட்டி நேரா போய் இந்த எரிகல்ல ஏறி எல்லாரும் அந்த எரிகல்லோட சேர்ந்து வெடிச்சிருப்போம்" என்று அந்த பையனுக்கு நன்றி சொன்னார்கள். சு.ரா.கவின்கிருஷ்ணா 8 வயது மூன்றாம் வகுப்பு படிக்கிறார். நான்கு வயதில் இருந்தே கதைகள் சொல்கிறார். ஷார்க்கை அடித்த மின்னல், தங்கப்பறவையும் கழுகும், கவின் சொன்ன கதைகள் ஆகிய கதைத்தொகுப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன.

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 6

    மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள் என்று அறிவியல், தொல்லியல் அறிஞர்கள் சொல்வதாகப் படித்தேன். ஆனால், நாம் மாநிறத்திலும், சீனர்கள்-ஜப்பானியர்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், ஐரோப்பியர்கள்-வட அமெரிக்கர்கள் வெள்ளையாகவும் இருக்கிறார்கள். நாம் அனைவரின் மூதாதையரும் ஆப்பிரிக்கர்கள் என்றால், நாம் அனைவரும் கறுப்பாகத்தானே இருக்க வேண்டும். இது நம்புற மாதிரி இல்லையே? கவின்மொழி, 10ஆம் வகுப்பு, திருநெல்வேலி வணக்கம் கவின்மொழி, நான் புத்தகப்புழு பேசுறேன். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய மொராக்கோ பகுதியிலும், இரண்டு லட்சம்-இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய எத்தியோப்பிய பகுதி, இன்றைய தென்னாப்பிரிக்க பகுதியிலும் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்ஸின் (Homo sapiens) புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. அதேபோல் இன்றைய போட்ஸ்வானா, நமீபியா, ஸிம்பாப்வே ஆகிய பகுதிகளிலும் ஹோமோ சேப்பியன்ஸ் வாழ்ந்ததற்கான மரபணுத் தடயங்கள் கிடைத்துள்ளன. நாம் எல்லாரும் ஹோமோ சேப்பியன்ஸ்தான். ஹோமோ சேப்பியன்ஸ் நவீன மனித இனம் என அழைக்கப்படுகிறது. இப்படி ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நவீன மனித இனம் 70,000 ஆண்டுகளுக்கு முன் வறட்சி, இயற்கை மாறுபாடுகளால் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டது. அப்போது அங்கிருந்து கால்நடையாகவே ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய கிழக்குப் பகுதிகள், பிறகு அங்கிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு மனிதர்கள் இடம்பெயர்ந்தார்கள். ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் ஒரேயடியாக வெளியேறி விடவில்லை. குழுகுழுவாகவே வெளியே வந்தார்கள். புதிய நிலப் பகுதிகளில் இந்த மனிதக் குழுவினர் வாழத் தொடங்கினார்கள். புதிய நிலத்தின் தட்பவெப்பநிலை, புவியியல் தன்மைகள் ஆப்பிரிக்காவைப் போல் இருக்கவில்லை. அவர்கள் குடியேறிய பகுதிகளுக்கு ஏற்ப மனிதர்கள் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படி வாழ்ந்தார்கள். ஒரு பகுதியின் தட்பவெப்ப நிலையும், புவியியல் தன்மைகள், அவர்கள் பார்க்கும் வேலைகள் போன்றவை அந்தப் பகுதி மக்களின் உடலமைப்பு, நிறம், முகத் தோற்றம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தக்கூடியவை. அப்படித் தகவமைத்துக்கொண்டால்தான் அந்தப் பகுதியில் மக்கள் வாழ முடியும். இப்படித்தான் நம்முடைய நிறம், உடலமைப்பு, முகத் தோற்றம் போன்றவை மாறின. பரிணாமவியல் கொள்கையின் ஒரு பகுதியாக தகவமைப்புக் கோட்பாடு பற்றி சார்லஸ் டார்வினும் விளக்கியிருக்கிறார். நட்சத்திரங்கள் எங்கோ தொலைவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரத்தில் இருந்து அவை மின்னுவது நமக்கு எப்படித் தெரிகிறது? முதலில் நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன, அதற்கு என்ன காரணம்? ஆதிரை, 6ஆம் வகுப்பு, செங்கல்பட்டு வணக்கம் ஆதிரை, நான் புத்தகப் புழு பேசுறேன். நட்சத்திரங்கள் கோடிக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ளன. பூமியின் மேலே உள்ள வளிமண்டலம் (காற்று) நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஓரிடத்தில் நிற்பதில்லை. அலைபோல் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் வழியாக ஊடுருவும் நட்சத்திர ஒளி, மின்னுவதுபோல நமக்குத் தோன்றுகிறது. உண்மையில் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. ஒளியை மட்டுமே வெளியிடுகின்றன. நம் தலைக்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தில் உள்ள காற்று இடையில் புகுந்து விளையாட்டு காட்டுகிறது. அப்போது மின்னுவதுபோலத் தோன்றுகிறது. நிஜத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. விண்வெளிக்குப் போய்விட்டால், மின்னாத நட்சத்திரங்களைப் பார்க்கலாம்.

  • காணாமல் போன கடைசிப் பக்கம்

    சொல்லவே முடியாத துயரத்தில் இருந்தேன் நான். எப்போதும் எல்லோரோடும் சேர்ந்தே இருப்பதுதான் என் வழக்கம். ஆனாலும் இப்போதெல்லாம் யாருடனும் சேர்ந்திருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. சுவர் ஓரத்தில் சாய்ந்துகொண்டு, ‘உம்’மென்று உட்கார்ந்து இருக்கிறேன்.    காற்று மெதுவாக வீசத் தொடங்கியது.    மேசை மேலே, தரையில் இருந்தவை எல்லாம் லேசாக உடலைச் சிலிர்த்துக்கொண்டன. எனக்கு மட்டும் ஏனோ அவ்வாறு இருக்கப் பிடிக்கவில்லை. உடலை இறுக்கமாக்கிக்கொண்டு, அசையாமல் இருந்தேன்.    இந்த வீட்டிற்கு நான் வந்து முப்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். நல்லசிவன் தான் முதன்முதலாக இந்த வீட்டிற்கு என்னை அழைத்து வந்தார்.     என்னை அழைத்து வந்தவர் மேசை மேல் என்னை வைத்துவிட்டு, அவர் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். எனக்கோ ஏக்கமாக இருந்தது.  ‘யாராவது என்னை எடுங்களேன்...’ என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.    என்ன கெஞ்சி, என்ன செய்வது? அவரவர் வேலை அவரவர்களுக்கு. வீட்டில் யாரும் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.    திடீரென்று ஒரு நாள் நல்லசிவன் என்னைக் கையில் எடுத்தார். அப்படியே என்மேல் பார்வையை ஓட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை அப்படியே எனக்குள் உள்ளிழுத்துக் கொண்டேன். சில மணி நேரத்திற்குள் எனக்குள்ளேயே கரைந்துபோனார். காலை, மாலை, இரவு என எப்போது நேரம் கிடைத்தாலும் என்னிடமே தஞ்சம் அடைந்தார்.    சில வெளியூர்ப் பயணங்களுக்கும் அவர் கூடவே நானும் போனேன். அவர் தோளில் மாட்டி இருந்த ஜோல்னா பைக்குள் நான் இருந்தேன். சில நிமிடங்கள் கிடைத்தாலும் உடனே என்னை எடுத்துக்கொள்வார்.    “நேரமாச்சு... சாப்பிட வாங்க..!” என்று அழைத்தாலும் உடனே போக மாட்டார்.    “இதோ... வர்றேன்...” என்று சொல்வார். சில நிமிடங்களாவது என்னோடு தான் இருப்பார். அவரது ஆர்வம் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது.    என்னை மொத்தமாக அவர் உள்வாங்கிக்கொண்ட அந்த நாள் என் நினைவில் இன்னமும் இருக்கிறது.    மே-1. காலையிலேயே மே தினப் பொதுக்கூட்டத்திற்கு கிளம்பிப்போனார் நல்லசிவன்.    கூட்டம் முடிந்து, மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டார். ஒரு குட்டித் தூக்கம் போடப் போகிறார் என்று நானும் நினைத்தேன். ஆனால், என்னைக் கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார்.    மாலை 4 மணி... 5 மணி... 6 மணி, இரவு 7 மணி... சரியாக இரவு 7.30 மணிக்கு என்னை முழுவதுமாக முடித்தார். என்னை மூடும்போது அவரது கண்கள் கலங்கி இருந்தன. அந்தக் கலங்கிய கண்களில் ஒளி தெரிந்தது.    சற்றுநேரம் என்னை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். எனக்கு அது மிகவும் இதமாக இருந்தது. திரும்பவும் என்னை எடுத்து, முகத்துக்கு முன்னே தூக்கிப் பிடித்தார். அப்படியே அருகே கொண்டுசென்று, ஒரு முத்தம் வைத்தார். என் உடல் சிலிர்த்துப்போனது. நான் பிறந்த பயனை அடைந்த உணர்வு எனக்கு உண்டானது. அந்த நாளை இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பாக இருக்கும்.     நல்லசிவனுக்குத் திருமணம் ஆனது. வீடே ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஒருநாள் தனது மனைவி பார்வதியைக் கூப்பிட்டார். என் அருகே இருவரும் வந்தனர். என்னைக் கையில் எடுத்தார். பார்வதி கையில் என்னைக் கொடுத்தார்.    “எனக்கு ரொம்பவும் பிடிச்சது. இந்த உலகமே இப்படித்தான் என்று நான் மனம் உடைச்சு இருந்தேன். எனக்குள் நம்பிக்கையை விதைச்சது. என்னோட ஆத்மார்த்தமான நல்ல நண்பன். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீயும் இதோடு இரு..!” என்று சொன்னார் நல்லசிவன்.    பார்வதிக்கோ வீட்டு வேலைகள் ஏராளமாய் காத்திருந்தன.     காலையில் 5 மணிக்கு எழுந்து விடுவார். வாசல் பெருக்குவது, கோலம் போடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, தேநீர் போடுவது, காலை உணவுக்காகச் சமைப்பது, பிறகு துணி துவைப்பது, மதிய உணவுக்குச் சமைப்பது... என நாள் முழுக்கவே அவருக்கு ஓயாத வேலைதான்.    பல நாள்கள் ஆகியும் அவரது கவனம் என் பக்கம் திரும்பவேயில்லை. அன்றொரு நாள். பார்வதியிடம் நல்லசிவன் கேட்டார்;        “நான் உன்கிட்டே ஒன்னு கொடுத்தேனே... அதைப் பாத்தியா..?”    இப்படிக் கேட்பார் எனப் பார்வதி எதிர்பார்க்கவே இல்லை.    “இல்லீங்க, வீட்டு வேலையே எனக்குச் சரியா இருக்கு. இதுலே அதுக்கு எங்க நேரம்?”என்று சொன்னார் பார்வதி.    “ஆமாம், உனக்கும் இங்க வேலை ரொம்ப அதிகமா இருக்கு...” என்றவர், சில நிமிடங்கள் யோசித்தார்.    “நான் நைட் டூட்டி முடிச்சிட்டு வர்ற நாள்ல, நீ துணி துவைக்க வேண்டாம். நானே துவைக்கிறேன். அதே மாதிரி இனி சமையல் வேலைகளை நானும் செய்யிறேன். கிடைக்கிற நேரத்திலே நீ அதுக்காகக் கொஞ்ச நேரத்தை ஒதுக்கு. சரியா?”என்றார் நல்லசிவன்.    அன்று சொன்னது வெறும் வார்த்தையாக இல்லை. அன்றிலிருந்தே அதைச் செயல்படுத்தினார். பார்வதிக்கும் கொஞ்ச நேரம் கிடைத்தது. அந்த நேரத்தைப் பார்வதி என்னோடு கழிக்கத் தொடங்கினார்.     என்னோடு இருப்பார். சட்டென மூடிவிட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக்கொள்வார். நல்லசிவனை விடவும் சீக்கிரமாகவே என்னை உள்வாங்கித் தொடங்கினார் பார்வதி.    தூங்கும் நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் என் கூடவே இருந்தார். எனக்கும் நல்ல தோழி கிடைத்த மனநிறைவு ஏற்பட்டது.    அன்றைக்குப் பார்வதி சீக்கிரமே எழுந்து கேசரி செய்தார். எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, என்னிடம் வந்தார். நிரம்பித் ததும்பிய பார்வதியின் மனம், என்னை என்னவோ செய்தது. கையில் என்னை எடுத்தார். இதோ... இதோ... ஐந்தே நிமிடத்தில் முழுவதுமாக என்னை நிறைவு செய்தார்.    “பார்வதி... சாப்பிடலாமா..?”என்று நல்லசிவன் கேட்டார்.    “ம்ம்... ரெடியா இருக்கு. வாங்க..!” என்று சொல்லிவிட்டு, என்னையும் கூடவே எடுத்துச் சென்றார்.    தட்டில் கேசரியைக் கண்ட நல்லசிவன், “என்ன விசேசம் இனிப்பெல்லாம் பலமா இருக்கு..!” என்றார்.    “நானும் முடிச்சிட்டேனே...” என்று என்னை கையில் உயர்த்திக் காட்டிய பார்வதி, “எனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டை அறிமுகப்படுத்தி வச்சதுக்கு நன்றி...” என்றார் பார்வதி. நல்லசிவனிடம் புத்தகம் கொடுக்கும்போது பார்வதியின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. இருவருக்கும் இடையில் நான் இருந்த அந்தச் சில நிமிடங்கள், என் வாழ்வின் வரங்கள் என்பேன்.    பிறகென்ன... என்னைப்போலவே பலரும் அந்த வீட்டிற்கு அவ்வப்போது வரத் தொடங்கினர். ஆனாலும், எனக்கு மட்டும் அந்த வீட்டில் சிறப்பான கவனிப்பு எப்போதும் இருந்தது. நல்லசிவன் - பார்வதி தம்பதியினருக்கு குழந்தைகள் பிறந்தனர். மூத்தவன் பெயர் அகிலன். அடுத்ததாகப் பிறந்த பெண் குழந்தைக்கு நீநிகா எனப் பெயர் சூட்டினர்.    தன் ஆண் பிள்ளைக்கு அழகான தமிழ்ப் பெயர். பெண் பிள்ளைக்கு மட்டும் ஏன் அர்த்தமில்லாத இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள்... நீநிகா என்று..? அந்தப் பெயருக்கான அர்த்தம் தெரியாமல் நானும் ரொம்பவே குழம்பிக் கொண்டிருந்தேன்.    அதற்கும் ஒரு நாள் விடை கிடைத்தது.    நல்லசிவனின் அலுவலக நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். நண்பரிடம் தன் பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தார் நல்லசிவன்.    தேநீர் அருந்திக்கொண்டே, “அதென்னப்பா, நீநிகா..?”என்று கேட்டார் நண்பர். நானும் காதைக் கூர்த்தீட்டிக்கொண்டு கவனித்தேன்.    “வேறொண்ணுமில்லப்பா. இந்தப் பூமியே நீர், நிலம், காற்று ஆகிய மூன்று சக்திகளினால் தான் இன்னமும் நிலைச்சிருக்கு. அந்த மூன்றின் முதல் எழுத்தோட சேர்ப்புதான் நீநிகா...” என்றார் நல்லசிவன்.    “சூப்பர்ப்பா..!” என்றார் நண்பர்.    எனக்கு அந்தப் பெயரும், பெயருக்கான விளக்கமும் ரொம்பவும் பிடித்திருந்தது.   காலச் சக்கரம் சுழன்றது.    பிள்ளைகள் வளரத் தொடங்கினார்கள். பள்ளிக்கல்வி படிப்பை முடித்து, கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினான் அகிலன்.    ஒரு நாள், பார்வதி அகிலனை அழைத்தார்.    அகிலனின் கையில் என்னைக் கொடுத்தார்.    “தம்பி, உனக்கு எப்பவெல்லாம் நேரம் கிடைக்கிதோ, அப்பப்ப இதோட கொஞ்சம் நேரத்தைச் செலவளி...” என்றார்.    தன் மேசை மீது என்னையும் அகிலன் வைத்துக்கொண்டான். பாடப் புத்தகங்களைப் படிப்பான்; கொஞ்ச நேரம் எழுதுவான். தூங்கச் செல்லுமுன் என்னைக் கையில் எடுப்பான். ஏதோ யோசனையோடு பார்ப்பான். பிறகு மூடிவிட்டு, தூங்கப்போய் விடுவான்.    என்றாவது ஒரு நாள் எனக்கான நேரத்தைக் கொடுப்பான் என்று ஆவலோடு நானும் காத்திருக்கத் தொடங்கினேன். நாள்கள் நகர்ந்தன. சில மாதங்கள் கடந்தன. சில ஆண்டுகளும் கடந்து ஓடின.    இப்போதெல்லாம் மேசையில் உட்காரும்போதே கையில் ஒரு குட்டிக் கருவியோடு தான் உட்காருகிறான் அகிலன். அதன் பெயரென்ன... ஏதோ  ‘செல்பேசி’யாமே..?    அம்மா, அப்பா ஏதாவது கேட்டாலும் ஒன்று, இரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவன் பதில் சொல்வதில்லை. சாப்பிடும் போதும், நடக்கும் போதும் கையில் அந்தச் ‘செல்பேசி’ கூடவே இருக்கிறது. அன்றைக்கு கழிவறைக்குச் சென்றான். அப்போதும் அதில் பேசிக்கொண்டே சென்றான்.    தூங்குவதற்காகப் படுக்கையில் படுப்பான். ஆனாலும் தூங்க மாட்டான்.  ரொம்ப நேரம் செல்பேசி பார்த்துக்கொண்டே இருப்பான். எப்போது தூங்குகிறான் என்றே தெரியாது. ஆனால், காலையில் மிகவும் தாமதமாகவே எழுவான்.    ‘எனக்கான நேரத்தை இவன் தருவான்…’ எனும் எனது எதிர்பார்ப்பு குறைந்துகொண்டே போனது.    ஒரு நாள்.            நல்லசிவன் அகிலனின் மேசை அருகே வந்தார். மேசை மேல் இருந்த என்னை, அவரது கை விரல்கள் வாஞ்சையோடு வருடின.    “ஏம்ப்பா, இதுக்கு உன்னால நேரத்தைக் கொடுக்க முடிஞ்சதா..?”என்று அகிலனிடம் கேட்டார்.    “இல்லைப்பா. என்னால முன்னை மாதிரி பாடப்புத்தகத்தைக் கூட படிக்க முடியலே. கண்ணு எரியிது. தலை வலிக்கிது. கண்ணில தண்ணீயா வருது...” என்றான் அகிலன்.    அடுத்த நாளே, கண் மருத்துவரிடம் அகிலனைக் கூட்டிப்போனார் நல்லசிவன்.    இப்போது அகிலன் கண்ணாடிப் போட்டுக்கொண்டு தான் எதையும் படிக்கிறான். ஆனாலும், செல்பேசி பார்ப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டான்.    அன்றைக்கு அகிலனின் நண்பன் வெங்கட் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அம்மா இருவருக்கும் தேநீர் கொடுத்தார்.    “ஒரு நிமிசம் இங்கே வா...” என அகிலனைக் கூட்டிப்போனார் அம்மா.    தேநீர் குடித்துக்கொண்டிருந்த வெங்கட், கோப்பையைக் கீழே வைத்தான். வேகமாக வைத்ததில் தேநீர் இரண்டொரு சொட்டுக்கள் மேசை மேல் சிந்தின.    அங்கும் இங்குமாகப் பார்த்த வெங்கட்டின் பார்வை, என் மேல் விழுந்தது. ஏனோ எனக்கு அவனது பார்வை அச்சத்தைத் தந்தது. ‘வெடுக்’கென என்னை எடுத்தான். ‘சரட்’டென எனது கடைசிப் பக்கத்தைக் கிழித்தான்.    “அய்யோ...” எனக்கு வலித்தது. சத்தம் போட்டேன். யார் காதிலும் விழவில்லை. என் கடைசிப் பக்கத்தைக்கொண்டு, தேநீர் சொட்டுகளைத் வேகமாகத் துடைத்தான். பின்னர் கசக்கி, குப்பைக்கூடையில் போட்டுவிட்டு போய்விட்டான்.    என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்தேன். இனி நான் யாருக்குப் பயன்படப் போகிறேன்..? ஒரு பயனும் இல்லாமல் இப்படிச் சும்மா இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.     இனி என்னை யார் தான் கையில் எடுப்பார்கள்? கடைசியாகக்கிழிந்திருக்கும் என்னை இனி என்ன செய்வார்கள்? நாளுக்கு நாள் என் குழப்பம் அதிகமாகிக்கொண்டே சென்றது.    அன்றைக்கு வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் அம்மா.     அகிலனின் அறைக்குள் வந்தார். கலைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கினார். மேசையைத் துடைத்தார். அதன் மேலிருந்த என்னைப் பார்த்தார். மெதுவாக என்னை வருடினார். கையில் எடுத்தார். கண்களில் ஈரம் கோர்த்தன.     “என்னாச்சும்மா, அப்படியே நின்னுட்டே..?”என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் நீநிகா. எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.     அம்மாவின் கலங்கிய கண்களையும், கையில் இருந்த என்னையும் மாறி மாறிப் பார்த்தாள். “அவசியம் நீ இதுகூட உன் நேரத்தைச் செலவளிக்கணும்மா. உங்க அப்பாவுக்கும், எனக்கும் ரொம்ப பிடித்தமான நண்பன்...” என்ற அம்மா, தன் கையில் இருந்த என்னை நீநிகா கையில் கொடுத்தார். கையில் வாங்கிய என்னை அப்படியே புரட்டிப் பார்த்தாள் நீநிகா. “அட... என்னம்மா, கடைசிப் பக்கத்தைக் காணோம்..!” என்று நீநிகா சொன்னதும், “அச்சச்சோ... அப்படியா?”என்று அம்மா மனம் கலங்கியது. அம்மா சில நிமிடங்கள் பேச்சற்று நின்றார். “நீ நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதோட இரும்மா. இதை நீ முடிக்கப் போகும்போது கடைசியிலே என்னாங்கிறதை நா உனக்கு சொல்றேன். சரியா?”என்றார் அம்மா. “சரிம்மா...” என்று சொன்ன நீநிகா, என்னைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தாள். என் காயங்கள் எல்லாம் சட்டென ஆறின. எனக்குப் புத்துணர்வு பிறந்தது போலிருந்தது. நீநிகாவோடு சேர்ந்து நானும், என்னோடு சேர்ந்து நீநிகாவும் மெல்ல மெல்ல மேலேறிப் பறக்கத் தொடங்கினோம். எனது பக்கங்கள் எல்லாம் சிறகுகளெனப் படபடத்தன. மு.முருகேஷ்

  • குட்டிப் பன்றியும் சிலந்திப் பூச்சியும்

    புத்தக நண்பர்களோடு இன்பச் சுற்றுலா –3 சு ற்றுலாத் துணைவர்களே, இந்தத் தடவை ஒரு கதைப் புத்தகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம், சரியா? உங்களுக்கெல்லாம் நட்பு  ரொம்பப் பிடிக்கும்தானே? நீங்களும் நட்புக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருப்பீங்கதானே? உங்களோட நண்பர்களும் அப்படித்தானே? அப்படிப்பட்ட நட்பைப் பத்தின கதைதான் ‘சார்லோட்‘ஸ் வெப்’ (சார்லோட்டின் வலை). இந்தக் கதையை எழுதியர் ஈ.பீ.  ஒயிட். அமெரிக்காக்காரர். அவருடைய புகழ்பெற்ற கதைப் புத்தகங்கள்ல ஒண்ணுதான் இதுவும். 1952ஆம் ஆண்டுல ஹார்ப்பர் அன் பிரதர்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டாங்க. இப்ப அந்தப் பதிப்பகத்தோட பெயர் ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ். மொதமொதல்ல வந்த புத்தகத்திலே சித்திரங்கள் வரைந்திருந்j ஓவியரின் பெயர்  கார்த் வில்லியம்ஸ். 1973ஆவது ஆணடுல அசையும் ஓவியத் திரைப்படமா (அனிமேஷன் மூவி) இந்தக் கதை வந்துச்சு. 2003இல அதனோட இரண்டாம் பாகமா இன்னோர் அனிமேஷன் படம் வந்துச்சு. 2006இல கதாபாத்திரங்கள்ல நடிகர்களும் விலங்குகளும் தோன்றிய நேரடித் திரைப்படமாவே வந்துச்சு.  பாட்டிலேயே எல்லாரும் பேசுற இசை நாடகமாவும் இந்தக் கதை மேடையேறியிருக்கு. இப்ப அனிமேஷன் வடிவத்திலேயே ஒரு வலைத்தொடர் (வெப் சீரிஸ்) தயாரிச்சிக்கிட்டு இருக்காங்களாம்.  வாசகர்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் ரொம்பவும் பிடிச்சுப் போனதாலதான் இப்படி திரைப்டமாகவும் வலைத்தொடராகவும் தயாரிக்கிறாங்கன்னு புரிஞ்சிக்கலாம். அப்பேர்ப்பட்ட அந்தக் கதையை நாம தெரிஞசிக்க வேணமா? வலையில் பொறித்த வார்த்தைகள் ஒரு சின்னப்பொண்ணு. அவ பேரு ஃபெர்ன் ஆரபிள். அம்மாவும் அப்பாவும் ஒரு விலங்குப் பண்ணை வச்சி நடத்துறாங்க. அதிலே ரொம்ப சிறிசாகவும். உடம்பு வலிமை இல்லாமலும் இருக்கிற ஒரு குட்டிப்பன்னி  மேல அவளுக்கு அன்பு ஏற்படுது. அந்தக் குட்டியோட பேரு வில்பர். ரொம்பவும் மெலிஞ்சிருக்கிற வில்பரைக் கொண்ணுடலாம்னு அப்பா பேசுறாரு.  அதைக் கேட்ட ஃபெர்னுக்கு வருத்தமாகுது. அவனை எப்படியாச்சும் காப்பாத்தனும்னு அப்பாக்கிட்ட வாதாடுறா, போராடுறா. கடைசியில அவனைக் காப்பாத்தி, அவளே வளர்க்குறா. சில மாசங்கள் போனப்புறம் வில்பரை பக்கத்து வீட்டு மாமா பண்ணைக்கு வித்துடுறாங்க. புதுப் பண்ணையில வில்பருக்கு ஒரு மாதிரி தனிமை உணர்வு ஏற்படுது. பயமாவும் இருக்கு. அப்ப, அவனுக்கு ஒரு சாம்பல் சிலந்தி கூட நட்பு ஏற்படுது. ஆமா, நீங்க ஊகிச்சது சரிதான், அந்தச் சிலந்திப் பூச்சியோட பேருதான் சார்லோட். அவளுக்கும் வில்பரைப் பிடிச்சுப்போகுது. வரப்போற பண்டிகைக் கொண்டாட்டத்துக்காக வில்பரைக் கொல்றதுன்னு பண்ணைக்காரங்க பேசிக்கிட்டது அவ காதுல விழுது.  வலையில் அதிசயம் வில்பரின் உயிரைக் காப்பாத்தணும்னு முடிவு செய்ற சார்லோட், அதுக்காக அருமையான ஒரு திட்டத்தை வகுக்கிறா. ராத்திரியோட ராத்திரியா தன்னோட வலையைப் பெரிசா பின்னி, அதுல ரொம்ப கவனமா சில  வார்த்தைகளை எழுதுறா. மறுநாள் பண்ணைக்காரங்க சிலந்தி வலையில் இருக்கிற வார்த்தைகளைப் பார்த்து வியந்து  போறாங்க. “சிறப்பான பன்னி”, “அட்டகாசப் பன்னி”, “ஒளிவீசும் பன்னி” – இப்படி எழுதியிருந்தா வியப்பு ஏற்படாதா என்ன?  . இதை கடவுளோட அதிசச் செயல்னு நினைக்கிறாங்க. இயற்கைக்கு அப்பாற்பட்ட துன்னும் நினைக்கிறாங்க. அதுக்கப்புறம் வில்பரை ஒரு சாதாரணப் பன்னியா அல்லாமல், ஒரு மகத்துவமான விலங்குன்னு பார்க்குறாங்க. எப்பவுமே அவனைக் கொல்றதில்லைன்னும் முடிவு செய்றாங்க. பண்ணையில நடக்கிற ஒரு விழாவுல வில்பர் பரிசுகளை வெல்லுறான்.  அவனோட புகழ் பரவுது. பண்ணை விழாவுக்கு வரும் ஃபெர்ன் அங்கே வில்பரைப் பார்த்து மகிழ்ச்சியடையுறா. அவ முந்தி மாதிரியே தன் மேல பாசம் காட்டணும்னு வில்பர் ஆசைப்படுறான். ஆனாலும்  இப்ப  அவ  பெரிய பொண்ணா வளர்ந்திட்டா,அவளுக்கு இன்னொரு பையன் கூட  நட்பாப் பழகுறதுதான் ரொம்பவும் பிடிக்குது. ஏமாத்தமா இருந்தாலும் இது இயல்பான மனித உறவுதான்கிறதை வில்பர் பக்குவமாப்  புரிஞ்சிக்கிடுறான். வயது முதிர்ந்த சார்லோட்டோட மனசு,  மத்தவங்களுக்குப்  பயனுள்ள  வாழ்க்கையை  வாழ்ந்ததை  நினைச்சு நிறையுது. தன்னோட அடுத்த தலைமுறைக்காக இட்ட முட்டைகளை வில்பர் பொறுப்பில் விட்டுட்டுக் கண்மூடுறாள். நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் வில்பர் அவளுடைய முட்டைக் கூடுகளை அக்கறையாப் பராமரிக்கிறான். அவற்றிலிருந்து வரும் சிலந்திக் குஞ்சுகளை ஒரு அண்ணன் போல வளர்த்து மகிழ்ச்சிகரமா வாழுறான். கருப்பொருள் கதையோட கருத்து என்னன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்வீங்கன்னு நான் சொல்லட்டுமா? “நட்பின் அருமையையும் தியாகத்தின் பெருமையையும் ஈ.பீ. ஒயிட்  அழகாக  வெளிப்படுத்தியிருக்கிறார்!” சார்லோட் முடிவு ஒரு சோகம்தான்னாலும், இயற்கையோட  சுழற்சி  இப்படித்தான்  இருக்குதுன்னும்  புரியுதுல்ல? அதிசய நிகழ்வுன்னு எல்லாரும் நினைச்சாலும் உண்மையில் நமக்கு, வலையிலே அந்த வார்த்தைகள் வந்தது எப்படின்னு தெரியும்கிறதால இயற்கைக்கு அப்பாற்பட்டதுன்னு எதுவும் இல்லைங்கிறதும் தெளிவாகுதுல்ல? அப்புறம் ஒரு தகவல் – நீங்க திரையரங்கத்துலேயும் ஓடிடி–யிலேயும்  ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ சினிமா பார்த்திருப்பீங்க.  ஒரு துறுதுறு சுண்டெலியைத் தத்தெடுத்து வளர்க்கும் குடும்பத்தைப் பத்திய அந்தக் கதையை எழுதினவரும் இவர்தான். இது  மாதிரி நிறைய சிறார் கதைகள் அவர்ட்டயிருந்து நமக்கு வந்திருக்கு. நல்லது, நம்ம சுற்றுலாப் பயணத்துல அடுத்த மாசம் வேற ஒரு சூப்பர் புத்தகத்தைப் பார்க்கலாம், ஓகே–யா? அ. குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.

  • சுறாவும்... டால்பினும்....

    ஒரு கடல் நாடு இருந்தது. ஒரு நாள் ஒரு சுறா (shark) வழி தெரியாம டால்பின் கடல்ல வந்து விழுந்துடுச்சு. அதுக்கு ரொம்ப பசிச்சது. அது சாப்பிட குட்டி குட்டி மீனெல்லாம் தேடி போனது. அப்ப தெரியாம திமிங்கலம் (killer whale)  இருக்கற கடலுக்குள்ள குதிச்சிடுச்சி. அங்க போய் மீன் தேடிச்சு. அத பார்த்த திமிங்களமெல்லாம் அத சாப்பிட வந்தது. சுறா மீன் ரொம்ப பயந்துடுச்சு. யாராவது என்னைய காப்பாத்துங்க யாராவது என்னைய காப்பாத்துங்க அப்டின்னு கத்துச்சி அப்ப ஒரு மனுசன் மீன் பிடிக்க வந்தாரு. அவரு வலைய விரிச்சு சுறாவ (shark) பிடிச்சிட்டாரு. அப்பறம் அதுக்கு தேவையான மீன் சாப்பிட குடுத்தாரு. ஷார்க் நல்லா சாப்பிட்டது.  திரும்ப சுறாவ கொண்டு போய், சுறா கடல்ல விட்டுட்டாரு. ஷார்க்கும் ஹேப்பி மனிதரும் ஹேப்பி.. தருண்கிருஷ்ணா 6 வயது. ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். அண்ணனைப் பார்த்து தானும் கதை சொல்லத் துவங்கினார். தருண் சொன்ன கதைகள்,ஊஞ்சல் மரம் ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது பெரும்பான்மையான கதைகளின் சாரம் "பசி" யாக இருக்கிறது.

  • ஓரா மீன்

    இது பவளப்பாறைகளில் வசிக்கும் ஒருவகை மீன். இந்த மீனை  மீன் சந்தைகளிலும்  நாம் அடிக்கடி  பார்க்கலாம். அதிகபட்சம் ஒரு அடி (முப்பது சென்டிமீட்டர்) வரை வளரக்கூடிய  இந்த மீன்  குடும்பத்தில்  மொத்தம் 30 இனங்கள் உண்டு. பெரும்பாலான மீன்கள் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த  மீன்கள்  ஆங்கிலத்தில்  Rabbitfish என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் முகத்தையும் மூக்கையும் ஒன்றாகப் பார்க்கும்போது முயல் போலவே இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். எல்லா ஓரா மீன்களுமே பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை. இரவு நேரத்தில் பவளத்திட்டுகளின் இடுக்குகளில் இவை மறைவாகத் நீந்திக்கொண்டிருக்கும். பெரும்பாலான ஓரா மீன்கள் பாசிகளை உண்ணும் பண்பு கொண்ட தாவர உண்ணிகள்தான். சிலவகை ஓரா மீன்கள் சிறு விலங்குகளைக் கூட சேர்த்து சாப்பிடும். இவற்றின் துடுப்புகளில் இருக்கும் முட்கள் மிகவும் கூர்மையானவை. சில  முட்களில்  நச்சுத்தன்மையும்  இருக்கும், ஆகவே  இவற்றைக்  கையாளும்போதோ  தூக்கும்போதோ  கவனமாக இருக்கவேண்டும். இந்த மீன்களை நீங்கள் சந்தைகளில் பார்த்திருக்கிறீர்களா? உங்கள்  அனுபவத்தை  சொல்லுங்களேன். நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்  பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி  கல்விக்குழுமத்தின்   படைப்பூக்க   விருது ,பாவை  விருது  ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும்  மனிதரும் , விலங்குகளும்  பாலினமும் , ஆழ்கடல், சூழலும்  பெண்களும் , நெய்தல் மீன்கள்  உள்ளிட்ட   பதினைந்து     நூல்களை எழுதியுள்ளார்.

  • கருப்பு கடற்கரை

    ஆங்கிலத்தில் – ஷௌன்னா – ஜான் ஸ்டித் தமிழில் : சுகுமாரன் சாம் தன்னுடைய வகுப்பறையில் விருப்பமான இடத்தில் அமர்ந்து விருப்பமான படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள். அப்போது பிரின்சிபால் வந்தார். ஆசிரியையின் காதில் ஏதோ சொன்னார். சாம்-யின் ஆசிரியை முகம் சுளித்தவாறு ஜன்னலை நோக்கி நடந்தார். ஜன்னலின் வழியாக கடலை பார்த்தார். பிரின்சிபால் என்ன சொன்னார்? ஆசிரியை என்ன பார்த்தார்? சாம் வீட்டுக்கு வந்தாள். சாம்-யின் பெற்றோர் நடந்த பயங்கரத்தைப் பற்றி சொன்னார்கள். கடலில் நிறுவப்பட்டுள்ள எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தின் எண்ணெய் கசிந்து கடலில் கலந்துள்ளது. எண்ணெய் பொங்கி கடலில் வழிவதை சாண்டா பார்பரா தொலைக்காட்சியில் காட்டினார்கள். குலுக்கும் போது சோடா பாட்டிலின் மூடியை பிய்த்துக் கொண்டு சோடா வெளியேறுவது போலிருக்கிறது என்று எண்ணெய் கசிவைப் பற்றி அம்மா சொன்னார். மூன்று நாட்களுக்குப் பிறகு தடிமமான கருப்பு எண்ணெய் கடற்கரையை மெழுகியிருந்தது. சாம் கடற்கரையைப் போய் பார்த்த போது பதட்டமானாள். அவளுடைய நடையில் அந்த கவலை வெளிப்பட்டது. அவளுக்குப் பயமும் தோன்றியது, கடல் கருப்பாகி விட்டது. கடற்கரையும் கருப்பாகி விட்டது. கரையில் வந்து மோதிக் கொண்டிருக்கும் அலைகள் 'ஸ்லாப்... ஸ்லாப்...' என்று சத்தமிட்டது. சாம் அமைதியாக நின்றாள். நகர மக்கள் உதவி செய்ய தயார் என்றாலும் என்ன செய்வது என்று தெரியவில்லை. கடலுக்குள் துளையிடுதல் மிகவும் ஆபத்தானதாக இருந்த போதிலும் இந்த மாதிரியான பேரழிவின் போது எண்ணெய் நிறுவனம் தயாராக இல்லை. அதனால் சாண்டா பார்பரா நகர மக்கள் நிலைமை மேம்பட ஏதாவது செய்யலாம் என்று நினைத்தார்கள். சாம்யின் அப்பா அங்குள்ள மீனவர்களை குழுவாக சேர்த்தார். அவர்களைக் கொண்டு எண்ணெய்யை உறிஞ்சுவதற்கு வைக்கோல்களை கடலில் போட்டார். சாமின் அம்மா சிலரை சேர்த்தார். அவர்கள் கடற்பறவைகளின் சிறகுகள் மீது படிந்திருந்த எண்ணெய்யை துடைத்தார்கள், பறவைகள் எண்ணெய்யால் பறக்க முடியாமல் இருந்தன. சாம் உதவி எதுவும் செய்யவில்லை. அவள் அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கடற்கரை காட்சிகள் தொலைக்காட்சியில் தெரிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து கிளர்ச்சியடைந்தனர். இதற்கு முன் யாரும் இதைப் போல் பார்த்ததில்லை. எண்ணெய் தொடர்ந்து கடலில் கசிந்துக் கொண்டிருந்தது. சாம்-க்கு ஏற்பட்ட வருத்தம் இப்போது கோபமாக மாறியது. அவளுக்கு விருப்பமான இடம், பறவைகள், கடற்கரை, நீல நிற கடல் எல்லாம் சரியில்லை. சாமும் அவளுடைய நண்பர்களும் சேர்ந்தார்கள். கடற்கரையிலுள்ள எண்ணெய்யை சிறிய பாட்டில்களில் நிரப்பினார்கள். அதை அரசியல் வாதிகளுக்கு தபாலில் அனுப்பி வைத்தனர். அதிகாரத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? இதே மாதிரி அழிவுகள் நடக்காமல் தடுப்பதற்கும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடிதம் வாயிலாக மாணவர்கள் கோரினர். செய்திகள் பரவின. ஆயிரக்கணக்கான மக்களின் கவனம் திரும்பியது. குடியரசுத்தலைவர் நிக்ஸன் ஹெலிகேப்டரில் வந்து பார்வையிட்டார். கடலில் எண்ணெய் வெடிப்பு ஏற்பட்டு ஏழு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க செனட்டர் கேலார்ட் நெல்சன் சான்டா பார்ப்ரா வந்து பார்வையிட்டார். அவர் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்தும் பிற அரசியல்வாதிகளையும் இதில் கவனம் செலுத்த வைக்க போராட வேண்டியிருந்தது. செனட்டர் பார்க்கும் போது கடலின் மேற்பரப்பில் எண்ணெய் இன்னும் மிதந்துக் கொண்டுதான் இருந்தது. வாஷிங்டனுக்கு திரும்பிய பிறகு அவர் இளைஞர்களை சேர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேசிய தினம் ஒன்றை கொண்டாடினார். அது பூமி தினம் (Earth Day) என்று அழைக்கப்பட்டது. சுற்றுச் சூழல் பிரச்சனையைப்பற்றி ஒரு அடிமட்ட இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்வது அவர்களின் நோக்கமாக இருந்தது. பெரும்பான்மையான மக்களும் அரசியல் வாதிகளும் பூமியின் தேவையைப் பற்றி கவனம் செலுத்துவது அவசியமாகிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் பூமி தினத்தைக் கொண்டாடுவதற்குத் தயாரானார்கள். ஏப்ரல் 22, 1970, அன்று சாம் படிக்கும் பள்ளியில் பெரிய அளவில் பூமி தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொருவரும் மறுசுழற்சிக்குரிய பொருட்களை சேகரித்தனர். தேனீ வளர்ப்பின் நன்மைகளைத் தெரிந்துக் கொண்டார்கள். பூச்சிகளைக் கொல்லும் DOT ரசாயன பூச்சிக் கொல்லி உண்டாக்கும் சுற்றுச்சூழல் கேட்டை புரிந்துக் கொண்டார்கள். நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் சுற்றுசூழலை மேம்படுத்துவது தொடர்பாக பேசுவதின் மூலம் பூமி தினத்தை பயனுள்ளதாக மாற்றினார்கள். சாம் நிறைய கற்றுக் கொண்டாள். அவ்வாறு கற்றுக் கொண்டது பல வகைகளிலும் உதவும் என்று நினைத்தாள். முதல் பூமி தின கொண்டாட்டத்தில் 20 இலட்சம் மக்கள் கலந்துக் கொண்டார்கள். 'பூமியைக் காப்பாற்றுங்கள், சுத்தமான பூமிதான் மகிழ்ச்சிக்குரியது' என்று கோரிக்கைகளை எழுப்பி சிலர் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். ஒரு இயக்கம் பிறந்து விட்டது. சான்டா பார்ப்ரா கடற்கரையிலுள்ள உயிரினங்களின் நிலைமை மெதுவாக சீரடைந்தது. முற்றிலும் சரியாக சிறிது நாளாகும். எண்ணெய் கசிவுக்கு முன்பு சாம், எண்ணெய் கிணறுகள் தனக்குப் பிடித்த இடத்தின் ஒரு பகுதியாகத் தான் இல்லை என்று மேம் போக்காக நினைத்தாள். இப்போதும் அவள் அவர்களைத் தாண்டி பார்க்க விரும்பவில்லை. இன்னும் நிறைய வேலைகள் இருந்தன. சாமும் அவளுடைய தோழிகளும் இப்போதுதான் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். சாமும் தோழிகளும் சுற்றப்புறச் சூழலை காக்க 10 விதிகளை உருவாக்கி அதை பிரச்சாரம் செய்தனர். சுற்றுப்புற குப்பைகளை அகற்றுவதில் பங்கேற்க வேண்டும். அறையை விட்டு வெளியே வரும் போது மின் விளக்கை அணைக்க வேண்டும். சிக்கனமாக நீரை பயன்படுத்த வேண்டும். மீண்டும் பயன்படுத்த கூடிய தண்ணீர் பாட்டிலை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை கை விட வேண்டும். துணிப் பையை பயன்படுத்த வேண்டும். உங்கள் உணவுக் கழிவுகளை உரமாக்குங்கள். உந்து வண்டிகள் பயன்பாட்டை குறைத்தல். சுற்றுச் சூழல் இயக்கங்களில் பங்கெடுத்தல் பூமியைக் காக்க சுற்றுச் சூழல் பிரச்சனைகளை அறிதல். தினமும் பூமி தினமே! பின் குறிப்பு : 1969-ஆம் ஆண்டு யூனியன் எண்ணெய் நிறுவனத்தினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு சான்டா பார்ப்பரா கடற்கரைப் பகுதியில் சுற்றுச் சூழல் கேட்டை உருவாக்கியது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிகழ்வு மக்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இச்சிறுகதை 'கருப்பு கடற்கரை' எழுதப்பட்டுள்ளது. செளன்னா மற்றும் ஜான் ஸ்டித் ஆகிய இருவரும் பூமியைக் காக்கும் இயக்கத்தில் பற்று கொண்டவர்கள். சான்டா பார்ப்பரா நிகழ்வு இருவரின் மனதிலும் ஆழ்ந்த கிளர்ச்சியைத் தூண்டியது. இந்த இரு இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் முதல் கதை இது. சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்

  • காலப்பெட்டகம்

    அழ.வள்ளியப்பா குழந்தைப்பாடல்கள் மியாவ் மியாவ் பூனையார் மியாவ் மியாவ் பூனையார்  மீசைக் காரப் பூனையார். ஆளில் லாத வேளையில்  அடுக்க ளைக்குள் செல்லுவார் பால் இருக்கும் சட்டியைப்  பார்த்துக் காலி பண்ணுவார் மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார்.  இரவில் எல்லாம் சுற்றுவார்.  எலிகள் வேட்டை ஆடுவார் . பரணியில் ஏறிக் கொள்ளுவார் . பகலில் அங்கே தூங்குவார்.  மியாவ் மியாவ் பூனையார்.  மீசைக் காரப் பூனையார். மெல்ல மெல்லச் செல்லுவார்.  மேலும் கீழும் தாவுவார். 'ளொள்ளொள்' சத்தம் கேட்டதும் நொடியில் ஓடிப் பதுங்குவார்.  மியாவ் மியாவ் பூனையார்.  மீசைக் காரப் பூனையார். நேரு தந்த யானை டில்லிக்குப் போனேன்,  நேருவைப் பார்த்தேன், ' சல்யூட்' செய்தேன்.  சாக்லேட் தந்தார். என்னடா கண்ணு  ஏதடா வேணும்?  சொன்னால் தருவேன்.  சொல்வாய்' என்றார். 'அன்புள்ள மாமா,  அவசியம் வேணும்,  சின்னதாய் யானை  சீக்கிரம் தருவீர்' என்றேன். காகிதம் எடுத்தார் உடனே என்னவோ அதிலே  எழுதிக் கொடுத்தார். பார்த்தேன் அதையே.  படத்தில் யானை!  பார்த்தேன் அவரை.  பக்கெனச் சிரித்தார். 'யானைநீ கேட்டாய்.  அன்புடன் தந்தேன்.  தீனியே வேண்டாம்.  செலவுமே இல்லை. அடக்கமா யிருக்கும்.  அங்குசம் வேண்டாம்.  மடித்துநீ பைக்குள்  வைத்திடு' என்றார். ஜோர் ஜோர் யானை! ஷோக்கான யானை!  யார்தான் தருவார்  இதுபோல் யானை? தலைவர் தந்தார்  தங்கக் கையால்,  விலைக்கா வேண்டும்?  விற்கவே மாட்டேன்!

bottom of page