இயலில் தேடலாம்!
268 results found with an empty search
- தத்துவம் அறிவோம் -12
வாழ்க்கை உருவாக்கிய கேள்விகள் : மனிதர்களின் ஆராய்ந்து அறியும் பகுத்தறிவு வளராத காலத்தில் மனிதர்கள் யார் எதைச் சொன்னாலும் நம்பினார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்துக்கும் யார் காரணம்? ஏன் இப்படி நடக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத போது தன்னை மீறிய சக்தி இந்த உலகத்தில் இருக்கிறது என்று உணர்ந்தார்கள். அது கடவுள் என்று சிலர் சொன்னார்கள். அது இயற்கை என்று சிலர் சொன்னார்கள் அது தலைவிதி என்று சிலர் சொன்னார்கள். அது தற்செயல் என்று சிலர் சொன்னார்கள் அது மனிதனால் ஏற்பட்ட து என்று சிலர் சொன்னார்கள். மனிதர்களுக்கு விடை தெரியாத கேள்விகள் இன்றுவரை இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கின்றன. கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார், உயிர்களைப் படைத்தார், மனிதனைப் படைத்தார், பிறப்பையும் இறப்பையும் படைத்தார். இன்ப துன்பங்களைப் படைத்தார். ஏற்ற தாழ்வுகளைப் படைத்தார். உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகளைப் படைத்தார். ஏழை, பணக்காரனைப் படைத்தார். ஆணிலிருந்து பெண்ணைப் படைத்தார். என்று ஏராளமான கட்டுக்கதைகளை உருவாக்கினார்கள். இன்றும் இந்தக் கட்டுக்கதைகளுக்கு மவுசு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் இவற்றை நம்புகிறார்கள். தங்களுடைய துன்பங்களுக்குக் காரணம் தெரியாத போது தலை எழுத்து, தலைவிதி என்று நம்பத் தொடங்கினார்கள். அதை மாற்றுவதற்காகக் கடவுளைப் பிரார்த்தனை செய்தார்கள். வேண்டுதல் செய்தார்கள். பரிகாரம், நேர்த்திக்கடன் என்று கடவுளிடம் பேரம் பேசினார்கள். இந்த பூமியில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கடவுள் தோன்றினார். ஆதிப்பழங்குடி மக்கள் வழிபட்ட ஆவிகள், இயற்கை உயிர்கள் இப்போது பெரிய கடவுளாக மாறினார்கள். இந்தக் கடவுளருக்குக் கதைகள் தோன்றின. இந்த பூமியைப் போலவே இன்னொரு இடம் இருப்பதாக க் கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன. மனிதர்கள் இறந்த பிறகு அந்த மேல் உலகத்துக்குப் போவார்கள் என்று நம்பச் சொன்னார்கள். இந்த வாழ்க்கையில் செய்யும் நல்லது கெட்ட துகளுக்கு ஏற்ப அங்கே சொர்க்கமோ நரகமோ கிடைக்கும். அதாவது நல்லது செய்தால் சொர்க்கமோ, கெட்ட து செய்தால் மீண்டும் வேறு வேறு பிறவிகளை எடுத்து துன்பமடைய வேண்டும் என்று சொன்னார்கள். இப்படி ஏழு பிறவிகளை எடுத்தபிறகு சொர்க்கத்துக்குச் சென்று கடவுளை வேண்டி முக்தி அடையலாம். அதாவது கடவுளோடு ஒன்றாக க் கலந்து விடலாம் என்று கப்சா விட்டார்கள். பெரும்பாலும் இந்தக் கதைகளின் அடிப்படையில் சிலச் சில மாற்றங்களுடனே பூமியின் மற்ற பகுதிகளிலும் சொன்னார்கள். எனவே மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் படும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் அவர்கள் காரணம் இல்லை. எது காரணம்? போனபிறவியில் செய்த நல்லது கெட்ட து. கடவுளின் விருப்பம். பிறக்கும் போது தலையில் எழுதிய எழுத்து. அதாவது விதி. இந்த மூடநம்பிக்கைகளை வைத்து சோசியம் பிறந்தது. சரி. மூடநம்பிக்கை என்றால் என்ன? மூட நம்பிக்கை என்றால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவை. ஆதாரம் இல்லாதவை. உண்மையில் நடக்க இயலாத கற்பனைகள். கட்டுக்கதைகளை அடிப்படையாக க் கொண்டவை. என்று சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களே யோசியுங்களேன். நம்முடைய வீட்டில் இப்படி என்ன என்ன நம்பிக்கைகள் இருக்கின்றன? அவற்றைப் பட்டியலிட்டு இந்தக் கட்டுரைக்குப் பின்னூட்டமாக எழுதுங்கள் பார்க்கலாம். ( அறிவோம் தெளிவோம் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- ஞானச் செருக்கு
ஞானச் செருக்குடை பாரதி-எழு ஞாயிறாம் விடுதலைச் சாரதி! வானம் அளந்திடும் மாருதி-அவன் வடித்ததோ இன்ப வாரிதி! தேனைச் சொரிந்திடும் தமிழ்க்கவி-அவன் தேடிய விடுதலைப் படைக்கவி! கானகம் மலைகளின் குடைக்கவி-அதைக் கவிதை வடித்த கலைக்கவி! கண்ணன் பாட்டைப் பாடினான்-அவன் கண்ணம் மாவுடன் ஆடினான்! வண்ணக் கவிதைப் பாடினான்-அதில் வாழ விடுதலைத் தேடினான்! பாஞ்சாலி சபதம் பாடினான்-அதில் பாரதத் தாயை நாடினான் வாஞ்சை விடுதலைத் தேடினான்-கவி வடித்தே வீரத்தில் கூடினான்! எண்ணரும் மொழிகளை அறிந்தவன்-அதில் ஏற்றம் தமிழெனப் புரிந்தவன்! பண்ணருங் கலைகளில் உயர்ந்திட-அவன் பாடினான் உலகோர் அயர்ந்திட! பாரதித் தேரை இழுத்திடு-அவன் பாக்களைப் புகழில் உயர்த்திடு! பாரதிர நீயும் உரைத்திடு-பாரதிப் பாடலில் நாட்டைக் கரைத்திடு! கோவி.பால.முருகு இயற்பெயர் பால.முருகுவரதராசன் தமிழாசிரியர், தலைமையாசிரியர்(பணிநிறைவு) 15 நூல்கள் எழுதியுள்ள இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீக்கதிர் வண்ணக்கதிர் பாலர் பூங்காவில் எழுதி வருகிறார். பத்துக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
- ஓவியங்கள் சிக்கலான விஷயங்களை எளிமையாகச் சொல்லிவிடும் : பங்கஜ் சாய்கியா, குழந்தைகள் புத்தக ஓவியர்
நேர்காணல்: அனுரிமா சந்தா ( என் முதல் சந்திப்பு பங்கஜ் சாய்கியாவுடன் பாத்ஷாலா என்ற அழகிய நகரில், அமைதியான குளிர்கால காலைஎன் முதல் சந்திப்பு பங்கஜ் சாய்கியாவுடன் பாத்ஷாலா என்ற அழகிய நகரில், அமைதியான குளிர்கால காலை நேரத்தில், நல்ல வெயிலில் நடந்தது. நேரத்தில், நல்ல வெயிலில் நடந்தது. பங்கஜ், அந்தக் குளிர்கால வெயிலைப் போலவே, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். The Theatre of Ghosts என்ற படைப்புக்கான அவரது சிந்தனைகள், குழந்தைகள் புத்தக ஓவியராக இந்தியாவில் அவர் சந்தித்த சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து அவர் அருமையாகப் பேசினார். இந்த நேர்காணலில், அவரது படைப்பாற்றல், கலைக்கான உந்துதல், மற்றும் சிறார் இலக்கியம் குறித்த பார்வைகளை ஆழமாகப் பார்க்கலாம். ) அனுரிமா - குழந்தைகள் புத்தக ஓவிய உலகில் உங்கள் பயணம் எப்படி தொடங்கியது? பங்கஜ் : நான் எப்போதும் காட்சி ரூபமான கதை சொல்லலில் ஆர்வம் கொண்டிருந்தேன். சிறுவயதில் காமிக்ஸ் வாசித்ததே அதற்குக் காரணம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட வயதுக்கான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், என் முதல் ஓவியப்பணியில் பள்ளி மாணவர்களுக்கான படைப்புகளை உருவாக்கியபோது, வாசகர்களின் வயது பற்றி அதிகம் சிந்திக்கத் தொடங்கினேன். பின்னர் சிக்கிம் மாநில பள்ளிப் பாடப்புத்தகங்களுக்கான ஓவியங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டேன். அதன்பின் என் கலை குழந்தைகள் மையமாக மாறியது. Pratham Books நிறுவனத்தின் கலை இயக்குநர் கனாடோ ஜிமோ, என் இன்ஸ்டாகிராம் படைப்புகளைப் பார்த்து, ஒரு படப்புத்தகத்தை ஓவியமாக்க அழைத்தார். அதன்பின் 15-க்கும் மேற்பட்ட படப்புத்தகங்களை ஓவியமாக்கியுள்ளேன்; இரண்டு புத்தகங்களை எழுதியும் ஓவியமாக்கியுள்ளேன். தற்போது, என் வேலைகளில் பெரும்பாலானவை பாடப்புத்தக ஓவியங்கள். சுமார் 40% வேலைகள் மட்டும் படப்புத்தகங்கள். கூடுதலாக அனிமேஷன், பிராண்டிங், கலைப் பயிற்சிகள் ஆகியவற்றிலும் ஈடுபடுகிறேன். அனுரிமா _-- உங்களை அதிகம் பாதித்த கலைஞர்கள் யார்? பங்கஜ் : Pratham Books குழுவே எனது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. ஹயாவோ மியாசாகி, இசாவோ தகஹதா ஆகிய ஜப்பானிய இயக்குநர்களின் படைப்புகள் எனக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தின. டேவ் மெகீன், குவென்டின் பிளேக், மார்ஜானே சத்ராபி ஆகியோரின் படைப்புகளும் எனக்கு உந்துதலாக இருந்தன. இரவு உணவிற்கு அழைக்க விரும்பினால், மியாசாகி, தகஹதா (அவர் சமீபத்தில் மறைந்தார்), மற்றும் நீல் கெய்மன் ஆகியோருடன் கலந்துரையாட விரும்புவேன். அனுரிமா - . உங்கள் கலைப்பாணியை எப்படி விவரிப்பீர்கள்? பங்கஜ் : என் பாணி Studio Ghibli படைப்புகளின் உத்வேகத்தினால் உருவானது. அசாமின் இயற்கை காட்சிகள், தகஹதாவின் Only Yesterday , Princess Kaguya போன்ற படங்களின் பாணி எனக்கு தாக்கம் ஏற்படுத்தியது. சமீபத்தில், நீர்வண்ண பாணியிலிருந்து, சற்று கிராமிய பாணிக்கு மாறியுள்ளேன். நான் இயற்கை, சமூக-கலாச்சார அம்சங்களை பிரதிபலிக்கும் ஓவியங்களை விரும்புகிறேன். உள்ளூர் அம்சங்களில் இருந்து உலகளாவிய உணர்வுகளைத் தேடுகிறேன். அனுரிமா - . நீங்கள் விரும்பும் ஊடகங்கள் மற்றும் நுட்பங்கள்? பங்கஜ் : காகிதத்தில் மை கொண்டு வரைவதை விரும்புகிறேன். எனவே, பாரம்பரியமும், டிஜிட்டலும் கலந்த முறையில் வேலை செய்கிறேன். கோடுகளை கையால் வரைவது எனக்கு அதிக கட்டுப்பாட்டை அளிக்கிறது. ஆனால் நிறமிடுதல் டிஜிட்டலாக செய்வது வேகமாகவும் திருத்த எளிதாகவும் இருக்கிறது. அனுரிமா - . கதாபாத்திரங்களுக்கு உந்துதல் எங்கிருந்து பெறுகிறீர்கள்? பங்கஜ் - : உண்மையான மனிதர்களிலிருந்து — குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள். இவர்களிடமிருந்து உந்துதல் பெறுகிறேன். அதனால் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக இருக்கும். அனுரிமா - . உங்கள் படைப்பாற்றல் செயல்முறை எப்படி? பங்கஜ் -- : ஓவியராக பணிபுரியும் போது, முதலில் கதாபாத்திர வடிவமைப்பு, பின்னர் ஸ்டோரி போர்டு, அதன் பின் இறுதி ஓவியங்கள். எழுத்தாளராகவும் ஓவியராகவும் பணிபுரியும் போது, முதலில் பல டூடில்கள், பின்னர் ஸ்டோரி போர்டுகள், ஒரே பாணி வடிவங்கள். இறுதியில், முழுப் புத்தகத்திலும் ஒரே பாணியைத் தொடர்ந்து பராமரிக்கிறேன். அனுரிமா - இதுவரை எத்தனை புத்தகங்களை ஓவியமாக்கியுள்ளீர்கள்? பங்கஜ் -- : 15-க்கும் மேற்பட்ட புத்தகங்கள். 10 அச்சில் வந்துள்ளன; மற்றவை வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. நான் slice of life , நகைச்சுவை, கற்பனை போன்ற வகைகளை விரும்புகிறேன். உணவு சார்ந்த கதைகளும் எனக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அனுரிமா -- . நினைவில் நிற்கும் அனுபவங்கள் அல்லது சவால்கள்? பங்கஜ் -- : குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு தருணமும் ஆச்சரியமாக இருக்கும். சமீபத்தில், அசாமில் ஒரு கிராபிக் நாவல் திட்டத்தில், வரைய வேண்டியதிருந்தது. எழுத்தாளர் அசாமைச் சேர்ந்தவர் அல்லாததால், சமூக-கலாச்சார அம்சங்களை சரியாக பிரதிபலிப்பது சவாலாக இருந்தது. குறிப்பாக, குப்பைத் தொழிலாளி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தை மரியாதையுடன், ஆனால் உண்மையை மறைக்காமல் காட்டுவது கடினமாக இருந்தது. இது, படப்புத்தகங்கள் எப்போதும் கூட்டுப் பணியாக இருப்பதை உணர்த்தியது. அனுரிமா -- . குழந்தைகள் புத்தக ஓவியங்களில் உள்ள சிறப்பான அம்சங்கள் என்ன? பங்கஜ் --: படப்புத்தகங்கள் காட்சி மற்றும் உரைநடை இணைந்த ஊடகம். வாசிக்கத் தொடங்கும் குழந்தைகளுக்கு பாலமாக இருக்கும். அதேசமயம், படங்கள் சிக்கலான கருத்துகளை எளிமையாக சொல்லும் சக்தி கொண்டவை. அனுரிமா -- . கலாச்சார உணர்வு மற்றும் உள்ளடக்கம் எப்படி உறுதி செய்கிறீர்கள்? பங்கஜ் -- : சிக்கிம் அரசின் பாடப்புத்தக திட்டத்தில், பல சமூகங்களைப் பற்றி அறிய கல்வி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், அனைத்து சமூகங்களையும் சமமாக பிரதிபலிக்க முடிந்தது. கதாபாத்திரங்களின் தோல் நிறங்களிலும் கவனம் செலுத்தினோம் — வாசகர்கள் தங்களை காட்சிகளில் காண வேண்டும். அனுரிமா -- . இந்திய கலாச்சாரத்தின் தாக்கம்? பங்கஜ் -- : உள்ளூர் கலாச்சாரத்தை wherever possible சேர்க்கிறேன். ஆனால், வேறு கலாச்சாரங்களை ஆராய்வதும் சுவாரஸ்யம் தான். கற்பனை ஓவியங்களில் பல கலாச்சார அம்சங்களை இணைக்க முடியும். அனுரிமா -- . புதிய ஓவியர்களுக்கு உங்கள் ஆலோசனை? பங்கஜ் -- : இந்தியாவில் குழந்தைகள் புத்தக ஓவியராக விரும்பினால், உங்கள் சுற்றுப்புறக் கதைகளைச் சொல்லுங்கள். இந்தியாவின் ஒவ்வொரு காட்சியிலும் கதைகள் நிறைந்திருக்கும். ஆனால், முழுநேர ஓவியராக இருப்பது கடினம். நிதிக்குறைவால், திட்டங்களில் வரையும்போது குறைவான சம்பளமே கிடைக்கும். அதனால் பல திட்டங்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருக்கும். காலக்கெடுவுக்குள் தரமான படைப்புகளை வழங்க கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால், அனிமேஷன், பிராண்டிங், பொருட்கள், கற்பித்தல் போன்ற பல வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச வெளியீடுகளுடனும் பணிபுரியலாம். முக்கியமாக, உங்கள் திறன்களை மேம்படுத்தி, நீங்கள் எப்படிப்பட்ட ஓவியராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இது மிகவும் திருப்திகரமான தொழில். ஒரு புத்தகத்தை முடித்து, அதை குழந்தைகளுடன் பகிரும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. Courtesy—ACLiSA தமிழில் – உதயசங்கர் ( ஏ.ஐ.உதவியுடன் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- பட்டம்
பட்டம் பார் பட்டம் பார்! படபடன்னு பறக்குது பார்! சுட்டிப் பையன் கையிலே சுற்றி வைத்த நூல்விட்டே பட்டம் பார் பட்டம் பார்! படபடன்னு பறக்குது பார்! வண்ணம் பல அதிலே வடிவம் கூட அழகே! காற்று அடிக்கும் திசையிலே பட்டம் பறக்கும் வாலோடே! பட்டம் பட்டம் பார்! படபடன்னு பறக்குது பார்! எங்களுடன் ஆட வா நிலா நிலா ஓடி வா! நீ இருப்பது வானிலா? வட்ட வடிவ வெண்ணிலா வண்ணத்தில் வெண்மையா? பிட்டு உன்னைப் பார்க்கவா? கிட்டே நீயும் வருவாயா? நிலா நிலா ஓடி வா! எங்களுடன் ஆட வா! நட்சத்திரம் கூட்டி வா! நாமும் போவோம் ஓர் உலா! மாலதி ராமலிங்கம் கவிஞர், எழுத்தாளர், மாலதி இராமலிங்கம் எழுதிய 3 நூல்களில் ஒன்று தமிழகத்தின் 32 மாவட்ட அரசு நூலகங்களில் 800 நூல்களும் புதுச்சேரி அரசின் நூலகங்களில் 2 நூல்கள், தலா 74 நூல்களும் இடம்பெற்று உள்ளன.
- அறமதியின் கதை
அன்பினியும் அறமதியும் நாளை நிகழப்போகும் அந்தச் சிறப்புமிக்க சந்திப்பிற்காக, அன்பினி பையை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அவளது எண்ணங்கள் டெல்லியின் கடமைப் பாதையில் (Kartavya Path) துள்ளிக் குதித்தன. ஜன்னல் வழி புகுந்த கடும் குளிர்க்காற்று, மெல்லிய ஊசியாய் அவள் மேனியில் தைத்தது. திடீரென எதையோ நினைவுகூர்ந்தவள், தன் குறிப்பேட்டை எடுத்தாள். பொத்தானை அழுத்தியதும் 'கிளிக்' எனத் திறந்தது அது. அதில் அன்பினியின் ஆசைகள், கேள்விகள், கோபங்கள், சோகங்கள், அனுபவங்கள், ஓவியங்கள், கிறுக்கல்கள் என்று எல்லாமே இருந்தது. அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் ஒன்று விடாமல் எழுதிவிட்டதாக நிம்மதி அடைந்து ஐந்து நிமிடம் தான் ஆகியிருக்கும். அதற்குள் வண்ணங்களால் நிறைக்கப்பட்ட வானத்தைப் பற்றி எழுதத் தவறிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றிவிட்டது. அவள் தங்கியிருந்த 'ராஷ்ட்ரிய ரங்ஷாலா' முகாம் ஒரு குட்டி இந்தியா. ரோஜாவின் அழகுடன் மல்லியின் வாசனை சேர்ந்தது போல, தேங்காய் எண்ணெய் வாசம் வீசும் கேரளத்து அவியலுடன், பஞ்சாபி பரத்தாவின் நெய் மணம் சங்கமித்து அவளது சுவாசத்தில் இழைந்தோடியது. வெவ்வேறு மாநிலங்களின் வண்ணவண்ண உடைகளும், புரியாத மொழிகளின் கொஞ்சல்களும், வண்ண விளக்குகளின் ஒப்பனையில் ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கு நடனமாடும் நீரூற்றைப் (Fountain) போல அங்கே ஒன்றிணைந்திருந்தன. வெவ்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள், இனங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலைகள் என அந்த முகாம் ஒரு பலவகைப் பூக்களால் ஆன நந்தவனத்தைப் போலத் திகழ்ந்தது. அந்த நந்தவனத்தில் அன்பின் மணம் வண்ணமயமாக வீசியது. சைகைகளாலும், புன்னகையாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயன்றபோது, இதயங்களைப் பிணைக்க மொழியை விட 'அன்பு' ஒன்றே போதுமானது என்பதை அந்த நாட்கள் அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தன. இந்த இருபத்தைந்து நாட்களில் அவள் கண்ட அந்தப் பன்முகத்தன்மைதான், இன்று அவள் கடமைப் பாதையில் கண்ட காட்சியின் நிஜமான அர்த்தம் என்பதை அவள் உணர்ந்தாள். இன்று காலை, 21 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது அன்பினியின் கால்கள் அதிர்ந்தன. ஒட்டுமொத்த கூட்டமும் ஒன்றாக, ஒரே மூச்சில் 'இந்தியர்' என்ற உணர்வோடு, உணர்வுகள் உச்சிக்கு எழுந்த அந்தத் தருணம். அன்பினிக்குச் சிலிர்ப்பு ஏற்பட்டது. கம்பீரமாகத் தமிழ்நாட்டின் ஊர்தி வந்துகொண்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் பிரம்மாண்டமான எல்.இ.டி (LED) சுவர்களால் கட்டமைக்கப்பட்ட ஊர்தி அது. பக்கவாட்டில் பறை இசைக்கலைஞர்கள், பறை அதிர வாசித்துக் கொண்டே ஆடி வந்தார்கள். ஊர்தியின் மேலே மிகப்பெரிய எல்.இ.டி திரைகளாலான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble), சிலை வடிவமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதற்கு முன்புறமாக ஐந்து பிரம்மாண்டமான, அதிநவீன தானாக ஒன்றிணையும் உருமாறும் ரோபோக்கள் நின்றிருக்க, நடுவே தமிழணங்காக அன்பினி கம்பீரமாக நின்றிருந்தாள். அந்தத் தருணத்தில் அன்பினி முழுமையாகத் தமிழணங்காகவே மாறி இருந்தாள். அவள் தலையில் சிந்தாமணி அதிகாரத்தின் சின்னமாக மின்னியது. 'ழகரம்' தாங்கிய வேலை ஏந்தியிருந்த கைகளில் வளையாபதி ஒளி வீசியது. மனிதாபிமானம் என்னும் உயரிய அறத்தைப் போதிக்கும் மணிமேகலை , அவளது இடுப்பை அலங்கரித்திருந்தது. காதுகளில் குண்டலகேசி குண்டலங்களாக ஒளிர, கால்களில் சிலப்பதிகாரத்தின் சிலம்பு சுடர் போலப் பிரகாசித்தது. ஒவ்வொரு ரோபோவும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களின் குறியீடாக நின்றிருந்தது. ஒரு கணம் அது அந்தக் காப்பியத்தின் முக்கியக் கதாபாத்திரமாகவும், அடுத்த கணம் 'லெகோ' (Lego) கட்டமைப்புச் செங்கற்களைப் போல, தானே உருமாறி ஒரு புத்தகத்தின் உருவம் எடுத்து, அந்த காப்பியப் பெயரையும் அது கூறும் அறத்தையும் காட்டியது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமர்ந்திருந்த இடத்தை அந்த ஊர்தி நெருங்கியபோது, அந்த ஐந்து ரோபோக்களும் ஊர்தியின் தரையில் தகர்ந்து, நடுவே ஊர்ந்து வந்து தமிழணங்கைத் தூக்கி நிறுத்தின. அவை ஒரு பீடம் போல உருமாறியிருந்தன. அந்த நொடி, அவற்றின் திரைகளிலிருந்து வெளிவந்த ஒளிக்கீற்றுகள் 'அறம்' என்று முப்பரிமாண ஒளிப்படமாக (3D Hologram) காற்றில் மிதந்தன. கூடியிருந்த அனைவரும் செம்மைத் தமிழின் அறத்தையும், குடியரசு இந்தியா மக்களுக்கு வழங்கிய அதிகாரத்தின் அறத்தையும் ஒன்றிணைத்த அந்தப் பொன்னான கணத்தில் பூரித்துப் போய் நின்றிருந்தனர். இவையனைத்தையும் மிகத் துல்லியமாக தனது குறிப்பேட்டில் படம் பிடித்திருந்தாள் அன்பினி. தனது எழுத்துக்களுக்கு ஆங்காங்கே ஓவியங்களும் அழகு சேர்த்திருந்தன. "மூவண்ணப் பலூன்கள் வானத்தில் வண்ண நட்சத்திரங்களைப் போல இருந்தன; மூவண்ணப் புகையோ குட்டி வண்ண மேகங்களைப் போல மிதந்தன" என எழுதியவள், அதன் அருகில் ஒரு குட்டி டூடுல் (Doodle) வரைந்தாள். பின்பு, முழுத் திருப்தியோடு தனது குறிப்பேட்டை மூடி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றாள். நாளை குடியரசுத் தலைவரைச் சந்திக்கப்போவதும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றச் சுற்றலாவின் ஒரு பகுதியாக நூலகத்தைப் பார்க்கப்போவதும் அவள் மனம் முழுவதையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. உடலும் மனமும் ஒரு கட்டத்தில் அயர்ந்து தூக்கத்தைத் தழுவியது. அன்பினி படுத்திருந்த அந்தக் காட்சி, நீரில் மிதந்த பிரதிபலிப்புச் சிற்றலைகளில் ஆடுவதைப் போல மெல்லக் கலைந்தது. நாடாளுமன்ற நூலகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி பாதுகாக்கப்பட்ட அந்தப் பெட்டியின் அருகில் நின்றிருந்தாள் அன்பினி. அவளது கைகள் அந்தப் பெட்டியில் பட்டதும், 'பட்' என்ற சத்தத்துடன் அந்த கண்ணாடி மூடி திறந்தது. 'ஹிஸ்' என்று ஹீலியம் வாயு வெளியேறிய அந்தத் தருணம், ஒரு மெல்லிய மினுமினுப்புடன், தங்க நிறத்தில் 'Constitution of India' என்று பொறிக்கப்பட்ட அட்டை தெளிவாகத் தெரிந்தது. ஒரு குழந்தை தன் அம்மாவைப் பிஞ்சு விரல்களால் தழுவுவதைப் போல, அவள் அந்தப் புத்தகத்தைப் திறந்தாள். 'வாய்மையே வெல்லும்' என்ற வாசகத்திற்கு மேலே கம்பீரமாக மூன்று சிங்கங்கள் நின்றிருக்க, துள்ளும் குதிரைக்கும் நிமிர்ந்த காளைக்கும் நடுவே அசோகச் சக்கரம் பந்தமாக அமைந்திருந்தது. "இந்தியர்கள் அமைதி, பண்பாடு மற்றும் நற்பெயரின் தூதுவர்கள்" என்று ஜவஹர்லால் நேருவின் குரல் அன்பினியின் காதுகளில் அசரீரி போல ஒலித்தது. தன்னையறியாமல் அன்பினி அடுத்த பக்கத்தைப் புரட்டினாள். அந்தப் பக்கத்திலிருந்த ஓவியங்கள் காகிதங்களிலிருந்து மின்னல் வேகத்தில் முப்பரிமாணமாக முளைத்தன. இலைகளும் தழைகளும் நீண்டு விரிந்து படர்ந்தன. கொடிகள் ராட்சதக் கொடிகளாக உருமாறின. தாமரை மொட்டுகளும் மலர்களும் வான் உயரத்திற்கு வளர்ந்தன. சட்டென்று தங்க நிற மயில் ஓவியங்கள், வண்ணமயமான உயிருள்ள மயில்களாக அகவித் திரிந்தன. பிளிறும் யானையும், திமிறும் காளையும், துள்ளும் குதிரையும், பாயும் சிங்கமும் நான்கு மூலைகளிலிருந்தும் தாவி ஓடின. அன்பினியின் உடல் மொத்தமும் நடுங்கியது; அவளது சுவாசம் புயலைப் போல வேகமெடுத்தது. அவள் அங்கிருந்து ஓடிவிட எத்தனித்தபோது, அந்த எட்டு சட்டக (Geometric) ஓவியங்களும் ஒன்று சேர்ந்து ஒரு மாயக் கம்பளம் போல அவள் கால்களுக்குக் கீழே விரிந்தது. மெல்ல மேலெழுந்த கம்பளத்தில் அவள் 'தொப்பென்று' அமர்ந்தாள். வெல்வெட் (மூதாய்) பூச்சியின் மேனியைப் போல அது மென்மையாய் இருந்தது. அன்பினி திரும்பிப்பார்த்தாள். அவளுக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். என்ன நடக்கிறது? யார் அந்தப் பெண்? மெல்லப்புன்னைகைத்த அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த கருணை அன்பினியின் பயத்தை ஒளியைப் போல நீக்கியது. அந்த அழகு நிரம்பிய, அன்பின் உருவமான தங்கத் தாரகை, அன்பினியின் கைபிடித்துக் கொண்டாள். அவளுடைய தொட்டவுடன் மாயக்கம்பளம் பறக்கத் தொடங்கியது. அன்பினிக்கு இப்போது பயமில்லை. பலகாலம் ஒன்றாகப் பழகிய ஒரு தோழியின் அருகில் இருப்பதைப் போல உணர்ந்தாள். யார் இவங்க? இவங்க பேர் என்ன? எனக்கு ஏன் இவங்களப் பார்த்தா ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க மாதிரி இருக்கு?” என்று அன்பினி மனதில் கேள்விகள் எழுந்தன. புன்னகைத்த அந்தப் பெண், "நான் ஓர் அணங்கு. என் பெயர் அறமதி" என்றாள். ‘அறம்’ ‘மதி’ இந்த சொற்கள் அன்பினியின் உடலில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தியது. ” யார் இந்த அறமதி ? ( அறிவோம் தெளிவோம் ) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- பொட்டல் காட்டில் மர்மம்
இனியன், ஏழாம் வகுப்பு ஒரு நாள் கார்த்திக் தனது நண்பர்களுடன் பொட்டல் காட்டிற்கு போனான். அங்கு எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாட தங்களை தயார் படுத்தி கொண்டிருந்தனர். எப்பவும் போல் கார்த்திக் கேப்டனாக இருந்தான். மேட்ச் தொடங்கியது. எதிர் அணியை விட கார்த்திக் அணி 40 ரன்கள் வித்தியாசம் இருந்தது. 20 பந்துகளில் 40 ரன்கள் அடிக்க வேண்டும். எதிர் அணியில் ஒருவன் திடீரென்று 6 ரன்களை ஒரே அடியில் அடித்தான். அதை தொடர்ந்து நான்குக்கள், ஆறுகள் என்று அடித்து கொண்டே இருந்தான். கடைசி பந்து நான்கு ரன்கள் எடுக்க வேண்டும். அப்போது அவன் அந்த பந்தை தூக்கி அடித்தான். பந்து பறந்து போய் விழுந்த இட த்தைப் பார்த்து முத்து ஓடி போய் பந்தை பிடித்து விட்டான். கார்த்திக் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்து விட்டது. ஆனால் முத்துவின் கையில் பந்துடன் வரும்போது அவன் கையிலிருந்து ரத்தம் சொட்டியதைக் கார்த்திக் பார்த்தான். “ டேய் முத்து என்னடா ஆச்சு? “ என்று கேட்டான் கார்த்திக். முத்துவே அப்போது தான் கவனித்தான். ஏதோ நரம்பு அறுத்து விட்டது போல ரத்தம் கொட்டியது. என்ன அது என்று யாருக்கும் தெரியவில்லை. அவனுடைய கையை இறுக்கிப் பிடித்தான் சுரேஷ். சில நொடிகளில் ரத்தம் வருவது நின்றுவிட்ட து. முத்துவின் கையில் இருந்து பந்தை வாங்கிய கார்த்திக்கின் விரல்களில் வித்தியாசமாக ஏதோ பட்டது. தடவிப்பார்த்தான். நீளமான இரும்புக்கம்பி மாதிரி இருந்த து. பந்தில் ஒட்டிக் கொண்டிருந்த அந்தக் கம்பியை எடுத்தான். அது என்னவென்று பார்த்தால் மங்கிய நிறத்தில் தங்கச்சங்கிலி மாதிரி இருந்தது. . ” டேய்!... தங்க செயின்டா ” என்று சுரேஷ் கத்தினான். “ இன்னிக்கி விலைக்கி செம காசுடா.. நீ வித்தால் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கலாம்..” என்றான் முத்து. ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்க வேண்டும் என்பது கார்த்திக்கின் கனவு. கார்த்திக்கின் கண்களில் புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் சைக்கிள் தெரிந்தது. கார்த்திக் என்ன சொல்லப்போகிறான் என்று எல்லோரும் அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கார்த்திக் வாயைத் திறந்தான். ” டேய் போய் போலீஸ் கிட்ட கொடுத்திடலாம்டா ” என்றான் கார்த்திக். எல்லோரும் சென்று காவலர் அதிகாரியிடம் கொடுத்தனர். அவர்கள் அதை பார்த்து பழசாக இருக்கிறதே என்று ஆராய்ச்சி அலுவலர்களிடம் கொடுத்தனர். அவர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது அது 2000 வருடத்திற்கு முன்பு செய்யப்பட்டது என்று கூறினர். அந்த பொட்டல் காட்டை ஆய்வு செய்து நிறைய நாணயங்கள், வளையல்கள், மண்பாண்டங்கள் கண்டறிந்தனர். அப்புறம் கார்த்திக் மற்றும் அவர்களது நண்பர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வந்தது.
- தத்துவம் அறிவோம் - 11
கடவுள் உருவான கதை என்னது? மனிதர்கள் கடவுளை உருவாக்கினார்களா? நம்பும்படியாகவா இருக்கு? கடவுள் தானே இந்த உலகத்தைப் படைத்தார். காற்றைப் படைத்தார். நீரைப் படைத்தார். உயிர்களைப் படைத்தார். அவர் எங்கும் இருப்பவர். எப்போதும் இருப்பவர். இப்படி நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். வெகுகாலத்துக்கு முன்னால் எல்லா மனிதர்களும் இப்படித் தான் நம்பினார்கள். இப்போதும் நம்புகிறார்கள். ஆனால் ஹோமோ சேப்பியன்ஸ் இந்த பூமியில் பிறந்தபோது அவர்களுக்குக் கடவுள் என்றால் யார் என்றே தெரியாது. இந்த உலகம் எப்படி பிறந்த து என்று தெரியாது. காற்று எப்படி உருவானது என்று தெரியாது. நீர் எப்படி உருவானது என்று தெரியாது. இயற்கையில், மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் எல்லாம் எப்படி உருவாயின என்று தெரியாது. அவர்கள் பிறக்கும்போதே இவை எல்லாம் இருக்கின்றன. அவ்வளவு தான். ஆனால் உயிர் வாழ்வதற்கான போராட்டம் பல இன்னல்களைக் கொண்டுவந்த து. பல நேரங்களில் தன்னுடன் இருந்த சக தோழர்களை இழக்க நேர்ந்த து. தன்னைச் சுற்றிலும் இருந்த இயற்கையை மரம், செடி,கொடி, விலங்குகள் அனைத்தையும் தன்னிச்சையாகச் செயல்படுவதைப் பார்த்தான். தன்னைப் போலவே அவற்றுக்கு உயிர் இருப்பதாக நினைத்தான். அந்த உயிர் உடலில் இருந்து போனாலும் அது மறைவதில்லை. ஆவியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நம்பினான். இப்போதும் அப்படித்தானே! ஆவி பேய் பிசாசு என்று கதைகள் இருக்கின்றன இல்லையா? எப்படி அந்தச் சிந்தனை மனிதனுக்குத் தோன்றியது தெரியுமா? நம்முடைய மூளை தான் காரணம். அப்படியா? மூளையின் வளர்ச்சிப்போக்கில் மனிதன் தினம் தினம் கண்ட காட்சிகளும் அனுபவங்களும் மூளையின் ஞாபகச்சேகரிப்பில் சேர்ந்து விடும். அந்த அனுபவங்களும் காட்சிகளும் அவன் உறங்கும்போது கனவுகளாக வெளிப்பட்டன. இப்போது கூடப் பாருங்கள் நமக்கு எவ்வளவு கனவுகள் வருகின்றன? அந்தக் கனவுகள் ஏன் வருகின்றன என்று யோசித்திருக்கிறோமா? சில கனவுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. சில கனவுகள் பயங்கரமாக இருக்கின்றன. சில கனவுகள் துன்பம் தருகின்றன. சில கனவுகளில் பகலில் நடந்த அத்தனைக் காட்சிகளும் மறுபடியும் வருகின்றன. சில கனவுகளில் நாம் பார்க்காத காட்சிகளும் வருகின்றன. சில கனவுகளில் இறந்தவர்கள் வருகிறார்கள். சில கனவுகளில் விநோதமான உருவங்கள் வருகின்றன. பகலில் நாம் அந்த உருவங்களைக் கற்பனையே செய்திருக்கமாட்டோம். இனி உங்களுக்குக் கனவுகள் வரும்போது ஏன் அப்படிப்பட்ட கனவுகள் வந்தன என்று யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் இறந்த உயிர்கள் கனவுகளில் வந்தபோது மனிதர்கள் அந்த உயிர்களின் ஆவி இந்த உலகத்தை விட்டுப் போகவில்லை. இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று நம்பினார்கள். அந்த ஆவிகளைச் சமாதானம் செய்ய வேண்டும். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி எதிரிகளாக இருந்தாலும் சரி அவர்களைச் சாந்தமடைய வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அப்போது கூட்ட த்தில் சிலர் பூசாரிகள் ஆனார்கள். அவர்கள் சில சடங்குகளை உருவாக்கினார்கள். மந்திரங்களை உருவாக்கினார்கள். பலி கொடுத்தார்கள். நல்லதும் கெட்ட தும் அந்த ஆவிகளால் தான் நடக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். எனவே மனிதர்கள் அந்த ஆவிகளை வணங்கி வழிபட்டார்கள். ஆவிகளை நல்ல ஆவிகள் என்றும் கெட்ட ஆவிகள் என்றும் பிரித்தார்கள். எதை எல்லாம் வணங்கினார்கள் தெரியுமா? கல்லை வணங்கினார்கள். மண்ணை வணங்கினார்கள். மரத்தை வணங்கினார்கள் செடி, கொடிகளை வணங்கினார்கள். புழுவை, பூச்சியை, பறவையை விலங்குகளை வணங்கினார்கள். அவர்களுடன் வாழ்ந்து மறைந்த சக மனிதர்களையும் வணங்கினார்கள். இந்த வழிபாட்டு முறைகளின் வழியாகத் தான் மெல்ல மெல்ல கடவுள் உருவானார். ஆவி வழிபாடு தான் கடவுள் வழிபாடாக மாறியது. புரிகிறதா? அதனால் தான் இப்போதும் கல்லை வணங்குகிறோம். நிலத்தை வணங்குகிறோம். நீரை வணங்குகிறோம். சில மரங்களில் சிவப்புத்துணியோ, மஞ்சள் துணியோ கட்டி வணங்குகிறோம். மலையை வணங்குகிறோம். இந்த உலகத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்த கடவுள்களை எண்ணிப்பாருங்களேன். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கடவுள், ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கடவுள், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடவுள், அப்படி என்றால் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? இப்படி மாவட்ட த்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு, கண்ட த்துக்குக் கண்டம் என்று எத்தனை கோடி கடவுள்கள் இருக்கிறார்கள். அடேங்கப்பா! என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இப்போது சொல்லுங்கள் கடவுள்களை உருவாக்கியது யார்? மனிதர்கள் தானே! உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- சீனா பாடாவின் ஆபக்
இந்தியில்: ஃபயாஸ் அகமது தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ தினமும் காலையில் சில பழக்கமான சத்தங்களைக் கேட்டுத்தான் எனது கண்கள் திறக்கும். தூக்கம் வழியும் கண்களைத் துடைத்துக்கொண்டு, கையில் வாளியைத் தூக்கிக் கொண்டு தெருமுனைப் பொதுக் குழாய்க்கு ஓடுவேன். அங்கே மனிதர்களின் நீண்ட வரிசை ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து நிற்கும். அதைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும்! எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மனிதர் வசித்தார். சுற்றி இருப்பவர்கள் அவரை 'ஆபக்' என்று அழைப்பார்கள். அந்தப் பெயர் எனக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றும். ‘ஒரு இந்தியருக்கு எப்படி இப்படி ஒரு பெயர் இருக்க முடியும்?’ என்று நான் அடிக்கடி யோசிப்பேன். நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. உண்மையில், ஆபக் இந்தியர் அல்ல. அவர் சீன நாட்டைச் சேர்ந்தவர். நான் குடியிருந்த அதே கட்டிடத்தில்தான் அவரும் வசித்தார். எங்கள் பகுதியில் தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு இருந்தது. தெருவோரக் குழாயில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தண்ணீர் பிடிப்பார்கள். வழிப்போக்கர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், தள்ளுவண்டி இழுப்பவர்கள் என எல்லோரும் அங்கேதான் வருவார்கள். கொல்கத்தாவில், நாங்கள் வசித்த பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அங்கு வசிப்பவர்கள், பொதுவாக அவர்களைச் 'சீனா' என்று கூப்பிடுவார்கள். அதனால்தான் அந்த இடத்திற்கு 'சீனா பாடா' (சீனா குடியிருப்பு) என்று பெயர் வந்தது. சீன மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் எங்களது வீட்டருகில் தாராளமாகக் கிடைக்கும். சீன நாட்டவருக்கு வீடுகள், ஹோட்டல்கள், கடைகள், பள்ளிக்கூடம் என எல்லாமே அங்கு உண்டு. அவர்களுக்கு ஒரு கோயிலும் இருந்தது. ஆனால், சில வியாபாரிகள் சேர்ந்து அந்தக் கோயிலை ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு மாற்றிவிட்டார்கள். கீழே கோயில் இருந்த இடத்தை ஒரு பாதுகாப்புக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். சாமி கும்பிடும் இடத்தை இப்படி மாற்றிவிட்டார்களே என்று யாரும் சண்டை போடவில்லை. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது எனக்குச் சிறு வயது என்பதால் அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு குழப்பமான விஷயமாகத் தெரிகிறது. ஆபக் ஒரு சீனக்காரர். மொட்டை மாடிக்கு மாற்றப்பட்ட அந்தக் கோயிலின் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த ஒரு சிறிய இடத்தில்தான் அவர் தங்கியிருந்தார். அதிகாலையிலேயே அவர் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார். “நீ சீனா, உன் அப்பா சீனா, உன் குடும்பமே சீனா” என்று அவர் சொல்லும்போது புருவங்கள் கோபத்தில் சுருங்கும், முகம் சிவக்கும். இதற்கெல்லாம் காரணம் ‘தபாரக் அலி' என்பவர்தான். தபாரக் அலியும் எங்கள் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் தான். அவர் ஆபக்கை அடிக்கடி சீண்டிப் பார்ப்பார். சும்மா இருக்காமல், “ஏய் ஆபக்! நீ ஒரு சீனாக்காரன்” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவ்வளவுதான், ஆபக்கிற்குப் பயங்கர கோபம் வந்துவிடும். இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடக்கும். இது தினமும் நடக்கும் ஒரு விஷயம். “நீ ஒரு சீனாக்காரன்” என்று தபாரக் அலி சொல்வது, ஆபக்கிற்கு ஒரு கெட்ட வார்த்தையை விட அதிக வலியைத் தரும். அந்த வேதனை அவர் முகத்திலேயே தெரியும். அவர் கோபத்தில் துடிப்பார். அருகில் நிற்பவர்கள் இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர் திட்டிக் கொண்டே குழாயில் தண்ணீர் பிடித்துவிட்டு, வேகமாகத் தன் வீட்டிற்குள் சென்றுவிடுவார். அவர் தங்கியிருந்த இடத்தை ஒரு 'வீடு' என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. மாடிக்குச் போகும் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த அந்தச் சிறிய இடம்தான் அவருடைய உலகம். ஆபக், சண்டை போட்டு ஓய்ந்த பிறகு, சில அலுமினியக் கம்பிகளை எடுத்துப் பறவைக் கூண்டுகள் செய்யத் தொடங்குவார். அவர் தன் மனதில் உள்ள கவலைகளை எல்லாம் அந்தக் கம்பிகளை வளைப்பதன் மூலமே தீர்த்துக் கொள்வார் போலத் தோன்றும். கோயிலைப் பாதுகாப்பதும், கூண்டுகள் செய்வதும்தான் அவருடைய வேலை. கோயிலுக்கு வரும் மக்கள், அன்போடு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வார். ஆனால், அவர் யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார். ஆபக் தயாரிக்கும் கூண்டுகள் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். மக்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து ஆசையோடு வாங்கிச் செல்வார்கள். அவருக்கு நிறையப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. அன்றைய சாப்பாட்டிற்குப் பணம் கிடைத்தால் போதும் என்று நினைப்பார். கொல்கத்தாவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவருடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, மனைவி மற்றும் குழந்தைகள் என எல்லாரும் சீனாவில் இருந்தார்கள். பாவம், அவரால் யாரையும் போய்ப் பார்க்க முடியாது. அங்கிருந்து யாரும் இவரைத் தேடி வரவும் முடியாது. உண்மையில் ஆபக் ஒரு போர்க்கைதி. 1962 இல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்தது. மற்ற போர்களைப் போலவே இதிலும் நிறைய பேர் உயிரிழந்தார்கள். இரண்டு நாடுகளுக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. போரில் சில வீரர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். சீன வீரராகச் சண்டை போட்ட ஆபக்கையும் இந்திய வீரர்கள் பிடித்துவிட்டார்கள். போர் முடிந்த பிறகு, இரண்டு நாடுகளும் கைதிகளைத் திருப்பி அனுப்பினார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஆபக் மட்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை. அவரே இதைச் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். ஆபக்கைப் போலவே கொல்கத்தாவிலேயே தங்கிவிட்ட சீன வீரர்கள் இன்னும் பலர் இருந்தார்கள். சீன அரசாங்கம் அவர்களைத் திரும்பக் கூப்பிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை முயற்சி செய்திருந்தாலும், அதன் பலன் ஆபக் போன்ற ஏழை வீரர்களுக்குக் கிடைக்கவில்லை. தபாரக் அலி கிண்டல் செய்யும்போது ஆபக் யாரைத் திட்டியிருப்பார்? தன் நாட்டு அரசாங்கத்தையா, தன் நாட்டு மக்களையா? தன் குடும்பத்தையா? தெரியவில்லை. ஆபக் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தாலும், அவரால் கொல்கத்தாவை விட்டு வெளியே எங்கும் போக முடியாது. கடந்த முப்பது வருஷங்களாக, ஆபக் கடையில் இருந்து கம்பிகளை வாங்கி வருகிறார். நாள் முழுவதும் உட்கார்ந்து பொறுமையுடன் பறவைக் கூண்டுகள் செய்து கொண்டிருப்பார். களைப்பாக இருந்தால் சுவரில் சாய்ந்தபடி அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவார். இதுதான் அவருடைய தினமும் நடக்கும் வாழ்க்கை. ஆபக்கைப் பார்க்கும்போது எனக்கு இந்திய 'ஆபக்'களின் ஞாபகம் வருகிறது. சீனாவின் ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு தெருக் குழாயடியில், இந்திய வீரர்கள் யாராவது தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அங்கே இருக்கும் ஒரு சீனக்காரர் அவர்களைக் கிண்டல் செய்யும்போது, அவர்கள் முகமும் இதேபோலக் கோபத்தில் சுருங்கும். அதில் ஒருவர் காலையில் எழுந்ததும் சத்தமாகப் பேசுவார். “நீ இந்தியன், உன் அப்பா இந்தியன், உன் குடும்பமே இந்தியன்” கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- குழந்தைகளின் உரிமைகள் - 9
குழந்தைகளுக்குக் குரலெழுப்பும் உரிமை - யூனிசெஃப் பிரகடனம் காலங்காலமாகக் குழந்தைகள், தங்களைப் பாதிக்கும் அல்லது தாங்கள் எதிர் கொள்ளும் ஏதேனும் ஒரு பிரச்னையில் தங்களின் கருத்தைக் கூற பெரியவர்கள் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள்; ஏழைகள் - பணக்காரர்கள்; அதிகாரிகள் - சாதாரணக் கூலி உழைப்பாளிகள்; ஆண்கள் - பெண்கள்; கிராமத்தவர் - நகர மக்கள் - என்று எந்த வித வேறுபாடும் கிடையாது. உலகம் முழுவதிலும், எல்லா இடங்களிலும், எல்லா மக்களிடை யே யும் இந்த ஒரு விஷயத்தில் பரிபூரண ஒற்றுமை நிலவுகிறது. "நீ சின்னப்பொண்ணு, ஒனக்கு என்ன தெரியும்?" "மொளச்சு மூணு எல உடல, அதுக்குள்ள பெரியவங்ககிட்டயே யோசன சொல்றியா நீ?" "பெரியவங்க பேசிக்கிட்டிருக்கறப்ப நீ என்ன பெரிசாக் கருத்துச் சொல்ல வந்துட்ட?" "பெரியவங்க சொன்னாங்கன்னாக் கேட்டுக்கணும்…ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிர் வார்த்தை பேசக்கூடாது…" "பெத்தவங்க நாங்க, ஒனக்கு எது நல்லதுன்னு எங்களுக்குத் தெரியாதா? நாங்க சொல்றபடி செய்யி, போ!" – இப்படிப்பட்ட வசனங்களை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் வலியுறுத்தும் எல்லா 'அறங்'களும் இந்த ஒற்றைத் தொனியிலேயே எவ்வித மாறுதலும் இன்றிக் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நம்மில் யாரேனும் மறுக்க முடியுமா? குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐ.நா. அமைப்பின் பிரகடனமும், சர்வதேச நாடுகளின் கூட்டு மாநாட்டில் அனைத்து நாடுகளும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், இன்னும் இவை போன்ற பிற ஆவணங்களும் மேற்கண்ட 'பெரிய'வர்களின் கருத்துகளைத் தீர்மானகரமாக மறுக்கின்றன. "தங்களைப் பாதிக்கும் எந்த ஒரு பிரச்னையைப்பற்றியும் கருத்துக் கூறுவதற் குக் குழந்தைகள் அனைவருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. தங்களின் கண்களில் படும் எந்த ஒரு விஷயம் குறித்தும் குழந்தைகள் ஏதேனும் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளவே செய்கின்றன. அது முற்றிலும் சரியான கருத்தாக இருந்தாக வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை. தவறான கருத்தாகவே கூட இருக்கலாம். அல்லது சரியான கருத்தையும் ஒரு குழந்தை கூறக் கூடும். 'பெரியவர்'கள் .மட்டும் எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்க ளிலும் மிகவும் சரியான கருத்துகளைக் கூறி விடுகிறார்களா, என்ன? எனவே, தன்னைப் பாதிக்கும் அல்லது தன் கண்களில் படும் எந்த ஒரு விஷயம் குறித்தும் தனக்குத் தோன்றும் எந்த ஒரு கருத்தையும் எவ்விதத் தயக்கமுமின்றி, சுதந்திரமாக எந்த ஒரு குழந்தையும் கூற வேண்டும். அவ்வாறு குழந்தைகள் கூறும் எந்த ஒரு கருத்தையும் யாரும் தடை செய்யக்கூடாது என்கிறது யூனிசெஃப் பிரகடனம். குழந்தைகளின் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்டுக்கொள்வதும், அவர்களின் கருத்துகள் சரியானவைதாம் எனில் அவற்றை மனதார ஏற்றுக் கொள்வதும் நமது கடமை. அரசாங்கங்களின், ஆளுவோரின் கடமை. பெற்றோரின், ஆசிரியர்களின், அதிகாரிகளின், ஏன், நம் அனைவரின் கடமையுமாகும். வயது வந்த பெரியவர்கள், குழந்தைகள் கூறும் கருத்துகளைத் தீவிர கவனம் கொடுத்துக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்ற இந்த விதியை உலகம் மதிக்கிறதா? பெரிய ஏமாற்றமே நமக்குக் காத்திருக்கிறது. கொஞ்ச நாள்களுக்கு முன்னாள், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிய ஜெனீவா உச்சி மாநாட்டில், கிரெட்டா துன்பர்க் என்னும் பெண் உலக நாடுகளின் தலைவர்கள் அத்தனை பேரையும் நோக்கிக் கேள்விகளை அடுக்கினாள். "சுற்றுச்சூழலும், உலகளாவிய வெப்பமய மாதல் நிலைமைகளும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகின்றனவே, உலக நாடுகளும், அவற்றை ஆளும் இத்தனை தலைவர்களும் நம்மைச் சுற்றி லும் என்ன நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப்பற்றி என்றேனும் கொஞ்ச நேரமாவது யோசிக்கிறீர்களா? எங்களைப்போன்ற குழந்தைகளுக்கு நாளை நீங்கள் எந்த மாதிரியான உலகத்தை விட்டு விட்டுப்போவீர்கள்?" என்று கேட்டாள் அந்தப்பெண். முதன்முதலில் இதே கேள்விகளை அவள் தன் பெற்றோரிடம் எழுப்பினாள். அவர்கள் சொன்ன மறுமொழிகளும், சமாதானங்களும் கிரெட்டாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை. பள்ளியில், சக மாணவிகளிடம் பேசினாள். ஆசிரியர்களைக் கேட்டாள். கண்களில் படும் அத்தனை மனிதர்களிடமும் இதே கேள்விகளைக் கேட்டாள். சரியான பதிலை யாரும் அவளுக்குத் தர முடிய வில்லை. பள்ளியில் சக மாணவிகளைத் திரட்டிக்கொண்டு நேரடி நடவடிக்கைகளில் இறங்கினாள். பள்ளிகளின் முன்னால், அரசு அலுவலகங் களின் முன்னால், பொது மன்றங்கள்- சட்டமன்றங்கள்- நாடாளுமன்றங்கள் அனைத்தின் முன்னாலும் இத்தகைய முற்றுகைப்போராட்டங்களை சாத்தியமான எல்லா நாடுகளிலும் அவள் முன்னெடுத்தாள். முதலில் எந்த இடத்திலும், யாரும் கிரெட்டாவையோ அல்லது அவளைப் போல் கேள்விகளை எழுப்பிய பிற குழந்தைகளையோ சட்டை கூடப் பண்ணவில்லை. அவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்குப் போகாமலே இருந்தார்கள். தேர்வுகளை எழுத மறுத்தார்கள். பயணங்கள் எவற்றையும் மேற்கொள்ளாமல் தவிர்த்தார்கள். ஒரு சிறு புள்ளியில் தோன்றிய இந்த இயக்கம், பெரும் சூறாவளியாய்ச் சுழன்று பெரிதான பிறகுதான் உலகம் அவர்களின் குரல்களைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கியது. சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொடர்பான எல்லா சர்வதேச மாநாடுகளுக்கும் கிரெட்டா துன்பர்க் அழைக்கப்பட்டாள். அவள் கேட்ட பல கேள்விகள், அமெரிக்க நாட்டின் செயல்களைப் பற்றியதாக இருந்தது. உலக வெப்பமயமாதலுக்கு அந்த நாடுதான் உலகிலேயே அதிக சதவீத அளவுக்குக் காரணமாக இருக்கிறது என்னும் உண்மையைக் கிரெட்டா புள்ளிவிவரங்களுடன் நிறுவினாள். இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முந்தைய ஆட்சியின் போது, அவரே எரிச்சலடைந்து 'இந்தப்பெண் சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொண்டிருக்கிறாள்" என்று கத்திய செய்தியைப் பத்திரிகைகளில் நாம் படித்திருப்போம். இதுதான் நாம் குழந்தைகளின் உரிமைக்குரல்களுக்குக் கொடுக்கும் மரியாதை! ஆரம்பத்தில் கிரேட்டாவின் முரல் அலட்சியப்படுத்தப்பட்டது. அவள் ஒரு தனியாளாக இருக்கவில்லை; அவளுக்குப் பின்னால் பல்லாயிரம், பல லட்சம் குழந்தைகள் திரண்டு குரல்களை எழுப்பியபின், உலக நாடுகள் கொஞ்சம் அசைந்தன. ஒரு சில உறுதிமொழிகளை அந்தக்குழந்தைகளுக்கு அரசாங்கங் களின் தலைவர்கள் கொடுத்தார்கள். பெரியவர்கள் அளிக்கும் உறுதிமொழி களை எவ்வளவு தூரத்திற்கு அவர்களே மதிப்பார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்தவைதானே? ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய குரல்கள் ஓய்ந்து விட்டன. இப்போது கிரெட்டா துன்பர்க் என்ன செய்கிறாள்? யாருக்கேனும் தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- குழந்தைகளின் உளவியலைக் கட்டமைக்கும் புத்தகங்கள்
மூ.அப்பணசாமி, ஆலோசகர், தமிழ்நாடு பாடநூல் கழகம். நேர்காணல் - சாலை செல்வம் 1.தங்கள் பொறுப்பில் செயல்பட்டுவரும் இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து.... கொரோனா பெரு முடக்கம் உலகம் முழுவதும் மழலையர் வகுப்பு குழந்தைகளில் இருந்து மேனிலை மாணாக்கர் வரை குழந்தைகளிடம் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தின. இதனால் உருவான கற்றல் இடைவெளியால் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் கொண்டு வருவது சவாலாக இருந்தது. ஏற்கனவே, பாடத்திட்டம் கடந்த வாசிப்பு மற்றும் கலை முயற்சிகள் மாணாக்கர் இடையே குறைந்து வருகிறது. கடந்த 20 -30 ஆண்டுகளில் வாசிப்பு தொடர்பாக எதிர்மறை தலைமுறை இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளை மீண்டும் கற்றல் செயல்பாடுகளுக்குள் கொண்டுவருதலையும் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவித்தலையும் இணைக்கும் வகையிலும் அரசு அறிவித்த திட்டம் இளந்தளிர் இலக்கியத் திட்டம். கடந்த நான்காண்டுகளாக செயபடுத்தி வருகிறோம். சிறார் மனதை கதைகளாலும் பாடல்களாலும், நாடகங்களாலும் காமிக்ஸ்களாலும் வண்ணங்களைக் கொண்டு அழகூட்டும் முயற்சியே இத் திட்டம். சிறார்களின் படைப்பூக்கத்தினையும் சமூகத் திறன்களையும் ஊக்கப்படுத்தும் முயற்சியாக சிறார்களுக்கான நூல்களை ஒரு கதை – ஒரு புத்தகம் என்ற அளவில் தமிழ்நாட்டின் தலை சிறந்த சிறார் படைப்பாளிகளைக் கொண்டு எழுதச் செய்து சிறந்த ஓவியர்களின் கலை வண்ணத்தில் அனைத்தும் வண்ணங்களாக வெளியிடப்படுகின்றன. ஒரு அரசு இதுபோன்று பாடத்திட்டம், மதிப்பெண் போன்ற இலக்குகளோடு சிறார்களின் படைப்பாற்றலையும் வாசித்தலையும் கவனப்படுத்துகிறது என்ற வகையில் இது ஒரு முன்னோடித் திட்டம் ஆகும். ஏனெனில் இதுபோன்ற பணிகள் வேறு மாநிலங்களில் அரசால் மேற்கொள்ளபடுகிறதா என்று தெரியவில்லை. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தில் எந்த மாதிரியான சிறார் புத்தகங்கள் கொண்டுவரப்படுகின்றன. 5-8, 9 -11- 12 -14, பதின் பருவத்தினர் ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளாகப் பிரித்து அக்குழந்தைகளுக்குப் பொருத்தமான கதைகளும் ஓவியங்களும் தீட்டப்படுகின்றன. அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கி என்ற அடிப்படையில் கதைக்கருக்கள் உருவாக்கப்பட்டு பன்மையம், சமூக நீதி, சமத்துவம், சுற்றுச்சூழல் தூய்மை ஆகிய விழுமியங்களில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ் சிறார் புத்தகங்களின் பயன்பாடு குறித்து... ஒரு கதைக்கு அதிகபட்சம் 500 – 600 சொற்கள்; 25 - 40 விழுக்காட்டுக்குள் எழுத்து; 60 – 75 விழுக்காடு வண்ண ஓவியங்கள் என வடிவமைக்கப்பட்டன. எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஓவியர்களுக்கும் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு படைப்பாளிகளும் ஓவியர்களும் இணைந்து இளஞ்சிறார்களுக்கான படைப்புகளை உருவாக்கினர். அரசுப்பள்ளி மாணவர்களின் ஆளுமை மேம்பாடு, சிக்கல்களைத் தீர்த்தல், பற்றுதலை உருவாக்குதல்,தாமாகவே கதைசொல்லக்கற்றல் கதை சொல்லியாதல்,கற்றல் திறன் மேம்பாடு போன்ற திறன்கள் மேம்பட்டால் மகிழ்வோம். இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ் வெளியாகும் புத்தகங்களுக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? குழந்தைகள் தாமாகப் புதிய சொற்பிரயேகங்களைப் பயன்படுத்துதல், மாற்றி யோசிக்கும் திறன், பகுத்தாய்வை வளர்த்தல், உணர்ச்சிகர சூழலைத் தாமே கையாளுதல்; நினைவுகளை மீட்டுதல், கற்பனையைப் படைப்பாக்குதல்; அறம் வளர்த்தல்; பண்பாட்டை அறிதல்; உணர்ச்சிகளைக் கையாளுதல், எப்போதும் பற்றுணர்வை உருவாக்குதல்; நகைச்சுவை, பகடி ஆற்றலை வளர்த்தல். இதற்காக சமத்துவம், பன்மையம், சிறார் உரிமைகள், பால் பாகுபாடு அகற்றல், உடலியல் மாற்றங்கள், சமூக நீதி, சுற்றுச்சூழல், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகம்,உள்ளூர் வரலாறு என பல்வேறு பொருண்மைகள் முடிவு செய்யப்பட்டன. பொதுவாக நமது சிறார்களுக்கு அறிமுகமாகும் கதைகள், ஓவியங்கள் ஒன்று ஐரோப்பிய முகங்களும் பண்பாடும் சூழலும் கொண்டதாக இருக்கிறது. அல்லது இந்திய பெருங்கதையாடலை ஒட்டியதாக அமைகிறது. நமது குழந்தைகளுக்கான கதைகளோ ஓவியங்களோ தமிழ் பண்பாட்டையோ சூழலையோ காண்பிக்கிறதா என்பது கேள்விதான். மேலும், ஒரு குடும்பம் என்றால் Stereotype ஆக அப்பா, அண்ணன்கள் புத்தகம் படிப்பார்கள், கணினியில் அமர்ந்திருப்பார்கள். அம்மா, அக்கா, அத்தை, பாட்டி யாராக இருந்தாலும் பெண் என்றால் வீட்டு வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல, சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள், ஒற்றைப் பெற்றோரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், சிறுபான்மையினர் இணைந்ததுதான் சமூகம், பள்ளி, பொது வெளிகள். இதுபோன்ற பன்மைத்துவம் எங்களது படைப்புகளில் மிளிர்கின்றன. இந்த பொருண்மைகளை முன்பே தீர்மானம் செய்து அதைப்படைப்பாக்க எழுத்தாளர்களுக்கு அனைத்து சுதந்தரமும் காலமும் அளிக்கப்படுவதால் இது சாத்தியம் ஆகிறது. படைப்புச் சுதந்தரமும் பயிற்சியும் இங்கு அபூர்வமாக இசைவு (Fusion) பெறுகிறது. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் வருங்கால திட்டங்கள் குறித்து… கடந்த 4 ஆண்டுகளில் 200க்கும் அதிகமான சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன. இந்த அனைத்து நூல்களும் தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளி நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொறு புத்தகமாகப் பார்க்கையில்.. நான்காண்டுகள் தொடர்ந்து மாராத்தான் பயிலரங்குகள்.. புது முயற்சியாக பொருண்மை அடிப்படையில் தலைப்புகள் கொடுத்து அதில் விருப்பமான பொருண்மைகளைத் தேர்வு செய்து ஈடுபட்டனர். படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது போல தெரிந்தாலும் காலத்தின் தேவை கருதி படைப்புகளை எழுத மூத்த எழுத்தாளர்கள் முதல் முதல் முறை எழுத்தாளர் வரை சுமார் 50 எழுத்தாளர்கள் பங்கேற்றனர். எழுத்து தெரியாத குழந்தையில் இருந்து உயர்நிலை மாணாக்கர் வரை படைப்புகள் உருவாக்கப்பட்டன. இது ஒரு அபூர்வமான Fusion ஆகும். இன்னும் பல நூறு புத்தகங்கள் வெளியாக உள்ளன. ஆண்டுக்கு 100 சிறார் நூல்களகவது உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்ப்பண்பாட்டின் வரலாற்றினை சிறார்கள் அறியச்செய்யும் வகையிலான காமிக்ஸ் தொடர் நூல்கள் புது முயற்சியாக அமையும், மேலும். உலக கிளாசிக்ஸ் நாவல்களின் குழந்தைகளுக்கான தமிழ் பதிப்பு, மாங்கா காமிக்ஸ் போன்ற புகழ்பெற்ற சிறார் காமிக்ஸ் தமிழாக்கம், ஈரான், துருக்கி சிறார் கதைகள் தமிழாக்கம், 5 வயதுக்குக் கீழான மழலைகளுக்கான படப் புத்தகங்கள் இவற்றில் உள்ளடக்கம். சாலை செல்வம் பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார். புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
- ஒரு லட்சம் கோழிக்குஞ்சுகள்!
'அதிசயங்கள் தற்காலத்தில் நடைபெறுவதில்லை என்று பெர்னாட் ஷா சொன்னதாகப் படித்திருந் தான் பழனி என்னும் பழனியப்பன். ஆனால் அவன் கண்முன்னே நடந்த அதிசயத்தை அவன் பார்த்தானே! அவன் மட்டுமா? டவுன்ஹால் அருகே அன்றிருந்த நூற்றுக்கணக்கானோர் பார்த்தார்களே! அப்படிப்பட்ட அதிசயத்தை அதற்குமுன் யாரும் பார்த்ததில்லை என்றார்களே! அப்படி என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். பழனி டவுன்ஹால் அருகே சாலையைக் கடப்ப தற்காக நின்றிருந்தான். அதைக் கடந்து ராஜவீதியின் நடுவே உள்ள தேர்முட்டிக்குச் செல்லவேண்டும். அங்கேதான் அவன் வீடு. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் வேகமாக - வேகமாகக்கூட இல்லை - மெதுவாகக் கூட இயங்க முடியாமல் நின்றுவிட்டன. பழனி வாகனங்களைப் பார்த்தான். அவனுக் கருகே ஒரு லாரியில் முட்டைகள் ! முட்டைகள் வைக்கும் அட்டைகளில் அடுக்கப்பட்ட தூய வெள்ளை முட்டைகள்! முட்டைகள் அடுக்கிய அட்டைகள் பதினைந்தோ, இருபதோ ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன! அப்படிப்பட்ட அடுக்குகள் ஐம்பது அறுபதுக்கு மேலே! ஒரு அட்டைக்கு ஒரு நூறு முட்டைகள்! கண்ணாலேயே எண்ணிப் பார்த்தான்! மொத்தம் ஒரு லட்சத்துக்கு மேலே இருக்கலாம்! பழனி வண்டிகள், நெரிசல் சீர் செய்யப்பட்டு ஒடத் தொடங்கும் நேரம்! திடீரென்று 'சிக் சிக் சிக் சிக் என்ற சத்தம்! பெருஞ் சத்தம்! முட்டை லாரியிலிருந்த எல்லா முட்டைகளும் ஒரே சமயம் கோழிக்குஞ்சு களாக- வெள்ளை வெளேர் குஞ்சுகளாக மாறிக் கத்தின! அட்டையிலிருந்து நழுவி லாரியிலும், லாரி யிலிருந்து நழுவிச் சாலையிலும் விழுந்து சிதறின! கைப்பிடியளவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வெள்ளைக் கோலிக்குண்டுகளை நடுச்சாலையில் கொட்டியதைப் போன்ற கண்கொள்ளாத காட்சி! நெரிசல் சரியானாலும் சாலையில் குட்டிக் குட்டி வெண்பஞ்சு மேகங்கள் போன்ற கோழிக்குஞ்சுகள் நிறைந்துவிட்டதால் எந்த வண்டியும் அசையவில்லை! முட்டை லாரிக்காரன் கேபினிலிருந்து எட்டிப் பார்த்தான்! அடுக்கிய அட்டைகளைத் தள்ளிக் கொண்டு குஞ்சுகள் கீழே விழுந்து. சாலையை நிறைத்துக் கொண்டிருந்தன. லாரி - கார் - ஸ்கூட்டர்-என்று எல்லா வாகனங்களின் முன்னும் பின்னும் அடியிலும் கோழிக்குஞ்சுகள்! கோழிக்குஞ்சுகள் வெள்ளமாய் ஓட அதன் நடுவே வாகனங்கள் மிதப்பது போன்ற தோற்றம்! பார்த்தவர்கள் பிரமித்தார்கள்! லட்சக்கணக்கான கோழிக்குஞ்சுகள் ஏதோ ஒரு கோரிக்கைக்காகச் சாலை மறியலில் ஈடுபட்டது போன்ற காட்சி! அவசரமாகப் போக வேண்டியதை மறந்து எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு ரசிக்க - வியக்க, போலீஸார் கோழிக்குஞ்சுகளை அப்புறப்படுத்த முயல்... அட்டா, உலக அதிசயங்கள் ஒன்று சேர்ந்தாலும் இப்படி ஒரு அதிசயத்தை உண்டாக்கியிருக்க முடியுமா! பக்கத்திலிருந்த மாலை முரசு புகைப்படக்காரர் கேமராவோடு வந்துவிட்டார்! உள்ளூர் தொலைக் காட்சியினர் கூடிவிட்டனர்! நிருபர்கள் கூடி விட்டனர்! அவர்களைப் போலவே, கோழிக்குஞ்சுகளை அகற்ற வந்தவர்களும் அதிசயக் காட்சியில் லயித்துப் போனார்களே தவிர, தமது வேலையில் முழுமையாக ஈடுபடவில்லை. சுமார் மூன்று மணி நேரம் டவுன்ஹால் பகுதியில் கோழிக்குஞ்சுகளின் நீடித்தது! ஆக்ரமிப்பு நீடித்தது. பழனி, அவ்வளவு நேரமும் அங்கே நின்று இந்த அதிசயத்தைக் கண்டு ரசித்தான்! முட்டைகள் எப்படித் திடீரென்று குஞ்சு களாயின! சில முட்டைகள் இப்படி மாறலாம். லட்சக் கணக்கான முட்டைகள் ஒரே சமயத்தில் எப்படிக் குஞ்சுகளாயின! குஞ்சாக மாறாத ஒரே ஒரு முட்டை கூட இல்லையே! ஏன்? பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கேள்விகள் கேட்டன! ஆனால் யாருக்கும் சரியான-பொருத்தமான பதில் தெரியவில்லை! உண்மையான பதில் பழனிக்குத் தெரியும்! ஆனால் அவன் யாருக்கும் சொல்லவில்லை. "என்ன பதில்? எப்படி எல்லா முட்டைகளும் ஒரு நொடியில் குஞ்சுகளாயின! கொஞ்சம் சொல்லுங்கள்?" என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்! உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்! மூன்று நாளுக்கு முன்னே பள்ளி மாணவர் களோடு பழனி ஊட்டிக்குப் பயணமானான். குன்னூர் நெருங்கும்போது பயணம் தடைப்பட்டது. இரண்டு நாளுக்கு முன்னே பெய்த பெருமழையில் மண் சரிவு இருந்தது; பழனி புறப்பட்ட அன்று அதிகாலை, பேரளவில் ஒரு நிலச்சரிவு! குடிசை களோடு கூடிய ஒரு பகுதி பெயர்ந்து சரிந்து மலைப் பாதையில் நிறைந்து விட்டது. மாணவர்கள் ஊட்டிக்குச் செல்ல முடிய வில்லை! ஆனால் சரிவுக்கு முன்னாலே ஒரு சிற்றருவி! அங்கே பஸ்ஸை நிறுத்தவும், மாணவர்கள் ஓய்வு கொள்ளவும் போதுமான இடம் இருந்தது! அதனால் அங்கே தங்கி, மதிய உணவு உண்ட பிறகு புறப்பட்டனர்! நீர் பழனி அங்கே தங்கிய போது, சிற்றருவியிலே முகம் கழுவச் சென்றான். அப்போது மலைச்சரிவி லிருந்து பெயர்ந்து அருவி விழும் இடத்தில் ஒரு மண்கட்டி விழுந்திருப்பதைப் பார்த்தான். விழவிழ, அதில் ஏதோ மின்னுவது போலத் தெரிந்தது. பழனி அதை எடுத்தான். எலுமிச்சைப் பழ அளவில் ஒரு கண்ணாடி உருண்டை! பெரிய கோலி என்றும் சொல்லலாம்! அதைத் தண்ணீரில் கழுவி, கால்சட்டைப் பையில் போட்டுக்கொண்டான். அன்று அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள்; அதுவும் ஒரு பலா மரத்தடியிலே! மரத்தில் பழங்கள்! பழனி ஏறிட்டுப் பார்த்தபடி, "ஒரு நல்ல பழம் விழுந்தா, மாணவர்கள் மேலே விழாம கொஞ்சம் தள்ளி விழுந்தா எவ்வளவு நல்லது!" என்று நினைத்தான். இதுதான் பழனியின் பழக்கம். அடிக்கடி 'இப்படி இருந்தா, இப்படி நடந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நினைப்பது வழக்கம். நினைப்பான். ஆனால் நினைத்தபடி நடக்காது! இப்போது அவன் நினைத்ததும்,தொப்பென்று ஒரு பழம் மாணவர் அருகே விழுந்தது! பழனி திகைத்து விட்டான்! அவன் நினைத்தது நடந்து விட்டதே! எப்படி? தற்செயலாய் நடந்ததா? ஒருவேளை அருவியில் கண்டெடுத்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட கண்ணாடி உருண்டை இப்படிச் செய்ததா? பழனி எழுந்து நடந்தான். மாணவரை விட்டு விலகி நடந்தான். தன்னிடமிருந்த கண்ணாடி உருண்டையை எடுத்து ஒரு மரத்தடியில் வைத்தான். பிறகு தள்ளி நின்று "இங்கே இருக்கும் பலா மரத்தி லிருந்து ஒரு பழம் விழுந்தா சாப்பிடலாமே!" என்று நினைத்தான். பழம் விழவில்லை! மீண்டும் நினைத் தான். அப்போதும் பழம் விழவில்லை! அவன் கீழே வைத்த கண்ணாடி உருண்டையை எடுத்துச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். பிறகு ஒரு பழம் விழுந்தா சாப்பிடலாமே' என்று நினைத்தான்.உடனே ஒரு பழம் விழுந்தது. பழனிக்குக் கண்ணாடி உருண்டை ஏதோ மந்திரப் பொருள் என்பது புரிந்தது. அது நிலத்தடியிலிருந்து. நிலச்சரிவால் வெளிப்பட்டது போலும். பழனி இனி எது நினைத்தாலும் நடக்கும்! இதை உணர்ந்ததும், அவன் பயந்தான். குன்னூரிலிருந்து திரும்பிய பிறகு பழனி தன் இயல்புக்கு மாறாக எதையும் நினைக்கவில்லை. இன்று முட்டை லாரியைப் பார்த்ததும், தன்னை யறியாமல் "எல்லா முட்டைகளும் குஞ்சாக வேண்டும்" என்று நினைத்து விட்டான். "இப்படி வேறு ஏதாவது தவறாக நினைத்து அது நடந்துவிட்டால் என்ன செய்வது?" பழனி பயந்தான். உடனே கண்ணாடி உருண்டையைக் கையில் எடுத்துப் பார்த்தான்! இதை வீசியெறியலாமா? யாராவது அயோக்கியனிடம் கிடைத்தால் என்ன ஆகும்? அப்படி கிடைக்காமல் இருக்க என்ன செய்வது? பழனி இன்னும் டவுன்ஹால் அருகே, கையில் அந்தக் கண்ணாடி உருண்டையோடு நின்று யோசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று யாரோ ஒருவன் அவன்மீது மோதிக் கொள்ள, அவன் கையிலிருந்த கண்ணாடி உருண்டை கீழே விழுந்து சாலையில் உருண்டது. அதேசமயம் அங்கே வந்து கொண்டிருந்த ரோடுரோலர் முன்னே சென்றது. ஒரு நொடிக்குள். 'கடகட' சத்தத்துடன் அந்த ரோடுரோலர் கண்ணாடி உருண்டையைப் பொடியாய் நசுக்கிவிட்டு நகர்ந்தது. மாயக் கண்ணாடி தார்ச்சாலையில் பொடியாகி மின்னியது. பழனி அதைப் பார்த்து மகிழ்ந்தான். நினைத்ததை நடக்கச் செய்யும் கண்ணாடி உருண்டை இனி யாருக்கும் பயன்படாதல்லவா! நிம்மதியோடு வீடு நோக்கி நடந்தான், பழனி. ஆனால், "லட்சக்கணக்கில் கோழிமுட்டைகள் திடீரென்று குஞ்சுகளானது எப்படி?' என்பதைப்பற்றி கோவை நகரம் இன்னும் விவாதம் செய்து கொண்டிருக்கிறது! ( காலப்பெட்டகம் )
- எல்லைகட்டிய உலகின் சிறிய பறவை
இது ஒரு தொகுப்பு நூல். டொனால்டு பார்த்தலுமே, ஷிர்லி ஜேக்ஸன், ஹெச. ஹெச். முன்ரோ ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகளின் தமிழ் மொழியாக்க நூல் இது. இத்தோடு குழந்தைகளின் அகவுலகை பிரதிபலிக்கும் பரையன் பேட்டன் எழுதிய இரண்டு கவிதைகளும் இடம்பெற்றுள்ளது. குட்டி ஆகாயம் பதிப்பகம் மிக சிரத்தையோடு வெளியிட்டுள்ள சிறந்த நூல் தேர்வுகளில் இதுவும் ஒன்று என அறுதியிட்டுக் கூற முடியும். குழந்தைகள் எப்போது முழுமையாக தங்களது குழந்தைமையை வெளிப்படுத்துகிறார்களோ அப்போதெல்லாம் பெரியவர்களின் சமநிலை குலைந்துவிடுவதை பார்க்க முடிகிறது. வானமளவு விரிந்திருந்த தன் மனவெளியில் தங்களுக்கான எல்லைக்கோடுகள் தடித்துக் கொண்டே வருவதை பெரியவர்கள் உணரத் தவறிவிடுகின்றனர். பெரிதும் புறத்தை சார்ந்ததாகவே அமைந்துவிடும் அவர்களது மன எல்லைக்கு அப்பால் உள்ளதை ஏற்கும் பக்குவம் குறைந்து கொண்டே வருகின்றது. குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் உள்வட்டத்திற்கு நெருக்கமாக இருக்கும்போது மட்டுமே குழந்தைகள் நேசிப்பிற்கும் பாராட்டிற்கும் தகுதியானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியானவர்கள மட்டும்தானா? பெரியவர்களின் மனவிரிவு மட்டுமே குழந்தைகளை அளவிடுவதற்கான கருவியாகிட முடியுமா? இதுவே நம்மிடம் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. குழந்தைகள், ஏதேனும் ஒரு விளையாட்டு சாதனத்தை வைத்துக்கொண்டு வீட்டின் மூலையில் அமர்ந்து கொண்டிருக்கும் வரை சமர்த்தானவர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவரே தன்னியல்பாக ஒரு காகிதத்தை கிழிக்கவோ; பொம்மையை உடைத்து உள்ளிருக்கும் பாகங்களை ஆராயவோ; வண்ணப் பென்சில்களை தரையில், சுவற்றில் பயன்படுத்தவோ தொடங்குகையில் பெரியவர்களின் கோபத்திற்கும் வசவிற்கும் ஆளாகிறார். இவ்வேளைகளிலெல்லாம் அக்குழந்தை பெரியவர்களின் மனவிரிவிற்கு அப்பால் விலகிச் செல்கிறார் என்பது பொருள். இப்படியான பதட்டத்தை தொடர்ந்து பெரியவர்களுக்கு உருவாக்கும் குழந்தைகளின் இயல்புகள் இங்கு எதிர்மறையான பெயர்களாலேயே அழைக்கப்படுகிறது. அக்குழந்தைகளின் ஆர்வம் அப்பருவத்திலேயே முடக்கப்படுகிறது. இன்னமும் எல்லை கட்டிக்கொள்ளாத குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் அதிருப்தியை குதர்த்தகமாகப் பார்க்காமல் அதை மீறவும் எதிர்க்கவும் தன் வழிகளில் விளையாட்டாக முயல்கிறது. பலவேளைகளில் பெரியவர்கள் நாம், குழந்தைகள் பொய் பேச தொடங்குவதாகவும் தவறான வழிகளில் ஈடுபாடு கொள்வதாகவும் அச்செயல்களுக்கு பெயர் சூட்டிக் கொள்கிறோம். வளர வளர நம்மனதில் படிந்துவிடும் நோய்மையான பூஞ்சை கூறுகள் குழந்தைகளின் அகவளர்ச்சியை தடுப்பதைக் குறித்து பெரியவர்களாகிய நமக்கு எவ்வித அசூயையும் இருப்பதி்லை. பறக்க எத்தனிக்கும் குழந்தையின் சிறகுகளை இளம் பிராயத்திலேயே வெட்டி எறிந்து விடுகிறோம். ஆனாலும் அதன் தழும்புகள் குழந்தைகளின் காலம் முழுதும் வடுவாக தேங்கி நின்றுவிடுகிறது. வெளிச்சத்தை மட்டுமே ஒளியாக கருதும் பெரியவர்களை போலில்லாது இரவின் ஒளியையும் உணர்ந்தவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். வெளிச்சம், இருள் என்கிற பாகுபாடுகூட அவர்களிடம் அப்போதைக்கு இருப்பதில்லை. எல்லாவற்றையும் ஒன்றாகவே பார்க்கத் தெரிந்த அவர்களுக்கு பெரியவர்களின் பார்வைகள் புரிபடுவதில்லை. அதற்கான மீறலே குழந்தைகளின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. பெரியவர்களின் எதேச்சதிகார மனநிலை குழந்தைகளை புரிந்து கொள்ள உதவாவது. அவர்களோடு நெருங்கி உறவாடவும் குழந்தைகள், நம்மை அவர்களோடு இணைத்துக் கொள்ள முன்வரும்படியாகவும் நம்மை மாற்றிக்கொள்ளும்போதுதான் அவர்களை நாம் நெருக்கமாக புரிந்து கொள்ள முடியும். இந்த தொகுப்பிலுள்ள மூன்று கதைகளில் முதலிரண்டு கதைகள் இப்படியொரு எண்ணத்தையே முன்னிறுத்துகிறது. கதை உருவாகியிருக்கிற பாங்கும் கலை நேர்த்தியும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கச் செய்கிறது. மூன்றாவது கதை, நாம் இச்சூழலெங்கும் விதைத்திருக்கிற நச்சு கனிகளை விரும்பி சுவைக்கத் தொடங்குகிற குழந்தைகளின் அகவுலக சிதைவுகளை அம்பலப்படுத்துகிறது. உண்மையில் நீதியும் ஒழுக்கமும் குழந்தைகளுக்கான பாடமல்ல முறையாக பெரியவர்கள் கற்றொழுக வேண்டிய முறைமைகள் என்பதை இக்கதையின் எளிய வடிவம் நமக்குணர்த்துகிறது. ப்ரையன் பேட்டன் அவர்களின் கவிதைகள் இந்த நூலுக்கு அணி சேர்க்கின்றன. குழந்தைகள் குறித்து ஆர்வமாகவும் ஆழமாகவும் செயலாற்ற விழைகிற ஒவ்வொரு இதயங்களும் வாசித்து விவாதிக்க வேண்டிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. கோவையை சார்ந்த குட்டி ஆகாயம் மிகுந்த சிரத்தையோடு பதிப்பித்திருக்கின்ற இந்நூலுக்கு இன்னமும்கூட வாசக வெளிச்சம் படவேண்டிய தேவை இருப்பதாக நான் உணர்கிறேன். வாங்கி வாசியுங்கள்.... நிறைய பேசுங்கள் குழந்தைகளே..... க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.













