top of page

இயலில் தேடலாம்!

178 results found with an empty search

  • சாராவின் வண்ணத்துப்பூச்சி

    ஆங்கிலத்தில் – டிஒய். சாப்மேன் தமிழில் : சுகுமாரன்  என்னுடைய காலைப் பொழுது எல்லோரையும் போலத்தான் ஆரம்பித்தது. நான் காலையில் சாப்பிடுவதற்கு முன் கதவருகே ஓடிச் சென்று என் செல்லப் பிராணிகளுக்கு உணவளித்தேன்.  பூச்சிகள் சாப்பிட இலைகளைப் போட்டேன். எறும்புகளுக்கு என் பற்பசையைக் கொடுத்தேன். அவை அதை விரும்புகின்றன. இதை என் அப்பாவிடம் சொல்ல வேண்டாம். இப்படி ஒவ்வொன்றிற்கும் உணவளித்த பிறகு பள்ளிக்குப் புறப்பட தயாரானேன். அப்பா என் அறைக்கு வந்தார். இன்று நான் பள்ளிக்குப் போக வேண்டாம் என்றும் ஒரு போராட்டத்திற்குப் போகிறோம் என்றும் கூறினார். 'கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸ் கொன்று விட்டது' என்று அப்பா என்னிடம் கூறினார். 'நமக்கு சேவை செய்ய வேண்டிய, பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ் நம்மைத் தாக்குகிறது. நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம் உரிமைக்களுக்காக நிற்க வேண்டும்' என்றும் அப்பா கூறினார். நானும் அப்பாவும் போராட்டம் நடக்கும் இடத்திற்குப் போனோம். அங்கு நாங்கள் பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்தோம். அப்பா என் கையைப் பிடித்திருந்தார். நாங்கள் கூட்டத்திற்குள் சென்றோம். கூட்டம் சத்தம் போட்டது. பயம் தந்தது. நான் அப்பாவுடன் பத்திரமாக இருந்தேன். அப்பா என் கையை இறுக்கமாகப் பிடித்து இருந்தார். 'நீதி இல்லை. அமைதி இல்லை' என்று முழக்கம் கேட்டது. நானும் கூட்டத்தில் முழக்கமிட்டேன். ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி என்னைக் கடந்துப் பறந்தது. நான் வண்ணத்துப்பூச்சிக்குப் பின்னால் போனேன். ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன்பாக கூட்டம் இருந்தது. கூட்டத்திலிருந்த ஒரு போலீஸ்-யின் முகம் அருகே வண்ணத்துப் பூச்சி பறந்தது. போலீஸ்காரன் பின்னால் நகர்ந்தான். வண்ணத்துப்பூச்சியை நோக்கி கையை வீசினான். வண்ணத்துப்பூச்சி கீழே விழுந்தது. அது எழுந்துப் பறக்கவில்லை. நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். உயிர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் போராட வந்தவள் நான். வண்ணத்துப்பூச்சியை நோக்கி நான் ஓடினேன். போலீஸ்காரன் சத்தமிட்டான். 'பின்னால் போ' என்று கத்தினான். நான் ஏதோ தவறான ஒன்றை செய்வதாக அவன் நினைத்தான். நான் பயந்து கூட்டத்திற்குள் ஓடினேன். என் கைக்குள் வண்ணத்துப் பூச்சி இருந்தது. உயரமான மரங்களைப் போல் மக்கள் நின்றிருந்தனர். ஒரு போலீஸ்காரனின் வேலை எங்களைப் பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? நான் ஓடாவிட்டால் பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டேன். அப்பாவை பிரிந்து விட்டதை உணர்ந்தேன். எனக்குப் பயமாக இருந்தது. நான் ரொம்ப நேரம் அப்பா, அப்பா... என்று கத்தினேன். அப்பாவை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. திடீரென்று உயரமான பெண் என்னருகில் குனிந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். அவள் முகத்தில் சோகம் இருந்தது. நான் நடந்ததைச் சொன்னேன். அவள் என்னை தோள்களின் மீது உட்கார வைத்தாள். இப்போது நான் கூட்டத்தினரைப் பார்க்கும்படி உயரத்தில் இருந்தேன். நான் பாதுகாப்பாக உட்கார்ந்துக் கொண்டு தேடினேன். சத்தம் போட்டேன். அப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை. என் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டது. நான் அப்பாவை பார்த்து விட்டேன். நான் தோளிலிருந்து இறங்கி ஓடினேன். அப்பா என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருந்தோம். நான் அப்பாவின் கையை இறுக பிடித்து இருந்தேன். 'நீதி இல்லை... அமைதி இல்லை...' என்கிற கூட்டத்தின் முழக்கத்தோடு என் குரலும் கலந்தது. சூரியன் மறைவதற்கு முன்பாக நாங்கள் வீட்டுக்கு வந்தோம். இரவு உணவு சாப்பிட்டதும் நான் நேராக படுக்கைக்குச் சென்றேன். எனக்கு தூக்கம் வரவில்லை. 'இன்று மோசமான நாள்' என்று நினைத்தேன். ஆனால் அப்பா சொன்னார். 'எல்லாம் சரியாகும். நான் உன்னைப் பாதுகாப்பேன். நீ உன்னுடைய வண்ணத்துப்பூச்சியைப் பார்த்துக் கொண்டது போல்.' என்றார். அடுத்த நாள் காலை. நான் சாப்பிடுவதற்கு முன் கதவருகே ஓடிச் சென்று செல்லப் பிராணிகளுக்கு உணவளித்தேன். சில நாட்களுக்குப் பிறகு என் வண்ணத்துப்பூச்சி குணமாகியிருந்தது. நான் அதை வெளியே பறக்க விட்டேன். யாரும் துன்புறுத்தாத இடத்திற்கு பறந்து செல்லும் வரை கவனித்தேன். பின் குறிப்பு: இச்சிறுகதையை எழுதிய டி.ஒய்.சாப்மேன் (TY Chapman) ஒரு கவிஞர், நாடகாசிரியர். ஐரோப்பா வம்சாலவளியைச் சேர்ந்த நைஜீரியர். அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கைப் பற்றி பேசுவதில் ஆர்வமுடையவர். அமெரிக்காவில் வாழ்கிறார். போலீஸ்-யின் தாக்குதலில் கருப்பினத்தவர் ஒருவர் உயிரிழக்கிறார். அதைக் கண்டித்து கருப்பின சமூகத்தினர் நீதி வேண்டுமென்று போராடுகின்றனர். அப்போராட்டத்தில் சிறுமி சாராவும் அவளது தந்தையும் கலந்துக் கொள்கின்றனர். பிறரின் உயிரைக் காப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டுமென்பதை சாரா கற்றுக் கொள்கிறாள். அவள் ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுவது போல் என்று உருவகப்படுத்துவதின் மூலம் கதை கவிதையாகி இருக்கிறது. சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்

  • தத்துவம் அறிவோம் - 7

    நம் சிந்தனை நம் கைகளில்.... மனிதர்களுடைய சிந்தனை அவர்களுடைய விரல்களில்தான் தொடங்கியது. எப்படி? டார்வின் என்கிற அறிவியலறிஞர் பரிணாமவியல் கோட்பாட்டை முன்மொழிந்தார். அப்படி என்றால்? சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் குரங்குக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னவர் டார்வின். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம் என்றால், இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் எப்படி தோன்றின? எப்படி எல்லாம் உருமாறின? எவை எல்லாம் அழிந்தன? ஏன் அழிந்தன? எவை எல்லாம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன? இயற்கையின் விதிகள் என்ன என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சொன்னார் டார்வின்.. அப்படி என்றால் மனித இனத்தை, இந்த பூமியில் உள்ள விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள், மீன்கள் இன்னபிற உயிர்களை எல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத கடவுள் படைத்தார் என்று சொல்லப்படுகிறதே அது சரியா என்று நீங்கள் சந்தேகப்பட்டால், நீங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். அறிவியல் என்பது ஒன்றை ஆராய்ந்து நிரூபிக்கும் உண்மை. நம்பிக்கை என்பது எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்புவது அல்லது ஏற்றுக்கொள்வது என்று சொல்லலாம். டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டின்படி ஒவ்வோர் உயிரினமும் இயற்கைச் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துகொண்டது. அப்படி தகவமைத்துக்கொண்டதால் உயிர் வாழ்ந்தது. தகவமைத்துக்கொள்ள முடியாத உயிரினங்கள் அழிந்துவிட்டன. தகவமைத்துக்கொள்ளுதல் என்றால் என்ன? இயற்கையின் தட்பவெப்ப மாற்றம், கிடைக்கும் உணவுப்பொருட்கள், உணவுப்பொருட்களுக்கு ஏற்ற தனித்துவமான உடலமைப்பு, எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், இனப்பெருக்கத் திறன், இவற்றில் வெற்றி பெறுதலைத் தான் தகவமைத்துக்கொள்ளுதல் என்கிறோம். வெற்றிகரமாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்ட உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு பூமியின் முதல் உயிரினமான சயனோபாக்டீரியா இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு கோடி ஆண்டுகளுக்கு மேல் கரப்பான் பூச்சி வாழ்ந்துவருகிறது. ஒன்றரைக் கோடி ஆண்டுகளாய் இலைவெட்டி எறும்பு வாழ்ந்துவருகிறது. இப்படித் தாவரங்கள், பூச்சிகள், பிரைமேட் என்று அழைக்கப்படுகிற குரங்கின உயிரினங்கள் எல்லாம் பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றன. ஆனால் எந்த உயிரினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு, மனித இனத்துக்கு மட்டுமே உண்டு. அதுதான் சிந்தனை. மூளையின் செயல்பாடுகளில் ஒன்றான சிந்தனை, நம்முடைய கட்டைவிரலிலிருந்து பிறந்தது. என்னது கட்டை விரலா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆமாம். வாலில்லாக்குரங்குகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றின் கட்டைவிரல் மற்ற நான்கு விரல்களுடன் ஒட்டியே இருக்கும். வாலில்லாக்குரங்குகள் கட்டைவிரலை அதிகம் பயன்படுத்துவதும் இல்லை. ஆனால் எப்போது ஒட்டியிருந்த கட்டைவிரலை ஹோமோ சேப்பியன்ஸ் முதன்முதலாக விரித்தார்களோ, அப்போதே சிந்தனை தோன்றத் தொடங்கிவிட்டது. அது எப்படி? அதுவரை மரங்களில் ஏறித் தாவித் திரிந்த குரங்கின உயிரினங்கள், வாலில்லாக்குரங்குகளாக மாறி தரைக்கு வந்தபோது கைகளுக்கும் வாலுக்கும் பெரிய வேலையில்லை. அவை விடுதலை அடைந்தன. இயற்கையில் கிடைத்த பழங்கள், காய்கறிகள், கொட்டைகளை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹோமோ சேப்பியன்ஸ் கூட்டத்துக்கு உணவுப்பஞ்சம் வந்தபோது அதைச் சமாளிக்க வேறு ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தோன்றியது. அப்போது இயற்கையில் கீழே கிடக்கும் கற்களை எடுத்து எறிந்து சிற்றுயிர்களை கொன்று சாப்பிட்டார்கள். பிறகு கற்களைத் தீட்டிக் கூர்மையாக்கி எறிந்தார்கள். வேட்டை இன்னும் சிறப்பாக இருந்தது. இப்படி கல்லின் மீது தங்களுடைய உழைப்பைச் செலுத்தியபோது, இயல்பாக கட்டைவிரல் தனியாகப் பிரிந்தது. கட்டைவிரல் பிரிந்தவுடன் உழைப்பு இன்னும் எளிதானது, அதாவது கற்களைத் தீட்டி ஆயுதங்களை உருவாக்குவது எளிதானது. உணவுப் பஞ்சம் இல்லை. தாவர உணவைவிட இறைச்சி உணவில் உடலுக்குத் தேவையான சத்துகள் அதிகமாகவும் நேரிடையாகவும் கிடைத்தன. அதன் விளைவாக மூளையில் பல புதிய வேதி மாற்றங்கள் நடைபெற்றன. அந்த மாற்றங்களின் விளைவாக மனித இனம் சிந்திக்கத் தொடங்கியது. அதாவது மற்ற உயிரினங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தன. இயற்கை மற்ற உயிரினங்களைக் கட்டுப்படுத்தியது. இயற்கைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டன. அந்த உயிரினங்களும் வாழ்வதற்கான அடிப்படை செயல்பாடுகளை மட்டும் இயல்பூக்கமாக (instinct) கொண்டிருந்தன. ஆனால், மனித இனம் மட்டும்தான் இயற்கையை, ஆராய்ந்தது. அதன் காரண காரியங்களை ஆராய்ந்தது. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தது. இயற்கையின் விதிகளை அறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தியது. தான் வாழ்வதற்காக இயற்கையைத் தகவமைத்துக்கொண்டது. சிறிதுசிறிதாக தன் வாழ்வைத் தானே தீர்மானித்தது. அதற்குக் காரணம் மனித இனத்தின் சிந்தனை அல்லது பகுத்தறிவு. அது மனிதர்களையும் இந்த உலகத்தையும் சூழலையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க வைத்தது. இந்த உலகம் குறித்து ஒரு நோக்கு மனிதர்களுக்கு உருவானது. அவர்களுடைய வாழ்க்கை குறித்து யோசிக்க வைத்தது. பிறப்பு, இறப்பு குறித்து ஆராய வைத்தது. தத்துவம் பிறந்தது. இப்போது சொல்லுங்கள்! நம்முடைய சிந்தனை உருவானதற்கு எது காரணம்? கட்டைவிரல். அது மட்டுமா? மனித இனத்தின் உழைப்பும் சிந்தனைக்குக் காரணம். சரிதானே!. உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • வளரிளம் புதிர்ப்பருவம் - 6

    ஆதம், 80 சதவீத பெண்கள் விரும்புவது 20 சதவீத ஆண்களைத் தான் என்று  சொல்கிறான். "பெண்களைக் கவர்வது சாதாரணம் இல்லை. வித்தைகள் தெரிஞ்சிருக்கணும். அவனை அவ (incel)  வேஸ்ட்டுன்னு சொல்றா." என்று ஆதம் சொல்கிறான்.  "அவனுக்கு பதிமூன்று வயது. இந்த வயசுல பொண்ணுங்க விஷயத்தில் வேஸ்ட்டுன்னு சொன்னா, என்ன அர்த்தம்?" பாஸ்கம் அதிர்ச்சியாகக் கேட்கிறார். ஆமாம்ப்பா. அவங்க வேஸ்ட்டுன்னு சொன்னா அதான் அர்த்தம். அவன் வாழ்க்கை பூராவும் தனியாகவே இருக்கப்போறான் என்று அர்த்தம். அதுக்குப் பலர் ஹார்ட் போட்டிருக்காங்க. அவங்க கேட்டி சொல்ற எல்லாத்தையும் ஒத்துக்கறாங்க என்று அர்த்தம்.  அப்போ இதெல்லாம் கேலி செய்றதா? வெறும் கேலி கிண்டலா? கொஞ்சம்  அதிகமா இருக்கு ஆதம். "அப்பா, நான் சொல்றத நீங்க நம்பல இல்ல, ஓவரா இருக்குல்ல." என்று ஆதம் அறைவிட்டு வெளியேற முயல்கிறான். இல்ல ஆதம். இது எனக்குப் பயனுள்ளது. எனக்குத் தெரியாததால் கேட்டேன். வெறும் ரெண்டு சிம்பலை வச்சுக்கிட்டு இது எல்லாத்தையும் நம்பறது கஷ்டமா இருக்கு. மெசேஜ் அனுப்பும் போது ஹார்ட் போடுவீங்கல்ல. அது என்ன கலர்? சிவப்பு. ❤️ சிவப்பு இதயம்- காதல், 🤎 ஊதா இதயம்- காம உணர்வுத்தூண்டல். 💛 மஞ்சள் இதயம்- எனக்குப் பிடிச்சிருக்கு, உனக்குப் பிடிச்சிருக்கா? ❤️ இளஞ்சிவப்பு இதயம்- எனக்குப் பிடிச்சிருக்கு ஆனா செக்ஸ் வேண்டாம். 🧡ஆரஞ்ச் இதயம்- உனக்கு ஒன்றும் ஆகாது.  எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு அப்பா. ஜேமிக்கு அவ அனுப்பிய செய்திகளில் வேற வேற emoji. எல்லாமே வேற வேற அர்த்தம். அப்போ கேட்டி தான் ஜேமியை கேலி பண்ணினாளா?  "அப்பா, அவங்க என்னைவிடச் சின்னவங்க. எனக்கு அவங்களத் தெரியாது. இதெல்லாம் இன்ஸ்டாவில் அவங்க மெசேஜ் எல்லாம் பார்த்ததை வச்சு சொல்றேன்." என்று ஆதம் சொல்கிறான்.   பாஸ்கமிற்கு இது புதிய திறப்பு. இதய வடிவங்களுக்குப் பொதுவான அர்த்தம் வேறு. அந்தந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகள்  நட்பு வட்டங்களில் உள்ள அர்த்தங்கள் வேறு.   Insta பதிவுகளில் கேட்டியின் கருத்துகள் ஜேமியைக் கேலி செய்வதாக இருந்ததே கொலைக்கான அடிப்படைக் காரணம் என்று பாஸ்கம் புரிந்து கொள்கிறார். பாஸ்கம் தன்னுடன் வந்திருந்த துணை ஆய்வாளரரான பிராங்கிடம், நடந்தது Incel என்று சொல்கிறார். பாஸ்கம் ரயானைப் பார்க்க வேண்டும் என்று அவனது வகுப்பிற்குச் செல்கிறார். ரயான் ஜன்னல் வழியே வெளியே குதித்து ஓடுகிறான். பாஸ்கம் அவனைத் துரத்திச் செல்கிறார்.பள்ளிக்கு வெளியே சிறிது தூரத்தில் அவனைப் பிடிக்கிறார்.  கேட்டி தான் ஜேமியைக் கேலி செய்தாளா? என்று பாஸ்கம், ரயானிடம் கேட்கிறார்.  எனக்குத் தெரியாது என்று ரயான் சொல்கிறான்.  Incel என்று கேட்டி, ஜேமியைச் சொன்னதன் அர்த்தம் என்ன என்று கேட்கிறார். ரயான் தெரியாது என்று சொல்கிறான். பாஸ்கம், ஒரு பெண் குழந்தையின் உயிர் போயிருக்கு. கொலை செய்த கத்தி எங்கே என்று கேட்கிறார்.  கத்தி என்னுடையது. இப்போ எங்கே என்று தெரியாது என்று ரயான் கூறுகிறான். அதனால் அவனும் கைது செய்யப்படுகிறான்.  கொலைக்கான காரணம், சமூக வளைத்தளங்களில் செய்யப்படும் கேலி.  நம் சமூகத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண், தான் பெண்ணை விட மேலானவன் என்ற சூழலில் வளர்கிறான். ஆணாதிக்கச் சிந்தனையும் செயல்பாடுகளும் இயல்பாக அவனிடம் வெளிப்படுகின்றன.  இணையம் பரவலான போது சமூக ஊடகங்கள் பலருக்கும் பிடித்தவையாக மாறின. எண்ணங்களைப் சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடமாக அவை இயங்கின. வீடு, பள்ளி போலக் கட்டுப்பாடுகள் இல்லாத சமூக ஊடகங்கள் வளரிளம் பருவத்தினரையும் பெரிதும் கவர்ந்தன.  அதிகமான விருப்பக்குறிகளைப் பெறுவதற்காகப் பலவிதமான செய்திகளைப் பதிவிடுவதில் ஆர்வம் அதிகரித்தது . மாற்றுப் பாலினத்தவரைக் கவர்தலும் அது குறித்த கதைகளும் ஆர்வத்தை அதிகப்படுத்தின. இவற்றையெல்லாம் மையமாக வைத்துப் பல்வேறு கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றே '80 சதவீதப் பெண்கள் 20 சதவீத ஆண்களையே விரும்புகிறார்கள்' என்பது.  Incel என்பதும் ஆண்களை ‘ஆண்மையற்றவன்’ என்ற  குற்ற உணர்வுக்குள் தள்ளிக் கேலி செய்ய உருவாக்கப்பட்ட வார்த்தை. உன்னை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். வாழ்நாள் முழுவதும் நீ தனியாக அல்லது உன் போன்ற ஆணுடன்தான் வாழ வேண்டும் என்று கேலி செய்யும் வார்த்தை. அப்படி இணையத்தில் பெண்களாலும் பிற ஆண்களாலும் கேலி செய்யப்படுபவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தன்னைக் கேலி செய்பவர்கள் மீது ஏற்படும் கோபம் வெறியாக மாறுகிறது. இப்படியான வெறியில் உலகெங்கும் ஏராளமான வன்முறைகள் நிகழ்கின்றன. தொடர்ந்து பேசுவோம்.....

  • லண்டனிலிருந்து அன்புடன் - 7

    அக்டோபர் 2025 – மிகத் துயரத்துடன் துவங்கியுள்ளது. அக். 4 ஆம் தேதி சிறார் இலக்கியத்தின் முன்னோடியான குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் இயற்கை எய்தினார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அக். 1 ஆம் தேதி சுற்றுச்சூழல் அறிஞரான Jane Goodall அவர்கள் மறைந்தார். அதற்கு முன்பு செப். 27ஆம் தேதி கரூர் கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் உட்பட 41 மக்கள் இறந்துள்ளனர். மறைந்த அனைவருக்கும் நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.  தொடர் மரணச் செய்திகள் பெரும் துக்கத்தையும் வருத்தத்தையும் தருகின்றன. நீங்களும் கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சி வாயிலாகவும், செய்தி அல்லது சமூக ஊடகம் மூலமாகவும் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்கள் மூலமாகவும் கரூர் துயர்ச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தைகளின் இறப்புச் செய்தி உங்களையும் வருத்தப்படச் செய்திருக்கும்.  மன தைரியத்துடன் இருப்போம். பாதுகாப்பு விதிகளை சரியாகப் பின்பற்றுவோம். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். பெரியவர்கள் போலவே குழந்தைகள் உங்களுக்கும் சில பொறுப்புகள் உண்டு. பிடித்த நாயகர்கள் இதுபோன்று பெரும் நிகழ்வுகளை நடத்தும்போது, அதற்குச் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சரி வாருங்கள்! சுற்றுச்சூழல் அறிஞரான Jane Goodall பற்றியும் அவர்  எழுதிய குழந்தைகள் புத்தகங்கள் குறித்தும் இனி பார்ப்போம். ஜேன் குடால் இறந்த போது அவருக்கு 91 வயது. அவரது மரணத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள எழுத்தாளர்கள், ஓவியர்கள், அறிஞர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஜேன் குடால் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி. அவர் பணி புரிந்தது முழுதும் ஆப்பிரிக்கா தேசத்தில். அப்படியிருக்க நமது தமிழ்நாட்டில் பலரும் அஞ்சலி செலுத்தினர் என்றால், அவர் யார்? அவரது முக்கியத்துவம் என்ன? உங்களைப் போன்று எனக்கும் இந்தக் கேள்விகள் எழுந்தன. அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்த “Good Night Stories For Rebel Girls” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அதில் உலகப் புகழ்பெற்ற 100 பெண்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருந்தன. ஒரு பக்க அளவில் சுருக்கமாகவும், கூடவே அவர்களது ஓவியம் இடம் பெற்றிருப்பதும் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. எனது அதிர்ஷ்டம், அதில் ஜேன் குடால் அவர்களும் இடம் பெற்றிருந்தார். எனது மகன் மற்றும் மகளுடன் ஜேன் குடால் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்க்கை வரலாறு என்றாலே, எங்களுக்கு “Little People Big Dreams” எனும் புத்தக வரிசை மிகவும் பிடித்தமானது. அந்த புத்தக வரிசையில் 32 பக்கங்களில் அழகிய ஓவியங்களுடன் எட்டு வயதினர் முதல் வாசிக்கும் வகையில் எளிமையான வகையில் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருக்கும். அந்தப் புத்தகத்தையும் நூலகத்தின் வழியே டிஜிட்டல் புத்தகமாக வாசித்தோம்.  ஜேன் குடால் (Jane Goodall) ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி. சிறு வயது முதலே  விலங்குகள் மீதும் பூச்சிகள் மீதும் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வந்தவர். 11ஆம் வயதில் டார்சன் புத்தகம் வாசித்ததிலிருந்து அவருக்கு ஆப்பிரிக்கா செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆப்பிரிக்கா செல்வதற்கான பணத்தை அவரே சம்பாதித்து, 23ஆம் வயதில் கப்பல் வழியே  ஆப்பிரிக்கா கண்டத்தின் ஒரு நாடான கென்யாவிற்குச் சென்றார். முறையான கல்வி பெற அவரிடம் வசதியில்லாத போதும், கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் அவரிடம் எப்பொழுதும் இருந்தது. அதனைவிட விலங்குகள் மீதான அன்பும் அக்கறையும் அவருக்குத் துணை நின்றது.  அதன் மூலம், பிரபல விஞ்ஞானியான லூயிஸ் லீக்கியின் உதவியாளராக ஆனார்.  சிம்பன்சி குரங்குகள் குறித்தும் ஆய்வு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பொதுவாக, விஞ்ஞானிகள் தாங்கள் ஆய்வு செய்யும் விலங்குகளுக்கு எண்களையே வழங்கினர். ஆனால் ஜேன் அவர்களோ சிம்பன்சிகளுக்கு பெயர்களைச் சூட்டினார். மற்ற விஞ்ஞானிகளோ, விலங்குகளைக் கூட்டில் வைத்து ஆய்வு செய்தனர், சிலர் தூரத்திலிருந்து அதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் ஜேன் அவர்களோ, காட்டுக்குள் சென்று, போதிய காலம் எடுத்துக்கொண்டு, சிம்பன்சி குரங்குகளோடு பழகினார். சிம்பன்சி குரங்குகளும் ஜேன் அவர்களை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டன. ஜேன் அவர்கள் சிம்பன்சி குரங்குகள் குறித்து மிக நீண்ட ஆய்வுகளைச் செய்தார். மனிதர்கள் போலவே சிம்பன்சிகளும் கருவிகளைப் பயன்படுத்துகிறது என்பதை அவர்தான் முதன்முதலாக அறிவித்தார். மனிதர்கள் போலவே சிம்பன்சிகளிலும் அன்பு, கோபம், ஏமாற்றும், துரோகம் என மனிதர்கள் போலவே குணங்களும் உடையவை என்பதையும் கண்டறிந்தார். அவரது ஆய்வின்படி மனித இனத்திற்கும் சிம்பன்சி இனத்திற்கும் 98.8 சதவீதம் டின்ஏ பொருந்துகிறது என்பதையும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து கூறினார். இந்த ஆய்வுகள் அனைத்திற்கும் அவரது பொறுமைதான் மிகப் பெரிய பலம் என்று நான் கருதுகிறேன். விலங்குகளுடன் காடுகளில் அவர் மிக நீண்ட காலம் வாழ்ந்து அதன் பிறகே அவர் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து உலகிற்கு அறிவித்தார்.  ஜேன் தனது அனுபவங்களையெல்லாம் புத்தகங்களாகவும் எழுதியுள்ளார். அதிலும் முக்கியமாகக் குழந்தைகள் உங்களுக்காகவும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். அதுகுறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

  • சீனப்புத்தாண்டு

    ஒவ்வொரு வருடமும், சனவரி 21க்கும் பிப்ரவரி 20க்கும் இடைப்பட்ட அமாவாசை தினத்துக்கு மறுநாள் - புது நிலவு தோன்றும் அந்த நாளே சீனப்புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது. சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது சீனப்புத்தாண்டு. ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு விலங்குப் பெயர் அளிக்கப்பட்டு, அந்த வருடத்தில் பிறந்தவர்கள் அந்த விலங்கு இராசியில் இருப்பவர்களாகச் சொல்லப் படுவார்கள். உதாரணத்துக்கு, இந்த வருடம் (2025) சீனாவில் ‘பாம்பு’ வருடமாகக் கருதப்படுகிறது. மொத்தம் பன்னிரெண்டு விலங்குகள். வரிசையாக அந்த விலங்குகளின் பெயரால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கான பெயரும் அளிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் முடிந்ததும் மீண்டும் முதல் மிருகத்திலிருந்து அந்தப் பன்னிரெண்டு வருடச் சுழற்சி ஆரம்பிக்கும். முதல் வருடத்தின் சின்னம் எலி. அதனைத் தொடந்து எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி என அடுத்தடுத்த வருடங்களுக்குப் பெயர் வைக்கப்படும். இப்படி, ஆண்டுகளுக்கு மிருகங்களின் பெயர் எப்படி வந்தது என்பதைப் பற்றி காலங்காலமாகச் சீனாவில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.  வெகுகாலத்துக்கு முன் சீனாவின் முதல் பேரரசராக இருந்தவர் மாணிக்க வம்சத்தைச் சேர்ந்த யுவாங். ‘வானுலகையும் மண்ணுலகையும்’ ஆள்பவர் என்று இவருக்குப் பட்டமுண்டு. அனைத்துக் கடவுளருக்கும் மனிதர்களுக்கும் அவரே தலைவர். இயற்கைச் சக்திகளான நதி, காற்று, மழை போன்றவையும் அவரையே வணங்கி வந்தன. நன்மை செய்பவர்களை உற்சாகப்படுத்தி, தீமை செய்பவர்களைத் தண்டிக்கவும் செய்பவர் பேரரசர்.  ஒவ்வொரு புது வருடத்தையும் பெயரிட்டு அழைப்பதற்காக, ஒருமுறை அவர் விலங்குகள் அனைத்தையும் வரச்சொன்னார். அந்த விலங்குகளுக்கு ஒரு போட்டி வைக்கப் போவதாகச் சொன்னார். நாய், ஆடு, பூனை, புலி போன்ற விலங்குகளும் எலி போன்ற சிறிய விலங்குகளும் டிராகன் போன்ற மாபெரும் விலங்குகளும் பேரரசரைக் காண வந்து அவரை வணங்கி நின்றன. “விலங்குகளே! உங்களுக்குப் போட்டி ஒன்றை நடத்தப் போகிறேன். ஒரு பெரிய ஆற்றைக் கடந்து மறுபுறம் நீங்கள் வரவேண்டும். முதலில் வரும் பன்னிரெண்டு விலங்குகளின் பெயரை வரிசையாக ஒவ்வொரு ஆண்டுக்கும் சூட்டப் போகிறேன்” என்றார். விலங்குகள் ஆர்வத்துடன் ஆரவாரம் செய்தன. போட்டி மறுநாள் காலையில் நடைபெறும் என்று பேரரசர் அறிவித்தவுடன் விலங்குகள் கலைந்து சென்றன. கலைந்து செல்லும்போது, பூனை தனது நண்பன் எலியிடம் சொன்னது: “நண்பா, நாளைக் காலை என்னை நீ அதிகாலையிலேயே எழுப்பி விடுவாயா? இல்லையேல் நான் அதிக நேரம் உறங்கி விடுவேன்; என்னால் போட்டியில் கலந்துகொள்ள முடியாது.” “நிச்சயமாக நண்பா. நான் கிளம்பிச் செல்கையில் உன்னையும் எழுப்பி அழைத்துச் செல்கிறேன்” என்று உறுதி சொன்னது எலி.  மறுநாள் அனைத்து விலங்குகளும் ஆற்றங்கரைக்குச் சென்றன. எலி வேண்டுமென்றே பூனையை எழுப்பாமல் விட்டுச் சென்றது. பூனை தொடர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, பூனையைத் தவிர மற்ற அனைத்து விலங்குகளும் போட்டியில் கலந்துகொண்டன. ஆற்றின் மறுகரையில் பேரரசர் காத்திருந்தார். விலங்குகள் ஓடிச்சென்று ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தன. எலிக்கு நீந்தத் தெரிந்தாலும், பிற வலுவான விலங்குகளுடன் போட்டி போட்டுக்கொண்டு நீந்தும் அளவுக்குத் தனக்குத் திறமை இருக்கிறதா என்று யோசித்தது. என்ன செய்யலாம் என்று சிந்தித்த எலி, அருகில் வந்த எருதிடம், “எருது நண்பா, எனக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது; என்னை உன் முதுகில் ஏற்றிக் கொண்டு அக்கரைக்குச் செல்லமுடியுமா?” என்று கேட்டது. அதற்கு உடனே சம்மதித்தது எருது. எருதின் முதுகில் எலி ஏறிக்கொள்ள, ஆற்றை விரைவாகக் கடந்தது எருது. மறுகரையை எருது அடைவதற்கு முன் எருதின் முதுகிலிருந்து குதித்துக் கரையை அடைந்து ஓடிப் பேரரசருக்கு அருகில் நின்றது. “எலியே! நீதான் முதலில் வந்தாய். அதனால் முதல் வருடத்துக்கு உனது பெயரைத்தான் சூட்டப்போகிறேன்” என்றார் பேரரசர்.  மகிழ்ந்த எலி, “மிக்க நன்றி பேரரசரே!” என்று சொல்லி வணங்கி நின்றது. தன்னைப் பயன்படுத்திக் கொண்டு முதலிடம் பெற்ற எலியைக் கண்டு சற்றுக் கோபப்பட்டாலும், அதை மறைத்துக் கொண்டு நின்றது எருது.  “இரண்டாவதாக வந்த எருதே! உன் பெயராலேயே இரண்டாவது வருடத்தை அழைக்கப் போகிறேன்” என்றார் பேரரசர். எருது நன்றி சொல்லிச் சென்றது. அடுத்த வந்த புலியின் பெயரால் மூன்றாவது ஆண்டுக்குப் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார் பேரரசர். துள்ளிக் குதித்து வந்தது முயல். நான்காவது ஆண்டுக்கு முயலின் பெயரை அறிவித்தார் பேரரசர்.  டிராகன் அடுத்ததாக வந்தது. அதைப் பார்த்த பேரரசர் கேட்டார்: “கடல் நாகமே, நீ பறந்து வந்து முதலிடம் பெற்றிருக்கலாமே! ஏன் தாமதமாக வருகிறாய்?” “பேரரசரே, வரும் வழியில் என்னிடம் பலர் உதவி கேட்டார்கள். அவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு வருவதற்கு நேரமாகி விட்டது” என்றது டிராகன். ஐந்தாவது வருடத்துக்கு டிராகனின் பெயர் வைப்பதாக பேரரசர் அறிவித்தார். வேகமாக வந்தது குதிரை. ஆனால் குதிரையின் கால்களைச் சுற்றிக் கொண்டு வந்து அதன் வேகத்தைக் குறைத்தது பாம்பு. குதிரைக்கு முன் வந்து நின்றது. “பாம்பே, நீ குதிரையை முந்திவிட்டாய். அதனால் ஆறாவது ஆண்டுக்கு உனது பெயரைச் சூட்டுகிறேன். குதிரையே, ஏழாவது ஆண்டு உனது பெயரால் அழைக்கப்படும்.” சேவல், குரங்கு, ஆடு ஆகிய மூன்று விலங்குகளும் ஒன்றாக வந்தன. ஆற்றைக் கடக்க அவை இணைந்து வேலை செய்திருந்தன. கோழி ஒரு படகைக் கொண்டுவந்தது. ஆடு புற்களை உண்டு ஆற்றுக்கு நடந்து செல்ல ஒரு பாதையை உருவாக்கியிருந்தது; குரங்கு படகைச் செலுத்தி ஆற்றைக் கடக்க உதவியது. இத்தகைய சிறந்த குழுப்பணியைக் கேட்ட பேரரசர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் ஆட்டை எட்டாவதாகவும், குரங்கை ஒன்பதாவதாகவும், சேவலைப் பத்தாவதாகவும் அறிவித்தார். பதினோராவதாக வந்தது நாய். ஆச்சரியமடைந்த பேரரசர் நாயிடம் கேட்டார்: “நாயே, உனக்கு நன்றாக நீந்தத் தெரியுமே! நீ எப்படி இவ்வளவு தாமதமாக வந்தாய்?” “பேரரசே, தண்ணீர் தெளிவாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தபடியால் நான் ஆற்றுநீரில் சிறிது நேரம் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தேன். ஆற்றை விட்டு வெளியே வர மனமில்லாமல் நீந்திக் கொண்டிருந்தேன். அதனால் நேரமாகிவிட்டது” என்றது நாய். நாயைப் பதினோராவது ஆண்டின் பெயராக அறிவித்தார் பேரரசர். பின்னர் அடுத்து வரப்போகும் விலங்குக்காகக் காத்திருந்தார் பேரரசர். ஆனால் வெகுநேரமாக வேறந்த விலங்கும் வரவில்லை. எல்லா விலங்குகளும் வந்துவிட்டன போலும் என்று எண்ணிய பேரரசர் புறப்படத் தயாரான போது கடைசியாக வந்தது பன்றி.  “மன்னித்துக் கொள்ளுங்கள் பேரரசே. வரும் வழியில் சிறிது உணவு உண்டேன்; உண்ட களைப்பில் சிறிது நேரம் படுத்து உறங்கிவிட்டேன். வருவதற்குத் தாமதமாகி விட்டது” என்று வெட்கத்துடன் சொன்னது பன்றி. சிரித்த பேரரசர் பன்றியின் பெயரைப் பன்னிரெண்டாம் ஆண்டிற்கு வைத்தார்.  “இனிவரும் ஆண்டுகள் இந்தப் பன்னிரெண்டு விலங்குகளின் பெயரிலேயே வரிசையாக அழைக்கப்படும்” என்று அறிவித்தார் பேரரசர். அனைவரும் மகிழ்ச்சியானார்கள்; அனைவருக்கும் விருந்துணவு அளிக்கப்பட்டது.  உறங்கி விட்டதால் போட்டிக்கு வர மறந்த பூனை எழுந்து பார்த்தது. “போட்டிக்கு நேரமாகி விட்டதே! இந்த எலி என்னை எழுப்பாமல் ஏமாற்றிவிட்டதே” என்று எண்ணிக்கொண்டே வேகமாகப் போட்டி நடக்கும் இடத்துக்கு வந்து பார்த்தது பூனை. போட்டி வெகுநேரத்துக்கு முன்பே முடிந்திருக்க, ஏமாற்றமடைந்தது பூனை. “என்னை ஏமாற்றிய எலி இன்றிலிருந்து எனது நண்பன் அல்ல” என்று சொல்லிக் கொண்டே எலியைப் பிடித்துத் தண்டிப்பதற்காக பூனை எலியைத் தேடி ஓடியது. அன்றிலிருந்து இன்றுவரை எலியை விரட்டிக்கொண்டே இருக்கிறது பூனை. இப்படித்தான் சீனப்புத்தாண்டுகளுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. குறிப்பிட்ட வருடங்களில் பிறந்தவர்களின் குணங்களும், பிறந்த வருடங்களைக் குறித்த விலங்குகளின் பண்புகளைப் பொறுத்தே அமையும் என்ற நம்பிக்கையும் இராசி பலன்களும் இன்றும் சொல்லப் படுகின்றன.

  • பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா

    பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாக பவளப்பாறை என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது என்ற கேள்வியைக் கேட்கலாம். பவளப்பாறைகள்(Corals) பவள உயிரிகளால் உருவாக்கப்படுகின்றன. பவள உயிரிகள்(Coral polyps) கடல் ஜெல்லிகள்,கடல் சாமந்திகள் ஆகியவை எல்லாம் இருக்கும் நிடாரியா தொகுதியைச் சேர்ந்தவை. இவை ஒருவகை கடல் விலங்குகள். இந்த பவள உயிரிகளின் உடலில் பெரும்பாலும் நுண் பாசிகள் வசிக்கும்.இந்த நுண் பாசிகள் ஒளிச்சேர்க்கை மூலம் உருவாக்கித்தரும் உணவை பவள உயிரிகள் சாப்பிடுகின.பவள உயிரிகளின் நைட்ரஜன் கழிவு இந்தப் பாசிகளின் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. சில பவள உயிரிகள் இரை பிடித்தும் சாப்பிடுகின்றன. இந்த பவள உயிரிகள் தனியாக வாழ்வதில்லை, பெரும்பாலும் கூட்டமாகவே வசிக்கின்றன. பவள உயிரிகள் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டு ஒரு வெளிப்புற ஓட்டை உருவாக்குகின்றன. காலப்போக்கில் இந்த வெளி ஓடு முழுமையாக இறுகும். இதுவே பவளப்பாறை என்று அழைக்கப்படுகிறது. பல பவளப்பாறைகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய அமைப்பாக உருவாகும் போது அது பவளத்திட்டு (Coral reef) என்று அழைக்கப்படுகிறது. பவளப்பாறைகள் உயிருள்ள அமைப்புகளாகும். உள்ளுக்குள் இருக்கும் பவள உயிரி இறந்து போனாலும் பாறையின்மீது அடுத்தடுத்து புதிய பவள உயிரிகள் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef) உலகிலேயே மிகப்பெரியது. இது மூன்று லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.. இதை விண்வெளியிலிருந்துகூட பார்க்க முடியும். நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்  பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி  கல்விக்குழுமத்தின்   படைப்பூக்க   விருது ,பாவை  விருது  ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும்  மனிதரும் , விலங்குகளும்  பாலினமும் , ஆழ்கடல், சூழலும்  பெண்களும் , நெய்தல் மீன்கள்  உள்ளிட்ட   பதினைந்து     நூல்களை எழுதியுள்ளார்.

  • குழந்தைகளின் உரிமைகள் - 7

    குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான  யுனிசெப் அமைப்பின் சர்வதேசப் பிரகடனம் -  இன்று உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள், நாடுகளுக்கு இடையேயும் உள்நாட்டு அளவிலும் நடந்து கொண்டிருக்கும் போர்கள், எதிர்பாராத பல இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள் போன்ற பல்வேறு காரணங்களால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்கள் குழந்தைகளே. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்ரேல்-ஹமாஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் போரில், அன்றாடம் குண்டு வீச்சுகளில் சாகிறவர்கள் ஒரு பாவமும் அறியாத குழநத்தைகள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு, மருத்துவ சிகிச்சை, பல், ரொட்டி போன்ற அத்தியாவசியத் தேவைகள் எவையும் கிடைப்பதில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெப் போன்ற சேவை அமைப்புகளால் அனுப்பப்படும் மேற்கண்ட உதவிகளை, இஸ்ரேல் இராணுவம் நாட்டுக்குள் நுழையவே அனுமதிப்பதில்லை. உலக நாடுகளில் பலவும் வெறும் வார்த்தைகளால் அனுதாபம் தெரிவிப்பதுடன் நின்று விடுகின்றன. விளைவு, நம் கண்களுக்கு முன்னாலேயே ஒவ்வொரு நாளும் குழந்தைகள் குண்டுகளால் மட்டுமன்றி, பசியினால், நோயினால், மருந்துகள் கிடைக்காமையால் செத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  ஒவ்வொரு குழந்தையும் அதன் பெற்றோருடன்தான் வாசிக்கவும்,வாழவும் வேண்டும் என்கிறது யுனிசெப் பிரகடனம். எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு குழந்தையும் அதன் பெற்றோரிடமிருந்து தனியே பிரிக்கப்படவே கூடாது என்பது யுனிசெப்பின் விதிகளின்படி கட்டாயம். குழந்தைகளை அவர்களின் பெற்றோரே முறையாகப் பராமரித்து வளர்க்காத பட்சத்தில், அத்தகைய சூழலில் மட்டும், அத்தகைய அக்கறையற்ற பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டுக்காக, ஒரு குழந்தையைப்  பெற்றோரே துன்புறுத்திக் கொண்டிருந்தாலோ, குழந்தைக்கு உணவு,உடை, பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசியத்  தேவைகளைக் கூட வழங்காமல் அக்கறையற்று இருந்தாலோ, அங்கு சட்டப்படியான நடவடிக்கைகளின் மூலம், அந்தக் குழந்தைகளைப் பிரித்துக் கொண்டு வந்து பராமரிப்பு நிலையங்களில் அல்லது சேவை மையங்களில்  பாதுகாக்க வேண்டும் என்பது யுனிசெப் அமைப்பின் அறிவுறுத்தல்.  குடும்பத்தகராறுகள் காரணமாகப் பெற்றோர் பிரிந்து வாழும் நிலை இன்று பரவலாக உள்ளது. அந்த மாதிரிப் பெற்றோரின் குழநத்தைகள், அப்பா - அம்மா இருவருடனும் தொடர்பில் இருக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் இந்த விதியின் மற்றோரு நிபந்தனை. அவ்வாறு இருவருடனும் தொடர்பில் அக்குழந்தையை விடுவது, அதற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற நிலை இருக்குமானால், அப்படிப்பட்ட சூழ்நிலையில், இருவரில் யாரிடம் குழந்தை  பாதுகாப்பாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து அவரிடம் அந்தக் குழந்தை வசிக்குமாறு செய்ய வேண்டும்.  இந்த விதிகளையெல்லாம் கேட்கவும், படிக்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆநாள், நடைமுறையில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் செய்திகள் நெஞ்சைப் பிறக்கின்றன. இருமல் மருந்து -சிரப்- குடித்ததால் சுமார் 19 குழநத்தைகள் மரணம். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமையால் நூற்றுக்கணக்கில் சாவுகள். ஒரு நடிகர், தான் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்குப் பிரச்சாரம் செய்ய ஓர் ஊருக்கு வந்தால்,அவரைப் பார்ப்பதற்குக் கூடும் கூட்டங்களில் நெரிசலில் சிக்கிய பல குழந்தைகள் சாகின்றன. கும்பமேளா போன்ற மதம் சார்ந்த திருவிழாக்களில், கடவுளை வணங்கும் வேகத்தில் குழந்தைகளைப் பற்றிய கவலையில்லாமல் ஆற்று நீரிலும், குளங்களின் நீரிலும் பலியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான செய்திகள் இல்லாமல், இன்றைய உலகில் ஒரேயொரு நாள் கூட இருப்பதில்லை.  என் இந்த அவல நிலை? இம்மாதிரி மரணங்களுக்கு யார் பொறுப்பு? பெற்றோர்தாம் முதன்மையான பொறுப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அரசாங்கம், காவல்துறை, பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் - இப்படி, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பு உண்டுதானே? ஊடகங்கள் தங்களின் கடமைகளில் ஒன்றாகக் குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி மிக விரிவாகவும்,அழுத்தமாகவும்,மக்களின் மனங்களில் பசுமரத்தாணியைப் போல் பதியும் வண்ணம் பரப்புரை செய்ய வேண்டாமா? மக்களின் பணத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படக் கலைஞர்கள் தங்களின் மீது வெறித்தனமான பக்தி கொண்டிருக்கும் ரசிகர்களிடம் குழந்தைகளைப் பாதுகாப்பகப் பார்த்துக் கொள்வது அவர்களின் தலையாய கடமை என வலியுறுத்திக் கூற வேண்டாமா? ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பிஞ்சு நெஞ்சுகளில் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என விழிப்புணர்வு ஊட்டி, நெறிப்படுத்த வேண்டாமா? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம்,சலுகைகளை அனுபவிக்கும் ஒவ்வோர் ஊழியருக்கும் இந்த விஷயத்த்தில் பொறுப்பும், கடமையும் உண்டுதானே?  கேள்விகள் முடிவில்லாமல் எழுகின்றன. இன்று செத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையின் சாவும் தவிர்க்கப்படக் கூடியதுதான். கொரானா அல்லது சுனாமி போன்ற, மனித ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட இயற்கைப் பேரிடர் நேரங்களில் தவிர, மற்ற எல்லா நிகழ்வுகளிலும் குழந்தைகளின் மரணங்கள் தடுக்கப்பட்டே தீர வேண்டும்.  இதற்கு நாம் ஒவ்வொருவரும் அவரவரின் பங்கினை ஆற்றிட வேண்டும். இதுதான் யுனிசெப் பிரகடனம் சொல்லும் செய்தி! கமலாலயன்   சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • அமாவாசை

    நாட்டார் கதை                                                                                              கதை சொன்னவர் : அ.க.கருப்பசாமி  ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்.  தினமும் கம்பஞ்சோறு, குதிரைவாலி, கேழ்வரகு கஞ்சி, பழைய சோறு என்று சாப்பிட்டு வயிற்றுப் பசியாற்றி நாட்களை நகர்த்தினார்கள். எப்பொழுதாவது அமாவாசை, புரட்டாசி, மூன்றாவது சனிக்கிழமை என்று விஷேசமான நாட்களில் மட்டும் ஆட்டுரலில் மாவாட்டி தோசை சுட்டு ஆசைக்கு சாப்பிட்டுக்கொள்வார்கள். அது அவர்களுக்கு பண்டிகை நாட்களில் பலகாரம் செய்து சாப்பிடுவது போல் கொண்டாட்டமாக இருந்தது.  “தினமும் சோறும் கஞ்சியாக சாப்பிட்டு வாரோம். அரிசி உளுந்து நனையப்போட்டு ஆட்டியெடுத்து தோசை சுட்டு சாப்பிடணும். பக்கத்து ஊரு அய்யர்கிட்ட போயி அமாவாசை என்னைக்கு வருதுன்னு கேட்டுக்கிட்டு வாங்க” என்று கணவனிடம் மனைவி சொல்கிறாள். அப்படி சொல்லும்போது சொன்னாள். “உங்களுக்கு ஞாபகமறதி ஜாஸ்தியாக இருக்கு. அவரு என்ன சொன்னாரோ அதை மறக்காம இருக்கிறதுக்கு உச்சரிச்சிக்கிட்டே வரணும். இல்லையின்னா அயத்துப் போயிருவீக” என்று கவனத்தோடு போய்வரச் சொல்லுகிறாள்.  இவர் அந்த ஊருக்கு போய் அய்யர் வீட்டுக்கு முன்பு நின்று சாமி.. சாமி.. என்று கூப்பிடுகிறார்.  அந்த நேரம் அவர்களுக்குள் ஏதோ குடும்ப பிரச்சனை நடந்துகொண்டிருந்தது. ஒருவருக்கொருவர் சத்தம் போட்டு பேசி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இவர் அந்நேரம் பார்த்து இடைஞ்சல் செய்வது போல் கூப்பிடவும் யாரு.. என்ன ஏது என்று  அய்யர் தலையை நீட்டி வெளியே எட்டிப்பார்த்தார்.   சாமி அமாவாசை என்னைக்கு வருது என்று இவர் கேட்டார்.  அவர் அங்கே சச்சரவில் இருந்த மனோபாவத்தில் சொல்லும் போது, “இன்னைக்கோ.. நாளைக்கோ” என்று சொல்லிவிட்டார்.  மனைவி சொல்லிவிட்டபடி அய்யர் சொன்னது மறந்துபோய்விடக்கூடாது என்று “இன்னைக்கோ நாளைக்கோ… இன்னைக்கோ  நாளைக்கோ” என்று ஊரைப் பார்க்க திரும்பி வரும்போது உச்சரித்துக்கொண்டே போகிறார்.  அப்படி போகும்போது வழியிலுள்ள ஒரு ஊரில் செல்வாக்கு மிக்க ஒரு பண்ணையார் உடல்நலமில்லாமல் படுத்திருந்தார். “இவர் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தால் ஆதரவாக இருக்குமே” என்று அந்த ஊர் மக்கள் ஆதங்கத்தோடு அவரை சுற்றி கூடியிருந்தார்கள். இவர் அந்த இடத்தில் போகும் போது “ இன்னைக்கோ நாளைக்கோ… இன்னைக்கோ நாளைக்கோ” என்று சொல்லிக்கொண்டே போகிறார். அங்கிருந்தவர்கள் பண்ணையார் பிழைக்கணும் என்று கடவுளை கும்பிட்டுக்கொண்டிருக்கும் போது இவர் இப்படி சொன்னது ஏறுக்கு மாறாய் இருக்கவும், “என்னடா.. ஒரு பெரியாளு… அவரு இருந்தால் ஊருக்கு நல்லதுன்னு நினைத்தால் நீ இன்னைக்கோ நாளைக்கோன்னு சொல்றயே” என்று நாலு சாத்து சாத்தினார்கள்.  “என்னய்யா… அய்யர் சொன்னது அயத்துப்போயிரும்னு இன்னைக்கோ நாளைக்கோன்னு சொல்லிக்கிட்டு போறேன்.  நீங்க இப்படி அடிக்கீக. என்னைய என்ன சொல்லச் சொல்றீக” என்று கேட்டார்.  இப்படிப்பட்ட புண்ணியவாளனுக்கு இப்படி வரக்கூடாது என்ற அர்த்தத்தில், “இப்படியாப்பட்ட புண்ணியவாளனுக்கு இப்படி வரலாமா”ன்னு சொல்லிக்கிட்டுப் போ என்று அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து இன்னொரு இடத்தில் வரும்போது திருமணம் முடித்த பொண்ணு மாப்பிள்ளை ஊர்வலமாக வருகிறார்கள். இவர் அங்கே போய் “இப்படியாப்பட்ட புண்ணியவாளனுக்கு இப்படி வரலாமா” என்று சொல்லவும் அங்கேயும் அடி விழுகிறது.  அவர்கள் அடிக்கவும் “அந்த ஊர்லேயும் அடிச்சாக. இங்கேயும் அடிக்கீக. என்னதான் சொல்லச்சொல்றீக” என்று கேட்டார்.  “என்ன சிங்காரம்.. என்ன ஒய்யாரம்”னு கல்யாண மாப்பிள்ளையை பார்த்து சொல்லீட்டு போ என்று முடுக்கிவிட்டார்கள். இவர் அந்த வாக்கியத்தை பிடித்துக்கொண்டார்.  அப்படியே போகும்போது ஒரு ஊரில் ஒரு வயதான கிழவி காபி போடும்போது குடிசைவீடு தீப்பற்றி ஊரெல்லாம் எரிந்து கொண்டிருந்தது. அங்கே போய் “என்ன சிங்காரம்… என்ன ஒய்யாரம்” என்று சொல்லிக்கொண்டு போகவும் அவர்கள் பங்குக்கு தர்மஅடி கொடுத்தார்கள்.  இவர் என்னதான் சொல்லச்சொல்றீக என்று கேட்க, தீயை அணைப்பதற்கு “தண்ணியை ஊத்தி தடியால் அடி” என்று சொல்லச்சொல்லியிருக்கிறார்கள்.  இப்போது “தண்ணியை ஊத்தி தடியால் அடி” என்று சொல்லிக்கொண்டு போகிறார்.  அடுத்த ஊருக்கு போகும் போது ஒரு குயவசெட்டியார் பச்சை பானையை வனைந்து அதை சுள்ளை போடுவதற்காக தனல் போட்டுக்கொண்டிருந்தார். இவர் “தண்ணியை ஊத்தி தடியால் அடி” என்று சொல்லிக்கொண்டுபோனார்.  “ஏய்.. நான் எவ்வளவு நாளாக பச்சைப்பானையை சுள்ளை போட்டுக்கிட்டு இருக்கேன். நீ தண்ணியை ஊத்தி தடியால் அடின்னு சொல்றயே” என்று சுள்ளை விறகை எடுத்து நாலு போடு போட்டார்.  “என்னய்யா செய்ய… ஊர்ஊருக்கு அடிக்கீக. என்னதான் சொல்ல” என்று கேட்கிறார். அவர் சுள்ளை போடுகிற நேரம் வானத்தில் ஒரு ஒற்றை மேகம் இருந்தது. இன்னும் மேகங்கள் கூடி  மழை வந்துவிட்டால் சுள்ளை அடுப்பை நனைத்துவிடும் என்று அந்த ஒற்றைமேகத்தை பார்த்து “இந்த ஒன்னும் போயிரணும்… இந்த ஒன்னும் போயிரணும்”னு சொல்லு என்று அனுப்பினார்.  இவர் “இந்த ஒன்னும் போயிரணும்… இந்த ஒன்னும் போயிரணும்” என்று சொல்லிக்கொண்டே போனார்.  போகிற வழியில் ஒருவர் கண்அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஒரு கண் பார்வை சரியாகி துணைக்கு ஆட்களோடு எதிரில் வந்துகொண்டிருந்தார். இவர் இந்த ஒன்னும் போயிரணும் என்று சொல்ல அங்கேயும் அடிகள் விழுந்தது.  வீட்டுக்கு போய் சேரும் போது அய்யர் சொன்னதும் மறந்துபோய்விட்டது. திரும்பி நடந்து வந்த போது வழியெங்கும் வாங்கிய அடிகள்தான் மிச்சமாக இருந்தது. இனிமேல் எனக்கு தோசையே வேண்டாம். கம்பங்கூழே போதும் என்று இப்பொழுது சொல்லிக்கொண்டிருக்கிறார். ஜெ.பொன்னுராஜ் 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2

  • எங்கிருந்தோ வந்தான்?

    வெளியீடு – பழனியப்பா பிரதர்ஸ் – 1983 வாசிப்பு அஞ்சலி தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் காலத்தால் மறையாத பல கதாபாத்திரங்கள் உண்டு. அப்படி அற்புதமான  கதாபாத்திரமாக நீலனை உருவாக்கி சிறார்களின் மனதில் உலவ விட்டவர் கொ.மா.கோதண்டம். தன்னுடைய முதல் நூலான ஆரண்ய காண்டம் நூலுக்கு குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றவர். முதன்முதலாக குறிஞ்சி நிலத்தை, காடுகளை, பழங்குடி மக்களை, அந்த வாழ்க்கையை, எளிய குணத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியவர். காட்டை வெளியிலிருந்து பார்த்துக் கதைகளை உருவாக்கவில்லை. காடுகளுக்குள் சென்று அங்கிருந்த பழங்குடி சமூகத்துடன் தங்கியிருந்து அவர்களுடைய இயற்கையறிவைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கதைகளை எழுதினார்.  என்னுடைய பள்ளிப்பருவத்தில் நூலகத்தில் கொ.மா.கோதண்டம் கதைகளைப் படித்து அடர்ந்த காடுகள், யானைகள், கழுதைப்புலிகள், ஓநாய்கள், புலிகள், எல்லாம் கனவில் வந்திருக்கின்றன. நீலன் என்ற கதாபாத்திரத்தின் இயற்கையைப் பற்றி, விலங்குகள், பறவைகளைப் பற்றிய நுண்ணறிவு, காட்டுக்குள் அவன் செய்யும் சாகசங்கள், காட்டில் நடக்கும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் தைரியம் எல்லாம் என்னைப் போன்ற குழந்தைகளை மிகவும் பிடித்திருந்தது.  1980-களில் கல்லூரி முடித்து இலக்கியத்தைக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் நீலன் என்ற காவியக் கதாபத்திரத்தை உருவாக்கிய கொ.மா.கோதண்டம் அவர்களைத் தோழராக நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.  அவருடைய மறைவையொட்டி அவருடைய எங்கிருந்தோ வந்தான் சிறார் சிறுகதை நூலை இப்போது வாசித்து அஞ்சலி செலுத்தினேன்.  எங்கிருந்தோ வந்தான் தொகுப்பில் பனிரெண்டு கதைகள் இருக்கின்றன. அந்தக் காலங்களில் தொடர் நாயகர்களைக் கொண்டு நாவல், சிறுகதைகள் எழுதும் பழக்கம் இருந்த து. அப்படித்தான் இந்த த் தொகுப்பிலுள்ள பனிரெண்டு கதைகளிலும் நீலன் வருகிறான். எளிய பளியர் குலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒவ்வொரு கதையிலும் காட்டைப்பற்றி, விலங்குகளின் குணாதிசயங்களைப் பற்றி, மூலிகைகளைப் பற்றி, அங்கிருக்கும் ஆபத்துகள், அதிலிருந்து பாதுக்காப்பாக இருக்க வழிகள், மனிதர்களின் அட்டூழியங்கள், இயற்கையின் மீதான ஆக்கிரமிப்புகள் என்று ஒவ்வொரு கதையிலும் காட்டைப்பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கிறான் நீலன்.  இப்போது வாசிக்கும்போதும் எளிமையாகவும் சுவாரசியமாகவும், புதிதாகவும், புதிய தகவல்களைச் சொல்வதாகவும் இருக்கின்றன. அத்துடன் நீலன் என்ற எளிய பழங்குடிச் சிறுவனை அதிகாரம் செய்கிற நகரத்தைச் சேர்ந்த தோட்டத்த்துக்குச் சொந்தக்காரரின் மகனின் அதிகாரத்தையும் பதிவு செய்திருக்கிறார் கொ.மா.கோதண்டம். வர்க்கவேறுபாட்டினையும் அதன் விளைவான அதிகாரச்செருக்கையும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே செல்வதும் நீலனின் இயற்கையறிவுக்கு முன்னால் அதிகாரம் அடிபணிந்து நிற்பதையும் சொல்கிறார். மிக முக்கியமானது எல்லாக் கதைகளிலும் நீலன் புன்முறுவலுடனே வருகிறான். உதவி செய்கிறான். உயிரைக் காப்பாற்றுகிறான். நீலனைப் போல அறிவும், சமயோசிதமும், சாமர்த்தியமும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும்படி இந்தக் கதைகளை எழுதியிருக்கிறார் தோழர்.கொ.மா.கோதண்டம். குழந்தைகளுக்காக எழுதுபவர்களும் எழுத நினைப்பவர்களும் கூட வாசித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகளை பதிவு செய்திருக்கிறார். சிறார் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம். உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 5

    கடல் நீர் உப்புக் கரிக்குது. அதிலிருந்து தானே மேகம் உருவாகுது. ஆனா, மேகத்திலிருந்து கீழே விழுற மழை தண்ணி, உப்பா இல்லையே. அப்ப தண்ணில இருந்த உப்பு, எங்கே போச்சு? -வா.சு.வர்ஷினி, மதுரை வணக்கம் வர்ஷினி, நான் புத்தகப் புழு பேசுறேன். ஒரு விஷயத்துக்குப் பின்னாடி இருக்கிற காரணத்தைத் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு கேட்டிருக்கீங்க. மலைப்பகுதியில் ஆறுகள் சிற்றோடைகளாகத் தொடங்குகின்றன. அவை சமவெளி வழியாகப் பயணிக்கின்றன. இப்படிப் பாயும்போது, அத்துடன் நிறைய சிற்றாறுகள் கலக்கின்றன. பிறகு கடலில் சென்று அந்த ஆறு கலக்கிறது. இப்படிச் செல்லும்போது வழியில் உள்ள பாறைகள், மண்ணில் உள்ள கனிமங்கள், உப்பை ஓடை, சிற்றாறு, ஆறுகள் கரைத்து எடுத்துச் செல்கின்றன. காலம்காலமாக இப்படி அவை கடலில் சென்றுசேர்கின்றன. ஆற்று நீரில் இருந்த கனிமங்களும் உப்புகளும் கடலில் சிறிதுசிறிதாகச் சேகரம் ஆகின்றன. அங்கிருக்கும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது. இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது, கடல் நீரில் இருக்கும் உப்பு ஆவியாகி மேலே செல்வதில்லை. அதற்கு எடை அதிகம். அதனால் உப்பு கடலிலேயே தங்கிவிடுகிறது. அதனால்தான் கடல்நீர் உப்புக் கரிக்கிறது. ஆற்றுநீரில் கனிமங்கள், உப்புகள் இருந்தாலும், அவற்றின் அளவு குறைவு, அதனால் உப்புக் கரிப்பதில்லை. வானத்தில் ஒன்றுகூடும் நீராவி குளிர்ந்து, மழை மேகம் ஆகிறது. அது மழையாகப் பொழியும்போது, உப்புக் கரிப்பதில்லை. ஏனென்றால், அதற்கு ஆதாரமாக இருந்த நீராவியில் உப்பு இல்லையே. பாலூட்டிகள், பறவைகள் போன்றவற்றின் குஞ்சுகள், குட்டிகளுக்கு எல்லாம் தங்கள் பெற்றோர் யார் என்று தெரியும். மீன்களுக்கும் தங்கள் பெற்றோர் யார் என்று தெரியுமா? -வெ.ரா.மகிழினி, திண்டுக்கல் வணக்கம் மகிழினி, நான் புத்தகப் புழு பேசுறேன். நல்லா யோசிச்சிருக்கீங்க. கடல், ஆறுகள், ஏரிகளில் இயற்கையாக வாழும் மீன்களைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன், மகிழினி. பாலூட்டிக் குட்டிகளுக்கு தங்கள் பெற்றோர் யார் என்று தெரியும். ஏனென்றால், தங்கள் குட்டிகளுக்கு முதலில் பாலூட்டியும், பிறகு அவை தன்னிச்சையாக இயங்கும்வரை நீண்ட காலத்துக்குப் பாலூட்டிகள் பராமரித்து வளர்க்கின்றன. இதனால் அவை பாதுகாப்பாக வளர முடிகிறது. குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்துப் பறக்கும்வரை பறவைகளும் வளர்க்கின்றன. அதேநேரம், மீன்களுக்குப் பெற்றோர் யாரென்று தெரியாது. பெரும்பாலான மீன்கள் அதுபோல் தங்கள் குஞ்சுகளை வளர்ப்பதோ, பாதுகாப்பதோ இல்லை. விதிவிலக்காக, கடல்குதிரை போன்ற சில மீன் வகைகள் குஞ்சுகளை வளர்க்கின்றன. பெரும்பாலான மீன் குஞ்சுகள் தாங்களாகவே இரை தேடி வளர்ந்துகொள்கின்றன. அதனால், அவற்றுக்குத் தங்கள் பெற்றோர் யார் எனத் தெரியாது.  -அமிதா

  • பனித்துளியின் வடிவம்!

    நம்மூரில் கொளுத்தும் வெயிலில் பனித்துளியைப் (snowflakes) பற்றியெல்லாம் நாம் நினைப்பதே இல்லை. ஏதோ,திரைப்படப் பாடல்களில் மட்டும் ‘பனித்துளி’யை இஷ்டத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் உள்ளூர் கவிஞர்கள் மட்டுமல்ல,விஞ்ஞானிகளும் பனித்துளியைப் பற்றித் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? இப்போது, பக்கத்தில் இருக்கும் ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்கொண்டு,ஒரு பனித்துளி எப்படியிருக்கும் என்று வரைந்து பாருங்கள் பார்ப்போம். ‘நீர்த்துளி’ கிடையாது... ‘பனித்துளி’ வரைய வேண்டும். நீங்கள் என்ன வரைந்திருக்கிறீர்கள்? சிலர் அறுங்கோணமாக வரைந்திருக்கிறீர்களா? இல்லை, இந்தக் கட்டுரையை வாசிப்பதை நிறுத்திவிட்டு, கூகுளில், chatgptயில் தேட ஆரம்பித்துவிட்டீர்களா? பனித்துளியில் படம் மேலே தந்திருக்கிறேன். பனித்துளி எப்படி உருவாகிறது? நீரில்  வெப்பநிலை குறையும்போது, நீரின் மூலக்கூறுகள் ஒன்று சேரத்தொடங்கும். சின்ன சின்ன தூசு இருந்தால், அதைச்சுற்றி நீரின் மூலக்கூறுகள் ஒன்றன் பின் ஒன்றான இணைத்தொடங்கும். இது பனிக்கட்டி உருவாவதற்கு ஒரு விதையாக (nucleus/seed) செயல்படும். இந்தப் பனிக்கட்டி விதையைச் சுற்றி நீர்மூலக்கூறுகள்அதன் மேற்பரப்பில் ஒட்டும் போதெல்லாம், அவை அறுங்கோண வடிவில் (hexagonal structure) சீராக வளரத் தொடங்கும். எப்படி வளர்கிறது என்பதைப் பொறுத்து, பனிக்கட்டியின் இறுதி வடிவம் முடிவாகிறது. ஜப்பானிய ஆய்வாளரான உகிச்சிரோ நகாயா (Ukichiro Nakaya) பனித்துளியின் வடிவம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார் (1900 – 1962). இவர் ஆயிரக்கணக்கான பனிக்கட்டிகளைப படமெடுத்து, அவை வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து எவ்வாறு வடிவம் பெறுகிறது என்பதைப் பதிவு செய்தார். இது இன்றளவும் பனித்துளி குறித்த ஆய்வுக்கு ஆணி வேறாக இருக்கிறது.அவரின் ஆய்வுப்படத்தையும் இங்கே தருகிறேன். இப்போது ஆயிரக்கணக்கான வகைகளில் பனித்துளிகள் வடிவம் பெறுகின்றன. தற்காலத்தில் கென்னத் லிப்ரே (Kenneth G Libbrecht) என்னும் ஆய்வாளர் பனியுலக ஆய்வில் முன்னோடியாக இருக்கிறார். அமெரிக்க கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். டிஸ்னியின் பிரபல “Frozen” திரைப்படத்தில் பனிக்கட்டிகள் எந்த உருவத்தில் இருக்க வேண்டும் என்பதை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இவரும் பல்வேறு புதிய பனி வடிவங்களைக் கண்டறிந்திருக்கிறார். இவ்வளவு மெனக்கெட்டு ஏன் பனித்துளியின் வடிவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்? முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா? இதன் வடிவம், ஈரப்பதம், வெப்பநிலை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது என்று... இப்போது நிலவில் ஊர்தி (rover) அனுப்பி நம்மால் படம்பிடிக்க முடிகிறது. அங்கே உள்ள பனித்துளியைப் படம்பிடித்தால், அங்கே என்ன மாதிரியான தட்பவெப்பம் நிலவியது என்று அறியலாம்தானே? மேலும், நம் மேகங்களின் பனித்துளி வடிவங்களைக் கணிப்பதன் மூலம் மழை பொழியுமா இல்லையா, தூசு அளவு எவ்வளவு இருந்தது, அதனால்தான் பனித்துளியின் வடிவம் இவ்வாறு உருவானதா? என்று பல்வேறு கேள்விகளுக்கு விடை காணலாம். ஓர் அறிவியலாளர், இதைக் கண்டுபிடிப்பதால் என்ன பயன் என்று யோசித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. “இது ஏன் இப்படி நடக்கிறது?” என்னும் ஆர்வத்தோடு இயங்கி, காரணிகளைக் கண்டுபிடிப்பதே போதும். இந்த உலகம் அதிலிருந்து தானாகப் பயனடைந்து கொள்ளும். ஹேமபிரபா இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்  “உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில்”  உதவிப் பேராசிரியராகப்  பணியாற்றி வருகிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக்  கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தோற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. சிறார்களுக்காக  இவர் எழுதிய “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல் பரவலான வாசகர்களைச்  சென்றடைந்து  பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே  அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார். தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

  • வாசித்தீர்களா? - நத்தை வீடு

    ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் தாய்தமிழ் பள்ளியில் “நத்தை வீடு” என்கிற சிறார் பாடல் தொகுப்பு நூல் வெளியீடு நடைபெற்றது. லாலிபாப் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை சமூக செயற்பாட்டாளர் பாவலர் கனல் அவர்கள் படைத்திருக்கிறார் என்பதறிந்தேன். பள்ளியின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்த நான் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.    நிகழ்வின் தொடக்கத்தில் அப்பள்ளி குழந்தைகள் நூலிலுள்ள சில பாடல்களை அழகான பாவனைகளோடு பாடிக் காட்டினர். குழந்தைகளுக்கு ஏற்ற எளிய சந்த நடையில் உருவாகியிருந்த அப்பாடல்களை தங்களின் வெளிப்பாட்டுத் திறத்தினால் இன்னமும் அழகாக்கி இருந்தனர் குழந்தைகள்.   பள்ளிக்கூடங்களின் கற்றல் சூழல்கள் முற்றிலும் மாறுபட்டுள்ள இத்தருணத்தில் எளிமையும் இனிமையும் கலந்து வெளிப்பட்ட இப்பாடல்கள் பங்கேற்பாளர்களிடம் நல்லதொரு உணர்வெழுச்சியை உருவாக்கியதை உணர முடிந்தது. எளிய வடிவத்தில் எத்தனை எத்தனை விசயங்களை எளிதாக குழந்தைகளிடம் கடத்திவிட முடிகிறது என்கிற எண்ணம் எழாதவர்கள் யாரும் அங்கிருந்திருக்க முடியாது. இதையே எதிர்பார்த்திருந்த பள்ளி தாளார் கு. ந. தங்கராசு அவர்களிடம் மகிழ்ச்சி பெருமிதம் கூடியிருந்தது.   புதியதன் வாசம் மறையாத அப்புத்தகங்கள் அனைத்தும் அங்கேயே விற்றுத் தீர்ந்தன. நானும் வாங்கி வந்திருந்த புத்தகத்தினை அன்றைய தினமே வாசித்து முடித்தேன். வாசிப்பின் இடைவெளியிலெல்லாம் பள்ளிக் குழந்தைகளின் பாவனைகள் நினைவில் முன்வந்து நின்றன. பழஞ்சோறு சாப்பிடும்போது கடித்துக் கொள்ளும் வெங்காயத் துண்டு போல் மனதில் சுவை கூட்டியது.   எளிமையான சந்த நடையில் தேர்ந்த சொற்களால் தொகுக்கப்பட்டிருந்தது இந்நூல். சிறார் பாடலுக்கென்றே உள்ள பொதுவான உள்ளடக்கங்களைத்தான் இந்த நூலும் பாடலாக்கி இருக்கின்றன என்றாலும் அதை சொல்லும் முறை ஈர்ப்பாகவே இருக்கின்றன. கறிக்குழம்பு, அறிவின் வளர்ச்சி, கணினி உலகம் என்கிற பல புதிய உள்ளடக்கங்களும் இல்லாமலும் இல்லை.   திருவிழா என்பதன் வடிவங்கள் இறுக்கமான பக்திநெறிக்கானதாக மாறிப் போயிருக்கும்போது உணவும் கொண்டாட்டங்களும் உறவுகளின் கூடுகையுமே திருவிழாவின் அடிநாதமாக விளங்கிய பண்பாட்டினை காட்டுக்குள்ளே திருவிழா … என்கிற பாடலில்   ……….. கறிசமைச்சு சாப்பிட்டதும் திருவிழாவும் முடிஞ்சுதாம்   என்கிற முடிவில் நன்றாகவே உணர்த்தியிருக்கிறார் பாடலாசிரியர்.   குழந்தைகளுக்கு பறவைகளும் விலங்குகளுமே உயிருள்ள பொம்மைகள். குழந்தைகள் எவ்வளவுதான் விலகியிருந்தாலும் அவர்களது உள்ளுணர்வில் எப்போதும் நிரம்பி இருப்பது அவைகள் தான். அறிந்த சொற்களில் எளிய ஓசையில் குழந்தைகள் விரும்பும் உலகம் ‘எங்க ஊரு கேணி’ என்கூறி பாடலில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பாடல்   எங்க ஊரு கேணியிலே தண்ணி இருக்குது   தண்ணிக்குள்ளே கெண்டை மீன்கள் நிறைய இருக்குது   ……………….. ……………….. ………………..   தண்ணி பாம்பு நாக்கை நீட்டி நீச்சல் அடிக்குது   நாங்கள் எல்லாம் குதிக்கும் போது ஓடி ஒளிது   -  என்பதாக முடிகிறது.   குழந்தைகள் பாடல்களில் கேள்வி பதில் வடிவம், கதை சொல்லும் வடிவம்  என பல உத்திகள் கையாளப்படுவது வழக்கம். இந்த தொகுப்பில் கேள்வி பதில் வடிவங்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும் சிறப்பாக கள்ளிப்பழம், கற்றுத் தந்தது யார்? மற்றும் நத்தை வீடு ஆகிய பாடல்கள் நல்ல உதாரணங்கள். வாசித்துப் பாருங்கள்.   குழந்தைகளுக்கானதாக இருந்தாலும்கூட “சிறார் பாடல்” என்கிற கலை வடிவம் சமூக சிந்தனை மாற்றங்களுக்கு வாய்ப்பானதாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பா… பா…. பிளேக் சிப், ரிங்க் ஆ ரிங்க் ஆ ரோஷஸ் ஆகிய பாடல்களை குறிப்பிடலாம். தமிழில் கூட பாரதியின் பாப்பா பாட்டு முதல் இன்று வரை பல உதாரணங்கள் உண்டு. இந்த நூலிலும் கூட சமூக மாற்றம் குறித்த பார்வை மாற்றம் ஏற்படுத்தும்படியான பாடல்கள் பல உள்ளன. புரிதலுக்காக ஒரு பாடலின் சில வரிகள்   உடைந்த ரோடு நான் பிறந்த போது போட்ட ரோடு ஒடஞ்சு கிடக்குது …..   கல்லு பேந்து குழி குழாய் தண்ணி தேங்குது   …. ரோட்டுக் குழியில் இடறி விழுந்து மண்டை உடையுது.   இப்படி மனம் ஈர்க்கும் நல்ல பாடல்கள் பல உள்ளன. குறைந்த சொற்கட்டுகளில் யாவரும் விரும்பும்படியாக எழுதப்பட்டுள்ள இந்நூலில் குழந்தை பாடல்களுக்கான நிறைய உத்திகள் பயன்படுத்தப்படாமல் விடுபட்டுள்ளது மட்டும் சிறு குறையாக உணர முடிந்தது.   நீங்களும்கூட இந்த நூலை வாசித்து உங்கள் பார்வையை மறக்காமல் பதிவிடுங்கள். க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று என்ற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொருப்பாளர்.

bottom of page