top of page

இயலில் தேடலாம்!

211 results found with an empty search

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 7

    1. ஏன் ஊர் ஊருக்கு வெயில், மழை என்று மாறிமாறி கிளைமேட் இருக்கு? - ஆதிரன், 2ஆம் வகுப்பு, கோவில்பட்டி. ஆதிரன் வணக்கம். நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்க கேட்டிருக்கிற கேள்விக்கான பதில் ரொம்பப் பெரிசு. அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். ஒரு நாளிலோ, சில நாட்களுக்கோ நீடிக்கும் வெயில், மழை, காத்து போன்றவற்றை Climate என்று சொல்லக் கூடாது. Weather-னுதான் ஆங்கிலத்தில் சொல்லணும். தமிழில் அதற்குப் பெயர் தட்பவெப்பநிலை. இந்த தட்பவெப்பநிலை ரொம்ப காலத்துக்கு எப்படி இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணினா, அதுதான் கிளைமேட் (காலநிலை). அதனால, ரெண்டு வார்த்தையையும் குழப்பிக்கக் கூடாது. சரி, இப்போ உங்க கேள்விக்கு வருவோம். இயற்கைல நிறைய விஷயங்கள் சுழற்சியின் அடிப்படையில்தான் காலம்காலமாக நடைபெற்று வருது. பருவகால மாற்றமும் (Seasonal Cycles) அப்படிப்பட்டதுதான். பொதுவா கோடை காலம், மழைக் காலம், குளிர் காலம்னு மூன்று வகை பருவங்கள் நமக்கு வரும். இன்னும் தெளிவா சொல்லணும்னா, நமது முன்னோர்கள் காலங்களை ஆறா பிரிச்சிருக்காங்க. ஜனவரி மாசத்துல முன்பனிக்காலம் தொடங்கினா பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம், கார்காலம், கூதிர்காலம்னு (குளிர்காலம்) டிசம்பர் மாசத்துல முடியும். ஏன் இப்படி காலங்கள் வேறுபடுது? ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கிற நமது பூமி சூரியனை சுத்தி வருது. ஆனா, இப்படிச் சுத்தும்போது, அது சாதாரண பந்து மாதிரி சுத்தல. ஆரஞ்சுப் பழத்தோட நடுவுல ஒரு கம்பிய செருகி, அதை 23.5 டிகிரி சாய்வுக்கு சாய்ச்சா எப்படி இருக்கும்? பூமியும் அப்படித்தான் சாஞ்சுக்கிட்டே சூரியனை சுத்தி வருது. இப்படி சுத்தும்போது பூமி மேல இருக்கும் நிலப்பகுதிகள் சிலவற்றுக்கு, ஆண்டின் சில மாதங்களுக்கு சூரிய வெப்பம் கம்மியா போய் சேரும். இதனால அந்தப் பகுதிகள்ல குளிர் அதிகமா இருக்கும். அதேநேரம் சில பகுதிகள் மேல சூரிய ஒளி அதிகமாக படும். அப்ப அங்க வெப்பம் அதிகமா இருக்கும். பூமியின் வட பகுதிகள் குளிரா இருக்கும்போது, தெற்கு பகுதிகள் வெப்பமாகவும், பின்னர் அப்படியே தலைகீழா மாறியும் இருக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்துல இயற்கை நீர் சுழற்சி பற்றி படிச்சிருப்போம். அதாவது நீர்நிலைகள்ல இருக்கும் நீரை, வெப்பம் ஆவியாக்கும். இந்த நீராவி மேல போகும். அந்த நீராவி ஒன்னுசேர்ந்து மேகமாத் திரளும். மேகத்தில் நீராவி சுருங்கி மழைத்துளிகள் உருவாகும். மழையா பெய்யும். இதுவே பருவமழை காலம் என்றால் மழை அதிகமாகப் பொழியும். சரி அதுக்காக மழை, குளிர் காலத்துல வெயில் அடிக்காதா? அடிக்கும். அடிச்சாலும் வெயில் அதிகமா இருக்காது, வெயில் அடிக்கும் நாட்களும் இந்தக் காலத்துல குறைவா இருக்கும். சரி, கோடை காலத்துல மழை பெய்யாதா? அரிதா கோடை மழை பெய்யும். அதேநேரம் நிறைய நாள் வெப்பமா இருக்கும். நம்ம ஊரோட தட்பவெப்பநிலை குறிப்பிட்ட காலத்துக்கு வெப்பமாவும் குறிப்பிட்ட காலத்துக்கு மழையாவும் இருக்கிறதுக்கு அடிப்படைக் காரணம் பூமி சாய்வா இருக்கிறதுதான். அத்துடன் காத்து, மழை, பருவமழை, புயல் போன்றவையும் தட்பவெப்பநிலையை தீர்மானிக்கிறதுல தாக்கம் செலுத்துகின்றன. பூமியின் இயற்கைச் சமநிலை, இயற்கை சுழற்சிகள் தொந்தரவுக்கு உள் ஆகாம முறையா இருக்கிறப்ப, இதுல பெருசா எந்தப் பிரச்சினையும் வர்றதில்ல. அதேநேரம், ஒரு நாள் மழையும் ஒரு நாள் வெயிலும் மாறிமாறிக்கூட வரலாம். ஒரு ஊருல மழையும், பக்கத்து ஊருல மழை இல்லாமலும் இருக்கலாம். மழை மேகங்கள் ஒன்றுதிரளும்போது அவை ரொம்பப் பெரிசா இல்லாவிட்டால் சூரிய வெப்பம், பெரிய காற்றடிக்கும்போது மேகம் நகர்ந்துசென்றுவிடும். அதேநேரம் மழை மேகம் ரொம்ப அடர்த்தியா இருந்தா, சூரிய வெப்பம், காற்றால ஒன்னும் செய்ய முடியாது. காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் போன்றவை உருவாகும்போது நிறைய மேகங்கள் ஒரு பகுதில திரண்டுவிடும். சூரிய வெப்பமோ, சாதாரண காற்றோ அதை நகர்த்திவிட முடியாது. இதனால் அடுத்தடுத்து பல நாட்களுக்கு மழை பெய்யும். பக்கத்துப் பக்கத்து ஊர்கள்லயும் மழை பெய்யும். பல நாட்களுக்கு சூரிய வெப்பத்தையே பார்க்க முடியாமல் போகும்.

  • குட்டிப்பூ சொன்னது என்ன?

    கோடை விடுமுறை நாட்களில் மாயா எப்பொழுதும் தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஊரில் தாத்தா வீட்டை சுற்றி ஒரு அழகான பூந்தோட்டத்தை அமைத்துள்ளார். அதில் பூக்கள் அழகழகாய் கொத்து கொத்தாய் பூத்து குலுங்கும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியை தரும். அதிலிருந்து ஒரு பூவை தன் தலையில் வைக்க வேண்டும் என்று பல நாள் ஆசை மாயாவுக்கு இருந்தது ஏனென்றால் அவளது தாத்தா  யாரையும் பூக்களைத் தொட அனுமதிக்க மாட்டார்.  இன்று எப்படியாவது  ஒரு பூவை பறித்து தன் தலையில் வைத்து விட வேண்டும் என்று உறுதியுடன் ஊருக்கு வந்து சேர்ந்தாள்.வீட்டில் அனைவரும் உறங்கும் நேரமாய் பார்த்து மெதுவாக பூந்தோட்டத்தை நோக்கி நடந்தாள்அங்கே அவளைக் கவரும் விதமாக ஒரு அழகான குட்டி பூ ஒன்று தனியாக தெரிந்தது.மெல்ல நடந்து அந்தப் பூவை பறிக்க பார்த்தாள். அப்பொழுது அந்த குட்டிப்பூ தன் கீச் குரலில் கத்தியது.   "ஐயோ வேண்டாம் என் குடும்பத்து கிட்ட இருந்து என்னை பிரிச்சிறாத" இதைக் கேட்ட மாயா மிகவும் ஆச்சரியமடைந்தாள். "குட்டிப் பூவே நீயா இப்ப பேசுன?"என்று கேட்டாள்  "ஆமாம் நான்தான் பேசினேன்"என்றது குட்டிப் பூ  "சரி நான் உன்ன பறிக்காம இருக்கணும்னா அதுக்கான காரணத்தை நீ சொல்லு"என்று மாயா கேட்க சற்றே குட்டி பூ அதிர்ந்தது. பிறகு நன்கு யோசித்தபின்  "உனக்கு தேன் பிடிக்குமா?" "ஓ! புடிக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்" "ஆ.. நீ விரும்பி சாப்பிடுற தேன் உற்பத்தியாக காரணமே நான் தான்" ஆச்சரியத்தில் மூழ்கிய மாயா "எப்படி?"என்று கேட்டாள். "ஆமாம் என்னிடமிருந்து தான் தேனை எடுத்து தேனீக்கள் சேமித்து வைக்கும் அதை மனிதர்கள் நீங்கள் எடுத்து சாப்பிடுவீர்கள்" "ஓ அப்படியா! அப்படின்னா சரி  நான் உன்னை பறிக்க மாட்டேன்"என்று கூறிய உடன் குட்டிப் பூ மிக மகிழ்ச்சியுடன் துள்ளியது அதன் பிறகு ஊருக்கு வரும்போதெல்லாம் குட்டிப் பூ மட்டுமின்றி தோட்டத்தில் இருந்த அனைத்து பூக்களையும் தன் தாத்தாவோடு பராமரித்தாள்.  தயவு செய்து யாரும் மாயாவோட தாத்தா வளக்குற பூந்தோட்டம் பக்கம் போகாதீங்க நீங்க பூவப் பறிக்க வரீங்க நினைச்சு மாயா கோவிச்சுப்பா ஆமா! மீனா மீனா சென்னை மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் இவருக்கு சிறுவயதில் இருந்தே கதை எழுதவும் கதை புத்தகங்கள் படிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது பத்து சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் என்ற நூலை நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார் விரைவிலேயே இவருடைய நாவல் ஒன்று வெளிவர இருக்கிறது.

  • அலெக்ஸாந்திரியா நூலகம்

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியது எகிப்திய நாகரீகம். நைல் நதியின் இருமருங்கும் வளர்ந்த எகிப்திய நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருந்தது. சிலகாலம் பாரசீக ஆட்சிக்குள் சிக்கிய எகிப்தை மாவீரன் அலெக்ஸாண்டர் கி. மு. 332-ல் மீட்டுத் தனது இராச்சியத்தின் கீழ் கொண்டுவந்தான்; எகிப்திய அரசனாகவும் (ஃபாரோ) முடிசூட்டப் பட்டான். அலெக்ஸாண்டரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ரக்கோட்டிஸ் ஏரிக்கும் மத்தியதரைக்கடலுக்கும் நடுவே அமைந்த பூசந்தி  நிலப்பகுதியில் கட்டப்பட்ட நகரமே அலெக்ஸாந்திரியா. கனோப்பஸ் என்னும் நைல் நதியின் கிளைநதி அங்கே ஓடிக்கொண்டிருந்தது. மேற்குப்பகுதியில் அமைந்த கடைசிக் கிளைநதி அது. சில வருடங்கள் கழித்து அலெக்ஸாண்டர் இறந்துவிட, அவன் வென்ற நாடுகளை அவனது தளபதிகள் பிரித்துக் கொண்டனர். எகிப்தின் ஆளுகை அலெக்ஸாண்டரின் ஒரு தளபதியான தாலமி-யிடம் வந்து சேர்ந்தது. தாலமியும் அவனைத் தொடர்ந்து வந்த தாலமி வம்சத்தினரும் சுமார் முன்னூறு ஆண்டுகள் எகிப்தை ஆட்சி செய்தார்கள் . மாசிடோனியர்கள் ஆண்ட எகிப்தின் தலைநகரமாக அலெக்ஸாந்திரியா விளங்கியது. தாலமி வம்சத்துக் கடைசி அரசர் கிளியோபாட்ரா.  போர்ப்படைகளையும், ஆயுதங்களையும் அரண்மனைகளையும் கட்டியதோடு மட்டும் அல்லாமல் மனித அறிவாலும் ஆராய்ச்சியாலும் பகுத்தறிக் கருவி கொண்டு கட்டப்பட்ட நகரம் அலெக்ஸாந்திரியா. கிரேக்கத்தில் எழுச்சி பெற்றிருந்த தத்துவக் கொள்கைகளையும் அறிவுசார் நூல்களையும் அறிந்திருந்த முதலாம் தாலமி (தாலமி சோட்டர்) அலெக்ஸாந்திரியாவையும் கற்றறிந்த அறிஞர்களால் நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். அலெக்ஸாண்டரும் தாலமி சோட்டரும் கிரேக்கத்தின் தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் பயின்றவர்கள். அரிஸ்டாட்டிலின் மறைவுக்குப் பிறகு அவரது சீடர் தியோஃப்ரேஸ்டஸ், அவரது கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். தாலமி சோட்டர் தனது மகனுக்கு ஆசிரியராக இருக்கும்படி தியோஃப்ரேஸ்டஸைக் கேட்க, அவர் அதனை மறுத்து, தனது சீடர் டெமிட்ரியஸை அலெக்ஸாந்திரியாவுக்கு அனுப்பி வைத்தார்.  ‘உலகில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களும் அலெக்ஸாந்திரியாவில் இருக்க வேண்டும்’ என்பதே தாலமி சோட்டர் டெமிட்ரியஸிடம் இட்ட கட்டளை. கிரேக்கத்திலிருந்து பல்துறை அறிஞர்களும் அலெக்ஸாந்திரியாவுக்கு வருகை தர, ஆராய்ச்சிகளுக்கென ஒரு கல்விக்கூடம் போல ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் புத்தகங்கள் சேரத்துவங்கின. அந்தக் காலத்துப் புத்தகங்கள் ஓலை நாணல் செடியான பாப்பிரஸ் தண்டுகளால் செய்யப்பட்டு பாப்பிரஸ் சுருள் புத்தகங்களாக எழுதப்பட்டன. கிரேக்க மொழியிலேயே பெரும்பாலான நூல்கள் எழுதிவைக்கப் பட்டன. சில எகிப்திய மொழி நூல்களும் சேர்ந்தன. அரண்மனையை ஒட்டி அமைக்கப்பட்ட அந்த நூலகத்தின் உள்ளும் புறமும் எண்ணற்ற தூண்கள் விண்ணைத் தொட்டன. கடவுளரின் சிலைகள் ஒவ்வொரு மூலையிலும் அணிவகுத்தன. ‘பிப்லியோதெக்கை’ என்றழைக்கப்பட்ட முக்கிய அறைகளில், செவ்வக மர அலமாரிகளில் பாப்பிரஸ் சுருள்களில் புத்தகங்கள் சேமித்து வைக்கப் பட்டன. தனது காலத்திலேயே டெமிட்ரியஸ் இரண்டு லட்சம் பாப்பிரஸ் சுருள்களைச் சேர்த்து வைத்தார் இந்த நூலகத்தில்.  தாலமி சோட்டரின் மரணத்துக்குப் பிறகு மன்னனான அவனது மகன் இரண்டாம் தாலமி (தாலமி ஃபிலடெல்ஃபஸ்) நூலகத்தை விரிவுபடுத்தி, மேலும் அதிக நூல்கள் சேர்க்கத் தலைப்பட்டான். பிற நாடுகளிலிருந்து வந்த நூல்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டு,  மூலப்புத்தகம் நூலகத்தில் வைக்கப்பட்டது; பிரதி எடுக்கப்பட்ட புத்தகம் திருப்பித் தரப்பட்டது. அந்த நூலகத்தில் ஏறத்தாழ நான்கு லட்சம் பாப்பிரஸ் சுருள்களுக்கும் மேல் இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்வி கற்பதற்கும் ஆராய்ச்சிகள் செய்வதற்கும் பல நாடுகளிலிருந்தும் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் குவிந்தவண்ணம் இருந்தனர். கிரேக்க இலக்கியம், தத்துவம், எகிப்திய வரலாறு, கணிதம், மருத்துவம், வானியல், புவியியல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வகைப்பட்ட நூல்கள் இங்கே இருந்தன. மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த எகிப்திய வரலாறு மானெத்தோ என்பவரால் எழுதப்பட்டது. இன்றும் அது பயன்படுத்தப்படுகிறது. கணிதமேதை ‘யூக்லிட்’  வடிவியல், வட்டம், அளவியல், எண்கள், இருபடி மூலம், பரும வடிவியல் தோற்றங்கள் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதி வைத்தார். எரட்டாஸ்தெனிஸ் எனும்  பல்துறை அறிவாளர் கணிதவியல், புவியியல் மற்றும் புவியளவீட்டியலில் ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் எழுதி வைத்தார். பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டுச் சொன்னவர் எரட்டாஸ்தெனிஸ் ஆவார். சைரீன் நகரத்திலிருந்து வந்த அறிஞர் கல்லிமாச்சஸ் இந்த நூலகத்தின் நூலகராக இருந்தபோது (கி.மு 240) இங்கிருக்கும் நூல்கள் அனைத்தையும் பற்றிய அட்டவணையை உருவாக்கி வெளியிட்டார். மருத்துவத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து உடலியல், உடற்கூற்றியலில் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துப் பதிவு செய்த ஹெரோஃபிலஸ் மற்றும் எராசிஸ்றேட்டஸ், இலக்கிய ஆய்வுகள் செய்து கவிதைகள், இலக்கிய நூல்கள் வெளியிட்ட அப்போலொனியஸ் மற்றும் அரிஸ்டார்சஸ், கிரேக்க மொழி இலக்கண ஆய்வுகள் செய்த அரிஸ்டோஃபேன்ஸ் என்று கணக்கிடவியலாத பல அறிஞர்களும் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்து வந்தனர். முன்னூறு ஆண்டுகளாக அலெக்ஸாந்திரிய நூலகம் அறிவுத்தேடல் செய்ய வந்த அனைவருக்கும் பயன்பட்டு வந்தது.  கி.மு. 48-ல் ரோமாபுரியின் ஜூலியஸ் சீஸர் அலெக்ஸாந்திரியாவைத் தாக்கியபோது, தனது கப்பல்களைக் காப்பாற்றுவதற்காக, துறைமுகக் கிடங்குகளில் தீவைத்தான். அந்தத் தீ அருகிலிருந்த கட்டடங்களுக்குப் பரவி, நூலகத்தின் காப்பகப் பகுதியில் இருந்த பெரும்பாலான பாப்பிரஸ் சுருள்களை எரித்து அழித்தது. இருப்பினும் நூலகம் தொடர்ந்து இயங்கியது. முன்னூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரோமாபுரியின் பேரரசன் ஆரெலியன், அலெக்ஸாந்திரியாவைக் கைப்பற்ற நடந்த போரில் நூலகத்தின் முக்கியக் கட்டடப் பகுதி சேதமடைந்து பெரும்பாலான நூல்கள் அழிந்து விட்டன. பதவியாசை பிடித்த அற்ப மனிதர்களின் செயலால் அற்புதமான புத்தகங்களும், வரலாறும், அறிவு நூல்களும் அழிந்து போய்விட்டன.  எத்தனையோ நூலகங்கள் பின்னர் வரலாற்றில் தோன்றிப் புகழ் பெற்றிருந்தாலும் உலகில் முதன்முதலில் தோன்றி எண்ணற்ற நூல்களால் நிரம்பியிருந்த அலெக்ஸாந்திரியாவின் நூலகத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கிறது.    எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’  ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • இருபெரும் விழா

    குழந்தைகள் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் (நவம்பர் 7) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும் என தசிஎகச மாநிலத் தலைமையால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலினை தொடர்ந்து, நெல்லை மாவட்டக் கிளை சார்பில் ஆசிரியர் திரு. துரை பாண்டியன் அவர்களை (தமுஎகச வி.மு.சத்திரம் கிளை பொருளாளர்) அணுகினோம். அரசுப் பள்ளி ஆசிரியரான திரு. துரை பாண்டியன் அவர்கள் பணிபுரியும் அனவரதநல்லூர் அரசுப் பள்ளியில், அழ. வள்ளியப்பாவை நினைவுகூர்ந்து கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, சிறார் பாடல்கள், பேச்சுப் போட்டி என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவும், தமுஎகச (வி.மு. சத்திரம் கிளை) சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இணைந்து இன்று (11.12.2025) பள்ளி வளாகத்தில் இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கர நாரயணன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக • தமிழ் எக்கோஸ் திரு. மு. வெங்கட்ராமன் • தமுஎகச வி.மு. சத்திரம் கிளைத் தலைவர் திருமதி சத்தியா •சமூக சேவகர் மற்றும் தசிஎகச நெல்லைக் கிளை முன்னாள் செயலாளர் திரு. சுரேஷ் • தசிஎகச நெல்லைக் கிளைத் தலைவர் திரு. தேவர்பிரான் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி நிகழ்வை சிறப்பித்தனர். ஆசிரியர் திரு. துரை பாண்டியன் விழா நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் என மொத்தம் 12 பரிசுகள் தசிஎகச நெல்லைக் கிளை சார்பில் வழங்கப்பட்டன. தனிச்சொற்பொழிவாக இல்லாமல், மாணவர்களுடன் நேரடியாகப் பேசும் கலந்துரையாடல் முறையில் திரு. வெங்கட்ராமனும் திருமதி சத்தியாவும் நிகழ்வை உயிரோட்டமாக வழிநடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது குறித்து இன்றைய தினம் ஆலோசனை நடைபெற்றது. மேலும், விழாவின் இறுதியில், இதுபோன்ற கல்வி-கலாச்சார நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துவது குறித்தும், உலகத் திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. (தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இதைப் பின்பற்றி வருகிறது. திரு. வெங்கட்ராமன் இதை ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய முன்னோடி ஆவார்.) விழாவைத் தொடர்ந்து, நன்செய் நிறுவனத்திலும் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பில் மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 85% பெண் ஊழியர்கள் பணியாற்றும் இந்நிறுவனத்தில், “பெண்கள் ஏன் பாரதியாரை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் நாளைத் தங்கள் கருத்துகளை பகிர வேண்டும் என அறிவுறுத்தி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற, பாகுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்க குழந்தைகளுடன் தொடர்ந்து பேசுவோம்; கற்போம்; கற்பிப்போம்!

  • மலரின் மொழி

    அழகான பூந்தோட்டம். அங்கே விதவிதமான மலர்கள் இருந்தன. டிக்கா தான் அங்கே இருப்பதிலேயே பெரிய பூ. அது ஒரு செங்காந்தள் மலர். அந்த தோட்டத்திற்கு நிறைய தேனீக்கள் தேன் சேகரிக்க வரும். சுக்கா அன்று தான் தேன் சேகரிக்க முதன்முதலாக வந்தது. அதனோடு வந்த தேனீக்கள் எல்லாம் சரியான தேன் இருக்கும் பூக்களில் அமர்ந்து அழகாக தேனை சேகரித்தன. சுக்கா தேன் சேகரிக்கச் செல்லும் போது சில பூக்களின் நிறங்கள் மாறின. எதற்காக அப்படி மாறுகிறது என்பது சுக்காவிற்கு குழப்பமாகவே இருந்தது. சுக்கா வரிசையாக ஒவ்வொரு பூவாக சென்று அமரும். அதில் சிலவற்றில் தேன் இருக்கும் சிலவற்றில் இருக்காது. மற்ற தேனீக்கள் எப்படி சரியாக தேன் இருக்கும் மலர்களின் சென்று அமர்கின்றன எனவும் அதற்கு புரியவே இல்ல. இன்றைய நாள் சுக்காவிற்கு சரியாக அமையவில்லை. அது தேனெடுக்க அமர்ந்த மலர்களில் ஒன்றில் கூட தேன் இல்லை. சுக்கா சோர்வாக அமர்ந்தது. அப்போது அதன் அக்கா ஜிக்கா வந்து அமர்ந்தது. "சுக்கா தேன் சேகரிக்காம ஏன் இங்க உக்காந்திருக்க? ஏன் சோகமா இருக்க? என்கிட்ட சொல்லு" "எந்தப் பூவும் எனக்கு தேன் கொடுக்க மாட்டேங்குது. நான் பூகிட்ட போகறப்பல்லாம் அந்த பூக்கள் வேற நிறத்துக்கு மாறுது. எனக்கு ஏன் இப்படி நடக்குது" என சோகமாக சொன்னது சுக்கா. "என்னோட வா" என சுக்காவை டிக்காவிடம் அழைத்துப் போனது. "டிக்கா என் தங்கைக்கு சொல்லிக் கொடு" என்றது ஜிக்கா. "என்ன பூ பேசுமா?" என ஆச்சரியமாக கேட்டது சுக்கா. "சுக்கா, உன்னை சுத்தி நல்லா கவனி. பூக்கள் தேன் மட்டும் கொடுக்கறதில்லை. அவங்களோட மொழிய புரிஞ்சிக்க முயற்சி செய்" என பறந்து சென்றது ஜிக்கா. சுக்கா, "என்ன பூக்கள் பேசுமா? அத புரிஞ்சிக்கனுமா?" என யோசித்தது. அப்போது டிக்கா ஒளிர்ந்தது. அதன் கதகதப்பான ஒளி சுக்காவை ஈர்த்தது. அது டிக்காவிடம் போய் தேனை உறிஞ்சியது. அதன் பின் சுக்கா மலர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தது. சுக்காவை கண்டதும் நிறம் மாறும் மலர்களாக சென்று தேன் எடுக்க முயன்றது. தேனே இல்லை. நிறம் மாறாமல் அழகாக புதிதாக தோன்றும் மலர்களில் சென்று அமர்ந்தால் தேன் கிடைத்தது. புத்திசாலி மலர்கள். அவற்றில் இருந்து ஒரு தேனீ தேனை எடுத்துக் கொண்டால், தம்மை நோக்கி வரும் பிற தேனீக்களை வராதே என சொல்வதற்காக நிறம் மாறுகின்றன. இந்த இரகசியத்தைக் கண்டுபிடித்ததும் சுக்கா மிகவும் மகிழ்ச்சியடைந்தது. சுக்காவைக் கண்டதும் நிறம் மாறும் பூக்கள் அருகே வராதே என சொல்வது புரிந்ததால், அவற்றின் அருகே சென்று  நேரத்தை வீணாக்காமல் புதுப்புது பூக்களைத் தேடி பறந்தது சுக்கா. "சுக்கா சுக்கா நீ மட்டும் எப்படி இவ்வளவு வேகமா தேன் சேகரிக்கிற எனக் கேட்டது சுக்காவின் தங்கை தேனீ. அதன் பெயர் பக்கா. பக்காவை அழைத்துக் கொண்டு போய் டிக்காவிடம் நிறுத்தியது சுக்கா.  ராஜலட்சுமி நாராயணசாமி

  • புத்தகமூட்டையைக் குழந்தைகளின் முதுகில் ஏற்றாதீர்கள் – கார்த்திகா கஜேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரிமித்ரா பள்ளிக்குழுமம் ராஜபாளையம்.

    மித்ரா கல்விக் குழுமம் ஆரம்பிக்கும் எண்ணம் எங்கிருந்து தோன்றியது? விப்ரோவில் ஹெச். ஆராக வேலை செய்து கொண்டிருந்தேன். 2015ல் என் மகள் சாரு பிறந்தாள். மகள் பிறந்த ஒரு ஆறு மாசம் எனக்கு வீட்ல இருக்க வேண்டிய சூழல். என்னோட மகளைக் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அந்த மாதிரி ஒரு வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.  எப்படியாவது வேலைக்கு போகணும் என் வாழ்நாள் முழுவதும் நான் சம்பாதிச்சுக்கிட்டே இருக்கணும் என்று நான் நினைத்தேன்.  அந்த நேரத்தில் தான் ஒரு பள்ளி தொடங்கலாம் என்று எனக்கு ஒரு யோசனை வந்தது.  ஓசூரில் இரண்டு வருடங்கள் ஒரு பள்ளியில ஆசிரியராக வேலை பார்த்த அனுபவம் அதற்குக் கை கொடுத்தது.  மித்ரா மாண்டிசோரி பள்ளி தொடங்கினேன். அதன் பிறகு  மற்றொரு இடத்தில் அடுத்த  மாண்டிசோரி பள்ளி தொடங்கினேன். ஒவ்வொரு பகுதிக்கும் தேவை இருந்தது. அதன் அடிப்படையில் தொடங்கினேன்.  இது மித்ரா கல்விக் குழுமமாக மாறியது. வீட்டுப்பாடம் இல்லாத பள்ளி என்ற முறையை தங்கள் பள்ளியில் கொண்டு வர காரணம் என்ன? அதுக்கு காரணம்  என்னுடைய மகள் தான். ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து வந்து ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாள்.  'என்னடா லட்டு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய்?' என்று நான் கேட்டேன்.  பேக் எடுத்துட்டு போகாம நான் பள்ளிக்கூடம் போன மாதிரி எனக்கு கனவு வந்ததுங்க அம்மா.’ என்று அவள் கூறினாள். அது ஒரு சாதாரண விஷயம் தான் ஆனால் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பெரியவங்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். ஆனால் இவ்வளவு சின்னக் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனையா? என்று நான் நினைத்தேன்.  பேக் எடுத்துக்கொண்டு செல்வது குழந்தைகளுக்கு  ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போதிருந்தே என் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் ஒரு தொடக்கப்பள்ளியை வாங்கினேன். வீட்டுப்பாடம் இல்லாத ஒரு பள்ளியாக இந்தப் பள்ளியை செயல்படுத்தலாம் என்ற யோசனை தோன்றியது. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது புத்தக மூட்டை.  வீட்டு பாடம் இல்லை என்றால் புத்தகமூட்டைகளைக் குழந்தைகள் சுமந்து திரிய வேண்டியது இல்லை. இது எவ்வளவு பெரிய விடுதலை. அவங்களுக்கு தேவையான மதிய உணவை, தண்ணீர் மற்றும் ஸ்னாக்ஸ் மட்டும் ஒரு சிறு பேகில் எடுத்து வந்தால் போதும். இதற்கு மையப்புள்ளி என்று சொன்னால் ஒரு குழந்தையின் ஏக்கம்தான். என் மகள் கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி தான் இது.  இதுபோன்ற பள்ளி வேறு ஏதாவது செயல்படுகிறதா?  தமிழ்நாட்டுல திருவண்ணாமலை கோயம்புத்தூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதுவரை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு வரவில்லை. ஆனால் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது இதுவரை எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். அதை நாங்கள் எங்கள் பள்ளியில் செயல்படுத்தி வருகிறோம். இந்த புதுமையான முறைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு இருக்கிறது? இந்த முறையை ஆரம்பத்தில் பெற்றோர்களுக்குப்  புரிய வைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். ஹோம் ஒர்க் இல்லாமல் பிள்ளைங்க எப்படி நல்லாப் படிப்பாங்க? எப்படி சிலபஸ் முடிப்பீங்க? எப்படி டெஸ்ட் வைப்பீங்க? இப்படி ஆயிரம் கேள்விகள் பெற்றோரிகளிடமிருந்து வந்தன.  இது மற்ற பள்ளிகள் போல எட்டு பீரியட்ஸ் இருக்கிற பள்ளி கிடையாது. இது ஒரு மாண்டிசோரி பள்ளி. இதில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும். அதை அவர்களை வாசிக்க வைத்து, அது சார்ந்த செயல்பாடுகளைக் கொடுத்து ஆசிரியர்கள் உடனிருந்து  இவற்றைச் செய்ய வைப்பார்கள். இதுபோன்று அவர்களோடு தொடர்ந்து உரையாடினேன். உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும் கூட சில பெற்றோர்கள் வீட்டுப்பாடம் வேண்டும் என்று கேட்பார்கள். அப்படித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்காக ஒன்றோ இரண்டோ கொடுப்போம். அதுவும் கண்டிப்பாக செய்து வர வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதில்லை.  ஆனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வீட்டிற்கு ரிலாக்ஸாகப் போகிறார்கள். பள்ளிக்கூடத்துக்கு ரிலாக்ஸாக வருகிறார்கள். ஒன்று வீட்டு பாடம் செய்ய தேவையில்லை. இரண்டாவது புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இருந்தால் யாருக்குத் தான் மகிழ்ச்சியாக இருக்காது? வீட்டுப்பாடம் செய்யும் அந்த நேரத்தை தங்களுடைய தனி திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். பெற்றோர்களும் அதை மகிழ்வோடு கூறி இருக்கிறார்கள். குழந்தைகளும் கூறி மகிழ்ந்திருக்கிறார்கள்.  தங்களின் சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து கவனித்து வந்த வகையில், விளையாட்டு, நாடகம், மேடைப்பேச்சு, புத்தக வாசிப்பு மற்றும் கதை சொல்லல் உள்ளிட்ட பல கற்றல் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொடுக்கும் புதுமையான கல்வி முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை அறிய முடிந்தது. இவை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை எல்லா குழந்தைகளும் அறிவாளிகள் தான். ஆனால், எந்தக் குழந்தை கேள்வி கேட்கிறதோ அந்தக் குழந்தையை அறிவாளி என்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் கேள்வி கேட்பதில்லை. அப்படிக் கேள்வி கேட்பதற்குத் தடையாக இருப்பது அவர்களிடம் தைரியம் இல்லாததுதான்.   குழந்தைகளில் இரண்டு வகை ஒன்று தைரியம் இருக்கும் குழந்தை. மற்றொன்று தைரியம் இல்லாத குழந்தை. ஒரு குழந்தைக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்றால் இது எனக்குப் புரியவில்லை சொல்லிக் கொடுங்கள் என்று  எழுந்து கேட்பதற்கு தைரியம் வேண்டும். அந்த தைரியம் வந்து விட்டாலே போதும். முதலில் தைரியத்தை வளர்க்க பயத்தை உடைக்க வேண்டும். அதற்கு ஒரு பயிற்சி தேவைப்பட்டது. அந்த பயிற்சிதான் மேடைப்பேச்சு, புத்தக வாசிப்பு, நாடகம் நடிக்க வைத்தல் மற்றும் கதை சொல்லல் உள்ளிட்ட ஏராளமான செயல்பாடுகள். இவை அனைத்துமே குழந்தைகள் பத்து இருபது பேருக்கு முன்னால் நின்று பேசுவதற்கான பயிற்சி.  எங்களுடைய பள்ளியில் ஒன்றரை வயதில் இருந்தே இதைத் தொடங்கி விடுவோம். பிரைமரி வரை அது தொடரும். ஒரு குழந்தைக்கு ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் தேவை. ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் என்பது கல்வி மற்றும் திறன்களை மட்டும் சார்ந்து இருக்காமல் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சமூகத்தை புரிந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றைச் சேர்ந்ததுதான். இப்படியான  குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் மித்ரா கல்விக் குழுமத்தின் நோக்கம்.  கதைகள் குழந்தைகள் உலகில் என்னவாக இருக்கிறது? மிக அழகான கேள்வி. நான் பார்த்த வரைக்கும் குழந்தைகள் தினமும் கதை சொல்கிறார்கள். கதை சொல்லாத நாளே கிடையாது. தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பெரியவர்கள்தான் கதை சொல்ல மிகவும்  யோசிக்க வேண்டும். ஆனால் ஸ்பான்ட்டனியஸாக குழந்தைகள் கதை சொல்கிறார்கள். குழந்தைகள் கதை கூறும் போது நான் ஒன்றைக் கூர்ந்து கவனித்தேன். அவர்கள் மிகவும் ரிலாக்ஸகிறார்கள். கதை சொல்லச் சொல்ல ஏதோ பாரம் குறைந்தது போல் உணர்கிறார்கள். சில நேரங்கள்ல அந்தக் கதைக்குள் நிறைய  இமேஜினேஷன் இருக்கும். நிறைய கிரியேட்டிவிட்டி இருக்கும். சில நேரங்களில் நியூ கிரியேஷன் இருக்கும். இதை நாம் பில்டப் என்று சொல்லுவோம்.  சாதாரணமான ஒன்றை குழந்தைகள் ரொம்பப் பெரிது பண்ணிச் சொல்லுவாங்க.  கேட்கவே ரொம்பக் கியூட்டாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து கதைகளைப் பிரிக்கவே முடியாது. குழந்தைகள் வேறு கதைகள் வேறு கிடையாது. குழந்தைகளும் கதைகளும் ஒன்று தான். ஒரு எக்சைட்மென்ட் அப்படின்னு சொல்லலாம்.  குழந்தைகளுக்கு ஒரு ரொட்டீன் இருக்கு காலைல எழுந்திருக்கணும், குளிக்கணும், பிரஷ் பண்ணனும், ஸ்கூலுக்கு வரணும், சாப்பிடணும் மற்றும் படிக்கணும் இதையெல்லாம் தாண்டி கதைகள் என்று வந்துவிட்டாலே அது அவர்களுக்கு ஒரு ரெப்ரஷ்மெண்ட்போலத்தான். ஏனென்றால் இது அந்த ரொட்டீன்ல் இருந்து வேறுபடுகிறது. கதைகள் மட்டுமே குழந்தைகளை மனிதத்தன்மையோடு இயங்க வைக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் கவனித்த வரையில் பெரும்பான்மையான கதை சொல்லிகள் குழந்தை மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இளமையாகவும் இருக்கிறார்கள். அதற்கு கதைகளும் குழந்தைகளுமே காரணம் என்று நினைக்கிறேன்.  சமூகப் பொறுப்பு மிக்க இந்தப் பணியில் தங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது? ஒரு பெண் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் வீட்டு வேலைகளை முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும். ஆனால் எங்கள் வீட்டில் நான் ஒன்றைச் செய்கிறேன். நீ ஒன்றைச் செய்துவிடு என்று பங்கிட்டுக் கொள்வோம். என்னுடைய குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம்.  என் கணவர் சில வேலைகளைச் செய்வார். என்னுடைய அம்மா சில வேலைகளைச் செய்வார். என்னுடைய அப்பா சில வேலைகளைச் செய்வார். நாங்கள் எல்லோரும் அதை எங்களுடைய பொறுப்புகளாகப் பார்க்கிறோம். வேலையாகப் பார்க்கவில்லை. அதனால் வீட்டு வேலை எந்த வகையிலும் என்னுடைய பள்ளிக்கூட வேலைகளுக்கு ஒருபோதும் தடையாக  இருந்ததில்லை. காலை 9 மணிக்கு அனைத்து வேலைகளையும் முடித்து விடுவோம். என்னுடைய பள்ளி சார்ந்த அகாடமிக் மேனேஜ்மென்ட் வேலைகள் எல்லாம் நானே பார்த்துக் கொள்வேன். வீட்டில் இவ்வளவு சப்போர்ட் இல்லையென்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. தொடர்ந்து கல்வி சார்ந்து சிந்திக்கவும் முடியாது. புதுமையான ஒன்றை யோசிக்கிறதுக்கு நமக்கு ஒரு ஸ்பேஸ் தேவை. அதை என்னுடைய குடும்பம் கொடுக்கிறது. என்னுடைய குடும்பம் என்றால் என் மகள் உட்பட. என் மகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் அவளுடைய லஞ்ச் பாக்ஸை அவளை கழுவி வைத்து விடுவாள். காலையில் குளிப்பதிலிருந்து அவளுடைய வேலைகளை அவளே பார்த்துக் கொள்வாள். குறிப்பாக அவள் சாப்பிட்ட தட்டை அவளே கழுவி வைத்து விடுவாள். இந்த நேரத்தில் என்னுடைய மகள், கணவர், அப்பா, அம்மா, மட்டுமின்றி மாமனார் மாமியாருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களும் பெரும்பான்மையான நேரத்தில் என்னுடன் கரம் பற்றி நின்று இருக்கிறார்கள்.  சமகால கல்வி முறை குறித்து தங்களுடைய பார்வை?   சமகால கல்வி முறையில் எது மாதிரியான மாற்றம் இருந்தால் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? சமகால கல்வி முறையில நான் பார்க்கின்ற மிக முக்கியமான ஒன்று வீட்டுப் பாடம்.  பெற்றோர்களில் சிலர் படித்தவர்கள். சிலர் படிக்காதவர்கள். சிலர் வேலைக்குச் செல்பவர்கள். அதனால் அவர்களுக்கு வீட்டில் சொல்லிக் கொடுப்பது என்பது சிரமம். கற்றல் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். ஆனால்,கல்வி என்பது பள்ளியில் தொடங்கி பள்ளியில் முடிய வேண்டும்.  காலையிலிருந்து எட்டு மணி நேரம் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே வன்முறைதான். அதைத் தாண்டி திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க வைப்பது என்பது அது அதைவிட வன்முறை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் வீட்டுப்பாடம் இல்லாத ஒரு முறையை உருவாக்கி அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா மாதிரியான விழாக்களில் தொடர்ந்து சில குழந்தைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அது முதலில் மாற வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். வாய்ப்புக் கொடுக்க வேண்டும். எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் எல்லா தனியார் பள்ளிகளிலும் இருக்கின்றன.  அதில் சிலம்பம், பாட்டு, நடனம்  மற்றும் ஓவியம் உள்ளிட்டவை இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையான ஏதோ ஒன்றோ இரண்டோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்.  குழந்தைகளுக்கு எது வரும், எது வராது என்று அவர்களுக்குத் தெரியாது. அதை செய்து பார்த்த பிறகு தான் அதை அவர்களால் கண்டுபிடிக்க முடியும். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கும் எல்லாப் பயிற்சியையும் கொடுக்கும் போது, அவர்களுக்கு எது வருகிறது என்று அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். எந்தக் குழந்தைக்கு எந்தத் திறமை இருக்கிறது என்பதை ஆசிரியர்களும் சரி பெற்றோர்களும் சரி, சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.  ஆண்டுவிழா மாதிரியான விழாக்களில் சுழற்சி முறையிலாவது குழந்தைகளுக்கு வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். எங்களுடைய பள்ளியில் 150 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லோருக்குமே ஆண்டு விழா மாதிரியான விழாக்களில் வாய்ப்பு வழங்கப்படும். அதற்குத் தான் நாங்கள் இங்கே பயிற்சி கொடுக்கிறோம். எல்லாப் பள்ளிகளும் இதைப் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  எனக்குச் சிறுவயதாக இருக்கும் போது வாசிப்பு பயிற்சி அதிகமாக இருந்தது. நான் வாசித்த தில் என்ன புரிந்ததோ அதைத்தான் எழுதுவேன். ஆனால் இப்போது பள்ளிகளில் ஒரே ஒரு முறை பாடத்தை நட த்தி  விட்டு நேரடியாக கேள்விகளையும் பதில்களையும் எழுதிப் போட்டு விடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் வாசிக்க வைப்பதில்லை. அப்படியே மீறி வாசிக்க வைத்தாலும் நன்றாக படிக்கும் குழந்தைகளை வாசிக்க வைத்து விட்டு, ஹோம் ஒர்க் கொடுத்து விடுகிறார்கள். 90% குழந்தைகளுக்கு புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று முழுமையாக தெரியாது.   மிக முக்கியமாக இதை நான் மாற்ற வேண்டும் என்று நினைப்பது இதைத்தான்.  எல்லாக் குழந்தைகளுக்கும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று முதலில் தெரிய வேண்டும். அதனால் மட்டுமே குழந்தைகளுக்குப் பரந்துபட்ட பார்வை கிடைக்கும். வெறும் கேள்வி பதிலால் பரந்துபட்ட பார்வை கிடைக்காது. முக்கியமாக இது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் எல்லாக் கலைகளிலும் எல்லா விளையாட்டுகளிலும் குழந்தைகள் பங்கு பெறுவதற்கான சூழலையும் வாய்ப்பையும் ஒவ்வொரு பள்ளியும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.  சமீபத்தில் தங்கள் வாசித்த கல்வி சார்ந்த புத்தகங்கள் பற்றி? ஆயிஷா நடராசன் புத்தகங்கள் மரியா மாண்டிசோரி   The whole brain child - Daniel j.seigel உதயசங்கர் ,சரிதா ஜோ கதை புத்தகங்கள்.நீதிமணி குழந்தைப்பாடல்கள் இதெல்லாம் வாசித்து  ரொம்ப ரசிச்சது. சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • ஊருக்குப் போன அம்மா

    நேற்று அரவிந்தின் அம்மா இறந்து விட்டார். அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அம்மா இப்படி நீண்ட நேரம் படுத்துக்கிடந்து பார்த்ததே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பார். தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் விட்டு வருவார். தண்ணீர் எடுத்து சமையல் செய்வார். அரவிந்தின் சீருடைகளைத் துவைப்பார். அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். அவர் எப்போது உறங்குவார் என்று தெரியாது. எப்போது எழுந்திரிப்பார் என்று தெரியாது. ஆனால் இப்போது காலையில் இருந்து ஒரே இடத்தில் அசையாமல் படுத்துக் கிடந்தார். யார் யாரோ வந்தார்கள். மாலைகளைப் போட்டார்கள்.. அழுதார்கள். அரவிந்துக்கு எதுவும் புரியவில்லை. அம்மா அழகாக இருந்தார். அவருக்குப் பிடித்த நீலநிறப் புடவையைக் கட்டியிருந்தார். அவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எழுந்து விடுவார் இப்போது எழுந்து விடுவார் என்று அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கண்ணைக் கூடச் சிமிட்டவில்லை. அவனுக்கு வயிறு பசித்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அரவிந்தன் அழுதபோது அவனுடைய பொன்னம்மா பாட்டி, “ அம்மா சாமிகிட்டே போயிட்டா..”  என்று சொல்லி அழுதாள். அவனுக்குப் புரியவில்லை. அவனிடம் அம்மாவின் வாயில் அரிசி போடச்சொன்னார்கள். ஒரு சின்னக்குச்சியைக் கொளுத்தி கொடுத்து திரும்ப வாங்கிக் கொண்டார்கள். அம்மா நெருப்புக்குப் பக்கத்தில் போகக்கூடாது என்று எப்போதும் சொல்வார். “ அவன் சின்னப்பையன்.. சுடுகாட்டுக்கு வேண்டாம்.. “  என்று யாரோ சொன்னார்கள்.  பிறகு அம்மாவை அலங்காரம் செய்த வண்டியில் வைத்துக் கொண்டு போனார்கள்.  ” எங்கே போகிறாள் அம்மா? “ அவன் சித்தியிடம் கேட்டான்.   ” அம்மா ஊருக்குப் போறாள்.. சீக்கிரம் வந்துருவா..” என்று சொல்லி அழுதார். இப்போது அரவிந்தனுக்குச் சமாதானமாக இருந்தது. பலமுறை அம்மா ஊருக்குப் போவார். காலையில் போய் விட்டு இரவில் திரும்பி வருவார். சிலசமயம் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஆகிவிடும். அப்போது அவன் பாட்டி வீட்டில் தான் இருப்பான். அங்கிருந்து தான் பள்ளிக்கூடத்துக்குப் போவான். கடைசியாக ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அங்கிருந்து வரும்போது இப்படி தூங்கிக் கொண்டே வந்தார். இப்போதும் ஊருக்குத் தானே போகிறார்.  “ அம்மா சீக்கிரம் வரவேண்டும் “ என்று மனதுக்குள் நினைத்தான். ஆனாலும் அவனுடைய மனதில் ஏதோ ஒரு துக்கம் பொங்கியது.  பள்ளியில் ஆசிரியர்கள் அவனிடம் பரிவு காட்டினார்கள். அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது. அம்மா எப்போது வருவார் என்று பாட்டியிடம் தினம் கேட்பான். அப்படிக் கேட்டாலே பாட்டி அழுவார். அவர் அழுவதைப் பார்க்கச் சகிக்காது. அதனால் பாட்டியிடம் கேட்க மாட்டான். அடிக்கடி வீட்டின் பின்புறம் இருக்கிற புங்கை மரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்வான். அந்த மரத்திடம் “ அம்மா எப்போ வருவார்? “ என்று கேட்பான். மரம் பதில் சொல்லாது என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அப்படி தினம் ஒருமுறையாவது கேட்க வேண்டும். அப்போது தான் அவனுக்கு நிம்மதி. புங்கைமரம் தலையாட்டும். சிலசமயம் பூக்களை அவன் தலையில் உதிர்க்கும். சில சமயம் காற்றினால் அவன் தலைமுடியைக் கோதி விடும்.  அப்போது இலையுதிர்காலம். புங்கை மரத்தின் இலைகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாறத்தொடங்கியிருந்தன. எப்போதும் கவலை நிறைந்த முகத்துடன் இருந்த அரவிந்த் மரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களைக் கவனிக்கவில்லை. அன்றும் அவன் மரத்தினடியில் உட்கார்ந்து, “ அம்மா எப்போ வாருவார்? “ என்று கேட்டான்.  அப்போது திடீரென ஒரு பெரிய காற்று வீசியது. புங்கை மரத்திலிருந்து பழுத்த இலைகள் மழை மாதிரி அரவிந்தின் தலைமீது விழுந்தன. தலையை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்திலும் சில இலைகள் விழுந்தன. புங்கை மரத்தில் பாதி இலைகள் இல்லை. அவன் நெற்றியில் விழுந்த இலையை எடுத்தான். அது பாதிபச்சையும் பழுப்புமாய் இருந்தது. அவனைச் சுற்றிலும் இலைகள். எல்லாம் அடர்பழுப்பு நிறத்திலும், மெல்லிய பழுப்பு நிறத்திலும், சில இலைகள் பச்சையும் மஞ்சளுமாக இருந்தன. அவனுக்கு இப்போது மரத்தைப் பார்க்கச் சோகமாக இருந்தது. மொட்டையாகத் தெரிந்தது. இலைகள் உதிர்ந்தால் மரம் அழுமோ.  கீழே மரத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் மாலை மாதிரி இலைகள் கிடந்தன. அவன் புங்கை மரத்தடிக்கு வரும்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குள்ளிருந்து அவனைக் கவனித்துக் கொண்டேயிருப்பார்.  பின்வாசலில் நின்று கொண்டு அவர், “ அரவிந்த் கண்ணு! இதுதான் இயற்கை.. பழுத்த இலைகள் உதிர்ந்திரும்.. சில சமயம் நோய்வாய்ப்பட்ட இலைகளும் உதிரும்.. அப்புறம் புது இலைகள் வளரும்..” என்றார். அரவிந்த் நிமிர்ந்து பாட்டியைப் பார்த்தான். பாட்டியும் மரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். “ உன் அம்மா ஒரு நோய்வாய்ப்பட்ட இலை.. அது தான் உதிர்ந்துட்டா.. இனி அவ வரமாட்டா.. மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு.. என்ன செய்ய முடியும்? பழுத்த பிறகும் நான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. எங்கண்ணு….. புது இலையா நீ இருக்கீல்ல.. ” என்று உறுதியான குரலில் சொன்னார்.. அந்தக் குரலில் கவலை இல்லை. நம்பிக்கை இருந்தது. அரவிந்துக்கு ஏதோ புரிந்ததைப் போலிருந்தது. அவன் மெல்ல எழுந்து பாட்டியை நோக்கிப் போனான். பாட்டி அவனை அணைத்துக்கொண்டார். அன்று இரவு அரவிந்துக்கு தூக்கத்தில் ஏதேதோ கனவுகள். ஒரு கனவில் அம்மாவும் சிரித்துக் கொண்டே வந்தார். தூங்கி எழுந்து பின்வாசலுக்கு வந்தான்.  என்ன ஆச்சரியம்!  புங்கை மரத்தில் புதிய தளிரிலைகள் தோன்றியிருந்தன. இளம் பச்சை நிறத்தில் மரத்தின் உடல் முழுவதும் அலங்காரம் செய்ததைப் போல இருந்தது. அரவிந்தைப் பார்த்து புங்கை மரம் சிரித்தது.  அரவிந்தின் உதடுகளும் புன்னகை பூத்தன. அந்தப் புன்னகையின் ஓரத்தில் அவனுடைய அம்மாவின் நினைவுகளும் ஒட்டியிருந்தன. உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • தத்துவம் அறிவோம் - 9

    ஆரம்பகாலத்தில் மனிதர்கள் இயற்கையைக் கண்டு பயந்தார்கள். இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கோடைகாலம் ஏன் வருகிறது? மழைக்காலம் ஏன் வருகிறது?  குளிர்காலம் ஏன் வருகிறது? வசந்த காலம் ஏன் வருகிறது? ஒவ்வொரு காலத்திலும் பூமி மாற்றமடைகிறது. சில உயிர்கள் அழிகின்றன. சில உயிர்கள் உருவாகின்றன. சில உயிர்கள் புதைகின்றன. சில உயிர்கள் முளைக்கின்றன.  செடி, கொடி, மரங்களில் பூக்கள் பூக்கின்றன. பூத்தவுடன் எங்கிருந்தோ பூச்சிகள் வந்து தேன் அருந்துகின்றன. பூச்சிகள் வந்து சென்றதும் காய் காய்க்கின்றது. சில காலம் கழித்து காய் பழுக்கின்றது. பழுத்த பழங்களைச் சாப்பிடப் பறவைகள் வருகின்றன. பறவைகள் பறந்து சென்ற இடங்களில் அந்த மரங்கள் முளைக்கின்றன.  இயற்கையின் இந்தச் சங்கிலியை இப்போது நாம் முறையாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால் இப்படி வரிசையாகச் சொல்ல முடிகிறது. ஆனால் ஆதிமனிதர்களுக்கு எல்லாம் விசித்திரமாக இருந்தது.  எல்லாம் தனித் தனி நிகழ்வாகத் தெரிந்தன. தனித் தனித்தனி நிகழ்வுகளின் தொடர்ச்சியைப் புரிந்து கொள்ளவே பல நூற்றாண்டுகள் ஆனது.  அப்படி என்றால் திடீர் திடீர் என்று நிகழும் இயற்கை மாற்றங்களை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.  அதனால் அடைமழையோ, கொடும்வெயிலோ, புயற்காற்றோ, பூகம்பமோ, நிலநடுக்கமோ எது நடந்தாலும் பயந்தார்கள்.  ஏன் பயப்பட வேண்டும்? அந்தப் பேரிடர்கள் அழிவைக் கொண்டு வந்தன. புயலில் செடி கொடி மரங்கள் அழிந்தன. விலங்குகள், பறவைகள் அழிந்தன. மனிதர்களும் எதிர்பாராமல் அழிந்தனர். அதுவரை இருந்த ஒன்று  திடீரென்று இல்லாமல் போனால் எல்லோரும் பயப்படுவார்கள் தானே. தங்களை மீறிய சக்தியைக் கண்டு பயந்தனர். அவற்றை ஆவிகள் என்று நம்பினர். எனவே இயற்கையின் அடிப்படைகளான நிலம், நீர், காற்று, மண், வெளி (வானம்) எல்லாவற்றையும் வழிபடத் தொடங்கினார்கள்.. இயற்கையில் அவர்கள் பார்த்த ஒவ்வொரு புல்லிலும் ஆவி இருக்கிறது. ஒவ்வொரு பூச்சியிலும் ஆவி இருக்கிறது. மரத்திலும் ஆவி இருக்கிறது. மனிதர்களிலும் ஆவி இருக்கிறது. என்ற நம்பிக்கை வளர் ந்த து. அதனால் தன்னுடன் இருந்த மனிதர்கள் இறந்த போது அவர்களையும் வழிபட ஆரம்பித்தான். அதேபோல அவனுக்கு நோயைக் கொடுத்த, அழிவைக் கொண்டு வந்த, பயிர்களை அழித்த, வேறு பல துன்பங்களைக் கொடுத்த பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றையும் வழிபட்டான்.  அதே போல அவனுக்கு வளத்தைக் கொடுத்த செடி, கொடி, மரம், பயிர்கள், பறவைகள், விலங்குகளையும் வழிபட்டான். அப்போது மனிதர்கள் குழுக் குழுவாக வாழ்ந்தனர். அதைக் குலம் என்று அழைத்தனர். ஒவ்வொரு குலமும் ஒவ்வொரு பொருளை, தாவரத்தை, விலங்கை தங்களுடைய குலச் சின்னமாக அதாவது குல தெய்வமாக வழிபட்டனர்.  உதாரணத்துக்கு ஒரு குலம் எலியைக் கும்பிட்டனர்.  ஒரு குலம் யானையைக் கும்பிட்டனர்.  ஒரு குலம் உருளைக்கிழங்கைக் கும்பிட்டனர் ஒரு குலம் வேப்பமரத்தைக் கும்பிட்டனர். ஆனால் எல்லாக்குலங்களும் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களை வழிபட்டனர். இப்படித் தான் ஆரம்பத்தில் வழிபாடுகள் தோன்றின.  இந்த வழிபாடுகளில் நாம் போன அத்தியாயத்தில் பார்த்த கேள்விகளுக்கான ஆரம்பம் இருந்த து.  மனித வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இந்த உலகத்தில் இதுவரையிலும் இனிமேலும் வரும் த த்துவங்கள் அனைத்துமே இந்தக் கேள்வியைச் சுற்றியே தான் இருக்கும். சரியா? ( தத்துவம் பயில்வோம் ) உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • வண்ணங்களும் வடிவங்களும்

    பவளத்திட்டுகளில் வாழும் மீன்களின் உடலில் பல்வேறு விதமான வண்ணங்களும் வடிவங்களும் இருப்பதைப் பார்க்கலாம். இயற்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவை உண்டு. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த வண்ணங்களும் வடிவங்களும் மீன்களுக்குப் பல வழிகளில் உதவுகின்றன. பவளத்திட்டுகளில் இருக்கும் நிறங்களோடு ஒன்றி மறைந்துகொள்ள சில மீன்களின் உடல் நிறங்கள் உதவுகின்றன. "நான் ஆபத்தானவன், விஷம் கொண்டவன், என்னை சாப்பிடாதீர்கள்" என்று வேட்டையாடிகளை எச்சரிக்கவும் பளீர் வண்ணங்கள் உதவுகின்றன. பல பவளத்திட்டு மீன்களின் உடலில்,  வட்டமான கறுப்புப் புள்ளிகளைப் பார்க்க முடியும். இவற்றை ஆங்கிலத்தில் "Eyespot" என்று அழைப்பார்கள். இவற்றுக்கு இரண்டு வகையான பயன்கள் உண்டு. வேட்டையாடிகளையே பயமுறுத்தும் பெரிய விலங்குகளின் கண்களைப் போல இந்த வட்டங்கள் இருப்பதால் வேட்டையாடிகள் பயப்படலாம். இன்னொரு பயன் என்ன தெரியுமா? இந்த வட்டங்கள் மீன்களின் வால் பகுதியில் இருக்கும். டக்கென்று பார்க்கும் வேட்டையாடி, இரை மீனின் தலை அந்தப் பக்கம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாலுக்கு அருகில் கடிக்க வரும். இதை முன்னாலிருந்து கவனிக்கும் குட்டி மீன், தப்பித்து ஓடிவிடும்! பல மீன்களின் உடலில் வரிகள் இருக்கும். கூட்டமாக நீந்தும்போதோ அலைகளுக்கு இடையில் போகும்போதோ இந்த வரிகள் அப்படியும் இப்படியும் அசையும். தூரத்திலிருந்து பார்க்கும் வேட்டையாடி மீன், இரை மீனின் உடல் எங்கு தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்று தெரியாமல் குழம்பிவிடும்.  Jack Knifefish என்ற ஒரு மீன் இருக்கிறது. இது மேற்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் மட்டுமே இருக்கக்கூடிய மீன்.  இதன் விநோதமான உடல் அமைப்பும் வேட்டையாடிகளைக் குழப்புவதற்கு ஏற்பட்டதுதான். பவளத்திட்டுகளில் வாழும் மீன்களின் இந்த அழகான வண்ணங்களும் வடிவங்களுமே அவற்றுக்கு  சில நேரம் ஆபத்தானதாக மாறிவிடுகின்றன. இந்த அழகான உருவம் காரணமாக இவை மீன்தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. இப்படி வளர்க்கப்படுவதற்காக இவற்றை அதிக அளவில் பிடிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இவற்றைப் பிடித்தால் இந்த மீன்களின் இனம் அழிவின் விளிம்புக்குப் போகலாம்.  தொட்டியிலேயே பிறந்து அங்கேயே வளரும் மீன்கள் என்றால் பரவாயில்லை, அவற்றை நாம் ஆசையாக வளர்க்கலாம். இவ்வாறு இயற்கை சூழலில் இருக்கும் மீன்களை அளவுக்கு அதிகமாகப் பிடிக்கக்கூடாது. அரியவகை மீன்கள், exotic pet fish என்பது போன்ற  பெயர்களோடு  பல காணொளிகளை  நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.அவை எங்கிருந்து வந்திருக்கின்றன என்று முழுவதும் தெரிந்துகொண்டபிறகே வளர்க்க ஆரம்பிக்கவேண்டும். அழகாக இருக்கிறதே என்று ஆசைப்பட்டு நீங்கள் வாங்கும் ஒரு மீன், அழியும் நிலையில்கூட இருக்கலாம். நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நீங்கள் இதைப் பின்பற்றுவீர்கள்தானே? நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்  பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி  கல்விக்குழுமத்தின்   படைப்பூக்க   விருது ,பாவை  விருது  ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும்  மனிதரும் , விலங்குகளும்  பாலினமும் , ஆழ்கடல், சூழலும்  பெண்களும் , நெய்தல் மீன்கள்  உள்ளிட்ட   பதினைந்து     நூல்களை எழுதியுள்ளார்.

  • தத்துவம் அறிவோம் - 8

    ஏன்? எதற்கு? எப்படி? தத்துவத்தின் அடிப்படைகள் தத்துவம் பிறப்பதற்கு எது காரணமாக இருந்தது?  மனித உழைப்பு.  இதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, சரியா?.  ஒரு விஷயம் தெரியுமா?  இன்று இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிரியல், வரலாற்றியல், பண்பாடு, இலக்கியம் என்று எத்தனையோ அறிவுத்துறைகள் இருக்கின்றன அல்லவா?   தொடக்கக் காலத்தில் இவற்றையும் இயற்கைத் தத்துவ இயல் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.  அதன்பிறகே அறிவியல் துறைகளிலிருந்து தத்துவத்தை பிரித்திருக்கிறார்கள்.  அதனால் என்ன? நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், தத்துவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அனைத்துத் துறைகளின் அடிப்படை அறிவையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.  அதாவது எல்லா அறிவுத்துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் ஒருங்கிணைந்தும் செயல்படுபவை.  இன்னொரு வகையில் இந்த உலகம், இயற்கை, மனிதர்களின் வாழ்க்கை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஒன்று பாதிப்படையும்போது, இன்னொன்றும் அதனால் தாக்கம் பெறும்.  எடுத்துக்காட்டுக்கு காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தியது யார்? மனிதர்கள்! இப்போது அதன் விளைவுகளை அனுபவிப்பது யார்? மனிதர்கள் மட்டுமா? நிச்சயமாக இல்லை. அதற்கு நேரடியாகக் காரணமாக இருக்காத அனைத்து உயிர்களும் தாக்கத்தை அனுபவிக்கின்றன.  இயற்கையின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது.  உயிர்ச்சங்கிலியில் மாற்றம் ஏற்படுகிறது.  மனிதர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது. எனவேதான் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று சொல்கிறோம். உலகில் எதுவும் தனியாக நிகழ்வதில்லை.  இந்த உலகத்தில் நடைபெறும் எல்லாச் செயல்களுக்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன. தத்துவம் என்பது இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான்.  தத்துவம் என்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலை அல்ல.  அந்தரத்தில் அரண்மனை கட்டுவதும் இல்லை. மாயாஜாலமும் இல்லை.  சரியா? தத்துவம் என்பது அனைத்து அறிவுத்துறைகளைப் போன்ற மற்றுமொரு அறிவுத்துறை. மூளை என்கிற உறுப்பின் செயல்பாடு. மனிதர்களின் மூளை வளர்ச்சியடையும்போது அதன் செயல்பாடுகளும் நுட்பமடைகிறது.  புதிய சிந்தனை முறைகள் உருவாகின்றன.  ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய விளக்கம் என்று சொல்லலாம். அவையும் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையவைதான். ஆனால், இலக்கியமும் தத்துவமும் மனிதர்களின் வாழ்க்கையில் தீவிரமான தாக்கம் செலுத்துகிற அறிவுத்துறை எனலாம்.     மனிதர்களிடம் பகுத்தறிவு தோன்றிய காலம் முதல் அவர்களிடம் கேள்விகள் உருவாகிவிட்டன.  நான் ஏன் பிறந்தேன்? எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு?  இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன?  இந்த வாழ்க்கையின் முடிவு என்ன? மனிதர்களிடையே பாகுபாடுகள் எப்படி வந்தன? கடவுள் இருக்கிறாரா? யார் கடவுள்? கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன? மதம் என்றால் என்ன? இவ்வளவு கடவுளர்கள் எப்படி உருவானார்கள்? இவ்வளவு மதங்கள் எப்படி உருவாயின? சாதி என்றால் என்ன? மேல்சாதி, கீழ்சாதி என்கிற வேறுபாடு எப்படி உருவானது? மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை உண்டா? மரணத்துக்குப் பிறகு மறுபிறவி உண்டா? மனிதனைவிட உயர்வான உயிரினம் தோன்றுமா? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் தோன்றின. தோன்றிக்கொண்டே இருக்கினறன. தோன்றிக்கொண்டேதான் இருக்கும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். யார், என்ன, எப்படிச் சொன்னார்கள்? அடுத்தடுத்து பார்ப்போம். (தத்துவம் பயில்வோம்) உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • ஈஸ்டர் தீவு (ராப்பா நூயி)

    தென்னமெரிக்க நாடான சிலி நாட்டிலிருந்து, மேற்கே மூவாயிரத்து எழுநூறு கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குப் பசுபிக் பெருங்கடலின் நடுவே ஒரு சிறிய தீவு அமைந்திருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் வெடித்துக் கிளம்பிய எரிமலை குளிர்ந்ததால் இந்தத் தீவு கடலுக்கு நடுவே உருவானது. முக்கோண வடிவிலான இந்தத் தீவு அறுபத்தி மூன்று சதுர மைல் பரப்பே உடையது. முழுத் தீவும் பெரும்பாலும் எரிமலைக் கற்களால் ஆனது. மூன்று முக்கிய எரிமலைகளான ரானோ காவு, தேரெவாகா மலை மற்றும் ரானோ அரேகா போன்றவை இந்தத் தீவின் வடிவமைப்பை உருவாக்கியிருக்கின்றன. இந்தத் தீவில் என்ன சிறப்பு? 1722 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, ஈஸ்டர் திருநாள் அன்று, டச்சு மாலுமியான ஜேக்கப் ரகவீன் என்பவர் இந்தத் தீவுக்கு முதன்முதலில் வந்திறங்கினார். இத்தீவுகளில் மனிதர்கள் வாழ்வதை வெளியுலகத்துக்கு அறிவித்தார். அவர் வந்திறங்கிய நாளின் நினைவாக அவர் இதற்கு ஈஸ்டர் தீவு என்று பெயரிட்டார். ஆனால் இங்கு வசித்துக் கொண்டிருந்த பூர்வகுடிகள் வைத்திருந்த பெயர் ராப்பா நூயி. இங்கு கண்ட நூற்றுக்கணக்கான பிரம்மாண்டக் கற்சிலைகளே ஜேக்கப் ரகவீன் கண்டறிந்த ஆச்சரியம். ஒவ்வொரு சிலையும் ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்தச் சிலைகளை மோவாய் என்று அழைக்கிறார்கள். மோவாய் சிலைகள் மனித முக வடிவமைப்புடன், நீண்ட காதுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைப்பகுதியில், சிலைகளுக்கு ஒரு சிவப்பு நிற 'தொப்பி' போன்ற அமைப்பு (புக்கவ்) வைக்கப்பட்டிருக்கும். இச்சிலைகள் பெரும்பாலும் மார்பளவு வரையிலான உருவங்களாகவே உள்ளன. இருப்பினும் சில முழு உருவச் சிலைகளும் காணப்படுகின்றன. பத்து மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலைகள் சுமார் 80 டன் எடை கொண்டவை. இதுவரை எண்ணூற்று எண்பத்து ஏழு சிலைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தச் சிலைகள் எப்படி உருவாகின? ஏன் உருவாகின? இந்தத் தீவுகளின் பூர்வகுடிகளான ராப்பா நூயி மக்கள் இச்சிலைகளை உருவாக்கியவர்கள் ஆவர். அவர்கள் பாலினேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழியும் ராப்பா நூயி என்றே அழைக்கப் படுகிறது. அவர்களது நாகரீகத்தில் இறந்த தங்களது மூதாதையரின் ஆவிகளைச் சிறப்பிக்கும் விதமாக இந்தச் சிலைகளை அமைத்தனர். தீவைக் காக்கும் தெய்வங்கள் போல இச்சிலைகள் கடலைப் பார்க்காமல், கடலுக்கு முதுகு காட்டி, தீவின் கிராமங்களைப் பார்க்கும் வண்ணம் வரிசையாக நிற்கின்றன. எரிமலைப் பாறைகளால் இந்தச் சிலைகளைச் செதுக்கினர். பின்னர் இச்சிலைகளைக் கயிறுகள் கொண்டு கட்டி, மரக்கட்டைகளைத் தரையில் அடுக்கி அவற்றின் மீது வைத்து நகர்த்தி, கடற்கரைப் பகுதிக்குச் சென்று கல்மேடைகளில் நிறுத்தி வைத்தனர். இந்தக் கல்மேடைகள் ‘ஆஹூ’ என்று அழைக்கப்படுகின்றன. கி.பி. 1200 முதல் 1500 வரையிலான காலகட்டத்தில் மோவாய் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ராப்பா நூயீ நாகரிகம், சில நூற்றாண்டுகளுக்குள் திடீரென வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளன. இருப்பினும், ஆய்வாளர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்: காடழிப்பு: மோவாய் சிலைகளை நகர்த்தவும், போக்குவரத்திற்காகவும் ராப்பா நூயீ மக்கள் தீவில் இருந்த அனைத்து பெரிய மரங்களையும் வெட்டித் தீர்த்தனர். மரங்கள் இழந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டது, விவசாயம் பாதிக்கப்பட்டது, படகு கட்ட முடியாமல் மீன்பிடித்தலும் தடைபட்டது. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. உள்நாட்டுப் போர்: பஞ்சம் தலைவிரித்தாடியபோது, குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சிலைகளைத் தூக்கி நிறுத்துவதைக் கைவிட்டு, ஏற்கனவே நிறுவப்பட்ட சிலைகளைச் சேதப்படுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. வெளியார் வருகை: ஐரோப்பியர்கள் தீவுக்கு வந்த பிறகு, அங்கு அடிமை வியாபாரம், தொற்றுநோய்கள் மற்றும் குடியேற்றவாதம் ஆகியவற்றால் பூர்வீக மக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இன்று, ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்பு மண்டலமாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சிலி நாட்டினர் தங்கள் கட்டுப்பாட்டில் இந்தத் தீவுகளைக் கொண்டுவந்தனர். இத்தீவுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்தே உள்ளது. மோவாய் சிலைகளைப் பார்க்க உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஈஸ்டர் தீவு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மோவாய் சிலைகளை எப்படி நகர்த்தினார்கள், அவற்றின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன, அந்த நாகரிகம் ஏன் வீழ்ச்சியடைந்தது போன்ற கேள்விகளுக்கு முழுமையான, ஏற்றுக்கொள்ளப்பட்ட பதில்கள் இன்னமும் இல்லை. இந்த மர்மங்களே ஈஸ்டர் தீவை இன்றுவரை உலகின் மிகவும் வியப்புக்குரிய இடங்களில் ஒன்றாக வைத்திருக்கின்றன. இவர்களது எழுத்துமொழியை எப்படிப் படிப்பது என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஸ்டர் தீவு மனிதக் கலைப்படைப்புகளுக்கு ஒரு அற்புதச் சான்று. இயற்கையும் மனிதக் கலைத்திறனும் இணைந்தது இந்த தீவு. பழங்கால நாகரிகங்கள் எவ்வளவு திறமையானவை என்பதை இன்றும் உலகுக்கு நினைவூட்டுகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இந்தத் தீவுகளுக்குச் சென்று பார்த்துவிட்டு பழைய நாகரீகத்துக்குள் பயணம் செய்யலாம்! (படங்கள் உதவி: விக்கிபீடியா) எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • வன ராணி

    மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை. தேன்மொழி மிக குதூகலமாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். படித்து கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்திவிட்டு  "தேனு..பக்கத்து வீடு பால் வண்ணம் மாமா வீட்டுக்கு நாறும்பூ மாமா  வந்துருக்காங்க . உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் "என்று அம்மா கூறினாள். தேன்மொழிக்கு சந்தோசம் தாங்கல .."மாமா எப்போ வந்தாலும் நிறைய கதை சொல்லுவாங்க,மாமா சொல்ற கதை எல்லாம் புதுசா இருக்கும் " மாமவ பார்க்க போனாள். மாமா இவள பார்த்ததும் "தேனு எப்படிம்மா இருக்க" என்று  கேட்டாங்க,ரெண்டு பேரோட பேச்சு அப்படியே போகும் போது "மாமா ஒரு கதை சொல்லுங்க" என்று கேட்க... மாமாவும் கதை சொல்ல தொடங்கினார். "ஒரு அடர்ந்த வனம்.அந்த வனத்தை ஆண்டது ஒரு ராணி " 'ராணியா 'என்று தேன்மொழி கேட்க "ஆமா, அந்த காலத்தில் ராணியும் ஆட்சி செய்தார்கள். அவ பெயர்  மீனாட்சி.. காட்டை அந்த ராணி ரொம்ப சிறப்பாக ஆட்சி செய்தாள். அங்குள்ள பழங்குடி மக்களும் மகிழ்ச்சியாக,அன்புடன் அனைவரும் கூடி வாழ்ந்தார்கள். எந்த ஒரு ஏற்ற தாழ்வும் கிடையாது. காடு தனக்கே உரியது என நினைக்காமல் விலங்குகளுக்கும் உரிமை உண்டு என உயிர்மெய்நேயம் உடையவர்கள். ஒரு நாள் மூன்று நபர்கள் வெளிநாட்டில் இருந்து அந்த காட்டிற்கு வந்து ராணியின் அனுமதி இல்லாமல் ஒரு குடில் போட்டாங்க." ' குடில்னா 'யோசனையா கேட்டா தேன்மொழி  "குடில்னா தங்குறதுக்கு ஒரு ஓலை வீடு அப்டினு அர்த்தம்" மாமா சிரிச்சிகிட்டே சொன்னாங்க  "இது ஒற்றர்கள் மூலம் ராணிக்கு தெரிந்தது.உன் வீட்டில் உன்கிட்ட கேட்காமல் யாரவது வந்தா  " தங்க விடுவியா!! யாரு நீங்க என்ன ஏதுன்னு விசாரிப்பல்ல அந்த ராணியும் அதைத்தான் பண்ணாங்க   ஒரு மந்திரியை அனுப்பி "ராணிக்கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் தங்கணும்"என்று சொல்ல   சொன்னாள். ஆனால் அந்த மந்திரியை அடித்து அனுப்பினர். இதனால் கோவம் அடைந்த ராணி நேராக சென்று பேசினாள். அவர்களோ அதிகார தொனியில் பேசினார்கள். இது ஒரு வாக்குவாதமாக மாறி, அந்த மூவரில் ஒருவன் வில்லை எடுத்து ராணியின் மூக்கு, காது, மார்பை அறுத்தான்." 'இது என்ன கொடூரம், இதை யாரும் தட்டி கேட்கலையா' "பழங்குடிகள், ஏழைகளுக்கு நடக்கும் குற்றங்களை யாரும் தட்டி கேட்க மாட்டார்கள். அதிகார வர்க்கம் எப்போவும் அடிமைப்படுத்ததான் நினைக்கும்." 'மாமா, இது சூர்ப்பணகை கதை மாதிரியே இருக்கு' சிரித்துக்கொண்டே"கண்டு பிடிச்சிட்டியா " 'ஆனால், நான் சூர்ப்பணகையை வஞ்சி மகளுன்னு படிச்சேன்.. அவ அரக்கி தானே, அழகா இருப்பானு சொல்றிங்க, மீனாட்சினு வேற சொன்னிங்க'என கேள்வியை அடுக்கிக்கொண்டே இருந்தாள். மாமா.. "பொறுமையா இரு. சொல்றேன். சூர்ப்பனகையை விகாரத் தோற்றம் உடையவளாகவும் துர்க்குணம் நிறைந்தவளாகவும் நம் மனம் சித்தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையில் சூர்ப்பணகை அழகானவள். பிறக்கும் போதே அவள் தன் தாய் கேசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களை அழகில் விஞ்சியிருந்தாளாம். அவள் கண்களின் அழகுக்காக மீனாட்சினு lபெயர் வச்சாங்க .. 'ச்சே, எவ்வளவு தப்பா புரிஞ்சி வச்சிருக்கேன், ஏன் அவளை அரக்கி என்று சொல்றோம்'தேன்மொழி வருத்தப்பட்டாள். "சூர்ப்பணகை போராட்ட குணம் படைத்தவள்... தங்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வுடன் இருந்தவள். அதை பயமின்றி சொன்னவள்.. வெறும் கொலு பொம்மை போலின்றி அறிவுள்ளவளாகவும் இருந்தாள்.. ,. அதனால் அவர்கள் கெட்ட குணங்களை படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டு விட்டார்கள்." ' எப்போவுமே கதை கதாநாயகன், கதாநாயகி, பார்வையில் தான் இருக்கிறது. கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து சொல்ல படுவது இல்லை' " இது கற்பனை இதிகாசங்களில் மட்டும் இல்லை, இப்போதும் அடக்குமுறை இருக்கிறது "மாமா சொன்னாங்க. ' இப்போதுமா'..'தேன்மொழி ஆச்சிரியமாக கேட்க.. "பல உலக நாடுகள், இந்தியா உட்பட பழங்குடிகளை காட்டில் இருந்து தள்ளி  நகரங்களாக மாற்றுகிறது. ஒரு கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதியில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம்.தான்" என்று மாமா சொல்ல 'மாமா இன்னும் அவங்கள பத்தி சொல்லுங்க மாமா 'என்று ஆவலுடன் தேன்மொழி கேட்டாள் "உலகெங்கிலும் 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடி மக்கள் இருககாங்க.., இதில் 476 மில்லியன் மக்கள் உள்ளனர் - இது உலக மக்கள் தொகையில் சுமார் 6.2% தான்.  4,000 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள்.  அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டிருக்கலாம் என்றாலும், பழங்குடி மக்கள் உலகம் முழுவதும் அதே கடுமையான யதார்த்தங்களை அனுபவிக்கின்றனர். அவர்களின் மனித உரிமைகள் தொடர்ந்து அரசு அதிகாரிகளால் மீறப்படுகின்றன, மேலும் அவர்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறார்கள்.. .  பழங்குடியின் கையில் இருந்த சோலைவனம் இப்போது நம்மிடம் பாலைவனமாக உள்ளது."என்று மாமா சொல்ல .. 'இதுக்கு நம்ம என்ன செய்யலாம்' தேன்மொழி கேட்டாள் "இதை உன் நண்பர்கள் கிட்ட பகிரலாம், சமூக வலைத்தளங்களில் இது போன்ற நல்ல கருத்துகளை பதிவிடலாம்." 'கண்டிப்பாக செய்வேன், ரொம்ப நன்றி மாமா' என்று கூறிவிட்டு தேன்மொழி வெளியே வந்தாள். கருமேகங்கள் நகர்ந்து சூரிய ஒளி பிரகாசமாக தெரிந்தது, வானில் மட்டும் அல்ல தேன்மொழியின் மனதிலும் தான்... மிக விரைவில் அவள் அதைப் பற்றி ஒரு குழந்தைகள் புத்தகத்தில் ஒரு கதையை எழுதுவாள், நாம் அனைவரும் ஒரு நாள் அதைப் படிப்போம் சூடாமணி மு.சூடாமணி, வயது 15 ,11ம் வகுப்பு மாணவி, திருநெல்வேலி கதைசொல்லி, இளம் ஓவியர் இளம் எழுத்தாளர், இளம் கவிஞர், இளம் சொற்பொழிவாளர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், உள்ளிட்ட 6 புத்தகங்களை எழுதியிருக்கும் சூடாமணி ஓவியரும் கூட..

bottom of page