top of page

இயலில் தேடலாம்!

268 results found with an empty search

  • காட்டைப் பிடித்த கேடு

    அது ஒரு வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. அங்கு மாலி என்ற குரங்கும் காளி  என்ற குரங்கும் வாழ்ந்துவந்தன.            மரத்தில் அமர்ந்து கொண்டு பாதையில் செல்லும் வாகனங்களைப் பார்ப்பது அவைகளுக்கு மிகவும் பிடிக்கும்.            வாகனத்தில் செல்பவர்கள் அவர்களைப் புகைப்படம் எடுப்பதைப் பார்த்திருக்கின்றன. அப்படி எடுப்பதைப் பார்க்கும் பொழுது தங்களிடமும் இது போன்ற ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று இருவரும் பேசிக் கொள்வார்கள்.          ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாகசம் செய்து கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் சட்டைப் பையிலிருந்து  ஒரு அலைபேசி கீழே விழுந்ததைக்கூட  கவனிக்காமல் சென்று விட்டனர். மாலியும் காளியும் விரைந்து சென்று அதை எடுத்துக்கொண்டுவந்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தன. அந்த மரம் காட்டுப் பூவரசன் மரம். மிகப் பெரிய மரம். நான்கு பேர் நின்று கைகளைச் சேர்த்து பிடித்தால்தான் பிடிக்க முடியும். அவ்வளவு பெரியது அந்த மரம். அந்த மரத்தில்தான் காளியும் மாலியும் பெரும்பாலும் இருப்பார்கள்.        கையில் கிடைத்த அந்த அலைபேசியைத்  திருப்பி திருப்பிப் பார்த்தது மாலி.       காளி, மாலியைப் பார்த்து "எவ்வளவு நேரம்தான் அதை நீயே வச்சுகிட்டு இருப்பே. எங்கிட்டே கொடு நான் கொஞ்சம் நேரம் வச்சிருக்கேன்" என்றது.        " மாட்டேன் மாட்டேன்  இப்பக் கொடுக்கமாட்டேன்" என்றது மாலி...    காளி  கோபித்துக்கொண்டது. "உன்னப் போயி நல்லவன்னு நெனச்சம்பாரு"என்று சொல்லித் தன் தலையில் அடித்துக் கொண்டது.       காளி வருந்துவதை பார்க்க முடியாத மாலி உடனே அலைபேசியை காளியிடம் கொடுத்தது.         அலைபேசியை வாங்கிய காளி மாலியைப் போலவே திருப்பி திருப்பி பார்த்தது. திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கத்திக்கொண்டு கிளைக்கு கிளை தவ்வியது. அலை பேசியைக் கீழே போடாமல் கையிலேயே வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடியது.       அதன் பின்னாலேயே மாலியும் ஓடியது. மோனிகா மோனிகா என்று அது மிகுந்த ஒலி உடன் பாடியது. அலைபேசி அலறவும் தம் கையில் உள்ள அலைபேசியை அங்கும் இங்கும் மாறி மாறி பிடித்ததில் அலைபேசி ஆன் ஆகிவிட்டது.          அந்தப் பக்கம் இருந்து ஹலோ ஹலோ டேய் நான் தான் அம்மா பேசுறேன் ஏன்டா  பேசவே மாட்டேங்குற? எங்கடா போன கல்லூரி போவதாகச்  சொல்லிட்டு எங்க போனே? என்று அம்மா திட்ட தொடங்கினார்.          காளிக்கும் மாலிக்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருவரும் தலையைச் சொரிந்து கொண்டார்கள்.          அழைப்பு நின்றவுடன் மாறி மாறி இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.        செல்பி எடுப்பதில் ஆர்வமான அவர்கள் அன்னம், தண்ணீர் இல்லாமல் அதை வச்சுக்கிட்டு செல்ஃபி புகைப்படமா எடுத்து தள்ளினார்கள்.      தேன் எடுக்க வந்த தேனீ அந்தச் செய்தியைக் காடு முழுக்கச் சொன்னது.         அதைப் பார்க்க க் கொஞ்ச நேரத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், முயல், குரங்கு, மயில், குயில், மைனா, புறா, கழுகு, ராஜாளி, முள்ளெலி என அங்கு ஒரு பெரும் படையே திரண்டுவிட்டது. அத்தனை பேரும் அவர்களைப் பார்த்துக் கொண்டே சிந்தனையில் மூழ்கினார்கள். இவ்விருவர் யாரையுமே பார்க்கவில்லை அப்படி இப்படி நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபடியே இருந்தனர்.          அங்கு கூடிய விலங்குகளும் பறவைகளும் அவர்களை அழைத்துப் பார்த்தன. கத்தி பார்த்தன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காளியும் மாலியும் அவர்களையும் சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தன.       அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூச்சலிட்டு கூட பார்த்தனர் இவைகள் இரண்டும் கண்டுகொள்ளவே இல்லை. சமூக வலைத்தளங்களில் பேசும் நபர்களைப் போல் காளியும் மாலியும் பேச தொடங்கினார்கள்.       காட்டில் உள்ள காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களே பாருங்கள் நான் தான் காளி இவன்தான் மாலி.  எங்கள் பக்கத்தில் தான் கிளி இருக்குது பாருங்க ஹலோ சொல்லு என்றது காளி உடனே கிளி ஹலோ ஹலோ என்றது.          பக்கத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த குயிலைக் காட்டி இந்த காட்டிலேயே இவங்க கூட்டம்தான் நல்லா பாடுவாங்க கேட்கிறீர்களா நண்பர்களே என்று சொல்லிவிட்டு குயிலிடம் அலைபேசியைத் திருப்பியவுடன் குயில் அழகாய் பாடியது.          அப்படி அங்குள்ள ஒவ்வொன்றையும் காட்டி மாலியும் காளியும் பேசிக்கொண்டே இருந்தன.      அதையெல்லாம் மற்ற மிருகங்களும் நேரம் காலம் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.         இதையெல்லாம் பார்த்த ராஜாளி கழுகுக்கு கோபம் வந்துவிட்டது காளி மாலி இருவரும் பேசாம அந்த அலைபேசி கீழே போடுங்க.  இல்லை என்றால் ரெண்டு பேரையும் காடு கடத்தி விடுவேன். பாத்துக்கங்க என்று சத்தமா கத்தியது.        அப்போதுதான் தேனீயும் ஆமாம் நானும் என் வேலைய செய்யாம அதையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வருந்தியது தேனீ அப்படி சொல்லியதும் மற்ற விலங்குகளும் வருந்தின.      ராஜாளி கழுகு அன்பாகச் சொல்லிப் பார்த்தது. பின்பு மிரட்டிப் பார்த்தது. மாலியும் காளியும் கேட்பதாகவே இல்லை. கடைசியில் ராஜாளி கழுகு பறவைகளோடும் விலங்குகளோடும் ஆலோசனை செய்தது. ஏக மனதாக விலங்குகளும் பறவைகளும் அந்த அலைபேசியைப் பிடுங்கி எங்கிருந்து எடுத்தார்களோ அங்கே வைத்து விடுவது என்று முடிவு செய்தார்கள்.       சோறு தண்ணீர் இல்லாம பித்து நிலைக்கு போயிருந்த காளி மாலியிடமிருந்து ராஜாளி கழுகு அந்த அலைபேசியைப் பிடுங்கியது.        ராஜாளி கழுகு பிடுங்கியதும் மாலியும் காளியும் அழுதார்கள் அழுதார்கள் அப்படி அழுதார்கள். குதித்தார்கள், உருண்டார்கள், புரண்டார்கள் கத்தினார்கள் யாரும் கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் வேறு வழி இல்லாமல் இருவரும் அமைதியானார்கள்.      பிறகுதான் பசியை உணர்ந்தார்கள். தம்மைச் சுற்றியுள்ள நண்பர்களையும் உறவுகளையும் நினைத்தார்கள். அலைபேசியைப் பார்த்து பார்த்து கண்கள் எரிச்சல் கொண்டதையும் கைகள் வலியை அடைந்ததையும் உணர்ந்தார்கள்.      அச்சச்சோ அந்த கேடுகெட்ட இயந்திரத்தை வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காமல் வீணாகப் போகிறார்களே என்று வருந்தின.  அவர்களிடமிருந்து பிடுங்கிய அலைபேசியை எடுத்த  இடத்தில் கொண்டு சென்று போட்டது ராஜாளி கழுகு.  எல்லோரும் அப்பாடா காட்டைப் பிடித்த கேடு அகன்றது என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்து மகிழ்ந்தார்கள்‌.       காளியும், மாலியும் கூட ஏதோ சுமையை இறக்கி வைத்ததைப் போல் மகிழ்ந்தனர். ஈரோடு சர்மிளா முனைவர். மு. சர்மிளாதேவி, கல்லூரிப்பேராசிரியர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர். தீவிர வாசிப்பிலும் எழுத்திலும் பேரார்வம் கொண்டவர். பின் நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷின் படைப்புகளில், எவஞ்சொன்னது ராஜான்னு, மகிழினி IPS,மந்திரச்சங்கும் பப்பிக்குட்டியும், கோடைக்குதூகலம், ஆந்தையும் மரங்கொத்தியும்,துணிச்சல்காரி, வானி, போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • 100 கதைகள் 100 குழந்தைகள் உலக சாதனை

    உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகம் இணைந்து நடத்திய கதை மாரத்தான் "100 குழந்தைகள் 100 கதைகள் " என்ற நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பல்வகை பயன்பாட்டு அரங்கில் 21. 2. 2026 அன்று காலை 9 மணிக்குத் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்  மதுரைக்கிளையின் தலைவர் நஜுமுதீன் தலைமையேற்றார்.   தசிஎகச வின் மாநிலத்தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின்  துவக்கவுரையுடன் துவங்கியது. மதுரை மாநகர் செயலாளர் மு.சுலைகா பானு நிகழ்வினைப் பற்றிய நோக்க உரையாற்றினார்கள்.   மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் (திருமங்கலம்), திரு ரகுபதி அவர்களும், மணியம்மை பள்ளி தாளாளர் பி வரதராசன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் கதைகளை கூற தொடங்கினார்கள்.  கின்னஸ் உலக சாதனை நிகழ்வில் , ஆயிஷா நடராசன், விழியன், விஷ்ணுபுரம் சரவணன், சுகுமாரன், சரிதா ஜோ, யெஸ்.பாலபாரதி, ஆதிவள்ளியப்பன், உதயசங்கர், கன்னிக்கோவில் ராஜா, கார்த்திகாகவின்குமார்  உள்ளிட்ட சமகால எழுத்தாளர்களின் 100 கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு காக்கா நரி வடை யில்லை தெனாலிராமன், பீர்பால், முல்லா கதைகளில்லை.  மகாபாரத, ராமாயாணக்கதையில்லை. குரான், பைபிள் கதையில்லை. நாட்டுப்புறக்கதையில்லை. 100 குழந்தைகளும் சமகாலத்தைப் பேசும் சமகாலக்கதைகளையே சொன்னார்கள். நிகழ்ச்சி மதுரை பண்பலையில் ‘ உங்களைத் தேடி ‘ என்ற நிகழ்ச்சியில் நேரலையாக காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பானது.  நிழ்வினைப் பற்றிய செய்திகள் இந்து தமிழ் திசை , தினமலர், மாலை முரசு , தினகரன் போன்ற நாளிதழ்களில் வெளியானது .  அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். மைக்குடி , விடத்தகுளம் போன்ற கிராமங்களிலிருந்து வந்திருந்த மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர் . தொடர்ச்சியாக 100 குழந்தைகள் 100 கதைகளை கூற நிகழ்வு மாலை நான்கு மணிக்கு நிறைவுற்றது.  கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலிருந்து சைமோன் நடேசன் , வழக்கறிஞர் சுரேஷ் லிவிங்டன் தாஸ், ஆகியோர் வந்திருந்தனர்.  கதைகளைக் கூறிய மாணவர்கள் அனைவருக்கும் உலகச் சாதனை சான்றிதழும் , கேடயமும், பதக்கமும் அளித்து பாராட்டு அளிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கவிக்குயில் கணேசன், ஆசிரியர்கள் சிவா , சரவணன், எழுத்தாளர் அமுதா செல்வி, அனுசுயா , பாரதி இலக்கியப் பேரவை முருகன் , திருக்குறள் வளர்ச்சிப் பட்டறை விஸ்வநாததாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக நிறைவுரையை கவிஞர் துளிர் வழங்க நன்றியுரையினை  முனைவர் ஜோசப்பின் மேரி வழங்க விழா இனிதே நிறைவுற்றது. மு.சுலைகா பானு 34 வருட ஆசிரியப்பணி 50க்கும் மேற்பட்ட அமைப்புகளில் ஆசிரியப் பணி & கல்விச் சேவைக்காக விருது வழங்கி பாராட்டியுள்ளனர் . ⁠தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ⁠42 மணி நேரம் 19 நிமிடம் தொடர் கற்பித்தலில் உலக சாதனை ( Teaching Marathon )

  • சிரியாவின் மகள்

    மைத்ரேயி குல்கர்னி தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ துருக்கி நாட்டின் ‘இஸ்தான்புல்’ விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் எல்லோரும் கைகளில் இருந்த பயணச்சீட்டுகளைப் பதற்றத்துடன் பார்த்தபடி, விமானம் நிற்கும் நுழைவாயில்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். "விமானங்கள் தாமதமாகும்..." என்ற அறிவிப்பு இடைவிடாது ஒலித்து, அங்கிருந்தவர்களின் பதற்றத்தை இன்னும் அதிகரித்தன. நான் விமான நிலையத்துக்கு வந்து சுமார் ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. மெல்ல மெல்ல எனக்கு ஒரு கசப்பான உண்மை புரியத் தொடங்கியது. இன்று எனக்கு விமானத்தில் இடம் கிடைக்கப் போவதில்லை. அடுத்த விமானம் இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகுதான் கிளம்பும். இந்தப் பயணம் தொடங்கியதிலிருந்தே ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது.  இந்தப் பயணத்தின் தொடக்கமே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. இஸ்தான்புல் வருவதற்கு முன்பே, கிளம்ப வேண்டிய நாளில் வீட்டில் ஒரு சிறிய விபத்து. அவசரமாக மருத்துவமனைக்குச் சென்று திரும்பியதில் பாதி நேரம் போனது. அதன் பிறகு, விமான நிலையத்திற்கு வரும் வழியில் முன்னெப்போதும் இல்லாத ஒரு போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி ‘இந்தப் பயணம் இப்போது வேண்டாம்’ என்று என்னைத் தடுப்பது போலவே எனக்குத் தோன்றியது. பயணக் களைப்பில், உடல் முழுவதும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல வலியெடுத்தது. கையில் துருக்கி நாட்டு விசா (Visa) இல்லாததால், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் வழியில்லை. இந்த இருபத்தி நான்கு மணி நேரம் என்பது வெறும் நேரமல்ல, அது ஒரு பெரும் சுமை. தங்குவதற்கு ஒரு விடுதி தேட வேண்டும் அல்லது இந்த இருக்கையிலேயே இரவைக் கழிக்க வேண்டும். நான்கு சுவர்களுக்குள் இன்னும் ஒரு முழு நாளைக் கழிக்க வேண்டும் என்று நினைத்தாலே சலிப்பும், பயமும் சூழ்ந்து கொண்டது. துரதிர்ஷ்டவசமாக அலைபேசியின் பேட்டரியும் தீர்ந்துவிட்டது. வீட்டில் உள்ள அப்பா, அம்மாவிற்கு நான் பத்திரமாக இருக்கிறேன் என்று ஒரு தகவல் சொல்லக்கூட வழியில்லை. விமான நிலைய வை-பை (Wi-Fi) வேலை செய்யவில்லை. ஒரு பெரிய கூட்டத்திற்கு நடுவே தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன். சுற்றிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே பல முகங்கள். சிலர் தரையில் படுத்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. ஒவ்வொருவருக்கும் ஒரு அவசரம். நீண்ட யோசனையில் ஆழ்ந்தேன்.  விமான நிலையத்தின் குளிரூட்டப்பட்டக் காற்று உடலைத் தழுவினாலும், உள்ளுக்குள் ஒருவித வெப்பம் தகித்துக் கொண்டே இருந்தது. கையில் இருந்த பையை இறக்கி வைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு கண்ணாடிச் சுவரோரம் உட்கார்ந்தேன்.  அப்போது எனக்குத் தாகம் தொண்டையை அடைத்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒரு சொட்டு கூட இல்லை. அருகில் இருந்த ஒரு சிறிய கஃபேவுக்குச் சென்று ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தேன். ஆனால், அங்கே என் ஏ.டி.எம் கார்டுகள் எதுவுமே வேலை செய்யவில்லை. கையில் ரொக்கப் பணமும் இல்லை.  ‘பரவாயில்லை. தண்ணீர் குடிக்காமலேயே இன்னும் ஒரு நாள் இருந்துவிடலாம்’ என்று என்னையே சமாதானப்படுத்திக் கொண்டு, அந்தப் பாட்டிலை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினேன். ‘ஏன் இந்தப் பயணத்திற்கு இந்த நாளைத் தேர்ந்தெடுத்தோம்?’ என்று மனதிற்குள் என்னையே திட்டித் தீர்த்தேன். பிறகு ஓரிடத்தில் சென்று உட்கார்ந்தேன்.  அப்போது, என் தோள் மீது ஒரு கை பட்டதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தேன். தேவதையைப் போல ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். அவள், உடல் முழுவதையும் மறைத்த வெள்ளை நிற உடை அணிந்திருந்தாள். அவளது கண்கள் கருணையால் நிறைந்து இருந்தன. அவளது புன்னகையில் எனது களைப்பு ஒரு கணம் மறைந்து போனது. அவள், கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை என்னிடம் நீட்டி, "இதை எடுத்துக் கொள்ளுங்கள், இது உங்களுக்காகத்தான்" என்று ஆங்கிலத்தில் சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டு ஒரு மடக்குக் குடித்தேன். அந்த ஒரு மிடறு தண்ணீர் என் தொண்டையை மட்டுமல்ல, என் உள்ளத்தையும் குளிர்வித்தது.  நான் அவளோடு சென்று அமர்ந்தேன். அவளுக்கு அருகில் ஒரு சிறிய குழந்தை. அந்தக் குழந்தையின் கண்கள், அதிகாலையில் மலரும் மொட்டுகளைப் போல அழகாக இருந்தன. "நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய அமைதிக்குப் பிறகு, "நான் சிரியாவிற்குப் போகிறேன்... என் பெற்றோரைப் பார்க்க" என்றாள் அவள்.  'சிரியா' என்ற பெயரைப் கேட்டதுமே என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ‘யுத்தம் கொழுந்துவிட்டு எரியும் அந்த நரகத்திற்கு இப்போது ஏன் போகிறாள்?’ என்று நான் மனதுக்குள் நினைத்ததை அவளது கண்கள் கண்டுகொண்டன. "என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. அவர் அங்கே தனியாக இருக்கிறார். நான் போனால் அவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியும்" என்று அமைதியாகச் சொன்னாள். அவள் குரலில் மரணத்தைப் பற்றிய பயமில்லை. அம்மாவைப் பார்க்கத் துடிக்கும் ஒரு மகளின் பேரன்பு மட்டுமே இருந்தது. தொடர்ந்து அவள் பேசினாள். அவளது ஊருக்கு அருகில் உள்ள நகரங்களில் எல்லாம் போரின் உக்கிரம் தாள முடியாத அளவிற்கு இருப்பதாகவும், வானிலிருந்து பறந்து வரும் ட்ரோன்கள் அடுக்குமாடி கட்டடங்களைத் தூசியாக்கும் காட்சிகளைப் பார்த்ததாகவும் விவரித்தாள். அன்புக்குரியவர்களைப் போரில் பறி கொடுத்துவிட்டு, இடிபாடுகளுக்கு நடுவே மக்கள் கதறும் ஓலச் சத்தம் அங்கே அன்றாட நிகழ்வாகிவிட்டது என்றாள். "அம்மா இருக்கும் ஊர் இப்போதைக்கு அமைதிதான். ஆனால் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைப்பதே ஆபத்து. விமானம், டாக்ஸி, பேருந்து என எதிலுமே பாதுகாப்பு இல்லை. ஆனாலும் நான் போக வேண்டும்..." என்று சொல்லும்போது, அவளது கண்களில் தைரியம் தெரிந்தது. அவளது துயரத்தோடு ஒப்பிடும்போது, என் விமானம் தாமதமானதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று எனக்குத் தோன்றியது. இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து நான் மும்பை சென்றால், அங்கே எனக்காக ஒரு டாக்ஸி காத்திருக்கும். வீட்டின் கதவைத் திறந்ததும் அப்பா அணைத்துக் கொள்வார். அம்மா எனக்குப் பிடித்த அவல் உப்புமா செய்து வைத்திருப்பார். எனது உலகம் பாதுகாப்பானது. ஆனால் இந்தப் பெண்? கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, எப்போது குண்டு விழும் என்று தெரியாத ஒரு போர்க்களத்திற்குள் துணிச்சலோடு நுழையப் போகிறாள். இவ்வளவு பெரிய கவலையைச் சுமந்து கொண்டு, எனக்குத் தண்ணீர் கொடுத்து உதவிய பெருந்தன்மை என்னை நிலைகுலையச் செய்தது. சில நாட்களுக்குப் பிறகு நான் இந்தியா திரும்பினேன். செய்திகளில் சிரியாவில் போர் தீவிரமடைந்த செய்திகள் வந்தன. இடிந்து விழும் வீடுகளையும், எரியும் வீதிகளையும் தொலைக்காட்சியில் பார்த்தபோது, அந்தப் பெண்ணின் முகமும், அவளது குழந்தையின் அழகான கண்களுமே நினைவுக்கு வந்தன. அவளைப் போல எத்தனையோ மகள்கள் தன் பெற்றோருக்காகவும், எத்தனையோ தாய்கள் பிள்ளைகளுக்காகவும் தவித்துக் கொண்டிருப்பார்கள்.  போர் என்பது வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது அல்ல. ஆயிரக்கணக்கானோரின் அன்பையும், எதிர்பார்ப்பையும், வாழ்வையும் சிதைப்பது என்பதை மிக நெருக்கமாக உணர்ந்தேன். போரைப் பற்றிய கதைகள் எல்லாமே வேதனையானவைதான். இப்போது அவளைத் தொடர்புகொள்ள என்னிடம் எந்த வழியும் இல்லை. ஆனால், எனது தோழி, அந்தச் சிரியாவின் மகள்  குடிக்கத் தந்த ஒரு மிடறு தண்ணீர், வாழ்நாள் முழுதும் மனதை ஈரம் குறையாமல் வைத்திருக்கும். கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

  • வளரிளம் புதிர்ப்பருவம் - 9

    பிரையோனி, ஜேமியிடம் உரையாடத் தொடங்கினார்.  உனக்கு ஒரு தோழி இருந்தால் என்ன செய்வாய்? எங்கே கூட்டிட்டுப் போவாய்? சினிமாவுக்கு. என்ன மாதிரியான படம்? ஹாரர்.  A - சான்றிதழ் படமா? ஆமா. தியேட்டரில் ஈஸியா ஏமாத்திட்டு உள்ளே போயிடலாம்.  சினிமா முடிந்த பிறகு  நீ அவளோடு நடந்து சென்று  நேரம் செலவளிப்பாயா? இல்ல நேரே வீட்டுக்கா?  வீட்டுக்கெல்லாம் போக மாட்டேன்.  "அவளுக்கு முத்தம் கொடுக்கத் தோணுமா?" என்று பிரையோனி கேட்டார்.  ஜேமிக்கு லேசான  அதிர்ச்சி. "இந்த மாதிரிக் கேள்வியெல்லாம் நீங்க கேட்கலாமா?" என்றான்.  ஏன், ஸ்கூல்ல இதெல்லாம் பேசமாட்டீங்களா?  ஜேமி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.  உன் வயசுல இருக்கிற பையன், ஒரு பொண்ணு கிட்ட அல்லது பையன் கிட்ட எந்த அளவுக்கு உடல் ரீதியா நெருக்கமா நடந்துக்கலாம்னு நீ நினைக்குற?  நான் Gay இல்லேன்னு  சொல்லிட்டேன்.  நீ Gay என்று நான் சொல்லவே இல்லியே!  இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமா?  ஆமாம். உன்னால முடிஞ்சா சொல்லு.  தெரியல. தொடுறது, முத்தம் கொடுப்பது.... உன்னைப் பொறுத்தவரை தொடுவதுன்ன என்ன? உடல் பகுதிகளைத் தொடுவது.  ஒவ்வொரு பகுதியாக பிரையோனி கேட்கக் கேட்க, "ஒருவேளை தொடுவேன்" என்று  ஜேமி தயங்கித்  தயங்கிச் சொன்னான்.  "நிஜமாகவே நீங்க இப்படியெல்லாம் கேட்கலாமா?" என்று  ஜேமி கேட்டான்.  உன்னை மாதிரி ஒரு 13 வயசுப்  எதிர் பாலின ஈர்ப்பு உள்ள பையன், ஒரு பொண்ணோட உடலைத்  தொடுவது சாதாரணமானது என்று நினைக்கிறாயா?  பிரையோனியின் கேள்விகள் இன்னும் வெளிப்படையாக வரத் தொடங்கியதும் ஜேமியும் பெண் பிள்ளைகளிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்வேன் என்று பேசத் தொடங்கினான். அவர்களும் என்னைத் தொட்டார்கள் என்று சொன்னான். எங்கெல்லாம் தொட்டார்கள் என்று விவரித்தான். அவ்வப்போது தயங்கினான்.  இங்கு சரி, தப்பு என்று எதுவுமில்லை ஜேமி, நீ எவ்வளவு உண்மையாக இருக்கிறாய் என்பது தான் முக்கியம் என்று பிரையோனி சொன்னார்.  சற்றே யோசித்த ஜேமி, நான் சொன்னதெல்லாம் நடக்கவில்லை என்றான்.  Porn படங்களைப் பார்ப்பாயா? நான் பார்க்க மாட்டேன். மற்றவர்கள் பார்ப்பாங்க. "ஆனால் என்னுடன் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளைகளின் ஆடைக்குறைவான படங்களைப் பார்த்தேன்.அதாவது மேலாடை இல்லாமல்!" என்றான் ஜேமி. இது தெரிந்தால் அந்தப் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? எவ்வளவு வருந்துவார்கள்? வகுப்பில் எல்லாரும் தானே பார்த்தார்கள். பிரையோனி அதிர்ச்சியடைகிறார். "கெயிட்டி அதில் ஒருத்தியா?" என்று கேட்டார். ஜேமியின் முகம் இருண்டது.  உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று அவன் குரல் தடுமாறியது. எப்படி இதை யூகித்தீர்கள்? என்று கேட்டான். நான் யூகிக்கவில்லை.  Snapchat இல் அவதான் ஒருத்தனுக்கு அனுப்பினா அவன் எல்லாருக்கும் காட்டினான்.  ஆணின் காதல், காமம் போன்ற உணர்வுகள் குறித்து இலக்கியப் பதிவுகள் இருக்கின்றன. ஆனால்   வளரிளம்பருவத்தில் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு தோன்றின என்பது குறித்த பதிவுகள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லாம். குழந்தைப் பருவக் காதல் என்று பெருமிதத்தோடு சொல்வதும் உண்டு. ஓர் ஆண் குழந்தை வளர வளரப் பெண்ணை ஆணின் சொத்து, உரிமை என்றெல்லாம் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்கிறது.  பெண் உடல் மீதான ஈர்ப்பை வளரிளம்பருத்தில் உணரத் தொடங்குகிறது. வளரிளம் பருவ ஆண் பிள்ளைகள் தங்களுக்குள் பெண்ணைப் பற்றி என்ன பேசுவார்கள்?  பெண் பிள்ளைகள் ஆணைப்பற்றி என்ன பேசிக்கொள்வார்கள்? ‌  இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக மேலை நாடுகளில் வளரிளம்பருவ இலக்கியங்கள் இருக்கின்றன. இங்கு நமது வாழ்விலிருந்து யோசிக்கலாம். பிறகு இதுபற்றி விரிவாக உரையாடலாம்.  சில ஆண்டுகளுக்கு முன்  ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர் தங்கள் நாள் குறிப்பு ஏடுகளில் காதலைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதனால் வகுப்பில் காதலைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்கினேன்.  'காதல்' என்று கரும்பலகையில் எழுதிவிட்டு மாணவர்கள் முன் சாக்பீசை நீட்டினேன்.  பலத்த போட்டிக்கிடையே  அதைக் கையில் வாங்கியவர், நெறியாளர் ஆனார்.  அன்பு,  புனிதமானது,  நட்பு,  வாழ்க்கை,  மனதைப் புரிந்துகொள்ளுதல், சுகம்,  தெரிந்து கொள்வது, அழிவதில்லை,  உண்மை,  சந்தோஷம்,  மனதிற்குப் பிடித்தவரை நேசிப்பது,  வரலாறு,  திருமணம்,  பழகுவது,  விரும்புவது,  மனதில் பாரம்,  காதல் ஒரு நோய்,  உயிருக்கும் மேல்,  காதல் ஒரு காமம்,  ஏமாற்றி சுற்றுவது,  காதல் ஒரு போதை, பணச்செலவு,  வாழ்வில் முக்கியமானது, விரும்பும் பெண்ணை மணம் முடிப்பது,  இன்பம்,  அறியாதவர்களை இணைப்பது,  காதல் பொன்னாது, வாழ்க்கையை மாற்றும், துன்பம்,  ஏமாற்றுவது, மனதளவில் நேசிப்பது, காதல் ஒரு பைத்தியம், எந்தப் பருவத்திலும் வருவது காதல், காதல் ஒரு நல்ல காலம், காதல் ஒரு துணிவு,  துள்ளாத மனமும் துள்ளும், காதல் அழகானது. அதுவரை திறக்காத வாய்களும் திறந்தன. மடை திறந்த வெள்ளமாகப் பாய்ந்த எண்ணங்களால் கரும்பலகை நிரம்பி வழிந்தது.  காதலைப் பற்றி சமூகம் பேசும் அனைத்தையும் ஒன்றாகக் கேட்க முடிந்தது. பாட வேளையும் நிறைவடைந்தது. அனைவரும் சொன்னவற்றை யோசிக்கும் போது ஆச்சரியமும் வருத்தமும் தோன்றின. வளரிளம் பருவத்தினரை காதல் என்ற வார்த்தை பாடாய்ப்படுத்துகிறது. இவர்கள் யாரைக் காதலிக்கின்றனர்?  கற்பிதங்களும் வயதின் ஆர்வமும் ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ? போன்ற பல்வேறு எண்ணங்கள் மனதுள் எழத்தொடங்கின. ஒரு வினாத்தாளை உருவாக்கி அனைவரிடமும் கொடுத்து எழுதச் சொல்லலாம் என்று தோன்றியது. மனதில் தோன்றிய கேள்விகளை எல்லாம் எழுதினேன். அவற்றிலிருந்து சில கேள்விகளை மட்டும் தட்டச்சு செய்து வினாத்தாளை உருவாக்கினேன். தொடர்ந்து பேசுவோம்!

bottom of page