இயலில் தேடலாம்!
268 results found with an empty search
- காட்டைப் பிடித்த கேடு
அது ஒரு வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. அங்கு மாலி என்ற குரங்கும் காளி என்ற குரங்கும் வாழ்ந்துவந்தன. மரத்தில் அமர்ந்து கொண்டு பாதையில் செல்லும் வாகனங்களைப் பார்ப்பது அவைகளுக்கு மிகவும் பிடிக்கும். வாகனத்தில் செல்பவர்கள் அவர்களைப் புகைப்படம் எடுப்பதைப் பார்த்திருக்கின்றன. அப்படி எடுப்பதைப் பார்க்கும் பொழுது தங்களிடமும் இது போன்ற ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று இருவரும் பேசிக் கொள்வார்கள். ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாகசம் செய்து கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் சட்டைப் பையிலிருந்து ஒரு அலைபேசி கீழே விழுந்ததைக்கூட கவனிக்காமல் சென்று விட்டனர். மாலியும் காளியும் விரைந்து சென்று அதை எடுத்துக்கொண்டுவந்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தன. அந்த மரம் காட்டுப் பூவரசன் மரம். மிகப் பெரிய மரம். நான்கு பேர் நின்று கைகளைச் சேர்த்து பிடித்தால்தான் பிடிக்க முடியும். அவ்வளவு பெரியது அந்த மரம். அந்த மரத்தில்தான் காளியும் மாலியும் பெரும்பாலும் இருப்பார்கள். கையில் கிடைத்த அந்த அலைபேசியைத் திருப்பி திருப்பிப் பார்த்தது மாலி. காளி, மாலியைப் பார்த்து "எவ்வளவு நேரம்தான் அதை நீயே வச்சுகிட்டு இருப்பே. எங்கிட்டே கொடு நான் கொஞ்சம் நேரம் வச்சிருக்கேன்" என்றது. " மாட்டேன் மாட்டேன் இப்பக் கொடுக்கமாட்டேன்" என்றது மாலி... காளி கோபித்துக்கொண்டது. "உன்னப் போயி நல்லவன்னு நெனச்சம்பாரு"என்று சொல்லித் தன் தலையில் அடித்துக் கொண்டது. காளி வருந்துவதை பார்க்க முடியாத மாலி உடனே அலைபேசியை காளியிடம் கொடுத்தது. அலைபேசியை வாங்கிய காளி மாலியைப் போலவே திருப்பி திருப்பி பார்த்தது. திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கத்திக்கொண்டு கிளைக்கு கிளை தவ்வியது. அலை பேசியைக் கீழே போடாமல் கையிலேயே வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடியது. அதன் பின்னாலேயே மாலியும் ஓடியது. மோனிகா மோனிகா என்று அது மிகுந்த ஒலி உடன் பாடியது. அலைபேசி அலறவும் தம் கையில் உள்ள அலைபேசியை அங்கும் இங்கும் மாறி மாறி பிடித்ததில் அலைபேசி ஆன் ஆகிவிட்டது. அந்தப் பக்கம் இருந்து ஹலோ ஹலோ டேய் நான் தான் அம்மா பேசுறேன் ஏன்டா பேசவே மாட்டேங்குற? எங்கடா போன கல்லூரி போவதாகச் சொல்லிட்டு எங்க போனே? என்று அம்மா திட்ட தொடங்கினார். காளிக்கும் மாலிக்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருவரும் தலையைச் சொரிந்து கொண்டார்கள். அழைப்பு நின்றவுடன் மாறி மாறி இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். செல்பி எடுப்பதில் ஆர்வமான அவர்கள் அன்னம், தண்ணீர் இல்லாமல் அதை வச்சுக்கிட்டு செல்ஃபி புகைப்படமா எடுத்து தள்ளினார்கள். தேன் எடுக்க வந்த தேனீ அந்தச் செய்தியைக் காடு முழுக்கச் சொன்னது. அதைப் பார்க்க க் கொஞ்ச நேரத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், முயல், குரங்கு, மயில், குயில், மைனா, புறா, கழுகு, ராஜாளி, முள்ளெலி என அங்கு ஒரு பெரும் படையே திரண்டுவிட்டது. அத்தனை பேரும் அவர்களைப் பார்த்துக் கொண்டே சிந்தனையில் மூழ்கினார்கள். இவ்விருவர் யாரையுமே பார்க்கவில்லை அப்படி இப்படி நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபடியே இருந்தனர். அங்கு கூடிய விலங்குகளும் பறவைகளும் அவர்களை அழைத்துப் பார்த்தன. கத்தி பார்த்தன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காளியும் மாலியும் அவர்களையும் சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தன. அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூச்சலிட்டு கூட பார்த்தனர் இவைகள் இரண்டும் கண்டுகொள்ளவே இல்லை. சமூக வலைத்தளங்களில் பேசும் நபர்களைப் போல் காளியும் மாலியும் பேச தொடங்கினார்கள். காட்டில் உள்ள காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களே பாருங்கள் நான் தான் காளி இவன்தான் மாலி. எங்கள் பக்கத்தில் தான் கிளி இருக்குது பாருங்க ஹலோ சொல்லு என்றது காளி உடனே கிளி ஹலோ ஹலோ என்றது. பக்கத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த குயிலைக் காட்டி இந்த காட்டிலேயே இவங்க கூட்டம்தான் நல்லா பாடுவாங்க கேட்கிறீர்களா நண்பர்களே என்று சொல்லிவிட்டு குயிலிடம் அலைபேசியைத் திருப்பியவுடன் குயில் அழகாய் பாடியது. அப்படி அங்குள்ள ஒவ்வொன்றையும் காட்டி மாலியும் காளியும் பேசிக்கொண்டே இருந்தன. அதையெல்லாம் மற்ற மிருகங்களும் நேரம் காலம் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்த ராஜாளி கழுகுக்கு கோபம் வந்துவிட்டது காளி மாலி இருவரும் பேசாம அந்த அலைபேசி கீழே போடுங்க. இல்லை என்றால் ரெண்டு பேரையும் காடு கடத்தி விடுவேன். பாத்துக்கங்க என்று சத்தமா கத்தியது. அப்போதுதான் தேனீயும் ஆமாம் நானும் என் வேலைய செய்யாம அதையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வருந்தியது தேனீ அப்படி சொல்லியதும் மற்ற விலங்குகளும் வருந்தின. ராஜாளி கழுகு அன்பாகச் சொல்லிப் பார்த்தது. பின்பு மிரட்டிப் பார்த்தது. மாலியும் காளியும் கேட்பதாகவே இல்லை. கடைசியில் ராஜாளி கழுகு பறவைகளோடும் விலங்குகளோடும் ஆலோசனை செய்தது. ஏக மனதாக விலங்குகளும் பறவைகளும் அந்த அலைபேசியைப் பிடுங்கி எங்கிருந்து எடுத்தார்களோ அங்கே வைத்து விடுவது என்று முடிவு செய்தார்கள். சோறு தண்ணீர் இல்லாம பித்து நிலைக்கு போயிருந்த காளி மாலியிடமிருந்து ராஜாளி கழுகு அந்த அலைபேசியைப் பிடுங்கியது. ராஜாளி கழுகு பிடுங்கியதும் மாலியும் காளியும் அழுதார்கள் அழுதார்கள் அப்படி அழுதார்கள். குதித்தார்கள், உருண்டார்கள், புரண்டார்கள் கத்தினார்கள் யாரும் கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் வேறு வழி இல்லாமல் இருவரும் அமைதியானார்கள். பிறகுதான் பசியை உணர்ந்தார்கள். தம்மைச் சுற்றியுள்ள நண்பர்களையும் உறவுகளையும் நினைத்தார்கள். அலைபேசியைப் பார்த்து பார்த்து கண்கள் எரிச்சல் கொண்டதையும் கைகள் வலியை அடைந்ததையும் உணர்ந்தார்கள். அச்சச்சோ அந்த கேடுகெட்ட இயந்திரத்தை வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காமல் வீணாகப் போகிறார்களே என்று வருந்தின. அவர்களிடமிருந்து பிடுங்கிய அலைபேசியை எடுத்த இடத்தில் கொண்டு சென்று போட்டது ராஜாளி கழுகு. எல்லோரும் அப்பாடா காட்டைப் பிடித்த கேடு அகன்றது என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்து மகிழ்ந்தார்கள். காளியும், மாலியும் கூட ஏதோ சுமையை இறக்கி வைத்ததைப் போல் மகிழ்ந்தனர். ஈரோடு சர்மிளா முனைவர். மு. சர்மிளாதேவி, கல்லூரிப்பேராசிரியர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர். தீவிர வாசிப்பிலும் எழுத்திலும் பேரார்வம் கொண்டவர். பின் நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷின் படைப்புகளில், எவஞ்சொன்னது ராஜான்னு, மகிழினி IPS,மந்திரச்சங்கும் பப்பிக்குட்டியும், கோடைக்குதூகலம், ஆந்தையும் மரங்கொத்தியும்,துணிச்சல்காரி, வானி, போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- குழந்தைகளின் உரிமைகள் -12
குழந்தைகளின் கற்றல் செயல்பாடு எப்போது தொடங்கும் ? விவரம் தெரியத் தொடங்கின நாளிலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் காண்பவை, அவர்களின் காதுகளில் விழுபவை, பெற்றோரும், அவர்களைச் சூழ்ந்துள்ள பிற மனிதர்களும் தமது நடத்தைகள் மூலம் வெளிப்படுத்தும் பண்புகள், அவர்களின் உரையாடல்களிலி ருந்து தாங்கள் கிரகித்துக் கொள்பவை - என்று பல்வேறு வழிகளில் குழந்தை களின் கற்றல் நிகழ்கிறது. மிக அடிப்படையாகப் பார்த்தால், மனிதர்களின் கண்களில் படும் நிகழ்வுகளும், காதுகளில் விழும் உரையாடல் களும்தாம் அடிப்படையில் அவர்களின் சிந்தனைகளுக்கும் வழி வகுக்கின்றன. அந்த வகையில், குழந்தைகள் மேற்கண்டவாறு பல்வேறு வழிகளில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், அவர்களின் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. முதலில் கற்றல், பின் சிந்தனை, இந்த இரண்டையும் அடுத்துக் குழந்தைகள் அவரவர் புரிதலுக்கேற்ப சில உணர்ச்சிகளுக்கு ஆட்படத் தொடங்குகின்றன. சிறார்களோ, பெரியவர்களோ, ஆண்களோ பெண்களோ மனிதர்களாகப் பிறக்கும் எல்லாருமே உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறவர்கள்தாம். தாங்கள் கற்றதை, சிந்தித்ததை, உணர்வதை,மற்ற சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மனிதர்ககளின் அடிப்படைப்பண்புகளுள் ஒன்று. வயதில் பெரியவர்களாவது இடம் - பொருள்- சூழல்களுக்கு ஏற்ப, தாம் பார்ப்பதை, சிந்திப்பதை, உணர்வதைப் பிறருடன் உடனேயே, முழுமையா கவோ, கொஞ்சம் பகுதியளவிலோ பகிர்ந்து கொள்ளலாம்; ஓரளவு மட்டும் பகிரலாம். அல்லது, முற்றிலும் எதையுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல், தமது மனங்களுக்குள்ளேயே போட்டுப் புதைத்து விடவும் கூடும். ஆனால், குழந்தைகளுக்கு அவ்வாறு மறைக்கத் தெரியாது; தோன்றாது. எனவே தாம் கற்றதை, சிந்திப்பதை, உணர்வதைப் பெற்றோருடனோ, வீட்டிலுள்ள பிறருடனோ, பொதுவெளிகளில் அவர்கள் சந்திக்கும் ஆசிரியர்கள் அல்லது சக மனிதர்களுடனோ உடனே பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் மிகத் தீவிரமாக இருக்கும். அவ்வாறு ஒரு குழந்தை நம்மிடம் ஆர்வத்துடன் வந்து எதையேனும் பகிர்ந்து கொள்ள முற்படும் போது, அவ்வாறு முயல்வதற்கு, பகிர்ந்து கொள்வதற்கு அந்தக் குழந்தைக்கு உரிமையுண்டு என்று ஐக்கிய நாடுகளின் கன்வென்சன் அங்கீகரித்திருக்கிறது. அவர்கள், தங்களின் மனங்களில் உணர்வதை உரையாடலின் மூலம் பகிர முற்படலாம். சிறு சிறு சித்திரங்களை வரைவதன் மூலம் பகிரலாம்; அல்லது தனக்குத் தோன்றுவதை எழுதிக் காட்டலாம். அல்லது, இவையெல்லாவற்றுக்கும் மாறாக, அக்குழந்தை தனக்கே உரித்தான ஏதோ ஒரு செய்கையின் மூலம்,அல்லது சமிக்ஞை மூலம் மற்றவர்களுக்குத் தான் உணர்வ தைப் பகிர்ந்து கொடுக்க முற்படலாம். அவ்வாறு ஒரு குழந்தை தம்மிடம் கொடுக்க வருவதை இரு கரங்களாலும், முழு மனதுடன், ஆர்வதுடன் ஏந்திப் பெற்றுக்கொள்ள வேண்டியது சக மனிதர்களின், இந்த ஓட்டு மொத்த சமூகத் தின் கடமை. அதே சமயம், குழந்தைகள் இவ்வாறு பகிர்பவை, எப்போதேனும் ஏதோ ஒரு வகையில் பிற குழந்தைகளை, சக மனிதர்களை, பெற்றோரைப் பாதிக்கும் வகையில் அல்லது புண்படுத்தும் வகையில் இருந்து விடவும் கூடும். அவ்வாறு இருந்தால் அப்போது நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் ஐக்கிய நாடுகளின் பிரகடனம் குறிப்பிடுகிறது. குழந்தைகளின் தவறுகளை, அவர்களின் உணர்வு வெளிப்பாட்டில் பிறரைப் பாதிக்கும் அம்சங்கள் எவை, ஏன் அவற்றைத் தாங்கள் ஏற்க முடியாமல் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகவும், மென்மையாகவும் குழந்தைகளுக்குப் புரிய வைத்து விட வேண்டும். மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் குழந்தைகளைக் கையாள வேண்டுமென்பதே எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம். கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- தத்துவம் அறிவோம் -12
வாழ்க்கை உருவாக்கிய கேள்விகள் : மனிதர்களின் ஆராய்ந்து அறியும் பகுத்தறிவு வளராத காலத்தில் மனிதர்கள் யார் எதைச் சொன்னாலும் நம்பினார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்துக்கும் யார் காரணம்? ஏன் இப்படி நடக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத போது தன்னை மீறிய சக்தி இந்த உலகத்தில் இருக்கிறது என்று உணர்ந்தார்கள். அது கடவுள் என்று சிலர் சொன்னார்கள். அது இயற்கை என்று சிலர் சொன்னார்கள் அது தலைவிதி என்று சிலர் சொன்னார்கள். அது தற்செயல் என்று சிலர் சொன்னார்கள் அது மனிதனால் ஏற்பட்ட து என்று சிலர் சொன்னார்கள். மனிதர்களுக்கு விடை தெரியாத கேள்விகள் இன்றுவரை இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கின்றன. கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார், உயிர்களைப் படைத்தார், மனிதனைப் படைத்தார், பிறப்பையும் இறப்பையும் படைத்தார். இன்ப துன்பங்களைப் படைத்தார். ஏற்ற தாழ்வுகளைப் படைத்தார். உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகளைப் படைத்தார். ஏழை, பணக்காரனைப் படைத்தார். ஆணிலிருந்து பெண்ணைப் படைத்தார். என்று ஏராளமான கட்டுக்கதைகளை உருவாக்கினார்கள். இன்றும் இந்தக் கட்டுக்கதைகளுக்கு மவுசு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் இவற்றை நம்புகிறார்கள். தங்களுடைய துன்பங்களுக்குக் காரணம் தெரியாத போது தலை எழுத்து, தலைவிதி என்று நம்பத் தொடங்கினார்கள். அதை மாற்றுவதற்காகக் கடவுளைப் பிரார்த்தனை செய்தார்கள். வேண்டுதல் செய்தார்கள். பரிகாரம், நேர்த்திக்கடன் என்று கடவுளிடம் பேரம் பேசினார்கள். இந்த பூமியில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கடவுள் தோன்றினார். ஆதிப்பழங்குடி மக்கள் வழிபட்ட ஆவிகள், இயற்கை உயிர்கள் இப்போது பெரிய கடவுளாக மாறினார்கள். இந்தக் கடவுளருக்குக் கதைகள் தோன்றின. இந்த பூமியைப் போலவே இன்னொரு இடம் இருப்பதாக க் கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன. மனிதர்கள் இறந்த பிறகு அந்த மேல் உலகத்துக்குப் போவார்கள் என்று நம்பச் சொன்னார்கள். இந்த வாழ்க்கையில் செய்யும் நல்லது கெட்ட துகளுக்கு ஏற்ப அங்கே சொர்க்கமோ நரகமோ கிடைக்கும். அதாவது நல்லது செய்தால் சொர்க்கமோ, கெட்ட து செய்தால் மீண்டும் வேறு வேறு பிறவிகளை எடுத்து துன்பமடைய வேண்டும் என்று சொன்னார்கள். இப்படி ஏழு பிறவிகளை எடுத்தபிறகு சொர்க்கத்துக்குச் சென்று கடவுளை வேண்டி முக்தி அடையலாம். அதாவது கடவுளோடு ஒன்றாக க் கலந்து விடலாம் என்று கப்சா விட்டார்கள். பெரும்பாலும் இந்தக் கதைகளின் அடிப்படையில் சிலச் சில மாற்றங்களுடனே பூமியின் மற்ற பகுதிகளிலும் சொன்னார்கள். எனவே மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் படும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் அவர்கள் காரணம் இல்லை. எது காரணம்? போனபிறவியில் செய்த நல்லது கெட்ட து. கடவுளின் விருப்பம். பிறக்கும் போது தலையில் எழுதிய எழுத்து. அதாவது விதி. இந்த மூடநம்பிக்கைகளை வைத்து சோசியம் பிறந்தது. சரி. மூடநம்பிக்கை என்றால் என்ன? மூட நம்பிக்கை என்றால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவை. ஆதாரம் இல்லாதவை. உண்மையில் நடக்க இயலாத கற்பனைகள். கட்டுக்கதைகளை அடிப்படையாக க் கொண்டவை. என்று சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களே யோசியுங்களேன். நம்முடைய வீட்டில் இப்படி என்ன என்ன நம்பிக்கைகள் இருக்கின்றன? அவற்றைப் பட்டியலிட்டு இந்தக் கட்டுரைக்குப் பின்னூட்டமாக எழுதுங்கள் பார்க்கலாம். ( அறிவோம் தெளிவோம் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- ஞானச் செருக்கு
ஞானச் செருக்குடை பாரதி-எழு ஞாயிறாம் விடுதலைச் சாரதி! வானம் அளந்திடும் மாருதி-அவன் வடித்ததோ இன்ப வாரிதி! தேனைச் சொரிந்திடும் தமிழ்க்கவி-அவன் தேடிய விடுதலைப் படைக்கவி! கானகம் மலைகளின் குடைக்கவி-அதைக் கவிதை வடித்த கலைக்கவி! கண்ணன் பாட்டைப் பாடினான்-அவன் கண்ணம் மாவுடன் ஆடினான்! வண்ணக் கவிதைப் பாடினான்-அதில் வாழ விடுதலைத் தேடினான்! பாஞ்சாலி சபதம் பாடினான்-அதில் பாரதத் தாயை நாடினான் வாஞ்சை விடுதலைத் தேடினான்-கவி வடித்தே வீரத்தில் கூடினான்! எண்ணரும் மொழிகளை அறிந்தவன்-அதில் ஏற்றம் தமிழெனப் புரிந்தவன்! பண்ணருங் கலைகளில் உயர்ந்திட-அவன் பாடினான் உலகோர் அயர்ந்திட! பாரதித் தேரை இழுத்திடு-அவன் பாக்களைப் புகழில் உயர்த்திடு! பாரதிர நீயும் உரைத்திடு-பாரதிப் பாடலில் நாட்டைக் கரைத்திடு! கோவி.பால.முருகு இயற்பெயர் பால.முருகுவரதராசன் தமிழாசிரியர், தலைமையாசிரியர்(பணிநிறைவு) 15 நூல்கள் எழுதியுள்ள இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீக்கதிர் வண்ணக்கதிர் பாலர் பூங்காவில் எழுதி வருகிறார். பத்துக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.













