top of page

இயலில் தேடலாம்!

361 results found with an empty search

  • அறமதியின் கதை - 6 : எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் – சோசியலிசம்

    கடுங்குளிர் காற்று வீசியது. அன்பினியின் காத்திரமான கேள்விகள் மோதித் தீப்பொறிகளை உருவாக்கின. அவற்றிலிருந்து கருகிய காகிதத் துணுக்குகள் காற்றில் பறந்தன. அப்போது அன்பினியின் கைகளில் ஒரு காகிதத் துண்டு வந்து விழுந்தது. அவள் அதை உற்று நோக்கினாள். “இந்தக் கையெழுத்து... நான் இதைப் பார்த்திருக்கேன்...” என்று குழப்பத்துடன் சொன்னாள் அன்பினி. அப்போது அறமதி இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலையிலிருந்து ஒரு ஒளி, அலையாய்ப் பனிமலை எங்கும் பரவியது. அந்த ஒளி அவர்களை ஓர் இருண்ட அறைக்குள் கொண்டு சேர்த்தது. அந்த இருண்ட சிறைச்சாலையின் சுவரில் செதுக்கப்பட்டிருந்த ஒரு வாசகத்தை அன்பினி பார்த்தாள். “ஒவ்வொரு துளி சாம்பலும் என் வெப்பத்தால் இயங்குகிறது. சிறையிலும் சுதந்திரமாய் இருக்கும் பைத்தியக்காரன் நான்!” அரை இருளில் ஓர் இளைஞன் எழுதிக் கொண்டிருந்த காட்சி தோன்றி மறைந்தது. “பகத் சிங்!", அன்பினி உற்சாகமாகச் சொன்னாள். அறமதியின் கைகளில் நான்கு கையெழுத்துப் பிரதி நூல்கள் இருந்தன. “இந்த நூல்கள் பகத் சிங் எழுதியவை. இந்த நூல்களோட சாம்பலைத்தான் நாம் அங்கே பார்த்தோம்,” என்றாள் அறமதி.“நான் இவர் எழுதிய 'ஏன் நாத்திகன் ஆனேன்' நூலைப் படிச்சிருக்கேன்... எங்க பள்ளி மாணவர் எல்லாருக்கும் சிவசுப்ரமணியம் எழுதிய 'பகத் சிங் ஏன் நாத்திகரானார்?' என்கிற ஒரு குட்டிப் புத்தகம் கொடுத்தாங்க. அதைப் படிச்சதில் இருந்து எனக்கு பகத் சிங் மேல் ஒரு பெரிய ஈர்ப்பு வந்துச்சு...” “பகத் சிங் ஒரு புரட்சியாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த அறிவுஜீவியும்கூட. நிறைய புத்தகங்கள் படித்தார். அவர் ஜெயிலில் இருந்த காலத்தில் எழுதின இந்த நான்கு நூல்களையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் பயந்து அழித்துவிட்டார்கள். உன்னோட கேள்விகளுக்கான பதில் இதோ இதில் இருக்கு,” என்றபடி அறமதி அந்த நூல்களை நீட்டினாள். அன்பினி அந்த நூல்களை வாங்கிக்கொண்டு ஒருமுறை தடவிப் பார்த்தாள். அதிலிருந்த எழுத்துகள் தீப்பொறிகளாகி, அங்கே பகத் சிங்கின் வடிவத்தைப் பெற்றன. “நான் பகத் சிங் பேசுகிறேன்... நமது இந்தியா சுதந்திரம் அடைய வேண்டியது வெறும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து மட்டுமல்ல; ஜாதி, மதம் போன்ற மக்கள் நலனுக்கு எதிரான அடிமைத்தனங்களில் இருந்தும் தான். இந்த நாட்டை உருவாக்கும் உழைக்கும் மக்களும் விவசாயிகளும் வறுமையில் இருந்து விடுதலை பெற வேண்டும். கல்வி, மருத்துவம் மாதிரியான அத்தியாவசியமான வசதிகள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். இங்கு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது வெறும் அரசியல் லட்சியம் இல்லை, அது நம் அறக்கடமை. அதிகப்படியான சொகுசுகளை இங்கு ஒருசிலர் அனுபவிக்கிறார்கள். பல மனிதர்கள் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மிஞ்சுவது என்ன? பசி, பட்டினி, சுரண்டல்... அதைப் பார்த்துக்கொண்டு நமது வேலையை மட்டும் நாம் பார்த்துக்கொண்டிருப்பது அறம் தவறுவதாகும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதரும் சக மனிதர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர்களுக்காகப் போராட வேண்டும். அந்த நாள் தான் உண்மையிலேயே நமக்கு விடுதலை கிடைக்கும் நாள். ஒரு சோசியலிச நாடாக நமது நாடு மாற, நான் என் உயிரைத் தியாகம் செய்யச் சந்தோஷப்படுகிறேன்.” “அந்த மாவீரன் தூக்கில் போடப்பட்டபோது அவருக்கு வயது வெறும் 23 தான்” உணர்ச்சி மேலிட சொன்னாள் அறமதி. “எவ்வளவு சரியா சொன்னார் இல்ல... சோசியலிச நாடாக நம்ம நாடு மாறணும்... அப்படி ஒரு நாடு தான் எனக்கு வேணும்.” என்றாள் அன்பினி. “சோசியலிசம் அதாவது சமநிலைச் சமுதாயம் என்பது நம்ம அரசியல் அமைப்புச் சட்டத்தோட அடிப்படை. ‘இந்த உலகத்துல சோசியலிசம் தான் இயற்கையானது. பொருளாதாரச் சமத்துவம், அதாவது எல்லா மக்களும் பொருளாதார அடிப்படையில சமமா இருக்கிறது தான் இதோட அடிப்படைன்னு’ காந்தி வலியுறுத்தினார்.” “அப்படியா... அப்போ காந்தி சொன்னதையும் பகத் சிங் சொன்னதையும் சேர்த்தாங்களா?” அன்பினி கேட்டாள். "நிச்சயமா! இதைப் பத்தி அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘நம்ம நாட்டுல சோசியலிசம் உருவாகப் பெரிய தடையா இருக்கிறதே ஜாதி தான். ஜாதி ஒழியாமல் பொருளாதார சமத்துவமும் முழுமையடையாது’ என்று அவர் நினைத்தார். இந்தியா சோசியலிஸ நாடா மாறத் தேவையான வழிகாட்டுதலை அரசியல் அமைப்புச் சட்டத்துல சேர்த்தார். மக்கள் நலனை உறுதி செய்வது நம்ம அரசோட கடமை. இந்த அடிப்படையில தான் நம்ம அரசுகள் சட்டம் கொண்டு வரணும், மக்கள் நலத் திட்டங்கள் வகுக்கணும்.” அன்பினி கவனமாகக் கேட்டாள். அறமதி தொடர்ந்தாள்.“இதப் பத்தி இந்தியாவோட முதல் பிரதம மந்திரி நேரு என்ன சொன்னார் என்று சொல்லுறேன் கேளு. ‘இந்த உலகமே சோசியலிஸத்தை நோக்கித் தான் நகரும் என்று நம்புகிறேன். நம்ம இந்திய நாடு ஒரு சோசியலிஸ்ட் நாடாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இந்தியா நிச்சயம் அதை நோக்கி நகரும்’ அபடீன்னு சொன்னார்.” “அவருதானே பதவியில இருந்தாரு... அப்போ அதுக்காக என்ன செஞ்சாரு?” “நல்ல கேள்வி... இப்படித்தான் கேள்விகள் கேட்கணும். பதவிகள்ல இருக்கிறவங்களுக்குப் பதில் சொல்லுற பொறுப்பு இருக்குது. இப்போ நான் உனக்கு நேரு இதுக்கு என்ன பதில் சொன்னாருன்னு சொல்லுறேன்.” என்று சொல்லித் தொடர்ந்தாள் அறமதி. “இந்தியாவில் முக்கியமான நிறுவனங்கள், உதாரணமா ரயில்வே, பெட்ரோலிய நிறுவனங்கள் மாதிரியான முக்கியமான நிறுவனங்கள நாட்டுடைமை ஆக்குனாங்க. அதே சமயம் தனியார் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதிச்சாங்க. ஆனா, இந்திய மக்களோட நலனைக் கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வந்தாங்க. கூட்டுறவு முறையில விவசாயம் செய்யத் திட்டங்கள் வகுத்தாங்க. இது எல்லாமே ஒரு அளவு பலன் தந்தது. அதேபோல, 'மனித முயற்சிகள் தவறுகள் அற்றதா இருக்காது' என்றும் சொல்லுறார்.” “அப்போ இதையெல்லாம் எப்படித்தான் சரி செய்யுறது?” என்று அன்பினி கேட்டாள். “அதையும் அவரே சொல்லியிருக்காரு... சுதந்திரம் கிடைக்கும்போது நம்ம மக்களுக்குப் படிப்பறிவு இல்லை; ஜாதியிலேயும் பொருளாதாரத்திலேயும் மேல, கீழன்னு பிரிஞ்சு கிடந்தோம். ஆனா... விவசாயிகளோட, செருப்பு தைப்பவரோட, கசாப்புக்காரரோட பொண்ணும் பையனும் படிச்சிருக்கிற ஒரு புதிய சமுதாயமா நம்ம மாறியிருக்கிறோம். இந்த படித்த தலைமுறை, உங்களை மாதிரி படிக்கிற குழந்தைகள், நாட்டுக்காகப் பாடுபடும் என்று அவர் நம்பினார்.” “அப்போ என்னை மாதிரி குழந்தைகள் நம்ம நாட்டை மாத்த முடியும்னு சொல்லுறாரா?” “நிச்சயமா... முடியும்.” “புரிஞ்சுது.. இங்கே எல்லாமே மாறியிருக்கு, முன்னேறியிருக்கோம்.” என்றாள் அன்பினி. “அதேசமயம்.. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க.. ஒரு சோசியலிஸ நாடா நம்ம மாற.. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.” அறமதி சொன்னாள். இதைக் கேட்ட அன்பினி யோசித்தாள். “நம்ம போக வேண்டிய இடம் இப்போ தெளிவா புரியுது; ஆனா எப்படிப் போறது? இங்க நிறைய தடைகள் இருக்கே? ஜாதி... மதம்... பணம்...” என்று கேட்டாள் அன்பினி. (அறிவோம் தெளிவோம்) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.

  • சிறுவர் நாடகம் : வியனின் கொட்டாவி

    கதாபாத்திரங்கள்: கதைசொல்லி வியன் (முதன்மைக் குழந்தை) குமார் & ரமா (வியனின் நண்பர்கள்) அறிவியல் ஆசிரியர், கணக்கு ஆசிரியர், வரலாறு ஆசிரியர், தமிழ் ஆசிரியர் தலைமையாசிரியர் பட்டாம்பூச்சி, கம்பளிப்பூச்சி, கூட்டுப்புழு, தவளை அண்ணன் பார்வையாளர்கள் (நாடக அரங்கிலுள்ள குழந்தைகள்) காட்சி 1: பள்ளி வகுப்பறை ( கதைசொல்லி ஆடிக் கொண்டே மேடைக்கு வருகிறார்.) கதைசொல்லி: நம்ம எல்லாரையும் போலவே பள்ளிக்கு போகும் ஒரு சின்னப் பையன் தான் வியன். ஆனால் அவனுக்கு அவன் ஸ்கூல் பிடிக்கும், வகுப்பறை பிடிக்காது. அறிவியல் பிடிக்கும், ஆசிரியர் பிடிக்காது. விளையாடப் பிடிக்கும், பிடி (PT) பீரியட் பிடிக்காது. அதனால் என்ன ஆகுதுன்னு நீங்களே பாருங்கள்! (கதைசொல்லி ஆடிக் கொண்டே ஓரமாய் ஒதுங்குகிறார். மேடை வகுப்பறைக் காட்சியாக மாறுகிறது. வியன், குமார், ரமா மற்றும் மற்ற மாணவர்கள் பென்ச்சுகளில் அமர்ந்திருக்கிறார்கள். அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.) அறிவியல் ஆசிரியர்: இன்னைக்கு நம்ம வகுப்புல உயிர்களின் உருமாற்றம் பற்றி பார்க்கப் போகிறோம். வியன்: ஹா... (ஒரு பெரிய கொட்டாவி விடுகிறான்) அறிவியல் ஆசிரியர்: கரப்பான் பூச்சிகள், தவளைகள், பட்டாம்பூச்சிகள்... வியன்: ஹா... வ் (சத்தத்தோடு இன்னும் ஒரு பெரிய கொட்டாவி) அறிவியல் ஆசிரியர்: நான் பூச்சியைப் பத்தி சொல்லிகிட்டு இருந்தா... இவன் வாயில ஈ போயிடும் போலயே...! (என்று கோபமாகச் சொல்லி, ஒரு சாக்பீஸ் துண்டை அவனை நோக்கி எறிகிறார்) வியன்: (டக் என்று அலர்ட் ஆகி நேராக நிமிர்கிறான்) அறிவியல் ஆசிரியர்: வியன் எப்பாப் பாரு தூங்கி வழி...! வியன்: (திருதிருவென முழிக்கிறான்) ரமா: (பக்கத்தில் உட்கார்ந்திருந்தபடி ரகசியமாகக் கேட்கிறாள்) ஏண்டா தூங்குற... நானும் எவ்வளோ தான் உன்னை எழுப்புறது? வியன்: ஏன்னே தெரியலப்பா... கிளாசுக்கு வந்தாலே தூக்கமா வருது. அறிவியல் ஆசிரியர்: புழுக்கள், கூட்டுப்புழுக்களாகி பிறகு பட்டாம்பூச்சிகளாக முழு உருமாற்றம் அடையுது... அதன் வளர்ச்சி..நிலைகள்... (இப்போது வியன் சௌகரியமாக பென்ச்சில் படுத்துத் தூங்கியே விடுகிறான்.) அறிவியல் ஆசிரியர்: இன்னைக்கு இவனைச் சும்மா விடுறது இல்ல...! (ஒரு பிரம்புக் குச்சியை ஓங்கிக்கொண்டு வியனை நோக்கி வருகிறார்) (ரமா பயந்துபோய் வியனை அவசரமாக எழுப்ப முயற்சிக்கிறாள். லேசாக கண்விழித்த வியனுக்கு ஒரு பிரம்மாண்டமான கொட்டாவி முட்டிக்கொண்டு வருகிறது.) வியன்: ஹா.......வ்! (என்று கொட்டாவி விடுகிறான்) ( புயலைப் போல பெரும் சத்தம் கேட்கிறது. அது சுனாமியாக மாறி அறிவியல் ஆசிரியரை உள்ளே இழுக்கிறது. ஆசிரியர் முதலில் காற்றின் வேகத்தால் பின்னே சென்று, பின் ஓடி வந்து வியனின் வாய்க்குள் போவதாகச் செய்கை செய்து, சட்டென்று ஸ்டேஜின் வெளியே ஓடி மறைகிறார். வியன் மீண்டும் பென்ச்சில் படுத்துத் தூங்கி விடுகிறான். வகுப்பறையில் ஒரே அமளித்துமளி. திரை விழுகிறது.) காட்சி 2 இடம் : தலைமையாசிரியர் அலுவலகம் ( மேடையில் தலைமையாசிரியர் அலுவலகம். பெரிய மரங்கள் போல ஆசிரியர்கள் வியனைச் சூழ்ந்து சுற்றி நிற்கிறார்கள். வியன் அவர்களுக்கு மத்தியில் ஒரு குட்டிப் பூ போலப் பாவமாக நிற்கிறான். ) கணக்கு ஆசிரியர்: டேய் வியன்... என்ன நடந்தது? ஒழுங்கா சொல்லுடா... எங்க தேடியும் அறிவியல் சாரைக் காணோம்! வரலாறு ஆசிரியர்: சார், இவன் எப்போதுமே கிளாசுக்கு வந்தாலே தூங்குவான்... நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். தமிழ் ஆசிரியர்: தூங்கினதுக்காக அறிவியல் ஆசிரியர் திட்டினா தப்பா... அவரை என்னடா பண்ணுன? (மேடையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த கதைசொல்லி..பார்வையாளர்களிடம்) கதைசொல்லி: பெரிய மரங்கள் போல நிற்கும் ஆசிரியர்கள் மத்தியில் வியன் குட்டியாக ஒரு குட்டிப் பூ மாதிரி நின்று கொண்டிருக்கிறான். பாக்குற எனக்கே அவனைப் பார்த்தா பாவமா இருக்கு. உங்களுக்கு எப்படி? நம்ம மனசு வச்சா அவனைக் காப்பாற்ற முடியும். நீங்க சொல்லுங்க, அவனைக் காப்பாற்றுவோமா... வேண்டாமா? கூட்டம் (பார்வையாளர்கள்): காப்பாற்றுவோம்... காப்பாற்றுவோம்! கதைசொல்லி: அப்போ... எல்லாரும்... 'ஹா...' என்று வாயைத் திறந்து கொட்டாவி விடுங்கள்... விடுங்கள்... விட்டுத் தான் பாருங்களேன்...! (கதைசொல்லி 'ஹா வ் ‘ என்று கொட்டாவி விடுவது போல ஓசையோடு செய்கை செய்கிறார். அரங்கில் உள்ள கூட்டமும் 'ஹா' என்று கொட்டாவி விடுகிறார்கள். உடனே மேடையில் வியனும் பெரிய கொட்டாவி விடுகிறான்.) வியன்: ஹா...வ்....! (மீண்டும் அவன் வாயிலிருந்து ஒரு பெரும் புயல் கிளம்புகிறது. அது அங்கிருக்கும் எல்லா ஆசிரியர்களையும் பின்னால் தள்ளுகிறது. பின் ஒரு சுனாமி போல மாறி, அப்படியே ஒவ்வொரு ஆசிரியராக, தலைமையாசிரியர் உட்பட அனைவரையும் வியன் வாய்க்குள் இழுத்துக் கொள்கிறது. ஆசிரியர்கள் அனைவரும் வியன் வாய்க்குள் விழுந்து மேடையை விட்டு மறைகிறார்கள்.) காட்சி 3: வகுப்பறை & பட்டாம்பூச்சியின் வருகை (காட்சி மீண்டும் வகுப்பறைக்கு மாறுகிறது. எல்லா குழந்தைகளும் ஒரே ஆரவாரம் செய்கிறார்கள். இப்போது அந்தப் பள்ளியில் ஒரு ஆசிரியரும் இல்லை. அப்போது வகுப்பிற்குள் ஒரு பட்டாம்பூச்சி நுழைகிறது. அது முகத்தில் கண்ணாடியும், கையில் ஒரு குச்சியும், தோளில் ஒரு பையும் மாட்டியிருக்கிறது.) பட்டாம்பூச்சி: ஹாய் குழந்தைகளா...! குழந்தைகள்: ஹாய்...! (பட்டாம்பூச்சி தன்னுடைய கண்ணாடியை எடுத்துத் துடைத்து மீண்டும் அணிந்து கொள்கிறது.) குமார்: நீ ஏன் கண்ணாடி போட்டிருக்க? பட்டாம்பூச்சி: அதுவா... ஆசிரியர் அப்படின்னா கண்ணாடி, ஒரு குச்சி கையில, புக் இதெல்லாம் இருந்தா... ஒரு கெத்தா இருக்குமேனு... சரி விடு... இதெல்லாம் நமக்கு ஒத்தே வரல! (பட்டாம்பூச்சி கண்ணாடியைக் கழற்றி எறிகிறது. தோளில் போட்டிருந்த பையைக் கழற்றும் போது, அதனுடைய சிறகுகளில் ஒன்று கழன்று விடுகிறது. பட்டாம்பூச்சி நகைச்சுவையாகத் தன் உடலை அசைத்து, காற்றில் பறக்கிற அந்தச் சிறகைத் தாவிப் பிடிக்கிறது.) பட்டாம்பூச்சி: அய்யோ... சிறகுகள் ரொம்ப முக்கியம்பா... தேவை இல்லாததெல்லாம் போடுறதுனால பாருங்க... முக்கியமான சிறகே கழன்றுடுச்சு! குமார்: நீ தான் எங்க புது டீச்சரா? பட்டாம்பூச்சி: ஆமா.. வேற வழி... இந்த வியன் பையன், இருந்த எல்லா ஆசிரியர்களையும் முழுங்கிட்டான்... சிலபஸ் கவர் பண்ணனும்... ஒரே டென்ஷனா இருக்கு பா... இனிமே நாங்க தான் உங்களுக்கு ஆசிரியர்கள்! ரமா: நீங்கன்னா... இன்னும் வேற யாரெல்லாம் இருக்காங்க? பட்டாம்பூச்சி: அதோ நிக்கிறாங்களே... கரப்பான் பூச்சி, தவளை அண்ணன் அறிவியல் ஆசிரியர்கள். அப்புறம் நம்ம சிந்துசமவெளி நடன மங்கை (Indus dancing girl), டைனோசர் எலும்புக்கூடு, பானை ஓடு எல்லாரும் மியூசியத்துல இருந்து வந்துகிட்டு இருக்காங்க... வரலாறு பாடம் எடுக்க...! வியன்: ஐ... சூப்பர்... நான் கிளாசில் தூங்கும் போது இவங்க தான் என் கனவுல வருவாங்க... (குழந்தைகள் அனைவரும் ஒரே ஆரவாரம் செய்கிறார்கள்.) பட்டாம்பூச்சி: சரி வாங்க வகுப்புக்கு போவோம்! ரமா: ஏற்கனவே கிளாசில் தானே இருக்கோம்? பட்டாம்பூச்சி: இதுவா.. சீ சீ... இதில எப்டி பாடம் நடத்துறது? இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தா... எனக்கே எல்லா பாடமும் மறந்திடும் போலையே! (பட்டாம்பூச்சிக்குக் கொஞ்சம் மயக்கம் வர மாதிரி ஆகிறது... மூச்சு அடைக்கிற மாதிரி செய்கிறது... பிறகு ஒரு பெரிய கொட்டாவியை விடுகிறது.) (பட்டாம்பூச்சியின் வாயிலிருந்து வரும் கொட்டாவிப் புயல் காற்றில் குழந்தைகள் எல்லோரும் பின்னாடி தள்ளப்படுகிறார்கள். பின் ஒரு சுனாமி காற்று வீசுகிறது. அதில் எல்லோரும் ஒவ்வொருவராய்ப் பட்டாம்பூச்சியின் வாய்க்குள் போய்விடுகிறார்கள். இப்போது பட்டாம்பூச்சி தன் சிறகுகளை விரித்துப் பறந்து வெளியே போகிறது. மேடை ஒரு அழகான காடாக மாறுகிறது.) காட்சி 4: மாயாஜாலக் காடு (குழந்தைகள் ஒரு பெரிய இலையின் மீது இருந்த பட்டாம்பூச்சியின் முட்டைகளைப் பார்க்கின்றனர். அதிலிருந்து ஒரு குதி குதித்து ஒரு கம்பளிப்பூச்சி வெளியே வருகிறது.) ரமா: ஐ... கம்பளிப்பூச்சி! (கம்பளிப்பூச்சி ரமாவை ஒரு முறை முறைத்துவிட்டு இலைகளை வேகமாகச் சாப்பிட ஆரம்பிக்கிறது. சாப்பிட்டு முடித்த பிறகு...) கம்பளிப்பூச்சி: அப்பாடா... என்னா பசி.... ஏவ்! (பெரிய ஏப்பம் விடுகிறது) ரமா: என்னா தீனி திங்குற நீ? கம்பளிப்பூச்சி: அப்புறம் உன்ன மாதிரி கொரிப்பாங்களாக்கும்... (ரமா கோபமாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். இன்னொரு பக்கம் ஒரு கூட்டுப்புழு தன் தோலைக் கிழித்துக் கொண்டு வெளியே வர முயல்கிறது.) குமார்: (அதைத் தொடப் போகிறான்) கூட்டுப்புழு: ஏய்... போடா அங்கிட்டு... தொடாதே...! குமார்: ஏன் கோபப்படுற... நான் உனக்கு உதவி செய்யலாம்னு தானே வந்தேன். கூட்டுப்புழு: யாரு... நீயா? தட்டான் வாலுல கயிறைக் கட்டினவன் தானே நீ? குமார்: (ஈ என்று இளித்துக்கொண்டே) அது அப்போ... இப்போ நான் நெஜமாவே உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்தேன்... (கூட்டுப்புழு இன்னும் கொஞ்சம் தோலைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகிறது.) கூட்டுப்புழு: நீ சும்மா இருந்தாலே பெரிய ஹெல்ப் தான்... நான் வெளியே வந்ததும் என் ரெண்டு சிறகையும் எடுத்து உன்னை கும்பிடுறேன் பா... கொஞ்சம் தள்ளி நில்லு! (குழந்தைகள் அனைவரும் சிரிக்கிறார்கள்.) ரமா: டேய்... உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்குடா! குமார்: நீ மட்டும் என்ன... அந்த கம்பளிப்பூச்சிகிட்ட மொக்கை வாங்கினதை நானும் பாத்தேன்... வவ்! (கிண்டலாகப் பாவனை செய்கிறான்) (பதிலுக்கு ரமாவும் 'வவ்' என்று பாவனை செய்கிறாள். அப்போது அங்கே தவளை அண்ணன் ‘கொர்ர கொர்ர’ என்று சத்தம் போட்டுக்கொண்டே, குதித்து வருகிறார்.) தவளை அண்ணன்: வாங்க, அடுத்து நம்ம குளத்துக்குப் போவோம்... வியன்: குளத்துல நாங்க எப்படி வர்றது? மூழ்கிட மாட்டோமா? தவளை அண்ணன்: அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல... என்ன மாதிரியே தாவி தாவி வந்தா, அல்லிக் குளத்துல ஒரு இலையில இருந்து இன்னொரு இலைக்கு நீங்களும் தாவி தாவி போயிடலாம்... கமான் ஸ்டார்ட்! (தவளை தாவித் தாவிப் போக... பின்னாடியே வியன், ரமா, குமார் என எல்லோரும் தவளையைப் போலவே தாவித் தாவிப் பின்செல்கிறார்கள்.) காட்சி 5: அல்லிக் குளம் (கதைசொல்லி மேடையின் ஒரு பக்கமாக வந்து பார்வையாளர்களை நோக்கிப் பேசுகிறார்.) கதைசொல்லி: அடுத்ததா அவங்க எல்லோரும் குளத்துல போய் தவளை அண்ணனின் வாழ்க்கையைப் பார்த்தாங்க. உங்களுக்குப் பார்க்கணும்னா ரொம்ப ஈசி... நீங்களும் தவளை மாதிரி தாவி தாவிப் போனா, அவரை மாதிரியே அல்லி இலை மேல நிக்க முடியும். ஐயோ... மறந்தே போயிட்டேன்... நம்ம இங்க இந்த நாடகக் கொட்டகையிலேயே மாட்டிக்கிட்டு இருக்கிறோம்... முதல்ல நாம அவங்க இருக்குற குளத்துக்குப் போகணும். எல்லாரும் ஒரு தடவை கொர்ர கொர்ர’ன்னு அடித் தொண்டையில இருந்து கத்துங்க... (நாடக அரங்கில் உள்ள பார்வையாளர்கள்/குழந்தைகள் அனைவரும் கொர்ர கொர்ரன்னு' சத்தமாகக் கத்துகிறார்கள். மேடையில் கதைசொல்லி ஒரு பக்கமாக ஒதுங்கிக்கொள்ள, அல்லி இலைகளின் மீது குமார், ரமா, வியன் மற்றும் தவளை அண்ணன் நின்றிருக்கிறார்கள்.) கதைசொல்லி: அட... பார்த்தீங்களா.... நம்ம குளத்துக்கு வந்துட்டோம். தாவுங்க... தாவுங்க... எல்லாரும் மூழ்கிடுவோம்! (அப்படிச் சொல்லிக்கொண்டே கதைசொல்லி தாவித் தாவி மேடையை விட்டு வெளியேறுகிறார்.) குமார்: அண்ணன், நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க... மீன் மாதிரி நீந்தவும் செய்றீங்க... எங்கள மாதிரி நிலத்திலேயும் நடக்குறீங்க... தவளை அண்ணன்: என்ன இருந்து என்ன பண்ண... இந்த வாயால கெடுறேனே... (என்று தனக்குள்ளேயே முணுமுணுப்பது போலச் சொல்கிறது) ரமா: என்ன சொன்னீங்க? தவளை அண்ணன்: அது ஒண்ணுமில்ல... தவளைகள் வாழ்க அப்படின்னு சொன்னேன்! வியன்: அண்ணன்... அதோ பாம்பு...! தவளை அண்ணன்: அய்யோ...! (பயந்து தடுமாறி கீழே விழுகிறது) (எல்லாரும் சிரிக்கிறார்கள்.) தவளை அண்ணன்: அட போப்பா... சும்மா பயமுறுத்திக்கிட்டு! எல்லாரும் கிளம்புங்க... கிளாஸ் (Class) முடிஞ்சது! குமார்: சரி... கோச்சுக்காதீங்க. தவளை அண்ணன்: சரி... சரி... கோவம் எல்லாம் இல்ல.. நீங்க எல்லாம் நல்ல பிள்ளைங்க.. சரி நாளைக்கு பார்ப்போம். வியன்: என்னது கிளாஸ் முடிஞ்சதா... அப்போ எங்க ஆசிரியர்கள்...? தவளை அண்ணன்: அட.. கிளாஸ் அவங்களுக்குத் தான்...! ரமா: என்ன சொல்லுற... புரியலையே? தவளை அண்ணன்: நீங்க வந்தீங்க, பார்த்தீங்க, கேள்விகள் கேட்டீங்க... நாங்க அதுக்கு பதில் சொன்னோம்... அவ்வளவு தான்... நீங்களே கத்துக்கிட்டீங்க! குழந்தைகள்: ஆமா..! தவளை அண்ணன்: (அரங்கிலுள்ள பார்வையாளர்களைப் பார்த்து) ஆனா, உங்க ஆசிரியர்கள் நீங்க கேள்வி கேட்டா என்ன செய்தாங்க... நீங்க சொல்லுங்க? பார்வையாளர்கள் (குழந்தைகள்): திட்டுவாங்க... அடிப்பாங்க... வாயை மூட சொல்லுவாங்க...! தவளை அண்ணன்: இப்போ புரியுதா.. இந்த கிளாஸ் யாருக்குன்னு? வியன்: ஆனா எங்க ஆசிரியர்கள் பாவம்... அவங்களைக் காப்பாத்து... ப்ளீஸ்! தவளை அண்ணன்: அட நான் ஒன்னும் பண்ணலப்பா... உங்க ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்துல இருக்காங்க... (தரையைப் பார்த்து) கேக்குதா...? ரமா: என்ன பண்ணனும் சொல்லு... அவங்க எங்க இருக்காங்க? தவளை அண்ணன்: அவங்களும் இங்க தான்.. இந்த குளத்துல தான் இருக்காங்க... (மீண்டும் பார்வையாளர்களைப் பார்த்து) நீங்களே சொல்லுங்க... நம்ம எப்படி குளத்துக்கு வந்தோம்? குதிச்சு குதிச்சு... தாவி தாவி...! தவளை அண்ணன்: ஆமா... சரியா சொன்னீங்க... அவங்களும் அப்படி குதிச்சு குதிச்சு மேல வரலாம் தானே... நீங்களாவது சொல்லிப் பாருங்க... அவங்க கேக்குறாங்களான்னு பாக்கலாம்! குழந்தைகளும் பார்வையாளர்களும் இணைந்து: குதிச்சு வாங்க... தாவி வாங்க... தவளை மாதிரி பண்ணுங்க! (மேடையின் பக்கங்களிலிருந்தும், தரையோடு தரையாக கீழே இருந்து மேலே எழுந்து வருவது போலவும்... குதித்துக் குதித்துத் தவளை வடிவில் வந்து மேடையில் சேருகிறார்கள் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் தலைமையாசிரியரும்.) குழந்தைகள்: ஐ... யே...! (சந்தோஷமாகக் குதித்துச் சத்தம் போடுகிறார்கள்) வியன்: எல்லாம் சரி, இப்போ நாங்க எப்படி எங்க உலகத்துக்குப் போறது? தவளை அண்ணன்: எப்படி இங்க வந்தீங்க? குழந்தைகள்: கொட்டாவி விட்டு! தவளை அண்ணன்: இப்போ தூக்கம் கலைய கண் கசக்குங்க... (குழந்தைகள் அனைவரும் கண்ணைக் கசக்குகிறார்கள்.) தவளை அண்ணன்: (பார்வையாளர்களை நோக்கி) நீங்களும் கண்ணைக் கசக்குங்க... நீங்க வீட்டுக்கு போக வேணாமா? கதைசொல்லி: (அவசரமாக மேடைக்கு ஓடிவந்து) எப்பா... என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க... (அவரும் கண்ணைக் கசக்குகிறார்) தவளை அண்ணன்: போதும் போதும்... கண்ணு முழி வெளிய வந்துடப் போகுது... நிறுத்துங்க... இப்ப பாருங்க... நம்ம வந்துட்டோம்... ரமா: என்ன விளையாடுறியா... நம்ம அங்கேயே தான் இருக்கோம்... எங்க உலகம் எங்க? தவளை அண்ணன்: என்னது உங்க உலகமா? நாங்களும் அதே உலகத்துல தான் இருக்கோம்.. நாங்க மட்டும் என்ன வேற கோளிலிலிருந்தா வந்திருக்கிறோம்... இப்படி நேரா போய் ரைட் எடு... உங்க ஸ்கூல் (School) வந்துடும்... உங்க பள்ளிக்கூட த்துக்குப் பின்னாடி இருக்குற பார்க்ல (Park) தான் நம்ம இப்போ இருக்கோம்! குழந்தைகள்: அட... அப்படியா... நாங்க பயந்தே போயிட்டோம்...! ஆசிரியர்கள்: வாங்க போகலாம்...வியன்: சார் உங்க பிரம்பு.. (கையில் நீட்டிக்கொண்டே)அறிவியல் ஆசிரியர்: அது எதுக்கு டா இனிமே.. தூக்கி அங்கிட்டு போடு.. வியன் தோளில் அறிவியல் ஆசிரியர் கை போட்டுக்கொண்டார். (ஆசிரியர்கள் பழைய கோபங்கள் எல்லாம் மறந்து, தங்களின் இறுக்கமான உடல் மொழியை உடைத்து, அன்போடு குழந்தைகளை அணைத்துக் கொண்டும், தோளில் கைப் போட்டுக் கொண்டும் நெகிழ்ச்சியோடு மேடையை விட்டு வெளியேறுகிறார்கள்.) கதைசொல்லி: ( பாடுவதைப் போல ) நாடகம் பார்த்த குழந்தைகளுக்கு நன்றி, வணக்கம்! நாடகம் பார்த்த பெரியவர்களுக்கு நன்றி, வணக்கம்! நாடகம் பார்த்த ஆசிரியர்களுக்கு நன்றி, வணக்கம்! (திரை விழுகிறது) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.

  • வெள்ளாடே வெள்ளாடே

    (வெள்ளாடும் இறைச்சி கடைக்காரரும்) வெள்ளாடே வெள்ளாடே மேயப் போறியா? - நான் வேண்டும் தழை உனக்குத் தருவேன் கூட வருவியா ? காடு கரை அலைந்து திரிந்து சுற்றி வருவேன் - அட காலாற மேய்வதுதான் மகிழ்ச்சி தருமே! உனக்கு பிடித்த அகத்திக்கீரை உடைத்து தருவேன் - நீ தேடித் திரிந்து அயர வேண்டாம் கூட வந்திடு ! கொழுந்து புல்லைத் தின்றாலே வலிமை பிறக்கும் - என் குட்டிக்குத் தருவதற்கு பாலும் சுரக்கும்! கொட்டகையில் இடம் தருவேன் நனைய வேண்டாம் நீ கட்டிப்போட மாட்டேன் நான் கிட்ட வந்திடு ! வெட்டி தின்னும் உனது திட்டம் எனக்கு தெரியும் விட்டுவிடு ஓடிப் போவேன் விடுதலை வேண்டும்! குருங்குளம் முத்துராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம் பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர். இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

  • கோலம் போடும் விமானம்

    விமானம் செல்லும் சத்தம் கேட்டாலே வீட்டை விட்டு வெளியே போய் வானத்தைப் பார்ப்போம். அப்போது, சில நேரங்களில் விமானத்தின் பின்னால் நீண்ட வெள்ளை நிறக் கோடுகள் தோன்றுவதைக் கவனித்திருக்கிறீர்களா? அந்தக் கோடுகள் சில நிமிடங்களில் மறைந்துவிடும். சில சமயங்களில் பல மணி நேரம் வானத்திலேயே காணப்படும். இந்த வெள்ளைக் கோடுகளுக்குப் பெயர் “உறைநீர்த் தடங்கள்” எனப்படுகிறது. ஆங்கிலத்தில், “contrails”, அதாவது “condensation trails” எனப்படுகிறது. அது ஏன் தெரியுமா? பெரும்பாலான விமானங்கள் சுமார் 10-12 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கின்றன. அந்த உயரத்தில் காற்று மிகவும் மெல்லியதாகவும், மிகக் குளிர்ச்சியாகவும் இருக்கும். நாம் வெயில் தாங்க முடியாமல், இங்கே 35 °C வெப்பநிலையில் தவித்துக் கொண்டிருப்போம். ஆனால் விமானம் பறக்கும் உயரத்தில் வெப்பநிலை –40 °C முதல் –60 °C வரை குறைந்துவிடும். அதாவது, நம் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியைவிடப் பல மடங்கு குளிரான இடத்தில் விமானங்கள் பயணம் செய்கின்றன. விமானத்தின் இயந்திரம் எரிபொருளை எரித்து அந்த உந்துசக்தியில் முன்செல்கிறது. அப்போது, சூடான வாயுவும், நீராவியும் வெளிவரும். மிகவும் குறைந்த வெப்பநிலை கொண்ட இடத்தில் இருக்கும் நீர் மூலக்கூறுகள், விமானத்தில் இருந்து வெளிவந்த புகையில் இருக்கும் துகள்களின் மீது ஒட்டி, சிறிய பனித்துகள்களாக மாறுகிறது. கோடிக்கணக்கான இந்தப் பனித்துகள்கள் ஒன்றுசேர்ந்து நமக்குத் தெரியும் வெள்ளை நிறக் கோட்டை உருவாக்குகின்றன. இதுவே உறைநீர்த் தடங்கள். எல்லா விமானங்களும் எப்போதும் உறைநீர்த் தடங்களை உருவாக்குவதில்லை. வானத்தின் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றின் தன்மை போன்றவை சரியாக அமைந்தால் மட்டுமே இந்த வெள்ளைக் கோடுகள் தோன்றும். இந்த வெள்ளைக் கோடுகளைப் பார்த்தால், “இது ஜெட் விமானத்தின் தடம்” என்று சொல்வார்கள். ஏனெனில் அப்போது அதிக உயரத்தில் வேகமாகப் பறந்த இராணுவ ஜெட் விமானங்களே பெரும்பாலும் இவ்வாறு தெரிந்தன. ஆனால் இன்று, ஜெட் விமானங்கள் மட்டுமல்ல, நவீன பயணிகள் விமானங்களும் ஜெட் இயந்திரங்களால் வடிவமைக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் விமானமும் உறைநீர்த் தடங்களை உருவாக்கும். அடுத்தமுறை விமானத்தைக் கோடு மட்டும் போடாமல், கோலமும் போடு என்று சொல்லலாமா? ஹேமபிரபா இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் “உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில்” உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தோற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. சிறார்களுக்காக இவர் எழுதிய “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல் பரவலான வாசகர்களைச் சென்றடைந்து பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார். தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

  • நெத்திலி

    குழந்தைகளே! நான் நெத்திலிமீன் பேசுகிறேன். என்னை நீங்கள் மீன் சந்தைகளில் பார்த்திருக்கலாம். குட்டியாக, நீளமாக இருக்கும் மீன் இனம் நான். ஆங்கிலத்தில் என்னை Anchovy என்று அழைப்பார்கள். மலையாளத்தில் என் பெயர் நெத்தோலி. ஒரு சில நெத்திலி இனங்களைப் பொருவா என்றும் மீனவர்கள் அழைப்பார்கள். என் இனத்தில் 140 உறுப்பினர்கள் உண்டு. பெரும்பாலும் எங்கள் இனத்தவர்கள் 2 முதல் 40 சென்டிமீட்டர் நீளம்தான் இருப்போம். பெரும்பாலும் நீண்ட உடலுடன் இருப்போம். என் மூக்குப் பகுதியில் ஒரு சிறு உறுப்பு உண்டு. இது மின்சாரத்தை உணரும் உறுப்பு என்று சொல்கிறார்கள், ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு இது இன்னும் உறுதியாகத் தெரியவில்லையாம்.நீங்கள் வளர்ந்தபிறகு ஆராய்ச்சியாளராகி இந்த உறுப்பின் வேலை என்ன என்று கண்டுபிடிப்பீர்கள்தானே? நாங்கள் பெரும்பாலும் வெப்பமான கடல்களில்தான் வாழ்வோம். குளிர் கடல்களில் எங்களால் தாக்குப் பிடிக்க முடியாது. 12 டிகிரி செல்சியஸுக்கும் கீழே கடல் வெப்பநிலை இருந்தால் எங்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. சிறு சிறு மிதவை உயிர்களை சாப்பிட்டு நாங்கள் உயிர்வாழ்வோம். நாங்கள் எப்போதுமே கூட்டம் கூட்டமாக வாழ்வோம். கூட்டமாக நீந்தும் எங்களைப் பார்ப்பதே அழகான காட்சியாக இருக்கும். கூட்டமாக வாயைத் திறந்துகொண்டே நீந்தி மிதவை உயிர்களை சாப்பிடுவோம். பார்ப்பதற்குக் குட்டி மீனாக இருக்கிறேனே என்று என்னைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். நாங்கள் மிக முக்கியமான வணிக மீன் இனங்கள். பெருவில் இருக்கும் நெத்திலி இனங்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கிப் பிடிக்கின்றனவாம். நெத்திலிகளின் விலை குறைவு என்பதால் வறுமையில் இருப்பவர்களும் வாங்கி சாப்பிட முடியும், அவர்களுக்கான புரதச் சத்து இதன்மூலம் எளிதில் கிடைக்கும். அடுத்தமுறை மீன் சந்தைக்கு வரும்போது நெத்திலி மீன் இருக்கிறதா என்று பாருங்களேன். நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.

  • இலண்டனிலிருந்து அன்புடன் – 13

    குவெண்டின் பிளேக் (Quentin Blake) ஆங்கிலச் சிறார் இலக்கியத்தில் எழுத்தாளர் ரோல்ட் டால் (Roald Dahl) மிகவும் புகழ்பெற்றவர். அவரது Matilda, Charlie and the Chocolate Factory போன்ற புத்தகங்கள் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. ரோல்ட் டாலின் கதைகள் பல திரைப்படங்களாகவும் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இவரது புத்தகங்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. எழுத்தாளர் ரோல்ட் டால் எவ்வளவு பிரபலமானவரோ, அவருக்கு இணையாக ஓவியர் குவெண்டின் பிளேக் அவர்களும் எல்லோராலும் அறியப்பட்டவர். ஏனெனில், ரோல்ட் டாலின் பெரும்பாலான புத்தகங்களுக்கு இவர்தான் ஓவியங்கள் வரைந்துள்ளார். ரோல்ட் டாலின் எழுத்துகள் நமக்குக் கடத்தும் அதே சுவாரசியத்தை பிளேக்கின் ஓவியங்களும் நமக்குத் தரும். 1932இல் பிறந்த பிளேக், கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு ஆசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் ஓவியம் பற்றி முறையான கல்வி ஏதும் பெறாமலேயே, அவர் ஒரு சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார். பின்னாட்களில், ஓவியக் கல்லூரியில் பகுதி நேரமாகப் படித்துத் தன் திறமையை வளர்த்துக் கொண்டார். இவரது ஓவியங்கள் முதன்முதலில் The Wonderful Button என்ற புத்தகத்தில் வெளிவந்தன. தற்போது 90 வயதைத் தாண்டியும் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களுக்கு இவர் ஓவியங்கள் வரைந்துள்ளார். அதில் ரோல்ட் டாலின் புத்தகங்கள் மட்டும் 18 ஆகும். ஓவியம் வரைவதுடன் நின்றுவிடாமல், அவரே சொந்தமாக 35 புத்தகங்களையும் எழுதியுள்ளார். சிறார் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான 'ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருது' (Hans Christian Andersen Award) பெற்றார். அதுமட்டுமல்லாமல், பிரித்தானிய குழந்தைகள் இலக்கியத்திற்கான முதல் 'Children's Laureate' என்ற பெருமையும் இவரையே சேரும். அவரது ஓவியங்களுக்காகவும், ஓவியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அவர் கடந்த மாதம் (05/06/2026) ஓவியங்களுக்கான அருங்காட்சியகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஓவியங்களுக்கென இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுவே ஆகும். "உலகை மாற்றும் பெரும் சக்தி ஓவியங்களுக்கு உண்டு; அதனை உலகிற்கு வலியுறுத்துவதற்காகவே இந்த அருங்காட்சியகம் செயல்படும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார். சரி வாருங்கள்! இவ்வளவு சிறப்புகள் மிக்க பிளேக் எழுதிய புத்தகங்களில் ஒன்றான Never Grow Up என்ற புத்தகத்தைப் பற்றி இனிப் பார்ப்போம். “Never Grow Up” – ரோல்ட் டாலின் புகழ்பெற்ற வாசகம் இது. இந்த வாசகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பிளேக் அவர்கள் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளார். பிளேக் அவர்களின் ஓவியங்கள் மிகவும் தனித்துவமானவை. ஒரு தேர்ந்த ஓவியக் கலைஞரின் ஆற்றலுடன், குழந்தைத்தனமும் இதில் வெளிப்படும். இவரது ஓவியங்கள் 'Scribble' (அதாவது, கிறுக்கல் போன்ற) வகைமையைச் சார்ந்தது. அதனால், குழந்தைகள் நீங்கள் வரைவது போன்றே இது இருக்கும். இந்தப் புத்தகம், “நீங்கள் சமத்தாக இருக்கும் குழந்தையா? பெரியவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்பவரா? அப்படியென்றால் இந்தப் புத்தகத்தை வாங்கி, நீங்கள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள்” என்று முதல் பக்கமே மிகவும் அதிரடியாகத் தொடங்குகிறது. அதன் இரண்டாவது பக்கத்தில், “நீங்கள் தற்போது இரண்டாவது பக்கத்திற்கு வந்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால், இந்தப் புத்தகம் உங்களுக்கானது இல்லை. தயவுசெய்து புத்தகத்தை மூடிவிடுங்கள்” என்று மேலும் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. “நான் சொல்லியும் கேட்காமல் நான்காவது பக்கத்திற்கு வந்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் குறும்பான சேட்டைகள் செய்யும் ஒரு சுட்டிதான்!” என்று இந்தப் புத்தகம் உங்களை வரவேற்கிறது. அடுத்த சில பக்கங்களில், குழந்தைகள் நீங்கள் செய்யும் சேட்டைகளையெல்லாம் அழகான ஓவியங்களுடன் படம் பிடித்துக் காட்டுகிறது. அதன் பிறகு, "பெரியவர்கள் பெரும்பாலும் வளர்ந்த பிறகு ஏன் சுவாரசியமற்ற விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்? ஆனால், வெகு சிலரே வாழ்வில் சுவாரசியமான விஷயங்களைச் செய்து, தங்களையும் தங்கள் சுற்றத்தாரையும் மகிழ்விக்கிறார்கள். அவர்கள்தான் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருகிறார்கள்; அவர்கள்தான் புதிய இனிப்புகளை உருவாக்குகிறார்கள்; அவர்கள்தான் அழிந்து போகும் உயிரினங்களைக் கூட மீட்கிறார்கள்; அவர்கள்தான் பெரிய அளவிலான சாக்லேட் கேக்குகளைத் தயாரிக்கிறார்கள்" எனப் பெரிய பட்டியலையே தருகிறார். எனவே, நீங்களும் அந்தச் சிலரைப் போல் இருங்கள்; நிறைய சேட்டைகள் செய்யுங்கள்; நிறைய குறும்புத்தனம் செய்யுங்கள். ஒரே மாதிரியான உலகத்தில் புதிய, சுவாரசியமான நல்ல விஷயங்களைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, தலைகீழாக நிற்கும் ஒரு குழந்தையின் ஓவியத்துடன் இந்தப் புத்தகத்தை நிறைவு செய்கிறார். இந்தப் புத்தகம் “Never Grow Up, always down!” என்ற வாசகத்துடன் நிறைவடைகிறது. (நாம் தலைகீழாக நிற்கும்போது, 'கீழ் நோக்கி வளருங்கள்' என்று சொல்வதுதானே சரி! அதாவது, மாற்றி யோசியுங்கள் என்கிறார்.) பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.

  • புறக்கோள்கள்: சூரியக் குடும்பத்திற்கு அப்பால்...

    இரவு நேர வானத்தை எண்ணற்ற விண்மீன்கள் கண்களில் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். "பரந்த இந்தப் பேரண்டத்தில் பூமியைப் போன்ற உலகங்கள் வேறு எங்காவது உள்ளனவா? அங்கேயும் உயிர்கள் வாழ்கிறார்களா?" இந்தக் கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனைச் சிந்திக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் வானியல் அறிவியல் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் பயணத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இன்று நமது சூரியனைத் தவிர பிற விண்மீன்களைச் சுற்றியும் ஆயிரக்கணக்கான கோள்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவையே புறக்கோள்கள் (Exoplanets) என்று அழைக்கப்படுகின்றன. புறக்கோள் என்றால் என்ன? நமது பூமி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றுகின்றன. ஆனால் சூரியனை அல்லாமல், வேறு ஏதாவது ஒரு விண்மீனைச் சுற்றிவரும் கோள் புறக்கோள் எனப்படுகிறது. ஒவ்வொரு விண்மீனும் ஒரு புதிய சூரியனாகக் கருதலாம். அவற்றைச் சுற்றியும் கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் போன்றவை இருக்கலாம். ஒரு காலத்தில் சூரியக் குடும்பம் மட்டுமே கோள்களைக் கொண்ட அமைப்பு என்று கருதப்பட்டது. இன்று அந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. வானியலாளர்கள், நமது பால்வெளி மண்டலத்தில் மட்டுமே நூற்றுக்கணக்கான பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று மதிப்பிடுகின்றனர். அதாவது, நாம் வானில் காணும் பெரும்பாலான விண்மீன்களுக்கும் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது. புறக்கோள்களின் கண்டுபிடிப்பு 1992 ஆம் ஆண்டில் முதல் முறையாக சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அவை ஒரு துடிப்பு விண்மீனைச் சுற்றி வந்தன. பின்னர் 1995 ஆம் ஆண்டு 51-பெகாசி-b என்ற கோள், சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுவதாகக் கண்டறியப்பட்டது. இது வானியலில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக மைக்கேல் மேயர் மற்றும் திதியர் கியூலோஸ் ஆகியோர் 2019-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர். அதன்பிறகு புறக்கோள்களைத் தேடும் ஆய்வுகள் வேகமடைந்தன. இன்று ஆயிரக்கணக்கான புறக்கோள்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன; மேலும் புதிய கோள்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. புறக்கோள்களைக் கண்டுபிடிப்பது எப்படி? புறக்கோள்களை நேரடியாகப் பார்ப்பது மிகவும் கடினம். அவை தங்களது விண்மீனின் பிரகாசத்தில் மறைந்து விடுகின்றன. எனவே விஞ்ஞானிகள் பல நுட்பமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். கடத்தல் முறை (Transit Method):ஒரு கோள் தனது விண்மீனின் முன்னால் கடந்து செல்லும்போது, அந்த விண்மீனின் ஒளி மிகச் சிறிதளவு மங்குகிறது. இந்த மங்கலை மிகத் துல்லியமாக அளந்து கோளின் இருப்பை உறுதிப்படுத்துகின்றனர். ஆரவியல் வேக முறை (Radial Velocity):ஒரு கோளின் ஈர்ப்பு விசையால் அதன் விண்மீன் மிகச் சிறிது அசைகிறது. அந்த அசைவின் வேக மாற்றத்தை அளந்து, கோளின் நிறை மற்றும் சுற்றுப்பாதையை கணக்கிடுகின்றனர். நேரடிப் படமெடுத்தல் (Direct Imaging):சில அரிய சந்தர்ப்பங்களில், விண்மீனின் ஒளியை மறைத்து அதன் அருகிலுள்ள கோளை நேரடியாகப் படம் எடுக்க முடிகிறது. ஈர்ப்புக் கண்ணாடி முறை (Gravitational Microlensing):ஈர்ப்புப் புல ஒளிவிலகல் என்ற நிகழ்வைப் பயன்படுத்தி, தொலைவில் இருக்கும் கோள்களையும் கண்டறிய முடிகிறது. புறக்கோள்களின் பல்வேறு வகைகள் எல்லாப் புறக்கோள்களும் பூமியைப் போல இருப்பதில்லை. பாறைக் கோள்கள் – பூமி, செவ்வாய் போன்ற திடமான மேற்பரப்பைக் கொண்டவை. பெருவாயுக் கோள்கள் – வியாழன், சனி போன்ற வாயுக்களால் ஆன மாபெரும் கோள்கள். சூடான வியாழன்கள் (Hot Jupiters) – தங்கள் விண்மீனை மிக அருகில் சுற்றுவதால் ஆயிரக்கணக்கான டிகிரி வெப்பநிலையைக் கொண்டவை. மிகப் பெரிய பூமிகள் (Super-Earths) – பூமியைவிடப் பெரியதாக இருந்தாலும் பாறை உலகங்களாக இருக்கக்கூடியவை. சிறிய நெப்டியூன்கள் (Mini-Neptunes) – பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடைப்பட்ட அளவுடைய கோள்கள். இந்த உலகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான இயற்கை அமைப்புகளைக் கொண்டுள்ளன. வியப்பூட்டும் சில புறக்கோள்கள் கெப்ளர்-186f பூமியை ஒத்த அளவுடைய முதல் முக்கியமான புறக்கோள்களில் ஒன்றாகும். அது தனது விண்மீனின் வாழ்வதற்கேற்ற வளையத்தில் அமைந்துள்ளது. புராக்ஸிமா சென்டவுரி-b நமது சூரியக் குடும்பத்திற்கு மிகவும் அருகிலுள்ள விண்மீனைச் சுற்றிவருகிறது. வருங்காலத்தில் மனிதன் முதலில் ஆராயக்கூடிய புறக்கோள்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். டிராப்பிஸ்ட்-1 உலகம் முழுவதும் வானியலாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இதில் பூமியின் அளவுக்கு ஒத்த ஏழு கோள்கள் உள்ளன. அவற்றில் மூன்று கோள்கள் வாழ்வதற்கேற்ற வெப்பநிலை கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கற்பனைக்கும் எட்டாத உலகங்கள் புறக்கோள்களில் சில மனிதக் கற்பனையையும் மிஞ்சுகின்றன. சில கோள்களில் இரும்புத் துகள்கள் மழையாகப் பொழிகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சில உலகங்கள் முழுவதும் உருகிய பாறைக் கடல்களால் மூடப்பட்டிருக்கலாம். சில கோள்களில் ஒரு பக்கம் எப்போதும் பகலும், மறுபக்கம் எப்போதும் இரவும் நிலவுகிறது. சிலவற்றில் மணிக்கு பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. சில கோள்களில் இரண்டு அல்லது மூன்று சூரியன்கள் உதயமாகும். அங்கு சூரிய அஸ்தமனம் கூட பூமியில் நாம் காணாத வண்ணங்களில் தோன்றக்கூடும். உயிர்கள் வாழும் உலகங்களைத் தேடும் மனிதன் புறக்கோள்களை ஆய்வு செய்வதன் மிக முக்கியமான நோக்கம், பூமியைப் போன்ற மற்றொரு உலகைக் கண்டுபிடிப்பதே ஆகும். ஒரு கோளில் திரவ நீர், ஏற்ற வெப்பநிலை, வளிமண்டலம் ஆகியவை இருந்தால் அங்கே உயிர்கள் தோன்றும் வாய்ப்பு இருக்கலாம். இதற்காக விஞ்ஞானிகள் வாழ்வதற்கேற்ற மண்டலமாகக் கருதப்படும் பகுதிகளை அதிகமாக ஆராய்கின்றனர். ஆனால், ஒரு கோள் அந்த மண்டலத்தில் இருப்பதால் மட்டுமே அங்கு உயிர்கள் இருக்கும் என்று கூற முடியாது. அதேபோல், அந்த வளையத்திற்கு வெளியே உயிர்கள் இருக்கவே முடியாது என்றும் கூற முடியாது. பூமியில் கடுமையான வெப்பம், கடும் குளிர், ஆழ்கடல், எரிமலைப் பகுதிகள் போன்ற இடங்களிலும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. எனவே உயிரின் எல்லைகளைப் பற்றிய நமது புரிதல் இன்னும் முழுமையடையவில்லை. புதிய தலைமுறை விண்வெளித் தொலைநோக்கிகள் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி, ஆயிரக்கணக்கான புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்து வானியலில் புரட்சியை ஏற்படுத்தியது. 2009 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி, ஒரே நேரத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் விண்மீன்களின் ஒளியைத் தொடர்ந்து கண்காணித்தது. ஒரு கோள் தனது விண்மீனின் முன் கடந்து செல்லும்போது ஏற்படும் மிகச் சிறிய ஒளிக்குறைவைக் கண்டறிந்து, ஆயிரக்கணக்கான புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்தது. புறக்கோள்கள் பிரபஞ்சத்தில் அரிதானவை அல்ல, மாறாக மிகவும் பொதுவானவை என்பதை உலகிற்கு நிரூபித்தது இந்தத் தொலைநோக்கியே. அதைத் தொடர்ந்து புறக்கோளாய்வு விண்கலம் (TESS) புதிய கோள்களைத் தொடர்ந்து தேடி வருகிறது. கிட்டத்தட்ட முழு வானத்தையும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆய்வு செய்து, பூமிக்கு அருகிலுள்ள ஆயிரக்கணக்கான விண்மீன்களை ஆராய்ந்து புதிய புறக்கோள்களைக் கண்டுபிடித்து வருகிறது. இப்போது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளது. இது சில புறக்கோள்களின் வளிமண்டலத்தில் நீராவி, கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து வருகிறது. எதிர்காலத்தில் அந்த வளிமண்டலங்களில் உயிரினங்களின் செயல்பாட்டைக் குறிக்கக்கூடிய வேதியியல் தடயங்களைக் கண்டறியவும் இந்தத் தொலைநோக்கி உதவலாம். விண்வெளித் தொலைநோக்கிகள் மட்டுமல்லாமல், பூமியிலும் மிகப் பெரிய தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன. மிகப்பெரும் தொலைநோக்கி, கெக் ஆய்வு மையம் போன்றவை பூமியில் இருந்து கொண்டே புறக்கோள்களின் நிறை, சுற்றுப்பாதை மற்றும் பிற இயற்பியல் பண்புகளைத் துல்லியமாக அளக்கின்றன. விரைவில் செயல்படவுள்ள அளப்பரிய தொலைநோக்கி தனது 39 மீட்டர் விட்டமுள்ள பிரதானக் கண்ணாடியின் உதவியுடன், பூமியை ஒத்த சிறிய புறக்கோள்களையே நேரடியாகப் படம்பிடிக்கும் திறனைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதன் அங்கு செல்ல முடியுமா? இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்கள் அனைத்தும் நம்மிடமிருந்து பல ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. ஒளி ஒரு வினாடிக்கு சுமார் மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தாலும், அருகிலுள்ள சில புறக்கோள்களிலிருந்து வரும் ஒளியே பூமியை அடைய நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இன்றைய விண்கலங்களின் வேகத்தில் அங்கு செல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். எனவே மனிதன் தற்போது அவற்றை நேரில் சென்றடைவதைவிட, சக்திவாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியால் தொலைவிலிருந்தே அவற்றைப் பற்றி அறிந்து வருகிறது. ஒரு காலத்தில் பூமி மட்டுமே உயிர்கள் வாழும் உலகம் என்று மனிதன் நம்பினான். இன்று அந்த எண்ணம் மாறியுள்ளது. பேரண்டம் எண்ணிலடங்கா விண்மீன்களாலும், அவற்றைச் சுற்றும் கோள்களாலும் நிரம்பியுள்ளது என்பதை அறிவியல் வெளிப்படுத்தியுள்ளது. அந்த உலகங்களில் எங்காவது உயிர்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த விடையைத் தேடும் பயணமே மனித அறிவியலின் மிகப் பெரிய சாகசங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. எதிர்வரும் காலத்தில் ஒருநாள், தொலைவில் உள்ள ஒரு சிறிய நீல நிறக்கோளின் வளிமண்டலத்தில், உயிரின் முதல் உறுதியான சான்றை மனிதன் கண்டுபிடிக்கலாம். அந்நாள், வானியல் வரலாற்றில் மட்டுமல்ல, மனித வரலாற்றிலேயே மறக்க முடியாத நாளாக இருக்கும். எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • அறிவோம் ஆளுமை - 16

    பெண்களின் ஒளி விளக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நகுலன் : ஜோ அத்தை... நேற்று அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க. ஜோ : என்ன சொன்னாங்க? நகுலன் : என் திருமணத்தின் போது, "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்" மூலம்தான் எனக்குப் பண உதவி கிடைச்சது என்றாங்க. ரதி: ஆனால்,என்னோட பக்கத்து வீட்டில் இருக்கிற 11ஆம் வகுப்பு படிக்கிற சிந்து அக்கா அவருக்கு அந்தத் திட்டத்தின் வழியாக மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகக் கூறினார்களே. படிப்பதற்குப் பணமும் கொடுத்து திருமணத்திற்கும் பணம் கொடுக்கிறார்களா? ஜோ : பரவாயில்லையே இவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறீர்களே மகிழ்ச்சி. இந்த கேள்வி கூட மிகச் சரியான கேள்விதான். இத்திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு திருமணத்தின் போது நிதியுதவியும் இத்துடன் தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்க்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் ஆக மாற்றி அமைக்கப்பட்டது. நகுலன் : அவர் என்ன செய்தார் அத்தை? ஜோ : அவர் வாழ்க்கையே ஒரு போராட்டம். பிறருக்காக மட்டுமல்ல... முதலில் தன்னுடைய வாழ்க்கையை மீட்டெடுத்தவர். ரதி : எப்படி? ஜோ : 1883-ல் திருவாரூர் பகுதியில் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். குடும்பம் மிகவும் ஏழ்மை. அந்தக் காலத்தில் பெண்களின் வாழ்க்கை இன்று போல இல்லை. ஐந்து வயது குழந்தையாக இருந்தபோதே, வறுமையால் அவருடைய அம்மாவே அவரை இன்னொரு தேவதாசி பெண்ணிடம் பத்து ரூபாய்க்கும் ஒரு பழைய சேலைக்கும் விற்றுவிட்டார். நகுலன் : என்ன? ஐந்து வயசு குழந்தையையா? ஜோ : ஆமாம். அது அவர் விருப்பம் இல்லை. அக்காலத்தில் பல ஏழைப் பெண்களுக்கு நடந்த கொடுமைகளில் இதுவும் ஒன்று. நகுலன் : தேவதாசி முறை என்பது குழந்தைகளை ஒருவருக்கு விற்றுவிடுவது அல்ல கோயிலுக்குக் கொடுப்பது தானே? ரதி : அந்தக் காலத்தில் சில சிறுமிகளை கோவிலுக்கு "கடவுளின் சேவகி" என்று அர்ப்பணித்து விடுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சுதந்திரமாக வாழ முடியாது. தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளவும் முடியாது. சரிதானே அத்தை? ஜோ : சரிதான். அது மட்டும் இல்லாமல் சமூகத்தில் அதிகாரம் கொண்டவர்கள் அவர்களைச் சுரண்டினர். அந்த முறை பெண்களுக்கு மிகப் பெரிய அநீதி. உனக்கு இது எப்படித் தெரியும்? ரதி : அத்தை மறந்து விட்டீர்களா நீங்கள் தானே முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றிக் கூறும் போது இது பற்றிக் கூறினீர்கள். ஜோ : மகிழ்ச்சி. பரவாயில்லையே. நான் கூறியதை நினைவில் வைத்திருக்கிறீர்களே! நகுலன் : அவர் எப்படி அதிலிருந்து வெளியே வந்தார்? ஜோ : அவரை வளர்த்த ஆச்சிக்கண்ணு என்ற தேவதாசி, அவருக்கு இசை, நடனம், சமஸ்கிருதம் எல்லாம் கற்றுக் கொடுத்தார். பத்து வயதிலேயே நல்ல கலைஞராக வளர்ந்தார். ஆனால் பதினேழு வயதில் அறுபத்தைந்து வயது மனிதருடன் திருமணம் செய்து வைக்க முயன்றபோது அவர் உறுதியாக மறுத்துவிட்டார். ரதி : என்னது இவருக்குப் பத்து வயது. 60 வயது இருக்கும் கிழவனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்களா? பரவாயில்லை எப்படியோ மறுத்துவிட்டார். ஜோ : அந்தக் காலத்தில் மறுப்பது பெரிய துணிச்சல். பிறகு அவருக்கு இசை கற்றுக் கொடுத்த சுயம்பு பிள்ளையைத் தன் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார். மதச் சடங்குகள் இல்லாமல், மிக எளிமையாக நடந்த அந்தத் திருமணம் பின்னாளில் "சுயமரியாதைத் திருமணங்களுக்கு" ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டது. நகுலன் : அதாவது, அவர் தன் வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஆரம்பித்தார். ஜோ : சரியாகச் சொன்னாய். பிறகு, தான் மட்டும் தப்பித்தால் போதாது. மற்ற பெண்களும் விடுதலை பெற வேண்டும். என்று முடிவு செய்தார். ரதி: அதன் பிறகு தேவதாசி முறைக்கு எதிராகப் போராடினாரா? ஜோ : ஆமாம். 1917–1918 காலத்திலிருந்தே அவர் தேவதாசி ஒழிப்புப் பணியைத் தொடங்கினார். தேவதாசி பெண்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, இந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வாருங்கள். என்று அவர்களிடம் பேசினார். நகுலன் : அவர்கள் உடனே சம்மதித்தார்களா? ஜோ : எல்லோரும் இல்லை. சிலர் பயந்தார்கள். சிலர் இதுதான் வாழ்வாதாரம் என்று நினைத்தார்கள். சிலர் எதிர்த்தார்கள். ஆனாலும் அவர் விடவில்லை. ரதி : பிறகு? ஜோ : வெளியே வர விரும்பிய பெண்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, புதிய வாழ்க்கை தொடங்க உதவினார். நகுலன் : அதெல்லாம் அவர் ஒருத்தரே செய்தாரா? ஜோ : ஆரம்பத்தில் பெரும்பாலும் தனியாகத்தான் செய்தார். பிறகு அந்தப் பெண்களையே உறுப்பினர்களாகக் கொண்டு நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பையும் உருவாக்கினார். பின்னர் அது தேவதாசி ஒழிப்புப் போராட்டத்தின் முக்கிய அமைப்பாக வளர்ந்தது. ரதி : சாவித்திரிப்பாய் பூலேவை எப்படி எதிர்த்தார்களோ! அப்படி இவருக்கும் எதிர்ப்பு வந்திருக்கும் தானே அத்தை? ஜோ : ஆமாம். நிலக்கிழார்கள், சில பூசாரிகள், அதிகாரம் படைத்தவர்கள், தேவதாசி முறையை ஆதரித்தவர்கள் பலரும் எதிர்த்தார்கள். மிரட்டினார்கள். சமூகமாக ஒதுக்கினார்கள். ஆனாலும் அவர் அஞ்சவில்லை. நகுலன் : அஞ்சாமல் இருந்ததனால்தான், சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார். அவர் ஏதாவது கட்சியில் இருந்தாரா? ஜோ : ஆமாம். இந்திய விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். காந்தியின் கதர் இயக்கத்தை முழு மனதுடன் ஆதரித்தார். தெருத்தெருவாகச் சுமந்து சென்று விற்றார். அவரும் கதர் ஆடையே அணிந்தார். தேவதாசி பெண்களையும் கதர் அணியச் செய்தார். நகுலன் : அவர் வீட்டிலேயே ஒரு அறிவிப்பு பலகை வைத்திருந்தாராமே? ஜோ : கதர் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே வரலாம் என்று எழுதி வைத்திருந்தார். ஒருமுறை காவல்துறை அதிகாரி வந்தபோது, அவர் கதர் அணியாததால் முன்வாசல் வழியாக வரத் தயங்கியதாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அது சரி இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்? நகுலன் : அத்தை என் அம்மாவிடம் கேட்டேன் அவர் இவரைப் பற்றி நிறைய கூறினார். நானும் ரதியும் இதைப்பற்றி நிறைய உரையாடி இருக்கிறோம். ஜோ : பரவாயில்லையே இதைப் பற்றி எல்லாம் கூட உன் அம்மா கூறி இருக்கிறாரே. மகிழ்ச்சி. இன்னும் ஒன்று. காகிநாடா காங்கிரஸ் மாநாட்டில் தேசியக் கொடியைப் பிடித்து வரக் கூடாது என்று ஆங்கிலேய அரசு தடை விதித்தது. அப்போது அவர் பல தேசியக் கொடிகளைத் தைத்து ஒரு சேலையாக அணிந்துகொண்டு ஊர்வலத்தில் நடந்தார்! ரதி : வாவ்! அப்படியும் யோசிக்கலாமா? என்ன ஒரு புத்திசாலித்தனம்! ஜோ : அதனால்தான் காந்தியும் அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். பின்னர் அண்ணாதுரை, காந்தி சமூகப் பணிக்காகத் தேடிய பெண் மூவலூர் அம்மையார்தான் என்று புகழ்ந்தார். ரதி : பெரியாருடனும் சேர்ந்து பணியாற்றினாரா? ஜோ : ஆமாம். திரு.வி.க., பெரியார், நீலாம்பிகை, முத்துலட்சுமி ரெட்டி போன்றோருடன் இணைந்து தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டார். சுயமரியாதை இயக்கத்தின் அறிக்கையை உருவாக்குவதிலும் பங்கு பெற்றார். கிராமங்களில்கூட தேவதாசி முறை ஒழிய வேண்டும் என்று தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். சட்டம் மட்டும் போதாது, பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ரதி : அவர் ஏதோ ஒரு நாவல் எழுதி இருக்கிறார் தானே அத்தை? ஜோ : ஆமாம். தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதினார். அது தேவதாசி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்ட முக்கியமான நாவல். கட்டுரைகளும் எழுதினார். பெண்கள் விடுதலை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, தமிழ்ப்பற்று ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து எழுதினார். நகுலன் : அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் இருந்தாராமே? ஜோ : ஆமாம். 1938-ல் 577 மைல் நடந்தார். வழியிலேயே 87 பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கியமான பெண்களில் ஒருவராக இருந்தார். ரதி : அவர் நிறைய நல்ல வேலை செய்திருக்கிறார். அப்படியிருக்க அவரைப் பற்றி ஏன் அதிகம் பேசவில்லை? ஜோ : அதைத்தான் பல ஆய்வாளர்களும் கேட்கிறார்கள். சாதி, பாலினம், சமூகப் பின்னணி போன்ற காரணங்களால் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று பலர் கருதுகிறார்கள். நகுலன் : ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அது ஒரு சாதாரண பெயர் இல்லை.... சரித்திரத்தை மாற்றிய பெயர் என்று அவர் வாழ்க்கைக் கதையை என்னுடைய நண்பர்களிடம் கூறுவேன். ரதி : அத்தை எத்தனையோ பேரைப் பற்றிக் கூறி இருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் சமூகத்திற்காக எவ்வளவு செய்திருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையைக் கேட்கும்போது எனக்கும் நான் வளர்ந்த பிறகு சமூகத்திற்காக என் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஜோ : அதுதான் வரலாற்றின் உண்மையான பயன். ஒரு பெயரை மனப்பாடம் செய்வது அல்ல. அந்தப் பெயருக்குப் பின்னால் இருந்த மனிதரின் தைரியத்தையும் மனிதநேயத்தையும் அவர்களின் சமூகப் பங்களிப்பையும் நினைவில் வைத்துக் கொள்வதுதான். அதோடு நாமும் சமூகத்திற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். நகுலன் : கண்டிப்பாக செய்வோம் அத்தை என்ன ரதி சரியா? ரதி : சரிதான்! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும்

    தலகோதும் இளங்காத்து சேதி கொண்டுவரும் மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காதே கலங்காதே நீயும் நெஞ்சுக்குள்ளே இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல … வணக்கம் குழந்தைகளே! என்ன இது. படிச்ச புத்தகம் பத்தி சொல்லாம சினிமா பாட்டு படிக்கிறேன்னு நினைக்கறீங்களா? இல்ல குழந்தைகளே! இந்த பாட்டு வரியிலதான் நான் படித்த புத்தகத்தின் பெயரே இருக்குது. அது என்ன பெயர் தெரியுமா? விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி? அடடே! நீங்க நினைக்கிறது தெரியுது. இரண்டு புத்தகம் இல்ல… ஒரே புத்தகம் தான். ஆனா, இரண்டு பேரு. ஏன் அப்படீன்னு தெரிஞ்சுக்கனுமா? இந்த புத்தகம் பள்ளி பாடங்களைப் படிப்பது எப்படீங்கற விசயத்தை அறிவியல்பூர்வமான தகவல்களோடு சேர்த்துத் தந்திருக்காங்க. அதேசமயம், முழுவதும் தகவலாகவே இல்லாம, விரும்பி படிக்கும்படியாக ஒரு கதையாக கொடுத்திருக்காங்க. அப்ப, இதுல கதையும் இருக்கு கூடுதல் அறிவியல் உண்மைகளும் இருக்கு. அதுனாலதான் இரண்டு பெயர்கள். புரிஞ்சுதா! வாங்க, இனி புத்தகத்துக்குள்ளே போவோம். “படிப்பில் சுமாரான மாணவன் - என்பதே என்னைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கூற்று” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் நூலாசிரியர் கூறியுள்ள கற்பித்தல் உத்திகள் அடங்கியுள்ள நூல் இது. நூலாசிரியரை போலத்தான் இந்த புத்தகத்தில் வரும் கதிர் என்கிற சித்தப்பாவும். இந்த நூலும் முழுவதும் கற்றலில் சிறக்க நிறைய அறிவியல்பூர்வமான வழிகளை தளிர் என்கிற குழந்தைக்கு கற்றுத் தருகிறார். ஆனாலும் தளிர் பள்ளி இடைத்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்று மனச் சோர்விற்கு உள்ளாகிறாள். பிறகென்ன நடந்தது என்பதை அவசியம் நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களில் ஒரு புதிய மாற்றத்தை உணர்வீர்கள், குழந்தைகளே! இன்னமும் பழைய பாணியிலேயே கல்வியை அணுகும் அப்பா; தனது விருப்பங்களை சிதைத்து விடாது படிப்பில் முன்னேறத் துடிக்கும் மகள்; இவர்கள் இருவருக்கும் இடையில் தன் சுயத்தை கரைத்துக் கொண்ட அம்மா என பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகள் உள்ள குடும்பத்தை அப்படியே இந்நூல் பிரதிபலிக்கிறது. இவர்களுக்கிடையே தான் கற்ற அறிவியல் கோட்பாடுகளின்படி தீர்வு காண முனையும் சித்தப்பா கதாபாத்திரத்தின் வழியேதான் தளிருக்கு மட்டுமின்றி இந்நூலை வாசிக்க இருக்கிற அனைத்து குழந்தைகளுக்கும் புதிய வெளிச்சம் கிடைக்கிறது. சித்தப்பாவோடு நெருங்கிய தோழனைப்போல பழகத் தொடங்கும் தளிர் அவரின் வழியே கற்றலுக்கான நிறைய உத்திகளை கற்றுக்கொள்கிறாள். ஆனால், இவையனைத்தும் படிக்கும் மேசையில் அல்ல. ஐஸ்கிரீம் வாங்கும் போதும், சமையலறையில் காளிபிளவர் சமைக்கும்போதும் வேப்பமரத்தடி நிழலிலும். இப்படி கற்றுக்கொள்ளும்போதுதான் அவை தளிருக்கு படிப்பின் சுவை புரிகிறது. தனது மூளையை selfie எடுப்பது, படிப்பதற்கான தக்காளி முறை, பாடத்தை குறிப்பெடுப்பதில் உள்ள உத்தி, குறிப்புகளைக் கொண்டு தேர்விற்கு தயாராவதற்கான வழிமுறைகள் என பல விசயங்களை கற்றுக் கொள்ளும் தளிர் அதை இன்றைய தேர்வுமுறைகளின் தன்மை அறிந்து பயன்படுத்தவும் கற்றுக் கொள்கிறாள். இப்படி கற்கத் தொடங்கும்போது அவளது பாடங்களில் ஆழமான புரிதல் அவளுக்கு கிடைப்பதை வாசிப்பவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். ஒருமுறை தளிர் தனது சித்தப்பாவுடன் அவரது ஓவிய நண்பரின் வீட்டிற்கு செல்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அவர்களிடையே அங்கு நடக்கும் உரையாடலை தளிர் வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் கேட்கவும் பார்க்கவுமான வாய்ப்புகள் அமையுமானால் அது அதியற்புதமான தருணமாக அமையும். தோல்வி என்பது நிரந்தரமானதல்ல. தோல்வியைக் குறித்து நாம் யோசிக்கத் தொடங்கும்போதே வெற்றியின் வெளிச்சம் நம்மை நெருங்கத் தொடங்கிவிடும். தோல்வியை நாம் எப்படி அணுகப் போகிறோம் என்பதில்தான் தீர்வு அமைகிறது என்பதை அவர்களின் உரையாடலில் மகிழ்வாக நாம் கற்றுக் கொள்ள முடியும். அவர்களது உரையாடலில் வரும் ‘failcon' போன்ற கொண்டாட்டங்கள் குழந்தைகளுக்கு தோல்வியின் மீதான அச்சத்தை இல்லாமல் செய்துவிடக்கூடியது. யானையையும் பூனையையும் கொண்டு நமது மூளையின் செயல்பாட்டு இரகசியங்களை புரிந்துகொள்ளச் செய்வதுதான் இந்த நூலின் முதன்மையான பகுதி. தளிரின் வழியாக எழுப்பப்படும் நினைவுத்திறன் பற்றிய வினாக்கள் எல்லோரிடமும் எப்போதும் இருக்கக்கூடியவைதான். அதற்கான அறிவியல்பூர்வமான விளக்கங்களை இந்நூலின் வழியாக எளிதாக அறிந்து கொள்ள முடியும். புனைவாகவும் அல்புனைவாகவும் தலைப்பிட்டுள்ளதைப் போலவே இந்நூலை நாம் இரண்டு வழிகளிலும் அணுகலாம். இரண்டு வகைகளிலுமே நமது மனதிற்கு நெருக்கமாக இந்நூல் அமைந்திருக்கிறது. தன்னை சுமாரான மாணவன் என்கிற வரிகளுக்கு ஏற்புடையவனல்ல என கூறியபடி அறிமுகப்படுத்திக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் பயணிதரன் அவர்கள் இந்திய வெளியுறவுத்துறையின் உயர்பதவிகளில் பணியாற்றியவர். இந்தியத் தூதராக அஜர்பைஜான் போன்ற நாடுகளில் மதிப்பு பெற்றவர் என்பது இந்நூலின் உள்ளடக்கத்திற்கு சான்று அளிப்பதாக அமைந்திருக்கிறது. இப்படியொரு நூலை உருவாக்கவும் மாணவர்களின் உளவியலை நன்கு உணர்ந்தவர்களாகவும் கல்வியின் சிக்கல்களைக் களைய கவனம் செலுத்துபவர்களாகவும் தங்களது கல்விப் பணிகளை சீரமைத்து செயல்பட்டுவரும் SRV கல்வி நிறுவனத்தின் மதிப்பு மிக்க படைப்பு இது. இப்படியொரு படைப்பு ஒவ்வொருவர் கைகளிலும் தவழட்டும். வாங்கி படியுங்கள் குழந்தைகளே. க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.

  • எட்டு ரூபாய்ப் பொட்டுக் கடலை!

    பொட்டுக் கடலை வாங்கிட போனான் ஒரு சிறுவனே! எட்டு ரூபாய் பையிலே வைத்து விட்டார் அம்மாவும்! இட்டிலியும் சுவைத்திட பொட்டுக் கடலை சட்டினி! சிட்டாய் பறந்து போனவன் சீக்கிரம் வீடு திரும்பலை! தெருக் கோடியில் இருந்திட்ட கிணற்றை எட்டிப் பார்த்தவன் அருகே சென்று தன்முகத்தை ஆசை தீரப் பார்த்தானே! கெண்டை மீன்கள் கூட்டமாய் கிணறுக் குள்ளே ஓடின! கண்டு அவனும் மகிழ்ந்துமே கையை ஆட்டிக் கத்தினான்! கையில் அள்ளி கடலையை கிணற்றில் சிறுவன் வீசினான்! ஐயோ பாவம் பசிக்குதா? இந்தா என்றே கொட்டினான்! வெறுங்கை வீசி சிரிப்புடன் வீடு வந்த மகனிடம், தருமம் செய்த கதை கேட்டுத் தாயும் முத்தம் தந்தாரே! கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

  • வாசிப்புப் பண்பாடும் சிறார் இலக்கியமும் - 2

    நீங்கள் எப்படி வாசிக்கத் துவங்கினீர்கள்? என்ற கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் விதம் விதமான பதிலை நாம் பெறமுடிகிறது. தனித்துவமான பல பதில்களுக்கிடையே தனித்துவமான அனுபவங்களும் பொதுவான அனுபவங்களும் ஈர்ப்புடையதாக உள்ளன. அவ்வனுபவங்கள் அவர்களை வாசிப்பு என்ற நிலைக்கு உயர்த்துவதைப் பார்க்கமுடிகிறது. எங்கள் வீட்டில் தினமும் பைபிள் படிக்கும் வழக்கம் உண்டு. இரவு உணவிற்குப் பின் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஜெபம் சொல்லி பைபிள் படித்து முடித்துவிட்டு படுக்கச் செல்வோம். ஒவ்வொருவருக்கும் வாசிப்பு முறை வரும். ஓதக் கற்றுக் கொடுக்கும் பள்ளியில் தமிழ் குர்ரானை வாசிக்கும் வழக்கம் இருந்தது. கவனத்தோடு எல்லோரும் சேர்ந்தமர்ந்து பக்தியோடு படிப்போம். எங்கள் வீட்டில் அக்கா நாவல் படிக்கும் பழக்கம் உள்ளவள். அவள் படிக்கும் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி நானும் படிக்கத் துவங்கிவிட்டேன். அம்மா பெட்டிக்கடை வைத்திருந்தாள். பொட்டலம் மடிக்க பழைய புத்தகங்கள் கடைக்கு வாங்குவோம். அவற்றை அம்மா படித்துக் கொண்டே இருப்பார்கள். எனக்கும் படித்துக் காட்டுவார்கள். அப்படியே படிக்கத்துவங்கி... நான் நன்றாகப் படிப்பதால் என்னை கடிதம் வாசிக்கவும் வேறு எதையாவது வாசித்துக் காட்டவும் என்னை அழைப்பார்கள். மற்றவர்களுக்காகப் படித்துப் படித்து என் வாசிப்புப் பழக்கம் அதிகரித்தது. இதுபோன்று இன்னும் இன்னும் என பல அனுபவங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களின் இது போன்ற அனுபவங்களை பொதுவெளியில் பரவலாகப் பார்க்கிறோம். வாசிப்பு என்ற நிலை உருவானபொழுது ஒவ்வொரு எழுத்தும் மேன்மை பொருந்திய ஒன்றாகக் கருதப்பட்டு பதிப்பிக்கப் பட்டது. தமிழில் வாசிப்பு ஒரு கலாச்சாரமாக உருவெடுப்பதற்குக் காரணமாக அச்சு முறை இருந்தது. அதுவும் பக்தியோடு இணைக்கப்பட்ட ஒன்றாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. மொக மொக மொக மொக மொக மொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! நவீன வாசிப்பிற்கு முன்பும் ஏன் இன்றும் கூட தெருக்களிலும் கோயில்களிலும் திருவெம்பாவையை, திருப்புகழை, கந்த சஷ்டிக் கவசத்தை என பெரியவர்களும் அவர்களுடன் குழந்தைகளும் அமர்ந்து வாசிக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்து வருகிறது. குழந்தைகள் கை வைத்துக் கொண்டே பெரியவர்களையும் வாய்மொழிப்பதிவையும் பின் தொடர்கின்றனர். அதோடு தங்களுக்கு விருப்பமான இடங்கள் வரும்பொழுதும் சுவாரஸ்யாமான மொழிப்பிரயோகங்களுக்காகவும் காத்துக் கிடக்கின்றனர். வாசிப்பு இடங்களில் குழந்தைகளுக்குக் கிடைக்கும் மரியாதை அவர்களை மீண்டும் மீண்டும் அதை நோக்கி பயணிக்க வைக்கிறது. வழிபாட்டு முறைகளில் புதுமையை தனித்துவத்தை வித்தியாசமாகக் காட்டி வந்த வள்ளலார், ரமணர், நாராயணகுரு, மெய்வழிச்சாலை…போன்றவர்களின் வழிபாட்டு முறைகளிலும் வாழ்வியல் முறைகளிலும் மனித நேயத்தை முன் வைத்து செயல்பட்டனர். கூடிப்பாடி, பாடிப் படித்து, கூடிச் செயல்பட்டு என்ற இம்முறையில் குழந்தைகள் பங்கேற்றனர். ஆறுகால் வண்டினங்கா காட்டு மைனாவினங்கா அரங்கன் வந்ததை இங்கு யாரேனும் காணிரோ.... என்று பாடும் குழந்தைக்கு, பாடியதைக் கேட்கும் குழந்தைக்கு மொழியில், அனுபவத்தில், வாழ்வியலில் புதுமையைக் கொண்டுவருகிறது. வாசிப்புப் பழக்கத்திற்கான இலக்கிய வகைமையாக இவற்றையும் கொள்ளலாம். இசை, இணைந்த செயல்பாடு, நாடக பாணி, வாசிப்பு என எல்லாமுமாக இணைந்த பண்பாடாக அவை பிண்ணிப் பிணைந்து உள்ளது. (தொடர்ந்து பேசுவோம்) சாலை செல்வம் பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார். புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

  • அஞ்சலி

    இந்தியில்: அஞ்சிகா தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ மதிய வெயில் மெல்லத் தணிந்து, மாலை நேரத்தின் இளஞ்சூடு தெருவெங்கும் பரவியது. வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து சில பெண்கள் அன்றாடக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்க, பள்ளியிலிருந்து திரும்பிய சிறுவர்கள் தெருப் புழுதியில் ஓடி விளையாடத் தொடங்கினார்கள். அந்த அமைதியான சூழல், ஒரு செய்தி கேட்டுச் சட்டென்று கலைந்தது. எங்கிருந்தோ மூச்சிரைக்க ஓடிவந்த ஒரு பெண், "பக்கத்துத் தெருவில் இருக்கும் சமோசா கடைக்காரரின் இரண்டு பேரக்குழந்தைகளைக் காணவில்லையாம்" என்ற ஒரு தகவலைச் சொன்னாள். அந்த ஒரு கணம், அங்கிருந்த ஒவ்வொரு தாயின் இதயத்திலும் ஓர் இனம் புரியாத பயம் தொற்றிக்கொண்டது. விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளை அவசர அவசரமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று, பதற்றத்துடன் அணைத்துக்கொண்டார்கள். அப்போது தெரு முனையில், ஒரு சிறுவன் தள்ளாடி நடந்து வருவது தெரிந்தது. அவனுக்கு அதிகபட்சம் ஆறு வயது இருக்கலாம். ஆனால், அவனது உடலில் ஒரு பொட்டுத் துணிகூட இல்லை. பயத்தில் உறைந்துபோய், வெற்றுடம்போடு நடந்து வந்தான். தெருவில் வசிப்போர் ஓடிச்சென்று அவனைச் சூழ்ந்துகொண்டனர். "யார் இந்தப் பையன்? எங்கிருந்து வருகிறான்?" என்று கேள்விகள் எழுந்தன. அந்தச் சிறுவன் எதற்கும் பதிலளிக்கவில்லை. அவன் விம்மி அழுதுகொண்டிருந்தான். உடல் நடுங்கிக்கொண்டிருந்தான். பெரிய கொடூரத்தைச் சந்தித்துவிட்டு வந்திருப்பதை அவனது வெறித்த பார்வையைப் பார்த்துப் பலரும் உணர்ந்தார்கள். புகலிடம் ஏதுமற்ற அந்தச் சிறுவன், கூட்டத்தில் நின்றிருந்த ஒரு முதியவரின் காலடியில் தஞ்சம் புகுந்தான். காணாமல் போன குழந்தைகளில் ஒருவன் இவனாகத்தான் இருக்கும் என்று நினைத்து, சமோசா கடைக்காரரை அவசரமாக வரச்சொல்லி அழைத்தார்கள். பதற்றத்துடன் ஓடிவந்தவர், சிறுவனின் முகத்தைப் பார்த்துவிட்டு, "இவன் என் பேரன் இல்லை" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். சொந்தப் பேரன்கள் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவரது முகத்தில் இருந்ததே தவிர, அங்கிருந்த சிறுவனின் பரிதாப நிலையைப் பார்த்து அவரது மனம் சற்றும் இளகவில்லை. நேரம் செல்லச் செல்ல இருள் சூழ்ந்தது. களைப்பிலும் பயத்திலும் அந்தச் சிறுவன் தாத்தா வீட்டுத் திண்ணைக் கட்டிலிலேயே சுருண்டு படுத்துக்கொண்டான். மெல்ல மெல்ல உறங்கியும் போனான். அவனது உறக்கத்தோடு சேர்ந்து, அந்தத் தெருவின் நிஜமான முகமும் வெளிப்படத் தொடங்கியது. பயம் விலகியதும், அந்தச் சிறுவன் தங்களுக்குச் சம்பந்தமில்லாத அந்நியன் என்று தெரிந்ததும், மக்களின் மனிதாபிமானம் மெல்லத் தனது நிறத்தை மாற்றிக்கொண்டது. கூட்டத்தில் சிலர் பொறுப்பைத் தட்டிக்கழிக்க இரக்கமின்றி, "இவனை இப்படியே போலீசில் ஒப்படைக்கலாமே?" என்றார்கள். அதில் ஒருவர், "வேண்டாம், இவன் ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்கிறான். விடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம்" என்றார். ஆனால், அப்போது எழுந்த ஒரு கேள்வி எல்லோரையும் வாயடைக்க வைத்தது. "இன்று இரவு இவனை யார் வீட்டில் வைத்துக் கொள்வது? இவனுக்கு யார் உணவு கொடுப்பது?" என்று ஒருவர் கேட்டார். அதுவரை வாய் கிழிய மனிதாபிமானம் பேசியவர்கள் சட்டென்று தயங்கிப் பின்வாங்கினார்கள். "என் வீட்டில் இட நெருக்கடி", "என் குழந்தைகள் பயப்படுவார்கள்", "விடிந்ததும் போலீஸ் கேஸ் என்று அலைய முடியாது" என ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொல்லி சிறுவனை ஒதுக்க முயன்றார்கள். இரவு நெருங்க நெருங்க, அந்தப் பிஞ்சு உடம்பு எல்லோருக்கும் பாரமாகத் தெரியத் தொடங்கியது. அப்போது தெரு முனையில் அஞ்சலி நடந்து வருவது தெரிந்தது. அவளைக் கண்டதும் அங்கிருந்தவர்களின் முகங்களில் சட்டென்று நிம்மதி பிறந்தது. தங்களின் பொறுப்பையும், குற்ற உணர்வையும் தூக்கிப் போடுவதற்கு ஒரு வடிகால் கிடைத்துவிட்டது போல உணர்ந்தார்கள். 'அஞ்சலி இருக்கிறாளே, அவள் பார்த்துக் கொள்வாள்' என்ற சுயநலம் எழுந்தது. தாத்தா அவளை அழைத்து, "அஞ்சலி அம்மா, கொஞ்சம் இங்கே வா... உன் வீட்டில் ஒரு படுக்கையைச் சேர்த்துக் கொள். இந்தப் பையனைப் பார், இவனுக்கு இன்று இரவு தங்க இடம் கொடு" என்றார். அஞ்சலி, சிறுவனைப் பார்த்தாள். நள்ளிரவுக் குளிரில், ஆடையின்றி, சுருண்டு படுத்திருந்த பிஞ்சு உடலைக் கண்டதும் அவளது இதயம் கணத்தது. இத்தனை பேர் வசிக்கும் தெருவில், குளிரில் நடுங்கும் அந்தச் சிறுவனைப் போர்த்த ஒரு துண்டு கூடத் தர யாருக்கும் மனது வரவில்லை என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அஞ்சலி எதையும் யோசிக்கவில்லை. சமூகத்தின் பார்வையைப் பற்றியோ, விடிந்தால் வரப்போகும் வதந்திகளைப் பற்றியோ, அல்லது வீட்டிலிருக்கும் அடுத்த வேளை உணவைப் பற்றியோ யாரிடமும் வாதிடவில்லை. விவாதங்கள் மனிதர்களைக் காப்பாற்றுவதில்லை என்பதை ஆழமாக அறிந்திருந்தாள். மெதுவாகக் குனிந்தாள். சற்றும் தயங்காமல் இடுப்பில் சுற்றியிருந்த சேலையின் முந்தானையை 'சக்'கெனக் கிழித்து உருவினாள். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த சிறுவனின் உடலின் மீது போர்த்தி, அவனது நடுக்கத்தைத் தனது சேலைக்குள் அடக்கினாள். பிறகு, கைகளை அவனது உடலுக்கு அடியில் கொடுத்து, அவனை அள்ளித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஓர் அம்மா, தனது சொந்தக் குழந்தையைத் தூக்குவது போன்ற மகத்தான அன்பு அந்த அணைப்பில் இருந்தது. திடீரெனக் கிடைத்த பாதுகாப்பான அரவணைப்பில், தூங்கிப்போன சிறுவனின் உடல் நடுக்கம் நின்றது. அவன் தனது பிஞ்சுக்கரங்களால் அஞ்சலியின் தோள்களை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். தெருவில் நின்றிருந்த சுயநலக் கூட்டம், தங்களுக்குரிய பாரத்திலிருந்து தப்பித்துவிட்ட நிம்மதியில், மெதுவாக அங்கிருந்து கலைந்து சென்றது. அந்த இருண்ட இரவில், தெருவின் விளக்கு வெளிச்சத்தை விட, அஞ்சலியின் திண்ணையே அதிக ஒளியுடன் பிரகாசித்தது. கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

bottom of page