top of page

இயலில் தேடலாம்!

Search this site

408 results found with an empty search

  • AM மற்றும் PM – நேரத்தை அறியும் முறை

    ஒரு நாளில் மொத்தம் 24 மணி நேரம் உள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் பயன்படுத்தும் 12 மணி நேரக் கடிகார முறையில், ஒரு நாள் என்பது AM, PM என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது அல்லவா? அவை எதைக் குறிக்கின்றன? இந்த இரண்டு சொற்களும் லத்தீன் மொழியிலிருந்து வந்தவை. Meridiem என்பது லத்தீன் மொழியில் “நண்பகல்” அல்லது “மதியம்” என்று பொருள்படும் சொல். இதை அடிப்படையாகக் கொண்டே AM, PM என்ற சுருக்கங்கள் உருவாகியுள்ளன. AM என்பது Ante Meridiem என்பதன் சுருக்கம். இங்கு Ante என்றால் “முன்” என்றும், Meridiem என்றால் “நண்பகல்” என்றும் பொருள். எனவே Ante Meridiem என்பது நண்பகலுக்கு முன். நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான நேரம் AM எனப்படுகிறது. அதிகாலை 5 மணி, காலை 8 மணி, காலை 11 மணி ஆகியவை முறையே 5:00 AM, 8:00 AM, 11:00 AM என்று குறிப்பிடப்படுகின்றன. PM என்பது Post Meridiem என்பதன் சுருக்கம். இங்கு Post என்றால் “பின்” என்றும், Meridiem என்றால் “நண்பகல்” என்றும் பொருள். எனவே Post Meridiem என்பது நண்பகலுக்குப் பின். மதியம் 12 மணி முதல் அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி வரை உள்ள நேரம் PM எனப்படுகிறது. பிற்பகல் 2 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி ஆகியவை 2:00 PM, 6:00 PM, 9:00 PM என்று குறிப்பிடப்படுகின்றன. இதில் 12:00 AM மற்றும் 12:00 PM ஆகியவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியம். 12:00 AM என்பது நள்ளிரவு 12 மணி. இது ஒரு புதிய நாள் தொடங்கும் நேரம். 12:00 PM என்பதை நண்பகல் என்று குறிப்பிடுகிறோம். இந்த நேரக் குறியீடுகள் கடிகார நேரம், பயண அட்டவணை, பள்ளி மற்றும் அலுவலக நேரம் போன்றவற்றைக் குறிப்பிடுவதில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஹரீஷ் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் விஞ்ஞானத் துளிர் - சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழின் இணையாசிரியர்.

  • வளர்ப்போம்…வளர்வோம்.. - 2

    பாதுகாப்பின் விதை ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், கல்வி எனப்பலவற்றையும் நாம் சிந்திக்கிறோம். ஆனால் குழந்தைக்கு மிகவும் முக்கியமான அடிப்படையான தேவை ஒன்று உள்ளது. அது தான் பாதுகாப்புணர்வு. ‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்; நான் நேசிக்கப்படுகிறேன்; எனக்காக என் பெற்றோர் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு. இந்த உணர்வின் அடித்தளம் Attachment – உணர்வுப்பூர்வமான நெருக்கம் என்கிறது உளவியல். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உருவாகும் ஆழமான உணர்வுப்பூர்வமான தொடர்பு குழந்தையின் பிறப்பு முதல் அவர்களின் ஆரம்பகால அனுபவங்களால் மெதுவாக உருவாகிறது. குழந்தை அழும்போது பெற்றோர் எவ்வாறு அரவணைக்கிறார்கள்? பயப்படும்போது எவ்வாறு ஆறுதல் அளிக்கிறார்கள்? மகிழ்ச்சியை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்கள்? தவறு செய்யும்போது எவ்வாறு அணுகுகிறார்கள்? இத்தகைய அன்றாட அனுபவங்களே குழந்தையின் மனதில் உறவுகளைப் பற்றிய ஒரு அடிப்படை நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்குகின்றன. பாதுகாப்புணர்வு என்றால் என்ன? இதன் பொருள் பெற்றோர் எப்போதும் குழந்தையின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதல்ல. குழந்தை பெற்றோரிடமிருந்து சிறிது விலகி விளையாடவும், பள்ளிக்குச் செல்லவும், சுயமாக சிந்திக்கவும், புதிய செயல்களை முயற்சிக்கவும் வேண்டும், அதே நேரம் குழந்தையின் மனதில், “எனக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் என்னை ஆதரிக்க ஒருவர் இருக்கிறார்.” என்ற நம்பிக்கை இருப்பதுதான் பாதுகாப்புணர்வு. இந்த உணர்வு குழந்தைக்கு இந்த உலகத்தை சந்திக்கும் தைரியத்தையும், தோல்விகளை எதிர்கொள்ளும் திறனையும், பிறரிடம் நேர்மறையான உறவுகளை உருவாக்கும் அடித்தளத்தையும் வழங்குகிறது. அதை எப்படி உருவாக்குவது? பாதுகாப்புணர்வு என்பது ஒரு நாளில் உருவாகாது. சிறிய சிறிய தருணங்களின் தொகுப்பாகவே அது உருவாகும். குழந்தைகளைக் கண்ணோடு கண் பார்த்துப் பேசுவது அவர்கள் பேசும்போது கைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்காமல் கவனமாகக் காது கொடுத்துக் கேட்பது. அவர்கள் அழும்போது, “அழாதே! சத்தம் வரக்கூடாது” என்று அதட்டாமல், “உனக்கு வருத்தமாக இருக்கிறதா? நான் இருக்கிறேன்” என்று அணைத்துக் கொள்வது. பள்ளியிலிருந்து வந்ததும் வீட்டுப் பாடங்களையும் மதிப்பெண்களையும் மட்டும் கேட்காமல், “இன்றைய நாள் எப்படி இருந்தது?” என்று மகிழ்வான தருணங்களைப் பற்றிக் கேட்பது. குழந்தை தவறு செய்தாலும், “நீ செய்த செயல் எனக்குப் பிடிக்கவில்லை; அது தவறு தான். அதை சரி செய்ய நான் உதவுகிறேன். ஆனால் உன்னை நான் நேசிப்பதில் எந்த மாற்றமும் இல்லை” என்பதை உணர்த்துவது. இவை அனைத்தும் குழந்தையின் மனதில் பாதுகாப்பின் விதைகளை விதைக்கும். அன்பு மட்டும் போதுமானதா? அன்பு மிகவும் முக்கியமானதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. எழுத்தாளர் விழியன் அவர்கள் “scientific parenting” என்னும் வார்த்தையை பெற்றோர் கூடுகையில் அடிக்கடி பரிந்துரைப்பார். அதாவது பெற்றோரின் அன்பு அறிவியல்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்பதே. ஒவ்வொரு முறையும் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது அன்பு ஆகாது. அதன் பெயர் செல்லம் கொடுத்தல்(pampering). உரையாடலும் (conversation), நிலைத்தன்மையும் (Consistency), நம்பகத்தன்மையும் (Reliability) எல்லைகளும் (Boundaries) கொண்ட அன்பே இன்றையத் தேவை. தேவையான இடங்களில் அன்புடன் “இல்லை” என்று சொல்லி மறுப்பதும், நான் உன்னை நேசிக்கிறேன்; அதே நேரத்தில் உனக்கான எல்லைகளையும் நான் அமைப்பேன்” என்ற செய்தியை, குழந்தைகளுக்கு உணர்த்துவதும் பாதுகாப்பான பெற்றோரியத்தின் ஒரு பகுதிதான். பெற்றோருக்கான ஒரு சிறிய செயல்பாடு: இன்று உங்கள் குழந்தையிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: “நீங்கள் ஒரு தவறு செய்தால், அதன் மூலம், ஏதாவது பிரச்சினை வந்தால், என்னிடம் சொல்லலாம் என்று தோன்றுகிறதா? இல்லை மறைக்கத் தோன்றுகிறதா?” குழந்தையின் பதிலை முதலில் முழுமையாகக் கேளுங்கள். உடனடியாக விளக்கவோ, அறிவுரை கூறவோ வேண்டாம்.. புரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் உணர்வுகளுக்கு இடமளியுங்கள். நிச்சயம் மறைக்க மாட்டேன் என்று பதிலளித்தால், அது உண்மை என்று நீங்கள் உணர்ந்தால் மகிழ்ச்சி. குழந்தை உங்களிடம் பாதுகாப்பை உணர்கிறது. பதிலளிக்கத் தயங்கினாலோ இல்லையென்று கூறினாலோ கவலை வேண்டாம். இனி பாதுகாப்பான சூழலை நாம் வழங்க முயற்சி செய்வோமாக! ஏனெனில் குழந்தையின் மனதில் பாதுகாப்பு உருவாகும்போது, அது தன்னம்பிக்கையாக மாறும். அந்தத் தன்னம்பிக்கை சுயசார்பாக வளரும். சுயசார்பு வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனாக வலுவடையும். நாம் நினைவில் கொள்ள வேண்டியவை: தினமும் நாம் பேசும் நம்பிக்கையான வார்த்தைகள், கொடுக்கும் ஒரு சிறு அரவணைப்பு, அவர்கள் பேசும் போது அதைக் காதுகொடுத்துக் கேட்கும் சில நிமிடங்கள், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு தருணம் — இவையே மனதில் விதைக்கப்படும் பாதுகாப்பின் விதைகள். உளவியலில் பொதுவாக குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே ” பாதுகாப்பான நெருக்கம்(secure attachment style)” ஏற்பட்டால் அது 1. பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி தேவையானபோது ஆறுதலைத் தேட உதவும் 2. பிற உறவுகள் மீது நம்பிக்கையை உருவாக்கவும் உதவும் குழந்தையின் உணர்வுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போதும் அல்லது “சும்மா அழாதே”, “இதற்கெல்லாமா பயப்படுகிறாய்?” என்று உணர்வுகளை உதாசீனப் படுத்தும்போதும், சிறு சிறு வெற்றிகள் ஊக்கமளிக்கப்படாதபோதும், குழந்தை தன்னுடைய உணர்வுத் தேவைகளைத் “தவிர்க்கும் தன்மை (Avoidant attachment style)” ஏற்பட்டு 1. அவர்கள் உதவி அல்லது ஆறுதல் கேட்பதைத் தவிர்க்கலாம் 2. தங்களுடைய உணர்வுகளை, தவறுகளை மறைக்கலாம். “நான் உனக்காக இருக்கிறேன். என் அன்பும் ஆதரவும் என்றும் நிலையானது. உன் அனைத்து உணர்வுகளுக்கும் இங்கே இடம் உண்டு. தவறுகளை சரி செய்து நாம் தொடரலாம்” எனக் கூறி தலைக் கோதினால் நம் குழந்தைகள் உலகத்தை நம்புவதற்கு முன், தன்னை முழுமையாக நேசிக்கும் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்பக் கற்றுக்கொள்வார்கள். அந்த நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து வழி நடத்தும். (வளரும்) சக்தி செண்பகவல்லி உளவியல் ஆலோசகர் (Counseling Psychologist) மற்றும் 'InnerCircle Nurturing Minds' அமைப்பின் நிறுவனர் ஆவார். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் (Child & Adolescent) உளவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர், சான்றிதழ் பெற்ற பள்ளி ஆலோசகராகவும், வாழ்க்கை முறை திறன் பயிற்சியாளராகவும் (Life Skills Trainer) பணியாற்றி வருகிறார். உளவியல் ஆலோசனை மற்றும் திறன் பயிற்சிகளில் சுமார் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், ‘மகிழ் பதின்’ (Teen Psychology) புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். மாணவர்களின் மனநலம், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்காக 1,500-க்கும் மேற்பட்ட அமர்வுகளையும் (Sessions), 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

  • பச்சையும் பல வண்ணமுமாக வீட்டுக்கு ஓர் இயற்கை ஒளி!

    வீட்டில் கிளி, குருவி, அணில் வளர்க்க ஆசைப்பட்டேன். அதற்காக எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல், என்னதான் தங்கக் கூண்டாகவே இருந்தாலும் அது பறவைகளுக்குச் சிறைதானே என்ற எண்ணமும் என்னைத் தடுத்தது. ஒருமுறை, பாதி சாப்பிட்ட கொய்யாப் பழத்தின் மறுபாதியைச் சன்னலுக்கு வெளியே போட்டேன். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் ஒரு செடி முளைத்திருந்தது –ஆமாம் கொய்யாச் செடியேதான்! நானே அதற்கு நாள்தோறும் காலையில் தண்ணீர் ஊற்றிவந்தேன். சில மாதங்களிலேயே சன்னல் வழியாகக் கையை நீட்டித் தொடக்கூடிய அளவுக்குப் பெரிய செடியாக வளர்ந்தது. ஒன்றரை ஆண்டுகளில் இளம் மரமாக ஓங்கியது. இன்னும் சில மாதங்களில் அது கனிகளைத் தரத் தொடங்கிவிடும் என்று பக்கத்து வீட்டார் பாராட்டினார்கள். செடிகள் விற்கும் கடை வைத்திருப்பவரான என் நண்பர், கொய்யாமரம் நன்றாக வளர்வதற்கு ஆலோசனைகளைக் கூறினார். கொய்யாக் கனிகள் கிடைப்பதை விட எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி எதிலே என்றால், முன்பு வீட்டில் வளர்க்க முடியாமல் போன கிளிகள் அந்த மரத்துக்கு நிறைய வருகின்றன! குருவிகளும் காக்கைகளும் காடைகளும் மைனாக்களும் நாரைகளும் வந்து ஓய்வெடுத்துச் செல்கின்றன! அணில்கள் தாவி விளையாடுகின்றன! ஒருநாள் காலை நடைப்பயிற்சியாகச் சுற்றிவந்தபோது ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் முன்பக்கம் வைத்திருந்த தொட்டிகளில் இளஞ்சிவப்பும் மஞ்சளும் வெள்ளையுமாகப் பூக்கள் புன்சிரிப்போடு ஆடிக்கொண்டிருந்தன. டேபிள் ரோஸ், சன் ரோஸ் என்று சொல்வோமே, அந்தப் பூக்கள்தான் அவை. அந்தப் பூக்கள் என்னைப் பார்த்து, “ஹாய், எப்படி இருக்கீங்க,” என்று கேட்பது போல இருந்தது. பக்கத்தில் சென்று ரசித்துக்கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்கு உள்ளேயிருந்து ஒரு அம்மையார் வெளியே வந்தார். “உங்களுக்கும் இந்தச் செடிகள் பிடிக்குமா? உங்க வீட்டிலேயே வளர்க்கலாமே… இந்தாங்க,” என்று சொன்னவர், ஒவ்வொரு செடியில் இருந்தும் ஒரு சாண் நீளத்துக்குக் கிள்ளிக் கொடுத்தார். “இந்தச் செடியை இப்படித் துண்டு துண்டாக ஊன்றினாலும் வேர்பிடிச்சு வளர்ந்துடும்,” என்றும் சொன்னார். வீட்டில் காலியாக இருந்த பெரிய பிளாஸ்டிக் பாட்டில்களில் மண்ணை நிரப்பினேன். ஒவ்வொரு பாட்டிலிலும் ஒரு கிளையை ஊன்றினேன். தண்ணீர் விட்டேன். செடிக்கடை நண்பர், “பாட்டில் அடிப்பக்கம் ஓரமா துளை போடுங்க. அப்ப, நிறைய தண்ணீர் தேங்காம வெளியேறிடும். வேர் அழுகிப் போகாம இருக்கும்,” என்று “டிப்ஸ்” கொடுத்தார். அந்தத் துண்டுக் கிளைகளில் மெதுவாக இலைகள் துளிர்த்தன. பிறகு வேகமாகப் புதிய கிளைகள் நீண்டு செடிகளாக உருவெடுத்தன. மொட்டுகள் வந்தன, பூக்களாக மலர்ந்தன. இப்போது எங்கள் வீட்டின் வாசலில், மாடியில், படிகளில், மாடத்தில் (பால்கனி) – வீட்டுக்கு உள்ளேயே கூட – பல வகைச் செடிகள் குடியேறிவிட்டன. அந்தச் செடிகளும் பூக்களும் புன்னகையோடு எல்லோரையும் வரவேற்கின்றன. இப்படி வீட்டில் செடிகள் வளர்ப்பது பற்றி எங்களுக்குக் கிடைத்த வழிகாட்டல்களைத்தான் உங்களோடு இங்கே பகிர்கிறேன். இடம் இல்லாவிட்டாலும் இன்று சில வீடுகளில்தான் தோட்டம் வைப்பதற்கான இடம் இருக்கும். மற்ற வீடுகளில் காலியிடம் இருப்பதில்லை. அதிலும் மேல்தள வீடுகளிலும் அடுக்கக வீடுகளிலும் உள்ள மாடங்களில்தான் செடிகளை வைக்க முடியும். அப்படிப்பட்ட இடங்களில் தொட்டிகளில்தான் செடிகளை வளர்க்க வேண்டும். தொங்கும் தொட்டிகளிலும் வளர்க்கலாம். களிமண் தொட்டிகளில் நம் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய துளைகள் ஏராளமாக இருக்கின்றன. அதன் காரணமாக மண்ணுக்குக் காற்றோட்டம் கிடைக்கும். வெப்பம் வெளியேறும். வேர்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். அழகான பல வண்ணங்களில், சிறியது முதல் பெரியது வரை உறுதியான பீங்கான் தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளும் கிடைக்கின்றன. ஆகவே களிமண் தொட்டிகள் கிடைக்காத நிலையில் இந்தத் தொட்டிகளைப் பயன்படுத்தலாம். கனமான தொட்டிகளை வைக்க இயலாதபோது, “குரோ பேக்” எனப்படும் செடி வளர்ப்புப் பைகளைப் பயன்படுத்தலாம். பழைய பெயின்ட் டப்பா, கைப்பிடி உடைந்த கோப்பை ஆகியவற்றையும் செடிகளின் குடிசைகளாக மாற்றலாம். மாடம் சிறிதாக இருக்குமானால், அந்த இடத்திற்குள் கூடுதலான செடிகளை வைத்து வளர்க்க ஏற்ற வகையில் உயரமான நிலைச்சட்டங்கள் (ஸ்டாண்டு) கிடைக்கின்றன. களிமண் தொட்டிகளையும், பீங்கான் தொட்டிகளையும், பிளாஸ்டிக் தொட்டிகளையும், வளர்ப்புப் பைகளையும் தயாரிப்பவர்கள் அவற்றில் தண்ணீர் வெளியேறுவதற்குத் துளையிட்டிருப்பார்கள். துளை இல்லாத பிளாஸ்டிக் தொட்டிகளில் நாமே குத்தூசியால் துளையிட்டுக்கொள்ளலாம். பிளாஸ்டிக் தொட்டியில் குத்தூசியை இறக்குவது கடினமாக இருக்கக்கூடும். அப்போது, குத்தூசியின் முனையை விளக்குச் சுடரில் காட்டி நன்றாகச் சூடாக்கிவிட்டு பிளாஸ்டிக்கில் செருகினால் எளிதாகத் துளை ஏற்பட்டுவிடும். பயன் தரும் பசுமை செடிகள் வீட்டுக்கு அழகைத் தருவது மட்டும் போதாது; வசிப்போருக்குப் பயன்படவும் வேண்டும் அல்லவா? இதோ அதற்கேற்ற சில அருமையான செடிகள்– சமையலுக்குப் பயன்படுத்திய பின் எஞ்சியிருக்கும் புதினாத் தண்டுகளைத் தொட்டிமண்ணில் ஊன்றலாம். சில நாட்களிலேயே புதுப் பச்சை இலைகள் துளிர்க்கும். நன்கு வளர்ந்த புதினாச் செடிகளைப் பறித்துத் துவையல் செய்தால் அதன் சுவையே தனி! சமையலறையில் இருக்கும் மல்லிவிதைளைத் தொட்டி மண்ணில் போட்டு, மேலாக மண் தூவி வைக்க வேண்டும். சில நாட்களில் கொத்தமல்லிச் செடிகள் தழைத்து வளரும். குழம்பில், ரசத்தில், சட்டினியில் சேர்த்தால் கூடுதல் வாசம் சேரும். இவற்றை வளர்ப்பதற்கு ஏற்ற அகலமான தொட்டிகளும் கிடைக்கின்றன. துளசி, கற்பூரவல்லி ஆகிய இரண்டும் நம் வீட்டின் ‘குட்டி மருந்தகம்’ என்றே சொல்லலாம்! நாள்தோறும் ஒரு துளசியையோ கற்பூரவல்லி இலையையோ சாப்பிட்டால் சளி, இருமல் நெருங்காது. துளசியைச் செடியாகக் கொண்டுவந்து ஊன்ற வேண்டும். கற்பூரவல்லியைத் தண்டாகவும் ஊன்றலாம். திறந்தவெளிகளில் காணக்கூடிய கற்றாழைச் செடியை வீட்டின் வரவேற்பாளராக்கலாம்! வாரத்தில் இரண்டு முறை தண்ணீர் ஊற்றினாலே போதும். வீட்டின் கூடத்தில் மையமாகவோ, சன்னலோரமாகவோ, மூலையிலோ வைத்து வளர்க்கிறபோது அறை அழகாக இருக்கும். அத்துடன் இது வீட்டிற்குள் காற்றைத் தூய்மையாக்கும். சிலவகைக் கற்றாழை இலையின் “சோறு” நம் தோலுக்கு மிகவும் நல்லது. அதே போல, ஜீஜீ என்ற செடியும் வீட்டுக்குள், குறைந்த அளவு நீரையும் ஒளியையும் ஏற்றுக்கொண்டு, அழகைச் சேர்க்கும் காற்றைத் தூய்மையாக்கும். ஒரு தக்காளியை எடுத்துத் தொட்டியில் பிளிந்துவிட்டால் விதைகள் சில வாரங்களில் செடிகளாக வளர்ந்து, பச்சைத் தக்காளிகள் தோன்றுவதையும், பின்னர் சிவப்பாக மாறுவதையும் பார்ப்பதே அழகு! தக்காளிச் சட்டினியும் சாம்பாரும் உங்களுக்குப் பிடித்தமானதுதானே? வெண்டை, மணத்தக்காளிக் கீரை, கத்தரி, கறிவேப்பிலை, சுரண்டை ஆகியவற்றையும் வேறு பல காய்கறிச் செடிகளையும் வளர்க்கலாம். மாடத்தில் வானவில் வீட்டுக்கு விருந்தினர்களாக வண்ணத்துப் பூச்சிகள் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதற்கென்று சில பூச்செடிகளை வளர்க்கலாம். முதலில் பார்த்த டேபிள் ரோஸ், சன் ரோஸ், பாதையோரத்திற்கான பார்டர் ரோஸ், நித்திய கல்யாணி, சாமந்தி, கல்வாழை, குரோட்டன்ஸ் ஆகிய செடிகள் குறைந்த பராமரிப்பிலேயே தினமும் அழகழகாகப் பூத்துக் குலுங்கும். மயில் மாணிக்கம் கொடி ஒரு வரவேற்பு வளைவு போல வளர்ந்து அழகிய பூக்களால் வணக்கம் சொல்லும். மணி பிளாண்ட் செடியின் கிளையை பழைய கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றிப் போட்டு வைத்தாலே, சன்னல் ஓரத்தில் அழகாகப் படரும். தொட்டி மண்ணில் ஊன்றினால் மேலும் எழிலாகப் பரவும். ஆனால் ஒன்று – மணி பிளான்ட்டை வளர்ப்பவருக்கே தெரியாமல் “ஆட்டையைப் போட்டு” எடுத்து வந்து வைத்தால்தான் நன்றாக வளரும் என்று சிலர் சொல்வார்கள். அதையெல்லாம் நம்பக்கூடாது, நம் நேர்மையிலிருந்து விலகக்கூடாது. சரியா? அதே போல, கண்ணாடிக் கிண்ணங்களில் அரையடி உயரத்திற்குள் இருக்கிற மூங்கில் செடிகளைக் கடைகளில் வைத்திருப்பார்கள். அதற்கு “லக்கி பாம்பூ” என்று பெயர் சூட்டி, அது இருந்தால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்று சொல்லி விற்பார்கள். நாம் லக்கை நம்புகிறவர்கள் அல்ல, நம் உழைப்பையே நம்புகிறோம் என்று சொல்லிவிட்டு, வீட்டு மேசையில் வைப்பதற்காக வாங்கி வரலாம். பூக்கள் பூக்காத, சிறுசிறு முக்கோண இலைகளும் நீண்டு தொங்கும் கிளைகளுமாக உள்ள கிரீப்பிங் ஃபிக் என்ற செடியைத் தொங்கு தொட்டியில் அல்லது மாடத்துச் சுவரில் வைக்கலாம். அழகு கூடும். ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், செம்பருத்தி ஆகியவற்றையும் வளர்க்கலாம். தோட்டத்து மண்ணில் வளர்ப்பதற்கும் தொட்டி மண்ணில் வளர்ப்பதற்கும் வேறுபாடு உண்டுதான். ஆனால், இந்தச் செடிகளின் பூக்கள் காலையில் மலர்ந்து நம் மனதுக்கு உற்சாகம் அளிப்பதில் மாறுபாடே காட்டுவதில்லை. விதிகள் மூன்று பேத்திகளும் பேரன்களும் குட்டித் தோட்டக்காரர்களாக மாறத் தயாராகிவிட்டீர்கள்தானே? இதோ நீங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விதிகள்: தண்ணீர் அளவு: செடிகளுக்கு மிகவும் தேவைப்படுவது தண்ணீர்தான். ஆனால், அளவுக்கு மிஞ்சி ஊற்றினால் வேர் அழுகிவிடும். மண்ணை விரலால் தொட்டுப் பாருங்கள். அது ஈரப்பதம் வற்றிக் காய்ந்திருந்தால் மட்டும் தண்ணீர் ஊற்றுங்கள். கதிரொளி: செடிகள் உணவைத் தயாரிக்கச் சூரிய ஒளி தேவை. ஒவ்வொரு நாளும் சில மணி நேரமாவது மிதமான வெயில் படும் இடத்தில் தொட்டிகள் இருக்க வேண்டும். ஊட்டச் சத்து: அவசரத்துக்கு வேதிப்பொருள் உரங்களை எப்போதாவது பயன்படுத்தலாம். மற்றபடி இயற்கை உரம்தான் உண்மையான ஊட்டம். வீட்டில் மிஞ்சும் காய்கறிக் கழிவுகள், டீ தூள், அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றைச் செடிகளுக்குப் பரிமாறலாம். வீட்டுத் தோட்டங்களுக்கான சிறு மண்வெட்டி, கத்தரிக்கோல் ஆகியவற்றை வைத்திருப்பதும் உதவியாக இருக்கும். உங்களுக்கு நிச்சயமாக மேலும் பல வினாக்கள் எழும். பள்ளி ஆசிரியரிடமோ, செடி விற்பனையாளரிடமோ, பக்கத்திலேயே விவசாயிகள் இருப்பார்களானால் அவர்களிடமோ கேட்டு விடைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு சின்ன விதையை மண்ணில் விதைத்து, தண்ணீர் ஊற்றி, அது முளைத்து வளர்வதைப் பார்ப்பது நம்மை எப்போதும் ஊக்கத்தோடு வைத்திருக்கும் சுட்டிகளே. வரும் விடுமுறையிலேயே பெற்றோருடன் சேர்ந்து வீட்டுச் செடி வளர்ப்புப் பயணத்தைத் தொடங்குங்கள். அந்தப் பயணம், உலகம் முழுதும் மனிதர்களுக்கு உணவிடும் உழவர்கள் மீது பெரும் மரியாதையை உண்டாக்கும். பூமியின் காற்றில் உயிர்வளி (ஆக்சிஜன்) சேர்ப்பதில் நாமும் பங்களிக்கிறோம் என்ற பெருமிதம் உண்டாகும். அ.குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.

  • வலை பின்னாதே!

    சிலந்தி வலைப் பின்னிடும் சிறு பூச்சிகள் பிடிக்கவே! வயிறு பசி காரணம் வழி ஒன்றே சிலந்திக்கு கருணை இல்லா மனிதனும் கயமை வலை பின்னுகிறான்! உழைப்பைத் திருடி அடுத்தவர் பிழைப்பை ஏனோ கெடுக்கிறான்? பசிக்கு வலை பின்னுதல் பாவமில்லை சிலந்திக்கு சதியால் வலை பின்னுதல் சரியா? நீயே சொல்லண்ணா! கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

  • கல்வி கனிய வேண்டும்

    படிப்பு முழுதும் பைக்குள் இறங்கி தோளில் தொங்குது - அதன் பாரம் பாறாங்கல்லை போல முதுகை வளைக்குது ! இன்னும் கொஞ்சம் குறைக்க முடிஞ்சா இனிக்கும் கல்வி மனதில் சின்ன சின்ன குழந்தைகளுக்கு இறக்கை முளைக்கும் தோளில் பத்து பாட புத்தகங்கள் நோட்டுகள் இருக்கும் இந்த பைக்குள்தானே வீட்டுப்பாடம் கட்டுரை அடைக்கும்! சோத்து டப்பா தண்ணி பாட்டில் சேர்த்து தூக்கணும் பஸ் சு கூட்டத்திலே ஏறி இறங்கி திட்டும் வாங்கணும் கால் பதிய பொதி சுமக்கும் கல்வி முறையா -,பாடம் மனதில் பதிய வைக்க வேறு வழிகள் இல்லையா ? காய்த்துப் போன தோள்கள் மீது இரக்கம் காட்டுங்க -கல்வி கனிய வேண்டும் இனிமையாக மனசு வையுங்க! குருங்குளம் முத்துராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம் பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர். இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

  • வாசித்துத் தீராத உலகை வாசிப்போம், வாருங்கள்!

    குழந்தைகளே, இந்த வாரம் நாம் ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் பேசப்போவதில்லை, சின்ன சின்ன புத்தகங்களாக உள்ள ஒன்பது புத்தகங்களைக் குறித்தே நாம் பேச இருக்கின்றோம். இந்தப் புத்தகங்களைக் குறித்து இப்போது பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அதற்கு முன்னதாக நீங்கள் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால் கடந்த மாதத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் அடிக்கடி பள்ளி நேரத்தில் வெளியே சென்று வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆம். எங்கள் பள்ளியில்கூட ஆசிரியர்கள் அரசின் அனுமதியோடு தினமும் வெளியே சென்று வந்து கொண்டிருந்தார்கள். வேறொன்றுமில்லை, இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது இயல்பு. அந்த அடிப்படையில் இப்பொழுது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்காக ஆசிரியர்கள் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்படி பள்ளி ஆசிரியர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வகுப்பு குழந்தைகளை ஒரே ஆசிரியராக நான் கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மூன்று வகுப்பு குழந்தைகளையும் தனி ஒருவனாக நான் பார்க்க வேண்டிய சூழல் இருந்தபோது அனைத்து குழந்தைகளும் ஈடுபாட்டோடு செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எனது நினைவிற்கு வந்தவர் டேவிட் அட்டன்பரோ. டேவிட் அட்டன்பரோ உலகின் மிக முக்கியமான பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தில் இயற்கையியல் சார்ந்த ஆவணப்படங்களை இயக்குபவராக பணியாற்றிவருகிறார். அவர் இயக்கிய இயற்கையியல் சார்ந்த ஆவணப்படங்கள் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுவதாகவும் பல முக்கிய இயற்கைக் கூறுகளை உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாகவும் திகழ்ந்து வருகின்றன. அவரது ஆவணப்படங்கள் இயற்கையின் அழகியலை மட்டும் வெளிப்படுத்துவதாக இல்லை. அதோடு, இயற்கையில் ஏற்படக்கூடிய மாறுபாடுகளையும், காலநிலை மாற்றச் சிதைவுகளையும், மக்களிடம் உணர்த்துவதை, இவரது ஆவணப்படங்கள் சிறப்பாக செய்துகொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆவணப்படத்தை குழந்தைகளுக்கு இந்நேரத்தில் காண்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரது ஆவணப் படம் ஒன்றை பள்ளி வகுப்பறையில் காட்சிப்படுத்தினேன். கடல், காடு, பாலைவன நிலம், துருவப் பகுதிகள் என பல்வேறு விதமான நில அமைப்புகளில் வாழும் உயிரினங்களைக் குறித்து அழகியலோடு காட்சிப்படுத்திக்கொண்டிருந்த அந்த ஆவணப்படம், இறுதியாகச் சில நிமிடங்களில் மனிதர்களின் அசிரத்தையான செயல்பாடுகள் எவ்வாறு இயற்கையின் சமநிலையினை சீர்குலைக்கிறது என்பதை சுட்டிக்காட்டியது. அவ்வளவு நேரம், விதவிதமான உயிரினங்களையும் நிலத்தோற்றங்களையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மனம், சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்படும் அவலங்களை மிகக் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் இந்த ஆவணப்படம் குறித்த உரையாடல்களை ஆர்வமுள்ள குழந்தைகளோடு பேசிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு சில ஐயங்கள் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கான பதில்களை அவர்களே தேடி கண்டறிய நான் ஒரு உத்தியை மேற்கொண்டேன். உலக அளவில் டேவிட் அட்டன்பரோ செய்துகொண்டிருக்கக்கூடிய செயல்களை ஒத்ததாக தமிழகத்தில் செய்துகொண்டிருப்பவர் சூழலியல் ஒளிப்படக் கலைஞர் ஏ. சண்முகானந்தம் அவர்கள். அவர் தனது உயிர் பதிப்பகத்தின் மூலமாக பதிப்பித்திருந்த குழந்தைகளுக்கான மிகச்சிறிய சூழலியல் நூல்களின் தொகுப்பு ஒன்றினை வகுப்பறைக்கு எடுத்து வந்து பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். வாசிப்பும் உரையாடலுமாக ஆசிரியரற்ற வகுப்பறைகள் கொண்டாட்டக் களமாகக் மாறியது. குழந்தைகளின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் ஏற்ற வகையில் சின்ன சின்ன நூல்களாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒன்பது நூல்களும் நம்மைச் சுற்றி இருக்கும் பறவைகள், பூச்சிகள் குறித்தும் சூழலியல் சார்ந்து உலக அளவில் பங்களித்திருக்கக்கூடிய ஒரு பூச்சியியல் அறிஞர் குறித்தும், பூச்சிகள் குறித்த ஓர் அறிமுக நூலையும், ஏ சண்முகானந்தம் அவர்கள் பதிப்பித்திருக்கிறார். வே. ராமசாமி, அருண் நெடுஞ்செழியன், பேராசிரியர் த. முருகவேள் மற்றும் ஏ. சண்முகானந்தம் இந்நூல்களை எழுதியுள்ளனர். 1. செம்மார்பு குக்குறுவான் 2. தைலான் என்கிற தகைவிலான் 3. மரங்களின் இயற்கை மருத்துவர் மரங்கொத்திகள் 4. தட்டான்களைத் தவறவிட்ட காலம் 5. பூ நாரைகளின் காதல் நடனம் 6. காதலில் திளைக்கும் இரயில் பூச்சி 7. கொம்பன் ஆந்தைகள் 8. பூச்சியியலின் மூதாய் மரியா சிபெல்லா மேரியான் 9. பூச்சிகள் ஓர் அறிமுகம் மேலே குறிப்பிட்டிருக்கும் இந்த ஒன்பது புத்தகங்களையும் வாசிப்பது ஒரு நல்ல அனுபவத்தைத் தரும் என்றாலும், இந்த நூலில் உள்ள புகைப்படங்களைப் பார்ப்பது நமக்கு வேறொரு அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். குழந்தைகளின் கையில் அடங்கக்கூடிய வடிவத்தில் வழுவழுப்பான தாளில் உள்ள இந்தப் புத்தகத்தில் எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதே வாய்ப்பு, படங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, குழந்தைகளால் சலிப்பில்லாமல் இந்தப் புத்தகங்களை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியும். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை வெறும் தகவல்களாக மட்டும் எண்ணிவிட முடியாது. வட்டாரக் கதைகளாக, கவிதையாக, வரலாற்றுச் செய்திகளாக, பயண அனுபவமாக, அறிஞர்களின் வாழ்க்கைச் சம்பவங்களாக பல வகைகளிலும் இந்த நூலின் தகவல்களை நாம் உள்வாங்கிக்கொள்ள முடியும். காதலில் திளைக்கும் இரயில் பூச்சி என்கிற சின்னஞ்சிறிய நூல் ஒன்றில் மரவட்டையின் இணைசேர்ப்பு காட்சியை புகைப்படங்களாகவும் எழுத்துகளாகவும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். திருநெல்வேலிப் பகுதி - களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் இவர் மேற்கொண்ட சூழலியல் பயணத்தின்போது பார்த்தக் காட்சிகளின் அடிப்படையில் இக்கட்டுரை பதிவாகியிருக்கின்றது. பலராலும் எளிதாக புறக்கணிக்கப்படும் மரவட்டை மீது இந்த நூலில் உள்ள செய்திகளாலும் புகைப்படங்களாலும் நூலாசிரியர் இனம் புரியாத நெருக்கத்தை உருவாக்கிவிடுகிறார். உலகம் முழுக்க 8000 வகையான மரவட்டைகள் இருப்பதாகவும் சில மரவட்டைகளில் 50 முதல் 200 இணைக்கால்கள் இருப்பதையும் இவர் குறிப்பிட்டு இருக்கின்றார். இதுபோல பல்வேறு விதமான தகவல்கள் நமக்கு பெரும் ஆச்சரியத்தை அளிப்பனவாக இருக்கின்றன. ஆரம்பக் கல்விப்பருவம் கடந்த குழந்தைகளுக்கு இந்நூல் உயிரியல் பாடத்தை அவர்களது பாடப்புத்தகத்தைவிடவும் அதிக சுவையோடு கற்றுத்தரும். ஆகவே, குழந்தைகளே, அடுத்த புத்தகக் கண்காட்சியில் இத்தொகுப்பை யாரும் தவறவிட்டுவிட வேண்டாம். உங்களது நண்பர்களுக்கு ஆகச் சிறந்த பரிசொன்றை நீங்கள் தர விரும்பினாலும் இந்த நூல் தொகுப்பே சரியான தேர்வாக இருக்கும். பறவைகள், பூச்சிகள் என உயிரியலில் விருப்பம் உள்ள அனைவருக்கும் நான் இந்த நூலைப் பரிந்துரைக்கிறேன். வாங்கி வாசியுங்கள்; இயற்கையின் இரகசியங்களை உணருங்கள். சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.

  • சுல்தானாவின் கனவு: மாற்றத்திற்கான விதை

    21ஆம் நூற்றாண்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர். இந்த மாற்றங்களுக்கு முன்னோடிகளான பலரின் முயற்சியும், போராட்டங்களும், செயல்பாடுகளுமே காரணம். கட்டமைக்கப்பட்ட பிற்போக்கான கற்பிதங்களை உடைத்து, போராடியவர்கள் பலர். இன்று நாம் பெற்றுக் கொண்டிருக்கும் சுகத்திற்குக் காரணமானவர்கள் கண்ட கனவுகள் ஏராளம். கனவோடு நின்று விடாமல் அவற்றை செயல்படுத்திய செயல்வீராங்கனை ரொக்கேயா பேகத்தின் பெண்ணியக் கனவுதான், இந்த 'சுல்தானாவின் கனவு'. இந்தியாவின் சுதந்திரம் என்பது பெண்களின் சுதந்திரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என உரக்கச் சொன்னவர் ரொக்கேயா பேகம். வங்காளத்தில் வீட்டின் உள்பகுதியில், பர்தா முறையில் தனிமைப்படுத்தப்பட்டு ஜெனானாவுக்குள் அடைபட்டிருந்த ரொக்கேயாவிற்கு கிடைத்த கல்வியால், அவரது சிந்தனைகளிலும் செயல்களிலும் ஏற்பட்ட மாற்றத்தை நாம் அறிய முடிகிறது. தான் பயணித்த பகுதிகளில் பெண்களின் நிலை குறித்து சிந்தித்து தன் படைப்புகளில் அவற்றை மையப்படுத்தி எழுதத் தொடங்கினார். 1906ஆம் ஆண்டு ‘இந்தியன் லேடீஸ் மேகசின்’ என்ற இதழில் வெளியான ரொக்கேயா பேகத்தின் முதல் அறிவியல் புனைவுக் கதை Ladyland தான் சுல்தானாவின் கனவு கதை. நூற்றாண்டுகள் கடந்து இன்று நாம் அனைவரும் வாசிக்க தமிழில் எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார் எழுத்தாளர் திவ்யா பிரபு. ‘இது பெண்ணிய தேசம், அறமே இங்கு ஆட்சி செய்கிறாள். வாருங்கள் வாசிப்பின் சிறகுகளை அசைத்து பெண்ணிய தேசத்திற்குள் காலப்பயணம் செய்யலாம்’ என சாரா நம்மைக் கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். ஆண்களின் உலகம் குறித்து சுல்தானாவிற்கு விளக்கம் அளிப்பது போல் நமக்கு விளக்குகிறார். சாரா அளிக்கும் விளக்கமும், சுல்தானாவின் எதிர்கேள்விகளும் வாசிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் மனதில் மாற்றத்திற்கான விதை முளைவிடத் தொடங்குவதற்கான தொடக்கப்புள்ளி எனலாம். நடந்து செல்லும் பாதை எங்கும் பெண்கள் மட்டுமே உள்ள உலகம், பெண்களின் அறிவியல் அறிவால் செயல்படும் அரசாட்சி போன்ற கதையின் போக்கில், அறிவாற்றலே அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான சிறந்த செயல்பாடு என்பதை இக்கதையில் உணர்த்தியுள்ளார். புத்திசாலித்தனமே உடல் வலிமையை விட வலிமையானது என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆணாதிக்கத்திற்கு எதிராக பல கருத்துக்களை சாரா முன்வைக்க, அதைப் புரிந்துகொள்ள, சுல்தானா எழுப்பும் கேள்விகள் வாசிக்கும் நம்மை புரிதலுக்கு கூட்டிச் செல்கிறது. ஆண்களே அனைத்தையும் நிர்வகிப்பவர்களாக இருந்த உலகத்தை எப்படி மாற்ற முடிந்தது? எந்தச் சூழலில் இத்தகைய மாற்றம் சாத்தியமாயிற்று? என கதைக்குள் கதைப் பயணம் அழைத்துச் செல்கிறார் சாரா. 13 வயதில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராணியின் அறிவியல் ஆர்வம் பெண் கல்விக்கு விதையாகிறது. நாடு சந்திக்கும் போர் நெருக்கடியை பெண்கள் எப்படி அறிவியல் அறிவால் முறியடித்தனர்? பெண்களின் ஜெனானா போல் ஆண்களின் மர்தானா எப்படி உருவானது? மர்தானா நடைமுறைக்கு பின் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பவை சாரா சொல்லும் கதைக்குள் இருக்கும் ரகசியங்கள். ரகசியத்தின் ஆணிவேரான ராணியின் அறிமுகத்துடன் சுல்தானாவின் கனவு ரொக்கேயாவின் எழுத்துகளால் நிறைவு பெறுகிறது. 1931இல் ரொக்கேயா எழுதிய ‘உண்மையான விடியல்’ என்ற கட்டுரையும், அவருடைய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மீம்ஸ் வடிவில் தொகுக்கப்பட்ட வரிகளும் சுல்தானாவின் கனவுக்கு பலம் சேர்ப்பவை. கதைக்கு மிக நெருக்கமான கருப்பு வெள்ளை ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளார் ஓவியர் சின்மயா தேவி. வாசிப்பின் மூலம் சிறார்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த புக்ஸ் ஃபார் சில்ரனுடன் இணைந்து சுல்தானாவின் கனவை புத்தகமாக்கியுள்ள ஓங்கில் கூட்டத்தின் செயல்பாட்டுக்கு வாழ்த்துகள். நூற்றாண்டுக்கு பிறகு சுல்தானாவின் கனவை நம் குழந்தைகளும் வாசித்து மகிழ்ந்திட மொழியாக்கம் செய்துள்ள திவ்யா பிரபுவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தற்போது நாம் அனைவரும் குழந்தைகளின் நலனில் கவனமும் அக்கறையும் செலுத்துவது சிறப்பான செயல். அதைவிட அந்தக் குழந்தையின் தாயை வலுப்படுத்துவது மிகமிக அவசியமான ஒன்று. என்ன நடந்தாலும் சரி, பெண்களே விழித்தெழுங்கள். உங்களுடைய கடமைகளை நிறைவேற்றப் புறப்படுங்கள் என தன் எழுத்துகளின் மூலம் எழுச்சியூட்டும் சுல்தானாவின் கனவை வாசிப்போம். வாசிப்பின் மூலம் மாற்றத்திற்கான வழிகளை செயல்படுத்த யோசிப்போம். நூலின் பெயர்: சுல்தானாவின் கனவு ஆசிரியர்: ரொக்கேயா பேகம் தமிழில் : திவ்யா பிரபு வகைமை: சிறார் கதை பதிப்பகம்: ஓங்கில் கூட்டம் & புக்ஸ் ஃபார் சில்ரன் தொடர்புக்கு : 9498062424 ரா.சண்முகலட்சுமி கதை சொல்லி, தமுஎகச அறம் கிளையின் பொருளாளர். பெருந்தலைவர் காமராஜர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர். 2020ஆம் ஆண்டு முதல் தமுஎகச அறம் கிளையின் முகிழ் சிறார் குழுவை தொடங்கி, நடத்தி வருகிறார். இணைய வழியில் கதை சொல்லல், குழந்தைகளுக்கான நிகழ்சிகள் ஒருங்கிணைத்தல் என்று சிறார் வெளியில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

  • சூரியனை நோக்கி சூரியகாந்திச் ‘செடி’ திரும்புகிறதா ? ‘பூ’ திரும்புகிறதா ?

    சூரியன் வரும் திசையை நோக்கி, சூரியகாந்திப் பூ திரும்பும் என்று கேள்விப்பட்டிருப்போம். இது உண்மைதானா? உண்மைதான் என்றால் ஏன் திரும்புகிறது? எந்தப் பக்கம் சூரியன் இருக்கிறது என்று, சூரியகாந்திக்கு எப்படித் தெரியும்? சூரியகாந்திக்கு யார் சொல்லிக் கொடுக்கிறார்கள்? எது உண்மை? உண்மையில், முழுமையாக மலர்ந்த சூரியகாந்திப் பூ நாள் முழுவதும் சூரியனைப் பின்தொடர்வதில்லை. ‘இளம்’ சூரியகாந்திச் செடியின் மொட்டும், அதனைத் தாங்கும் தண்டும்தான் சூரியனின் திசைக்கு ஏற்ப திரும்புகின்றன. சூரியகாந்திச் செடிக்குள் நாம் பயன்படுத்தும் கடிகாரம் இல்லை. நமக்குப் பகல் நேரத்தில் தூக்கம் வராமல், இரவில் மட்டும் நீண்ட நேரம் தூங்க முடிகிறது, அல்லவா? ஏனெனில், ஒவ்வொரு நேரத்தைப் பொறுத்தும் நம்முடைய உடலில் அதற்கேற்ற ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல, சூரியகாந்திச் செடியில், காலையிலும், மாலையிலும் வெவ்வேறு நொதிகள் சுரக்கும். அப்படியானால், செடி எவ்வாறு திரும்புகிறது? தண்டின் இரு பக்கங்களும் ஒரே வேகத்தில் வளர்வதில்லை. காலையில் தண்டின் மேற்குப் பக்கம் சற்றே வேகமாக வளரும்போது, தண்டு கிழக்கு நோக்கி வளைகிறது. பகலில் கிழக்குப் பக்கம் வேகமாக வளர்வதால், அது மேற்கு நோக்கி நகர்கிறது. எனவே பூ தனியாகத் தலையைத் திருப்புவதில்லை; தண்டின் சீரற்ற வளர்ச்சியே மொட்டின் திசையை மாற்றுகிறது. சூரியனைச் சார்ந்து நிகழும் இந்த இயக்கத்திற்குச் சூரியத் திருப்பம் (heliotropism) என்று பெயர். ‘helio’ என்றால் சூரியன், ‘tropism’ என்றால் நகர்வு என்று அர்த்தம். மேலும், சூரியகாந்தி மொட்டாக இருக்கும் காலத்தில், அந்த மொட்டு, பெரிய பூவாக வளர வேண்டும் என்பதற்காக, சூரியகாந்திச் செடி சூரியனை நோக்கி நகரும். இதுவே, சூரியகாந்தி மலர்ந்து, பெரிய பூவானதும், இந்தச் சூரியத் திருப்பம் முடிந்துவிடும்! ஆனால் இந்த இயக்கம் நிகழும் துல்லியமான செயல்முறை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒன்றாகவே உள்ளது. முதிர்ந்த இலைகளுக்கும், தாவரத்திற்குள் நடைபெறும் நீரின் இயக்கத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆய்வின் மூலம், பிற தாவரங்களுக்கும் சீரிய முறையில் அதன் வளர்ச்சியை எளிதாக்கலாம் என்பதால், ஆய்வாளர்கள் சூரியகாந்தியைத் தொடர்ந்து கவனிக்கிறார்கள். ஒரு சூரியகாந்திச் செடியை நட்டுவைத்து, நீங்களே இந்த ஆய்வைத் தொடர்ந்தால் என்ன? ஹேமபிரபா இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் “உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில்” உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தோற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. சிறார்களுக்காக இவர் எழுதிய “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல் பரவலான வாசகர்களைச் சென்றடைந்து பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார். தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

  • வானத்தில் பறப்பது சுலபம்

    பிறந்த குழந்தைக்கு உயிரியல் தேவைகளைத் தவிர இந்த உலகமே விநோதமாகத் தான் தெரியும். வளர வளரத் தான் இந்த உலகின் பொருண்மைத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்கிறார்கள். அதுவரையில் அவர்களுடைய மனதில் இந்த உலகமே ஒரு கற்பனை தான். குழந்தைகளின் கற்பனை எல்லையில்லாதது. அவர்களுக்கு அது கற்பனை என்று கூடத்தெரியாது. உண்மை என்று நம்புகிறார்கள். அவர்களுடைய பிரத்யேகமான உலகத்திற்கான ஒரு மொழியை உருவாக்குகிறார்கள். வித்தியாசமான சைகைகளை உருவாக்குகிறார்கள். விசித்திரமான செயல்களின் மூலம் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். கற்பனை தான் அவர்களுடைய மனதில் பதியும் முதல்பதிவு. உளவியலாளர்கள் பாலிய காலத்தில் உருவாகும் இந்தக் கற்பனை உலகம் பெரியவர்களான பிறகும் தொடர்ந்து தன்னுடைய பாதிப்பைச் செலுத்துமென்று சொல்கிறார்கள். தாங்கள் உணர்ந்ததை வெளிப்படுத்தும்போது அதை அப்படியே வெளிப்படுத்துவதில்லை. அதில் தான் அவர்களுடைய படைப்பூக்கம் வெளிப்படுகிறது. அந்தப் படைப்பூக்கமும் திட்டமிட்டதில்லை. அந்த நேரத்தில் அவர்களுக்குத் தோன்றுகிற தன்னிச்சையான படைப்பூக்கம் (Spontaneous Creativity) படைப்பாக, பாடலாக, நடிப்பாக, நடனமாக வெளிப்படுகிறது. இந்தப் படைப்புகளின் வழியாகத் தாங்கள் உணர்ந்ததைச் சொல்லும்போது அதில் அவர்களையறியாமலே ஒரு கருத்துரு வெளியாகிறது. அதிலிருந்து பெரியவர்களும் சிறார்களும் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. சிறார் இலக்கியத்தில் இந்த மாதிரியான படைப்புகள் குழந்தைகளே எழுதும் குழந்தை இலக்கியம் என்ற வகைமைக்குள் அடங்கும். உலகம் முழுவதும் குழந்தைகள் எழுதும் மிகச் சிறந்த படைப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் படைப்புகள் கொண்டாடப்படுகின்றன. இதோ கோவையிலிருந்து பி.ஜீ. கவின் சொற்கோ ரியோ மியோ என்ற நாவலுடன் குழந்தை இலக்கியத்துக்குள் பிரவேசித்திருக்கிறார். எதிரெதிர் குணங்கள் கொண்ட விலங்குகளாக இருந்தாலும் அவை அன்பு கொண்டு விட்டால் அதற்காக எதையும் செய்து முடிப்பார்கள். ரியோ மியோ என்ற பெயரிலிருந்தே கதை தொடங்கி விடுகிறது. நாயும் பூனையும் ஒரு வீட்டில் எப்படி வாழத் தொடங்குகின்றன. முதலில் ஒருவரையொருவர் பிடிக்காமலிருந்தாலும் பிறகு ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துகின்றன. இதுவரை கதை யதார்த்தத் தளத்தில் நகர்கிறது. பிறகு கதையில் முழுக்க முழுக்க கவினின் ஃபேண்டசி தான். கவினின் படைப்பூக்கம் முழுவீச்சில் வெளிப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட ரசிக்கும்படியான கதை அமைப்பும் முடிவும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் புத்தகம் என்ற உணர்வேயில்லாமல் மிக இலகுவான மொழிநடை, ஃபேண்டசிக்குள் இருக்கும் தர்க்கரீதியான கதைப்பின்னல், எல்லாம் கவினின் பரந்த வாசிப்பைச் சுட்டி நிற்கின்றன. ஓவியர் தமிழ்ப்பித்தனின் அழகிய வண்ண ஓவியங்களுடனும் அழகான வடிவத்துடனும் மேஜிக்லாம்ப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் நம் குழந்தைகளின் கற்பனைத்திறனுக்குச் சாட்சியாக வெளியாகியிருக்கிறது. வாசித்துப்பார்த்தால் வானத்தில் பறப்பீர்கள்! வாழ்த்துகள் பி.ஜீ. கவின் சொற்கோ! ரியோ மியோ பி.ஜீ.கவின் சொற்கோ வெளியீடு – மேஜிக் லாம்ப் விலை- 150/ தொடர்புக்கு – 99425 11302 உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • அறமதியின் கதை - 8

    மதச்சார்பின்மை – வானவில்லின் வண்ணங்கள் வானவில்லின் பச்சை நிறப் பாதையில் நடந்த அன்பினியை, அந்தப் பாலம் ஒரு அடர்ந்த காட்டின் நடுவே கொண்டு சேர்த்தது. சால மரத் தோப்பில் பழங்குடி ஆண்களும் பெண்களும் நடமாடிக்கொண்டிருந்தனர். ஒரு குட்டிப் பெண் தந்த புல்லாங்குழல் போன்ற கருவியை அன்பினி ஊதினாள். அன்பினி ஒரு விசில் ஊதுவதைப் போல ஊதினாள். ஆனால் அதிலிருந்து வெளிவந்த அற்புதமான ஓசை மற்ற இசைக்கருவிகளின் ஓசையோடு கலந்து இசைக் கச்சேரியானது. அந்த தாளத்தில் லயித்து சால மரத் தோப்பே ஆடியது. காடும் ஆடியது. பாய்ந்தோடிய நதியும் ஆடியது. அங்கே பச்சை நிற உடையில் பழங்குடிப் பெண்ணைப் போல அணிகலன்கள் அணிந்து ஆடிக் கொண்டிருந்த அறமதியைக் கண்டாள் அன்பினி. ஆட்டம் முடிந்ததும், “நாம எங்கே இருக்கோம்?” எனக் கேட்டாள். “ஜார்க்கண்டில் உள்ள ஒரு காட்டின் நடுவே.” “இப்படி ஒரு நடனத்தை நான் பார்த்ததில்லை! இது வழிபாட்டு நடனம் எனப் புரிகிறது. ஆனால் கோவிலும் இல்லை, சிலையும் இல்லையே?” “இவர்கள் சர்னா சமய மரபைப் பின்பற்றி இயற்கையை வழிபடுபவர்கள். நீர், காடு, நிலம் எனும் ‘ஜல், ஜங்கல், ஜமீன்’ மூன்றையும் போற்றுபவர்கள்.” “ஆச்சரியமாக இருக்கிறது! இப்படியும் ஒரு மதம் உண்டா?” “கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்த நாடு இந்தியா. இங்குள்ள பண்பாடுகள், சமயங்கள், மொழிகள் எல்லாமே எண்ணற்ற நிறங்கள் கொண்ட வானவில் போலத்தான்!” “வானவில்லில் ஏழு நிறங்கள் தானே இருக்கும்?” “வா, போய்ப் பார்க்கலாம்.” இப்போது அன்பினி வானவில் பாலத்தின் நீல நிறத்தில் நடந்து போனாள். அடர் நீல நிறத்திற்கும் பச்சை நிறத்திற்கும் இடையில் இருந்த நீலம் எண்ணற்ற வண்ண வார்ப்புகளாகப் பிரிந்தும் கலந்தும் இருந்தது. சொல்லப்போனால், பச்சை எங்கே முடிந்து, நீலம் எங்கே தொடங்குகிறது என்று கூடத் துல்லியமாக அவளால் சொல்ல முடியவில்லை. யோசித்தபடியே அவர்கள் வந்து சேர்ந்த இடம் போத் கயா. “புத்தர் ஞானம் பெற்ற புனித ஸ்தலம் தானே இது?” என உற்சாகமானாள் அன்பினி. “ஆமாம், உலக பௌத்தர்களின் புனித இடம்.” “வா, விகாரைக்குள் போவோம்.” அமைதியின் உருவமாக இருந்தது புத்தர் சிலை. அந்த அமைதி அன்பினியின் மனதிலும் நிறைந்தது. லேசான ஓர் இறகைப் போல அவள் மிதந்து போய்க்கொண்டிருந்தாள், வானவில்லின் மஞ்சள் நிறத்தின் மேல். அணையாத நெருப்பை நடுவில் கொண்ட நெருப்புக் கோவிலுக்கு வந்து சேர்ந்தாள். “இங்கே எப்படி நெருப்பு அணையாமல் இருக்கிறது?” “இது ஜோராஷ்ட்ரிய மதக் கோவில். நெருப்பு இவர்களுக்கு மிகவும் புனிதமானது. தூய்மையையும் ஒளியையும் குறிக்கிறது. அதனால் நெருப்பை எப்போதும் அணையாமல் பாதுகாக்கிறார்கள். பாரசீகத்தில் தோன்றிய மதம் இது. பல நூற்றாண்டுகளாக இவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.” வெளியே வந்ததும், மசூதியின் ஒலிபெருக்கியிலிருந்து தொழுகை அழைப்பு ஒலித்தது. ஊரைப் பார்த்ததும் அன்பினிக்கு அடையாளம் புரிந்தது. “ஐ! ஹைதராபாத். எனக்குப் பிடிச்ச ஊர்! காரணம் தெரியுமா?” “பிரியாணிதானே?” “அதுவும் தான். ஆனால் வேறொரு முக்கிய காரணமும் இருக்கு. போன வருடம் டூர் வந்தப்போ சார்மினாரில் கூட்டத்தில் தொலைந்துவிட்டேன். பயந்தே போயிட்டேன். அப்போ அங்க ரோட்டுல கடை போட்டிருந்த அப்துல் அண்ணாதான் உதவி செஞ்சாரு. கடைய அப்படியே விட்டுட்டு என் கூடவே அலைஞ்சு திரிஞ்சு, ஒரு வழியா எங்க டீச்சர் கிட்ட கொண்டு சேர்த்தார். வளையல் வித்த பாத்திமா அக்காவும் எனக்கு ஆறுதல் சொன்னாங்க. அதை மறக்கவே முடியாது.” “நல்ல மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், இல்லையா அன்பினி?” அப்போது இளஞ்சிவப்பு நிறப் பாலம் அவர்களுக்காகப் பாதை விரித்து காத்துக்கொண்டிருந்தது. “நாம் பார்த்த ஒவ்வொரு இடத்திலும் அப்படியே தங்கிவிடலாம் போலிருக்கிறது அறமதி!” “ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு உண்டு. ஆனால் இந்தியாவின் சிறப்பே தனி! வா, சொல்கிறேன்.” அவர்கள் நடக்கத் தொடங்கினர். “கிறிஸ்துவம் தோன்றிய காலத்திலேயே இயேசுவின் சீடரான ‘புனித தாமஸ்’ அதை கேரளாவுக்குக் கொண்டுவந்தார்.” “கேரளா என்றதும் ஞாபகம் வருது! கொச்சின் SJSF கேம்ப் போனப்போ யூதர்களின் பழமையான வழிபாட்டிடம் - சினகாக் பார்த்தோம். அப்போதான் யூதர்களை ஹிட்லர் கொன்றது பற்றித் தெரிஞ்சது. ஆன் பிராங்கின் நாட்குறிப்பு புத்தகத்தை லைப்ரரியிலிருந்து எடுத்து படிச்சேன். அந்தப் பொண்ணும் என்னை மாதிரி ஒரு சின்னப் பொண்ணுதானே. குழந்தைகளைக்கூட மதத்தின் பெயரால் எப்படி கொல்ல முடியும்? ஹிட்லர் அப்படிச் செஞ்சா, மற்ற எல்லாரும் ஏன் அமைதியா இருந்தாங்கன்னு கோவம் வந்துச்சு.” “வரலாற்றில் நடந்த ஒரு பெரும் கொடூரம் அது. சரியான கேள்வியை நீ கேட்டிருக்க, அன்பினி. ஒரு குற்றம் நடக்கும்போது, அதைப் பார்த்துக்கிட்டு அமைதியாக இருப்பது எப்படி சரியாக இருக்கும்?” “ஆனால் இந்தியாவில் இருந்த யூதர்கள் அதே காலத்தில் பத்திரமாக இருந்ததாக அவர்களே சொன்னார்கள்.” பேசியபடியே ஒரு குருத்வாராவை அடைந்தனர். “பசிக்கிறது, சாப்பிட்டு வரலாம்” என்றாள் அறமதி. லங்கார் அன்னதானத்தில் சப்பாத்தி, சப்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம் வயிறாரச் சாப்பிட்டனர். அங்கே இருந்த ஒரு பலகையை அன்பினி கவனித்தாள். இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை வன்முறையால் பாதிக்கப்பட்டு பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் வந்த சீக்கியர்கள் தமிழர்களுக்கு நன்றி சொல்லி எழுதியிருந்தார்கள். “மதத்தின் பெயரால் வன்முறை ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மத வித்தியாசம் பார்க்காமல் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்கிறார்கள்” என்று அன்பினி சொல்லும்போதே அவள் முகம் வாடிப் போய்விட்டது. அறமதி அவளை குருத்வாராவிற்குள் அழைத்துச் சென்றாள். தலையில் துணி கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். “அல்லா… ராம்… வாஹே குரு…” என்ற பாடல் ஒலித்தது. அந்த இனிமையான பாடலைக் கேட்டுக்கொண்டே அன்பினி குருத்வாராவைச் சுற்றி வந்தாள். வெளியே வரும்போது அவள் மனம் அமைதியடைந்திருந்தது. சாலையின் முடிவில் இருந்த அரச மரத்தடி நிழலில் அமர்ந்தனர். எதிரே சர்ச், அமர்ந்த மரத்தைச் சுற்றி முருகன் கோவில், இடதுபுறம் மசூதி. “நீ இந்தியாவின் சிறப்பை சொல்லுறேன்னு சொன்னாயே.” என கேட்டாள் அன்பினி. “அது என்னவென்று நீயே பார்த்து உணர்ந்து விட்டாயே.” “நம்ம நாட்டுலதான் இத்தனை மதங்கள் இருக்கு. ஒன்றாகச் சேர்ந்து இருக்கு. இங்க யாரு வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் ஃபாலோ பண்ணலாம். சரியா?” “மிகவும் சரி. அந்தச் சுதந்திரத்தை அரசியல் அமைப்புச் சட்டம் எல்லோருக்கும் தந்திருக்கு. எந்த மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் வாழவும் உரிமை உண்டு.” “இத்தனை மதங்கள் இங்கு இருக்கு. உன்னோட மதம் என்ன? உனக்கு எந்த மதம் ரொம்பப் பிடிக்கும்?” அறமதி சிரித்தாள். “நான் எந்த மதத்தையும் சார்ந்தவள் இல்லை. ஏனென்றால் நான் இந்திய அரசியல் அமைப்பு. இந்தியா ஒரு ‘மதச்சார்பற்ற மக்களாட்சி’ நாடு. இந்திய அரசுக்கு தனியாக எந்த மதமும் கிடையாது.” “அப்போ அரசாங்கத்துக்கும் மதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா?” என்று கேட்டாள் அன்பினி. “இல்லை. எல்லா மக்களையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் நடத்தணும். ஒருவருடைய நம்பிக்கையை மதிப்பது முக்கியம். ஆனால் அந்த நம்பிக்கையின் பெயரில் இன்னொருவருடைய சமத்துவத்தையோ, மனித மாண்பையோ, உரிமைகளையோ பறிக்க முடியாது. அந்த மாதிரி வழக்கங்களை அரசு தடுக்கலாம்.” “கணவன் இறந்ததும், மனைவியும் நெருப்பில் விழுந்து சாகும் ‘சதி’ என்ற கொடுமையைத் தடுத்து நிறுத்தினார்களே, அது மாதிரியா?” “ஆமா. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றோ, பெண்கள் போகக் கூடாது என்றோ சொல்லக் கூடாது. இது போன்ற சீர்திருத்தங்களை அரசு தலையிட்டு செய்ய, அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமிருக்கு.” “அப்போ ஒருத்தருடைய மத சுதந்திரத்தையும் காப்பாத்தணும்; அதே நேரம் அந்த மதத்தின் பெயரில் இன்னொருத்தருக்கு அநியாயம் நடக்க விடக்கூடாது?” என்றாள் அன்பினி. “அதேதான்” என்றாள் அறமதி. அப்போது அவர்கள் முன் சிவப்பு கம்பளம் விரித்ததைப் போல வானவில் ஒளிர்ந்தது. ஒரு திருவிழாவின் கோலாகலம் இன்னொரு பக்கம் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அது என்ன திருவிழா? (அறிவோம் தெளிவோம்) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.

  • ஆட்டுக்குட்டி தப்பித்த கதை

    மேய்ச்சல் காட்டில் ஒரு ஆட்டுக்குட்டி’ அங்கும் இங்கும் அலைஞ்சுதாம் ! அங்கும் இங்கும் அலைஞ்சுதாம் ! வயிறு முட்ட மேய்ந்துவிட்டு குதிச்சு குதிச்சு ஆடிச்சாம்! குதிச்சு குதிச்சு ஆடிச்சாம்! அங்க வந்த சிறுத்தை ஒண்ணு ஆட்டுக்குட்டியப் பாத்துச்சாம்! ஆட்டுக்குட்டியப் பாத்துச்சாம்! ஆட்டைப் பிடிச்சு அடிச்சு தின்ன சிறுத்தை ஆசை பட்டுச்சாம்! சிறுத்தை ஆசை பட்டுச்சாம்! புதருக்குள்ள ஓளிஞ்சு நின்னு ஆட்டை நோட்டம் விட்டுச்சாம்! ஆட்டை நோட்டம் விட்டுச்சாம்! மரக்கிளை ஒண்ணு முறிஞ்சு தான் சிறுத்தை மேல விழுந்துச்சாம்! சிறுத்தை மேல விழுந்துச்சாம்! எழுந்து நிற்க முடியாமல் சிறுத்தை வலியில் துடிச்சுதாம்! சிறுத்தை வலியில் துடிச்சுதாம்! வலியில் உறுமிய சிறுத்தை சத்தம் ஆட்டுக்குட்டிக்குக் கேட்டுச்சாம்! ஆட்டுக்குட்டிக்குக் கேட்டுச்சாம்! அப்போ வந்த குதிரை கிட்ட ஆபத்து ஆபத்துன்னு சொல்லிச்சாம்! ஆபத்து ஆபத்துன்னு சொல்லிச்சாம்! அண்ணா என்னையும் காப்பாத்துன்னு குதிரை கிட்ட கேட்டுச்சாம்! குதிரை கிட்ட கேட்டுச்சாம்! எம்பிப் பாய்ந்த ஆட்டுக்குட்டி குதிரை மேல ஏறிகிச்சாம்! குதிரை மேல ஏறிகிச்சாம்! கூர் அம்பு போல குதிரையும் தான் மின்னல் வேகத்தில் பறந்துச்சாம்! மின்னல் வேகத்தில் பறந்துச்சாம்! சிறுத்தை வாயில் அகப்படாமல் ஆட்டுக்குட்டியும் தப்பிச்சுதாம்! ஆட்டுக்குட்டியும் தப்பிச்சுதாம்! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

  • நம்மைச் சுற்றி உயிருலகம்

    28 ஆகஸ்ட் 2026, மாலை 5 மணி அளவில், ‘நம்மைச் சுற்றி உயிருலகம்’ எனும் தலைப்பில் குழந்தைகளுடன் உரையாட, இந்து தமிழ் திசையின் ஆசிரியரும், குழந்தைகள், சிறார் மற்றும் அறிவியல் எழுத்தாளரும், குறிப்பாகச் சூழலியல் எழுத்தாளருமான திருமிகு. ஆதி வள்ளியப்பன் அவர்கள் நமது மாண்டிசோரிக்கு வந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நமது மாண்டிசோரியில் தொடக்கக் கல்வியை முடித்து வெளியேறிய குழந்தைகளின் முதல் வாசிப்பு நூலான (படித்துப் படித்துக் கிழிந்துபோன) ‘கும்பிடுப்பூச்சியின் பயங்கர பசி’ எனும் நூலின் ஆசிரியர் வருவதால், அந்நூல் மட்டுமின்றி, பல தலைப்புகளில் அவர் எழுதிய நூல்களையும் நம்முடைய நூலகத்திலிருந்து அவர் வருகைக்காகக் காட்சிப்படுத்தியிருந்தோம். கூடவே, நமது காலைநேர வகுப்பில் உள்ள குழந்தைகள் சேகரித்த பலதரப்பட்ட இலைகளின் வடிவங்கள், மாலைநேர வகுப்பு மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் சேகரித்த மாதிரி மண்கள், பூச்சிகள், உயிரிகளின் எலும்புக்கூடுகள், சிற்பிகள், சங்குகள் எனப் பலவற்றையும் அவருக்காகக் காட்சிப்படுத்தியிருந்தனர். ஆதி வள்ளியப்பன் அவர்கள் ஒரு கதையை குழந்தைகளுக்குப் பொறுமையாக, அவர்களின் மொழியில் கூறி, அதன் மூலம் நம் சுற்றுப்புறத்தைத் தொடர்ந்து கவனித்தல், நம்மில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்பதைப் பயிற்றுவித்தார். அதன் பிறகு, தன் வாழ்விடப் பகுதியில் அவர் கண்ட பலவிதமான பறவைகள் மற்றும் பூச்சி இனங்களின் படங்களைக் காட்டி, அவற்றின் சிறப்புகள், தேவைகள், உணவுச் சங்கிலியின் இயல்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் கலந்துரையாடினார். புகைப்படங்கள் திரையில் தோன்றத் தோன்ற, நமது காலைநேர வகுப்புக் குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு பறவைகளின் பெயர்களைக் கூறி, அவர் உள்பட அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தனர். மாலைநேர வகுப்புக் குழந்தைகளிடம் பறவைகளின் பாலின வேறுபாட்டைக் கண்டறிதல், அவற்றின் உருவம் மற்றும் நிறத்தில் காணப்படும் மாறுபாடுகளின் அவசியம், தேவை போன்றவற்றை எடுத்துரைத்தார். அதிலிருந்து எழுந்த சந்தேகங்கள், அவற்றின் குரல், ஒலி போன்றவை பற்றியும் கலந்துரையாடினார். முடிவாக, குழந்தைகள் அனைவரும் அவருக்கு நூல் பரிசளிக்க, எப்பொழுதும்போல் குழந்தைகளுக்கு அவரும் சில நூல்களைப் பரிசளித்தார். நம் அழைப்புக்கேற்ப, குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். நம் குழந்தைகளைக் காணும் பொருட்டு மிகுந்த சிரமங்களுக்கிடையிலும் பயணம் செய்து, கடும் மழையிலும் குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்து, தொடர்ந்து பயணிப்போம் என அன்பைப் பகிர்ந்த திருமிகு. ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி கூறி, நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. ஆனந்த் அன்பும் அறனும் மாண்டிசோரி – அறிவியல்பூர்வமான மாற்றுக் கல்விமுறையை அனைவருக்குமான கல்வியாகக் கொண்டு செல்லும் ஒரு முயற்சி. இங்கு சாமானியர்களின் குழந்தைகள் தரமான வாழ்க்கை முறைக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறார்கள். 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் பகல்நேரத்திலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் மாலைநேரத்திலும், தங்கள் வழக்கமான பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் இரண்டு மணி நேரம் மாண்டிசோரி முறையில் பயின்று வருகிறார்கள். தனது இணையர் திருமிகு. மேகலா அவர்களுடன் இணைந்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியை நடத்தி வருகிறார்.

bottom of page