top of page

இயலில் தேடலாம்!

178 results found with an empty search

  • ஈஸ்டர் தீவு (ராப்பா நூயி)

    தென்னமெரிக்க நாடான சிலி நாட்டிலிருந்து, மேற்கே மூவாயிரத்து எழுநூறு கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குப் பசுபிக் பெருங்கடலின் நடுவே ஒரு சிறிய தீவு அமைந்திருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் வெடித்துக் கிளம்பிய எரிமலை குளிர்ந்ததால் இந்தத் தீவு கடலுக்கு நடுவே உருவானது. முக்கோண வடிவிலான இந்தத் தீவு அறுபத்தி மூன்று சதுர மைல் பரப்பே உடையது. முழுத் தீவும் பெரும்பாலும் எரிமலைக் கற்களால் ஆனது. மூன்று முக்கிய எரிமலைகளான ரானோ காவு, தேரெவாகா மலை மற்றும் ரானோ அரேகா போன்றவை இந்தத் தீவின் வடிவமைப்பை உருவாக்கியிருக்கின்றன. இந்தத் தீவில் என்ன சிறப்பு? 1722 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, ஈஸ்டர் திருநாள் அன்று, டச்சு மாலுமியான ஜேக்கப் ரகவீன் என்பவர் இந்தத் தீவுக்கு முதன்முதலில் வந்திறங்கினார். இத்தீவுகளில் மனிதர்கள் வாழ்வதை வெளியுலகத்துக்கு அறிவித்தார். அவர் வந்திறங்கிய நாளின் நினைவாக அவர் இதற்கு ஈஸ்டர் தீவு என்று பெயரிட்டார். ஆனால் இங்கு வசித்துக் கொண்டிருந்த பூர்வகுடிகள் வைத்திருந்த பெயர் ராப்பா நூயி. இங்கு கண்ட நூற்றுக்கணக்கான பிரம்மாண்டக் கற்சிலைகளே ஜேக்கப் ரகவீன் கண்டறிந்த ஆச்சரியம். ஒவ்வொரு சிலையும் ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்தச் சிலைகளை மோவாய் என்று அழைக்கிறார்கள். மோவாய் சிலைகள் மனித முக வடிவமைப்புடன், நீண்ட காதுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைப்பகுதியில், சிலைகளுக்கு ஒரு சிவப்பு நிற 'தொப்பி' போன்ற அமைப்பு (புக்கவ்) வைக்கப்பட்டிருக்கும். இச்சிலைகள் பெரும்பாலும் மார்பளவு வரையிலான உருவங்களாகவே உள்ளன. இருப்பினும் சில முழு உருவச் சிலைகளும் காணப்படுகின்றன. பத்து மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலைகள் சுமார் 80 டன் எடை கொண்டவை. இதுவரை எண்ணூற்று எண்பத்து ஏழு சிலைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தச் சிலைகள் எப்படி உருவாகின? ஏன் உருவாகின? இந்தத் தீவுகளின் பூர்வகுடிகளான ராப்பா நூயி மக்கள் இச்சிலைகளை உருவாக்கியவர்கள் ஆவர். அவர்கள் பாலினேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழியும் ராப்பா நூயி என்றே அழைக்கப் படுகிறது. அவர்களது நாகரீகத்தில் இறந்த தங்களது மூதாதையரின் ஆவிகளைச் சிறப்பிக்கும் விதமாக இந்தச் சிலைகளை அமைத்தனர். தீவைக் காக்கும் தெய்வங்கள் போல இச்சிலைகள் கடலைப் பார்க்காமல், கடலுக்கு முதுகு காட்டி, தீவின் கிராமங்களைப் பார்க்கும் வண்ணம் வரிசையாக நிற்கின்றன. எரிமலைப் பாறைகளால் இந்தச் சிலைகளைச் செதுக்கினர். பின்னர் இச்சிலைகளைக் கயிறுகள் கொண்டு கட்டி, மரக்கட்டைகளைத் தரையில் அடுக்கி அவற்றின் மீது வைத்து நகர்த்தி, கடற்கரைப் பகுதிக்குச் சென்று கல்மேடைகளில் நிறுத்தி வைத்தனர். இந்தக் கல்மேடைகள் ‘ஆஹூ’ என்று அழைக்கப்படுகின்றன. கி.பி. 1200 முதல் 1500 வரையிலான காலகட்டத்தில் மோவாய் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ராப்பா நூயீ நாகரிகம், சில நூற்றாண்டுகளுக்குள் திடீரென வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளன. இருப்பினும், ஆய்வாளர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்: காடழிப்பு: மோவாய் சிலைகளை நகர்த்தவும், போக்குவரத்திற்காகவும் ராப்பா நூயீ மக்கள் தீவில் இருந்த அனைத்து பெரிய மரங்களையும் வெட்டித் தீர்த்தனர். மரங்கள் இழந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டது, விவசாயம் பாதிக்கப்பட்டது, படகு கட்ட முடியாமல் மீன்பிடித்தலும் தடைபட்டது. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. உள்நாட்டுப் போர்: பஞ்சம் தலைவிரித்தாடியபோது, குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சிலைகளைத் தூக்கி நிறுத்துவதைக் கைவிட்டு, ஏற்கனவே நிறுவப்பட்ட சிலைகளைச் சேதப்படுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. வெளியார் வருகை: ஐரோப்பியர்கள் தீவுக்கு வந்த பிறகு, அங்கு அடிமை வியாபாரம், தொற்றுநோய்கள் மற்றும் குடியேற்றவாதம் ஆகியவற்றால் பூர்வீக மக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இன்று, ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்பு மண்டலமாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சிலி நாட்டினர் தங்கள் கட்டுப்பாட்டில் இந்தத் தீவுகளைக் கொண்டுவந்தனர். இத்தீவுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்தே உள்ளது. மோவாய் சிலைகளைப் பார்க்க உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஈஸ்டர் தீவு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மோவாய் சிலைகளை எப்படி நகர்த்தினார்கள், அவற்றின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன, அந்த நாகரிகம் ஏன் வீழ்ச்சியடைந்தது போன்ற கேள்விகளுக்கு முழுமையான, ஏற்றுக்கொள்ளப்பட்ட பதில்கள் இன்னமும் இல்லை. இந்த மர்மங்களே ஈஸ்டர் தீவை இன்றுவரை உலகின் மிகவும் வியப்புக்குரிய இடங்களில் ஒன்றாக வைத்திருக்கின்றன. இவர்களது எழுத்துமொழியை எப்படிப் படிப்பது என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஸ்டர் தீவு மனிதக் கலைப்படைப்புகளுக்கு ஒரு அற்புதச் சான்று. இயற்கையும் மனிதக் கலைத்திறனும் இணைந்தது இந்த தீவு. பழங்கால நாகரிகங்கள் எவ்வளவு திறமையானவை என்பதை இன்றும் உலகுக்கு நினைவூட்டுகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இந்தத் தீவுகளுக்குச் சென்று பார்த்துவிட்டு பழைய நாகரீகத்துக்குள் பயணம் செய்யலாம்! (படங்கள் உதவி: விக்கிபீடியா) எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • வன ராணி

    மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை. தேன்மொழி மிக குதூகலமாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். படித்து கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்திவிட்டு  "தேனு..பக்கத்து வீடு பால் வண்ணம் மாமா வீட்டுக்கு நாறும்பூ மாமா  வந்துருக்காங்க . உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் "என்று அம்மா கூறினாள். தேன்மொழிக்கு சந்தோசம் தாங்கல .."மாமா எப்போ வந்தாலும் நிறைய கதை சொல்லுவாங்க,மாமா சொல்ற கதை எல்லாம் புதுசா இருக்கும் " மாமவ பார்க்க போனாள். மாமா இவள பார்த்ததும் "தேனு எப்படிம்மா இருக்க" என்று  கேட்டாங்க,ரெண்டு பேரோட பேச்சு அப்படியே போகும் போது "மாமா ஒரு கதை சொல்லுங்க" என்று கேட்க... மாமாவும் கதை சொல்ல தொடங்கினார். "ஒரு அடர்ந்த வனம்.அந்த வனத்தை ஆண்டது ஒரு ராணி " 'ராணியா 'என்று தேன்மொழி கேட்க "ஆமா, அந்த காலத்தில் ராணியும் ஆட்சி செய்தார்கள். அவ பெயர்  மீனாட்சி.. காட்டை அந்த ராணி ரொம்ப சிறப்பாக ஆட்சி செய்தாள். அங்குள்ள பழங்குடி மக்களும் மகிழ்ச்சியாக,அன்புடன் அனைவரும் கூடி வாழ்ந்தார்கள். எந்த ஒரு ஏற்ற தாழ்வும் கிடையாது. காடு தனக்கே உரியது என நினைக்காமல் விலங்குகளுக்கும் உரிமை உண்டு என உயிர்மெய்நேயம் உடையவர்கள். ஒரு நாள் மூன்று நபர்கள் வெளிநாட்டில் இருந்து அந்த காட்டிற்கு வந்து ராணியின் அனுமதி இல்லாமல் ஒரு குடில் போட்டாங்க." ' குடில்னா 'யோசனையா கேட்டா தேன்மொழி  "குடில்னா தங்குறதுக்கு ஒரு ஓலை வீடு அப்டினு அர்த்தம்" மாமா சிரிச்சிகிட்டே சொன்னாங்க  "இது ஒற்றர்கள் மூலம் ராணிக்கு தெரிந்தது.உன் வீட்டில் உன்கிட்ட கேட்காமல் யாரவது வந்தா  " தங்க விடுவியா!! யாரு நீங்க என்ன ஏதுன்னு விசாரிப்பல்ல அந்த ராணியும் அதைத்தான் பண்ணாங்க   ஒரு மந்திரியை அனுப்பி "ராணிக்கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் தங்கணும்"என்று சொல்ல   சொன்னாள். ஆனால் அந்த மந்திரியை அடித்து அனுப்பினர். இதனால் கோவம் அடைந்த ராணி நேராக சென்று பேசினாள். அவர்களோ அதிகார தொனியில் பேசினார்கள். இது ஒரு வாக்குவாதமாக மாறி, அந்த மூவரில் ஒருவன் வில்லை எடுத்து ராணியின் மூக்கு, காது, மார்பை அறுத்தான்." 'இது என்ன கொடூரம், இதை யாரும் தட்டி கேட்கலையா' "பழங்குடிகள், ஏழைகளுக்கு நடக்கும் குற்றங்களை யாரும் தட்டி கேட்க மாட்டார்கள். அதிகார வர்க்கம் எப்போவும் அடிமைப்படுத்ததான் நினைக்கும்." 'மாமா, இது சூர்ப்பணகை கதை மாதிரியே இருக்கு' சிரித்துக்கொண்டே"கண்டு பிடிச்சிட்டியா " 'ஆனால், நான் சூர்ப்பணகையை வஞ்சி மகளுன்னு படிச்சேன்.. அவ அரக்கி தானே, அழகா இருப்பானு சொல்றிங்க, மீனாட்சினு வேற சொன்னிங்க'என கேள்வியை அடுக்கிக்கொண்டே இருந்தாள். மாமா.. "பொறுமையா இரு. சொல்றேன். சூர்ப்பனகையை விகாரத் தோற்றம் உடையவளாகவும் துர்க்குணம் நிறைந்தவளாகவும் நம் மனம் சித்தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையில் சூர்ப்பணகை அழகானவள். பிறக்கும் போதே அவள் தன் தாய் கேசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களை அழகில் விஞ்சியிருந்தாளாம். அவள் கண்களின் அழகுக்காக மீனாட்சினு lபெயர் வச்சாங்க .. 'ச்சே, எவ்வளவு தப்பா புரிஞ்சி வச்சிருக்கேன், ஏன் அவளை அரக்கி என்று சொல்றோம்'தேன்மொழி வருத்தப்பட்டாள். "சூர்ப்பணகை போராட்ட குணம் படைத்தவள்... தங்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வுடன் இருந்தவள். அதை பயமின்றி சொன்னவள்.. வெறும் கொலு பொம்மை போலின்றி அறிவுள்ளவளாகவும் இருந்தாள்.. ,. அதனால் அவர்கள் கெட்ட குணங்களை படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டு விட்டார்கள்." ' எப்போவுமே கதை கதாநாயகன், கதாநாயகி, பார்வையில் தான் இருக்கிறது. கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து சொல்ல படுவது இல்லை' " இது கற்பனை இதிகாசங்களில் மட்டும் இல்லை, இப்போதும் அடக்குமுறை இருக்கிறது "மாமா சொன்னாங்க. ' இப்போதுமா'..'தேன்மொழி ஆச்சிரியமாக கேட்க.. "பல உலக நாடுகள், இந்தியா உட்பட பழங்குடிகளை காட்டில் இருந்து தள்ளி  நகரங்களாக மாற்றுகிறது. ஒரு கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதியில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம்.தான்" என்று மாமா சொல்ல 'மாமா இன்னும் அவங்கள பத்தி சொல்லுங்க மாமா 'என்று ஆவலுடன் தேன்மொழி கேட்டாள் "உலகெங்கிலும் 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடி மக்கள் இருககாங்க.., இதில் 476 மில்லியன் மக்கள் உள்ளனர் - இது உலக மக்கள் தொகையில் சுமார் 6.2% தான்.  4,000 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள்.  அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டிருக்கலாம் என்றாலும், பழங்குடி மக்கள் உலகம் முழுவதும் அதே கடுமையான யதார்த்தங்களை அனுபவிக்கின்றனர். அவர்களின் மனித உரிமைகள் தொடர்ந்து அரசு அதிகாரிகளால் மீறப்படுகின்றன, மேலும் அவர்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறார்கள்.. .  பழங்குடியின் கையில் இருந்த சோலைவனம் இப்போது நம்மிடம் பாலைவனமாக உள்ளது."என்று மாமா சொல்ல .. 'இதுக்கு நம்ம என்ன செய்யலாம்' தேன்மொழி கேட்டாள் "இதை உன் நண்பர்கள் கிட்ட பகிரலாம், சமூக வலைத்தளங்களில் இது போன்ற நல்ல கருத்துகளை பதிவிடலாம்." 'கண்டிப்பாக செய்வேன், ரொம்ப நன்றி மாமா' என்று கூறிவிட்டு தேன்மொழி வெளியே வந்தாள். கருமேகங்கள் நகர்ந்து சூரிய ஒளி பிரகாசமாக தெரிந்தது, வானில் மட்டும் அல்ல தேன்மொழியின் மனதிலும் தான்... மிக விரைவில் அவள் அதைப் பற்றி ஒரு குழந்தைகள் புத்தகத்தில் ஒரு கதையை எழுதுவாள், நாம் அனைவரும் ஒரு நாள் அதைப் படிப்போம் சூடாமணி மு.சூடாமணி, வயது 15 ,11ம் வகுப்பு மாணவி, திருநெல்வேலி கதைசொல்லி, இளம் ஓவியர் இளம் எழுத்தாளர், இளம் கவிஞர், இளம் சொற்பொழிவாளர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், உள்ளிட்ட 6 புத்தகங்களை எழுதியிருக்கும் சூடாமணி ஓவியரும் கூட..

  • மந்திரப்பேனா

    அறிவழகி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வந்தாள். அப்பொழுது அவள் வீட்டிற்கு அவளுடைய பாட்டி வந்திருந்தார். பாட்டியோ பேத்தியை பார்த்த மகிழ்ச்சியில் வாரி அணைத்து கொண்டார். பிறகு அவளுக்கு பரிசாக ஒரு பேனாவை தந்தார். இதனால் அறிவழகி ஏமாற்றம் அடைந்தாள்  "என்ன பாட்டி நீங்க பொம்மை வாங்கிட்டு வருவீங்கன்னு நினைச்சேன்" என்று வருந்தினாள்  அதற்குப் பாட்டி"என் செல்லக்குட்டியே இது சாதாரண பேனா இல்ல மந்திர பேனா"என்றார்  "எது மந்திர பேனாவா?…"என்று ஆச்சரியமடைந்தாள். சிரித்தபடி ஆமாம் என்று தலையசைத்தார் பாட்டி. பாட்டியோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தூக்கம் வந்துவிட்டது எனவே அவரது மடியில் படுத்து உறங்கினாள். சிறிது நேரம் கழித்து எழுந்த பொழுது தெரிந்தது மணி ஆறு ஆகிவிட்டது என்று. ஏனெனில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுப் பாடத்தை முடித்து, சாப்பிட்டுவிட்டு 8:00 மணிக்கே தூங்கி விடுவாள் ஆனால் இன்றோ வழக்கத்துக்கு மாறாக சாயந்திரமே தூங்கியதால், வீட்டுப் பாடத்தை எழுத மறந்திருந்தாள். அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. வீட்டுப் பாடத்தின் கேள்விகளை எடுத்துப் பார்த்த பொழுது மிகவும் கடினமாக உணர்ந்தாள்.பாட்டி பரிசாக தந்த மந்திர பேனாவை வைத்து நோட்டில் முதல் கேள்வியை எழுதினாள்  'மரங்களின் பயன்கள் என்ன?' அட என்ன ஆச்சரியம்! அவள் எழுதியதும் பேனாவுடைய மை அவளை இழுத்து ஒரு அடர்ந்த காட்டிற்குள் விட்டது அங்கே இருந்த ஒரு பெரிய மரம் பேச ஆரம்பித்தது  "மரங்கள் ஆகிய நாங்கள் உயிர்களை வாழ வைக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறோம், மேலும் பறவைகளுக்கு வீடுகளாக அவைகள் சாப்பிடும் பழங்களை உண்டு பண்ணுகிறோம்.. "என்று பேசி முடித்தவுடன் மீண்டும் அவள் வீட்டிற்குள் இருந்தாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அறிவழகி மரம் கூறிய விஷயத்தை ஞாபகப்படுத்தி எழுதினாள் பிறகு இன்னொரு கேள்வியை எழுத ஆரம்பித்தாள்  'உலகின் மிக உயரமான சிகரம் எந்த மலையில் உள்ளது?' என்றும் எழுதி முடித்தவுடன் இமயமலையில் இருந்தாள் இமயமலை பேச ஆரம்பித்தது "நான் தான் இமயமலை, என்னிடம் தான் உலகின் உயரமான சிகரம் உள்ளது அதன் பெயர் எவரெஸ்ட்." என்று பேசி முடிக்க மீண்டும் அவள் வீட்டிற்கு வந்தாள் மிகவும் குளிராக இருந்ததால் அருகில் உள்ள கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். அடுத்த கேள்விக்கு எழுத ஆரம்பித்தாள்  'சுற்றுச்சூழலுக்கு தீங்காக இருப்பது எது?' என்ற உடன் அவள் மிகவும் ஒரு மோசமான நிலத்தில் இருந்தாள். அந்த நெகிழி நிறைந்த மண் பேச ஆரம்பித்தது "என்னை மட்டுமல்ல கடல் காற்று மற்றும் பல விஷயங்களை இந்த நெகிழி போன்ற பொருட்களால் பாதிப்பை அடைகின்றோம் அதுமட்டுமின்றி நெகிழி மக்குவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாத காரியம் ஆகும் அது மண்ணில் மக்கி போவது மிகவும் சிரமம் நெகிழியை உண்ட விலங்குகள் பல உயிரிழந்துள்ளது எனவே நெகிழி பயன்ப்படுத்தாதீங்க" என்று அழுதது. இந்த காட்சியை கண்ட பின் நெகிழியை இனி குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினாள்.  மறுநாள் காலை வீட்டு பாடத்தை முடித்த அறிவழகி ஆசிரியையிடம் காட்டினாள். அவளைப் பாராட்டும் விதமாக ஒரு மிட்டாயை அன்பளிப்பாக அளித்தார் . வீட்டில் தனது பாட்டியிடம் காட்டுவதற்காக காத்துக் கொண்டிருந்தாள் அறிவழகி. அவள் பையில் ஓரமாக இருந்த பேனா மகிழ்ந்தது மீனா மீனா சென்னை மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் இவருக்கு சிறுவயதில் இருந்தே கதை எழுதவும் கதை புத்தகங்கள் படிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது பத்து சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் என்ற நூலை நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார் விரைவிலேயே இவருடைய நாவல் ஒன்று வெளிவர இருக்கிறது

  • கய்மூது

    "ஹரி ... உன்ன குளிக்க சொல்லி அரை மணி நேரம் ஆச்சு.இன்னும் அப்படியே உக்கார்ந்து இருக்க. இப்ப குளிக்க போரியா-இல்லையா ?" ஹரி ஏழு வயது சுட்டி பையன். அவன் அம்மா அவனை குளிக்க சொல்கிறார்.  ஆனால் ஹரியோ கண்கள் சிமிட்டாமல் அம்மா சொல்லை காதில் வாங்காமல் ஆர்வமாக டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான்.  சிறிது கோபமடைந்த அம்மா டிவியை அணைத்தார். உடனே பொங்கி எழுந்த ஹரி "அம்மா எதுக்கு இப்போ டிவியை ஆஃப் பண்ணீங்க  ? நான் பாட்டுக்கு பார்த்துகிட்டு தானே இருந்தேன் ? " என்று சண்டை போட தொடங்கினான்.  "டேய் உன்ன அடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன், அடிக்க வச்சிறாத. ஒழுங்காப் போய் குளி. " என்று அம்மா கத்தியவுடன் வேகமாக பாத்ரூமை நோக்கி ஓடினான்.   பத்து நிமிடம் கழித்து, "அம்மா டவல் கொடு மா!" என்று ஹரியின் குரல் கேட்டது.  அம்மா,  "ஒரு வேலை கூட உருப்படியாக செய்ய விடுவதில்லை!" என்று புலம்பிக் கொண்டே டவலை எடுத்து கொடுத்தார்.  குளித்து முடித்து மீண்டும் டிவி பார்க்கலாம் என்று நினைத்து ஹரி டிவியிடம் நெருங்கினான்.  கிச்சனிலிருந்து அவன் அம்மா கத்தினார் " டேய் டிவி போட்டின்னா அவ்வளவுதான் ஒழுங்கா போய் வேற வேலை இருந்தா பாரு. "  ஹரி என்ன செய்வது என்று தெரியாமல், அலமாரியில் இருந்த பழைய பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.  அப்போது அவன் கண்ணில் மூன்று குரங்கு பொம்மைகள் தென்பட்டன.  "ஐ! ஐ! இது என்ன புது பொம்மை ,  அழகா இருக்கு!" என்று கைகளில் எடுத்து பார்க்கையில் அது கீழே விழுந்து உடைந்து விட்டது. "ஐயையோ! அம்மாக்கு தெரிந்தால் திட்டுவார்களே , இப்போது என்ன செய்வது?" என்று ஹரி முனகினான்.  அலமாரியைப் பூட்டிவிட்டு அந்த பொம்மையை கட்டிலுக்கு அடியில் தள்ளினான். அப்போது அவனுக்கு ஏதோ ஷாக் அடித்தது போல ஒரு உணர்வு வந்தது.  ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல் உணர்ந்தான். அச்சமயம் அம்மா செய்யும் பிரியாணி வாசனை அவனைத் தூண்டியது ,  எல்லாவற்றையும் மறந்து விட்டு சோபாவில் அமர்ந்தான். " அம்மா எப்போ மா சாப்பாடு போடுவீங்க ரொம்ப பசிக்குது! என்றான்.  உடனே "அய்யய்யோ" என்று கத்தினான்.  உடனே அம்மா ஓடி வந்தார், "என்னடா ஆச்சு?" என்று  பதறினார் . அம்மா வந்து பார்த்த போது தான் தெரிந்தது அவன் தன் கண்களால் பேசினான் என்று . அவரால் தன்னை நம்ப முடியவில்லை. "என்னடா ஆச்சு கண்ணால பேசுற?. கண்ணால பேசுறத கேள்விதான் பட்டிருக்கேன் ஆனா இப்போதான் பார்க்கிறேன்." என்றார் அம்மா.  "ஆமாம்மா என்னன்னே தெரியல என் கண்ணு தானே அசைஞ்சு பேசுது" என்று கண்ணாலேயே பதில் சொன்னான் .  "சரி கண்ணால பேசுற கண்ணால பார்க்க முடியுதா? " என்று கேட்டார் அம்மா.  " இல்லம்மா நான் வாயால தான் உன்னை பார்க்கிறேன் " என்றான் ஹரி.  "என்னடா உளர்ற " என்று அம்மா குழம்பினார்.   " சரி காது ஆச்சு ஒழுங்கா கேக்குதானு பாரு பிரியாணி வாசனை வருதா ? " என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டார் அம்மா.   "அம்மா காது கேக்குது ஆனா லைட்டா தான் கேக்குது வாசனையும் சைடுல இருந்து வர மாதிரி இருக்கு " என்றான். "டேய் உன் காதும், மூக்கும் மாறி இருக்குடா கண்ணும் வாயும் மாறி இருக்குடா என்னத்த டா பண்ணி தொலச்ச ? "என்றார் அம்மா.  "அம்மா , நான் எதுவும் பண்ணல மா பயமா இருக்குமா "இன்று அழத் தொடங்கினான் ஹரி.  அவன் வாயிலிருந்து கண்ணீர் கொட்டியது . என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவும், பையனும் குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தார்கள்.  அப்போது அவர்கள் முன்னே ஒரு சிறு வெளிச்சத்துடன் மூன்று குரங்குகள் தோன்றின. அந்த மூன்று குரங்குகளும் ஹரி பார்த்த அந்த பொம்மைகளைப் போலவே இருந்தன.  ஒரு குரங்கு கண்களை மூடியபடி இருந்தது. மற்றொன்று வாயை மூடி இருந்தது. மூன்றாவது குரங்கு காதை மூடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஹரி பதட்டத்தில் அம்மாவிடம் உண்மையை கூறினான். " அம்மா நான்தாம்மா இந்த குரங்குகள் மாதிரி அலமாரியில் இருக்கிற பொம்மைகளை உடைச்சேன். ஒருவேளை அதனாலதான் இப்படி எல்லாம் ஆயிருக்குமோ ? " என்றான். "பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து அழறதை பாரு. " என்றார் அம்மா.  அந்த மூன்று குரங்குகளும் ஹரி இடம் வந்து அழாத தம்பி என்று சமாதானம் படுத்தின .   "நான் உங்கள மாதிரி இருக்கும் பொம்மையை உடைச்சதுக்கு சாரி இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன் அதுக்கு என்ன பழி வாங்காதீங்க என்ன பழைய படி மாற்றுங்கள். " என்றான் ஹரி .   "சரி சரி அழாத நீ எங்களைப் போல இருப்பாய் என்றால் நாங்கள் உன்னை பழையபடி மாற்றுகிறோம்" என்றனர் மூவரும் .  "எனக்கு நீங்க சொல்றது புரியல!" என்றான் ஹரி. "நீ எங்களைப் போலவே கெட்டதை பார்க்க கூடாது, கெட்டதை பேசக்கூடாது கெட்டதை கேட்கக் கூடாது . சத்தியம் செய்து கொடு " என்றனர்.  ஹரியும் சரி என்று ஒப்புக்கொண்டு சத்தியம் செய்தான். தான் கெட்டதை பார்க்க மாட்டேன், கெட்டதை கேட்க மாட்டேன், கேட்டதை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தான்.  நல்ல பையன் என்று ஹரியை பாராட்டி தாங்கள் ஹரியை மாற்றுவதாக முன் வந்தனர் .  "உனக்கு கண்ணும் வாயும் மாறி இருக்கின்றதல்லவா ஆகையால் காய் என்று கூறு . அதுபோல் காதும் மூக்கும் மாறி இருக்கின்றது அல்லவா அதற்கு மூது என்று கூறு. இப்போது இரண்டையும் சேர்த்து காய்மூது என்று மூன்று முறை உச்சரி என்றனர்.  இந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தனர் மூவரும். அந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்ததும், ஹரிக்கு எல்லாம் பழையபடி மாறிவிட்டது. அவனுக்கு பயங்கர சந்தோஷம்.  தான் செய்த சத்தியத்தை என்றைக்கும் மீறமாட்டேன் என்றும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி என்றும் கூறி வழி அனுப்பினான். அவர்கள் சென்றவுடன் அம்மாவிடம்  " அம்மா எங்கேம்மா அந்த பொம்மையை வாங்குன ? "என்று கேட்டான்.  அதற்கு அம்மா," எனக்கு எதுவும் தெரியாதுடா , நான் எல்லாம் அந்த பொம்மையை வாங்கல . நீ எந்த பொம்மையை சொல்ற ? "என்றார்.  அவன் சாட்சிக்காக கட்டிலுக்கு அடியில் பொம்மையை தேடினான். ஆனால் அது அங்கு இல்லை . இது அந்த மந்திர குரங்குகளின் வேலை, எல்லா பிள்ளைகளும் நல்ல குழந்தைகளாக இருக்க அவர்களிடம் இருந்து சத்தியம் வாங்க உருவாக்கிய திட்டம் எது .  சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டு குட்டி பெண் அம்மா என்று அலறிய சத்தம் கேட்டது . அனுக்ரஹா கார்த்திக் தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அனுக்ரஹா கார்த்திக் சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் நாட்டம் கொண்டவர். பத்து வயதில் இவர் எழுதிய 'காணாமல் போன சிறகுகள்' என்ற கதை, 'சுட்டி உலகம்' வலைத்தளம் நடத்திய சிறார்க்கான கதைப் போட்டியில் முதல் பரிசு வென்றது. 'நாலு கால் நண்பர்கள்,' 'தப்பித்து ஓடு' என்ற இரு சிறார் நூல்களைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் இவர் 'பூஞ்சிட்டு' குழந்தைகள் மாத மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

  • கலங்காதே கண்ணம்மா

    துள்ளி ஓடும் கண்ணம்மா உன் கண்ணில் கண்ணீர் ஏனம்மா? குறைகளை கண்டு கலங்காதே குறையும் நிறைதான்  வருந்தாதே! வெண்ணிற மேகம் கருத்தது வான் மழை எங்கும்  கொட்டியது! கூட்டுப்புழுவும் சுருங்கியது பட்டாம் பூச்சியாய் பறந்தது! மின்னல் மண்ணில் முட்டியது காளான் அங்கே பிறந்தது! ஜன்னல் கொஞ்சம் திறந்தது அதில் பரந்த வானம் தெரிந்தது! பசுவின் மடியோ கனத்தது கன்றின் வயிறோ நிறைந்தது! முட்டை உள்ளே உடைந்தது அழகிய குஞ்சும் பிறந்தது! விதையும் மண்ணில் புதைந்தது மரமும்  ஒன்று துளிர்த்தது! நெல்லும் ஆலையில் வெந்தது நாம் உண்ணும் உணவாய் வந்தது! இடர்களை கண்டு கலங்காதே புது விடியலும் பிறக்கும் வருந்தாதே! ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார். முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.

  • பள்ளிக்குப் போகலாம்!

    1. பள்ளிக்குப் போகலாம்! புத்தகங்கள் படிக்கலாம்! ஏனென்று கேள் நீ! பதில் தரும் கல்வி! பாடல் வழிச் சொல்லி பலதும் கற்கச் செல் நீ!   2. அகரம் கற்கத் தொடங்கு! ஆகச் சிறந்த அமுது! அறிவை வளர்க்கும் கல்வி! ஆதாரமே உணர் நீ! இறகை விரிக்க அறிந்து பறந்து வானில் பழகு!   3. கற்றலிலே இன்பம்! கற்போமே என்றும்! எழுதப் படிக்கப் பேச முனைவோமே கற்க! அறவழியே நிற்க இன்றே செல்வோம் கற்க!   4. சிந்திக்கத் தொடங்கு! சிறிதாகத் தொடங்கு! இருக்கும் நம் உலகில் இன்று என்ன புதிது? அறிவியலைப் படித்தால் அறியலாம் புதிது!   5. பள்ளி செல்ல விரும்பு! பாடம் இனிக்கும் கரும்பு! கற்றல் என்பது எளிது! கற்போம் அதனை உணர்ந்து! சிற்பம் போல நம்மைச் செதுக்கும் உளி கல்வி!

  • குழந்தைகளின் உரிமைகள் - 8

    யூனிசெப் சர்வதேசப் பிரகடனம் ஒரு குழந்தைக்கு இருக்கும் உரிமைகள் என யூனிசெப் அமைப்பு வரையறுத்துள்ள பிரகடனத்தில் அடுத்து நாம் பார்க்க இருப்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோருடனேயே சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை. "இது என்ன வினோதம்? குழந்தை தனது பெற்றோருடன்தானே வசிக்கும், வேறு எங்கே அது போகும்?" என மேற்கண்ட உரிமையைப் பற்றி நாம் வியப்படையக் கூடும். பொதுவாகப் பார்த்தால், ஒவ்வொரு குழந்தையும் அதன் பெற்றோருடன்தான் வசிக்கும்; அதில் எவ்வித ஐயமும் இல்லைதான். ஆனால், பல்வேறு காரணங்களால், பல குழந்தைகள் தமது பெற்றோர் வாழும் இடங்களில், அவர்களுடனேயே சேர்ந்து பாதுகாப் பாகவும், மகிழ்ச்சியுடனும் வாழும் சூழ்நிலை அமையாமல் போய்விடுகிறது.  குறிப்பாகப் போர், இயற்கைச் சீற்றங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் ஓர் இடத்திலும், அவர்களின் பெற்றோர் வேறிடத்திலும் வாழும்படியான நிலை இன்று பல நாடுகளில் நிலவுகிறது. பெரும்பாலும், ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் மக்களின் குடியுரிமைகள் தொடர்பான பிரச்னைகள் எழும் பட்சத்தில், இந்த மாதிரியான பிரிந்து வாழும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது.  நமது இந்தியாவிலேயே, இப்போது குடியுரிமை என்ற பிரச்னை மிகவும் தீவிரமான பரிமாணங்களை எடுத்துக் கொண்டு வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றை நிறைவேற்றியுள்ள ஒன்றிய அரசு, அந்தச் சட்டத்தின்படி, பல கோடிப்பேரை,"நீங்கள் இந்தியர்கள் அல்லர்; பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்" என்று முத்திரை குத்தி, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. எனினும், நாடு முழுக்க இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக நடந்ததால், தற்போதைக்கு அந்த வெளியேற்றம் நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.  இப்போது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கிறோம் என்று பீகார் மாநிலத்தில் சுமார் 65 இலட்சம் மக்களுக்கு வாக்குரிமையை இல்லாமல் செய்திருக்கிறது ஒன்றிய அரசு. இதன் மூலம், மறைமுகமாகக் குடியுரிமையை மறுத்து விடவும் வாய்ப்புகள் உள்ளன.  இவ்வாறாகக் குடியுரிமை இல்லாமற் போகும் போதும், போரினால் பெற்றோரை இழக்கும் போதும், உள்நாட்டுக்கலவரங்களால் மொத்தமாக ஒரே சமயத்தில் ஏராளமான மக்கள் ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து போகும் போதும் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து விடுகின்றனர்.  சுனாமி, பூகம்பம் போன்ற பெரும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போதும் முதலில் பாதிக்கப்படுவோர் குழந்தைகளே.  பெற்றோரின் அன்பும்,அரவணைப்பும், பாதுகாப்பும் ஒரு குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு அடிப்படையான அம்சங்களாக உள்ளன. புறக்காரணங்களால் மட்டுமன்றி, பெற்றோருக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை, பிரிவு, மண விலக்கு, மண முறிவு போன்ற அகக் காரணங்களாலும் குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழும் நிலை ஏற்படுவதை நாம் இன்று பெரும் அளவில் காண்கிறோம். இத்தகைய பிரிவுகளால் அநாதைகளாக ஆகி விடும் / ஆக்கப்பட்டு விடும் குழந்தைகள் அந்தத் துயரினால் அடையும் மன அழுத்தங் கள் மிகவும் கொடுமையானவை.  குறிப்பாகப் போர்களினாலும், உள்நாட்டுக் கலவரங்களாலும் பெற்றோரை இழந்து தனித்து வாழும் குழந்தைகளின் நிலை மிக மிகப் பரிதாபமானது. அத்தகைய குழந்தைகள், கிடைக்கும் வாய்ப்புக ளைப்  பயன்படுத்திக் கொண்டு ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குத் தப்பியோட முயல்கின்றனர். எல்லைகளைத் தாண்டி, உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செல்லுகையில், அந்த வேற்று நாட்டு இராணுவமும், காவல் துறையும் இவர்களைக் குழந்தைகளாயிற்றே என எந்தக் கருணையும் காட்டுவதில்லை.  சமீப காலங்களில், இஸ்ரேல் நாட்டு இராணுவம், பலஸ்தீன மண்ணில் காஸா பகுதியிலும் பிற இடங்களிலும் நிகழ்த்தும் படு கொலைகளை, ஒட்டு மொத்த உலகமும் வேடிக்கை பார்ப்பதை நாம் அனுதினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? இலங்கையிலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற சமயம் எத்தனை ஆயிரம்/ இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது பற்றிய விவரங்களை அந்த நாடு இன்று வரை வெளியிடவில்லை என்பது மற்றொரு உதாரணம்.  யூனிசெப் பிரகடனம், இதைப்பற்றிய விதியின் கீழ், ஒரு குழந்தை,தனது பெற்றோரை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டில் வாழ நேரும் பட்சத்தில், அந்தக் குழந்தையும், பெற்றோரும் பயணங்களை மேற்கொண்டு ஒருவரோடொருவர் மீண்டும் இணைவதற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தவறாமல் செய்துதர வேண்டும் என்கிறது. அவ்வாறு செய்தால் தான், அந்தக் குழந்தையும், அதன் பெற்றோரும் பரஸ்பரம் தொடர்பில் இருக்க முடியும் என்றும், ஒன்றிணைந்து வாழ முடியுமென்றும் கூறுகிறது.  நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பல்வேறு கொடுமைகளைப் பார்க்கும் போது, இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருக்கும் அத்தனை நாடுகளும் இந்த விதிகளை உண்மையிலேயே மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்விதான் நமக்கு எழுகிறது. வார்த்தைகளில் இந்த உரிமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டிருக்கும் உலக நாடுகள், உண்மையிலேயே அவற்றை முழு மனதுடன் நடைமுறைப்படுத்தினால், எத்தனையோ இலட்சம் குழந்தைகளின் இருண்டு  போன வாழ்க்கை ஒளிமயமாகும். அவ்வாறு செய்யுமா அந்த நாடுகள்?    கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • என் இனிய பறவையே

    புத்தக வாசிப்பும்,பறவை நோக்கலும்,எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள்.  எனக்கு  வாசிப்பின் மீதும், பறவை  நோக்கலிலும் ஆர்வத்தை வர வைத்தவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான்.     என்னுடைய அம்மா நிறைய புத்தகங்கள் வாசித்துக் கொண்டே இருப்பார்.. வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த புத்தகங்கள் பற்றி என்னிடமும் என் தங்கை மதியிடமும்  கதையாக சொல்வார். புத்தகங்களின் அறிமுகம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் கொண்டு வந்தது. அதேபோல் அப்பாவுக்கு இயற்கை மேல் இருக்கும் ஆர்வம், பறவைகள் பற்றியும் , மரங்களைப் பற்றியும் தேடலை எனக்குள் விதைத்தது.         இந்த மாற்றங்கள் நிகழ்ந்த காலம், கொரோனா காலகட்டம். அந்த நாட்களில் பள்ளிக்குச் செல்லாததால் எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது.  வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. முன்பே நூல்கள் வாசித்தாலும், அப்போது நிறைய நூல்கள் வாசித்தேன்.     குடும்பத்தோடு செலவிட நிறைய நேரமும் கிடைத்தது. ஒரு நாள் பால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது பக்கத்து வீட்டு மதில் சுவரில் குரங்கு ஒன்று  அமர்ந்து இருப்பதைப் பார்த்தோம். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்தோம். தினமும் வருமா? என்று பார்க்கும் ஆவலில் பால்கனியில் . தினமும் அமர ஆரம்பித்தோம். அப்போதுதான் எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய பறவைகள் வருவதை கவனித்தோம். அதற்கு முன்பு பள்ளி செல்லும் அவசரத்தில் இத்தனை பறவைகள் வருவதை கவனிக்காமல் இருந்தோம்.        முதன்முதலில் நாங்கள் பார்த்த பறவை பச்சைக்கிளி. பறவை பார்ப்பதில் எங்கள் ஆர்வத்தை உணர்ந்த அப்பா, நிறைய பறவைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். செம்பருந்து, கானாங்கோழி, சிறிய நீர்காகம், வக்கா, தகைவிலான், சின்னான் , சிலம்பன், கரிச்சான், குயில், வால் காகம் போன்ற பறவைகளைப் பார்த்தோம் அதைப் பற்றிய தகவல்களை அப்பா நிறைய சொன்னார். அப்படி ஆரம்பித்தது பறவை நோக்கல் ஆர்வம்.          பச்சைக்கிளியில் ஆரம்பித்த எங்கள் பறவை பார்த்தல் பயணம்,  தற்போது பூமன் ஆந்தை வரை, கிட்டத்தட்ட 194 பறவைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம். சரணாலயங்கள், ஏரிகள் குளங்கள், மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகள், எங்கள் தோட்டத்தின் அருகே உள்ள புதர்கள் புல்வெளிகள்  போன்ற பல்வேறு இடங்களில் பறவைகளை அவதானித்திருக்கிறோம்.           பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடு ஆரம்பகட்டத்தில் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாய் இருந்தது. அதற்குப் பிறகு பறவைகள் சார்ந்து நிறைய நூல்களை வாசித்தேன். அதில் தெரிந்து கொண்ட  அடையாளங்களை வைத்து பறவைகளின் பெயர்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். தற்போது பறவைகளின் குரலை வைத்து அடையாளப்படுத்தத் துவங்கி இருக்கிறேன். இந்தப் பறவை பார்த்தல் பயணத்தை எங்கள் மொத்த குடும்பமும் ஈடுபாட்டோடு செய்கிறோம்.          பொதுவாக பறவை ஆர்வலர்கள் அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு பறவை உண்டு. அந்தப் பறவை தான் என் இனிய பறவையும் கூட. அந்தப் பறவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் கருப்பு வெள்ளைஇருவாச்சி பறவை தான்.            அந்தப் பறவையை நாங்கள் பார்த்த அனுபவம் அலாதியானது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் ஒரு நாள் பயணமாக , மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறைக்கு சென்று இருந்தோம். என் இனிய பறவையை அன்று எப்படியும் பார்த்து விட வேண்டும்   என்ற ஆவலில் தான் அந்தப் பயணத்தை திட்டமிட்டு இருந்தோம். அதற்கு முன்பு மிக அருகில் இருவாச்சியின் குரலை கேட்டும் கூட எங்களால் அந்த பறவையை பார்க்க இயலாமல் திரும்பி இருக்கிறோம். பயணம் ஆரம்பித்தபோது இன்று கண்டிப்பாக பார்ப்போம் என்று மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது.       சீகாரப் பூங்குருவி,  நாட்டு உழவாரன், காட்டுச் சிலம்பன் போன்ற புதிய ப் பறவைகளை  பார்த்தோம். ஆனால் இருவாச்சியை மட்டும் பார்க்க இயலவில்லை. வால்பாறையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தோம். திடீரென ஒரு திருப்பத்தில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மரத்தின் உச்சியில் ஒரு பெரிய பறவை பறந்ததை பார்த்தேன். உடனே எங்கள் மகிழுந்தை அந்த திருப்பத்தில் நிறுத்திவிட்டு காத்திருந்தோம்.        அடர்ந்த மரம் என்பதால் அந்தப் பறவை அமர்ந்திருந்தது முதலில் தெரியவில்லை. ஆனால் இலைகளுக்கிடையே அதன் தனித்துவமான அலகு தெரிந்தது. அப்போதே அது இருவாச்சி தான் என்று அறிந்து கொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் வால் பகுதி தெரிந்தது. இரு கண்ணோக்கியைக்  கொண்டு பார்த்ததில், நாங்கள் மூன்று வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் என் இனிய பறவை தான் என்பதை  அறிந்தேன். சிறிது நேரத்தில் அதன்  பெரிய இறக்கைகளை விரித்துக்கொண்டு மேல் நோக்கி மிக அழகாய் பறக்கத்துவங்கியது.. அது ஒரு ஆண் இருவாச்சிப் பறவை. அதன் பிரம்மாண்டமான அழகிய தோற்றம் கண்ணுக்குள் சித்திரமாய் தங்கி விட்டது. இன்றும் கூட இருவாச்சிப் பறவையைப் பற்றி நினைக்கும் போது அந்தக் காட்சி தான் கண்ணுக்குள் வரும்.            மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு எங்கள் மகிழுந்தை இயக்கிக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். கண்ணா ரெண்டு லட்டு  தின்ன ஆசையா?  என்பது   போல நம் மாநில விலங்கான வரையாடு அங்கே ஒரு கொண்டை ஊசி வளைவில் மெல்ல சாவகாசமாய் இறங்கி கொண்டிருப்பதைப் பார்த்தோம். அதை சிறிது நேரம் நின்று ரசித்துப் பார்த்துவிட்டு கீழே இறங்கினால் அதே திருப்பத்தில் மற்றுமொரு வரையாடு. அன்றே மேற்கு தொடர்ச்சி மலையில் மிகக் குறைந்த அளவில் எண்ணிக்கையில் உள்ள சோலை மந்தியையும் பார்த்தோம். பறவை பார்த்ததில் எங்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை தந்த அந்த நாளை இன்று வரை கூட மறக்க இயலாது.      தரை பறவைகள், மரத்தில் வாழும் பறவைகள், நீர்ப்பறவைகள், வான்வெளிப்  பறவைகள், வேட்டையாடி பறவைகள் என பல்வேறு வகையான பறவைகள் இந்த பூமியில் இருக்கின்றன. இந்த பூமியில் இருக்கின்ற பெரும்பான்மையான காடுகள் இந்த பறவைகளின் எச்சத்தால் உருவானவை தான். எனவே பறவைகளைப் பாதுகாத்தால் மரங்களை அதிக அளவில் பாதுகாக்க முடியும். மரங்கள் அதிக அளவில் இருந்தால் நாட்டின் இயற்கை வளமும் அதிகரிக்கும். சூழலும் பாதுகாக்கப்படும்.         பறவை பார்த்தல் என்ற இந்த இனிய அனுபவமானது, இயற்கையின் மீதான காதலை வரவைத்து, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை தந்தது.  அலைபேசியிலும், தொலைக்காட்சியிலும் மூழ்க விடாமல் இயற்கையை நோக்கி எங்களை மடை மாற்றியது வாசிப்பும் பறவை பார்த்தலும் தான். செல்வ ஸ்ரீராம். பா எட்டாம் வகுப்பு படிக்கிறார். மூன்று புத்தகங்கள் கரிச்சான்குஞ்சும் குயில்முட்டையும், என்ன சொன்னது லூசியானா? அற்புத எறும்பு , எழுதி இருக்கிறார். பறவை பார்த்தலும், புத்தக வாசிப்பும் மிகப் பிடித்த விஷயங்கள்.

  • சனிக்கோளும் எரிகல்லும்

    ஒரு அழகான பூமி இருந்தது திடீரென்று அந்த பூமியில் வெள்ளம் வந்தது பூமியிலிருந்து எல்லா மக்களும் ஏவுகணையில் ஏறி சனி கிரகத்திற்குச் சென்றனர் அப்போது ஒரு சிறுவன் சனியிலிருந்து கீழே விழுந்து விட்டான் அப்போது ஒரு பெரியவர் அந்த சிறுவனை காப்பாற்றுவதற்கு வந்தார் அந்த சமயம் ஒரு எரிகல் பூமியை நோக்கி போனது நீ மட்டும் கீழ விழாம கவனமா இருந்திருந்தா நம்ம எல்லாம் அந்த எரிகல்ல ஏறி பூமிக்கு போய் இருக்கலாம் என்று அனைவரும் அந்த சிறுவனை திட்டினர். ஏனெனில் அப்போது பூமியில் வெள்ளம் வடிந்து விட்டது. ஆனால் அந்த எரிகல் பூமியில் சென்று மோதி வெடித்து விட்டது. அப்போது அனைவரும் அந்த பையனுக்கு நன்றி சொன்னார்கள் "உன்ன தெரியாம திட்டிட்டோம். எங்கள மன்னிச்சிடு. உன்னால தான் லேட் ஆச்சு. இல்லாட்டி நேரா போய் இந்த எரிகல்ல ஏறி எல்லாரும் அந்த எரிகல்லோட சேர்ந்து வெடிச்சிருப்போம்" என்று அந்த பையனுக்கு நன்றி சொன்னார்கள். சு.ரா.கவின்கிருஷ்ணா 8 வயது மூன்றாம் வகுப்பு படிக்கிறார். நான்கு வயதில் இருந்தே கதைகள் சொல்கிறார். ஷார்க்கை அடித்த மின்னல், தங்கப்பறவையும் கழுகும், கவின் சொன்ன கதைகள் ஆகிய கதைத்தொகுப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன.

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 6

    மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள் என்று அறிவியல், தொல்லியல் அறிஞர்கள் சொல்வதாகப் படித்தேன். ஆனால், நாம் மாநிறத்திலும், சீனர்கள்-ஜப்பானியர்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், ஐரோப்பியர்கள்-வட அமெரிக்கர்கள் வெள்ளையாகவும் இருக்கிறார்கள். நாம் அனைவரின் மூதாதையரும் ஆப்பிரிக்கர்கள் என்றால், நாம் அனைவரும் கறுப்பாகத்தானே இருக்க வேண்டும். இது நம்புற மாதிரி இல்லையே? கவின்மொழி, 10ஆம் வகுப்பு, திருநெல்வேலி வணக்கம் கவின்மொழி, நான் புத்தகப்புழு பேசுறேன். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய மொராக்கோ பகுதியிலும், இரண்டு லட்சம்-இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய எத்தியோப்பிய பகுதி, இன்றைய தென்னாப்பிரிக்க பகுதியிலும் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்ஸின் (Homo sapiens) புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. அதேபோல் இன்றைய போட்ஸ்வானா, நமீபியா, ஸிம்பாப்வே ஆகிய பகுதிகளிலும் ஹோமோ சேப்பியன்ஸ் வாழ்ந்ததற்கான மரபணுத் தடயங்கள் கிடைத்துள்ளன. நாம் எல்லாரும் ஹோமோ சேப்பியன்ஸ்தான். ஹோமோ சேப்பியன்ஸ் நவீன மனித இனம் என அழைக்கப்படுகிறது. இப்படி ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நவீன மனித இனம் 70,000 ஆண்டுகளுக்கு முன் வறட்சி, இயற்கை மாறுபாடுகளால் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டது. அப்போது அங்கிருந்து கால்நடையாகவே ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய கிழக்குப் பகுதிகள், பிறகு அங்கிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு மனிதர்கள் இடம்பெயர்ந்தார்கள். ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் ஒரேயடியாக வெளியேறி விடவில்லை. குழுகுழுவாகவே வெளியே வந்தார்கள். புதிய நிலப் பகுதிகளில் இந்த மனிதக் குழுவினர் வாழத் தொடங்கினார்கள். புதிய நிலத்தின் தட்பவெப்பநிலை, புவியியல் தன்மைகள் ஆப்பிரிக்காவைப் போல் இருக்கவில்லை. அவர்கள் குடியேறிய பகுதிகளுக்கு ஏற்ப மனிதர்கள் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படி வாழ்ந்தார்கள். ஒரு பகுதியின் தட்பவெப்ப நிலையும், புவியியல் தன்மைகள், அவர்கள் பார்க்கும் வேலைகள் போன்றவை அந்தப் பகுதி மக்களின் உடலமைப்பு, நிறம், முகத் தோற்றம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தக்கூடியவை. அப்படித் தகவமைத்துக்கொண்டால்தான் அந்தப் பகுதியில் மக்கள் வாழ முடியும். இப்படித்தான் நம்முடைய நிறம், உடலமைப்பு, முகத் தோற்றம் போன்றவை மாறின. பரிணாமவியல் கொள்கையின் ஒரு பகுதியாக தகவமைப்புக் கோட்பாடு பற்றி சார்லஸ் டார்வினும் விளக்கியிருக்கிறார். நட்சத்திரங்கள் எங்கோ தொலைவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரத்தில் இருந்து அவை மின்னுவது நமக்கு எப்படித் தெரிகிறது? முதலில் நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன, அதற்கு என்ன காரணம்? ஆதிரை, 6ஆம் வகுப்பு, செங்கல்பட்டு வணக்கம் ஆதிரை, நான் புத்தகப் புழு பேசுறேன். நட்சத்திரங்கள் கோடிக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ளன. பூமியின் மேலே உள்ள வளிமண்டலம் (காற்று) நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஓரிடத்தில் நிற்பதில்லை. அலைபோல் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் வழியாக ஊடுருவும் நட்சத்திர ஒளி, மின்னுவதுபோல நமக்குத் தோன்றுகிறது. உண்மையில் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. ஒளியை மட்டுமே வெளியிடுகின்றன. நம் தலைக்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தில் உள்ள காற்று இடையில் புகுந்து விளையாட்டு காட்டுகிறது. அப்போது மின்னுவதுபோலத் தோன்றுகிறது. நிஜத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. விண்வெளிக்குப் போய்விட்டால், மின்னாத நட்சத்திரங்களைப் பார்க்கலாம்.

  • குழந்தைக் கவிஞரின் குழந்தைப் பருவம்.

    ஒவ்வொருவர் வாழ்விலும்  குழந்தைப் பருவம் என்பது ரசிக்கத் தக்கது. குழந்தைப் பருவக் குறும்புகள் எண்ணி மகிழ ஏற்றவை.          புதுக்கோட்டை மாவட்டத்தில் இராயவரம் என்பது ஒரு சிறிய  ஊர். அந்த ஊரில் அழகப்பன், உமையாள் தம்பதியினர் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு 4 பிள்ளைகள். மூன்றாவது மகன் வள்ளியப்பன்.          வள்ளியப்பன் இரண்டு, மூன்று வயதில் அதிகம் பேசமாட்டான். யாருடனும் விளையாட மாட்டான். அந்த ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில்,  வீட்டின் நடுக் கூடம் திறந்த வெளியாக இருக்கும். அதனை வளவு என்பார்கள். மின்சாரம் இல்லாத காலமது. எனவே வளவின் நடுவில் விளக்கு வைப்பதற்கு ஒரு தூண் அமைத்திருந்தார்கள். வள்ளியப்பன்  அந்தத் தூணை இடது கையால் பிடித்துக் கொள்வான்.  வலது கையின் இரு விரல்களை வாயில் வைத்தபடி நிற்பான். எனவே அவனை அனைவரும் செல்லமாக "ரெட்டைக் கொம்பு ஊதி" என்று கேலி செய்வார்கள். அவன் அதற்கெல்லாம் கவலைப்பட மாட்டான்.              நான்கு வயதானதும் அவனது செயல்களில் மாற்றம் ஏற்பட்டது. வீட்டின் பின்புறமுள்ள கொய்யா மரத்தில் ஏறுவான். பழங்கள் பறிப்பான். அவற்றைக் கடித்துவிட்டு, அம்மா, அண்ணன்களிடம் கொடுப்பான்.  'ஏதோ கடித்தது போலுள்ளதே' என்று கேட்டால், 'அணில் கடித்த பழம். ருசியா இருக்கும்.' என்பான். அதை நம்பி, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துச் சிரிப்பான்.       அவர்கள் வீட்டின் பெரும்பகுதி ஓட்டுக் கூடமாக இருப்பதால், அடிக்கடி தேளைப் பார்க்கலாம்.  தேளைக் கண்டு வள்ளிப்பன் பயப்படுவான். ஒருநாள் அவனுடைய அம்மா, ' பயப்படாதே. தேள் உன்னை ஒன்றும் செய்யாது. நீ குழந்தையாக என் வயிற்றில்  இருந்த போது என்னைத் தேள் கொட்டிவிட்டது. அதனால் உன்னைத் தேள் கொட்டினாலும் பாதிப்பு ஏற்படாது.' என்று சொன்னார்கள். அதிலிருந்து வள்ளிப்பனுக்குத் தேள் பயமில்லை. ஆனால் பிறரைப் பயமுறுத்தத் தொடங்கினான். சமையல் வேலைக்கு வருபவர்கள் கண்ணில் படாமல் தீப்பெட்டியை ஒளித்து வைத்துவிடுவான். அவர்கள் கேட்கையில் தேளைத் தீப்பெட்டியில் போட்டுக் கொடுப்பான். அவர்கள் தீப் பெட்டியைத் திறந்ததும் தேள் வருவதைக் கண்டு பயப்படுவதைப் பார்த்து ரசிப்பான்.         ஆரம்பப் பள்ளிக்குச் சென்றான் வள்ளியப்பன். வீட்டில் குறும்புக்காரச் சிறுவனாக இருந்தாலும், பள்ளியில் பணிவான மாணவன். ஆசிரியர்கள் பாராட்டும் மாணவனாக இருந்தான். அவனுடைய தமிழாசிரியர்கள் பாரதியார், கவிமணியின் பாடல்களைத் தினமும் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால் வள்ளியப்பனுக்கும் பாடல் எழுதும் ஆசை வந்தது.          அவனுக்குள்ளே இருந்த கவிதை ஆசை ஒரு சோதனையைத் தந்தது.  வள்ளியப்பன் வீட்டிற்குச் சற்றுத் தொலைவிலுள்ள வீட்டிலிருந்து மூன்று சிறுவர்கள், சு.கதி. காந்தி பாட சாலையில் படித்தனர். ஒரு நாள் அந்தச் சிறுவர்களின் தாயார் பள்ளிக்கு வந்தார். வாசலில் நின்ற வள்ளியப்பனைப் பார்த்தார். மூன்று  பிள்ளைகளுக்கும் அழகழகான பெயர்களை வைத்திருந்தாலும்  அவர்களைச் செல்லமாக காளை, கூழை, ஊமை என்றுதான் அந்த அம்மா அழைப்பார் . வள்ளியப்பனிடம் 'காளை வந்துட்டானா? கூழையப் பார்த்தியா? அட ஊமையாவது வந்துட்டானா?'னு கேட்டார்கள். வள்ளியப்பன் 'பார்க்கவில்லை.' னு சொன்னான். 'சரி வந்தா, நான் தேடி வந்தேன்'னு சொல்லு என்றார்.    சிறிது நேரத்தில் 'ஊமை' என்று அந்த அம்மா குறிப்பிட்ட பையன் வந்தான்.வள்ளியப்பன் அவனிடம்,   " காளை, கூழை எங்கேடா?      ஊமை நீயும்  சொல்லடா" என்று பாடலாகக் கேட்டான். இந்தப் பாடல் சிறுவர்களைக் கவர்ந்தது. பள்ளியில் பலரும் இதைப் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.        மூன்று சிறுவர்களின் அம்மா, இந்தச் செய்தியைப் பிள்ளைகள் மூலம் தெரிந்துகொண்டார்.   அவர்    பள்ளிக்கு வந்தார். "எங்கடா அந்த வள்ளியப்பன்?    எம்புள்ளைகளைப் பாட்டுப் பாடி கேலி செய்யறானாமே! வெளிய வாடா" னு ரொம்பக் கோபமாகக் கூப்பிட்டாங்க. பயத்தில் நடுங்கிப் போன வள்ளியப்பன், பள்ளியின் பின் வாசல் வழியாகத் தப்பித்து ஓடிவிட்டான்.எங்கே தெரியுமா?  இராயவரத்தைக் காக்கும் தெய்வம் முத்துமாரியம்மன் கோயிலுக்குள்ளே தஞ்சம் புகுந்தான்.       வள்ளியப்பன் படித்த பள்ளியின் பெயரில் மட்டும் காந்தி என்றில்லாமல் அங்கே காந்தியின் கொள்கைகளையும் கற்பித்தனர். அசைவ உணவுகள் சாப்பிடாமல் இருப்பது, கதர் அணிவது போன்றவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.    வள்ளியப்பன் "இனிமேல் அசைவ உணவு சாப்பிடமாட்டேன்." என்று சொன்னான். அவன் அம்மா,  'அசைவம் சாப்பிடாவிட்டால் பிள்ளைக்குப் போதிய சக்தி கிடைக்காதே. இளைத்துவிடுவானே' என்று கவலைப்பட்டார்.  அம்மா வள்ளியப்பனிடம், ''நீ அசைவ உணவு சாப்பிடு. அந்த வாசம் தெரியாமல் இருக்கக் கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை மென்று தின்ற பின் பள்ளி சென்றால், யாருக்கும் நீ அசைவம் சாப்பிட்டது தெரியாது" என்றார்.  வள்ளியப்பன், " அசைவம் சாப்பிடுவது மட்டுமல்ல, பொய் சொல்வதும் தப்புத் தான். எனக்கு அசைவம் வேண்டவே வேண்டாம்." என்று மறுத்து விட்டான்.   அப்பாவிடம் கேட்டுக் கதர் உடைகளை வாங்கி அணிந்தான்.       இராயவரத்திற்குப் பக்கத்து ஊரான கடியாபட்டியில்  பூமீஸ்வரர் உயர்நிலைப் பள்ளி உள்ளது.  5 கி.மீ. தூரத்திலுள்ள அந்தப் பள்ளியில் உயர் நிலைக் கல்வியைக் கற்கச் சென்றான் வள்ளியப்பன்.        பிள்ளை நடந்து போய்ச் சிரமப்பட வேண்டாம் என்று வள்ளியப்பனின் அப்பா பேருந்தில் போகச் சொல்லிப் பணம் கொடுப்பார்.  வள்ளியப்பனும் காலையில் பேருந்தில் சென்று விடுவான். மாலை வீடு திரும்பும் போது ஊர்ப் பிள்ளைகளுடன் சேர்ந்து நடந்து வருவது வழக்கம்.                              ஒருநாள் நடந்து வரும் போது சிறுவர்கள் வழியிலே ஒரு சுவரொட்டியைப்  (போஸ்டர்) பார்த்தார்கள். அது ஓர் ஆங்கிலத் திரைப்படத்திற்கானது.  The Lost jungle என்ற ஆங்கிலப் படத்தைத் தமிழில் "காணாத காடு" என்று குறிப்பிட்டிருந்தனர். அதை வள்ளியப்பன் சத்தமாகப் படித்தான். அவனுக்குள் இருந்த கவிஞர் வெளியே வந்தார்.  " காணாத காடு    கண்டுவிட்டால் ஓடு." என்று எட்டாம் வகுப்பு மாணவன் வள்ளியப்பன் பாடிக் கொண்டே ஓடினான். உடன் வந்த ஊர்ப் பிள்ளைகளும்  " காணாத காடு   கண்டுவிட்டால் ஓடு" என்று மீண்டும் மீண்டும் பாடியபடி ஓடினர்.     வள்ளியப்பன்  தொடர்ந்து பாடினான்.  "காணாத காடு கண்டு விட்டால் ஓடு ஒளிய இடம்  தேடு. ஏழைகள் படுவதோ அரும்பாடு டிக்கெட் விலையோ பெரும்போடு!"       இப்படிப் பாடியபடி சிறுவர்கள் இராயவரத்தை அடைந்தனர். அன்று மட்டுமல்ல, இந்தப் பாடல் பல நாள்கள் சிறுவர்களின் வழி நடைப் பாடலானது!       வள்ளியப்பன் பத்தாம் வகுப்புப் படிக்கையில் ஒரு நிகழ்வு. வகுப்பிலே தமிழாசிரியர் கட்டுரை எழுதச் சொன்னார். மாணவர்கள் எழுதிய கட்டுரை ஏடுகளை வீட்டிலே கொண்டு போய்த் திருத்தம் செய்தார். மறுநாள் வகுப்புக்கு வந்தார்.  "நம் வகுப்பிலே ஒரு நாலடியார் இருக்கிறார்! யார் அவர்?" என்று புதிர் போட்டார் ஆசிரியர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒன்றும் புரியவில்லை.     ஆசிரியர் ஒவ்வொரு மாணவனாக அழைத்து நோட்டைக் கொடுத்தார். வள்ளியப்பனை அழைத்ததும் பயந்தபடி வந்தான். காரணம் கட்டுரையில் மேற்கோள் எழுத நினைத்தான் வள்ளியப்பன். ஒரு நாலடியார் பாடல் நினைவுக்கு வந்தது. எழுதத் தொடங்கினான். நாலாவது அடி நினைவுக்கு வரவில்லை. எனவே அவனாக ஒரு அடி எழுதிப் பாடலை நிறைவு செய்தான்.      அதனால் தயங்கியபடி ஆசிரியரிடம் சென்றான். "வாரும் நாலாவது அடியாரே!" என்று ஆசிரியர் அழைத்தார். "நேற்று எழுதும் போது இறுதி அடி மறந்து விட்டது." என்று மெல்லச் சொன்னான் வள்ளியப்பன்.        "பரவாயில்லை. நாலடியார்  எழுதிய சமணத் துறவிகளுக்கு நிகராக ஒரு அடி எழுதியிருக்கிறாரய். பாராட்டுக்கள்." என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். வள்ளியப்பனுக்கு மிகுந்த மகிழ்ச்சி .     அந்தத் தமிழாசிரியர்  பெயர் கோபாலகிருஷ்ணன். அவர் இப்போது நூற்றாண்டு காணும் குன்றக்குடி   அடிகளாரின் அண்ணன்.      இவ்வாறு குறும்பும் கவிதைக் கரும்புமாக    வளர்ந்தான் வள்ளியப்பன். அவன்தான் 'குழந்தைக் கவிஞர்' என்று உலகத்தோரால் போற்றப்படும்  வள்ளியப்பா.         அவர் குழந்தைகளுக்கு நிறையப் பாடல்கள் எழுதினார். குழந்தை இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளான கதை, நாவல், நாடகம், விடுகதை, வாழ்க்கை வரலாறு,  கவிதை, வாழ்வியல், பாட்டுப் பட்டிமன்றம் எனப் பல படைப்புகளைத் தந்தார்.     குழந்தை எழுத்தாளர் சங்கத்தைச் தொடங்கிப் பலரைக் குழந்தைகளுக்கு எழுதத் தூண்டினார்.  அச்சங்கத்தின் வழி பல சாதனைகளைப் புரிந்தார்.       எங்கள் தந்தையார், குழந்தை இலக்கிய முன்னோடி அழ.வள்ளியப்பா அவர்களின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதில்  பெருமகிழ்ச்சி. தேவி நாச்சியப்பன் இவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் இளைய மகள். 40 ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு எழுதி வருகிறார். குழந்தை இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கவிமணி குழந்தைகள் சங்கத்தை 30 ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தி வருபவர். வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்     பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, தமிழ்ச் செம்மல் விருது ஆகியவை இவரின் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.

  • மீன் உண்டியல்

    என் பிஞ்சுக் கையைப் பற்றித் தரத்தரவென்று இழுத்துச் செல்லும் என் அம்மாவின் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. பொது இடம் என்று பார்க்காமல் நான் ஆர்ப்பரித்து அழுதேன். அம்மா அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. நான் வீட்டிலும் அப்படித்தான். எனக்கு பிடித்த எதாவது கிடைக்கவில்லை என்றால் கத்திக்கூப்பாடு போட்டு அழுவேன். அம்மா எதையும் கண்டுகொள்ளாமல் அடுப்படியில் சமையல் செய்துகொண்டிருப்பாள். மீறி அழுதால், அங்கிருந்தவாறே திரும்பிப் பார்த்து முறைப்பாள். அதில் ஏராளமான அர்த்தம் பொதிந்திருக்கும். நான் அழுகையை அடக்கிக்கொள்வேன்.  ஒரு முறை, வாசலில் கிடந்த உடைந்துபோன கரண்டியை வைத்துக்கொண்டு கழுவி அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றின் மீதும் தட்டித் தட்டி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தேன். ’தட்டாதே’ என்றாள். அவளிடமிருந்து ஒற்றை வார்த்தைதான் தடித்து வெளியே வந்து விழுந்தது. நான் கண்டுகொள்ளவில்லை. அன்று எனக்கு நேரம் சரியில்லை போலும். நான் தட்டும்போது, ஒவ்வொரு பாத்திரங்களில் இருந்தும் வெளியாகும் ஓசை அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. என் தோள்களை உலுக்கித் ’தட்டாதே’ என்றபடி என் கையிலிருந்த உடைந்துபோன கரண்டியைப் பிடுங்கித் தெருவில் எறிந்தாள். நான் வீறிட்டு அழுதேன்.  உதட்டின் மீது விரலை வைத்து ‘உஷ்’ என்றாள். அதற்கு மேல் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அம்மாவின் கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்த்தேன். அவ்வளவுதான். அதன் பிறகு என் அழுகை, ஆர்ப்பாட்டம் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன். என் அம்மா முறைத்தால் என் சப்தநாடியும் அடங்கிவிடும். அழுகையை உடனே நிறுத்திக்கொண்டாலும், பெருமூச்சோடு கூடிய தேம்பல் நீண்ட நேரம் கழித்தே அடங்கும்.  நகரத்திற்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிவரப் பேருந்துக்குக் காத்திருந்தபோதுதான் இது நிகழ்ந்தது. பெரிய கண்ணாடிக் கதவுகளின் வழியே அழகழகான தொட்டிகளில் மீன்கள் நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, என் வயதுச் சிறுவனும் சிறுமியும் ஒரு வாலிபால் அளவுள்ள அழகான கண்ணாடிக் குடுவையில் சிவப்பு நிற மீன் குட்டியை வாங்கிக்கொண்டு வெளியே வந்தனர். வெள்ளைநிறக் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது. கதவு திறந்ததும் அவர்கள் ஏறிக்கொண்டார்கள். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். தலையை உயர்த்தி என் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். நான் விடுவதாய் இல்லை. எங்களது குட்டி வீட்டிற்குள் அந்தக் குடுவையை வைப்பதற்கு ஏதாவது ஒரு மூலை கிடைக்காதா என்ன?. நாங்கள் ஒரு ஓரத்திலும், குட்டி மீன் ஒரு ஓரத்திலும் இருந்துவிட்டுப் போகட்டுமே! என்று நினைத்தேன்.  நான் அம்மாவின் அருகில்தான் நின்றுகொண்டிருந்தேன். என் கைகளை அவள் பற்றியிருக்கவில்லை. நான் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவு இருக்கும் கடையின் முன்னால் போய் வேடிக்கை பார்க்கத்தான் நின்றேன். யாருமே இல்லாமல் கதவு மட்டும் தானே திறந்துகொண்டது. எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. என்னை யாரும் உள்ளேயும் அழைக்கவில்லை. வெளியே போ என்றும் சொல்லவில்லை.  என்னைக் கடந்து வேறொரு குடும்பம் உள்ளே சென்றது. நான் கொஞ்சம் நகர்ந்து நின்றுகொண்டேன். கதவு தானாக மூடிக்கொண்டது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் அம்மா நின்று கொண்டிருக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவள் பேருந்து வரப்போகும் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தேன். கதவு திறந்துகொண்டது. எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நான் உள்ளே சென்று ஒவ்வொரு குடுவைக்குள்ளும் நீந்திக்கொண்டிருக்கும் விதவிதமான மீன்களை ஆசை ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். உயரமான தொட்டிக்குள் வளைய வந்துகொண்டிருந்த வெள்ளை நிற மீனை வேடிக்கை பார்த்தேன். ‘எவ்வளவு பெரிய மீன். அந்தக் கண்ணாடித் தொட்டியை வைப்பதற்கு எங்கள் வீடு நிச்சயம் போதாது’. அந்த மீன் நான் நிற்பதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வளைந்து வளைந்து நீந்திக்கொண்டிருந்தது. சட்டென்று என் கைகளைப் பற்றி யாரோ வெடுக்கென்று இழுப்பது போல் இருந்தது. அது என் அம்மாதான். நான் கடைக்கு உள்ளே இருப்பதை எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டாள். தரத்தரவென்று என் கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றாள்.   என்னை மட்டும்தான் அந்தக் கடைக்குள்ளிருந்து இழுத்து வர முடிந்தது. என் மனதை அல்ல. எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அந்த கடைக்குள் இருந்த ஒளி, வண்ண வண்ண மீன்களின் அழகு, கண்ணாடித்தொட்டி, இது எதுவுமே என் கண்களைவிட்டு அகலவில்லை. எல்லா மீன்களும் என்னைப் பின் தொடர்ந்து வந்துவிடாதா என்று ஏங்கினேன். அதெல்லாம் கதைகளில்தான் நடக்கும் போலும். ஒவ்வொரு நாள் கனவிலும் தண்ணீர் இல்லாத தரையில் மீன்கள் என்னைத் தேடி வந்தன. நான் பயந்துவிடக்கூடாது என்பதற்காக மீன்கள் என் கைகளைப் பற்றிக்கொண்டன. நாங்கள் பெருந்திரளான கூட்டத்திற்கு நடுவே பேருந்தில் பயணித்தோம். தெருவோரத்தில் விற்ற கொய்யாப்பழங்களை ஆசை தீர வாங்கிச் சுவைத்தோம். ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டோம். என் உலகம் இப்படிப்பட்டதுதான் என்று சொன்னால் யாருக்கும் புரியவில்லை. என் அம்மாவிற்கே புரியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.  நான் ஏழை சிறுமி என்பதை என் மனம் நம்பவே இல்லை. நான் கூரை வீட்டிற்குள் இருக்கிறேன். ஆனால், ஏழை இல்லை. மீன்கள் இரவெல்லாம் விளையாடிவிட்டுப் பகலில் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவு போட்ட கடையில் இருக்கும் பெரிய பெரிய குடுவைகளில் சென்று நீந்தத் தொடங்கிவிடும். நான் இரண்டாவது முறை அங்கே சென்றபோது கடைக்கு வெளியில் இருந்து பார்த்தேன். எனக்குக் கவலையெல்லாம் என்னால் ஒரு நிஜமான மீன் வாங்கி வளர்க்க முடியவில்லை என்பதுதான். ஆனால், தினசரி கனவில் வண்ண வண்ண மீன்களோடு நான் வலம் வந்துகொண்டிருந்தேன்.  ஒரு நாள் வேலை முடித்து வீடு திரும்பும் என் அம்மா ஒரு மீன் வடிவ மண் உண்டியலை வாங்கி வந்தாள். அது உண்மையான மீன் போல இல்லை. ஆனாலும், அது எனக்குப் பிடித்திருந்தது.  பச்சை, நீலம், சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மீன் உண்டியல் அது. என் தினசரிக் கனவில் வந்த மீன்களைவிட இது அழகாக இருந்தது.  ”இது களிமண்ணால் செய்தது, ஜாக்கிரதை” என்று சொன்னாள் அம்மா. எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் முதுகில் நாணயங்களைப் போடுவதற்கு ஏதுவாக நீள்வாக்கில் ஒரு துளை இருந்தது. எனக்கு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு சேமிப்பது எப்படி என்று காண்பித்தாள்.  ஆனால், எனக்கு அது சேமிக்கும் ஒன்றாகத் தெரியவில்லை. தினசரி மீனின் வயிற்றுப்பசிக்குப் போடும் தீனியாக என் மனதிற்குப் பட்டது. அதைவிட, நான் போடும் காசு அதன் வால் பகுதிக்குள் எல்லாம் சென்று சேரவேண்டும் என்பதற்காக நாணயத்தைப் போட்டதும் அதை எல்லா கோணங்களிலும் அந்த மீன் உண்டியலைத் திருப்பித் திருப்பி குலுக்குவேன்.  ஆனால், என் அம்மாவிற்கு நான் எங்கே அந்த உண்டியலை உடைத்துவிடுவேனோ என்ற பயம் இருந்தது என்று நினைக்கிறேன். நான் அந்த மீன் உண்டியலைத் தொடும்போதெல்லாம் முறைத்துப் பார்ப்பாள். அவள் இல்லாத நேரமாகப் பார்த்து நான் அந்த மீன் உண்டியலோடு விளையாடுவேன். இரவில் படுத்து உறங்கும் போது கூட அதை என் அருகில் வைத்துக்கொண்டுதான் தூங்குவேன். நான் முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கியிருந்தேன். தினமும் அல்லது நாணயம் கிடைக்கும் போதெல்லாம் அந்த உண்டியலில் போட்டு வந்தேன். தினமும் அதனுடன் விளையாடுவதையும் நான் மறக்கவில்லை. ஒரு நாள் விடுமுறை தினத்தின் மதிய வேளையில், என் அம்மா நான் வைத்து விளையாடிக்கொண்டிருந்த மீன் உண்டியலைச் சுட்டிக்காட்டி, ”இது நிறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதில் உள்ள காசுகளைக் கொண்டு, வருகிற தீபாவளிக்குத் துணிமணி எடுக்கலாம்” என்றாள். நிறைய தின்றதால் மீனின் வயிறு நிரம்பிவிட்டதா? அது எப்படி அம்மாவுக்குத் தெரிந்தது? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  நமக்கெல்லாம் தினமும் தின்றால் வயிறு பசிக்கும்தானே? மீனின் வயிறு நிறைந்துவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனக்கும் புதுத்துணி அணிந்துகொள்ள ஆர்வம்தான். சென்ற வருட தீபாவளிக்குக் கூட நானும் சரி, என் அம்மாவும் சரி புதுத்துணி அணிந்துகொள்ளவில்லை.  நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அம்மா அந்த உண்டியலைத் தேங்காய் உடைப்பது போல் தரை அடித்தாள். மீன் உண்டியல் சிதறு தேங்காயைப் போல துண்டுதுண்டாக உடைந்தது. அவற்றிற்கு நடுவில் சில்லரைக் காசுகள் சிதறிக்கிடந்தன. எனக்கு அழுகை அழுகையாக வந்தது. இத்தனை நாட்கள் நான் ஆசை ஆசையாக வைத்திருந்த மீன் இப்பொழுது செத்துவிட்டது. இனி அவ்வளவுதான். நான் தேம்பித் தேம்பி அழுதேன். அதையெல்லாம் கண்டுகொள்ளாத அம்மா, சிதறிக்கிடந்த நாணயங்களைப்  எடுத்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து எண்ணிக் கொண்டிருந்தாள். நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். வே.சங்கர்  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது ”எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு”, “கானகத்தில் ஒரு கச்சேரி”, ”என் பெயர் ‘ஙு’”, “டுட்டுடூ”, “வட்டமாய் சுட்ட தோசை”, “திகில் பங்களா” ஆகிய நூல்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

bottom of page