top of page

இயலில் தேடலாம்!

211 results found with an empty search

  • செல்வி சாப்பிடணும்

    செல்ல நிலா, வெண்ணிலா – என்  உள்ளங் கையில் வருவாயா?  செல்வி பாப்பா இப்போது - ஏனோ சோறு சாப்பிட மறுக்கிறாள். ஆரஞ்சு வண்ணப் பட்டாம்பூச்சி- நீ  அழகோவியம் வரைவாயா?  நூறு தடவை கொஞ்சியும் - பாப்பா சோறு சாப்பிட மறுக்கிறாள். கொன்றை மரக் கருங்குயிலே- நீ  காதோரம் பாட்டுப் பாடாயோ?  குறும்புக்காரி ராசாத்தி- ஒரு வாய்ச்  சோறு சாப்பிட மறுக்கிறாள். மிளகாய் மூக்கு கிளியக்கா- நீ மிட்டாய்க் கதை சொல்லாயோ?  செல்லக் குட்டி இளவரசி- ஒரு கவளச்  சோறு சாப்பிட மறுக்கிறாள். தட்டாம் பூச்சி தங்கச்சி- நீ ‘தையத் தக்கா’ நடனமாடாயோ?  குட்டிப் பாப்பா குறும்பு மறையும்! கிண்ணத்தில் சோறு குறையும்!

  • முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம்

    என் பெயர் நஸீரா, நான் காசா நகரத்தில் இந்த நிமிடம் வரை உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இல்லையில்லை. என் பெயர் அமெலினா. நான் உக்ரைன் நாட்டிலுள்ள கீவ் நகரில் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கிறேன். எந்தப் பெயராக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன?  ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வு நேரத்தில் தான் யுத்தம் ஒரு புயலைப் போல வீசியது. எங்கள் பள்ளிக்கட்டிடம் இடிந்து மண்ணோடு மண்ணாகி ஓராண்டு ஆகிறது. நேற்று கூட என்னுடைய பள்ளிக்கட்டிட இடிபாடுகளில் சிக்கிய என்னுடைய அறிவியல் புத்தகத்தைத் தேடிப் போனேன். என்னுடைய வகுப்பு இருந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றேன். அந்த வகுப்பு நடப்பதைப் போலவே கண்டேன். என் வகுப்புத்தோழி அதோ ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் இப்போது இல்லை. சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறாள்.. அவள் எவ்வளவு அழகு தெரியுமா? எனக்கு அழுகை வருகிறது.  நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அமைதியாக வாழ்ந்தோம். எங்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதம் இருந்தது. சிலநேரம் நல்வாய்ப்பாக மூன்று வேளைகூட கிடைத்தது. நான், என் தங்கை,தம்பி, எல்லாரும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவோம். ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வோம். பிறாண்டிக் கொள்வோம். சிலசமயம் எங்களுக்கு அடி விழும். அழுவோம். பிறகு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். சிரிப்போம். கேலி செய்வோம். ஓடிப்பிடித்து விளையாடுவோம். ஆமாம்.காலையில் சூரியன் எல்லாருக்கும் போல எங்கள் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சினான். இரவில் நிலவின் குளிர்ந்த ஒளி எங்களையும் குளிப்பாட்டியது. மழை எங்களையும் நனைத்தது. பூக்கள் எங்களுக்கும் மணம் வீசின. எனக்கு அருகிலுள்ள ரோஜா தோட்டத்திலிருந்து வரும் வாசனை மிகவும் பிடிக்கும். அதை அப்படியே முகர்ந்து கொண்டே அந்த ரோஜா தோட்டத்தில் இருப்பதாகக் கற்பனை செய்வேன். காலையில் குயில்கள் எங்களுக்காகவும் பாடின.  எங்களுக்கு என்று ஒரு வீடு இருந்தது. சின்னஞ்சிறிய வீடு.. பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு வரும் அப்பாவும் அம்மாவும் காலை நீட்டிப் படுக்க ஒரு வீடு. எல்லாருக்கும் படுக்க இடம் போதாது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவ்ர் இடித்துக் கொண்டு படுத்து உறங்கினோம். உறக்கம் நன்றாகவே வந்தது. எங்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார். உங்களுக்கு இருப்பதைப் போலவே. எங்கள் கடவுளும் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். உங்கள் கடவுளைப் போலவே. எங்கள் கடவுளும் இறந்தவருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் உங்கள் கடவுளைப் போலவே. எங்கள் கடவுளும் ஏழைகளுக்கு உதவியிருக்கிறார் . ஒவ்வொரு நாளும் கடவுளைத் தொழுகிறோம், உங்களைப் போலவே. ஒவ்வொரு நாளும் கடவுள் உதவி செய்வார் என்று நம்புகிறோம் உங்களைப் போலவே. ஒரு சிறிய நன்மை நடந்தாலே இந்தக் காரியம் கடவுளால் நடந்தது என்று புகழ் பாடுகிறோம் உங்களைப் போலவே. அவர் இந்த யுத்தத்தை எப்படியாவது நிறுத்தி விடுவார் என்று உங்களைப்போலவே நாங்களும் நம்புகிறோம். எங்கள் பாட்டி இருந்தபோது தினமும் கதைகளைச் சொல்வார். நல்லவர்களைப் புகழ்கிற கதைகள். தீயவர்கள் அழிவது உறுதி  என்று சொல்கிற  கதைகள். கடவுள் ஒருபோதும் ஏழை, எளிய மக்களைக் கைவிடமாட்டார் என்கிற கதைகள் வாழ்க்கை சொர்க்கம் போல மாறும் என்று நம்பிக்கை தரும் கதைகள். நான் நம்பினேன் எங்கள் வாழ்க்கை மாறும் என்று நம்பினேன். சொர்க்கம் எல்லாம் வேண்டாம். மூன்று வேளை உணவு, கிழியாத உடைகள், படிப்பதற்குப் பள்ளிக்கூடம் இவை எல்லாம் கிடைக்கும் என்று நம்பினேன்.  எங்கள் பள்ளிக்கூடம் குண்டு வீச்சில் தகர்ந்து வெகுகாலம் ஆகி விட்டது. புத்தகங்கள் தொலைந்து விட்டன. மருத்துவமனையின் மீது கூட குண்டு வீசப்பட்டது. வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. தினம் நிறையப்பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்ற குழந்தைகள் உடல் சிதறி, தலை சிதறி, இறந்து போகிறார்கள். நேற்று கூட குண்டு வீச்சினால் இடிந்த வீட்டிலிருந்து என் தம்பிக்கு ஒரு காலணி எடுத்தேன். ஒரு காலணியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நினைக்கிறாயா? காலணிகளே இல்லாத என் தம்பிக்கு அந்த ஒரு காலணி அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது தெரியுமா? ஆனால் சில நிமிடங்களில் அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக மறைந்து விட்டது.  ஆமாம். தெருவில் இறங்கி நண்பர்களிடம் காட்டுவதற்காகப் போன தம்பி திரும்பவில்லை. இடிந்த கட்டிடத்தின் சிதைவுகளில் அவனுடைய காலணி அணிந்த அந்த ஒரு கால் மட்டுமே தெரிந்தது. எனக்குக் கண்ணீர் வரவில்லை. தினம் தினம் என்னைப் போன்ற குழந்தைகள் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன். அழுதழுது கண்கள் மரத்துப் போய் விட்டது நாளை நான் இருப்பேனா என்று தெரியாது. என் அப்பா அம்மா நாங்கள் இருக்கும் சின்னஞ்சிறு வீடு, சின்னஞ்சிறு ரோஜாச்செடி, அதன் வாசனை எல்லாம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சூரியன் இருக்கும். சந்திரன் இருக்கும். நாளையும் வெயில் அடிக்கும். மழை பொழியும். மனிதர்கள் இருக்கும்வரை உன் கடவுளும் இருப்பார். என் கடவுளும் இருப்பார். மனிதர்கள் நம்புவதற்கு யாராவது வேண்டுமில்லையா? இந்த பூமி எல்லாருக்கும் சொந்தமானது தானே. ஈ, எறும்பு முதல் யானை வரை எல்லாருக்குமானது தானே. அப்புறம் ஏன் மனிதர்கள் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். குண்டுகளை வீசி யுத்தம் செய்கிறார்கள். மனிதர்களைக் கொல்கிறார்கள். பெண்களைக் கொல்கிறார்கள். குழந்தைகளைக் கொல்கிறார்கள்.  இதனால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடும்? இதோ போர் விமானங்கள் மேலே பறக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் குண்டுகள் என் மீது விழலாம். இறந்து போன என் தம்பியுடன் நானும் சொர்க்கத்தில் கண்ணாமூச்சி விளையாடலாம்.  குழந்தைகளுக்காகக் கடவுள் சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பாராம். தம்பியின் இறுதிச்சடங்கில் மதபோதகர் சொன்னார். முகம் தெரியாத என் சிறுமியே! உன்னுடைய நாடு எதுவாயினும் சரி. உன்னுடைய நகரம் எதுவாயினும் சரி. அங்கே யுத்தம் வராமலிருக்கட்டும். குண்டுகளின் கரும்புகை வெண்மேகங்கள் மிதந்து செல்லும் நீலவானத்தைக் களங்கப்படுத்தாமலிருக்கட்டும். மனிதர்கள் இயற்கையாகவே மரணமடையட்டும். மனிதனின் மிகக் கொடிய கண்டுபிடிப்பு யுத்தம். நான் போரிடும் இந்த உலகத்தின் மனசாட்சியைப் பார்த்துக் கேட்கிறேன்.   குழந்தைகள் இல்லாத இந்த உலகத்தில் எதைச் சாதிக்கப்போகிறீர்கள் நீங்கள்?   உனக்கும் இப்படி ஒரு கேள்வி வந்தால் நீயும் என்னுடைய அன்புத்தோழி தான்.  உனக்கு நீண்ட வாழ்நாளை உன்னுடைய கடவுள் அருளட்டும் என என்னுடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன். உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • மன்சூர்

    கீதா துர்வே தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ மன்சூருக்கு தன்னை அலங்காரம் செய்வது, குறிப்பாகக் கண் மை போடுவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு கண் இமைகளின் மேலும் கீழும் மிக நுணுக்கமாக கண் மை போட்டுக் கொள்வான்.  குச்சுப்புடி நடனக் கலைஞர்கள் கண்களை அசைப்பதுபோல, அவனும் தனது கண்களை இட வலமாக அசைத்துப் பார்த்து சிரிப்பான். சில நேரங்களில் நெற்றியிலும், கன்னத்திலும் சிறிய பொட்டு வைத்துக்கொள்வான். அவனுக்கு நிறைய தோழிகள் இருந்தனர். ஒரு நாள் தனது தோழி சஹத்தின் உடையைக் கேட்டு அணிந்து, உதட்டுச் சாயம் பூசிக்கொண்டான். அவளிடம் “நான் அழகாக இருக்கிறேனா? இந்த உடை அலங்காரத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசையாக இருக்கிறது" என்றான்.  அதற்கு சஹத், "உன்னை இந்தக் கோலத்தில் உனது அம்மா பார்த்தால் அடிப்பார். என்னையும் பிடித்து உதைப்பார். நான் வரமாட்டேன்" என்றாள். மன்சூர், சஹத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, "வா!.. என்னிடம் சிறுமிகள் அணியும் உடைகள் இல்லை. அம்மா அப்பாவுக்கு முன்னால் இதை உடுத்திக் கொள்ள முடியாது. சீக்கிரம் போய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம்" என்று கெஞ்சினான்.  சஹத், "சரி வா. ஆனால் முதலில் நீ இந்த உடைகளைக் கழற்றிவிட்டு, உதட்டுச் சாயத்தைத் துடைத்துவிடு" என்றாள். மன்சூர், "ஏன்?" என்று கேட்டான். சஹத், "இப்படி அலங்காரம் செய்துகொண்டு போனால், சனங்கள் எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்... அங்கே போனதும் போட்டுக்கொள்" என்றாள். மன்சூருக்கு சஹத்தின் யோசனை பிடித்திருந்தது.  உடனே அவன் அலங்காரத்தைக் களைந்துவிட்டான்.  புகைப்படம் எடுக்கும் கடைக்கும் வந்ததும், "சரி, நீ உன் வளையல்களைக் கொடு. எல்லாவற்றையும் அணிந்து கொள்கிறேன்" என்றான். சிறுவயது முதல் மன்சூருக்கு தோழிகளின் அழகான உடைகளை அணிந்து நடனமாடுவது மிகவும் பிடிக்கும்.  அந்த உடைகளை அணியும்போது, தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டதுபோல மகிழ்ச்சியாக உணர்ந்தான்.  தோழிகளுடன் விறகு சேகரிக்கச் செல்லும்போது, அவனது கண்கள் பெரும்பாலும் குப்பையில் கிடக்கும் பெண்களின் கைப்பைகள் மீது பதியும். அவற்றில் உதட்டுச் சாயம், பவுடர், வேறு ஒப்பனைப் பொருட்களைத் தேடுவான்.  ஏதாவது கிடைத்தால் உடனே எடுத்து அதை பூசிக்கொண்டு அழகு பார்ப்பான். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனக் கண்ணாடிகளில் தன்னைப் பார்த்துப் பெருமிதம் கொள்வான்.  பிறகு கால்சட்டைப் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு வட்டமாகச் சுழன்று நடனமாடுவான். சிறுவயது முதலே மன்சூர், தோழிகள் விளையாடும் கோ-கோ, கயிறு தாண்டுதல் போன்ற எல்லா விளையாட்டுகளையும் விளையாடினான்.  அவனுக்கு இதுபோன்ற விளையாட்டுகள்தான் பிடிக்கும்.  சில நேரங்களில் அவர்கள் யாராவது ஒருவர் வீட்டுத் திண்ணையில் நாடகம் நடத்துவார்கள். மன்சூர், எப்போதும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பான்.  சில நேரங்களில் அம்மா, சில நேரங்களில் அக்கா, சில நேரங்களில் மனைவி எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பான். ஆண் கதாபாத்திரங்களில் நடிப்பது அவனுக்குப் பிடிக்காது. முதலில், மன்சூரின் தோழிகள் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.  அப்போது அவன் கவலை அடைந்தான். சில நேரங்களில் அழுதான். ஆனால் அவன் தோழிகளுடன் தொடர்ந்து பழக விரும்பியதால், கவலையை மறந்து சிரிக்கத் தொடங்கினான். மகன் உதட்டுச் சாயம் பூசி, வளையல்கள் அணிந்திருப்பதை மன்சூரின் அம்மா பார்த்தால் கோபம் அடைவார். எப்போது சிக்கினாலும் அவனைப் பிடித்து நன்றாக அடிக்க வேண்டுமென்று கையில் தடியுடன் தெரு முழுவதும் தேடுவார்.  நாள் முழுவதும் தோழிகளுடன் சந்தோஷமாக இருப்பான். ஆனால் வீடு திரும்பும் நேரம் வந்ததும் வருத்தமடைவான். வீட்டிற்குப் போனால் அடி விழும் என்று அவனுக்குத் தெரியும். அம்மாவைச் சமாதானம் செய்வது எளிது, ஆனால் அப்பா...?  ஒருமுறை அவர் கையில் சிக்கினால், வீட்டிற்குள் கட்டி வைத்து அடிப்பார். "உதட்டுச் சாயம், கண் மை போடுவியா? உனக்கு பெண்ணாக மாறவேண்டும் என்று ஆசையா? பெண்களுடன் சுற்றுவியா? இந்தத் தெருவில் எங்களது மானத்தைக் கெடுப்பியா?" என்று கேட்பார்.  அப்பாவின் அடியைவிட அவரது வார்த்தைகள்தான் மன்சூரைத் ததுன்புறுத்தும். வெடித்து அழ வைக்கும்.  அவன் அழுதாலும், "பெண்கள் மாதிரி அழுவதை நிறுத்து" என்று அதட்டுவார் அப்பா.  மன்சூரின் அம்மா அவனைத் தெருவிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் போது, "பெண்களுடன் பழக வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னேன். ஏன் நீ பெண்கள் மாதிரி நடக்கிறாய்?" என்று கேட்பார்.  அவனை நீண்ட நேரம்  திட்டிவிட்டுத் தானும் அழுவார்.  மன்சூரின் செயலால் அக்கம் பக்கத்தவர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பலவிதமாகப் பேசுகிறார்கள் என்று அவருக்குத் தெரியும்.  சிலர் அவனை ‘திருநங்கை’ என்று அழைக்கிறார்கள். அதைக் கேட்டு மன்சூருக்குக் கோபம் வரும், ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான். வீட்டில் உள்ளவர்கள் அப்படிப் பேசும்போது அவனுக்கு வருத்தமாக இருக்கும்.  சஹத்தும், தமன்னாவும் மன்சூருக்குப் பிடித்த தோழிகள்.  அவர்கள் இருவரும் அவனை ஒருபோதும் அன்னியமாக நினைத்ததில்லை. மன்சூர் எப்படி இருந்தானோ அப்படியே அவனை ஏற்றுக்கொண்டார்கள்.  அவர்களுடன் சுற்றுவதும், வேலை செய்வதும் மன்சூருக்கு நிம்மதி அளித்தது. தோழிகளுடன் சேர்ந்து சமையல் செய்வது, சாணம் மெழுகுவது,  வீட்டைப் பெருக்கி துடைப்பது போன்ற பல வேலைகளைக் கற்றுக்கொண்டான்.  இரண்டு மூன்று வீடுகளில் பெருக்கி, குப்பைகளை அகற்றும் வேலையும் அவனுக்குக் கிடைத்தது.  தீபாவளி நேரத்தில், வீட்டு முற்றத்தில் சாணம் மெழுகும்போது, ​​ அக்கம்பக்கத்தவர்கள் அவனை ‘பொட்டை’ என்று சொல்லிக் கேலி செய்தார்கள். மன்சூர், யாரையும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஒருநாள் சஹத், மன்சூரிடம் அவனது பெயருக்கான அர்த்தத்தைச் சொன்னாள்:  "கோண்டி மொழியில் மன்சூர் என்றால் அழகான மயில்.  மயில் தோகையில் உள்ள வண்ணங்கள் அவற்றின் அழகை இரட்டிப்பு ஆக்குகின்றன. ஆனால் அவற்றின் கால்கள் அழகற்றவை.  மக்கள் மனதில் மயிலின் அழகான தோகைக்கு கிடைத்த இடம் கால்களுக்குக் கிடைக்கவில்லை. மன்சூர் என்பதற்கு 'ஏற்றுக்கொள்ளுதல்' அல்லது 'அங்கீகரித்தல்' என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு" என்றாள்.  சஹத்தின் வார்த்தைகளைக் கேட்ட மன்சூர், "நான் மன்சூர் என்பதால் என்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையோ? இந்த உலகில் நான் மட்டும் விசித்திரமானவனா? நான் எந்த அடையாளத்துடன் வாழ விரும்புகிறேனோ, அதற்கு இங்கு இடம் கிடைக்குமா?" என்று கேட்டான். சஹத் அதிர்ச்சி அடைந்தாள்.  ஆனால் மன்சூரின் கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

  • பிளமிங்கோ

    ஓவியம் : கண்ணன்

  • பிரம்மாண்ட ஊசிக்கணவாய்

    ஆங்கிலத்தில் இதன் பெயர் Giant Squid - தமிழில் நாம்  இந்த விலங்கை  பிரம்மாண்ட  ஊசிக்கணவாய்  என்று அழைத்துக்கொள்ளலாம். சும்மா பெயரில் மட்டும்  இல்லை இந்த  பிரம்மாண்டம். இது 43 அடி, அதாவது 13 மீட்டர் நீளம் வளரக்கூடியது, பெண் ஊசிக்கணவாய்கள்  275 கிலோ எடை வரை இருக்கும். இது 3 யானைக்குட்டிகளின் எடைக்கு சமம். இதன் கண்  எவ்வளவு  பெரியது தெரியுமா? கண்ணுடைய விட்டம் மட்டுமே ஒரு அடி இருக்கும்! 300மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள கடற்பகுதியில் மட்டுமே இவை வசிக்கும்.ஆகவே இவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன,இந்த விலங்குகளை நேரில் பார்ப்பதும் தகவல்களை சேகரிப்பதும் கடினமாக இருக்கிறது. இப்போதைக்கு  வெப்பமண்டல மற்றும் துருவக்கடல்களில் இந்த ஊசிக்கணவாய் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1850களிலேயே இதுபற்றிய குறிப்புகள் வந்துவிட்டன. ஆனால் 2004ல்தான் இந்த விலங்கின் முதல் வீடியோ எடுக்கப்பட்டது, அந்த அளவுக்கு இது  அறியப்படாத  இனமாகவே இருக்கிறது. இது மிகத்திறமையாக வேட்டையாடக்கூடிய விலங்கு. 32 அடி தொலைவில் இரை  இருந்தாலும்  தனது கைகளை நீட்டி இரையைப் பிடித்துவிடும். பெரிய ஆழ்கடல் மீன்களை விரும்பி சாப்பிடும். இவ்வளவு பெரிய விலங்காக இருக்கிறதே, இதற்கு எதிரிகளே கிடையாது என்று யோசிக்கிறீர்களா? அதுதான் இல்லை. இயற்கையில் எல்லாவிதமான விலங்குகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வேட்டையாடிகள் உண்டு. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள், பைலட் திமிங்கிலங்கள், ஒருவகை சுறாக்கள், ஆர்காக்கள் எனப் பல பெரிய விலங்குகள் இந்த பிரம்மாண்ட  ஊசிக்கணவாய்களை  வேட்டையாடுகின்றன! அளவில் பிரம்மாண்டமாக இருந்தாலும் இந்த விலங்குகள் மனிதர்களை எதுவும் செய்வதில்லை. இவை ஆழ்கடலில் வசிக்கின்றன. நாமாகப் போய் தொந்தரவு  செய்து இவற்றை எரிச்சல்படுத்தாதவரை இந்த ஊசிக்கணவாய்கள்  மனிதர்களைத் தாக்காது.

  • மா லியாங்கின் மாயத்தூரிகை

    சீனமொழியில்: ஹாங் ஷிண்டாவ் (1950) ஆங்கிலம் வழி தமிழில்: எழில் சின்னத்தம்பி முன்னொரு ஒரு காலத்தில், மா லியாங் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஏழை மனிதன். இரக்க குணம் கொண்டவன்; ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். எங்கு பார்த்தாலும் ஓவியம் வரைந்து கொண்டே இருப்பான். ஒரு நாள் இரவு,  அவன் ஒரு கனவு கண்டான். அதில் வயதான மனிதர் ஒருவர் மாயத் தூரிகை ஒன்றை அவனிடம் கொடுத்து, ஏழைகளுக்கு உதவ அதைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். விழித்துப் பார்த்தபோது, அந்த மாய தூரிகை அவனது மேசையில் இருப்பதைக் கண்டான். அன்றிலிருந்து, ஏழைகளுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் அவன் அந்தத் தூரிகையைப் பயன்படுத்தினான். மக்கள் தங்கள் வயல்களுக்குப் பயன்படுத்த தண்ணீர் இல்லாமல் இருப்பதை அவன் கண்டபோது, ஒரு நதியை வரைந்தான். அந்த நதி உயிர் பெற்றது. மக்கள் அந்த நதியிலிருந்து வயலுக்குத் தண்ணீர் கொண்டு வந்து தங்கள் பயிர்களை வளர்க்க முடிந்தது. கடினமாக உழைக்கும் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கச் சிரமப்படுவதைக் கண்டபோது, அவர்களுக்குச் சாப்பிட உணவு வரைந்தான். விரைவில், பலர் மாயத் தூரிகையைப் பற்றி அறிந்தனர்; அவர்கள் மாயத்தூரிகையினால் பயன் பெற்று,  மா லியாங்கிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தனர். ஆனால் அந்த கிராமத்தில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் மிகவும் மோசமானவன். மேலும் பணக்காரனாக மாற அந்த இளைஞனிடமிருந்து தூரிகையைத் திருட முடிவு செய்தான். எனவே அவன் தனது வேலைக்காரர்களை மா லியாங்கின் வீட்டிற்கு அனுப்பி அந்த மாயத் தூரிகையை திருடச் செய்தான். தூரிகை அவனிடம் வந்ததும், அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தனது புதிய உடைமையைக் காண்பிக்கத் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்தான். அவர்கள் வந்ததும் அவன் நிறையப் படங்களை வரைந்தான்; ஆனால் அவை எதுவும் உயிர் பெறவில்லை. தூரிகை அவனுக்காக வேலை செய்யாததால் அவன் மிகவும் கோபமடைந்து, மா லியாங்கிற்கு ஆள் அனுப்பி வரவழைத்தான். அவன் மா லியாங்கிடம் "நீ எனக்காகச் சில படங்களை வரைந்து அவற்றை உயிர்ப்பித்தால், நான் உன்னை விடுவித்து விடுவேன்" என்றான். மா லியாங் அந்த மோசமான மனிதனுக்கு உதவ விரும்பவில்லை, ஆனால் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன் அந்த கெட்ட மனிதனிடம், "நான் உங்களுக்கு என்ன வரைய வேண்டும்?" என்று கேட்டான். பணக்காரன், "எனக்கு ஒரு தங்க மலை வேண்டும். அங்கு சென்று நான் அந்தத் தங்கத்தை எல்லாம் எடுத்துக் கொள்வேன்" என்றான். ஆனால் மா லியாங் முதலில் ஒரு கடலை வரைந்தான். பணக்காரன் கோபமடைந்து, "ஏன் ஒரு கடலை வரைந்தாய்? எனக்கு ஒரு தங்கமலை வேண்டும். அதை விரைவாக வரை!" என்றான். எனவே மா லியாங் ஒரு தங்கமலையை வரைந்தான். அது கடலில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. பணக்காரன், "ஒரு பெரிய கப்பலை விரைவாக வரை. நான் மலைக்குச் சென்று தங்கம் சேகரிக்க வேண்டும்" என்றான். மா லியாங் அமைதியாகப் புன்னகைத்து ஒரு பெரிய கப்பலை வரைந்தான். பணக்காரன் கப்பலில் ஏறித் தங்கத்தைத் தேடிப் புறப்பட்டான். ஆனால் கப்பல் கடலின் நடுப்பகுதிக்குச் சென்றபோது, மா லியாங் அந்த ஓவியத்தில் ஒரு பெரிய அலையை வரைந்தான். அந்த அலை சுழன்றடித்துக் கப்பலை அழித்தது. அதன் பிறகு அந்தப் பணக்காரன் மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப வரவேயில்லை. அதன் பிறகு,  மா லியாங் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். வயதான மனிதர் கேட்டுக் கொண்டபடி ஏழைகளுக்கு உதவ மாயத் தூரிகையைப் பயன்படுத்தினான். அந்த மாயத் தூரிகை அனைவராலும் விரும்பப்பட்டு மென்மேலும் உதவிகள் செய்தது.

  • சமூக நூலகங்கள்

    புதிய சிந்தனை நூலகம் செப்டம்பர் 5 ம் தேதி தெற்கு ஆத்தூரில் புதிய சிந்தனை நூலகம் எனும் நூலகத் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. குழந்தை ரதி பிரார்த்தனா (3-ஆம் வகுப்பு) தான் கண்ட சில நூலகங்களைக் கண்டு அதன்படி தங்களது வீட்டிலும் ஒரு நூலகம் வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அவரது அம்மா வீட்டில் மாலை நேர தனி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அவரிடம் 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். அவர்களும் வாசிக்கட்டும், தனது மகளின் நண்பர்களும் வாசிக்கட்டும் என்ற நோக்கில், தொடங்கப்பட்டது. தசிஎகச முக்காணி கிளை சுப்புலெட்சுமி, சண்முக வடிவு, தூத்துக்குடி கிளை வாலண்டினா ஆகியோர் சார்பில் சிறார் புத்தகங்கள் புதிய சிந்தனை நூலகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன. மகிழினி IFS நூலகம். செப்டம்பர் 5 தெற்கு ஆத்தூர் புதிய சிந்தனை நூலகம் தொடக்க நிகழ்வு முடிந்து திரும்பி வரும்வழியில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவி முத்து நித்யா, தங்கள் வீட்டிற்கு வரும்படி அன்புடன் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று மகிழ்வுடன் சென்றபோது, தனது சேகரிப்பு புத்தகங்களை பெரும் மகிழ்வுடன் காண்பித்து, தன்னிடம் 33 புத்தகங்கள் உள்ளன, இதனை வைத்து ஒரு நூலகம் தொடங்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார். அவரது அம்மாவும் உற்சாகப்படுத்தினார். வேகவேகமாக உடனிருந்த குழந்தைகள் அந்தப் புத்தகங்களை ஒரு இரண்டு அடுக்கு சிறிய அலமாரியில் அடுக்கத் தொடங்கினர். ஆஹா! அற்புதம்! என்றனர் குழந்தைகள். சரி, இன்னொரு நாள் எதற்கு? இப்போதே நூலகம் தொட ங்கிவிடலாம் என்று முடிவு செய்து, ஆளுக்கொரு பெயர் சொல்ல, தனக்கு செப்டம்பர் 2ல் அறிவுச் சுடர் படிப்பகம் சார்பில் பிறந்தநாள் பரிசாக கிடைத்த, மகிழினி IFS புத்தகத்தை, அதே புத்தகத்தை இரண்டு பிரதிகள் தனது சேமிப்பு உண்டியல் தொகை மூலம் வாங்கி, தனது பள்ளிக்கும், தனது மாலைநேர தனிபயிற்சி வகுப்புக்கும் பரிசாக அளித்த , தனக்கு மிகவும் பிடித்த அதே மகிழினி IFS எனும் புத்தகத்தின் தலைப்பையே தனது நூலகத்திற்கு சூட்டி மகிழ்ந்தார் மாணவி முத்து நித்யா. ஒரு புத்தகப் பரிசு என்ன செய்யும்? ஒரு நூலகத்தையே உருவாக்கும்! இப்படித்தான் உருவானது மகிழினி IFS நூலகம். இது நமது 12வது நூலகம். சமூக நூலகங்கள். Community Libraries 1.அறிவுச்சுடர் படிப்பகம், நவம்பர் 14 - 2022. சண்முக வடிவு மற்றும் பலர் இணைந்து... ஆத்தூர் . 2.அல்முபின் தையல் நூலகம், நவம்பர் 14- 2023 செய்யதலி பாத்திமா ஆத்தூர் . 3.வானவில் நூலகம், மார்ச் 8 - 2024 சுப்புலெட்சுமி முக்காணி. 4.சிறகுகள் சிறார் நூலகம், ஏப்ரல் 23 - 2024. வாலண்டினா தூத்துக்குடி . 5.அரும்பு நூலகம், ஜனவரி 01 - 2025 மரியம் ஆயிஷா ஆத்தூர் . 6.Rise and Shine Library, பிப்ரவரி 16 - 2025. மாணவச் செல்வங்கள், மரிய ஸ்டெர்லி & கிரேசி ஆத்தூர். 7.பெருங்கனா சிறார் நூலகம் . பிப்ரவரி 24 - 2025. ஜோசப் டெரின் குருவிநத்தம் கிராமம் 8.குரூப்ஸ்கயா நூலகம் ஏப்ரல் 14 2025 கோமதி அம்மாள் தோப்பூர் திருச்செந்தூர் 9.பெனோ ஜெபைன் நூலகம் , ஏப்ரல் 23 2025. சகாயமேரி காமநாயக்கன்பட்டி. 10.வாசிப்பை நேசிப்போம் நூலகம் மே 11 2025. தங்கலெட்சுமி பூஜாஸ்ரீ, வினோத் குமார் தெற்கு ஆத்தூர். 1 1.புதிய சிந்தனை நூலகம்.. செப்டம்பர் 5 2025. முத்துலெட்சுமி ரதி பிரார்த்தனா. தெற்கு ஆத்தூர். 12.மகிழினி IFS நூலகம் செப்டம்பர் 5 2025. சிவரஞ்சனி முத்து நித்யா தெற்கு ஆத்தூர். - தொடரும்...

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 4

    1. நட்சத்திரங்கள் ஏன் கீழே விழுவதில்லை?   -அருண் பிரசாத், நான்காம் வகுப்பு, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம். அன்புள்ள அருண் பிரசாத், உங்கள் ஊரில் நட்சத்திரங்கள் நன்றாகத் தெரிகின்றன என்று நினைக்கிறேன். நட்சத்திரங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதவர் இருக்க முடியாது. ஆனால், இந்த நட்சத்திரங்கள் அந்தரத்தில் அல்லவா இருக்கின்றன. அப்படியானால், அவை கீழே விழுந்தாக வேண்டுமே, ஏன் விழுவதில்லை? முதல் விஷயம் நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான வாயுப் பந்துகள். இருந்தாலும் அவற்றுக்குள்ளேயே ஈர்ப்புசக்தி உண்டு. அது மட்டுமில்லாமல், அவை அங்கம் வகிக்கும் பால்வெளியில் அவை தொடர்ந்து இயங்கிக்கொண்டும், அவற்றினுடைய பால்வெளியின் மையத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றிக்கொண்டும் இருக்கின்றன. அவற்றின் உள்ளே நிலவும் ஈர்ப்புசக்தி, செயலற்றதன்மை (inertia) ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையின் மூலம் நட்சத்திரங்கள் தங்கள் இடத்தை பராமரிக்கின்றன. சூரியனைச் சுற்றி சூரியக்குடும்பக் கோள்கள் எப்படி இடைவிடாமல் தாங்கள் சுழன்றுகொண்டும், சூரியனை சுற்றிவந்தும்கொண்டிருக்கின்றன. அதைப் போலவே நட்சத்திரங்களும் சுற்றிகொண்டிருக்கின்றன. இப்படி இடைவிடாது சுற்றுவதால், அவை கீழே விழுவதற்கு வாய்ப்பு இல்லை.  2. கால யந்திரம் கண்டுபிடிக்கப்படுமா? அதில் பயணம் செய்து மனிதர்கள் குழந்தைகளாக மாற முடியுமா?   - ஜோ.ச. சச்சின், நான்காம் வகுப்பு, ஈரோடு. அன்புள்ள சச்சின், வணக்கம். மனிதர்கள் எல்லாருமே கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதும், கடந்த காலத்துக்குப் போக ஆசைப்படுவதும் இயல்புதான். நீங்கள் குழந்தையாக இருந்ததை படத்தில் பார்த்திருப்பீர்கள். அப்போது நீங்கள் செய்த குறும்புகளை, சேட்டைகளை உங்களைச் சுற்றி இருப்பவர்கள் சொல்வது சுவாரசியமாக இருக்கும். அந்தக் காலத்துக்கே திரும்பிப் போய்விட முடிந்தால் நன்றாக இருக்குமே என ஆர்வமாக இருக்கும். இதுபோல் மனிதர்கள் பலரும் யோசித்தார்கள், யோசிக்கிறார்கள். புகழ்பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் 'தி டைம் மெஷின்' (கால இயந்திரம்) என்கிற கதையை 1895இல் எழுதினார்.  அந்தக் கதையில் வரும் கால இயந்திரத்தில் ஏறினால் கடந்த காலத்துக்குப் போகலாம், எதிர்காலத்துக்கும் போகலாம். ஆனால், அதேநேரம் இன்றுவரை கால இயந்திரம் என்பது அறிவியல்ரீதியாக சாத்தியப்படவில்லை. கதைகளிலும் திரைப்படங்களிலும் கற்பனையில் இப்படி சித்தரிக்க முடிகிறது. நமது பழங்கதைகளில் கூடுவிட்டு கூடு பாய்தல், அதன் மூலம் ஒரு மனிதர் வேறொருவராக மாறுதல் பற்றியெல்லாம் கூறப்படுகிறது. கால இயந்திரம் இதுபோல் கடந்த காலம், எதிர்காலத்துக்கு செல்லலாம் என்கிறது.  இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளின்படி கடந்த காலம், எதிர்காலத்துக்குச் செல்வது நடைமுறையில் சாத்தியமில்லை. அதேநேரம் ஹெச்.ஜி.வெல்ஸ் கால இயந்திரம் கதையை எழுதிய பிறகு, உலகில் பல சிறார் /பெரியவர்களுக்கான கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்ற அனைத்துப் பொழுதுபோக்கு வடிவங்களிலும் கால இயந்திரம் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு நடப்பு வாழ்க்கையைவிட பழைய நினைவுகளை ரசிப்பதும், தற்போது உள்ளதைவிட எதிர்காலத்தில் மாறுபட்ட வகையில் இருப்பதிலும் உள்ள ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது. நம் எல்லாருக்குமே கற்பனை செய்வதில் ஆர்வம் இருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது. எனவே, கால இயந்திரம் கற்பனையில் மட்டுமே சாத்தியம். மனிதர்கள் குழந்தையாக மாற நினைத்தால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிமையான வாழ்க்கையை உருவாக்கப் பெரியவர்கள் மெனக்கெட வேண்டும். தங்கள் மனதை என்றைக்கும் இளமையாகவும் வெள்ளந்தியாகவும் வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கே உரிய ஆச்சரியப்படும் தன்மை, எதையும் ஆராய்ந்துபார்க்கும் தன்மையை காலாகாலத்துக்கும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஆணவம், மற்றவர் மேல் கோபம், பொறாமை, வெறுப்பு போன்றவற்றை விலக்கி வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எல்லாரும் கால இயந்திரத்தில் உட்காராமலேயே குழந்தைகளாக மாறலாம். -அமிதா

  • கொழுக்கு மொழுக்கு கத்தரிக்காய்

    கொழுக்கு மொழுக்கு கத்தரிக்கா!  குண்டு குண்டு கத்தரிக்கா!  கொத்துக் கொத்தாக் காச்சிருக்கு கொண்டையாட்டும் கத்தரிக்கா!  ஊதா நிறக் கத்தரிக்கா!  உன் போல் இங்கே யார் இருக்கா!  குழம்பு சாம்பார் எல்லாத்திலும் நீ இல்லைன்னா  சுவை இருக்கா!   கொழுக்கு மொழுக்கு கத்திரிக்கா! குண்டு குண்டு கத்தரிக்கா! சரிதா ஜோ   சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • ஒரு சோம்பேறி சாகச வீரனாக மாறிய கதை!

    தொலைக்காட்சியில் ‘தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்’ (மோதிரங்களின் மாமன்னன்) பார்த்து ரசிச்சிருப்பீங்கதானே? தென்னாப்பிரிக்கா நாட்டிலே 1892ஆம் ஆண்டு பிறந்து பிரிட்டனில் 1973 வரையில் வாழ்ந்தவர் ஜே.ஆர்.ஆர். டோல்கீன். அவர் எழுதி 1954, 1955 ஆண்டுகள்ல மூணு பாகங்களாக வெளியான நாவலைத்தான் முதல்ல திரைப்படமாகவும், அப்புறம் வலைத் தொடராகவும் தயாரிச்சாங்க. அதுக்கு ஒரு முன்கதை போல அவர் எழுதி 1937ஆம் ஆண்டுல வந்த நாவல்தான் ‘தி ஹோபிட்‘. அதைப் பத்திதான் இப்ப நாம பார்க்கப் போறோம். பல நாடுகள்லேயும் பசங்களுக்கு ரொம்பவும் பிடிச்ச புத்தகம் இது. குழந்தைகளுக்கு எப்பவுமே பிடிக்கிற மாய உலகக் கதைதான். இந்தக் கதையில்தான், ரிங்ஸ் தொடரில் வர்ற மைய பூமியை டோல்கீன் முதல்ல அறிமுகப்படுத்தினார். கதை என்னான்னு பார்க்கலாமா? ஹோபிட்டுங்கிறது என்னன்னா டோல்கீன் கற்பனையாக உருவாக்கிய ஒரு இனத்தோட பெயர். அந்தச் இனத்தைச் சேர்ந்தவங்க சின்ன உருவத்தோட இருக்கிறவங்க. நல்லா சாப்பிட்டுட்டு பரபரப்பு இல்லாம அமைதியாக வாழ விரும்புறவங்க. அங்கே இங்கேன்னு சுத்தாம ஊருலேயே இருக்க நினைக்கிறவங்க. அப்படிப்பட்ட ஹோபிட் இனத்தைச் சேர்ந்தவன்தான் பில்போ பேகின்ஸ். அவனும் வீட்டுல அமைதியா சுகமா இருந்தா போதும்னு நினைக்கிறவன்தான். வழிகாட்டியும் மாயவித்தைகள் தெரிஞ்சவருமான  காண்டால்ஃப், உயரம் குறைஞ்சவங்களா இருக்கிற  ஒரு  குழுவைச் சேர்ந்த 13 பேர்களைக் கூட்டிக்கிட்டு பில்போவைப் பார்க்க வர்றாரு.  அந்தக் குட்டி மனுசங்களோட குழுத் தலைவன் தோர்ன் ஓக்கன்ஷீல்ட்.  அவங்க  வருகையால பில்போவொட அமைதி குலையுது. அவங்க மேல அவனுக்கு முதல்ல கோபம் வருது. அவங்க எதுக்காக வந்திருக்காங்கன்னு அவன்ட்ட சொல்றாங்க. கைப்பற்றப்பட்ட செல்வங்கள் அந்தக் குட்டி மனுசங்களோட பல செல்வங்களை ஒரு கொடிய டிராகன் பறிச்சு வெச்சிருக்கு. அதோட பெயர் ஸ்மாக்.  அவங்களோட ஆதி காலத்துக் குடியிருப்பு ஒரு மலை. அதுக்குப் பேரு தனிமை மலை. அதுவும் ஸ்மாக் ஆக்கிரமிப்புலதான் இருக்கு. “எங்க கூட நீ வரணும், ஒரு திருடனா மாறி எங்க பரம்பரைச் செல்வங்களை மீட்டுக் கொடுக்கணும்.” இப்படி தோர்ன் ஓக்கன்ஷீல்ட் கேட்டுக்கிடுறான். . பில்போ தயக்கத்துடன் இந்த சாகசப் பயணத்துல இணையுறான். காண்டால்ஃப் வழிகாட்டுறாரு. போற வழியிலே, நிறையா பூதம் வருது,  குட்டி அரக்கர் நாலைஞ்சு பேரு வர்றாங்க.  பெரிய பெரிய சிலந்திப் பூச்சிகள்  மிரட்டுது.  இது மாதிரி வேற பல  ஆபத்துகளையும் அவங்க சந்திக்கிறாங்க. மாய மோதிரம் ஒரு சிக்கலான நேரத்துல, பில்போ அந்தப் பயணக் குழுவிலிருந்து எப்படியோ பிரிஞ்சிடுறான். ஒரு குகைக்குள்ள நுழையுறான். அங்கே ஒரு விசித்திரமான பிறவியைப் பார்க்கிறான். அதோட பெயர் கோல்லம். “நான் புதிர் போடுறேன், நீ பதில் சொல்லு. என்னோடு கேள்விக்கெல்லாம் சரியா பதில் சொல்லிட்டா உன்னை விட்டுடுறேன்.” இப்படி அந்த கோல்லம் நிபந்தனை போடுது. அந்தப் புதிர் விளையாட்டுல, எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் சொல்லி பில்போ வெற்றியடையுறான்.  கோல்லம் ஒரு மோதிரத்தைப் பரிசாக் கொடுத்து அவனை மகிழ்ச்சியா அனுப்பி வைக்குது. அது சாதாரணமான மோதிரம் இல்லை, அதிசய மோதிரம்! அதை விரல்ல மாட்டிக்கிட்டா நாம யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோமாக்கும். குட்டி மனுசங்களோட மறுபடி சேரும் பில்போ மாய மோதிரத்தைப் பயன்படுத்தி அவங்களோட செல்வங்களை மீட்கிறான். அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னா, அந்த செல்வங்களுக்காக ஐந்து படைகளின் போர் ஏற்படுது.  ஸ்மாக் டிராகன் வீழ்த்தப்பட்டதால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளவும், சொத்துகளைக் கைப்பற்றவும் திட்டமிடுற கோப்ளின், வர்க்  என்ற கூட்டங்கள் சேர்ந்து ஒரே  படையா வர்றாங்க.. ஸ்மாக் தோற்கடிக்கப்பட்டால், அது கைப்பற்றி வைத்திருந்த தங்களுடைய சொத்துகளும் திரும்பக் கிடைக்கும்னு எதிர்பார்க்கும் மனுசங்க ஏரி நகரிலிருந்து வர்றாங்க. அதே மாதிரி  எதிர்பார்ப்புடன் காட்டிலேயிருந்து ஏல்வ் என்ற இனம் ஒரு கூட்டமாக வருது. இவங்களும் குட்டி மனுசங்களும் ஒரு படையா சேருறாங்க.   எதிர்பார்ப்பு எதுவும் இல்லாம உதவி செய்யுற நோக்கத்துடன் கழுகுகள் படை வந்து சேருது. இந்த ஐந்து படைகளின் போரில் குட்டி மனுசங்க – ஏரி மனுசங்க – காட்டு உயிரி படைகளுக்கு வெற்றி கிடைக்குது. அவரவர் உடைமைகள் பிரித்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கழுகுப்படைக்கு நன்றி சொல்லிட்டுப் புறப்படுறாங்க. சோம்பேறியாவும் கோழையாவும் சுயநலவாதியாவும் இருந்த பில்போ சுறுசுறுப்பானவனாக,  துணிச்சல்காரனாக, மத்தவங்களுக்காகப் பாடுபடுறவனாக  மாறுறான்.  போரில் வெற்றி பெற்று புது மனுசனா வீடு திரும்புறான். கதையின் பெயர் வந்த கதை ஜே.ஆர்.ஆர். டோல்கீன் ஆங்கிலோ–சாக்ஸன் எனப்படும் பழங்குடி இன மக்கள் தொடர்பாகவும் அவர்களுடைய மொழி, இலக்கியங்கள் பற்றியும் ஆராய்ச்சிகளை நடத்திய ஒரு பேராசிரியர். அவர் தன் பேரக் குழந்தைகள் வாசிப்பதற்காகத்தான் இந்த நாவலை எழுதினாராம். அவருடைய ஆராய்ச்சி அறிவு நாவலில் அழகா வெளிப்படுதுன்னு எழுத்தாளர்கள் சொல்றாங்க. அதே நேரத்திலே பசங்க விரும்பிப் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி எளிமையா எழுதியிருக்காருன்னும் சொல்றாங்க. ஹோபிட் –இந்த வார்த்தை எப்படிக் கிடைச்சது  தெரியுமா? “ஹோல்பைட்லா” என்ற பழங்கால ஆங்கிலச் சொல்லிலிருந்து கிடைச்சதாம். ஹோல் என்றால் துளை என்று உங்களுக்குத் தெரியும்தானே? ஹோல்பைட்லா என்றால் “துளையில் வாழ்கிறவர்” என்று பொருள். அதாவது, வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாமல் தன்னுடைய ஊர், தன்னுடைய வீடுன்னு சுருங்கிப்போய் வாழுற இனம்னு உணர்த்துறதுக்காகத்தான் அதிலேயிருந்து ஹோபிட்டுங்கிற பெயரை டோல்கீன் கற்பனையாக உருவாக்கினாராம். சுயநலமா தனிச்சுப் போகாம, மத்தவங்களுக்குப் பயனளிக்கிற வாழ்க்கையை வாழ்ந்தா மனசுக்கு நிறைவா இருக்கும்னு இந்தக் கதை சொல்லுதுல்ல? அது மட்டுமில்லாம தங்கம், வைரம் மாதிரியான செல்வம் எப்படி மனுசங்களை மோத வைக்குதுன்னும் கதை காட்டுது, சரிதானே நண்பர்களே?

  • வளரிளம் புதிர்ப்பருவம் -5.

    கேட்டி கொலை பற்றிய கேள்விகளால் சுதாரித்த ரயான் முதலுதவி அறையிலிருந்து வெளியேறுகிறான்.  ஆசிரியை ஒருவருடன் ஜேட் ஓர் அறையில் இருக்கிறாள்.  பதற்றம் குறையவில்லை. அவளது அம்மா வந்து கொண்டு இருக்கிறார் என்று ஆசிரியை சொன்னதும் அவளது பதற்றம் அதிகரிக்கிறது. வேலையிலிருந்து  வருவதால் அம்மா என் மீது கோபப்படுவார் என்று ஜேட் சொல்கிறாள். ரயானை அடித்ததால் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று பயப்படுகிறாள். ஆசிரியை அவளோடு பேசுகிறார்.  "கேட்டி மட்டுமே எனது தோழி. என்னை நன்றாகப் புரிந்து கொண்டவள். இயல்பாக என்னை ஏற்றுக் கொண்டவள். இப்போ எனக்கென்று யாருமில்லை." என்று ஜேட் கலங்குகிறாள்.  ஆசிரியை ஜேட்டை சமாதானப்படுத்துகிறார். உனக்கென நிறையப்பேர் இருக்காங்க என்கிறார். உளவியலாளரிடம் பேசலாம் என்கிறார். "மீண்டும் உளவியலாளரா!"  என்று ஜேட் பதறுகிறாள். அந்த அறையிலிருந்து வெளியேறுகிறாள்.  குழந்தைகள் தாங்கள் பழகியவரோடு, நம்பிக்கையானவரோடு பேச விரும்புகிறார்கள். வீட்டில் அதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து விட்டன. சமூகத்தில் குழந்தைகள் கலந்துகொள்ளும் உரையாடல்கள் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. பள்ளியிலும் உரையாடும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. பெரியவர்கள், குழந்தைகளின் குரலைக் கேட்காமல் அறிவுரை சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். இதைத்தான்  ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.  ஆதம் தனது அப்பா எந்த வகுப்பில் இருக்கிறார் என்று தேடி வருகிறான். பாஸ்கம் ஒரு வகுப்பில் மாணவருடன் பேசிவிட்டு வெளியே வருகிறார். "உங்களோடு நான் தனியாகப் பேசலாமா?" என்று ஆதம் கேட்கிறான். இருவரும் ஓர் அறைக்குச் செல்கிறார்கள்.  பாஸ்கம், ஆதமோடு பேசும் இந்தக் காட்சி மிகவும் முக்கியமானது.   ஆதம் பதற்றமாக இருக்கிறான். தயங்கித் தயங்கி பேசத் தொடங்குகிறான்.  "ஆதம், என்னைப் பயமுறுத்தாதே. இங்கு என்ன நடக்குது?" என்று அவசரமாக பாஸ்கம் கேட்கிறார்.  "என்ன நடக்குதுன்னு புரியறதுக்கு உதவுற மாதிரி சில பேர்கிட்ட பேசணும்னு சொன்னீங்கல்ல..." என்று ஆதம் சொல்லும் போதே " நீ எனக்குப் புரிய வைக்கப் போறியா?" என்று பாஸ்கம் கேட்கிறார்.  ஆதமின் முகம் இன்னும் இறுகுகிறது. அப்பா, நீங்க கிளம்புங்க என்கிறான்.  "ஆதம், உனக்கு ஏதாவது தகவல் தெரியுமா? அந்தக் கத்தி எங்கே இருக்குன்னு தெரியுமா? யாராவது ஏதாச்சும் உன்கிட்டே சொன்னாங்களா?" தொடர்ந்து கேள்விகளை வேகவேகமாகக் கேட்கிறார் பாஸ்கம். "அப்பா, உங்களுக்கு இங்கே என்ன நடக்குதுன்னு புரியல. இங்க நடப்பதை எல்லாம் நீங்க கவனிக்கல." என்று ஆதம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "நீ எதைப் பற்றிப் பேசுற?" என்று பாஸ்கம் கேட்கிறார். "இன்ஸ்டா. நீங்க இன்ஸ்டா பார்த்துட்டு இருக்கீங்கல்ல!"  ஆமாம். "அவ, என்ன எழுதியிருக்கான்னு பார்த்தீங்களா?"  "ஆமாம். பார்த்தேன்." தனது செல்பேசியை எடுத்து கேட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவை பாஸ்கமிடம் காட்டுகிறான் ஆதம். அவ நல்ல பொண்ணு மாதிரி தெரியலாம். ஆனால் அது உண்மை இல்லை என்றும் சொல்கிறான். பாஸ்கம் அவனது செல்பேசியை வாங்கிப் பார்க்கிறார். எதுவுமே புரியவில்லை என்று சொல்கிறார்.  "இதைப் பாருங்க. இது டைனமைட்." என்று ஆதம் சொல்கிறான். எனக்கு எதுவுமே புரியவில்லை என்று பாஸ்கம் சொல்கிறார்.  " டைனமைட்னா வெடி. அதன் அருகே சிவப்பு, மாத்திரை.அடுத்தது நீல மாத்திரை. நீல மாத்திரைன்னா இந்த உலகத்தை நீங்க எப்படிப் பார்க்கணும்னு நினைக்கறீங்களோ அப்படிப் பார்ப்பது." என்கிறான் ஆதம். பாஸ்கமுக்கு Matrix திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில்தான் சிவப்பு மாத்திரை அல்லது நீல மாத்திரையைத் தேர்ந்தெடுப்பது வரும்.  ஆதமிடம்,"நீ Matrix படம் பார்த்திருக்கிறாயா?" என்று பாஸ்கம் கேட்கிறார்.  "சிவப்பு மாத்திரைன்னா நான் உண்மையைப் பார்க்கறேன்.  ஆண்கள் குழுவுக்காக வேலை செய்யணும்னு  அர்த்தம். அங்கே இருந்துதான் 100 தொடங்கும். 80-20 விதி."என்று ஆதம் சொல்கிறான். ஆதம், எனக்கு எதுவுமே புரியவில்லை. தெளிவாகச் சொல்லு என்று பாஸ்கம் கேட்கிறார். நாமும் சற்றே emoji களைப் பார்த்துவருவோம். சமூக ஊடகங்கள் வந்தபிறகு கொஞ்சநஞ்சம் இருந்த கையால் எழுதும் பழக்கம் வேகமாக மறைந்து வருகிறது. செல்பேசியில் தட்டச்சு செய்பவர்களாக மாறியிருக்கிறோம். குழந்தைகளுக்குக் கையால் எழுதுவதில் உள்ள சோம்பலும் வெறுப்பும் செல்பேசியில் தட்டச்சு செய்வதில் இன்னும் அதிகமாகவே பிரதிபலித்தது. வார்த்தைகளின் சுருக்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம். இறப்புச் செய்திகளில் 'இரங்கல்' கூட இல்லாமல் RIP ஆக மாறிவிட்டது. வார்த்தைகளின் முதல் எழுத்துச் சுருக்கத்தை தட்டச்சு செய்வதை விட emoji என்ற சிறுபடங்களை பயன்படுத்துவது எளிதாக ஆனது. உணர்வுகளை வெளிப்படுத்தச் சுலபமான வழியாகவும் மாறியது.  அவற்றிற்கான பொது அர்த்தம்  இருந்தாலும் இளம்பருவத்தினர் பயன்படுத்தும் படங்களுக்கான அர்த்தத்தில் மாறுபாடு இருக்கலாம்.  சிவப்பு மாத்திரை, நீல மாத்திரை என்ற கருத்தாக்கம் முதலில் 1999-ல் வெளியான The Matrix திரைப்படத்தில் இருந்து வந்தது. அந்தப் படத்தில், 🔴“Red Pill” (சிவப்பு மாத்திரை) எடுத்தால் உண்மையை தெரிந்துகொள்ளலாம், 🔵“Blue Pill” (நீல மாத்திரை) எடுத்தால் பழைய போலி உலகத்திலேயே வாழலாம் என்று காட்டப்பட்டது. (பட உதவி: chatgpt) இணையக் கலாச்சாரங்களில் “Red Pill” புதிய அர்த்தங்களைப் பெற்றது. உண்மையை உணர்தல். பொதுவாகச் சமூக, அரசியல் அல்லது பாலினம் தொடர்பான, கடினமான உண்மைகளை புரிந்து கொள்ளுதல். ஆண்மை சார்ந்த இயக்கங்கள் . பெண்கள், உறவுகள், திருமணம், சமூக விதிகள் ஆகியவை ஆண்களுக்கு எதிராக உள்ளன என்று வாதிடும் குழுக்கள் “Red Pill” என்ற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தன. Incel / Manosphere கலாச்சாரம்.  பெண்களைச் சுலபமாக ஈர்க்க முடியாது. பெண்கள் சில ஆண்களையே விரும்புகிறார்கள்” போன்ற கோட்பாடுகள் உருவாயின. தொடர்ந்து பார்ப்போம்!...

  • போரே! போ! போ

    என்றைக்கும் இல்லாத அளவிற்கான கரும்புகை மேகக் கூட்டத்தை நெருங்கியது. நிவ்யா மேகம் அன்றைய கதையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது.   நிவ்யாவின் அம்மா வஞ்சி அன்றைய புத்தகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. சில நாட்கள் புத்தகங்கள் வரும். சில நாட்கள் புத்தகங்கள் வராது.  அன்று ஏராளமான புத்தகங்கள் வந்திருந்தன.  வஞ்சி என்று ஒரு புத்தகத்தை எழுதி முடித்திருந்தது. அந்தப் புத்தகம் வஞ்சியின் மனதை மிகவும் பாதித்தது. அதைக் குழந்தைகளிடம் எப்படிப் பகிர்வது என்று பலத்த யோசனையோடு இருந்தது வஞ்சி. ஆனாலும் குழந்தைகள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்தப் புத்தகத்தை கையில் எடுத்துச் சென்றது.  நிவ்யாவும் வஞ்சியும் வானத்தில் தவழ்ந்து திரிகின்ற மேகங்கள்.  வஞ்சி ஒரு எழுத்தாளர். கீழே எரிக்கப்படுகின்ற புத்தகங்களின் புகை வழியாக வரும் கதைகளோடு தன்னுடைய கற்பனையையும் கலந்து எழுதும். சில நேரங்களில் ஆண்டுக் கணக்கில் வாசிக்கப்படாத புத்தகங்களில் இருந்து பறந்து மேலே வரும் கதைகளில் இருந்து கூட தன்னுடைய கற்பனையைக் கலந்து கதைகளை உருவாக்கும். அப்படி அது எழுதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு இருக்கும் நூலகத்தில் இருக்கின்றன. அந்தப் புத்தகங்களை படிப்பதற்கு மேகக் கூட்டங்களுக்கு ஒரு பெரும் போட்டியே ஏற்படும்.  தினமும் மாலை நேரத்தில் வஞ்சி தன் வேலைகளை முடித்துவிட்டு வரும். கையோடு தான் அன்று எழுதிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரும். அந்த மாலை நேரத்திற்காக வயதான மேகங்கள் மற்றும் குழந்தை மேகங்கள் எல்லாம் காத்திருக்கும். தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் இருக்கும் கதைகளை அவர்களுக்குக் கூறும்.  அன்றும் அப்படித்தான் நிவ்யாவோடு எல்லா மேகங்களும் ஆர்வத்தோடு காத்திருந்தன.  வஞ்சி மேகம் வந்து அமர்ந்தது. அதுவரை ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குட்டி மேகங்கள் வஞ்சியை நோக்கி ஓடிவந்தன. வஞ்சியின் முகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சோகமாக இருந்தது.  "அம்மா இன்று ஏன் ரொம்ப சோகமா இருக்கீங்க?" என்று கேட்டது நிவ்யா மேகம். "இன்று நான் எழுதிய புத்தகம் என்னை மிகவும் பாதித்தது. எப்படி இதை உங்களிடம் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. உங்களைப் போலத் தானே மனிதக் குழந்தைகளும் கீழே விளையாடிக் கொண்டிருக்கும்" "அந்தப் புத்தகத்துடைய தலைப்பு என்ன?" என்று கேட்டது வயதான மேகம் தேஜா.   "போர்"  "போரா? போர் என்றால் என்ன அம்மா ?" "போர் என்றால் இரண்டு நாடுகள் சண்டையிட்டுக் கொள்வது"  " நானும் பூஸும் சண்டையிட்டு கொள்வது போலவா அம்மா" என்று கூறிவிட்டு தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த குட்டி மேகம் பூஸை விளையாட்டாக ஒரு குத்து குத்தியது நிவ்யா.  "அப்படி அல்ல. இந்தப் போரில் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்வார்கள்" "அய்யய்யோ துப்பாக்கியாலா? துப்பாக்கியால் சுட்டுக் கொண்டால் இறந்து விடுவார்களே" என்று சோகமாக கேட்டது பூஸ் "அப்பொழுது தானே எந்த நாடு வலிமையானது என்று தெரிந்து கொள்ள முடியும்" என்றது நிவ்யா.  "அப்படி அல்ல தங்கமே. போரில் வென்றாலும் தோற்றாலும் இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்"  "இரண்டு நாடுகளும் சண்டையிட்டு கொள்வதற்குக் காரணம் என்ன அம்மா ?" "ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இதில் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சாரக் காரணங்கள். சில நேரங்களில் போரின் காரணங்கள் மிகவும் சிக்கலானது." "வஞ்சி அத்தை எனக்குப் புரியவில்லை. இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூறுங்களேன்" என்று கேட்டது நிவ்யாவிற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த குட்டி மேகம் மோலி.  "இனப் பிரச்சினை மற்றும் மதப் பிரச்சினை, இயற்கை வளங்கள், நிலம் மற்றும் தண்ணீர் இதுக்காகக் கூடப் போர் நடக்கலாம். சில பேரின் சுயநலத்திற்காகக் கூட இருக்கலாம்" "கியூபாவில் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தது. அதைக் கொள்ளை அடிக்கிறதுக்கு அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்‌. பிறகு அந்த நாட்டைப் பிடித்துக் கொண்டார்களே அந்த மாதிரி சொல்றீங்களா?" என்று வயதான மேகம் ஒன்று கேட்டது. "சரியா சொன்னீங்க. அந்த மாதிரி தான். கியூபா விடுதலைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? ஆச்சரியமாக இருக்கிறதே எப்படி?" என்று கண்கள் விரியக் கேட்டது வஞ்சி. "நீங்கள் எழுதிய கியூபா விடுதலை புத்தகத்தை நமது நூலகத்தில் இருந்து எடுத்து நான் வாசித்து இருக்கிறேன். அதை வாசித்து இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் " "பரவாயில்லையே இப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே" "எனக்கு கேட்டதை விட பார்த்ததை விட வாசிப்பது மனதில் எப்போதுமே மறக்காது. அதுமட்டுமில்லாமல் மகிழ்ச்சியான ஒன்றைவிட மனதைப் பாதித்தது எனக்கு மறக்க முடிவதில்லை" என்று கூறிய அந்த அந்த வயதான மேகத்தின் முகத்தில் அத்தனை சோகங்கள் அப்பிக் கிடந்தன. "நாட்டுடைய எல்லையில் இருக்கிற பகுதி என்னுடையது உன்னுடையது என்று சண்டை வரலாம். நான் பேசும் மொழி வேறு நீ பேசும் மொழி வேறு அதனால் நீ எனக்கு எதிரி என்று கூட சண்டை வரலாம்" என்றது வஞ்சி மேகம். "இந்தப் புத்தகத்தில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறீர்கள் அம்மா?" என்று கேட்டுவிட்டு அம்மாவின் கையில் இருந்த புத்தகத்தைத் தடவியபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தது நிவ்யா.  "போர் எப்படித் தொடங்குது? போரின் மூலம் ஏற்படும் அழிவுகள் என்ன? அதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? இது பற்றித் தான்" "போரால் யாருக்கு முதலில் பாதிப்பு?" "போர்கள் நடக்கும்போது அந்தப் போரால் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான். போர் மனிதர்களைப் பயத்தில் வைத்திருக்கிறது. அதன் பிறகு நூலகம்.  ஒரு புத்தகத்தில் இதைப் பற்றிப்  நான் எழுதி இருக்கிறேன். அது பற்றி கூட உங்களுக்குக் கூறியிருக்கிறேன் ஞாபகம் இருக்கிறதா?"  "ஆமாம் ஆமாம் புத்தக தேவதை ஆலியா. ஈராக்கில் யுத்தம் நடந்த போது அங்கிருந்த நூலகர் ஆலியா நூலகத்தில் இருந்த புத்தகங்களைக் காப்பாற்றினார் சரியா அத்தை ?" என்று கேட்டது குட்டி மேகம் மோலி.  "சரியாகச் சொன்னாய் மோலி குட்டி" என்று கூறி மோலியின் தலையை வருடியது வஞ்சி மேகம். உடனே பெருமை பொங்க பார்த்தாயா என்ன அறிவை என்பது போல் நிவ்யாவைப் பார்த்து முகத்தை ஆட்டியது மோலி மேகம்.  சரி சரி நீயும் அறிவாளி தான் ஒத்துக்கொள்கிறேன் என்பது போல் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தது நிவ்யா மேகம் "நூலகத்தின் மீது ஏன் குண்டுகளைப் போடுகிறார்கள்? புத்தகங்களை ஏன் அழிக்க வேண்டும்?" என்று கேட்டது பவுஸி மேகம்.  குட்டி மேகம் பவுஸி வேறு நாட்டிலிருந்து வந்து சமீபத்தில் தான் இந்தக் கூட்டத்தில் இணைந்து. "ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் அறிவுச் சொத்தாக இருக்கும் நூலகத்தை அழிக்க வேண்டும். அதனால்தான் நூலகத்தின் மீது குண்டு போடுவார்கள்" "காலையிலிருந்து வரும் புகையை பார்த்தால், இப்போது கூட நூலகத்தின் மீது குண்டு போட்டு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என்றது ஒரு வயதான மேகம். "எப்போதாவது, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் நேரங்களில் தான் புத்தகங்கள் கிடைக்கும். இந்த நாட்டில் யாரும் புத்தகங்களை எரிப்பது இல்லை. புத்தகங்களை அறிவின் சுரங்கமாக நினைக்கிறார்கள். ஆனால் இன்று ஏராளமான புத்தகங்கள் வந்தன. அனேகமாக ஏதாவது நூலகத்தை எரித்து இருப்பார்கள் என்று நான் அப்போதே நினைத்தேன்" வஞ்சி மேகம் கூறிய தகவல்களைக் கேட்டு மற்ற மேகங்கள் மிரட்சியோடு அமர்ந்திருந்தன. "சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று கரும்புகை என்னைத் தாக்கியது. கலவரத்தின் போது ஒரு வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்த குழந்தை எரிந்து கொண்டிருக்கும் தன் வீட்டிற்குள் சென்று புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தது.    நான் படிக்கணும் நான் படிக்கணும் என்று கதறிக்கொண்டே வந்தது. புகை வழியாக அந்தக் கதறல் என் காதுகளை அடைந்தது. அந்த நேரத்தில் இருந்து இப்பொழுது வரை அந்தக் கதறல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது" என்று வருத்தம் கலந்த குரலில் கூறியது வஞ்சி மேகம்.  கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புத்தகத்தைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தது வஞ்சிமேகம். வஞ்சி மேகத்தைச் சுற்றி அமர்ந்திருந்த அனைத்து மேகங்களின் முகங்களிலும் பயத்தின் ரேகை தாறுமாறாக ஓடியது. குட்டி மேகம் பவுஸி அழ ஆரம்பித்தது.  "எதற்காக அழுகிறாய் பவுஸி?"  "இதற்கு முன் நான் இருந்த நாட்டில் போர் நடைபெற்றது. அங்கு ஏராளமானவர்கள் போரில் இறந்து போனார்கள். போர் நடைபெற்ற நேரத்திலும் போர் முடிந்த பிறகும் கூட அவர்கள் உணவிற்குச் சிரமப்பட்டார்கள். தண்ணீருக்குச் சிரமப்பட்டார்கள். குழந்தைகளையும் கூட கொன்று குவித்தார்கள். அதைப் பார்த்து பயந்து தான் நான் எங்கெங்கோ ஓடித்திரிந்து முடிவாக இங்கு வந்து சேர்ந்தேன்"  "அடடா அப்படியா ! இத்தனை நாளாக நீ இதைப் பற்றிக் கூறவே இல்லையே"  "அதை நான் மறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதை மறந்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வந்த புதிதில் நான் பேசும் மொழி உங்களுக்கு புரியாது. நீங்கள் பேசும் மொழி எனக்கு புரியாது. ஆனாலும், என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டீர்கள். இந்த நாடு அமைதியாக இருந்தது. ஆனால் இந்த ஒரு மாத காலமாக இங்கு கேட்கும் சத்தங்கள் எனக்கு திரும்பவும் பயத்தைக் கொடுத்திருக்கிறது" என்றது பவுஸி.  "ஒருவேளை பவுஸி சொல்வது போல் இங்கும் போர் வந்து விட்டதோ?" என்று கேட்டது நிவ்யா மேகம். "போராகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் அப்படி இருக்கக் கூடாது" என்றது பவுஸி "சரியாகச் சொன்னாய். மக்கள் பதட்டத்தோடு தான் இருக்கிறார்கள். இங்கு இப்போது போர் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைப்பற்றித் தான் இதில் எழுதி இருக்கிறேன்" "அம்மா என்று கூறி தன் அம்மாவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டது நிவ்யா. நிவ்யாவை வாரி அணைத்துக் கொண்டது வஞ்சி மேகம்.  அதைப் பார்த்தவுடன் பவுஸிக்கு தன் அம்மா அப்பாவின் ஞாபகம் வந்தது. கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டது பவுஸி. வஞ்சி புத்தகத்தைக் கையில் எடுத்த  கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மேகக் கூட்டத்திற்குள் ஏதோ ஒன்று பாய்ந்தது. பயத்தில் மேகங்கள் கலைந்து ஓட ஆரம்பித்தன. பாய்ந்து வந்த அது வஞ்சியின் மார்பைத் துளைத்துச் சென்றது. நிவ்யாவும் தன்னை அறியாமல் எங்கெங்கோ ஓடியது. முடிவில் ஓர் இடத்தில் நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தது. அங்கு யாருமே இல்லை. நிவ்யாவும் தான் இருந்த இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தது.  "அம்மா அம்மா நீ எங்க இருக்கே?" என்று கதறியது. அந்தக் கதறல் அனைவருக்கும் கேட்டது. அம்மா உயிரோடு இல்லை என்பதை நிவ்யாவிற்குச் சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது? சரிதா ஜோ  சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

bottom of page