இயலில் தேடலாம்!
Search this site
408 results found with an empty search
- சிரியாவின் மகள்
மைத்ரேயி குல்கர்னி தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ துருக்கி நாட்டின் ‘இஸ்தான்புல்’ விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் எல்லோரும் கைகளில் இருந்த பயணச்சீட்டுகளைப் பதற்றத்துடன் பார்த்தபடி, விமானம் நிற்கும் நுழைவாயில்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். "விமானங்கள் தாமதமாகும்..." என்ற அறிவிப்பு இடைவிடாது ஒலித்து, அங்கிருந்தவர்களின் பதற்றத்தை இன்னும் அதிகரித்தன. நான் விமான நிலையத்துக்கு வந்து சுமார் ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. மெல்ல மெல்ல எனக்கு ஒரு கசப்பான உண்மை புரியத் தொடங்கியது. இன்று எனக்கு விமானத்தில் இடம் கிடைக்கப் போவதில்லை. அடுத்த விமானம் இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகுதான் கிளம்பும். இந்தப் பயணம் தொடங்கியதிலிருந்தே ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. இந்தப் பயணத்தின் தொடக்கமே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. இஸ்தான்புல் வருவதற்கு முன்பே, கிளம்ப வேண்டிய நாளில் வீட்டில் ஒரு சிறிய விபத்து. அவசரமாக மருத்துவமனைக்குச் சென்று திரும்பியதில் பாதி நேரம் போனது. அதன் பிறகு, விமான நிலையத்திற்கு வரும் வழியில் முன்னெப்போதும் இல்லாத ஒரு போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி ‘இந்தப் பயணம் இப்போது வேண்டாம்’ என்று என்னைத் தடுப்பது போலவே எனக்குத் தோன்றியது. பயணக் களைப்பில், உடல் முழுவதும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல வலியெடுத்தது. கையில் துருக்கி நாட்டு விசா (Visa) இல்லாததால், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் வழியில்லை. இந்த இருபத்தி நான்கு மணி நேரம் என்பது வெறும் நேரமல்ல, அது ஒரு பெரும் சுமை. தங்குவதற்கு ஒரு விடுதி தேட வேண்டும் அல்லது இந்த இருக்கையிலேயே இரவைக் கழிக்க வேண்டும். நான்கு சுவர்களுக்குள் இன்னும் ஒரு முழு நாளைக் கழிக்க வேண்டும் என்று நினைத்தாலே சலிப்பும், பயமும் சூழ்ந்து கொண்டது. துரதிர்ஷ்டவசமாக அலைபேசியின் பேட்டரியும் தீர்ந்துவிட்டது. வீட்டில் உள்ள அப்பா, அம்மாவிற்கு நான் பத்திரமாக இருக்கிறேன் என்று ஒரு தகவல் சொல்லக்கூட வழியில்லை. விமான நிலைய வை-பை (Wi-Fi) வேலை செய்யவில்லை. ஒரு பெரிய கூட்டத்திற்கு நடுவே தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன். சுற்றிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே பல முகங்கள். சிலர் தரையில் படுத்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. ஒவ்வொருவருக்கும் ஒரு அவசரம். நீண்ட யோசனையில் ஆழ்ந்தேன். விமான நிலையத்தின் குளிரூட்டப்பட்டக் காற்று உடலைத் தழுவினாலும், உள்ளுக்குள் ஒருவித வெப்பம் தகித்துக் கொண்டே இருந்தது. கையில் இருந்த பையை இறக்கி வைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு கண்ணாடிச் சுவரோரம் உட்கார்ந்தேன். அப்போது எனக்குத் தாகம் தொண்டையை அடைத்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒரு சொட்டு கூட இல்லை. அருகில் இருந்த ஒரு சிறிய கஃபேவுக்குச் சென்று ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தேன். ஆனால், அங்கே என் ஏ.டி.எம் கார்டுகள் எதுவுமே வேலை செய்யவில்லை. கையில் ரொக்கப் பணமும் இல்லை. ‘பரவாயில்லை. தண்ணீர் குடிக்காமலேயே இன்னும் ஒரு நாள் இருந்துவிடலாம்’ என்று என்னையே சமாதானப்படுத்திக் கொண்டு, அந்தப் பாட்டிலை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினேன். ‘ஏன் இந்தப் பயணத்திற்கு இந்த நாளைத் தேர்ந்தெடுத்தோம்?’ என்று மனதிற்குள் என்னையே திட்டித் தீர்த்தேன். பிறகு ஓரிடத்தில் சென்று உட்கார்ந்தேன். அப்போது, என் தோள் மீது ஒரு கை பட்டதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தேன். தேவதையைப் போல ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். அவள், உடல் முழுவதையும் மறைத்த வெள்ளை நிற உடை அணிந்திருந்தாள். அவளது கண்கள் கருணையால் நிறைந்து இருந்தன. அவளது புன்னகையில் எனது களைப்பு ஒரு கணம் மறைந்து போனது. அவள், கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை என்னிடம் நீட்டி, "இதை எடுத்துக் கொள்ளுங்கள், இது உங்களுக்காகத்தான்" என்று ஆங்கிலத்தில் சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டு ஒரு மடக்குக் குடித்தேன். அந்த ஒரு மிடறு தண்ணீர் என் தொண்டையை மட்டுமல்ல, என் உள்ளத்தையும் குளிர்வித்தது. நான் அவளோடு சென்று அமர்ந்தேன். அவளுக்கு அருகில் ஒரு சிறிய குழந்தை. அந்தக் குழந்தையின் கண்கள், அதிகாலையில் மலரும் மொட்டுகளைப் போல அழகாக இருந்தன. "நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய அமைதிக்குப் பிறகு, "நான் சிரியாவிற்குப் போகிறேன்... என் பெற்றோரைப் பார்க்க" என்றாள் அவள். 'சிரியா' என்ற பெயரைப் கேட்டதுமே என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ‘யுத்தம் கொழுந்துவிட்டு எரியும் அந்த நரகத்திற்கு இப்போது ஏன் போகிறாள்?’ என்று நான் மனதுக்குள் நினைத்ததை அவளது கண்கள் கண்டுகொண்டன. "என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. அவர் அங்கே தனியாக இருக்கிறார். நான் போனால் அவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியும்" என்று அமைதியாகச் சொன்னாள். அவள் குரலில் மரணத்தைப் பற்றிய பயமில்லை. அம்மாவைப் பார்க்கத் துடிக்கும் ஒரு மகளின் பேரன்பு மட்டுமே இருந்தது. தொடர்ந்து அவள் பேசினாள். அவளது ஊருக்கு அருகில் உள்ள நகரங்களில் எல்லாம் போரின் உக்கிரம் தாள முடியாத அளவிற்கு இருப்பதாகவும், வானிலிருந்து பறந்து வரும் ட்ரோன்கள் அடுக்குமாடி கட்டடங்களைத் தூசியாக்கும் காட்சிகளைப் பார்த்ததாகவும் விவரித்தாள். அன்புக்குரியவர்களைப் போரில் பறி கொடுத்துவிட்டு, இடிபாடுகளுக்கு நடுவே மக்கள் கதறும் ஓலச் சத்தம் அங்கே அன்றாட நிகழ்வாகிவிட்டது என்றாள். "அம்மா இருக்கும் ஊர் இப்போதைக்கு அமைதிதான். ஆனால் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைப்பதே ஆபத்து. விமானம், டாக்ஸி, பேருந்து என எதிலுமே பாதுகாப்பு இல்லை. ஆனாலும் நான் போக வேண்டும்..." என்று சொல்லும்போது, அவளது கண்களில் தைரியம் தெரிந்தது. அவளது துயரத்தோடு ஒப்பிடும்போது, என் விமானம் தாமதமானதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று எனக்குத் தோன்றியது. இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து நான் மும்பை சென்றால், அங்கே எனக்காக ஒரு டாக்ஸி காத்திருக்கும். வீட்டின் கதவைத் திறந்ததும் அப்பா அணைத்துக் கொள்வார். அம்மா எனக்குப் பிடித்த அவல் உப்புமா செய்து வைத்திருப்பார். எனது உலகம் பாதுகாப்பானது. ஆனால் இந்தப் பெண்? கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, எப்போது குண்டு விழும் என்று தெரியாத ஒரு போர்க்களத்திற்குள் துணிச்சலோடு நுழையப் போகிறாள். இவ்வளவு பெரிய கவலையைச் சுமந்து கொண்டு, எனக்குத் தண்ணீர் கொடுத்து உதவிய பெருந்தன்மை என்னை நிலைகுலையச் செய்தது. சில நாட்களுக்குப் பிறகு நான் இந்தியா திரும்பினேன். செய்திகளில் சிரியாவில் போர் தீவிரமடைந்த செய்திகள் வந்தன. இடிந்து விழும் வீடுகளையும், எரியும் வீதிகளையும் தொலைக்காட்சியில் பார்த்தபோது, அந்தப் பெண்ணின் முகமும், அவளது குழந்தையின் அழகான கண்களுமே நினைவுக்கு வந்தன. அவளைப் போல எத்தனையோ மகள்கள் தன் பெற்றோருக்காகவும், எத்தனையோ தாய்கள் பிள்ளைகளுக்காகவும் தவித்துக் கொண்டிருப்பார்கள். போர் என்பது வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது அல்ல. ஆயிரக்கணக்கானோரின் அன்பையும், எதிர்பார்ப்பையும், வாழ்வையும் சிதைப்பது என்பதை மிக நெருக்கமாக உணர்ந்தேன். போரைப் பற்றிய கதைகள் எல்லாமே வேதனையானவைதான். இப்போது அவளைத் தொடர்புகொள்ள என்னிடம் எந்த வழியும் இல்லை. ஆனால், எனது தோழி, அந்தச் சிரியாவின் மகள் குடிக்கத் தந்த ஒரு மிடறு தண்ணீர், வாழ்நாள் முழுதும் மனதை ஈரம் குறையாமல் வைத்திருக்கும். கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- வளரிளம் புதிர்ப்பருவம் - 9
பிரையோனி, ஜேமியிடம் உரையாடத் தொடங்கினார். உனக்கு ஒரு தோழி இருந்தால் என்ன செய்வாய்? எங்கே கூட்டிட்டுப் போவாய்? சினிமாவுக்கு. என்ன மாதிரியான படம்? ஹாரர். A - சான்றிதழ் படமா? ஆமா. தியேட்டரில் ஈஸியா ஏமாத்திட்டு உள்ளே போயிடலாம். சினிமா முடிந்த பிறகு நீ அவளோடு நடந்து சென்று நேரம் செலவளிப்பாயா? இல்ல நேரே வீட்டுக்கா? வீட்டுக்கெல்லாம் போக மாட்டேன். "அவளுக்கு முத்தம் கொடுக்கத் தோணுமா?" என்று பிரையோனி கேட்டார். ஜேமிக்கு லேசான அதிர்ச்சி. "இந்த மாதிரிக் கேள்வியெல்லாம் நீங்க கேட்கலாமா?" என்றான். ஏன், ஸ்கூல்ல இதெல்லாம் பேசமாட்டீங்களா? ஜேமி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். உன் வயசுல இருக்கிற பையன், ஒரு பொண்ணு கிட்ட அல்லது பையன் கிட்ட எந்த அளவுக்கு உடல் ரீதியா நெருக்கமா நடந்துக்கலாம்னு நீ நினைக்குற? நான் Gay இல்லேன்னு சொல்லிட்டேன். நீ Gay என்று நான் சொல்லவே இல்லியே! இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமா? ஆமாம். உன்னால முடிஞ்சா சொல்லு. தெரியல. தொடுறது, முத்தம் கொடுப்பது.... உன்னைப் பொறுத்தவரை தொடுவதுன்ன என்ன? உடல் பகுதிகளைத் தொடுவது. ஒவ்வொரு பகுதியாக பிரையோனி கேட்கக் கேட்க, "ஒருவேளை தொடுவேன்" என்று ஜேமி தயங்கித் தயங்கிச் சொன்னான். "நிஜமாகவே நீங்க இப்படியெல்லாம் கேட்கலாமா?" என்று ஜேமி கேட்டான். உன்னை மாதிரி ஒரு 13 வயசுப் எதிர் பாலின ஈர்ப்பு உள்ள பையன், ஒரு பொண்ணோட உடலைத் தொடுவது சாதாரணமானது என்று நினைக்கிறாயா? பிரையோனியின் கேள்விகள் இன்னும் வெளிப்படையாக வரத் தொடங்கியதும் ஜேமியும் பெண் பிள்ளைகளிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்வேன் என்று பேசத் தொடங்கினான். அவர்களும் என்னைத் தொட்டார்கள் என்று சொன்னான். எங்கெல்லாம் தொட்டார்கள் என்று விவரித்தான். அவ்வப்போது தயங்கினான். இங்கு சரி, தப்பு என்று எதுவுமில்லை ஜேமி, நீ எவ்வளவு உண்மையாக இருக்கிறாய் என்பது தான் முக்கியம் என்று பிரையோனி சொன்னார். சற்றே யோசித்த ஜேமி, நான் சொன்னதெல்லாம் நடக்கவில்லை என்றான். Porn படங்களைப் பார்ப்பாயா? நான் பார்க்க மாட்டேன். மற்றவர்கள் பார்ப்பாங்க. "ஆனால் என்னுடன் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளைகளின் ஆடைக்குறைவான படங்களைப் பார்த்தேன்.அதாவது மேலாடை இல்லாமல்!" என்றான் ஜேமி. இது தெரிந்தால் அந்தப் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? எவ்வளவு வருந்துவார்கள்? வகுப்பில் எல்லாரும் தானே பார்த்தார்கள். பிரையோனி அதிர்ச்சியடைகிறார். "கெயிட்டி அதில் ஒருத்தியா?" என்று கேட்டார். ஜேமியின் முகம் இருண்டது. உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று அவன் குரல் தடுமாறியது. எப்படி இதை யூகித்தீர்கள்? என்று கேட்டான். நான் யூகிக்கவில்லை. Snapchat இல் அவதான் ஒருத்தனுக்கு அனுப்பினா அவன் எல்லாருக்கும் காட்டினான். ஆணின் காதல், காமம் போன்ற உணர்வுகள் குறித்து இலக்கியப் பதிவுகள் இருக்கின்றன. ஆனால் வளரிளம்பருவத்தில் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு தோன்றின என்பது குறித்த பதிவுகள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லாம். குழந்தைப் பருவக் காதல் என்று பெருமிதத்தோடு சொல்வதும் உண்டு. ஓர் ஆண் குழந்தை வளர வளரப் பெண்ணை ஆணின் சொத்து, உரிமை என்றெல்லாம் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்கிறது. பெண் உடல் மீதான ஈர்ப்பை வளரிளம்பருத்தில் உணரத் தொடங்குகிறது. வளரிளம் பருவ ஆண் பிள்ளைகள் தங்களுக்குள் பெண்ணைப் பற்றி என்ன பேசுவார்கள்? பெண் பிள்ளைகள் ஆணைப்பற்றி என்ன பேசிக்கொள்வார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக மேலை நாடுகளில் வளரிளம்பருவ இலக்கியங்கள் இருக்கின்றன. இங்கு நமது வாழ்விலிருந்து யோசிக்கலாம். பிறகு இதுபற்றி விரிவாக உரையாடலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர் தங்கள் நாள் குறிப்பு ஏடுகளில் காதலைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதனால் வகுப்பில் காதலைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்கினேன். 'காதல்' என்று கரும்பலகையில் எழுதிவிட்டு மாணவர்கள் முன் சாக்பீசை நீட்டினேன். பலத்த போட்டிக்கிடையே அதைக் கையில் வாங்கியவர், நெறியாளர் ஆனார். அன்பு, புனிதமானது, நட்பு, வாழ்க்கை, மனதைப் புரிந்துகொள்ளுதல், சுகம், தெரிந்து கொள்வது, அழிவதில்லை, உண்மை, சந்தோஷம், மனதிற்குப் பிடித்தவரை நேசிப்பது, வரலாறு, திருமணம், பழகுவது, விரும்புவது, மனதில் பாரம், காதல் ஒரு நோய், உயிருக்கும் மேல், காதல் ஒரு காமம், ஏமாற்றி சுற்றுவது, காதல் ஒரு போதை, பணச்செலவு, வாழ்வில் முக்கியமானது, விரும்பும் பெண்ணை மணம் முடிப்பது, இன்பம், அறியாதவர்களை இணைப்பது, காதல் பொன்னாது, வாழ்க்கையை மாற்றும், துன்பம், ஏமாற்றுவது, மனதளவில் நேசிப்பது, காதல் ஒரு பைத்தியம், எந்தப் பருவத்திலும் வருவது காதல், காதல் ஒரு நல்ல காலம், காதல் ஒரு துணிவு, துள்ளாத மனமும் துள்ளும், காதல் அழகானது. அதுவரை திறக்காத வாய்களும் திறந்தன. மடை திறந்த வெள்ளமாகப் பாய்ந்த எண்ணங்களால் கரும்பலகை நிரம்பி வழிந்தது. காதலைப் பற்றி சமூகம் பேசும் அனைத்தையும் ஒன்றாகக் கேட்க முடிந்தது. பாட வேளையும் நிறைவடைந்தது. அனைவரும் சொன்னவற்றை யோசிக்கும் போது ஆச்சரியமும் வருத்தமும் தோன்றின. வளரிளம் பருவத்தினரை காதல் என்ற வார்த்தை பாடாய்ப்படுத்துகிறது. இவர்கள் யாரைக் காதலிக்கின்றனர்? கற்பிதங்களும் வயதின் ஆர்வமும் ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ? போன்ற பல்வேறு எண்ணங்கள் மனதுள் எழத்தொடங்கின. ஒரு வினாத்தாளை உருவாக்கி அனைவரிடமும் கொடுத்து எழுதச் சொல்லலாம் என்று தோன்றியது. மனதில் தோன்றிய கேள்விகளை எல்லாம் எழுதினேன். அவற்றிலிருந்து சில கேள்விகளை மட்டும் தட்டச்சு செய்து வினாத்தாளை உருவாக்கினேன். தொடர்ந்து பேசுவோம்!
- அரவணைக்கப்பட வேண்டிய கரம்
மனிதர்களிடம் ஆழப் பதிந்துவிடும் பண்பாட்டுக்கூறுகள் அவர்களின் சிந்திக்கும் எல்லைகளை பெருமளவு மட்டுப்படுத்திவிடுகின்றன. வகுப்பறைகளில்கூட பல அறிவியல்பூர்வமான தர்க்கங்களை எழுப்பி பல விசயங்களை உரையாடினாலும்கூட குழந்தைகளால் வீடுகளிலும் ஊரிலும் பின்பற்றப்படும் சமூக நடவடிக்கைகளுக்கு ஏற்பவே செயல்பட முடிகிறது. அறிவியல் முறைகளற்ற பலவற்றின் மீதும் கேள்வியெழுப்பும் குழந்தைகளின் உணர்வுகளுக்கு அதட்டலும் அமைதியுமே பதிலாக அமையும்போது அவர்கள் கேள்வி கேட்பதன் ஆர்வத்தை குறைத்துக் கொள்கின்றனர். அவ்விடத்தை நிரப்பும் ஒழுக்கம் சார்ந்த அளவீடுகளும் பக்தி சார்ந்த அச்சமும் குழந்தைகளையும் தொற்றிக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவை கடத்தப்படுகின்றன. அதுவே வாழ்வியலாகவும் கட்மைக்கப்படுகிறது. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதி சால்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “இடம்” என்கிற சிறார் நாவல் அப்படியொரு பகுதியை தொட்டுத்தான் பேசுகிறது. இடதுகை பழக்கம் உள்ள சிறுவனின் மீது நடத்தப்படும் உளவியல் தாக்கத்தை இந்நாவல் பேசுகிறது. “இடதுகை” என்பது நமது பண்பாட்டு அடிப்படையில் குறைந்த மதிப்பினையே பெற்றிருக்கிறது. அத்தகைய இடதுகை பழக்கம் கொண்டிருக்கும் சிறுவனின் உத்வேகமான செயல்பாடுகள் கல்விக்கூடத்திலேயே புறக்கணிக்கப்படும் சூழலையும் பிறகு அதிலிருந்து மீளும் மனங்களையும் இந்நாவல் அழகாக காட்சிப்படுத்துகிறது. நாவலின் முதல் அத்தியாயத்திலேயே விறுவிறுப்பை ஏற்றிவிடும் ஆசிரியர் பின்னகர்ந்து ஒவ்வொரு திரைச்சீலையாக விலக்கி கதையின் ஒருகட்டத்தில் மைய கதாபாத்திரமான ஆதவனின் சிக்கலை நமக்கு காட்டிவிடுகிறார். இதற்குப் பிறகு ஆதவனோடு சேர்ந்து நாமும் கதையோட்டத்தில் பயணப்பட்டு இறுதியாக நிறைவெய்த வேண்டியிருக்கிறது. நெடுந்தொலைவு ஓட்டத்திற்குப் பிறகு பந்தயக்காரர்கள் ஆசுவாசத்தோடு அடையும் நிதானத்தை கடைசி சில அத்தியாயங்களில் நம்மையும் உணர செய்கிறார் கதையாசிரியர். வரலாற்றில் உயர்வாக வைத்து மதிக்கப்படும் நாயகர்களை நாம் இயல்பாகவே வலதுகை பழக்கம் உள்ளவர்களாகவே நாம் உருவகித்துக் கொள்கிற இயல்பு நம்மிடம் எப்படி வந்து சேர்ந்திருக்கும். அது, இடதுகைப் பழக்கம் குறித்த நமது புரிதலின்மையின் காரணமாகவே அமைந்திருக்கிறது என்பதை நாவலின் போக்கில் நான் உணர்ந்து கொண்டேன். ஆதவனின் இடதுகை பழக்கம் பெற்றோர்களாலும் நண்பர்களாலும் இன்னமும் சொல்வதென்றால் வகுப்பறையிலும்கூட இயல்பாக ஏற்கப்பட்டாலும் பொதுவிடத்தில் அப்பழக்கம் அவ்வளவு மரியாதைக்குரியது அல்ல என்பதன் குறியீடாகவே அறிவழகன் ஆசிரியரின் தயக்கத்தையும் தலைமையாசிரியரின் நிர்பந்தத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்விருவருக்குமான பதிலாக அமையும் மாவட்ட ஆட்சியரின் செயல் வாசகர்கள் யாராலும் யூகிக்க முடியாததாக அமைந்தது இந்நாவலின் செய்நேர்த்திக்கான சிறந்த பகுதி. கதையோட்டத்தின் ஊடாகவே நா. வானமாமலை, மா. பொ. சி, நாடகாசிரியர் ஞாநி ஆகியோரை அறிமுகப்படுத்திய பாங்கும் வட்டம் என்பதற்கான குறிப்பும் பாராட்டத்தகுந்தது. இவைகளை விடவும் குழந்தைகளின் நாடக பயிற்சியின் போது வந்தமர்ந்த காக்கையின் மீது தனிப்பிரியம் உண்டாகிவிட்டது. குழந்தைகளின் இயல்பான உரையாடலின் போது கலையரங்கின் உள்ளே வந்தமரும் காக்கை, ஆதவன், கட்டபொம்மனின் வசனத்தை பேசிடும் தருணத்தில் விருட்டென பறந்து சென்றிடுகிறது. ஆகா! இதிலேயே ஆதவனின் நாடக குரல் ஒத்திகை எத்தகையது என்பது காட்சிபூர்வமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த நாவலை வாசித்ததும் இணையதளங்களின் வழியாக பல புதிய செய்திகளை அறிந்துகொண்டேன். ஆசிரியர் குறிப்பிட்டதைப் போன்று அறிவியல் கண்டுபிடிப்பு முதற்கொண்டு பண்பாட்டு மற்றும் மத சிந்தனைகள் வரை இடதுகை பழக்கம் குறித்து மாற்று சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது என்பதை உணர்ந்து கொண்டேன். புத்தக அளவும், அச்சாக்கமும், வடிவமும், படங்களுக்கென தனிப்பக்கங்களை ஒதுக்கியதும் இந்நூலை குழந்தைகளுக்கு நெருக்கமானதாக மாற்றத்தக்க முயற்சி. சால்ட் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள். விஷ்ணுபுரம் சரவணன் அவர்களிடமிருந்து மற்றுமொரு சமூக பார்வையுள்ள நூல் இது. குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் வாசித்து நூலின் செய்தியை பரவலாக்க வேண்டும். க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.
- ரெங்கசாமி வாத்தியாரின் விசில்
விசில் சப்தம் கேட்டாலே அது ரெங்கசாமி வாத்தியாராகத்தான் இருக்கும். ஆசிரியர் ஓய்வறையிலிருந்து வெளியேறும்போதே ஒரு விசிலடித்துவிட்டுத்தான் பிரம்போடு கிளம்புவார். வராண்டா கார்டனில் லாந்திக்கொண்டிருக்கும் மாணவர்கள் அடுத்த நொடியே பொந்துக்குள் பதுங்கும் எலிகளைப் போல வகுப்பறைக்குள் ஒடுங்கிப்போவார்கள். அந்த நேர அமைதியில் காற்றும் அமர்ந்து வீசும். மரம் செடிகளில் இலையசைவுகளும்கூட அடங்கி மெதுவாக தலையசைக்கும். வராண்டாவில் அவர் நடந்து வரும் காலடி ஓசை அருகில் கேட்டதும் லேசாக தலையை திருப்பி ஓரக்கண்ணால் பார்க்கும் போது அவரும் சன்னல் வழியாக பார்ப்பார். அந்த முகத்தில் கருவிழிகள் மட்டும் அசைந்து அருகில் வருவது போல் ஒருவித மிரட்சியாய் இருக்கும். அவரிடம் கண்டிப்பு இருந்தாலும் ஒருநாளும் யாரையும் அவர் அடித்து ஒருவரும் பார்த்ததில்லை. அவரது குரலும் மைனா கூப்பிடுவது போல க்கிர்.. கிர்ரி.. என மிகச்சிக்கனமான கீச்சுக்குரலாகத்தான் வெளிப்படும். மொத்த வகுப்பும் ‘கப்..சிப்’பாக இருக்கும் போது இந்த பன்னீர் மட்டும் எழுந்து, “ஏய்.. இவரை இப்பொழுது அடிக்கட்டுமா” என்று கேட்டு பூனையைப் போல அவருக்கு பின்னாலேயே போவான். உள்ளங்கையை பொத்தினாற்போல வைத்துக்கொண்டு அவர் முதுகில் ஒரு போடு போடுவான். அவர் அதிர்ந்து போய் பின்னால் திரும்பி ஏன் என்று கேட்பதற்குள் முந்திக்கொண்டு, “சார் முதுகுல பூச்சி ஓடுனது சார்” என்பான். “சரி..சரி. நீ போய் உட்கார்ந்து படி” என்று பிரம்பை ஆட்டிக்கொண்டு மறுபடியும் வராண்டாவில் நடக்க ஆரம்பித்துவிடுவார். நாளை முதல் பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குவதை நினைக்கும் போதே பன்னீருக்கும், அமுதனுக்கும் உண்டான சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவர்கள் ஏழாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் மாலை நேர வகுப்பில் கணித ஆசிரியர் ரெங்கசாமியின் அறிவிப்பை கேட்டதும் வகுப்பே இறக்கை தட்டி பறப்பது போல் உற்சாகமானது. “எனது அன்பு மாணவர்களே.. இங்கிருந்து தென்திசையில் பார்த்தால் நீலவண்ணமாய் மடிந்துமடிந்து மலைமுகடுகள் தெரிகிறது பார்த்தீர்களா…” “ஆமாம் சார்… குருமலை” “அங்கேதான் ஒரு இரண்டு நாட்கள் நாம் எல்லோரும் சுற்றுலா செல்கிறோம். உங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று வந்து சொல்லுங்கள் நாளை காலையில் புறப்படலாம்” ‘வீட்டுப்பாடம் படிக்க வேண்டாம். எழுதவேண்டாம். அய்..ய்யா ஒரே ஜாலிதான்’ ‘டின்..டின்..டின்.. டிங்..” பள்ளிக்கூட மணி அடிக்கும் சப்தம் கேட்டது. புஸ்தகப்பையை தோளில் தொங்கவிட்டவாறு சிட்டாய் கலைந்து வீட்டைப் பார்க்க ஓடினார்கள். உற்சாகத்துள்ளலில் மனஇறுக்கம் தளர்ந்து ஓட்டம் பிடித்தது. அது அடுத்த தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. பொழுது விடிந்தது. இதமான வெயிலோடு மார்கழிமாத சூரியன் பிரகாசமாய் எழும்பிக்கொண்டிருந்தது. கோவில்பத்து பேருந்து நிலையம். “குருமலை” என்ற பெயர்ப்பலகையுடன் கிளிப்பச்சை நிறத்தில் ஒரு பேருந்து புறப்படுவதற்கு தயாராக இருந்தது. “ஒன்னு, ரெண்டு, மூணு… பதினாறு” ரெங்கசாமி வாத்தியார் வந்திருந்தவர்களை ஒவ்வொருவராக தலையைத் தொட்டு எண்ணினார். “ம்.. மொத்தம் பதினாறு பேரு. ஏறி உட்காருங்க” சொல்லி முடிப்பதற்குள் ‘தட..தட’வென படிக்கட்டுகள் சப்தமிட ஏறி இடம்பிடித்துக்கொண்டார்கள். பன்னீரும் நந்தனும் ஒரு இருக்கையில் அருகருகே இருந்துகொண்டனர். அவர்கள் சேக்காளிகள். எப்போது பார்த்தாலும் ஒருவர் தோள் மீது இன்னொருவர் கைபோட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பார்கள். பின்வாசலோரம் கடைசி இருக்கையில் எல்லோரையும் கண்பார்வையில் வைத்துக்கொள்ள வசதியாக வாத்தியார் அமர்ந்து கொண்டார். “நந்தா.. நம்மளை மாப்பிள்ளை பெஞ்சுன்னு வகுப்புல சொல்வாருல்ல. இப்ப பாரு.. அவரு கடைசி சீட்ல உட்கார்ந்திருக்காரு” பன்னீர் காதோடு காது வைத்து பேசினான். “க்..கெய்.ய்..” யென பேச்ச சப்தம் பெரிதாக கேட்டுக்கொண்டிருந்தது. “ஏலேய்… சத்தமில்லாம அமைதியாக இருக்கணும். சொல்லீட்டேன்.. ஆமா.. பன்னீரு.. உன் சத்தம்தான் பெருசா கேட்கு” ஒரு அதட்டு போட்டார். “ட்.ர்ரிர்… ட்.டி.ர்ர்..” இரட்டை விசில் சத்தத்துடன் பேருந்து புறப்பட்டது. “ப்.பிப்.. பீப்” “குருமலை 13 கி.மீ.” என்று சாலையோரம் கொடிகள் படர்ந்த மரத்தின் ஓரமாக நின்ற அறிவிப்புப்பலகை கைநீட்டிச் சொன்னது. கிராமங்களை தொட்டுப் போகும் சாலையில் ஒரு அரைமணி நேரப்பயணத்திற்குப் பின் குருமலை கிராமத்தில் ஆட்களை இறக்கிவிட்டு பேருந்து திரும்பியது. அங்கிருந்து பார்த்தால் கிழக்காக மடிந்து நீளும் மலைச்சரிவில் டிராக்டர் போகும் செம்மண் பாதையில் இரண்டு மைல்கற்கள் தூரம் காலாற நடந்தார்கள். வெருவெட்டை முட்செடிகளும் கிளுவையும் கள்ளிச்செடிகளும் பாதையின் இருபுறமும் அடர்ந்து நின்றன. ‘கி.ய்ய்’யென்று காட்டுவண்டுகளின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு புள்ளிமான் தன் குட்டிகளோடு பாதையின் ஊடாக மறுபக்கம் தாவிப்போனது. துள்ளியோடிய மான்களை பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார்கள். மேகங்கள் கூடி பூந்தூறலாய் மழைத்துளிகள் விழுந்துகொண்டிருந்தன. இப்போது மரங்கள் அடர்ந்த சோலை கண்பார்வைக்கு தென்பட்டது. இன்றைய நாள் பொழுது இங்குதான் ஆனந்தமாக கடந்து போகும். அந்த இடத்தை “தாழையூத்து” என்று சுற்றுவட்டார மக்கள் சொல்வதை கேட்டு தெரிந்துகொண்டார்கள். தாழையூத்தில் நுழையும்போது ஐநூறு வருடங்கள் பழமையான பரந்து விரிந்து விழுதுகள் விட்டு நின்ற ஆலமரம் இலைகளை அசைத்து ‘வா..வா..’ என புன்னகைத்தது. நந்தன் தன் தாத்தாவுடன் இங்கு பலதடவை வந்து விளையாடியிருக்கிறான். ஒரு ஆள் கையை உயர்த்தி தொட்டுவிடும் உயரத்தில் இரண்டு கிளைகள் அடிமரத்தின் இருபுறமும் தணிவாக நீண்டிருந்தன. மரத்தின் ஒருபக்கக்கிளை நீண்டு கைகாட்டிய இடத்தில் ஊற்றுநீர் பெருகிய ஒரு குளம் இருந்தது. நீர்ப்பரப்பில் தாமரை இலைகள் படர்ந்து அதன் பூக்கள் மலர்ந்து விரிந்தும் மொட்டுகளாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகாய் இருந்தன. நந்தன் பன்னீரின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஓடி தான் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்த மரக்கிளையை பெருமையாகக் காண்பித்தான். “அய்..ய்.யா ஜாலி.. ஜாலி” என்று ஆறேழு பேர் அந்த தாழ்ந்த கிளையில் தொற்றி ஏறி உட்கார்ந்துகொள்ள கீழே நின்றவர்கள் ஊஞ்சலாட்டினார்கள். கிளையின் தளிர் இலைகள் சலசலவென அசைந்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. “வந்தவுடனேயே மரத்துல ஏறிக்கிட்டீக. ஊத்துல போயி தண்ணீரை குடிப்போம். இறங்கி வாங்க” சற்று பின்னாலேயே வந்த வாத்தியார் விசிலை எடுத்து ஊதி கையசைத்தார். ரெங்கசாமி வாத்தியாருக்கு விசில் இணைபிரியாத நண்பன். அதை எப்போதும் கால்சட்டை பைக்குள் போட்டு வைத்திருப்பார். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதும் ஒரு சிறு சத்தம் கேட்டாலும் விசிலை எடுத்து ஊதிக்கொள்வார். காட்டிற்குள் அந்த விசில் அவசியமாக இருந்தது. ஆனாலும் அது இப்போது கறார் கண்டிப்புகள் இல்லாமல், ஒரு நண்பனைப்போல அரவணைப்பாக ஊதிக்கொண்டிருந்தது. கூட்டம் சுனையை பார்க்க திரும்பியது. மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்திருந்த ஒரு இடத்தில் வாய்க்கால் நிரம்பி ஓடும் அளவிற்கு ஊற்று நீர் பொங்கி வந்துகொண்டிருந்தது. நடந்துவந்த களைப்பு தீர தெளிந்த நீரை அள்ளிக்குடித்தால் இதுவரை பார்த்திராத அப்படியொரு சுவை தேங்காய்ப் பாலாய் இனித்தது. புதர்ச்செடிகளுக்கு அருகில் மயில்கள் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்த அற்புதமான காட்சியை, “அங்கே பாருங்க” என்று ஒருவன் கைநீட்டிக் காண்பித்தான். ரெங்கசாமி வாத்தியார், “எனக்கு பின்னாலேயே வாங்க. இந்த வனத்தில் அரிய வகை மூலிகைச்செடிகளை காண்பிக்கிறேன்” என்று தோப்பு முழுவதும் சுற்றிக்கொண்டு வந்தார். முகர்ந்தால் மணக்கும் சிறுசின்னி, கோபுரம்தாங்கி, சிவனார்வேம்பு, சர்பத் தயாரிப்பில் சேர்க்கப்படுகிற நன்னாரிக்கொடி, உத்தாமணி, ரசவாத மூலிகையான விராலிச்செடி, நறுமணம் மிக்க லெமன்கிராஸ் புல், கருடன் கிழங்குக்கொடி என ஒவ்வொன்றாக இனம் காண்பித்து அதன் பயன்பாடுகளை விளக்கியதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு வந்தனர். இப்போது சூரியன் தலைக்கு மேலே உச்சிவானத்திற்கு வந்திருந்தது. சமையல் ஆக்கத்தெரிந்த கண்ணுச்சாமியும் மாரியும் காய்ந்த மரக்குச்சிகளை சேகரித்து, சுனைநீரை முகர்ந்து வந்து ஆலமரத்தடியில் மூன்று கற்களை எடுத்து முக்கோணமாய் அடுப்புக்கூட்டி மதிய உணவு தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக எடுபிடி வேலைகளை செய்வதற்கு கடைசி பெஞ்ச் பையன்கள் இரண்டு பேர் அடுப்பில் சுள்ளி விறகை தள்ளி நெருப்புமூட்டுவதும் வெங்காயம் உரிப்பதுமாக இருந்தனர். பழங்கால கமலைக்கிணறு, நீர் பாயும் வாய்க்கால்கள், மன்னர்கள் காலத்திய இளைப்பாறும் மாளிகை, மாமரநிழலில் பயன்பாடற்றுக் கிடந்த மாவரைக்கும் ஆட்டுரல், மசால் அரைக்கும் அம்மிக்கல் குழவி, மன்னரின் சேவகர்கள் தங்கும் அறைகளின் சுண்ணாம்புக்காரை சுவர்கள் என ஒவ்வொன்றாக காண்பித்துக்கொண்டே வந்தார் ரெங்கசாமி வாத்தியார். இப்போது தாழையூத்தின் கீழ்புறமாய் மலையடிவாரத்தை ஒட்டி இருந்த கன்னிமார் குளத்தின் கரையில் தன் குழுவோடு போய் நிழலோட்டமான இடத்தில் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தார் வாத்தியார். குளத்தில் அல்லிக்கொடிகள் படர்ந்து அதில் வெண்ணிறப்பூக்கள் மலர்ந்திருந்தன. இந்தக் குளத்திற்கு தண்ணீர் வரத்து எப்படி வருகிறது என்று ஒருவன் கேட்க, மறுபக்கத்திலிருந்த நீர்வரத்து ஓடையை காண்பித்தார் வாத்தியார். மலையிலிருந்து வழிந்தோடிய மழைநீரும் பாறை இடுக்குகளிலிருந்து கசியும் நீரும் குளத்தில் வந்து நிரம்பியிருந்தது. குளத்தில் தாவிக்குதித்தும் நீச்சலடித்தும் ஆனந்தமாய் குளியல் போட்டவர்களுடன் தண்ணீரை தட்டியும் இறைத்து வீசியும் ஒரு சிறுபிள்ளையைப் போல விளையாடிக்கொண்டிருந்தார் ரெங்கசாமி வாத்தியார். பாக்கெட்டிலிருந்த விசிலை கரையோர மரத்தின் கிளையில் தொங்கவிட்டு பத்திரப்படுத்திவிட்டுத்தான் குளத்தில் இறங்கியிருந்தார். அவருக்கு குருமலைக்காட்டின் ஒவ்வொரு அங்குலப்பகுதியும் அத்துப்படியான விசயம். தனக்கு விபரம் தெரிந்த நாட்களில் இருந்தே அடிக்கொரு தடவை இங்கு வந்து போனால்தான் அவருக்கு இதயமே துடிக்கும். மனிதர்களிடம்கூட ஏற்பட்டிராத ஈர்ப்பை இந்த மலை அவரிடம் கொண்டிருந்தது. அந்த இணைப்பின் அந்நியோன்யத்தில் ஏமாற்றங்களையும் நிம்மதியற்ற பொழுதுகளையும் தான் கண்ட அநீதிகளையும் தொலைத்துவிட்டிருந்தார். அந்த மலை தன்னை நாடி வந்தவர்களை தன் மடியில் கிடத்தி தாலாட்டும் ஒரு தாயாகவே இருந்தது. கரையில் நின்ற அத்திமரத்தின் நிழல், நீர்ப்பரப்பில் படர்ந்து அலையோட்டமாய் தவழ்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. “க்.கெள.வ்...க்.கவ்..” புதர்ச்செடிகளிலிருந்து புள்ளிமான்கள் கத்தும் சப்தம் கேட்டது. மான்கள் கூட்டமாய் மறுகரையில் நின்றுகொண்டிருந்தன. வழக்கமாக தண்ணீர் குடிக்க வரும் இடத்தில் ஆர்ப்பரிப்பு சப்தம் கேட்டு அவை மருட்சியோடு பார்த்தன. “ம்.. கரையேறி வந்துருங்க. மதிய உணவுக்குப் போகலாம்” குரலை கேட்டு குளம் அமைதியானது. கரையேறிய வாத்தியார் முதல் வேலையாக விசிலை எடுத்து ஒரு ஊதல் ஊதினார். அமைதி திரும்பிய குளத்தின் நீர்ப்பரப்பில் இப்போது மான்கள் இறங்கின. அலுங்காமல் அலம்பாமல் தண்ணீரை குடித்த மான்களுக்குத்தான் அந்த குளத்தோடு எவ்வளவு பரிச்சயம். அது மான்களுக்கு தாய்மடி. “புதிய விருந்தாளிகளாய் நாங்கள் வசிக்கும் காட்டிற்கு வந்திருக்கிறீர்களே.. இங்கே என்னவெல்லாம் பார்த்தீர்கள்” மான்கள் நெருங்கி வந்து கேட்டன. “உங்களைத்தான் பார்க்க வந்தோம்” ரெங்கசாமி வாத்தியாரின் குரலை கேட்டதும் அந்த மான்கள் தலையசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. அவரை பலநாட்களாகப் பார்த்துப்பார்த்து அறிமுகமான மான்கள்தான் அவை. “இந்தக் காடு முழுவதும் சுற்றினாலும், தண்ணீர் தாகமென்றால் வெகுதூரம் நடந்து தாழையூத்திற்குத்தான் வரவேண்டியதிருக்கிறது. இங்கு நாய்கள் நடமாட்டம் இருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு வயதான மானை நாய்கள் அடித்துத் தின்றுவிட்டன” கொம்புகளைச் சிலுப்பியபடி ஒரு ஆண்மான் சொல்லியது. “நாய்களை சுட்டுப்போடணும். எங்க வீட்ல வேட்டைத்துப்பாக்கி இருக்கு சார்” ஒருவன் ஆவேசமாய் எம்பிக்குதித்தான். “ஏலேய்.. சும்மா இருலே. நீ பாட்ல எதையாவது சுட்டுப்போடாத” வாத்தியார் அமைதிப்படுத்தினார். அவர் எப்போதும் இப்படித்தான். யாராவது உணர்ச்சி வயப்பட்டு பரபரப்பானால் அமைதியாகப் பேசி அவர்களை சாந்தப்படுத்துவார். கண்டிப்புக்காக வெளித்தோற்றத்தில் விறைத்துக் கொள்வதுபோல் தோற்றமளித்தாலும் அது ஒரு நடிப்புக்குத்தான். மனதிற்குள் சதாநேரமும் சாந்தமாகவே இருப்பார். அப்படியொரு குணவாகு அவருக்கு வாய்த்திருந்தது. “தாழையூத்தில் இருந்து சுற்றுப்பட்டு ஊர்களுக்கு போர்வெல் தண்ணீர் போகுது சார். எங்கள் ஊர் தலைவர்கிட்ட சொல்லி, குடிநீர் குழாயில் நல்லி பொருத்தி மான்களுக்கு தண்ணீர்த்தொட்டி திறக்கச்சொல்வேன் சார்” செந்தில் ஆவலாய் சொன்னான். செந்திலின் ஊர் அருகில்தான் இருக்கிறது. “தெலுங்கானா மாநிலத்தில் புள்ளிமான்தான் மாநிலவிலங்காக இருக்கிறது. இந்த மான்களைப் பார்க்கும்போதே நமக்குள் ஒரு சாந்தமான உணர்வு பரவுகிறது. அதனால் நாமும் இதற்கு தண்ணீரை கொடுத்து பராமரிப்பு செய்யவேண்டும். எதையாவது கொடுக்கும்போதுதான் நமக்கும் ஒரு சந்தோசம் வருகிறது” வாத்தியார் சொன்னதை கேட்டு புள்ளிமான்கள் துள்ளிக்குதித்து காட்டிற்குள் ஓடியது. பொய்யாமொழி அய்யனார் கோவிலில் உச்சிகால பூசை ஆகும் மணியோசை கேட்டது. அது ஒரு பழமையான கோவில். கடும் வெயில் காலத்திலும் குளிர்ச்சி தரும் கல்மண்டபங்கள் கோவிலில் இருந்தன. கருவறையில் மூலவர் அய்யனாருடன் பூரணம், பொற்கலையின் தத்ரூபமான காட்சியில் சாம்பிராணிப்புகை மிதந்துகொண்டிருந்தது. கோவிலின் முகப்பில் குதிரை மீதேறி வேட்டைக்குப் போவது போன்ற அய்யனாரின் காரைச்சிற்பம் காண்பவர்களுக்கு ஒரு கம்பீரத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. அருகிலிருந்த ஆலமரத்தடியில் அப்போதுதான் கண்ணுச்சாமி ஆக்கிவைத்திருந்த ‘கூட்டாஞ்சோறு’ கமகமவென மணம் பரப்பிக்கொண்டிருந்தது. ஒரு வட்டமடித்து சுள்ளென்ற பசியோடு அமர்ந்தவர்களுக்கு முன்பாக தாமரை இலையில் அரிசி, பருப்பு, கத்தரி, தக்காளி, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், நாட்டு வெங்காயம், மிளகாய் சேர்த்து ஆக்கிய கூட்டாஞ்சோறும் தக்காளி பச்சடியும் பரிமாறியதை ருஷி பார்க்கும் மகிழ்வான நேரம் இப்போது கைகூடி வந்திருந்தது. இலையிலிருந்து சூடான புகை வெளியேறி மிதந்து கொண்டிருந்தது. காட்டுச்சோறு ‘இன்னும் கொடு.. கொடு’ என்று கேட்டு வாங்கிச்சாப்பிட்டது. “சமையல் பிரமாதம். சோறாக்கிய இரண்டு பேரையும் வாழ்த்தணும்” என்று அவர்களுக்கு கத்திரிக்காய் மாலை அணிவித்து கொண்டாடினார்கள். ஆலமரக்காற்றும் வெயிலோடு உறவாடிய இலைகளின் இயல்புகலந்த நிழலோட்டமும் அவர்களை ஸ்பரிசமாய் தொட்டு மெளனமொழியில் பேசியது. மரத்தின் நிழல் மெல்ல மெல்ல கிழக்கில் சரியத்தொடங்கியது. காய்ந்த இலைதழைகள் சிதறிக்கிடந்த தரையில் பேசிக்கொண்டும் உடலைச் சாய்த்து படுத்துக்கொண்டும் இருந்தவர்கள் ரெங்கசாமி வாத்தியாரின் ஒற்றை விசில் சப்தம் கேட்டு கொத்தாக எழுந்தனர். பொழுது இருட்டுவதற்குள் மலை உச்சியில் இருக்கிற ‘தவசி குகை’க்கு போய் வருவோம் என்று வாத்தியார் முன்னால் நடந்தார். நீர்ச்சுனையிலிருந்து இடது புறமாய் பிரிந்துபோகும் தடத்தில் நடந்து மயில் வனத்தின் ஊடாக போய் மலையேறினார்கள். வழியெங்கும் எலுமிச்சை புற்கள் அசைந்து வாசனை பரப்பின. சில்லென்ற காற்று பாறைகளில் மோதி சுழன்று திரும்பியது. குகையை எட்டிப்போனபோது நாலாபுறமும் இருந்த ஊர்கள் தம் இருப்பை காட்டி நட்பு கொண்டாடின. இது இந்த ஊர்.. அது அந்த ஊர்.. என்று தனக்கு தெரிந்த ஊர்ப்பெயர்களை சொல்லிக்கொண்டே வந்தார் ரெங்கசாமி. மூச்சு வாங்க நடந்து குகை வாயிலுக்கு முன்னால் போய் நின்றபோது அங்கே ஒருவிதமான அமானுஷ்யமான அமைதி நிலவுவதை உணரமுடிந்தது. குகையின் மேல் ஒரு கல்லாலமரம் வளர்ந்து முன்னால் எட்டிப்பார்த்தது. பக்கவாட்டில் கற்றாழை இனமான ‘மருள்’ செடிகள் முளைத்திருந்தன. குகைக்கு முன்னால் ஒரு வெட்டையான நிலப்பகுதி அமர்வதற்கு வசதியாக இருந்தது. அதை சுற்றி பொடிவட்டு இலைகளுடன் ‘மை மரங்கள்’ அசைந்து கொண்டிருந்தன. குகையின் வாயிலை ஒரு கல்பாறை அடைத்துக்கொண்டிருந்தது. குகைவாசலின் முன்புறமிருந்த பள்ளத்தில் இறங்கிய பன்னீர் தான் கொண்டுவந்திருந்த திராட்சை கொத்தை ஒரு கல்மீது வைத்துவிட்டு வந்தான். குகைக்கு உள்ளிருந்து கீரிப்பிள்ளைகள் மெல்ல எட்டிப்பார்த்தன. அவற்றின் வாய்ப்பகுதி வித்தியாசமாக கோவைப்பழம் போல சிவப்பு நிறத்திலிருந்தது. அவை திராட்சையை தின்றுவிட்டு ‘இன்னும் கிடைக்குமா’ என்று ஏறிட்டுப் பார்த்தன. “கொஞ்ச நேரம் மெளனமாக இந்த இடத்தில் அமைதியாக உட்காருவோம். எதுவும் பேசாமல் சும்மா இருந்தால்தான் இந்த இடத்தின் சக்தியை கிரகிக்கமுடியும்” சொல்லி முடிக்கும்முன் இதுவரை கேடடுக்கொண்டிருந்த பேச்சு சத்தம் ஒடுங்கியது. நிசப்தமான பொழுதில் காடு அதன் பாஷையில் பேசுவது கேட்டது. இதுவரை கண்டிராத மனதை கவரும் நேரமாக அது இருந்தது. “காட்டுப்பன்றிகள் வெளியே வரும் நேரம். இப்போது இறங்கினால் சரியாக வரும்” என்று வாத்தியார் சைகை செய்து முன்னால் போனார். அடிவானத்திலிருந்த கல்மரத்தை அடைந்தபோது சூரியன் தொடுவானத்திற்கு மேல் இறங்கிக்கொண்டிருந்தது. ஒரு சிறுபாறைக் கல்தான் மரத்தின் உருவத்தில் அங்கே இருந்தது. “வாருங்கள்.. பேச்சியம்மன் குகையை பார்த்துவிட்டுப் போகலாம்” என்று கல்மரத்திலிருந்து பக்கவாட்டுச்சரிவில் கொஞ்சதூரம் கூட்டிக்கொண்டு போனார். ஒரு இருபது பேர் கூடி கால்களை நீட்டி தளர்வாக உட்கார வசதியாக அந்தக் குகை விசாலமாக இருந்தது. மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க வசதியான இடம்தான் என்று அங்கிருந்து திரும்பினார்கள். சுனையை கடந்து செல்லும் போது ஏழெட்டு காட்டுப்பன்றிகள் ‘உர்..உர்..ர்’ரென உறுமியபடி வழிமறித்து நின்றன. தலை முதல் பின்பகுதி வரை பிடரிமயிர்கள் கம்பி போல் சிலிர்த்துக்கொண்டு நின்றது. அதன் கன்னத்தில் ரோமமும் வாலில் மயிர்க்குஞ்சமும் காற்றில் அசைந்தது. கீழ்த்தாடையில் இரண்டு கோரைப்பற்கள் வளைந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. பன்றிகளின் உறுமல் சப்தம் பயமுறுத்துவது போலிருந்தது. ரெங்கசாமி வாத்தியார் பதட்டமடையாமல் தோள் பையிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து கீழே வைத்தார். பழவாசனை பன்றிக்கூட்டத்தை கிறங்கச்செய்ததில் அவை அமைதியானது. பழத்தை தின்றுகொண்டே ஒரு பெரிய பெண்பன்றி பெருமையாய் பேசத்தொடங்கியது. “நாங்கள் ஐம்பது கிலோ எடையுள்ள பெரிய கல்லையும் புரட்டிப்போட்டு விடுவோம். கிழங்குகளை தின்பதற்கு மண்ணைக்கிளறி தோண்டும்போது நீரும் காற்றும் உட்புகுந்து அதில் பறவைகள் போட்ட எச்சங்களின் விதைகள் முளைத்து விருட்ஷங்களாகி வனம் செழிப்பாகிறது. நீங்களோ பேராசையில் வனத்தையே அழிக்கிறீர்கள்” என்று கோபத்துடன் கேட்டது. “உங்கள் ஆதங்கம் புரிகிறது. நாங்களும் உங்கள் நண்பர்கள்தான்” கண்ணுச்சாமிதான் பன்றிகளுக்கு பதில் சொன்னான். “சார்.. எங்க அப்பா கூட சொல்லுவாரு. ஏலேய்.. பரீட்சையில மார்க் குறைவாக வாங்கியிருக்க. நீ பன்னி மேய்க்கத்தாம்லே லாயக்குன்னு திட்டுவார்” அழகர் தன் கதையை எடுத்துவிட்டான். “அப்படியா.. எங்களை மரியாதையில்லாமல் பேசுனாரு. எதற்கெடுத்தாலும் பன்னி மாதிரி இருக்க.. பன்னி மாதிரி திங்கிறேன்னு எங்களை இழிவாகப் பேசுறீக. நீங்கள் செய்யும் தவறுகளுக்கு எங்களை எதற்காக ஊடால இழுக்கீக” பன்றி தலையை திருப்பிப் பார்த்தது. “அவர்களுடைய நிலத்தில் சோளம், வேர்க்கடலை விதைத்திருந்த போது எல்லாத்தையும் முண்டிக்கிளறி தின்றுவிட்டீர்களாமே. அதனால் ஒரு கோபத்தில் சொல்லியிருப்பார்” வாத்தியார் சமாளித்தார். “செவித்திறனும் பார்வையும் குறைவுங்கிறதால மோப்ப சக்தியால் தரையை பார்க்க குனிந்து உணவை தேடி போகிறோம். நிலத்தின் பொலியில் ரோமங்களை துணியில் சுற்றிப்போட்டு வைக்கிறீர்கள். அதை தின்று தொண்டையில் சிக்கி அலறும்போது மற்ற பன்றிகளையும் அலறவிட்டு விரட்டுறீகளே..” பன்றிகள் திருப்பிக்கேட்டன. “சீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சுபாவம் இருக்கும். அதனதன் இயல்பில் சாந்தமாகவோ ஆக்ரோசமாகவோ அதன் குணங்களை வெளிப்படுத்தும். இந்தப் பன்றிகள்தான் கரடியைவிட கொடூரமாக திருப்பித்தாக்கும் பழக்கமுடையது. அதனால் இங்கே ரொம்ப நேரம் இருக்கவேண்டாம். இவைகளோடு வாதம் செய்யாமல் அப்பிடியே பேசிக்கொண்டே போயிருவோம்” என்று வாத்தியார் சொல்லவும் பழங்களை கீழே சிதறிக்கொண்டே நைசாக அந்த இடத்தைவிட்டு கடந்துவிட்டார்கள். “உடல் சூட்டை தணித்துக்கொள்ள சேற்றில் புரண்டு உடலில் சேறு பூசிக்கொள்கிற பன்றிகளோடு நமக்கெதற்கு சகவாசம்” என்று தனக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டு விறைப்பாக நடந்து போனான் அழகர். அது மாடியுடன் கூடிய காட்டு பங்களா. ஒரு காலத்தில் வேட்டையாடவும் பொழுது போக்கிற்காகவும் படைவீரர்களுடன் வந்த ராஜாக்கள் தங்கி ஓய்வெடுத்த பங்களா. மேல்மாடியில் நான்கு புறங்களிலும் கம்பி அடைப்புகளுடன் கூடிய தாழ்வாரங்கள் இருந்தன. அதில் நின்று காட்டின் அழகையும் மலைமுகடுகளையும் அதன் சரிவுகளையும் பார்த்து மகிழலாம். வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் கண்காணிக்கலாம். இன்று இரவு அந்த பங்களாவில்தான் தங்குவதற்காக சென்றார்கள். சன்னல்கள் காற்றோட்டமாக திறந்து வைக்கப்பட்டு தரை விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. அறையிலும் தாழ்வாரங்களின் மூலைகளிலும் அரிக்கேன் விளக்குகள் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தன. இரவு உணவுக்குப்பின் ரெங்கசாமி வாத்தியார் சொன்ன சுவாரஸ்யமான கதைகளை கேட்டுக்கொண்டிருந்தனர். உறங்குவதற்கு முன் தோப்பில் ஒரு சுற்று நடை போய்வருவோம் என்று ஒளிர்ந்து கொண்டிருந்த அரிக்கேன் விளக்குகள் இரண்டை எடுத்துப் பிடித்துக்கொண்டு மெல்ல இறங்கி நடந்தார்கள். மரங்களும் புல், செடி கொடிகளும் அந்த நிசப்தமான இரவில் உறங்கிக்கொண்டிருந்தன. காற்று மெதுவாக வீசி இலைகளை அசைத்து ‘உஸ்..ஸ்..”சென உசுப்பிக்கொண்டிருந்தது. ஆலமரம் விழுதுகளை ஆட்டியவாறு இந்நேரத்தில் வருவது யாரென்று ஒய்யாரமாய் நின்று பார்த்தது. நிலவு மலைமுகடுகளுக்கு மேல் எழும்பி பிரகாசித்துக்கொண்டிருந்தது. ‘வ்.வுய்..ய்..’யென காட்டு வண்டுகள் முரலும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சுனையில் ஊற்றெடுத்து வாய்க்காலில் சலசலவென ஓடிக்கொண்டிருந்த நீரோட்டம் நிலவொளியில் பொன்னிறமாய் ஒளிர்ந்தது. பாதையிலேயே மேம்போக்காக நடந்து மச்சுபங்களாவுக்கு திரும்பி வந்தபோது நரிகள் ஊளையிடும் சப்தம் அருகில் கேட்டது. இரவில் உறங்கியவர்களை குருமலைக்காற்று அடிக்கொரு தடவை வந்து தொட்டுப் பார்த்து போனது. அதிகாலையில் மயில்களின் அகவலும் விதவிதமான பறவை ஒலிகளும் கேட்டு விழிப்பு தட்டியது. தாமரைக்குளத்தில் போய் குளித்து மகிழ்ந்த புத்துணர்வில், “புறப்படலாம்” என்று ரெங்கசாமி வாத்தியார் விசிலை எடுத்து ஊதவும் அங்கிருந்து திரும்பிச்செல்ல மனமில்லாமல் மெல்ல ஊரைப் பார்க்க நடந்தார்கள். ஆலமரம் இலைகளை அசைத்து, “அடிக்கொரு தடவை இங்கே வாங்க” என்று வழி அனுப்பி வைத்தது. ஜெ.பொன்னுராஜ் 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2
- தியாவின் மாயத் தூரிகை
வெள்ளை நிற காகிதமும் வண்ணப் பென்சிலும் எடுத்தாள்! உள்ளம் சொன்ன ஓவியத்தை உடனே வரையத் துடித்தாள்! “புதிய வால் வரைந்து தா” என்று பூனை ஓடி வந்தது! “கழுத்து மணி வரைந்து தா” எனக் கன்றும் முன்னே வந்தது! “சிவப்பு கொண்டை மாற்று” என்று சேவல் வந்து கேட்டது! “சிறகில் வண்ணம் தீட்டு” எனத் தட்டான் பூச்சி கேட்டது! மண்ணில் ஊர்ந்த நத்தையோ “கம்மல் வேண்டும்” என்றது! தியாவிடம் கொலுசு கேட்டு துள்ளி வந்தது குட்டி நாய்! அருகில் நின்ற தாத்தாவோ ஆசையாக அவளிடம், “ஆச்சி காதுக்கு தண்டட்டி, அழகாய் வரைந்து தா” என்றார்! தங்க நிறத்தில் தண்டட்டி தியா வரைந்து தந்தாளே! அதை எடுத்து தாத்தாவும் ஆச்சி காதில் பூட்டினார்! ஓவியத்து நகை அங்கே உண்மையான மாயம் கண்டு திகைத்து நின்ற தியாவுடன் தாத்தா சேர்ந்து சிரித்தாரே! கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- இன்றைய காலச் சூழலில் சிறார் கதைகள்
இன்றைய காலச் சூழலில் சிறார் கதைகள்: வாழ்வியல், மனவளம், அறிவியல் மற்றும் கற்பனை சிந்தனை நெறிகளின் ஓர் அலசல் பார்வை. சிறார் கதைகள் என்பவை வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்ல; அவை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கும், சமூகப் புரிதலுக்கும், அறநெறிப் பண்புகளுக்கும் அடித்தளமிடும் சக்திவாய்ந்த கருவிகளாகும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் பல்வேறு தகவல்களையும், தூண்டுதல்களையும் எதிர்கொள்ளும் நிலையில், சிறார் கதைகளின் வடிவம், உள்ளடக்கம் மற்றும் நோக்கம் ஆகியவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. இன்றைய காலச் சூழலில் சிறார் கதைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வாழ்வியல் நெறிகள், உளவியல் நெறிகள், அறிவியல் நெறிகள் மற்றும் கற்பனை சிந்தனை நெறிகள் ஆகிய நான்கு முக்கிய கோணங்களில் விரிவாக பார்க்கலாம். மேலும், நவீன தொழில்நுட்பங்களின் தாக்கம் மற்றும் சமூக மாற்றங்களின் விளைவாக சிறார் கதைகளில் ஏற்பட வேண்டிய மாற்றங்களையும் ஆராய்வு செய்யலாம். சிறார் கதைகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் இன்றைய போக்குகள் சிறார் இலக்கியம் காலங்காலமாக வாய்மொழி மரபுகள், நாட்டுப்புறக் கதைகள், புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வழியாகப் பரிணமித்து வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும், சமூகத்தின் விழுமியங்களையும், நம்பிக்கைகளையும், அறிவியலையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக சிறார் கதைகள் திகழ்ந்துள்ளன. 2025 ஆம் ஆண்டிற்கான சிறார் புத்தகச் சந்தையின் போக்குகள், பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மனநலம் மற்றும் ஊடாடும் வடிவங்கள் (interactive formats) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளின் கவனக்குவிப்பு குறைந்துள்ளதால், கதைகள் சுருக்கமாகவும், காட்சிப்பூர்வமாகவும் இருக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. நான்கு கோணங்களில் சிறார் கதைகளின் உள்ளடக்கம் 1. வாழ்வியல் நெறிகள் (Life Values) இன்றைய குழந்தைகள் அதிகப்படியான டிஜிட்டல் திரைப் பயன்பாட்டால் சமூகத் தொடர்புகளில் பின்தங்கியுள்ளனர். இதனால், கதைகள் வழியாகப் பகிர்ந்து கொள்ளுதல், உணர்வுசார் நுண்ணறிவு மற்றும் பன்முகத்தன்மை போன்ற வாழ்வியல் நெறிகளை வலியுறுத்துவது அவசியமாகிறது. கதைகள், குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களுடன் இணக்கமாக வாழவும், சமூக நீதியின் முக்கியத்துவத்தை உணரவும் உதவ வேண்டும். கதைகள் வழியாகக் கற்பிக்கப்படும் விழுமியங்கள் குழந்தைகளின் மன உறுதியை (resilience) அதிகரிக்கின்றன. இது குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ளவும், தோல்விகளில் இருந்து மீண்டு வரவும் உதவுகிறது. உலகளாவிய குடிமகனாக வளர்த்தல் (Global Citizenship) என்ற கருத்தையும் சிறார் கதைகள் முன்னிறுத்த வேண்டும். 2. உளவியல் நெறிகள் – உளவியல் நெறிகளென்பதை ஆன்மீகமாகப் புரிந்து வைத்திருக்கிறோம். உளவியல் நெறிகள் என்பது மதம் சார்ந்ததாக இல்லாமல், மனிதனின் உள்நோக்கிய தேடல், அமைதி, மற்றும் சமூகப்பொறுப்புணர்ச்சி, என விரிவடைந்துள்ளது. இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், குழந்தைகள் இயற்கையோடு இணைந்திருத்தல், அனைத்துயிர்களின் மீதான அன்பு, நேசம், வியப்பு (awe), நன்றியுணர்வு மற்றும் கருணை போன்ற உளவியல் பண்புகளை வளர்த்துக் கொள்வது அவசியம். உளவியல் நெறிகள் குழந்தைகளின் தார்மீக வளர்ச்சியை (moral development) உறுதி செய்கிறது. இது குழந்தைகளுக்கு அறநெறிகளைப் போதித்து, சரியான மற்றும் தவறான செயல்களைப் பகுத்தறியும் திறனை வழங்குகிறது. கதைகள், குழந்தைகளுக்கு அமைதியையும், உள் பலத்தையும் அளித்து, வாழ்க்கையின் அர்த்தத்தை ஆராயத் தூண்ட வேண்டும். 3. அறிவியல் நெறிகள் (Science/Rationality) போலிச் செய்திகள் மற்றும் மூடநம்பிக்கைகள் மலிந்துள்ள இன்றைய உலகில், சிறார் கதைகள் அறிவியல் மனப்பான்மையை (scientific temper) வளர்க்க வேண்டும். 'ஏன்?', 'எப்படி?' என்று கேள்வி கேட்கும் பண்பையும், தர்க்கரீதியான சிந்தனையையும் (logical thinking) கதைகள் தூண்ட வேண்டும். அறிவியல் புனைகதைகள் (science fiction) குழந்தைகளின் தர்க்கரீதியான சிந்தனையை 40% வரை மேம்படுத்துவதாகச் சில கல்வி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை (sustainability) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகள், குழந்தைகளை எதிர்கால உலகின் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றும். புதிய கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் எழுதப்படும் கதைகள் குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும். 4. கற்பனை சிந்தனை நெறிகள் (Imagination) செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில், மனிதர்களுக்கே உரித்தான படைப்பாற்றல் (creativity) மிக முக்கியமானது. கற்பனை உலகங்கள் வழியாகச் சிக்கல் தீர்க்கும் திறனை (problem-solving) வளர்க்கும் கதைகள் இன்றைய காலத்திற்கு அவசியமானவை. 'என்ன நடக்கும்?' (What if?) என்ற சிந்தனையைத் தூண்டி, புதிய யோசனைகளை உருவாக்கக் கற்பனைத் திறன் உதவுகிறது. கற்பனைத் திறன் என்பது வெறும் கனவு காண்பதல்ல, அது எதிர்காலத் திட்டமிடலுக்கான ஒரு கருவியாகும். குழந்தைகள் தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி, புதிய உலகங்களை உருவாக்கவும், சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் கதைகள் வழிகாட்ட வேண்டும். இன்றைய காலச் சூழலுக்கான சிறார் கதைகளின் தேவைகள் 1. டிஜிட்டல் கவனச் சிதறல் மற்றும் வாசிப்புப் பழக்கம்2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, 5-8 வயதுடைய குழந்தைகளின் வாசிப்பு ஆர்வம் 2.1% குறைந்துள்ளது. இதற்கு அதிகப்படியான திரைப் பயன்பாடு ஒரு முக்கிய காரணமாகும். எனவே, சிறார் கதைகள் அதிக காட்சித் தன்மையுடனும், ஊடாடும் தன்மையுடனும் இருக்க வேண்டும். டிஜிட்டல் கதைகள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் அனிமேஷன் கதைகள் போன்ற வடிவங்கள் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க உதவும். இருப்பினும், அச்சுப் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும், ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தையும் ஊக்குவிக்க வேண்டும். 2. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆளுமை வளர்ச்சிAI மூலம் உருவாக்கப்படும் கதைகள் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப மாறக்கூடியவை. இது வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டினாலும், மனித விழுமியங்களை வலியுறுத்தும் கதைகளின் தேவை இன்னும் அதிகமாக உள்ளது. AI-யால் வழங்க முடியாத உணர்வுசார் ஆழத்தையும், மனித அனுபவங்களையும் சிறார் கதைகள் கொண்டிருக்க வேண்டும். AI கருவிகளைப் பயன்படுத்தி கதைகளை உருவாக்குவது ஒருபுறம் இருந்தாலும், மனித உணர்வுகளையும், சமூகப் பிணைப்புகளையும் வெளிப்படுத்தும் கதைகள் குழந்தைகளுக்கு அவசியம். 3. மனநலம் மற்றும் மீண்டெழும் திறன்சமூக ஊடகங்களின் தாக்கத்தால் குழந்தைகள் மத்தியில் ஒப்பீடு மற்றும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது . எனவே, தோல்விகளை ஏற்றுக்கொள்வது, தன்னம்பிக்கை, மன அமைதி மற்றும் உணர்ச்சி மேலாண்மை குறித்த கதைகள் இன்றைய காலத்தின் கட்டாயமாகும். சவால்களை எதிர்கொள்ளும் திறன், மற்றவர்களுடன் அனுதாபத்துடன் பழகுதல் மற்றும் நேர்மறையான மனப்பான்மையை வளர்த்தல் போன்ற கருத்துக்களை சிறார் கதைகள் போதிக்க வேண்டும். இன்றைய காலச் சூழலில் சிறார் கதைகள் வெறும் நீதிக்கதைகளாகவோ அல்லது கற்பனைக் கதைகளாகவோ மட்டும் இல்லாமல், வாழ்வியல், உளவியல் , அறிவியல் மற்றும் கற்பனை சிந்தனை ஆகிய நான்கு நெறிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கதைகள் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் அமைய வேண்டும். பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மனநலம், அறிவியல் மனப்பான்மை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்கும் கதைகள், நாளைய தலைமுறையைச் சிறந்த குடிமக்களாக உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. சிறார் இலக்கியப் படைப்பாளிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து, இந்த நான்கு நெறிகளையும் உள்ளடக்கிய கதைகளை உருவாக்கி, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும். கோ.சுரேஷ்குமார் மேனாள் மேல்நிலைக்கல்வி வேளாண் அறிவியல் தொழிற்கல்வி ஆசிரியர், கல்வியாளர், சிறார் கதை ஆசிரியர், இயற்கை உணவு ஆர்வலர், "மைக்ரோகிரின்" வளர்ப்பு செயல்பாட்டாளர், வேளாண் விழிப்புணர்வு கட்டுரையாளர், பயிற்சியாளார்.
- கண்ணுக்குட்டி
அழகு அழகு கண்ணுக்குட்டி ! ஆடிவரும் கண்ணுக்குட்டி! அம்மா காலை உரசியே அசைந்து வரும் கண்ணுக் குட்டி ! சின்ன சின்ன கண்ணுக் குட்டி! நின்னு பார்க்கும் கண்ணுக்குட்டி! தின்ன வாழைப் பழம் தந்தால் துள்ளி வரும் கண்ணுக்குட்டி! புல்வெளி தேடும் கண்ணுக்குட்டி! பூப்போல மின்னும் கண்ணுக்குட்டி! மேய்ச்சல் நிலத்தைக் கண்டு விட்டால் மகிழ்வாய் துள்ளும் கண்ணுக்குட்டி! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
- மேக விதைப்பு (Cloud Seeding)
நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் மொழிக்கு இணங்க, மழை என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமாகும். குடிநீர், விவசாயம், தொழில்கள், மின்சார உற்பத்தி போன்ற பல துறைகள் மழையைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆனால் உலகின் பல பகுதிகளில் பருவமழை குறைவு, காலநிலை மாற்றம், வறட்சி, புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் நீர்ப் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தச் சிக்கலைச் சமாளிக்க அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ள ஒரு முக்கியமான முறையே ‘மேக விதைப்பு’ ஆகும். மேக விதைப்பு என்றால் என்ன? மேகங்களுக்குள் நீராவி அல்லது மிகக்குளிர்ந்த நீர்த் துகள்கள் எப்போதும் இருக்கும். அவை போதுமான அளவுக்கு ஒன்றிணைந்து குளிர்வுற்றால் மட்டுமே மழை பெய்யும். ஆனால், அவை மழையாகப் பொழிவதற்குத் தேவையான 'கருக்கள்' (Nuclei) இல்லாதபோது மழை பெய்யாது. இதற்கு உதவியாக, சில வேதிப்பொருட்களை மேகங்களில் தூவி, மழையைத் தூண்டுவதே ‘மேக விதைப்பு’ எனப்படுகிறது. சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, உலர்பனி அல்லது சாதாரண உப்பு போன்ற பொருட்கள் மழை ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேகங்களின் மீது இந்த வேதிப் பொருள்களைத் தூவுவதால், இவை மேகங்களில் நீர்த்துளிகள் உருவாகும் செயல்முறையை வேகப்படுத்துகின்றன. சில்வர் அயோடைடு - இது பனி போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால், குளிர்ந்த மேகங்களில் பனிப்படிகங்களை உருவாக்கப் பயன்படுகிறது. உலர்ந்த பனி - இது திடநிலை கார்பன் டை ஆக்சைடு ஆகும். இது மேகத்தின் வெப்பநிலையைக் குறைத்து மழைப்பொழிவைத் தூண்டுகிறது. இந்தச் செயல் மழை பெய்யும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் மேகங்கள் இல்லாத சூழலில் இதைச் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேக விதைப்பு செய்ய இரண்டு முக்கியமான முறைகள் உள்ளன: 1. சிறப்பு விமானங்கள் மேகங்களின் மீது பறந்து, வேதிப்பொருட்களைத் தூவலாம். குறைந்த உயரத்தில் உள்ள மேகங்களின் மீது ட்ரோன்கள் மூலமும் வேதிப்பொருள்களைச் செலுத்தலாம். 2. தரையிலிருந்து சிறப்பு ராக்கெட் மூலமாகவும் வேதிப்பொருட்களை மேகங்களுக்குள் செலுத்தலாம். ஐக்கிய அரபு அமீரகம், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும், டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் இம்முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேக விதைப்பின் நன்மைகள் வறட்சியைக் குறைக்கும். நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள் நிரம்ப உதவும். குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க உதவும். விவசாய வளர்ச்சிக்குப் பயனாகும். பயிர்களுக்கு தேவையான மழையைப் பெற உதவும். சில நாடுகளில் காட்டுத் தீயைக் குறைக்க, மழையைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது. காற்று மாசுபடுதலைக் குறைக்கவும் பயனாகிறது. மலைப்பகுதிகளில் பனிப்படலத்தை அதிகரிக்கச் செய்து பனிப்பொழிவு அதிகரிக்கச் செய்யலாம். மலைப்பனி கோடையில் உருகி, நதிநீர் வரத்தை உறுதி செய்யலாம். மேகவிதைப்பின் குறைகளும் சவால்களும் மேக விதைப்பு செய்வதற்கு வளிமண்டலத்தில் ஏற்கனவே தகுந்த மேகங்கள் இருக்க வேண்டும். மேகங்களே இல்லாத வானில் மழையை உருவாக்க முடியாது. எல்லா நேரமும் மழை பெய்யும் என்றும் உறுதியாகச் சொல்லமுடியாது. விமானங்கள், கருவிகள், வேதிப்பொருட்கள் போன்றவை அதிகப் பணச்செலவை ஏற்படுத்தும். சில்வர் அயோடைடு போன்ற வேதிப்பொருட்களால் நிலம் மற்றும் நீர்நிலைகளில் நச்சுத்தன்மையை ஏற்படலாம். சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயமும் இருக்கிறது. பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் நீண்டகாலத் தாக்கம் குறித்து இன்னும் முழுமையான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. மேக விதைப்பு என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காட்டும் ஒரு முக்கியமான முயற்சி ஆகும். இது வறட்சி போன்ற அவசர சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கலாம். இருப்பினும், இது நிலையான தீர்வு அல்ல. நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், நீர் சேமிப்பு போன்ற நடவடிக்கைகளுடன் சேர்த்து பயன்படுத்தினால் மட்டுமே நீண்டகாலப் பலன் கிடைக்கும். அறிவியலைப் பொறுப்புடன் பயன்படுத்தி இயற்கையுடன் இணைந்து செயல்படுவது தான் மனித சமுதாயத்தின் நிலையான முன்னேற்றத்திற்கு வழிகாட்டும். எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி
- களிமண் சிற்பம் பயிலரங்கம்
3-3-26 அன்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் – நெல்லை கிளையின் சார்பில், அரசு பள்ளியில் “களிமண் சிற்பம்” பயிற்சி முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. இளம் தலைமுறையின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்குடன் இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இப்பயிற்சியை நடத்த சிற்பக் கலைஞர் சிற்பி பாலா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். முதல் அமர்வு – விளக்கமும் காட்சியும் சிற்பி பாலா அவர்கள், • களிமண்ணின் தன்மை • அதை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது • கைகளால் வடிவமைக்கும் முறைகள் • எளிய வடிவங்களில் சிற்பம் உருவாக்கும் அடிப்படை நுட்பங்கள் என அனைத்தையும் நேரடியாக விளக்கினார். நவீன கார்ட்டூன் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, இயற்கையை மையமாகக் கொண்ட வடிவங்கள் மட்டுமே உருவாக்குமாறு மாணவர்களுக்கு வழிகாட்டப்பட்டது. அதன்படி மாணவர்கள், • யானை • ஆடு • பறவைகள் • மரக்கிளை மற்றும் கூடு போன்ற இயற்கைச் சார்ந்த வடிவங்களைச் செய்ய கற்றுக் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். சிற்பியின் விளக்கங்களை கவனமாகக் கேட்டதோடு, உடனே தங்கள் கைகளால் முயற்சி செய்யத் தொடங்கினர். மதிய உணவுக்குப் பிறகு, இரண்டாம் அமர்வு தொடங்கப்பட்டது. இந்த அமர்வில், மாணவர்கள் தாங்களாகவே கற்பனை செய்து சிற்பங்களை உருவாக்க ஊக்குவிக்கப்பட்டனர். இதில் வெளிப்பட்ட சிந்தனைகள் மிகவும் ஆச்சரியப்படுத்தியது: • சில மாணவர்கள் “யானைக்கான வீடு” ஒன்றை களிமண்ணால் உருவாக்கினர். • சிலர் வெளியில் சென்று புல்லைக் கொண்டு வந்து, தாங்கள் செய்த யானையின் அருகில் தீவனமாக வைத்தனர். • சில மாணவிகள் களிமண் தட்டுகளை செய்து, அதில் களிமண் உருண்டைகளை யானைக்கு உணவாக வைத்தனர். மொத்தமாக இன்று சுமார் 50 களிமண் சிற்பங்கள் மாணவர்களால் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்ட அனைத்து சிற்பங்களும் பள்ளி வளாகத்தில் அழகாக ஒழுங்குபடுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டன. மற்ற வகுப்புகளில் இருந்த மாணவர்களும் சிற்பங்களைப் பார்வையிட்டனர். நண்பர்களின் ஆச்சரியம், பாராட்டு, மகிழ்ச்சி ஆகியவை அந்தச் சிற்பங்களின் மதிப்பை மேலும் உயர்த்தின. நிகழ்ச்சியின் இறுதியில், ஒவ்வொரு மாணவரும் தாங்கள் உருவாக்கிய சிற்பத்தை நினைவாக பெற்றுச் சென்றனர். மாணவர்களின் முகங்களில் தெரிந்த ஆனந்தமும் பெருமையும், இந்த நிகழ்வின் வெற்றியை உறுதிப்படுத்தியது. ஆசிரியர் திரு. துரைப்பாண்டி அவர்கள் நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்தார். தேவர்பிரான் 2014ஆம் ஆண்டு, உள்ளூர் இயற்கை விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நேரடி சந்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மனைவி சத்தியா அவர்களுடன் சேர்ந்து ஒரு தள்ளுவண்டியில் இயற்கை பொருட்கள் விற்பனையைத் தொடங்கியவர். இயற்கை விவசாயிகளை ஆதரிப்பதோடு, மக்களிடையே சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி வருகிறார்.
- லண்டனிலிருந்து அன்புடன் - 10
இங்கிலாந்தின் புத்தகத் தினம் – மாறுவேடத்தில் அசத்தும் ஆசிரியர்கள் குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம் எனப் பல தினங்களைக் கொண்டாடுகிறோம். அதேபோல், புத்தகங்களுக்கென்று ஒரு தனி தினம் உண்டு. ஏப்ரல் 23-ஆம் தேதி "உலகப் புத்தகத் தினம்" கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கிலாந்தில் அந்தச் சமயம் ஈஸ்டர் விடுமுறை என்பதால், பள்ளிகளில் மார்ச் மாதத்தின் முதல் வியாழக்கிழமையையே புத்தகத் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இங்கிலாந்து பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு குட்டி நூலகம் இருக்கும். வகுப்பில் மட்டுமல்ல, பள்ளிக்கூட வளாகத்திலும் அனைத்து வகுப்பினருக்குமான ஒரு நூலகமும் உண்டு. பள்ளிச் சுவர்களில் புத்தகங்களின் அட்டைப்படங்களே அலங்காரமாகத் தொங்கும். இப்படிப் புத்தகங்களைக் கொண்டாடி மகிழ்பவர்கள், புத்தகத் தினம் என்றால் சும்மாவா விடுவார்கள்? புத்தகத் தினம் வந்துவிட்டால், பள்ளிக்கூடமே ஒரு கதை உலகம் போல மாறிவிடும்! இங்கு, புத்தகத் தினம் என்றால் அது மாறுவேடத்திற்கான தினம். நம் தமிழ்நாட்டில், மாறுவேடம் என்றால் ஔவையார், பாரதியார், திருவள்ளுவர், சாவித்திரி பாய் போன்ற வரலாற்றுத் தலைவர்கள் போல் வேடமிடுவோம். ஆனால் இங்குப் புத்தகக் கதாபாத்திரங்கள் போல் வேடமிடுவதே இவர்களின் சிறப்பு. சூப்பர் ஹீரோக்கள், டிஸ்னி தேவதைகள் எனப் பல கதாபாத்திரங்களாக மாறிப் பள்ளிக்கு வருவார்கள். குழந்தைகளைவிட ஆசிரியர்கள் வேடமிட்டு வருவதுதான் இந்தத் தினத்தின் சிறப்பு. மந்திரவாதிகள், ஹாரிப்பாட்டர், நார்நியா, பீட்டர் பேன் போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்கள் எனத் தத்ரூபமாக வேடமிட்டு ஆசிர்யர்கள் வாசலில் நின்று குழந்தைகளை வரவேற்பார்கள். இதைப் பார்க்கவே பெற்றோர்கள் திரண்டு வருவார்கள். இந்தத் தினத்திற்காகவே பிரத்யேகமாக மலிவு விலைப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. பள்ளி சார்பில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு புத்தக டோக்கன்(Book Token) வழங்கப்படும். இதைக் கொண்டு அருகிலுள்ள புத்தகக் கடையில் ஒரு புதிய புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்த அருமையான ஏற்பாடு! இந்த வருடம், புத்தகத் தினத்திற்காக 16 புத்தகங்களை ஒரு பவுண்டு விலையில் தயாரித்துள்ளனர். அதிலுள்ள ஒரு படக்கதையான "The Big BANG" பற்றித்தான் நாம் சுருக்கமாகத் தற்போது பார்க்கப்போகிறோம். ராக்கி, ஹாலோ மற்றும் காஸ்பர் என்ற மூன்று பூனைக்குட்டிகளின் கதை இது. ராக்கி, ஹாலோ பூனைக்குட்டிகளுக்குப் புதிதாகக் காஸ்பர் பூனை அறிமுகமாவதிலிருந்து இக்கதை தொடங்குகிறது. அவர்கள் மூவரும் விளையாடிக்கொண்டே அருகிலிருந்த காட்டிற்குள் சென்றுவிடுகின்றனர். அப்பொழுது, பலத்த மழையும் இடியும் மின்னலும் வருகின்றன. ராக்கியும் ஹாலோவும் இடிச் சத்தத்தைக் கேட்டு நடுங்குகிறார்கள். ஆனால், காஸ்பர் மட்டும் பயமே இல்லாமல் மழையை வேடிக்கை பார்க்கிறது. பலத்த வெளிச்சத்துடன் மின்னல் வெட்டியபோது மூவரும் சிதறி ஓடுகிறார்கள். பிறகு காஸ்பரைக் காணவில்லை! அப்போதுதான் ராக்கி ஒரு விஷயத்தைக் கவனிக்கிறது. இவ்வளவு பெரிய இடிச் சத்தம் கேட்டபோதுகூட காஸ்பர் அசையவில்லை. காரணம், காஸ்பருக்குக் காது கேட்காது. தனது நண்பன் காஸ்பரை ராக்கி எப்படித் தேடிக் கண்டுபிடித்தது என்பதே மீதிக்கதை. நம்மைச் சுற்றி வாழும் வாய் பேச இயலாதவர்கள் (மாற்றுத் திறனாளிகள்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் அற்புதமான கதை இது. Sign Language - நாம் அனைவரும் சுலபமாகக் கற்கலாம் – அதன் மூலம் நம் நண்பர்களின் மொழியில் நாம் உரையாடி மகிழலாம் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகம் உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும். அழகிய ஓவியங்களுடனும், குட்டி குட்டி வரிகளுடனும் இந்தக் கதை உள்ளதால் மிகவும் சுலபமாக வாசித்துவிடலாம். "அது சரி! புத்தகத் தினத்திற்கு நீங்கள் என்ன வேடமிட்டீர்கள்?" என்று கேட்கிறீர்களா? நாங்கள் இந்த வருடம் "Dog Man" கதாபாத்திரமாக வேடமிட்டோம். “என்னது, அடுத்து வரும் மாறுவேடப் போட்டிக்கு புதிய யோசனை வந்துவிட்டதா?” பஞ்சுமிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.
- ஓவியங்கள் சிக்கலான விஷயங்களை எளிமையாகச் சொல்லிவிடும் : பங்கஜ் சாய்கியா, குழந்தைகள் புத்தக ஓவியர்
நேர்காணல்: அனுரிமா சந்தா ( என் முதல் சந்திப்பு பங்கஜ் சாய்கியாவுடன் பாத்ஷாலா என்ற அழகிய நகரில், அமைதியான குளிர்கால காலைஎன் முதல் சந்திப்பு பங்கஜ் சாய்கியாவுடன் பாத்ஷாலா என்ற அழகிய நகரில், அமைதியான குளிர்கால காலை நேரத்தில், நல்ல வெயிலில் நடந்தது. நேரத்தில், நல்ல வெயிலில் நடந்தது. பங்கஜ், அந்தக் குளிர்கால வெயிலைப் போலவே, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். The Theatre of Ghosts என்ற படைப்புக்கான அவரது சிந்தனைகள், குழந்தைகள் புத்தக ஓவியராக இந்தியாவில் அவர் சந்தித்த சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து அவர் அருமையாகப் பேசினார். இந்த நேர்காணலில், அவரது படைப்பாற்றல், கலைக்கான உந்துதல், மற்றும் சிறார் இலக்கியம் குறித்த பார்வைகளை ஆழமாகப் பார்க்கலாம். ) அனுரிமா - குழந்தைகள் புத்தக ஓவிய உலகில் உங்கள் பயணம் எப்படி தொடங்கியது? பங்கஜ் : நான் எப்போதும் காட்சி ரூபமான கதை சொல்லலில் ஆர்வம் கொண்டிருந்தேன். சிறுவயதில் காமிக்ஸ் வாசித்ததே அதற்குக் காரணம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட வயதுக்கான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், என் முதல் ஓவியப்பணியில் பள்ளி மாணவர்களுக்கான படைப்புகளை உருவாக்கியபோது, வாசகர்களின் வயது பற்றி அதிகம் சிந்திக்கத் தொடங்கினேன். பின்னர் சிக்கிம் மாநில பள்ளிப் பாடப்புத்தகங்களுக்கான ஓவியங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டேன். அதன்பின் என் கலை குழந்தைகள் மையமாக மாறியது. Pratham Books நிறுவனத்தின் கலை இயக்குநர் கனாடோ ஜிமோ, என் இன்ஸ்டாகிராம் படைப்புகளைப் பார்த்து, ஒரு படப்புத்தகத்தை ஓவியமாக்க அழைத்தார். அதன்பின் 15-க்கும் மேற்பட்ட படப்புத்தகங்களை ஓவியமாக்கியுள்ளேன்; இரண்டு புத்தகங்களை எழுதியும் ஓவியமாக்கியுள்ளேன். தற்போது, என் வேலைகளில் பெரும்பாலானவை பாடப்புத்தக ஓவியங்கள். சுமார் 40% வேலைகள் மட்டும் படப்புத்தகங்கள். கூடுதலாக அனிமேஷன், பிராண்டிங், கலைப் பயிற்சிகள் ஆகியவற்றிலும் ஈடுபடுகிறேன். அனுரிமா _-- உங்களை அதிகம் பாதித்த கலைஞர்கள் யார்? பங்கஜ் : Pratham Books குழுவே எனது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. ஹயாவோ மியாசாகி, இசாவோ தகஹதா ஆகிய ஜப்பானிய இயக்குநர்களின் படைப்புகள் எனக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தின. டேவ் மெகீன், குவென்டின் பிளேக், மார்ஜானே சத்ராபி ஆகியோரின் படைப்புகளும் எனக்கு உந்துதலாக இருந்தன. இரவு உணவிற்கு அழைக்க விரும்பினால், மியாசாகி, தகஹதா (அவர் சமீபத்தில் மறைந்தார்), மற்றும் நீல் கெய்மன் ஆகியோருடன் கலந்துரையாட விரும்புவேன். அனுரிமா - . உங்கள் கலைப்பாணியை எப்படி விவரிப்பீர்கள்? பங்கஜ் : என் பாணி Studio Ghibli படைப்புகளின் உத்வேகத்தினால் உருவானது. அசாமின் இயற்கை காட்சிகள், தகஹதாவின் Only Yesterday , Princess Kaguya போன்ற படங்களின் பாணி எனக்கு தாக்கம் ஏற்படுத்தியது. சமீபத்தில், நீர்வண்ண பாணியிலிருந்து, சற்று கிராமிய பாணிக்கு மாறியுள்ளேன். நான் இயற்கை, சமூக-கலாச்சார அம்சங்களை பிரதிபலிக்கும் ஓவியங்களை விரும்புகிறேன். உள்ளூர் அம்சங்களில் இருந்து உலகளாவிய உணர்வுகளைத் தேடுகிறேன். அனுரிமா - . நீங்கள் விரும்பும் ஊடகங்கள் மற்றும் நுட்பங்கள்? பங்கஜ் : காகிதத்தில் மை கொண்டு வரைவதை விரும்புகிறேன். எனவே, பாரம்பரியமும், டிஜிட்டலும் கலந்த முறையில் வேலை செய்கிறேன். கோடுகளை கையால் வரைவது எனக்கு அதிக கட்டுப்பாட்டை அளிக்கிறது. ஆனால் நிறமிடுதல் டிஜிட்டலாக செய்வது வேகமாகவும் திருத்த எளிதாகவும் இருக்கிறது. அனுரிமா - . கதாபாத்திரங்களுக்கு உந்துதல் எங்கிருந்து பெறுகிறீர்கள்? பங்கஜ் - : உண்மையான மனிதர்களிலிருந்து — குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள். இவர்களிடமிருந்து உந்துதல் பெறுகிறேன். அதனால் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக இருக்கும். அனுரிமா - . உங்கள் படைப்பாற்றல் செயல்முறை எப்படி? பங்கஜ் -- : ஓவியராக பணிபுரியும் போது, முதலில் கதாபாத்திர வடிவமைப்பு, பின்னர் ஸ்டோரி போர்டு, அதன் பின் இறுதி ஓவியங்கள். எழுத்தாளராகவும் ஓவியராகவும் பணிபுரியும் போது, முதலில் பல டூடில்கள், பின்னர் ஸ்டோரி போர்டுகள், ஒரே பாணி வடிவங்கள். இறுதியில், முழுப் புத்தகத்திலும் ஒரே பாணியைத் தொடர்ந்து பராமரிக்கிறேன். அனுரிமா - இதுவரை எத்தனை புத்தகங்களை ஓவியமாக்கியுள்ளீர்கள்? பங்கஜ் -- : 15-க்கும் மேற்பட்ட புத்தகங்கள். 10 அச்சில் வந்துள்ளன; மற்றவை வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. நான் slice of life , நகைச்சுவை, கற்பனை போன்ற வகைகளை விரும்புகிறேன். உணவு சார்ந்த கதைகளும் எனக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அனுரிமா -- . நினைவில் நிற்கும் அனுபவங்கள் அல்லது சவால்கள்? பங்கஜ் -- : குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு தருணமும் ஆச்சரியமாக இருக்கும். சமீபத்தில், அசாமில் ஒரு கிராபிக் நாவல் திட்டத்தில், வரைய வேண்டியதிருந்தது. எழுத்தாளர் அசாமைச் சேர்ந்தவர் அல்லாததால், சமூக-கலாச்சார அம்சங்களை சரியாக பிரதிபலிப்பது சவாலாக இருந்தது. குறிப்பாக, குப்பைத் தொழிலாளி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தை மரியாதையுடன், ஆனால் உண்மையை மறைக்காமல் காட்டுவது கடினமாக இருந்தது. இது, படப்புத்தகங்கள் எப்போதும் கூட்டுப் பணியாக இருப்பதை உணர்த்தியது. அனுரிமா -- . குழந்தைகள் புத்தக ஓவியங்களில் உள்ள சிறப்பான அம்சங்கள் என்ன? பங்கஜ் --: படப்புத்தகங்கள் காட்சி மற்றும் உரைநடை இணைந்த ஊடகம். வாசிக்கத் தொடங்கும் குழந்தைகளுக்கு பாலமாக இருக்கும். அதேசமயம், படங்கள் சிக்கலான கருத்துகளை எளிமையாக சொல்லும் சக்தி கொண்டவை. அனுரிமா -- . கலாச்சார உணர்வு மற்றும் உள்ளடக்கம் எப்படி உறுதி செய்கிறீர்கள்? பங்கஜ் -- : சிக்கிம் அரசின் பாடப்புத்தக திட்டத்தில், பல சமூகங்களைப் பற்றி அறிய கல்வி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், அனைத்து சமூகங்களையும் சமமாக பிரதிபலிக்க முடிந்தது. கதாபாத்திரங்களின் தோல் நிறங்களிலும் கவனம் செலுத்தினோம் — வாசகர்கள் தங்களை காட்சிகளில் காண வேண்டும். அனுரிமா -- . இந்திய கலாச்சாரத்தின் தாக்கம்? பங்கஜ் -- : உள்ளூர் கலாச்சாரத்தை wherever possible சேர்க்கிறேன். ஆனால், வேறு கலாச்சாரங்களை ஆராய்வதும் சுவாரஸ்யம் தான். கற்பனை ஓவியங்களில் பல கலாச்சார அம்சங்களை இணைக்க முடியும். அனுரிமா -- . புதிய ஓவியர்களுக்கு உங்கள் ஆலோசனை? பங்கஜ் -- : இந்தியாவில் குழந்தைகள் புத்தக ஓவியராக விரும்பினால், உங்கள் சுற்றுப்புறக் கதைகளைச் சொல்லுங்கள். இந்தியாவின் ஒவ்வொரு காட்சியிலும் கதைகள் நிறைந்திருக்கும். ஆனால், முழுநேர ஓவியராக இருப்பது கடினம். நிதிக்குறைவால், திட்டங்களில் வரையும்போது குறைவான சம்பளமே கிடைக்கும். அதனால் பல திட்டங்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருக்கும். காலக்கெடுவுக்குள் தரமான படைப்புகளை வழங்க கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால், அனிமேஷன், பிராண்டிங், பொருட்கள், கற்பித்தல் போன்ற பல வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச வெளியீடுகளுடனும் பணிபுரியலாம். முக்கியமாக, உங்கள் திறன்களை மேம்படுத்தி, நீங்கள் எப்படிப்பட்ட ஓவியராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இது மிகவும் திருப்திகரமான தொழில். ஒரு புத்தகத்தை முடித்து, அதை குழந்தைகளுடன் பகிரும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. Courtesy—ACLiSA தமிழில் – உதயசங்கர் ( ஏ.ஐ.உதவியுடன் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- பட்டம்
பட்டம் பார் பட்டம் பார்! படபடன்னு பறக்குது பார்! சுட்டிப் பையன் கையிலே சுற்றி வைத்த நூல்விட்டே பட்டம் பார் பட்டம் பார்! படபடன்னு பறக்குது பார்! வண்ணம் பல அதிலே வடிவம் கூட அழகே! காற்று அடிக்கும் திசையிலே பட்டம் பறக்கும் வாலோடே! பட்டம் பட்டம் பார்! படபடன்னு பறக்குது பார்! எங்களுடன் ஆட வா நிலா நிலா ஓடி வா! நீ இருப்பது வானிலா? வட்ட வடிவ வெண்ணிலா வண்ணத்தில் வெண்மையா? பிட்டு உன்னைப் பார்க்கவா? கிட்டே நீயும் வருவாயா? நிலா நிலா ஓடி வா! எங்களுடன் ஆட வா! நட்சத்திரம் கூட்டி வா! நாமும் போவோம் ஓர் உலா! மாலதி ராமலிங்கம் கவிஞர், எழுத்தாளர், மாலதி இராமலிங்கம் எழுதிய 3 நூல்களில் ஒன்று தமிழகத்தின் 32 மாவட்ட அரசு நூலகங்களில் 800 நூல்களும் புதுச்சேரி அரசின் நூலகங்களில் 2 நூல்கள், தலா 74 நூல்களும் இடம்பெற்று உள்ளன.













