top of page

இயலில் தேடலாம்!

211 results found with an empty search

  • ஆஹா!

    படம்: உ. நவீனா

  • நீலச் சட்டை பார்பி பொம்மை

    ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில் அந்தப் பொம்மைகள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளும். இரவு முழுவதும் கும்மாளம் போடும்! அடுத்த வாரம் புத்தாண்டு பிறக்க இருந்தது. புத்தாண்டு விற்பனைக்காகப் பல புதிய பொம்மைகள் கடையில் வந்து இறங்கின. ஒரு நாள் மாலை அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் புதிய பொம்மைகளை அலமாரியில் அடுக்க வந்தார். அங்கே ஒரு பழைய பார்பி பொம்மை இருந்தது. அது நீலச் சட்டை போட்டு இருந்தது. அது ஓர் ஆண்டுக்கும் மேலாக விற்பனை ஆகாமல் இருந்தது. அதைத் தொட்டால் கண் சிமிட்டிச் சிரிக்கும்! அந்தச் சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்! “இந்தப் பார்பி பொம்மை ரொம்ப நாளா விக்காம இடத்தை அடைச்சிக்கிட்டு இருக்கு. இனிமே இதை யாரும் வாங்க மாட்டாங்க. இதைக் குப்பையில தூக்கிப் போட்டு விடலாமா?” என்று அந்தப் பெண் முதலாளியைக் கேட்டார். “இப்ப வேணாம். மூனு வாரத்துல பொங்கல் வருது. அப்போது பார்த்துக்கலாம்; இப்ப உள்ளே தள்ளி வை” என்றார் முதலாளி. அந்தப் பெண் அந்தப் பொம்மையை உள்ளே தள்ளி வைத்தார். முன்புறம் புதிய பொம்மைகளை அடுக்கினார். புதிய பார்பி பொம்மைகளின் உடைகள் பளிச்சென்று ரோஸ் நிறத்தில் இருந்தன. அவை போட்டு இருந்த செருப்புகள் தங்க நிறத்தில் மின்னின. பொத்தான்களைத் தொட்ட உடனே சில பொம்மைகள் இனிய இசையுடன் நடனம் ஆடின. முதலாளி சொன்னதைக் கேட்ட பழைய பொம்மைக்கு முகம் வாடி விட்டது. அன்று கடை மூடிய பிறகு புதிய பொம்மைகள் அதைக் கிண்டல் செய்தன. “நீலச் சட்டை போட்ட பார்பியை, எந்தப் பெண் குழந்தையாவது வாங்குமா?” என்று சொல்லிச் சிரித்தன. சோகமாக இருந்த அந்தப் பொம்மைக்கு, ஒரு குரங்கு பொம்மை ஆறுதல் கூறியது. “கவலைப் படாதே! நம்பிக்கையோடு காத்திரு; உன்னை விரும்பி வாங்கக் கூடிய குழந்தை சீக்கிரமே வரும்” என்றது குரங்கு பொம்மை. மறுநாள் காலையில் ஒரு பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் அம்மா காரில் வந்து இறங்கினார். “நிலா! நாலு கடை ஏறி இறங்கியாச்சி! நேரமாச்சு; உனக்குப் பிடிச்ச பொம்மையைச் சீக்கிரம் பார்த்து எடு” என்றார் அம்மா. நிலா பார்பி பொம்மைகள் இருந்த அலமாரி பக்கம் வந்தாள். முன் பக்கம் அடுக்கி இருந்த பொம்மைகள் வித விதமான ஒலி எழுப்பி நடனம் ஆடின. ஆனால் எதுவும் அவளைக் கவரவில்லை. அவள் அந்தப் பொம்மைகளை நகர்த்தி வைத்தாள். உள் பக்கம் இருந்த அந்த நீல பார்பி பொம்மையைக் கையை உள்ளே விட்டு எடுத்தாள். தான் தேடியது கிடைத்து விட்டது என்பது போல, அதைப் பார்த்ததும் அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி! “அம்மா! நான் தேடுனது கிடைச்சிட்டுது! இது தான் எனக்கு வேணும்” என்றாள். அதைப் பார்த்த அம்மா முகத்தில் அதிருப்தி! “எவ்வளவு அழகான ரோஸ் நிறத்துல புது பொம்மை எல்லாம் இருக்கு! எல்லாத்தையும் விட்டுட்டு இந்தப் பழசைப் போய் எடுக்கிறியே!” என்றார் அம்மா சற்றுக் கோபத்துடன். “இது தான் எனக்குப் பிடிச்சி இருக்கு! நீல பார்பி தான் எனக்கு வேணும்; ரோஸ் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்றாள் நிலா பிடிவாதமாக. அந்தப் பார்பி பொம்மை மகிழ்ச்சியுடன் திரும்பிக் குரங்கு பொம்மையைப் பார்த்துக் கண் சிமிட்டியது. குரங்கு பொம்மையும் மகிழ்ச்சியுடன் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டியது. கையை ஆட்டி டாட்டா சொன்னது. அந்தப் பொம்மையை வாங்கி வந்த நிலா, அதன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். எங்கே சென்றாலும் அதைத் தன் நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றாள். எப்போதும் அதைக் கட்டி அணைத்துக் கொண்டு தூங்கினாள். அது இல்லா விட்டால் அவளால் தூங்க முடியவில்லை. அந்தப் பொம்மைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

  • நெல்லையில் வேனில் விழா -2025

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (திருநெல்வேலி கிளை) மற்றும் விரல்கள் நுண்கலை குழு இணைந்து, மே 10, 2025 அன்று குன்னத்தூர் கிராமத்தில் உள்ள 'வேணுவனம்' என்ற இடத்தில் சிறுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 35 குழந்தைகள் பங்கேற்றனர். திருமதி விஜி அவர்களின் கோலாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எல்லா குழந்தைகளும் உற்சாகமாக பங்கேற்றனர். அடிப்படை கோலாட்ட அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுத் தந்தார். அதன் பின் ஓலைக் கலைஞர் திரு. திலகராஜ் அவர்கள் சிறந்த கலைவழிக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்தார். இவரின் அமர்வு ஆர்வத்தை மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் இருந்தது. தென்னங்கீற்று மூலம் கைக்கடிகாரம், பேசும் பொம்மை, கிரீடம், கண்ணாடி போன்றவற்றை எளிதாக உருவாக்கக் கற்றுத்தந்தார். ஒவ்வொரு பொம்மையாக குழந்தைகளும் அவருடன் சேர்ந்தே செய்தனர். எல்லாரும் செய்த பின்னரே அடுத்த பொம்மையைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார்! செய்து முடித்தவர்கள் மற்றவர்களுக்கு ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தனர்! எந்த குழந்தையும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் தெளிவுடன் நிகழ்வைக் கொண்டு சென்றார்! பிற்பகுதியில் ஓவியர் கார்த்திகா அவர்களின் கலைவகுப்பு நடைபெற்றது. 'நகலெடுக்காத கலை' என்பதையே அவர் வலியுறுத்து வருகிறார்! இடத்தைச் சுற்றி பார்த்து, குழந்தைகள் அவர்களுக்கு பிடித்ததை வரைந்தனர் – பூனை, மரங்கள், நாற்காலி, இலை எனப் பல வகையான ஓவியங்களால் அமர்வு களை கட்டியது. மரக்கதவில் இருந்த யானை சிற்பம், அறையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த விளக்கு மற்றும் பொருளாளர் ப்ரியா அவர்களின் உடையில் இருந்த வடிவமைப்பு என மூன்றையும் இணைத்து ஒரு பெண் குழந்தை வரைந்தது ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது! இவை அனைத்தும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிறவிக் கலைஞர் என்பதைக் உணர்த்தியது! இறுதியில் சிறந்த கலை ஆசிரியர் மாஸ்டர். திரு. சந்துரு அவர்கள் சிறுவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டு வடிவங்களை வரையச் சொல்லி, அதன்மூலம் அவர்கள் வரைந்த விதத்திற்கு பின் இருக்கும் உளவியலை எடுத்துரைத்தார்! காலையில் காரப்பொரி, கருவேப்பிலை சாறு, மதியம் சாம்பார் சாதம், மோர் சாதம், மாலையில் கொண்டைக்கடலை சுண்டல், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கப்பட்டன. விஷ்ணுபுரம் சரவணனின் 'கயிறு' புத்தகம் ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசாக வழங்கப்பட்டு, அதைப் படித்துக் கருத்து தெரிவிக்கவும், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் விவாதிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. — தேவர்பிரான் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், திருநெல்வேலி கிளை, தலைவர்.

  • சகுந்தலா தேவி

    ஜோ : வணக்கம் செல்லக்குட்டிகளா! குழந்தைகள் : வணக்கம் ஜோ அத்தை ஜோ : கடந்த மாதம் இந்தியாவின் முதல் ஆசிரியரைப் பற்றிப் பார்த்தோம். இந்த மாதம் ஒரு முக்கியமான ஆளுமையை பத்தி பார்க்கப்போறோம். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு கேள்வி உங்களுக்குப் பிடிச்ச பாடம் எது? நகுலன் : அறிவியல் ரதி : கணக்கு நகுலன் : என்னது கணக்கா ஐயோ சாமி கணக்குனாலே எனக்கு காய்ச்சல் வந்துரும். ரதி : கணக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. புரிந்துகொண்டால் மிகவும் சுலபம் தெரியுமா? நகுலன் : ஓ நீ கணக்குல புலி என்று சொல்கிறாயா? ரதி : இப்போ சின்ன புலி சீக்கிரமா பெரிய புலி ஆயிடுவேன் நகுலன் : சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் சரியா சொல்றியா? ரதி கேளு நகுலன் 65 + 72 + 64 +32 +27+ 43+ 11 ரதி : 314 நகுலன் ஆச்சரியமா இருக்குது அத்தை! பாருங்க கையை இப்படி அப்படி ஆட்டி ஆட்டி உடனே சொல்லிட்டா! ஜோ : கூடிய சீக்கிரத்துல இந்தியாவுடைய முதல் பெண் கணித மேதை சகுந்தலா தேவி மாதிரி வர என்னோட வாழ்த்துக்கள். நகுலன் : யாருங்க அத்தை சகுந்தலாதேவி? அவங்க தமிழ்நாடா? ஜோ : இல்லை, அவங்க பெங்களூரு ரதி : அவர் கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்கி இருப்பாங்க. அதனால் தான் அவர் அந்த கின்னஸ் சாதனை எல்லாம் செய்ய முடிந்தது. ஜோ : அதுதான் இல்ல அவங்க ஆரம்பப் பள்ளியைக் கூட தாண்டாதவங்க. ரதி : அப்படியா! அப்புறம் எப்படி இப்படி ஒரு பெயர் வாங்கினாங்க? ஜோ : அவரோட அப்பா, சகுந்தலா சிறு வயதாக இருக்கும் போது சர்க்கஸில் சீட்டு கட்டடில் எண் வித்தைகள் செய்வதற்கு வீட்டில் பயிற்சி எடுக்கும் போது சகுந்தலா தேவி அதை கவனித்துக் கொண்டே இருப்பார். நகுலன் : அடேயப்பா! அப்ப அவர் தினமும் சர்க்கஸ் பார்க்க கூட்டிட்டு போய் இருப்பாரு. எங்க அப்பாவும் சர்க்கஸ் இருந்தால் எப்படி இருந்திருக்கும் நானும் தினமும் சர்க்கஸ் பார்த்து இருக்கலாம். ரதி : ஹ! ஹ! ஹ! எனக்கும் கூட அப்படித்தான் தோன்றியது. பிறகு என்னவாயிற்றுங்க அத்தை. ஜோ : அவரோட அப்பாவோடு சேர்ந்து சீட்டுக்கட்டு வித்தைகள் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் அவரின் அப்பாவுக்கு சகுந்தலாவின் கணிதத் திறமை தெரிந்தது. தன்னோட வேலையை விட்டுட்டு தெருக்களில் தன் குழந்தையோட கணித திறமையை ஒரு நிகழ்ச்சியா நிகழ்த்திக் காட்டினார். ரதி : சமீபத்துல் செஸ் சாம்பியன் பிரக்யானந்தாவோட அப்பா கூட வேலையை விட்டுட்டு பிரக்யானந்தாவை பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் அழைச்சிட்டு போனாரே அந்த மாதிரி சகுந்தலா அவரோட அப்பாவும் அழைச்சிட்டு போயிருக்காங்க. ஜோ : சரியாகச் சொன்னாய் ரதி! அதே மாதிரி தான். ரதி : எங்க அப்பா கூட எங்காவது போட்டி நடந்ததுன்னா என்ன கூட்டிட்டு போவாங்க லீவு போட்டுட்டு கூட்டிட்டு போவாங்க. அவருடைய அப்பா ஏன் போட்டிகளுக்கெல்லாம் அழைத்துச் செல்லவில்லை? ஜோ : அந்தக் காலகட்டத்தில் இந்த மாதிரி நிறைய போட்டிகள் இல்லை. அதனால் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அழைத்துச் சென்று மாணவர்கள் முன்பு திறமை வெளிப்படுத்த வைத்தார். 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு நடத்துனர். இது நிறைய இடங்களில் பேசப்பட்டு அதன்பிறகு தன் குழந்தையோட திறமையை உலகத்துக்கு அறிய செய்யணும் என்பதற்காகவே 1944 இல் லண்டன் சென்று 1960 வரைக்கும் ஏராளமான நாடுகளுக்கு பயணம் செய்து சகுந்தலாதேவியோட திறமையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். ரதி : அத்தை அவரோட திறமையைக் கண்டு பிடிப்பதற்கு எந்த மாதிரி கேள்விகள் கேட்டார்கள்? ஜோ : உதாரணத்திற்கு 1977 132 517 என்கிற எண்ணோட கனமூலத்தை வேகமா கணக்கிட்டாரு. அதுல கணினியவே தோற்கடிச்சுட்டார். அதன்பிறகு 1988 ஆர்தர் ஜென்குசன் என்கின்ற கலிபோர்னியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் சகுந்தலாதேவியோட கணிதத் திறமையைப் பரிசோதித்தார். 61 62 98 75 எண்ணின் கன மூலத்தையும் 170 859 375 என்கிற எண்ணோட ஏழாவது மூலத்தையும் கேட்டார். நகுலன் : இது கொஞ்சம் பெரிதாக இருக்கிறது கொஞ்சம் அதிக நேரம் எடுத்து இருப்பாரு. சரிங்களா அத்தை? ஜோ : இதில் தான் பெரிய ஆச்சரியமே. கேள்வி கேட்டு முடித்து அவர் நோட்டில் எழுதி முடிப்பதற்கு முன்பே பதில் சொல்லிட்டாரு. இது மாதிரி போகிற இடமெல்லாம் கேட்கிற கணக்குத் தொடர்பான அனைத்திற்கும் உடனே பதில் கொடுத்தாங்க. எல்லாரும் வியந்து போயிட்டாங்க. ரதி : எந்தக் கணக்கு பண்ணி கின்னஸில் இடம் பிடிச்சாரு?. ஜோ : ஜூன் 18, 1980இல் இம்பீரியல் கல்லூரி லண்டனில் கணினி துறை மூலமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க எண்கள் 76 86 36 97 74 87 0 மற்றும் 24 650 99 745 779 இந்த இரண்டு எண்களையும் பெருக்கி சரியா 28 வினாடிகளில் விடையைச் சொல்லிட்டார். நகுலன் : அதனால்தான் அவருக்கு கின்னஸ் கொடுத்தார்களா? நீதான் கணக்கில் பெரிய புலி ஆயிற்றே ரதி. இதை உன்னால் சொல்ல முடியுமா? சொல்லு பாக்கலாம்? ரதி : ஐயோடா! இவ்ளோ பெரிய எண்ணெல்லாம் என்னால் முடியாது. ஜோ : நகுலன், ரதி குட்டி இன்னும் வளர்ந்து இதைவிடப் பெரிய பெரிய கணக்கெல்லாம் போட முடியும். இல்லையா ரதி? ரதி ஆமாங்க அத்தை. அந்த இரண்டு எண்களையும் பெருக்கினதில் என்ன விடை கிடைத்தது? ஜோ : கேட்ப்பீர்கள் என்று தெரியும். அதனால தான் நான் சீட்டில் எழுதி வந்து இருக்கிறேன். என்னால் அவ்வளவு பெரிய எண்ணை மனப்பாடம் பண்ண முடியலை. 18 94 76 68 1777 995 426 462 773 730 இந்த எண்ணைச் சொல்வதற்கே எனக்கு மூச்சு வாங்குகிறது. உண்மையாலுமே அவர் ஜீனியஸ்தான். ரதி : அவர்களைப் பற்றி இந்தியில் ஒரு படம் கூட வந்திருக்கிறதாகவும் 2013இல் கூகுள்ல முகப்புல மேடம் சகுந்தலாதேவியோட படத்தை வைத்ததாகவும் அப்பா சொல்லி இருக்காங்க. எப்பவுமே நீ ஒரு சகுந்தலா தேவி மாதிரி வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க அப்பா. ஜோ : சரியா சொன்னே. நீயும் சகுந்தலா தேவி மாதிரி கணக்கில் பெரிய சாதனைகள் புரியவும் நகுலனும் அவனுக்குப் பிடித்த அறிவியலில் பெரிய சாதனைகள் புரியவும் வாழ்த்துகள் தங்கங்களா! அடுத்த மாசம் இன்னொரு ஆளுமையை பற்றி தெரிந்து கொள்ளலாம் சரியா செல்லங்களா? குழந்தைகள் : சரிங்க அத்தை! நன்றிங்க!

  • குழந்தைகளின் உரிமைகள் - 1

    உலகநாடுகள் அனைத்தின் ஒன்றுபட்ட ஒரு சர்வதேசக் கூட்டமைப்புக்கு ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு என்கிறோம். சுருக்கமாக ஐ. நா. சபை என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது. இந்த ஐ. நா. சபையின் துணையமைப்புகளுள் ஒன்று : unicef என்கிற, உலகக் குழந்தைகளுக்கான அமைப்பு. உலகத்தின் குழந்தைகள் அனைவரும் கல்வி, சுகாதாரம், உணவு, உறைவிடம் உள்பட அனைத்து அடிப்படைத்தேவைகளையும் பெற்றுத்தன்னிறைவு பெற்றவர்களாக ஆக வேண்டும் என்பது இந்த அமைப்பின் குறிக்கோள், இலட்சியம். ஒரு குழந்தை என்றால் யார், அதன் உரிமைகள் என்னென்ன, அவற்றைப் பாதுகாப்பதில் பெற்றோர், குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சமூக உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்,சமுகத் தலைவர்கள் போன்று அனைத்துத்தரப்பினரும் ஆற்ற வேண்டிய பங்களிப்புக் குறித்து யுனிசெஃப் ஒரு தீர்மானம் இயற்றியிருக்கிறது. ” குழந்தைகளின் அனைத்து உரிமைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவையனைத்தும் ஒன்றுக்கொன்று சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை குழந்தைகளிட மிருந்து எந்தக் காரணம் பற்றியும் பறித்துக் கொள்ளப்படக் கூடாதவை. ஒரு குழந்தை என்றால் யார் ? ஆணோ , பெண்ணோ , யாராயிருந்தாலும், 18 வயதிற்குக் கீழ் உள்ள எந்த ஒரு மனிதரும் குழந்தை என்று unicef வரையறுத்துள்ளது. இதை உலக நல வாழ்வு அமைப்பு உள்பட உலகமே ஏற்றுக் கொண்டும் இருக்கிறது. யுனிசெஃப் கன்வென்ஷனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறிப்பிடும் அனைத்து உரிமைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த உரிமைகள் உண்டு. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கே வேண்டுமாயினும் வசித்து வரலாம். எந்த மொழி பேசுவோராகவும் இருக்கலாம். அவர்களின் மதம் எது என்பதோ, அவர்கள் எதைச் சிந்திக்கிறார்கள் என்பதோ, அவர்களின் தோற்றம் எப்படி இருக்கிறது என்பதோ – இவை எதுவுமே பிரச்னையே இல்லை. அந்தக் குழந்தை, ஒரு பையனாகவோ, ஒரு சிறுமியாகவோ இருக்கக்கூடும். ஒரு சிலர் உடல், மன ரீதியான மாற்றுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுள் சிலர் பரம ஏழைகளாக இருப்பார்கள். வேறு சிலர் பணம் படைத்தவர்கள். இன்னும் சிலர் நடுத்தர நிலையில் இருக்கலாம். அவர்களின் பெற்றோர் யார் என்பதோ, அவர்களில் யார் மேற்கண்ட மூன்று நிலைகளில் எந்த நிலையைச் சேர்ந்தவர் என்பதோ இங்கு பிரச்னையில்லை. குழந்தைகளின் பெற்றோர் எந்தக் கடவுள் அல்லது மதத்தை நம்புகிறார்கள் என்பதும் நமக்கு முக்கியமல்ல. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகின்றனர் என்றும் பார்க்க வேண்டியதில்லை. மேற்கண்ட எந்த ஒரு விஷயத்தின் அடிப்படையிலும், எந்த ஒரு காரணத்தினாலும் எந்த ஒரு குழந்தையும் ஒரு போதும் பாதிக்கப்படக்கூடாது. இவற்றுள் எந்த ஓர் அம்சத்தின் அடிப்படையிலும் எந்தக் குழந்தையும் நியாயமற்ற முறையில் நடத்தப்படக்கூடாது. ” Unicefகன்வென்ஷன் நிறைவேற்றிய மேற்கண்ட தீர்மானத்தின் முதல் அம்சமே மேலே சற்று விரிவாகத் தரப்பட்டுள்ளது. ஒரு வகையில், அதன் தமிழ் மொழியாக்க வடிவம் என்றே சொல்ல வேண்டும். இதுதான் மற்ற எல்லா அம்சங்களுக்கும் அடிநாதம். ஆனால் இன்றைய நிலை என்ன ? சற்றுக் கண்களை மூடிக்கொள்வோம். கடந்த பத்து அல்லது பதினைந்து நாள்களுக்குள் நமது கண்களில் பட்ட, நாம் பத்திரிகைகளில் அல்லது தொலைக்காட்சிச் செய்திகளில் படித்த, பார்த்த செய்திகளில், குழந்தைகள் பற்றியவற்றைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வந்து பார்ப்போம். மூன்று வயதுப் பெண் குழந்தையை, அதே பள்ளியில் படிக்கும் பன்னிரண்டு வயதுப் பையன், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, தலையில் பாறாங்கல்லால் தாக்கியதில், அது மரணமடைந்தது. ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு மூன்று ஆசிரியர்கள், தங்களின் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, அவர்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் குழந்தையின் மண்டையில் தாக்கி மண்டை ஓடு உடைந்திருக்கிறது. இவையும் இன்னமும் ஏராளமான செய்திகளை அன்றாடம் எதிர்கொள்கிறோம். இவை எதைக்காட்டுகின்றன ? நமது குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கிறது என்ற ஓர் எதார்த்தத்தைக் காட்டுகின்றன. மொத்தமுள்ள குழந்தைகளில் ஒரு பத்துப்பேரின் பிரசனைகளை வைத்து ஓட்டு மொத்தக் குழந்தைகளின் நிலைமையே இதுதான் என்று தீர்மானித்து விட முடியுமா ? முடியாது ! கூடாது ! ஆனால், இவை ஒரு வகைமாதிரிப் பிரச்னைகள். மற்ற குழந்தைகளின் நிலைமைகளில் வெவ்வேறு வகையான சிக்கல்கள் இருக்கின்றன. குடும்பத்தில், தெருவில், பள்ளியில், பஸ்களில், கோயில்களில், பிற பொது இடங்களில் என்னென்ன வகையான துன்பங்களைக் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று நாம் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் உரிமைகள் இவை என்று உலகமே ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு விட்ட உரிமைகள் கூட, எந்த ஓரு இடத்திலும், ஒரு போதும் முழுமையாகக் கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை நாம் தெரிந்து கொள்ள முடியும். ( உரிமைகள் அறிவோம்.)

  • லீவு

    சைக்கிளை நிறுத்திவிட்டு வேகவேகமாகப் படியேறி மொட்டை மாடிக்கு வந்தான் ஆகாஷ். அவனின் நண்பர்கள் முன்பே அங்கே வந்துவிட்டனர். “ஏண்டா இவ்ளோ லேட்டு?” என்று முகிலன் கேட்க, “நான் எங்கடா லேட்டு… இன்னும் அக்கா கூட வரவே இல்லையே?” என்று பதில் சொல்லிகொண்டே புத்தகப் பையைக் கழற்றி கீழே வைத்தான். ”சரிடா…. அக்கா வரதுக்குள்ள முடிவை எடுத்துடணும்” என்றான் விக்கி. “ஆமாடா… மூணு நாளா இதை வைச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கீங்க. அக்கா கிட்ட தெளிவா சொல்லிடுவோம்” என்றாள் பூரணி. அனைவரும் அக்கா வருவதற்காகக் காத்திருந்தார்கள். அது லீலா வீட்டின் மொட்டை மாடி. லீலா ஆசிரியர் பணிக்குப் படித்திருக்கிறார். இன்னும் வேலை கிடைக்கவில்லை. அதனால் தன் வீட்டு மொட்டை மாடியில் டியூசன் எடுக்கிறார். அதற்காக சின்ன பந்தல் போட்டப்பட்டிருக்கும். காலையில் பத்தாம் வகுப்புக்கும், மாலையில் ஒன்பது வகுப்புக்கும் டியுசன் எடுக்கிறார். அவரை முதலில் மிஸ் என்று அழைத்தார்கள். ஆகாஷ் மட்டும் அக்கா என்று கூப்பிட்டான். அது அப்படியே எல்லோருக்கும் பரவி ‘லீலா அக்கா’ என்றுதான் இப்போது அழைக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் ஆகாஷ், முகிலன், பிரின்ஸி, ரஹீம் என ஒன்பதாம் வகுப்பில் உள்ள 40 பேரில் 18 பேர் இங்கு டியூசனுக்கு வந்துவிடுவார்கள். முழு ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் ஒரே மாதம்தான் இருக்கிறது. அதனால் தீவிரமாகப் படித்தனர். லீலா படியேறி வரும் சத்தம் கேட்டதும் சலசல என்று இருந்த பேச்சுச் சத்தம் சட்டென்று நின்றது. “ஸ்கூல் விட்டு வந்து ஸ்நாக்ஸ் ஏதாச்சும் சாப்பிட்டிங்களா?” என்று கேட்டவாறே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் லீலா. ”ஓ” என்று எல்லோரும் சொல்லி முடித்தும் சிலர் மட்டும் குசுகுசு எனப் பேசுவது கேட்டது. “நான் என்ன சொல்லியிருக்கேன்… யார் பேசினாலும் சத்தமாப் பேசுங்க… இல்லாட்டி பேசாதீங்கன்னுதானே?” என்று லீலா கேட்டதும் குசுகுசு பேச்சு நின்றது. ”இவன்தான் அக்கா” என்று முகிலனைக் கைக்காட்டினாள் பிரின்ஸி. “என்ன முகிலா… என்கிட்ட சொல்லலாமா?” “இல்ல… அக்கா, நாளைக்கு டியூசன் லீவுன்னு சொன்னீங்க இல்ல…” தயங்கிகொண்டே சொல்ல ஆரம்பித்தான் முகிலன் “ஆமா… அதுக்கு என்ன?” “இல்லக்கா, நாளைக்கு லீவு விட வேண்டாமேன்னு பேசிட்டு இருந்தோம்” “என்னடா இது ஆச்சர்யமா இருக்கு. சனி, ஞாயிறுல டியூசன் வைச்சா சில பேர வர மாட்டீங்க… இப்ப என்னடான்னா, நானே லீவு விட்டாலும் வேணாம்னு சொல்றீங்க?” என்று வியப்பாகக் கேட்டார் லீலா. “ இன்னும் ஒரு மாசம்தான் எக்ஸாம்க்கு இருக்குக்கா…. அதான்” என்று எழுந்து சொன்னான் ஆகாஷ். “ஓ! அப்படின்னா கூட்டா சேர்ந்து பேசியிருக்கீங்களா… அப்ப, அதைப் பேசி முடிச்சிட்டு பாடத்துக்குப் போலாம். என்ன?” யாரும் பதில் சொல்லாம் மெளனமாக இருந்தனர். “சரி, நாளைக்கு எதுக்காக லீவு விட்டிருக்கேன்” “ரம்ஜான் பண்டிகை” என்று எழுந்து சொன்னான் முகிலன். “அதனால” என லீலா பேச்சைத் தொடர்வதற்குள், எழுந்த ஆகாஷ், “அக்கா, அன்னிக்கு எப்படியும் ரஹீமும் பாத்திமாவும் வர மாட்டாங்க. அப்ப அவங்களுக்கு மட்டும் லீவு விட்டுடலாமே… எங்களுக்கு டியுசன் வைக்கலாமே?” என்றாள் பிரின்ஸி. “வைக்கலாம்தான்…. தீபாவளி அன்னிக்கு என்னென்ன செய்வீங்க சொல்லுங்க?” “காலையில குளிச்சிட்டு, புது டிரெஸ் போட்டுகிட்டு பட்டாசு கொளுத்துவோம்” என்றனர் ஆகாஷூம் முகிலும். ”ஒரு புஷ்வாணம் நல்ல வெளிச்சத்தோடு மேலே போய்ட்டு வர்றதைப் பார்க்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்டார் லீலா “ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்றான் ஆகாஷ். “ரொம்ப இல்லக்கா… ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப” என்று வாயை இழுத்து மிமிக்ரி மாதிரி செய்துகாட்டினான் முகிலன். எல்லோரும் சிரித்தனர். ”அப்படியா… உங்க தெருவுலேயே இருக்கிற ரஹீமும் அதே புஷ்வாணத்தைப் பார்த்தா அவனுக்கு மகிழ்ச்சியா இருக்கும்ல” “நிச்சயம் இருக்கும்க்கா” ”சரி… புது டிரெஸ்… பட்டாசு அவ்வளோதானா தீபாவளி?” “இல்ல இல்ல… ஸ்வீட்ஸ் நிறைய செய்வாங்க… அதை தெருவில இருக்கிற எல்லார் வீட்டுலேயும் கொண்டுபோய் கொடுப்போம்” “ரஹீம் வீட்டுக்கும்தானே?” “ஆமா… முதல்ல போறதே அவன் வீட்டுக்குத்தான்” “ஏன் அவன் வீட்டுக்கு கொடுக்கணும்… அவனுக்குத்தான் தீபாவளி பண்டிகை இல்லையே?” “நாங்க எல்லாம் ஸ்வீட் சாப்பிடும்போது அவனும் சாப்பிடனும் இல்லக்கா… பட்டாசுக்கூட அவனுக்குக் கொடுப்பேன்” என்றான் முகிலன். “அப்பன்னா, பண்டிகைங்கிறது ஏதோ ஒருவகையில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுறதுதானே?” “ஆமா?” “அப்பன்னா, ரம்ஜானும் அப்படித்தானே? அது ரஹூம், பாத்திமா வீட்டு பண்டிகை மட்டுமா என்ன?” மெளனமாக யோசித்தனர். “தீபாவளி, கிறிஸ்மஸ் பண்டிகை மகிழ்ச்சியில ரஹூமையும் பாத்திமாவையும் உங்களோடு சேர்த்துகொள்ற மாதிரி ரம்ஜான் பண்டிகை மகிழ்ச்சியில் உங்களையும் அவங்கக்கூட சேர்த்துக்க ஆசை படுவாங்க இல்ல” “ஆமாக்கா” என்றனர் ஒரே குரலில். “அக்கா… ரம்ஜான் அன்னிக்கு காலையில இருந்து அவங்கக்கூட இருக்கோம். மாலையிலதானே டியூசன்?” என்று புதுகேள்வி கேட்டான் முகிலன். “ஆமா, வழக்கமான நாட்கள்ல டியூசனுக்கு அவங்களா வர முடியல்லன்னா… பரவாயில்ல… அவங்க கொண்டாடுற நேரத்துல டியூசன் வைச்சா என்ன பண்ணுவாங்க?” “அவங்களே லீவு போட்டுடுவாங்க அக்கா” “அப்ப வீட்டுல இருக்கிறப்ப, இன்னிக்கு அக்கா சொல்லிக்கொடுக்கிறத மிஸ் பண்றோம்னு அவங்களுக்கு தோணும்ல” “ஆமா அக்கா… ஒருவேளை கொண்டாட்டத்தை விட்டுட்டு அவங்களே டியூசனுக்கு வந்துட்டா?” என்றாள் பூரணி. “அவங்களே வந்தாலும் நாம வலுக்காட்டயப்படுத்தின மாதிரி தானே இருக்கும் பூரணி?” “ஆமாக்கா” “அதனால…” என்று லீலா பேச ஆரம்பித்ததை இடைமறித்த முகிலன் “ஆமாக்கா… ஒருநாள் லீவு விட்டா எதுவும் ஆகிடாது. அதை சேர்த்து அடுத்த நாள் கூடுதலா நேரம் ஒதுக்கி படிச்சிடலாம். நாளைக்கு பாத்திமாவோடும் ரஹீமோடும் சேர்ந்து ரம்ஜானைக் கொண்டாடப் போறோம்” என்றான். இப்படிப் பேசி முடிக்கும்போதும் ரஹூமும் பாத்திமாவும் டியூசனுக்கு வந்தார்கள். “ஸாரி அக்கா… கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்றனர். ”பரவாயில்லை. பாடத்தை ஆரம்பிப்போமா?” என்று லீலா கேட்க உற்சாகமாக எல்லோரும் தலையாட்டினர். அடுத்த நாள் ரம்ஜான். லீலா வீட்டு மொட்டை மாடியில் ஆகாஷ், முகிலன், பூரணி, பிரின்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கூடியிருந்தனர். எதற்காக? டியூசனுக்காக இல்லை. தன் டியூசன் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து தருவதற்காக அங்கு வரச் சொல்லியிருந்தனர் ரஹூமும் பாத்திமாவும். அவர்களும் பிரியாணிக்காக ஆவலாகக் காத்திருந்தனர். மாடிப்படியில் இருவரும் ஏறிவரும் சத்தம் வருவதற்குள் பிரியாணியின் வாசம் மொட்டை மாடிக்கு வந்துவிட்டது. எல்லோரும் “ஹோ….” எனச் சத்தமிட்டு அவர்களை வரவேற்றனர்.

  • “நான் கதைகளை நேசிக்கிறேன்”

    அமெரிக்க எழுத்தாளர் டே கெல்லர், கேட் டி’கமில்லோவிடம் அவரது புதியநாவலான ”ஃபெரிஸ்” குறித்தும், அவரது எழுத்துகளில் பரவலாகக் காணப்படும் முக்கியமான கருத்துக்கள் குறித்தும் பேசுகிறார் - தமிழாக்கம்: வே.சங்கர் டே கெல்லர் : வணக்கம். உங்களோடு நான் இந்த நேர்காணலைச் செய்வதற்கு மிகவும் பெருமிதமடைகிறேன். உங்கள் புத்தகங்களை நான் இப்போது மட்டுமல்ல, என் சிறுவயதில் இருந்தே நேசிக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கும் போது The Tiger Rising புத்தகத்தை என் வகுப்பு ஆசிரியர் உரக்க வாசித்துக்காட்டிய நினைவுகள் இன்னும் என் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. Despereaux புத்தகத்தை நூலகத்திற்குச் சென்று வாசித்ததும் மறக்கமுடியாத அனுபவம். இப்போது உங்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கேட் டி’கமில்லோ: உங்களது வார்த்தைகள் என்னை நெகிழச்செய்கிறது. குழந்தைகளின் புத்தக உலகம் என்பது யாராலும் கற்பனை செய்யமுடியாத அற்புதமான ஒன்று. ஒரு முறை கேதரின் பேட்டர்சனை சந்தித்தபோது, ’உங்களை நீண்டநாட்களாகப் பார்க்கவே முடியவில்லையே?’ என்று கேட்டேன். அதேபோல, கிரிஸ்டோபர் பால் கர்டிஸை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட உணர்வை ஒருபோதும் மறக்க முடியாது. நாம் அனைவரும் ஒரே நோக்கத்துடன்தான் செயல்படுகிறோம் என்று தோன்றுகிறது. குழந்தைகள் தனிமையை உணராமல் இருக்க வேண்டுமானால் கதைகள் சொல்வதுதான் ஒரே வழி. வாழ்க்கை கடினமாக இருந்தபோதிலும், நாம் செய்யும் பணி மிகவும் மகத்துவமானது. உங்களுக்குள் இன்னும் இருந்துகொண்டிருக்கும் சிறுவயதுக் குழந்தைமைக்கு நன்றி. டே : உங்களுக்கு, உண்மையிலேயே நான்தான் நன்றி செல்லவேண்டும். இந்த அருமையான பணியில் ஈடுபட்டிருக்கும் மகத்தான மனிதர்கள் மத்தியில் நானும் இருப்பது என் அதிர்ஷ்டம்தான். இதை இறுதியில் கேட்கலாம் என்றிருந்தேன், ஆனால், இப்பொழுதே தொடங்குகிறேன். நீங்கள் முதன்முதலில் Winn-Dixie புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்திற்குப் போய், அப்போது இருந்த உங்களிடம் ஒரு வார்த்தை சொல்ல வாய்ப்பு கிடைத்தால், என்ன சொல்வீர்கள்? கேட் : அருமையான கேள்வி. அந்தக் காலத்திற்குப் போவது மிகவும் எளிது என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கதையை எழுதத் தொடங்கும்போது எனக்குள் ஒருவிதமான தெளிவற்ற உணர்வு இருந்தது. பிறகு காலப்போக்கில் ’இதுதான் என் வாழ்க்கையின் உன்னதமான பணி’ என்று புரிந்து கொண்டேன். அப்போது எனக்குள் ஏராளமான ஐயப்பாடுகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கிறது. அந்தக் காலகட்டத்திற்குத் திரும்பிச்சென்று சொல்லவேண்டுமானால், ”இதுதான் உனக்கான சரியான பாதை” என்று சொல்லிக்கொள்வேன். டே : மிகவும் அழகாகச் சொன்னீர்கள். உங்கள் இத்தனை கால எழுத்துப் பயணத்தில், “பொதுவெளியில் எழுத்தாளராகவும், உள்ளார்ந்த பிரபல இலக்கியப் படைப்பாளராகவும்” இருப்பதை எப்படிச் சமன் செய்கிறீர்கள்? கேட் : கடந்த வாரம் ஒரு நிகழ்வில் ஒருவர் கேட்டார்: “The Tale of Despereaux என் குழந்தைப் பருவத்தில் என் உயிரைக் காப்பாற்றியது என்று யாராவது சொன்னால் அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்றார். ”அதைப் பற்றி என்னால் யோசித்துப்பார்க்கவே முடியவில்லை.” என்று பதில் சொன்னேன். ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள் எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன். பிறகு, அந்த கனம் நிறைந்த நிமிடங்களை நான் மறந்துவிடவேண்டும். இல்லையென்றால் மனம் குழம்பிவிடும். இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா! டே : ஆம். சிறார்களுக்கு எழுதும்போது பொறுப்பு கூடிவிடுகிறது. அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிலநேரங்களில் பயமுறுத்துவதாகவே இருக்கிறது. அவர்களுக்கு எழும் உளவியல் சிக்கல்கள் அனைத்தையும் ஒற்றைப் புத்தகத்தில் தீர்த்துவிடவேண்டும் என்று திணிக்கிறோம். பிறகு எப்படி ஒரு கதையை எழுதுவது? கேட்: மிகவும் உண்மை. குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகங்களில், ”இதில் என்ன நீதி இருக்கிறது?” என கேட்பது வழக்கம். ஆனால் பெரியவர்களுக்கான எழுத்தாளர்களிடம் இம்மாதிரி அசட்டுத்தனமான கேள்விகள் கேட்கப்படுவதில்லை. நான் குழந்தைகளுக்கு எதையாவது கற்பிக்க முயன்றிருந்தால், நிச்சயம் தோல்வியடைந்திருப்பேன். எனவே, “இந்தக் கதையில், இவ்வுலகில் உள்ள குழந்தைகளை நம்பிக்கையுடன் வாழச் செய்யவேண்டும்” என்று எண்ணிக்கொண்டு எழுதினால், அது நடக்காது. அப்படிச் சிந்திக்கவும் கூடாது. நான் சமீபத்தில் வாஷிங்டனில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். அது மிகப்பெரியதொரு சுமையாக இருந்தது. அந்தந்த கணத்தில் முழுமையாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை நான் உணர்வேன். பிறகு விமானத்தில் திரும்பும்போது Colson Whitehead எழுதிய Harlem Shuffle புத்தகத்தை வாசித்தேன். நான் மீண்டும் என் உடலுக்குள் திரும்பிய மாதிரி உணர்ந்தேன். “நீங்கள் உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் எப்போதும் தனித்துவமானவர்; உங்களுக்கே உரிய சிறப்புகள் உங்களுக்குள் உண்டு. முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; உங்களுக்கே உரிய பிரகாசத்துடன் நீங்கள் ஜொலிப்பீர்கள்.” டே : “நீங்கள் உங்களுடைய உடலுக்குள் மீண்டும் திரும்பிவந்தேன் என்று சொல்வதைக் கேட்கும்போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுபோன்ற உணர்வுகளை நானும் மிகத்துல்லியமாக உணர்ந்திருக்கிறேன். எழுத்தாளர் என்ற உண்மையான சுயத்தையும், புத்தக ஆசிரியர் என்ற என் வெளிப்படையான முகத்தையும் தனித்தனியே பிரித்துப்பார்க்கும்போது ’எழுதும் செயலே’ என்னை எனக்குள் திரும்ப அழைத்துவருவதைப் போல உணர்கிறேன். வகுப்பறைப் பாடம் என்ற கோணத்தில் ஒரு விசயத்தை அணுகும்போது உங்கள் புத்தகங்களில் வரும் சொற்கள்தான் எனக்கு நினைவில் வருகிறது. Ferris நான்காம் வகுப்பு ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொண்ட சொற்களை நினைவுகூருகிறாள். அவற்றை தான் புரிந்துகொண்டதைப் போல வாசகருக்கும் கடத்துகிறாள். உங்கள் புத்தகங்கள் குழந்தைகளுக்கு புதிய சொற்களையும் அந்தச் சொற்களின் அர்த்தங்களையும் கற்றுத்தருகின்றன. கதையின் மூலம் நீங்கள் சொல்லவரும் நோக்கம் அதுதான் என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. உங்களது சொந்தவரிகளையே நான் மேற்கோள் காட்டுவதாகத் தவறாக நினைக்கவேண்டாம். இருந்தாலும் சொல்கிறேன். ‘Ferris மற்றும் Billy எழுத்துக்களையும், வார்த்தைகளின் அர்த்தங்களையும் தேர்வுகளுக்காக படித்து மனப்பாடம் செய்தார்கள். அந்தச் சொற்கள் அவர்களின் மூளை மற்றும் இதயத்தில் நிரந்தரமாக பதிந்துவிட்டன. அவை இப்போது Ferris-இன் சொற்களாகிவிட்டன.’ என்று எழுதியிருக்கிறீர்கள். இந்த வரி என்னை மிகவும் ஆச்சரியப்படச் செய்தது. அதனால்தான் இந்தக் கேள்வி என் மனதில் உருவானது. உங்களுக்கு முதன்முறையாக ‘சொற்கள் எனக்கானவை’ என்று உணர்ந்த தருணம் எப்போது?” கேட்: “நான் எப்படியாவது விரைவில் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வெறித்தனமாக இருந்தேன். அப்போது, என் மனம் முழுவதும் வேறொரு உலகில் இருந்தது. ’கதைகள்தான்’ எனக்கு மிகவும் அவசியம் என்ற உணர்வு இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்றவுடன் எங்களுக்கு உச்சரிப்புகள் (phonics) கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்கள். என்ன காரணத்தாலோ, phonics என் முளைக்குள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. எனக்கு பயமாக இருந்தது. பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் கதறி அழுதேன். நான் கதைகள் வாசிக்க வேண்டும், ஆனால் இந்தத் எழுத்துக்கள் கொண்டிருக்கும் உச்சரிப்புகள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன. நான் மிகவும் விரும்பிய வாசிப்பு என்ற அந்த விஷயம் என்னிடமிருந்து விலகிவிட்டது போலவே இருந்தது. என் அம்மா என்னுடைய சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர். மிகவும் அன்பானவர். என்னவோ செய்யட்டும் என்று வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஓரமாக நிற்கவில்லை. ”அடடே! இதற்காகவா வருத்தப்படுகிறாய்? நீ எல்லாவற்றையும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வதில் வல்லவளாயிற்றே” என்றார். பிறகு எனக்காக வார்த்தை அட்டைகளைத் (flash cards) தயார் செய்தார். அதன் உதவியோடு சொற்களை மனப்பாடம் செய்து வாசிக்கக் கற்றுக்கொண்டேன். அம்மா ஏதாவது ஒரு சொல்லை ஃப்ளாஸ் கார்டில் காட்டி முடிப்பதற்குள் நான் சொல்வதில் தேர்ச்சி பெற்றேன். ஒவ்வொரு வார்த்தையையும் என் அம்மா எனக்கு காட்டும் போதெல்லாம் அது ஒரு பரிசு போலவும், ஒரு திறவுகோல் போலவும் இருந்தது. எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது – நாங்கள் இருவரும் சமையலறையில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்போம். அவர் அந்த அட்டைகளை எனக்கு காட்ட, ‘இவை என்னுடையவை. இந்தச் சொற்களைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்’ என்று என் மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்” டே : நீங்கள் சொன்ன கதையைக் கேட்டவுடன் Ferris புத்தகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதையே’. நீங்கள் இப்போது சொன்ன கதையும் ஒரு அன்புமிகுந்த கதையே. இது மிகவும் அழகானது மட்டுமல்ல மனித மனதைக் கனிவூட்டுவதாகவும் இருக்கிறது.” கேட் : “நீங்கள் இப்படி சொல்லும்போது எனக்கு இன்னும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என் அம்மாவுக்கு தெளிவாக நன்றி சொல்ல இயலாமல் போய்விட்டது. அது இன்றளவும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் என்னிடம் என்னென்னவற்றையெல்லாம் பரிசாகக் கொடுத்தார் என்பது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. ஏனென்றால், அவர் எனக்கு என்னவெல்லாம் தேவை என்பதைக் கவனித்துக் கவனித்து நிவர்த்தி செய்தார். அவர் எப்போதும் என்னை ஒரு ‘வாசிப்பவளாகவே’ பார்த்தார். கவனித்தார். நான் வாசிப்பதற்கு ஏற்ற புத்தகங்களை முதன் முதலாக எனக்காக வாங்கித் தந்ததும் அவர் தான்.” டே : “அந்த மாதிரியானவர்கள் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் இருக்க வேண்டும். இந்த நேர்காணலுக்குப் பிறகு, உடனே என் அம்மாவை அழைத்து நன்றி சொல்லப் போகிறேன்!” கேட் : “ஆம், கண்டிப்பாக நன்றி சொல்லுங்க!” டே : “ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதை என்ற கருத்து – நீங்கள் அந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன்பே நம்பினீர்களா? இல்லையெனில் எழுதிக் கொண்டிருக்கும்போது அது உங்களுக்குள் வந்ததா?” கேட் : : “நீங்கள் கேட்கும் விதமே எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதனால் நாம் நண்பர்களாக இருக்கவேண்டும் போலிருக்கிறது!” டே : [வாய்விட்டுச் சிரிக்கிறார்] கேட் : “எனக்கொரு சிறந்த தோழி இருக்கிறாள், நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம். அவளுக்கு 2019 டிசம்பர் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அது என் அப்பாவின் பிறந்தநாளாகும். ஆனால், அவர் அதே ஆண்டின் நவம்பரில் இறந்துவிட்டார். 2020 ஜனவரி 1ஆம் தேதி, அந்தக் குழந்தையின் புகைப்படங்கள் என் கைபேசியில் வந்தன. அந்தக் குழந்தையின் பெயர் Rainy. அந்தக் குழந்தை அன்பு நிறைந்த உறவினர்களால் சூழப்பட்டிருந்தாள். அம்மா, அப்பா, இரண்டு பாட்டி-தாத்தாக்கள்...” அப்போது, நான் என்ன நினைத்தேன் என்றால், ‘இவ்வளவு பாசத்துடன் வாழ்த்துகள் சொல்லப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்கையை மையமாகக் கொண்டு ஒருகதையைத் தொடங்கினால் எப்படி இருக்கும்?’ ஏனென்றால் நான் எழுதிய எந்த கதையிலும் இப்படியொரு தொடக்கம் இருக்கவே இல்லை. அதே நேரத்தில் என் அப்பா என்னுடைய நினைவில் இருந்தார். அவர் மிக மோசமான, துயரமிக்க சிறுவயதைக் கொண்டவர். அவர் நிச்சயம் பாராட்டத்தக்கவர்தான். எங்களுக்கு சிறந்ததைக் கொடுக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. அது மிகவும் மோசமாகவே இருந்தது. அவர் இவ்வுலகை விட்டு சென்ற நேரத்தில், அந்தக் குழந்தை இந்த உலகில் வந்திருக்கிறாள். நான் என்ன நினைத்தேன் என்றால், ‘ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்தே அன்பு நிரம்பி வளர்கிறாள் என்ற இடத்திலிருந்து கதை எழுதினால் எப்படி இருக்கும்?’ அதுவே என் கதையின் தொடக்கம். அன்பு மையமாக இருந்தது. பிறகு, ஒவ்வொரு தடைகளையும் நான் விலக்கியபடியே சென்ற பிறகு, கதையில் உள்ள பாட்டி Charisse சொல்வதைப் பாருங்கள்: ‘ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதையே’. நான் உருவாக்குகிற கதாபாத்திரங்கள் என்னைவிட புத்திசாலிகள். காரணம், இது உண்மையாகவே நிகழ்கிறது. ஒவ்வொரு நல்ல கதையும் ஒரு அன்புசூழ் கதையாகத்தான் பரிணமிக்கிறது.” டே : “நீங்கள் இந்தக் கதையைச் சொல்லும்போது எனக்கு உடல் முழுக்க புல்லரிக்கிறது. இப்போது, உங்கள் கதாபாத்திரங்களைப் பற்றியும் பேச ஆசையாக இருக்கிறது. உங்கள் எல்லா கதைகளிலும் வரும் கதாபாத்திரங்கள் மிகப் பெரிய அளவில் இருந்தாலும், அவை எல்லாம் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், அவை கேலிச்சித்திரங்களில் உள்ள கதாபாத்திரங்களைப்போல ஆகிவிடுவதில்லை. நீங்கள் கதாபாத்திரங்களை உருவாக்கும்போது என்ன செய்கிறீர்கள்?” கேட் : கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க நான் பெரிதும் மெனக்கெடுவதில்லை. நான் கதாப்பாத்திரங்களைத் தேடுகிறேனோ இல்லையோ, உண்மையில் அவைகள் என்னைக் கண்டடைந்துவிடுகின்றன. கேலிச்சித்திரம்போல நான் அவைகளை உருவாக்கும் நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடுதான் நடக்கிறேன். அது மிகப்பெரிய சவால். ஆனால், உருவாக்கியபிறகு அதை என்ன செய்யவேண்டும் என்று எனக்கே தெளிவாகத் தெரிவதில்லை. அது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ஒருசிலர் கேட்பார்கள், “நீ எப்போ பெரியவர்கள் வாசிக்க ஒரு புத்தகம் எழுதப்போறே? என்று. அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். நான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வேன். ஏனென்றால், குழந்தைகளுக்கு எழுதும் புத்தகங்களின் மீது எனக்குத் தீராத மயக்கமுண்டு. அது நேரடியாகத் தெரியாது. ஒரு விசித்திரமான அழகு மிதந்து செல்வதைப் போல ஓரக்கண்களால் பார்க்கும்போது தெரியும். அதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அது Katherine Paterson சொன்னது போல: ‘நம்பிக்கையான முடிவைத் தரவேண்டியது நம் கடமை. எழுதும்போது எதிர்பாராதவிதமாக வந்துசேரும் ஒரு சில வித்தியாசமான கதாபாத்திரங்கள், என் உள்ளத்தில் உண்மையாகவே வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நம்பிக்கை பயணத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஏனெனில், நம்முடைய ஒற்றுமையை உணரும்போதுதான், நம்பிக்கைக்கான ஒரு இடம் உருவாகிறது. இதுதான் புத்தகங்கள் செய்யும் அற்புதம். “புத்தகங்கள் உன்னை யாரோ உண்மையில் பார்க்கிறார்கள் என்று உணரச்செய்கின்றன. அதே நேரத்தில், நீயும் பிறரை எப்படிப் பார்க்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கின்றன”. ஆசிரியர் குறிப்பு: கேட் டி’காமில்லோ (Kate DiCamillo) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர். 2014 – 2015- ஆண்டுக்கான (National Ambassador for Young People & Literature) அமெரிக்க சிறார் இலக்கிய தூதராக நியமிக்கப்பட்டார். தன் எழுத்துக்களின் மூலம் குழந்தைகளின் பழக்கவழக்கங்களை, நுண் உணர்வுகளை, வாழ்க்கை மீதான பார்வைகளைக் கதாபாத்திரங்களின் வழியாகவும், உருக்கமான உரையாடல்கள் மூலமாகவும், குழந்தைகளின் உலகத்தை உணர்த்தும் வகையிலும் கற்பனைக் கதைகளைப் படைப்பதில் வல்லவர். மார்ச் 25, 1964ல் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் பிறந்த இவர், சிறுவயதின் பெரும்பாலான காலத்தை ஃப்ளோரிடா மாகாணத்தில் கழித்தவர். Because of Winn-Dixie (2000) இவரது முதல் நாவல். ஒரு சிறுமிக்கும், அவளால் அழைத்துச்செல்லப்படும் ஒரு நாய்க்கும் இடையே உருவாகும் நட்பு பற்றிப் பேசும் இந்நாவல் Newbery Honor விருதைப் பெற்றது. The Tale of Despereaux (2003), Despereaux என்ற பெயர்கொண்ட ஒரு சிறிய சுண்டெலி பற்றிய நாவல். இந்நாவல் தைரியம், பாசம், மற்றும் ஒரு அரண்மனை உலகத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்நாவல் Newbery Medal விருது பெற்றது. Flora & Ulysses (2013) என்ற நாவல் Flora என்ற சிறுமியும் ஒரு சக்திவாய்ந்த ardent சிட்டுக்குருவி மற்றும் Ulysses இடையே நடக்கும் அதிசய அனுபவங்களைப் பற்றியது. இந்நாவல் ஒரு காமிக்ஸ் பாணியில் எழுதப்பட்டது. இந்நாவல் Newbery Medal விருதை மீண்டும் வென்றது. The Miraculous Journey of Edward Tulane (2006) என்ற நாவல் porcelain rabbit எட்வர்ட் டுலேனின் பயணத்தைச் சொல்வது. இந்நாவல், பயணத்தின் வழியே அன்பு, பாசம், இழப்பு, தியாகம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. Raymie Nightingale (2016) என்ற நாவல் குழந்தைகளின் மனங்களில் ஏற்படும் ஏக்கம், நண்பர்களுடன் வளர்கின்ற உறவுகள் பற்றி அழகாகச் சொல்கிறது. கேட் டி’காமில்லோவின் எழுத்துக்களில் அன்பு, நம்பிக்கை, நகைச்சுவை இவை மூன்றும் எல்லா இடங்களிலும் பிரதானமாக வெளிப்படுகிறது). டே கெல்லர் (Tae Keller) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எழுதிய கதைகளில் பெரும்பாலும் இரட்டைக் கலாச்சாரப் பின்னணியை மையமாகக் கொண்ட சிறுமிகள், தங்களது தனித்துவமான அடையாளத்தைக் கண்டறிய முயல்வதைப்பற்றியதாக இருக்கிறது. இவரது ’When You Trap a Tiger (2020)’ என்ற நாவல் ஒரு இரட்டை கலாச்சார வாழ்வைக்கொண்ட சிறுமி லில்லி மற்றும் அவரது கொரிய பாட்டி இடையிலான உறவைப் பற்றியது. கொரிய நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தப்பட்ட இக்கதை, 2021ஆம் ஆண்டு Newbery Medal விருதைப் பெற்றது. The Science of Breakable Things (2018) என்ற இந்தக் கதை, ஒரு சிறுமி தனது தாயின் மனநலக் குறைபாட்டை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பயணத்தை விவரிக்கிறது. இது 2018ஆம் ஆண்டின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. Jennifer Chan Is Not Alone (2022) என்ற இவரது நாவல், சமூக ஒதுக்கீடு மற்றும் நட்பின் முக்கியத்துவத்தைப் பற்றியதாக இருக்கிறது. நன்றி – School Library Journal

  • சூரிய ஒளி இல்லாமலேயே வாழும் உயிரிகள்

    "சூரியனுடைய ஒளிதான் எல்லா உணவுச்சங்கிலிகளுக்கும் அடிப்படையானது" என்று நாம் பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். சூரிய ஒளி இல்லாமல் தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாது, தாவரங்கள் இல்லாமல் உணவுச்சங்கிலியும் இயங்காது. ஆகவே சூரியனுடைய ஒளி இல்லாமல் எந்த உணவுச்சங்கிலியும் செயல்பட முடியாது. 1977 வரை எல்லாரும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கண்டுபிடிப்பு எல்லாவற்றையும் மாற்றியது. 1977ம் ஆண்டில் என்ன நடந்தது? தென்னமெரிக்காவுக்கு அருகில் உள்ள கலபகோஸ் தீவுகளில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சில அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். இந்தக் குழுவின் தலைமை அறிவியலாளராக இருந்தவர் ராபர்ட் பல்லார்ட் என்ற நிலவியலாளர். நார் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் அமர்ந்துகொண்டு அவர்கள் ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் கருவிகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். கடலுக்கு அடியில் உள்ள வெந்நீர் ஊற்றுகளில் (Hydrothermal Vent) என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன என்று தேடியபோது, அவர்கள் ஒரு புதிய வகை பாக்டீரியாவை கண்டுபிடித்தார்கள். இந்த பாக்டீரியா எப்படியெல்லாம் உணவு தயாரிக்கிறது என்று சோதனை செய்து பார்த்தபோது அறிவியலாளர்கள் வியந்துபோனார்கள். ஏனென்றால், இந்த பாக்டீரியா, கரியமில வாயு என்று அழைக்கப்படும் கார்பன் டை ஆக்சைடையும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயுவையும் மட்டுமே வைத்துக்கொண்டு உணவு தயாரித்துவிடும்! சூரிய ஒளி இல்லாமல் உணவு தயாரிக்கும் முதல் உயிரினம் இப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது! "இதுவரைக்கும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே உணவு தயாரிக்க முடியும் என்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்னஞ்சிறு பாக்டீரியா நமது அடிப்படையான நம்பிக்கைகளையே சுக்குநூறாக உடைத்துவிட்டதே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். "நாங்கள் எல்லாருமே பேசக்கூட மறந்து அப்படியே ஆச்சரியத்தில் உறைந்துபோனோம். இந்த உயிரிகளைக் கண்டுபிடித்தது ஒரு அட்டகாசமான உணர்வைத் தந்தது" என்று அந்த நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார் ராபர்ட் பல்லார்ட். கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரி, அறிவியலையே மாற்றியமைத்தது. சூரிய ஒளி இல்லாமல் உயிர்கள் வாழ முடியும் என்று அனைவரும் அறிந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல, சூரிய ஒளி படாத ஆழ்கடலில் முழுமையான உணவுச்ச்சங்கிலிகள் இருக்கும் என்பதையும் அன்றுதான் கண்டுபிடித்தார்கள். சூரிய ஒளி இல்லாமல் இவ்வாறு உணவு தயாரிப்பதை வேதிச்சேர்க்கை (Chemosynthesis) என்று அழைக்கிறார்கள். இந்த உலகில் ஆயிரக்கணக்கான வேதிச்சேர்க்கை நுண்ணுயிர் இனங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்கள்தான் வேதிச்சேர்க்கை செய்கின்றன. அது மட்டுமல்ல, இந்த வகை நுண்ணுயிர்கள் வெப்பம் அதிகமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளிலும்கூட தாக்குப்பிடித்து வாழும் தகுதி படைத்தவை. கடினமான சூழலில் வாழும் இதுபோன்ற உயிரிகளை Extremophile என்று அழைப்பார்கள். அதீதத் தன்மையை விரும்பும் உயிரிகள் என்று இதற்குப் பொருள் கூறலாம். இந்த வேதிச்சேர்க்கை நுண்ணுயிரிகளின் இன்னொரு சிறப்பம்சத்தை சொல்லட்டுமா? சிலவகை வேதிச்சேர்க்கை நுண்ணுயிர்கள் தனியாக வாழும். இன்னும் ஒரு சில நுண்ணுயிர்கள், பிற விலங்குகளின் உடலில் இணைந்து கூட்டாக வாழும்! அந்த விலங்குகள் தனியாக வேட்டையாடவோ,உணவு தயாரிக்கவோ தேவையில்லை. இந்த பாக்டீரியாக்கள் தயாரித்துத் தரும் உணவை அப்படியே சாப்பிட்டால் போதுமானது. விலங்குகளுக்கு உணவு கிடைத்துவிடும், பாக்டீரியாக்களுக்கு இருப்பதற்கு இடம் கிடைத்துவிடும். இருவருக்கும் சாதகமான நட்பு இது. நண்டுகள், ஆழ்கடல் புழுக்கள், சிப்பிகள் என பல வகை உயிரினங்களுடன் இந்த பாக்டீரியாக்கள் இணைந்து வாழ்கின்றன. இந்த பூமியில் உயிர்கள் உருவானபோது சூரிய ஒளியை வைத்து உணவு தயாரிக்கும் முறை இருக்கவில்லை என்றும், இந்த வேதிச்சேர்க்கை முறைதான் முதலில் வந்தது என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். சூரிய ஒளியும் அதிகப்படியான ஆக்சிஜனும் இல்லாமலேயே இந்த உயிரிகளால் வாழ முடியும் என்பதால் இவைதான் பண்டைய உயிரினங்களாக இருந்திருக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது மட்டுமல்ல, செவ்வாய் கிரகம், வியாழன் கோளின் நிலவான யுரோப்பா போன்ற பல இடங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பகுதிகளில் எல்லாம் இதுபோன்ற வேதிச்சேர்க்கை நடப்பதற்கே வாய்ப்பு அதிகமாம்! ஆகவே இங்கெல்லாம் ஒருவேளை நுண்ணுயிர்கள் வாழ்ந்தால் அவையும் வேதிச்சேர்க்கை செய்யக்கூடிய நுண்ணுயிர்களாகத்தான் இருக்குமாம். பில் நை என்ற புகழ்பெற்ற அறிவியல் ஆர்வலர், "மனித இனத்தின் 100 நூறு முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டால் அதில் வேதிச்சேர்க்கை நுண்ணுயிர்கள் கட்டாயம் இடம்பெறும்" என்கிறார்.

  • லண்டனிலிருந்து அன்புடன் - 2

    சுட்டிகளுக்கு அன்பு வணக்கம், “இலண்டனிலிருந்து அன்புடன்” எனும் தொடரை, இலண்டனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலிருந்து நாம் தொடங்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டத்தில் hologauze animations வழியே தோன்றி வாழ்த்துச் சொன்ன “பேடிங்கடன் கரடி” குறித்து சென்ற பதிவில் நாம் பேசியிருந்தோம். உலகப் புகழ் பெற்ற “பேடிங்கடன் கரடி” புத்தகம் பற்றித்தான் நாம் இனி பார்க்க இருக்கிறோம். "A Bear Called Paddington" என்ற குறுநாவல் 1958ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கல் பாண்ட். 1958யிலிருந்து 2016 வரை மொத்தம் 30 புத்தகங்கள் பேடிங்க்டன் கரடி கதாபாத்திரம் கொண்டு வெளியாகியுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் 8-10 அத்தியாயங்கள் கொண்டவை. நீங்கள், எட்டு வயதிற்கு மேல் உள்ளவர் என்றால் நீங்களாகவே இந்தப் புத்தகத்தை வாசித்துவிடலாம். Paddington என்பது இலண்டனில் உள்ள ஓர் ஊரின் பெயர். அங்கு ஒரு பெரிய ரயில் நிலையமும் உண்டு. அந்த ரயில் நிலையிலிருந்து, இங்கிலாந்தில் உள்ள வெவ்வேறு தொலைதூர ஊர்களுக்கு ரயில்கள் வந்து செல்வது வழக்கம். கதையின்படி, மிஸ்டர் பிரவுன் மற்றும் அவரது மனைவி இருவரும் பேடிங்கடன் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அவர்களது குழந்தைகள் வெளியூரில் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், குழந்தைகள் வீட்டிற்குத் திரும்புகின்றனர். ரயிலின் வருகைக்காக அவர்கள் காத்திருந்த போதுதான், கோட்சூட் & தொப்பி அணிந்த கரடி ஒன்று தனது பெட்டியுடன் ரயில் நிலையத்தில் தனியே அமர்ந்திருப்பதை இருவரும் கவனித்தனர். அந்தக் கரடியின் கழுத்தில் “Please look after this bear” என்றும் எழுதப்பட்டிருந்தது. இருவரும் அந்தக் கரடியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தனர். தான் பெரு(Peru) எனும் நாட்டிலிருந்து வருவதாகவும், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு நிறையப் பாதிப்புகள் ஏற்பட்டதால், தனது அத்தை லூசி தன்னை இலண்டன் அனுப்பினார் என்றும் ஆனால் தனக்கு எங்குச் செல்வது, எங்குத் தங்குவது, யாரிடம் உதவி கேட்பதும் தெரியவில்லை என்று வருத்தமாகக் கூறுகிறது. வந்து நீண்ட நேரமாகியும், யாரும் தன்னுடன் பேசவில்லை என்றும், தனக்கு மிகவும் பசிக்கிறது என்றும் பேடிங்கடன் கரடி பதில் அளித்தது. கரடிக்கு அவர்கள் உணவு வாங்கி தருகின்றனர். அப்பொழுதுதான் கரடிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, “பேடிங்டன்” எனும் ரயில் நிலையத்தின் பெயரையே கரடிக்கு வைக்கின்றனர். அதற்குள் குழந்தைகள் அங்கு வந்து சேருகின்றனர். அழகான பேசும் கரடியை பார்த்ததும், கரடியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சிறுவர்கள் விரும்புகின்றனர். அப்படித்தான் பேடிங்க்டன் கரடி ப்ரவுன் குடும்பத்தில் இணைகிறது. அதன் பிறகு அந்தக் கரடி குடும்பத்தினருடன் இலண்டனிலுள்ள ஒவ்வொரு பகுதிக்குச் செல்வதும் அங்குச் செல்லும்போது அது செய்யும் சேட்டைகளுமே இந்தப் புத்தகத்தின் கதை. பேடிங்க்டனுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் உண்டு. அது குழந்தைகள் போலவே சிந்திக்கும். orange marmalade எனப்படும் ஒரு இனிப்பு தான் பேடிங்கடனுக்கு பிடித்த உணவு. ஊர் சுற்றுவது, அத்தைக்குக் கடிதம் எழுதுவது, ரகசியமாக வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிசுகள் ஏற்பாடு செய்வது என அது நிறையத் திட்டமிடும். ஆனால் அதன் சில செயல்கள் மட்டுமே பாராட்டுகளைப் பெற்றுத் தரும். பல நேரங்களில் அது செய்யும் செயல்கள் சொதப்பி பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும். அதிலிருந்து தப்பிப்பதுதான் பேடிங்க்டன் கரடியின் சுவாரஸ்யமான கதை. திரைப்படங்களில் ரசித்த வடிவேலு அவர்களின் நகைச்சுவை போன்றே பேடிங்க்டன் கரடியின் செயல்களும் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். பேடிங்க்டன் கதை திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்கூட “Paddington at Peru” எனும் மூன்றாம் பாகம் வெளியானது. பேடிங்க்டன் கரடி தனது சொந்த ஊரான பெருவுக்கு சென்று தனது அத்தையைத் தேடுவதாகக் கதை அமைந்திருக்கும். கதையின் முடிவில், பேடிங்க்டனின் சொந்த ஊரான பெருவிலே தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்தா? பெருவா? எது தனது சொந்த ஊர் என்ற குழப்பத்தில் பேடிங்க்டன் தவித்துக்கொண்டிருக்கும். நாம் அனைவருமே வெவ்வேறு காரணங்களுக்காக, நமது சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கோ, வேறு மாநிலத்திற்கோ, அல்லது வேறு நாட்டிற்கோ மாறியிருப்போம். புதிய இடத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும், சொந்த ஊரை நாம் அடிக்கடி நினைத்துக் கொள்வோம். “சொர்கமே என்றாலும் அது நம் சொந்த ஊர் போல வருமா” பாடலைகூட நாம் கேட்டிருப்போம். எது நமது சொந்த ஊர்? பிறந்த ஊரா? அல்லது நாம் தற்போது வாழும் ஊரா? என்ற குழப்பம் அனைவருக்குமே உண்டு. அதே குழப்பத்தில்தான் பேடிங்க்டன் கரடியும் தவித்துக்கொண்டிருக்கும். பேடிங்க்டன் தனது கரடி சொந்தங்களுடன் பெருவில்தான் தங்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்க்க, இங்கிலாந்துதான் தனது சொந்த ஊரென பேடிங்க்டன் முடிவெடுக்கும். ஏன் தெரியுமா? ஏனென்றால், யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்கிறது பேடிங்க்டன். அதனால்தான், உலக அமைதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது பேடிங்க்டன் கரடி.

  • குழந்தைகளின் உரிமைகள் – 2

    ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள், அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை எந்தப்பள்ளியில் சேர்ப்பது, அவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், வயது வந்த பெரிய குழந்தைகள் என்றால், அவர்கள் இந்தக் கல்லூரியில் சேர வேண்டும், இன்ன படிப்புப் படிக்க வேண்டும் என்ற பல்வேறு முடிவுகளையும் பெரியவர்கள்தாம் பெரும்பாலும் எடுக்கின்றனர். “ என் பையன் / பொண்ணு நாங்க கிழிச்ச கோட்டத் தாண்டவே மாட்டாங்க” என்று பெருமையுடன் சொல்லும் பெரியவர்களை, பெற்றோரை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இந்த மாதிரிச் செய்யக்கூடாது என்று சொல்கிறது யூனிசெப் அமைப்பின் பிரகடனம். பெரியவர்கள் இம்மாதிரி முடிவுகளை, அல்லது குடும்பத்தில் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் தாங்கள் எடுக்கும் முடிவுகள், தமது குழந்தைகளை எந்த வகையில் பாதிக்கும் என்று தீர யோசித்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்கிறது யூனிசெப். குழந்தைகளுக்கு இந்த உலகிலுள்ள ஆகச் சிறந்த அனைத்தையும் தர வேண்டும் என்பது உலகக் குழந்தைகள் நல அமைப்பின் இரண்டாவது அம்சம். மாமேதை லெனின் இதையே எவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் என்று நாம் மனதிற் கொள்ள வேண்டும் : “ உலகின் ஆகச் சிறந்தவை அனைத்தும் குழந்தைகளுக்கே !” என்பது லெனினின் முழக்கம் . பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் - இப்படி வேறு யாராக இருந்தாலும் அவர்களின் எந்த ஒரு செயலும் மிகச் சிறந்தவற்றையே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது யூனிசெப்பின் விதி. இதை, அநேகமாக உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டு யூனிசெப் அமைப்பின் பிரகடனத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றன. அவ்வாறு நாம் அனைவரும் வழங்குகிறோமோ என்பதை அந்தந்த நாட்டின் அரசாங்கம்தான் கண்காணித்து உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் பிரகடனம் வலியுறுத்திக் கூறுகிறது. பெற்றோரால் அவரவர் குழந்தைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறார்களா, பாதுகாக்கப்படுகிறார்களா என்பதையும் அரசாங்கமே உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த விதி சொல்கிறது. பெற்றோர் அப்படி என்ன அக்கறையே இல்லாமல் இருப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழும். அறியாமை, கவனக்குறைவு, அலட்சியம், இயலாமை, வறுமை நிலை போன்ற பல்வேறு காரணங்களால் அன்றாடம் எங்கேனும், யாரேனும் ஒரு குழந்தை பாதிக்கப்படுவதை, உயிரையே இழப்பதை செய்திகளில் நாம் பார்க்க முடிகிறது. காரில் குழந்தைகளை உட்கார வைத்து, கார்க்கதவைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார் ஒரு பெண். அந்தக் குழந்தைகள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் போகப்போக, காருக்குள் காற்றோட்டம் இல்லாமல், சுவாசிக்கக் கூட முடியாமல் இரண்டு குழநத்தைகள் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய கொடுமை ! ஒரு நர்சரி பள்ளியில் தண்ணீர்த்தொட்டிக்குள் விழுந்து ஒரு நான்கு வயதேயான பெண் குழந்தை இறந்து போன செய்தி போன வாரம் செய்தித்தாள்களில் வந்து அதிர வைத்தது. எங்கே குழந்தைகள் இருந்தாலும், அங்கே இருக்கும் பெரியவர்கள் தாம் குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு என்கிறது யூனிசெப். அரசாங்கம் இதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பது விதி. இதை நாம் செய்கிறோமா, அரசாங்கம் செய்கிறதா என்று நாம் கவனிக்க வேண்டும். ஆகச் சிறந்த அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கடமை நமக்கு அன்றி, வேறு யாருக்கு இருக்கும் ?

  • சவரக்கத்தி

    மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல பிளேடுகளை (blades), இன்றைய குழந்தைகள் கண்டிருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால்.. இரு புறமும் கூர்முனை கொண்ட பிளேடுகள் இவை. பள்ளியில் பென்சிலை கூர்ப்படுத்த கருவி இல்லையென்றாலும், வீட்டில் உள்ள ஆண்கள் சவரம் செய்வதென்றாலும் இந்த பிளேடுகள்தான் உதவும். வேண்டுதலுக்காகக் கோவிலுக்குப் போனால் கூட, இந்த பிளேடுகளில் ஒரு பாதியை வைத்து, தலைமுடியை மொட்டையடித்துவிடுவார்கள். தற்போது, சவரம் செய்பவர்கள் எது மாதிரியான சவரக்கத்தியைப் பயன்படுத்துகிறார்கள்? இதோ இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு வகையான சவரக்கத்தியாக இருக்கலாம். இதுபோன்ற ஒரு சவரக்கத்தி உங்கள் வீட்டில் இருந்தாலோ, இல்லை அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் இருந்தாலோ, அதை எடுத்துப் பாருங்கள். ஒரு பிளேடுக்கு பதிலாக மூன்று பிளேடுகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது அல்லவா? ஒரேயொரு பிளேடு வைத்து, சவரம் செய்து வந்தவர்கள், இப்படி மூன்று பிளேடு கொண்ட சவரக்கத்திக்கு மாறியது எப்படி? “ஒன்னு வாங்கினா ரெண்டு இலவசம்” அப்படி இப்படியென்று சும்மாவெல்லாம் இந்த மாற்றம் வரவில்லை. இதற்குப் பின்னால், பல கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வு இருக்கிறது. கிங் கேம்ப் கில்லட் (King Camp Gillette) என்பவர் கண்டுபிடித்த 1901ஆம் ஆண்டு சவரக்கத்தியானது. இதற்கு ஆங்கிலத்தில் ‘safety razor’ என்று பெயர். ஒரு பிளேடை இரண்டு புறமும் பாதுகாப்புக்கூறுகள் கொண்டு பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் இந்தப் பெயர். இந்தக் கண்டுபிடிப்பினை முன்வைத்து, கில்லட் தொடங்கிய நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கான சவரக்கத்திகள் விற்கப்பட்டு, இன்று நாம் அன்றாடம் புழங்கக்கூடிய பெயராக கில்லட் மாறியுள்ளது. சாதாரண கத்திரிக்கோல் அல்லது ஏதோ சிறு சிறு கருவிகளின் துணைகொண்டு சவரம் செய்துவந்த மக்கள், கில்லட்டின் சவரக்கத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு கண்டுபிடிப்பின் மூலம், லாபம் வந்தது. அதோடு நின்றுவிடலாம் என்று கில்லட் நிறுவனம் நின்றுவிடவில்லை. அடுத்து என்ன என்று யோசித்தது. 1971ஆம் ஆண்டு, “Trac II” எனப்படும் ஒரு ஒரே உறையில் இரண்டு பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகளை அறிமுகப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இரண்டு பிளேடுகள் எதற்கு என்பதற்கும் அவர்களிடம் ஒரு தெளிவு இருந்தது. முதல் பிளேடு, முடியை தோலிலிருந்து சற்றே வெளியே இழுக்கும். இரண்டாவது கத்தி அந்த இழுக்கப்பட்ட முடியை அதன் வேர் அருகேவே வெட்டிவிடும் - அது மீண்டும் உள்ளே நுழைவதற்குள். விளைவு? மிருதுவான சவரம்! இந்த யோசனையை “பின்னிடைவு விளைவு” (hysteresis effect) என்று அழைத்தனர். ஆனால் அர்த்தம் சுலபம்: ஒரு கத்தி இழுக்கிறது, அடுத்தது வெட்டுகிறது. ‘சவர’ உலகில் இதுவே பெரும் புரட்சி என்றால், அத்தோடு நின்றுவிடவில்லை கில்லட் நிறுவனம். ஒன்றுக்கு பதிலாக, இரண்டு பிளேடுகளை வைத்ததற்கே, இவ்வளவு மிருதுவான சவரம் கிடைக்கிறதென்றால், இன்னும் அதிக எண்ணிக்கையில் பிளேடுகளைக் கொண்டு சவரக்கத்திகளை உருவாக்கினால் என்ன என்று யோசித்தனர். யோசனை மட்டும் போதுமா? ‘செயல்’ அல்லவா முக்கியம்! இதற்காக 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. தற்சமயத்தில், 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது சுமார் 6,262.5 கோடி ரூபாய் ஆகும். இந்தக் காசில் பத்து ‘மங்கள்யான்’களையாவது நம்மால் தயாரிக்க முடியும். சின்ன சவரக்கத்திக்கு அவ்வளவு பெரிய தொகை ஏன் தேவைப்பட்டது? மூன்று பிளேடுகளை எந்தளவு தூரத்தில் பொறுத்த வேண்டும்; எவ்வளவு அகலம் இருக்க வேண்டும்; எந்த மாதிரியான உலோகக்கலவை தேவை; பிளேடுகள் எவ்வளவு கூர்மையில் இருக்க வேண்டும்; எந்த கோணத்தில் பிளேடுகளைப் பொறுத்த வேண்டும். இப்படி நுட்பமான கேள்விகள் பலவற்றிற்கும் பதில் வேண்டும். பத்தாண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் 1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுதான் “Mach 3” எனப்படும் சவரக்கத்திகள். மூன்று பிளேடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்த கத்திகள். அதற்குப்பின்பு, நான்கு ஐந்து என்று பல பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகள் வடிவமைக்கப்பட்டுவிட்டாலும், “Mach 3” என்பது தனித்துவமாக நிலைத்துவிட்டது. ஒரு சின்ன கத்திக்கு எத்தனை பெரிய வேலை!!!

  • Adolescence web series - 1

    Adolescence தொடர் பலரையும் சூறாவளியாகச் சுழற்றி அடித்திருக்கிறது. பதிமூன்று வயதுச் சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவியைக் கத்தியால் கடுமையாகத் தாக்குகிறான். அச்சிறுமி இறக்கிறாள். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு Adolescence தொடரை எடுத்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கொண்ட நான்கு பாகங்கள். இங்கே இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் சொன்னார்கள். எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய செய்தி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். 'இந்தக் காலத்துப் பசங்க, ரெம்பக் கெட்டுப் போயிருக்காங்க. ஆளும் தலைமுடியும்.....'என்ற குரல்கள் ஏராளமாக ஒலிக்கின்றன. உடனேயே ' பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகள் இல்லை. நீதிக்கதைகள் சொல்லணும்' என்று எதிரொலிகள். சற்றே சிந்தித்தாலும் ஒவ்வொரு தலைமுறையும் இப்படித்தான் அடுத்த தலைமுறையைப் பார்த்துப் புலம்பியிருக்கிறது என்பது புரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இச்சமூகத்தில் நீதி தவறிய செயல்பாடுகள் இருந்ததால் தானே வள்ளுவரும் நீதிகளைச் சொல்லியிருக்கிறார். சமகாலத்தில் கேட்பதால் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதிரான குரல்கள் அதிகமாக இருப்பது போலத் தோன்றுகிறது. வளரிளம் பருவத்தைக் கடந்து நடுத்தர வயதை அடையத் தொடங்கிய பலரும் அடுத்த தலைமுறையைக் குற்றம் சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். காலம், சூழலுக்கு ஏற்ப சிந்தனையும் சமூக அக்கறையும் தவறுகளையும் செய்தே அனைவரும் வளரிளம் பருவத்தைக் கடந்திருக்கிறோம். இப்பருவத்தின் இருண்மைகள் அனைவருக்கும் உண்டு. 'இன்றைய தலைமுறை தவறுகளைச் செய்கிறது. நாங்களெல்லாம் ஒழுக்கமாக இருந்தோம்.' என்று சொல்லி முடிக்கும்போதுதான் தன்னை 'யோக்கியன்' என்று நிரூபிக்க முயல்வதைப் புரிந்து கொள்ளலாம். வளரிளம் பருவத்தினரிடம் வன்முறை, போதை, அக்கறை இன்மை போன்ற நடத்தைகள் இப்போது அதிகரித்திருப்பதாக பலரும் வருத்தப்படுகிறார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளை விடக் கடந்த இருபது ஆண்டுகளில் சிந்தனையைத் தவிர அனைத்திலும் அளவற்ற மாற்றங்களை அடைந்திருக்கிறோம். குறிப்பாக அறிவியலின் வளர்ச்சி அளப்பரியது. எனவேதான் வளரிளம் பருவத்தினரின் நடத்தையில் இக்காலத்தில் பெரும் மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது. நம் சமூகத்தில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மிகவும் குறைவு. வளரிளம் பருவத்தினருக்கான செயல்பாடுகள் மிக மிக மிகக் குறைவு. குழந்தை இலக்கியமே தவழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வளரிளம் பருவத்தினருக்கான கலை, இலக்கியம் போன்றவை குறித்த பேச்சே இல்லை என்று கூறலாம். குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவம் வரை மனிதத்தோடு அடுத்த தலைமுறையைப் பழக்காத சுயநலமிக்க சமூகமாகப் பெரியவர்கள் இருக்கிறோம். வேகமும் துடிப்பும் கொண்ட வளரிளம் பருவத்தினரை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அதற்குத் தொடக்கமாகவே வளரிளம் பருவத்தினரைப் பற்றிய பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து உரையாடுவோம். அதிலிருந்து செயல்பாடுகளை உருவாக்க முயற்சி செய்யலாம். Adolescence பொழுது புலரும் நேரம். காவல் துறையினரின் வாகனங்கள் விரைகின்றன. ஆயுதம் தாங்கிய காவலர்கள் ஒரு வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள். வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். எதிர்ப்படுபவர்களின் முகத்திற்கு நேரே துப்பாக்கி. 'கீழே உட்காருங்கள்' என்ற குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. அம்மா கதறுகிறார். படியில் இறங்கி வந்த அப்பா, துப்பாக்கி முனையில் கைகளைத் தூக்கியபடி நிற்கிறார். அறையைத் திறந்த சிறுமி துப்பாக்கியைப் பார்த்துப் பயந்து அழுதபடி கீழே உட்கார்ந்திருக்கிறாள். அப்பாவிடம்," ஜெமி மில்லர் வீடுதானே இது? கைது செய்ய ஆணையோடு வந்திருக்கிறேன்." என்றபடியே ஒரு காவலர் மாடிக்குச் செல்கிறார். "நீங்க தப்பு பண்றீங்க. அவன் சின்னப்பையன்" என்று அப்பா கத்துகிறார். ஜெமியின் அறைக்கதவு திறக்கப்படுகிறது. பயத்தால் உடல் நடுங்கியபடியே கத்திக் கொண்டு இருக்கிறான் ஒரு சிறுவன். " ஜெமி மில்லர், ஒரு கொலைக் குற்றத்திற்காக உன்னைக் கைது செய்கிறேன். இப்போது நேரம் காலை 6.15 மணி." என்று காவலர் சொல்கிறார். ஜெமி பயத்துடன் "நான் எதுவும் செய்யல..." என்று அலறிக்கொண்டே இருக்கிறான். இப்படிப் பரபரப்பாகத் தொடங்குகிறது, Adolescence தொடர். காவல்நிலைய நடைமுறைகள், தொடக்க நிலை விசாரணைகள் என முதல் பாகம் முழுவதும் காவல் நிலைய நிகழ்வுகள் விரிவாகக் காட்டப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஏன் செய்கிறோம் என்று கைது செய்தவரிடம் சொல்லிச் சொல்லிச் செய்கிறார்கள். மனித உரிமைகளை மீறி விடாமல் கண்ணியமாக விசாரணை நடைபெறுகிறது. நம் காவல் துறைக்கு இது மிகச்சிறந்த பாடமாக இருக்கும். 13 வயதே ஆன சிறுவன் மீது கொலைக்குற்றம். நடந் தது என்ன? (தொடரும்)

bottom of page