top of page

நெல்லையில் வேனில் விழா -2025

  • Writer: உதயசங்கர்
    உதயசங்கர்
  • 4 days ago
  • 1 min read


தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (திருநெல்வேலி கிளை) மற்றும் விரல்கள் நுண்கலை குழு இணைந்து, மே 10, 2025 அன்று குன்னத்தூர் கிராமத்தில் உள்ள 'வேணுவனம்' என்ற இடத்தில் சிறுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 35 குழந்தைகள் பங்கேற்றனர்.


திருமதி விஜி அவர்களின் கோலாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எல்லா

குழந்தைகளும் உற்சாகமாக பங்கேற்றனர். அடிப்படை கோலாட்ட அசைவுகளை

குழந்தைகளுக்கு கற்றுத் தந்தார்.


அதன் பின் ஓலைக் கலைஞர் திரு. திலகராஜ் அவர்கள் சிறந்த கலைவழிக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்தார். இவரின் அமர்வு ஆர்வத்தை மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் இருந்தது.


தென்னங்கீற்று மூலம் கைக்கடிகாரம், பேசும் பொம்மை, கிரீடம், கண்ணாடி போன்றவற்றை எளிதாக உருவாக்கக் கற்றுத்தந்தார். ஒவ்வொரு பொம்மையாக குழந்தைகளும் அவருடன் சேர்ந்தே செய்தனர். எல்லாரும் செய்த பின்னரே அடுத்த பொம்மையைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார்! செய்து முடித்தவர்கள் மற்றவர்களுக்கு ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தனர்! எந்த குழந்தையும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் தெளிவுடன் நிகழ்வைக் கொண்டு சென்றார்!

பிற்பகுதியில் ஓவியர் கார்த்திகா அவர்களின் கலைவகுப்பு நடைபெற்றது.


'நகலெடுக்காத கலை' என்பதையே அவர் வலியுறுத்து வருகிறார்! இடத்தைச் சுற்றி பார்த்து, குழந்தைகள் அவர்களுக்கு பிடித்ததை வரைந்தனர் – பூனை, மரங்கள், நாற்காலி, இலை எனப் பல வகையான ஓவியங்களால் அமர்வு களை கட்டியது.


மரக்கதவில் இருந்த யானை சிற்பம், அறையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த விளக்கு மற்றும் பொருளாளர் ப்ரியா அவர்களின் உடையில் இருந்த வடிவமைப்பு என மூன்றையும் இணைத்து ஒரு பெண் குழந்தை வரைந்தது ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது!


இவை அனைத்தும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிறவிக் கலைஞர் என்பதைக் உணர்த்தியது! இறுதியில் சிறந்த கலை ஆசிரியர் மாஸ்டர். திரு. சந்துரு அவர்கள் சிறுவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டு வடிவங்களை வரையச் சொல்லி, அதன்மூலம் அவர்கள் வரைந்த விதத்திற்கு பின் இருக்கும் உளவியலை எடுத்துரைத்தார்!


காலையில் காரப்பொரி, கருவேப்பிலை சாறு, மதியம் சாம்பார் சாதம், மோர் சாதம், மாலையில் கொண்டைக்கடலை சுண்டல், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கப்பட்டன. விஷ்ணுபுரம் சரவணனின் 'கயிறு' புத்தகம் ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசாக வழங்கப்பட்டு, அதைப் படித்துக் கருத்து தெரிவிக்கவும், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் விவாதிக்கவும்

கேட்டுக்கொள்ளப்பட்டது.


தேவர்பிரான்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்,

திருநெல்வேலி கிளை, தலைவர்.









Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page