இயலில் தேடலாம்!
178 results found with an empty search
- குழந்தைகளின் உரிமைகள் – 2
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள், அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை எந்தப்பள்ளியில் சேர்ப்பது, அவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், வயது வந்த பெரிய குழந்தைகள் என்றால், அவர்கள் இந்தக் கல்லூரியில் சேர வேண்டும், இன்ன படிப்புப் படிக்க வேண்டும் என்ற பல்வேறு முடிவுகளையும் பெரியவர்கள்தாம் பெரும்பாலும் எடுக்கின்றனர். “ என் பையன் / பொண்ணு நாங்க கிழிச்ச கோட்டத் தாண்டவே மாட்டாங்க” என்று பெருமையுடன் சொல்லும் பெரியவர்களை, பெற்றோரை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இந்த மாதிரிச் செய்யக்கூடாது என்று சொல்கிறது யூனிசெப் அமைப்பின் பிரகடனம். பெரியவர்கள் இம்மாதிரி முடிவுகளை, அல்லது குடும்பத்தில் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் தாங்கள் எடுக்கும் முடிவுகள், தமது குழந்தைகளை எந்த வகையில் பாதிக்கும் என்று தீர யோசித்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்கிறது யூனிசெப். குழந்தைகளுக்கு இந்த உலகிலுள்ள ஆகச் சிறந்த அனைத்தையும் தர வேண்டும் என்பது உலகக் குழந்தைகள் நல அமைப்பின் இரண்டாவது அம்சம். மாமேதை லெனின் இதையே எவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் என்று நாம் மனதிற் கொள்ள வேண்டும் : “ உலகின் ஆகச் சிறந்தவை அனைத்தும் குழந்தைகளுக்கே !” என்பது லெனினின் முழக்கம் . பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் - இப்படி வேறு யாராக இருந்தாலும் அவர்களின் எந்த ஒரு செயலும் மிகச் சிறந்தவற்றையே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது யூனிசெப்பின் விதி. இதை, அநேகமாக உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டு யூனிசெப் அமைப்பின் பிரகடனத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றன. அவ்வாறு நாம் அனைவரும் வழங்குகிறோமோ என்பதை அந்தந்த நாட்டின் அரசாங்கம்தான் கண்காணித்து உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் பிரகடனம் வலியுறுத்திக் கூறுகிறது. பெற்றோரால் அவரவர் குழந்தைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறார்களா, பாதுகாக்கப்படுகிறார்களா என்பதையும் அரசாங்கமே உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த விதி சொல்கிறது. பெற்றோர் அப்படி என்ன அக்கறையே இல்லாமல் இருப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழும். அறியாமை, கவனக்குறைவு, அலட்சியம், இயலாமை, வறுமை நிலை போன்ற பல்வேறு காரணங்களால் அன்றாடம் எங்கேனும், யாரேனும் ஒரு குழந்தை பாதிக்கப்படுவதை, உயிரையே இழப்பதை செய்திகளில் நாம் பார்க்க முடிகிறது. காரில் குழந்தைகளை உட்கார வைத்து, கார்க்கதவைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார் ஒரு பெண். அந்தக் குழந்தைகள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் போகப்போக, காருக்குள் காற்றோட்டம் இல்லாமல், சுவாசிக்கக் கூட முடியாமல் இரண்டு குழநத்தைகள் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய கொடுமை ! ஒரு நர்சரி பள்ளியில் தண்ணீர்த்தொட்டிக்குள் விழுந்து ஒரு நான்கு வயதேயான பெண் குழந்தை இறந்து போன செய்தி போன வாரம் செய்தித்தாள்களில் வந்து அதிர வைத்தது. எங்கே குழந்தைகள் இருந்தாலும், அங்கே இருக்கும் பெரியவர்கள் தாம் குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு என்கிறது யூனிசெப். அரசாங்கம் இதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பது விதி. இதை நாம் செய்கிறோமா, அரசாங்கம் செய்கிறதா என்று நாம் கவனிக்க வேண்டும். ஆகச் சிறந்த அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கடமை நமக்கு அன்றி, வேறு யாருக்கு இருக்கும் ?
- சவரக்கத்தி
மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல பிளேடுகளை (blades), இன்றைய குழந்தைகள் கண்டிருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால்.. இரு புறமும் கூர்முனை கொண்ட பிளேடுகள் இவை. பள்ளியில் பென்சிலை கூர்ப்படுத்த கருவி இல்லையென்றாலும், வீட்டில் உள்ள ஆண்கள் சவரம் செய்வதென்றாலும் இந்த பிளேடுகள்தான் உதவும். வேண்டுதலுக்காகக் கோவிலுக்குப் போனால் கூட, இந்த பிளேடுகளில் ஒரு பாதியை வைத்து, தலைமுடியை மொட்டையடித்துவிடுவார்கள். தற்போது, சவரம் செய்பவர்கள் எது மாதிரியான சவரக்கத்தியைப் பயன்படுத்துகிறார்கள்? இதோ இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு வகையான சவரக்கத்தியாக இருக்கலாம். இதுபோன்ற ஒரு சவரக்கத்தி உங்கள் வீட்டில் இருந்தாலோ, இல்லை அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் இருந்தாலோ, அதை எடுத்துப் பாருங்கள். ஒரு பிளேடுக்கு பதிலாக மூன்று பிளேடுகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது அல்லவா? ஒரேயொரு பிளேடு வைத்து, சவரம் செய்து வந்தவர்கள், இப்படி மூன்று பிளேடு கொண்ட சவரக்கத்திக்கு மாறியது எப்படி? “ஒன்னு வாங்கினா ரெண்டு இலவசம்” அப்படி இப்படியென்று சும்மாவெல்லாம் இந்த மாற்றம் வரவில்லை. இதற்குப் பின்னால், பல கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வு இருக்கிறது. கிங் கேம்ப் கில்லட் (King Camp Gillette) என்பவர் கண்டுபிடித்த 1901ஆம் ஆண்டு சவரக்கத்தியானது. இதற்கு ஆங்கிலத்தில் ‘safety razor’ என்று பெயர். ஒரு பிளேடை இரண்டு புறமும் பாதுகாப்புக்கூறுகள் கொண்டு பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் இந்தப் பெயர். இந்தக் கண்டுபிடிப்பினை முன்வைத்து, கில்லட் தொடங்கிய நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கான சவரக்கத்திகள் விற்கப்பட்டு, இன்று நாம் அன்றாடம் புழங்கக்கூடிய பெயராக கில்லட் மாறியுள்ளது. சாதாரண கத்திரிக்கோல் அல்லது ஏதோ சிறு சிறு கருவிகளின் துணைகொண்டு சவரம் செய்துவந்த மக்கள், கில்லட்டின் சவரக்கத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு கண்டுபிடிப்பின் மூலம், லாபம் வந்தது. அதோடு நின்றுவிடலாம் என்று கில்லட் நிறுவனம் நின்றுவிடவில்லை. அடுத்து என்ன என்று யோசித்தது. 1971ஆம் ஆண்டு, “Trac II” எனப்படும் ஒரு ஒரே உறையில் இரண்டு பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகளை அறிமுகப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இரண்டு பிளேடுகள் எதற்கு என்பதற்கும் அவர்களிடம் ஒரு தெளிவு இருந்தது. முதல் பிளேடு, முடியை தோலிலிருந்து சற்றே வெளியே இழுக்கும். இரண்டாவது கத்தி அந்த இழுக்கப்பட்ட முடியை அதன் வேர் அருகேவே வெட்டிவிடும் - அது மீண்டும் உள்ளே நுழைவதற்குள். விளைவு? மிருதுவான சவரம்! இந்த யோசனையை “பின்னிடைவு விளைவு” (hysteresis effect) என்று அழைத்தனர். ஆனால் அர்த்தம் சுலபம்: ஒரு கத்தி இழுக்கிறது, அடுத்தது வெட்டுகிறது. ‘சவர’ உலகில் இதுவே பெரும் புரட்சி என்றால், அத்தோடு நின்றுவிடவில்லை கில்லட் நிறுவனம். ஒன்றுக்கு பதிலாக, இரண்டு பிளேடுகளை வைத்ததற்கே, இவ்வளவு மிருதுவான சவரம் கிடைக்கிறதென்றால், இன்னும் அதிக எண்ணிக்கையில் பிளேடுகளைக் கொண்டு சவரக்கத்திகளை உருவாக்கினால் என்ன என்று யோசித்தனர். யோசனை மட்டும் போதுமா? ‘செயல்’ அல்லவா முக்கியம்! இதற்காக 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. தற்சமயத்தில், 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது சுமார் 6,262.5 கோடி ரூபாய் ஆகும். இந்தக் காசில் பத்து ‘மங்கள்யான்’களையாவது நம்மால் தயாரிக்க முடியும். சின்ன சவரக்கத்திக்கு அவ்வளவு பெரிய தொகை ஏன் தேவைப்பட்டது? மூன்று பிளேடுகளை எந்தளவு தூரத்தில் பொறுத்த வேண்டும்; எவ்வளவு அகலம் இருக்க வேண்டும்; எந்த மாதிரியான உலோகக்கலவை தேவை; பிளேடுகள் எவ்வளவு கூர்மையில் இருக்க வேண்டும்; எந்த கோணத்தில் பிளேடுகளைப் பொறுத்த வேண்டும். இப்படி நுட்பமான கேள்விகள் பலவற்றிற்கும் பதில் வேண்டும். பத்தாண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் 1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுதான் “Mach 3” எனப்படும் சவரக்கத்திகள். மூன்று பிளேடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்த கத்திகள். அதற்குப்பின்பு, நான்கு ஐந்து என்று பல பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகள் வடிவமைக்கப்பட்டுவிட்டாலும், “Mach 3” என்பது தனித்துவமாக நிலைத்துவிட்டது. ஒரு சின்ன கத்திக்கு எத்தனை பெரிய வேலை!!!
- Adolescence web series - 1
Adolescence தொடர் பலரையும் சூறாவளியாகச் சுழற்றி அடித்திருக்கிறது. பதிமூன்று வயதுச் சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவியைக் கத்தியால் கடுமையாகத் தாக்குகிறான். அச்சிறுமி இறக்கிறாள். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு Adolescence தொடரை எடுத்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கொண்ட நான்கு பாகங்கள். இங்கே இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் சொன்னார்கள். எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய செய்தி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். 'இந்தக் காலத்துப் பசங்க, ரெம்பக் கெட்டுப் போயிருக்காங்க. ஆளும் தலைமுடியும்.....'என்ற குரல்கள் ஏராளமாக ஒலிக்கின்றன. உடனேயே ' பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகள் இல்லை. நீதிக்கதைகள் சொல்லணும்' என்று எதிரொலிகள். சற்றே சிந்தித்தாலும் ஒவ்வொரு தலைமுறையும் இப்படித்தான் அடுத்த தலைமுறையைப் பார்த்துப் புலம்பியிருக்கிறது என்பது புரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இச்சமூகத்தில் நீதி தவறிய செயல்பாடுகள் இருந்ததால் தானே வள்ளுவரும் நீதிகளைச் சொல்லியிருக்கிறார். சமகாலத்தில் கேட்பதால் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதிரான குரல்கள் அதிகமாக இருப்பது போலத் தோன்றுகிறது. வளரிளம் பருவத்தைக் கடந்து நடுத்தர வயதை அடையத் தொடங்கிய பலரும் அடுத்த தலைமுறையைக் குற்றம் சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். காலம், சூழலுக்கு ஏற்ப சிந்தனையும் சமூக அக்கறையும் தவறுகளையும் செய்தே அனைவரும் வளரிளம் பருவத்தைக் கடந்திருக்கிறோம். இப்பருவத்தின் இருண்மைகள் அனைவருக்கும் உண்டு. 'இன்றைய தலைமுறை தவறுகளைச் செய்கிறது. நாங்களெல்லாம் ஒழுக்கமாக இருந்தோம்.' என்று சொல்லி முடிக்கும்போதுதான் தன்னை 'யோக்கியன்' என்று நிரூபிக்க முயல்வதைப் புரிந்து கொள்ளலாம். வளரிளம் பருவத்தினரிடம் வன்முறை, போதை, அக்கறை இன்மை போன்ற நடத்தைகள் இப்போது அதிகரித்திருப்பதாக பலரும் வருத்தப்படுகிறார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளை விடக் கடந்த இருபது ஆண்டுகளில் சிந்தனையைத் தவிர அனைத்திலும் அளவற்ற மாற்றங்களை அடைந்திருக்கிறோம். குறிப்பாக அறிவியலின் வளர்ச்சி அளப்பரியது. எனவேதான் வளரிளம் பருவத்தினரின் நடத்தையில் இக்காலத்தில் பெரும் மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது. நம் சமூகத்தில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மிகவும் குறைவு. வளரிளம் பருவத்தினருக்கான செயல்பாடுகள் மிக மிக மிகக் குறைவு. குழந்தை இலக்கியமே தவழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வளரிளம் பருவத்தினருக்கான கலை, இலக்கியம் போன்றவை குறித்த பேச்சே இல்லை என்று கூறலாம். குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவம் வரை மனிதத்தோடு அடுத்த தலைமுறையைப் பழக்காத சுயநலமிக்க சமூகமாகப் பெரியவர்கள் இருக்கிறோம். வேகமும் துடிப்பும் கொண்ட வளரிளம் பருவத்தினரை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அதற்குத் தொடக்கமாகவே வளரிளம் பருவத்தினரைப் பற்றிய பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து உரையாடுவோம். அதிலிருந்து செயல்பாடுகளை உருவாக்க முயற்சி செய்யலாம். Adolescence பொழுது புலரும் நேரம். காவல் துறையினரின் வாகனங்கள் விரைகின்றன. ஆயுதம் தாங்கிய காவலர்கள் ஒரு வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள். வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். எதிர்ப்படுபவர்களின் முகத்திற்கு நேரே துப்பாக்கி. 'கீழே உட்காருங்கள்' என்ற குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. அம்மா கதறுகிறார். படியில் இறங்கி வந்த அப்பா, துப்பாக்கி முனையில் கைகளைத் தூக்கியபடி நிற்கிறார். அறையைத் திறந்த சிறுமி துப்பாக்கியைப் பார்த்துப் பயந்து அழுதபடி கீழே உட்கார்ந்திருக்கிறாள். அப்பாவிடம்," ஜெமி மில்லர் வீடுதானே இது? கைது செய்ய ஆணையோடு வந்திருக்கிறேன்." என்றபடியே ஒரு காவலர் மாடிக்குச் செல்கிறார். "நீங்க தப்பு பண்றீங்க. அவன் சின்னப்பையன்" என்று அப்பா கத்துகிறார். ஜெமியின் அறைக்கதவு திறக்கப்படுகிறது. பயத்தால் உடல் நடுங்கியபடியே கத்திக் கொண்டு இருக்கிறான் ஒரு சிறுவன். " ஜெமி மில்லர், ஒரு கொலைக் குற்றத்திற்காக உன்னைக் கைது செய்கிறேன். இப்போது நேரம் காலை 6.15 மணி." என்று காவலர் சொல்கிறார். ஜெமி பயத்துடன் "நான் எதுவும் செய்யல..." என்று அலறிக்கொண்டே இருக்கிறான். இப்படிப் பரபரப்பாகத் தொடங்குகிறது, Adolescence தொடர். காவல்நிலைய நடைமுறைகள், தொடக்க நிலை விசாரணைகள் என முதல் பாகம் முழுவதும் காவல் நிலைய நிகழ்வுகள் விரிவாகக் காட்டப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஏன் செய்கிறோம் என்று கைது செய்தவரிடம் சொல்லிச் சொல்லிச் செய்கிறார்கள். மனித உரிமைகளை மீறி விடாமல் கண்ணியமாக விசாரணை நடைபெறுகிறது. நம் காவல் துறைக்கு இது மிகச்சிறந்த பாடமாக இருக்கும். 13 வயதே ஆன சிறுவன் மீது கொலைக்குற்றம். நடந் தது என்ன? (தொடரும்)
- புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம்!
1. நாம் வாழும் பூமி சுற்றுகிறது என்று சொல்கிறார்கள். பூமி ஒரு பந்தைப் போலிருக்கிறது. அதன் மேல்தான் நாம் வாழ்கிறோம். அப்படியென்றால், அதன் மேல் இருக்கும் நாம் ஏன் கீழே விழுவதில்லை? - ஆதிரன், திருச்சி வணக்கம் ஆதிரன், நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்கள் கேட்டிருப்பது ரொம்ப முக்கியமான கேள்வி. இதுபோன்ற சந்தேகங்கள்தான் அறிவை வளர்க்கும். ஆனா, இந்தக் கேள்விக்கு எனக்கும் சட்டுனு பதில் தெரியலை. நிறைய அறிவியல் புத்தகங்களை எடுத்துப் படிச்சேன். அதுல என்ன போட்டிருக்குன்னா... நீங்க சொல்ற மாதிரி பூமி ஒரு பிரம்மாண்டப் பந்துதான். அது தன்னைத் தானே சுத்திக்குது. இந்த சுழற்சியோட வேகம் நில நடுக்கோட்டுப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 1,675 கிலோமீட்டராம் (அம்மாடி, நாம பைக்குல 100 கி.மீ. வேகத்துல போனாவே தலைய சுத்துதே). பூமிப் பந்தின் மீதுதான் நாம் எல்லாரும் வாழுறோம். பூமியின் மீது இருக்கும் மனிதர்கள், மற்ற எல்லாமுமே ஒரே வேகத்தில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் நாம கீழே விழுவதில்லை. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை (Gravity). உலகில் உள்ள அனைத்தையும் இதுதான் கீழ புடிச்சு இழுத்துக்கிட்டிருக்கு. அப்படின்னா, அது இழுக்குறது நமக்கு ஏன் தெரியலை? நாம பொறக்குறதுக்கு முன்னாடி அம்மா வயித்துக்குள்ள இருந்த காலத்திலேர்ந்தே, அது நம்மை இழுத்துக்கிட்டுதான் இருக்கு. அதனால, அது இழுக்குறது நமக்கு தனியாத் தெரியாது. அது இருக்கிறதுனாலதான் நாம எல்லாரும் நடக்க, ஓட, விளையாட முடியுது. விண்வெளிக்குப் போய்ட்டா புவி ஈர்ப்பு விசை இருக்காது. அதனாலதான் விண்வெளில வீரர், வீராங்கனைகள் மிதக்குறாங்க. சரி, நாம கேள்விய விட்டு ரொம்ப தூரமா விண்வெளிக்கே போய்ட்டோம். திரும்ப பூமிக்கே வந்திருவோம். ஒரு எடுத்துக்காட்டு சொன்னா உங்களுக்கு இன்னும் நல்லா புரியும்னு நினைக்கிறேன். ஒரு நேரான சாலையில், ஒரே சீரான வேகத்தில் ஒரு கார் போய்க்கிட்டு இருக்கு. அதுக்குள்ள நீங்கள் இருக்கிங்க. அந்த காருடன் வேறு எதுவுமே குறுக்கிடாதபோது, ஏதாவது அசைவை நம்மால உணர முடியுமா? முடியாது இல்லையா? அதுபோலத்தான் பூமியில நாம வாழ்றதும். பூமியோட சுத்தும் வேகம் ரொம்பப் பெரிய அளவுக்குக் கூடவோ, குறையவோ இல்லை. அது சீரான வேகத்துல சுத்துது. இது மட்டுமில்லாம, புவியீர்ப்பு விசை வேற இருக்கு. இதெல்லாம் சேர்ந்து நாம இப்போ இயல்பா வாழ்றதுக்கு, நடமாடுறதுக்கு உதவுது. நம்மளோட இயல்பான இயக்கத்துல ஏதாவது தடை வந்தா கீழ விழுகுறோம், காயமாகுது. இல்லேன்னா நாம எப்பவுமே எல்லா வேலைகளையும் செய்ய எந்தத் தடையும் இந்த உலகத்துல இல்ல. 2. மாவட்ட ஆட்சியர்களைப் போல அமைச்சர்களும் ஏன் படித்துப் பரீட்சை எழுதக் கூடாது? - யாழினி, திருநெல்வேலி. வணக்கம் யாழினி! வழக்கமா எல்லாரும் அறிவியல், பொது அறிவுக் கேள்வி கேட்பாங்க. நீங்க அரசியல் கேள்வி கேட்டிருக்கீங்க. இந்த வயசுலேயே உங்களுக்கு இப்படி கேள்வி வந்திருக்கிறது ரொம்ப நல்ல விசயம். Government என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது தமிழில் அரசு எனப்படுகிறது. இதன் முக்கிய அங்கங்கள் சட்டம் இயற்றும் அவை, அரசு நிர்வாக அமைப்பு, நீதித் துறை. அரசு கொள்கைகளை/சட்டங்களை உருவாக்குதல், அவற்றை நடைமுறைப்படுத்துதல், சட்டத்தைப் பாதுகாத்தல் ஆகிய வேலைகளை இந்த அமைப்புகளே செய்கின்றன. இதில் அரசு நிர்வாக அமைப்பை இயக்குபவர்களே நீங்கள் கூறும் மாவட்ட ஆட்சியர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். இதற்கான தேர்வை ஒரு முறை எழுதித் தேர்வாகிவிட்டால், அவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றலாம். இந்தத் தேர்வுகள் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடத்தப்பட்டுவருகின்றன. அரசு கொள்கைகளை உருவாக்குவதில் குறிப்பிட்ட அளவும், நடைமுறைப்படுத்துவதிலும் இவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். அதேநேரம் இந்தக் கொள்கைகளை வகுப்பது சார்ந்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவற்றில் எதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறார்கள் என்பதுடன் அனைத்துத் தரப்புக்கும் அனைத்தும் உரிய வகையில் கிடைப்பதை உறுதிசெய்ய மக்கள் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள். இந்த பிரதிநிதிகளே அரசியல்வாதிகள். அரசு அதிகாரிகளைப் போல அரசியல்வாதிகள் தேர்வை எழுதுவது இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தேர்தல் எனும் தேர்வு உண்டு. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்முடைய பிரதிநிதியாகவே (இவர்களில் சிலர் அமைச்சர் ஆகிறார்கள்) உள்ளாட்சி மன்றம், மாநகராட்சி மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு அவர்கள் செல்கிறார்கள். இந்த மன்றங்களே மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுகின்றன. அரசு சட்டங்கள், கொள்கைகள் உருவாக்கப்படும்போது நம் சார்பாக மன்றங்களில் பேசுவது, வாதிடுவது ஆகிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். இப்படி பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வசதியாக, ஒரு அமைப்பாக கட்சிகளில் அவர்கள் சேர்கிறார்கள். அவர்கள் சரியாகச் செயல்படுவதை உறுதிசெய்ய மக்களான நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் சரியாகச் செயல்படவில்லை என்றால், அடுத்துவரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள். அதற்கு முன்னதாகவே, நம் நாட்டுச் சட்டங்களின்படி அரசியல்வாதிகளுக்கு எதிராகப் புகார் அளிக்கலாம், வழக்கு தொடுக்கலாம். 100 சதவீதம் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் நம்முடைய சமூகத்தின், சமூகம் இருக்கும் நிலையின் பிரதிபலிப்புதான். அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவையாற்ற என்பதற்கு பதிலாக, தங்கள் சுயநலனுக்குப் பலரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வெகுமக்கள் சரியாக செயல்பட்டால், அந்நாட்டு அரசியல்வாதிகளும் சரியாகச் செயல்படுவார்கள். அனைத்துத் தரப்பினருக்கும் கல்வியுடன், அரசியல் கொள்கைகள், ஆட்சிக் கொள்கைகள்/சட்டங்கள் சார்ந்த பயிற்சி இதற்கு அவசியம். இதை சமூகச் செயல்பாட்டாளர்கள் உதவியுடன் மக்களான நாம் முன்னெடுக்கலாம், பரவலாக்கலாம். கூட்டாகவும் சிந்தனைபூர்வமாகவும் செயல்பட்டால் மாற்றங்கள் சாத்தியமாகும்.
- சாம்பல் நிற அணில்
” அது என்ன விலங்கு ?” என அண்ணன் அப்பாவிடம் கேட்டான். ஒரு புளிய மரத்தின் கிளையில் நம்ம ஊர் அணிலைப் போன்று ஆனால் சற்று பெரிதான விலங்கு தொங்கிக்கொண்டு புளியம் பழத்தை கடித்துக்கொண்டிருந்தது. ” இதுவா அணில் ” என்று சொன்னார் அப்பா. ” அணில் இவ்வளவு பெரிதாக இருக்குமா ? நம்ம வீட்டுக்கு அருகில் உள்ள அணில் குட்டியா தான இருக்கும் ” எனக் கேட்டாள் தங்கை. ” ஆம் இந்தியாவில் மூன்று வகையான பெரிய அணில்கள் வாழ்கின்றன. அதில் ஒன்று தான் இந்த சாம்பல் நிற அணில் ” என விளக்கம் சொன்னார் அப்பா. இந்த உரையாடல் எங்கே நடந்தது தெரியுமா? மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனச்சுற்றுலா வந்த அம்மா அப்பா அண்ணன் தங்கை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்கள். நடந்து செல்லும் வழியில் ஒரு புளிய மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அணிலைப் பார்த்த அண்ணன் கேட்டான். அண்ணனின் முகத்தைப் பார்த்த அப்பா சொன்னார், ” சாம்பல் நிற அணிலின் ஆங்கிலப் பெயர் Grizzled-Giant Squirrel. இதன் உடம்பில்கருப்பு மற்றும் வெள்ளை நிற முடிகள் கலந்து சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. அதனால் சாம்பல் நிற அணில் என அழைக்கிறோம். கிராமங்களில் நரை அணில் எனவும் அழைக்கிறார்கள். “ ” சாம்பல் நிற அணில் என்ன சாப்பிடும்? ” என்று தங்கை கேட்டாள். “ மாம்பழம், வாகை மரத்தின் இலை, பூ மற்றும் விதை, புளிய மரத்தின் பட்டை மற்றும் விதை ஆகியவற்றைச் சாப்பிடும்.” ” அது மட்டும் ஏன் தலை கீழாக படுத்துக்கொண்டே தின்கிறது ? ” ” சாம்பல் அணில் மற்ற அணில்களை பெரியது. அதனால் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது கடினம்.. சாம்பல் நிற அணில் தன்னுடைய முன்னங்கால்களை 180 டிகிரி வரை திருப்பிக் கொண்டு சாப்பிட முடியும்..”. ” அப்பா! அணிலின் வால் புசு புசு னு இருக்குது ” என்றாள் தங்கை ” ஆமாம்மா. சாம்பல் நிற அணில் வாலின் நீளம் 50-90 சென்டி மீட்டர், உடம்பின் நீளத்தை (25 – 40 சென்டி மீட்டர்) விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும்..”. ” சாம்பல் நிற அணிலினால் நமக்கு என்ன பயன் ? ” என்று அம்மா கேட்டார் ” பழங்களைச் சாப்பிட்டு விதைகளை பரப்பி மரங்கள் வளர்வதற்கு உதவுகிறது. வேகமாக வளரும் அதன் பற்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மரப்பட்டைகளைக் கடிக்கும். இதனால் மரத்திலிருந்து பிசின்கள் வெளியாகின்றன. இந்த மரப்பிசினை பூச்சிகள் தங்களது கூடுகளை கட்ட பயன்படுத்துகின்றன. “ “ அவ்வளவு தானா? என்று கேட்டான் அண்ணன். ” சிறிய ஊனுண்ணிகளுக்கு சாம்பல் நிற அணில் முக்கிய உணவாக திகழ்வதால் வனத்துக்குள் உணவுச் சங்கிலியை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் பல்லுயிர் பாதுகாப்புக்கும் உதவுகிறது. ” என்றார் அப்பா. ” ஓ இவ்வளவு நன்மைகள் இருக்கா ?” என்றார் அம்மா. ” ஆமாம், அதனால தான் இப்பகுதி 1988 முதல் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. ” ” குரங்கு நிறையா இருக்கு ஏன் சாம்பல் நிற அணில் ஒன்னே ஒன்னு தான் பார்த்தோம். “ என்று சந்தேகத்தைக் கேட்டாள் தங்கை. ” எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கு..”. ” ஏன் குறைவாக உள்ளது ? உடனே அண்ண்ன் கேட்டான் “ சாம்பல் நிற அணில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே வாழ்பவை. அந்த இடத்தின் சூழல் பாதிக்கப்படும் பொழுது அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அணிலால் தன் குட்டிகளை வளர்க்க முடிவதில்லை. ” என்று சொன்னார் அப்பா. ” அந்த இடம் எப்படி ஆபத்துக்குள்ளாகிறது ? “ என்று கேட்டான் அண்ணன். ” இங்கு நம்மைப் போல வரும் மக்கள் பிளாஸடிக் பைகளை பயன்படுத்துகின்றனர், இங்கேயே தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர். இங்கு தினமும் நடந்து வருபவர்களால் வழிகள் உருவாகின்றன. நாளுக்கு நாள் அது பெரிதாகி தாவரங்கள் வளருவதில்லை. அதனால் காடு துண்டு துண்டாகிறது.. “ “ சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..” என்றாள் தங்கை. “ஆமாம்.எல்லோருமே சிந்திக்க வேண்டும்..” என்று அண்ணன் சொன்னான்.
- வாண வேடிக்கை
பட்பட் படார் டம்டம் டமார் பட்டாசுச் சத்தம் கேட்கிறது விமானம் போல வானில் ஏறி பாதி வழியில் வெடிக்கிறது இருட்டு படிந்த ஊரின் மீது ஒளியை அள்ளித் தெளிக்கிறது விலகிச் செல்லும் வெளிச்சக் கீற்று எங்கோ வானில் கலக்கிறது கண்ணைப் பறிக்கும் நிறங்களில் எல்லாம் வண்ணப் பொறிகள் விழுகின்றன அண்ணாந்து பார்த்து ரசிப்பதற்குள்ளே அனைத்துப் பொறிகளும் மறைகின்றன
- நீர் பலூன் சோதனை
Water baloon experiment பலூன்கள் மிகவும் உடையக்கூடிய விஷயங்கள். அவை கூர்மையான பொருட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் தீப்பிழம்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். ஒரு நெருப்பு ரப்பரை பலவீனப்படுத்தி வெடிக்கச் செய்யலாம். இருப்பினும், பலூனை உடைக்காமல் ஒரு பலூனை நேரடியாக சுடர்களில் எவ்வாறு பிடிக்க முடியும் என்பதை இந்த சோதனையில் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். தேவையான பொருட்கள் : 1. காற்றால் நிரப்பப்பட்ட ஒரு பலூன் 2. தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பலூன் 3. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றியது 4. வயது வந்தவரின் உதவி பரிசோதனையை எவ்வாறு செய்வது : 1. ஒளிரும் மெழுகுவர்த்தியை தொட்டியில் வைக்கவும், இந்த வழியில் ஏதாவது நடந்தால், நீங்கள் குழாய் நீரைக் கொண்டு தீப்பிழம்பை எளிதாக அணைக்கலாம். 2. ஒரு பலூனை ஊதி, அதைக் கட்டவும். பின்னர் அதை ஒரு மெழுகுவர்த்தியின் மீது வைக்கவும். பலூனுக்கு என்ன நடக்கிறது? 3. இப்போது ஒரு பலூனை தண்ணீரால் நிரப்பி, அதைக் கட்டவும். கவனமாக இருங்கள் அல்லது நீங்கள் ஈரமான முடிவடையும்! 4. இப்போது மெழுகுவர்த்தியின் மீது தண்ணீர் பலூனை பிடித்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது? அதன் பின்னால் உள்ள அறிவியல் : என்ன நடக்கிறது தண்ணீர் இல்லாத பலூன் ஏன் தீப்பிழம்பில் உடைகிறது? தீப்பிழம்பு அதில் வைக்கப்படும் அனைத்தையும் சூடாக்குகிறது. இது இரண்டு பலூன்களின் ரப்பரை சூடாக்குகிறது. தண்ணீர் இல்லாத பலூனின் ரப்பர் மிகவும் சூடாகி, பலூனுக்குள் காற்றின் அழுத்தத்தை எதிர்க்க முடியாத அளவுக்கு பலவீனமாகிறது. தண்ணீரைக் கொண்ட பலூன் தீப்பிழம்பில் உடைவதை எவ்வாறு தடுக்கிறது? பலூனுக்குள் உள்ள நீரைச் சுடர்களில் வைக்கும்போது, நீர் தீப்பிழம்பிலிருந்து பெரும்பாலான வெப்பத்தை உறிஞ்சுகிறது. பின்னர், பலூனின் ரப்பர் மிகவும் சூடாக மாறாது. ரப்பர் சூடாகாததால், அது பலவீனமடையாது, மேலும் பலூன் உடைக்காது. பலூன் உடைக்காது. தீச்சுவாலைக்கு மேலே பலூனின் வெளிப்புறத்தில் புகை வடிவத்தின் கருப்புத் துண்டைக் கூட நீங்கள் காணலாம். நீர் குறிப்பாக வெப்பத்தை உறிஞ்சி ஒரு நல்ல உறிஞ்சியாகும். நீரின் வெப்பநிலையை மாற்ற நிறைய வெப்பம் தேவைப்படுகிறது. 1 கிராம் இரும்பின் வெப்பநிலையை அதே அளவு உயர்த்துவதை விட 1 கிராம் நீரின் வெப்பநிலையை 1C உயர்த்துவதற்கு 10 மடங்கு அதிக வெப்பம் தேவைப்படுகிறது. அதனால்தான் கொதிக்க ஒரு டீகெட்டில் தண்ணீரைக் கொண்டு வர நீண்ட நேரம் ஆகும். மறுபுறம், நீர் குளிர்ச்சியடையும் போது, அது அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இதனால்தான் பெருங்கடல்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் அல்லது பிற பெரிய நீர்நிலைகள் குளிர்காலத்தில் அதே அட்சரேகையில் உள்ள பகுதிகளைப் போல குளிர்ச்சியடைவதில்லை.
- பறக்கும் பன்றி
பாவலன் நல்ல ஓவியன்தான் பறக்கும் குதிரை படம் வரைந்தான் அன்று இரவு அவன் கனவில் பன்றி ஒன்று வந்தது பார்! என்ன தம்பி நியாயம் இது? என்னை மறந்தது எப்படி நீ வலிமை மிகுந்த குதிரைக்குதான் வாய்ப்பு வசதியும் தருவாயோ? சேற்றில் கிடந்து உழல்கின்றேன் சிரமப்பட்டு வாழ்கின்றேன் விரட்டி வந்து அடிக்கின்றார் வீல் வீலென அலறி துடிக்கின்றேன் என்னைப் போன்ற எளியவர்க்கு இறக்கைகள் தந்தால் ஆகாதா? என்ற பன்றியின் குறையை நினைத்தபடி படுத்து புரண்டான் பாவலனும் உறக்கம் கலைந்து எழுந்தவுடன் பறக்கும் பன்றி படம் வரைந்தான்!
- கேளு பாப்பா கேளு!
கேள்வி: குழந்தைகளுக்கு அரசியல் வேண்டுமா? ( ஸ்ரீமதி, சென்னை) பதில்: நிச்சயம் வேண்டும். அதிகாரம், ஜனநாயகம், சமத்துவம், பொதுநலம் குறித்த புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்குத் தேவையான, அடிப்படையான அரசியல். அதேவேளையில் கற்பனை மிகுந்த அவர்களது உலகை சிதைத்து விடாமல் அந்த சிந்தனைகளை உருவாக்க வேண்டும். காட்டில் சிங்கத்திற்கு கட்டுப்பட்டு மற்ற மிருகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மிருகம் அதற்கு இரையாக உடன்படுவது போன்ற தந்திரக்கதைகளை மாற்றி எல்லா மிருகங்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை எதிர்த்தால் விரட்ட முடியும் என்ற வழிகளை காட்ட வேண்டும். கேள்வி: அறிவியல் மனப்பாங்கு என்றால் என்ன? ( ஆதினி, தென்காசி) பதில்: நம்மைச் சுற்றி இருக்கிற ஒவ்வொன்றையும் கவனிப்பதும், அதுகுறித்த சிந்தனைகளில் ஈடுபடுவதும் அறிவியல் மனப்பான்மை. ஏன் என்றும் எப்படி என்றும் ஒவ்வொன்றையும் ஆராய்வதன் மூலம் உண்மைகளை அறியும் முயற்சிதான் அது. சூரியன் இருக்கும்போது பகலாகவும், சூரியன் இல்லாமல் இருக்கும் போது இரவாகவும் ஏன் இருக்கிறது என்று ஒரு காலத்தில் கேள்விகள் எழுந்தன. மனிதர்கள் அதுகுறித்து சிந்திக்கத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாகத்தான் பூமி உருண்டை என்பதையும், பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பதையும் கலிலியோ மூலம் உலகம் அறிந்தது. இன்று நாம் அறிந்திருக்கும் ஒவ்வொரு உண்மைக்கும் பின்னால் மனிதர்கள் காலம் காலமாய் கேட்டு வந்த எத்தனையோ கேள்விகளும், உண்மையைத் தேடும் இடைவிடாத முயற்சிகளும் இருக்கின்றன. இந்த அறிவியல் மனப்பான்மையால்தான் மனித இனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது.
- இலண்டனிலிருந்து அன்புடன்
வணக்கம் சுட்டிகளா, “இயல்” சிறுவர் இதழ் புத்தம் புதிதாய் மலர்ந்துள்ளது. புதியது என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். அந்தக் கொண்டாட்டத்தில் நானும் உங்களுடன் இணைகிறேன். அதுவும் எங்கிருந்து தெரியுமா? இலண்டனிலிருந்து… “இங்கிலாந்து சிறுவர் இலக்கியம்” எனும் தலைப்பில் உங்களை நான் ஒவ்வொரு இதழிலும் சந்திக்க இருக்கிறேன். இலண்டனில் பிரபலமான சிறுவர் புத்தகங்கள் பற்றித்தான் பேசப் போகிறோம். Virtual Reality கண்ணாடி அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்? அப்படிதான் நாம் அனைவரும் ஒன்றாகப் புத்தகங்கள் மூலம் இலண்டனைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம். என்ன? புத்தகங்கள் வழியே இலண்டனைச் சுற்றிப் பார்க்க நீங்கள் தயாரா? hologauze animations இலண்டனின் மிக முக்கியமான அடையாளம் “தேம்ஸ் நதி”. திருவிழா, பண்டிகை என எந்த ஒரு முக்கியமான என்றாலும் மக்கள் தேம்ஸ் நதிக்கரையில் கூடிக் கொண்டாடுவார்கள். 2025ஆண்டு புத்தாண்டை வரவேற்க சுமார் ஒரு இலட்சம் மக்கள் தேம்ஸ் நதியோரம் கூடினர். பல இலட்சம் மக்கள் நேரலையில் இந்நிகழ்வைப் பார்த்தனர். சரியாக 12மணிக்கு பட்டாசுகளும் டிரோன் விளக்குகளும் இணைந்த வான வேடிக்கை நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில்தான் முதன்முதலாக hologauze animations பயன்படுத்தப்பட்டன. Hologauze animations என்பது புதுவகையான மாய பிம்பங்கள். “London Eye” என அறியப்படும் மிகப் பெரிய ராட்டினம் உள்ளது. அந்த இராட்டினத்தைச் சுற்றித்தான் hologauze animations நடைபெற்றன. ஆரம்பத்தில் hologauze animations மூலம் “Happy New Year” போன்ற வாழ்த்துச் செய்திகளே இடம் பெற்றன. ஆனால், நிகழ்வின் முடிவில் மாய திரையில் சிறப்பு விருந்தினர் ஒருவர் தோன்றி இன்ப அதிர்ச்சி தந்தார். அவர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் பிரதமரோ, மறைந்த எலிசபத் ராணியோ, ராஜா பிலிப்போ, விளையாட்டு வீரரோ, நடிகரோ, இசைக் கலைஞரோ, விஞ்ஞானியோ அல்ல. அங்குத் தோன்றியது, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான, சிறார் இலக்கியத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான “பேடிங்கடன் கரடி”. ஆமாம்! பேடிங்கடன் கரடிதான் அன்றைய சிறப்பு விருந்தினர். நாடு, இனம், மொழி, மதம், கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகள் நிறைந்த மக்கள் வாழும் இடம் இங்கிலாந்து. வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாய் வாழும் சூழலை உருவாக்குவதே இங்கிலாந்து அரசின் நோக்கம். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் செய்தியைத்தான் “பேடிங்கடன் கரடி” எனும் சிறுவர் புத்தகம் உலகிற்கு வழங்கியுள்ளது. "As we enter the new year, I always remember what Mrs Brown says: in London everyone is different, but that means anyone can fit in. I think she must be right. Because although I dont' look like anyone else, I really feel at home. Happy New Year, Love, from Paddington" ஆமாம் செல்லங்களா! பேடிங்கடன் கரடி என்பது உலக அமைதியின் அடையாளமாய் விளங்குகிறது. சரி! இவ்வளவு முக்கியமான பேடிங்கடன் புத்தகம் குறித்தும், அதன் ஆசிரியரான மைக்கேல் பாண்ட் குறித்தும் விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம். ( தொடரும் )
- எலிக்கு வழி சொல்லுங்கள்!
படம் உதவி: ராஜலட்சுமி நாராயணசாமி
- டமால்!
ஒவியம் : உ.நவீனா












