top of page

புத்தகப்புழுவிடம் நீங்களும் கேட்கலாம்! - அமிதா

  • புத்தகப் புழு
  • Jun 15
  • 2 min read

இப்பவும் ஏப்ஸ் குரங்கு, சிம்பன்சி குரங்கு இருக்குது. ஆனா, அவை ஏன் மனிதனாக மாறவில்லை?

ஜெ. அ. ஆண்டிரியா ஜோஸ்


வணக்கம் ஆண்டிரியா ஜோஸ். நான் புத்தகப் புழு பேசுறேன்.


நீங்க கேட்டிருக்கும் கேள்வி எல்லாருக்கும் திரும்பத்திரும்ப எழக்கூடிய கேள்விதான். நாம வாலில்லா குரங்கிலிருந்து (Apes) வந்தோம்னா, இப்பவும் ஏன் அந்தக் குரங்குங்க இருக்குது? இது பார்க்க சிக்கலான கேள்வியா தோன்றினாலும்கூட, பரிணாமவியல் தந்தை சார்லஸ் டார்வின் தொடங்கி, பலரும் இது போன்ற விஷயங்களுக்கு திட்டவட்டமான பதிலைத் தந்திருக்காங்க.


முதல்ல நாம கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் பலரும் நம்புறது மாதிரி, நாம குரங்கிலிருந்து பிறக்கவில்லை. நம்முடைய மூதாதை குரங்கு கிடையாது. பரிணாமவியலில் நமக்கும் வாலில்லா குரங்குகளுக்கும் ஒரு பொது மூதாதை (common ancestor) இருந்தது. இந்தப் பொது மூதாதை வாழ்ந்த காலம் 60-80 லட்சம் ஆண்டுகளுக்கு முன். பொது மூதாதையிலிருந்து வந்த சிம்பன்சி, கொரில்லா, போனபோ, ஒராங்ஊத்தன் ஆகியவை பெரிய வாலில்லா குரங்குகள். இவை தனியாகவும், நாம் தனியாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றோம். எனவே, நாமும் அவையும் நேரடி உறவினர்கள் இல்லை. தூரத்து உறவினர்கள்தான்.


ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊரில் மனிதர்கள் எல்லாரும் உள்ளூர் ரயிலில் ஏறுகிறார்கள். ஒருவர் முதல் இறக்கத்தில் இறங்குகிறார், ஒருவர் நடு இறக்கத்தில் இறங்குகிறார், ஒருவர் கடைசி இறக்கத்தில் இறங்குகிறார். ஆனால், எல்லாரும் ஒரே ஊரில்தானே வாழ்கிறார்கள். அதுபோல் பரிணாம வளர்ச்சியில் வாலில்லா குரங்குகள் நடு இறக்கத்தில் இறங்கிவிட்டன. நாம் கடைசி இறக்கத்தில் இறங்கியிருக்கிறோம்.


பொது மூதாதையிலிருந்து பிறந்த மனித இனத்தில் இதுவரை புவியில் 21 மனித சிற்றினங்கள் வாழ்ந்துள்ளன. அவற்றில் 9 இனங்கள் இருந்ததற்கு திட்டவட்டமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில் கடைசியாகத் தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனித இனமான நாம் மட்டுமே எஞ்சியுள்ளோம். தகவமைத்துக்கொள்ள முடியாத மற்ற மனித சிற்றினங்கள் அழிந்துவிட்டன.


நமக்கும் வாலில்லா குரங்குகளும் பொது மூதாதையிலிருந்து பிறந்திருந்தாலும், ஏன் இரண்டும் ஒரே மாதிரி இல்லை. இரண்டும் வேறுவேறு சுற்றுச்சூழலில் வாழ்வதற்கான தகவமைப்பைப் பெற்றதால் உருவானவை. அவற்றுக்கும் நமக்கும் மரபணுரீதியில் தொடர்பு இருந்தாலும், இன்னும் நெருங்கிப் பார்த்தால் வேறுபாடுகளும் புரியும். காடுகளில் உள்ள மரங்களில் ஏறுவது, வேகமாக செயல்படுவது வாலில்லா குரங்குகளின் குறிப்பிடத்தக்க தகவமைப்பு. அதேநேரம் மனித இனமோ இரண்டு கால்களில் நடக்கக்கூடிய, அதாவது தரையில் வாழக்கூடிய தகவமைப்பைப் பெற்றது. நமக்கும் அவற்றுக்கும் இதுபோல் நிறைய வேறுபாடுகள் உண்டு.


பரிணாமப் பாதையில் நம் இரண்டுக்கும் பொதுவான அம்சம் இருந்தாலும்கூட, பல லட்சம் ஆண்டுகளாகத் தனித்தனியேதான் வாழ்ந்துவருகிறோம். அதனால், அவை அப்படியே வாழ்கின்றன. நாம் மனிதர்களாக வாழ்கிறோம். இரண்டும் தனித்தனி இனங்கள் என்பதால், இன்றைய வாலில்லா குரங்குகள் மனிதனாக மாற வேண்டிய அவசியமில்லை.



செடிகளுக்கும் கொடிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கா. மு. நேஹா, 6ஆம் வகுப்பு


வணக்கம் நேஹா. உங்களைச் சுற்றியுள்ள இயற்கையின் முக்கிய அங்கமான தாவரங்களைப் பற்றி கேள்வி கேட்க வேண்டுமென நினைத்த உங்களுக்கு வாழ்த்துகள்.


செடி, கொடிகள் எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும் தாவரங்கள் அடிப்படையில் ஐந்தாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை மூலிகை/செடி (herbs), புதர்செடி (shrubs), மரங்கள் (trees), ஏறுகொடி (climbers), படர்கொடி (creepers). செடிகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் மூலிகைகள், தண்டுப்பகுதி மரமாக ஆகாத/உயரமாக வளராத புதர்செடிகள் ஆகியவை வரும். அதேபோல் கொடிகளில் உயரமாக பற்றிக்கொண்டு வளரும் ஏறுகொடிகள், தரையில் படர்ந்து வளரும் படர்கொடிகள் ஆகியவை வருகின்றன.


செடி, கொடிகளுக்கு இடையிலான பொதுவான வேறுபாடுகளைப் பார்ப்போம். செடிகளின் தண்டுப்பகுதி மென்மையாக, கடினமற்று இருக்கும். மழை, காற்று அதிகம் இருந்தால், இவை சாய்ந்துவிடும். இவை எளிதாக உடைந்துவிடக்கூடியவை. இவை உயரமாக வளர்வதில்லை. தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கள், மல்லிகை, நித்தியகல்யாணி, துளசி உள்ளிட்டவை செடிகளுக்கு எடுத்துக்காட்டு. நடுத்தண்டு மரமாக மாறாத புதர்தாவரங்களும், செடிகளே. மூலிகைகளைவிட இவை உயரமாக வளரும் என்றாலும், மரம் போல அதிக உயரத்துக்கு இவை வளர்வதில்லை. ரோஜா, செம்பருத்தி உள்ளிட்டவை புதர்செடிகள்.


ஏறுகொடிகள், படர்கொடிகள் போன்றவற்றின் தண்டுகளும் உறுதியாக இருக்காது. எனவே, அவற்றால் நிமிர்ந்து நிற்க முடியாது. ஏறுகொடிகளில் இருக்கும் பற்றுக்கம்பிகளைக் கொண்டு கம்பு, கோல், சுவர் போன்றவற்றில் இந்தக் கொக்கிகளால் பற்றிக்கொண்டு ஏறும். புடலை, பாகல், சுரை, வெள்ளரி போன்றவை ஏறுகொடிகளுக்கு எடுத்துக்காட்டு.


படர்கொடிகளால் இதுபோல் உயரமாக ஏறவும் முடியாது. அவை தரையில் படர்ந்து வளரும். படர்கொடிகளின் காய்கள் எடை மிகுந்தவையாக இருக்க வாய்ப்பு அதிகம். அதனால், அவை தரையில் வளரவே பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றன. பறங்கி, பூசணி, தண்ணீர்பூசணி போன்றவை படர்கொடிகளுக்கு எடுத்துக்காட்டு.


எந்த வகைத் தாவரமாக இருந்தாலும் உணவு, மருந்து, அழகு, அலங்காரம் எனப் பல்வேறு தேவைகளுக்கு நமக்கு உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நாம் வாழ முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page