Adolescence web series - 2
- கலகல வகுப்பறை சிவா
- Jun 15
- 2 min read

காவலர்கள் ஜெமியைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். காவல் நிலையம் எங்குள்ளது என்ற விவரத்தை ஜெமியின் பெற்றோரிடம் சொல்லி அங்கு வரச் சொல்கிறார்கள். செல்லும் வழியெங்கும் ஜெமி, "நான் எதுவும் செய்யவில்லை!" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். குரலில் பயமும் நடுக்கமும். கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது.
பதிமூன்று வயதுக் குழந்தை. வளரிளம் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறான். உடலிலும் உள்ளத்திலும் பட்டாம்பூச்சி பறக்கும் மாற்றங்கள். வண்ணமயமான எண்ணங்களின் காலம். நண்பர்களோடு பேசிச் சிரித்த எல்லாமே உண்மை என்று நம்பும் பருவம். சிரமமே இல்லாமல் எல்லாமும் எதிரே வரும் என்ற கானல் நம்பிக்கையின் பருவம். இது கனவிலும் எதிர்பாராத பேரதிர்ச்சி.
ஜெமி மட்டுமல்ல எந்த வயதினர் ஆனாலும் தவறு செய்து சிக்கிக் கொண்டால் அழுது புலம்புகிறோம். நாம் செய்யும் போதே தவறு என்று தெரியும். என்ன தண்டனை என்றும் தெரியும். குழந்தைகளுக்கு இது தெரியாது.
எது தவறு? தவறு செய்தால் பிறரையும் நம்மையும் எவ்வாறு பாதிக்கும்?
என்ன தண்டனை? என்பவை குறித்துக் குழந்தைகள் எங்கு தெரிந்து கொள்வார்கள்?
இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று எங்கும் கட்டளைகள். கட்டளைகளைப் பெரியவர்களே விரும்புவதில்லை. குழந்தைகளும் விரும்புவதில்லை என்பது நமக்கும் தெரியும். குழந்தைகளை எவ்வாறு வார்ப்பது என்பது பற்றி முழுமையாக நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் வளர்ந்த மாதிரியே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். குழந்தைகள் கேள்விகளை எழுப்பும் போது செய்வதறியாது திகைக்கிறோம்.
ஜெமியின் அப்பாவும் தவிக்கிறார். அம்மாவும் அக்காவும் அழுகிறார்கள். எங்கள் பையன் நல்வவன். தவறு செய்யவே மாட்டான். ஏதோ தவறுதலாக காவலர்கள் ஜெமியைக் கைது செய்திருக்கிறார்கள் என்று அவன் பெற்றோர் நம்புகிறார்கள். ஜெமியின் அப்பா அவனிடம் தனியே கேட்ட போதும் ' தவறு எதுவுமே செய்யவில்லை' என்று ஜெமி கூறுகிறான். அப்பா அவனை முழுமையாக நம்புகிறார்.
காவல்நிலையத்திற்கு ஜெமியை அழைத்துச் செல்லும் வாகனத்தில் காவல் அலுவலருடன் சமூக சேவகர் ஒருவரும் இருக்கிறார்.
"ஜெமி, பதட்டப்படாதே. காவல் நிலையத்தில் விசாரிக்கும் போது நன்றாகத் தெரிந்த பதிலைச் சொல்லு. குழப்பமாக இருந்தால் No comments என்று சொல். உன்னுடன் வக்கீல் ஒருவர் இருக்கலாம். உனக்கு நம்பிக்கையான மூத்தவர் ஒருவரும் இருக்கலாம்." என்று காவல் அலுவலர் சொல்கிறார்.
காவல் நிலைய நடைமுறைகள் முடிந்து ஜெமியை ஓர் அறையில் இருக்க வைக்கிறார்கள். ஜெமியின் பெற்றோர் வேறு அறையில் இருக்கிறார்கள். காவல் நிலைய நடைமுறைகறையும் விசாரணை முறைகளையும் தனியே எழுதலாம். குழந்தை உரிமைகளை மீறிவிடாமல் கவனமாக அனைத்தும் நடைபெறுவது காவல்துறையினருக்குப் பாடம்.
ஜெமியின் அப்பாவுக்குத் தெரிந்த வழக்கறிஞர் யாரும் இல்லை என்பதால் அரசின் சார்பாக ஒருவரை வரவழைக்கிறார்கள். நம்பிக்கையான மூத்தவராக என் அப்பா என்னுடனேயே இருக்க வேண்டும் என்று ஜெமி கூறுகிறான்.
விசாரணை அறை. ஜெமி, அப்பா, வழக்கறிஞர் மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே ஜெமியைக் கைது செய்த இரண்டு காவல் அதிகாரிகள். இந்த விசரணை முழுவதும் ஒலி ஒளி வடிவங்களில் பதிவு செய்யப்படும் என்று சொன்ன பிறகு விசாரணையைத் தொடங்குகிறார்கள்.
ஜெமி, நன்கு படிப்பவன். திறமையானவன். அவனுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கம் இருக்கிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட படப்பதிவுகளைக் காட்டி விசாரிக்கிறார்கள். ஜெமி நிதானமாகப் பதில் சொல்கிறான். சிக்கலான கேள்விகளுக்கு கவனமாக No comments சொல்கிறான்.
ஜெமி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான விளம்பரப் பெண்களின் படங்களைப் பகிர்ந்திருக்கிறான். அவனது பாலுணர்வு பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறான். அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இரண்டு பேர். ஒன்றாகப் பள்ளியில் படிப்பவர்கள். மூவரும்தான் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள்.
மூன்று பேர் மட்டுமே நட்பாக இருக்கும் மும்முனை நட்பு சிக்கலானது என்று உளவியலில் கூறுகிறார்கள். சமத்துவம் இல்லாத மும்முனை நட்பு ஏராளமான நடத்தைச் சிக்கல்களை உருவாக்குகிறது.
ஒரு சிறுமியின் படத்தைக் காட்டுகிறார்கள். இவள் பெயர் கேட்டி. உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். தெரியும், என் வகுப்பில் படிக்கிறாள் என்று ஜெமி சொல்கிறான். இவளைத்தான் நேற்று இரவு வாகன நிறுத்துமிடம் ஒன்றில் கொலை செய்திருக்கிறார்கள். உடலில் பல இடங்களில் கத்திக்குத்து. கடுமையான காயங்களால் அங்கேயே இறந்துவிட்டாள். இதைப் பற்றி உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். எதுவும் தெரியாது என்று ஜெமி கூறுகிறான்.
நேற்று இரவு வெளியே சென்றாயா என்று கேட்கிறார்கள். ஆம் என்று ஜெமி கூறுகிறான். நண்பர்களோடு வெளியே சென்று விட்டு நெடுநேரம் கழித்துதான் வீட்டுக்கு வந்திருக்கிறான். ஒரு காலணியின் படத்தைக் காட்டி அது அவனுடையது என்பதை உறுதி செய்கிறார்கள். CCTV பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்களைக் காட்டுகிறார்கள். கேட்டி சென்ற வழியில் சிறிது நேரம் கழித்து ஜெமி சென்றிருக்கிறான். அவனுடைய உடைகளும் உருவமும் காலணிகளும் அது அவன் தான் என்று உறுதி செய்கின்றன.
இறுதியாக இந்தக் காணொலியைப் பாருங்கள் என்று காவலர்கள் CCTV காட்சியைக் காட்டுகிறார்கள். ஜெமியின் முகம் இறுகுகிறது. அழத் தொடங்குகிறான்.
புதிர்கள் தொடரும்...
Comments