பாப்பாண்டும் ரயில்பூச்சியும்
- சாரதி
- Jun 15
- 2 min read

அப்போதுதான் பாப்பாண்டு மாமரத்துப் பக்கம் வந்தான். மண்ணில் ஒரு பூச்சி ஊர்ந்து சென்றது. அதை பார்க்கவே அவனுக்கு அதிசயமாக இருந்தது. அன்றுதான் முதல் தடவை அப்படியொரு பூச்சியைப் பார்க்கிறான்.
அது அவ்வளவு அழகு. சிகப்பும் கறுப்பும் கலந்த அழகு வண்ணம். பக்கத்தில் சென்று உற்று பார்த்தான். அதன் நீண்ட உடல், பாசிமணியை அடுத்து அடுத்து சேர்த்து வைத்தது போல், மேடும் பள்ளமுமாய் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் நூற்றுக் கணக்கான கால்கள். தலையின் முன் இரண்டு கண்கள். வேக வேகமாக நகன்றது. அப்படியே, ரயில் போலவே இருந்தது. ஒரு குச்சியால் அதைத் தொட்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சுருண்டு கொண்டது. அப்படியே கிடந்தது. பாப்பாண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிந்ததும் மறுபடியும் உடலை நேராக்கி ஊர்ந்தது.
பாப்பாண்டு தாத்தாவிடம், “ தாத்தா ..இது என்ன பூச்சி? ” என்று கேட்டான்.
“ இதுவா.. இதுக்குப் பேரு ரயில்பூச்சி..” என்றார் தாத்தா.
உடனே பாப்பாண்டுவின் சின்ன மூளையில் கேள்வி முளைத்தது. ” ஏன் தாத்தா.. ரயில் பூச்சின்னு பேரு வந்தது? “ என்று கன்னத்தில் ஒரு விரலை வைத்துக் கொண்டே கேட்டான்.
தாத்தா சிரித்துக் கொண்டே, ” ரயில் பெட்டிகளைச் சேர்த்து வைத்த மாதிரி உடம்பு இருக்குல்ல..ரயிலைப் பார்த்துட்டு உன்னை மாதிரி ஒரு சுட்டிப்பையன் வைத்த பேரு தான் ரயில்பூச்சி..” என்றார்.
பாப்பாண்டுக்கு அந்த ரயில்பூச்சியை பிடித்து விட்டது. தரையில் ஊர்ந்து போகும்போது அப்படியே மிதக்கிற மாதிரியே இருக்கும். தினமும் ரயில்பூச்சியோடு விளையாடுவான். பேசுவான். ஆடுவான். பாடுவான். அவன் சொல்வதை எல்லாம் ரயில்பூச்சி கேட்கும். மகிழ்ச்சியாக இருந்தால், அவன் கைகளில் ஏறிவரும்.
ஒருநாள், பாப்பாண்டு ரயில்பூச்சியிடம், ” நீ…..! இத்தனை கால்களுடன்…… அழகாய் ஊர்ந்து போகிறாய்… இத்தனை கால்களும் உனக்கு யார் தந்தது? ” என்று ஆச்சரியத்துடன் பாப்பாண்டு கேட்டான்.
” எனக்கு என் அம்மாதான் தந்தார்.. ” என்றது ரயில்பூச்சி.
” உன் அம்மாவுக்கு யார் தந்தார்கள்? “ என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் பாப்பாண்டு.
"ம்ம்ம்.. இயற்கை தான் எங்கள் இனத்துக்கு இத்தனை கால்களைக் கொடுத்தது. “ என்று ரயில்பூச்சி சொன்னது.
பாப்பாண்டு யோசிக்கவே இல்லை. அடுத்த கேள்வியைக் கேட்டான். “ எப்படி இயற்கைக்கு யாருக்கு எத்தனை கால் கொடுக்க வேண்டும் என்று தெரியும்..? பாரு.. எனக்கு இரண்டு கால் தான், நாய்க்கு நாலு கால்.. எறும்புக்கு ஆறுகால்.. சிலந்திக்கு எட்டுகால்.. “ என்று சொல்லி நிறுத்தினான்.
கொஞ்ச நேரத்துக்கு ரயில்பூச்சி எதுவும் பேசவில்லை. யோசித்தது. பிறகு மெல்ல தலையைத் தூக்கியது. முன்னங்காலால் முகத்தைத் தேய்த்தது.
“ பாப்பாண்டு என்னுடைய தாத்தா சொல்லியிருக்காரு.. ஒவ்வொரு உயிரும் இந்த பூமியில் வாழறதுக்கு ஒவ்வொரு சிறப்பான உடல் அமைப்பை உருவாக்கிக் கொண்டன.. அப்படித்தான் நாங்களும் உருவாக்கிக் கொண்டோம்.. அறிவியலைப் படிக்கும்போது உனக்குத் தெரியும்.. “ என்று பேசிவிட்டு உடம்பை முன்னும் பின்னும் சுருக்கி நீட்டியது.
பாப்பாண்டுவின் கண்கள் விரிந்தன. ரயில்பூச்சி சொல்வதைப் புரிந்து கொள்ள முயற்சித்தான்.
“ உங்க தாத்தாவுக்கு எல்லாம் தெரியுமா? “ என்று கேட்டான் பாப்பாண்டு.
“ ஏன் உன்னுடைய தாத்தாவுக்கும் எல்லாம் தெரியுமே. நீ கேட்டுப்பாரு..என்னுடைய தாத்தா எங்களுக்கு மண்ணில் எப்படி பள்ளம், மேடு பார்த்து லாவகமாக செல்வது என சொல்லித் தந்தார். எங்கள் உணவு எது? எப்படி சாப்பிடுவது? என்றும் சொல்லிக் கொடுத்தார். மரத்தின் மேல், கீழே விழாமல் எப்படி மரத்தைப் பிடித்து செல்வது என்றும் சொல்லித் தந்தார். ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தார். ” என்றது ரயில்பூச்சி.
அதைக் கேட்ட பாப்பாண்டு பேச ஆரம்பித்தான். “ என் தாத்தாவும்…. இந்த உலகம் எப்படித் தோன்றியது? உயிர்கள் எப்படித் தோன்றியது? செடி, கொடிகள், மரங்கள். பூச்சிகள் புழுக்கள், விலங்குகள் பறவைகள் இவை எல்லாம் எப்படி தோன்றின? என்றும் சொல்லிக் கொடுத்தார். அறிவியலைப் படிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்”
ரயில் பூச்சி, “ நல்ல தாத்தா..” என்றது.
பாப்பாண்டு, “ ஆமாம்.. அறிவியலைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மிடம் கதைகளைச் சொல்லி ஏமாற்றி விடுவார்கள் என்றும் சொல்லுவார்..” என்று பெருமையாகச் சொன்னான்.
ரயில்பூச்சி மகிழ்ச்சியில் அவனுடைய கையில் ஏறி உடம்பைத் தூக்கி நடனம் ஆடியது.
பாப்பாண்டுவும் துள்ளிக்குதித்து நடனம் ஆடினான்.
Comments