top of page

இயலில் தேடலாம்!

178 results found with an empty search

  • விடுகதைகள்

    1. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம் - அது என்ன? 2. சின்னவன் தலைக்குச் சீரான கிரீடம். அது என்ன? 3. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு; ஓட்டு வீட்டைப் பிரித்தால் வெள்ளை மாளிகை; உள்ளே குளம். அது என்ன? 4. இத்தனூண்டு சிட்டுக்குருவிக்கு ஏழு முழம் பட்டுப் புடவை. அது என்ன? 5. மூன்று பெண்ணுக்கும் ஒரே முகம்; மூத்த பெண் ஆற்றிலே; நடுப் பெண் காட்டிலே; கடைசிப் பெண் வீட்டிலே. அவர்கள் யார் யார்? விடைகள்:- 1. முட்டை 2. குண்டூசி 3. தேங்காய் 4. வெங்காயம் 5. முதலை, உடும்பு, பல்லி.

  • குழந்தையிடம் அம்மா செல்வது எப்படி?

    குழந்தை அம்மவிடம் செல்ல உதவுங்கள் செல்லக்குட்டி! படம் உதவி: நாஜலட்சுமி நாராயணசாமி

  • ஏன் பிறந்தோம் - 2

    சிந்திக்கும் ஆற்றல் எனறால் என்ன? முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுதல். அதாவது வேப்பமரம் என்ற ஒன்றை அறிந்து கொள்வது முதல் செயல். அத்துடன் அதைப் போன்றே வடிவத்துடன் இருக்கக்கூடியவை புளியமரம், மருதமரம், கொய்யாமரம், முருங்கைமரம், ஆலமரம், அரசமரம். இவை அனைத்தும் மரங்கள் என்று புரிந்துகொள்வது இரண்டாவது செயல். ஒன்றை ஒன்றுடன் இணைத்துப் பார்ப்பதும் வேறுபடுத்திப் பார்ப்பதும்தான் அறிதல். அறிதலின் வழியே ஒரு பொதுக்கருத்து உருவாகிறது. அதாவது மரம் என்கிற பொதுவான ஒன்று இருக்கிறது. அதற்குள் தனித்தனி மரங்களும் இருக்கின்றன. அதாவது மரத்துக்குள் வேப்பமரம், புளியமரம் என்ற தனித்த மரங்களும் அடங்கும். அதேபோல் ஒரு பொதுக்கருத்துக்குள், தனித்த கருத்துகளும் இருக்கும். ஒன்றை அறிதல் என்பது முதல் படி. அறிந்ததுடன் வேறுபட்ட ஒன்றை இணைப்பது இரண்டாவது படி. ஆனால், இப்போது நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதாக இந்தச் செயல் மனித மூளைக்குள் நடந்துவிடவில்லை. மனித மூளையில் சிந்தனை என்ற வேதிவினை நடைபெற பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. மனிதன் மட்டும்தான் சிந்திக்கின்றானா? இல்லை. இயற்கையில் உயிருள்ள அனைத்தும் மூளையை-நரம்புத்தொகுப்பைக் கொண்டுள்ளன. தாவரங்களோ, விலங்குகளோ, பறவைகளோ, பூச்சிகளோ, எந்த உயிராக இருந்தாலும் தங்கள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நரம்புகளை, வேதித் தூதுவர்களை, மின் சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன. தாம் நினைப்பதை வெளிப்படுத்துவதற்கு வேறுவேறு வழிகளைத் தங்களுடைய பரிணாமவளர்ச்சியில் அவை கண்டுபிடித்திருக்கின்றன. என்ன மாதிரியான வழிகள் என்பதைப் பார்ப்போமா? கண்ணுக்குத் தெரிந்த உயிர்கள் அனைத்துமே புலன்களின் வழியே உயிர்வாழ்பவை. உடல் என்கிற ஒன்றின் வழியே உயிருடன் இருப்பவை. அப்படி என்றால் உயிர் என்றால் என்ன என்கிற கேள்வி வருகிறதா? உயிர் என்றால் உடலை இயக்குகிற சக்தி. அந்த சக்தி உடலின் மூலமாகவே உருவாக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று சார்ந்திருப்பது. பின்னிப்பிணைந்திருப்பது என்று சொல்லலாம். ஆச்சரியமாக இருக்கிறதா? சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் உயிர் ஒரு ஒளியைப் போலத் தனியே பிரிந்து செல்வதாகக் காட்சிகளைக் காட்டியிருப்பார்கள். அது எல்லாம் கப்சா! பொய்! உயிர் என்கிற ஒன்று தனியே கிடையாது. அது உடலை இயக்கும் ஒரு சக்தி. உடல் இயங்குவதற்காக உருவான சக்தி. சரியா? அதனால் உடல் இல்லாத உயிர் கிடையாது. எளிய பாசியிலிருந்து மனிதர்கள் வரை உடலும் உயிரும் இணைந்து இயங்குவதன் மூலமே வாழ்கிறார்கள். உயிர்ப்பட்டியலில் மிகக்குறைந்த புலனுணர்வு கொண்ட உயிர்கள் தன்னுடைய உடலின் வழியே செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. இயற்கைச் சூழல்தான் அந்த உயிர்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது. அவை உயிர் வாழ்வது சார்ந்தும் தன் இனத்தைப் பெருக்குவது சார்ந்தும் மட்டுமே செயல்படுகின்றன. அது இயற்கையின் எழுதப்படாத விதி. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான விதி. எனவேதான் சாதகமான சூழல் இல்லாதபோது குறைந்த புலனுணர்வு கொண்ட உயிர்கள் அமைதியாக மடிந்துவிடுகின்றன. மறைந்து விடுவதில்லை. தன் விதைகளை அல்லது உடலை உறக்கநிலையில் பாதுகாத்து வைத்துக்கொள்கின்றன. மீண்டும் சாதகமான சூழல் வரும்போது, அவை உயிர்த்தெழுகின்றன. பாசி, புல், பூச்சிகள், புழுக்கள் என்று இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லமுடியும். சில தாவரங்கள் இயற்கையில் உயிர் பிழைத்திருக்க பலவிதமான சிக்கலான திட்டங்களை வைத்திருக்கின்றன. உதாரணத்துக்கு பூச்சிகளைச் சாப்பிடும் தாவரம், பூச்சிகள் சாப்பிட்டுவிடாமல் இருக்க ஒரு வேதிப்பொருளை சுரக்கும் தாவரம், தொட்டால் சுருங்கிக் கொள்ளும் தாவரம் என்று சில உதாரணங்களைச் சொல்லலாம். நீங்களும்கூட வேறு என்னென்ன தாவரங்கள் எப்படியெல்லாம் செயல்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்துபாருங்களேன். தான் வாழ்வதற்காக இயற்கையுடன் அனுசரித்துச் செல்கின்றன தாவரங்கள். அதேநேரம் தனக்கென தனியான குணாதிசயங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இந்த அளவுக்குத்தான் அவற்றின் செயல்பாடு/சிந்தனை இருக்கிறது. உயிர் வாழ்வதைத் தவிர வேறு சிந்தனை கிடையாது. (அதுவும் அதன் கையில் நூறு சதவீதம் கிடையாது.) இதுதான் அதன் தத்துவம். அந்தச் சிந்தனையின் எல்லைகள் மிகக்குறுகியவை. அவை இயற்கையுடன் பிணைக்கப்பட்டவை. இயற்கையைப் பிரதிபலிப்பவை. புரியலையே! ஆமாம். கொஞ்சம் கடினம்தான். மூளையின் நுட்பமான, சிக்கலான வேதிச் செயல்பாடுதான் சிந்தனை. இந்த அளவுக்கு இப்போது புரிந்துகொண்டால் போதும். என்ன விளையாடுகிறீர்களா? எங்களுக்கு வேறு வேலை கிடையாதா என்று கோபம் வருகிறதா? சரி, சரி. கொஞ்சம் எளிமையாகச் சொல்லமுடியுமா என்று பார்ப்போம். உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட செடியின் இலைகளைக் கிள்ளித் துண்டாக்கிக்கொண்டே இருந்தால், அந்த இலை துண்டிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் அதிர்வலைகள் செடியின் வேர் முதல் நுனிவரை சென்று சேர்கின்றன. அந்த அதிர்வலைகள்தான் ஞாபகப் பதிவாகிறது. அந்த ஞாபகப்பதிவுகள் யாராவது அந்தச் செடியைத் தொட்டாலே பிரதிபலிப்புகளை உருவாக்குகிறது. அது அதிர்ந்து நடுங்குகிறது. மின்காந்த அலைகளின் வழியே எதிர்வினை புரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் விலங்குகள், பூச்சிகள், பறவைகள், புழுக்கள் எப்படிச் சிந்திக்கின்றன? ( தத்துவம் அறிவோம் )

  • பாடிக்கிட்டே படிக்கலாம்!

    பள்ளிப் பாடங்கள் இலக்கியமாக இருக்கும்போதும், இலக்கியப் பார்வையோடு பாடங்களை அணுகும்பொழுதும் கற்றல் கற்பித்தலில் வேகம் அதிகரிக்கும். இது ஆசிரியரும் மாணவர்களும் இணைந்து அனுபவிக்கக்கூடிய ஒன்று. படங்கள், பாடல்கள், புதிர்கள், கதைகள், படக்கதைகள், உரையாடல், கடிதம், நாடகம் எனப் பல்வேறு இலக்கிய வகைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. மொழி சார்ந்த கற்றலில் அது நேரடியாகச் செயல்பட்டாலும் கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற அடிப்படைப் பாடங்களையும் பாடல்கள், காட்சிகள், கதைகள் என இலக்கிய வடிவங்களில் தர முடியும். அப்படிப்பட்ட பாடங்களை, செயல்பாடுகளை அதிகப்படுத்தி நவீனக் கல்வி முறை தன்னை தகவமைத்துக் கொண்டுவருகிறது. அந்த வகையில் ஆரம்பக் கல்வி தமிழ்ப் பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடல்களைப் பற்றி இந்த முறை பார்ப்போம். ஆரம்பக் கல்வியில் தமிழ்ப் பாடமும் பாடல்களும் குழந்தைகளை எப்பொழுதும் மகிழ்விப்பவை. தமிழ் எழுத்துக்களையும்கூட ராக தாளத்துடன் கற்று, மனதில் ஏற்றிக்கொள்பவர்கள் நம் குழந்தைகள். குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இசை இணைந்து பயணிக்கிறது. மொழிப்பாடம் என்பதும் முத்தமிழின் ஒவ்வொரு வகையிலும் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையில் பாடல்கள் வெவ்வேறு வகைகளை உள்ளடக்கியுள்ளன. - குழந்தைகள் தனியாகவும் இணைந்து குழுவாகவும் பாடும்படி உள்ளன. - அனுபவித்துப் பாடும்படியாக, அவர்களின் வயதுக்கேற்ப புரிந்துகொள்ளும்படியாக இருக்கின்றன. - ஒரே இசை வடிவத்தில் இல்லாமல் இசையோடு இணைந்து, நாட்டுப்புற இசை வடிவங்கள் அடிப்படையில், சேர்ந்திசை...எனப் பல்வேறுபட்டு இருக்கின்றன. - பாடுவதோடு மட்டுமல்லாமல் ஆடுதல், இசையுடன் இணைத்து ஆடிப்பாடுவதாகவும் உள்ளன. - பாடல் படித்தல், பாடல் ஒப்பித்தல போன்ற பழைமை நடைமுறையைக் கடக்க க்யூ.ஆர். கோட் மூலம் பாடல் சென்றுசேர்கிறது. பாடல் என்பது உயிர்ப்புள்ள செயல்பாடாக மாறியிருப்பதை மகிழ்ச்சியான கற்றல் உறுதிப்படுத்துகிறது. - ஒவ்வொரு தமிழ்ப் பாடமும் இயற்கை சார்ந்த பாடல்கள், கேள்வி கேட்கும் பாடல்கள், கதைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறார் பாடலாசிரியர்களான அழ. வள்ளியப்பா, பாரதியார், தேசிக விநாயாகம் பிள்ளை போன்றோரின் பாடல்களை உள்ளடக்கியுள்ளன. பாடல்கள்களுக்கு ஏற்ற வண்ண ஓவியங்களும் தேவையாகிறது. - பாடப்பொருள், மொழித்திறன் சார்ந்து குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை மாணவர்கள் அடைவதையும் பாடல்கள் மையப்படுத்தியுள்ளன. இயற்கைப் பாடகள்: ஆலமரத்தில் விளையாட்டு, வண்ணத்துப்பூச்சி, மழை, அனுபவப் பாடல்கள்: கைவீசம்மா கைவீசு அம்மா இங்கே வா வா – மே.வீ.வேணுகோபாலன் தடதடவென இடி இடிக்குது தாளம் தப்பாமல் நிலா பாரு நிலா பாரு நீல வானிலே கண்ணாடி – அழ.வள்ளியப்பா நாட்டுப்புறப் பாடல்கள் ஐலசா ஐலசா, பூனைக்கும் பூனைக்கும், அந்துமல்லி பூத்திருக்கு, முளைப்பாரி பாடல், கும்மியடி கதைப்பாடல் உப்பு மூட்டை, பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம், சட்டை மேல சட்டை போட்டு என்கிற காவல்காரன் பாடல் கேள்வி எழுப்பும் பாடல்கள்: எங்கே போறீங்க? அச்சுவெல்லம் தின்று பார்த்து, இனிப்பு சுவையைக் கண்டுபிடி? என்ன வண்ணம் வேண்டும்? யாரு யாரு யாரு, காரணம் தெரிஞ்சா கூறு கூறு – வையம்பட்டி முத்துசாமி எதனாலே எதனாலே, எதனால் எதனால் எதனாலே? மொழியை சொல்லிக் கொடுக்கும் பாடல்கள்: அதோ பாராய் – அழ.வள்ளியப்பா பொம்மை, பட்டம் பறக்குது வண்ணம் தொட்டு இறகு – அழ.வள்ளியப்பா அழகுத் தோட்டம் பூம் பூம் வண்டி வருகுது ஓடி விளையாடு பாப்பா– பாரதியார் விந்தை மனிதர் கடற்கறைக்குப் போகலாம் கடினமான பாடல்கள் வெற்றி வேற்கை நன்னெறி மேற்கண்ட விதம்விதமான பாடல்களைக் குழந்தைகள் பாடி, ஆடி, இசைத்து, சேர்ந்திசைத்து... என்ற முன்னெடுப்பை பள்ளிகளும் வகுப்பறைகளும் முன்னெடுத்துச் சென்று மாணவர்களின் கற்றலை உறுதிப்ப டுத்த வேண்டும்.

  • எல்லை இல்லா இயற்கை

    அடுத்த வீட்டுச் சேவல் ஒன்று கூவி எழுப்பி விட்டது. அருகில் உள்ள வீட்டு மல்லி மலர்ந்து மணத்தைத் தந்தது. அண்டை இருந்த மரத்தின் குயிலும் கூவி இசையைப் பொழிந்தது. அடுத்த ஊரின் ஏரி நீரும் கிணற்றின் ஊற்றாய் நிறைந்தது. நாடு கடந்து ஆறு பிறந்து நீரைச் சுமந்து வந்தது. காடு பிறக்கும் தூய காற்று கடந்து ஊரைச் சூழ்ந்தது தொலைவில் தெரியும் மலையில் இருந்து தென்றல் தவழ்ந்து வந்தது. அலையும் கடலும் முகிலாய் எழுந்து மழையை எங்கும் பொழிந்தது. எல்லை கடந்தும் நன்மையாகும் இயற்கை என்றும். சிறந்தது. எல்லை மறந்தும் இணைந்து வாழும் அன்பு உள்ளம் உயர்ந்தது

  • பனியை மாற்றிய பருத்தியும், கறுப்பியும்

    செண்பகக் காட்டில் வசிக்கும் வெள்ளை மயில் ‘பனி’ நேற்று வரை மிகவும் சந்தோஷமாகத் தானே இருந்தது. இன்று அதன் நடவடிக்கைகள் மாறி இருக்கிறதே. வெள்ளை மயிலுக்கு என்னாச்சு? எப்போதும் போல மாலையில் விளையாட வந்திருக்கும் நண்பனைக் கண்டுகொள்ளாமல், குளக்கரை நாவல் மரத்தடியில் படுத்திருக்கிறதே. யாரோடும் சண்டையா? வேட்டையாடி விலங்குகளுக்குப் பயந்து பதுங்கியுள்ளதா? பனி மயிலைத் தேடி வந்த ‘பருத்தி’ முயலுக்கு, அது கவலையோடு இருப்பதைப் பார்த்து ஒரே குழப்பம். பனியும், பருத்தியும் தினமும் மாலை குளக்கரையில் விளையாடுவார்கள். வானில் மேகங்கள் கூடி, மழைக்கான அறிகுறி தெரிந்தால், பனி மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடும், பருத்தி முயல் இனிமையாக ஒரு பாடலைப் பாடும். மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் களைகட்டும். ஆமாம்! அன்று பனி மயில் மனதளவில் காயம் பட்டிருந்தது போலும். அதற்குக் காரணம் என்ன? செண்பகக் காடுகளில் வசிக்கும் மயில்கள் கூட்டத்தில் பனி மயிலும் ஒன்று. காட்டில் வாழும் மற்ற மயில்களைப் போல, அது நீலம் கலந்த பச்சை நிறத்தில் இல்லை. வானவில் போன்று பல வண்ணங்கள் கொண்ட தோகையும் அதற்கு இல்லை. மின்னும் பனித்துளியைப் போன்ற வெள்ளை நிறம். வித்தியாசமாக வெள்ளை நிறத்தில் கண்ணைப் பறிக்கும் பேரழகு. அன்று காலை மயில்கள் கூட்டத்தில் நடந்தது இதுதான். திடீரென்று ஒரு வயதான பெண் மயில், என்றைக்கும்போல் இல்லாமல் பனியை உதாசீனப் படுத்தியது. நீண்ட நாட்களாக இருந்த கோபத்தை ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்தது. “நம்மள மாதிரி, இது வானவில் நிறங்களோட பொறக்கல. இயற்கையோட ஆசிர்வாதம் இதுக்குக் கிடைக்கல. மயில்களோட அழகே அதன் தோகையில் இருக்கும் வண்ண நிறங்கள் தான். வெறும் வெள்ளையாக இருந்தால் யார் ரசிப்பாங்க. காட்டில், மத்த விலங்குகள் மயில்கள் கூட்டத்தை மதிக்குமா? இது, நம்ம காட்டுக்கும் மயில் கூட்டத்துக்கும் கிடச்ச சாபம். இனிமேல் யாரும் இந்த மயில்கூடப் பழகாதீங்க” என்று தன்னை இழிவாகப் பேசியதைக் கேட்டு, வெள்ளை மயிலுக்கு அழுகை பீறிட்டு வந்தது. கூட்டத்தில் இருந்த மற்ற மயில்கள் ஆறுதல் சொல்ல முன்வரவில்லை. செண்பகக் காட்டில், பனி மயிலின் வினோதமான வெள்ளை நிறத்தைப் பார்த்து மற்ற மயில்கள் மனதில் வெகுநாட்களாகவே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றில் சில, “இது, தீய சக்தியின் திருவிளையாடல்” என்று கூட தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டன. மனமுடைந்த பனி மயில், கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடத் தீர்மானித்துக் குளக்கரை நாவல் மரத்தடியில் படுத்து யோசித்துக்கொண்டிருந்தது. அப்போது வந்த பருத்தி முயல், தனது அழகான வாலால் மயிலை வருடி விட்டு, “பனி! நான் பார்த்ததிலேயே அழகான மயில் நீ! உனக்கு இன்னக்கி என்னாச்சு? ஏன் இப்படிச் சோகமாக உட்கார்ந்துக்க?" என்றதும் நடந்த கதையை நண்பனிடம் சொன்னது பனி. “கவலைப் படாதே! உண்மையிலேயே நீ மின்னும் பனித்துளியைப் போன்ற வெள்ளை நிறம். அதனால தான் நான் உனக்குப் ‘பனி’ ன்னு பெயர் வெச்சேன். உன் அழகுக்கு ஈடாக இந்தக் காட்டில் எந்த மயிலும் இல்லை” என்று ஆறுதல் சொல்லித் தேற்றியது. பனி எதையும் காதில் வாங்கவில்லை. அப்போது குளத்தில் தவளைகளின் ‘க்கிர்ரக்...க்கிர்ரக்’ சத்தம் கேட்கத் தொடங்கின. சில இசைக்குருவிகளின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. பட்டாம் பூச்சிகள் கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கின. பனி மயிலை ஆற்றுப் படுத்த முயன்ற முயல், “இது போல, ஒரு மழை நாள்ல தான், நீ எனக்கு ‘பருத்தி’ன்னு பெயர் வெச்ச. வெடித்த பருத்திப் பூவைப் போல ‘புஷுபுஷுன்’ன்னு, என் உடல் முழுவதும் ரோமத்தைப் பார்த்து ‘பருத்தி’ ன்னு கூப்பிட்டயே. அது நினைவிருக்கா?” என்று கேட்க, “பருத்தி! உன் சமாதான முயற்சிகள் பலனளிக்காது. இனி எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை. நம்ம ‘கறுப்பி’ குட்டி வந்ததும் அதுட்ட சொல்லிட்டு கிளம்புறேன்” என்றது. அதே நேரத்தில் வேறு ஏதோ விலங்கு ஒன்று, கீழே கிடந்த காய்ந்த சருகுகளைத் தாண்டி வரும் சத்தத்தைக் கேட்டு இரண்டும் பதுங்கிக் கொண்டன. சில நிமிடங்களுக்குப் பிறகு, மறைவிலிருந்து எட்டிப் பார்த்து, வந்திருப்பது ‘கறுப்பி’ என்று புரிந்து கொண்டன. கறுப்பி, ஒரு தேன் கரடிக் குட்டி. ஒரு நாள், அம்மா கரடி மரத்தில் ஏறி தேன் சேகரிக்கச் சென்றபோது குட்டியை மரத்தடியில் விளையாட அனுமதித்தது. ஏற்கனவே மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த பனியும், பருத்தியும் அன்று முதல் நண்பர்களானார்கள். “ஓ! நீ தானா கறுப்பி! எப்படி இருக்க? இன்னக்கி உங்க அம்மா வரலியா?” என்று பேச்சைத் தொடங்கிய பருத்தி, “நீயே இன்னக்கி நடந்த கதையைக் கேளு. பனி மயிலுக்கு செண்பகக் காட்டில் இனி வாழப் பிடிக்கலையாம். காட்டை விட்டு வெளியேறப் போகுதாம். உங்கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு முடிவு செஞ்சு காத்திருக்குது” என்றது. விவரம் கேட்டறிந்த கறுப்பி குட்டி, பனி மயிலை அருகில் அழைத்துத் தனது முதுகில் ஏற்றி கொண்டது. “யார் யாரோ புரியாம ஏதேதோ சொல்றாங்கன்னு கவலைப்பட்டு, வேறு மாதிரியான முடிவுகளை எடுக்காதே. உலகத்தில வெள்ளையா ஒரு மயில் பிறக்கக் கூடாதா? நிறத்தை நீயோ நானோ தேர்வு செய்றதில்லை... என்னைப் பாரு. எனக்கு, நீயும், பருத்தியும் சேர்ந்து தான் ‘கறுப்பி’ன்னு பெயர் வெச்சீங்க. ஏன் நான் கறுப்பாக இருக்கிறேன்னு கவலைப் படலையே. ஊரே கறுப்பு நிறத்தை அவமானமாகப் பார்க்கிறப்ப, ஒங்க மயில்கள் கூட்டத்தில் வெள்ளை நிற வெறுப்பா?... இதையெல்லாம் கேட்டா சிரிப்பு தான் வருது. காக்கா, கறுப்பு தான். ஆனால் அதோட விருந்தோம்பல் பண்பு எந்தப் பறவைக்காவது இருக்கா? யானை, கறுப்பு தான். காட்டில் மரங்கள் வளர யானைகள் உதவுற மாதிரி வேறு விலங்குகள் உதவுறதா? கறுப்பு, வெறுப்பின் நிறம் இல்லை. வெள்ளையால் எந்தத் தொல்லையும் இல்லை. அந்தப் பெண் மயிலை மனதார மன்னிச்சு விட்டுடு” என்றது. அதன் அறிவுரைகளைக் கேட்டு, பனி மயிலுக்கு சிறிதளவு நம்பிக்கை பிறந்தது. “கறுப்பி! நன்றி... இனி நான் மனம் தளரவே மாட்டேன்” என்று நண்பர்களுக்கு உறுதி அளித்தது. விளையாடிய பிறகு, மூவரும் விடைபெறத் தயாரானபோது, மரத்திலிருந்து பறந்து இறங்கிய ஒரு ஆண் மயில், “கொஞ்சம் நில்லுங்க” என்றதும் மூன்றும் மரியாதையுடன் “வணக்கம்” என்றன. ஆமாம்! அது, மயில்களின் தலைவனான ஆண் மயில். பனிக்கு அருகில் வந்த அந்த ஆண் மயில், “மன்னிகணும். காலையில் நடந்ததை நெனச்சு வருத்தப் படாதே. விபத்துன்னு நெனச்சு விட்டுடு. வெள்ளை நிறத்தில் பிறந்ததால... நீ ஒன்னும் தகுதி இழந்து போகலை. மயில்களோட வழக்கமான நிறத்தில இருந்து மரபணு மாற்றம் அடைஞ்ச அதிசய மயில் நீ!.. வா! நாம திரும்பப் போகலாம்” என்றதும், பனி சமாதானம் அடைந்தது. கவலையில் இருந்தும் மீண்டது. மகிழ்ச்சியில் பனி, காடு அதிர அகவியது. சிறிது இடைவெளியில், எதிர்புறத்தில் மயில்கள் அகவும் சத்தம் அடுத்தடுத்து கேட்டன.

  • சிறார்களுக்கு உபதேசம் தேவையில்லை

    எழுத்தாளர் அம்பையுடன் நேர்காணல் - எழுத்தாளர் ஈரோடு ஷர்மிளா ஈரோடு சர்மிளா: இந்தியச் சிறார் இலக்கியம் எப்படி இருக்கிறது? அம்பை: சிறார் இலக்கியம் குறித்து அதிக ஆர்வம் காட்டத் துவங்கியது  குழந்தைகளுக்குப் பாட புத்தகங்களிலும் கதைப் புத்தகங்களிலும் நாம் என்ன கூறுகிறோம் நாம் எந்தக் கதைகள் சொல்கிறோம் என்பதைப் பெண்ணிய இயக்கத்தைச் சேர்ந்த கமலா பஸீன்  போன்றவர்கள் ஆராய்ந்து மாற்றுக் கதைகளை எழுதத் துவங்கியபோதும்  என் வளர்ப்புக் குழந்தைகளுக்காகவும் நண்பர்களின் குழந்தைகளுக்காகவும் நான் கதைப் புத்தகங்கள் வாங்கத் துவங்கியபோதும்தான்.  மிகச் சிறந்த சிறார் நூல்களும் காமிக்ஸும் தமிழில் இருந்த காலத்தில் நான் வளர்ந்தவள் என்பதால், அழ.வள்ளியப்பா, வாண்டு மாமா, ”கண்ணன்” பத்திரிகையில் லெமன் என்ற பெயரில் எழுதிய லக்ஷ்மணன் இவர்கள் என்னுடன்  இருந்தார்கள் நான் சிறுமியாக இருந்தபோது. தவிர, ’கண்ணன’, ‘கல்கண்டு’ ’அம்புலிமாமா’, ‘ஜிங்லி’ போன்ற பத்திரிகைகள் புராணக் கதைகளையும் நவீன உலகக்கதைகளையும் அள்ளி வழங்கின.  அன்பளிப்பாகப் புத்தகங்களை வாங்க ஆரம்பித்தபோது ஆங்கிலத்தில் உள்ள அளவு தமிழிலும் மற்ற மொழிகளிலும் இல்லையோ என்ற உணர்வு ஏற்பட்டது. ஆங்கிலத்தில் படிக்கும் சிறார்களுக்கு கதைப் புத்தகங்களைப் பொறுத்தவரை அதிகச் சலுகை இருப்பதுபோல் தோன்றியது. அது உண்மையும் கூட. ஆனால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள சிறார் நூல்கள் இந்தக் குறையைத் தீர்த்துள்ளன என்று கூறலாம். இன்னும் பலர் எழுத வருவார்கள் என்று நம்புகிறேன். ஈரோடு சர்மிளா: சிறார் இலக்கியத்தில் இன்னும் பேசப்பட வேண்டிய விஷயங்களாக எதையெல்லாம் நினைக்கிறீர்கள்? அம்பை: ’The Very Hungry Caterpillar’ என்ற குழந்தைகளுக்கான நூலை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று தெரியாது. நான் பல குழந்தைகளுக்குப் பரிசளித்த நூல் அது. ஒரு கம்பளிப் பூச்சி பட்டாம்பூச்சியாக மாறுவதை மிகவும் அழகாக, அழகான ஓவியங்களுடன் கூறும் கதைப் புத்தகம். பள்ளிக்கு செல்லத் துவங்காத குழந்தைகளுக்கு அப்படிப்பட்ட நூல்கள் தேவை. ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு பலவித நாட்டார் கதைகளுடன் அறிவியலைக் கதைகளாகக் கூறும் ரோபோக்கள், வேற்றுக் கிரகவாசிகள் வரும் சாகசக் கதைகளும் நாம் தந்தால் அவர்கள் கற்பனை பெருகும். பதின்ம வயதினருக்கு classics என்று கருதப்படும்  செவ்விய இலக்கியத்தில் உள்ள  தமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளின் நூல்கள், ஆங்கில நூல்களின் எளிய மொழியில் உள்ள  மொழியாக்க நூல்கள் இவற்றின் சுருக்கமான வடிவங்களில் உள்ள பதிப்புகளைத் தந்தால் இந்திய இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மிகக் குறைந்த விலையில் வந்தால் எல்லோரையும் எட்ட முடியும். ரஷ்ய மற்றும் சீன மொழிச் சிறார் நூல்களை என் குழந்தைப் பருவத்தில் மிகக் குறைந்த விலையில் வாங்க முடிந்தது. அதேபோல் ஆங்கிலச் செவ்விய நூல்களான ’Tale of Two Cities’, ’Hucklebury Finn’, ’Tom Sawyer’, ’Hunchback of Notredame’, ’Treasure Island’, ’Count of Montecristo’ இவற்றைப் போன்ற நூல்களை சுருக்கமான வடிவத்தில் பதிப்பித்து மிகக் குறைந்த விலையில் வெளியிட்டது பல செவ்விய நூல்களைப் பற்றி அறிந்துகொள்ள என் குழந்தைகளுக்கு உதவியது. இதைத் தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் ஓர் இயக்கம் போல் செய்யவேண்டும் என்று எனக்கு மாளாத ஆசை! ஈரோடு சர்மிளா: தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் புதிதாக எழுத வருபவர்களுக்கு என்ன ஆலோசனைகள் சொல்வீர்கள்? அம்பை: பொதுவாக நான் யாருக்கும் ஆலோசனைகள் கூறுவதில்லை. அதற்கு வேறு பலர் இருக்கிறார்கள். நான் அந்தப் பொறுப்பை ஏற்பதில்லை. ஆனால் சிறார் இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒன்று மட்டும் எனக்குப் புரிகிறது. சிறார்களுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை. சுற்றியுள்ள  உலகத்தின் சாளரங்களை சாகசமாகவும் மந்திரக் கணங்களாகவும் மனத்தைத் தொடும் கதைகளாகவும் கூறி நாம் திறந்தால் போதும். சிறார்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள். அதற்கு நம்மில் உள்ள குழந்தையையும் பதின்ம வயது நபரையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் .

  • பேசும் கடல்

    “இனியன் அமுதா நீங்க ரெண்டு பேரும் அம்மா அப்பா பேச்சை கேப்பீங்களா?” என்று கடல் பாட்டி கேட்டார். அமுதா, “ஐயோ கடல் பாட்டி, இந்த பெரியவங்களே இப்படித்தான் கேட்பிங்க.. சில நேரம் கேட்போம் சில நேரம் கேட்க மாட்டோம்” என்று சொன்னாள். அதைக்கேட்டு நுரை ததும்பும் அலையை வீசிச் சிரித்தார் கடல்பாட்டி. . “ஆனால் மீனவர்கள் எப்போதுமே என்னிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள்.” என்றார் கடல்பாட்டி. ” என்ன கடல் பாட்டி புதுசா புதிர் போடுறீங்க? ” என்று இனியன் கேட்டான். ” நீங்க வீட்டிலிருந்து வரும்போது கால்ல செருப்பு போட்டு வந்தீங்களா? ” என்று கடல்பாட்டி கேட்டார். ” ஆமாம்.. ஆனால் அப்பா கடற்கரைக்கு செருப்பு போட்டுட்டு போக வேண்டாம்னு சொல்லுவாங்க..” என்றாள் அமுதா. ” ஏன் தெரியுமா? ” என்று கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார் கடல்பாட்டி. ” ஐயோ! பாட்டி.. விளக்கமா சொல்லுங்க ” என்று அமுதா சலிப்புடன் மணலில் உட்கார்ந்தாள். கடல்பாட்டி மெல்ல வந்து அவள் காலை நனைத்தார். அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டியது போல இருந்தது. அவள் கெக்கெக்கே என்று சிரித்தாள். இனியனும் சிரித்தான். ” பொதுவாகவே என்னை நம்பி வாழும் பாரம்பரிய மீனவர்கள் கடலில் பயணிக்கும்போதும் சரி, மீன் பிடிக்கும் போதும் சரி, கடற்கரையில் வலைகளைப் பழுது பார்க்கும் பொழுதும் சரி, மீன்பிடித்தொழில் சார்ந்த கருவிகளைப் பராமரிக்கும் பொழுதும் சரி காலில் செருப்பு அணிவதே இல்லை. ” என்று சொன்னார் கடல்பாட்டி. ” ஆமா.. இனியன் அங்க பாரு! அப்பா செருப்பு போடாமல் தான் வலையைப் பழுது பார்க்கிறாரு..” என்று சொன்னாள் அமுதா. அதற்கு இனியன், “ ஆமாம்.. அப்பா செருப்பு போட்டு பார்த்ததே இல்லை.. ஏன் பாட்டி? ” என்று இனியன் கேட்டான். ” பேரப்பிள்ளைகளா! எங்கெல்லாம் செருப்பு போடாம போவாங்க உங்களுக்கு தெரியுமா? ” என்று கடல்பாட்டி கேட்டார். ” சாமி கும்பிடும் போது போடமாட்டாங்க.. பிறருக்கு மரியாதை செய்யும் போதும் செருப்பு போடமாட்டாங்க..” என்றாள் அமுதா. ” இப்ப புரியுதா நெய்தல் நிலத்தில் வாழும் பாரம்பரிய மீனவர்களுக்கு நான்தான் முதல் தெய்வம். அதாவது இயற்கை தான் இவர்களின் ஒரே நம்பிக்கை. மீனவர்கள் இயற்கையை நம்பி மட்டுமே வாழ்பவர்கள். ” என்றார் கடல்பாட்டி. ” பாட்டி நீங்க சொல்றது சரிதான். எங்க ஊர்ல கடல் தொழில் செய்யும் யாருமே இதுவரை கடற்கரைக்கு செருப்பு போட்டு வந்து நாங்க பாக்கல. அவங்க வலை, படகு, கடல் எதுலயும் செருப்புபடாம பாத்துக்குவாங்க படகுகளில் ஏறும் பொழுது மத்தவங்க செருப்பு போட்டு இருந்தாலும் கழற்ற சொல்லிடுவாங்க ” என்று அமுதன் சொன்னான். ”அது மட்டும் இல்ல கண்ணுகளா..கடல்ல ஆழியைத் தாண்டி வரும்போது வெத்தல பாக்கு புகையிலை எதுவும் போட மாட்டார்கள். ஆழி இருக்கும் திசை நோக்கி அவர்கள் கையெடுத்து கும்பிடுவார்கள். அப்பொழுது தலையில் கட்டி இருக்கக்கூடிய தலைப்பாகையையும் அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். அந்தப் பகுதியை கடக்கும் வரை கடலிலே அவர்களை எச்சில் துப்பமாட்டார்கள். வேட்டியை மடித்து கட்ட மாட்டார்கள். ” என்றார் கடல்பாட்டி. ” ஆஹா! மிகவும் புதிய தகவலாக இருக்கிறதே. இது எனக்கு தெரியாதே எங்க அப்பா கிட்ட இன்னைக்கு நான் கேட்டு தெரிந்து கொள்ளப்போறேன். ” என்றாள் அமுதா. அமுதாவுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. இனியனும் அமுதாவும் கடல் பாட்டியோடு நீண்ட உரையாடல் செய்து கொண்டிருந்தார்கள் அவர்களின் உரையாடலின் மூலம் நெருக்கம் கூடக்கூட உடைந்த மணல் கோபுரத்தை மறந்து போனாள் அமுதா. ” அமுதா நம்ம கடலை பாத்தியா எவ்வளவு அழகா இருக்கு. அந்த கடல்தான் நமக்கு வாழ்வாதாரம். கடல் தொழிலில் எதுவும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும் அதில் தொழில் செய்யும் பொழுது அவர்கள் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காகவும் அதை வணங்கிட்டுதான் தொழிலுக்கு போவாங்க. ” என்று இனியன் சொன்னான். ” ஆமாம் அண்ணா. அது சரி ஆழின்னா என்ன? ” என்று கேட்டாள் அமுதா. ” வா நம்ம கடல் பாட்டிகிட்டயே கேட்டு தெளிவுபடுத்துவோம் “ என்று சொன்னான் இனியன். இருவரும் திரும்பிப்பார்க்கும் போது கடல்பாட்டியைக் காணவில்லை. ( கடல் பேசும்.)

  • கனவு பயணம்

    விஜியும் சல்மாவும் தோழிகள். எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். விஜி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள். வீட்டுக்கதையை பேசுவாள். தெரு கதையை பேசுவாள். இவளுக்கு வாய் வலிக்குமா? வலிக்காதா? என்று அவளை பார்க்கிறவர்கள் ஆச்சரியப்படுவார்கள். விஜி சொல்லும் கதைகளை கேட்கும் பொறுமையான காதுகள் சல்மாவின் காதுகள். அவள் நம்ப முடியாத பல கதைகளை கூறுவாள். சல்மா கண்கள் விரிய ஆச்சரியமாக கேட்பாள். விஜிக்கு நிறைய ஆசைகள் இருந்தன. வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும். சைக்கிள் ஓட்டனும். யார் உதவியும் இல்லாம தானாகவே குளிக்கணும். அவசரம்னா தானாகவே நடந்து கழிவறைக்குப் போகணும். பள்ளிக்கூடத்துக்கு தனியா சைக்கிள்ல போகணும். இப்படி நிறைய ஆசைகள். எல்லா ஆசைகளும் ஆசைகளாக மட்டுமே இருந்தன. விஜியால் நடக்க முடியாது. இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி முட்டியால் தவழ்ந்து தான் நகர்வாள். அவளுக்கு சல்மாவை மிகவும் பிடிக்கும். விஜியின் அப்பா தினமும் தின்பண்டம் வாங்கி வருவார். அதில் கொஞ்சத்தை எடுத்து டப்பாவில் மறைத்து வைப்பாள். அடுத்த நாள் காலையில் அதை சல்மாவுக்கு தருவாள். "எனக்கு வேண்டாம் நீ சாப்பிடுப்பா" என்பாள் சல்மா. விஜி விடமாட்டாள். சில நேரங்களில் அவளே ஊட்டியும் கூட விடுவாள். விஜி நன்றாக பாடுவாள். ஆனாலும் விஜிக்கு பாடுவதில் பெரிய விருப்பமில்லை. அவளுக்கு சல்மாவுடன் கதை பேசத்தான் பிடித்திருந்தது. அவள் எப்போதாவது பாடுவாள். இது பள்ளியில் எந்த ஆசிரியருக்கும் தெரியாது. விஜி... பாட்டு பாடுப்பா....என்பாள் மலர். உடனே அனைவரும் விஜியை சுற்றி நின்று கொள்வார்கள் பாடு விஜி.... பாடு.... என்று கோரசாக கத்துவார்கள். யார் விஜியை பாடச் சொன்னாலும் அவள் பாட மாட்டாள். "விஜி பாடு" என்று சல்மா கூறியவுடன் விஜி பாடத் தொடங்குவாள். அவள் ஆசைகளை அவளே மெட்டு போட்டு பாடுவாள். ஒரு நாள் அவளோட வகுப்பறையை கடந்து போனார் மகா லட்சுமி டீச்சர். விஜி பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு சத்தம் கேட்டு உள்ளே வந்தார் . அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. " விஜி சூப்பரா பாடுறம்மா. உனக்குப் பாடத் தெரியும் என்று நீ ஏன் சொல்லவே இல்லை " என்றார் மகா டீச்சர். விஜியை திரும்பத் திரும்ப பாடச் சொல்லி கேட்டார். மகிழ்ச்சியில் அவள் அன்று இரவு தூங்கவே இல்லை. அடுத்த நாள் உடற்கல்வி பாட வேளை வந்தது. அனைவரும் மைதானத்திற்கு சென்று விட்டார்கள். விஜியை மூன்று சக்கர வாகனத்தில் சல்மாவும் அனிதாவும் உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். மைதானத்தின் ஒரு ஓரத்தில் மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தாள் . நண்பர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவள் ஆசையாய் பார்ப்பதை சல்மா பார்த்து விட்டாள். தன் வகுப்பு தோழர்களை அழைத்துக் கொண்டு விஜியின் பக்கத்தில் வந்தாள். சல்மாவும் அனிதாவும் இரண்டு பக்கவாட்டில் பிடித்துக் கொண்டனர். பின்பக்கம் இரண்டு பேர் பிடித்துக் கொண்டார்கள். வேகமாக தள்ளிக்கொண்டே மைதானத்திற்குள் ஓடினார்கள். அப்படியே மைதானத்தை வட்டமடித்தார்கள். விஜி வண்டியின் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அண்ணார்ந்து வானத்தை பார்த்தாள். வானத்தில் பறப்பது போல இருந்தது. விஜி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதற்குப் பிறகு ஒவ்வொரு உடற்கல்வி பாடவேலையிலும் விஜி இப்படியே பறவை போல் பறந்து மகிழ்ச்சியாய் இருந்தாள். நாள்கள் கடந்தன. திடீரென்று பள்ளி பரபரப்பானது. மாவட்ட அளவிலான நாடகப் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சல்மா அவ்வப்போது நாடக ஒத்திகைக்குச் சென்று விடுவாள். விஜிக்கு சல்மா இல்லாத நேரம் என்னவோ போல இருக்கும். உணவு இடைவேளையின் போது சல்மாவிடம் கேட்டு விட்டாள். "சல்மா எனக்கும் கை, கால் நல்லா இருந்திருந்தால் நானும் நாடகத்தில் சேர்ந்து இருக்கலாம் தானே" என்றாள். சல்மாவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. "டீச்சர் விஜியையும் நாடகத்தில் சேர்க்க முடியுமா?" என்று ஒத்திகையின் போது டீச்சர்கிட்ட கேட்டாள் சல்மா. வெளியூருக்கு எப்படிப்பா விஜியை கூட்டிட்டு போவது? என்றார் டீச்சர். நான் அவளை தூக்கிக் கொள்வேன். அது என் பொறுப்பு டீச்சர் என்றாள் சல்மா. அன்று மாலை விஜியை அழைக்க வந்த அம்மாவிடம் மகா டீச்சர் விஷயத்தை கூறினார். அம்மாவுக்கு அதிர்ச்சி. "அவளால் எந்த வேலையும் தனியா செய்ய முடியாது டீச்சர். அவள் அங்கு வந்து என்ன செய்யப் போறா . கை குழந்தைய வச்சுக்கிட்டு என்னாலையும் உங்க கூட வர முடியாது. உங்களுக்கு தான் தொந்தரவா இருக்கும். வேண்டாமே டீச்சர்" என்றார். "விஜி நல்லா பாட்டு பாடுவா. நாடகத்திற்கு பாட்டு பாட ஆள் தேவை. விஜியால் அது முடியும். உங்களுக்கு அனுப்ப விருப்பம் இருந்தா சொல்லுங்க. மற்றவைகளை நாங்க பார்த்துக்கிறோம்" என்றார் மகா டீச்சர். " உங்க விருப்பப்படி செய்யுங்க". என்று சம்மதித்தார் விஜியின் அம்மா. போட்டி நாள் வந்தது. விஜி குதூகலமாக கிளம்பினாள். சல்மாவும் அனிதாவும் சேர்ந்து விஜியை தூக்கிச் சென்று வேனில் உட்கார வைத்தனர். வேன் கிளம்பியது. ஜன்னல் ஓரத்தில் விஜி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் வயல்வெளி. எதிர் காற்று முகத்தில் அடித்தது. பிரபலமான சினிமா பாட்டு வேனில் ஒலித்தது. ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாள் விஜி. டிரைவர் அண்ணன் பக்கத்தில் இருந்த அப்துல்லா சொன்னான் "அண்ணன் பாட்டை நிப்பாட்டுங்க. விஜி நீ பாடு" அவன் சொன்னதும் எல்லோருமே சேர்ந்து கொண்டனர். விஜி பாடு.... விஜி பாடு ....என்று ஒரே கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். அவள் பாட..... அனைவரும் ஆட..... ஒரே குதூகலம். அது அவள் ஆசைப்பட்ட பயணம். பக்கத்தில் இருந்த சல்மா விஜியின் குதூகலமான முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். இருவரின் கைகளும் இறுகப் பற்றி இருந்தன.

  • ஸ்டீவன் ஹாகிங்

    20 வயதில் தீவிரமான நோய் கண்டறியப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி வாழ வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் சொன்னாலும், அதற்குப் பிறகு 55 ஆண்டுகள் வாழ்ந்து, பல இயற்பியல் கோட்பாடுகளை உருவாக்கி, இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்ந்து நமக்கு அனைவருக்கும் உத்வேகம் தந்த தனித்துவமான மனிதர் ஸ்டீவன் ஹாக்கிங். அந்த மாபெரும் அறிவியல் அறிஞரைப் பற்றி சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில், ‘ஸ்டீவன் ஹாகிங் :முடிவிலிருந்து ஒரு தொடக்கம்’ என்னும் நூலை எழுத்தாளர் கமலாலயன் அவர்கள் எழுதி, ஓங்கில் கூட்டம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் ஆக்ஸ்போர்டு என்ற இடத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் பிராங்க் . தாயின் பெயர் ஐசோபெல் ஹாக்கின்ஸ். தந்தை ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். தன்னுடைய 17 ஆவது வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். பின்பு அண்டவியலில் முனைவர் பட்டம் பெற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அவர் கருந்துளை பற்றிய ஆராய்ச்சியை அங்கு தொடங்கினார். 1974 இல் ராயல் சொசைட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க தொடங்கிய காலத்திலிருந்து இவருக்கு அமியோடிரோபிக் லாட்டெரல் செலரோசிஸ் என்ற அரிதான நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயின் தாக்கம் தொடங்கியிருந்தது. மெல்ல மெல்ல நடப்பதில் தடுமாற்றம் ஆரம்பித்து, நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்பட்டது. அந்த நோயின் தாக்கத்தால் அவர் நாடி நரம்பு எல்லாம் சிதைக்கப்பட்டு வந்தாலும் அவருடைய சிந்தனையையும் மனதையும் அதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ரோஜர் பென் ரோஸ் என்ற மூத்த அறிவியலாளரின் கருத்தரங்கத்திற்கு சென்று கொண்டு திரும்பி வந்த நேரத்தில் , இந்த ஒருமை கணத்தேற்றத்தை பிரபஞ்ச வெளி முழுமைக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன? என்று எழுந்த ஒரு சிந்தனை தான் அவருக்கு அது சார்ந்த ஆய்வு கட்டுரையை எழுத வைத்து முனைவர் பட்டம் கிடைக்க வழி செய்தது. இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இவரை காதலித்து மனம் புரிந்து கொண்ட பெண் தான் ஜேன். அவருக்கு வாழ்க்கையின் மீது பற்றும் ,வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் தந்த உறவு ஜேன். 1966 இல் வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஹாகிங். அதற்குப் பிறகு ஜெனிவா நகரில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு எஞ்சி இருந்த பேச்சுத்திறனும் பறிபோனது. அப்போதும் அவர் சோர்ந்து போய்விடவில்லை. ஏனென்றால் அவருடைய சிந்தனைகளுக்கு தான் எல்லை இல்லையே. அதற்குப் பிறகு அவருடைய கண்ணசைவைக் கொண்டு சொற்களை உருவாக்கி உரையை தயாரித்துக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தார். கலிபோர்னியாவை சேர்ந்த , வால்ட் வால்டோஸ் என்ற நண்பர் Equalizer version EZ keys என்ற மின் பொருளை இவருக்காக பிரத்தியேகமாக தயாரித்து தந்தார். ஹாகிங் கண்ணசைவு, விரல் அசைவு இவற்றைக் கொண்டு எல்லாம் அவர் எண்ணங்களை சொற்களாக்க இந்த மென்பொருள் உதவியது. 1988 இல் வெளிவந்த அவருடைய காலம் ஒரு சுருக்கமான வரலாறு என்ற புத்தகம் அவருக்கு மிகப்பெரிய புகழை வாங்கி தந்தது. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதப்பட்ட இந்த நூல் , கோடிக்கணக்கான பிரதிகள் விற்றன. புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, அணுக்கரு மென் விசை , அணுக்கரு பெரு விசை இந்த நான்கு திசைகளும் தான் பிரபஞ்சம் வெளியில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய அனைத்துக்கும் அடிப்படை. ஒருங்கிணைந்த கோட்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது ஐன்ஸ்டீனின் கனவு. ஸ்டீபன் ஹாக்கிங் இதற்காகத்தான் பெரும்பாடு பட்டார். Theory of everything இந்த கொள்கைக்கு பெயர் சூட்டி இருந்தார். ஆனாலும் அவராலும் இந்த ஆய்வை முடிக்க இயலவில்லை. இவருடைய அறிவியல் ஆய்வுகளுக்காக மட்டும் இவர் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல. விடாமுயற்சி, தன்னம்பிக்கை வாழ்வில் எந்த கடினமான கணத்திலும் சோர்ந்து போய்விடாமல் தன் தேடல்களை நோக்கி பயணப்பட்ட ஒரு தனித்துவமிக்க மனிதர். நிச்சயம் இவருடைய வாழ்க்கை வரலாறை வாசிக்கும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தரும். நூல்:- ஸ்டீவன் ஹாகிங் ( முடிவில் இருந்து ஒரு தொடக்கம்) ஆசிரியர் : கமலாலயன் வெளியீடு :- ஓங்கில் கூட்டம் - பாரதி புத்தகாலயம்

  • கட்ட வண்டி

    கடக்கு முடக்கு கட்ட வண்டி காட்டுவழியில் செல்லும்வண்டி மாடுரெண்டும் பூட்டிக்கிட்டு மாமாவையும் கூட்டிக்கிட்டு தாத்தா பாட்டியை ஏத்திக்கிட்டு தம்பியும் நானும் சேர்ந்துகிட்டு தன்னானே பாட்டுப் பாடிக்கிட்டு தரணி எங்கும் சுத்திடுவோம்.

  • அய்யோ!

    ஓவியம் உ.நவீனா:

bottom of page