இயலில் தேடலாம்!
178 results found with an empty search
- அம்கா
நூல் :- அம்கா ஆசிரியர் :- விழியன் பதிப்பகம் :- பாரதி புத்தகாலயம் பக்கங்கள்:- 80 விலை :- ரூ.80/- வணக்கம் செல்ல குழந்தைங்களே.. வாழ்க்கையில் எவை எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி தரும் என்று நினைக்கறீங்க? படிப்பு, அந்தஸ்து, வேலை, பணம் இப்படி நிறைய சொல்லிட்டு போகலாம். ஆனால் இவற்றை எல்லாவற்றையும் விட மகிழ்ச்சி தரும் ஒன்று. மனதளவில், உடல் அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று பற்றிக்கொள்ளுதல், வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று ;நமக்கு மகிழ்வையும் தரும் கூடிய ஒன்று. அப்படி இந்தத் தொகுப்பில் உள்ள 14 கதைகளிலும் பொதுவான அம்சம் இறுகப் பற்றிக் கொள்ளுதல் தான். ஒரு நெகிழ்வான வாசிப்பு அனுபவத்தை தரும் நூல். அம்கா :- மகிழமது என்ற குழந்தை, அந்தஸ்து வேறுபாடு இன்றி , ஒரு சுகாதாரப் பணியாளரின் மகள் சசியுடன் பழகுகிறாள். பசி வயிற்றோடு வரும் குழந்தைக்கு வயிற்றுக்கும், அவள் அறிவுப் பசிக்கும் உணவிட ஆரம்பிக்கிறாள். அந்தக் குழந்தை இவளுக்கான நினைவு பரிசாக ஒரு ஓவியத்தை வரைந்து நன்றி! அம்கா.. என்று எழுதி இருக்கிறது. அக்கா என்பதை பிழையாக எழுதி இருக்கிறாள் என்று நினைக்கிறீர்களா? இல்லை அவள் அன்பை அந்த சொல்லில் காட்டியிருக்கிறாள். அதன் பொருள் தெரிய கதையை வாசியுங்கள் குட்டீஸ். இரைச்சல் :- பெரும்பாலான நேரங்களில் பெரியவர்களான நாம் நம்மைப் பற்றி மட்டும்தான் நினைக்கிறோம். ஆனால் நாம் செய்கின்ற செயல்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதில்லை. அப்படி ஒரு பள்ளியின் அருகே இருக்கும் கோவிலில், ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் கடவுள் பாடல்கள் வைக்கப்படுகிறது. அதைத் தட்டி கேட்டால் அது மத பிரச்சனையாக உருவெடுக்கும் என்று ஆசிரியர்கள் பயப்படும் வேளையில், பள்ளிக்கு புதிதாக வந்த நாகப்பன் என்ற மாணவன் , அறிவுப்பூர்வமாய் செய்த செயல், அந்த ஊர் பெரியவர்களின் மனதை மாற்றியது. அப்படி அவன் என்ன செய்தான்? பிடிச்சுக்கோ:- உள்ளடக்கிய கல்வி முறை என்பது அனைத்து குழந்தைகளும், அவர்களின் திறன்கள் மற்றும் தேவைகளைப் பொருட்படுத்தாமல், ஒரே வகுப்பறையில், ஒரே பள்ளிகளில் படிக்கும் ஒரு கல்வி முறை. ஆனால் நம் வகுப்பறைகள், கல்விக் கூடங்கள் உண்மையிலேயே மாற்றுத் திறனாளி குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா? அப்படி நடக்க முடியாமல் அம்மாவின் இடுப்பில் அமர்ந்து பள்ளிக்கு வரும் சூர்யா என்ற குழந்தையின் அம்மாவின் பாரத்தை குறைப்பதற்காக, சூர்யாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்ட நண்பர்கள் என்ன செய்தார்கள்? என்பது தான் கதை. தற்காலிக தாத்தாக்கள்:- இளமையில் வறுமைக் கொடிது; முதுமையில் தனிமை கொடிது; அப்படி தனிமையான முதுமையில் வசிக்கும் தாத்தாக்கள், தங்களுக்கான உலகத்தை எப்படி நேர்மையான அணுகு முறையோடு உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை பேசும் கதை. அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை:- ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சித் தலைவர் செல்கிறார். ஆனால் திடீரென்று அங்கே எதிர்பாராமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் நடந்தே பள்ளிக்கு செல்கிறார். இது சாதாரணமாக நடந்தது அல்ல. இதன் பின் ஏதோ இருக்கிறது. அதைக் கண்டறிய காவல்துறை வருகிறது. அது ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசல் என்பதை அறிந்தாலும், தங்களது அறிக்கையில் அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை என்று அந்த காவல்துறை ஆய்வாளர் மேரி பதிவு செய்து அனுப்புகிறார். ஏன் அவர் நடந்ததை எழுதவில்லை? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம். அ.ள்.ளி அள்ளி அ.ர.வ.ணை அரவணை அள்ளி அரவணை:- பள்ளிகளில் அனைவரும் சமம் என்று சொன்னாலும் கூட, எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைத்து விடுவதில்லை. அப்படி புத்தகக் கண்காட்சிக்கு தனக்கு வர எப்போதும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்று ஏக்கப்பட்டு கீர்த்தி என்ற குழந்தை பீரித்தி என்ற குழந்தையிடம் சொல்வதைக் கேட்ட கவிதா அக்கா துரிதமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும், அனைத்து குழந்தைகளும் புத்தகக் கண்காட்சிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அந்த கவிதா அக்கா? ஒரு பிரியாணி பார்சல்ல்ல்:- தேவனும், ராகுலும் நண்பர்கள். எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பிரியாணி வாங்கி சாப்பிட ஆசை. காலை உணவு உண்ண தரும் காசை சிறிது செய்தாக சேகரித்து பிரியாணி வாங்க ஒரு கடைக்கு செல்கிறார்கள். ஆனால் போதுமான அளவு தொகை அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்களுக்கு வயிறு முட்ட பிரியாணி கிடைத்ததோடு, ஒரு வயதான கண் தெரியாத பாட்டிக்கும் சேர்த்தே பிரியாணி கிடைத்தது. எப்படி கிடைத்திருக்கும்? அந்தக் கடையில் மனிதம் நிறைந்த நெஞ்சங்களும் இருந்தது என்பதை சொல்லித்தான் அறிய வேண்டுமா? குமோங்மங் - திடீரென வந்த வால் நட்சத்திரம்:- கொரோனா காலகட்டத்தில், வாகனங்கள் அதிகம் செல்லாததால் ஒலி மாசுபாடில்லை; புகை மாசுபாடு இல்லை; ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் தொடங்கிவிட்டது. இந்தக் கதையில் கற்பனையில் வரும் ஒரு வால் நட்சத்திரம், உலகில் உள்ள அனைத்து வாகன எரிபொருட்களையும் மாயமாய் கொண்டு சென்று விடுகிறது. என்ன நடந்தது என்பது தான் கதை. ஊற்று:- மருதன், மோகனா ,வந்தனா, டேனிஷ் என்ற நான்கு குழந்தைகள், தங்கள் முன்பின் அறியாத தினேஷ் என்ற சிறுவனுக்கு உதவி செய்கிறார்கள். முன்பின் அறியாத சிறுவனுக்கு என்ன உதவி செய்தார்கள்? உதவி என்பது அறிந்தவர்களுக்கு மட்டும்தான் செய்ய வேண்டுமா? அதேபோல் கேட்டால் தான் உதவி செய்ய வேண்டுமா என்ன ? இப்படி இந்த தொகுப்பில் உள்ள நிறமற்ற வண்ணங்கள், க்ளாப்ஸ், வீர தீரம், கதம் கதம் கொக்கோ ரதம் ரதம் கிக்கோ, இந்த மலைக்கே போன்ற கதைகள் அன்பையும் இறுகப்பற்றுதலையும் அழுத்தமாய் பேசுகிறது. சக மனிதர்களுக்கு வாழ்தலில் நாம் தரும் ஆக பெரும் நம்பிக்கை இறுகப்பற்றுதலே. என்ன குட்டீஸ் நீங்களும் தேவையானவர்களின் கரங்களை இறுகப்பற்றிக் கொள்வீர்கள் தானே?
- பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்
வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள். இயற்கையின் மீதும் சூழலியல் மீதும் தீராக் காதலும் கருணையும் கொண்ட தலைசிறந்த பண்புடைய தலைவனான பறம்பின் பாரியை பாணர்களும் புலவர்களும் சிலாகித்து பாடினர். அப்படிப்பட்ட இனக்குழு சமூகத்தின் தலைவனான பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையின் நீட்சியே இந்த நாவல். உலகின் தொல்குடியான தமிழ்குடியின் அறம் சார்ந்த வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் பாரியின் சங்க கால வாழ்க்கையை இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இப்படியானதொரு இளையோர் நாவலினை மிகச் சிறந்த முறையில் படைத்திருக்கிறார். "சாகசங்களை தேடும் பதின்ம வயதில் பறம்பின் ஏழு மலைகளை அறிந்து கொள்வதில் தன் முழு ஆற்றலையும் செலவழித்தான் பாரி. ஒரே நேரத்தில் இளமையின் வலிமையையும் முதுமையின் பேரன்பையும் பாரியால் காட்ட முடிந்தது" என்பதை வாசிக்கும் போது எப்படி பாரி பேராற்றல் உடைய தலைவனாக தன்னுடைய பதின் பருவத்திலேயே உருவாகிக் கொண்டிருந்தான் என்பதை இந்த நாவலின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டை ஆட்சி செய்த மூவேந்தர்களும் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் பரிசு பொருட்களை அள்ளி அள்ளிக் கொடுத்த போதிலும் பாரியிடம் கிடைக்கப்பெற்ற கருணையை வேறு எந்த மன்னரிடமும் எந்தப் பாணரும் புலவரும் உணர வில்லை என்று கபிலர் குறிப்பிடுவதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அவருடைய பதின் பருவம் இருந்தது என்பதனை அறிந்து கொள்ள இந்த நாவல் துணை செய்கிறது. கடல் கடந்து பரவி இருக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கும் பாரியின் வரலாற்றை இளையோருக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும் அவன் வேள்பாரியாக உருவாவதற்கு பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி துணை செய்தது என்பதையும் கண்முன் காட்சிகளாக விரித்து காட்டுகிறது இந்த நாவல். வாசித்து முடித்து சில வாரங்கள் கடந்துவிட்டாலும் பாரியின் கரம் பிடித்து பறம்பு மலையைச் சுற்றி வந்தபோது ஏற்பட்ட நெகிழ்ச்சி இப்போதும் மனது முழுவதும் நிரம்பி வழிகிறது. வெளியீடு - வானம் பதிப்பகம் தொடர்புக்கு - 9751549992
- பாட்டுப்பாடுவோமா!
1.கப்சிப் நாயுக்கும் நாயுக்கும் சண்டையாம் பூனையும் பூனையும் பார்த்ததாம் பூனைக்கும் பூனைக்கும் சண்டையாம் எலியும் எலியும் பார்த்ததாம் எலிக்கும் எலிக்கும் சண்டையாம் பல்லியும் பல்லியும் பார்த்ததாம் பல்லிக்கும் பல்லிக்கும் சண்டையாம் பொத்து பொத்துன்னு விழுந்ததாம் பொத்து பொத்துன்னு விழுந்ததும் கப்பு சிப்புன்னு இருந்ததாம். 2.மாமா வீட்டுத்தோட்டம் மாமா வீட்டுத் தோட்டம் மாடி யிலே இருக்குது மாறா வந்து பாரேன் அதிச யமாய் இருக்குது சின்னஞ் சிறியத் தொட்டிகள் செடியைத் தாங்கி நிற்குது புடலை பாகற் காய்களோ தலைக்கு மேலே தொங்குது கத்திரிக்காய் செடி எல்லாம் பூத்து காய்த்து கிடக்குது தக்காளி செடி கூட பழுத்து பளுவில் தொங்குது குழம்புக் கேற்ற செடிகொடிகள் பந்த லிலே படருது பூச் செடிகள் பழவகைகள் கீரை களும் வளருது மாமா வீட்டுத் தோட்டம் மாடி யிலே இருக்குது மாறா வந்து பாரேன் அதிச யமாய் இருக்குது
- மெகலோடான்
பல குழந்தைகளுக்கு இருக்கும் ஒரு பெரிய கேள்வி, "இப்பவும் மெகலோடான் (மெக்) இருக்கா?" என்பதுதான். மெகலோடான் (Megalodon) என்ற ஒருவகை சுறா இப்போது இல்லை. எப்போதோ அழிந்துவிட்டது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலகட்டம் வரை இந்த சுறாமீன்கள் வாழ்ந்திருக்கின்றன. மெகலோடான் என்ற சொல்லுக்கு "பெரிய பற்களுடையது" என்று பொருள். இதன் பற்கள் பிரம்மாண்டமாக இருந்ததால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். "பெரிய பல்" என்று சும்மா பேச்சுக்கு என்று யாரும் சொல்லவில்லை. ஒரு பல்லே அதிகபட்சம் 18 சென்டிமீட்டர் நீளம் இருக்குமாம்! அதாவது அரையடி ஸ்கேலைவிட கொஞ்சம் அதிகமான உயரம்! இதை அடிப்படையாக வைத்து நாம் இதற்குத் தமிழில் "பெரும்பல் சுறா" என்று பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த பூமியில் இதுவரை தோன்றிய சுறாக்களிலேயே மிகப்பெரியது பெரும்பல் சுறாதான். இது சுமார் 60 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் எடை ஐம்பதாயிரம் கிலோ இருக்கும். பிற சுறாக்கள், திமிங்கிலங்கள் போன்ற கடல் பாலூட்டிகள், பெரிய மீன்கள் ஆகியவற்றைப் பெரும்பல் சுறாக்கள் வேட்டையாடி சாப்பிட்டிருக்கின்றன. பெரும்பல் சுறாக்களின் உடல் சற்றே மெலிதான, நீண்ட அமைப்பு கொண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். என்னதான் அளவில் பெரியதாக இருந்தாலும் இது வேகமாக நீந்தக்கூடியது அல்ல என்றும், பதுங்கிப் பதுங்கி இரைக்கு மிக அருகில் போய் பிறகு விரைவாகத் தாக்கும் பண்பு கொண்டது எனவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன பொதுவாக அழிந்துபோன விலங்குகளை நாம் தொல்லுயிர் எச்சங்கள் (Fossils) மூலமாகத்தான் அறிந்துகொள்வோம். டைனோசர்களைக் கூட அப்படித்தான் விஞ்ஞானிகள் புரிந்துகொண்டனர். உடலில் இருக்கும் எலும்புகள் கடினமாகி இறுகும்போது தொல்லுயிர் எச்சங்கள் உருவாகும். ஆனால் சுறாக்களின் உடலில் எலும்புகள் கிடையாது. குருத்தெலும்புதான் இருக்கும். நமது காதுகளிலும் மூக்கிலும் இருக்கும் எளிதில் வளையக்கூடிய எலும்புதான் குருத்தெலும்பு. சுறாக்களின் உடல் முழுக்கவே இந்தக் குருத்தெலும்புதான் இருக்கும். எலும்பு கிடையாது என்பதால் அந்த எலும்புக்கூடு தொல்லுயிர் எச்சமாகவும் மாறாது. எலும்புக்கூடு கிடைக்காது என்றால் எப்படி அதன் உடல் நீளத்தையெல்லாம் கணக்கு போட்டார்கள்? அங்குதான் இருக்கிறது சுவாரஸ்யம். சுறாக்களின் பற்கள் வழக்கமானவைதான். அவை தொல்லுயிர் எச்சமாக மாறக்கூடியவை. கிடைக்கும் பல் எச்சங்களை வைத்துதான் உடல் நீளம், எடை எல்லாவற்றையும் கணக்கு போட்டிருக்கிறார்கள். காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், உணவுத் தட்டுப்பாடு மற்றும் பிற விலங்குகளுடன் ஏற்பட்ட போட்டி ஆகியவற்றால் பெரும்பல் சுறாக்கள் அழிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
- மாயச்சதுரங்கள்
ஜோதிலிங்கம் கணிதவியலாளர் 3x3, 4x4, 5x5 அளவுள்ள கட்டங்களில் எண்களை நிரப்பி பின்னர் அவற்றின் கூட்டுத்தொகை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் மற்றும் குறுக்கும் நெடுக்குமாக கூட்டினால் ஒரே கூட்டுத்தொகை வருமாறு செய்வது மாயச் சதுரமாகும். உதாரணம் மேற்கூறிய தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் ஒன்றாகவே வருகிறது
- பூனை ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?
முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி கட்டிப்புரண்டு விளையாடும். துரத்தும். பொய்க்கடி கடிக்கும். வாயில் கவ்விக் கொண்டு அங்குமிங்கும் ஓடும். பூனைச்சித்தி தூங்கிக் கொண்டிருக்கும் போது காதுக்கருகில் போய் உறுமும். சில சமயம் பூனைச்சித்திக்கு வலிக்கும். அது, “மியாவ் மியாவ்.. என்னை விடறா.. குண்டுப்பையா.. மியாவ் ” என்று கத்தினாலும் அந்தச் சத்தம் புலிக்குட்டிக்கோ புலி அக்காவுக்கோ கேட்காது. ஆனாலும் பூனைச்சித்திக்கு புலிக்குட்டியை அவ்வளவு பிடிக்கும். ஒருநாள் புலி அக்கா இரை தேடப் போகும்போது காலில் மிகப்பெரிய முள் குத்திவிட்டது. நொண்டிக்கொண்டே வந்த்து. மறுநாள் நடக்கமுடியவில்லை. இரண்டாவது நாள் காய்ச்சல் வந்தது. மூன்றாவது நாள் புலி அக்கா இறந்து விட்டது. இறப்பதற்கு முன்னால் பூனைத்தங்கையை அழைத்து அதனுடைய முன்னங்காலைத் தூக்கித் தன் கையில் வைத்துக் கொண்டு, “தங்கச்சி.. என் பையனை நீ தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்று கேட்டது. அதைக் கேட்ட பூனைத்தங்கை உருகிவிட்ட்து. “நிச்சயமாக அக்கா.. நான் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று உறுதிமொழி கொடுத்தது. புலி அக்கா இறந்து விட்டது. இப்போது புலிக்குட்டிக்கு வயிறு பசித்தது. “ பூனைச்சித்தி.. பூனைச்சித்தி.. வயிறு பசிக்குது..கர்ர்ர்” என்று உறுமியது. “ இதோ உனக்கு உணவு கொண்டு வர்ரேன் செல்லம்..” என்று சொல்லிவிட்டு பூனைச்சித்தி புறப்பட்டது. இரை தேடி இரை தேடி காட்டின் எல்லைக்கே வந்து விட்டது. அப்போது இரவாகி விட்டது. அங்கே ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலிருந்த மனிதர்கள் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து மீதியிருந்த உணவையும் எலும்புகளையும் வெளியே கொட்டினார்கள். அந்த உணவைப் பார்த்ததும் பூனைச்சித்திக்கு எல்லாம் மறந்து விட்டது. புலி அக்காவுக்குக் கொடுத்த உறுதிமொழியை மறந்து விட்டது. புலிக்குட்டியை மறந்து விட்டது. ஆசை ஆசையாக எலும்பைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கியது. பூனைச்சித்தியைக் காணவில்லையே என்று புலிக்குட்டி வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தது. பசி தாங்க முடியவில்லை. புலிக்குட்டி அப்படியே பூனைச்சித்தியைத் தேடி நடந்தது. புலிக்குட்டியும் காட்டின் விளிம்பில் இருந்த வீட்டையும் பார்த்தது. அங்கே பூனைச்சித்தி நிதானமாக எலும்புகளைக் கடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தது. புலிக்குட்டி வந்ததைப் பூனைச்சித்தி பார்க்கவில்லை. அது கண்களை மூடி ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவ்வளவு தான்! புலிக்குட்டிக்கு வந்ததே கோபம்! “கர்ர்ர் உன்னை என்ன செய்கிறேன்.. பார்..” என்று ஒரு பெரிய உறுமலுடன் பூனைச்சித்தியின் மீது பாய்ந்தது. நல்லவேளை! புலிக்குட்டியின் உறுமலைக் கேட்டதும், பூனைச்சித்தி பாய்ந்து இருட்டுக்குள் ஓடி விட்டது. பாருங்கள்! அன்றிலிருந்து புலிக்குப் பூனையைக் கண்டாலே ஆகாது. பூனைக்கும் புலியைப் பார்த்தால் பிடிக்காது. இப்போது கூடப் பாருங்கள்! இந்தக் கதையைக் கேட்ட பூனை ஓடியே போய்விட்டது. ஹ்ஹ்ஹ்ஹா ஹாஹா ஆங்கிலம் வழி தமிழில் - உதயசங்கர்
- வாசனை
தொழில்நுட்பத்தில் வாசனையை பதிவு செய்யும் முயற்சி பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. ஆனால் ஒருவரின் நினைவுகளை கிளப்பும் வாசனையை உருவாக்க நினைத்தது நான்தான். அது ஒரு அறிவியல் பிரச்சனையாக இருந்தது என்றாலும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியை மீட்டுத் தரவேண்டும் என்பதற்காக அது என் தனிப்பட்ட தேடலாக மாறியது. வாஸ்தவமாக, நினைவுகள் ஒரு குறுஞ்ச் சிறகுகளில் பறக்கும் மீன் போல. எப்போதும் கண்ணில் தெரியும் போல இருந்தாலும், அதைத் தொட்டவுடன் விலகிவிடும். ஆனால் வாசனை மட்டும், அந்த மீனுக்கு உணவு போடுவது போல. ஒரு வாசனை போதும்—நினைவுகள் பாய்ந்து வரக்கூடும். முதன்முதலில் அவளை பார்த்தது வண்டியூரில்தான். பனிக்கடியில், வெண்மை பிரஞ்ச் துணியில் அவள் நின்றபோது, அவள் ஒரு ரோஜா போலவே கனவும் நனவுமாக இருந்தாள். அந்த மணம்—மெல்லிய சோப்பின் வாசனை, பழைய புத்தகத்தின் பக்கம், மழைபடிந்த பூமி—எல்லாம் ஒன்றாக கலந்தது. ஒரு கணம், என்னால் மூச்சு விட முடியவில்லை. நான் ஏதோ ஒன்றை இழந்துவிட்டேன் என்று தோன்றியது. “நீங்க ரமணா சார் தானே?” என்றாள். “ஆமாம்...” என்றேன் குழம்பியபடியே. “நான் அனிதா. உங்கள் ரிசர்ச்சுக்கு fragrance stabiliser sample எடுத்திட்டு வந்தேன்.” அந்த நாள் என் ஆராய்ச்சிக்கான முதல் வாசனை மாதிரியை மட்டும் இல்லாமல், என் வாழ்வின் திசையும் வந்தது. அறிவியல்... அல்லது காதல்? நான் வாசனை ஒளிக்கதிர்களை மையமாக வைத்தே ஆராய்ச்சி செய்து வந்தேன்—Smell Memory Encoding எனும் தலைப்பில். நம் மூளை ஒரே நேரத்தில் நம் மனதின் ஆழத்தையும் வாசனையையும் இணைத்து வைத்திருப்பதை அறிவியல் உலகம் ஏற்கிறது. ஆனால் அதை துல்லியமாக மீட்டெடுக்க முடியவில்லை. வாசனையை ஒரு விசைப்படுத்தல் சாதனமாக மாற்ற முடியுமா? நம் கடந்த காலத்தை மீள அனுபவிக்க ஒரே தூண்டுகோல் வாசனையாக இருக்க முடியுமா? அனிதா எனக்கு உதவ ஆரம்பித்ததும், என் ஆய்வு வேகம் பிடித்தது. அவள் உதவி சாதாரணமாக இருந்ததில்லை. என் கண்ணுக்குள் நான் சொல்லாத எண்ணங்களைக் கூட உணர்ந்துகொள்வாள். லேபில் வேலை முடிந்த பிறகு கூட, வாசனை மாதிரிகளைப் பற்றிய விவாதங்கள் நம் இருவரையும் மீள மீள சந்திக்க வைத்தன. ஒருமுறை, வண்டியூர் ஏரிக்கரையிலிருந்து மழையில் நனைந்தபடி நடந்தோம். அவள் சொல்லியது“மழையிலும் வாசனை மாறும். அது நம்மை கைவிடாது.” நான்கு மாதங்களில், நாங்கள் ஒரு புதிய கலவை உருவாக்கினோம்—Scent-23. அந்த வாசனை மூளைச் செயல்பாட்டை விக்கிரமமாக தூண்டும் வகையில் உருவானது. நான்கு வாசனைக் கூறுகளின் நுண்ணிய சமநிலை, ஒரு குறிப்பிட்ட நோஸ்ரில் வேலை செய்யும் நரம்பியங்களை தூண்டும். அது, குறிப்பிட்ட காலச்சுழற்சியில் உருவான நினைவுகளைத் தூண்ட முடியும் என்ற நம்பிக்கை உருவானது. அந்த வாசனைச் சோதனைக்காக அனிதாவிடம் சிலர் விரோதமெனக் கூரினர். “உணர்வுகளை தூண்டக்கூடிய சாயல்கள் அபாயகரமாக இருக்கலாம்,” என்று எச்சரித்தனர். ஆனால் அவள் நம்பிக்கை செலுத்தினாள். “இந்த வாசனை என்னை எனக்குள்ளே ஒரு மறக்க முடியாத இடத்துக்குத் தள்ளுகிறது,” என்றாள். ஒரு முறை, அந்த வாசனையை அனிந்தபோது அவளுடைய கண்கள் கலங்கின. “நான் என் அம்மாவோடு கையடைந்த பக்கத்தில் வாசித்த அந்த கவிதை போலவே உள்ளது,” என்றாள். இழப்பு... ஒரு நாள் காலை, அவள் வரவில்லை. மெசேஜ் அனுப்பியும் பதில் இல்லை. தொலைபேசியில் சைலென்ட். பிறகு வந்தது ஒரு செய்தி—அவள் மரணம். திடீர் ஹார்மோனல் imbalance என மருத்துவக் காரணம் சொன்னார்கள். ஆனால் எனக்கு அது ஒரு ரீங்காரம் போல இருந்தது—புதிதாக உருவான மெழுகுவர்த்தி, மெதுவாக அணையும் ஒளி. அவள் இறந்த பின், அந்த வாசனையை நான் கிளீன்ரூமில் வைத்திருந்தேன். யாரும் அணுக முடியாத இடத்தில். ஒரு கண்ணாடி பாட்டிலில்—Scent-23. அதன் மீது எழுதியிருந்தேன், “Anitha.Mem.0423”. மூடியிருந்த வாசனை, ஆனால் திறந்தால் என்னென்ன கதைகளை கிளப்பும் என்று எனக்குத் தெரியும். நினைவுகளின் பூங்காற்று... மூன்று ஆண்டுகள் கழிந்ததும், நான் அந்த பாட்டிலைத் திறக்கவேயில்லை. ஆனால் ஒருநாள், என் பழைய லேப் மூடப்படப்போகிறது என ஒரு அறிவிப்பு வந்தது. அந்த இரவு, பல வருடங்களாக என் உள்ளத்தில் கூவிக்கொண்டிருந்த குரல் ஒரே வார்த்தை சொன்னது—திற. நான் அந்த வாசனையை திறந்தேன். மணம் கிளம்பியது. நான் கண்களை மூடிக்கொண்டேன். திடீரென நான் வண்டியூர் ஏரிக்கரையில் இருந்தேன். மழை, பனிக்கடி, பிரஞ்ச் துணியில் அவள். அவள் என்னிடம் சிரித்துக்கொண்டிருந்தாள். “நீ வாசனையைப் பற்றி சிந்திக்கிற போதெல்லாம், காதலையே மறந்துட்ற,” என்றாள். அது கனவா? ஞாபகமா? இல்லை… அது வாசனை உருவாக்கிய உணர்ச்சி. நினைவின் தூண்டுகோல். என் ஆராய்ச்சியின் சாட்சி. MeMorya அந்த வாசனையை வைத்து நான் ஒரு செயலி உருவாக்கினேன்—MeMorya. வாசனையை சுட்டி வைத்து, நினைவுகளை தானாகவே தூண்டும் ஒரு சாதனம். உளவியலாளர்கள், மருத்துவர்கள், சிலருக்கான கடைசி சந்திப்பு, மாயமான குழந்தைப் பருவம்—எல்லாமே அந்த செயலியில் மீண்டன. “நான் என் அம்மாவின் சமையல் வாசனையைக் கண்டேன்,” என்ற ஒருவர். “முதல் காதலியின் ஜாதி புத்தக வாசனை, சுரங்கத்தில் போல,” என்ற மற்றொருவர். சிலர் அழுதனர். சிலர் சிரித்தனர். அனைவருக்கும் இந்த வாசனை ஒன்று தரக்கூடியது—அழிவற்ற நிழல். ஆனால் எனக்கே கிடைத்ததா? அவள் வாசனையிலே... ஒரு நாள் நான் அந்த வாசனையை மீண்டும் பயன்படுத்தினேன். எல்லா தரவுகளும், முற்றும் தருணங்கள், என் முன் காணொளி போல ஒளிர்ந்தன. ஆனால் இதில் ஒரு வேறுபாடு இருந்தது. “ரமணா…” எனது காதுக்கு வந்த குரல். அவளின் குரல். நான் கண்களைத் திறந்தேன். அவள் வாசனைக்குள் இருந்தாள். அவள் என்னிடம் பேசவில்லை, ஆனால் என்னை பாக்கிறாள். சிரிக்கிறாள். என் அருகே நடந்தாள். ஒரு இம்சையை விடுத்து, ஒரு நிம்மதியுடன். நான் கண்ணீர் வடிக்கவில்லை. அதற்கு இடமில்லை. என் உள்ளம் பூரணமான உணர்ச்சியில் நிரம்பியது. என் ஆராய்ச்சி, என் அறிவியல், என் வாசனை—all for this moment. ஒரு முறையேனும் வாசனை உணர்வு நிஜத்தை மீறுகிறது. அது என் உணர்வுகளின் நிஜம். அவளின் வாசனை.
- அறிவியல் அற்புதம்!
அறிவியல் தந்திடும் அறிவை -மூளை அடைந்திடும் சிந்தனைச் செறிவை! அறிவால் பெருகிடும் நிறைவை-நாடு அடைந்திடின் பெறாது குறைவை! பற்பல அதிசயம் நிகழ்த்திவை- அதைப் பார்த்தே உலகம் வியக்கவை! கற்றிட அறிவியல் நடத்திவை-அதைக் காலம் வாழ்த்த படைத்துவை! . கணினி கைப்பேசிப் பயனில்வை -அதால் கற்றல் திறத்தைக் கையில்வை! செயற்கைக் கோள்களை மிகுத்துவை -நாடு செழிப்பாய் மாறிட அதுதேவை! சிந்தனைச் செய்வதை அறிவில்வை -அதைச் செய்யாப் பேரை எழுப்பிவை! அறியாமை இருளை அழித்துவை-உன் ஆராய்ச்சி திறனால் ஒழித்துவை! வானத்தில் கோள்களைச் செலுத்திவை - உன் வலிமையால் நாட்டை வலுக்கவை! ஏவு கணைகளைத் தாவவை -வின்னில் ஏவிடும் இராக்கெட் நிறைத்துவை! ஆயுதப் போரைத் தடுத்துவை-அதை ஆற்றலுக் காகப் படைத்துவை! தாயுடன் கன்றைச் சேர்த்துவை-அதைத் தள்ள நினைப்போரை எள்ளிவை!
- நவீனச் சிறார் இலக்கியத்தில் புதிய பாதையை உருவாக்கியவர்
கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது. இதுவரை அண்டை மாநில மொழிகளில் வெளிவரும் சிறார் படைப்புகள் குறித்த வியப்பிலிருந்த தமிழ்ச்சிறார் இலக்கியம் இப்போது அவர்களே வியக்கும்வண்ணம் புதிய திசைகளில் புதிய சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், சாதிப்பாகுபாடு, பாலினப்பாகுபாடு, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், போன்ற சமகாலப்பாடுபொருட்களைப் படைப்புகளில் பேசத்தொடங்கியிருக்கிறது. தன்னுடைய தனித்துவமான படைப்புகள் மூலம் புதிய திசையில் தடம் பதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025- ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய புரஸ்கார் விருது அவர் எழுதிய ஒற்றைச்சிறகு ஓவியா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருப்பது அர்ப்பணிப்பு மிக்க அவருடைய உழைப்புக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். கவிஞராகவும், இதழாளராகவும் சிறார் எழுத்தாளராகவும் விளங்குகிற விஷ்ணுபுரம் சரவணனின் கயிறு என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த இரண்டு வருடங்களில் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மாணவர்களிடம் தலைகாட்டும் சாதிப்பாகுபாடு குறித்து அவர்களுடைய தோளில் கை போட்டு உரையாடும் அற்புதமான படைப்பாகக் கயிறு கதைப்புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் வித்தியாசமான, தனித்துவமான கருப்பொருளுடன் எழுதும் விஷ்ணுபுரம் சரவணன் ஒற்றைச்சிறகு ஓவியாவில் சமகாலத்தின் மிகமுக்கியமான பிரச்னையைப் பற்றி குழந்தைகளிடம் பேசுகிறார். இந்த நூலை பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரென் வெளியிட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு துப்பறியும் கதை போல ஐந்து நண்பர்களுடன் தொடங்கும் கதை முதல் அத்தியாயத்திலேயே வேகமெடுக்கத் தொடங்குகிறது. குழந்தைகளின் ஆரவத்தைத் தூண்டும் வகையில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று யோசிக்க வைக்கிறது. கதை இப்படித்தான் போகும் என்ற நம்முடைய அனுமானங்களை முற்றிலும் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஐந்து நண்பர்களில் ஓவியாவுக்கு சிறகு முளைத்தவுடன் கதை ஃபேண்டசியாக மாறிவிடுகிறது. ஃபேண்டசியின் வழியே ஏன் நிலத்தில் மண்புழுக்கள் காணாமல் போயின? என்ற கேள்வியை எழுப்பி மெல்ல மெல்ல இரசாயன உரங்களின் பயன்பாட்டினால் நுண்ணுயிர்கள் வாழத்தகுதியற்றதாக மாறுகிற விஷயத்தையும், எண்ணெய்க்கம்பெனியினால் தண்ணீர் மஞ்சள் நிறமாகி குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறிவிடுகிற ஆபத்தையும், எண்ணெய்க்கசிவினால் நெல்வயல்கள் அழியும் அபாயத்தையும் அடுத்தடுத்துச் கதையின் ஓட்டத்தில் அழகாகச் சொல்லிக் கொண்டே போகும் போது சிறார்கள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்க வேண்டிய பிரதியாக மாறுகிறது ஒற்றைச் சிறகு ஓவியா. மண்புழு ஓவியம், தண்ணீர் காட்டும் பாதை, கண்களின் வழியே கனவைப் பார்த்தல் என்று குழந்தைகளை ஈர்க்கும் மாய யதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கிறது ஒற்றைச் சிறகு ஓவியா. அந்த ஊரின் மக்கள் ஒன்று திரண்டு போராடுகிற காட்சியும் கதையினூடே சிறார்களின் பார்வையிலேயே சொல்லியிருப்பது சிறப்பு. நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் முற்றிலும் எதிர்பாராத புதிய புதிய திருப்பங்களையும் சுவாரசியமான முடிச்சுகளையும் சவால்களையும், சிறார்களின் வாசிப்புக்கேற்ற ருசியில் வழங்கியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். குழந்தைகளே அந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவதாக்க் கதை முடியும் போது குழந்தைகளுக்கு நம் சமகாலப் பிரச்னையான சுற்றுச்சூழல் குறித்து நிறைய விஷயங்களை அறிந்திருப்பார்கள். விஷ்ணுபுரம் சரவணனின் நீலப்பூ, என்ற நாவலும் சாதிச்சண்டையால் நடக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் குழந்தைகளின் உளவியலில் உருவாகும் மாற்றங்களையும் பேசுகிறது.. அவருடைய ஒவ்வொரு நூலிலும் சமூகத்தின் மிக முக்கியமான பிரச்னைகளைக் கலை அமைதியுடன் மிகச் சிறப்பாக, குழந்தைகள் வாசிக்கும் எளிய மொழிநடையில் படைத்திருக்கிறார். தன்னுடைய சொந்த ஊரான விஷ்ணுபுரத்தின் மீதான பிரியத்தினால் தன்னுடைய பெயரின் முன்னொட்டாகச் சேர்த்துக் கொண்டிருக்கிற விஷ்ணுபுரம் சரவணன் ஒரு கவிதை நூல், நான்கு சிறார் நாவல்கள், ஒன்பது சிறார் சிறுகதை நூல்கள், நான்கு பெற்றோர் ஆசிரியருக்குமான நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களின் இணையாசிரியராகப் பணிபுரிகிறார். குழந்தைகள் வாசிப்பின் அவசியம் குறித்தும் சிறார் இலக்கியம் எழுதுவது எப்படி என்பதைக் குறித்தும் புத்தகக்கண்காட்சிகளிலும், பள்ளிகளிலும் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். தன்னுடைய படைப்புகளின் வழியே நவீன தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலத்தை முன்னகர்த்திக் கொண்டு செல்லும் விஷ்ணுபுரம் சரவணனின் ஒற்றைச் சிறகு ஓவியாவுக்குக் கிடைத்திருக்கும் பாலசாகித்ய விருது தமிழ்ச்சிறார் இலக்கியத்திற்கு மற்றுமொரு புதிய வண்ணத்தைச் சேர்த்திருக்கிறது. அந்த வண்ணத்தின் ஒளியில் புதிய மாற்றங்களை, புதிய பாதையை உருவாக்கும் கலைஞனாக விஷ்ணுபுரம் சரவணன் திகழ்கிறார். ---- உதயசங்கர் (நன்றி - தமிழ் இந்து)
- குழந்தை இலக்கியம் பேசும் சாதி
ஆங்கிலத்திலிருந்து தமிழில் - வே.சங்கர் தமிழ்நாட்டில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் சாதி பற்றிய கள்ளமௌனங்களை வேரறுத்து உரத்தகுரலில் பேசத்தொடங்கியிருக்கிறது. ”தற்போது, தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் தோன்றியிருக்கும் புதிய அலை, புனைக்கதைகள் மற்றும் மீளுருவாக்கம் செய்யப்படும் புராணக்கதைகள் மூலம் சாதியை நேரடியாக எதிர்கொள்கிறது. இவை இளம் வாசகர்கள் மத்தியில் சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்ப ஊக்குவிக்கின்றன”. இளம் வாசகர்கள், நிஜவாழ்க்கையில் எதிர்கொள்ளும் அநீதிகளைப் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த சிறார் கதைகளின் வழியாக, சாதி ஆணவங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறத்தொடங்குகிறார்கள். அவை நீண்டகாலமாக நிலவிவரும் சமூக மேலதிகார வர்க்க அமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இது வெறும் தேவதைக்கதைகள் அல்ல. நீதிக்கதையும் அல்ல. சாதி பற்றிய கதை. திருச்சி மாவட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மகிழ்நிலா ‘நீலப்பூ’ என்ற புத்தகத்தை வாசிக்கும்வரை, இவ்வுலகம் மீதான பார்வை இத்தனை பெரிதாக மாறும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது மாறியது. அவள் வாசித்த ‘நீலப்பூ’, என்ற நாவல் மகிழ்நிலாவின் வயதொத்த கீர்த்தியின் கதையைச் சொல்கிறது. சாதிவெறியால் உண்டான வன்முறையால், அவளது கிராமமே எவ்வாறு நாசமாகிறது என்பதை அவள் நேரில் காண்கிறாள். அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவுடன், மகிழ்நிலா, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு ”ஒரு அமைதியான கிராமமே சாதி வன்முறையால் அழிந்து, அப்பாவி மக்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகிப் போகிறதென்றால், உலகம் ஒரு பேரழிவை நோக்கிப் போகிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது” என்று ஒரு உருக்கமானக் கடிதம் எழுதியிருந்தாள். அதன் உடனடித் தாக்கம்: பெரும்பாலும், பெரியவர்கள்தான் சாதி எதிர்ப்பு இலக்கியங்களையும், அதன் அரசியல் நுணுக்கங்களையும் வாசிக்கிறார்கள். ஆனால், இப்பொழுது, புதிய தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள், சிறார்களுக்கான கதைகளை எழுதுகிறார்கள். இவர்களது கதைகள் சாதி ஒடுக்குமுறையை அடையாளம் காணவும், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வையும் வழங்குகின்றன. ’நீலப்பூ’ கதையில், கீர்த்தியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் முக்கியமான சம்பவம், வேறு சாதியைச் சேர்ந்த அவளது நண்பனும் வகுப்புத் தோழனுமான அருண், ஒரு கூட்டத்துடன் வந்து தலித் வீடுகளை அடித்து நொறுக்கி நாசமாக்கும் காட்சி. அதன் தொடர்ச்சியாக வன்முறை மூண்டு கிராமத்தையே அழிவுக்குள் இட்டுச்செல்கிறது. இருப்பினும், கீர்த்தி கொஞ்சமும் பயமின்றி தனியாக அருண் குடியிருக்கும் பகுதிக்கு நடந்து சென்று, அவனது நோட்டுப்புத்தகத்தைத் திருப்பித் தருகிறாள். அவளது துணிச்சலான பயணம் மற்றும் அதில் சந்திக்கும் மனிதர்கள்தான் இந்தக் கதையின் மையக்கரு. இந்தப் புத்தகம் எழுப்பும் கூர்மையான கேள்விகள்: • சாதி அடிப்படையிலான வன்முறையால் யாருக்கு லாபம்? • ஏன் தலித் மாணவர்களின் கல்வி வளங்கள் எப்போதும் முதல் இலக்காக தாக்கப்படுகின்றன? • சாதி எப்படிக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கிறது? படங்களுடன் வெளியான நீலப்பூ என்ற இந்நாவல் வானம் பதிப்பகத்தால் டிசம்பர் 2021-ல் வெளியிடப்பட்டது. தமிழ் (குழந்தைகள்) சிறார் இலக்கியம், ஆங்கில சிறார் இலக்கியத்தில் உள்ளதைப் போலவே, 3-8 வயது (மழலை இலக்கியம், தொடக்கநிலை வாசகர்களுக்கானது), 8-12 வயது (சிறார் இலக்கியம், மத்தியநிலை வாசகர்களுக்கானது), 12-18 வயது (பதின்பருவ இலக்கியம்,அல்லது வளர் இளம் பருவ இலக்கியம்) ஆகிய வயது பிரிவுகளுக்கேற்ப அமைந்துள்ளது. சாதிப்பாகுபாடு குறித்த கதைகள் பெரும்பாலும் கடைசி இரண்டு பிரிவுகளில்தான் அதிகமாக இடம்பெறுகின்றன. மேலும், அந்தக் கதைகளில் வரும் மையக் கதாபாத்திரங்கள், பெரும்பாலும், வாசகர்களின் வயதொத்தவர்களாகவே இருப்பார்கள். தன் 13 வயது மகனுக்காக ‘நீலப்பூ’ புத்தகத்தை வாங்கிய கோயமுத்தூரைச் சேர்ந்த பெற்றோரில் ஒருவர் Frontline–க்குக் கூறியதாவது: “ஒரு குழந்தை பத்துவயது நிறைவடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சாதியைப் பற்றிய பரந்த உரையாடல்களைத் தொடங்கலாம். ஆனால், அவர்கள் தங்களது கருத்துக்களைச் சிந்திக்கத்தொடங்கும் பதின்ம வயதில், குறிப்பாக இடஒதுக்கீடு பற்றிக் கேள்விப்படும் காலகட்டத்தில், அவர்களுடன் அது குறித்தான தீவிரத்தன்மையைப் பேசுவது மிகமிக அவசியம்” பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணுபுரம் சரவணன், இந்த வகை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். “நான் பல பரிமாணங்களுடன் கூடிய கதையை எழுதவேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், குழந்தைகள் அது பற்றிப் புரிந்துகொள்ளக் கொஞ்சமாவது போராட வேண்டும். அப்போதுதான், அது குறித்தான புரிதல் ஆழமாக அவர்கள் மனதில் பதியும்” என்று Frontline-க்கு கூறினார். 2022-ல் எழுத்தாளர் விழியன் எழுதிய ’தேன்முட்டாய்’ (புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு) கதையில், ஒரு சாதி வெறிகொண்ட கடைக்காரர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தப் பள்ளி மாணவர்களுக்கு மிட்டாய் கொடுக்க மறுக்கும் சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தக் கதை தமிழ்நாட்டில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொலியின் தழுவலாக அமைந்திருந்தது. தர்மபுரி, விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகள்தான் ‘நீலப்பூ’ கதையின் அடிநாதமாக விளங்கியது. விஷ்ணுபுரம் சரவணனின் ‘கயிறு’ என்ற சிறுநூல் 1 லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுத்தீர்ந்தது தமிழ் சிறார் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்தப் புத்தகம் பெரியார் ஈ.வே.ராமசாமியின் மேற்கோளுடன் தொடங்குகிறது: “எந்தவொன்றையும் சுதந்திரமாக, சுத்த அறிவுகொண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி. அப்போது தான் காலத்திற்கேற்ப அது முன்னேற்றப் பாதையில் உன்னை அழைத்துச் செல்லும்” ’கயிறு’ என்ற கதையில், ஏழாம் வகுப்பு படிக்கும் செழியனை ஒரு கடைக்காரர் குறிப்பிட்ட சாதியை அடையாளப்படுத்தும் கயிறு ஒன்றைக் கையில் அணியச் சொல்கிறார். அவனது தாய் வளர்மதி, தெளிவாகவும், தீவரமாகவும் செயல்படும் கதாப்பாத்திரம். பொதுவாகச் சொல்லப்படும், ‘செய் / செய்யாதே’ என்று கட்டளையிடும் பெற்றோரைப்போல் இல்லாமல், அவனுள் ’ஏன்?, எதற்கு?’ என்ற கேள்வியைக் கேட்க ஊக்குவிக்கிறாள். முடிவில் உண்மையைத் தெரிந்துகொள்ளும் செழியன் அதற்கேற்பத் தானாகவே செயல்படுகிறான். சரவணன், சாதியைச் சரியான சமூகப் பின்னணியில் வைத்துப் பேசுகிறார். கதையின் முடிவில் நீதிபோதனை செய்வதைத் தவிர்க்கிறார். உண்மையை அதன்போக்கில் உணரச்செய்கிறார். ’தேன்முட்டாய்’ சமூகப் புறக்கணிப்பை நேரடியாக எதிர்கொள்ளும் கதை. ஆனால், ’கயிறு’ சாதிப் பிரிவினையை வெளிப்படையாகக் காட்டும் கதை. இவை இரண்டும் தற்போது மிகமுக்கியமான நூல்கள். ஏனெனில், சமீபத்தில் குறிப்பாகத் திருநெல்வேலியில், பள்ளி மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஆகஸ்டில், திருநெல்வேலி நாங்குநேரியில், ஒரு தலித் சிறுவனும் அவனது சகோதரியும் உயர்சாதி மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்த்ரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. அவர் 2024 ஜுன் மாதத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ”கையில் கட்டப்படும் கயிறு, நெற்றியில் வைக்கப்படும் குறியீடுகள் போன்ற சாதி அடையாளங்களைத் தடைசெய்யவேண்டும். பள்ளிகளின் பெயர்களிலிருந்து சாதி சம்பந்தப்பட்டப் பட்டங்களை அகற்றவேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். இங்கேதான் சாதிஎதிர்ப்புக்கதைகள் ஒரு இலக்கிய எதிர்மருந்தாக மாற்றமடைகின்றன. சரிதா ஜோவின் ‘சாதித்த ஜோதி’ என்ற சிறுகதை, சின்னத்துரையின் நிஜவாழ்க்கையிலிருந்து உருவாகியுள்ளது. இதில் சாதி வன்முறைத் தாக்குதலில் தன் காலை இழந்த ஒரு சிறுமி பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் தனது திறமையை நிரூபிக்கிறாள். உண்மையில், சின்னத்துரையும் பல எதிர்ப்புகளைத் தாண்டி, 12-ஆம் வகுப்பில் 496/600 மதிப்பெண்கள் பெற்று தமிழக முதல்வரிடம் பாராட்டுக்களைப் பெற்றார். எழுத்தாளர் விழியன் எழுதிய மலைப்பூ (புக்ஸ் ஃபார் சில்ரன்,2021) என்ற சிறார் நாவல் கல்வியில் உள்ள அமைப்புசார் சமத்துவத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறது. இக்கதையின் முக்கியக் கதாப்பாத்திரமாக வரும் லஷ்மி, மலைவாழ் பகுதியிலிருந்து தினமும் ஐந்துகிலோமீட்டர் தூரம் நடந்தும், மிதிவண்டி மற்றும் பேருந்தில் பயணித்தும் பள்ளிக்கூடம் சென்று கல்வி பயிலும் ஆறாம் வகுப்பு சிறுமி. அவளது வீட்டில், கழிப்பறையோ, மின்விசிறியோ இல்லை. அவள் நகரப்புறத்திலிருந்து கல்விகற்க வரும் மற்ற மாணவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அவளது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டிருப்பதை உணர்கிறாள். எழுத்தாளர் விழியன், கதை ஓட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை (NCSC) ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியிருக்கிறார். லட்சுமி என்ற கதாபாத்திரம், திண்டுக்கல் அருகே உள்ள சின்னமலைப் பகுதியில் விழியன் சந்தித்த உண்மையான ஒரு சிறுமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தக் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, பலமுறை மறுபதிப்பாகியிருக்கிறது. மேலும், இயக்குநர் வெற்றிமாறனின் கவனத்தையும் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான நம்பிக்கையுடனும் சமூக நீதியுடனும் எழுதப்பட்ட இந்தப் புத்தகங்கள், குழந்தைகளுக்குக் கல்வி செய்யத்தவறிய மற்ற விசயங்களை அதிகம் கற்பிக்கின்றன. பெற்றோர்கள் காலம்காலமாகக் கொண்டிருக்கும் தங்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய தூண்டுகின்றன. “சாதியைப் பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திக்கச் செய்வதற்காக, குழந்தைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். சாதி எண்ணங்களில் அதிகமாக ஊறிப்போனவர்கள் அவர்கள்தான்.” என்று விழியன் கூறுகிறார். இதிகாசங்கள் மீதான மீள்பார்வை. சரவணன், விழியன் மற்றும் சரிதா ஜோ ஆகியோர் சாதி சமத்துவக் குறைபாடுகளையும், அதன் சமூகத்தாக்கத்தையும் பதிவுசெய்கின்ற அதே வேளையில், பாலசாஹித்ய புரஸ்கார் விருது பெற்ற உதயசங்கர், இந்து இதிகாசங்களில் காணப்படும் சாதிய அடுக்குகளில் உள்ள அமைப்பை நேரடியாக கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலம், அதன் மீதான விவாதத்தை மேலும் ஒரு படி முன்னேற்றுகிறார். கட்டை விரலின் கதை (வானம் பதிப்பகம், 2023) எனும் நூலில், உதயசங்கர் மகாபாரதத்தில் உள்ள ஏகலைவனின் கதையை மறுபார்வையிடுகிறார். ஏகலைவனின் குருபக்தியைப் போற்றும் பாரம்பரியக் கதையமைப்பை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். ஒரு பழங்குடி வில்வீரனாகிய ஏகலைவனிற்கு, தேவதத்தனாகிய துரோணாச்சாரியாரின் பயிற்சி அவசியமா?” என்ற கேள்வியை நம்முன்னால் வைக்கிறார். இவர், குறிப்பாக 1990களுக்குப் பிறகு, இந்துத்துவா வலதுசாரிகளால் சாதியமேலாண்மையைப் புனிதப்படுத்த இதிகாசங்கள் எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது என்று விமர்சிக்கிறார்.. ஏகலைவன் மற்றும் துரோணாச்சாரியாரின் கதை பக்திப்போர்வையின்கீழ் சாதிக்கொடூரத்தைக் மறைக்க நுட்பமாகப் புனையப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுப்பார்வையாக, ஒடுக்கப்பட்டோர் வரலாற்று எதிர்வாதத்தைக் எழுத விரும்பினேன்,” என்று கூறும் இவருக்கு, இந்த எண்ணம் தமிழ்த் தெருநாடகக் கலைஞர் பிரளயன் எழுதி இயக்கிய ’உபகதை’ என்ற நாடகத்தை பார்த்த பிறகு தோன்றியிருக்கிறது. ’பறம்பின் பாரி’ என்ற நூலில், சங்க காலத் தலைவன் பாரியின் எழுச்சியை உதயசங்கர் ஆராய்கிறார். அதோடு, ஆரியர்களின் இடப்பெயர்ச்சி, திராவிட அடையாளம், மற்றும் ஆதிப்பொதுவுடமைச் சமூகத்திலிருந்து தனியுடமைச் சமூகம் நோக்கிச் செல்லும் பரிணாம மாற்றத்தை கதைகளோடு நுட்பமாக இணைக்கிறார். கவிஞர் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு, சு. வெங்கடேசனின் ’வீரயுக நாயகன் வேள்பாரி’, மற்றும் ஆர். பாலகிருஷ்ணனின் ’சிந்து வெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ போன்றவற்றிலிருந்து ஆதாரத்தைத் திரட்டித்தருகிறார். தீண்டாமை என்ற தலைப்பைத் தொடுதல் முன்னேறிய சட்டங்கள் அமலில் இருந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை பல இடங்களில் இன்னும் பரவலாகவே காணப்படுகிறது. சாதி முறையில் மேல்அடுக்கைச் சேர்ந்த இந்துப் பெற்றோர்கள் தலித் அங்கன்வாடி பணியாளர்கள் சமைத்த உணவைத் தொட மறுப்பது முதல், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சாதிவழி அவமானங்கள் வரை பல்வேறு உருவங்களில் இது தொடர்கிறது. சமீபத்தில் மறைந்த எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன் எழுதிய பிரேமாவின் புத்தகங்கள் (புக்ஸ் ஃபார் சில்ரன், 2024) என்ற நூலிலுள்ள கதைகள் இந்த விசயத்தை நேரடியாக எதிர்கொள்கின்றன. அதில் இடம் பெற்றுள்ள "பார்வதி அத்தையின் பொங்கல்" என்ற சிறுகதை, தலித் அங்கன்வாடி பணியாளர்கள் மீதான அடக்குமுறைகளையும் அவமானங்களையும் உருக்கமாக விவரிக்கிறது. இதேபோல், "ஆறறிவு" மற்றும் "மனிதர்களுக்குள் வேறுபாடு உண்டா?" போன்ற கதைகள், சாதி சார்ந்த மேலதிகாரப் போக்குகள் மற்றும் ஒன்றாக அமர்ந்து உண்பதில் உள்ள தடைகளை, சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தும் கதைகளாக உள்ளன. தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிடும் பாடப்புத்தகங்களில்: ”தீண்டாமை ஒரு பாவச்செயல்”. ”தீண்டாமை ஒரு குற்றச்செயல்”. ”தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊடக அறிக்கைகள், ”இந்தக் கொடூர நடைமுறை இன்னும் பல இடங்களில் தீவிரமாகக் காணப்படுகிறது” என்கிறது. கோ.மா.கோ. இளங்கோ எழுதிய "சஞ்சீவி மாமா" (புக்ஸ் ஃபார் சில்ட்ரன், 2017) என்ற பாதி-புனைவுக் கதையில், ஒரு தலித் துப்புரவுப்பணியாளருக்கும், பேச்சிராசு என்ற 11 வயது சிறுவனுக்கும் இடையிலான நட்பைக் கருணையுடன் படம் பிடிக்கிறது. இது எழுத்தாளர் இளங்கோவின் சொந்த அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டது. சாதிக்கொடுமையையும் கருணையின் சாத்தியத்தன்மையைக் குழந்தைகள் உணரக்கூடிய கதையாக இது அமைந்துள்ளது. இதைத் தலித் அல்லாத எழுத்தாளர் ஒருவர், சாதிச்சலுகையைத் தெளிவாக உணர்ந்து, ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதியிருக்கிறார். முந்தைய காலப் படைப்புகள் குழந்தைகள் இலக்கியத்தில் சாதி பற்றிய எழுத்துகள் புதிதல்ல. எஸ். ஹரிஹரன் (ரேவதி என்ற புனைபெயரில்) எழுதிய 'கொடி காட்ட வந்தவன்' (1978) கதையின் ஆரம்பக் காட்சிகளைச் சரவணன் குறிப்பிடுகிறார். இந்நாவல், ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்த, போராளியான குழந்தை மோகனைப் பின்தொடர்கிறது. விடுதலை இயக்கத்தால் தூண்டப்பட்டு, சாதி மற்றும் சாதியில் நிலவும் வர்க்க அடுக்குகளை எதிர்கொள்கிறான். ஒரு துணைக்கதையில், காந்தி, தாழ்சாதிக்காரர்களுக்குக் குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை என்பதை அறிந்து, அந்த அருவியில் குளிக்காமல் விலகிச் செல்கிறார் — இது கேட்பதற்கும் வாசிப்பதற்கு மென்மையாக இருந்தாலும், பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “நான்கு வருடங்களுக்கு முன், ரேவதி சொன்னது என்னவென்றால், “அது 25,000 பிரதிகளுக்குமேல் விற்றது. அது சாதி குறித்ததாக இருந்தது. ஆனால் இன்று யாரும் அதை மேற்கோள் காட்டுவதில்லை. நானே சமீபத்தில் தான் வாசித்தேன்.” என்று சரவணன் கூறுகிறார். முந்தைய காலங்களில், சாதி தொடர்பான விஷயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசத் தமிழ் சிறுவர் இலக்கியங்கள் எப்போதாவதுதான் தோன்றின; பூந்தளிர், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களில் அல்லது சில தொகுப்புகளில்தான் அவை இடம் பெற்றன. எனினும், அந்த எழுத்துகள் பெரும்பாலும் சிறுவர்களுக்கான முக்கிய வாசிப்பாக மாற்றப்படவில்லை. இன்றுபோல் திட்டமிட்டு உருவாக்கப்படும், தொடர்ந்து வளரும் சாதி எதிர்ப்பு இலக்கிய மரபு அப்போது இல்லவே இல்லை. எழுத்தாளர் தெய்வசிகாமணி சாதி எதிர்ப்பு அரசியலை சிறுவர் இலக்கியங்களில் எழுதியிருக்கிறார் என்று சரவணன் குறிப்பிடுகிறார். ஆனால், அந்த நூலின் ஒரு பிரதிகூட இன்று எங்கும் கிடைக்கவில்லை. 1987ஆம் ஆண்டு வெளியான 'வேதம் புதிது' திரைப்படத்தின் உள்ளடக்கம் அந்த நூலுடன் ஒப்பிடக்கூடியதாக இருந்ததாக அவரது மகன் கூறினார். இந்தவகையில், அந்தப் புத்தகம் இலக்கியத்தின் மிகச்சிலத் தடயங்களில் ஒன்றாக மட்டுமே உள்ளது. ஆவணப்படுத்தாமையால் ஏற்படும் பாதிப்பு: இதுபோலக் காணாமல்போன படைப்புகள் மற்றொரு முக்கியச் சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. தமிழில் குழந்தைகளுக்கான, ஆரம்ப கால சாதி எதிர்ப்புக் கதைகள் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஆவணப்படுத்துதலில் குறைபாடுகள் இருந்தபோதிலும், சரவணன் சில முக்கியமான ஆரம்பக்கட்ட உதாரணங்களை கண்டறிந்துள்ளார்: “எழுத்தாளர் நா. பிச்சமூர்த்தி 1930-40களில் ‘காக்கைகளும் கிளிகளும்’ என்ற கதையை எழுதியுள்ளார். 1950-களுக்குப் பிறகு அழ. வள்ளியப்பா ‘இரு காக்கைகள்’ என்ற கதையை எழுதியுள்ளார். இரண்டும் சாதியை மையமாகக் கொண்ட பின்னணியுடன் அமைந்துள்ளன. அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களா என்பதைக் கண்டறிய முடியவில்லை, ஆனால் இருவருக்கும் சாதியைக் குறித்து எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது என்பது உறுதி.” பிச்சமூர்த்தியின் எழுத்துகள் பின்னாளில் மறுபடியும் கவனிக்கப்படத் தொடங்கின. சுதந்திரப் போராளியும் சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான சி.சு.செல்லப்பா, 1977 ஆம் ஆண்டு எழுத்துப் பிரசுரம் மூலம் அவரது கதைகளை "காக்கைகளும் கிளிகளும்" என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். இதில், ஒரு கிளி தன்னைச் சவர்ண சாதியினர் என நினைத்து, கடுமையான புயலின்போது காக்கைகளின் கூடுகளில் தங்க மறுக்கும் ஒரு உருக்கமான கதை இடம் பெற்றுள்ளது. இயற்கைச் சீற்றத்தின் மூலம், சாதி பெருமையின் அழிவை இறுதியில் வெளிப்படுத்துகிறது. இந்த ஆரம்ப கால எழுத்துகளில் சாதி பற்றிய விவாதங்கள் இடம்பெற்றிருந்தாலும், குழந்தைகளுக்கான கதைகளில் வெளிப்படையான சாதி பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன் எழுதியிருக்கலாம் என பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன் Frontline இதழுக்கு தெரிவித்தார். “அப்படி இருந்தாலும், கதைகளில் பயன்படுத்தப்படும் மொழி வழியில் நாம் அந்தந்தச் சாதிகளை அடையாளம் காண முடிகிறது,” என்றார் வள்ளியப்பன். இந்த மென்மையான அணுகுமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. ஒரு சிறார் இலக்கிய எழுத்தாளர் கூறுவதுபோல், மதிப்புமிக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர் பெ.தூரனின் கதைகளும் சமூகப் பிரச்சனைகளை வெறும் மேம்போக்காக மட்டுமே தொட்டுச்செல்கின்றன. இது இன்றைய காலத்தில் வெளிப்படையாக சாதியை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுடன் பெரும் வித்தியாசத்தை உருவாக்குகிறது. சாதியை நேரடியாகக் கொண்டாடும் அல்லது எதிர்ப்பது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் கடந்த பத்தாண்டுகளில் தான் தீவிரமாகத் தோன்றத் தொடங்கியுள்ளன. அரசியல் பதிப்பு வெளியீடுகள் இதுபோன்ற கதைகளைப் பரவலாகப் பாரதி புத்தகாலயத்தைச் சார்ந்த "புக்ஸ் ஃபார் சில்ரன்" வெளியிட்டு வருகிறது. நகராஜன் கூறியபடி, 2002-ல் "புக்ஸ் ஃபார் சில்ரன்" தோன்றியதன் மூலம் குழந்தைகள் இலக்கியப்பதிப்பு உலகில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது, காரணம், அந்த வெளியீடு பாரம்பரியமாக சொல்லப்படும் கதைகளில் இருந்து விலகி, சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட கதைகளை வெளியிடத்தொடங்கியுள்ளன. அதேபோல், நூல்வனம் நிறுவனத்தின் வானம் பதிப்பகம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தலித் மற்றும் பெண்ணுரிமை குரல்களை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பதிப்புகளில் புராணங்களின் புதுமையான வருணனைகள், பெண்ணியம் மற்றும் பகுஜன் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், ஈர்ப்புமிக்க சிறுகதைகள் அடங்கும். 2021-ல் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் கதைசொல்பவர்கள் இணைந்து தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை நிறுவினர். இது சிறார் இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கலை இலக்கியச் செயல்பாட்டாளர்களுக்கான ஒருமித்த மேடையாக உள்ளது. முன்னேற்றப்பாதை: இந்தப் புத்தகங்கள் தற்பொழுது நூலகங்கள், புத்தக கண்காட்சிகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து வருகின்றன — குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்கிவரும் அரசு பள்ளிகளில், முற்போக்குச் சிந்தனைகொண்ட ஆசிரியர்கள் மற்றும் நூலகப்பணியாளர்கள் மாற்று வாசிப்புக்காக எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்து களஞ்சியங்களை உருவாக்கி வருகின்றனர். டிஜிட்டல் வடிவப் புத்தகங்கள் மற்றும் ஒலிப்புத்தகங்கள் இவற்றை மேலும் எளிதில் அணுகக்கூடியவையாக மாற்றியுள்ளன, குறிப்பாக கிராமப்புறங்களில். பல தன்னார்வலர் அமைப்புகள் மற்றும் சமூக நூலகங்கள் கயிறு, மலைப்பூ, மற்றும் பிரேமாவின் புத்தகங்கள் போன்ற படைப்புகளை முன்வைத்து வாசிப்பு அமர்வுகளை நடத்துகின்றன; அவற்றுடன் பெரும்பாலும் விவாதங்கள், நடிப்பு காட்சிகள் மற்றும் எழுதும் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன. அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இளம் வாசகர்கள் கதாபாத்திரங்களை மட்டுமல்ல, தாங்களாகவே கேள்விகள் எழுப்பி, அவர்களை சுற்றியுள்ள சமத்துவமின்மையை உணர்ந்துகொள்ளவும், சில சமயங்களில் அதற்கு எதிராகவும் நிற்கிறார்கள். பல எழுத்தாளர்கள் Frontline இதழுக்குத் தெரிவித்ததாவது, ”சாதி எதிர்ப்பு குழந்தை இலக்கியத்திற்கு அரசு விருது மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தால், இந்த வகை புத்தக வெளியீடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது”. இளங்கோ கூறியதாவது, குழந்தைகளுக்கான தமிழில் சாதி எதிர்ப்பு இலக்கியத்தை மேல்மட்ட சமூகம் இதுவரை கவனிக்கவே இல்லையென்றார். 2023 ஜூலை மாதம் அரசு தொடங்கிய "வாசிப்பு இயக்கம்" திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, இந்தக் கதைகள் மற்றும் புத்தகங்களையும் அதன் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இது மிகமுக்கியமானது, ஏனென்றால் மகிழ்நிலா சரவணனுக்கெழுதிய கடிதம் போலவே, அந்தக் கதைகள் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை காட்டுகிறது. “இலக்கியம் தீர்வல்ல. ஆனால் அது ஒரு தொடக்கம்,” என்கிறார் சரவணன். “ஒரு புத்தகம் ஒரு குழந்தையின் மனத்தில் ஒரு கேள்வியை எழுப்பக்கூடியதாக இருந்தால், அது போதுமானது. ஏனெனில், சாதி மௌனத்தின் வழியேதான் நிலைத்து நிற்கிறது. அந்த மௌனத்தை ஒற்றைக் கேள்வியால் தகர்த்தெறிய முடியும்.” நன்றி - Frontline On Line Magazine
- சுடரின் ஓளியில் விலகும் இருள்
ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் சிக்கலான பருவம் வளரிளம் பருவம் அல்லது பதின்பருவம் தான். ஏனெனில் அதுவரை அப்பா அம்மா காட்டிய உலகம் மாறத் தொடங்கும். மனம் அலைபாயும். எது சரி? எது தவறு? என்று அறிய முடியாமல் தடுமாறும். சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும் பெரியவர்களின் உலகத்தில் உள்ள முரண்பாடுகள் முகத்தில் அறையும். எல்லாவற்றையும் மீற வேண்டும். செய்யாதே என்பதைச் செய்து பார்க்க வேண்டும். செய் என்பதை செய்யவே கூடாது என்ற எதிர்மனநிலை உருவாகும். பெற்றோர்களின் கனவுகளைச் சுமக்கும் சுமைதாங்கியாக இருக்கமுடியாது என்ற பிடிவாதம் தோன்றும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு ஒரு உலகத்தைக் காட்டும். ஒவ்வொரு அணுவிலும் காட்டாற்று வெள்ளமென சக்தி கரை புரண்டோடும். சாகசமும், உத்வேகமும், நிலைகொள்ளாமல் அலைக்கழிக்கும் பருவத்தில் தான் செய்வதும், தான் சிந்திப்பதும் மட்டுமே சரியென்ற பிடிவாதம் தோன்றும். அதுவரை ஒப்பற்ற ஹீரோவாகத் தெரிந்த அப்பா கொடிய வில்லனாக மாறுவார். ஆனால் உண்மையில் அப்பா வில்லனா? குழந்தையின் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படும் நலம்விரும்பியா? நீங்கள் வாசிக்க வேண்டிய இளையோர் நாவல் விடுபடும் சுடர். மலையாளச் சிறார் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்.பி.வி.சுகுமாரன் எழுதி தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான யூமாவாசுகி மொழிபெயர்த்து சிறார் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு செய்துவரும் பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரென் வெளியிட்ட விடுபடும் சுடர் என்ற இளையோர் நாவல் தந்தைக்கும் மகனுக்குமான உறவைக் குறித்து அழகாகவும் அழுத்தமாகவும் சொல்கிறது. யதார்த்த வாழ்க்கையைச் சிறார் இலக்கியத்தில் எழுதுவது சவாலான காரியம். அத்தகைய சவாலை எதிர்கொண்டு வெற்றியடைந்திருக்கிறார் பி.வி.சுகுமாரன். எல்லா அப்பாக்களைப் போலவே கிரணைப் பார்க்கும்போதெல்லாம் படி படி என்று கடுகடுத்தபடி இருக்கும் கிரணின் அப்பா எப்படி மாறுகிறார் என்பதும் அப்பாவை நினைத்தாலே கோபமும் பயமும் தோன்ற அப்பாவை வெறுக்கும் கிரண் எப்படி அப்பாவைப் புரிந்து கொள்கிறான் என்பதும் தான் கதை. பதின்பருவத்தினரின் உளவியலை மிக அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் பி.வி.சுகுமாரன். ஒவ்வொரு அத்தியாத்திலும் கிரணின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் தாழ்வு மனப்பான்மையும் அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதையும் சரியான வழிகாட்டுதலில் கிரணின் மனதில் மெல்ல மெல்ல ஏற்படும் மாற்றங்களையும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார் சுகுமாரன். கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளையே சித்தரித்து கதைக்கு நம்பகத்தன்மை வழங்கியிருக்கிறார். எளிமையான மொழிநடையும், பதின்பருவக்குழந்தை எப்படியெல்லாம் சிந்திப்பான் என்ற நுண்ணுணர்வும் நாவலை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. பதின்பருவத்தில் தான் ஆளுமை உருவாகி நிலை கொள்ளும். அப்படிப்பட்ட காலத்தில் இப்படியான புத்தகங்களை வாசிக்கும்போது பதின்பருவக்குழந்தைகள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் பெற்றோரையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும். தங்களுடைய ஆர்வத்தில் பற்றுறுதியுடன் தொடர்ந்து செயல்படவும் உதவும். பெரியவர்கள் வாசிக்கும்போது கல்வியைத் தாண்டி தங்களுடைய குழந்தையின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் துணை நிற்கவும் முடியும். இவற்றைத் தான் விடுபடும் சுடர் நமக்கு உணர்த்துகிறது. மிக முக்கியமான படைப்பை மலையாளச் சிறார் இலக்கியத்துக்கும், தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கும் கொடையாக வழங்கியிருக்கிற பி.வி.சுகுமாரனுக்கு வாழ்த்துகள்! வாசித்துப் பாருங்கள்! மாற்றத்தை உணர்வீர்கள் !












