இயலில் தேடலாம்!
211 results found with an empty search
- ஸ்பாரோவின் சிறார்களுக்கு எழுதும் பெண் எழுத்தாளர் சந்திப்பு
மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (SPARROW - Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குநராக எழுத்தாளர் அம்பை இருக்கிறார். 1988ஆம் ஆண்டு அம்பையும், அவரது நண்பர்களும் சேர்ந்து நிறுவிய இந்த ஆவணக்காப்பகம் வெறும் தகவல் சேகரிப்பு மையமாக மட்டும் செயல்படாமல், அகில இந்திய அளவில் பெண்களின் வரலாறு, வாழ்க்கைப் போராட்டம், அவர்தம் சாதனைகள் ஆகியவற்றை ஒலி, ஒளிக் காட்சிகள், வாய்மொழிப் பதிவுகள் எனப் பல வித்தியாசமான முறைகளில் ஆவணப்படுத்தும் அரிய பணியைச் செய்யும் அமைப்பாகவும் செயல்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் ஏற்கெனவே கவிதை உள்ளிட்ட பல இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்து நடத்தியிருந்த ஸ்பாரோ, இந்தாண்டு அகில இந்திய அளவில் சிறார் இலக்கியத்தில் ஈடுபட்டுள்ள பெண் எழுத்தாளர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பலதரப்பட்ட மொழிகளில் எழுதும் சிறார் பெண் எழுத்தாளர்களுக்கான சந்திப்பு நடப்பது இதுவே முதல் முறையென்று நினைக்கிறேன். இவர்களில் சாகித்ய பால புரஸ்கார் விருது வென்ற ஆளுமைகள் பலர் இருந்தனர். பெங்காலியில் எழுதும் ஜோயா மித்ரா, மலைவாழ்ப் பெண்களுக்கு விழிப்பூட்டும் விதமாகச் சந்தாலி மொழியில் கதைகளை எழுதும் ஜோபா முர்மு, சிந்தியிலும், ஹிந்தியிலும் எழுதும் ராஷ்மி ரமணி, அஸ்ஸாம் மொழியில் எழுதும் பந்திதா ஃபுகன். கொங்கணியில் எழுதும் ஹர்ஷா சத்குரு ஷெட்யே ஆகியோர் அவர்களில் சிலர். கதை சொல்லுதல், நாடகம் பன்மொழிப் புலமை எனப் பன்முகத்திறமை பெற்ற பலர் இருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட நேபாளி மொழியில் எழுதும் சாங்மு லெப்ஷா என்பவருக்கு, 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய பாலபுரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. நிகழ்வு மூன்று நாட்கள், பயணம் போக வர இரண்டு நாள், எனப் பங்கேற்பாளர்க்கு 28/04/2025 முதல் 02/05/2025 வரை, மொத்தம் ஐந்து நாட்கள் உணவு, உறைவிட வசதி கிரீன் ஹில் வில்லாஸ், கல்யாண், மகாராஷ்டிரா என்ற ரிசார்டில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. தமிழ், கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, அஸ்ஸாம், குஜராத்தி, பெங்காலி, மைதிலி, சந்தாலி, கொங்கணி, நேபாளி, சிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் 23 பேரோடு கதைசொல்லி, ஓவியர், சிறார் செயற்பாட்டாளர் என மேலும் மூவர் இணைந்து, மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர். இதில் எழுத்தாளர் அம்பையும் அடக்கம். ‘அம்பை’ என்ற புனைபெயரில் எழுதும் சி.எஸ்.லஷ்மி, சிறார் கதைகளும் எழுதியிருக்கிறார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத செய்தி. 1960இல் ‘கண்ணன்’ சிறார் இதழில் நடந்த நாவல் போட்டியில் இவரது ‘நந்திமலைச் சாரலிலே’ என்ற சிறுவர் சாகச நாவல் முதற்பரிசு வென்று, அந்த இதழில் தொடராக வெளிவந்தது. அதை எழுதிய போது அவருக்கு வயது 16. அது தவிர ‘நிர்மலம்’ என்ற சிறுவர் கதை எழுதியிருப்பதோடு, சிறார் கதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துமிருக்கிறார். இளையோர்க்காக இவரெழுதிய தன்வரலாறு ‘Walking Erect with an Unfaltering Gaze,’ (நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்) குறுநூலை 2013ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. தமிழ்நாட்டிலிருந்து சிறார் எழுத்தாளர்கள் ஞா.கலையரசி, ஈரோடு சர்மிளா, அறிவியல் எழுத்தாளர் நாராயணி சுப்ரமணியன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதும் சென்னையைச் சேர்ந்த சந்தியாவும், கணித மாணவியும் ஓவியருமான மதுஸ்ரீ என்பவரும் வந்திருந்தனர். முதல் நாள் மாலை எழுத்தாளர்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டன. மற்ற மாநிலத்திலிருந்து வந்திருப்பவர்களோடு சகஜமாகப் பழக வேண்டும் என்ற நோக்கத்தில், வெவ்வேறு மொழி பேசும் இருவர், ஒரே அறையில் தங்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். இரவுணவுக்குப் பிறகு ஸ்பாரோ குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வுக்காக கான்பரன்ஸ் ஹாலுக்குச் சென்ற எழுத்தாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது! பங்கேற்பாளர்களின் படத்துடன் கூடிய குறிப்புகள் அடங்கிய வண்ணப் போஸ்டர்கள் அந்த அறையின் நான்கு பக்கச் சுவர்களையும் அலங்கரித்தன. அவரவர் படத்தின் முன் நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்ட எழுத்தாளர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவித்தனர். அம்பை தலைமையில் ‘ஸ்பாரோ’ குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், வந்தவர்களைக் கெளரவிக்கச் செய்திருந்த சிறப்பான முன்னேற்பாடுகளும், அன்பான விருந்தோம்பலும் அனைவரையும் நெகிழச் செய்தன! 29/04/2025 காலை சிறார் செயற்பாட்டாளர் ஸ்ருதி ஸ்ரீதரனின் தமிழ்ப் பாடல் இன்னிசையுடன் விழா இனிதே துவங்கியது. அடுத்துத் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அமைந்த மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஞா.கலையரசி எழுதி, வானம் பதிப்பகம் வெளியிட்ட ‘டைனோசர் சொன்ன கதை’ என்ற சிறுவர் குறுநாவல், ஈரோடு சர்மிளா எழுதிப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்ட துணிச்சல்காரி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘நிலா த பிரேவ்’ என்ற இளையோர் நாவல், நேகா சிங் எழுதிய ‘நிக்கி த டிடெக்டிவ்’ என்ற ஹிந்தி நாவல் ஆகிய மூன்றும் வெளியிடப்பட்டன. அடுத்துப் பங்கேற்பாளருக்கான கேள்வி நேரம். எழுத்தாளர்களுடைய படைப்புகளையும், ஆசிரியர் குறிப்பையும் ஏற்கெனவே எழுத்தாளர் அம்பை வாங்கிப் படித்து, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரத்யேகமான கேள்விகளைத் தயாரித்து முன்கூட்டியே நிகழ்ச்சிநிரல் பட்டியலில் அனுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில்களை எழுத்தாளர் மேடையில் சொல்லும் நிகழ்வு இது. சிறார் இலக்கியம் எழுத வந்ததன் பின்னணி, அவர்கள் சந்தித்த சவால்கள், எழுதத் தேர்ந்தெடுத்த மொழிக்கான காரணம், குடும்பப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டன. ஹிந்தியில் பேசியவர்கள் உரையைத் தொகுப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பங்கேற்பாளர்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள இந்த நிகழ்வு பெரிதும் உதவியது. ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு முக்கியமான தலைப்பில் கலந்துரையாடலும், கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றது. குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கதைகள் சொல்லும் போது அது எந்தளவுக்கு அவர்கள் ஆளுமையை வளர்க்கிறது? தாய்மொழியில் கதைகள் சொல்வது ஏன் அவசியம்? என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். குழந்தைகளும், இளையோரும் தங்கள் மொழி, வேர், பண்பாடு, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை அறிந்து கொள்ளவும், அவற்றில் ஈடுபாடு கொள்ளவும் தாய்மொழியில் கதைகள் கேட்பதும்,வாசிப்பதும் மிகவும் அவசியம்; பின்னாளில் குழந்தைகளின் ஆளுமையை வளர்ப்பதில் அதற்கு முக்கிய பங்கிருக்கிறது என்பது பெரும் பாலோரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. “பெற்றோர் இருவருக்கும் ஒரே தாய்மொழி என்றால், குழந்தைக்குப் பிரச்சினையில்லை. இந்தியா போன்று பல்வேறு மொழிகள் புழங்கும் ஒரு நாட்டில், அப்பாவின் தாய்மொழி ஒன்று; அம்மாவின் தாய்மொழி வேறு; அவர்கள் குடும்பம் வசிப்பது, இரண்டு மொழிகளும் புழங்காத வேறு ஒரு மாநிலம் என்கிற போது குழந்தையின் தாய்மொழியாக எதை எடுத்துக் கொள்வது?” என்று அப்போது எழுப்பப்பட்ட கேள்வி, அனைவரையும் யோசிக்க வைத்தது. எழுத்தாளர் சந்தியா இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாகக் குழந்தை வசிக்கும் ஊரிலும், தெருக்களிலும் எந்த மொழி பேசப்படுகிறதோ, குழந்தையைச் சுற்றி எந்த மொழி புழங்குகிறதோ, அதையே குழந்தையின் தாய்மொழியாகக் கருத வேண்டும்; பெற்றோரின் மொழியை மட்டுமே தாய்மொழியாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர் அனந்தமூர்த்தியின் கருத்தைத் தெரிவித்தார். இன்னொரு நிகழ்வில் கதைகளை மொழிபெயர்ப்பு செய்வது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிக்கும், இந்திய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கும் போது சந்திக்கும் சவால்கள் குறித்து, எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கடல்சார் உயிரினம் குறித்துத் தமிழில் எழுதும் அறிவியலாளர் நாராயணி சுப்ரமணியன், தாம் எழுதத் துவங்கியபோது Sea cow என்பதற்குக் கடல்பசு என்ற நேரடி மொழிபெயர்ப்புச் சொல்லே கிடைத்ததாகவும், தேடியலைந்து மீனவரிடம் ‘ஆவுளியா‘ என்ற சரியான தமிழ்ச் சொல்லைக் கண்டடைந்தாகவும் குறிப்பிட்டார். “ஓர் இந்திய மொழியிலிருந்து இன்னோர் இந்திய மொழிக்கு மாற்றம் செய்யும் போது கதாபாத்திரங்களின் பெயர்களை வாசிக்கவும், உச்சரிக்கவும் சிரமமாக இருக்கிறது. மொழிபெயர்க்கும் போது, மூலப் படைப்பின் பெயர்களை மாற்றலாமா?” என்ற கேள்வி அச்சமயம் எழுந்தது. “ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அது வாழும் நிலத்தோடும், மொழியோடும் சம்பந்தப்பட்டது என்பதால், வாசிக்கவும், உச்சரிக்கவும் சிரமமாக இருந்தாலும் மாற்றவே கூடாது” என்று அம்பை தம் கருத்தை வலியுறுத்திக் கூறினார். அங்கே மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சிறார் நூல்களைப் பார்த்த போது , நூல் வடிவமைப்பு விஷயத்தில், நாம் இன்னும் அதிக தூரம் போகவேண்டும் என்ற உண்மை புரிந்தது. ஆனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அந்நூல்களின் விலை நூறு ரூபாய்க்கு மேலிருந்ததையும் இங்கே சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சிறார் கதைப் புத்தகத்தின் விலை ரூ 50/-க்கு மேல் இருந்தால், 300 பிரதிகள் கூட விற்பனையாகாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே பெற்றோர் புத்தகம் வாங்குவது செலவல்ல; அது குழந்தையின் அறிவுக்கான முதலீடு என்பதையுணர்ந்து அதிகளவில் புத்தகம் வாங்கத் துவங்கினால், இங்கும் பதிப்பகத்தார் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்த முன்வருவார்கள். ஆங்கிலத்தில் வெளியான சில நூல்கள் சர்வதேச அளவில் பரிசுகளை வென்றிருக்கின்றன. அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கில நூல்களில் என்னை மிகவும் கவர்ந்தது ‘விதை’ (The Seed)என்ற 3-5 வயதினர்க்கான சிறு புத்தகம். 2005ஆம் ஆண்டு துலிகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை ஜெர்மனியின் White Raven Library 2006ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த குழந்தைப் புத்தகமாகத் தேர்ந்தெடுத்தது. இதன் ஆசிரியர் தீபா பல்சாவர் கதையெழுதி, அவரே ஓவியமும் வரைந்துள்ளார். இவரெழுதிய ‘Nani Walks to the Park’ என்ற புத்தகமும் பல விருதுகளை வென்றுள்ளது. ஆங்கிலப் புத்தகத்துக்கு இணையான நுணுக்கமான ஓவியங்கள் இதில் காணக் கிடைக்கின்றன. ‘விதை’ கதையில் பெண் குழந்தைக்கு ஒரு விதை கிடைக்கிறது. அதைத் தொட்டி மண்ணில் போட்டு, நீர் ஊற்றி வெயிலில் வைக்கிறாள். செடி முளைத்து இரண்டு இலைவிடுகிறது. அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி! பெரியவர்களிடம் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கிறாள். இது உயரமாக வளருமா? பூ பூக்குமா? பழம் பழுக்குமா? முடிவில் ‘இது எப்படி வளர்ந்தாலும் சரி; இதை நான் இப்படியே நேசிக்கிறேன்,’ என்று தொட்டியைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள். பொறுமை, காத்திருத்தல், எதிர்பார்ப்பற்ற அன்பு என்ற சிறந்த பண்புகளைக் குழந்தைகளிடத்தில் விதைக்கும் கதையிது. “நீ வளர்ந்து பெரியவனான பிறகு இஞ்சீனியர் ஆவாயா? டாக்டர் ஆவாயா?” என்று தம் குழந்தையிடம் கேட்கும் பெற்றோருக்கும் இதில் முக்கியமான செய்தியிருக்கிறது. "குழந்தைகள் மட்டுமே ரசிக்கக்கூடிய ஒரு குழந்தைக்கதையென்றால், அது சிறந்த குழந்தைக்கதையல்ல,” என்கிறார் எழுத்தாளர் சி.எஸ்.லூயிஸ். (“A children's story that can only be enjoyed by children is not a good children's story in the slightest.”) அடுத்து எழுத்தாளர்கள் அவர்களுடைய ஒரு கதையையோ, நாவலின் ஒரு பக்கத்தையோ, மேடையில் வாசிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு திரையில் காட்டப்பட்டது. மேடையில் வாசிக்கப்பட்ட குழந்தைப் பாடல்களின் மொழி வேறாக இருந்தாலும், அதன் ஓசையும், சந்தமும் ரசிக்கக் கூடியனவாயிருந்தன. ஜில்லா பரிஷத் பள்ளியிலிருந்து 25 மாணவர்களைப் பள்ளித்தலைமை ஆசிரியர் இந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார். தியேட்டர் அனுபவம் உள்ள எழுத்தாளர்கள் நாடகம் நடித்துக் குழந்தைகளை மகிழ்வித்தார்கள்.குழந்தைகளுக்கு வண்ணப் பென்சில்கள் தந்து ஓவியம் வரைய வைத்துச் சிறப்பாக வரைந்தவர்க்குப் பரிசு கொடுத்தார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அமைந்த சில படங்களும், பெண்ணிய நோக்கில் அமைந்த சில திரைப்படங்களும், UNICEF மீனா அனிமேஷன் படங்களும் காட்டப்பட்டன. ‘சகோரி’ என்ற மராத்தியக் குறும்படம் கணவனால் கைவிடப்பட்டுச் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் அவல வாழ்வையும், அவள் பலவாறாகக் கஷ்டப்பட்டுச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட பின் அவள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தையும் சொன்னது. Sesham Milk-il Fathima என்ற மலையாளத் திரைப்படம் கால்பந்து வர்ணனையாளராக விரும்பும் பாத்திமா நூர்ஜகான் என்ற பெண்ணின் கதையை நெகிழ்ச்சியுடன் விவரித்தது. இறுதியாக ஒரு கலந்துரையாடல் நிகழ்வில், திரையிடப்பட்ட படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை எழுத்தாளர்கள் பகிர்ந்து கொண்டனர். முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் அம்பை நினைவுப் பரிசுகளை வழங்கினார். ஐந்து நாட்கள் பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சமையல், பிள்ளைகள் என எந்தவிதக் கவலையும் இல்லாமல் கலை, இலக்கியம் குறித்து மட்டுமே சிந்தித்தும், கலந்துரையாடியும் மகிழ்ந்தார்கள். இந்நிகழ்வின் மூலமாக எழுத்தாளர்கள் கற்றதும் பெற்றதும் மிக அதிகம். அகில இந்திய அளவில் சிறார் பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துச் சிறப்பாகக் கலை இலக்கிய விழா நடத்திய ஸ்பாரோவையும், இயக்குநர் அம்பையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- அன்புள்ள அப்பா
தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன. அக்குழந்தைகள் வாசிக்க என்று எண்ணற்ற புத்தகங்கள் இருந்தாலும்கூட அவ்வயது குழந்தைகளின் நடத்தைகளை பிரதிபலிக்கும் நூல்கள் வெகு சிலவே. அதிலும் புனைவாக்க வகைமைகளில் அரிதாகவே காணக் கிடைக்கின்றன. அன்புள்ள அப்பா என்கிற நூல் அப்படியான வகைமையில் அமைந்திருக்கும் என்பதை வாசிக்கத் தொடங்கும் வரை அறிந்திருக்கவில்லை. பொதுவாகவே நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் நூல்கள் மீது பெரும் விருப்பம் எனக்கு உண்டு. அந்நிறுவனத்தின் நூல்களை வாசித்ததின் வழியாகவே இந்திய அளவிலான நல்ல நூல்களின் அறிமுகம் கிடைத்தது. “அன்புள்ள அப்பா” மராட்டி மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியே இந்நூல். நூல் குறித்த மேலதிக விவரங்கள் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. முதல் அத்தியாயம் வாசிக்கத் தொடங்கும்போதே கதை நாயகனான பிபுல் குறித்த அறிமுகம் அதிரடியாகப் பதிவாகிறது. அவனது வீட்டிலுள்ள சகோதரிகள் மற்றும் அவனது தாய் உட்பட அனைவரும் எப்படி அவனிடம் பயந்து ஒடுங்கி நிற்க தலைப்படுகின்றனர் என்பது விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது. கதை பதின்பருவ வயதினர் விரும்பும் வகையில் சாகசமும் துப்பறிதல் சார்ந்த கிளர்ச்சியும் உடையதாக இருப்பதால் வாசிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. தான் யாருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவனல்ல; எனது விருப்பத்திற்கேற்பவே பள்ளி செல்வதும் செல்லாமலிருப்பதும் என ஒவ்வொரு காரியத்திலும் குடும்பத்திலுள்ளவர்களைப் பதைபதைப்போடு வைத்துக் கொண்டிருப்பவன் பிபுல். அவனைத் தவிர அக்குடும்பத்திலுள்ள பிற குழந்தைகள் அவ்வளவு சமர்த்தாக பள்ளி செல்ல கிளம்பித் தயாராகையில் இவனைக் குறித்து மட்டும் மனம் புழுங்கி புழுங்கி சாகக்கிடக்கிறாள் அவனது அம்மா. அம்மாவோடு உடனிருக்கும் மூத்தவள் ராணி தன் குடும்பத்தில் நிலையறிந்து பள்ளி நாட்களை இழக்க வேண்டிய சூழல் நேருகிறது. அவனது தந்தையோ அரசுப்பணி காரணமாக வெளியூரில் இருந்து வந்தாலும் நாள்தோறும் பிபுலை நினைத்து வருத்தப்பட வேண்டியவராகவே இருக்கிறார். இத்தனைக்கும் இடையில் தன்னையொரு முரடனாக வளர்த்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து திரியும் பிபுல் தனது நண்பர்களோடு சேர்ந்து பகல் நேரங்களில் திரைப்படம் பார்க்கவும் மாலை நேரங்களில் இருள் கூடிய பகுதிகளில் அமர்ந்து சிகரெட் புகைக்கவும் பழகிக் கொள்கிறான். ஒரு மாணவனை திருத்தி நல்வழிப்படுத்த அவனது குடும்பம் மட்டுமல்ல அவர்களை சுற்றியுள்ளவர்களான மருத்துவர், சமூக சேகவர், மளிகைகடைக்காரர், காவல் நிலைய அதிகாரிகள் என அனைவரும் பங்கெடுத்துக் கொள்வது நல்ல விளைவினைத் தருகிறது. முன் காலங்களில் குழந்தைகளை அவர்கள் அறியாமலேயே அவர்களின் நடத்தைகளை கண்காணித்துக் கொண்டிருப்பதற்கான சூழல்; அவர்களோடு உரையாடிக் கொண்டிருப்பதற்கான சூழல் எல்லோருக்கும் வாய்க்கப்பட்டிருந்தது. பெற்றோர்களைத் தாண்டி உறவினர்கள் உட்பட எல்லோருமே அன்னியர்களாகிப் போன இன்றைய சூழலில் குழந்தைகளோடான கவனத்தை வெளி சமூகம் குறைத்துக் கொண்டுள்ளது. இது இன்றைய சூழலின் பெரும்பிழை. இந்நாவலில் சிகரெட் வாங்கச் செல்லும் சிறுவனிடம் மளிகைகடைகாரர் சிகரெட்டைத் தராமல் அவ்வளவு வருந்தி கரைந்து போவதையும்; வேறு வழியின்றி அம்மாணவனுக்கு சிகரெட்டை கொடுத்துவிட்டு பெரும்பாவம் செய்துவிட்ட குற்றவுணர்வோடு உடனே கடையை அடைத்துவிட்டுக் கிளம்புவதையும் வாசிக்கும்போது இன்றைய காலங்களில் இப்படியான தருணமெல்லாம் சாத்தியமா? என எண்ணத் தோன்றுகிறது. கதையில் வரும் புலனாய்வு அதிகாரி மகனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்ல முற்படும்போது அவனது அப்பாவும் உடன் வர முனைகிறார். அப்போது பளீரென புலனாய்வு அதிகாரி நிகுஞ்சா சில வார்த்தைகளை பேசிவிடுவார். அது பெற்றோர்கள் எல்லோருக்குமானதாக அமைந்திருக்கும். நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஏதேனும் ஒருவகையில் பிபுலை வசைபாடி விடுபவர்களாக இருக்க ராணியின் தோழியான மிருணாளினி தனது நேசத்தாலும் அக்கறையாலுமே பிபுலை தேற்றி வழிநடத்துபவளாக இருக்கிறாள். தவறுகளுக்கான தண்டனை குறித்த அச்சத்தில் தன்னை உணரத் தொடங்கும் தருணத்தில்தான் அவனுக்கு மற்றவர்களின் நேசமான பார்வையும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. கடைசி வரை கைவிடாத அவளின் தூய்மையான அன்பு அவனை இறுதியில் நெறிப்படுத்திவிடும் என்கிற நம்பிக்கையை அளித்து நிறைவடைகிறது நாவல். பிறழ்நடத்தை உள்ளவனாக மாறிப் போன குழந்தையை மீட்டெடுக்க அக்குழந்தையைச் சார்ந்துள்ள அனைவரும் எடுக்கும் முயற்சிகள் நாவல் வடிவமாக சாகச உணர்வோடும் பதைப்பூட்டும் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களோடும் சுவைபட எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலில் இடம்பெறும் ஓவியங்களின் உருவ தோற்றங்களும் கதையின் நிகழிடத்தை பொருத்தமாக சொல்லிவிடுகின்றன. இன்றைய வகுப்பறைகளில் குழந்தைகளின் அதீத குறும்புகளையும் வெளிப்பாட்டுத்திறன்களையும் முறைப்படுத்த இயலாது தவிக்கின்ற ஆசிரியர்களுக்கு இந்த நூலை வாசிப்பதென்பது ஆறுதல் அளிக்கக்கூடியதாகவும் இன்னமும் நம்பிக்கையோடு செயலாற்றவும் உதவிகரமாக அமையும். நானும்கூட இந்த நூலை வகுப்பறையில் குழந்தைகளிடம் அவர்களுக்கான சாயலோடு கதையாகச் சொல்லலாம் என விரும்புகின்றேன். வாய்ப்பு அமையுமானால் நீங்களும்கூட இந்நூலை வாசிக்கலாம் நண்பர்களே. க.சம்பத்குமார்
- தும்பி - புன்னகைப்பூ ஜெயக்குமார்
தும்பி இது தும்பி என் தோட்டத்தில் வரும் தும்பி பூவின் மீது உட்காரும் தும்பி 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிறந்த தும்பி மழை வருமெனச் சொல்லும் தும்பி என்னைச் சுற்றும் தும்பி எனக்கு நண்பனான தும்பி ஹெலிகாப்டர் போல விர்ரென்று பறந்து போகும் தும்பி தும்பி இது தும்பி
- யூனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் : 5
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு என்று யுனிசெஃப் பிரகடனத்தின் ஆறாவது விதி சொல்லுகிறது. குழந்தைகளின் பெற்றோர் அந்தந்தக் குழந்தைகளின் நலன்களில் அக்கறை எடுத்துக் கொள்வது என்பது இயல்பாக நடைபெற வேண்டும். இன்றுள்ள சூழலில் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பெற்றோர் இந்தக்கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர் என்று நாம் பொதுவாகக் குறிப்பிடலாம். பெரும்பாலும் இருவரும் -தந்தை,தாய்- வேலைகளுக்குப் போயாக வேண்டிய நிலையில்தான் இத்தகைய குடும்பங்கள் இருக்கின்றன. பெண்கள், தாங்கள் எந்த வேலையில் இருந்தாலும் தமது குழந்தைகளின் படிப்பு,இதர தேவைகள் பற்றிய சிந்தனையுடனேயே எப்போதும் இருப்பதைக் காண முடிகிறது. பேருந்துகளிலோ,மின்சார இரயில்களிலோ பயணிக்கும் தாய்மார்கள், தமது குழந்தைகள் அன்றைய தினம் என்ன சாப்பிட்டார்கள், சரியாகச் சாப்பிட்டார்களா என்றோ,அல்லது ஒன்றுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் பள்ளிக்குப் போனார்களா என்றோ,அல்லது உடல்நலம் குன்றி இருந்தாலும் பிடிவாதமாகப் பள்ளிக்குப் போய் விட்டார்கள்,அங்கே போய் எப்படி இருக்கிறார்களோ என்னவோ என்று புலம்பிக்கொண்டே பயணிப்பதை நாம் கொஞ்சம் கவனித்தால் அறிய முடியும். அதே போல, மாலையில் வீடு திரும்பும் போதே அன்று இரவு சமையலுக்குத் தேவையான காய்கறிகள், குழந்தைகள் விரும்பிக் கேட்டிருக்கும் திண்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கிச்சுமந்து கொண்டு சோர்வுடன் வீடு திரும்புவதையும் நாம் காணலாம். ஆனால், கிராமப்புறங்களில் வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் ஆண்களும்,பெண்களும் கூலி வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போவதே சிரமம். பெரிய குழந்தைகள், கைக்குழந்தைகளாக உள்ள சிறிய பிள்ளைகளைப் பராமரித்துக் கொண்டு, பெற்றோரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டோ அல்லது அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இடுப்பில் சிறிய குழந்தைகளையும் தூக்கி வைத்துக் கொண்டே,வீடுகளின் முன்னால் அல்லது தெருக்களில் விளையாடிக் கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியும். பெற்றோர் மாலை மங்கி,இருட்டிய பிறகு வந்து ஏதேனும் உணவு சமைத்துக் கொடுத்தால் அந்தப்பிள்ளைகள் உண்டு விட்டுத் தூங்கிப் போவார்கள். வசதி படைத்த வீடுகளிலும்,நடுத்தர வர்க்கத்துக் குடியிருப்புகளிலும் உள்ள நிலைமைகள் வேறு. மேற்கண்ட கிராமப்புறக் குடியிருப்புகளின் நிலைமைகள் வேறுதாம். இத்தகைய வேறுபட்ட சமுகப்பின்னணிகள் எவையாக இருப்பினும், எந்த ஒரு குழந்தையின் உயிர் வாழும் உரிமையை யாரும் மறுக்க முடியாது,கூடாது. எந்த அரசாங்கமாக இருந்தாலும், அந்தந்த நாட்டு மக்களின் குழந்தைகள் அனைவரையும் உயிருடன் பாதுகாப்பது அந்த அரசாங்கங்களின் கடமை என்று யுனிசெஃப் விதி கூறுகிறது. அவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் வாழ்வதை அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும். வெறுமனே உயிருடன் இருப்பதை மட்டுமன்றி, அவர்கள் ஆகச்சிறப்பான வழியில் வளர்ந்து மேம்பட்ட ஒரு வாழ்க்கையைப் பெறுவதையும் அவை உறுதிப் படுத்த வேண்டும்! சுருங்கச்சொன்னால், உயிருடன் இருப்பதை மட்டுமன்றி, முழு உயிர்ப்புடன்,மன நலத்துடனும், உடல் நலத்துடனும் குழந்தைகள் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை என்பது யுனிசெஃப் பிரகடனத்தின் விதி. இதை அந்தப்பிரகடனத்தில் கையெழுத்திட் டுள்ள அனைத்து அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், உண்மை யில், நடைமுறையில் அப்படி அவை தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள இந்தப் பொறுப்பை நிறைவேற்றுகின்றனவா? இந்தக்கேள்வி மில்லியன் டாலர் கேள்விகளுள் ஒன்று! இன்று உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தால், ஒப்பீட்டு அளவில் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள் ஓரளவுக்குத் தமது நாட்டின் குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனத்தைச்செலுத்துகின்றன என்பதை அறியலாம். அங்கேயும் கூட, திடீர் திடீரென்று பள்ளிகளில், ஷாப்பிங் மால்களில், பூங்காக்களில், இரயில்-விமான நிலையங்களில் யாரேனும் மனநிலை பிறழ்ந்த அல்லது அதி தீவிர அரசியல் கொள்கைகளின் பெயரால் ஆயுதம் தாங்கிய நபர்கள் கண்மூடித்தன மாகத்துப்பாக்கிச் சூடுகள் நடத்திக் குழந்தைகளைக் கொன்று குவிப்பதையும் காண்கிறோம். ஒரே பள்ளியில்,ஒரே வகுப்பில் படிக்கும் குழந்தைகளிலேயே கூட ஒரு சிறுவன் கையில் துப்பாக்கியுடன் மனம் போனபடி சுட்டுப் பிற குழந்தைகளைக் கொல்வது,காயப்படுத்துவது ஆகியவையும் நடக்கின்றன. இன்னொரு மோசமான சூழ்நிலை, உக்ரேன்-ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே அல்லது இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போன்று தொடர்ந்து நடக்கும் போர்களில் அல்லது ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே நாட்டுக்குள் வெவ்வேறு இனங்களைச்சேர்ந்த மக்கள், தங்களுக்குள் மோதிக்கொள்ளும் உள் நாட்டுப் போர்களில் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சிறு குழந்தைகள் கொத்துக் கொத்தாய் நூறு-ஆயிரக்கணக்கில் அன்றாடம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் அவலம். பள்ளிகளை,மருத்துவ மனைகளைக் குறி வைத்து விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. அதை விடவும் மோசம், காஸா பகுதியில்,கையறு நிலையில் பசியுடன் உணவுக்காகக் கையேந்தி நிற்கும் பச்சிளம் குழந்தைகளை எந்த மனித நேய உணர்வும் இல்லாமல் சுட்டுத்தள்ளி விட்டுப் பெருமிதத்துடன் அதைப் பற்றிச் செய்தி அறிக்கைகள் வெளியிடும் அரசாங்கங்கள், அவற்றின் தலைவர்களின் அற உணர்வற்ற செயல்கள்! இப்படி நிகழ்ந்து கொண்டிருக்கும் எந்தக்கொடுமையையும் தடுக்கவோ, குறைந்த பட்சம் வலிமையாகக் கண்டிக்கவோ கூட உலகின் எந்த நாட்டு அரசும்,அரசியல் தலைவரும் முன்வருவதில்லை என்ற எதார்த்தம் நம் நெஞ்சில் அறைந்து கொண்டிருக்கிற காலம் இது. உலக மக்களின் மனச்சாட்சிக்கு என்ன ஆகி விட்டது என்ற கேள்வி நம் மனதைப் பிளக்கிறது. விடை காண வேண்டிய கடமை நம் முன் மலை போல நிற்கிறது. என்ன செய்யப்போகிறோம்?
- ஏன் பிறந்தோம்?-5
கொஞ்சம் வரலாறு தத்துவச்சிந்தனை எப்போது, எப்படித் தோன்றியது என்று தெரிந்துகொள்ளும் முன் நம்முடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன சரிதானே! வாயுக்கள், தூசி போன்றவை அடங்கிய சுழலும் பெருமேகமான நெபுலாவில் இருந்து பெருவெடிப்பில் சிதறிய ஒரு துண்டுதான் பூமி. அந்த சம்பவம் நடந்து சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னது? 454 கோடி ஆண்டுகளா? ஆமாம். நாம் வாழும் இந்த பூமி பிறந்து 454 கோடி ஆண்டுகளாகி விட்டன. ஆனால் எரிந்துகொண்டிருந்த நெருப்புக்கோளமான பூமியில் ஒரு உயிர் எப்போது தோன்றியது தெரியுமா? 380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் முதல் உயிர் தோன்றியது. என்னது 74 கோடி ஆண்டுகளாக பூமி எரிஞ்சிக்கிட்டே இருந்ததா? அப்படின்னா பூமியைப் படைத்தது, உயிர்களைப் படைத்தது கடவுள் என்று சொல்கிறார்களே.. அதைப் பற்றி அப்புறம் பார்ப்போம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இப்போது தெரிந்துகொள்ளலாம். அறிவியல் எந்த ஒன்றையும் ஆராய்ந்து நிரூபிக்கும். அல்லது நிரூபிக்கப்பட்ட ஒன்றையே உண்மை என்று ஏற்றுக்கொள்ளும். புரியலையே! தண்ணீர் எப்படி உருவானது என்று முதலில் யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது பள்ளிக் குழந்தைகூட ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தால் தண்ணீர் உருவாகும் என்று சொல்லிவிடும். அது எப்படித் தெரிந்தது? தண்ணீரின் மூலக்கூறுகளை ஆராய்ந்து அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆராய்ந்து நிரூபிப்பது அறிவியல் என்று சொல்கிறோம். சரி. முதல் உயிர் எப்போது, எப்படித் தோன்றியது? 74 கோடி ஆண்டுகளாக எரிந்துகொண்டிருந்த பூமி கொஞ்சம்கொஞ்சமாகக் குளிர்ந்தது. அப்படிக் குளிர்ந்தபோது விதவிதமான வாயுக்கள் உருவாயின. ஹைட்ரஜன், நைட்ரஜன், ஹீலியம், கார்பன் டை ஆக்சைடு, இவற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் வினைபுரிந்து தண்ணீர் உருவானது. அதுதான் கடல். பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சொந்த ஊர் என்றால் அது கடல்தான். அந்தக் கடலில்தான் முதல் உயிரான சயானோ பாக்டீரியா அல்லது நீலப்பச்சை பாசி போன்ற நுண்ணுயிரி தோன்றியது. அடேயப்பா! நம்முடைய மூதாதையர் யார்? என்று கேட்டால் சயானோ பாக்டீரியா என்று சொல்லவேண்டும். சரியா? பேரே அழகா இருக்குல்ல.. சயானோ. அந்த சயானோவிலிருந்துதான் பூமியில் இப்போது இருக்கும் இத்தனை கோடி உயிரினங்களும் தோன்றின. இதையும் அறிவியலாளர்கள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள். அப்படித்தான் ஒவ்வொரு உயிரும் தங்களுக்கென்று தனியான பண்புகளுடன் வாழ்கின்றன. இயற்கையில் ஒன்றைப் போல இன்னொரு உயிர் கிடையாது. சரி. மனித இனம் எப்போது, எப்படி உருவானது? அறிவியலறிஞர் டார்வின் பரிணாமக் கோட்பாட்டை ( Evolution Theory) கண்டுபிடித்தார். அப்போது அவருக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்தார். அதிலிருந்து கிடைத்த உண்மைகளைச் சொன்னார். குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று டார்வின் சொன்னார். ஆனால் டார்வினுக்குப் பின்னால் வந்த அறிவியலாளர்கள் அவர் சொன்ன பரிணாமவரலாற்றில் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அது என்ன? குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பொது மூதாதையிலிருந்து மனித இனம் தோன்றியது. நேரடியாக குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை. உராங் ஊத்தன், சிம்பன்சி, கொரில்லா, போனோபாஸ் போன்ற வாலில்லா குரங்குகளுக்கும் மனித இனத்துக்கும் ஒரே பொது மூதாதை இருந்தது. அப்படி என்றால் இப்போது நாம் பார்க்கும் குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை? அங்கேதான் இருக்கிறது இன்னொரு ட்விஸ்ட். அதாவது, பிரைமேட் என்று சொல்லப்படும் குரங்கினங்களுக்கும் வாலில்லா குரங்குகளுக்கும் இடையில் ஹோமினிட் என்று சொல்லப்படும் விலங்கினங்கள் தோன்றியிருக்கின்றன. வாலில்லாக் குரங்குகளுக்கு முன்னால் ஒரு குரங்கினம் தோன்றியிருக்கிறது. அதனுடைய பரிணாம வளர்ச்சியில்தான் வாலில்லா குரங்குகள் தோன்றின. அதேபோல் அந்தப் பொது மூதாதையிலிருந்தே மனித இனம் தோன்றியது. இதெல்லாம் எப்போது ஆரம்பித்திருக்கும்? சுமார் அறுபது எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்.. மனித இனத்தின் பொது மூதாதை பூமியில் தோன்றியது. அதற்கு முன்னால் மனித இனமே கிடையாது. நவீன மனித இனமான, அதாவது ஹோமோசேப்பியன்ஸ் எப்போது தோன்றியது? சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்தான். சரி. எங்கே தோன்றினார்கள்? ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள். ஆமாம். இன்று உலக முழுவதும் பரவியுள்ள மனித இனம் முதன்முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான். நமக்கெல்லாம் பூர்விகம், அதாவது மூதாதையர் அல்லது முன்னோர்களின் ஊர் ஆப்பிரிக்காவா? எதுக்குச் சுத்தி வளைச்சிகிட்டிருக்கீங்க? மொத்த மனித இனத்தின் பாட்டி, தாத்தாவின் ஊர் ஆப்பிரிக்கா. அவ்வளவுதான். ஆனால்? என்ன ஆனால்? இல்லை. வந்து.. ஆப்பிரிக்க மக்களுக்கும் உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லையே. ஆமால்ல..ஆனால் ஆப்பிரிக்காதான் எல்லோருக்கும் சொந்த ஊர். என்ன குழப்பமாக இருக்கா? சரி. குழப்பம்தான், அதாவது சந்தேகம்தான் உண்மையைக் கண்டுபிடிக்க ஒரே வழி.. எப்படின்னு பார்ப்போம். (தத்துவம் அறிவோம்)
- எழுத்து பிறந்த கதை
வணக்கம் செல்லக் குட்டீஸ் எழுத்துகள் எப்படி பிறந்தது என்று தெரியுமா? முதன்முதல்ல மனிதன் என்ன எழுதி இருப்பான்? அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்? எல்லாருக்கும் புரியற மாதிரி எழுத்துகள் எடுத்ததுமே உருவாகிடுச்சா? முதல்ல அது எப்படி இருந்தது? எப்படி இன்று இருக்கும் எழுத்துகளா மாறி இருக்கும்? இப்படி எல்லாம் யோசிச்சிருக்கீங்களா! அப்ப உங்களுக்காக தான் இந்தக் கதை. இத ருட்யார்ட் கிப்ளிங் அப்டிங்கற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் எழுதி இருக்காரு. அவர் ஆங்கில எழுத்தாளர் இல்லையா? அதனால ஆங்கில எழுத்துகள் எப்படி பிறந்தது அப்படிங்கறத கதையா எழுதி இருக்காரு. அந்தக் கதைய எழுத்தாளர் கோகிலா, தமிழில் மொழிபெயர்த்து கொடுத்திருக்காங்க. இப்ப மாதிரியே அப்பவும் வெவ்வேறு இனக் குழுக்களுக்கு வேற வேற மொழி இருந்திருக்கு. அதாவது அவங்க எழுப்பும் வித்தியாசமான ஓலிகள். ஒரு குழு பேசற மொழி இன்னொரு குழுவுக்கு புரியாது. அப்ப எல்லாருக்கும் புரியற மாதிரி ஓவியங்கள் வரைஞ்சு காட்டினால் எப்படி இருக்கும்! அந்த ஓவியங்கள் தான் பின்னாடி எழுத்துகளாக மாறி இருக்கும் இல்லையா! என்ன என்ன எழுத்துகள் எப்படி உருவாச்சு அப்படின்னு ரொம்ப சுவாரஸ்யமா எழுதி இருக்காங்க. இந்த புத்தகத்தை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.. எழுத்து உருவான வரலாறு தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்தீங்கன்னா இந்த புத்தகம் உங்களுக்கு தான். ராஜலட்சுமி நாராயணசாமி
- பேசும் கடல்
கடல் பாட்டியிடம் பேசும் போது நேரம் போவதே தெரியவில்லை என்று சொல்லுமளவுக்கு பாட்டிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கேள்வி பதில் தொடர்ந்து கொண்டே இருந்தன. இப்போது அவர்களின் அப்பாவிடமும் நிறைய கேள்வி கேட்க தொடங்கினர். "அப்பா ........அப்பா நீங்கள் எப்பவும் வெற்றிலை போட்டுக்கிட்டே இருக்கீங்கல உங்களுக்கு வாய் வலிக்காதா?" என்று அமுதா தன் அப்பாவின் மீசையை தடவிக் கொண்டே கேட்டாள். "ஆமாம்....... அப்பா! நானும் இதை கேட்க நினைத்தேன் " இனியனும் இணைந்து கேட்டான். "இரண்டு பேரும் கடல் பாட்டிகிட்ட கேள்வி கேட்டது போய் என்னிடம்மா.....? சரி சொல்றேன்" என்று சிரித்தார் அப்பா. ஆர்வத்தோடு இருவரும் கேட்கத் துணிந்தனர். " கடல்ல மீன் பிடிக்க அதிகாலை 2 மணி மூன்று மணி என்று நேரம் காலம் பாராமல் செல்வோம். காலநிலைக்கு ஏற்றார் போல், காற்றின் திசைக்கும், கடலின் நீரோட்டத்திற்கும் ஏற்றார் போல் தொழில் செய்யும் நேரம், காலம் எல்லாம் மாறுபடும். ஒரே சீரான நேரத்தில் கடல் தொழில் செய்வோம் என்று சொல்ல முடியாது. கடல் தொழில் செய்பவர்களுக்கு மூன்று பெரும் சிக்கல்கள் உருவாகும். "........ என்று சொல்லியவர் ஒரு கணம் நிறுத்தினார். தன் வாயிலிருந்து வெற்றிலை எச்சிலை துப்புவதற்கு எழுந்து போனார். "மூன்று சிக்கல்கள் என்னப்பா ........." அமுதாவும், இனியனும் அவசர அவசரமாக அப்பாவிடம் கேட்டார்கள். " பசி, தூக்கம் ,கடும் குளிர் இவை மூன்று கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். இவை மூன்றுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு தான்" " அப்பா என்னப்பா சொல்றீங்க ......" இனியன் அப்பாவின் உணர்வோடு இணைந்தான். " ........சாமத்துல இரண்டு மணிக்கு போனால் 12 மணி நேரம் கழித்து தான் திரும்ப கரை வர முடியும். அதுவரை கடல் தண்ணீரிலேயே இருப்பது நிலத்தில் இருப்பது போல் எளிதானது அல்ல. முதலில் கடும் குளிர், பனி காலங்களில் வெற்றிலை போட்டால் குளிர் நம்மை தாக்கும் உணர்வே தெரியாது. நாவும் , பற்களும் மரத்து போகும்" என்று அப்பா சொல்வதைக் கேட்ட குழந்தைகள் அவரைக் கனிவுடன் பார்த்தனர். I love you அப்பா " என்று அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அமுதா . இனியன் அப்பாவின் முதுகை கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்பாவின் முகத்தில் புன்னகை பூத்தது. அவர் தொடர்ந்தார்..... "நீண்ட நேரம் வெற்றிலையை மென்றுகொண்டே, வாயில் ஒதுக்கி வைப்பதால் பசியும் எடுக்காது தூக்கமும் வராது . கடலில் பயணிக்கும் போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், எப்போது அலை உயர்ந்து எழும் என்று தெரியாது. வெற்றிலையை வாயில் ஒதுக்கி வைத்து மென்று கொண்டே இருந்தால் தூக்கமும் வராது, பசியும் இராது, குளிர் காற்றும் தாக்காது" என்று தன் தோளில் சாய்ந்து கேட்டுக்கொண்ட பிள்ளைகளின் தலையை தடவினார் அப்பா . அண்ணே..... அண்ணே சோளக்காற்று, கச்சான்காற்று, வாடைக்காற்று எதுவும் நம்ம அப்பாவை தாக்காமல் இருக்கணும்னா கொஞ்சம் வெற்றிலை போட்டாலே போதுமா? என்று அமுதா இனியனிடம் கூறினாள். " ஆமாம் அமுதா ஆனால் எல்லோரும் புகையிலை சேர்த்து போடுறாங்களே அதான் கவலையா இருக்கு....." " தம்பி இனியா..... புகையிலை போடுறது தப்புதான் ஆனால் அந்த குளிரை தாங்க கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறார்கள்". தாழ்ந்த குரலில் பேசினார் அப்பா. அவரும் புகையிலை போடுவார். அதைக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள். "அமுதா.... காற்றுக்கு பெயரிடும் மீனவர்கள் அந்த காற்றை எதிர்கொள்ள கண்டுபிடித்தது தான் வெற்றிலை பாக்கு போல." " ஆமாம் அண்ணே, எனக்கு வெற்றிலை போடும் நபர்களை பார்த்தாலே பிடிக்காது. ஆனால் இப்போதான் தெரியுது, ஒரு இலைக்குப் பின்னால் இவ்வளவு சோகமா? " என்று அமுதா இப்போது பொறுப்பாக பேசினாள் . ஓங்கி அடித்த அலை அமுதாவின் கால்நினைத்து சென்றது. " இன்னைக்கு உங்க அப்பா கிட்டயே இருந்துட்டீங்க, என்கிட்ட வரலையா? ” என்று கடல்பாட்டி சிரித்துக்கொண்டே கேட்டார். ” ஆமாம் பாட்டி ! அப்பா வெற்றிலை போடுவது பற்றி பேசினார்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம் .” என்று சேர்ந்த குரலில் சொன்னார்கள். "அது சரி.... உங்களுக்கு இன்னொன்னு சொல்லட்டுமா இதுநாள் வரை கடல் தொழில் செய்யும் மீனவர்கள் கடலில் மது அருந்துவது கிடையாது. அதுதான் அவங்க எனக்குத் தரும் மரியாதை" " அப்படியா !......." இருவரும் ஆச்சரியமாய் கேட்டார்கள். ” பாட்டி பாட்டி பாய் மரம்னா என்ன? ” என்று அமுதா கேட்டாள். ” சொல்றேன்........ கண்மணிகளே....” என்று சொன்ன பாட்டி மீண்டும் மறைந்து போனார். ( கடல் பேசும் )
- பூச்சி இறால் தெரியுமா?
மீன் சந்தைகளில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். சற்றே வித்தியாசமான உடலுடன் கொஞ்சம் இறால் போலவே இருக்கும் இந்த உயிரி "பூச்சி இறால்" என்று மீனவர்களால் அழைக்கப்படுகிறது. இறால் என்று பெயர் இருந்தாலும் இது இறால் இனம் அல்ல. சிங்கிஇறால்கள், நண்டுகள், இறால்கள் எல்லாவற்றுக்கும் ஒரு தூரத்து உறவினர் என்று சொல்லலாம். சிறு கடல் புழுக்கள், கணவாய்கள், சிப்பிகள், மீன்கள் போன்றவற்றை இவை வேட்டையாடி சாப்பிடும். ஆங்கிலத்தில் இதன் பெயர் Mantis shrimp. Praying Mantis என்ற ஒரு வகை பூச்சி இருக்கிறது, தெரியுமா? இது தமிழில் கும்பிடு பூச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூச்சியைப் போலவே முன்னால் இருக்கும் கைகளை வைத்து வேட்டையாடுவதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். அறிவியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதற்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் என்ன தெரியுமா? "கட்டைவிரல் நறுக்கி". சரியாகக் கையாளாவிட்டால் இது நம்மைக் காயப்படுத்திவிடும் பலம் கொண்டது. அதென்ன அப்படிப்பட்ட பலம்??? ஒருமுறை இது தாக்கும்போது 1500 நியூட்டன் விசை இருக்குமாம்! ஒரு திறமையான பாக்ஸிங் வீரர் பலத்தைத் திரட்டி ஓங்கி ஒரு குத்துவிட்டால் எவ்வளவு வலுவாக இருக்குமோ, அவ்வளவு வலு! இவ்வளவு வலுவும் குறைவான வேகத்தில் வருவதில்லை. ஒரு நொடிக்கு 23 மீட்டர் வேகம், அதாவது மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் இந்தத் தாக்குதல் நிகழும்! இந்தப் பூச்சி இறால்களுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. இவற்றின் பார்வைத்திறனும் அலாதியானது. கிட்டத்தட்ட மனிதர்களோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு இவை பார்வைத்திறன் கொண்டவை. சில பூச்சி இறால் வகைகள் உணவாகப் பயன்படுகின்றன. சில இனங்கள் அழகுக்காக மீன்தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.
- வளரிளம் புதிர்ப்பருவம்-4
திடீரென தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. தீவிபத்து ஏதும் இருக்காது. பயிற்சிக்காக இருக்கலாம் என்று ஆசிரியர், காவலர்களிடம் சொல்கிறார். ஆனாலும் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மாணவர்கள் அனைவரும் வரிசையாக, விரைவாக மைதானத்திற்குச் செல்லுங்கள் என்று சொல்கிறார். எல்லா வகுப்பறைகளிலும் இருந்து மாணவ மாணவியர் வரிசையாக மைதானத்திற்குச் செல்கிறார்கள். ஆங்காங்கே ஆசிரியர்கள் நின்று நெறிப்படுத்துகிறார்கள். மைதானத்திற்கு அருகே காவல்துறை அலுவலர் பாஸ்கம் ஜேமியின் வகுப்பாசிரியரைப் பார்க்கிறார். அவரோடு பேச முயல்கிறார். நான் ஓர் ஆசிரியர். எனக்கு வேறு எதுவும் தெரியாது. இவர்களை என்னால் சமாளிக்கவே முடியவில்லை என்று சொல்லிச் செல்கிறார். மைதானத்தில் ஒவ்வொரு வகுப்பாக வரிசையாக நிற்கிறார்கள். ஜேட், ரயானைப் பார்க்கிறாள். கோபம் அதிகமாகிறது. "என் தோழியை ஏன் கொன்றாய்?" என்று கத்திக் கொண்டே ரயானைக் கண்டபடி அடிக்கத் தொடங்குகிறாள். மாணவர் பலரும் சுற்றி நின்று ஆரவாரம் செய்கிறார்கள். ஆசிரியர்களும் காவலர்களும் அங்கே விரைகிறார்கள். 'ஒரு பொண்ணு இவனை அடிச்சிட்டா...' என்று ஒரு சிறுவன் கேலி செய்கிறான். ரயானுக்கு லேசான ரத்தக் காயம். அவனை முதலுதவி அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். பாஸ்கம் அங்கே சென்று அவனோடு பேச விரும்புகிறார். தீவிபத்து ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு அனைவரும் வகுப்பறைகளுக்குத் திரும்புகிறார்கள். மாணவ, மாணவியர் செல்பேசியை வைத்துப் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். பாஸ்கமை அழைத்துச் செல்லும் ஆசிரியை அவர்களைப் பார்க்கிறார். "எல்லோரும் வகுப்புக்குப் போங்க!" என்று சொல்லியபடியே செல்கிறார். செல்பேசி வைத்திருந்த சிறுவன், " வாயை மூடுங்க மிஸ்!" என்று சொல்கிறான். சற்று தூரத்திலிருந்து அந்த ஆசிரியை, 'என்ன சொல்ற?' என்ற தொனியில் சத்தமாகக் கேட்டபடியே செல்கிறார். குழந்தைகள் தங்கள் மனதில் தோன்றிய எதை வேண்டுமானாலும் அப்படியே ஆசிரியரிடம் சொல்லலாமா? மாணவர்கள் வகுப்பறையில், பள்ளி வளாகத்தில் ஆசிரியரைக் கேலி செய்கிறார்கள். சுற்றிச் சுற்றி ஆடுகிறார்கள். ஆசிரியரோடு வாக்குவாதம் செய்கிறார்கள். அவை காணொலிகளாக வெளிவருகின்றன. மாநிலம் முழுவதும் மாணவர்கள் அப்படித்தான் என்று பலரும் பேசுகிறார்கள். உடனே நீதிநெறி வகுப்புகள் வேண்டும் என்று பலரும் குரல் எழுப்புகிறார்கள். இவை ஒவ்வொன்றும் பல்வேறு தளங்களில் கலந்துரையாட வேண்டியவை. சமூகத்தில் மனிதர் கூடும் இடங்கள் எல்லாமே சத்தமும் இரைச்சலும் நிறைந்தவை. பள்ளிக் கூடங்கள் பெரும்பாலும் சத்தத்திற்கு எதிரானவை. மாணவர்கள் அமைதியாக இருக்கும் வகுப்பறையே சிறந்தது. வகுப்பறையை அமைதியாக வைத்திருப்பவரே சிறந்த ஆசிரியர். ஆசிரியருடன் அல்லது வயதில் மூத்தவருடன் பணிவுடன் பேச வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு. சமூகத்தில் பெரும்பாலும் நீங்கிக் கொண்டே இருக்கும் அறங்கள் அனைத்தையும் பள்ளி தான் வளர்க்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்துக் கொண்டோம். குழந்தைகள் தன்னைவிட மூத்தவருடன் பேச விரும்புகிறார்கள். அவர்களின் குரலைக் கேட்கும் மூத்தவர் மீது ஆர்வமும் அன்பும் காட்டுகிறார்கள். அத்தகைய ஆசிரியர் நுழைந்ததும் வகுப்பறை கலகலப்பாக மாறுகிறது. குழந்தைகள் அனைவரும் பேச விரும்புவதால் எழும் சத்தத்தைக் கலந்துரையாடலாக மாற்றும் உத்திகளே குழந்தை நேய ஆசிரியருக்குத் தேவை. இது குறித்த கலந்துரையாடல்கள் மிகவும் அவசியம். மிகவும் அவசரம். பாஸ்கம், ரயானுடன் பேச முயல்கிறார். 'உன்னுடைய கண் வீங்கப் போகுது என்று நினைக்கிறேன்.' என்று தொடங்குகிறார். ரயானும் ஆமாம் என்கிறான். சின்ன வயசுல என்னுடைய கண்ணை வீங்க வைக்கணும்னு ஆசையா இருந்துச்சு. ஒரு இடத்தில் வேணும்னே இடிச்சுக்கிட்டேன் என்று பாஸ்கம் சொல்கிறார். 'உண்மையாகவா!' என்று ரயான் கேட்கிறான். ஆமாம், ஓரளவு. அப்போ நான் உன்னைவிடச் சின்னப் பையன். ஒன்பது வயது. பல் விழுந்து பார்க்கவே ஒரு மாதிரியா இருப்பேன். எனக்கு ஒரு கெளபாய் போல இருக்கணும்னு ஆசை என்று பாஸ்கம் சொல்கிறார். "அப்போ நீங்க புகழோடு இருந்திருப்பீங்க!" என்று ரயான் சொல்கிறான். "ஆமாம். உனக்கு புகழ் முக்கியமா ரயான்?" என்று பாஸ்கம் கேட்கிறார். "ஆமாம். கண்டிப்பா. டாமி கிட்டேயும் நீங்க பேசுனீங்க என்று அவன் சொன்னான். அவங்க அப்பா சொன்னதால் அவன் எதுவும் பேசவே மாட்டான்." என்று ரயான் சொல்கிறான். "நீங்க உண்மையாகவே புகழ் பெற்றவரா இருந்தீங்களா? அதுவும் பொண்ணுங்க கிட்டே?" என்று ரயான் கேட்கிறான். பாஸ்கம் ' ஆமாம்' என்று சொல்கிறார். புகழை, பாராட்டை அனைவரும் விரும்புகிறோம். கடமையைச் செய்தாலும் யாராவது பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பாராட்டைத்தான் அங்கீகாரம் என்று மனம் எதிர்பார்த்து ஏங்குகிறது. ஏதாவது ஒன்றிலாவது சிறந்தவர் என்ற பெருமை வேண்டும் என்று மனம் விரும்புகிறது. எந்தக் காரணமும் இல்லை என்றாலும் இங்குதான் சாதி, மதம் போன்றவை பெருமிதமாக மாறுகின்றன. ரயானின் போக்கிலேயே பேச்சை வளர்க்கிறார், பாஸ்கம். "ரயான், உன்னால் தான் எனக்கு உதவ முடியும். கேட்டி கொலைக்கான காரணம் என்ன?" என்று பாஸ்கம் கேட்கத் தொடங்குகிறார். ரயான் சுதாரிக்கிறான். பேசுவதை நிறுத்துகிறான். முதலுதவி அறையிலிருந்து வெளியேறுகிறான். பாஸ்கம் அவனைப் பின்தொடர்கிறார். ( தொடரும் )
- லண்டனிலிருந்து அன்புடன் - 5
க்ரெஃபல்லோவின் பிள்ளை சென்ற பதிவில் க்ரெஃபல்லோ என்ற அட்டகாசமான கதையைப் பார்த்தோம். இந்தப்பதிவில் அதன் தொடர்ச்சியான “க்ரெஃபல்லோவின் பிள்ளை” கதையைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள். க்ரெஃபல்லோ கதையில் எலி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அது கற்பனையில் உருவாக்கிய க்ரெஃபல்லோ இறுதியில் உண்மையில் வந்துவிடும் அல்லவா? இந்தக்கதையில் க்ரெஃபல்லோவும் அதன் பிள்ளையான குட்டி க்ரெஃபல்லோவும் முக்கியகதாபாத்திரங்கள். ஆனால், குட்டி க்ரெஃபல்லோ எலியை நேரில் பார்த்திருக்காது. “எலி ஒரு பயங்கரமான விலங்கு. அது நம்மைச் சாப்பிட்டுவிடும். அதனால் காட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது” என்று சொன்னது க்ரெஃபல்லோ. அதனால், எலி மிகப் பெரிய பயங்கரமான விலங்கு என்று நினைத்தது குட்டி க்ரெஃபல்லோ. இருந்தும் ஒரு பனிக்காலத்தில், குட்டி க்ரெஃபல்லோ காட்டைவிட்டு வெளியே செல்லும். போகும் வழியில் க்ரெஃபல்லோ கதையில் வந்த பாம்பு, நரி, ஆந்தை ஆகிய கதாபாத்திரங்களைச் சந்திக்கும். எலி பற்றி அப்பா சொன்ன அடையாளம் ஒவ்வொரு விலங்கிடமும் ஏதாவது இருக்கும். அதனால் ஒவ்வொரு விலங்கிடமும், “நீ தான் அந்தபயங்கரமான எலியோ?” என்று சந்தேகமாகக் கேட்கும். அது எலி இல்லை என்று தெரிந்ததும் அங்கிருந்து விலகும். இறுதியில் எலியைச் சந்திக்கும். எலி தம்மாத்துண்டு இருக்கும் அல்லவா? அதனால் குட்டி க்ரெஃபல்லோ எலியைச் சாப்பிடுவதற்காகப் பிடித்துவிடும். அதன் பிறகு எலி எப்படித் தப்பித்தது, குட்டி க்ரெஃபல்லோ எப்படி அப்பாவிடம் சென்றது என்பதுதான் கதை. இந்த குட்டிக் கதையை நான் 1.5 மணி நேர நாடகமாகப் பார்த்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அதுவும் திரையரங்கில் சென்று பார்த்தேன். திரையரங்கு நாடகம் என்றால், அதில் வெறும் வசனங்கள் மட்டும் இருக்காது. பின்னணி இசை மற்றும் பாடலும் உண்டு. பார்வையாளர்களும் சேர்ந்து பாடுவது போன்று பாடலை அமைத்திருந்தார்கள். நாடகம் என்றால் மேடை வடிவமைப்பு முக்கியம் அல்லவா. பெரிய காட்டையே மேடையில் உருவாக்கியிருந்தார்கள், அதுவும் கதையில் பனிக்காலம் வரும் காட்சியில், மேடையில் பனிப்பொழிவு வருவது போல அழகாக வடிவமைப்புச் செய்திருந்தார்கள். காட்சிகளுக்குத் தகுந்தாற்போல் அவற்றை மாற்றியும் அமைப்பார்கள். ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் உண்டான் மேடையைத் திரை போட்டு மறைக்காமலே மாற்றிவிடுவார்கள். க்ரெஃபல்லோ பெரிய உருவம், எளிமையாக வேடம் போட்டுவிடலாம். ஆனால், எலி, ஆந்தை, பாம்பு ஆகியவை சிறிய உருவம் அல்லவா? அதற்கு எப்படி வேடமிடுவார்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள். அதற்கு அவர்கள் பெரிய அளவிலான பொம்மைகளையா(puppets) பயன்படுத்தியிருந்தார்கள். ஒரு 32பக்க படக் கதையை இவ்வளவு அழகான நாடகமாக மாற்ற முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அழகான வடிவமைப்பு, பின்னணி இசை, பாடல், ஒப்பனை என ஒவ்வொன்றையும் குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் செய்திருந்தார்கள். குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள்கூட அங்குக் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். இந்த கதையை நான் புத்தகமாகப் படித்திருக்கிறேன், 30 நிமிட திரைப்படமாகவும், 1.5 மணி நேர நாடகமாகவும் பார்த்தேன். அதுமட்டுமல்ல, கேளிக்கைப் பூங்காவில் Amusement ride ஆகவும் சென்றிருக்கிறேன். ஆமாம் செல்லங்களா! லண்டனில் குழந்தைகளுடன் செல்லக்கூடிய எந்த ஒரு இடமாக இருந்தாலும் சரி! அது அருங்காட்சியகமாக இருக்கலாம், அறிவியல் கண்காட்சியாக இருக்கலாம், பூங்காவாக இருக்கலாம், திருவிழா-பொருட்காட்சி-கேளிக்கைப் பூங்கா போன்ற இடமாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதில் குழந்தைகள் புத்தகத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். அதனால்தான், யாராவது என்னிடம் வந்து, “லண்டனில் ரொம்ப பிடித்த விசயம் என்ன?” என்று கேட்டால், “குழந்தைகளுக்கான புத்தகம்” என்று சற்றும் யோசிக்காமல் சொல்லிவிடுவேன். என்ன நான் சொல்வது சரிதானே!
- உலகை மாற்றச் சொன்ன மார்க்ஸ்
ஜோ : வணக்கம் செல்லக்குட்டிகளா! இன்னைக்கு நாம பார்க்கப் போற ஆளுமை கார்ல் மார்க்ஸ். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நகுலன்: நான் ஒரு புத்தகத்தில் அவருடைய புகைப்படத்தைப் பார்த்தேன். அவர் பெரிய தாடியுடன் கம்பீரமாக இருந்தார். ரதி: இந்த உலகத்தில் எல்லோரும் சமமா வாழனும்னு சொன்னவர்னு என்னோட அண்ணன் சொல்லியிருக்கார். ஜோ: வாவ்! அருமை. பரவாயில்லையே, அவரைப் பத்தித் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே! சரி, இன்னிக்கு நாம இன்னும் கொஞ்சம் அவர் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? மார்க்ஸ் ஜெர்மனியில் 1818-ல் பிறந்தவர். அவரோட தந்தை ஒரு வழக்கறிஞர். சின்ன வயசுல இருந்தே மார்க்ஸ் புத்தகங்களைத் தான் நண்பனாக வைத்துக்கொண்டார். அவர் ஒரு வலிமையான அறிவாற்றல் கொண்ட மாணவன். கல்யாணம் ஆயிடுச்சு. அவரோட மனைவி பெயர் ஜென்னி… . அவங்களுக்கு ஏழு குழந்தைங்க. ஆனா சில குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துட்டாங்க. அவர்கள் குடும்பம் பெரும்பாலான நேரங்களில் வறுமையிலே வாழ்ந்தாங்க.. ஆனால் அதை எல்லாம் மார்க்ஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஏழை எளிய மனிதர்களின் துயரங்களுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக அத்தனை நூல்களை வாசித்தார். அவர் ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர், புரட்சியாளர் மட்டுமல்ல தத்துவவாதியும் கூட. நகுலன்: அவங்க போராடினாரா ? ஜோ: நிறையப் போராடி இருக்கிறாரு. சாதாரணமான ஏழை எளிய தொழிலாளர்களுக்காக தன்னுடைய வாழ்நாளையே அர்ப்பணித்தவர். அவருடைய எழுத்துக்கள் சிந்தனைகள் இன்றும் உலகம் முழுவதும் பல பெரிய போராட்டங்களை தூண்டி விடுகின்றது. அவர் சொன்ன முக்கியமான கருத்து எல்லா மனிதர்களும் சமமாக வாழ வேண்டும் என்பதுதான். ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே உள்ள பெரிய வேறுபாட்டிற்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக சொன்னவர். நகுலன்: மார்க்ஸ் எதாவது புத்தகம் எழுதியிருக்காரா அத்தை,? ஜோ: எழுதியிருக்காரு. ரொம்ப முக்கியமான புத்தகம் – "தாஸ் காப்பிட்டல்" (Das Kapital). தமிழில் மூலதனம் என்ற பெயரில் வெளிவந்து இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக அவர் 1700 புத்தகங்களை ஆய்வு செய்தார். அதில் பொருளாதாரம், தொழிலாளர்களின் நிலை, பணம் ஒரே இடத்தில் எப்படி குவிகிறது.. உழைப்பாளிகள் எப்போதும் ஏன் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம் என்ன? இந்த நிலைமை மாற என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றியும் எழுதி இருக்காரு.. . ரதி: அது எங்கள மாதிரி பசங்க படிக்க முடியுமா அத்தை? ஜோ : நீங்க படிக்கலாம். புரியறது கொஞ்சம் சிரமமா இருக்கும்.உதாரணமாக — ஒரு தொழிலாளி ஒரு நாள் முழுக்க வேலை செய்கிறார். ஆனா அவருக்குச் சம்பளம் குறைவா இருக்கு. அவங்க உழைச்சதை வைத்து முதலாளி அதிகச் செல்வம் சேர்க்கிறாரு. இது நியாயமா? நகுலன்: இல்லையே! எங்க வீட்டில் அப்பா அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. ஆனா கூட எங்க வீட்டில் எல்லாம் வாங்க முடியாது. அதுவும் இதே மாதிரி தானே? ஜோ: அப்படித்தான் நகுலா. அருமையா புரிஞ்சுக்கிட்டையே. மார்க்ஸ் சொல்றது இதைத்தான்.தொழிலாளிகளே உண்மையிலேயே உலகத்தை நடத்துறவங்க. அவங்க முக்கியமானவங்க. அவங்களுக்கு உரிய மதிப்பு, சம்பளம், உரிமைகள் இருக்கணும் அப்படின்னு நினைச்சாரு. நகுலன் : அவர் எங்க வேலை பார்த்தாரு? அவர் ஒரு ஆசிரியரா? ஜோ : நல்ல கேள்வி! மார்க்ஸ் தன் வாழ்நாளில் பல வேலைகளை செய்தார். சில நேரங்களில் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்தார். பல முக்கியமான பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் நிரந்தரமாக வேலை பார்த்தவரல்ல. வாழ்நாள் முழுவதும் உலகை மாற்றுவதற்காகத் தன்னுடைய சிந்தனையைச் செலவழித்தார்.. வறுமை, சுரண்டல், பசி, அறியாமை, இல்லாத ஒரு பொன்னுலகத்தை எப்படி உருவாக்குவது என்று சிந்தித்து எழுதினார். அதனால் தான் இந்த உலகிலுள்ள தத்துவ வாதிகள் எல்லோரும் இந்த உலகத்தில் நிலவிய ஏற்ற தாழ்வுகளுக்கு விளக்கம் மட்டுமே சொன்னார்கள்.. ஆனால் மார்க்ஸ் ஒருவர் தான் இந்த உலகத்தை மாற்ற முடியும். ஏற்ற தாழ்வுகளில்லாத சமத்துவ உலகத்தை உருவாக்கமுடியும் என்று அறிவியல்பூர்வமாகச் சொன்னவர்.. ரதி: மார்க்ஸ் அரசியலில் இருந்தாராங்க அத்தை? ஜோ:. அவர் நேரடியாக அரசியல் களத்தில் இல்லை. ஆனா அவர் சிந்தனைகள் அரசியல் தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவரோட நண்பர் எங்கல்ஸ் உடன் சேர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதினாரு.. இன்றும் உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் புத்தகம் அது.. நகுலன்: அப்படி என்ன அந்தப் புத்தகத்தில் இருக்கிறது அத்தை? ஜோ: அது ஒரு சிறிய புத்தகம் தான். அதில், உலகம் எப்படி இருக்கிறது? அது எப்படி மாற்றப்படவேண்டும், பொதுவுடமைச் சமூகம் எப்படி இருக்கும் என்று சொல்றாங்க. அதில் உள்ள ஒரு முக்கியமான வாசகம் – "உலகத் தொழிலாளிகளே, ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை கை விலங்குகளைத் தவிர எதிரில் இருப்பதோ பொன்னுலகம் " ரதி: அத்தை! இப்போ எங்கெல்லாம் அவரோட பொதுவுடமைச்சிந்தனை இருக்குது? ஜோ: மிகவும் முக்கியமான கேள்வி! உலகம் முழுவதும் பொதுவுடமைக் கட்சிகள் இருக்கின்றன.. அவரது சிந்தனைகளைப் பின்பற்றி பொதுவுடமை ஆட்சியை உலகின் பல நாடுகள் நடத்தி வருகின்றன. உதாரணமாக சீனா, வியட்நாம், கியூபா, வட கொரியா, இலங்கை, வெனிசுலா மற்றும் சில தென்னமெரிக்க நாடுகளிலும் பொதுவுடமை ஆட்சி நடக்கிறது. . நகுலன்: மார்க்ஸ் சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு இருந்துச்சாங்க அத்தை? ஜோ: அவர் வாழ்ந்த காலத்தில் அவர் சொன்ன கருத்துகளுக்காக வேலைகளில இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கும் அவருடைய குடும்பத்தாரும் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடினர். அந்த நேரத்தில் அவருடை உற்ற தோழர் ஏங்கெல்ஸ் தான் உதவி செய்தார்.. ஏங்கெல்ஸ் இல்லை என்றால் மார்க்ஸால் மூலதனம் நூலை எழுதி இருக்கவே முடியாது என்று சொல்வார்கள்.. அதனால் தான் மார்க்ஸ் தொடர்ந்து எழுதுவதையும் சிந்திப்பதையும் நிறுத்தல. அவர் ஜெர்மனியில் பிறந்தாலும் பல நாடுகளுக்குத் துரத்தப்பட்டார்.. பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து. அவர் இறந்தது கூட லண்டனில் தான். ரதி: அவரைப் போல நாம் சிந்திக்க முடியுமா? ஜோ : நிச்சயமாக! அதற்கு முதல் பாடம் எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும்.. இப்போது நாம் வாழும் சமூகம் எப்படி இப்படி சாதி, மதம், இனம், மொழி என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது? அனைவருக்குமான கல்வி, உரிமை, சமவாய்ப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், சுருக்கமாகச் சொன்னால் எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்கவேண்டும்.. எப்படி? என்று கேள்விகளின் பின்னால் சென்று ஆய்வு செய்யும்போது நாமும் நிறைய வாசிக்கவும் யோசிக்கவும் முடியும்.. நகுலன்: ரதி நாம் நாளை அவரைப் பற்றி ஓர் பாடல் எழுதலாமா? ஜோ: அதுவும் அருமை நகுலா! நீ பாடல் எழுது. ரதி நீ அவரைப் பற்றிக் கட்டுரை எழுதேன்? ரதி: சரிங்க அத்தை! “மார்க்ஸும் சமத்துவமும்”ன்னு தலைப்பா வைக்கலாமா? ஜோ: ஆகா! நல்ல தலைப்பு! நீங்க ரெண்டு பேரும் பாடலையும் கட்டுரையையும் எடுத்துட்டு வந்து அத்தை கிட்ட காமிக்கப் போறீங்க சரியா? நகுலன், ரதி : சரிங்க அத்தை கண்டிப்பாகச் செய்றோம்! வாழ்க சமத்துவம்! வாழ்க சமூக நீதி!
- சூரியன் மாமா - ராணி குணசீலி
சூரியன் மாமா சூரியன் மாமா சூடா இருக்கீங்க நானே செய்த மேங்கோ ஐஸ்கிரீம் சாப்பிட தரட்டுமா.? சூரியன் மாமா சூரியன் மாமா அனலா இருக்கீங்க நானே செய்த ரோஸ் மில்க் கொஞ்சம் குடிக்க தரட்டுமா.? சூரியன் மாமா சூரியன் மாமா வெயிலில் இருக்கீங்க நானே செய்த குல்பி ஐஸ் சாப்பிட தரட்டுமா ஆகா ஆகா நிறைய தந்தா விரும்பி உண்பேனே. குளுகுளு குளுன்னு ஆவேன் குட்டிசெல்லம் உன்னாலே












