top of page

இயலில் தேடலாம்!

268 results found with an empty search

  • காலப்பெட்டகம்

    அழ.வள்ளியப்பா குழந்தைப்பாடல்கள் மியாவ் மியாவ் பூனையார் மியாவ் மியாவ் பூனையார்  மீசைக் காரப் பூனையார். ஆளில் லாத வேளையில்  அடுக்க ளைக்குள் செல்லுவார் பால் இருக்கும் சட்டியைப்  பார்த்துக் காலி பண்ணுவார் மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார்.  இரவில் எல்லாம் சுற்றுவார்.  எலிகள் வேட்டை ஆடுவார் . பரணியில் ஏறிக் கொள்ளுவார் . பகலில் அங்கே தூங்குவார்.  மியாவ் மியாவ் பூனையார்.  மீசைக் காரப் பூனையார். மெல்ல மெல்லச் செல்லுவார்.  மேலும் கீழும் தாவுவார். 'ளொள்ளொள்' சத்தம் கேட்டதும் நொடியில் ஓடிப் பதுங்குவார்.  மியாவ் மியாவ் பூனையார்.  மீசைக் காரப் பூனையார். நேரு தந்த யானை டில்லிக்குப் போனேன்,  நேருவைப் பார்த்தேன், ' சல்யூட்' செய்தேன்.  சாக்லேட் தந்தார். என்னடா கண்ணு  ஏதடா வேணும்?  சொன்னால் தருவேன்.  சொல்வாய்' என்றார். 'அன்புள்ள மாமா,  அவசியம் வேணும்,  சின்னதாய் யானை  சீக்கிரம் தருவீர்' என்றேன். காகிதம் எடுத்தார் உடனே என்னவோ அதிலே  எழுதிக் கொடுத்தார். பார்த்தேன் அதையே.  படத்தில் யானை!  பார்த்தேன் அவரை.  பக்கெனச் சிரித்தார். 'யானைநீ கேட்டாய்.  அன்புடன் தந்தேன்.  தீனியே வேண்டாம்.  செலவுமே இல்லை. அடக்கமா யிருக்கும்.  அங்குசம் வேண்டாம்.  மடித்துநீ பைக்குள்  வைத்திடு' என்றார். ஜோர் ஜோர் யானை! ஷோக்கான யானை!  யார்தான் தருவார்  இதுபோல் யானை? தலைவர் தந்தார்  தங்கக் கையால்,  விலைக்கா வேண்டும்?  விற்கவே மாட்டேன்!

  • அறிவோ ஆளுமை -8

    நகுலன் : தென்னைமரத்தில் ஏறலாம். தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம். மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம், புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம். நெல்லிக் காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால், வழுக்கி வழுக்கி விழுகலாம் ! வழுக்கி வழுக்கி விழுகலாம்! ரதி :  அடடே! நகுலா! இது நம்ம சின்னப் பிள்ளையா இருக்கும் போது பாடுனது. அப்படியே ஞாபகம் வச்சிருக்கே? நகுலன்: ஆம்! இன்னும் ஒரு பாடல் இருக்கே! மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,  சேலத்து மாம்பழம். ரதி : நிறுத்துனதுக்கு அடுத்து மீதிய நான் பாடுறேன்.  அழகான மாம்பழம் அல்வா போன்ற மாம்பழம். தங்க நிற மாம்பழம்  உங்களுக்கு வேண்டுமா? இங்கே ஓடி வாருங்கள்  பங்கு போட்டுத் தின்னலாம். எப்படி எங்களுக்கும் ஞாபகம் இருக்குல்ல! ஜோ : வாவ்! என் குட்டி பாடகர்கள் என்ன அருமையாகப் பாடுறீங்க! உங்க இருவருக்கும் இந்தப் பாடல்கள் யார் எழுதினார்னு தெரியுமா? ரதி: எனக்குத் தெரியாது அத்தை! ஆனா  புத்தகத்தில் அந்தப் பாடலுக்கு கீழே 'அழ' ன்னு போட்டிருக்கும்.  என்னவோ பெயர் வரும் மறந்துட்டது அத்தை. ஜோ : அழ. வள்ளியப்பா!  நகுலன்: ஆமா அத்தை எனக்குப் புத்தகத்தில் படித்தது ஞாபகம் வந்துருச்சு.  அழ. வள்ளியப்பா. ரதி :  அத்தை! அவரு இந்தப் பாட்டெல்லாம்  எங்கள மாதிரி சின்ன வயசா இருக்கும் போதே எழுதிட்டாரா? ஜோ : இந்தப் பாட்டெல்லாம் அவர் வளர்ந்து பெரியவர் ஆனதுக்கு அப்புறம்தான் எழுதினார். ஆனால், அவர் சிறுவயதிலிருந்தே பாடல் பாடும் திறமை பெற்றவர். எப்போதும் துருதுருவென்று சுறுசுறுப்பாக இருந்தவர். வீட்டில் சேட்டை செய்து எல்லாரையும் சிரிக்க வைப்பார்! ரதி: அப்படியா!  அப்போ நகுலனோட தம்பி வினய் மாதிரி அப்படின்னு சொல்றீங்க. அப்படித்தானே அத்தை! அவன் தான் எப்பப் பார்த்தாலும் ஏதோ ஒன்னு கிண்டல் பண்ணி பாட்டு பாடிக்கிட்டே எல்லாரையும் சிரிக்க வச்சுக்கிட்டே இருப்பான். நகுலன் :    ஏன் உன்ன மாதிரி கூட சொல்லலாமே நீயும் எப்பவும் எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டுத் தானே இருக்கே? ரதி :  நான் எப்ப கிண்டல் பண்ணினேன். யாரக் கிண்டல் பண்ணேன். ஏதாவது பேசினா எனக்குச் சரியான கோபம் வந்துரும் நகுலன்.  ஜோ:    சரி சரி உங்க சண்டையை விடுங்க.  நகுலன் :  சரி சரி நீ அப்படி எல்லாம் ஒன்னும் சண்டை போடல நல்ல பிள்ளைதான்.  அவர் எந்த ஊருங்க அத்தை? ஜோ : அவர் புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் என்ற ஊரில் 1922-ல் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். அவருடைய முதல் கதை “ஆளுக்கு பாதி” என்ற பெயரில் வெளியானது. நகுலன் :‌  என்ன வேலை செய்தார்? ஜோ : அவர் வங்கியில் வேலை பார்த்தார்.  அவர் குழந்தைகளுக்காக எத்தனையோ இதழ்களில் பணியாற்றினார். பாலர் மலர், டமாரம், சங்கு இதழ்களில் கௌரவ ஆசிரியராகவும், கோகுலம் இதழின் ஆசிரியராகவும் இருந்தார். ரதி: அப்படின்னா அவர் குழந்தைகளுக்காக மட்டும் தான் எழுதினாரா? ஜோ : ஆம்! அவர் குழந்தைகளின் நலனுக்காகவே வாழ்ந்தார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். எளிமையும் இனிமையும் குழந்தைகள் சுலபமாகப் பாடுவதற்கு ஏற்ற இசையுடன் கூடிய பாடல்கள்.  அதுமட்டுமல்ல. 1950-ல் “குழந்தை எழுத்தாளர் சங்கம்” என்ற சங்கத்தையும் தொடங்கினார். அதின் முதல் தலைவர் வை. கோவிந்தன். பிறகு வள்ளியப்பா தலைவராக ஆனார். குழந்தை  எழுத்தாளர் சங்கத்தின் மூலம்  ஏராளமான புதிய எழுத்தாளர்களை உருவாக்கினார். நகுலன் : அப்படியா! அத்தை. ஜோ : கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். 300 எழுத்தாளர்கள் அந்தச் சங்கத்தின் மூலம் உருவாகியிருக்கிறார்கள். ஒரு வருடத்தில் 200 புத்த கங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.  ரதி :   அடேயப்பா….அத்தை இப்பவும் அந்த சங்கம் இருக்கா?  ஜோ இப்போ இல்ல. ஆனா தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பு 2021 இல் தொடங்கப்பட்ட து.  தற்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறார் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறார் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராகவும் தலைவராகவும் எழுத்தாளர் உதயசங்கர் உள்ளார். செயலாளராக எழுத்தாளர்.சாலைசெல்வம் இருக்கிறார்.    நகுலன் : அத்தை நான் கூட எழுதலாமா?  ஜோ :  தாராளமாக எழுதலாம்! இன்று தமிழில் ஏராளமான குழந்தைகள் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  புத்தக ங்களும்  வெளியிட்டிருக்கிறார்கள். கதை சொல்லிகளாகவும் குழந்தைகள்  இருக்கிறார்கள்.  ரதி :  இரு நகுலன் அவரைப் பற்றி முழுவதும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். அத்தை, அவர் எழுதிய நூல்கள் எத்தனை? ஜோ : அவர் 50-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்! அதோடு தொகுத்தும், மொழிபெயர்த்தும், பதிப்பித்தும் இருக்கிறார். ரதி: அவருக்கு விருதுகள் கிடைத்ததா அத்தை? ஜோ: 1963-ல் லக்னோவில் நடந்த அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் பதக்கமும் பாராட்டும் பெற்றார். அதோடு குழந்தை இலக்கிய முன்னோடி, பிள்ளை கவியரசு, மழலைக் கவிச்சம்மல்உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். 1982-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அவரை “தமிழ் பேரவை செம்மல்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. ரதி : அருமை! அவரை சந்திக்கணும்னு தோணுது! ஜோ : அவர் இப்போது நம்மோடு இல்லை, இந்த ஆண்டு அவருடைய் 103 ஆவது பிறந்த நாள் நூற்றாண்டு. ஆனால் அவருடைய கதைகள், அவருடைய பாடல்கள் இருக்கின்றன.  நீங்க இப்போ பாடினீங்களே அந்தப் பாடல்கள் வழியே  அவர் நம்மோடு இருக்கிறார். நகுலன்: அப்படின்னா நாம் அவருடைய பாடல்களையும் கதைகளையும் மற்ற குழந்தைகளுக்குச் சொல்லணும்! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • சாக்கில் உட்கார்ந்து படித்து...

    அம்பேத்கர் சினிமாவிற்குப் பள்ளியில் அழைத்துச் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு வந்தான் மணி. ஒவ்வொரு காட்சியும் அவன்  முன் வந்து வந்து போனது. அம்பேத்கர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்.இல்லை அம்பேத்கர் நம் நாட்டிற்கு எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார். கஷ்டத்தை அனுபவித்து நல்லதை செய்துள்ளார். ஆம் அதனால்தான் அவரைப் பற்றி சினிமா எடுத்துள்ளார்கள். அதனால்தான் அந்த சினிமாவிற்கு மாணவர்களை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அது எப்படி நியாயம்?...மணியின் சிந்தனையை நிறுத்த முடியவில்லை.   ‘வகுப்பறைக்கு வெளியில் உட்கார்ந்து எப்படிப் படித்திருப்பார்? அவரை எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளார்கள். அதுவும் பள்ளிக் கூடத்தில். வாசப்படியில் உட்கார்ந்து, சாக்கின் மேல்... அவர் அறிவாளிதான். அந்த சாக்கின்மேல் உட்கார்ந்து படித்ததால்தான் அவருக்கு அவ்வளவு படிப்பு வந்திருக்குமோ?...மணியின் மனம் கேள்விகளாலும் சினிமா காட்சிகளாலும் நிறம்பியிருந்தது.       அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்தான். “எனக்கு ஒரு சாக்கு வேண்டும்.“ அம்மாவிடம் கேட்டான்.  “சாக்கா? சாக்கு எதற்கு?   சாக்கு போக்குன்னு சொல்லிகிட்டு...” என்றார் அம்மா.  அதன் மேல் உட்கார்ந்து படிக்க என்று சொன்னால் திட்டுவார்கள். என்பதால் சொல்லவில்லை.  “நம் வீட்டில் சாக்கு இருக்கிறதா இல்லையா?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டான் மணி.  “அது எதுக்குடா இந்த வீட்டுக்கு?  மாடு வைத்திருக்கும் வீட்டில்தான் சாக்கு இருக்கும். எங்க அம்மா வீட்டில் இருந்தது. இப்ப, அங்கயும் மாடு இல்லை. நெல் மூட்டை வைத்திருக்கும் வீட்டில் இருக்கலாம். இப்ப யார் வீட்டிலும் நெல்லுமில்ல. மாடுமில்ல...” என்றார் அம்மா.  “மாடு வைத்திருக்கும் வீட்டில் சாக்கை என்ன செய்வார்கள்?”  “சாக்கை வைத்து ஆயிரம் செய்யலாம். மாட்டுத்தீவனம் கொட்டி வைக்கலாம். மாடு கண்ணுகுட்டி போட்டா, குட்டியை பத்திரமா அதில் கிடத்தி வைக்கலாம். மாட்டுக் கொட்டாய்க்கும் வீட்டுக்கும் இடையில் உள்ள வாசப்படியில் மிதியடியாய் போடலாம். குளிரடிச்சா மாட்டுக்கு மறைவு கட்டலாம்...சாக்கை வைத்து இப்படிதான் எதையாவது செய்யலாம்.” என்றார் அம்மா.  “அம்மா, அம்பேத்கர் பென்ச் மீது உட்காராமல் சாக்கு மீது உட்கார்ந்து எப்படிப் படித்தார். என்பதைத் தெரிந்து கொள்வதற்குதான்.” என்றான் மணி.    அம்மா அமைதியாய் இருந்தார்.பின், “அவர் எஸ் சி. அதனால்தான், அதெல்லாம் செய்தாங்க. போ! உனக்கெதுக்கு அதெல்லாம் போய் படி.” என்று முடித்தார். அடுத்து அவனுக்குத் தோன்றிய கேள்வியைக் கேட்க அம்மா அனுமதிக்கவில்லை. மணி எழுந்து போய்விட்டான். தானே தனக்குள் கேட்டுக் கொண்டான். ‘பாடம் நடத்தியது அவர் காதில் விழுந்திருக்குமோ? விழவில்லையென்றால் என்ன செய்திருப்பார். தினம் தினம் வாசப்படியில்தான் உட்கார்ந்திருப்பாரா? அவர் உட்கார்ந்திருந்த சாக்கை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு போயிருப்பார்களோ? சாக்கை மிதிப்பது போல் அவருடைய கை கால்களை, நோட்டுப் புத்தகங்களை மிதித்திருக்கலாம். நோட்டு பென்சில்களை எட்டித் தள்ளியிருக்கலாம். ஆமாம் நிச்சயமாக மிதித்திருக்கலாம். இன்றைக்கும்கூட மற்றவர்களை அடிக்கும் சீண்டும்  பையன்கள் இருக்கிறார்கள்தானே.  சாக்கில் உட்கார்ந்திருப்பதை பென்ச்சில் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் எப்படிப் பார்த்திருப்பார்கள்? அவர்களுக்கு பென்ச்சில் உட்கார்ந்திருப்பது பெருமையாக இருந்திருக்குமா? இப்படிக் கஷ்டப் படுபவர்களைப் பார்த்துக் கவலையாய் இருந்திருக்காதா?...    ஒரே கவலை. யோசனைமேல் யோசனை. கேள்வி மேல் கேள்வி... அந்த சினிமா பார்த்ததிலிருந்து அம்பேத்கர் நினைவுதான்.  சாக்கில் உட்கார்ந்து படிப்பதற்குப் பெயர்தான் தீண்டாமையா? – என்று கேள்வி கேள்வியாய் தோன்றிக் கொண்டிருந்தது.  பானையிலிருந்து தண்ணீர் குடிக்கக் கூடாது? எல்லாரும் குடிக்கும் தம்ளரில் குடிக்கக் கூடாது. என்றால் அம்பெத்கர் மட்டும் தனியா சாக்கில் உட்கார்ந்திருந்தாரா. அம்பேத்கர் மீது மட்டும்தான் எல்லாருக்கும் கோவமா?  ‘ லூசா நீ, சினிமாவை ஒழுங்கா பாத்தியா? அம்பேத்கருடன் இன்னும் இரண்டு பையன்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் எஸ் சி பசங்க. என்று மற்ற பசங்க பேசிக் கொண்டதை நீ கேட்கவில்லையா? ஒழுங்கா சினிமா பாரு.’ என்று தானே தனக்கு சொல்லிக் கொண்டான். அவனுக்கே அது புரிந்தது. சினிமாவில் சில காட்சிகள் பதிகிறது. மத்ததெல்லாம் மறந்து விடுகிறது.   அம்பேத்கர் பற்றி மணிக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. அது பற்றி பேசுவற்கு யாருமே இல்லை. சினிமா பற்றியும் பேச வேண்டும். தெரிந்தும் கொள்ள வேண்டும்.  அப்பாவிடம் கேட்கமுடியாது. அவருக்கு அறிவியல் அல்லது கணக்குப் பாட கேள்விகள் மட்டும்தான் கேட்க வேண்டும்.   அம்மாவிடம் கேட்டிருந்தால் அம்மா என்ன சொல்லியிருப்பார்கள்? “அது எஸ் சி. க்கானது. உனக்கெதுக்கு...” என்று சொல்லியிருக்கலாம். பாட்டியிடம் கேட்டிருந்தால், “டேய் ஒழுங்கா படி. இந்த மாதிரி அதையும் இதையும் பார்க்காத.” என்று சொல்லியிருப்பார்.  எந்த ஆசிரியரிடமாவது இது பற்றிப் பேச முடிந்தால்கூட நன்றாக இருக்கும். எந்த ஆசிரியரிடம் பேச முடியும்? “ஆனால் எனக்குப் பேசணும். கேக்கணும். என் கேள்விகளையெல்லாம் கேக்கணும். தீண்டாமை பற்றி நிறைய தெரிந்து கொள்ளணும்.      “இதுதான் தீண்டாமையோ!” என்று மணி தனக்குள் கேட்டுக் கொண்டான்.  சாலை செல்வம்

  • வளரிளம் புதிர்ப்பருவம் - 7

    இன்றைய குழந்தைகள் பள்ளிக்குள் செல்பேசி இல்லாததால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சத்தமாகவும் சத்தமில்லாமலும் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்திலிருந்து  என்ன கற்கிறார்கள்?  அவர்களின் கருத்து என்ன? போன்றவற்றை அறிய கலந்துரையாடலே சிறந்த வழி.  ஏதேனும் ஒரு பொருள் குறித்துக் குழந்தைகளுடன் எவ்வாறு கலந்துரையாடுவது? என்பது முக்கியம்.  என்ன கேள்வியைக் கேட்கலாம்? சம்பந்தமில்லாமல் வேறு ஏதேனும் பேசினால், வேண்டுமென்றே கேலியாக எதையாவது பேசினால் எப்படி அவர்களைப் பேசு பொருள் நோக்கித் திருப்புவது போன்றவை நெறியாளரின் திறன்கள்.   Adolescence தொடரின் மிக முக்கியப் பகுதி, உளவியலாளர் ஜேமியோடு உரையாடும் பகுதி. ஒரு பொருள் சார்ந்த  உரையாடலை இயல்பாக  நிகழ்த்துவது குறித்து நாம் இதிலிருந்து கற்கலாம்.  பிரையோனி ஆரிஸ்டன், ஓர் உளவியலாளர். ஜேமியைப் பார்க்க வருகிறார். ஜேமி சிறார் சீர்திருத்த  மையத்தில் இருக்கிறான்.  சூடான சாக்லேட், சாண்ட்விச் உடன் பிரையோனி உரையாடத் தொடங்குகிறார். என்ன சாப்பிடுவாய்? தாத்தா, பாட்டி பிடிக்குமா? எனப் பொதுவான உரையாடல். ஜேமி மகிழ்ச்சியாகப் பேசுகிறான். பாட்டி என்ன சொல்வாங்க என்பதை அவர் பேசுவது போலக் குரலை மாற்றிப் பேசுகிறான்.  பிரயோனி, ஜேமியின் தாத்தாவைப் பற்றிக் கேட்கிறார்.  உன் அப்பா, உங்க தாத்தா போல இருப்பாரா, ஆம்பளைத் தனமா? என்று கேட்கிறார்.  வெளியே சென்று குடிப்பாரா? எப்போதாவது போவார். தாத்தா அளவு இல்ல. ஆம்பளைத்தனம் என்ற வார்த்தை பற்றி என்ன நினைக்கற? நீங்க ஏதேதோ பேசுறீங்க. போன முறை வந்தப்போ இப்படித்தான் பேசுனீங்க. இந்த முறை ஆம்பளைத் தனம் என்று பேசுறீங்க. நீங்க ஏதாவது தந்திரம் பண்றீங்களா? இல்ல ஜேமி. நான் தந்திரம் பண்ணல. உனக்கு அப்படித் தோணினா சாரி! உங்களை நான் கடுப்பேத்திட்டேன்ல. இல்லை.  உங்க குறிப்புகளை நான் பார்க்கலாமா? என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கீங்க? இப்போ நான் எழுதிட்டா இருக்கேன்? இல்லை. ஆனா எழுதுவீங்கல்ல. அதைப் பார்க்கலாமா? எழுதுவேன். ஆனா பார்க்க முடியாது. நீங்க எனக்காக வேலை செய்றதா சொன்னாங்க. இல்லை. உங்க ஆட்களால் தான் நான் இங்கு வந்தேன். ஆனா சுதந்திரமா எனது அறிக்கையை எழுதறேன். அதைப் படிக்கும் போது உனது குற்றத்தை நீ எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கே என்று நீதிபதிக்கு ஒரு  தெளிவு கிடைக்கும். என்று பிரையோனி சொல்கிறார்.  நான் இங்கு வந்ததே  உன்னோடு கலந்துரையாடத் தான். நான் நேரடியான கேள்விகளை உன்னிடம் கேட்டிருக்கேன். போன முறை பேசியவற்றைப் பேசலாமா? போன முறை என்ன பேசினோம்? உன் நண்பர்கள், அம்மா பற்றிப் பேசினோம். அப்படியா, எனக்கு ஞாபகம் இல்ல.  உன் அக்கா என்ன நினைப்பா? அம்மா என்ன நினைப்பாங்க?  இதெல்லாம் எனக்குத் தேவையில்ல.  சரி ஜேமி. உனக்கு வேணும்னா இன்று என்னென்ன கேள்விகள் கேட்கணும்னு எழுதிட்டு வந்திருக்கேன். அதை வாசிக்கவா? சரி, வாசிங்க.  நீ சண்டை போட்டதை பற்றிப் பேசணும்.  ஓ… அதெல்லாம் சும்மா. நீ இங்கு ஒருத்தனோட ஏன் சண்டை போட்டாய் என்பதை நான் தெரிஞ்சுக்கணும்.  அது சண்டையே இல்ல. சும்மாதான். அதுக்கும் ஏதாவது தண்டனை இருக்கா? இருக்கலாம். நீ ஒரு ஆணாக எப்படி உணர்கிறாய்? என்றும் கேட்கணும்.  என் உறுப்புகளைப் பற்றித் தெரிஞ்சுக்கணுமா? இல்லை. உன்னைப் பொறுத்தவரை ஓர் ஆணா  இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று தெரிஞ்சிக்கணும். எனக்குத் தெரியல. இது பெரிய கேள்வியா தெரியுது. சண்டையைப் பற்றிக் கேட்டது சின்னதா தெரியுது. அதனாலதான் உன் அப்பா, தாத்தா பற்றித் தெரிஞ்சுக்கறது எனக்கு உதவியா இருக்கும். அவங்க எப்படிப்பட்ட ஆம்பளைங்க என்று நினைக்குற? என்பதை விட்டுட்டு பொதுவா, ஜேமி ஒரு  ஆணா இருப்பதைப் பற்றி என்ன நினைக்கற என்று கேட்டா நல்லா இருக்குமா?  ஜேமி, பிரையோனி பேசும் தொனியில் அவரது கேள்வியைச் சொல்லுகிறான்.  பிரையோனி சிரித்தபடி, “ இது தந்திரம் இல்லை. உரையாடல். இப்போ உங்க அப்பாவைப் பற்றிப் பேசலாமா?” என்று கேட்கிறார்.  “ குறிப்புகளை மட்டும் நான் பார்க்கலாமா? என்ன எழுதியிருக்கீங்க? எப்படி எழுதியிருக்கீங்க?” என்று ஜேமி ஆவலாகக் கேட்கிறான்.  இல்லை. அது மட்டும் முடியாது என்று பிரையோனி மறுக்கிறார்.  என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். என்னால் இங்கே இருக்க முடியாது. எந்த நேரமும் யாராவது கத்திக்கொண்டே இருக்கிறார்கள். என்று ஜேமியின் குரல் உயர்ந்து கொண்டே வருகிறது. அவனது கோபம் அதிகரிக்கிறது. எழுந்து நின்று கத்துகிறான். மேசையில் இருந்தவற்றைக் கீழே  தள்ளுகிறான். பிரையோனிக்கு அருகே செல்கிறான். அவரது முகம் மாறுகிறது. வீடியோவில் கவனித்துக் கொண்டு இருந்த  காவலர் அறைக்குள் விரைந்து வருகிறார். தொடர்ந்து பேசுவோம்!

  • பேசும் கடல் - 7

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத குழந்தைகளைத் தேடி கடற்கரைக்கு வந்துவிட்டார் மலர். " நேரமாகிட்டே                  வீட்டுக்கு     வரவில்லையா" கொஞ்சம் குரலை உயர்த்தி கோபத்துடன் கேட்டாள் மலர்.     அம்மாவைக் கண்டவுடன் அமுதாவும், இனியனும் நடந்தவைகளை எல்லாம் ஆச்சரியத்தோடு கூறினார்கள்.  இருவரும் அம்மாவின் கைப்பிடித்துக் கொண்டார்கள்.  " அம்மா....... அப்பாவை   கூப்பிடலையா?"  "அப்பாவுக்கு வலை கட்டுற வேலை இருக்கும்" " காலையில தொழிலுக்கு போறாங்க.... பிறகு வந்து வலைகட்டுறாங்க அவங்களுக்கு ரெஸ்ட்டே இல்லையே...." "அப்படி உழைச்சாதான் நாம சாப்பிட முடியும்" அம்மா தன் பிள்ளைகளிடம் பேசிக்கொண்ட  வீட்டை நோக்கி சென்றாள்.  அம்மா..... அப்பா ரொம்ப நேரம் கடல்ல கஷ்டப்பட்டாத்தான் நாம சாப்பிட முடியுமா?   - அமுதா கேட்டாள்.  'ஆமாம்' அமுதா.... நமக்கு என்ன சொத்தா இருக்கு.... கடன் தான் இருக்கு ” சலித்துக் கொண்டாள் மலர். " கடனா....... ஏன்? இவ்வளவு கஷ்டப்பட்டும் நமக்கு ஏன் கடன்"  இனியன் கேட்டான்.      " உங்க இரண்டுபேருக்கும் பதில் சொல்ல எனக்கு முடியாது, நீங்க சாப்பிட்டா போதும்" என்று கூறி உணவு பரிமாறினாள்.  இப்பொழுது இனியன் எந்த கேள்வி என்றாலும் கடல் பாட்டியிடம் கேட்டால்தான் சரியானப் பதில் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். சாப்பிட்டு முடித்ததும்  கடல் பாட்டியிடம் பேச விரைந்தான்.  பொங்கி எழும் அலை நீரில் காலை நனைத்தவாறு பாட்டியிடம் பேசத் தொடங்கினான். " பாட்டி பாட்டி......      "என்னப்பா சாப்பிட்டியா...... உங்க அம்மா வேகமா கூட்டிட்டு போனாங்களே....."  "நான் சாப்பிட்டேன். எனக்கொரு கேள்வி" இனியன் அவசரப்பட்டான். " என்னப்பா..... கேளு, கேள்வி கேட்பதுதான் குழந்தைகள் இயல்பு, எனக்கு தெரிந்ததைச் சொல்றேன்"  கடல் பாட்டி கூறியது. " எங்க அப்பா ......நாள் முழுவதும் உன்கிட்டதான் கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க...... அப்போ எதுக்கு கடன் இருக்கு?"  கடல் பாட்டி பதில் சொல்வதற்கு முன் அமுதா வேகமாக ஓடி வந்தாள். "பாட்டி பாட்டி என்னைய விட்டுட்டு வந்துட்டான். இப்போ சொல்லுங்க...." " என்னைய நம்பி வாழும் கடல் பழங்குடிகள், மீனவர்கள் சேமிக்க மாட்டாங்க,"  இருவரும் ஈர மணலில் அமர்ந்து கொண்டார்கள். ஆர்வமாய் கேட்க தொடங்கினார்கள். " உலகம் முழுவதும் வாழும் பழங்குடிகளுக்கு சேமிப்பு வழக்கமே இருக்காது" " ஏன் பாட்டியம்மா"- அமுதா முந்திக்கொண்டு கேட்டாள். " இயற்கையை நம்பி வாழ்பவர்கள் தங்களுக்கு தேவையானதை இயற்கை தரும் என்று நம்புவார்கள்" " பாட்டி இன்னும் விளக்கமா சொல்லுங்க...."அமுதா குறிக்கட்டாள். " அப்பா தினமும் கடலுக்கு போறாங்க தானே" " ஆமாம்" " தினமும் மீன் கிடைக்குமா....?"  கடல் பாட்டி  "ஆமாம்.... கிடைக்குமே" இனியனும் ,அமுதாவும் கோரசாகப் பதில் கூறினார்கள். " நான் (கடல்) வற்றிப் போவேனா?, என்னைய அழிக்க முடியுமா? நான் இல்லாம உலகம் இயங்குமா?" " இயங்காது, கடல் இல்லாட்டி பூமியோ, உயிரினங்களோ இல்லையே" இது இனியன். " நீங்க இல்லாட்டி எங்களுக்கு போரடிக்குது தெரியுமா?" அமுதா கொஞ்சல் மொழியில் கூறினாள். " யாருமே அழிக்க முடியாத கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களுக்கு, வாழ்வதற்கு தேவையான உணவும், பொருளும் தினம் தினம் கிடைக்கும் போது ஏன் அவர்கள் சேமிக்க வேண்டும்....?  "அதுசரி .....எங்கம்மா கடன் கடன்னு  தினமும் புலம்புறாங்க" அமுதா கேட்டாள். " குட்டி பிள்ளைகளா? சேமிப்பு என்பதே பொதுவுடமைக்கு எதிரானதுதான். சேமிப்புதான் தனிஉடமையின் தொடக்கம்." " தனிஉடமைன்னா என்ன?" இனியன்.  தன்னுடைய சொத்து, தன்னுடைய பொருட்கள், தனக்கு மட்டும் என்று சுயநலமாய் நினைப்பது தான் தனி உடமை "  "அய்யோ.... நீங்க இரண்டு பேரும் எனக்கு புரியாத மாதிரி பேசுங்க...." அமுதா  "பாட்டி எனக்குப் புரிஞ்சத சொல்லவா?" இனியன்  "சூப்பர் சொல்லுமா?" கடல் பாட்டி. "  இயற்கையை நம்பி வாழும் பழங்குடிகள் எதையும் சுயநலமாய் சேமிக்க மாட்டார்கள். இயற்கை தான் அவர்களின் சொத்து. கடல் எங்கள் சொத்து. தேவையானதைத் தினம் தினம் கடல் கொடுக்கும். கடல் பொதுவாக இருக்கும் வரை  நாம் சேமிக்க வேண்டாம். அதனால் மீனவர்கள் சேமிக்கவில்லை."  "சபாஷ் சரியாக புரிந்து கொண்டாய் தம்பி"  "பாட்டி எங்கிட்ட கேட்கவில்லை" அமுதா " சொல்லுமா" " நாங்க எவ்வளவு விளையாண்டாலும் அம்மா மூன்று வேளையும் உணவு தருகிறார்களே அதுபோல கடல் பாட்டி,  அதனால நாங்க பயப்படாம வாழ்றோம். ஏன் சேமிக்கனும்" " சூப்பர்..... இரண்டு பேரும் அருமை. ஆனால் கடல் நமக்கு உரிமை என்றால்தான் சேமிக்க தேவையில்லை,  கடல் நமக்கு உரிமை இல்லை என்றால் நாம் கடனாளிகள் ஆவோம்...  அய்யோ..... மறுபடியும் ஒரு புதிரா?         ‌ ‌               - கடல் பேசும்

  • "பேரன்பின் தேவதூதர்கள்"

    (நம் தோழி நம் தோழன் தொகுப்பை முன்வைத்து) சிறப்புக் குழந்தைகள் குறித்த தெளிந்த பார்வைக்கான திறப்பைக் கொடுப்பவைகள் "நம் தோழி நம் தோழன்" எனும் தொகுப்பு நூலில் உள்ள பத்துக் கதைகளின் கருப்பொருள்கள். இக்கதைகளின் சாரம்சத்தின் பொதுத்தன்மையை "கள்ளமின்மையின் பேரன்பு" என சொல்லலாம்.  "தன்னுள் ஆழ்ந்த ஒரு ஆசிரியர் இடமிருந்து நற்படைப்பென வருகிற நூலானது, எளிமையும் உண்மையும் நிரம்பிய எண்ணங்களை உள்ளடக்கியிருக்கும்" எனும் வார்த்தைகளை மெய்ப்பிக்கிறது "கீதா ஷ்யாம் சுந்தர்" அவர்களால்  தொகுத்து வழங்கப்பட்டுள்ள இந்நூல். தொகுப்பாசிரியர், பாண்டிச்சேரியில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர். இதற்கு முன்னர் இவருடைய, 'தூரிகை தீட்டிய வண்ணங்கள்', 'புதிய உத்திகள்', 'நட்புடன் நேசிப்போம்', 'Infinite Possibilities' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.   "தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும் போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுட ஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் குழந்தை மொழியைக் கற்றுக் கொள்ளும் போது உணரலாம்" என்பது நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள். மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு; அவர்களுடைய மொழியை, உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது 'மானுட ஞானம்' மற்றும் அன்பால் ஆன சமூகம் மலரும், என்பதை வெளிச்சப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன தொகுப்பிலுள்ள கதைகள்.   `சக குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் நேசிப்பில் சிறப்புக் குழந்தைகளிடம் இருந்து எவ்வாறு பல்வகை தனித்திறன்மிக்க பரிமாணக் கதிர்கள் வெளிப்படுகின்றன என்பதை வெளிச்சப்படுத்துகின்றன தொகுப்பிலுள்ள கதைகள்.   அறியப்பட்ட எல்லைகளைத் தாண்டி வாழ்வியலின் அறியப்படாத சகல திசைகளையும் பேசுகிறார்கள் இந்த நூலிலுள்ள கதாசிரியர்கள். அன்பான எளிய செயல்களின் மூலம் சிறப்புக் குழந்தைகளின் அகச்சோர்வை நீக்க முடியும் எனும் திசைவழியை வாழ்வியல் அனுபவமாக பேசியுள்ளார்கள் கதாசிரியர்கள்.   ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பூக்கள் பூக்கின்றன; அனைத்திலுமான பிரகாசமாய் ஒளிர்கிறது குழந்தைகளின் இதயம். பனி, நிலவு, பூக்கள் ஆகியவைகள் குழந்தைகளின் மொழியில் மலைகள், ஆறுகள், புற்கள், மரங்களின் சித்திரங்களாக காட்சி பெறுகின்றன. இத்தகைய உளவியல் வாய்க்கப் பெற்றவர்களே சிறப்புக் குழந்தைகளும் எனும் தரிசன உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் கதைப் பரப்பினைக் கொண்ட நூல் இது. தர்க்க சிந்தனை, அறிவகங்காரம், நீதி போதனை ஆகிய முட்கள் இல்லாத கருத்தியல் கொண்டவைகள் இந்த நூலிலுள்ள கதைகள்.   "இந்த நூலிலுள்ள ஒன்பது கதைகளும் ஒன்பது வகையான தெய்வக் குழந்தைகளின் மாறுபட்ட நிலையை எளிமையாக விளக்குகிறது. அந்தக் குழந்தைகளின் இயல்பைக் கண்டு அஞ்சுவதும் வெறுப்பதும் வேண்டாம்; அவர்களிடம் அன்பு பாராட்டி அவர்களின் திறமையை வளர்க்க வேண்டும்; போற்ற வேண்டும் என்பதைக் கதையாகக் குழந்தைகளுக்கு வழங்கி இருப்பது சிறப்பு. இந்நூலில் சிறந்த எழுத்தாளர்கள் சிறப்புமிகு கதைகளை படைத்துள்ளார்கள்" என தனது வாழ்த்துரை/முன்னுரையில் குறிப்பிடுகிறார் சாகித்திய பாலபுரஸ்கார் விருதாளர் 'தேவி நாச்சியப்பன்' அவர்கள். (தொகுப்பாசிரியரின் கதையை எண்ணிக்கையில் சேர்க்கவில்லை முன்னுரையாளர்).   இத்தொகுப்பிலுள்ள கதைகளை பெரியவர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் படித்து கதைகளின் பொருண்மைகளை குழந்தைகளிடம் கடத்த வேண்டும் என்பது என்னுடைய பெரும் ஆசை.   'கவின்மொழியின் வகுப்பறை' எனும் கார்த்திகா கவின் குமார் அவர்களின் கதை தொகுப்பின் முதல் கதையாக இடம்பெற்றுள்ளது. 'வாயில் எச்சில் ஒழுகும் குறைபாடுள்ள கவின்மொழி இக்கதையின் மையப்புள்ளி. அழகாக பாடும் திறமை மற்றும் கதை சொல்லும் திறமை ஆகியன இருந்தும் தன்னுடைய குறைபாட்டால் மற்ற குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறாள் கவின்மொழி. அவளுடைய தனிமை இருள் உலகத்தை, தன்னுடைய அன்பால் வண்ணமயமான உலகமாக மாற்றுகிறாள் அவளது தோழி தீபிகா. 'அன்பு என்னவெல்லாம் மாயம் செய்யும்' என்பதை அழகாகச் சொல்கிறது இக்கதை.   இதே போன்று அன்பு செய்யும் மாயத்தை வெளிச்சப்படுத்தும் மற்றொரு கதை 'அன்புச்செல்வி சுப்புராஜு' அவர்களின் 'கடவுளின் குழந்தைகள்'.   இத்தொகுப்பிலுள்ள கதைகளில் வித்தியாசமாகவும், கவன ஈர்ப்பையும் பெறும் விதத்தில் அமைந்திருப்பதாக எனக்குப்படுவது ஆறாவது கதையாக இடம் பெற்றிருக்கும் 'நீரோடை மகேஸ்' அவர்களின் 'அதர்வனாவும் ஏலியன் உளவாளிகளும்' கதை தான். குழந்தைகளுக்கான 'அறிவியல் புனைவுக் கதை' இது. இக்கதையின் நாயகி அதர்வனா எனும் அம்மு 'டிஸ்லெக்சியா' எனும் குறைபாடுள்ள குழந்தை. டிஸ்லெக்சியா எனும் கற்றல் குறைபாட்டிற்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பில்லை என்பதைக் காட்சிக் கட்டமைப்புகளால் நமக்கு விவரிக்கிறார் கதாசிரியர். 'செஸ்' விளையாட்டில் அபார திறன் பெற்ற அதர்வனா 'கிறிஸ்டல் கேலக்சி' எனும் புது வகையான ' செஸ்' விளையாட்டை கண்டுபிடிக்கிறாள். தன்னுடைய தோழி இனியாவுக்கு மட்டுமல்லாமல் பிற கிரகவாசிகளான 'ஏலியன்'களுக்கும் புது வகையான ' செஸ்' விளையாட்டை கற்றுக் கொடுக்கிறாள்.   சிறப்புக் குழந்தைகளின் தனித்துவமான சிந்தனைத் திறன். புத்திகூர்மை ஆகிய பரிமாணங்களை செறிவான மொழி, காட்சிக்கட்டமைப்பு ஆகியவைகளால் சிறப்புற நெய்துள்ளார் கதாசிரியர்.          டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். 1992 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையால் ஊக்குவிக்கப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்பு தினம் இது. உலகம் முழுவதும் பல்வேறு அளவிலான வெற்றிகளுடன் அனுசரிக்கப்படுகிறது இத்தினம். இதன் முக்கிய நோக்கம், மாற்றுத்திறனாளிகளை சமூகம் ஏற்றுக்கொள்ளுதல், அவர்களின் திறன்களை அங்கீகரித்தல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் அவர்களை ஈடுபடுத்துதல் ஆகும்; மற்றும் மாற்றுத்திறனாளிகளைத் தாழ்வாகப் பார்க்காமல், அவர்களுக்கு சமமான மரியாதையையும் வாய்ப்புகளையும் வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் ஆகும்   ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது இத்தினம். 1981-ஆம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டின் கருப்பொருள் "முழு பங்கேற்பு மற்றும் சமத்துவம்" என்பதாகும். இன்னும் சில மாதங்களே இருக்கின்றன இந்த ஆண்டின் இத்தினம் வருவதற்கு.   இத்தருணத்தில் "கீதா ஷ்யாம் சுந்தர்" அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள  "நம் தோழி நம் தோழன்" எனும் நூல் வெளிவந்துள்ளது. சிறப்புக் குழந்தைகளின் சிறப்புகளை வெளிச்சப்படுத்தும் இந்நூலை பெரியவர்களாகிய நாமும் வாசித்து, குழந்தைகளிடமும் சேர்த்து  சிறப்புக் குழந்தைகளின் உலகை வண்ணமயமாக்க உறுதிகொள்வோம். நூல் : "நம் தோழி நம் தோழன்" தொகுப்பாசிரியர் : "கீதா ஷ்யாம் சுந்தர்" வகைமை : சிறுகதைகள் பக்கங்கள் : 100 / விலை:140/- நூல் தேவைக்கு : 96593 96636 துரை.அறிவழகன்  1967-ல் பிறந்த தமிழ் மொழி எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான இவர் தற்போது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் காரைக்குடியில் வசிக்கின்றார்.  சிறார், பெரியவர்கள் ஆகியோருக்கான பத்துக்கும் மேற்பட்ட இவரது நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.   2023-ல் வெளிவந்த   கி.ராஜநாராயணனின் ஒன்பது தொகுதிகள் நூலாக்கத்தில் இவர் பதிப்பாசிரியராக செயல்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் இவரது சிறுவர் கதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. தமிழக அரசின் 2023-24-ஆண்டிற்கான, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக கலை இலக்கிய படைப்புகளை உருவாக்கிடும் எழுத்தாளருக்கான ரூ.1,00,000/- பரிசுத்தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும், இவரது "சுதந்திரவேங்கை ஒண்டிவீரன் பகடை"  எனும் நாவல்  பெற்றுள்ளது.

  • சாராவின் வண்ணத்துப்பூச்சி

    ஆங்கிலத்தில் – டிஒய். சாப்மேன் தமிழில் : சுகுமாரன்  என்னுடைய காலைப் பொழுது எல்லோரையும் போலத்தான் ஆரம்பித்தது. நான் காலையில் சாப்பிடுவதற்கு முன் கதவருகே ஓடிச் சென்று என் செல்லப் பிராணிகளுக்கு உணவளித்தேன்.  பூச்சிகள் சாப்பிட இலைகளைப் போட்டேன். எறும்புகளுக்கு என் பற்பசையைக் கொடுத்தேன். அவை அதை விரும்புகின்றன. இதை என் அப்பாவிடம் சொல்ல வேண்டாம். இப்படி ஒவ்வொன்றிற்கும் உணவளித்த பிறகு பள்ளிக்குப் புறப்பட தயாரானேன். அப்பா என் அறைக்கு வந்தார். இன்று நான் பள்ளிக்குப் போக வேண்டாம் என்றும் ஒரு போராட்டத்திற்குப் போகிறோம் என்றும் கூறினார். 'கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸ் கொன்று விட்டது' என்று அப்பா என்னிடம் கூறினார். 'நமக்கு சேவை செய்ய வேண்டிய, பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ் நம்மைத் தாக்குகிறது. நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம் உரிமைக்களுக்காக நிற்க வேண்டும்' என்றும் அப்பா கூறினார். நானும் அப்பாவும் போராட்டம் நடக்கும் இடத்திற்குப் போனோம். அங்கு நாங்கள் பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்தோம். அப்பா என் கையைப் பிடித்திருந்தார். நாங்கள் கூட்டத்திற்குள் சென்றோம். கூட்டம் சத்தம் போட்டது. பயம் தந்தது. நான் அப்பாவுடன் பத்திரமாக இருந்தேன். அப்பா என் கையை இறுக்கமாகப் பிடித்து இருந்தார். 'நீதி இல்லை. அமைதி இல்லை' என்று முழக்கம் கேட்டது. நானும் கூட்டத்தில் முழக்கமிட்டேன். ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி என்னைக் கடந்துப் பறந்தது. நான் வண்ணத்துப்பூச்சிக்குப் பின்னால் போனேன். ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன்பாக கூட்டம் இருந்தது. கூட்டத்திலிருந்த ஒரு போலீஸ்-யின் முகம் அருகே வண்ணத்துப் பூச்சி பறந்தது. போலீஸ்காரன் பின்னால் நகர்ந்தான். வண்ணத்துப்பூச்சியை நோக்கி கையை வீசினான். வண்ணத்துப்பூச்சி கீழே விழுந்தது. அது எழுந்துப் பறக்கவில்லை. நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். உயிர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் போராட வந்தவள் நான். வண்ணத்துப்பூச்சியை நோக்கி நான் ஓடினேன். போலீஸ்காரன் சத்தமிட்டான். 'பின்னால் போ' என்று கத்தினான். நான் ஏதோ தவறான ஒன்றை செய்வதாக அவன் நினைத்தான். நான் பயந்து கூட்டத்திற்குள் ஓடினேன். என் கைக்குள் வண்ணத்துப் பூச்சி இருந்தது. உயரமான மரங்களைப் போல் மக்கள் நின்றிருந்தனர். ஒரு போலீஸ்காரனின் வேலை எங்களைப் பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? நான் ஓடாவிட்டால் பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டேன். அப்பாவை பிரிந்து விட்டதை உணர்ந்தேன். எனக்குப் பயமாக இருந்தது. நான் ரொம்ப நேரம் அப்பா, அப்பா... என்று கத்தினேன். அப்பாவை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. திடீரென்று உயரமான பெண் என்னருகில் குனிந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். அவள் முகத்தில் சோகம் இருந்தது. நான் நடந்ததைச் சொன்னேன். அவள் என்னை தோள்களின் மீது உட்கார வைத்தாள். இப்போது நான் கூட்டத்தினரைப் பார்க்கும்படி உயரத்தில் இருந்தேன். நான் பாதுகாப்பாக உட்கார்ந்துக் கொண்டு தேடினேன். சத்தம் போட்டேன். அப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை. என் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டது. நான் அப்பாவை பார்த்து விட்டேன். நான் தோளிலிருந்து இறங்கி ஓடினேன். அப்பா என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருந்தோம். நான் அப்பாவின் கையை இறுக பிடித்து இருந்தேன். 'நீதி இல்லை... அமைதி இல்லை...' என்கிற கூட்டத்தின் முழக்கத்தோடு என் குரலும் கலந்தது. சூரியன் மறைவதற்கு முன்பாக நாங்கள் வீட்டுக்கு வந்தோம். இரவு உணவு சாப்பிட்டதும் நான் நேராக படுக்கைக்குச் சென்றேன். எனக்கு தூக்கம் வரவில்லை. 'இன்று மோசமான நாள்' என்று நினைத்தேன். ஆனால் அப்பா சொன்னார். 'எல்லாம் சரியாகும். நான் உன்னைப் பாதுகாப்பேன். நீ உன்னுடைய வண்ணத்துப்பூச்சியைப் பார்த்துக் கொண்டது போல்.' என்றார். அடுத்த நாள் காலை. நான் சாப்பிடுவதற்கு முன் கதவருகே ஓடிச் சென்று செல்லப் பிராணிகளுக்கு உணவளித்தேன். சில நாட்களுக்குப் பிறகு என் வண்ணத்துப்பூச்சி குணமாகியிருந்தது. நான் அதை வெளியே பறக்க விட்டேன். யாரும் துன்புறுத்தாத இடத்திற்கு பறந்து செல்லும் வரை கவனித்தேன். பின் குறிப்பு: இச்சிறுகதையை எழுதிய டி.ஒய்.சாப்மேன் (TY Chapman) ஒரு கவிஞர், நாடகாசிரியர். ஐரோப்பா வம்சாலவளியைச் சேர்ந்த நைஜீரியர். அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கைப் பற்றி பேசுவதில் ஆர்வமுடையவர். அமெரிக்காவில் வாழ்கிறார். போலீஸ்-யின் தாக்குதலில் கருப்பினத்தவர் ஒருவர் உயிரிழக்கிறார். அதைக் கண்டித்து கருப்பின சமூகத்தினர் நீதி வேண்டுமென்று போராடுகின்றனர். அப்போராட்டத்தில் சிறுமி சாராவும் அவளது தந்தையும் கலந்துக் கொள்கின்றனர். பிறரின் உயிரைக் காப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டுமென்பதை சாரா கற்றுக் கொள்கிறாள். அவள் ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுவது போல் என்று உருவகப்படுத்துவதின் மூலம் கதை கவிதையாகி இருக்கிறது. சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்

  • தத்துவம் அறிவோம் - 7

    நம் சிந்தனை நம் கைகளில்.... மனிதர்களுடைய சிந்தனை அவர்களுடைய விரல்களில்தான் தொடங்கியது. எப்படி? டார்வின் என்கிற அறிவியலறிஞர் பரிணாமவியல் கோட்பாட்டை முன்மொழிந்தார். அப்படி என்றால்? சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் குரங்குக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னவர் டார்வின். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம் என்றால், இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் எப்படி தோன்றின? எப்படி எல்லாம் உருமாறின? எவை எல்லாம் அழிந்தன? ஏன் அழிந்தன? எவை எல்லாம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன? இயற்கையின் விதிகள் என்ன என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சொன்னார் டார்வின்.. அப்படி என்றால் மனித இனத்தை, இந்த பூமியில் உள்ள விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள், மீன்கள் இன்னபிற உயிர்களை எல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத கடவுள் படைத்தார் என்று சொல்லப்படுகிறதே அது சரியா என்று நீங்கள் சந்தேகப்பட்டால், நீங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். அறிவியல் என்பது ஒன்றை ஆராய்ந்து நிரூபிக்கும் உண்மை. நம்பிக்கை என்பது எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்புவது அல்லது ஏற்றுக்கொள்வது என்று சொல்லலாம். டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டின்படி ஒவ்வோர் உயிரினமும் இயற்கைச் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துகொண்டது. அப்படி தகவமைத்துக்கொண்டதால் உயிர் வாழ்ந்தது. தகவமைத்துக்கொள்ள முடியாத உயிரினங்கள் அழிந்துவிட்டன. தகவமைத்துக்கொள்ளுதல் என்றால் என்ன? இயற்கையின் தட்பவெப்ப மாற்றம், கிடைக்கும் உணவுப்பொருட்கள், உணவுப்பொருட்களுக்கு ஏற்ற தனித்துவமான உடலமைப்பு, எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், இனப்பெருக்கத் திறன், இவற்றில் வெற்றி பெறுதலைத் தான் தகவமைத்துக்கொள்ளுதல் என்கிறோம். வெற்றிகரமாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்ட உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு பூமியின் முதல் உயிரினமான சயனோபாக்டீரியா இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு கோடி ஆண்டுகளுக்கு மேல் கரப்பான் பூச்சி வாழ்ந்துவருகிறது. ஒன்றரைக் கோடி ஆண்டுகளாய் இலைவெட்டி எறும்பு வாழ்ந்துவருகிறது. இப்படித் தாவரங்கள், பூச்சிகள், பிரைமேட் என்று அழைக்கப்படுகிற குரங்கின உயிரினங்கள் எல்லாம் பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றன. ஆனால் எந்த உயிரினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு, மனித இனத்துக்கு மட்டுமே உண்டு. அதுதான் சிந்தனை. மூளையின் செயல்பாடுகளில் ஒன்றான சிந்தனை, நம்முடைய கட்டைவிரலிலிருந்து பிறந்தது. என்னது கட்டை விரலா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆமாம். வாலில்லாக்குரங்குகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றின் கட்டைவிரல் மற்ற நான்கு விரல்களுடன் ஒட்டியே இருக்கும். வாலில்லாக்குரங்குகள் கட்டைவிரலை அதிகம் பயன்படுத்துவதும் இல்லை. ஆனால் எப்போது ஒட்டியிருந்த கட்டைவிரலை ஹோமோ சேப்பியன்ஸ் முதன்முதலாக விரித்தார்களோ, அப்போதே சிந்தனை தோன்றத் தொடங்கிவிட்டது. அது எப்படி? அதுவரை மரங்களில் ஏறித் தாவித் திரிந்த குரங்கின உயிரினங்கள், வாலில்லாக்குரங்குகளாக மாறி தரைக்கு வந்தபோது கைகளுக்கும் வாலுக்கும் பெரிய வேலையில்லை. அவை விடுதலை அடைந்தன. இயற்கையில் கிடைத்த பழங்கள், காய்கறிகள், கொட்டைகளை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹோமோ சேப்பியன்ஸ் கூட்டத்துக்கு உணவுப்பஞ்சம் வந்தபோது அதைச் சமாளிக்க வேறு ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தோன்றியது. அப்போது இயற்கையில் கீழே கிடக்கும் கற்களை எடுத்து எறிந்து சிற்றுயிர்களை கொன்று சாப்பிட்டார்கள். பிறகு கற்களைத் தீட்டிக் கூர்மையாக்கி எறிந்தார்கள். வேட்டை இன்னும் சிறப்பாக இருந்தது. இப்படி கல்லின் மீது தங்களுடைய உழைப்பைச் செலுத்தியபோது, இயல்பாக கட்டைவிரல் தனியாகப் பிரிந்தது. கட்டைவிரல் பிரிந்தவுடன் உழைப்பு இன்னும் எளிதானது, அதாவது கற்களைத் தீட்டி ஆயுதங்களை உருவாக்குவது எளிதானது. உணவுப் பஞ்சம் இல்லை. தாவர உணவைவிட இறைச்சி உணவில் உடலுக்குத் தேவையான சத்துகள் அதிகமாகவும் நேரிடையாகவும் கிடைத்தன. அதன் விளைவாக மூளையில் பல புதிய வேதி மாற்றங்கள் நடைபெற்றன. அந்த மாற்றங்களின் விளைவாக மனித இனம் சிந்திக்கத் தொடங்கியது. அதாவது மற்ற உயிரினங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தன. இயற்கை மற்ற உயிரினங்களைக் கட்டுப்படுத்தியது. இயற்கைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டன. அந்த உயிரினங்களும் வாழ்வதற்கான அடிப்படை செயல்பாடுகளை மட்டும் இயல்பூக்கமாக (instinct) கொண்டிருந்தன. ஆனால், மனித இனம் மட்டும்தான் இயற்கையை, ஆராய்ந்தது. அதன் காரண காரியங்களை ஆராய்ந்தது. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தது. இயற்கையின் விதிகளை அறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தியது. தான் வாழ்வதற்காக இயற்கையைத் தகவமைத்துக்கொண்டது. சிறிதுசிறிதாக தன் வாழ்வைத் தானே தீர்மானித்தது. அதற்குக் காரணம் மனித இனத்தின் சிந்தனை அல்லது பகுத்தறிவு. அது மனிதர்களையும் இந்த உலகத்தையும் சூழலையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க வைத்தது. இந்த உலகம் குறித்து ஒரு நோக்கு மனிதர்களுக்கு உருவானது. அவர்களுடைய வாழ்க்கை குறித்து யோசிக்க வைத்தது. பிறப்பு, இறப்பு குறித்து ஆராய வைத்தது. தத்துவம் பிறந்தது. இப்போது சொல்லுங்கள்! நம்முடைய சிந்தனை உருவானதற்கு எது காரணம்? கட்டைவிரல். அது மட்டுமா? மனித இனத்தின் உழைப்பும் சிந்தனைக்குக் காரணம். சரிதானே!. உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • வளரிளம் புதிர்ப்பருவம் - 6

    ஆதம், 80 சதவீத பெண்கள் விரும்புவது 20 சதவீத ஆண்களைத் தான் என்று  சொல்கிறான். "பெண்களைக் கவர்வது சாதாரணம் இல்லை. வித்தைகள் தெரிஞ்சிருக்கணும். அவனை அவ (incel)  வேஸ்ட்டுன்னு சொல்றா." என்று ஆதம் சொல்கிறான்.  "அவனுக்கு பதிமூன்று வயது. இந்த வயசுல பொண்ணுங்க விஷயத்தில் வேஸ்ட்டுன்னு சொன்னா, என்ன அர்த்தம்?" பாஸ்கம் அதிர்ச்சியாகக் கேட்கிறார். ஆமாம்ப்பா. அவங்க வேஸ்ட்டுன்னு சொன்னா அதான் அர்த்தம். அவன் வாழ்க்கை பூராவும் தனியாகவே இருக்கப்போறான் என்று அர்த்தம். அதுக்குப் பலர் ஹார்ட் போட்டிருக்காங்க. அவங்க கேட்டி சொல்ற எல்லாத்தையும் ஒத்துக்கறாங்க என்று அர்த்தம்.  அப்போ இதெல்லாம் கேலி செய்றதா? வெறும் கேலி கிண்டலா? கொஞ்சம்  அதிகமா இருக்கு ஆதம். "அப்பா, நான் சொல்றத நீங்க நம்பல இல்ல, ஓவரா இருக்குல்ல." என்று ஆதம் அறைவிட்டு வெளியேற முயல்கிறான். இல்ல ஆதம். இது எனக்குப் பயனுள்ளது. எனக்குத் தெரியாததால் கேட்டேன். வெறும் ரெண்டு சிம்பலை வச்சுக்கிட்டு இது எல்லாத்தையும் நம்பறது கஷ்டமா இருக்கு. மெசேஜ் அனுப்பும் போது ஹார்ட் போடுவீங்கல்ல. அது என்ன கலர்? சிவப்பு. ❤️ சிவப்பு இதயம்- காதல், 🤎 ஊதா இதயம்- காம உணர்வுத்தூண்டல். 💛 மஞ்சள் இதயம்- எனக்குப் பிடிச்சிருக்கு, உனக்குப் பிடிச்சிருக்கா? ❤️ இளஞ்சிவப்பு இதயம்- எனக்குப் பிடிச்சிருக்கு ஆனா செக்ஸ் வேண்டாம். 🧡ஆரஞ்ச் இதயம்- உனக்கு ஒன்றும் ஆகாது.  எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு அப்பா. ஜேமிக்கு அவ அனுப்பிய செய்திகளில் வேற வேற emoji. எல்லாமே வேற வேற அர்த்தம். அப்போ கேட்டி தான் ஜேமியை கேலி பண்ணினாளா?  "அப்பா, அவங்க என்னைவிடச் சின்னவங்க. எனக்கு அவங்களத் தெரியாது. இதெல்லாம் இன்ஸ்டாவில் அவங்க மெசேஜ் எல்லாம் பார்த்ததை வச்சு சொல்றேன்." என்று ஆதம் சொல்கிறான்.   பாஸ்கமிற்கு இது புதிய திறப்பு. இதய வடிவங்களுக்குப் பொதுவான அர்த்தம் வேறு. அந்தந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகள்  நட்பு வட்டங்களில் உள்ள அர்த்தங்கள் வேறு.   Insta பதிவுகளில் கேட்டியின் கருத்துகள் ஜேமியைக் கேலி செய்வதாக இருந்ததே கொலைக்கான அடிப்படைக் காரணம் என்று பாஸ்கம் புரிந்து கொள்கிறார். பாஸ்கம் தன்னுடன் வந்திருந்த துணை ஆய்வாளரரான பிராங்கிடம், நடந்தது Incel என்று சொல்கிறார். பாஸ்கம் ரயானைப் பார்க்க வேண்டும் என்று அவனது வகுப்பிற்குச் செல்கிறார். ரயான் ஜன்னல் வழியே வெளியே குதித்து ஓடுகிறான். பாஸ்கம் அவனைத் துரத்திச் செல்கிறார்.பள்ளிக்கு வெளியே சிறிது தூரத்தில் அவனைப் பிடிக்கிறார்.  கேட்டி தான் ஜேமியைக் கேலி செய்தாளா? என்று பாஸ்கம், ரயானிடம் கேட்கிறார்.  எனக்குத் தெரியாது என்று ரயான் சொல்கிறான்.  Incel என்று கேட்டி, ஜேமியைச் சொன்னதன் அர்த்தம் என்ன என்று கேட்கிறார். ரயான் தெரியாது என்று சொல்கிறான். பாஸ்கம், ஒரு பெண் குழந்தையின் உயிர் போயிருக்கு. கொலை செய்த கத்தி எங்கே என்று கேட்கிறார்.  கத்தி என்னுடையது. இப்போ எங்கே என்று தெரியாது என்று ரயான் கூறுகிறான். அதனால் அவனும் கைது செய்யப்படுகிறான்.  கொலைக்கான காரணம், சமூக வளைத்தளங்களில் செய்யப்படும் கேலி.  நம் சமூகத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண், தான் பெண்ணை விட மேலானவன் என்ற சூழலில் வளர்கிறான். ஆணாதிக்கச் சிந்தனையும் செயல்பாடுகளும் இயல்பாக அவனிடம் வெளிப்படுகின்றன.  இணையம் பரவலான போது சமூக ஊடகங்கள் பலருக்கும் பிடித்தவையாக மாறின. எண்ணங்களைப் சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடமாக அவை இயங்கின. வீடு, பள்ளி போலக் கட்டுப்பாடுகள் இல்லாத சமூக ஊடகங்கள் வளரிளம் பருவத்தினரையும் பெரிதும் கவர்ந்தன.  அதிகமான விருப்பக்குறிகளைப் பெறுவதற்காகப் பலவிதமான செய்திகளைப் பதிவிடுவதில் ஆர்வம் அதிகரித்தது . மாற்றுப் பாலினத்தவரைக் கவர்தலும் அது குறித்த கதைகளும் ஆர்வத்தை அதிகப்படுத்தின. இவற்றையெல்லாம் மையமாக வைத்துப் பல்வேறு கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றே '80 சதவீதப் பெண்கள் 20 சதவீத ஆண்களையே விரும்புகிறார்கள்' என்பது.  Incel என்பதும் ஆண்களை ‘ஆண்மையற்றவன்’ என்ற  குற்ற உணர்வுக்குள் தள்ளிக் கேலி செய்ய உருவாக்கப்பட்ட வார்த்தை. உன்னை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். வாழ்நாள் முழுவதும் நீ தனியாக அல்லது உன் போன்ற ஆணுடன்தான் வாழ வேண்டும் என்று கேலி செய்யும் வார்த்தை. அப்படி இணையத்தில் பெண்களாலும் பிற ஆண்களாலும் கேலி செய்யப்படுபவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தன்னைக் கேலி செய்பவர்கள் மீது ஏற்படும் கோபம் வெறியாக மாறுகிறது. இப்படியான வெறியில் உலகெங்கும் ஏராளமான வன்முறைகள் நிகழ்கின்றன. தொடர்ந்து பேசுவோம்.....

  • லண்டனிலிருந்து அன்புடன் - 7

    அக்டோபர் 2025 – மிகத் துயரத்துடன் துவங்கியுள்ளது. அக். 4 ஆம் தேதி சிறார் இலக்கியத்தின் முன்னோடியான குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் இயற்கை எய்தினார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அக். 1 ஆம் தேதி சுற்றுச்சூழல் அறிஞரான Jane Goodall அவர்கள் மறைந்தார். அதற்கு முன்பு செப். 27ஆம் தேதி கரூர் கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் உட்பட 41 மக்கள் இறந்துள்ளனர். மறைந்த அனைவருக்கும் நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.  தொடர் மரணச் செய்திகள் பெரும் துக்கத்தையும் வருத்தத்தையும் தருகின்றன. நீங்களும் கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சி வாயிலாகவும், செய்தி அல்லது சமூக ஊடகம் மூலமாகவும் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்கள் மூலமாகவும் கரூர் துயர்ச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தைகளின் இறப்புச் செய்தி உங்களையும் வருத்தப்படச் செய்திருக்கும்.  மன தைரியத்துடன் இருப்போம். பாதுகாப்பு விதிகளை சரியாகப் பின்பற்றுவோம். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். பெரியவர்கள் போலவே குழந்தைகள் உங்களுக்கும் சில பொறுப்புகள் உண்டு. பிடித்த நாயகர்கள் இதுபோன்று பெரும் நிகழ்வுகளை நடத்தும்போது, அதற்குச் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சரி வாருங்கள்! சுற்றுச்சூழல் அறிஞரான Jane Goodall பற்றியும் அவர்  எழுதிய குழந்தைகள் புத்தகங்கள் குறித்தும் இனி பார்ப்போம். ஜேன் குடால் இறந்த போது அவருக்கு 91 வயது. அவரது மரணத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள எழுத்தாளர்கள், ஓவியர்கள், அறிஞர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஜேன் குடால் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி. அவர் பணி புரிந்தது முழுதும் ஆப்பிரிக்கா தேசத்தில். அப்படியிருக்க நமது தமிழ்நாட்டில் பலரும் அஞ்சலி செலுத்தினர் என்றால், அவர் யார்? அவரது முக்கியத்துவம் என்ன? உங்களைப் போன்று எனக்கும் இந்தக் கேள்விகள் எழுந்தன. அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்த “Good Night Stories For Rebel Girls” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அதில் உலகப் புகழ்பெற்ற 100 பெண்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருந்தன. ஒரு பக்க அளவில் சுருக்கமாகவும், கூடவே அவர்களது ஓவியம் இடம் பெற்றிருப்பதும் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. எனது அதிர்ஷ்டம், அதில் ஜேன் குடால் அவர்களும் இடம் பெற்றிருந்தார். எனது மகன் மற்றும் மகளுடன் ஜேன் குடால் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்க்கை வரலாறு என்றாலே, எங்களுக்கு “Little People Big Dreams” எனும் புத்தக வரிசை மிகவும் பிடித்தமானது. அந்த புத்தக வரிசையில் 32 பக்கங்களில் அழகிய ஓவியங்களுடன் எட்டு வயதினர் முதல் வாசிக்கும் வகையில் எளிமையான வகையில் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருக்கும். அந்தப் புத்தகத்தையும் நூலகத்தின் வழியே டிஜிட்டல் புத்தகமாக வாசித்தோம்.  ஜேன் குடால் (Jane Goodall) ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி. சிறு வயது முதலே  விலங்குகள் மீதும் பூச்சிகள் மீதும் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வந்தவர். 11ஆம் வயதில் டார்சன் புத்தகம் வாசித்ததிலிருந்து அவருக்கு ஆப்பிரிக்கா செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆப்பிரிக்கா செல்வதற்கான பணத்தை அவரே சம்பாதித்து, 23ஆம் வயதில் கப்பல் வழியே  ஆப்பிரிக்கா கண்டத்தின் ஒரு நாடான கென்யாவிற்குச் சென்றார். முறையான கல்வி பெற அவரிடம் வசதியில்லாத போதும், கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் அவரிடம் எப்பொழுதும் இருந்தது. அதனைவிட விலங்குகள் மீதான அன்பும் அக்கறையும் அவருக்குத் துணை நின்றது.  அதன் மூலம், பிரபல விஞ்ஞானியான லூயிஸ் லீக்கியின் உதவியாளராக ஆனார்.  சிம்பன்சி குரங்குகள் குறித்தும் ஆய்வு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பொதுவாக, விஞ்ஞானிகள் தாங்கள் ஆய்வு செய்யும் விலங்குகளுக்கு எண்களையே வழங்கினர். ஆனால் ஜேன் அவர்களோ சிம்பன்சிகளுக்கு பெயர்களைச் சூட்டினார். மற்ற விஞ்ஞானிகளோ, விலங்குகளைக் கூட்டில் வைத்து ஆய்வு செய்தனர், சிலர் தூரத்திலிருந்து அதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் ஜேன் அவர்களோ, காட்டுக்குள் சென்று, போதிய காலம் எடுத்துக்கொண்டு, சிம்பன்சி குரங்குகளோடு பழகினார். சிம்பன்சி குரங்குகளும் ஜேன் அவர்களை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டன. ஜேன் அவர்கள் சிம்பன்சி குரங்குகள் குறித்து மிக நீண்ட ஆய்வுகளைச் செய்தார். மனிதர்கள் போலவே சிம்பன்சிகளும் கருவிகளைப் பயன்படுத்துகிறது என்பதை அவர்தான் முதன்முதலாக அறிவித்தார். மனிதர்கள் போலவே சிம்பன்சிகளிலும் அன்பு, கோபம், ஏமாற்றும், துரோகம் என மனிதர்கள் போலவே குணங்களும் உடையவை என்பதையும் கண்டறிந்தார். அவரது ஆய்வின்படி மனித இனத்திற்கும் சிம்பன்சி இனத்திற்கும் 98.8 சதவீதம் டின்ஏ பொருந்துகிறது என்பதையும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து கூறினார். இந்த ஆய்வுகள் அனைத்திற்கும் அவரது பொறுமைதான் மிகப் பெரிய பலம் என்று நான் கருதுகிறேன். விலங்குகளுடன் காடுகளில் அவர் மிக நீண்ட காலம் வாழ்ந்து அதன் பிறகே அவர் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து உலகிற்கு அறிவித்தார்.  ஜேன் தனது அனுபவங்களையெல்லாம் புத்தகங்களாகவும் எழுதியுள்ளார். அதிலும் முக்கியமாகக் குழந்தைகள் உங்களுக்காகவும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். அதுகுறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

  • சீனப்புத்தாண்டு

    ஒவ்வொரு வருடமும், சனவரி 21க்கும் பிப்ரவரி 20க்கும் இடைப்பட்ட அமாவாசை தினத்துக்கு மறுநாள் - புது நிலவு தோன்றும் அந்த நாளே சீனப்புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது. சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது சீனப்புத்தாண்டு. ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு விலங்குப் பெயர் அளிக்கப்பட்டு, அந்த வருடத்தில் பிறந்தவர்கள் அந்த விலங்கு இராசியில் இருப்பவர்களாகச் சொல்லப் படுவார்கள். உதாரணத்துக்கு, இந்த வருடம் (2025) சீனாவில் ‘பாம்பு’ வருடமாகக் கருதப்படுகிறது. மொத்தம் பன்னிரெண்டு விலங்குகள். வரிசையாக அந்த விலங்குகளின் பெயரால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கான பெயரும் அளிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் முடிந்ததும் மீண்டும் முதல் மிருகத்திலிருந்து அந்தப் பன்னிரெண்டு வருடச் சுழற்சி ஆரம்பிக்கும். முதல் வருடத்தின் சின்னம் எலி. அதனைத் தொடந்து எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி என அடுத்தடுத்த வருடங்களுக்குப் பெயர் வைக்கப்படும். இப்படி, ஆண்டுகளுக்கு மிருகங்களின் பெயர் எப்படி வந்தது என்பதைப் பற்றி காலங்காலமாகச் சீனாவில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.  வெகுகாலத்துக்கு முன் சீனாவின் முதல் பேரரசராக இருந்தவர் மாணிக்க வம்சத்தைச் சேர்ந்த யுவாங். ‘வானுலகையும் மண்ணுலகையும்’ ஆள்பவர் என்று இவருக்குப் பட்டமுண்டு. அனைத்துக் கடவுளருக்கும் மனிதர்களுக்கும் அவரே தலைவர். இயற்கைச் சக்திகளான நதி, காற்று, மழை போன்றவையும் அவரையே வணங்கி வந்தன. நன்மை செய்பவர்களை உற்சாகப்படுத்தி, தீமை செய்பவர்களைத் தண்டிக்கவும் செய்பவர் பேரரசர்.  ஒவ்வொரு புது வருடத்தையும் பெயரிட்டு அழைப்பதற்காக, ஒருமுறை அவர் விலங்குகள் அனைத்தையும் வரச்சொன்னார். அந்த விலங்குகளுக்கு ஒரு போட்டி வைக்கப் போவதாகச் சொன்னார். நாய், ஆடு, பூனை, புலி போன்ற விலங்குகளும் எலி போன்ற சிறிய விலங்குகளும் டிராகன் போன்ற மாபெரும் விலங்குகளும் பேரரசரைக் காண வந்து அவரை வணங்கி நின்றன. “விலங்குகளே! உங்களுக்குப் போட்டி ஒன்றை நடத்தப் போகிறேன். ஒரு பெரிய ஆற்றைக் கடந்து மறுபுறம் நீங்கள் வரவேண்டும். முதலில் வரும் பன்னிரெண்டு விலங்குகளின் பெயரை வரிசையாக ஒவ்வொரு ஆண்டுக்கும் சூட்டப் போகிறேன்” என்றார். விலங்குகள் ஆர்வத்துடன் ஆரவாரம் செய்தன. போட்டி மறுநாள் காலையில் நடைபெறும் என்று பேரரசர் அறிவித்தவுடன் விலங்குகள் கலைந்து சென்றன. கலைந்து செல்லும்போது, பூனை தனது நண்பன் எலியிடம் சொன்னது: “நண்பா, நாளைக் காலை என்னை நீ அதிகாலையிலேயே எழுப்பி விடுவாயா? இல்லையேல் நான் அதிக நேரம் உறங்கி விடுவேன்; என்னால் போட்டியில் கலந்துகொள்ள முடியாது.” “நிச்சயமாக நண்பா. நான் கிளம்பிச் செல்கையில் உன்னையும் எழுப்பி அழைத்துச் செல்கிறேன்” என்று உறுதி சொன்னது எலி.  மறுநாள் அனைத்து விலங்குகளும் ஆற்றங்கரைக்குச் சென்றன. எலி வேண்டுமென்றே பூனையை எழுப்பாமல் விட்டுச் சென்றது. பூனை தொடர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, பூனையைத் தவிர மற்ற அனைத்து விலங்குகளும் போட்டியில் கலந்துகொண்டன. ஆற்றின் மறுகரையில் பேரரசர் காத்திருந்தார். விலங்குகள் ஓடிச்சென்று ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தன. எலிக்கு நீந்தத் தெரிந்தாலும், பிற வலுவான விலங்குகளுடன் போட்டி போட்டுக்கொண்டு நீந்தும் அளவுக்குத் தனக்குத் திறமை இருக்கிறதா என்று யோசித்தது. என்ன செய்யலாம் என்று சிந்தித்த எலி, அருகில் வந்த எருதிடம், “எருது நண்பா, எனக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது; என்னை உன் முதுகில் ஏற்றிக் கொண்டு அக்கரைக்குச் செல்லமுடியுமா?” என்று கேட்டது. அதற்கு உடனே சம்மதித்தது எருது. எருதின் முதுகில் எலி ஏறிக்கொள்ள, ஆற்றை விரைவாகக் கடந்தது எருது. மறுகரையை எருது அடைவதற்கு முன் எருதின் முதுகிலிருந்து குதித்துக் கரையை அடைந்து ஓடிப் பேரரசருக்கு அருகில் நின்றது. “எலியே! நீதான் முதலில் வந்தாய். அதனால் முதல் வருடத்துக்கு உனது பெயரைத்தான் சூட்டப்போகிறேன்” என்றார் பேரரசர்.  மகிழ்ந்த எலி, “மிக்க நன்றி பேரரசரே!” என்று சொல்லி வணங்கி நின்றது. தன்னைப் பயன்படுத்திக் கொண்டு முதலிடம் பெற்ற எலியைக் கண்டு சற்றுக் கோபப்பட்டாலும், அதை மறைத்துக் கொண்டு நின்றது எருது.  “இரண்டாவதாக வந்த எருதே! உன் பெயராலேயே இரண்டாவது வருடத்தை அழைக்கப் போகிறேன்” என்றார் பேரரசர். எருது நன்றி சொல்லிச் சென்றது. அடுத்த வந்த புலியின் பெயரால் மூன்றாவது ஆண்டுக்குப் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார் பேரரசர். துள்ளிக் குதித்து வந்தது முயல். நான்காவது ஆண்டுக்கு முயலின் பெயரை அறிவித்தார் பேரரசர்.  டிராகன் அடுத்ததாக வந்தது. அதைப் பார்த்த பேரரசர் கேட்டார்: “கடல் நாகமே, நீ பறந்து வந்து முதலிடம் பெற்றிருக்கலாமே! ஏன் தாமதமாக வருகிறாய்?” “பேரரசரே, வரும் வழியில் என்னிடம் பலர் உதவி கேட்டார்கள். அவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு வருவதற்கு நேரமாகி விட்டது” என்றது டிராகன். ஐந்தாவது வருடத்துக்கு டிராகனின் பெயர் வைப்பதாக பேரரசர் அறிவித்தார். வேகமாக வந்தது குதிரை. ஆனால் குதிரையின் கால்களைச் சுற்றிக் கொண்டு வந்து அதன் வேகத்தைக் குறைத்தது பாம்பு. குதிரைக்கு முன் வந்து நின்றது. “பாம்பே, நீ குதிரையை முந்திவிட்டாய். அதனால் ஆறாவது ஆண்டுக்கு உனது பெயரைச் சூட்டுகிறேன். குதிரையே, ஏழாவது ஆண்டு உனது பெயரால் அழைக்கப்படும்.” சேவல், குரங்கு, ஆடு ஆகிய மூன்று விலங்குகளும் ஒன்றாக வந்தன. ஆற்றைக் கடக்க அவை இணைந்து வேலை செய்திருந்தன. கோழி ஒரு படகைக் கொண்டுவந்தது. ஆடு புற்களை உண்டு ஆற்றுக்கு நடந்து செல்ல ஒரு பாதையை உருவாக்கியிருந்தது; குரங்கு படகைச் செலுத்தி ஆற்றைக் கடக்க உதவியது. இத்தகைய சிறந்த குழுப்பணியைக் கேட்ட பேரரசர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் ஆட்டை எட்டாவதாகவும், குரங்கை ஒன்பதாவதாகவும், சேவலைப் பத்தாவதாகவும் அறிவித்தார். பதினோராவதாக வந்தது நாய். ஆச்சரியமடைந்த பேரரசர் நாயிடம் கேட்டார்: “நாயே, உனக்கு நன்றாக நீந்தத் தெரியுமே! நீ எப்படி இவ்வளவு தாமதமாக வந்தாய்?” “பேரரசே, தண்ணீர் தெளிவாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தபடியால் நான் ஆற்றுநீரில் சிறிது நேரம் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தேன். ஆற்றை விட்டு வெளியே வர மனமில்லாமல் நீந்திக் கொண்டிருந்தேன். அதனால் நேரமாகிவிட்டது” என்றது நாய். நாயைப் பதினோராவது ஆண்டின் பெயராக அறிவித்தார் பேரரசர். பின்னர் அடுத்து வரப்போகும் விலங்குக்காகக் காத்திருந்தார் பேரரசர். ஆனால் வெகுநேரமாக வேறந்த விலங்கும் வரவில்லை. எல்லா விலங்குகளும் வந்துவிட்டன போலும் என்று எண்ணிய பேரரசர் புறப்படத் தயாரான போது கடைசியாக வந்தது பன்றி.  “மன்னித்துக் கொள்ளுங்கள் பேரரசே. வரும் வழியில் சிறிது உணவு உண்டேன்; உண்ட களைப்பில் சிறிது நேரம் படுத்து உறங்கிவிட்டேன். வருவதற்குத் தாமதமாகி விட்டது” என்று வெட்கத்துடன் சொன்னது பன்றி. சிரித்த பேரரசர் பன்றியின் பெயரைப் பன்னிரெண்டாம் ஆண்டிற்கு வைத்தார்.  “இனிவரும் ஆண்டுகள் இந்தப் பன்னிரெண்டு விலங்குகளின் பெயரிலேயே வரிசையாக அழைக்கப்படும்” என்று அறிவித்தார் பேரரசர். அனைவரும் மகிழ்ச்சியானார்கள்; அனைவருக்கும் விருந்துணவு அளிக்கப்பட்டது.  உறங்கி விட்டதால் போட்டிக்கு வர மறந்த பூனை எழுந்து பார்த்தது. “போட்டிக்கு நேரமாகி விட்டதே! இந்த எலி என்னை எழுப்பாமல் ஏமாற்றிவிட்டதே” என்று எண்ணிக்கொண்டே வேகமாகப் போட்டி நடக்கும் இடத்துக்கு வந்து பார்த்தது பூனை. போட்டி வெகுநேரத்துக்கு முன்பே முடிந்திருக்க, ஏமாற்றமடைந்தது பூனை. “என்னை ஏமாற்றிய எலி இன்றிலிருந்து எனது நண்பன் அல்ல” என்று சொல்லிக் கொண்டே எலியைப் பிடித்துத் தண்டிப்பதற்காக பூனை எலியைத் தேடி ஓடியது. அன்றிலிருந்து இன்றுவரை எலியை விரட்டிக்கொண்டே இருக்கிறது பூனை. இப்படித்தான் சீனப்புத்தாண்டுகளுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. குறிப்பிட்ட வருடங்களில் பிறந்தவர்களின் குணங்களும், பிறந்த வருடங்களைக் குறித்த விலங்குகளின் பண்புகளைப் பொறுத்தே அமையும் என்ற நம்பிக்கையும் இராசி பலன்களும் இன்றும் சொல்லப் படுகின்றன.

  • பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா

    பவளப்பாறைக்கு உயிர் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாக பவளப்பாறை என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது என்ற கேள்வியைக் கேட்கலாம். பவளப்பாறைகள்(Corals) பவள உயிரிகளால் உருவாக்கப்படுகின்றன. பவள உயிரிகள்(Coral polyps) கடல் ஜெல்லிகள்,கடல் சாமந்திகள் ஆகியவை எல்லாம் இருக்கும் நிடாரியா தொகுதியைச் சேர்ந்தவை. இவை ஒருவகை கடல் விலங்குகள். இந்த பவள உயிரிகளின் உடலில் பெரும்பாலும் நுண் பாசிகள் வசிக்கும்.இந்த நுண் பாசிகள் ஒளிச்சேர்க்கை மூலம் உருவாக்கித்தரும் உணவை பவள உயிரிகள் சாப்பிடுகின.பவள உயிரிகளின் நைட்ரஜன் கழிவு இந்தப் பாசிகளின் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. சில பவள உயிரிகள் இரை பிடித்தும் சாப்பிடுகின்றன. இந்த பவள உயிரிகள் தனியாக வாழ்வதில்லை, பெரும்பாலும் கூட்டமாகவே வசிக்கின்றன. பவள உயிரிகள் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டு ஒரு வெளிப்புற ஓட்டை உருவாக்குகின்றன. காலப்போக்கில் இந்த வெளி ஓடு முழுமையாக இறுகும். இதுவே பவளப்பாறை என்று அழைக்கப்படுகிறது. பல பவளப்பாறைகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய அமைப்பாக உருவாகும் போது அது பவளத்திட்டு (Coral reef) என்று அழைக்கப்படுகிறது. பவளப்பாறைகள் உயிருள்ள அமைப்புகளாகும். உள்ளுக்குள் இருக்கும் பவள உயிரி இறந்து போனாலும் பாறையின்மீது அடுத்தடுத்து புதிய பவள உயிரிகள் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef) உலகிலேயே மிகப்பெரியது. இது மூன்று லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.. இதை விண்வெளியிலிருந்துகூட பார்க்க முடியும். நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்  பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி  கல்விக்குழுமத்தின்   படைப்பூக்க   விருது ,பாவை  விருது  ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும்  மனிதரும் , விலங்குகளும்  பாலினமும் , ஆழ்கடல், சூழலும்  பெண்களும் , நெய்தல் மீன்கள்  உள்ளிட்ட   பதினைந்து     நூல்களை எழுதியுள்ளார்.

bottom of page