இயலில் தேடலாம்!
292 results found with an empty search
- எறும்பின் மூளையில் எத்தனை kb?
எறும்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஒரு கதையைப் படித்துவிடுவோம். *** பள்ளியில் அடுத்த வாரம், ‘வினாடி வினா’ போட்டி வைக்கப் போகிறோம் என்று அறிவித்து இருந்தார்கள். ஒரு குழுவிற்கு மூன்று பேர் இருக்கலாம் என்றும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று அனைத்துப் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்கள். நண்பர்கள் தங்களுக்குள் குழுவாகப் பிரிந்து ‘வினாடி வினா’ போட்டிக்குத் தயாரானார்கள். பாலா, வர்ஷா, பாத்தீமா– மூவரும் ஓர் அணியில் இருந்தனர். ஒவ்வொரு பாடத்தையும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். பாத்தீமாவுக்கு, கணிதம் மிகவும் பிடிக்கும். பாலாவுக்கு சமூக அறிவியல் என்றால் பிடிக்கும். வர்ஷாவுக்கு அறிவியல். இப்படியே பிரித்துக்கொண்டு படித்தார்கள். போட்டி நாளும் வந்தது. ‘இந்திய அரசமைப்பு சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?’ என்ற கேள்வி வந்ததும், ஜனவரி 26, 1950 என்று சட்டென்று பதிலளித்தான் பாலா. அடுத்ததாக ‘இரும்பு எந்த வாயுவுடன் வினை புரிவதால் துரு பிடிக்கிறது?’ என்ற கேள்வி வந்ததும் ஆக்ஸிஜன் என்று சரியான பதிலளித்தாள் வர்ஷா. அடுத்ததாக, கணிதம் தொடர்பான கேள்வி. ‘240 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சட்டை, இப்போது பத்து சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. அப்படியென்றால் சட்டையின் தற்போதைய விலை என்ன?’ என்ற கேள்வி கேட்டார்கள். கடகடவென்று மனக் கணக்குப் போட்டு 216 என்ற சரியான விடையைச் சொன்னாள் பாத்தீமா. மூவரும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டு போய், இறுதிச் சுற்றுக்கு வந்தார்கள்.இனிமேல், கேள்வி கடினமாகப் போகிறது. இதுவரை ஒவ்வொரு பாடத்தைச் சார்ந்தும் கேள்விகள் வந்துகொண்டிருந்தன. இனிமேல், மூன்று பாடங்களையும் இணைத்து கேள்வி கேட்கப்பட உள்ளது என்று அறிவித்து இருந்தார்கள். தேநீர் இடைவேளையின் முடிந்து, புதுத்தெம்புடன் மாணவர்கள் தயாராய் இருந்தனர். வினாடி வினா தொடங்கியது. ‘1853ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக பயணம் செய்த ரயில், எங்கிருந்து எதுவரை எவ்வளவு வேகத்தில் பயணித்தது?’ என்ற கேள்வி. முதல் ரயில் பயணம் மும்பையில் இருந்து தானே வரைக்கும் என்று பாலாவுக்கு நினைவுக்கு வந்தது. இரண்டிற்கும் இடையில் தோராயமாக எவ்வளவு தூரம் இருக்கும் என்று யோசித்தான். பயண நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம் என்பதும், தோராயமாக முப்பது கிலோமீட்டர் பயணித்து இருப்பார்கள் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. பயண நேரமும், தொலைவும் தெரிந்ததும், வேகம் = தொலைவு/நேரம் என்ற சமன்பாடு வர்ஷாவுக்கு அத்துப்படி. ஆக, பயண வேகம் என்பது மணிக்கு 30 கிலோமீட்டர் என்று டக்கென்று சொன்னாள் கணக்கு பாத்திமா. சரியான விடை என்பது 34கிலோமீட்டர் தூரத்தை, 57 நிமிடங்களில் பயணித்தார்கள். ஆக, பயண வேகம் என்பது மணிக்கு 35 கிலோமீட்டர். பிற அணியினருக்கு சுத்தமாக பதில் தெரியவில்லை. இவர்களுடைய பதில், சரியான விடைக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், பாலா – வர்ஷா – பாத்திமா அணியினருக்கு பரிசு கொடுக்கப்பட்டது. *** இப்போது எறும்பு கதைக்கு வருவோம். எறும்பின் மூளையில் உள்ள நினைவகம் (storagespace) வெறும் 256KB மட்டுமே!நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசிகள் 64GB, 128GB என்று வெவ்வேறு அளவிலான நினைவகத்துடன் (memory/storage) உள்ளன.நம்முடைய கைபேசிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 256 kb எவ்வளவு சின்னதாக தெரிகிறது அல்லவா? ஆனால், யோசித்துப் பார்த்தால், எறும்புகள் உணவு தேடிச் செல்வது, சேகரித்த உணவை மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து சேமிப்பது என்று பல வேலைகளைச் செய்கின்றன. ஓர் இடத்துக்குப் போய் வருவதற்கு வழியை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியென்றால், எறும்புகளிடம் உள்ள 256KB நினைவகம் பத்தாதுதானே? மேலும், மூளையின் செயல்பாட்டை வெவ்வேறு பணிகளுக்கும் செலவிட வேண்டும். அப்படியிருக்கும்போது, தங்களிடம் உள்ள இத்துனூண்டு ‘மூளையில்’ எப்படி இத்தனை வேலைகளைத் திட்டமிட முடிகிறது? மேற்கூறிய கதையில், பாலாவுக்கு மும்பை-தானே பற்றிய புவியியல் அமைப்பு தெரிந்திருந்தது. வர்ஷாவுக்கு சமன்பாடு தெரிந்திருந்தது. பாத்திமாவால் கணக்குப் போட முடிந்தது. மூவரும் தனிதனியாக இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடிந்திருக்காது. மூவரின் கூட்டு முயற்சியால்தான் அவர்களால் பதிலளிக்க முடிந்தது. இதற்குப் பெயர்தான் கூட்டுப் புலமை (swarm intelligence) எனப்படுகிறது. எறும்புகள் தங்களுக்கென்று ‘தலைமை எறும்பு’ சொல்வதைச் செய்வதில்லை. ‘தலைமை எறும்பு’ என்ற ஒன்று இல்லாமல், ஒவ்வொரு எறும்பும் தங்களுக்கான பணிகளைச் செய்வதாலேயே ஒரு வேலையை முடிக்க முடிகிறது. உதாரணமாக, தாங்கள் நகரும்போது, பெரமோன் எனப்படும் ஹார்மோன் சுரப்பு வெளியிட்டு, பிற எறும்புகளுக்கும் வழித்தடத்தை அறிவிக்கின்றன. இது எறும்பின் கூட்டுப் புலமை. இதேபோல, கூட்டுப் புலமை உத்தியைப் பயன்படுத்தி, உலகம் முழுக்க டிரோன் குழுக்கள், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவுஆகிய துறைகள் வடிவமைக்கப்படுகின்றன. சின்ன மூளை! பெரிய வேலை!!! ( தொடர்வோம் )
- நிழல் விளையாட்டு
சச்சு இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். தத்தக்கா புத்தக்கா என்று ஒவ்வொரு காலாக எடுத்து வைக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் வண்டி குடை சாய்ந்து விடும் என்பதைப் போலத்தான் அடி எடுத்து வைக்கிறாள். சில சமயம் அப்படியே சாய்ந்து சப்பென்று உட்கார்ந்து விடுவாள். உடனே சிரிப்பு வந்துவிடும் சச்சுவுக்கு. அம்மாவைப் பார்த்துச் சிரிப்பாள். முன்னால் இருக்கிற ஒரே ஒரு பல் மட்டும் பூ மாதிரி சிரிக்கும். சச்சு எழுந்து நடக்கத் தொடங்கிய பிறகு தூங்கி எழுந்தால் போதும் நடைதான். சாப்பிடும் போது தன் அம்மா பின்னாலேயே நடப்பாள். அம்மா பின்னால் வருவதைப் பார்த்தது சச்சுவுக்கு உற்சாகமாகி விடும். கெக்க்க்கே என்று சிரித்துக் கொண்டே இன்னும் வேகமாக தத்தக்கா புத்தக்கா அடி எடுத்து வைப்பாள். அம்மாவும் சிரித்துக் கொண்டே பின்னால்போய், “ பிடி பிடி கள்ளாளி.. செல்லத்தைப் பிடி..” என்று கொஞ்சுவார். இரவில் அம்மா வீட்டில் விளக்கு போட்டார். அப்போது சச்சு ஒன்றைக் கண்டுபிடித்தாள். சச்சு நடக்கும் போது அவளுடன் கூடவே யாரோ நடப்பதைப் பார்த்தாள். அவளைப் போலவே தத்தக்கா புத்தக்கா என்று அதுவும் நடந்தது. அவள் திரும்பிப்பார்த்தாள். சுவரில் நிழல் ஆடியது. அவள் கையை அசைத்தாள். அதுவும் கையை அசைத்தது. அவளுடைய தலையில் கொண்டை போட்டு விட்டிருந்தார் அம்மா. நிழலும் கொண்டை போட்டிருந்தது. சச்சுவுக்கு மகிழ்ச்சி. கெக்க்க்கே என்று சிரித்தாள். நிழலும் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தது. சச்சுவின் காலில் கிடந்த கொலுசு குலுங்கியது. நிழலின் காலில் கிடந்த கொலுசும் குலுங்கியது. சச்சு நிழலைப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அப்படியே எதிரில் இருந்த சுவற்றில் முட்டி விட்டாள். நிழலும் முட்டியது. சரியான முட்டு. சச்சுவுக்கு அழுகையே வந்து விட்டது. அப்படியே உட்கார்ந்து அழுதாள் சச்சு. நிழலும் அழுதது. அழும்போது நல்லாவே இல்லை. உடனே சச்சு அழுவதை நிறுத்தி விட்டாள். அம்மா வந்து சோறு ஊட்டி விட்டார். அம்மாவின் நிழலும் தெரிந்தது. நிழல் அம்மா நிழல் சச்சுவுக்கு ஊட்டிவிட்டது. சச்சு நிழலைப் பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டாள். அம்மாவுக்கு ஆச்சரியம். ராத்திரி படுக்கப்போனாள் சச்சு. எப்போதும் அம்மா கூடத்தான் படுப்பாள். படுக்கும்போது பார்த்தாள். நிழல் இல்லை. அம்மா விளக்கை அணைத்தார். அவ்வளவு தான் நிழலைக் காணவில்லை. சச்சு இருட்டுக்குள் நிழலைத் தேடினாள். அவளுக்கு அழுகை வந்தது. அழ ஆரம்பித்தாள். அம்மா பதறிப்போனார். “ ஏண்டா.. சச்சு ஏன் அழுறே..? “ என்று கேட்டார். சுவரைக் காட்டி மழலைமொழியில் “ பொம்ம “ அழுதாள். அம்மாவுக்குப் புரிந்து விட்டது. “ சச்சுப்பாப்பா தூங்கப் போறில்ல.. அந்தப் பொம்மையும் அவங்க வீட்டுக்குத் தூங்கப் போயிட்டு.. காலைல நீ எந்திரிக்கும்போது அதும் வரும்..இன்ன..” என்றார். சச்சுவுக்கு அம்மா சொன்னது சரிதான் என்று பட்டது. உடனே அழுகையை நிறுத்தி விட்டு கண்களை மூடினாள். அவள் உதடுகளில் புன்னகை தோன்றியது. சச்சுவின் நிழலும் உறங்கியது. காலையில் சச்சுப்பாப்பா கூட விளையாடணும்ல..
- முன்னோடிகள் - வாண்டுமாமா
வாண்டுமாமாவைக் கொண்டாடுவோம்! அழ.வள்ளியப்பா என்றவுடன் சிறார் பாடல்கள் நம் நினைவுக்கு வரும். அதுபோல் வாண்டுமாமா என்றவுடன் சிறார் இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளும் நம் நினைவுக்கு வருகிறது. சிறார்களுக்கு வாண்டுமாமா எழுதாத விஷயமே இல்லை எனச் சொல்லலாம். அவருடைய இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. கௌசிகன், விசாகன், சாந்தா மூர்த்தி எனப் பல பெயர்களில் அவர் எழுதியிருக்கிறார். இருந்தாலும், வாண்டுமாமா என்கிற பெயரே அவருடைய அடையாளமாக மாறியது. 50 ஆண்டுகளுக்கு மேல் சிறார் இலக்கியம் படைத்து, தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் ஒரு தனி உலகைப் படைத்தவர். 'கோகுலம்' என்கிற சிறார் இதழை உங்கள் அப்பா, அம்மா அல்லது தாத்தா, பாட்டி வாசித்திருக்கலாம். அந்த இதழை வாண்டுமாமாவுக்காகவே கல்கி நிறுவனம் 1972இல் தொடங்கியது. தொடர்ந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அதன் பின், 1984இல் 'பூந்தளிர்' என்கிற சிறார் இதழுக்கு வாண்டுமாமா ஆசிரியர் ஆனார். அந்த இதழ் தமிழ் சிறார் இதழியல் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதற்கு முதல் காரணம் அதில் இடம்பெற்ற ஆங்கில இதழான 'டிங்கிளி'ன் மொழிபெயர்ப்புப் படக்கதைகள். எஞ்சிய இதழை வாண்டுமாமாவின் எழுத்துத் திறமை சிறப்பாக்கியது. கதைகள், சித்திரக்கதைகள், வரலாறு, அறிவியல், பொது அறிவு, சிறார் இதழியல் என சிறார் இலக்கியத்தில் வாண்டுமாமா தொடாத பகுதிகளே இல்லை. இந்தப் பிரிவுகளில் தனித்துவமான முத்திரையை அவர் பதித்திருக்கிறார். நிறைய புதுமை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அவர் உருவாக்கிய பலே பாலு, சமத்து சாரு போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை. தமிழில் சிறாருக்கான சித்திரக்கதைகளை அவர் அளவுக்கு வேறு யாரும் விரிவாகவும் சிறப்பாகவும் முயன்று பார்க்கவில்லை. ஓவியர் செல்லம், ராமு, வினு, கோபன் ஆகியோருடன் இணைந்து பல சித்திரக்கதைகளை அவர் உருவாக்கியிருக்கிறார். ‘கனவா, நிஜமா?', ‘ஓநாய்க்கோட்டை', ‘மர்ம மாளிகையில் பலே பாலு’, ‘கழுகு மனிதன் ஜடாயு’, ‘கரடிக் கோட்டை’ போன்ற சித்திரக்கதைகள் பிரபலமானவை. ‘குள்ளன் ஜக்கு’, ‘புலி வளர்த்த பிள்ளை’, ‘பலே பாலுவும் பறக்கும் டிராயரும்’ போன்ற கதைகள், நெடுங்கதைகள் குறிப்பிடத்தக்கவை. அவர் எழுதி வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்த பல கதைகள், மர்மம் நிறைந்தவையாகவும், குழந்தைகளின் துப்பறியும் ஆற்றலைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. ‘தோன்றியது எப்படி' (4 பாகங்கள்), ‘தெரியுமா, தெரியுமே’,‘தேதியும் சேதியும்’, ‘மருத்துவம் பிறந்த கதை', ‘நமது உடலின் மர்மங்கள்' ஆகியவை அவருடைய பிரபலமான பொது அறிவு / அடிப்படை மருத்துவ நூல்கள். 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கானவை. தமிழின் சிறந்த சிறார் எழுத்தாளர்களில் ஒருவரை வேறு மொழிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், அதில் முதல் வரிசைப் பெயராக வாண்டுமாமாவைச் சொல்லலாம். 1970 முதல் 2000 வரை தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர்களின் உலகில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தது வாண்டுமாமா. 2014இல் 89 வயதில் அவர் காலமானார். தன் வாழ்நாள் முழுவதும் சிறார் எழுத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட வாண்டுமாமாவுக்கு, அரசின் மிகப் பெரிய அங்கீகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது அவருடைய நூற்றாண்டு. இந்த ஆண்டிலாவது அவர் பெயரில் சிறார் இலக்கியத்துக்கான ஒரு விருதை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும்.
- லூகா (LUCA)
லூகா 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அனிமேஷன் திரைப்படம். இத்தாலியின் ஓர் அழகான கடலோரப் பகுதி கதையின் களம். இத்தாலியின் நாட்டுப்புறக் கதைகளில், டிராகன், பாம்பு போலப் பல உருவங்களில் கடல் ராட்சதர்கள் இடம் பெற்று உள்ளார்கள். இந்தப் படத்தின் முக்கிய கதாநாயகர்களும், அந்தக் கடல் இராட்சத இனத்தைச் சேர்ந்த சிறுவர்களே. லூகா என்ற கடல் ராட்சத சிறுவன் கரைக்குப் போக ஆசைப்படுகிறான். ஆனால் மக்களால் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் போகக் கூடாது என்கிறார் லூகாவின் அம்மா. லூகா ஒரு நாள் தன் இனத்தைச் சேர்ந்த ஆல்பர்டோ என்ற சிறுவனைச் சந்திக்கிறான். அவன் கரையில் ஒரு கட்டடத்தில் தனியாக வசிக்கிறான். அவன் லூகாவையும் வரச் சொல்லிக் கூப்பிடுகிறான். எனவே ஒரு நாள் லூகா அம்மாவிடம் சொல்லாமல் கடலை விட்டு வெளியேறுகிறான். அவன் தண்ணீரை விட்டு வெளியே வந்தவுடன் அவன் வாலும் பச்சை நிறமும் மறைகிறது. மனிதனாக உருமாறி விடுகிறான். லூகாவும், ஆல்பர்டும் நண்பர்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒரு வெஸ்பா பைக் வாங்கி, உலகைச் சுற்றி வரக் கனவு காண்கின்றனர். அந்த ஊரில் ‘டிரையத்லான்’ (TRIATHLON) என்று சொல்லப்படும் போட்டி நடக்க இருக்கின்றது. முதலில் கடலில் நீந்த வேண்டும்; பிறகு பாஸ்தா சாப்பிட வேண்டும். அடுத்து பைக் ஓட்ட வேண்டும். இந்த மூன்றையும் தொடர்ச்சியாகச் செய்து முதலில் முடிப்பவரே வெற்றியாளர்! போட்டியில் வென்றால் பணம் கிடைக்கும்; அதைக் கொண்டு வெஸ்பா வாங்கலாம் எனச் சிறுவர்கள் நினைக்கின்றார்கள். ஜூலியா என்ற பெண்ணுடன் சேர்ந்து, போட்டியில் பங்கு பெற முடிவு செய்கிறார்கள். எர்கோல் விஸ்கோந்தி என்பவன், அந்தப் போட்டியில் 5 முறை வென்றவன். அவன் சிறுவர்களை அடிக்கடி மிரட்டித் துரத்துகிறான். ஜூலியா நண்பர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறாள். அந்தப் போட்டி துவங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறார்கள். கடைசியாக லூகா பைக் ஓட்டுகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக மழை பெய்யத் துவங்குகிறது. மழைத் தண்ணீர் பட்டு லூகாவின் உடம்பு பச்சையாக மாற ஆரம்பிக்கிறது. லூகாவுக்கு உதவ, ஆல்பர்டோ ஒரு குடையை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறான். அவனை வில்லன் எர்கோல் தடுத்துக் கீழே தள்ளுகிறான். கீழேயிருந்த ஈரம் பட்டு, அவன் உருவமும் பச்சையாக மாறுகிறது. சிறுவர்கள் இருவரும் கடல் இராட்சதர்கள் என்று தெரிந்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். இருவரும் கொட்டும் மழையில் பைக்கை வேகமாக ஓட்டிப் போகிறார்கள். ஒருவழியாக மிகவும் கஷ்டப்பட்டு, லூகா அணி எல்லைக்கோட்டைத் தொடுகின்றது. “அவர்கள் மனிதர்கள் இல்லை; அதனால் அவர்கள் வென்றது செல்லாது” என்று எர்கோல் வாதாடுகிறான். ஆனால் போட்டியின் நடுவர், லூகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார். அந்த ஊர் மக்கள் கடல் இராட்சதர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொள்கிறார்கள், நண்பர்கள் ஆசைப்பட்டபடி, பரிசுப் பணத்தில் ஒரு வெஸ்பா வாங்குகிறார்கள். ஜூலியா போல் தானும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று லூகா விரும்புகிறான். எனவே ஆல்பர்டோ வெஸ்பாவை விற்றுவிட்டு, லூகா பள்ளியில் சேர ரயில் டிக்கெட் வாங்கிக் கொடுக்கிறான். லூகா ரயிலில் ஜூலியாவுடன் கிளம்புகிறான். ஆல்பர்டோவைக் கட்டித் தழுவிப் பிரியாவிடை கொடுக்கிறான். சிறுவர்களுக்கு நட்பின் மகத்துவத்தை உணர்த்தும் படமிது. மேலும் விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்து, அவர்கள் ரசிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.





