“அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை”
- கமலாலயன்
- Jun 15
- 3 min read

கமலாலயன்: சிறார் பாடல் எழுதுவதில் உங்களுடைய முன்னோடி என நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?
பாவண்ணன்: ம.இலெ.தங்கப்பா அவர்களே இத்துறையில் என்னுடைய முன்னோடி. அவரே எனக்கு வழிகாட்டி நெறிப்படுத்தியவர். ஒருமுறை என்னுடைய பாடல்களைப் படித்துவிட்டு “உன்னுடைய ஆழ்நெஞ்சில் ஒரு சிறுவன் எப்போதும் ஓடிக்கொண்டும் துள்ளித்துள்ளி ஆடிக்கொண்டும் இருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு பாட்டையும் எழுதிமுடித்ததும் அவனுக்குப் பாடிக் காட்டு. அவனுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அது நல்ல பாட்டு. அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே கிழித்துப் போட்டுவிடுவது நல்லது. அவனுக்குப் பிடிக்காததை ஒருபோதும் எழுதாதே”
என்றார். அந்தச் சொல் எனக்குள் ஒலிக்காத நாளே இல்லை. அதைச் சொன்ன
தங்கப்பாவை நினைக்காத நாளும் இல்லை.
கமலாலயன்: உங்கள் பாடல்களைத் தொகுத்துப் புத்தகவடிவில் வெளியிடுவதற்கு முன் குழந்தைகள் நடுவில் அவற்றைப் பாடிக் காட்டி இறுதிப்படுத்துவது உண்டா? அல்லது வேறு எந்த முறையில் அந்தப் பாடல்களை நூலாக்கத்துக்குத் தேர்வு செய்கிறீர்கள்?
பாவண்ணன்: என்னுடைய எல்லாப் பாடல்களின் தகுதியையும் தீர்மானிப்பவன்
எனக்குள் வாழும் சிறுவன். பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கும் வரைக்கும் நான் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு பாட்டையும் எழுதி முடித்ததும் அச்சிறுவன் அதை முதலில் முணுமுணுத்துப் பார்ப்பான். தாளக்கட்டோடு பாடிப் பார்ப்பான். அவனுக்கு உவப்பளிக்காத பாட்டை நான் கருத்தில் கொள்வதே இல்லை. அக்கணமே ஒதுக்கிவைத்துவிடுவேன். என் கண்ணில் படாதபடி வீசி எறிந்துவிடுவேன். அவனுடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் மட்டுமே நான் வைத்திருக்கும் அளவுகோல்.
கமலாலயன்: இசையை முறைப்படி கற்றவர்கள்தான் சிறார் பாடல்களை எழுதமுடியுமா?
பாவண்ணன்: அப்படியெல்லாம் ஒரு விதியும் இல்லை. ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் ஒரு தாளமும் லயமும் இருக்கிறது. அதைப் பழகிப் பழகி நாம் நம்மை
மேம்படுத்திக்கொள்ளலாம். பாடல் வரிகள் ஊற்றெடுத்து வெளிப்படும் நேரத்தில் எந்த வேகத்தோடு வருகிறதோ, அதுவே அப்பாட்டின் தாளம். அது குதிரையின் வேகத்தில் துள்ளித்துள்ளி வந்தால், அது குதிரையின் தாளம். யானையின் வேகத்தில் அசைந்து அசைந்து வந்தால், அது யானையின் தாளம். எந்தத் தாளமாக இருந்தாலும் அதைப் பாடுகிற சிறார்களுக்கும் காதால் கேட்கிற சிறார்களுக்கும் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் இருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம்.
கமலாலயன்: சிறு குழந்தைகளுக்கு எந்த மாதிரியான சந்தம், எந்தத் தாளம், எந்த
ராகங்களில் பாடல்களை அதிகம் எழுதியிருக்கிறீர்கள்?
பாவண்ணன்: பாடல் ஊற்றெடுப்பதற்கு உந்துதலாக அமையும் காட்சி அல்லது
உரையாடல் அல்லது ஓர் அசைவு எந்தத் தாளக்கட்டுக்கு இசைவாக நிகழ்கிறதோ,
அதுவே அப்பாட்டுக்குப் பொருத்தமான தாளக்கட்டு. ஒருநாளும் ஒருவர் தாளக்கட்டை முதலில் தீர்மானித்துவிட்டு அதற்குப் பிறகு பாட்டை எழுதமுடியாது. ஒரு மலர் மலர்வதுபோல அது இயல்பாக நிகழும் ஒரு செயல். நான் எழுதும் ஒவ்வொரு பாடலும் அப்படித்தான் உருவாகிறது. எந்தத் தாளக்கட்டில் அதிக அளவில் பாடல்களை எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் என் நினைவில் இல்லை.
கமலாலயன்: குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள வரிகளோடு பாடல் அமைந்தால்தான் குழந்தைகளால் அந்த வரிகளைப் பின் தொடரவும் பொருளைப் புரிந்துகொண்டு அவற்றை ரசித்து அனுபவிக்கவும் முடியும் என்பது போன்ற வரையறைகளை நீங்கள் முன்வைப்பீர்களா? அல்லது இதெல்லாம் அவரவர் விருப்பம் என்று விட்டுவிடுவீர்களா?
பாவண்ணன்: எழுதுகிறவர்கள் தீர்மானிப்பது என்பதைவிட, எழுதத் தூண்டும் காட்சியும் கருவும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதுதான் முக்கியம். வெறும் நான்கே நான்கு வரிகளைக் கொண்ட சில பாடல்களை தங்கப்பா எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன். அவரே சில சமயங்களில் இருபது இருபத்துநான்கு வரிகள் கொண்ட பாடல்களையும் எழுதியிருக்கிறார். இரண்டு விதங்களிலும் அவர் சிறப்பாக எழுதியிருக்கிறார். சுருக்கம் அல்லது விரிவு என்பதற்கு அப்பால் ஒரு பாட்டுக்கு சுவை மிகமிக முக்கியம். அந்த அம்சத்தில்தான் ஒரு கவிஞன் கவனத்தைக் குவிக்கவேண்டும்.
கமலாலயன்: கவிமணி, பாரதியார், பாரதிதாசன், தமிழ் ஒளி, அழ.வள்ளியப்பா,
பூவண்ணன் உள்ளிட்ட முன்னோடிகளிடமிருந்து சிறாருக்கான பாடல்கள் வகைமைகள் சார்ந்து நாம் கற்பதற்கும் பெறுவதற்கும் என்னென்னவெல்லாம் உள்ளன?
பாவண்ணன்: வாணிதாசன், கி.வா.ஜகந்நாதன், ம.இலெ.தங்கப்பா, துரை.மாணிக்கம் என்கிற பெருஞ்சித்திரனார் போன்ற ஆளுமைகளின் பெயர்களையும் நான் இந்த முன்னோடி வரிசைக் கவிஞர்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முன்னோடிப் படைப்பாளியிடமிருந்தும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிட்டுத் தொகுப்பதும் பகுப்பதும் கல்வியியல் துறைச் சடங்காக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு. மழைநீரை நாம் ஒரு பாத்திரத்தில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியுமா? தொட்டனைத்தூறும் மணற்கேணி போல ஒரு முன்னோடிப் படைப்பாளியின் பாடல்கள் எல்லாம் பாடுந்தோறும் சுரக்கும் கேணிகளைப் போன்றவை. ஓர் ஊற்றுமுகத்தைக் கண்டு முடித்ததும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊற்றுமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும். எங்கும் தேங்கி நின்றுவிடக் கூடாது. சென்றுகொண்டே இருப்பவன் அறிந்துகொண்டே இருப்பான்.
கமலாலயன்: சிறார்களின் மன, அறிவு வளர்ச்சிகளில் சிறார் இலக்கியப்படைப்புகளின் - குறிப்பாக சிறார் பாடல்களின் - முக்கியத்துவம் பற்றி உங்கள் அனுபவங்களிலிருந்து நீங்கள் கூற விரும்புவது என்ன?
பாவண்ணன்: அறிவியல், புவியியல், வரலாறு, கணக்கு என வெவ்வேறு துறைசார்ந்த நூல்களைப் படிக்கும்போது அந்தந்தத் துறை சார்ந்த ஞானத்தை அடைகிறோம். அப்புரிதலின் வழியாக அதே துறையில் மேலும் சில அடிகள் நம்மால் செல்லமுடியுமா என முயற்சி செய்து பார்க்கிறோம். ஆனால் இலக்கியம் சார்ந்த வாசிப்பு அளிக்கும் ஞானம் என்பது வாழ்வியல் ஞானம். உலகியல் ஞானம். எந்தத் துறையின் வழியாகவும் நாம் அடையத்தக்க ஞானத்தைவிட பெரிய ஞானம். சிறார் இலக்கியம் என்பது பேரிலக்கியம் என்னும் ஆலயத்துக்குள் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வாசல். வலையை வீசி மீன் பிடித்துப் பழகுவதற்கு முன்பாக தூண்டில் வீசி மீன் பிடித்துப் பழகுவதுபோல. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், சிறார் இலக்கியம் என்பது ஒரு பயிற்சிக்கூடம். பயிற்சிக்கூடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களால் பேரிலக்கியங்களுடன் தடுமாற்றமின்றி மிக எளிதாகவும் இயல்பாகவும் ஓர் ஒட்டுதலை உருவாக்கிக்கொள்ள முடியும்.
(பேட்டி: எழுத்தாளர் கமலாலயன்)
சிறப்பான நேர் காணல்