சுடரின் ஓளியில் விலகும் இருள்
- உதயசங்கர்
- Jun 15
- 2 min read

ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் சிக்கலான பருவம் வளரிளம் பருவம் அல்லது பதின்பருவம் தான். ஏனெனில் அதுவரை அப்பா அம்மா காட்டிய உலகம் மாறத் தொடங்கும். மனம் அலைபாயும். எது சரி? எது தவறு? என்று அறிய முடியாமல் தடுமாறும். சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும்
பெரியவர்களின் உலகத்தில் உள்ள முரண்பாடுகள் முகத்தில் அறையும். எல்லாவற்றையும் மீற வேண்டும். செய்யாதே என்பதைச் செய்து பார்க்க வேண்டும். செய் என்பதை செய்யவே கூடாது என்ற எதிர்மனநிலை உருவாகும்.
பெற்றோர்களின் கனவுகளைச் சுமக்கும் சுமைதாங்கியாக இருக்கமுடியாது என்ற பிடிவாதம் தோன்றும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு ஒரு உலகத்தைக் காட்டும். ஒவ்வொரு அணுவிலும் காட்டாற்று வெள்ளமென சக்தி கரை புரண்டோடும்.
சாகசமும், உத்வேகமும், நிலைகொள்ளாமல் அலைக்கழிக்கும் பருவத்தில் தான் செய்வதும், தான் சிந்திப்பதும் மட்டுமே சரியென்ற பிடிவாதம் தோன்றும். அதுவரை ஒப்பற்ற ஹீரோவாகத் தெரிந்த அப்பா கொடிய வில்லனாக மாறுவார். ஆனால் உண்மையில் அப்பா வில்லனா? குழந்தையின் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படும் நலம்விரும்பியா?
நீங்கள் வாசிக்க வேண்டிய இளையோர் நாவல் விடுபடும் சுடர்.
மலையாளச் சிறார் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்.பி.வி.சுகுமாரன் எழுதி தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான யூமாவாசுகி மொழிபெயர்த்து சிறார் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு செய்துவரும் பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரென் வெளியிட்ட விடுபடும் சுடர் என்ற இளையோர் நாவல் தந்தைக்கும் மகனுக்குமான உறவைக் குறித்து அழகாகவும் அழுத்தமாகவும் சொல்கிறது.
யதார்த்த வாழ்க்கையைச் சிறார் இலக்கியத்தில் எழுதுவது சவாலான காரியம். அத்தகைய சவாலை எதிர்கொண்டு வெற்றியடைந்திருக்கிறார் பி.வி.சுகுமாரன். எல்லா அப்பாக்களைப் போலவே கிரணைப் பார்க்கும்போதெல்லாம் படி படி என்று கடுகடுத்தபடி இருக்கும் கிரணின் அப்பா எப்படி மாறுகிறார் என்பதும் அப்பாவை நினைத்தாலே கோபமும் பயமும் தோன்ற அப்பாவை வெறுக்கும் கிரண் எப்படி அப்பாவைப் புரிந்து கொள்கிறான் என்பதும் தான் கதை.
பதின்பருவத்தினரின் உளவியலை மிக அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் பி.வி.சுகுமாரன். ஒவ்வொரு அத்தியாத்திலும் கிரணின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் தாழ்வு மனப்பான்மையும் அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதையும் சரியான வழிகாட்டுதலில் கிரணின் மனதில் மெல்ல மெல்ல ஏற்படும் மாற்றங்களையும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார் சுகுமாரன்.
கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளையே சித்தரித்து கதைக்கு நம்பகத்தன்மை வழங்கியிருக்கிறார். எளிமையான மொழிநடையும், பதின்பருவக்குழந்தை எப்படியெல்லாம் சிந்திப்பான் என்ற நுண்ணுணர்வும் நாவலை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.
பதின்பருவத்தில் தான் ஆளுமை உருவாகி நிலை கொள்ளும். அப்படிப்பட்ட காலத்தில் இப்படியான புத்தகங்களை வாசிக்கும்போது பதின்பருவக்குழந்தைகள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் பெற்றோரையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும்.
தங்களுடைய ஆர்வத்தில் பற்றுறுதியுடன் தொடர்ந்து செயல்படவும் உதவும். பெரியவர்கள் வாசிக்கும்போது கல்வியைத் தாண்டி தங்களுடைய குழந்தையின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் துணை நிற்கவும் முடியும். இவற்றைத் தான் விடுபடும் சுடர் நமக்கு உணர்த்துகிறது.
மிக முக்கியமான படைப்பை மலையாளச் சிறார் இலக்கியத்துக்கும், தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கும் கொடையாக வழங்கியிருக்கிற பி.வி.சுகுமாரனுக்கு வாழ்த்துகள்!
வாசித்துப் பாருங்கள்! மாற்றத்தை உணர்வீர்கள்!
மிகச்சிறந்த படைப்பு..
வாழ்த்துக்கள்...