சிறார் இலக்கியத்தின் பெருஞ்சுடர்
- விஷ்ணுபுரம் சரவணன்
- Jun 15
- 2 min read

தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கும் நூறாண்டு கால வரலாறு இருக்கிறது. பெரியவர்கள் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிய பலரும் சிறாருக்கும் எழுதியிருக்கிறார்கள். சிறார் இலக்கியத்தையே தமது முதன்மை தடமென வகுத்துகொண்ட முன்னோடிகளும் ஏராளம். அவர்களில் தனக்கென தனித்த வழியமைத்துகொண்ட மூத்த படைப்பாளி ரேவதி.
சிறுவயது முதலே வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த ரேவதி, ‘குழந்தை இலக்கியக் கழகம்’ நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்கிறார். அங்கு பூவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் அளித்த பயிற்சியினால் ‘பாட்டு வாத்தியார்’ எனும் கதையை எழுதுகிறார். இக்கதை 1952ஆம் ஆண்டு வெளியாகிறது. அதற்கு முன்பே சில கதைகளை அவர் எழுதியிருந்தபோதும் பிரசுரமான முதல் கதை இதுவே. அவரின் 16 வது வயதிலேயே எழுத்தாளராகி விட்டார்.
ஹரிஹரன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், அப்பெயரில் கதைகள் எழுதிகொண்டிருந்தார். அப்போது இவரைச் சந்தித்த அழ வள்ளியப்பா, பெரியவர்களுக்கு எழுத பலர் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எழுத மிகக் குறைந்தவர்களே உள்ளனர். அதனால், தொடர்ந்து குழந்தைகளுக்கு எழுது என்று கூறியதோடு ‘ரேவதி’ எனும் பெயரையும் பரிந்துரைத்தார். அன்றுமுதல் ’ரேவதி என்று பெயரில் குழந்தைகளுக்குக் கதைகள் எழுதத் தொடங்கினார். பெரியவர்களுக்கு எழுது தனது கதைகளை எழுதுவதற்கு முன்பே, குழந்தைகள் மத்தியில் அக்கதைகளைச் சொல்கிறார். அவர்களின் ஏற்பு / மறுப்புக்குத் தக்க அக்கதையை எழுதும்போது மாற்றம் செய்கிறார். அதனால்தான் ஒரு நேர்காணலில், “குழந்தைகளுக்கு எழுதுவதில் மிகுந்த ஆத்மதிருப்தி கிடைத்தது. எழுதுவதை விட அவர்களுக்குக் கதை சொல்வதில் மிகுந்த திருப்தி ஏற்பட்டது” என்கிறார். இந்த அனுபவத்தில்தான் ‘குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி?” எனும் நூலும் எழுதினார்.
குழந்தைகள் கதை என்றாலே நீதிநெறிகளை விளக்குவதுபோல கதைகள் எழுதுவது என்ற சோர்வளிக்கும் அந்த வடிவத்தை மாற்ற முனைகிறார் ரேவதி. கதை எழுதும் வடிவத்தில் மட்டுமல்ல, கதையின் ’கரு’ வைத் தேர்வு செய்வதில் அவரின் சமகால சிறார் எழுத்தாளர்களை விட கவனம் ஈர்ப்பவராக இருக்கிறார். 1934 ஆம் ஆண்டு காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட வருகிறார். அங்கே குளிப்பதற்கு தலித்துகள் அனுமதி இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு குளிக்காமலேயே திரும்பிச் செல்கிறார். இந்தச் செய்தியை அடிப்படையாகக் 1978 ஆம் ஆண்டில் கொடிகாட்ட வந்தவன் எனும் சிறார் நாவலை எழுதினார்.
மிகப் பணக்கார வியாபாரி ஒருவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருப்பவர். அவரின் மகன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கிறார். மகனைப் போலவே பேரனும் ஆகிவிடுவோனோ என்று பயப்படுகிறார் தாத்தா. பேரனை வெகுதூரத்தில் உள்ள பள்ளியில் படிக்க வைக்கிறார். வெள்ளையரை எதிர்க்கும் எவரையும்பிடிக்காத தாத்தா, தன் பேரனுக்கும் அந்தக் கருத்தை மடைமாற்றுகிறார். இதனால் காந்தியைப் பிடிக்காத பேரன், குற்றாலம் வரும் காந்திக்கு கருப்புக் கொடிக்காட்டச் செல்கிறான். அந்த இடைபட்ட காலத்தில் சாதி குறித்தும் தீண்டாமை குறித்தும் அவன் அறிந்துகொள்வதும். வெள்ளைக்காரர்கள் குளிக்கும் அருவியில் இவர்கள் ஏன் குளிக்க முடியவில்லை.... தண்ணீரை ஒருவர் தொட்டால் எப்படி தீட்டாகும் என பேரனின் மனதில் எழும் கேள்விகளும் அதற்கான பதில்களுமே நாவலின் மையம். இந்த நாவல் சிறார் இலக்கியத்தில் பெரும் பாய்ச்சல். அதுவரை இம்மாதிரியான கருப்பொருளை எடுத்து எழுதுவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது. அதை உடைத்தது ரேவதியின் மாபெரும் வெற்றி என்றே சொல்ல்லாம். இந்நாவல் 9 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலான கவனத்திற்குள்ளானது. (இந்த நாவல் இப்போது அச்சில் இல்லாதது பெரும்சோகம்)
இதுமட்டுமல்ல, திருச்செந்தூர் அருகில் உள்ள ஊரில் நடந்த கதையை ‘சிறைமீட்ட செல்வன்’ எனும் நாவலாக எழுதினார். இந்து –இஸ்லாமிய ஒற்றுமை குறித்த கதையாக ‘ராம்-ரசாக்’ அமைந்தது. இதுபோல இன்னும் சில கதைகளைப் பட்டியலிடலாம். அறிவியல் தகவல்களைச் சுவையான கதைகளாக மாற்றும் பாணியையும் ரேவதி கடைபிடித்தார். மின்கல மாதவன் போன்ற நூல்களை உதாரணமாகச் சொல்லலாம். இப்படி 90க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் ரேவதி.
கனமான கதை மையம், ஆனால், அதை நம்மைச் சுற்றியுள்ளவர்களை கதாபாத்திரங்களாக்கி, எளிமையான மொழிநடையில் படிக்கையில் புதியதோர் அனுபவத்தைத் தருவதே ரேவதியின் எழுத்து பாணியாக இருந்தது.
மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர், பின்னாளில் கோகுலம், தினமணி, பூந்தளிர் உள்ளிட்ட சிறார் இதழ்களில் பெரும் பங்களித்தவர். அவ்விதழ்களுக்கு வரும் குழந்தைகளின் படைப்புகளைத் திருத்துவதை மனதிற்கு நெருக்கமான பணியாகக் கருதினார். அதை இவர் திருத்தினாலும் இவர் பாணிக்கு அக்கதையை மாற்றாமல் குழந்தைகளின் மொழிநடையிலேயே இருக்கும்படி செய்வதையே விரும்பியவர்.
குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளிலு, குழந்தைகளை ஈர்க்கும் கதை சொல்லியாகவும், தேர்ந்த இதழாளராகவும் பன்முகங்களில் இயங்கியவர் ரேவதி. குறிப்பாக, சமூகம் சார்ந்த கதை மையங்களை குழந்தைகளிடமும் பேச வேண்டும் என்று அவர் துணிச்சலோடு முன்னெடுத்த முயற்சிகள்தாம் இன்றைய சிறார் இலக்கிய வெளிக்கு பெரும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. பலருக்கும் அப்படைப்புகளே நல்ல வழிகாட்டியாக விளங்கி வருகின்றன.
சிறார் இலக்கியத்தில் ஆகச் சிறந்த படைப்புகளைத் தந்த ரேவதி மே 09 இரவு மரணம் அடைந்தார். இது சிறார் இலக்கியத்திற்கு மாபெரும் இழப்பு. ’கொடிகாட்ட வந்தவன்’ நூல் வேண்டும் என ஒருமுறை அவரிடம் தொலைப்பேசியில் கேட்டபோது, ‘தன்னிடமும் அந்தப் பிரதி இல்லை. உங்களுக்கு கிடைத்தால் எனக்கும் கொடுங்கள்’ என்றார். அந்த நூலுக்கு மட்டும் அல்ல, அவரின் முக்கிய நூல்கள் தற்போது வாசிக்கக் கிடைக்க வில்லை. அதை மறுவெளியீடு கொண்டுவருவதும் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலிகளில் ஒன்றாக இருக்கும்.
நன்றி: தமிழ் இந்து
Comments