top of page

இயலில் தேடலாம்!

337 results found with an empty search

  • நவீனச் சிறார் இலக்கியத்தில் புதிய பாதையை உருவாக்கியவர்

    கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது. இதுவரை அண்டை மாநில மொழிகளில் வெளிவரும்  சிறார் படைப்புகள் குறித்த வியப்பிலிருந்த  தமிழ்ச்சிறார் இலக்கியம் இப்போது அவர்களே வியக்கும்வண்ணம் புதிய திசைகளில் புதிய சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், சாதிப்பாகுபாடு, பாலினப்பாகுபாடு, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், போன்ற சமகாலப்பாடுபொருட்களைப் படைப்புகளில் பேசத்தொடங்கியிருக்கிறது.  தன்னுடைய தனித்துவமான படைப்புகள் மூலம் புதிய திசையில் தடம் பதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025- ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய புரஸ்கார் விருது அவர் எழுதிய ஒற்றைச்சிறகு ஓவியா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருப்பது அர்ப்பணிப்பு மிக்க அவருடைய உழைப்புக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம்.   கவிஞராகவும், இதழாளராகவும் சிறார் எழுத்தாளராகவும் விளங்குகிற விஷ்ணுபுரம் சரவணனின் கயிறு என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த இரண்டு வருடங்களில் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மாணவர்களிடம் தலைகாட்டும் சாதிப்பாகுபாடு குறித்து அவர்களுடைய தோளில் கை போட்டு உரையாடும் அற்புதமான படைப்பாகக் கயிறு கதைப்புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் வித்தியாசமான, தனித்துவமான கருப்பொருளுடன் எழுதும் விஷ்ணுபுரம் சரவணன் ஒற்றைச்சிறகு ஓவியாவில் சமகாலத்தின் மிகமுக்கியமான பிரச்னையைப் பற்றி குழந்தைகளிடம் பேசுகிறார். இந்த நூலை பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரென் வெளியிட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு துப்பறியும் கதை போல ஐந்து நண்பர்களுடன் தொடங்கும் கதை முதல் அத்தியாயத்திலேயே வேகமெடுக்கத் தொடங்குகிறது. குழந்தைகளின் ஆரவத்தைத் தூண்டும் வகையில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று யோசிக்க வைக்கிறது. கதை இப்படித்தான் போகும் என்ற நம்முடைய அனுமானங்களை முற்றிலும் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஐந்து நண்பர்களில் ஓவியாவுக்கு சிறகு முளைத்தவுடன் கதை ஃபேண்டசியாக மாறிவிடுகிறது.  ஃபேண்டசியின் வழியே ஏன் நிலத்தில் மண்புழுக்கள் காணாமல் போயின? என்ற கேள்வியை எழுப்பி மெல்ல மெல்ல இரசாயன உரங்களின் பயன்பாட்டினால் நுண்ணுயிர்கள் வாழத்தகுதியற்றதாக மாறுகிற விஷயத்தையும், எண்ணெய்க்கம்பெனியினால் தண்ணீர் மஞ்சள் நிறமாகி குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறிவிடுகிற ஆபத்தையும், எண்ணெய்க்கசிவினால் நெல்வயல்கள் அழியும் அபாயத்தையும் அடுத்தடுத்துச் கதையின் ஓட்டத்தில் அழகாகச் சொல்லிக் கொண்டே போகும் போது சிறார்கள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்க வேண்டிய பிரதியாக மாறுகிறது ஒற்றைச் சிறகு ஓவியா. மண்புழு ஓவியம், தண்ணீர் காட்டும் பாதை, கண்களின் வழியே கனவைப் பார்த்தல் என்று குழந்தைகளை ஈர்க்கும் மாய யதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கிறது ஒற்றைச் சிறகு ஓவியா. அந்த ஊரின் மக்கள் ஒன்று திரண்டு போராடுகிற காட்சியும் கதையினூடே சிறார்களின் பார்வையிலேயே சொல்லியிருப்பது சிறப்பு. நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் முற்றிலும் எதிர்பாராத புதிய புதிய திருப்பங்களையும் சுவாரசியமான முடிச்சுகளையும் சவால்களையும், சிறார்களின் வாசிப்புக்கேற்ற ருசியில் வழங்கியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். குழந்தைகளே அந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவதாக்க் கதை முடியும் போது குழந்தைகளுக்கு நம் சமகாலப் பிரச்னையான சுற்றுச்சூழல் குறித்து நிறைய விஷயங்களை அறிந்திருப்பார்கள்.  விஷ்ணுபுரம் சரவணனின் நீலப்பூ, என்ற நாவலும் சாதிச்சண்டையால்  நடக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் குழந்தைகளின் உளவியலில் உருவாகும் மாற்றங்களையும் பேசுகிறது.. அவருடைய ஒவ்வொரு நூலிலும் சமூகத்தின் மிக முக்கியமான பிரச்னைகளைக் கலை அமைதியுடன் மிகச் சிறப்பாக, குழந்தைகள் வாசிக்கும் எளிய மொழிநடையில் படைத்திருக்கிறார்.  தன்னுடைய சொந்த ஊரான விஷ்ணுபுரத்தின் மீதான பிரியத்தினால் தன்னுடைய பெயரின் முன்னொட்டாகச் சேர்த்துக் கொண்டிருக்கிற விஷ்ணுபுரம் சரவணன் ஒரு கவிதை நூல், நான்கு சிறார் நாவல்கள், ஒன்பது சிறார் சிறுகதை நூல்கள், நான்கு பெற்றோர் ஆசிரியருக்குமான நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை  நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களின் இணையாசிரியராகப் பணிபுரிகிறார். குழந்தைகள் வாசிப்பின் அவசியம் குறித்தும் சிறார் இலக்கியம் எழுதுவது எப்படி என்பதைக் குறித்தும் புத்தகக்கண்காட்சிகளிலும், பள்ளிகளிலும் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.  தன்னுடைய படைப்புகளின் வழியே நவீன தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலத்தை முன்னகர்த்திக் கொண்டு செல்லும் விஷ்ணுபுரம் சரவணனின் ஒற்றைச் சிறகு ஓவியாவுக்குக் கிடைத்திருக்கும் பாலசாகித்ய விருது தமிழ்ச்சிறார் இலக்கியத்திற்கு மற்றுமொரு புதிய வண்ணத்தைச் சேர்த்திருக்கிறது. அந்த வண்ணத்தின் ஒளியில் புதிய மாற்றங்களை, புதிய பாதையை உருவாக்கும் கலைஞனாக விஷ்ணுபுரம் சரவணன் திகழ்கிறார். ---- உதயசங்கர் (நன்றி - தமிழ் இந்து)

  • குழந்தை இலக்கியம் பேசும் சாதி

    ஆங்கிலத்திலிருந்து தமிழில் - வே.சங்கர் தமிழ்நாட்டில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் சாதி பற்றிய கள்ளமௌனங்களை வேரறுத்து உரத்தகுரலில் பேசத்தொடங்கியிருக்கிறது. ”தற்போது, தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் தோன்றியிருக்கும் புதிய அலை, புனைக்கதைகள் மற்றும் மீளுருவாக்கம் செய்யப்படும் புராணக்கதைகள் மூலம் சாதியை நேரடியாக எதிர்கொள்கிறது. இவை இளம் வாசகர்கள் மத்தியில் சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்ப ஊக்குவிக்கின்றன”. இளம் வாசகர்கள், நிஜவாழ்க்கையில் எதிர்கொள்ளும் அநீதிகளைப் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த சிறார் கதைகளின் வழியாக, சாதி ஆணவங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறத்தொடங்குகிறார்கள். அவை நீண்டகாலமாக நிலவிவரும் சமூக மேலதிகார வர்க்க அமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இது வெறும் தேவதைக்கதைகள் அல்ல. நீதிக்கதையும் அல்ல. சாதி பற்றிய கதை. திருச்சி மாவட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மகிழ்நிலா ‘நீலப்பூ’ என்ற புத்தகத்தை வாசிக்கும்வரை, இவ்வுலகம் மீதான பார்வை இத்தனை பெரிதாக மாறும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது மாறியது. அவள் வாசித்த ‘நீலப்பூ’, என்ற நாவல் மகிழ்நிலாவின் வயதொத்த கீர்த்தியின் கதையைச் சொல்கிறது. சாதிவெறியால் உண்டான வன்முறையால், அவளது கிராமமே எவ்வாறு நாசமாகிறது என்பதை அவள் நேரில் காண்கிறாள். அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவுடன், மகிழ்நிலா, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு ”ஒரு அமைதியான கிராமமே சாதி வன்முறையால் அழிந்து, அப்பாவி மக்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகிப் போகிறதென்றால், உலகம் ஒரு பேரழிவை நோக்கிப் போகிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது” என்று ஒரு உருக்கமானக் கடிதம் எழுதியிருந்தாள். அதன் உடனடித் தாக்கம்: பெரும்பாலும், பெரியவர்கள்தான் சாதி எதிர்ப்பு இலக்கியங்களையும், அதன் அரசியல் நுணுக்கங்களையும் வாசிக்கிறார்கள். ஆனால், இப்பொழுது, புதிய தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள், சிறார்களுக்கான கதைகளை எழுதுகிறார்கள். இவர்களது கதைகள் சாதி ஒடுக்குமுறையை அடையாளம் காணவும், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வையும் வழங்குகின்றன. ’நீலப்பூ’ கதையில், கீர்த்தியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் முக்கியமான சம்பவம், வேறு சாதியைச் சேர்ந்த அவளது நண்பனும் வகுப்புத் தோழனுமான அருண், ஒரு கூட்டத்துடன் வந்து தலித் வீடுகளை அடித்து நொறுக்கி நாசமாக்கும் காட்சி. அதன் தொடர்ச்சியாக வன்முறை மூண்டு கிராமத்தையே அழிவுக்குள் இட்டுச்செல்கிறது. இருப்பினும், கீர்த்தி கொஞ்சமும் பயமின்றி தனியாக அருண் குடியிருக்கும் பகுதிக்கு நடந்து சென்று, அவனது நோட்டுப்புத்தகத்தைத் திருப்பித் தருகிறாள். அவளது துணிச்சலான பயணம் மற்றும் அதில் சந்திக்கும் மனிதர்கள்தான் இந்தக் கதையின் மையக்கரு. இந்தப் புத்தகம் எழுப்பும் கூர்மையான கேள்விகள்: • சாதி அடிப்படையிலான வன்முறையால் யாருக்கு லாபம்? • ஏன் தலித் மாணவர்களின் கல்வி வளங்கள் எப்போதும் முதல் இலக்காக தாக்கப்படுகின்றன? • சாதி எப்படிக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கிறது? படங்களுடன் வெளியான நீலப்பூ என்ற இந்நாவல் வானம் பதிப்பகத்தால் டிசம்பர் 2021-ல் வெளியிடப்பட்டது. தமிழ் (குழந்தைகள்) சிறார் இலக்கியம், ஆங்கில சிறார் இலக்கியத்தில் உள்ளதைப் போலவே, 3-8 வயது (மழலை இலக்கியம், தொடக்கநிலை வாசகர்களுக்கானது), 8-12 வயது (சிறார் இலக்கியம், மத்தியநிலை வாசகர்களுக்கானது), 12-18 வயது (பதின்பருவ இலக்கியம்,அல்லது வளர் இளம் பருவ இலக்கியம்) ஆகிய வயது பிரிவுகளுக்கேற்ப அமைந்துள்ளது. சாதிப்பாகுபாடு குறித்த கதைகள் பெரும்பாலும் கடைசி இரண்டு பிரிவுகளில்தான் அதிகமாக இடம்பெறுகின்றன. மேலும், அந்தக் கதைகளில் வரும் மையக் கதாபாத்திரங்கள், பெரும்பாலும், வாசகர்களின் வயதொத்தவர்களாகவே இருப்பார்கள். தன் 13 வயது மகனுக்காக ‘நீலப்பூ’ புத்தகத்தை வாங்கிய கோயமுத்தூரைச் சேர்ந்த பெற்றோரில் ஒருவர் Frontline–க்குக் கூறியதாவது: “ஒரு குழந்தை பத்துவயது நிறைவடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சாதியைப் பற்றிய பரந்த உரையாடல்களைத் தொடங்கலாம். ஆனால், அவர்கள் தங்களது கருத்துக்களைச் சிந்திக்கத்தொடங்கும் பதின்ம வயதில், குறிப்பாக இடஒதுக்கீடு பற்றிக் கேள்விப்படும் காலகட்டத்தில், அவர்களுடன் அது குறித்தான தீவிரத்தன்மையைப் பேசுவது மிகமிக அவசியம்” பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணுபுரம் சரவணன், இந்த வகை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். “நான் பல பரிமாணங்களுடன் கூடிய கதையை எழுதவேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், குழந்தைகள் அது பற்றிப் புரிந்துகொள்ளக் கொஞ்சமாவது போராட வேண்டும். அப்போதுதான், அது குறித்தான புரிதல் ஆழமாக அவர்கள் மனதில் பதியும்” என்று Frontline-க்கு கூறினார். 2022-ல் எழுத்தாளர் விழியன் எழுதிய ’தேன்முட்டாய்’ (புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு) கதையில், ஒரு சாதி வெறிகொண்ட கடைக்காரர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தப் பள்ளி மாணவர்களுக்கு மிட்டாய் கொடுக்க மறுக்கும் சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தக் கதை தமிழ்நாட்டில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொலியின் தழுவலாக அமைந்திருந்தது. தர்மபுரி, விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகள்தான் ‘நீலப்பூ’ கதையின் அடிநாதமாக விளங்கியது. விஷ்ணுபுரம் சரவணனின் ‘கயிறு’ என்ற சிறுநூல் 1 லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுத்தீர்ந்தது தமிழ் சிறார் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்தப் புத்தகம் பெரியார் ஈ.வே.ராமசாமியின் மேற்கோளுடன் தொடங்குகிறது: “எந்தவொன்றையும் சுதந்திரமாக, சுத்த அறிவுகொண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி. அப்போது தான் காலத்திற்கேற்ப அது முன்னேற்றப் பாதையில் உன்னை அழைத்துச் செல்லும்” ’கயிறு’ என்ற கதையில், ஏழாம் வகுப்பு படிக்கும் செழியனை ஒரு கடைக்காரர் குறிப்பிட்ட சாதியை அடையாளப்படுத்தும் கயிறு ஒன்றைக் கையில் அணியச் சொல்கிறார். அவனது தாய் வளர்மதி, தெளிவாகவும், தீவரமாகவும் செயல்படும் கதாப்பாத்திரம். பொதுவாகச் சொல்லப்படும், ‘செய் / செய்யாதே’ என்று கட்டளையிடும் பெற்றோரைப்போல் இல்லாமல், அவனுள் ’ஏன்?, எதற்கு?’ என்ற கேள்வியைக் கேட்க ஊக்குவிக்கிறாள். முடிவில் உண்மையைத் தெரிந்துகொள்ளும் செழியன் அதற்கேற்பத் தானாகவே செயல்படுகிறான். சரவணன், சாதியைச் சரியான சமூகப் பின்னணியில் வைத்துப் பேசுகிறார். கதையின் முடிவில் நீதிபோதனை செய்வதைத் தவிர்க்கிறார். உண்மையை அதன்போக்கில் உணரச்செய்கிறார். ’தேன்முட்டாய்’ சமூகப் புறக்கணிப்பை நேரடியாக எதிர்கொள்ளும் கதை. ஆனால், ’கயிறு’ சாதிப் பிரிவினையை வெளிப்படையாகக் காட்டும் கதை. இவை இரண்டும் தற்போது மிகமுக்கியமான நூல்கள். ஏனெனில், சமீபத்தில் குறிப்பாகத் திருநெல்வேலியில், பள்ளி மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஆகஸ்டில், திருநெல்வேலி நாங்குநேரியில், ஒரு தலித் சிறுவனும் அவனது சகோதரியும் உயர்சாதி மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்த்ரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. அவர் 2024 ஜுன் மாதத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ”கையில் கட்டப்படும் கயிறு, நெற்றியில் வைக்கப்படும் குறியீடுகள் போன்ற சாதி அடையாளங்களைத் தடைசெய்யவேண்டும். பள்ளிகளின் பெயர்களிலிருந்து சாதி சம்பந்தப்பட்டப் பட்டங்களை அகற்றவேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். இங்கேதான் சாதிஎதிர்ப்புக்கதைகள் ஒரு இலக்கிய எதிர்மருந்தாக மாற்றமடைகின்றன. சரிதா ஜோவின் ‘சாதித்த ஜோதி’ என்ற சிறுகதை, சின்னத்துரையின் நிஜவாழ்க்கையிலிருந்து உருவாகியுள்ளது. இதில் சாதி வன்முறைத் தாக்குதலில் தன் காலை இழந்த ஒரு சிறுமி பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் தனது திறமையை நிரூபிக்கிறாள். உண்மையில், சின்னத்துரையும் பல எதிர்ப்புகளைத் தாண்டி, 12-ஆம் வகுப்பில் 496/600 மதிப்பெண்கள் பெற்று தமிழக முதல்வரிடம் பாராட்டுக்களைப் பெற்றார். எழுத்தாளர் விழியன் எழுதிய மலைப்பூ (புக்ஸ் ஃபார் சில்ரன்,2021) என்ற சிறார் நாவல் கல்வியில் உள்ள அமைப்புசார் சமத்துவத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறது. இக்கதையின் முக்கியக் கதாப்பாத்திரமாக வரும் லஷ்மி, மலைவாழ் பகுதியிலிருந்து தினமும் ஐந்துகிலோமீட்டர் தூரம் நடந்தும், மிதிவண்டி மற்றும் பேருந்தில் பயணித்தும் பள்ளிக்கூடம் சென்று கல்வி பயிலும் ஆறாம் வகுப்பு சிறுமி. அவளது வீட்டில், கழிப்பறையோ, மின்விசிறியோ இல்லை. அவள் நகரப்புறத்திலிருந்து கல்விகற்க வரும் மற்ற மாணவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அவளது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டிருப்பதை உணர்கிறாள். எழுத்தாளர் விழியன், கதை ஓட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை (NCSC) ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியிருக்கிறார். லட்சுமி என்ற கதாபாத்திரம், திண்டுக்கல் அருகே உள்ள சின்னமலைப் பகுதியில் விழியன் சந்தித்த உண்மையான ஒரு சிறுமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தக் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, பலமுறை மறுபதிப்பாகியிருக்கிறது. மேலும், இயக்குநர் வெற்றிமாறனின் கவனத்தையும் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான நம்பிக்கையுடனும் சமூக நீதியுடனும் எழுதப்பட்ட இந்தப் புத்தகங்கள், குழந்தைகளுக்குக் கல்வி செய்யத்தவறிய மற்ற விசயங்களை அதிகம் கற்பிக்கின்றன. பெற்றோர்கள் காலம்காலமாகக் கொண்டிருக்கும் தங்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய தூண்டுகின்றன. “சாதியைப் பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திக்கச் செய்வதற்காக, குழந்தைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். சாதி எண்ணங்களில் அதிகமாக ஊறிப்போனவர்கள் அவர்கள்தான்.” என்று விழியன் கூறுகிறார். இதிகாசங்கள் மீதான மீள்பார்வை. சரவணன், விழியன் மற்றும் சரிதா ஜோ ஆகியோர் சாதி சமத்துவக் குறைபாடுகளையும், அதன் சமூகத்தாக்கத்தையும் பதிவுசெய்கின்ற அதே வேளையில், பாலசாஹித்ய புரஸ்கார் விருது பெற்ற உதயசங்கர், இந்து இதிகாசங்களில் காணப்படும் சாதிய அடுக்குகளில் உள்ள அமைப்பை நேரடியாக கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலம், அதன் மீதான விவாதத்தை மேலும் ஒரு படி முன்னேற்றுகிறார். கட்டை விரலின் கதை (வானம் பதிப்பகம், 2023) எனும் நூலில், உதயசங்கர் மகாபாரதத்தில் உள்ள ஏகலைவனின் கதையை மறுபார்வையிடுகிறார். ஏகலைவனின் குருபக்தியைப் போற்றும் பாரம்பரியக் கதையமைப்பை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். ஒரு பழங்குடி வில்வீரனாகிய ஏகலைவனிற்கு, தேவதத்தனாகிய துரோணாச்சாரியாரின் பயிற்சி அவசியமா?” என்ற கேள்வியை நம்முன்னால் வைக்கிறார். இவர், குறிப்பாக 1990களுக்குப் பிறகு, இந்துத்துவா வலதுசாரிகளால் சாதியமேலாண்மையைப் புனிதப்படுத்த இதிகாசங்கள் எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது என்று விமர்சிக்கிறார்.. ஏகலைவன் மற்றும் துரோணாச்சாரியாரின் கதை பக்திப்போர்வையின்கீழ் சாதிக்கொடூரத்தைக் மறைக்க நுட்பமாகப் புனையப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுப்பார்வையாக, ஒடுக்கப்பட்டோர் வரலாற்று எதிர்வாதத்தைக் எழுத விரும்பினேன்,” என்று கூறும் இவருக்கு, இந்த எண்ணம் தமிழ்த் தெருநாடகக் கலைஞர் பிரளயன் எழுதி இயக்கிய ’உபகதை’ என்ற நாடகத்தை பார்த்த பிறகு தோன்றியிருக்கிறது. ’பறம்பின் பாரி’ என்ற நூலில், சங்க காலத் தலைவன் பாரியின் எழுச்சியை உதயசங்கர் ஆராய்கிறார். அதோடு, ஆரியர்களின் இடப்பெயர்ச்சி, திராவிட அடையாளம், மற்றும் ஆதிப்பொதுவுடமைச் சமூகத்திலிருந்து தனியுடமைச் சமூகம் நோக்கிச் செல்லும் பரிணாம மாற்றத்தை கதைகளோடு நுட்பமாக இணைக்கிறார். கவிஞர் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு, சு. வெங்கடேசனின் ’வீரயுக நாயகன் வேள்பாரி’, மற்றும் ஆர். பாலகிருஷ்ணனின் ’சிந்து வெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ போன்றவற்றிலிருந்து ஆதாரத்தைத் திரட்டித்தருகிறார். தீண்டாமை என்ற தலைப்பைத் தொடுதல் முன்னேறிய சட்டங்கள் அமலில் இருந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை பல இடங்களில் இன்னும் பரவலாகவே காணப்படுகிறது. சாதி முறையில் மேல்அடுக்கைச் சேர்ந்த இந்துப் பெற்றோர்கள் தலித் அங்கன்வாடி பணியாளர்கள் சமைத்த உணவைத் தொட மறுப்பது முதல், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சாதிவழி அவமானங்கள் வரை பல்வேறு உருவங்களில் இது தொடர்கிறது. சமீபத்தில் மறைந்த எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன் எழுதிய பிரேமாவின் புத்தகங்கள் (புக்ஸ் ஃபார் சில்ரன், 2024) என்ற நூலிலுள்ள கதைகள் இந்த விசயத்தை நேரடியாக எதிர்கொள்கின்றன. அதில் இடம் பெற்றுள்ள "பார்வதி அத்தையின் பொங்கல்" என்ற சிறுகதை, தலித் அங்கன்வாடி பணியாளர்கள் மீதான அடக்குமுறைகளையும் அவமானங்களையும் உருக்கமாக விவரிக்கிறது. இதேபோல், "ஆறறிவு" மற்றும் "மனிதர்களுக்குள் வேறுபாடு உண்டா?" போன்ற கதைகள், சாதி சார்ந்த மேலதிகாரப் போக்குகள் மற்றும் ஒன்றாக அமர்ந்து உண்பதில் உள்ள தடைகளை, சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தும் கதைகளாக உள்ளன. தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிடும் பாடப்புத்தகங்களில்: ”தீண்டாமை ஒரு பாவச்செயல்”. ”தீண்டாமை ஒரு குற்றச்செயல்”. ”தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊடக அறிக்கைகள், ”இந்தக் கொடூர நடைமுறை இன்னும் பல இடங்களில் தீவிரமாகக் காணப்படுகிறது” என்கிறது. கோ.மா.கோ. இளங்கோ எழுதிய "சஞ்சீவி மாமா" (புக்‌ஸ் ஃபார் சில்ட்ரன், 2017) என்ற பாதி-புனைவுக் கதையில், ஒரு தலித் துப்புரவுப்பணியாளருக்கும், பேச்சிராசு என்ற 11 வயது சிறுவனுக்கும் இடையிலான நட்பைக் கருணையுடன் படம் பிடிக்கிறது. இது எழுத்தாளர் இளங்கோவின் சொந்த அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டது. சாதிக்கொடுமையையும் கருணையின் சாத்தியத்தன்மையைக் குழந்தைகள் உணரக்கூடிய கதையாக இது அமைந்துள்ளது. இதைத் தலித் அல்லாத எழுத்தாளர் ஒருவர், சாதிச்சலுகையைத் தெளிவாக உணர்ந்து, ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதியிருக்கிறார். முந்தைய காலப் படைப்புகள் குழந்தைகள் இலக்கியத்தில் சாதி பற்றிய எழுத்துகள் புதிதல்ல. எஸ். ஹரிஹரன் (ரேவதி என்ற புனைபெயரில்) எழுதிய 'கொடி காட்ட வந்தவன்' (1978) கதையின் ஆரம்பக் காட்சிகளைச் சரவணன் குறிப்பிடுகிறார். இந்நாவல், ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்த, போராளியான குழந்தை மோகனைப் பின்தொடர்கிறது. விடுதலை இயக்கத்தால் தூண்டப்பட்டு, சாதி மற்றும் சாதியில் நிலவும் வர்க்க அடுக்குகளை எதிர்கொள்கிறான். ஒரு துணைக்கதையில், காந்தி, தாழ்சாதிக்காரர்களுக்குக் குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை என்பதை அறிந்து, அந்த அருவியில் குளிக்காமல் விலகிச் செல்கிறார் — இது கேட்பதற்கும் வாசிப்பதற்கு மென்மையாக இருந்தாலும், பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “நான்கு வருடங்களுக்கு முன், ரேவதி சொன்னது என்னவென்றால், “அது 25,000 பிரதிகளுக்குமேல் விற்றது. அது சாதி குறித்ததாக இருந்தது. ஆனால் இன்று யாரும் அதை மேற்கோள் காட்டுவதில்லை. நானே சமீபத்தில் தான் வாசித்தேன்.” என்று சரவணன் கூறுகிறார். முந்தைய காலங்களில், சாதி தொடர்பான விஷயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசத் தமிழ் சிறுவர் இலக்கியங்கள் எப்போதாவதுதான் தோன்றின; பூந்தளிர், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களில் அல்லது சில தொகுப்புகளில்தான் அவை இடம் பெற்றன. எனினும், அந்த எழுத்துகள் பெரும்பாலும் சிறுவர்களுக்கான முக்கிய வாசிப்பாக மாற்றப்படவில்லை. இன்றுபோல் திட்டமிட்டு உருவாக்கப்படும், தொடர்ந்து வளரும் சாதி எதிர்ப்பு இலக்கிய மரபு அப்போது இல்லவே இல்லை. எழுத்தாளர் தெய்வசிகாமணி சாதி எதிர்ப்பு அரசியலை சிறுவர் இலக்கியங்களில் எழுதியிருக்கிறார் என்று சரவணன் குறிப்பிடுகிறார். ஆனால், அந்த நூலின் ஒரு பிரதிகூட இன்று எங்கும் கிடைக்கவில்லை. 1987ஆம் ஆண்டு வெளியான 'வேதம் புதிது' திரைப்படத்தின் உள்ளடக்கம் அந்த நூலுடன் ஒப்பிடக்கூடியதாக இருந்ததாக அவரது மகன் கூறினார். இந்தவகையில், அந்தப் புத்தகம் இலக்கியத்தின் மிகச்சிலத் தடயங்களில் ஒன்றாக மட்டுமே உள்ளது. ஆவணப்படுத்தாமையால் ஏற்படும் பாதிப்பு: இதுபோலக் காணாமல்போன படைப்புகள் மற்றொரு முக்கியச் சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. தமிழில் குழந்தைகளுக்கான, ஆரம்ப கால சாதி எதிர்ப்புக் கதைகள் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஆவணப்படுத்துதலில் குறைபாடுகள் இருந்தபோதிலும், சரவணன் சில முக்கியமான ஆரம்பக்கட்ட உதாரணங்களை கண்டறிந்துள்ளார்: “எழுத்தாளர் நா. பிச்சமூர்த்தி 1930-40களில் ‘காக்கைகளும் கிளிகளும்’ என்ற கதையை எழுதியுள்ளார். 1950-களுக்குப் பிறகு அழ. வள்ளியப்பா ‘இரு காக்கைகள்’ என்ற கதையை எழுதியுள்ளார். இரண்டும் சாதியை மையமாகக் கொண்ட பின்னணியுடன் அமைந்துள்ளன. அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களா என்பதைக் கண்டறிய முடியவில்லை, ஆனால் இருவருக்கும் சாதியைக் குறித்து எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது என்பது உறுதி.” பிச்சமூர்த்தியின் எழுத்துகள் பின்னாளில் மறுபடியும் கவனிக்கப்படத் தொடங்கின. சுதந்திரப் போராளியும் சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான சி.சு.செல்லப்பா, 1977 ஆம் ஆண்டு எழுத்துப் பிரசுரம் மூலம் அவரது கதைகளை "காக்கைகளும் கிளிகளும்" என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். இதில், ஒரு கிளி தன்னைச் சவர்ண சாதியினர் என நினைத்து, கடுமையான புயலின்போது காக்கைகளின் கூடுகளில் தங்க மறுக்கும் ஒரு உருக்கமான கதை இடம் பெற்றுள்ளது. இயற்கைச் சீற்றத்தின் மூலம், சாதி பெருமையின் அழிவை இறுதியில் வெளிப்படுத்துகிறது. இந்த ஆரம்ப கால எழுத்துகளில் சாதி பற்றிய விவாதங்கள் இடம்பெற்றிருந்தாலும், குழந்தைகளுக்கான கதைகளில் வெளிப்படையான சாதி பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன் எழுதியிருக்கலாம் என பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன் Frontline இதழுக்கு தெரிவித்தார். “அப்படி இருந்தாலும், கதைகளில் பயன்படுத்தப்படும் மொழி வழியில் நாம் அந்தந்தச் சாதிகளை அடையாளம் காண முடிகிறது,” என்றார் வள்ளியப்பன். இந்த மென்மையான அணுகுமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. ஒரு சிறார் இலக்கிய எழுத்தாளர் கூறுவதுபோல், மதிப்புமிக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர் பெ.தூரனின் கதைகளும் சமூகப் பிரச்சனைகளை வெறும் மேம்போக்காக மட்டுமே தொட்டுச்செல்கின்றன. இது இன்றைய காலத்தில் வெளிப்படையாக சாதியை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுடன் பெரும் வித்தியாசத்தை உருவாக்குகிறது. சாதியை நேரடியாகக் கொண்டாடும் அல்லது எதிர்ப்பது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் கடந்த பத்தாண்டுகளில் தான் தீவிரமாகத் தோன்றத் தொடங்கியுள்ளன. அரசியல் பதிப்பு வெளியீடுகள் இதுபோன்ற கதைகளைப் பரவலாகப் பாரதி புத்தகாலயத்தைச் சார்ந்த "புக்ஸ் ஃபார் சில்ரன்" வெளியிட்டு வருகிறது. நகராஜன் கூறியபடி, 2002-ல் "புக்ஸ் ஃபார் சில்ரன்" தோன்றியதன் மூலம் குழந்தைகள் இலக்கியப்பதிப்பு உலகில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது, காரணம், அந்த வெளியீடு பாரம்பரியமாக சொல்லப்படும் கதைகளில் இருந்து விலகி, சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட கதைகளை வெளியிடத்தொடங்கியுள்ளன. அதேபோல், நூல்வனம் நிறுவனத்தின் வானம் பதிப்பகம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தலித் மற்றும் பெண்ணுரிமை குரல்களை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பதிப்புகளில் புராணங்களின் புதுமையான வருணனைகள், பெண்ணியம் மற்றும் பகுஜன் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், ஈர்ப்புமிக்க சிறுகதைகள் அடங்கும். 2021-ல் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் கதைசொல்பவர்கள் இணைந்து தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை நிறுவினர். இது சிறார் இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கலை இலக்கியச் செயல்பாட்டாளர்களுக்கான ஒருமித்த மேடையாக உள்ளது. முன்னேற்றப்பாதை: இந்தப் புத்தகங்கள் தற்பொழுது நூலகங்கள், புத்தக கண்காட்சிகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து வருகின்றன — குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்கிவரும் அரசு பள்ளிகளில், முற்போக்குச் சிந்தனைகொண்ட ஆசிரியர்கள் மற்றும் நூலகப்பணியாளர்கள் மாற்று வாசிப்புக்காக எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்து களஞ்சியங்களை உருவாக்கி வருகின்றனர். டிஜிட்டல் வடிவப் புத்தகங்கள் மற்றும் ஒலிப்புத்தகங்கள் இவற்றை மேலும் எளிதில் அணுகக்கூடியவையாக மாற்றியுள்ளன, குறிப்பாக கிராமப்புறங்களில். பல தன்னார்வலர் அமைப்புகள் மற்றும் சமூக நூலகங்கள் கயிறு, மலைப்பூ, மற்றும் பிரேமாவின் புத்தகங்கள் போன்ற படைப்புகளை முன்வைத்து வாசிப்பு அமர்வுகளை நடத்துகின்றன; அவற்றுடன் பெரும்பாலும் விவாதங்கள், நடிப்பு காட்சிகள் மற்றும் எழுதும் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன. அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இளம் வாசகர்கள் கதாபாத்திரங்களை மட்டுமல்ல, தாங்களாகவே கேள்விகள் எழுப்பி, அவர்களை சுற்றியுள்ள சமத்துவமின்மையை உணர்ந்துகொள்ளவும், சில சமயங்களில் அதற்கு எதிராகவும் நிற்கிறார்கள். பல எழுத்தாளர்கள் Frontline இதழுக்குத் தெரிவித்ததாவது, ”சாதி எதிர்ப்பு குழந்தை இலக்கியத்திற்கு அரசு விருது மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தால், இந்த வகை புத்தக வெளியீடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது”. இளங்கோ கூறியதாவது, குழந்தைகளுக்கான தமிழில் சாதி எதிர்ப்பு இலக்கியத்தை மேல்மட்ட சமூகம் இதுவரை கவனிக்கவே இல்லையென்றார். 2023 ஜூலை மாதம் அரசு தொடங்கிய "வாசிப்பு இயக்கம்" திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, இந்தக் கதைகள் மற்றும் புத்தகங்களையும் அதன் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இது மிகமுக்கியமானது, ஏனென்றால் மகிழ்நிலா சரவணனுக்கெழுதிய கடிதம் போலவே, அந்தக் கதைகள் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை காட்டுகிறது. “இலக்கியம் தீர்வல்ல. ஆனால் அது ஒரு தொடக்கம்,” என்கிறார் சரவணன். “ஒரு புத்தகம் ஒரு குழந்தையின் மனத்தில் ஒரு கேள்வியை எழுப்பக்கூடியதாக இருந்தால், அது போதுமானது. ஏனெனில், சாதி மௌனத்தின் வழியேதான் நிலைத்து நிற்கிறது. அந்த மௌனத்தை ஒற்றைக் கேள்வியால் தகர்த்தெறிய முடியும்.” நன்றி - Frontline On Line Magazine

  • பதின் பருவக் கவிதைகள்

    வேண்டுதல் ஊரெல்லாம் நிறைய்ய வீடிருக்க ஏன்தான் குடி வந்தானோ எங்க வீட்டுக்கு. எப்பவுமே அவனும் என்னைவிட நல்லா படித்தபடி இருக்கிறான். எதற்கெடுத்தாலும் எங்கப்பா அவனையே காரணம் காட்டி அடிக்கவேற செய்யறாரு. அய்யா அய்யனாரப்பா ஐம்பது ரூவா உண்டியலில் போடுகிறேன் மறக்காம என் கோரிக்கையை நிறைவேற்றி வைத்திடு. நாளை வரும் ரிசல்ட்டில் அவனைவிட ஒரு மார்க்காவது அதிகமாக வாங்கவேண்டும் அதனால் எனக்கு கிடைக்கும் ஐ போன் அலைபேசி. எதைக் கற்றோம் ஒரே இழுப்பில் இழுத்த பீடியை வீசியபடி எரிச்சலோடு கத்தினார் என்னத்த சொல்லிக் கொடுக்கறாங்க வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்காத பாடத்தை படித்தென்ன பிரியோஜனம் கண்களில் நீர் திரள கத்தியால் உடலைக் கீறினார். எழுதிய தேர்வில் எடுக்க முடியாது போகும் தேர்ச்சி மதிப்பெண்களென அவளாக முடிவெடுத்து ஆயுளை முடித்துக்கொண்டு பிணவறையில் தூங்குவதுபோல் கிடக்கிறாள். வெளியான ரிசல்ட்டில் வெற்றி கொண்டது அறியாமல். ஆசிரிய தேவதை இன்ஜினியர் டாக்டரென எல்லோரும் விரும்பும் குட்டைகளில் ஊறும் மட்டைகளாக இருக்காதீங்க என்றவறை எரிச்சலோடு பார்த்தோம். அவரவர் ஆர்வத்திற்கேற்ற படிப்புகள் நிறைய்ய இருக்கென பட்டியல் இட்டுக்கொண்டிருந்தவரை வாய்பிளந்து அதிசயித்தோம் வாய்ப்புகள் ஆயிரம் இருக்கென. இப்போ வெப்ப மண்டலக் காடுகளில் பட்டாம்பூச்சி ஆய்வு மாணவியாக பறந்தபடி இருக்கிறேன் உடன்படித்த அனைவரும் அவரவருக்கான துறைகளில் ஆளுமைகளாக ஆனந்தித்து வாழ்கிறார்கள். மனதுள் வழிகாட்டிய ஆசிரியர் வாழ்கிறார் தேவதையாக.

  • பாப்பாண்டும் ரயில்பூச்சியும்

    அப்போதுதான் பாப்பாண்டு மாமரத்துப் பக்கம் வந்தான். மண்ணில் ஒரு பூச்சி ஊர்ந்து சென்றது. அதை பார்க்கவே அவனுக்கு அதிசயமாக இருந்தது. அன்றுதான் முதல் தடவை அப்படியொரு பூச்சியைப் பார்க்கிறான். அது அவ்வளவு அழகு. சிகப்பும் கறுப்பும் கலந்த அழகு வண்ணம். பக்கத்தில் சென்று உற்று பார்த்தான். அதன் நீண்ட உடல், பாசிமணியை அடுத்து அடுத்து சேர்த்து வைத்தது போல், மேடும் பள்ளமுமாய் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் நூற்றுக் கணக்கான கால்கள். தலையின் முன் இரண்டு கண்கள். வேக வேகமாக நகன்றது. அப்படியே, ரயில் போலவே இருந்தது. ஒரு குச்சியால் அதைத் தொட்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் சுருண்டு கொண்டது. அப்படியே கிடந்தது. பாப்பாண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிந்ததும் மறுபடியும் உடலை நேராக்கி ஊர்ந்தது. பாப்பாண்டு தாத்தாவிடம், “ தாத்தா ..இது என்ன பூச்சி? ” என்று கேட்டான். “ இதுவா.. இதுக்குப் பேரு ரயில்பூச்சி..” என்றார் தாத்தா. உடனே பாப்பாண்டுவின் சின்ன மூளையில் கேள்வி முளைத்தது. ” ஏன் தாத்தா.. ரயில் பூச்சின்னு பேரு வந்தது? “ என்று கன்னத்தில் ஒரு விரலை வைத்துக் கொண்டே கேட்டான். தாத்தா சிரித்துக் கொண்டே, ” ரயில் பெட்டிகளைச் சேர்த்து வைத்த மாதிரி உடம்பு இருக்குல்ல..ரயிலைப் பார்த்துட்டு உன்னை மாதிரி ஒரு சுட்டிப்பையன் வைத்த பேரு தான் ரயில்பூச்சி..” என்றார். பாப்பாண்டுக்கு அந்த ரயில்பூச்சியை பிடித்து விட்டது. தரையில் ஊர்ந்து போகும்போது அப்படியே மிதக்கிற மாதிரியே இருக்கும். தினமும் ரயில்பூச்சியோடு விளையாடுவான். பேசுவான். ஆடுவான். பாடுவான். அவன் சொல்வதை எல்லாம் ரயில்பூச்சி கேட்கும். மகிழ்ச்சியாக இருந்தால், அவன் கைகளில் ஏறிவரும். ஒருநாள், பாப்பாண்டு ரயில்பூச்சியிடம், ” நீ…..! இத்தனை கால்களுடன்…… அழகாய் ஊர்ந்து போகிறாய்… இத்தனை கால்களும் உனக்கு யார் தந்தது? ” என்று ஆச்சரியத்துடன் பாப்பாண்டு கேட்டான். ” எனக்கு என் அம்மாதான் தந்தார்.. ” என்றது ரயில்பூச்சி. ” உன் அம்மாவுக்கு யார் தந்தார்கள்? “ என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் பாப்பாண்டு. "ம்ம்ம்.. இயற்கை தான் எங்கள் இனத்துக்கு இத்தனை கால்களைக் கொடுத்தது. “ என்று ரயில்பூச்சி சொன்னது. பாப்பாண்டு யோசிக்கவே இல்லை. அடுத்த கேள்வியைக் கேட்டான். “ எப்படி இயற்கைக்கு யாருக்கு எத்தனை கால் கொடுக்க வேண்டும் என்று தெரியும்..? பாரு.. எனக்கு இரண்டு கால் தான், நாய்க்கு நாலு கால்.. எறும்புக்கு ஆறுகால்.. சிலந்திக்கு எட்டுகால்.. “ என்று சொல்லி நிறுத்தினான். கொஞ்ச நேரத்துக்கு ரயில்பூச்சி எதுவும் பேசவில்லை. யோசித்தது. பிறகு மெல்ல தலையைத் தூக்கியது. முன்னங்காலால் முகத்தைத் தேய்த்தது. “ பாப்பாண்டு என்னுடைய தாத்தா சொல்லியிருக்காரு.. ஒவ்வொரு உயிரும் இந்த பூமியில் வாழறதுக்கு ஒவ்வொரு சிறப்பான உடல் அமைப்பை உருவாக்கிக் கொண்டன.. அப்படித்தான் நாங்களும் உருவாக்கிக் கொண்டோம்.. அறிவியலைப் படிக்கும்போது உனக்குத் தெரியும்.. “ என்று பேசிவிட்டு உடம்பை முன்னும் பின்னும் சுருக்கி நீட்டியது. பாப்பாண்டுவின் கண்கள் விரிந்தன. ரயில்பூச்சி சொல்வதைப் புரிந்து கொள்ள முயற்சித்தான். “ உங்க தாத்தாவுக்கு எல்லாம் தெரியுமா? “ என்று கேட்டான் பாப்பாண்டு. “ ஏன் உன்னுடைய தாத்தாவுக்கும் எல்லாம் தெரியுமே. நீ கேட்டுப்பாரு..என்னுடைய தாத்தா எங்களுக்கு மண்ணில் எப்படி பள்ளம், மேடு பார்த்து லாவகமாக செல்வது என சொல்லித் தந்தார். எங்கள் உணவு எது? எப்படி சாப்பிடுவது? என்றும் சொல்லிக் கொடுத்தார். மரத்தின் மேல், கீழே விழாமல் எப்படி மரத்தைப் பிடித்து செல்வது என்றும் சொல்லித் தந்தார். ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தார். ” என்றது ரயில்பூச்சி. அதைக் கேட்ட பாப்பாண்டு பேச ஆரம்பித்தான். “ என் தாத்தாவும்…. இந்த உலகம் எப்படித் தோன்றியது? உயிர்கள் எப்படித் தோன்றியது? செடி, கொடிகள், மரங்கள். பூச்சிகள் புழுக்கள், விலங்குகள் பறவைகள் இவை எல்லாம் எப்படி தோன்றின? என்றும் சொல்லிக் கொடுத்தார். அறிவியலைப் படிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்” ரயில் பூச்சி, “ நல்ல தாத்தா..” என்றது. பாப்பாண்டு, “ ஆமாம்.. அறிவியலைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மிடம் கதைகளைச் சொல்லி ஏமாற்றி விடுவார்கள் என்றும் சொல்லுவார்..” என்று பெருமையாகச் சொன்னான். ரயில்பூச்சி மகிழ்ச்சியில் அவனுடைய கையில் ஏறி உடம்பைத் தூக்கி நடனம் ஆடியது. பாப்பாண்டுவும் துள்ளிக்குதித்து நடனம் ஆடினான்.

  • குழந்தைகள் உரிமைகள் - 3

    உலகிலுள்ள எல்லா நாடுகளின் அரசாங்கங்களும் அந்தந்த நாட்டுக் குழந்தைகளின் அனைத்து உரிமைகளையும் அவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று யுனிசெஃப் தனது பிரகடனத்தின் நான்காவது அம்சத்தில் வலியுறுத்துகிறது. அவ்வாறு தங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு எல்லா உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்ய அவை தங்களால் இயன்ற அத்தனைக் கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும் என்று அது விதித்திருக்கிறது. இந்த இடத்தில், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் ‘அரசாங்கம்’ ( ‘government’ ) என்பது என்ன, அது எப்படி உருவாகிறது என்பதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும், இருக்க வேண்டும். ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் பொதுத்தேர்தல்கள் நடப்பது பொதுவான ஒரு நடைமுறை. நமது நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் சட்டமன்றப் பேரவைக்கும் தேர்தல்கள் நடைபெறும். எம் எல் ஏ க்கள், எம் பி க்கள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் போன்றோரை நமது மக்கள் வாக்குகள் அளிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் எம் எல் ஏக்களும், எம் பிக்களும் கூடித் தங்களுக்குள் ஒருவரை அந்தந்த மாநில முதல்வர் ஆகவும், இந்திய அளவில் பிரதமர் ஆகவும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு உருவாகும் நிர்வாக அமைப்புக்கு ‘அரசாங்கம்’ ( ‘government’ ) என்று பெயர். ஆனால், இந்த அரசாங்கம் என்றைக்கும் நிலையாக இருப்பதில்லை. அவ்வப்போது நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறும் கட்சி எதுவோ அதனுடைய அரசாங்கம்தான் பதவியில் இருந்து ஆட்சி செய்யும். ஆனால், எப்போதுமே நிலையாக, நிரந்தரமாக இருக்கும் ஒரு நிர்வாக அமைப்பு, இந்தியாவிலும் உலக நாடுகள் அனைத்திலும் இருந்து கொண்டிருக்கும். அந்த அமைப்புக்கு ‘அரசு’ ( ‘state’ )என்று பெயர். இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இந்த அரசின் கீழ்தான் இயங்குகின்றன. எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் ஒரு மனதான முடிவாகத் தீர்மானித்து நிறைவேற்றினாலும் கூட, அரசுத்துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் – வளர்ச்சித்துறை அதிகாரிகள், அரசுப்பணியாளர்கள் அனைவரும் ஒரு மனதாக அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து,மனதார ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால்தான் அந்தச்சட்டத்தின் பயன்கள் பொது மக்களைப் போய்ச்சேரும். எந்த ஓர் இயந்திரத்திலும், ஒரு பெரிய பற் சக்கரத்துடன் இணைந்த பல சிறிய பற்சக்கரங்கள் அனைத்தும் எந்தப் பல்லிலும் உடைசலோ,கீறலோ இல்லாமல் ஒரே சீராக இயங்கினால்தான் அந்த இயந்திரத்தின் இயக்கம் தடைப்படாமல் வேலை நடக்கும். ஆனால், இந்த நாட்டின் இன்றைய அரசியல் அமைப்பில், மிக வலுவான, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஓர் ஒன்றிய அரசு, தனது பிரதிநிதிகளாக உள்ள ஆளுநர்களைக் கொண்டு, மாநில சட்டமன்றங்களின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களைக் கூட, ஒப்புதல் அளிக்காமல் தடை செய்வது, நிதியளிக்க மறுப்பது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். பல இலட்சம் குழந்தைகளின் கல்வி உரிமைகளைப் பாதிக்கும், மறுக்கும் நீட் தேர்வை நிராகரிக்கும் சட்டம்,புதிய கல்விக்கொள்கையை இங்கு நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்ற சட்டம் போன்ற பல சட்டங்களை நிறுத்தி வைக்கும் போக்கைக் காண்கிறோம். இது ஏதோ ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே நடக்கும் அரசியல் சண்டை மட்டுமே அல்ல;மாறாக,இந்த மாநிலத்தில் மாநில அரசின் கல்வி நிலையங்களில் பயிலும் பல இலட்சம் குழந்தைகளின் விருப்புரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இத்தகைய நிலைமை இந்த நாட்டில் மட்டுமன்றி வேறு பல நாடுகளிலும் அந்தந்த நாட்டு அரசியல்,சமூக,பொருளியல் சூழல்களுக்கு ஏற்ப நிலவுவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளின் செய்தியறிக்கைகளிலும் பார்க்கிறோம். யுனிசெஃப் அமைப்பு, எல்லா நாட்டு அரசாங்கங்களுமே குழந்தைகளின் உரிமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டியது கட்டாயம் என்று சர்வதேசப் பிரகடனத்தில் விதித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று, உலகில் பல நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களில், அந்தப் போர்களுக் குக் காரணங்கள் எவையாயிருப்பினும், போரில் ஈடுபடும் இருதரப்புக் குழந்தைகளுமே அந்தப் போர்களால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதேயாகும். ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர், இந்தியா – பாகிஸ்தான் போர் – இப்படி எந்தப் போர் என்றாலும், உணவுப் பொருள்கள், மருந்துகள், ரொட்டிகள், பால் போன்று குழந்தைகளுக்கு மிக மிக அத்தியாவசியத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு விடுவது அந்தப் போரின் உடனடி விளைவாக ஆகி விடுகிறது. கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, இப்படி இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்புடன் தான் நடத்தும் போரில், செஞ்சிலுவைச்சங்கம் மூலம் பலஸ்தீனக் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள், ரொட்டிகளைக் கூட அவர்களுக்கு வழங்க அனுமதிக்காததால் சுமார் 14,000 குழந்தைகள் சாவின் விளிம்பில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி உலகின் அனைத்துப் பகுதி மக்களையுமே மனம் பதறச் செய்தது. எனவேதான், யுனிசெஃப் அமைப்பு, உலகின் எல்லா அரசாங்க நிர்வாகிகளுக்கும் தனது சர்வதேசக் குழந்தைகள் பிரகடனத்தின் நான்காவது அம்சத்தை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் முழு மனதுடன் ஈடுபாடு காட்டும்படி வலியுறுத்தல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அரசியல் அதிகாரம் என்ற ஒரே குறிக்கோளின் மீது தவிர, வேறு யாருடைய நலன்கள் குறித்தும் துளியும் கவலைப்படாத அரசாங்கங்களின் போக்கை எப்படி, எப்போது, யாரால் மாற்ற முடியும் ? இதுதான் இன்று நம் முன்னுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும் !

  • பேசும் கடல் - 3

    “ அண்ணா...... அண்ணா சுனாமியை ஆழிப்பேரலைன்னு தானே சொன்னாங்க, ஆழிப்பேரலையின்  ஜப்பானிய பெயர்தானே சுனாமி? “   "ஐயோ கொஞ்சம் பொறு அமுதா...... நம்ம கடல் பாட்டிகிட்டயே கேட்போம்"     “ பாட்டி..... என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க..... எப்பவும் வேகமா அலை அடிச்சிட்டு இருப்பீங்களே...... என்னாச்சு"   " பேரப்பிள்ளைகளா? நான் அமைதியா இருப்பதும்,  ஓங்கி அலையடிப்பதும் காற்றின் அழுத்தத்தால் தான். காற்றின் அழுத்தம் இருந்தா பெரிய அலையா இருக்கும், இல்லைன்னா? சின்ன அலையா இருக்கும்"    "அப்போ பாட்டி ஆழிப்பேரலை காற்றினால் தான் வந்ததா?  ” சற்றும் யோசிக்காமல் அமுதா கேட்டாள்.   " சபாஷ் பாராட்டுக்கள்...... மொதல்ல ஆழி என்றால் என்ன என்பது புரிய வேண்டும்"    “ஆமாம்......ஆமாம்...... சொல்லுங்க" இனியனுக்கு ஆர்வம் கூடியது.    "பொதுவாக மக்கள் கடல்,  அலை என்ற இரண்டு சொற்களால் என்னைப் பார்ப்பார்கள். ஆனால் கடலின் மக்களாகிய நெய்தல் நிலத்தவர்கள் பல பெயர்களில் என்னை அழைப்பார்கள் .  ஆழி என்பது பொதுவாக என்னைக் குறிக்கும் சொல் தான் தமிழ் இலக்கியங்களிலும் என்னை ஆழி என்று தான் அழைப்பார்கள்.  காற்றையும் கடலையும் நம்பி வாழும் மீனவர்கள், காற்றோடும் கடலோடும் பேசுவார்கள். ”   "பேசுவார்களா ?எப்படி?  ” என்று இருவருமே வியப்போடு கேட்டார்கள்.   " பெரிய அலை வரும்போது படகில் செல்லும் மீனவர்கள் எல்லோரும் படகில் எழுந்து நின்று "தாயே தாழ்ந்து வா தாயே" என்று வேண்டுதல் செய்வார்கள் அலை மிக உயரமாக வரும்போது மீனவர்களை அது பாதிக்கும் என்பதால் "கடல் ஆத்தா ...... தாழ்ந்து வா ஆத்தா " என்று கேட்டுக் கொண்டாலே அலைகள் அமைதியாகும்."    "உண்மையாகவா? கேட்டதும் நீங்க அமைதியா இருப்பீங்களா? " என்று இனியன் கேட்டான்.   "அது அவங்க நம்பிக்கை,  இது தாய் பிள்ளை உறவு போன்றது மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது" என்று கடல்பாட்டி சொன்னார். அப்போது அவருடைய குரல் தழுதழுத்தது.    ” அது சரி மேட்டருக்கு வாங்க,  ஆழின்னா  என்ன அதைப் பற்றி சொல்லவே இல்ல"  என்று ஆர்வத்தோடு அமுதா கேட்டாள்.   ” மீனவர்கள் கடலில் எழும் அலைக்கும் பல பெயர்களை சூட்டி உள்ளார்கள். மார்சா,  மாரியா , ஆழி என்று அழைப்பார்கள்.  இதில் ஆழி என்பது காற்றின் விசையால் அலைகள் விரிந்து, எழும்பி இரண்டு மடிப்பு போல் மடங்கி அடிப்பதை ஆழி என்பார்கள். இது மிக ஆபத்தானது. அலைகள் எழும்பி மடங்கி அடிக்கும் போது மீனவர்கள் மாட்டிக் கொண்டால் அவர்களால் தப்பிக்க முடியாது. அந்த அலை அவ்வளவு வேகமாக அடிக்கும்.” என்று கடல்பாட்டி சொல்லும்போதே ஆழியின் ஓசை கேட்டது.   ” கேட்கும்போதே பயமாயிருக்கு அண்ணா?   ” அமுதா இனியனின் கைகளை இறுகப் பற்றி கொண்டாள்.   "அமுதா பயப்படாதம்மா.... ஆழி இரண்டு வகை உண்டு கரைய ஆழி, வெலங்க ஆழி அதாவது கரைப்பகுதியில் ஏற்படும் பேரலை. தூரத்தில் ஏற்படும் பேரலை .கடலில் பயணிக்கும் போது மீனவர்கள் கடலோடும் காற்றோடும் அலையோடும் பேசுவார்கள் அல்லது அவைகளைப் பற்றி பேசுவார்கள் "   ” ஆமாம்.  அது உண்மைதான் எங்க வீட்டிலையும் அப்பாவும் பெரியப்பாவும் பேசுவாங்க ...தான் கேட்டு இருக்கேன் ” என்றான் இனியன். “ பேரப்பிள்ளைகளா? காற்று , கடல்  இரண்டும் மீனவர்களுக்கு உயிரும், உடலும் போன்றது. எப்போதும் அதைப் பற்றியே பேசுவார்கள். அதற்கு அவர்கள் பல பெயர்கள் சூட்டி மகிழ்வார்கள் ” என்றார் கடல்பாட்டி பெருமையாக. ” அது சரி உங்க பிள்ளைகள நீங்க விட்டுக் கொடுப்பீங்களா? ” என்று அமுதா கிண்டலாகச் சொன்னாள். .   ” ஆமாம் ....அவர்கள் கடலின் மக்கள்..” என்று கம்பீரமாகச் சொன்னார் கடல்பாட்டி.   ” அது சரி....காற்றுக்கு  எப்படி பெயரிடுவாங்க....? ” என்று இனியன் கேட்டான்.   ” சொல்றேன் கண்ணுகளா..” என்று சொல்லிவிட்டு காணாமல் போனார் கடல்பாட்டி.   ( கடல் பேசும் )

  • ஏழு ஹைக்கூ

    நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு இளைப்பாறக் கிடைக்கவில்லை காடு * அம்மா கால் பித்த வெடிப்பு  பாசத்தின் பள்ளத்தாக்கு, கற்துகளும் விரும்பி உட்புகும் * ஊரை காக்க விரும்பும் அய்யனார்   எல்லையை தாண்டி  ஊருக்குள்ளே வாழ விரும்பாதவர்.   * நீருக்கும் மனிதன்மேல் பயம், சருவலைக்காரணம் காட்டி,  கடலை அடைகிறது * நரியின் குழியில் விழுந்த புலிக்கூட்டம்  இன்னும்  இழக்கவில்லை வீரத்தை (இலங்கை சம்பவத்தின் அடிப்படையில்)  * புத்தகத்தை புரட்டிடும் மனிதன் இருவிரலால்  தன் வாழ்வையே புரட்டுகிறான். * யானையைகாட்டிலும் மனிதனிடமே அதிகம் உள்ளது மதம். எழுதியவர்: ஹ. சக்திவேல், 11ஆம் வகுப்பு, இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். 8015626376

  • ஏன் பிறந்தோம் -3

    விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சுய செயல்பாடு தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவை தானாகவே செயல்படுகின்றன. அவை மனிதர்களைப் போல சுதந்திரமாக, படைப்பூக்கமிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட செயலுக்கு எதிர்வினை புரிகின்றன. அந்த எதிர்வினை தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான செயல்பாடே. உயிர்வாழ்தலும் இனப்பெருக்கமும்தான் அவற்றின் அடிப்படை நோக்கம். அதேமாதிரித்தான் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் செயல்படுகின்றன. உயிர் வாழ்தலும் இனப்பெருக்கமும் உயிர் வாழ்தலுக்கு இரையை அடையாளம் காணுதல், அதாவது எதைச் சாப்பிடலாம். எதைச் சாப்பிடக்கூடாது என்று தேர்ந்தெடுத்தல். இரையைத் தேடுவது, அதாவது சாப்பிடும் இரை அதிகமாக இருக்கும் இடங்களில் தன்னுடைய வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளுதல். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுதல். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடரிலிருந்து பாதுகாப்பு, இதற்கான தகவமைப்புடன் கூடிய உடலமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல். அடுத்தது இனப்பெருக்கம். இயற்கையில் தங்களுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுச்சங்கிலியில் தன்னுடைய இருத்தலின் மூலம் தன்னைச் சார்ந்தோ அல்லது தான் சார்ந்தோ இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உதவிசெய்வது போன்றவற்றிற்கு இனப்பெருக்கம் அவசியம். உங்களுக்குத் தெரிந்திருக்கும். புற்கள் இல்லையென்றால் அவற்றை மேயும் தாவரஉண்ணிகள் மறைந்துவிடும். தாவரஉண்ணிகள் இல்லையென்றால் அவற்றை இரையாகச் சாப்பிடும் ஊனுண்ணிகள் மறைந்துவிடும். ஒரு மானைப் புலி வேட்டையாடுவதைப் பார்க்கும் நாம் பரிதாபப்படுகிறோம். ஆனால், மானைச் சாப்பிடும் விலங்குகள் இல்லையென்றால் என்ன ஆகும்? மான்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். அவை பூமியில் பச்சையாக வளரும் பெரும்பாலான தாவரங்களைச் சாப்பிட்டுவிடும். அந்தத் தாவரங்களைச் சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பூச்சிகள், புழுக்கள் மறைந்துவிடும். அந்தப் பூச்சிகள், புழுக்களைச் சாப்பிட்டு வாழும் பறவைகளும் சிறுவிலங்குகளும் மறைந்துவிடும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கை ஒரு வலைப்பின்னல் மாதிரி அனைத்து உயிர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. நுணுக்கமான வைரஸாக இருந்தாலும் சரி, உருவத்தில் பெரிய யானையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனி குணம், உடல், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, இனப்பெருக்கம் ஆகியவற்றை இயற்கை உருவாக்கியிக்கிறது. அல்லது ஒவ்வொரு உயிரும் இயற்கையில் தாங்கள் வாழ்வதற்கு ஏற்ப சிறப்பு குணங்களை, தகவமைப்புகளைப் பரிணாமவளர்ச்சியில் பெற்றிருக்கின்றன. இலைவெட்டி எறும்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்திருக்கிறது. கரப்பான்பூச்சிகள் இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில்கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது. இப்படிச் சிறப்பான குணாதிசயங்கள் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது. அதைப் பற்றிக் கூடுதலாக நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டியது: அந்த உயிரினங்கள் அதற்கு முன்னால் எத்தனை லட்சம் ஆண்டுகளாக மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் என்பதே. இந்த மாற்றங்கள் தானாக உருவானவையா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையா? உண்மை என்ன? புலனுணர்விலும் அறிவிலும் கீழ்ப்படியில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாங்கள் இப்படி மாறவேண்டும், இப்படி மாறக்கூடாது என்றெல்லாம் முடிவுசெய்யும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாது. அந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த உயிரின் பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (Survival Instict), அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு. அதேபோல புதிய உயிர்கள் தோன்றுவதற்கு மரபணுக்களில் நிகழும் மாற்றம் அல்லது திடீர்மாற்றமே காரணம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஹோமோ சேப்பியன்ஸ் என்கிற அறிவியல் பெயர் சூட்டப்பட்ட நாம் தோன்றியதுகூட, மரபணுக்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால்தான் (Chromosome Mutations) என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆக விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளுமேகூட தங்களுடைய வாழ்க்கையை இயற்கையைச் சார்ந்து தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் இயற்கையைப் பாதிப்பதில்லை. இயற்கையை ஒட்டிய சிந்தனையையும் தத்துவத்தையும் அவை கொண்டிருக்கின்றன என்று சொல்லலாமா? இவற்றிலிருந்து மனிதன் மட்டும் மாறுபடுகிறான். எப்படி? ( தத்துவம் அறிவோம் )

  • நகரும் மாய வீடு

    வீடு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த இடம். பள்ளியைப் போன்று கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக விளையாட, பேச, செயல்பட ஏற்ற இடம். ’நகரும் மாய வீடு’ என்கிற தலைப்பே குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதாக, ஆச்சரியமூட்டுவதாக, எதிர்பார்ப்பை தூண்டுவதாக உள்ளது. இந்தக் கதையின் மையக் கதாபாத்திரமான கூரை வீடு மந்திர சக்தியால் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அது எங்கெல்லாம் போகிறது? அதனுடன் யாரெல்லாம் பயணித்தார்கள், யார் யாரையெல்லாம் சந்திக்கிறது? என்னவெல்லாம் செய்கிறது? என்பதை மிக சுவைபட சுவாரசியமாக இந்த நூல் விவரிக்கிறது. ஒரு குரங்காட்டி, தனது குரங்கிற்கு சிவப்பு சட்டையும் பச்சை நிற பேண்டும் அணிவித்து வித்தை காட்டுகிறான். வித்தை முடிந்ததும் இருவரையும் தெருநாய்கள் துரத்த, சாலையை கடக்க முயன்ற போது, குரங்காட்டி வாகனம் மோதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான். சிறு காயங்களுடன் தப்பித்த குரங்கு யாருமில்லாத ஒரு கூரை வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்கிறது. தனக்கு இடையூறாக இருந்த உடைகளைக் கழட்டிப் போடுகிறது. இடுப்பில் கட்டி இருந்த கயிறு, ஒரு ஆணியில் மாட்டிக்கொள்ள குரங்கு அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறது. அதே சமயத்தில் வெளியே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. கயிற்றில் கட்டப்பட்டிருந்த சிறு பாட்டில் கீழே விழுந்து, புகை போன்ற ஏதோ ஒன்று குடிசை முழுவதும் பரவுகிறது. அதனால் அந்த கூரை வீட்டிற்கு மந்திர சக்தி வந்து பேசவும், நகரவும் ஆரம்பிக்கிறது. அந்த வீட்டில் ஒரு பெரிய பல்லியும் குட்டி எலியும், அணிலும் வசிக்கின்றன. மூன்று ஜீவராசிகளும் பயந்து போனாலும் கூரையின் மூங்கில்களை வெட்டியாக பிடித்துக் கொள்கின்றன. கூரை வீட்டின் பயணம் தொடங்குகிறது. சின்ன சின்ன தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்ற அடுக்கு மாடி வீடுகளை பார்த்து கூரை வியந்து போகிறது. பின் அது காட்டின் அடிவாரத்திற்கு வருகிறது. தானியங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் இருந்து சிதறும் தானியங்களை கொத்தித் தின்னும் ஏராளமான பறவைகள் பின்னால் வந்த வாகனங்களால், அடிபட்டு இறப்பதை பார்க்கும் கூரை வீடும், பல்லியும், எலியும் அணிலும் அதிர்ந்து போகின்றன. சுயநலம் பிடித்த மனிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்டிலும் நிலைநாட்டி வைத்திருப்பதை ஆசிரியர் விவரிக்கிறார். அங்கே உள்ள மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்த்து சிறு கற்களாக்கி அவற்றை வீடு கட்ட எடுத்துப் போகின்றனர். அதனால் பறவைகளும் பாம்புகளும் இன்ன பிற ஜீவராசிரியர்களும் மிகவும் துன்பத்திற்கு ஆளாகின்றன. காட்டில் மரங்களை மனிதர்கள் வெட்டுகின்றனர். அதன் காரணமாக மரங்களில் இருக்கும் பறவைக்கூடுகள், முட்டைகள் குஞ்சுகளுடன் கீழே விழுந்து இறப்பதை வேதனையோடு பார்க்கிறது கூரை வீடு. தாய்ப்பறவைகளை இழந்த குஞ்சுப் பறவைகளை கூடோடு தன்னுடைய வீட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. அணிலும் எலியும் தானியங்களை எடுத்து வந்து அவற்றை உடைத்து குஞ்சுகளுக்கு தருகின்றன. மனிதர்களிடம் இல்லாத ஜீவகாருண்யமும் கருணையும் அவைகளுக்கு இருக்கின்றது. தப்பி வந்த குரங்கும் காட்டை வந்து அடைந்து, கூரை வீடுடன் சேர்ந்து வெயில் படும் இடங்களில் செடிகளை நடுகின்றன. சிறிது காலத்தில் ஏராளமான செடி கொடிகள் வளரத் தொடங்குகின்றன. இதை வாசிக்கும் குழந்தைள் காடு என்பது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சொந்தமான இடம், அதை தனது சுயநலத்திற்காக மனிதர்கள் அழிக்கக் கூடாது என்று தெரிந்து கொள்வார்கள். நூல்; நகரும் மாய வீடு ஆசிரியர்; வே. சங்கர் பக்கங்கள்; 64 விலை; 70 வெளியீடு; பாரதி பதிப்பகம்

  • ஆஹா!

    படம்: உ. நவீனா

  • நீலச் சட்டை பார்பி பொம்மை

    ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில் அந்தப் பொம்மைகள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளும். இரவு முழுவதும் கும்மாளம் போடும்! அடுத்த வாரம் புத்தாண்டு பிறக்க இருந்தது. புத்தாண்டு விற்பனைக்காகப் பல புதிய பொம்மைகள் கடையில் வந்து இறங்கின. ஒரு நாள் மாலை அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் புதிய பொம்மைகளை அலமாரியில் அடுக்க வந்தார். அங்கே ஒரு பழைய பார்பி பொம்மை இருந்தது. அது நீலச் சட்டை போட்டு இருந்தது. அது ஓர் ஆண்டுக்கும் மேலாக விற்பனை ஆகாமல் இருந்தது. அதைத் தொட்டால் கண் சிமிட்டிச் சிரிக்கும்! அந்தச் சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்! “இந்தப் பார்பி பொம்மை ரொம்ப நாளா விக்காம இடத்தை அடைச்சிக்கிட்டு இருக்கு. இனிமே இதை யாரும் வாங்க மாட்டாங்க. இதைக் குப்பையில தூக்கிப் போட்டு விடலாமா?” என்று அந்தப் பெண் முதலாளியைக் கேட்டார். “இப்ப வேணாம். மூனு வாரத்துல பொங்கல் வருது. அப்போது பார்த்துக்கலாம்; இப்ப உள்ளே தள்ளி வை” என்றார் முதலாளி. அந்தப் பெண் அந்தப் பொம்மையை உள்ளே தள்ளி வைத்தார். முன்புறம் புதிய பொம்மைகளை அடுக்கினார். புதிய பார்பி பொம்மைகளின் உடைகள் பளிச்சென்று ரோஸ் நிறத்தில் இருந்தன. அவை போட்டு இருந்த செருப்புகள் தங்க நிறத்தில் மின்னின. பொத்தான்களைத் தொட்ட உடனே சில பொம்மைகள் இனிய இசையுடன் நடனம் ஆடின. முதலாளி சொன்னதைக் கேட்ட பழைய பொம்மைக்கு முகம் வாடி விட்டது. அன்று கடை மூடிய பிறகு புதிய பொம்மைகள் அதைக் கிண்டல் செய்தன. “நீலச் சட்டை போட்ட பார்பியை, எந்தப் பெண் குழந்தையாவது வாங்குமா?” என்று சொல்லிச் சிரித்தன. சோகமாக இருந்த அந்தப் பொம்மைக்கு, ஒரு குரங்கு பொம்மை ஆறுதல் கூறியது. “கவலைப் படாதே! நம்பிக்கையோடு காத்திரு; உன்னை விரும்பி வாங்கக் கூடிய குழந்தை சீக்கிரமே வரும்” என்றது குரங்கு பொம்மை. மறுநாள் காலையில் ஒரு பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் அம்மா காரில் வந்து இறங்கினார். “நிலா! நாலு கடை ஏறி இறங்கியாச்சி! நேரமாச்சு; உனக்குப் பிடிச்ச பொம்மையைச் சீக்கிரம் பார்த்து எடு” என்றார் அம்மா. நிலா பார்பி பொம்மைகள் இருந்த அலமாரி பக்கம் வந்தாள். முன் பக்கம் அடுக்கி இருந்த பொம்மைகள் வித விதமான ஒலி எழுப்பி நடனம் ஆடின. ஆனால் எதுவும் அவளைக் கவரவில்லை. அவள் அந்தப் பொம்மைகளை நகர்த்தி வைத்தாள். உள் பக்கம் இருந்த அந்த நீல பார்பி பொம்மையைக் கையை உள்ளே விட்டு எடுத்தாள். தான் தேடியது கிடைத்து விட்டது என்பது போல, அதைப் பார்த்ததும் அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி! “அம்மா! நான் தேடுனது கிடைச்சிட்டுது! இது தான் எனக்கு வேணும்” என்றாள். அதைப் பார்த்த அம்மா முகத்தில் அதிருப்தி! “எவ்வளவு அழகான ரோஸ் நிறத்துல புது பொம்மை எல்லாம் இருக்கு! எல்லாத்தையும் விட்டுட்டு இந்தப் பழசைப் போய் எடுக்கிறியே!” என்றார் அம்மா சற்றுக் கோபத்துடன். “இது தான் எனக்குப் பிடிச்சி இருக்கு! நீல பார்பி தான் எனக்கு வேணும்; ரோஸ் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்றாள் நிலா பிடிவாதமாக. அந்தப் பார்பி பொம்மை மகிழ்ச்சியுடன் திரும்பிக் குரங்கு பொம்மையைப் பார்த்துக் கண் சிமிட்டியது. குரங்கு பொம்மையும் மகிழ்ச்சியுடன் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டியது. கையை ஆட்டி டாட்டா சொன்னது. அந்தப் பொம்மையை வாங்கி வந்த நிலா, அதன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். எங்கே சென்றாலும் அதைத் தன் நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றாள். எப்போதும் அதைக் கட்டி அணைத்துக் கொண்டு தூங்கினாள். அது இல்லா விட்டால் அவளால் தூங்க முடியவில்லை. அந்தப் பொம்மைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

  • “அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை”

    கமலாலயன்: சிறார் பாடல் எழுதுவதில் உங்களுடைய முன்னோடி என நீங்கள் யாரைச் சொல்வீர்கள்? பாவண்ணன்: ம.இலெ.தங்கப்பா அவர்களே இத்துறையில் என்னுடைய முன்னோடி. அவரே எனக்கு வழிகாட்டி நெறிப்படுத்தியவர். ஒருமுறை என்னுடைய பாடல்களைப் படித்துவிட்டு “உன்னுடைய ஆழ்நெஞ்சில் ஒரு சிறுவன் எப்போதும் ஓடிக்கொண்டும் துள்ளித்துள்ளி ஆடிக்கொண்டும் இருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு பாட்டையும் எழுதிமுடித்ததும் அவனுக்குப் பாடிக் காட்டு. அவனுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அது நல்ல பாட்டு. அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே கிழித்துப் போட்டுவிடுவது நல்லது. அவனுக்குப் பிடிக்காததை ஒருபோதும் எழுதாதே” என்றார். அந்தச் சொல் எனக்குள் ஒலிக்காத நாளே இல்லை. அதைச் சொன்ன தங்கப்பாவை நினைக்காத நாளும் இல்லை.  கமலாலயன்: உங்கள் பாடல்களைத் தொகுத்துப் புத்தகவடிவில் வெளியிடுவதற்கு முன் குழந்தைகள் நடுவில் அவற்றைப் பாடிக் காட்டி இறுதிப்படுத்துவது உண்டா? அல்லது வேறு எந்த முறையில் அந்தப் பாடல்களை நூலாக்கத்துக்குத் தேர்வு செய்கிறீர்கள்? பாவண்ணன்: என்னுடைய எல்லாப் பாடல்களின் தகுதியையும் தீர்மானிப்பவன் எனக்குள் வாழும் சிறுவன். பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கும் வரைக்கும் நான் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு பாட்டையும் எழுதி முடித்ததும் அச்சிறுவன் அதை முதலில் முணுமுணுத்துப் பார்ப்பான். தாளக்கட்டோடு பாடிப் பார்ப்பான். அவனுக்கு உவப்பளிக்காத பாட்டை நான் கருத்தில் கொள்வதே இல்லை. அக்கணமே ஒதுக்கிவைத்துவிடுவேன். என் கண்ணில் படாதபடி வீசி எறிந்துவிடுவேன். அவனுடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் மட்டுமே நான் வைத்திருக்கும் அளவுகோல். கமலாலயன்: இசையை முறைப்படி கற்றவர்கள்தான் சிறார் பாடல்களை எழுதமுடியுமா? பாவண்ணன்: அப்படியெல்லாம் ஒரு விதியும் இல்லை. ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் ஒரு தாளமும் லயமும் இருக்கிறது. அதைப் பழகிப் பழகி நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம். பாடல் வரிகள் ஊற்றெடுத்து வெளிப்படும் நேரத்தில் எந்த வேகத்தோடு வருகிறதோ, அதுவே அப்பாட்டின் தாளம். அது குதிரையின் வேகத்தில் துள்ளித்துள்ளி வந்தால், அது குதிரையின் தாளம். யானையின் வேகத்தில் அசைந்து அசைந்து வந்தால், அது யானையின் தாளம்.  எந்தத் தாளமாக இருந்தாலும் அதைப் பாடுகிற சிறார்களுக்கும் காதால் கேட்கிற சிறார்களுக்கும் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் இருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம். கமலாலயன்: சிறு குழந்தைகளுக்கு எந்த மாதிரியான சந்தம், எந்தத் தாளம், எந்த ராகங்களில் பாடல்களை அதிகம் எழுதியிருக்கிறீர்கள்? பாவண்ணன்: பாடல் ஊற்றெடுப்பதற்கு உந்துதலாக அமையும் காட்சி அல்லது உரையாடல் அல்லது ஓர் அசைவு எந்தத் தாளக்கட்டுக்கு இசைவாக நிகழ்கிறதோ, அதுவே அப்பாட்டுக்குப் பொருத்தமான தாளக்கட்டு. ஒருநாளும் ஒருவர் தாளக்கட்டை முதலில் தீர்மானித்துவிட்டு அதற்குப் பிறகு பாட்டை  எழுதமுடியாது. ஒரு மலர் மலர்வதுபோல அது இயல்பாக நிகழும் ஒரு செயல். நான் எழுதும் ஒவ்வொரு பாடலும் அப்படித்தான் உருவாகிறது.  எந்தத் தாளக்கட்டில் அதிக அளவில் பாடல்களை எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் என் நினைவில் இல்லை.  கமலாலயன்: குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள வரிகளோடு பாடல் அமைந்தால்தான் குழந்தைகளால் அந்த வரிகளைப் பின் தொடரவும் பொருளைப் புரிந்துகொண்டு அவற்றை ரசித்து அனுபவிக்கவும் முடியும் என்பது போன்ற வரையறைகளை நீங்கள் முன்வைப்பீர்களா? அல்லது  இதெல்லாம் அவரவர் விருப்பம் என்று விட்டுவிடுவீர்களா? பாவண்ணன்: எழுதுகிறவர்கள் தீர்மானிப்பது என்பதைவிட, எழுதத் தூண்டும் காட்சியும் கருவும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதுதான் முக்கியம். வெறும் நான்கே நான்கு வரிகளைக் கொண்ட சில பாடல்களை தங்கப்பா எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன். அவரே சில சமயங்களில் இருபது இருபத்துநான்கு வரிகள் கொண்ட பாடல்களையும் எழுதியிருக்கிறார். இரண்டு விதங்களிலும் அவர் சிறப்பாக எழுதியிருக்கிறார். சுருக்கம் அல்லது விரிவு என்பதற்கு அப்பால் ஒரு பாட்டுக்கு சுவை மிகமிக முக்கியம். அந்த அம்சத்தில்தான் ஒரு கவிஞன் கவனத்தைக் குவிக்கவேண்டும். கமலாலயன்: கவிமணி, பாரதியார், பாரதிதாசன், தமிழ் ஒளி, அழ.வள்ளியப்பா, பூவண்ணன் உள்ளிட்ட முன்னோடிகளிடமிருந்து சிறாருக்கான பாடல்கள் வகைமைகள் சார்ந்து நாம் கற்பதற்கும் பெறுவதற்கும் என்னென்னவெல்லாம் உள்ளன? பாவண்ணன்: வாணிதாசன், கி.வா.ஜகந்நாதன், ம.இலெ.தங்கப்பா, துரை.மாணிக்கம் என்கிற பெருஞ்சித்திரனார் போன்ற ஆளுமைகளின் பெயர்களையும் நான் இந்த முன்னோடி வரிசைக் கவிஞர்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முன்னோடிப் படைப்பாளியிடமிருந்தும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிட்டுத் தொகுப்பதும் பகுப்பதும் கல்வியியல் துறைச் சடங்காக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு. மழைநீரை நாம் ஒரு பாத்திரத்தில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியுமா? தொட்டனைத்தூறும் மணற்கேணி போல ஒரு முன்னோடிப் படைப்பாளியின் பாடல்கள் எல்லாம் பாடுந்தோறும் சுரக்கும் கேணிகளைப் போன்றவை. ஓர்  ஊற்றுமுகத்தைக் கண்டு முடித்ததும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊற்றுமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும். எங்கும் தேங்கி நின்றுவிடக் கூடாது. சென்றுகொண்டே இருப்பவன் அறிந்துகொண்டே இருப்பான். கமலாலயன்: சிறார்களின் மன, அறிவு வளர்ச்சிகளில் சிறார் இலக்கியப்படைப்புகளின் - குறிப்பாக சிறார் பாடல்களின் - முக்கியத்துவம் பற்றி உங்கள் அனுபவங்களிலிருந்து நீங்கள் கூற விரும்புவது என்ன? பாவண்ணன்: அறிவியல், புவியியல், வரலாறு, கணக்கு என வெவ்வேறு துறைசார்ந்த நூல்களைப் படிக்கும்போது அந்தந்தத் துறை சார்ந்த ஞானத்தை அடைகிறோம். அப்புரிதலின் வழியாக அதே துறையில் மேலும் சில அடிகள் நம்மால் செல்லமுடியுமா என முயற்சி செய்து பார்க்கிறோம். ஆனால் இலக்கியம் சார்ந்த வாசிப்பு அளிக்கும் ஞானம் என்பது வாழ்வியல் ஞானம். உலகியல் ஞானம். எந்தத் துறையின் வழியாகவும் நாம் அடையத்தக்க ஞானத்தைவிட பெரிய ஞானம். சிறார் இலக்கியம் என்பது பேரிலக்கியம் என்னும் ஆலயத்துக்குள் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வாசல். வலையை வீசி மீன் பிடித்துப் பழகுவதற்கு முன்பாக தூண்டில் வீசி மீன் பிடித்துப் பழகுவதுபோல. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், சிறார் இலக்கியம் என்பது ஒரு பயிற்சிக்கூடம். பயிற்சிக்கூடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களால் பேரிலக்கியங்களுடன் தடுமாற்றமின்றி மிக எளிதாகவும் இயல்பாகவும் ஓர் ஒட்டுதலை உருவாக்கிக்கொள்ள முடியும். (பேட்டி: எழுத்தாளர் கமலாலயன்)

bottom of page