இயலில் தேடலாம்!
292 results found with an empty search
- பேசும் கடல் - 3
“ அண்ணா...... அண்ணா சுனாமியை ஆழிப்பேரலைன்னு தானே சொன்னாங்க, ஆழிப்பேரலையின் ஜப்பானிய பெயர்தானே சுனாமி? “ "ஐயோ கொஞ்சம் பொறு அமுதா...... நம்ம கடல் பாட்டிகிட்டயே கேட்போம்" “ பாட்டி..... என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க..... எப்பவும் வேகமா அலை அடிச்சிட்டு இருப்பீங்களே...... என்னாச்சு" " பேரப்பிள்ளைகளா? நான் அமைதியா இருப்பதும், ஓங்கி அலையடிப்பதும் காற்றின் அழுத்தத்தால் தான். காற்றின் அழுத்தம் இருந்தா பெரிய அலையா இருக்கும், இல்லைன்னா? சின்ன அலையா இருக்கும்" "அப்போ பாட்டி ஆழிப்பேரலை காற்றினால் தான் வந்ததா? ” சற்றும் யோசிக்காமல் அமுதா கேட்டாள். " சபாஷ் பாராட்டுக்கள்...... மொதல்ல ஆழி என்றால் என்ன என்பது புரிய வேண்டும்" “ஆமாம்......ஆமாம்...... சொல்லுங்க" இனியனுக்கு ஆர்வம் கூடியது. "பொதுவாக மக்கள் கடல், அலை என்ற இரண்டு சொற்களால் என்னைப் பார்ப்பார்கள். ஆனால் கடலின் மக்களாகிய நெய்தல் நிலத்தவர்கள் பல பெயர்களில் என்னை அழைப்பார்கள் . ஆழி என்பது பொதுவாக என்னைக் குறிக்கும் சொல் தான் தமிழ் இலக்கியங்களிலும் என்னை ஆழி என்று தான் அழைப்பார்கள். காற்றையும் கடலையும் நம்பி வாழும் மீனவர்கள், காற்றோடும் கடலோடும் பேசுவார்கள். ” "பேசுவார்களா ?எப்படி? ” என்று இருவருமே வியப்போடு கேட்டார்கள். " பெரிய அலை வரும்போது படகில் செல்லும் மீனவர்கள் எல்லோரும் படகில் எழுந்து நின்று "தாயே தாழ்ந்து வா தாயே" என்று வேண்டுதல் செய்வார்கள் அலை மிக உயரமாக வரும்போது மீனவர்களை அது பாதிக்கும் என்பதால் "கடல் ஆத்தா ...... தாழ்ந்து வா ஆத்தா " என்று கேட்டுக் கொண்டாலே அலைகள் அமைதியாகும்." "உண்மையாகவா? கேட்டதும் நீங்க அமைதியா இருப்பீங்களா? " என்று இனியன் கேட்டான். "அது அவங்க நம்பிக்கை, இது தாய் பிள்ளை உறவு போன்றது மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது" என்று கடல்பாட்டி சொன்னார். அப்போது அவருடைய குரல் தழுதழுத்தது. ” அது சரி மேட்டருக்கு வாங்க, ஆழின்னா என்ன அதைப் பற்றி சொல்லவே இல்ல" என்று ஆர்வத்தோடு அமுதா கேட்டாள். ” மீனவர்கள் கடலில் எழும் அலைக்கும் பல பெயர்களை சூட்டி உள்ளார்கள். மார்சா, மாரியா , ஆழி என்று அழைப்பார்கள். இதில் ஆழி என்பது காற்றின் விசையால் அலைகள் விரிந்து, எழும்பி இரண்டு மடிப்பு போல் மடங்கி அடிப்பதை ஆழி என்பார்கள். இது மிக ஆபத்தானது. அலைகள் எழும்பி மடங்கி அடிக்கும் போது மீனவர்கள் மாட்டிக் கொண்டால் அவர்களால் தப்பிக்க முடியாது. அந்த அலை அவ்வளவு வேகமாக அடிக்கும்.” என்று கடல்பாட்டி சொல்லும்போதே ஆழியின் ஓசை கேட்டது. ” கேட்கும்போதே பயமாயிருக்கு அண்ணா? ” அமுதா இனியனின் கைகளை இறுகப் பற்றி கொண்டாள். "அமுதா பயப்படாதம்மா.... ஆழி இரண்டு வகை உண்டு கரைய ஆழி, வெலங்க ஆழி அதாவது கரைப்பகுதியில் ஏற்படும் பேரலை. தூரத்தில் ஏற்படும் பேரலை .கடலில் பயணிக்கும் போது மீனவர்கள் கடலோடும் காற்றோடும் அலையோடும் பேசுவார்கள் அல்லது அவைகளைப் பற்றி பேசுவார்கள் " ” ஆமாம். அது உண்மைதான் எங்க வீட்டிலையும் அப்பாவும் பெரியப்பாவும் பேசுவாங்க ...தான் கேட்டு இருக்கேன் ” என்றான் இனியன். “ பேரப்பிள்ளைகளா? காற்று , கடல் இரண்டும் மீனவர்களுக்கு உயிரும், உடலும் போன்றது. எப்போதும் அதைப் பற்றியே பேசுவார்கள். அதற்கு அவர்கள் பல பெயர்கள் சூட்டி மகிழ்வார்கள் ” என்றார் கடல்பாட்டி பெருமையாக. ” அது சரி உங்க பிள்ளைகள நீங்க விட்டுக் கொடுப்பீங்களா? ” என்று அமுதா கிண்டலாகச் சொன்னாள். . ” ஆமாம் ....அவர்கள் கடலின் மக்கள்..” என்று கம்பீரமாகச் சொன்னார் கடல்பாட்டி. ” அது சரி....காற்றுக்கு எப்படி பெயரிடுவாங்க....? ” என்று இனியன் கேட்டான். ” சொல்றேன் கண்ணுகளா..” என்று சொல்லிவிட்டு காணாமல் போனார் கடல்பாட்டி. ( கடல் பேசும் )
- ஏழு ஹைக்கூ
நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு இளைப்பாறக் கிடைக்கவில்லை காடு * அம்மா கால் பித்த வெடிப்பு பாசத்தின் பள்ளத்தாக்கு, கற்துகளும் விரும்பி உட்புகும் * ஊரை காக்க விரும்பும் அய்யனார் எல்லையை தாண்டி ஊருக்குள்ளே வாழ விரும்பாதவர். * நீருக்கும் மனிதன்மேல் பயம், சருவலைக்காரணம் காட்டி, கடலை அடைகிறது * நரியின் குழியில் விழுந்த புலிக்கூட்டம் இன்னும் இழக்கவில்லை வீரத்தை (இலங்கை சம்பவத்தின் அடிப்படையில்) * புத்தகத்தை புரட்டிடும் மனிதன் இருவிரலால் தன் வாழ்வையே புரட்டுகிறான். * யானையைகாட்டிலும் மனிதனிடமே அதிகம் உள்ளது மதம். எழுதியவர்: ஹ. சக்திவேல், 11ஆம் வகுப்பு, இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். 8015626376
- ஏன் பிறந்தோம் -3
விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சுய செயல்பாடு தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவை தானாகவே செயல்படுகின்றன. அவை மனிதர்களைப் போல சுதந்திரமாக, படைப்பூக்கமிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட செயலுக்கு எதிர்வினை புரிகின்றன. அந்த எதிர்வினை தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான செயல்பாடே. உயிர்வாழ்தலும் இனப்பெருக்கமும்தான் அவற்றின் அடிப்படை நோக்கம். அதேமாதிரித்தான் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் செயல்படுகின்றன. உயிர் வாழ்தலும் இனப்பெருக்கமும் உயிர் வாழ்தலுக்கு இரையை அடையாளம் காணுதல், அதாவது எதைச் சாப்பிடலாம். எதைச் சாப்பிடக்கூடாது என்று தேர்ந்தெடுத்தல். இரையைத் தேடுவது, அதாவது சாப்பிடும் இரை அதிகமாக இருக்கும் இடங்களில் தன்னுடைய வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளுதல். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுதல். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடரிலிருந்து பாதுகாப்பு, இதற்கான தகவமைப்புடன் கூடிய உடலமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல். அடுத்தது இனப்பெருக்கம். இயற்கையில் தங்களுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுச்சங்கிலியில் தன்னுடைய இருத்தலின் மூலம் தன்னைச் சார்ந்தோ அல்லது தான் சார்ந்தோ இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உதவிசெய்வது போன்றவற்றிற்கு இனப்பெருக்கம் அவசியம். உங்களுக்குத் தெரிந்திருக்கும். புற்கள் இல்லையென்றால் அவற்றை மேயும் தாவரஉண்ணிகள் மறைந்துவிடும். தாவரஉண்ணிகள் இல்லையென்றால் அவற்றை இரையாகச் சாப்பிடும் ஊனுண்ணிகள் மறைந்துவிடும். ஒரு மானைப் புலி வேட்டையாடுவதைப் பார்க்கும் நாம் பரிதாபப்படுகிறோம். ஆனால், மானைச் சாப்பிடும் விலங்குகள் இல்லையென்றால் என்ன ஆகும்? மான்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். அவை பூமியில் பச்சையாக வளரும் பெரும்பாலான தாவரங்களைச் சாப்பிட்டுவிடும். அந்தத் தாவரங்களைச் சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பூச்சிகள், புழுக்கள் மறைந்துவிடும். அந்தப் பூச்சிகள், புழுக்களைச் சாப்பிட்டு வாழும் பறவைகளும் சிறுவிலங்குகளும் மறைந்துவிடும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கை ஒரு வலைப்பின்னல் மாதிரி அனைத்து உயிர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. நுணுக்கமான வைரஸாக இருந்தாலும் சரி, உருவத்தில் பெரிய யானையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனி குணம், உடல், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, இனப்பெருக்கம் ஆகியவற்றை இயற்கை உருவாக்கியிக்கிறது. அல்லது ஒவ்வொரு உயிரும் இயற்கையில் தாங்கள் வாழ்வதற்கு ஏற்ப சிறப்பு குணங்களை, தகவமைப்புகளைப் பரிணாமவளர்ச்சியில் பெற்றிருக்கின்றன. இலைவெட்டி எறும்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்திருக்கிறது. கரப்பான்பூச்சிகள் இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில்கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது. இப்படிச் சிறப்பான குணாதிசயங்கள் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது. அதைப் பற்றிக் கூடுதலாக நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டியது: அந்த உயிரினங்கள் அதற்கு முன்னால் எத்தனை லட்சம் ஆண்டுகளாக மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் என்பதே. இந்த மாற்றங்கள் தானாக உருவானவையா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையா? உண்மை என்ன? புலனுணர்விலும் அறிவிலும் கீழ்ப்படியில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாங்கள் இப்படி மாறவேண்டும், இப்படி மாறக்கூடாது என்றெல்லாம் முடிவுசெய்யும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாது. அந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த உயிரின் பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (Survival Instict), அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு. அதேபோல புதிய உயிர்கள் தோன்றுவதற்கு மரபணுக்களில் நிகழும் மாற்றம் அல்லது திடீர்மாற்றமே காரணம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஹோமோ சேப்பியன்ஸ் என்கிற அறிவியல் பெயர் சூட்டப்பட்ட நாம் தோன்றியதுகூட, மரபணுக்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால்தான் (Chromosome Mutations) என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆக விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளுமேகூட தங்களுடைய வாழ்க்கையை இயற்கையைச் சார்ந்து தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் இயற்கையைப் பாதிப்பதில்லை. இயற்கையை ஒட்டிய சிந்தனையையும் தத்துவத்தையும் அவை கொண்டிருக்கின்றன என்று சொல்லலாமா? இவற்றிலிருந்து மனிதன் மட்டும் மாறுபடுகிறான். எப்படி? ( தத்துவம் அறிவோம் )
- நகரும் மாய வீடு
வீடு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த இடம். பள்ளியைப் போன்று கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக விளையாட, பேச, செயல்பட ஏற்ற இடம். ’நகரும் மாய வீடு’ என்கிற தலைப்பே குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதாக, ஆச்சரியமூட்டுவதாக, எதிர்பார்ப்பை தூண்டுவதாக உள்ளது. இந்தக் கதையின் மையக் கதாபாத்திரமான கூரை வீடு மந்திர சக்தியால் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அது எங்கெல்லாம் போகிறது? அதனுடன் யாரெல்லாம் பயணித்தார்கள், யார் யாரையெல்லாம் சந்திக்கிறது? என்னவெல்லாம் செய்கிறது? என்பதை மிக சுவைபட சுவாரசியமாக இந்த நூல் விவரிக்கிறது. ஒரு குரங்காட்டி, தனது குரங்கிற்கு சிவப்பு சட்டையும் பச்சை நிற பேண்டும் அணிவித்து வித்தை காட்டுகிறான். வித்தை முடிந்ததும் இருவரையும் தெருநாய்கள் துரத்த, சாலையை கடக்க முயன்ற போது, குரங்காட்டி வாகனம் மோதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான். சிறு காயங்களுடன் தப்பித்த குரங்கு யாருமில்லாத ஒரு கூரை வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்கிறது. தனக்கு இடையூறாக இருந்த உடைகளைக் கழட்டிப் போடுகிறது. இடுப்பில் கட்டி இருந்த கயிறு, ஒரு ஆணியில் மாட்டிக்கொள்ள குரங்கு அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறது. அதே சமயத்தில் வெளியே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. கயிற்றில் கட்டப்பட்டிருந்த சிறு பாட்டில் கீழே விழுந்து, புகை போன்ற ஏதோ ஒன்று குடிசை முழுவதும் பரவுகிறது. அதனால் அந்த கூரை வீட்டிற்கு மந்திர சக்தி வந்து பேசவும், நகரவும் ஆரம்பிக்கிறது. அந்த வீட்டில் ஒரு பெரிய பல்லியும் குட்டி எலியும், அணிலும் வசிக்கின்றன. மூன்று ஜீவராசிகளும் பயந்து போனாலும் கூரையின் மூங்கில்களை வெட்டியாக பிடித்துக் கொள்கின்றன. கூரை வீட்டின் பயணம் தொடங்குகிறது. சின்ன சின்ன தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்ற அடுக்கு மாடி வீடுகளை பார்த்து கூரை வியந்து போகிறது. பின் அது காட்டின் அடிவாரத்திற்கு வருகிறது. தானியங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் இருந்து சிதறும் தானியங்களை கொத்தித் தின்னும் ஏராளமான பறவைகள் பின்னால் வந்த வாகனங்களால், அடிபட்டு இறப்பதை பார்க்கும் கூரை வீடும், பல்லியும், எலியும் அணிலும் அதிர்ந்து போகின்றன. சுயநலம் பிடித்த மனிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்டிலும் நிலைநாட்டி வைத்திருப்பதை ஆசிரியர் விவரிக்கிறார். அங்கே உள்ள மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்த்து சிறு கற்களாக்கி அவற்றை வீடு கட்ட எடுத்துப் போகின்றனர். அதனால் பறவைகளும் பாம்புகளும் இன்ன பிற ஜீவராசிரியர்களும் மிகவும் துன்பத்திற்கு ஆளாகின்றன. காட்டில் மரங்களை மனிதர்கள் வெட்டுகின்றனர். அதன் காரணமாக மரங்களில் இருக்கும் பறவைக்கூடுகள், முட்டைகள் குஞ்சுகளுடன் கீழே விழுந்து இறப்பதை வேதனையோடு பார்க்கிறது கூரை வீடு. தாய்ப்பறவைகளை இழந்த குஞ்சுப் பறவைகளை கூடோடு தன்னுடைய வீட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. அணிலும் எலியும் தானியங்களை எடுத்து வந்து அவற்றை உடைத்து குஞ்சுகளுக்கு தருகின்றன. மனிதர்களிடம் இல்லாத ஜீவகாருண்யமும் கருணையும் அவைகளுக்கு இருக்கின்றது. தப்பி வந்த குரங்கும் காட்டை வந்து அடைந்து, கூரை வீடுடன் சேர்ந்து வெயில் படும் இடங்களில் செடிகளை நடுகின்றன. சிறிது காலத்தில் ஏராளமான செடி கொடிகள் வளரத் தொடங்குகின்றன. இதை வாசிக்கும் குழந்தைள் காடு என்பது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சொந்தமான இடம், அதை தனது சுயநலத்திற்காக மனிதர்கள் அழிக்கக் கூடாது என்று தெரிந்து கொள்வார்கள். நூல்; நகரும் மாய வீடு ஆசிரியர்; வே. சங்கர் பக்கங்கள்; 64 விலை; 70 வெளியீடு; பாரதி பதிப்பகம்
- ஆஹா!
படம்: உ. நவீனா
- நீலச் சட்டை பார்பி பொம்மை
ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில் அந்தப் பொம்மைகள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளும். இரவு முழுவதும் கும்மாளம் போடும்! அடுத்த வாரம் புத்தாண்டு பிறக்க இருந்தது. புத்தாண்டு விற்பனைக்காகப் பல புதிய பொம்மைகள் கடையில் வந்து இறங்கின. ஒரு நாள் மாலை அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் புதிய பொம்மைகளை அலமாரியில் அடுக்க வந்தார். அங்கே ஒரு பழைய பார்பி பொம்மை இருந்தது. அது நீலச் சட்டை போட்டு இருந்தது. அது ஓர் ஆண்டுக்கும் மேலாக விற்பனை ஆகாமல் இருந்தது. அதைத் தொட்டால் கண் சிமிட்டிச் சிரிக்கும்! அந்தச் சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்! “இந்தப் பார்பி பொம்மை ரொம்ப நாளா விக்காம இடத்தை அடைச்சிக்கிட்டு இருக்கு. இனிமே இதை யாரும் வாங்க மாட்டாங்க. இதைக் குப்பையில தூக்கிப் போட்டு விடலாமா?” என்று அந்தப் பெண் முதலாளியைக் கேட்டார். “இப்ப வேணாம். மூனு வாரத்துல பொங்கல் வருது. அப்போது பார்த்துக்கலாம்; இப்ப உள்ளே தள்ளி வை” என்றார் முதலாளி. அந்தப் பெண் அந்தப் பொம்மையை உள்ளே தள்ளி வைத்தார். முன்புறம் புதிய பொம்மைகளை அடுக்கினார். புதிய பார்பி பொம்மைகளின் உடைகள் பளிச்சென்று ரோஸ் நிறத்தில் இருந்தன. அவை போட்டு இருந்த செருப்புகள் தங்க நிறத்தில் மின்னின. பொத்தான்களைத் தொட்ட உடனே சில பொம்மைகள் இனிய இசையுடன் நடனம் ஆடின. முதலாளி சொன்னதைக் கேட்ட பழைய பொம்மைக்கு முகம் வாடி விட்டது. அன்று கடை மூடிய பிறகு புதிய பொம்மைகள் அதைக் கிண்டல் செய்தன. “நீலச் சட்டை போட்ட பார்பியை, எந்தப் பெண் குழந்தையாவது வாங்குமா?” என்று சொல்லிச் சிரித்தன. சோகமாக இருந்த அந்தப் பொம்மைக்கு, ஒரு குரங்கு பொம்மை ஆறுதல் கூறியது. “கவலைப் படாதே! நம்பிக்கையோடு காத்திரு; உன்னை விரும்பி வாங்கக் கூடிய குழந்தை சீக்கிரமே வரும்” என்றது குரங்கு பொம்மை. மறுநாள் காலையில் ஒரு பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் அம்மா காரில் வந்து இறங்கினார். “நிலா! நாலு கடை ஏறி இறங்கியாச்சி! நேரமாச்சு; உனக்குப் பிடிச்ச பொம்மையைச் சீக்கிரம் பார்த்து எடு” என்றார் அம்மா. நிலா பார்பி பொம்மைகள் இருந்த அலமாரி பக்கம் வந்தாள். முன் பக்கம் அடுக்கி இருந்த பொம்மைகள் வித விதமான ஒலி எழுப்பி நடனம் ஆடின. ஆனால் எதுவும் அவளைக் கவரவில்லை. அவள் அந்தப் பொம்மைகளை நகர்த்தி வைத்தாள். உள் பக்கம் இருந்த அந்த நீல பார்பி பொம்மையைக் கையை உள்ளே விட்டு எடுத்தாள். தான் தேடியது கிடைத்து விட்டது என்பது போல, அதைப் பார்த்ததும் அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி! “அம்மா! நான் தேடுனது கிடைச்சிட்டுது! இது தான் எனக்கு வேணும்” என்றாள். அதைப் பார்த்த அம்மா முகத்தில் அதிருப்தி! “எவ்வளவு அழகான ரோஸ் நிறத்துல புது பொம்மை எல்லாம் இருக்கு! எல்லாத்தையும் விட்டுட்டு இந்தப் பழசைப் போய் எடுக்கிறியே!” என்றார் அம்மா சற்றுக் கோபத்துடன். “இது தான் எனக்குப் பிடிச்சி இருக்கு! நீல பார்பி தான் எனக்கு வேணும்; ரோஸ் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்றாள் நிலா பிடிவாதமாக. அந்தப் பார்பி பொம்மை மகிழ்ச்சியுடன் திரும்பிக் குரங்கு பொம்மையைப் பார்த்துக் கண் சிமிட்டியது. குரங்கு பொம்மையும் மகிழ்ச்சியுடன் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டியது. கையை ஆட்டி டாட்டா சொன்னது. அந்தப் பொம்மையை வாங்கி வந்த நிலா, அதன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். எங்கே சென்றாலும் அதைத் தன் நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றாள். எப்போதும் அதைக் கட்டி அணைத்துக் கொண்டு தூங்கினாள். அது இல்லா விட்டால் அவளால் தூங்க முடியவில்லை. அந்தப் பொம்மைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
- “அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை”
கமலாலயன்: சிறார் பாடல் எழுதுவதில் உங்களுடைய முன்னோடி என நீங்கள் யாரைச் சொல்வீர்கள்? பாவண்ணன்: ம.இலெ.தங்கப்பா அவர்களே இத்துறையில் என்னுடைய முன்னோடி. அவரே எனக்கு வழிகாட்டி நெறிப்படுத்தியவர். ஒருமுறை என்னுடைய பாடல்களைப் படித்துவிட்டு “உன்னுடைய ஆழ்நெஞ்சில் ஒரு சிறுவன் எப்போதும் ஓடிக்கொண்டும் துள்ளித்துள்ளி ஆடிக்கொண்டும் இருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு பாட்டையும் எழுதிமுடித்ததும் அவனுக்குப் பாடிக் காட்டு. அவனுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அது நல்ல பாட்டு. அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே கிழித்துப் போட்டுவிடுவது நல்லது. அவனுக்குப் பிடிக்காததை ஒருபோதும் எழுதாதே” என்றார். அந்தச் சொல் எனக்குள் ஒலிக்காத நாளே இல்லை. அதைச் சொன்ன தங்கப்பாவை நினைக்காத நாளும் இல்லை. கமலாலயன்: உங்கள் பாடல்களைத் தொகுத்துப் புத்தகவடிவில் வெளியிடுவதற்கு முன் குழந்தைகள் நடுவில் அவற்றைப் பாடிக் காட்டி இறுதிப்படுத்துவது உண்டா? அல்லது வேறு எந்த முறையில் அந்தப் பாடல்களை நூலாக்கத்துக்குத் தேர்வு செய்கிறீர்கள்? பாவண்ணன்: என்னுடைய எல்லாப் பாடல்களின் தகுதியையும் தீர்மானிப்பவன் எனக்குள் வாழும் சிறுவன். பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கும் வரைக்கும் நான் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு பாட்டையும் எழுதி முடித்ததும் அச்சிறுவன் அதை முதலில் முணுமுணுத்துப் பார்ப்பான். தாளக்கட்டோடு பாடிப் பார்ப்பான். அவனுக்கு உவப்பளிக்காத பாட்டை நான் கருத்தில் கொள்வதே இல்லை. அக்கணமே ஒதுக்கிவைத்துவிடுவேன். என் கண்ணில் படாதபடி வீசி எறிந்துவிடுவேன். அவனுடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் மட்டுமே நான் வைத்திருக்கும் அளவுகோல். கமலாலயன்: இசையை முறைப்படி கற்றவர்கள்தான் சிறார் பாடல்களை எழுதமுடியுமா? பாவண்ணன்: அப்படியெல்லாம் ஒரு விதியும் இல்லை. ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் ஒரு தாளமும் லயமும் இருக்கிறது. அதைப் பழகிப் பழகி நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம். பாடல் வரிகள் ஊற்றெடுத்து வெளிப்படும் நேரத்தில் எந்த வேகத்தோடு வருகிறதோ, அதுவே அப்பாட்டின் தாளம். அது குதிரையின் வேகத்தில் துள்ளித்துள்ளி வந்தால், அது குதிரையின் தாளம். யானையின் வேகத்தில் அசைந்து அசைந்து வந்தால், அது யானையின் தாளம். எந்தத் தாளமாக இருந்தாலும் அதைப் பாடுகிற சிறார்களுக்கும் காதால் கேட்கிற சிறார்களுக்கும் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் இருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம். கமலாலயன்: சிறு குழந்தைகளுக்கு எந்த மாதிரியான சந்தம், எந்தத் தாளம், எந்த ராகங்களில் பாடல்களை அதிகம் எழுதியிருக்கிறீர்கள்? பாவண்ணன்: பாடல் ஊற்றெடுப்பதற்கு உந்துதலாக அமையும் காட்சி அல்லது உரையாடல் அல்லது ஓர் அசைவு எந்தத் தாளக்கட்டுக்கு இசைவாக நிகழ்கிறதோ, அதுவே அப்பாட்டுக்குப் பொருத்தமான தாளக்கட்டு. ஒருநாளும் ஒருவர் தாளக்கட்டை முதலில் தீர்மானித்துவிட்டு அதற்குப் பிறகு பாட்டை எழுதமுடியாது. ஒரு மலர் மலர்வதுபோல அது இயல்பாக நிகழும் ஒரு செயல். நான் எழுதும் ஒவ்வொரு பாடலும் அப்படித்தான் உருவாகிறது. எந்தத் தாளக்கட்டில் அதிக அளவில் பாடல்களை எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் என் நினைவில் இல்லை. கமலாலயன்: குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள வரிகளோடு பாடல் அமைந்தால்தான் குழந்தைகளால் அந்த வரிகளைப் பின் தொடரவும் பொருளைப் புரிந்துகொண்டு அவற்றை ரசித்து அனுபவிக்கவும் முடியும் என்பது போன்ற வரையறைகளை நீங்கள் முன்வைப்பீர்களா? அல்லது இதெல்லாம் அவரவர் விருப்பம் என்று விட்டுவிடுவீர்களா? பாவண்ணன்: எழுதுகிறவர்கள் தீர்மானிப்பது என்பதைவிட, எழுதத் தூண்டும் காட்சியும் கருவும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதுதான் முக்கியம். வெறும் நான்கே நான்கு வரிகளைக் கொண்ட சில பாடல்களை தங்கப்பா எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன். அவரே சில சமயங்களில் இருபது இருபத்துநான்கு வரிகள் கொண்ட பாடல்களையும் எழுதியிருக்கிறார். இரண்டு விதங்களிலும் அவர் சிறப்பாக எழுதியிருக்கிறார். சுருக்கம் அல்லது விரிவு என்பதற்கு அப்பால் ஒரு பாட்டுக்கு சுவை மிகமிக முக்கியம். அந்த அம்சத்தில்தான் ஒரு கவிஞன் கவனத்தைக் குவிக்கவேண்டும். கமலாலயன்: கவிமணி, பாரதியார், பாரதிதாசன், தமிழ் ஒளி, அழ.வள்ளியப்பா, பூவண்ணன் உள்ளிட்ட முன்னோடிகளிடமிருந்து சிறாருக்கான பாடல்கள் வகைமைகள் சார்ந்து நாம் கற்பதற்கும் பெறுவதற்கும் என்னென்னவெல்லாம் உள்ளன? பாவண்ணன்: வாணிதாசன், கி.வா.ஜகந்நாதன், ம.இலெ.தங்கப்பா, துரை.மாணிக்கம் என்கிற பெருஞ்சித்திரனார் போன்ற ஆளுமைகளின் பெயர்களையும் நான் இந்த முன்னோடி வரிசைக் கவிஞர்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முன்னோடிப் படைப்பாளியிடமிருந்தும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிட்டுத் தொகுப்பதும் பகுப்பதும் கல்வியியல் துறைச் சடங்காக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு. மழைநீரை நாம் ஒரு பாத்திரத்தில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியுமா? தொட்டனைத்தூறும் மணற்கேணி போல ஒரு முன்னோடிப் படைப்பாளியின் பாடல்கள் எல்லாம் பாடுந்தோறும் சுரக்கும் கேணிகளைப் போன்றவை. ஓர் ஊற்றுமுகத்தைக் கண்டு முடித்ததும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊற்றுமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும். எங்கும் தேங்கி நின்றுவிடக் கூடாது. சென்றுகொண்டே இருப்பவன் அறிந்துகொண்டே இருப்பான். கமலாலயன்: சிறார்களின் மன, அறிவு வளர்ச்சிகளில் சிறார் இலக்கியப்படைப்புகளின் - குறிப்பாக சிறார் பாடல்களின் - முக்கியத்துவம் பற்றி உங்கள் அனுபவங்களிலிருந்து நீங்கள் கூற விரும்புவது என்ன? பாவண்ணன்: அறிவியல், புவியியல், வரலாறு, கணக்கு என வெவ்வேறு துறைசார்ந்த நூல்களைப் படிக்கும்போது அந்தந்தத் துறை சார்ந்த ஞானத்தை அடைகிறோம். அப்புரிதலின் வழியாக அதே துறையில் மேலும் சில அடிகள் நம்மால் செல்லமுடியுமா என முயற்சி செய்து பார்க்கிறோம். ஆனால் இலக்கியம் சார்ந்த வாசிப்பு அளிக்கும் ஞானம் என்பது வாழ்வியல் ஞானம். உலகியல் ஞானம். எந்தத் துறையின் வழியாகவும் நாம் அடையத்தக்க ஞானத்தைவிட பெரிய ஞானம். சிறார் இலக்கியம் என்பது பேரிலக்கியம் என்னும் ஆலயத்துக்குள் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வாசல். வலையை வீசி மீன் பிடித்துப் பழகுவதற்கு முன்பாக தூண்டில் வீசி மீன் பிடித்துப் பழகுவதுபோல. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், சிறார் இலக்கியம் என்பது ஒரு பயிற்சிக்கூடம். பயிற்சிக்கூடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களால் பேரிலக்கியங்களுடன் தடுமாற்றமின்றி மிக எளிதாகவும் இயல்பாகவும் ஓர் ஒட்டுதலை உருவாக்கிக்கொள்ள முடியும். (பேட்டி: எழுத்தாளர் கமலாலயன்)
- சுடரின் ஓளியில் விலகும் இருள்
ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் சிக்கலான பருவம் வளரிளம் பருவம் அல்லது பதின்பருவம் தான். ஏனெனில் அதுவரை அப்பா அம்மா காட்டிய உலகம் மாறத் தொடங்கும். மனம் அலைபாயும். எது சரி? எது தவறு? என்று அறிய முடியாமல் தடுமாறும். சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும் பெரியவர்களின் உலகத்தில் உள்ள முரண்பாடுகள் முகத்தில் அறையும். எல்லாவற்றையும் மீற வேண்டும். செய்யாதே என்பதைச் செய்து பார்க்க வேண்டும். செய் என்பதை செய்யவே கூடாது என்ற எதிர்மனநிலை உருவாகும். பெற்றோர்களின் கனவுகளைச் சுமக்கும் சுமைதாங்கியாக இருக்கமுடியாது என்ற பிடிவாதம் தோன்றும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு ஒரு உலகத்தைக் காட்டும். ஒவ்வொரு அணுவிலும் காட்டாற்று வெள்ளமென சக்தி கரை புரண்டோடும். சாகசமும், உத்வேகமும், நிலைகொள்ளாமல் அலைக்கழிக்கும் பருவத்தில் தான் செய்வதும், தான் சிந்திப்பதும் மட்டுமே சரியென்ற பிடிவாதம் தோன்றும். அதுவரை ஒப்பற்ற ஹீரோவாகத் தெரிந்த அப்பா கொடிய வில்லனாக மாறுவார். ஆனால் உண்மையில் அப்பா வில்லனா? குழந்தையின் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படும் நலம்விரும்பியா? நீங்கள் வாசிக்க வேண்டிய இளையோர் நாவல் விடுபடும் சுடர். மலையாளச் சிறார் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்.பி.வி.சுகுமாரன் எழுதி தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான யூமாவாசுகி மொழிபெயர்த்து சிறார் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு செய்துவரும் பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரென் வெளியிட்ட விடுபடும் சுடர் என்ற இளையோர் நாவல் தந்தைக்கும் மகனுக்குமான உறவைக் குறித்து அழகாகவும் அழுத்தமாகவும் சொல்கிறது. யதார்த்த வாழ்க்கையைச் சிறார் இலக்கியத்தில் எழுதுவது சவாலான காரியம். அத்தகைய சவாலை எதிர்கொண்டு வெற்றியடைந்திருக்கிறார் பி.வி.சுகுமாரன். எல்லா அப்பாக்களைப் போலவே கிரணைப் பார்க்கும்போதெல்லாம் படி படி என்று கடுகடுத்தபடி இருக்கும் கிரணின் அப்பா எப்படி மாறுகிறார் என்பதும் அப்பாவை நினைத்தாலே கோபமும் பயமும் தோன்ற அப்பாவை வெறுக்கும் கிரண் எப்படி அப்பாவைப் புரிந்து கொள்கிறான் என்பதும் தான் கதை. பதின்பருவத்தினரின் உளவியலை மிக அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் பி.வி.சுகுமாரன். ஒவ்வொரு அத்தியாத்திலும் கிரணின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் தாழ்வு மனப்பான்மையும் அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதையும் சரியான வழிகாட்டுதலில் கிரணின் மனதில் மெல்ல மெல்ல ஏற்படும் மாற்றங்களையும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார் சுகுமாரன். கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளையே சித்தரித்து கதைக்கு நம்பகத்தன்மை வழங்கியிருக்கிறார். எளிமையான மொழிநடையும், பதின்பருவக்குழந்தை எப்படியெல்லாம் சிந்திப்பான் என்ற நுண்ணுணர்வும் நாவலை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. பதின்பருவத்தில் தான் ஆளுமை உருவாகி நிலை கொள்ளும். அப்படிப்பட்ட காலத்தில் இப்படியான புத்தகங்களை வாசிக்கும்போது பதின்பருவக்குழந்தைகள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் பெற்றோரையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும். தங்களுடைய ஆர்வத்தில் பற்றுறுதியுடன் தொடர்ந்து செயல்படவும் உதவும். பெரியவர்கள் வாசிக்கும்போது கல்வியைத் தாண்டி தங்களுடைய குழந்தையின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் துணை நிற்கவும் முடியும். இவற்றைத் தான் விடுபடும் சுடர் நமக்கு உணர்த்துகிறது. மிக முக்கியமான படைப்பை மலையாளச் சிறார் இலக்கியத்துக்கும், தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கும் கொடையாக வழங்கியிருக்கிற பி.வி.சுகுமாரனுக்கு வாழ்த்துகள்! வாசித்துப் பாருங்கள்! மாற்றத்தை உணர்வீர்கள் !
- கரும்பு பெண்மணி யார்?
ரதி : ஸ்ஸ்ஸ்ஸ்.. என்ன வெயில்! நகுலன் : ஒரு கரும்பு ஜூஸ் குடிச்சா நல்லாருக்குமில்ல.. உதயசங்கர் : வாங்க செல்லங்களா.. இந்தா கரும்புச்சாறு குடிங்க.. குழந்தைகள் : ஐய்.. தாத்தா.. உங்கள எதிர்பார்க்கவே இல்லை.. சரிதா ஜோ அத்தை எங்கே? உதயசங்கர் : சரிதா ஜோ அத்தை இந்த மாசம் லீவு போட்டுட்டாங்க.. அதான் நான் வந்துட்டேன்.. கரும்புச்சாறு எப்படி இருக்கு? ரதி : சூப்பரா இருக்கு தாத்தா…. எனக்கு எப்பவுமே கரும்புச்சாறு தான் பிடிக்கும்.. உதயசங்கர் : செயற்கையான ரசாயான பான்ஙகளை விட இயற்கையான கரும்புச்சாறு உடம்புக்கு ரொம்ப நல்லது இல்லையா? இப்ப நான் ஒரு கேள்வி கேட்கப்போறேன்.. நகுலன் : எனக்குத் தெரியுமே.. கரும்புச்சாறில் என்ன சத்துகள் இருக்கின்றன? அப்படின்னு தானே.!. உதயசங்கர் : செல்லமே.. என்ன அறிவு? ஆனால் நான் கேட்கப்போற கேள்வி வேற.. கரும்புக்கு இனிப்புச்சுவையைக் கொடுத்தது யாரு? குழந்தைகள் : யாரு? இயற்கை தானே…!!! உதயசங்கர் : இயற்கையில் இந்தியாவில் விளைந்த கரும்புக்கு இத்தனை இனிப்புச்சுவை இல்லை..அந்த இனிப்புச்சுவையை ஒரு பெண் அறிவியலாளர் தான் கொடுத்தார்.. குழந்தைகள் : அப்படியா? யாரு? யாரு? யாரு? உதயசங்கர் : எதுக்கு இத்தனை யாரு? அவர் தான் கரும்புப்பெண்மணி ஜானகி அம்மாள்.. 1897- ஆம் பிறந்தவர். அவருடைய முழுப்பெயர் கக்கத் இடவேலத் ஜானகியம்மாள்.. கேரளாவைச் சேர்ந்த தாவரவியலாளர். ரதி : உண்மையில் பெருமையாக இருக்கு தாத்தா..யார் அந்த ஜானகியம்மா? அவங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க.. உதயசங்கர் : ஜானகியம்மா அவரது வீட்டில் 19 ஆவது குழந்தை. அவருக்கு சிறு வயதிலிருந்தே படிக்க வேண்டும் என்று ஆசை.. அப்பாவிடம் அடம்பிடித்து சென்னையில் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அந்தக் காலத்தில் பெண்கள் ஹோம் சயின்ஸ் மட்டும் தான் படிக்க முடியும்.. நகுலன் : அப்படியா தாத்தா..! உதயசங்கர் : ஜானகியம்மாளின் வகுப்புக்கு ஒரு தாவரவியலாளர் வந்தார். அவரிடம் ஜானகியம்மாள் நிறையக் கேள்விகளைக் கேட்டார்.. எல்லாம் தாவரவியல் தொடர்பான கேள்விகள்..அதைக் கேட்ட தாவரவியலாளர் அவரை சென்னையிலேயே தாவரவியல் படிக்கும் கல்லூரியில் சேர்த்து விட்டார். ரதி : கரும்பு எப்போது வரும் தாத்தா? உதயசங்க ர் : இந்தா வந்துருச்சி.. ஜானகியம்மாள் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்கே தாவர உயிரணுவியல் ( CYTOLOGY ) துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண் ஜானகியம்மாள் தான்.. குழந்தைகள் : ஆகா.. சூப்பர் தாத்தா.. உதயசங்கர் : அமெரிக்காவில் புதுவகை கத்தரிக்காயைக் கண்டுபிடித்தார். அதை ஜானகி கத்தரிக்காய் என்று இப்போதும் அழைக்கிறார்கள். கோவையில் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் கலப்பினக் கரும்பைக் கண்டுபிடித்தார்.. நகுலன் : இந்தியாவில் அவரைக் கொண்டாடியிருப்பார்களே..! ரதி : ஆமாமா.. கொண்டாடிடக் கிண்டாடிப் போறாங்க.. இந்தக் காலத்திலேயே பெண்கள் என்ன செய்தாலும் பாராட்டறதுக்கு யோசிக்கிறாங்க.. உதயசங்கர் : ரதி சொல்றது உண்மை தான்.. அவர் பெண் என்பதாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் நிறைய அவமானங்களைச் சந்தித்தார்..ஆனாலும் அறிவுத்தாகம் அவருக்கு ஊக்கம் தந்து கொண்டேயிருந்தது. ரதி : வேறு என்ன கண்டுபிடிப்புகள் செய்திருக்கிறார் கரும்புப்பெண்மணி ஜானகியம்மாள்? உதயசங்கர் : பூக்களின் நிறங்களை மாற்றியிருக்கிறார்.. நகுலன் : எப்படி தாத்தா..? உதயசங்கர் : ரோஜா என்றால் ரோஸ் நிறம் தான் இருந்தது. ஆனால் ஜானகியம்மாள் மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, சிவப்பு ரோஜா, என்று உருவாக்கினார்.. மஞ்சளும் வெள்ளையும் கலந்த ரோஜாவுக்கு அவர் பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்.. ரதி : என்ன பெயர் தாத்தா? உதயசங்கர் : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்.. குழந்தைகள் : எப்படி தாத்தா இந்த அறிவியலாளரைத் தெரிந்து கொண்டீர்கள்..? உதயசங்கர் : எழுத்தாளர். இ.பா. சிந்தன் இந்தியாவின் கரும்புப்பெண்மணி ஜானகி அம்மாள் என்று ஒரு சிறிய புத்தகம் எழுதியிருக்கிறார்.. அந்தப் புத்தகத்தைப் பஞ்சு மிட்டாய் பிரபுவின் ஓங்கில் கூட்டம் அமைப்பும் புக் ஃபார் சில்ட்ரெனும் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.. வாங்கி வாசித்துப் பாருங்கள்.. இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.. குழந்தைகள் : சரி தாத்தா.. அடுத்த மாதம் சரிதா ஜோ அத்தை வந்துருவாங்களா? உதயசங்கர் : நிச்சயமா வந்துருவாங்க செல்லங்களா.. இனிமேல் கரும்பு ஜூஸ் குடிக்கும்போது…யார் ஞாபகத்துக்கு வருவாங்க? ரதி : இடவேலத் கக்கத் ஜானகி அம்மாள்.. உதயசங்கர் : ரோஜாப்பூவைப் பார்க்கும்போது… நகுலன் : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்! அனைவரும் சேர்ந்து : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்.! மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்!.
- சிறார் இலக்கியத்தின் பெருஞ்சுடர்
தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கும் நூறாண்டு கால வரலாறு இருக்கிறது. பெரியவர்கள் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிய பலரும் சிறாருக்கும் எழுதியிருக்கிறார்கள். சிறார் இலக்கியத்தையே தமது முதன்மை தடமென வகுத்துகொண்ட முன்னோடிகளும் ஏராளம். அவர்களில் தனக்கென தனித்த வழியமைத்துகொண்ட மூத்த படைப்பாளி ரேவதி. சிறுவயது முதலே வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த ரேவதி, ‘குழந்தை இலக்கியக் கழகம்’ நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்கிறார். அங்கு பூவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் அளித்த பயிற்சியினால் ‘பாட்டு வாத்தியார்’ எனும் கதையை எழுதுகிறார். இக்கதை 1952ஆம் ஆண்டு வெளியாகிறது. அதற்கு முன்பே சில கதைகளை அவர் எழுதியிருந்தபோதும் பிரசுரமான முதல் கதை இதுவே. அவரின் 16 வது வயதிலேயே எழுத்தாளராகி விட்டார். ஹரிஹரன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், அப்பெயரில் கதைகள் எழுதிகொண்டிருந்தார். அப்போது இவரைச் சந்தித்த அழ வள்ளியப்பா, பெரியவர்களுக்கு எழுத பலர் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எழுத மிகக் குறைந்தவர்களே உள்ளனர். அதனால், தொடர்ந்து குழந்தைகளுக்கு எழுது என்று கூறியதோடு ‘ரேவதி’ எனும் பெயரையும் பரிந்துரைத்தார். அன்றுமுதல் ’ரேவதி என்று பெயரில் குழந்தைகளுக்குக் கதைகள் எழுதத் தொடங்கினார். பெரியவர்களுக்கு எழுது தனது கதைகளை எழுதுவதற்கு முன்பே, குழந்தைகள் மத்தியில் அக்கதைகளைச் சொல்கிறார். அவர்களின் ஏற்பு / மறுப்புக்குத் தக்க அக்கதையை எழுதும்போது மாற்றம் செய்கிறார். அதனால்தான் ஒரு நேர்காணலில், “குழந்தைகளுக்கு எழுதுவதில் மிகுந்த ஆத்மதிருப்தி கிடைத்தது. எழுதுவதை விட அவர்களுக்குக் கதை சொல்வதில் மிகுந்த திருப்தி ஏற்பட்டது” என்கிறார். இந்த அனுபவத்தில்தான் ‘குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி?” எனும் நூலும் எழுதினார். குழந்தைகள் கதை என்றாலே நீதிநெறிகளை விளக்குவதுபோல கதைகள் எழுதுவது என்ற சோர்வளிக்கும் அந்த வடிவத்தை மாற்ற முனைகிறார் ரேவதி. கதை எழுதும் வடிவத்தில் மட்டுமல்ல, கதையின் ’கரு’ வைத் தேர்வு செய்வதில் அவரின் சமகால சிறார் எழுத்தாளர்களை விட கவனம் ஈர்ப்பவராக இருக்கிறார். 1934 ஆம் ஆண்டு காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட வருகிறார். அங்கே குளிப்பதற்கு தலித்துகள் அனுமதி இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு குளிக்காமலேயே திரும்பிச் செல்கிறார். இந்தச் செய்தியை அடிப்படையாகக் 1978 ஆம் ஆண்டில் கொடிகாட்ட வந்தவன் எனும் சிறார் நாவலை எழுதினார். மிகப் பணக்கார வியாபாரி ஒருவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருப்பவர். அவரின் மகன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கிறார். மகனைப் போலவே பேரனும் ஆகிவிடுவோனோ என்று பயப்படுகிறார் தாத்தா. பேரனை வெகுதூரத்தில் உள்ள பள்ளியில் படிக்க வைக்கிறார். வெள்ளையரை எதிர்க்கும் எவரையும்பிடிக்காத தாத்தா, தன் பேரனுக்கும் அந்தக் கருத்தை மடைமாற்றுகிறார். இதனால் காந்தியைப் பிடிக்காத பேரன், குற்றாலம் வரும் காந்திக்கு கருப்புக் கொடிக்காட்டச் செல்கிறான். அந்த இடைபட்ட காலத்தில் சாதி குறித்தும் தீண்டாமை குறித்தும் அவன் அறிந்துகொள்வதும். வெள்ளைக்காரர்கள் குளிக்கும் அருவியில் இவர்கள் ஏன் குளிக்க முடியவில்லை.... தண்ணீரை ஒருவர் தொட்டால் எப்படி தீட்டாகும் என பேரனின் மனதில் எழும் கேள்விகளும் அதற்கான பதில்களுமே நாவலின் மையம். இந்த நாவல் சிறார் இலக்கியத்தில் பெரும் பாய்ச்சல். அதுவரை இம்மாதிரியான கருப்பொருளை எடுத்து எழுதுவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது. அதை உடைத்தது ரேவதியின் மாபெரும் வெற்றி என்றே சொல்ல்லாம். இந்நாவல் 9 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலான கவனத்திற்குள்ளானது. (இந்த நாவல் இப்போது அச்சில் இல்லாதது பெரும்சோகம்) இதுமட்டுமல்ல, திருச்செந்தூர் அருகில் உள்ள ஊரில் நடந்த கதையை ‘சிறைமீட்ட செல்வன்’ எனும் நாவலாக எழுதினார். இந்து –இஸ்லாமிய ஒற்றுமை குறித்த கதையாக ‘ராம்-ரசாக்’ அமைந்தது. இதுபோல இன்னும் சில கதைகளைப் பட்டியலிடலாம். அறிவியல் தகவல்களைச் சுவையான கதைகளாக மாற்றும் பாணியையும் ரேவதி கடைபிடித்தார். மின்கல மாதவன் போன்ற நூல்களை உதாரணமாகச் சொல்லலாம். இப்படி 90க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் ரேவதி. கனமான கதை மையம், ஆனால், அதை நம்மைச் சுற்றியுள்ளவர்களை கதாபாத்திரங்களாக்கி, எளிமையான மொழிநடையில் படிக்கையில் புதியதோர் அனுபவத்தைத் தருவதே ரேவதியின் எழுத்து பாணியாக இருந்தது. மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர், பின்னாளில் கோகுலம், தினமணி, பூந்தளிர் உள்ளிட்ட சிறார் இதழ்களில் பெரும் பங்களித்தவர். அவ்விதழ்களுக்கு வரும் குழந்தைகளின் படைப்புகளைத் திருத்துவதை மனதிற்கு நெருக்கமான பணியாகக் கருதினார். அதை இவர் திருத்தினாலும் இவர் பாணிக்கு அக்கதையை மாற்றாமல் குழந்தைகளின் மொழிநடையிலேயே இருக்கும்படி செய்வதையே விரும்பியவர். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளிலு, குழந்தைகளை ஈர்க்கும் கதை சொல்லியாகவும், தேர்ந்த இதழாளராகவும் பன்முகங்களில் இயங்கியவர் ரேவதி. குறிப்பாக, சமூகம் சார்ந்த கதை மையங்களை குழந்தைகளிடமும் பேச வேண்டும் என்று அவர் துணிச்சலோடு முன்னெடுத்த முயற்சிகள்தாம் இன்றைய சிறார் இலக்கிய வெளிக்கு பெரும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. பலருக்கும் அப்படைப்புகளே நல்ல வழிகாட்டியாக விளங்கி வருகின்றன. சிறார் இலக்கியத்தில் ஆகச் சிறந்த படைப்புகளைத் தந்த ரேவதி மே 09 இரவு மரணம் அடைந்தார். இது சிறார் இலக்கியத்திற்கு மாபெரும் இழப்பு. ’கொடிகாட்ட வந்தவன்’ நூல் வேண்டும் என ஒருமுறை அவரிடம் தொலைப்பேசியில் கேட்டபோது, ‘தன்னிடமும் அந்தப் பிரதி இல்லை. உங்களுக்கு கிடைத்தால் எனக்கும் கொடுங்கள்’ என்றார். அந்த நூலுக்கு மட்டும் அல்ல, அவரின் முக்கிய நூல்கள் தற்போது வாசிக்கக் கிடைக்க வில்லை. அதை மறுவெளியீடு கொண்டுவருவதும் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலிகளில் ஒன்றாக இருக்கும். நன்றி: தமிழ் இந்து
- Adolescence web series - 2
காவலர்கள் ஜெமியைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். காவல் நிலையம் எங்குள்ளது என்ற விவரத்தை ஜெமியின் பெற்றோரிடம் சொல்லி அங்கு வரச் சொல்கிறார்கள். செல்லும் வழியெங்கும் ஜெமி, "நான் எதுவும் செய்யவில்லை!" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். குரலில் பயமும் நடுக்கமும். கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. பதிமூன்று வயதுக் குழந்தை. வளரிளம் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறான். உடலிலும் உள்ளத்திலும் பட்டாம்பூச்சி பறக்கும் மாற்றங்கள். வண்ணமயமான எண்ணங்களின் காலம். நண்பர்களோடு பேசிச் சிரித்த எல்லாமே உண்மை என்று நம்பும் பருவம். சிரமமே இல்லாமல் எல்லாமும் எதிரே வரும் என்ற கானல் நம்பிக்கையின் பருவம். இது கனவிலும் எதிர்பாராத பேரதிர்ச்சி. ஜெமி மட்டுமல்ல எந்த வயதினர் ஆனாலும் தவறு செய்து சிக்கிக் கொண்டால் அழுது புலம்புகிறோம். நாம் செய்யும் போதே தவறு என்று தெரியும். என்ன தண்டனை என்றும் தெரியும். குழந்தைகளுக்கு இது தெரியாது. எது தவறு? தவறு செய்தால் பிறரையும் நம்மையும் எவ்வாறு பாதிக்கும்? என்ன தண்டனை? என்பவை குறித்துக் குழந்தைகள் எங்கு தெரிந்து கொள்வார்கள்? இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று எங்கும் கட்டளைகள். கட்டளைகளைப் பெரியவர்களே விரும்புவதில்லை. குழந்தைகளும் விரும்புவதில்லை என்பது நமக்கும் தெரியும். குழந்தைகளை எவ்வாறு வார்ப்பது என்பது பற்றி முழுமையாக நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் வளர்ந்த மாதிரியே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். குழந்தைகள் கேள்விகளை எழுப்பும் போது செய்வதறியாது திகைக்கிறோம். ஜெமியின் அப்பாவும் தவிக்கிறார். அம்மாவும் அக்காவும் அழுகிறார்கள். எங்கள் பையன் நல்வவன். தவறு செய்யவே மாட்டான். ஏதோ தவறுதலாக காவலர்கள் ஜெமியைக் கைது செய்திருக்கிறார்கள் என்று அவன் பெற்றோர் நம்புகிறார்கள். ஜெமியின் அப்பா அவனிடம் தனியே கேட்ட போதும் ' தவறு எதுவுமே செய்யவில்லை' என்று ஜெமி கூறுகிறான். அப்பா அவனை முழுமையாக நம்புகிறார். காவல்நிலையத்திற்கு ஜெமியை அழைத்துச் செல்லும் வாகனத்தில் காவல் அலுவலருடன் சமூக சேவகர் ஒருவரும் இருக்கிறார். "ஜெமி, பதட்டப்படாதே. காவல் நிலையத்தில் விசாரிக்கும் போது நன்றாகத் தெரிந்த பதிலைச் சொல்லு. குழப்பமாக இருந்தால் No comments என்று சொல். உன்னுடன் வக்கீல் ஒருவர் இருக்கலாம். உனக்கு நம்பிக்கையான மூத்தவர் ஒருவரும் இருக்கலாம்." என்று காவல் அலுவலர் சொல்கிறார். காவல் நிலைய நடைமுறைகள் முடிந்து ஜெமியை ஓர் அறையில் இருக்க வைக்கிறார்கள். ஜெமியின் பெற்றோர் வேறு அறையில் இருக்கிறார்கள். காவல் நிலைய நடைமுறைகறையும் விசாரணை முறைகளையும் தனியே எழுதலாம். குழந்தை உரிமைகளை மீறிவிடாமல் கவனமாக அனைத்தும் நடைபெறுவது காவல்துறையினருக்குப் பாடம். ஜெமியின் அப்பாவுக்குத் தெரிந்த வழக்கறிஞர் யாரும் இல்லை என்பதால் அரசின் சார்பாக ஒருவரை வரவழைக்கிறார்கள். நம்பிக்கையான மூத்தவராக என் அப்பா என்னுடனேயே இருக்க வேண்டும் என்று ஜெமி கூறுகிறான். விசாரணை அறை. ஜெமி, அப்பா, வழக்கறிஞர் மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே ஜெமியைக் கைது செய்த இரண்டு காவல் அதிகாரிகள். இந்த விசரணை முழுவதும் ஒலி ஒளி வடிவங்களில் பதிவு செய்யப்படும் என்று சொன்ன பிறகு விசாரணையைத் தொடங்குகிறார்கள். ஜெமி, நன்கு படிப்பவன். திறமையானவன். அவனுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கம் இருக்கிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட படப்பதிவுகளைக் காட்டி விசாரிக்கிறார்கள். ஜெமி நிதானமாகப் பதில் சொல்கிறான். சிக்கலான கேள்விகளுக்கு கவனமாக No comments சொல்கிறான். ஜெமி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான விளம்பரப் பெண்களின் படங்களைப் பகிர்ந்திருக்கிறான். அவனது பாலுணர்வு பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறான். அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இரண்டு பேர். ஒன்றாகப் பள்ளியில் படிப்பவர்கள். மூவரும்தான் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். மூன்று பேர் மட்டுமே நட்பாக இருக்கும் மும்முனை நட்பு சிக்கலானது என்று உளவியலில் கூறுகிறார்கள். சமத்துவம் இல்லாத மும்முனை நட்பு ஏராளமான நடத்தைச் சிக்கல்களை உருவாக்குகிறது. ஒரு சிறுமியின் படத்தைக் காட்டுகிறார்கள். இவள் பெயர் கேட்டி. உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். தெரியும், என் வகுப்பில் படிக்கிறாள் என்று ஜெமி சொல்கிறான். இவளைத்தான் நேற்று இரவு வாகன நிறுத்துமிடம் ஒன்றில் கொலை செய்திருக்கிறார்கள். உடலில் பல இடங்களில் கத்திக்குத்து. கடுமையான காயங்களால் அங்கேயே இறந்துவிட்டாள். இதைப் பற்றி உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். எதுவும் தெரியாது என்று ஜெமி கூறுகிறான். நேற்று இரவு வெளியே சென்றாயா என்று கேட்கிறார்கள். ஆம் என்று ஜெமி கூறுகிறான். நண்பர்களோடு வெளியே சென்று விட்டு நெடுநேரம் கழித்துதான் வீட்டுக்கு வந்திருக்கிறான். ஒரு காலணியின் படத்தைக் காட்டி அது அவனுடையது என்பதை உறுதி செய்கிறார்கள். CCTV பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்களைக் காட்டுகிறார்கள். கேட்டி சென்ற வழியில் சிறிது நேரம் கழித்து ஜெமி சென்றிருக்கிறான். அவனுடைய உடைகளும் உருவமும் காலணிகளும் அது அவன் தான் என்று உறுதி செய்கின்றன. இறுதியாக இந்தக் காணொலியைப் பாருங்கள் என்று காவலர்கள் CCTV காட்சியைக் காட்டுகிறார்கள். ஜெமியின் முகம் இறுகுகிறது. அழத் தொடங்குகிறான். புதிர்கள் தொடரும்...
- நெல்லையில் வேனில் விழா -2025
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (திருநெல்வேலி கிளை) மற்றும் விரல்கள் நுண்கலை குழு இணைந்து, மே 10, 2025 அன்று குன்னத்தூர் கிராமத்தில் உள்ள 'வேணுவனம்' என்ற இடத்தில் சிறுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 35 குழந்தைகள் பங்கேற்றனர். திருமதி விஜி அவர்களின் கோலாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எல்லா குழந்தைகளும் உற்சாகமாக பங்கேற்றனர். அடிப்படை கோலாட்ட அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுத் தந்தார். அதன் பின் ஓலைக் கலைஞர் திரு. திலகராஜ் அவர்கள் சிறந்த கலைவழிக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்தார். இவரின் அமர்வு ஆர்வத்தை மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் இருந்தது. தென்னங்கீற்று மூலம் கைக்கடிகாரம், பேசும் பொம்மை, கிரீடம், கண்ணாடி போன்றவற்றை எளிதாக உருவாக்கக் கற்றுத்தந்தார். ஒவ்வொரு பொம்மையாக குழந்தைகளும் அவருடன் சேர்ந்தே செய்தனர். எல்லாரும் செய்த பின்னரே அடுத்த பொம்மையைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார்! செய்து முடித்தவர்கள் மற்றவர்களுக்கு ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தனர்! எந்த குழந்தையும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் தெளிவுடன் நிகழ்வைக் கொண்டு சென்றார்! பிற்பகுதியில் ஓவியர் கார்த்திகா அவர்களின் கலைவகுப்பு நடைபெற்றது. 'நகலெடுக்காத கலை' என்பதையே அவர் வலியுறுத்து வருகிறார்! இடத்தைச் சுற்றி பார்த்து, குழந்தைகள் அவர்களுக்கு பிடித்ததை வரைந்தனர் – பூனை, மரங்கள், நாற்காலி, இலை எனப் பல வகையான ஓவியங்களால் அமர்வு களை கட்டியது. மரக்கதவில் இருந்த யானை சிற்பம், அறையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த விளக்கு மற்றும் பொருளாளர் ப்ரியா அவர்களின் உடையில் இருந்த வடிவமைப்பு என மூன்றையும் இணைத்து ஒரு பெண் குழந்தை வரைந்தது ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது! இவை அனைத்தும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிறவிக் கலைஞர் என்பதைக் உணர்த்தியது! இறுதியில் சிறந்த கலை ஆசிரியர் மாஸ்டர். திரு. சந்துரு அவர்கள் சிறுவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டு வடிவங்களை வரையச் சொல்லி, அதன்மூலம் அவர்கள் வரைந்த விதத்திற்கு பின் இருக்கும் உளவியலை எடுத்துரைத்தார்! காலையில் காரப்பொரி, கருவேப்பிலை சாறு, மதியம் சாம்பார் சாதம், மோர் சாதம், மாலையில் கொண்டைக்கடலை சுண்டல், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கப்பட்டன. விஷ்ணுபுரம் சரவணனின் 'கயிறு' புத்தகம் ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசாக வழங்கப்பட்டு, அதைப் படித்துக் கருத்து தெரிவிக்கவும், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் விவாதிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. — தேவர்பிரான் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், திருநெல்வேலி கிளை, தலைவர்.













