இயலில் தேடலாம்!
211 results found with an empty search
- பனியை மாற்றிய பருத்தியும், கறுப்பியும்
செண்பகக் காட்டில் வசிக்கும் வெள்ளை மயில் ‘பனி’ நேற்று வரை மிகவும் சந்தோஷமாகத் தானே இருந்தது. இன்று அதன் நடவடிக்கைகள் மாறி இருக்கிறதே. வெள்ளை மயிலுக்கு என்னாச்சு? எப்போதும் போல மாலையில் விளையாட வந்திருக்கும் நண்பனைக் கண்டுகொள்ளாமல், குளக்கரை நாவல் மரத்தடியில் படுத்திருக்கிறதே. யாரோடும் சண்டையா? வேட்டையாடி விலங்குகளுக்குப் பயந்து பதுங்கியுள்ளதா? பனி மயிலைத் தேடி வந்த ‘பருத்தி’ முயலுக்கு, அது கவலையோடு இருப்பதைப் பார்த்து ஒரே குழப்பம். பனியும், பருத்தியும் தினமும் மாலை குளக்கரையில் விளையாடுவார்கள். வானில் மேகங்கள் கூடி, மழைக்கான அறிகுறி தெரிந்தால், பனி மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடும், பருத்தி முயல் இனிமையாக ஒரு பாடலைப் பாடும். மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் களைகட்டும். ஆமாம்! அன்று பனி மயில் மனதளவில் காயம் பட்டிருந்தது போலும். அதற்குக் காரணம் என்ன? செண்பகக் காடுகளில் வசிக்கும் மயில்கள் கூட்டத்தில் பனி மயிலும் ஒன்று. காட்டில் வாழும் மற்ற மயில்களைப் போல, அது நீலம் கலந்த பச்சை நிறத்தில் இல்லை. வானவில் போன்று பல வண்ணங்கள் கொண்ட தோகையும் அதற்கு இல்லை. மின்னும் பனித்துளியைப் போன்ற வெள்ளை நிறம். வித்தியாசமாக வெள்ளை நிறத்தில் கண்ணைப் பறிக்கும் பேரழகு. அன்று காலை மயில்கள் கூட்டத்தில் நடந்தது இதுதான். திடீரென்று ஒரு வயதான பெண் மயில், என்றைக்கும்போல் இல்லாமல் பனியை உதாசீனப் படுத்தியது. நீண்ட நாட்களாக இருந்த கோபத்தை ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்தது. “நம்மள மாதிரி, இது வானவில் நிறங்களோட பொறக்கல. இயற்கையோட ஆசிர்வாதம் இதுக்குக் கிடைக்கல. மயில்களோட அழகே அதன் தோகையில் இருக்கும் வண்ண நிறங்கள் தான். வெறும் வெள்ளையாக இருந்தால் யார் ரசிப்பாங்க. காட்டில், மத்த விலங்குகள் மயில்கள் கூட்டத்தை மதிக்குமா? இது, நம்ம காட்டுக்கும் மயில் கூட்டத்துக்கும் கிடச்ச சாபம். இனிமேல் யாரும் இந்த மயில்கூடப் பழகாதீங்க” என்று தன்னை இழிவாகப் பேசியதைக் கேட்டு, வெள்ளை மயிலுக்கு அழுகை பீறிட்டு வந்தது. கூட்டத்தில் இருந்த மற்ற மயில்கள் ஆறுதல் சொல்ல முன்வரவில்லை. செண்பகக் காட்டில், பனி மயிலின் வினோதமான வெள்ளை நிறத்தைப் பார்த்து மற்ற மயில்கள் மனதில் வெகுநாட்களாகவே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றில் சில, “இது, தீய சக்தியின் திருவிளையாடல்” என்று கூட தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டன. மனமுடைந்த பனி மயில், கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடத் தீர்மானித்துக் குளக்கரை நாவல் மரத்தடியில் படுத்து யோசித்துக்கொண்டிருந்தது. அப்போது வந்த பருத்தி முயல், தனது அழகான வாலால் மயிலை வருடி விட்டு, “பனி! நான் பார்த்ததிலேயே அழகான மயில் நீ! உனக்கு இன்னக்கி என்னாச்சு? ஏன் இப்படிச் சோகமாக உட்கார்ந்துக்க?" என்றதும் நடந்த கதையை நண்பனிடம் சொன்னது பனி. “கவலைப் படாதே! உண்மையிலேயே நீ மின்னும் பனித்துளியைப் போன்ற வெள்ளை நிறம். அதனால தான் நான் உனக்குப் ‘பனி’ ன்னு பெயர் வெச்சேன். உன் அழகுக்கு ஈடாக இந்தக் காட்டில் எந்த மயிலும் இல்லை” என்று ஆறுதல் சொல்லித் தேற்றியது. பனி எதையும் காதில் வாங்கவில்லை. அப்போது குளத்தில் தவளைகளின் ‘க்கிர்ரக்...க்கிர்ரக்’ சத்தம் கேட்கத் தொடங்கின. சில இசைக்குருவிகளின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. பட்டாம் பூச்சிகள் கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கின. பனி மயிலை ஆற்றுப் படுத்த முயன்ற முயல், “இது போல, ஒரு மழை நாள்ல தான், நீ எனக்கு ‘பருத்தி’ன்னு பெயர் வெச்ச. வெடித்த பருத்திப் பூவைப் போல ‘புஷுபுஷுன்’ன்னு, என் உடல் முழுவதும் ரோமத்தைப் பார்த்து ‘பருத்தி’ ன்னு கூப்பிட்டயே. அது நினைவிருக்கா?” என்று கேட்க, “பருத்தி! உன் சமாதான முயற்சிகள் பலனளிக்காது. இனி எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை. நம்ம ‘கறுப்பி’ குட்டி வந்ததும் அதுட்ட சொல்லிட்டு கிளம்புறேன்” என்றது. அதே நேரத்தில் வேறு ஏதோ விலங்கு ஒன்று, கீழே கிடந்த காய்ந்த சருகுகளைத் தாண்டி வரும் சத்தத்தைக் கேட்டு இரண்டும் பதுங்கிக் கொண்டன. சில நிமிடங்களுக்குப் பிறகு, மறைவிலிருந்து எட்டிப் பார்த்து, வந்திருப்பது ‘கறுப்பி’ என்று புரிந்து கொண்டன. கறுப்பி, ஒரு தேன் கரடிக் குட்டி. ஒரு நாள், அம்மா கரடி மரத்தில் ஏறி தேன் சேகரிக்கச் சென்றபோது குட்டியை மரத்தடியில் விளையாட அனுமதித்தது. ஏற்கனவே மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த பனியும், பருத்தியும் அன்று முதல் நண்பர்களானார்கள். “ஓ! நீ தானா கறுப்பி! எப்படி இருக்க? இன்னக்கி உங்க அம்மா வரலியா?” என்று பேச்சைத் தொடங்கிய பருத்தி, “நீயே இன்னக்கி நடந்த கதையைக் கேளு. பனி மயிலுக்கு செண்பகக் காட்டில் இனி வாழப் பிடிக்கலையாம். காட்டை விட்டு வெளியேறப் போகுதாம். உங்கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு முடிவு செஞ்சு காத்திருக்குது” என்றது. விவரம் கேட்டறிந்த கறுப்பி குட்டி, பனி மயிலை அருகில் அழைத்துத் தனது முதுகில் ஏற்றி கொண்டது. “யார் யாரோ புரியாம ஏதேதோ சொல்றாங்கன்னு கவலைப்பட்டு, வேறு மாதிரியான முடிவுகளை எடுக்காதே. உலகத்தில வெள்ளையா ஒரு மயில் பிறக்கக் கூடாதா? நிறத்தை நீயோ நானோ தேர்வு செய்றதில்லை... என்னைப் பாரு. எனக்கு, நீயும், பருத்தியும் சேர்ந்து தான் ‘கறுப்பி’ன்னு பெயர் வெச்சீங்க. ஏன் நான் கறுப்பாக இருக்கிறேன்னு கவலைப் படலையே. ஊரே கறுப்பு நிறத்தை அவமானமாகப் பார்க்கிறப்ப, ஒங்க மயில்கள் கூட்டத்தில் வெள்ளை நிற வெறுப்பா?... இதையெல்லாம் கேட்டா சிரிப்பு தான் வருது. காக்கா, கறுப்பு தான். ஆனால் அதோட விருந்தோம்பல் பண்பு எந்தப் பறவைக்காவது இருக்கா? யானை, கறுப்பு தான். காட்டில் மரங்கள் வளர யானைகள் உதவுற மாதிரி வேறு விலங்குகள் உதவுறதா? கறுப்பு, வெறுப்பின் நிறம் இல்லை. வெள்ளையால் எந்தத் தொல்லையும் இல்லை. அந்தப் பெண் மயிலை மனதார மன்னிச்சு விட்டுடு” என்றது. அதன் அறிவுரைகளைக் கேட்டு, பனி மயிலுக்கு சிறிதளவு நம்பிக்கை பிறந்தது. “கறுப்பி! நன்றி... இனி நான் மனம் தளரவே மாட்டேன்” என்று நண்பர்களுக்கு உறுதி அளித்தது. விளையாடிய பிறகு, மூவரும் விடைபெறத் தயாரானபோது, மரத்திலிருந்து பறந்து இறங்கிய ஒரு ஆண் மயில், “கொஞ்சம் நில்லுங்க” என்றதும் மூன்றும் மரியாதையுடன் “வணக்கம்” என்றன. ஆமாம்! அது, மயில்களின் தலைவனான ஆண் மயில். பனிக்கு அருகில் வந்த அந்த ஆண் மயில், “மன்னிகணும். காலையில் நடந்ததை நெனச்சு வருத்தப் படாதே. விபத்துன்னு நெனச்சு விட்டுடு. வெள்ளை நிறத்தில் பிறந்ததால... நீ ஒன்னும் தகுதி இழந்து போகலை. மயில்களோட வழக்கமான நிறத்தில இருந்து மரபணு மாற்றம் அடைஞ்ச அதிசய மயில் நீ!.. வா! நாம திரும்பப் போகலாம்” என்றதும், பனி சமாதானம் அடைந்தது. கவலையில் இருந்தும் மீண்டது. மகிழ்ச்சியில் பனி, காடு அதிர அகவியது. சிறிது இடைவெளியில், எதிர்புறத்தில் மயில்கள் அகவும் சத்தம் அடுத்தடுத்து கேட்டன.
- சிறார்களுக்கு உபதேசம் தேவையில்லை
எழுத்தாளர் அம்பையுடன் நேர்காணல் - எழுத்தாளர் ஈரோடு ஷர்மிளா ஈரோடு சர்மிளா: இந்தியச் சிறார் இலக்கியம் எப்படி இருக்கிறது? அம்பை: சிறார் இலக்கியம் குறித்து அதிக ஆர்வம் காட்டத் துவங்கியது குழந்தைகளுக்குப் பாட புத்தகங்களிலும் கதைப் புத்தகங்களிலும் நாம் என்ன கூறுகிறோம் நாம் எந்தக் கதைகள் சொல்கிறோம் என்பதைப் பெண்ணிய இயக்கத்தைச் சேர்ந்த கமலா பஸீன் போன்றவர்கள் ஆராய்ந்து மாற்றுக் கதைகளை எழுதத் துவங்கியபோதும் என் வளர்ப்புக் குழந்தைகளுக்காகவும் நண்பர்களின் குழந்தைகளுக்காகவும் நான் கதைப் புத்தகங்கள் வாங்கத் துவங்கியபோதும்தான். மிகச் சிறந்த சிறார் நூல்களும் காமிக்ஸும் தமிழில் இருந்த காலத்தில் நான் வளர்ந்தவள் என்பதால், அழ.வள்ளியப்பா, வாண்டு மாமா, ”கண்ணன்” பத்திரிகையில் லெமன் என்ற பெயரில் எழுதிய லக்ஷ்மணன் இவர்கள் என்னுடன் இருந்தார்கள் நான் சிறுமியாக இருந்தபோது. தவிர, ’கண்ணன’, ‘கல்கண்டு’ ’அம்புலிமாமா’, ‘ஜிங்லி’ போன்ற பத்திரிகைகள் புராணக் கதைகளையும் நவீன உலகக்கதைகளையும் அள்ளி வழங்கின. அன்பளிப்பாகப் புத்தகங்களை வாங்க ஆரம்பித்தபோது ஆங்கிலத்தில் உள்ள அளவு தமிழிலும் மற்ற மொழிகளிலும் இல்லையோ என்ற உணர்வு ஏற்பட்டது. ஆங்கிலத்தில் படிக்கும் சிறார்களுக்கு கதைப் புத்தகங்களைப் பொறுத்தவரை அதிகச் சலுகை இருப்பதுபோல் தோன்றியது. அது உண்மையும் கூட. ஆனால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள சிறார் நூல்கள் இந்தக் குறையைத் தீர்த்துள்ளன என்று கூறலாம். இன்னும் பலர் எழுத வருவார்கள் என்று நம்புகிறேன். ஈரோடு சர்மிளா: சிறார் இலக்கியத்தில் இன்னும் பேசப்பட வேண்டிய விஷயங்களாக எதையெல்லாம் நினைக்கிறீர்கள்? அம்பை: ’The Very Hungry Caterpillar’ என்ற குழந்தைகளுக்கான நூலை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று தெரியாது. நான் பல குழந்தைகளுக்குப் பரிசளித்த நூல் அது. ஒரு கம்பளிப் பூச்சி பட்டாம்பூச்சியாக மாறுவதை மிகவும் அழகாக, அழகான ஓவியங்களுடன் கூறும் கதைப் புத்தகம். பள்ளிக்கு செல்லத் துவங்காத குழந்தைகளுக்கு அப்படிப்பட்ட நூல்கள் தேவை. ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு பலவித நாட்டார் கதைகளுடன் அறிவியலைக் கதைகளாகக் கூறும் ரோபோக்கள், வேற்றுக் கிரகவாசிகள் வரும் சாகசக் கதைகளும் நாம் தந்தால் அவர்கள் கற்பனை பெருகும். பதின்ம வயதினருக்கு classics என்று கருதப்படும் செவ்விய இலக்கியத்தில் உள்ள தமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளின் நூல்கள், ஆங்கில நூல்களின் எளிய மொழியில் உள்ள மொழியாக்க நூல்கள் இவற்றின் சுருக்கமான வடிவங்களில் உள்ள பதிப்புகளைத் தந்தால் இந்திய இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மிகக் குறைந்த விலையில் வந்தால் எல்லோரையும் எட்ட முடியும். ரஷ்ய மற்றும் சீன மொழிச் சிறார் நூல்களை என் குழந்தைப் பருவத்தில் மிகக் குறைந்த விலையில் வாங்க முடிந்தது. அதேபோல் ஆங்கிலச் செவ்விய நூல்களான ’Tale of Two Cities’, ’Hucklebury Finn’, ’Tom Sawyer’, ’Hunchback of Notredame’, ’Treasure Island’, ’Count of Montecristo’ இவற்றைப் போன்ற நூல்களை சுருக்கமான வடிவத்தில் பதிப்பித்து மிகக் குறைந்த விலையில் வெளியிட்டது பல செவ்விய நூல்களைப் பற்றி அறிந்துகொள்ள என் குழந்தைகளுக்கு உதவியது. இதைத் தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் ஓர் இயக்கம் போல் செய்யவேண்டும் என்று எனக்கு மாளாத ஆசை! ஈரோடு சர்மிளா: தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் புதிதாக எழுத வருபவர்களுக்கு என்ன ஆலோசனைகள் சொல்வீர்கள்? அம்பை: பொதுவாக நான் யாருக்கும் ஆலோசனைகள் கூறுவதில்லை. அதற்கு வேறு பலர் இருக்கிறார்கள். நான் அந்தப் பொறுப்பை ஏற்பதில்லை. ஆனால் சிறார் இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒன்று மட்டும் எனக்குப் புரிகிறது. சிறார்களுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை. சுற்றியுள்ள உலகத்தின் சாளரங்களை சாகசமாகவும் மந்திரக் கணங்களாகவும் மனத்தைத் தொடும் கதைகளாகவும் கூறி நாம் திறந்தால் போதும். சிறார்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள். அதற்கு நம்மில் உள்ள குழந்தையையும் பதின்ம வயது நபரையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் .
- பேசும் கடல்
“இனியன் அமுதா நீங்க ரெண்டு பேரும் அம்மா அப்பா பேச்சை கேப்பீங்களா?” என்று கடல் பாட்டி கேட்டார். அமுதா, “ஐயோ கடல் பாட்டி, இந்த பெரியவங்களே இப்படித்தான் கேட்பிங்க.. சில நேரம் கேட்போம் சில நேரம் கேட்க மாட்டோம்” என்று சொன்னாள். அதைக்கேட்டு நுரை ததும்பும் அலையை வீசிச் சிரித்தார் கடல்பாட்டி. . “ஆனால் மீனவர்கள் எப்போதுமே என்னிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள்.” என்றார் கடல்பாட்டி. ” என்ன கடல் பாட்டி புதுசா புதிர் போடுறீங்க? ” என்று இனியன் கேட்டான். ” நீங்க வீட்டிலிருந்து வரும்போது கால்ல செருப்பு போட்டு வந்தீங்களா? ” என்று கடல்பாட்டி கேட்டார். ” ஆமாம்.. ஆனால் அப்பா கடற்கரைக்கு செருப்பு போட்டுட்டு போக வேண்டாம்னு சொல்லுவாங்க..” என்றாள் அமுதா. ” ஏன் தெரியுமா? ” என்று கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார் கடல்பாட்டி. ” ஐயோ! பாட்டி.. விளக்கமா சொல்லுங்க ” என்று அமுதா சலிப்புடன் மணலில் உட்கார்ந்தாள். கடல்பாட்டி மெல்ல வந்து அவள் காலை நனைத்தார். அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டியது போல இருந்தது. அவள் கெக்கெக்கே என்று சிரித்தாள். இனியனும் சிரித்தான். ” பொதுவாகவே என்னை நம்பி வாழும் பாரம்பரிய மீனவர்கள் கடலில் பயணிக்கும்போதும் சரி, மீன் பிடிக்கும் போதும் சரி, கடற்கரையில் வலைகளைப் பழுது பார்க்கும் பொழுதும் சரி, மீன்பிடித்தொழில் சார்ந்த கருவிகளைப் பராமரிக்கும் பொழுதும் சரி காலில் செருப்பு அணிவதே இல்லை. ” என்று சொன்னார் கடல்பாட்டி. ” ஆமா.. இனியன் அங்க பாரு! அப்பா செருப்பு போடாமல் தான் வலையைப் பழுது பார்க்கிறாரு..” என்று சொன்னாள் அமுதா. அதற்கு இனியன், “ ஆமாம்.. அப்பா செருப்பு போட்டு பார்த்ததே இல்லை.. ஏன் பாட்டி? ” என்று இனியன் கேட்டான். ” பேரப்பிள்ளைகளா! எங்கெல்லாம் செருப்பு போடாம போவாங்க உங்களுக்கு தெரியுமா? ” என்று கடல்பாட்டி கேட்டார். ” சாமி கும்பிடும் போது போடமாட்டாங்க.. பிறருக்கு மரியாதை செய்யும் போதும் செருப்பு போடமாட்டாங்க..” என்றாள் அமுதா. ” இப்ப புரியுதா நெய்தல் நிலத்தில் வாழும் பாரம்பரிய மீனவர்களுக்கு நான்தான் முதல் தெய்வம். அதாவது இயற்கை தான் இவர்களின் ஒரே நம்பிக்கை. மீனவர்கள் இயற்கையை நம்பி மட்டுமே வாழ்பவர்கள். ” என்றார் கடல்பாட்டி. ” பாட்டி நீங்க சொல்றது சரிதான். எங்க ஊர்ல கடல் தொழில் செய்யும் யாருமே இதுவரை கடற்கரைக்கு செருப்பு போட்டு வந்து நாங்க பாக்கல. அவங்க வலை, படகு, கடல் எதுலயும் செருப்புபடாம பாத்துக்குவாங்க படகுகளில் ஏறும் பொழுது மத்தவங்க செருப்பு போட்டு இருந்தாலும் கழற்ற சொல்லிடுவாங்க ” என்று அமுதன் சொன்னான். ”அது மட்டும் இல்ல கண்ணுகளா..கடல்ல ஆழியைத் தாண்டி வரும்போது வெத்தல பாக்கு புகையிலை எதுவும் போட மாட்டார்கள். ஆழி இருக்கும் திசை நோக்கி அவர்கள் கையெடுத்து கும்பிடுவார்கள். அப்பொழுது தலையில் கட்டி இருக்கக்கூடிய தலைப்பாகையையும் அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். அந்தப் பகுதியை கடக்கும் வரை கடலிலே அவர்களை எச்சில் துப்பமாட்டார்கள். வேட்டியை மடித்து கட்ட மாட்டார்கள். ” என்றார் கடல்பாட்டி. ” ஆஹா! மிகவும் புதிய தகவலாக இருக்கிறதே. இது எனக்கு தெரியாதே எங்க அப்பா கிட்ட இன்னைக்கு நான் கேட்டு தெரிந்து கொள்ளப்போறேன். ” என்றாள் அமுதா. அமுதாவுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. இனியனும் அமுதாவும் கடல் பாட்டியோடு நீண்ட உரையாடல் செய்து கொண்டிருந்தார்கள் அவர்களின் உரையாடலின் மூலம் நெருக்கம் கூடக்கூட உடைந்த மணல் கோபுரத்தை மறந்து போனாள் அமுதா. ” அமுதா நம்ம கடலை பாத்தியா எவ்வளவு அழகா இருக்கு. அந்த கடல்தான் நமக்கு வாழ்வாதாரம். கடல் தொழிலில் எதுவும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும் அதில் தொழில் செய்யும் பொழுது அவர்கள் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காகவும் அதை வணங்கிட்டுதான் தொழிலுக்கு போவாங்க. ” என்று இனியன் சொன்னான். ” ஆமாம் அண்ணா. அது சரி ஆழின்னா என்ன? ” என்று கேட்டாள் அமுதா. ” வா நம்ம கடல் பாட்டிகிட்டயே கேட்டு தெளிவுபடுத்துவோம் “ என்று சொன்னான் இனியன். இருவரும் திரும்பிப்பார்க்கும் போது கடல்பாட்டியைக் காணவில்லை. ( கடல் பேசும்.)
- கனவு பயணம்
விஜியும் சல்மாவும் தோழிகள். எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். விஜி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள். வீட்டுக்கதையை பேசுவாள். தெரு கதையை பேசுவாள். இவளுக்கு வாய் வலிக்குமா? வலிக்காதா? என்று அவளை பார்க்கிறவர்கள் ஆச்சரியப்படுவார்கள். விஜி சொல்லும் கதைகளை கேட்கும் பொறுமையான காதுகள் சல்மாவின் காதுகள். அவள் நம்ப முடியாத பல கதைகளை கூறுவாள். சல்மா கண்கள் விரிய ஆச்சரியமாக கேட்பாள். விஜிக்கு நிறைய ஆசைகள் இருந்தன. வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும். சைக்கிள் ஓட்டனும். யார் உதவியும் இல்லாம தானாகவே குளிக்கணும். அவசரம்னா தானாகவே நடந்து கழிவறைக்குப் போகணும். பள்ளிக்கூடத்துக்கு தனியா சைக்கிள்ல போகணும். இப்படி நிறைய ஆசைகள். எல்லா ஆசைகளும் ஆசைகளாக மட்டுமே இருந்தன. விஜியால் நடக்க முடியாது. இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி முட்டியால் தவழ்ந்து தான் நகர்வாள். அவளுக்கு சல்மாவை மிகவும் பிடிக்கும். விஜியின் அப்பா தினமும் தின்பண்டம் வாங்கி வருவார். அதில் கொஞ்சத்தை எடுத்து டப்பாவில் மறைத்து வைப்பாள். அடுத்த நாள் காலையில் அதை சல்மாவுக்கு தருவாள். "எனக்கு வேண்டாம் நீ சாப்பிடுப்பா" என்பாள் சல்மா. விஜி விடமாட்டாள். சில நேரங்களில் அவளே ஊட்டியும் கூட விடுவாள். விஜி நன்றாக பாடுவாள். ஆனாலும் விஜிக்கு பாடுவதில் பெரிய விருப்பமில்லை. அவளுக்கு சல்மாவுடன் கதை பேசத்தான் பிடித்திருந்தது. அவள் எப்போதாவது பாடுவாள். இது பள்ளியில் எந்த ஆசிரியருக்கும் தெரியாது. விஜி... பாட்டு பாடுப்பா....என்பாள் மலர். உடனே அனைவரும் விஜியை சுற்றி நின்று கொள்வார்கள் பாடு விஜி.... பாடு.... என்று கோரசாக கத்துவார்கள். யார் விஜியை பாடச் சொன்னாலும் அவள் பாட மாட்டாள். "விஜி பாடு" என்று சல்மா கூறியவுடன் விஜி பாடத் தொடங்குவாள். அவள் ஆசைகளை அவளே மெட்டு போட்டு பாடுவாள். ஒரு நாள் அவளோட வகுப்பறையை கடந்து போனார் மகா லட்சுமி டீச்சர். விஜி பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு சத்தம் கேட்டு உள்ளே வந்தார் . அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. " விஜி சூப்பரா பாடுறம்மா. உனக்குப் பாடத் தெரியும் என்று நீ ஏன் சொல்லவே இல்லை " என்றார் மகா டீச்சர். விஜியை திரும்பத் திரும்ப பாடச் சொல்லி கேட்டார். மகிழ்ச்சியில் அவள் அன்று இரவு தூங்கவே இல்லை. அடுத்த நாள் உடற்கல்வி பாட வேளை வந்தது. அனைவரும் மைதானத்திற்கு சென்று விட்டார்கள். விஜியை மூன்று சக்கர வாகனத்தில் சல்மாவும் அனிதாவும் உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். மைதானத்தின் ஒரு ஓரத்தில் மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தாள் . நண்பர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவள் ஆசையாய் பார்ப்பதை சல்மா பார்த்து விட்டாள். தன் வகுப்பு தோழர்களை அழைத்துக் கொண்டு விஜியின் பக்கத்தில் வந்தாள். சல்மாவும் அனிதாவும் இரண்டு பக்கவாட்டில் பிடித்துக் கொண்டனர். பின்பக்கம் இரண்டு பேர் பிடித்துக் கொண்டார்கள். வேகமாக தள்ளிக்கொண்டே மைதானத்திற்குள் ஓடினார்கள். அப்படியே மைதானத்தை வட்டமடித்தார்கள். விஜி வண்டியின் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அண்ணார்ந்து வானத்தை பார்த்தாள். வானத்தில் பறப்பது போல இருந்தது. விஜி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதற்குப் பிறகு ஒவ்வொரு உடற்கல்வி பாடவேலையிலும் விஜி இப்படியே பறவை போல் பறந்து மகிழ்ச்சியாய் இருந்தாள். நாள்கள் கடந்தன. திடீரென்று பள்ளி பரபரப்பானது. மாவட்ட அளவிலான நாடகப் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சல்மா அவ்வப்போது நாடக ஒத்திகைக்குச் சென்று விடுவாள். விஜிக்கு சல்மா இல்லாத நேரம் என்னவோ போல இருக்கும். உணவு இடைவேளையின் போது சல்மாவிடம் கேட்டு விட்டாள். "சல்மா எனக்கும் கை, கால் நல்லா இருந்திருந்தால் நானும் நாடகத்தில் சேர்ந்து இருக்கலாம் தானே" என்றாள். சல்மாவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. "டீச்சர் விஜியையும் நாடகத்தில் சேர்க்க முடியுமா?" என்று ஒத்திகையின் போது டீச்சர்கிட்ட கேட்டாள் சல்மா. வெளியூருக்கு எப்படிப்பா விஜியை கூட்டிட்டு போவது? என்றார் டீச்சர். நான் அவளை தூக்கிக் கொள்வேன். அது என் பொறுப்பு டீச்சர் என்றாள் சல்மா. அன்று மாலை விஜியை அழைக்க வந்த அம்மாவிடம் மகா டீச்சர் விஷயத்தை கூறினார். அம்மாவுக்கு அதிர்ச்சி. "அவளால் எந்த வேலையும் தனியா செய்ய முடியாது டீச்சர். அவள் அங்கு வந்து என்ன செய்யப் போறா . கை குழந்தைய வச்சுக்கிட்டு என்னாலையும் உங்க கூட வர முடியாது. உங்களுக்கு தான் தொந்தரவா இருக்கும். வேண்டாமே டீச்சர்" என்றார். "விஜி நல்லா பாட்டு பாடுவா. நாடகத்திற்கு பாட்டு பாட ஆள் தேவை. விஜியால் அது முடியும். உங்களுக்கு அனுப்ப விருப்பம் இருந்தா சொல்லுங்க. மற்றவைகளை நாங்க பார்த்துக்கிறோம்" என்றார் மகா டீச்சர். " உங்க விருப்பப்படி செய்யுங்க". என்று சம்மதித்தார் விஜியின் அம்மா. போட்டி நாள் வந்தது. விஜி குதூகலமாக கிளம்பினாள். சல்மாவும் அனிதாவும் சேர்ந்து விஜியை தூக்கிச் சென்று வேனில் உட்கார வைத்தனர். வேன் கிளம்பியது. ஜன்னல் ஓரத்தில் விஜி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் வயல்வெளி. எதிர் காற்று முகத்தில் அடித்தது. பிரபலமான சினிமா பாட்டு வேனில் ஒலித்தது. ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாள் விஜி. டிரைவர் அண்ணன் பக்கத்தில் இருந்த அப்துல்லா சொன்னான் "அண்ணன் பாட்டை நிப்பாட்டுங்க. விஜி நீ பாடு" அவன் சொன்னதும் எல்லோருமே சேர்ந்து கொண்டனர். விஜி பாடு.... விஜி பாடு ....என்று ஒரே கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். அவள் பாட..... அனைவரும் ஆட..... ஒரே குதூகலம். அது அவள் ஆசைப்பட்ட பயணம். பக்கத்தில் இருந்த சல்மா விஜியின் குதூகலமான முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். இருவரின் கைகளும் இறுகப் பற்றி இருந்தன.
- ஸ்டீவன் ஹாகிங்
20 வயதில் தீவிரமான நோய் கண்டறியப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி வாழ வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் சொன்னாலும், அதற்குப் பிறகு 55 ஆண்டுகள் வாழ்ந்து, பல இயற்பியல் கோட்பாடுகளை உருவாக்கி, இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்ந்து நமக்கு அனைவருக்கும் உத்வேகம் தந்த தனித்துவமான மனிதர் ஸ்டீவன் ஹாக்கிங். அந்த மாபெரும் அறிவியல் அறிஞரைப் பற்றி சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில், ‘ஸ்டீவன் ஹாகிங் :முடிவிலிருந்து ஒரு தொடக்கம்’ என்னும் நூலை எழுத்தாளர் கமலாலயன் அவர்கள் எழுதி, ஓங்கில் கூட்டம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் ஆக்ஸ்போர்டு என்ற இடத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் பிராங்க் . தாயின் பெயர் ஐசோபெல் ஹாக்கின்ஸ். தந்தை ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். தன்னுடைய 17 ஆவது வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். பின்பு அண்டவியலில் முனைவர் பட்டம் பெற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அவர் கருந்துளை பற்றிய ஆராய்ச்சியை அங்கு தொடங்கினார். 1974 இல் ராயல் சொசைட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க தொடங்கிய காலத்திலிருந்து இவருக்கு அமியோடிரோபிக் லாட்டெரல் செலரோசிஸ் என்ற அரிதான நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயின் தாக்கம் தொடங்கியிருந்தது. மெல்ல மெல்ல நடப்பதில் தடுமாற்றம் ஆரம்பித்து, நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்பட்டது. அந்த நோயின் தாக்கத்தால் அவர் நாடி நரம்பு எல்லாம் சிதைக்கப்பட்டு வந்தாலும் அவருடைய சிந்தனையையும் மனதையும் அதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ரோஜர் பென் ரோஸ் என்ற மூத்த அறிவியலாளரின் கருத்தரங்கத்திற்கு சென்று கொண்டு திரும்பி வந்த நேரத்தில் , இந்த ஒருமை கணத்தேற்றத்தை பிரபஞ்ச வெளி முழுமைக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன? என்று எழுந்த ஒரு சிந்தனை தான் அவருக்கு அது சார்ந்த ஆய்வு கட்டுரையை எழுத வைத்து முனைவர் பட்டம் கிடைக்க வழி செய்தது. இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இவரை காதலித்து மனம் புரிந்து கொண்ட பெண் தான் ஜேன். அவருக்கு வாழ்க்கையின் மீது பற்றும் ,வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் தந்த உறவு ஜேன். 1966 இல் வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஹாகிங். அதற்குப் பிறகு ஜெனிவா நகரில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு எஞ்சி இருந்த பேச்சுத்திறனும் பறிபோனது. அப்போதும் அவர் சோர்ந்து போய்விடவில்லை. ஏனென்றால் அவருடைய சிந்தனைகளுக்கு தான் எல்லை இல்லையே. அதற்குப் பிறகு அவருடைய கண்ணசைவைக் கொண்டு சொற்களை உருவாக்கி உரையை தயாரித்துக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தார். கலிபோர்னியாவை சேர்ந்த , வால்ட் வால்டோஸ் என்ற நண்பர் Equalizer version EZ keys என்ற மின் பொருளை இவருக்காக பிரத்தியேகமாக தயாரித்து தந்தார். ஹாகிங் கண்ணசைவு, விரல் அசைவு இவற்றைக் கொண்டு எல்லாம் அவர் எண்ணங்களை சொற்களாக்க இந்த மென்பொருள் உதவியது. 1988 இல் வெளிவந்த அவருடைய காலம் ஒரு சுருக்கமான வரலாறு என்ற புத்தகம் அவருக்கு மிகப்பெரிய புகழை வாங்கி தந்தது. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதப்பட்ட இந்த நூல் , கோடிக்கணக்கான பிரதிகள் விற்றன. புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, அணுக்கரு மென் விசை , அணுக்கரு பெரு விசை இந்த நான்கு திசைகளும் தான் பிரபஞ்சம் வெளியில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய அனைத்துக்கும் அடிப்படை. ஒருங்கிணைந்த கோட்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது ஐன்ஸ்டீனின் கனவு. ஸ்டீபன் ஹாக்கிங் இதற்காகத்தான் பெரும்பாடு பட்டார். Theory of everything இந்த கொள்கைக்கு பெயர் சூட்டி இருந்தார். ஆனாலும் அவராலும் இந்த ஆய்வை முடிக்க இயலவில்லை. இவருடைய அறிவியல் ஆய்வுகளுக்காக மட்டும் இவர் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல. விடாமுயற்சி, தன்னம்பிக்கை வாழ்வில் எந்த கடினமான கணத்திலும் சோர்ந்து போய்விடாமல் தன் தேடல்களை நோக்கி பயணப்பட்ட ஒரு தனித்துவமிக்க மனிதர். நிச்சயம் இவருடைய வாழ்க்கை வரலாறை வாசிக்கும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தரும். நூல்:- ஸ்டீவன் ஹாகிங் ( முடிவில் இருந்து ஒரு தொடக்கம்) ஆசிரியர் : கமலாலயன் வெளியீடு :- ஓங்கில் கூட்டம் - பாரதி புத்தகாலயம்
- கட்ட வண்டி
கடக்கு முடக்கு கட்ட வண்டி காட்டுவழியில் செல்லும்வண்டி மாடுரெண்டும் பூட்டிக்கிட்டு மாமாவையும் கூட்டிக்கிட்டு தாத்தா பாட்டியை ஏத்திக்கிட்டு தம்பியும் நானும் சேர்ந்துகிட்டு தன்னானே பாட்டுப் பாடிக்கிட்டு தரணி எங்கும் சுத்திடுவோம்.
- அய்யோ!
ஓவியம் உ.நவீனா:
- குழந்தைகளின் உரிமைகள் – 2
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள், அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை எந்தப்பள்ளியில் சேர்ப்பது, அவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், வயது வந்த பெரிய குழந்தைகள் என்றால், அவர்கள் இந்தக் கல்லூரியில் சேர வேண்டும், இன்ன படிப்புப் படிக்க வேண்டும் என்ற பல்வேறு முடிவுகளையும் பெரியவர்கள்தாம் பெரும்பாலும் எடுக்கின்றனர். “ என் பையன் / பொண்ணு நாங்க கிழிச்ச கோட்டத் தாண்டவே மாட்டாங்க” என்று பெருமையுடன் சொல்லும் பெரியவர்களை, பெற்றோரை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இந்த மாதிரிச் செய்யக்கூடாது என்று சொல்கிறது யூனிசெப் அமைப்பின் பிரகடனம். பெரியவர்கள் இம்மாதிரி முடிவுகளை, அல்லது குடும்பத்தில் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் தாங்கள் எடுக்கும் முடிவுகள், தமது குழந்தைகளை எந்த வகையில் பாதிக்கும் என்று தீர யோசித்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்கிறது யூனிசெப். குழந்தைகளுக்கு இந்த உலகிலுள்ள ஆகச் சிறந்த அனைத்தையும் தர வேண்டும் என்பது உலகக் குழந்தைகள் நல அமைப்பின் இரண்டாவது அம்சம். மாமேதை லெனின் இதையே எவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் என்று நாம் மனதிற் கொள்ள வேண்டும் : “ உலகின் ஆகச் சிறந்தவை அனைத்தும் குழந்தைகளுக்கே !” என்பது லெனினின் முழக்கம் . பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் - இப்படி வேறு யாராக இருந்தாலும் அவர்களின் எந்த ஒரு செயலும் மிகச் சிறந்தவற்றையே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது யூனிசெப்பின் விதி. இதை, அநேகமாக உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டு யூனிசெப் அமைப்பின் பிரகடனத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றன. அவ்வாறு நாம் அனைவரும் வழங்குகிறோமோ என்பதை அந்தந்த நாட்டின் அரசாங்கம்தான் கண்காணித்து உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் பிரகடனம் வலியுறுத்திக் கூறுகிறது. பெற்றோரால் அவரவர் குழந்தைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறார்களா, பாதுகாக்கப்படுகிறார்களா என்பதையும் அரசாங்கமே உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த விதி சொல்கிறது. பெற்றோர் அப்படி என்ன அக்கறையே இல்லாமல் இருப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழும். அறியாமை, கவனக்குறைவு, அலட்சியம், இயலாமை, வறுமை நிலை போன்ற பல்வேறு காரணங்களால் அன்றாடம் எங்கேனும், யாரேனும் ஒரு குழந்தை பாதிக்கப்படுவதை, உயிரையே இழப்பதை செய்திகளில் நாம் பார்க்க முடிகிறது. காரில் குழந்தைகளை உட்கார வைத்து, கார்க்கதவைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார் ஒரு பெண். அந்தக் குழந்தைகள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் போகப்போக, காருக்குள் காற்றோட்டம் இல்லாமல், சுவாசிக்கக் கூட முடியாமல் இரண்டு குழநத்தைகள் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய கொடுமை ! ஒரு நர்சரி பள்ளியில் தண்ணீர்த்தொட்டிக்குள் விழுந்து ஒரு நான்கு வயதேயான பெண் குழந்தை இறந்து போன செய்தி போன வாரம் செய்தித்தாள்களில் வந்து அதிர வைத்தது. எங்கே குழந்தைகள் இருந்தாலும், அங்கே இருக்கும் பெரியவர்கள் தாம் குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு என்கிறது யூனிசெப். அரசாங்கம் இதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பது விதி. இதை நாம் செய்கிறோமா, அரசாங்கம் செய்கிறதா என்று நாம் கவனிக்க வேண்டும். ஆகச் சிறந்த அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கடமை நமக்கு அன்றி, வேறு யாருக்கு இருக்கும் ?
- சவரக்கத்தி
மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல பிளேடுகளை (blades), இன்றைய குழந்தைகள் கண்டிருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால்.. இரு புறமும் கூர்முனை கொண்ட பிளேடுகள் இவை. பள்ளியில் பென்சிலை கூர்ப்படுத்த கருவி இல்லையென்றாலும், வீட்டில் உள்ள ஆண்கள் சவரம் செய்வதென்றாலும் இந்த பிளேடுகள்தான் உதவும். வேண்டுதலுக்காகக் கோவிலுக்குப் போனால் கூட, இந்த பிளேடுகளில் ஒரு பாதியை வைத்து, தலைமுடியை மொட்டையடித்துவிடுவார்கள். தற்போது, சவரம் செய்பவர்கள் எது மாதிரியான சவரக்கத்தியைப் பயன்படுத்துகிறார்கள்? இதோ இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு வகையான சவரக்கத்தியாக இருக்கலாம். இதுபோன்ற ஒரு சவரக்கத்தி உங்கள் வீட்டில் இருந்தாலோ, இல்லை அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் இருந்தாலோ, அதை எடுத்துப் பாருங்கள். ஒரு பிளேடுக்கு பதிலாக மூன்று பிளேடுகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது அல்லவா? ஒரேயொரு பிளேடு வைத்து, சவரம் செய்து வந்தவர்கள், இப்படி மூன்று பிளேடு கொண்ட சவரக்கத்திக்கு மாறியது எப்படி? “ஒன்னு வாங்கினா ரெண்டு இலவசம்” அப்படி இப்படியென்று சும்மாவெல்லாம் இந்த மாற்றம் வரவில்லை. இதற்குப் பின்னால், பல கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வு இருக்கிறது. கிங் கேம்ப் கில்லட் (King Camp Gillette) என்பவர் கண்டுபிடித்த 1901ஆம் ஆண்டு சவரக்கத்தியானது. இதற்கு ஆங்கிலத்தில் ‘safety razor’ என்று பெயர். ஒரு பிளேடை இரண்டு புறமும் பாதுகாப்புக்கூறுகள் கொண்டு பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் இந்தப் பெயர். இந்தக் கண்டுபிடிப்பினை முன்வைத்து, கில்லட் தொடங்கிய நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கான சவரக்கத்திகள் விற்கப்பட்டு, இன்று நாம் அன்றாடம் புழங்கக்கூடிய பெயராக கில்லட் மாறியுள்ளது. சாதாரண கத்திரிக்கோல் அல்லது ஏதோ சிறு சிறு கருவிகளின் துணைகொண்டு சவரம் செய்துவந்த மக்கள், கில்லட்டின் சவரக்கத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு கண்டுபிடிப்பின் மூலம், லாபம் வந்தது. அதோடு நின்றுவிடலாம் என்று கில்லட் நிறுவனம் நின்றுவிடவில்லை. அடுத்து என்ன என்று யோசித்தது. 1971ஆம் ஆண்டு, “Trac II” எனப்படும் ஒரு ஒரே உறையில் இரண்டு பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகளை அறிமுகப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இரண்டு பிளேடுகள் எதற்கு என்பதற்கும் அவர்களிடம் ஒரு தெளிவு இருந்தது. முதல் பிளேடு, முடியை தோலிலிருந்து சற்றே வெளியே இழுக்கும். இரண்டாவது கத்தி அந்த இழுக்கப்பட்ட முடியை அதன் வேர் அருகேவே வெட்டிவிடும் - அது மீண்டும் உள்ளே நுழைவதற்குள். விளைவு? மிருதுவான சவரம்! இந்த யோசனையை “பின்னிடைவு விளைவு” (hysteresis effect) என்று அழைத்தனர். ஆனால் அர்த்தம் சுலபம்: ஒரு கத்தி இழுக்கிறது, அடுத்தது வெட்டுகிறது. ‘சவர’ உலகில் இதுவே பெரும் புரட்சி என்றால், அத்தோடு நின்றுவிடவில்லை கில்லட் நிறுவனம். ஒன்றுக்கு பதிலாக, இரண்டு பிளேடுகளை வைத்ததற்கே, இவ்வளவு மிருதுவான சவரம் கிடைக்கிறதென்றால், இன்னும் அதிக எண்ணிக்கையில் பிளேடுகளைக் கொண்டு சவரக்கத்திகளை உருவாக்கினால் என்ன என்று யோசித்தனர். யோசனை மட்டும் போதுமா? ‘செயல்’ அல்லவா முக்கியம்! இதற்காக 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. தற்சமயத்தில், 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது சுமார் 6,262.5 கோடி ரூபாய் ஆகும். இந்தக் காசில் பத்து ‘மங்கள்யான்’களையாவது நம்மால் தயாரிக்க முடியும். சின்ன சவரக்கத்திக்கு அவ்வளவு பெரிய தொகை ஏன் தேவைப்பட்டது? மூன்று பிளேடுகளை எந்தளவு தூரத்தில் பொறுத்த வேண்டும்; எவ்வளவு அகலம் இருக்க வேண்டும்; எந்த மாதிரியான உலோகக்கலவை தேவை; பிளேடுகள் எவ்வளவு கூர்மையில் இருக்க வேண்டும்; எந்த கோணத்தில் பிளேடுகளைப் பொறுத்த வேண்டும். இப்படி நுட்பமான கேள்விகள் பலவற்றிற்கும் பதில் வேண்டும். பத்தாண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் 1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுதான் “Mach 3” எனப்படும் சவரக்கத்திகள். மூன்று பிளேடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்த கத்திகள். அதற்குப்பின்பு, நான்கு ஐந்து என்று பல பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகள் வடிவமைக்கப்பட்டுவிட்டாலும், “Mach 3” என்பது தனித்துவமாக நிலைத்துவிட்டது. ஒரு சின்ன கத்திக்கு எத்தனை பெரிய வேலை!!!
- Adolescence web series - 1
Adolescence தொடர் பலரையும் சூறாவளியாகச் சுழற்றி அடித்திருக்கிறது. பதிமூன்று வயதுச் சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவியைக் கத்தியால் கடுமையாகத் தாக்குகிறான். அச்சிறுமி இறக்கிறாள். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு Adolescence தொடரை எடுத்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கொண்ட நான்கு பாகங்கள். இங்கே இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் சொன்னார்கள். எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய செய்தி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். 'இந்தக் காலத்துப் பசங்க, ரெம்பக் கெட்டுப் போயிருக்காங்க. ஆளும் தலைமுடியும்.....'என்ற குரல்கள் ஏராளமாக ஒலிக்கின்றன. உடனேயே ' பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகள் இல்லை. நீதிக்கதைகள் சொல்லணும்' என்று எதிரொலிகள். சற்றே சிந்தித்தாலும் ஒவ்வொரு தலைமுறையும் இப்படித்தான் அடுத்த தலைமுறையைப் பார்த்துப் புலம்பியிருக்கிறது என்பது புரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இச்சமூகத்தில் நீதி தவறிய செயல்பாடுகள் இருந்ததால் தானே வள்ளுவரும் நீதிகளைச் சொல்லியிருக்கிறார். சமகாலத்தில் கேட்பதால் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதிரான குரல்கள் அதிகமாக இருப்பது போலத் தோன்றுகிறது. வளரிளம் பருவத்தைக் கடந்து நடுத்தர வயதை அடையத் தொடங்கிய பலரும் அடுத்த தலைமுறையைக் குற்றம் சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். காலம், சூழலுக்கு ஏற்ப சிந்தனையும் சமூக அக்கறையும் தவறுகளையும் செய்தே அனைவரும் வளரிளம் பருவத்தைக் கடந்திருக்கிறோம். இப்பருவத்தின் இருண்மைகள் அனைவருக்கும் உண்டு. 'இன்றைய தலைமுறை தவறுகளைச் செய்கிறது. நாங்களெல்லாம் ஒழுக்கமாக இருந்தோம்.' என்று சொல்லி முடிக்கும்போதுதான் தன்னை 'யோக்கியன்' என்று நிரூபிக்க முயல்வதைப் புரிந்து கொள்ளலாம். வளரிளம் பருவத்தினரிடம் வன்முறை, போதை, அக்கறை இன்மை போன்ற நடத்தைகள் இப்போது அதிகரித்திருப்பதாக பலரும் வருத்தப்படுகிறார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளை விடக் கடந்த இருபது ஆண்டுகளில் சிந்தனையைத் தவிர அனைத்திலும் அளவற்ற மாற்றங்களை அடைந்திருக்கிறோம். குறிப்பாக அறிவியலின் வளர்ச்சி அளப்பரியது. எனவேதான் வளரிளம் பருவத்தினரின் நடத்தையில் இக்காலத்தில் பெரும் மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது. நம் சமூகத்தில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மிகவும் குறைவு. வளரிளம் பருவத்தினருக்கான செயல்பாடுகள் மிக மிக மிகக் குறைவு. குழந்தை இலக்கியமே தவழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வளரிளம் பருவத்தினருக்கான கலை, இலக்கியம் போன்றவை குறித்த பேச்சே இல்லை என்று கூறலாம். குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவம் வரை மனிதத்தோடு அடுத்த தலைமுறையைப் பழக்காத சுயநலமிக்க சமூகமாகப் பெரியவர்கள் இருக்கிறோம். வேகமும் துடிப்பும் கொண்ட வளரிளம் பருவத்தினரை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அதற்குத் தொடக்கமாகவே வளரிளம் பருவத்தினரைப் பற்றிய பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து உரையாடுவோம். அதிலிருந்து செயல்பாடுகளை உருவாக்க முயற்சி செய்யலாம். Adolescence பொழுது புலரும் நேரம். காவல் துறையினரின் வாகனங்கள் விரைகின்றன. ஆயுதம் தாங்கிய காவலர்கள் ஒரு வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள். வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். எதிர்ப்படுபவர்களின் முகத்திற்கு நேரே துப்பாக்கி. 'கீழே உட்காருங்கள்' என்ற குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. அம்மா கதறுகிறார். படியில் இறங்கி வந்த அப்பா, துப்பாக்கி முனையில் கைகளைத் தூக்கியபடி நிற்கிறார். அறையைத் திறந்த சிறுமி துப்பாக்கியைப் பார்த்துப் பயந்து அழுதபடி கீழே உட்கார்ந்திருக்கிறாள். அப்பாவிடம்," ஜெமி மில்லர் வீடுதானே இது? கைது செய்ய ஆணையோடு வந்திருக்கிறேன்." என்றபடியே ஒரு காவலர் மாடிக்குச் செல்கிறார். "நீங்க தப்பு பண்றீங்க. அவன் சின்னப்பையன்" என்று அப்பா கத்துகிறார். ஜெமியின் அறைக்கதவு திறக்கப்படுகிறது. பயத்தால் உடல் நடுங்கியபடியே கத்திக் கொண்டு இருக்கிறான் ஒரு சிறுவன். " ஜெமி மில்லர், ஒரு கொலைக் குற்றத்திற்காக உன்னைக் கைது செய்கிறேன். இப்போது நேரம் காலை 6.15 மணி." என்று காவலர் சொல்கிறார். ஜெமி பயத்துடன் "நான் எதுவும் செய்யல..." என்று அலறிக்கொண்டே இருக்கிறான். இப்படிப் பரபரப்பாகத் தொடங்குகிறது, Adolescence தொடர். காவல்நிலைய நடைமுறைகள், தொடக்க நிலை விசாரணைகள் என முதல் பாகம் முழுவதும் காவல் நிலைய நிகழ்வுகள் விரிவாகக் காட்டப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஏன் செய்கிறோம் என்று கைது செய்தவரிடம் சொல்லிச் சொல்லிச் செய்கிறார்கள். மனித உரிமைகளை மீறி விடாமல் கண்ணியமாக விசாரணை நடைபெறுகிறது. நம் காவல் துறைக்கு இது மிகச்சிறந்த பாடமாக இருக்கும். 13 வயதே ஆன சிறுவன் மீது கொலைக்குற்றம். நடந் தது என்ன? (தொடரும்)
- விடுகதைகள்
1. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம் - அது என்ன? 2. சின்னவன் தலைக்குச் சீரான கிரீடம். அது என்ன? 3. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு; ஓட்டு வீட்டைப் பிரித்தால் வெள்ளை மாளிகை; உள்ளே குளம். அது என்ன? 4. இத்தனூண்டு சிட்டுக்குருவிக்கு ஏழு முழம் பட்டுப் புடவை. அது என்ன? 5. மூன்று பெண்ணுக்கும் ஒரே முகம்; மூத்த பெண் ஆற்றிலே; நடுப் பெண் காட்டிலே; கடைசிப் பெண் வீட்டிலே. அவர்கள் யார் யார்? விடைகள்:- 1. முட்டை 2. குண்டூசி 3. தேங்காய் 4. வெங்காயம் 5. முதலை, உடும்பு, பல்லி.
- குழந்தையிடம் அம்மா செல்வது எப்படி?
குழந்தை அம்மவிடம் செல்ல உதவுங்கள் செல்லக்குட்டி! படம் உதவி: நாஜலட்சுமி நாராயணசாமி












