இயலில் தேடலாம்!
211 results found with an empty search
- ஸ்பாரோவின் சிறார்களுக்கு எழுதும் பெண் எழுத்தாளர் சந்திப்பு
மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (SPARROW - Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குநராக எழுத்தாளர் அம்பை இருக்கிறார். 1988ஆம் ஆண்டு அம்பையும், அவரது நண்பர்களும் சேர்ந்து நிறுவிய இந்த ஆவணக்காப்பகம் வெறும் தகவல் சேகரிப்பு மையமாக மட்டும் செயல்படாமல், அகில இந்திய அளவில் பெண்களின் வரலாறு, வாழ்க்கைப் போராட்டம், அவர்தம் சாதனைகள் ஆகியவற்றை ஒலி, ஒளிக் காட்சிகள், வாய்மொழிப் பதிவுகள் எனப் பல வித்தியாசமான முறைகளில் ஆவணப்படுத்தும் அரிய பணியைச் செய்யும் அமைப்பாகவும் செயல்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் ஏற்கெனவே கவிதை உள்ளிட்ட பல இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்து நடத்தியிருந்த ஸ்பாரோ, இந்தாண்டு அகில இந்திய அளவில் சிறார் இலக்கியத்தில் ஈடுபட்டுள்ள பெண் எழுத்தாளர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பலதரப்பட்ட மொழிகளில் எழுதும் சிறார் பெண் எழுத்தாளர்களுக்கான சந்திப்பு நடப்பது இதுவே முதல் முறையென்று நினைக்கிறேன். இவர்களில் சாகித்ய பால புரஸ்கார் விருது வென்ற ஆளுமைகள் பலர் இருந்தனர். பெங்காலியில் எழுதும் ஜோயா மித்ரா, மலைவாழ்ப் பெண்களுக்கு விழிப்பூட்டும் விதமாகச் சந்தாலி மொழியில் கதைகளை எழுதும் ஜோபா முர்மு, சிந்தியிலும், ஹிந்தியிலும் எழுதும் ராஷ்மி ரமணி, அஸ்ஸாம் மொழியில் எழுதும் பந்திதா ஃபுகன். கொங்கணியில் எழுதும் ஹர்ஷா சத்குரு ஷெட்யே ஆகியோர் அவர்களில் சிலர். கதை சொல்லுதல், நாடகம் பன்மொழிப் புலமை எனப் பன்முகத்திறமை பெற்ற பலர் இருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட நேபாளி மொழியில் எழுதும் சாங்மு லெப்ஷா என்பவருக்கு, 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய பாலபுரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. நிகழ்வு மூன்று நாட்கள், பயணம் போக வர இரண்டு நாள், எனப் பங்கேற்பாளர்க்கு 28/04/2025 முதல் 02/05/2025 வரை, மொத்தம் ஐந்து நாட்கள் உணவு, உறைவிட வசதி கிரீன் ஹில் வில்லாஸ், கல்யாண், மகாராஷ்டிரா என்ற ரிசார்டில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. தமிழ், கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, அஸ்ஸாம், குஜராத்தி, பெங்காலி, மைதிலி, சந்தாலி, கொங்கணி, நேபாளி, சிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் 23 பேரோடு கதைசொல்லி, ஓவியர், சிறார் செயற்பாட்டாளர் என மேலும் மூவர் இணைந்து, மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர். இதில் எழுத்தாளர் அம்பையும் அடக்கம். ‘அம்பை’ என்ற புனைபெயரில் எழுதும் சி.எஸ்.லஷ்மி, சிறார் கதைகளும் எழுதியிருக்கிறார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத செய்தி. 1960இல் ‘கண்ணன்’ சிறார் இதழில் நடந்த நாவல் போட்டியில் இவரது ‘நந்திமலைச் சாரலிலே’ என்ற சிறுவர் சாகச நாவல் முதற்பரிசு வென்று, அந்த இதழில் தொடராக வெளிவந்தது. அதை எழுதிய போது அவருக்கு வயது 16. அது தவிர ‘நிர்மலம்’ என்ற சிறுவர் கதை எழுதியிருப்பதோடு, சிறார் கதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துமிருக்கிறார். இளையோர்க்காக இவரெழுதிய தன்வரலாறு ‘Walking Erect with an Unfaltering Gaze,’ (நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்) குறுநூலை 2013ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. தமிழ்நாட்டிலிருந்து சிறார் எழுத்தாளர்கள் ஞா.கலையரசி, ஈரோடு சர்மிளா, அறிவியல் எழுத்தாளர் நாராயணி சுப்ரமணியன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதும் சென்னையைச் சேர்ந்த சந்தியாவும், கணித மாணவியும் ஓவியருமான மதுஸ்ரீ என்பவரும் வந்திருந்தனர். முதல் நாள் மாலை எழுத்தாளர்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டன. மற்ற மாநிலத்திலிருந்து வந்திருப்பவர்களோடு சகஜமாகப் பழக வேண்டும் என்ற நோக்கத்தில், வெவ்வேறு மொழி பேசும் இருவர், ஒரே அறையில் தங்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். இரவுணவுக்குப் பிறகு ஸ்பாரோ குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வுக்காக கான்பரன்ஸ் ஹாலுக்குச் சென்ற எழுத்தாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது! பங்கேற்பாளர்களின் படத்துடன் கூடிய குறிப்புகள் அடங்கிய வண்ணப் போஸ்டர்கள் அந்த அறையின் நான்கு பக்கச் சுவர்களையும் அலங்கரித்தன. அவரவர் படத்தின் முன் நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்ட எழுத்தாளர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவித்தனர். அம்பை தலைமையில் ‘ஸ்பாரோ’ குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், வந்தவர்களைக் கெளரவிக்கச் செய்திருந்த சிறப்பான முன்னேற்பாடுகளும், அன்பான விருந்தோம்பலும் அனைவரையும் நெகிழச் செய்தன! 29/04/2025 காலை சிறார் செயற்பாட்டாளர் ஸ்ருதி ஸ்ரீதரனின் தமிழ்ப் பாடல் இன்னிசையுடன் விழா இனிதே துவங்கியது. அடுத்துத் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அமைந்த மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஞா.கலையரசி எழுதி, வானம் பதிப்பகம் வெளியிட்ட ‘டைனோசர் சொன்ன கதை’ என்ற சிறுவர் குறுநாவல், ஈரோடு சர்மிளா எழுதிப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்ட துணிச்சல்காரி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘நிலா த பிரேவ்’ என்ற இளையோர் நாவல், நேகா சிங் எழுதிய ‘நிக்கி த டிடெக்டிவ்’ என்ற ஹிந்தி நாவல் ஆகிய மூன்றும் வெளியிடப்பட்டன. அடுத்துப் பங்கேற்பாளருக்கான கேள்வி நேரம். எழுத்தாளர்களுடைய படைப்புகளையும், ஆசிரியர் குறிப்பையும் ஏற்கெனவே எழுத்தாளர் அம்பை வாங்கிப் படித்து, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரத்யேகமான கேள்விகளைத் தயாரித்து முன்கூட்டியே நிகழ்ச்சிநிரல் பட்டியலில் அனுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில்களை எழுத்தாளர் மேடையில் சொல்லும் நிகழ்வு இது. சிறார் இலக்கியம் எழுத வந்ததன் பின்னணி, அவர்கள் சந்தித்த சவால்கள், எழுதத் தேர்ந்தெடுத்த மொழிக்கான காரணம், குடும்பப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டன. ஹிந்தியில் பேசியவர்கள் உரையைத் தொகுப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பங்கேற்பாளர்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள இந்த நிகழ்வு பெரிதும் உதவியது. ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு முக்கியமான தலைப்பில் கலந்துரையாடலும், கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றது. குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கதைகள் சொல்லும் போது அது எந்தளவுக்கு அவர்கள் ஆளுமையை வளர்க்கிறது? தாய்மொழியில் கதைகள் சொல்வது ஏன் அவசியம்? என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். குழந்தைகளும், இளையோரும் தங்கள் மொழி, வேர், பண்பாடு, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை அறிந்து கொள்ளவும், அவற்றில் ஈடுபாடு கொள்ளவும் தாய்மொழியில் கதைகள் கேட்பதும்,வாசிப்பதும் மிகவும் அவசியம்; பின்னாளில் குழந்தைகளின் ஆளுமையை வளர்ப்பதில் அதற்கு முக்கிய பங்கிருக்கிறது என்பது பெரும் பாலோரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. “பெற்றோர் இருவருக்கும் ஒரே தாய்மொழி என்றால், குழந்தைக்குப் பிரச்சினையில்லை. இந்தியா போன்று பல்வேறு மொழிகள் புழங்கும் ஒரு நாட்டில், அப்பாவின் தாய்மொழி ஒன்று; அம்மாவின் தாய்மொழி வேறு; அவர்கள் குடும்பம் வசிப்பது, இரண்டு மொழிகளும் புழங்காத வேறு ஒரு மாநிலம் என்கிற போது குழந்தையின் தாய்மொழியாக எதை எடுத்துக் கொள்வது?” என்று அப்போது எழுப்பப்பட்ட கேள்வி, அனைவரையும் யோசிக்க வைத்தது. எழுத்தாளர் சந்தியா இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாகக் குழந்தை வசிக்கும் ஊரிலும், தெருக்களிலும் எந்த மொழி பேசப்படுகிறதோ, குழந்தையைச் சுற்றி எந்த மொழி புழங்குகிறதோ, அதையே குழந்தையின் தாய்மொழியாகக் கருத வேண்டும்; பெற்றோரின் மொழியை மட்டுமே தாய்மொழியாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர் அனந்தமூர்த்தியின் கருத்தைத் தெரிவித்தார். இன்னொரு நிகழ்வில் கதைகளை மொழிபெயர்ப்பு செய்வது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிக்கும், இந்திய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கும் போது சந்திக்கும் சவால்கள் குறித்து, எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கடல்சார் உயிரினம் குறித்துத் தமிழில் எழுதும் அறிவியலாளர் நாராயணி சுப்ரமணியன், தாம் எழுதத் துவங்கியபோது Sea cow என்பதற்குக் கடல்பசு என்ற நேரடி மொழிபெயர்ப்புச் சொல்லே கிடைத்ததாகவும், தேடியலைந்து மீனவரிடம் ‘ஆவுளியா‘ என்ற சரியான தமிழ்ச் சொல்லைக் கண்டடைந்தாகவும் குறிப்பிட்டார். “ஓர் இந்திய மொழியிலிருந்து இன்னோர் இந்திய மொழிக்கு மாற்றம் செய்யும் போது கதாபாத்திரங்களின் பெயர்களை வாசிக்கவும், உச்சரிக்கவும் சிரமமாக இருக்கிறது. மொழிபெயர்க்கும் போது, மூலப் படைப்பின் பெயர்களை மாற்றலாமா?” என்ற கேள்வி அச்சமயம் எழுந்தது. “ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அது வாழும் நிலத்தோடும், மொழியோடும் சம்பந்தப்பட்டது என்பதால், வாசிக்கவும், உச்சரிக்கவும் சிரமமாக இருந்தாலும் மாற்றவே கூடாது” என்று அம்பை தம் கருத்தை வலியுறுத்திக் கூறினார். அங்கே மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சிறார் நூல்களைப் பார்த்த போது , நூல் வடிவமைப்பு விஷயத்தில், நாம் இன்னும் அதிக தூரம் போகவேண்டும் என்ற உண்மை புரிந்தது. ஆனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அந்நூல்களின் விலை நூறு ரூபாய்க்கு மேலிருந்ததையும் இங்கே சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சிறார் கதைப் புத்தகத்தின் விலை ரூ 50/-க்கு மேல் இருந்தால், 300 பிரதிகள் கூட விற்பனையாகாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே பெற்றோர் புத்தகம் வாங்குவது செலவல்ல; அது குழந்தையின் அறிவுக்கான முதலீடு என்பதையுணர்ந்து அதிகளவில் புத்தகம் வாங்கத் துவங்கினால், இங்கும் பதிப்பகத்தார் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்த முன்வருவார்கள். ஆங்கிலத்தில் வெளியான சில நூல்கள் சர்வதேச அளவில் பரிசுகளை வென்றிருக்கின்றன. அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கில நூல்களில் என்னை மிகவும் கவர்ந்தது ‘விதை’ (The Seed)என்ற 3-5 வயதினர்க்கான சிறு புத்தகம். 2005ஆம் ஆண்டு துலிகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை ஜெர்மனியின் White Raven Library 2006ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த குழந்தைப் புத்தகமாகத் தேர்ந்தெடுத்தது. இதன் ஆசிரியர் தீபா பல்சாவர் கதையெழுதி, அவரே ஓவியமும் வரைந்துள்ளார். இவரெழுதிய ‘Nani Walks to the Park’ என்ற புத்தகமும் பல விருதுகளை வென்றுள்ளது. ஆங்கிலப் புத்தகத்துக்கு இணையான நுணுக்கமான ஓவியங்கள் இதில் காணக் கிடைக்கின்றன. ‘விதை’ கதையில் பெண் குழந்தைக்கு ஒரு விதை கிடைக்கிறது. அதைத் தொட்டி மண்ணில் போட்டு, நீர் ஊற்றி வெயிலில் வைக்கிறாள். செடி முளைத்து இரண்டு இலைவிடுகிறது. அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி! பெரியவர்களிடம் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கிறாள். இது உயரமாக வளருமா? பூ பூக்குமா? பழம் பழுக்குமா? முடிவில் ‘இது எப்படி வளர்ந்தாலும் சரி; இதை நான் இப்படியே நேசிக்கிறேன்,’ என்று தொட்டியைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள். பொறுமை, காத்திருத்தல், எதிர்பார்ப்பற்ற அன்பு என்ற சிறந்த பண்புகளைக் குழந்தைகளிடத்தில் விதைக்கும் கதையிது. “நீ வளர்ந்து பெரியவனான பிறகு இஞ்சீனியர் ஆவாயா? டாக்டர் ஆவாயா?” என்று தம் குழந்தையிடம் கேட்கும் பெற்றோருக்கும் இதில் முக்கியமான செய்தியிருக்கிறது. "குழந்தைகள் மட்டுமே ரசிக்கக்கூடிய ஒரு குழந்தைக்கதையென்றால், அது சிறந்த குழந்தைக்கதையல்ல,” என்கிறார் எழுத்தாளர் சி.எஸ்.லூயிஸ். (“A children's story that can only be enjoyed by children is not a good children's story in the slightest.”) அடுத்து எழுத்தாளர்கள் அவர்களுடைய ஒரு கதையையோ, நாவலின் ஒரு பக்கத்தையோ, மேடையில் வாசிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு திரையில் காட்டப்பட்டது. மேடையில் வாசிக்கப்பட்ட குழந்தைப் பாடல்களின் மொழி வேறாக இருந்தாலும், அதன் ஓசையும், சந்தமும் ரசிக்கக் கூடியனவாயிருந்தன. ஜில்லா பரிஷத் பள்ளியிலிருந்து 25 மாணவர்களைப் பள்ளித்தலைமை ஆசிரியர் இந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார். தியேட்டர் அனுபவம் உள்ள எழுத்தாளர்கள் நாடகம் நடித்துக் குழந்தைகளை மகிழ்வித்தார்கள்.குழந்தைகளுக்கு வண்ணப் பென்சில்கள் தந்து ஓவியம் வரைய வைத்துச் சிறப்பாக வரைந்தவர்க்குப் பரிசு கொடுத்தார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அமைந்த சில படங்களும், பெண்ணிய நோக்கில் அமைந்த சில திரைப்படங்களும், UNICEF மீனா அனிமேஷன் படங்களும் காட்டப்பட்டன. ‘சகோரி’ என்ற மராத்தியக் குறும்படம் கணவனால் கைவிடப்பட்டுச் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் அவல வாழ்வையும், அவள் பலவாறாகக் கஷ்டப்பட்டுச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட பின் அவள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தையும் சொன்னது. Sesham Milk-il Fathima என்ற மலையாளத் திரைப்படம் கால்பந்து வர்ணனையாளராக விரும்பும் பாத்திமா நூர்ஜகான் என்ற பெண்ணின் கதையை நெகிழ்ச்சியுடன் விவரித்தது. இறுதியாக ஒரு கலந்துரையாடல் நிகழ்வில், திரையிடப்பட்ட படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை எழுத்தாளர்கள் பகிர்ந்து கொண்டனர். முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் அம்பை நினைவுப் பரிசுகளை வழங்கினார். ஐந்து நாட்கள் பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சமையல், பிள்ளைகள் என எந்தவிதக் கவலையும் இல்லாமல் கலை, இலக்கியம் குறித்து மட்டுமே சிந்தித்தும், கலந்துரையாடியும் மகிழ்ந்தார்கள். இந்நிகழ்வின் மூலமாக எழுத்தாளர்கள் கற்றதும் பெற்றதும் மிக அதிகம். அகில இந்திய அளவில் சிறார் பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துச் சிறப்பாகக் கலை இலக்கிய விழா நடத்திய ஸ்பாரோவையும், இயக்குநர் அம்பையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- அன்புள்ள அப்பா
தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன. அக்குழந்தைகள் வாசிக்க என்று எண்ணற்ற புத்தகங்கள் இருந்தாலும்கூட அவ்வயது குழந்தைகளின் நடத்தைகளை பிரதிபலிக்கும் நூல்கள் வெகு சிலவே. அதிலும் புனைவாக்க வகைமைகளில் அரிதாகவே காணக் கிடைக்கின்றன. அன்புள்ள அப்பா என்கிற நூல் அப்படியான வகைமையில் அமைந்திருக்கும் என்பதை வாசிக்கத் தொடங்கும் வரை அறிந்திருக்கவில்லை. பொதுவாகவே நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் நூல்கள் மீது பெரும் விருப்பம் எனக்கு உண்டு. அந்நிறுவனத்தின் நூல்களை வாசித்ததின் வழியாகவே இந்திய அளவிலான நல்ல நூல்களின் அறிமுகம் கிடைத்தது. “அன்புள்ள அப்பா” மராட்டி மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியே இந்நூல். நூல் குறித்த மேலதிக விவரங்கள் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. முதல் அத்தியாயம் வாசிக்கத் தொடங்கும்போதே கதை நாயகனான பிபுல் குறித்த அறிமுகம் அதிரடியாகப் பதிவாகிறது. அவனது வீட்டிலுள்ள சகோதரிகள் மற்றும் அவனது தாய் உட்பட அனைவரும் எப்படி அவனிடம் பயந்து ஒடுங்கி நிற்க தலைப்படுகின்றனர் என்பது விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது. கதை பதின்பருவ வயதினர் விரும்பும் வகையில் சாகசமும் துப்பறிதல் சார்ந்த கிளர்ச்சியும் உடையதாக இருப்பதால் வாசிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. தான் யாருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவனல்ல; எனது விருப்பத்திற்கேற்பவே பள்ளி செல்வதும் செல்லாமலிருப்பதும் என ஒவ்வொரு காரியத்திலும் குடும்பத்திலுள்ளவர்களைப் பதைபதைப்போடு வைத்துக் கொண்டிருப்பவன் பிபுல். அவனைத் தவிர அக்குடும்பத்திலுள்ள பிற குழந்தைகள் அவ்வளவு சமர்த்தாக பள்ளி செல்ல கிளம்பித் தயாராகையில் இவனைக் குறித்து மட்டும் மனம் புழுங்கி புழுங்கி சாகக்கிடக்கிறாள் அவனது அம்மா. அம்மாவோடு உடனிருக்கும் மூத்தவள் ராணி தன் குடும்பத்தில் நிலையறிந்து பள்ளி நாட்களை இழக்க வேண்டிய சூழல் நேருகிறது. அவனது தந்தையோ அரசுப்பணி காரணமாக வெளியூரில் இருந்து வந்தாலும் நாள்தோறும் பிபுலை நினைத்து வருத்தப்பட வேண்டியவராகவே இருக்கிறார். இத்தனைக்கும் இடையில் தன்னையொரு முரடனாக வளர்த்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து திரியும் பிபுல் தனது நண்பர்களோடு சேர்ந்து பகல் நேரங்களில் திரைப்படம் பார்க்கவும் மாலை நேரங்களில் இருள் கூடிய பகுதிகளில் அமர்ந்து சிகரெட் புகைக்கவும் பழகிக் கொள்கிறான். ஒரு மாணவனை திருத்தி நல்வழிப்படுத்த அவனது குடும்பம் மட்டுமல்ல அவர்களை சுற்றியுள்ளவர்களான மருத்துவர், சமூக சேகவர், மளிகைகடைக்காரர், காவல் நிலைய அதிகாரிகள் என அனைவரும் பங்கெடுத்துக் கொள்வது நல்ல விளைவினைத் தருகிறது. முன் காலங்களில் குழந்தைகளை அவர்கள் அறியாமலேயே அவர்களின் நடத்தைகளை கண்காணித்துக் கொண்டிருப்பதற்கான சூழல்; அவர்களோடு உரையாடிக் கொண்டிருப்பதற்கான சூழல் எல்லோருக்கும் வாய்க்கப்பட்டிருந்தது. பெற்றோர்களைத் தாண்டி உறவினர்கள் உட்பட எல்லோருமே அன்னியர்களாகிப் போன இன்றைய சூழலில் குழந்தைகளோடான கவனத்தை வெளி சமூகம் குறைத்துக் கொண்டுள்ளது. இது இன்றைய சூழலின் பெரும்பிழை. இந்நாவலில் சிகரெட் வாங்கச் செல்லும் சிறுவனிடம் மளிகைகடைகாரர் சிகரெட்டைத் தராமல் அவ்வளவு வருந்தி கரைந்து போவதையும்; வேறு வழியின்றி அம்மாணவனுக்கு சிகரெட்டை கொடுத்துவிட்டு பெரும்பாவம் செய்துவிட்ட குற்றவுணர்வோடு உடனே கடையை அடைத்துவிட்டுக் கிளம்புவதையும் வாசிக்கும்போது இன்றைய காலங்களில் இப்படியான தருணமெல்லாம் சாத்தியமா? என எண்ணத் தோன்றுகிறது. கதையில் வரும் புலனாய்வு அதிகாரி மகனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்ல முற்படும்போது அவனது அப்பாவும் உடன் வர முனைகிறார். அப்போது பளீரென புலனாய்வு அதிகாரி நிகுஞ்சா சில வார்த்தைகளை பேசிவிடுவார். அது பெற்றோர்கள் எல்லோருக்குமானதாக அமைந்திருக்கும். நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஏதேனும் ஒருவகையில் பிபுலை வசைபாடி விடுபவர்களாக இருக்க ராணியின் தோழியான மிருணாளினி தனது நேசத்தாலும் அக்கறையாலுமே பிபுலை தேற்றி வழிநடத்துபவளாக இருக்கிறாள். தவறுகளுக்கான தண்டனை குறித்த அச்சத்தில் தன்னை உணரத் தொடங்கும் தருணத்தில்தான் அவனுக்கு மற்றவர்களின் நேசமான பார்வையும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. கடைசி வரை கைவிடாத அவளின் தூய்மையான அன்பு அவனை இறுதியில் நெறிப்படுத்திவிடும் என்கிற நம்பிக்கையை அளித்து நிறைவடைகிறது நாவல். பிறழ்நடத்தை உள்ளவனாக மாறிப் போன குழந்தையை மீட்டெடுக்க அக்குழந்தையைச் சார்ந்துள்ள அனைவரும் எடுக்கும் முயற்சிகள் நாவல் வடிவமாக சாகச உணர்வோடும் பதைப்பூட்டும் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களோடும் சுவைபட எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலில் இடம்பெறும் ஓவியங்களின் உருவ தோற்றங்களும் கதையின் நிகழிடத்தை பொருத்தமாக சொல்லிவிடுகின்றன. இன்றைய வகுப்பறைகளில் குழந்தைகளின் அதீத குறும்புகளையும் வெளிப்பாட்டுத்திறன்களையும் முறைப்படுத்த இயலாது தவிக்கின்ற ஆசிரியர்களுக்கு இந்த நூலை வாசிப்பதென்பது ஆறுதல் அளிக்கக்கூடியதாகவும் இன்னமும் நம்பிக்கையோடு செயலாற்றவும் உதவிகரமாக அமையும். நானும்கூட இந்த நூலை வகுப்பறையில் குழந்தைகளிடம் அவர்களுக்கான சாயலோடு கதையாகச் சொல்லலாம் என விரும்புகின்றேன். வாய்ப்பு அமையுமானால் நீங்களும்கூட இந்நூலை வாசிக்கலாம் நண்பர்களே. க.சம்பத்குமார்
- தும்பி - புன்னகைப்பூ ஜெயக்குமார்
தும்பி இது தும்பி என் தோட்டத்தில் வரும் தும்பி பூவின் மீது உட்காரும் தும்பி 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிறந்த தும்பி மழை வருமெனச் சொல்லும் தும்பி என்னைச் சுற்றும் தும்பி எனக்கு நண்பனான தும்பி ஹெலிகாப்டர் போல விர்ரென்று பறந்து போகும் தும்பி தும்பி இது தும்பி
- யூனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் : 5
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு என்று யுனிசெஃப் பிரகடனத்தின் ஆறாவது விதி சொல்லுகிறது. குழந்தைகளின் பெற்றோர் அந்தந்தக் குழந்தைகளின் நலன்களில் அக்கறை எடுத்துக் கொள்வது என்பது இயல்பாக நடைபெற வேண்டும். இன்றுள்ள சூழலில் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பெற்றோர் இந்தக்கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர் என்று நாம் பொதுவாகக் குறிப்பிடலாம். பெரும்பாலும் இருவரும் -தந்தை,தாய்- வேலைகளுக்குப் போயாக வேண்டிய நிலையில்தான் இத்தகைய குடும்பங்கள் இருக்கின்றன. பெண்கள், தாங்கள் எந்த வேலையில் இருந்தாலும் தமது குழந்தைகளின் படிப்பு,இதர தேவைகள் பற்றிய சிந்தனையுடனேயே எப்போதும் இருப்பதைக் காண முடிகிறது. பேருந்துகளிலோ,மின்சார இரயில்களிலோ பயணிக்கும் தாய்மார்கள், தமது குழந்தைகள் அன்றைய தினம் என்ன சாப்பிட்டார்கள், சரியாகச் சாப்பிட்டார்களா என்றோ,அல்லது ஒன்றுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் பள்ளிக்குப் போனார்களா என்றோ,அல்லது உடல்நலம் குன்றி இருந்தாலும் பிடிவாதமாகப் பள்ளிக்குப் போய் விட்டார்கள்,அங்கே போய் எப்படி இருக்கிறார்களோ என்னவோ என்று புலம்பிக்கொண்டே பயணிப்பதை நாம் கொஞ்சம் கவனித்தால் அறிய முடியும். அதே போல, மாலையில் வீடு திரும்பும் போதே அன்று இரவு சமையலுக்குத் தேவையான காய்கறிகள், குழந்தைகள் விரும்பிக் கேட்டிருக்கும் திண்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கிச்சுமந்து கொண்டு சோர்வுடன் வீடு திரும்புவதையும் நாம் காணலாம். ஆனால், கிராமப்புறங்களில் வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் ஆண்களும்,பெண்களும் கூலி வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போவதே சிரமம். பெரிய குழந்தைகள், கைக்குழந்தைகளாக உள்ள சிறிய பிள்ளைகளைப் பராமரித்துக் கொண்டு, பெற்றோரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டோ அல்லது அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இடுப்பில் சிறிய குழந்தைகளையும் தூக்கி வைத்துக் கொண்டே,வீடுகளின் முன்னால் அல்லது தெருக்களில் விளையாடிக் கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியும். பெற்றோர் மாலை மங்கி,இருட்டிய பிறகு வந்து ஏதேனும் உணவு சமைத்துக் கொடுத்தால் அந்தப்பிள்ளைகள் உண்டு விட்டுத் தூங்கிப் போவார்கள். வசதி படைத்த வீடுகளிலும்,நடுத்தர வர்க்கத்துக் குடியிருப்புகளிலும் உள்ள நிலைமைகள் வேறு. மேற்கண்ட கிராமப்புறக் குடியிருப்புகளின் நிலைமைகள் வேறுதாம். இத்தகைய வேறுபட்ட சமுகப்பின்னணிகள் எவையாக இருப்பினும், எந்த ஒரு குழந்தையின் உயிர் வாழும் உரிமையை யாரும் மறுக்க முடியாது,கூடாது. எந்த அரசாங்கமாக இருந்தாலும், அந்தந்த நாட்டு மக்களின் குழந்தைகள் அனைவரையும் உயிருடன் பாதுகாப்பது அந்த அரசாங்கங்களின் கடமை என்று யுனிசெஃப் விதி கூறுகிறது. அவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் வாழ்வதை அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும். வெறுமனே உயிருடன் இருப்பதை மட்டுமன்றி, அவர்கள் ஆகச்சிறப்பான வழியில் வளர்ந்து மேம்பட்ட ஒரு வாழ்க்கையைப் பெறுவதையும் அவை உறுதிப் படுத்த வேண்டும்! சுருங்கச்சொன்னால், உயிருடன் இருப்பதை மட்டுமன்றி, முழு உயிர்ப்புடன்,மன நலத்துடனும், உடல் நலத்துடனும் குழந்தைகள் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை என்பது யுனிசெஃப் பிரகடனத்தின் விதி. இதை அந்தப்பிரகடனத்தில் கையெழுத்திட் டுள்ள அனைத்து அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், உண்மை யில், நடைமுறையில் அப்படி அவை தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள இந்தப் பொறுப்பை நிறைவேற்றுகின்றனவா? இந்தக்கேள்வி மில்லியன் டாலர் கேள்விகளுள் ஒன்று! இன்று உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தால், ஒப்பீட்டு அளவில் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள் ஓரளவுக்குத் தமது நாட்டின் குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனத்தைச்செலுத்துகின்றன என்பதை அறியலாம். அங்கேயும் கூட, திடீர் திடீரென்று பள்ளிகளில், ஷாப்பிங் மால்களில், பூங்காக்களில், இரயில்-விமான நிலையங்களில் யாரேனும் மனநிலை பிறழ்ந்த அல்லது அதி தீவிர அரசியல் கொள்கைகளின் பெயரால் ஆயுதம் தாங்கிய நபர்கள் கண்மூடித்தன மாகத்துப்பாக்கிச் சூடுகள் நடத்திக் குழந்தைகளைக் கொன்று குவிப்பதையும் காண்கிறோம். ஒரே பள்ளியில்,ஒரே வகுப்பில் படிக்கும் குழந்தைகளிலேயே கூட ஒரு சிறுவன் கையில் துப்பாக்கியுடன் மனம் போனபடி சுட்டுப் பிற குழந்தைகளைக் கொல்வது,காயப்படுத்துவது ஆகியவையும் நடக்கின்றன. இன்னொரு மோசமான சூழ்நிலை, உக்ரேன்-ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே அல்லது இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போன்று தொடர்ந்து நடக்கும் போர்களில் அல்லது ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே நாட்டுக்குள் வெவ்வேறு இனங்களைச்சேர்ந்த மக்கள், தங்களுக்குள் மோதிக்கொள்ளும் உள் நாட்டுப் போர்களில் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சிறு குழந்தைகள் கொத்துக் கொத்தாய் நூறு-ஆயிரக்கணக்கில் அன்றாடம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் அவலம். பள்ளிகளை,மருத்துவ மனைகளைக் குறி வைத்து விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. அதை விடவும் மோசம், காஸா பகுதியில்,கையறு நிலையில் பசியுடன் உணவுக்காகக் கையேந்தி நிற்கும் பச்சிளம் குழந்தைகளை எந்த மனித நேய உணர்வும் இல்லாமல் சுட்டுத்தள்ளி விட்டுப் பெருமிதத்துடன் அதைப் பற்றிச் செய்தி அறிக்கைகள் வெளியிடும் அரசாங்கங்கள், அவற்றின் தலைவர்களின் அற உணர்வற்ற செயல்கள்! இப்படி நிகழ்ந்து கொண்டிருக்கும் எந்தக்கொடுமையையும் தடுக்கவோ, குறைந்த பட்சம் வலிமையாகக் கண்டிக்கவோ கூட உலகின் எந்த நாட்டு அரசும்,அரசியல் தலைவரும் முன்வருவதில்லை என்ற எதார்த்தம் நம் நெஞ்சில் அறைந்து கொண்டிருக்கிற காலம் இது. உலக மக்களின் மனச்சாட்சிக்கு என்ன ஆகி விட்டது என்ற கேள்வி நம் மனதைப் பிளக்கிறது. விடை காண வேண்டிய கடமை நம் முன் மலை போல நிற்கிறது. என்ன செய்யப்போகிறோம்?
- ஏன் பிறந்தோம்?-5
கொஞ்சம் வரலாறு தத்துவச்சிந்தனை எப்போது, எப்படித் தோன்றியது என்று தெரிந்துகொள்ளும் முன் நம்முடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன சரிதானே! வாயுக்கள், தூசி போன்றவை அடங்கிய சுழலும் பெருமேகமான நெபுலாவில் இருந்து பெருவெடிப்பில் சிதறிய ஒரு துண்டுதான் பூமி. அந்த சம்பவம் நடந்து சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னது? 454 கோடி ஆண்டுகளா? ஆமாம். நாம் வாழும் இந்த பூமி பிறந்து 454 கோடி ஆண்டுகளாகி விட்டன. ஆனால் எரிந்துகொண்டிருந்த நெருப்புக்கோளமான பூமியில் ஒரு உயிர் எப்போது தோன்றியது தெரியுமா? 380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் முதல் உயிர் தோன்றியது. என்னது 74 கோடி ஆண்டுகளாக பூமி எரிஞ்சிக்கிட்டே இருந்ததா? அப்படின்னா பூமியைப் படைத்தது, உயிர்களைப் படைத்தது கடவுள் என்று சொல்கிறார்களே.. அதைப் பற்றி அப்புறம் பார்ப்போம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இப்போது தெரிந்துகொள்ளலாம். அறிவியல் எந்த ஒன்றையும் ஆராய்ந்து நிரூபிக்கும். அல்லது நிரூபிக்கப்பட்ட ஒன்றையே உண்மை என்று ஏற்றுக்கொள்ளும். புரியலையே! தண்ணீர் எப்படி உருவானது என்று முதலில் யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது பள்ளிக் குழந்தைகூட ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தால் தண்ணீர் உருவாகும் என்று சொல்லிவிடும். அது எப்படித் தெரிந்தது? தண்ணீரின் மூலக்கூறுகளை ஆராய்ந்து அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆராய்ந்து நிரூபிப்பது அறிவியல் என்று சொல்கிறோம். சரி. முதல் உயிர் எப்போது, எப்படித் தோன்றியது? 74 கோடி ஆண்டுகளாக எரிந்துகொண்டிருந்த பூமி கொஞ்சம்கொஞ்சமாகக் குளிர்ந்தது. அப்படிக் குளிர்ந்தபோது விதவிதமான வாயுக்கள் உருவாயின. ஹைட்ரஜன், நைட்ரஜன், ஹீலியம், கார்பன் டை ஆக்சைடு, இவற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் வினைபுரிந்து தண்ணீர் உருவானது. அதுதான் கடல். பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சொந்த ஊர் என்றால் அது கடல்தான். அந்தக் கடலில்தான் முதல் உயிரான சயானோ பாக்டீரியா அல்லது நீலப்பச்சை பாசி போன்ற நுண்ணுயிரி தோன்றியது. அடேயப்பா! நம்முடைய மூதாதையர் யார்? என்று கேட்டால் சயானோ பாக்டீரியா என்று சொல்லவேண்டும். சரியா? பேரே அழகா இருக்குல்ல.. சயானோ. அந்த சயானோவிலிருந்துதான் பூமியில் இப்போது இருக்கும் இத்தனை கோடி உயிரினங்களும் தோன்றின. இதையும் அறிவியலாளர்கள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள். அப்படித்தான் ஒவ்வொரு உயிரும் தங்களுக்கென்று தனியான பண்புகளுடன் வாழ்கின்றன. இயற்கையில் ஒன்றைப் போல இன்னொரு உயிர் கிடையாது. சரி. மனித இனம் எப்போது, எப்படி உருவானது? அறிவியலறிஞர் டார்வின் பரிணாமக் கோட்பாட்டை ( Evolution Theory) கண்டுபிடித்தார். அப்போது அவருக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்தார். அதிலிருந்து கிடைத்த உண்மைகளைச் சொன்னார். குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று டார்வின் சொன்னார். ஆனால் டார்வினுக்குப் பின்னால் வந்த அறிவியலாளர்கள் அவர் சொன்ன பரிணாமவரலாற்றில் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அது என்ன? குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பொது மூதாதையிலிருந்து மனித இனம் தோன்றியது. நேரடியாக குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை. உராங் ஊத்தன், சிம்பன்சி, கொரில்லா, போனோபாஸ் போன்ற வாலில்லா குரங்குகளுக்கும் மனித இனத்துக்கும் ஒரே பொது மூதாதை இருந்தது. அப்படி என்றால் இப்போது நாம் பார்க்கும் குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை? அங்கேதான் இருக்கிறது இன்னொரு ட்விஸ்ட். அதாவது, பிரைமேட் என்று சொல்லப்படும் குரங்கினங்களுக்கும் வாலில்லா குரங்குகளுக்கும் இடையில் ஹோமினிட் என்று சொல்லப்படும் விலங்கினங்கள் தோன்றியிருக்கின்றன. வாலில்லாக் குரங்குகளுக்கு முன்னால் ஒரு குரங்கினம் தோன்றியிருக்கிறது. அதனுடைய பரிணாம வளர்ச்சியில்தான் வாலில்லா குரங்குகள் தோன்றின. அதேபோல் அந்தப் பொது மூதாதையிலிருந்தே மனித இனம் தோன்றியது. இதெல்லாம் எப்போது ஆரம்பித்திருக்கும்? சுமார் அறுபது எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்.. மனித இனத்தின் பொது மூதாதை பூமியில் தோன்றியது. அதற்கு முன்னால் மனித இனமே கிடையாது. நவீன மனித இனமான, அதாவது ஹோமோசேப்பியன்ஸ் எப்போது தோன்றியது? சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்தான். சரி. எங்கே தோன்றினார்கள்? ஆப்பிரிக்காவில் தோன்றினார்கள். ஆமாம். இன்று உலக முழுவதும் பரவியுள்ள மனித இனம் முதன்முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான். நமக்கெல்லாம் பூர்விகம், அதாவது மூதாதையர் அல்லது முன்னோர்களின் ஊர் ஆப்பிரிக்காவா? எதுக்குச் சுத்தி வளைச்சிகிட்டிருக்கீங்க? மொத்த மனித இனத்தின் பாட்டி, தாத்தாவின் ஊர் ஆப்பிரிக்கா. அவ்வளவுதான். ஆனால்? என்ன ஆனால்? இல்லை. வந்து.. ஆப்பிரிக்க மக்களுக்கும் உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லையே. ஆமால்ல..ஆனால் ஆப்பிரிக்காதான் எல்லோருக்கும் சொந்த ஊர். என்ன குழப்பமாக இருக்கா? சரி. குழப்பம்தான், அதாவது சந்தேகம்தான் உண்மையைக் கண்டுபிடிக்க ஒரே வழி.. எப்படின்னு பார்ப்போம். (தத்துவம் அறிவோம்)
- குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக வாசிக்க வேண்டும்!. - பி.வி.சுகுமாரன்
நேர்காணல் – சரிதா ஜோ 1.மலையாள இலக்கியத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் நீங்கள். குறிப்பிடத்தகுந்த சிறார் நூல்களையும் எழுதியிருக்கிறீர்கள். இலக்கிய பயணத்தில் உங்களுடைய தொடக்கப் புள்ளி எது? நான் எப்போது முதன்முதலில் கதை எழுதினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. நான் சிறு குழந்தையாக இருந்தபோது புத்தகங்களைப் படிப்பேன். அந்த நேரத்தில், எங்கள் வீட்டில் கம்பராமாயணம் இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அந்த வயதில், நான் அதை தினமும் படிப்பேன். அதனால் ஈர்க்கப்பட்டு, என் குறிப்பேட்டில் சிறிய கதைகளை எழுதுவேன். நான் அவற்றை யாருக்கும் காட்ட மாட்டேன். காரணம், கேலி செய்வார்கள் என்ற பயம். ஒருமுறை, என் நண்பரின் வற்புறுத்தலின் பேரில், நான் ஒரு கதைப் போட்டியில் பங்கேற்றேன். நான் முதல் பரிசை வென்றேன். பின்னர், பரிசு கிடைத்த தைரியத்தில்,நான் கதைகள் எழுதி பல வார இதழ்களுக்கு அனுப்பினேன். வார இதழ்களில் என்னுடைய கதைகள் வெளிவந்தன. வானொலியில் என் கதைகளைச் சொல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 2002 ஆம் ஆண்டில் எனது முதல் கதைத் தொகுப்பு 'கலாபராத்திரியில் ஒரு கஜல்' வெளிவந்தது. 2. தமிழில் வெளியாகியுள்ள உங்களின் மூன்று நூல்கள் சமகாலச் சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகின்றன? இது போன்ற கதைகளை எழுதத் தூண்டியது எது? தியா, விடுபட்டும் சுடர் மற்றும் மீளும் நிறங்கள் போன்ற நாவல்கள் பதின் பருவக் குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை. பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான யூமாவாசுகி அவர்கள் இந்த மூன்று நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். இன்று நம்முடைய குழந்தைகள் நிறைய பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். பொதுவாக நான் குழந்தைகளுடன் பேசுவதை விரும்புகிறேன். அவர்களுடன் பேசும்போது எனக்குக் கிடைத்த சில விஷயங்கள் இது போன்ற நாவல்களை எழுத என்னைத் தூண்டின. என்னுடைய இந்த மூன்று புத்தகங்களும் மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழிலும் அதிக எண்ணிக்கையிலான வாசகர்களைக் கொண்டிருக்கின்றன என்று உணர்ந்தேன். சில தமிழ் வாசகர்கள் என்னை அழைத்து வாழ்த்தித் தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு ஒரு முக்கிய காரணம், நான் அவற்றில் முன்வைக்கும் குழந்தைகளின் பிரச்சினைகள். அதிலிருந்து எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. நான் பெரியவர்களுக்கான கதைகள் மற்றும் நாவல்களை எழுதியவன். ஆனால் நான் தியா நாவலை எழுதியபோது, அதற்குக் கிடைத்த வரவேற்பு என்னை குழந்தைகள் இலக்கியத்திற்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்தது. அதற்கு முக்கிய காரணம் பிரபல தமிழ் எழுத்தாளர் யூமாவாசுகி அவர்களே. எனது தியா நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்திருந்தால் நான் தமிழ் மொழிபெயர்ப்புக்குச் சென்றிருக்க மாட்டேன். என்னுடைய மூன்றுபுத்தகங்களையும் வாசித்த குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்கும்போது அவர்களுடைய குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்தியதாகக் கூறினார்கள். எனக்குள் இன்னும் குழைந்தைமை இருப்பதை உணர்ந்து மகிழ்ந்தேன். ஒருவேளை அதுவே எனக்கு உத்வேகம் தந்திருக்கலாம். 3. நீங்கள் மொழிபெயர்ப்பதற்கான நூலை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்? நான் எட்டுக்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். விரைவில் இலங்கை தமிழ் எழுத்தாளர் டி. ஞானசேகரனின் எரிமலை நாவலின் மொழிபெயர்ப்பு வெளிவருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இலக்கியப் படைப்புகளும் வெளிவருகின்றன. எனது மொழிபெயர்ப்புப் படைப்புகளைப் படிக்கும்போது, மலையாளப் புத்தகத்தைப் படிப்பது போல இருக்கிறது என்று வாசகர்கள் கூறுகிறார்கள். அதற்காக நான் நிறைய போராட வேண்டியிருக்கிறது. இதிலிருந்து நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். இனிமேல், என் மனதை மிகவும் கவர்ந்திழுக்கும் புத்தகங்களை மட்டுமே நான் தேர்ந்தெடுக்க வேண்டும். எனது மொழிபெயர்ப்புப் படைப்புகளைப் படிக்க ஆர்வமுள்ள வாசகர்கள் இருப்பதால், இந்தத் துறையில் இருக்க முடிவு செய்துள்ளேன். அதனுடன், வெளியீட்டிற்காக எனது புத்தகங்களும் என்னிடம் உள்ளன. நான் தற்போது மொழிபெயர்த்து வரும் படைப்பு யூமாவாசுகியின் நாவலான ரத்த உறவு. மற்றும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் ஆதனின் பொம்மை. குழந்தைகள் இலக்கியத்துடன் என்னை மட்டுப்படுத்த விரும்பவில்லை. எனக்கு நல்ல புத்தகங்கள் கிடைத்தால், நான் நிச்சயமாக அவற்றை மொழிபெயர்ப்பேன். ஆனால் அவை என் ரசனைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். 4. கேரளாவில் சிறார் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? எந்த வகையான முன்னெடுப்புகள் சமீபமாகச் சென்று கொண்டிருக்கிறது? கேரளாவில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முழு ஆதரவை வழங்குகிறது. வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பள்ளிகளில் ஆண்டுதோறும் ஜூன் 19 முதல் 25 வரை மாநிலம் தழுவிய வாசிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. சிறார் இலக்கியத்தை ஊக்குவிப்பதில் பல நிறுவனங்கள் முனைப்பாக பங்களிக்கின்றன. பாலசாகித்திய நிறுவனம், சாஸ்திர சாகித்ய பரீட்ஷித், நூலகப் பேரவை, மாத்ருபூமி புக்ஸ், டிசி புக்ஸ் மற்றும் பூர்ணா பப்ளிகேஷன் போன்ற பதிப்பகங்களின் சிறார் இலக்கிய வெளியீடுகளைக் குறிப்பிடலாம். எனது அனுபவத்தில் சிறார் இலக்கியத்திற்கு கேரளாவில் நிறையத் தேவை இருக்கிறது. விற்பனையும் நன்றாக இருக்கிறது. கேரளாவின் செயலூக்கமான அணுகுமுறை வாசிப்புக் கலாச்சாரத்தை வளர்கிறது. இது குழந்தை இலக்கியத்திற்குப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது. 5. கேரளா புத்தக கண்காட்சி தமிழ்நாடு புத்தக கண்காட்சி இரண்டிலும் உங்களுடைய பார்வையில் சிறார் வாசிப்பு சார்ந்து முன்னெடுக்க வேண்டியதாக நீங்கள் நினைப்பது? இந்தக் கருத்தை நான் என்னுடைய அனுபவத்தில் இருந்துதான் சொல்கிறேன். பல பெற்றோருக்கு நாவல்கள் மற்றும் கதைப்புத்தகங்களைப் படிப்பதால் என்ன நன்மைகள் என்று தெரியாது என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். இதுபோன்ற புத்தகங்களைப் படித்த பிறகு என்ன நன்மைகள் என்று கேட்கும் பெற்றோரை நான் அறிவேன். துரதிர்ஷ்டவசமாக, அதே வழியில் சிந்திக்கும் ஆசிரியர்களையும் நான் அறிவேன். பொதுவாக பெற்றோர்கள் சொல்லும் ஒரு உரையாடல் உள்ளது, நான் எனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்குகிறேன். ஆனால் நான் படிக்க விரும்பவில்லை. இதற்குப் பெற்றோரே முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு குழந்தை சிறியதாக இருக்கும்போது கூட, நாம் முதலில் அவர்களுக்குக் கொடுப்பது மொபைல் போன். இதற்குப் பதிலாக புத்தகங்கள் கொடுக்கப்படும் காலம் வந்தால், குறைந்தபட்சம் சில குழந்தைகளாவது நிச்சயமாக புத்தகங்களால் ஈர்க்கப்படுவார்கள் என்பதை எனது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. கேரளாவில், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இங்கு, நூலகக் குழு ஒரு வாசிப்புப் போட்டியை ஏற்பாடு செய்கிறது. இது ஒரு விழாவாக இருக்கக்கூடாது, ஆனால் குழந்தைகள் தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகப் படிக்கும் காலமாக இருக்க வேண்டும். அதற்காக, நல்ல புத்தகங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இது நடக்கும் என்று நான்நம்புகிறேன். எழுத்து மற்றும் வாசிப்பின் மகத்துவத்தை அவர்களுக்குப் புரிய வைத்தால், மீதமுள்ளவை தானாகவே வரும். கேரளாவில் குழந்தை எழுத்தாளர்களுக்கு அதிக அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. தமிழ்நாட்டைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இப்போது இங்கு சிறிய மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. பிரபல எழுத்தாளர்களும் இந்தத் துறையில் நுழைவது போல் தெரிகிறது. இதுவே இவ்வளவு சிறிய மாற்றத்திற்குக் காரணம். எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் அனைத்தும் குழந்தைகள் இலக்கியம் தான் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் செய்யப்படும் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகளைச் சுற்றி கதைகள் சொல்லும் விதம். நான் அதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் கேரளாவில் அப்படி ஒரு முறை இல்லை. குழந்தைகள் ஒரு திருவிழாவிற்கு ஈர்க்கப்படுவது போல, புத்தகக் கண்காட்சிக்காகக் காத்திருக்கும் ஒரு காலம் வர வேண்டும். அதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரை, தமிழ்நாட்டைப் போல கேரளாவில் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களின் சங்கம் இல்லை. 6. கேரளாவில் தமிழ் நூல்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது? மொழிபெயர்ப்புப் படைப்புகள் அதிகம் படிக்கப்படுவதாக நான் உணர்கிறேன். நான் மொழிபெயர்ப்புப் படைப்புகளை அதிகமாகப் படிக்க விரும்புபவன். தமிழிலிருந்து மலையாளத்திற்கு மிகக் குறைவான புத்தகங்களே வந்துள்ளன என்று நினைக்கிறேன். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. எந்த மொழியிலிருந்து வந்தாலும், நல்ல புத்தகங்கள் படிக்கப்படுகின்றன. மொழிபெயர்ப்பாளர் ஒரு படைப்பு எழுத்தாளராகவும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். தமிழிலிருந்து மலையாளத்திற்கு பல புத்தகங்கள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 7. உங்கள் நூல்களை வாசித்த குழந்தைகளின் அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள். என் நாவல்களைப் படிக்கும் குழந்தைகள், "நான் இதில் இருக்கிறேன்" என்றும், பெரியவர்கள், "இது என் குழந்தைப் பருவ அனுபவங்கள்" என்றும் கூறுகிறார்கள். அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி, கேரளாவாக இருந்தாலும் சரி, அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். என் எழுத்துக்குக் கிடைக்கும் வெகுமதி அதுதான். தமிழில் என் புத்தகங்களை குழந்தைகள் இவ்வளவு விரும்புவதற்குக் காரணம், நான் எழுதிய அனைத்தையும் எழுத்தாளர் யூமாவாசுகி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருப்பதுதான். என்னைத் தமிழ் வாசகர்களுக்கு நல்ல முறையில் அறிமுகப்படுத்தும் பாரதி புத்தாலயமும் அதில் ஒரு பங்கு வகிக்கிறது. 8. உங்களுக்கு குடும்பம் எந்த அளவிற்குத் துணை நிற்கிறது? எனக்கு குடும்பம் தான் எல்லாம். என்னுடைய மனைவி, மகன், மருமகள், மகன், மருமகன் மற்றும் பேத்தி உட்பட அனைவருமே நான் செய்யும் எல்லாவற்றிற்கும் ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள். அதனால்தான் என்னால் எழுத்துத் துறைக்குள் இயங்க முடிகிறது. குறிப்பாக என்னுடைய மனைவி நான் மொழிபெயர்க்கும் நூல்களை வாசித்து பிழைகள் இல்லாமல் வருவதற்கு உதவி செய்கிறார். எல்லா வகையிலும் உறுதுணை புரிகிறார்.
- குட்டி சுட்டி பூனை - ராணி குணசீலி
மியாவ் மியாவ் பூனைக்குட்டி மிரண்டு ஓடும் பூனைக்குட்டி குட்டிக்கரணம் போட்டு தான் குறும்பு செய்யும் பூனைக்குட்டி கண்ணை உருட்டி உருட்டியே காலைச் சுற்றும் பூனைக்குட்டி வாலை ஆட்டும் பூனைக்குட்டி பாலை குடிக்கும் பூனைக்குட்டி தாவி மடியில் ஏறியே தலையைச் சாய்க்கும் பூனைக்குட்டி அடுக்கி வைத்த பொருட்களை இழுத்துப் போடும் பூனைக்குட்டி
- பதின்பருவ வயதினரின் உளவியல் சிக்கல்கள்
பச்சிளம் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை மனித வாழ்க்கையை ஏழு பருவங்களாகப் பிரித்திருப்பார் ஷேக்ஸ்பியர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருந்தாலும் இவற்றில் மிக முக்கியமான பருவமானது பதின்பருவம். ஒரு நபரின் ஆளுமையையும் அடையாளத்தையும் அவரது வாழ்க்கையையும் முடிவு செய்வதே பதின்பருவம்தான். உடல்ரீதியகவும் மனரீதியாகவும் சமூகரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் பருவமும் அதுதான். ஆகவே அப்பருவத்தில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பே. பதின்வயதில் ஏற்படும் சிக்கல்களை இரண்டு வகைகளாக விளக்கலாம். முதலாவது பொதுவாக நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு எல்லாக் காலகட்டத்திலும் பதின்வயதினருக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் . இரண்டாவது குறிப்பாக இந்த டிஜிட்டல், கணினியுகத்துக்கே உரிய சிக்கல்கள். முதலில் பொதுவான சிக்கல்களை எடுத்துக் கொள்ளுவோம். பதின்பருவத்தில் உடல்ரீதியாகப் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவராக மாறும் ஒரு இடைநிலை (transition) பருவமாகவும் இரண்டுங்கெட்டான் பருவமாகவும் பதின்பருவம் இருக்கிறது. உடல்ரீதியாக மிக அதிக வளர்ச்சி இக்காலகட்டத்தில் ஏற்படுகிறது. ஹார்மோன்களின் வேகம் அதிகமாக இருக்கும் பருவம். குழந்தையாக இருக்கும்போது தான் என்ற அடையாளம் தனித்தன்மையுடைய தேவைகள் எதுவுமில்லாமல் பெற்றோர்களின் நேரடிப் பாதுகாப்பு வளையத்தில் இருப்பார்கள். பெரும்பாலான தேவைகளைப் பெற்றோரே குறிப்பறிந்து தீர்த்து வைப்பார்கள். குழந்தைகள் விரும்புகின்றனவோ இல்லையோ குழந்தைகளின் விருப்பங்கள் இவையாகத்தான் இருக்கும் எனப் பெற்றோர்களே அனுமானித்து நடப்பார்கள். பதின்வயதில் முதன் முதலாகத் தான் என்ற ஆளுமை உருவாகத் தொடங்குகிறது. இதுதான் என் உடல், இதுதான் நான், இவைதான் என் தேவைகள் எனத் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யத் தொடங்குகின்றனர் இப்பருவத்தினர். இந்த ஆளுமையை உருவாக்குவதில் குடும்பம், நண்பர்கள், சுற்றி இருப்பவர்கள், சமூகம் என எல்லாவற்றுக்கும் பங்கு இருக்கிறது. உடல்ரீதியாகத் தன் நிறம், உயரம், பருமன், முடி போன்றவை குறித்துப் பெருமிதமோ அவமானமோ ஏற்படத் தொடங்குவது இக்காலகட்டத்தில்தான். நகைச்சுவையாக ஒன்றைச் சொல்வார்கள் – “மனிதன் தன் வாழ்வின் முதல் இருபது வருடங்கள் தான் பெரியவன்தான் என நிரூபிக்கப் போராடுகிறான். பின் அடுத்த அறுபது வருடங்கள் தான் இளைஞன்தான் என நிரூபிக்கப் போராடுகிறான்” என்பார்கள். எந்த யுகத்திலும் பதின்வயதினரின் தலையாய பிரச்சனையே தான் பெரியவன் என்பதை நிரூபிப்பதுதான். கவனச் சிதறல் என்பது மிக அதிகமாக இருப்பது இந்தப் பருவத்தில்தான். உடலிலும் உள்ளத்திலும் ஆற்றல் பொங்கி வழிவதால் கண்ணில் படும் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு அதீதமாக இருக்கும் இக்காலகட்டத்தில். புதிதாக எதையும் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்ற முனைப்பு அதிகம் இருக்கும். அதே நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது மூளையின் முன்பகுதி (Frontal Lobe) தான் நல்லது கெட்டதைப் பகுத்தறிந்து இது தீமை, இதைச் செய்யக் கூடாது என விலக்குகிறது. இருபது இருபத்தி ஐந்து வயதுக்குப் பின்னர்தான் அந்தப் பகுதி வளர்ச்சியில் முழுமை அடைகிறது. ஆகவே பதின்வயதில் ஆபத்துகளை சந்திக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். “ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவதுபோல்” என அதிகமாக ரிஸ்க் எடுப்பார்கள். பைக்கில் வேகமாகச் செல்வது தொடங்கி, சிறு சிறு சட்ட மீறல்கள் தொடங்கி போதைப் பொருட்களை முயற்சி செய்து பார்ப்பது என எல்லாமே இந்தப் பருவத்தில் நடக்கும். பதின்வயதின் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால் கவனச் சிதறல். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகத் தேவைப் படுகிறது. புறத் தூண்டுதல்களைக் கண்டால் உடனே கவனம் சிதறும். விளையாட்டுகள் போன்ற விஷயங்களில் மனம் அதிகமாக திசை திரும்பும். குறிப்பாக கல்வி கற்க வேண்டிய மிக முக்கியமான பருவத்தில் கவனச் சிதறல் அதிகமாக இருப்பதால் எதிர்காலமே பாதிக்கப் படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. அடையாளச் சிக்கல் (Identity crisis) என்பது இந்தப் பருவத்தில்தான் வருகிறது எனப் பார்த்தோம். சிலசமயங்களில் ‘நீ இன்னும் குழந்தை இல்லை. பொறுப்பாக இரு’ என்றும் சில சமயங்களில் ‘இதெல்லாம் பெரியவர்கள் விவகாரம். உனக்குச் சம்பந்தமில்லை’ என்றும் அடக்கப் படுவதில் தொடங்குகிறது இந்த அடையாளக் குழப்பம். நண்பர்கள் தரும் அழுத்தம் (Peer Pressure) இந்தப் பருவத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஒரு முக்கியமான காரணி. நண்பர்களிடம் ஹீரோ போல் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டியதால் இந்த மாதிரி முடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்பது தொடங்கி ஐ போன் வேண்டும், பைக் வேண்டும் என்பது வரை தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சில விஷயங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் சிக்கல்களை உண்டாக்குகிறது. நண்பர்கள் தரும் அழுத்தம் மாதிரியே நாயகன் வழிபாடும் (Hero Worship) இக்கால கட்டத்தில் சிக்கல்களை உருவாக்குகின்றன. பத்து வயது வரை பெற்றோர்கள் சொன்னதை அப்படியே செய்துவந்தவர்கள் அவர்கள் செய்வதைக் கட்டுப்படுத்துவதாக உணரத் தொடங்கி தன் சுதந்திரத்தைக் காப்பாற்ற அதிலிருந்து வெளியே வர நினைக்கும் போது ஒரு முன்மாதிரியாக திரைப்பட, அரசியல், விளையாட்டு பிரபலங்களைக் கண்டடைகிறார்கள். நிறைகுறைகளை அலசி ஆராயாமல் நூறு சதவிகித வழிபாடு அல்லது நூறு சதவிகித தூற்றல் என்ற கண்மூடித்தனமான நிலைப்பாடுகளை எடுக்கின்றனர். அடையாளச் சிக்கல்களின் ஒரு பகுதி பதின்வயதில் ஏற்படும் பாலின அடையாளம். உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிய அறியாமை, எதிர்பாலினர் மீதான ஈர்ப்பு போன்றவை இக்காலகட்டத்தில் முக்கியமானவை. சில சமயங்களில் சூழலின் தாக்கத்தினாலும் உடல்ரீதியான மாற்றங்களாலும் பாலின அடையாளம் பாலின ஈர்ப்பு போன்றவைகளில் மாறுதல்கள் ஏற்படலாம். தான் ஆணா பெண்ணா, தனக்கு யார்மீது ஈர்ப்பிருக்கிறது என்பதிலெல்லாம் குழப்பங்கள் வரக்கூடும். இவைகள் எல்லாம் எக்காலத்திலுமே பதின் வயதினருக்கு இருக்கும் பிரச்சனைகள். குறிப்பாக இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்தச் சிக்கல்கள் வேறு பரிமாணங்களை எட்டி இருக்கின்றன. கணினி , செல்போன் யுகத்தின் மிகப் பெரிய பிரச்சனையே எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிக எண்ணிக்கையில் கிடைப்பது. Problem of plenty என்பார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் விஷயங்களால் கவனச் சிதறல் (Digital Distraction) அதிகமாக ஏற்படுகிறது. புதிது புதிதாக விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும் விஷயங்களால் இருபது நொடிகளுக்கு மேல் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகின்றன என்கின்றன ஆய்வுகள். இதனால் நான்கு வரிகள் கூட சேர்ந்தாற்போல் படிக்க முடியாமல் போகிறது . இது இந்த காலகட்டத்தில் எல்லோரும் எதிர்நோக்கும் மிகப்பெரிய சிக்கல் என்றாலும் பதின்வயதினருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் புத்தகங்கள் வாசிப்பது குறைந்து காணொளிக் காட்சிகளாகப் பார்ப்பது அதிகரித்து வருவது நுண்ணறிவுத்திறன்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. அது போலவே உடலுழைப்பின் தேவை வெகுவாகக் குறைவதால் போதிய உடற்பயிற்சியின்மை மனதிலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பொதுவாகவே போட்டி மனப்பான்மையால் கல்வி என்பது ரசித்துக் கற்கும் விஷயமாக இல்லாமல் மதிப்பெண்கள் பெற உதவும் விஷயமாகவே மாறிவிட்டதால் ஏற்படும் அழுத்தம் இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். தொழில்நுட்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கின்றன. இதற்குத் தக்கவாறு நமது திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அதே போல் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) ஒரு துறையில் அதீத திறமைசாலியாக இருந்தால் மட்டுமே இனி பிழைக்க முடியும் . சராசரிகளின் காலம் முடிந்து விட்டது (The average is over ) என்கிறார்கள். இதுபோன்ற சிக்கல்களை உணர்ந்து கொள்ள நமக்கு விழிப்புணர்வும், பதின்வயதினரும் இயல்பாக உரையாட வெளிப்படைத்தன்மையும் தேவை. உடற்பயிற்சி, இசை போன்ற நல்ல பொழுதுபோக்குகளில் மனதினைச் செலுத்துவதும் அவசியமாகிறது
- Adolescence web series - 3
ஜேமி கதறி அழுகிறான். அவனது அப்பா செய்வதறியாது திகைத்து இருக்கிறார். எவ்வளவு பெரிய குற்றம்! தன் மகன் ஒரு கொலையைச் செய்திருக்கிறான். சம வயதுப் பெண் குழந்தையைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறான். வெடித்து அழுகிறார். மகனைக் கட்டிக் கொண்டு கதறுகிறார். ஏன்? இப்படி? என வார்த்தைகள் சிதறுகின்றன. நான் எதுவும் செய்யவில்லை என்று ஜேமி அழுகிறான். எல்லாம் முடிந்தது என்று வழக்கறிஞர் அமர்ந்திருக்கிறார். விசாரணை முடிந்தது. ஆதாரங்களின் படி கொலையாளி யார் என்பது உறுதியாகிவிட்டது. 'கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி எங்கே?' இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டுவிட்டால் போதும். விசாரணை முழுமை அடைந்துவிடும். இன்ஸ்பெக்டர் பாஸ்கம், துணை ஆய்வாளரரான பிராங்க் உடன் ஜேமி, கேட்டி ஆகியோர் படித்த பள்ளிக்குச் செல்கிறார். இன்ஸ்பெக்டரின் மகன் ஆதம் அங்குதான் பத்தாம் வகுப்பு படிக்கிறான். என் வேலைக்காக உன் பள்ளிக்கு வருகிறேன். என்னால் உனக்கு ஏதும் தொந்தரவு வராது. என்ற செய்தியை மகனுக்கு அனுப்பிவிட்டுப் பள்ளிக்குச் செல்கிறார், பாஸ்கம். பள்ளிக்கூட வாசலில் கேட்டியின் படங்கள், பூங்கொத்துகள், மெழுகுவர்த்திகள் நிறைந்திருக்கின்றன. காவல் துறையினர் இருவரையும் பள்ளி முதல்வர் அழைத்துச் செல்கிறார். "இப்பதான் இரங்கல் கூட்டம் முடிஞ்சது. மாணவர்கள் பலரும் கோபமா இருக்காங்க.” என்று சொல்கிறார். மூவரும் பள்ளிக்குள் செல்கிறார்கள். ஜேமியின் நண்பர்கள் ரயனும் டாமியும் பேசிக்கொள்கிறார்கள். போலீஸ் வந்திருப்பதாக ரயன் சொல்கிறான். "கண்டிப்பா வருவாங்க. எல்லா இடத்திலேயேயும் இருக்காங்க." என்று மெதுவாக டாமி சொல்கிறான். 'எனக்குப் பிடிக்கல' என்று டாமி சொல்கிறான். ரயனின் முகத்தில் பதற்றம். மெதுவாகப் பேசுகிறான். டாமி அலட்சியமாகப் பேசுகிறான். ஜேமியிடம் பேச முடியாத நிலை. இருவரின் வீட்டுக்கும் போலீஸ் வந்து விசாரித்ததைப் பகிர்ந்து கொள்கின்றனர். கத்தியைப்பற்றி ஏதாவது கேட்டார்களா என்று டாமி கேட்கிறான். ஆமாம் என்கிறான் ரயன். என் அப்பா, யாரிடமும் எதுவும் பேசாதே என்று சொல்லியிருக்கிறார் என்று ரயன் சொல்கிறான். பிரச்சினையில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று இருவரும் பேசிக்கொள்கிறார்கள். காவல் ஆய்வாளர்கள் முதலில் கேட்டியின் நெருங்கிய தோழியான ஜேட் என்ற மாணவியைச் சந்திக்கின்றனர். ஜேட் கோபப்படுகிறாள். "என்னிடம் ஏன் கேட்கறீங்க? உங்க மகனும் இங்கு தானே படிக்கிறான். அவனிடம் கேளுங்க. அவன் பார்க்க நல்லாவே இருக்க மாட்டான்." என்று கத்துகிறாள். ஆசிரியை அவளைச் சமாதானம் செய்ய முயல்கிறார். தொடர்ந்து என்ன கேட்டாலும் கோபப்படுகிறாள். கேட்டி, ஜேமி இருவருக்கும் இடையே நட்பு ஏதுமில்லை என்கிறாள். 'இன்ஸ்டாகிராம் பதிவுகளில் இருவருக்கும் நட்பு இருப்பதாகத் தெரிகிறதே!' என்று பிராங்க் கேட்டதற்கு அதிக கோபப்படுகிறாள். உங்களோடு எதுவும் பேச முடியாது என்று சொல்லி அறையை விட்டு வெளியேறுகிறாள். ஜேமி, கேட்டியின் வகுப்பறை. எட்டாம் வகுப்பு G பிரிவு. வகுப்பறைக் கதவின் அருகே சொல்லும்போதே உள்ளிருந்து கடும் கூச்சல் கேட்கிறது. மூவரும் உள்ளே நுழைகிறார்கள். வகுப்பறைக்குள் ஆசிரியர் யாருமில்லை. கலவர பூமியாக இருக்கிறது. ஆசிரியை, மாணவர் அனைவரையும் அமைதிப்படுத்துகிறார் . காவலர்களை அறிமுகப்படுத்துகிறார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்த வகுப்பு ஆசிரியர் வருகிறார். பதற்றமும் பயமும் நிறைந்த ஆசிரியர். நேற்று முன்தினம் இரவு கொடுமையான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்குச் சொல்லுங்க. எனது செல்பேசி எண்ணை உங்கள் ஆசிரியரிடம் கொடுக்கிறேன். என்று பாஸ்கம் சொல்கிறார். ஜேமியைக் கைது பண்ணிட்டீங்க. நிஜமாவே உங்களிடம் வீடியோ இருக்கா? என்று ஒரு மாணவன் கேட்கிறான். தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்துகொண்டே இருக்கிறான். ரயனும் டாமியும் அமைதியாக இருக்கின்றனர். காவல் அலுவலர்களுடன் ஆசிரியை எட்டாம் வகுப்பை விட்டு வெளியே வருகிறார். கேலியாகப் பேசிக்கொண்டே இருந்த மாணவனிடம், 'படிப்பில் கவனம் வை' என்று சொல்கிறார். வகுப்பறை விட்டு வெளியே வந்த காவலர்கள் இருவரும் ஆசுவாசாசமாகச் சற்றே நிற்கிறார்கள். எல்லா வகுப்பறைகளிலும் கடுமையான நாற்றம் இருக்கிறது. என்னால் தாங்கவே முடியவில்லை என்று பிராங்க் சொல்கிறார். பாஸ்கம் அதை ஆமோதிக்கிறார். வகுப்பறைகளில் மாணவர்கள் ஏதாவது சாப்பிடுகிறார்கள். அதிகமாகச் சத்தமிடுகிறார்கள். ஆசிரியர்கள் அவர்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். தொடரின் முதல் பாகத்தில் காவல் நிலைய நடைமுறைகள் காட்டப்பட்டது போல இரண்டாம் பாகத்தில் தற்காலப் பள்ளி நடைமுறைகள் காட்டப்படுகின்றன. பள்ளிக்குள் பதற்றம் நிறைந்திருப்பதாகவே காட்சிகள் நகர்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் அதிகப் பதற்றத்துடன் இருக்கிறார்கள். ஆங்காங்கே சேட்டை செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்யும் காட்சிகள் வருகின்றன. செல்பேசியில் ரீல்ஸ் எடுக்கும் மாணவ மாணவியரை ' வகுப்புக்குப் போங்க!' என்று ஆசிரியை சொன்னதுமே 'வாயை மூடுங்க மிஸ்!' என்கிறார்கள். எட்டாம் வகுப்பு ஆசிரியரை மாணவர்கள் கேலி செய்வார்கள் என்று சில காட்சிகள் உணர்த்துகின்றன. இன்றைய சூழலில் வளரிம்பருவ வகுப்பறையை எப்படிக் கையாளுவது என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் பிரச்சினையாக இருக்கிறது. பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகளைக் கலந்துரையாடிச் செயல்பாடுகளை உருவாக்குவதே இன்றைய அவசரத் தேவை. பாஸ்கம்மின் மகன் ஆதம் எப்போதும் பயம் நிறைந்த முகத்துடனேயே இருக்கிறான். 'அப்பா, இன்று கடுமையான வயிற்று வலி. நான் பள்ளிக்கு லீவு போடவா?' என்று ஆதம் அனுப்பிய குரல் பதிவுடன் தான் Adolescence தொடர் தொடங்குகிறது. பள்ளிக்குள் ஆதம் சக மாணவர்களால் கடுமையாகக் கேலி செய்யப்படுகிறான். கறுப்பினத்தவன் என்பதால் நிறவெறியும் அதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. உணவு நேரத்தில் குப்பைகளை அவனது தட்டில் போடுவது, பணம் கேட்டு மிரட்டுவது என்று ஆதம் சக மாணவர்களால் துன்புறுத்தப்படுகிறான். ஆதம் பத்தாம் வகுப்பில் படிக்கிறான். அவனது வகுப்பறைக்கு காவல் அலுவலர்கள் செல்கிறார்கள். ஆசிரியர் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இவர் நம் ஆதமின் அப்பா என்றும் சொல்கிறார். உடனே பின்னால் இருந்த மாணவன் 'ஆதம்' என்ற சத்தத்துடன் குரங்கு போல ஆதமின் காதருகே உறுமுகிறான். ஆசிரியர் எச்சரித்த போதும் அதை அலட்சியம் செய்தபடி மீண்டும் உறுமுகிறான். ஆசிரியர், சத்தமாக அவனைக் கண்டிக்கிறார். பிறகு என் அறைக்கு வா என்றும் சொல்கிறார். அவனது செய்கை தவறானது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று பாஸ்கமிடம் கூறுகிறார். நடந்த அசம்பாவிதம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று பாஸ்கம் சொல்லும்போதே தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. எங்கும் பதற்றம். சத்தம் அதிகரிக்கிறது.
- பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்
வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள். இயற்கையின் மீதும் சூழலியல் மீதும் தீராக் காதலும் கருணையும் கொண்ட தலைசிறந்த பண்புடைய தலைவனான பறம்பின் பாரியை பாணர்களும் புலவர்களும் சிலாகித்து பாடினர். அப்படிப்பட்ட இனக்குழு சமூகத்தின் தலைவனான பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையின் நீட்சியே இந்த நாவல். உலகின் தொல்குடியான தமிழ்குடியின் அறம் சார்ந்த வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் பாரியின் சங்க கால வாழ்க்கையை இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இப்படியானதொரு இளையோர் நாவலினை மிகச் சிறந்த முறையில் படைத்திருக்கிறார். "சாகசங்களை தேடும் பதின்ம வயதில் பறம்பின் ஏழு மலைகளை அறிந்து கொள்வதில் தன் முழு ஆற்றலையும் செலவழித்தான் பாரி. ஒரே நேரத்தில் இளமையின் வலிமையையும் முதுமையின் பேரன்பையும் பாரியால் காட்ட முடிந்தது" என்பதை வாசிக்கும் போது எப்படி பாரி பேராற்றல் உடைய தலைவனாக தன்னுடைய பதின் பருவத்திலேயே உருவாகிக் கொண்டிருந்தான் என்பதை இந்த நாவலின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டை ஆட்சி செய்த மூவேந்தர்களும் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் பரிசு பொருட்களை அள்ளி அள்ளிக் கொடுத்த போதிலும் பாரியிடம் கிடைக்கப்பெற்ற கருணையை வேறு எந்த மன்னரிடமும் எந்தப் பாணரும் புலவரும் உணர வில்லை என்று கபிலர் குறிப்பிடுவதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அவருடைய பதின் பருவம் இருந்தது என்பதனை அறிந்து கொள்ள இந்த நாவல் துணை செய்கிறது. கடல் கடந்து பரவி இருக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கும் பாரியின் வரலாற்றை இளையோருக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும் அவன் வேள்பாரியாக உருவாவதற்கு பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி துணை செய்தது என்பதையும் கண்முன் காட்சிகளாக விரித்து காட்டுகிறது இந்த நாவல். வாசித்து முடித்து சில வாரங்கள் கடந்துவிட்டாலும் பாரியின் கரம் பிடித்து பறம்பு மலையைச் சுற்றி வந்தபோது ஏற்பட்ட நெகிழ்ச்சி இப்போதும் மனது முழுவதும் நிரம்பி வழிகிறது. வெளியீடு - வானம் பதிப்பகம் தொடர்புக்கு - 9751549992
- பாட்டுப்பாடுவோமா!
1.கப்சிப் நாயுக்கும் நாயுக்கும் சண்டையாம் பூனையும் பூனையும் பார்த்ததாம் பூனைக்கும் பூனைக்கும் சண்டையாம் எலியும் எலியும் பார்த்ததாம் எலிக்கும் எலிக்கும் சண்டையாம் பல்லியும் பல்லியும் பார்த்ததாம் பல்லிக்கும் பல்லிக்கும் சண்டையாம் பொத்து பொத்துன்னு விழுந்ததாம் பொத்து பொத்துன்னு விழுந்ததும் கப்பு சிப்புன்னு இருந்ததாம். 2.மாமா வீட்டுத்தோட்டம் மாமா வீட்டுத் தோட்டம் மாடி யிலே இருக்குது மாறா வந்து பாரேன் அதிச யமாய் இருக்குது சின்னஞ் சிறியத் தொட்டிகள் செடியைத் தாங்கி நிற்குது புடலை பாகற் காய்களோ தலைக்கு மேலே தொங்குது கத்திரிக்காய் செடி எல்லாம் பூத்து காய்த்து கிடக்குது தக்காளி செடி கூட பழுத்து பளுவில் தொங்குது குழம்புக் கேற்ற செடிகொடிகள் பந்த லிலே படருது பூச் செடிகள் பழவகைகள் கீரை களும் வளருது மாமா வீட்டுத் தோட்டம் மாடி யிலே இருக்குது மாறா வந்து பாரேன் அதிச யமாய் இருக்குது
- வாசனை
தொழில்நுட்பத்தில் வாசனையை பதிவு செய்யும் முயற்சி பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. ஆனால் ஒருவரின் நினைவுகளை கிளப்பும் வாசனையை உருவாக்க நினைத்தது நான்தான். அது ஒரு அறிவியல் பிரச்சனையாக இருந்தது என்றாலும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியை மீட்டுத் தரவேண்டும் என்பதற்காக அது என் தனிப்பட்ட தேடலாக மாறியது. வாஸ்தவமாக, நினைவுகள் ஒரு குறுஞ்ச் சிறகுகளில் பறக்கும் மீன் போல. எப்போதும் கண்ணில் தெரியும் போல இருந்தாலும், அதைத் தொட்டவுடன் விலகிவிடும். ஆனால் வாசனை மட்டும், அந்த மீனுக்கு உணவு போடுவது போல. ஒரு வாசனை போதும்—நினைவுகள் பாய்ந்து வரக்கூடும். முதன்முதலில் அவளை பார்த்தது வண்டியூரில்தான். பனிக்கடியில், வெண்மை பிரஞ்ச் துணியில் அவள் நின்றபோது, அவள் ஒரு ரோஜா போலவே கனவும் நனவுமாக இருந்தாள். அந்த மணம்—மெல்லிய சோப்பின் வாசனை, பழைய புத்தகத்தின் பக்கம், மழைபடிந்த பூமி—எல்லாம் ஒன்றாக கலந்தது. ஒரு கணம், என்னால் மூச்சு விட முடியவில்லை. நான் ஏதோ ஒன்றை இழந்துவிட்டேன் என்று தோன்றியது. “நீங்க ரமணா சார் தானே?” என்றாள். “ஆமாம்...” என்றேன் குழம்பியபடியே. “நான் அனிதா. உங்கள் ரிசர்ச்சுக்கு fragrance stabiliser sample எடுத்திட்டு வந்தேன்.” அந்த நாள் என் ஆராய்ச்சிக்கான முதல் வாசனை மாதிரியை மட்டும் இல்லாமல், என் வாழ்வின் திசையும் வந்தது. அறிவியல்... அல்லது காதல்? நான் வாசனை ஒளிக்கதிர்களை மையமாக வைத்தே ஆராய்ச்சி செய்து வந்தேன்—Smell Memory Encoding எனும் தலைப்பில். நம் மூளை ஒரே நேரத்தில் நம் மனதின் ஆழத்தையும் வாசனையையும் இணைத்து வைத்திருப்பதை அறிவியல் உலகம் ஏற்கிறது. ஆனால் அதை துல்லியமாக மீட்டெடுக்க முடியவில்லை. வாசனையை ஒரு விசைப்படுத்தல் சாதனமாக மாற்ற முடியுமா? நம் கடந்த காலத்தை மீள அனுபவிக்க ஒரே தூண்டுகோல் வாசனையாக இருக்க முடியுமா? அனிதா எனக்கு உதவ ஆரம்பித்ததும், என் ஆய்வு வேகம் பிடித்தது. அவள் உதவி சாதாரணமாக இருந்ததில்லை. என் கண்ணுக்குள் நான் சொல்லாத எண்ணங்களைக் கூட உணர்ந்துகொள்வாள். லேபில் வேலை முடிந்த பிறகு கூட, வாசனை மாதிரிகளைப் பற்றிய விவாதங்கள் நம் இருவரையும் மீள மீள சந்திக்க வைத்தன. ஒருமுறை, வண்டியூர் ஏரிக்கரையிலிருந்து மழையில் நனைந்தபடி நடந்தோம். அவள் சொல்லியது“மழையிலும் வாசனை மாறும். அது நம்மை கைவிடாது.” நான்கு மாதங்களில், நாங்கள் ஒரு புதிய கலவை உருவாக்கினோம்—Scent-23. அந்த வாசனை மூளைச் செயல்பாட்டை விக்கிரமமாக தூண்டும் வகையில் உருவானது. நான்கு வாசனைக் கூறுகளின் நுண்ணிய சமநிலை, ஒரு குறிப்பிட்ட நோஸ்ரில் வேலை செய்யும் நரம்பியங்களை தூண்டும். அது, குறிப்பிட்ட காலச்சுழற்சியில் உருவான நினைவுகளைத் தூண்ட முடியும் என்ற நம்பிக்கை உருவானது. அந்த வாசனைச் சோதனைக்காக அனிதாவிடம் சிலர் விரோதமெனக் கூரினர். “உணர்வுகளை தூண்டக்கூடிய சாயல்கள் அபாயகரமாக இருக்கலாம்,” என்று எச்சரித்தனர். ஆனால் அவள் நம்பிக்கை செலுத்தினாள். “இந்த வாசனை என்னை எனக்குள்ளே ஒரு மறக்க முடியாத இடத்துக்குத் தள்ளுகிறது,” என்றாள். ஒரு முறை, அந்த வாசனையை அனிந்தபோது அவளுடைய கண்கள் கலங்கின. “நான் என் அம்மாவோடு கையடைந்த பக்கத்தில் வாசித்த அந்த கவிதை போலவே உள்ளது,” என்றாள். இழப்பு... ஒரு நாள் காலை, அவள் வரவில்லை. மெசேஜ் அனுப்பியும் பதில் இல்லை. தொலைபேசியில் சைலென்ட். பிறகு வந்தது ஒரு செய்தி—அவள் மரணம். திடீர் ஹார்மோனல் imbalance என மருத்துவக் காரணம் சொன்னார்கள். ஆனால் எனக்கு அது ஒரு ரீங்காரம் போல இருந்தது—புதிதாக உருவான மெழுகுவர்த்தி, மெதுவாக அணையும் ஒளி. அவள் இறந்த பின், அந்த வாசனையை நான் கிளீன்ரூமில் வைத்திருந்தேன். யாரும் அணுக முடியாத இடத்தில். ஒரு கண்ணாடி பாட்டிலில்—Scent-23. அதன் மீது எழுதியிருந்தேன், “Anitha.Mem.0423”. மூடியிருந்த வாசனை, ஆனால் திறந்தால் என்னென்ன கதைகளை கிளப்பும் என்று எனக்குத் தெரியும். நினைவுகளின் பூங்காற்று... மூன்று ஆண்டுகள் கழிந்ததும், நான் அந்த பாட்டிலைத் திறக்கவேயில்லை. ஆனால் ஒருநாள், என் பழைய லேப் மூடப்படப்போகிறது என ஒரு அறிவிப்பு வந்தது. அந்த இரவு, பல வருடங்களாக என் உள்ளத்தில் கூவிக்கொண்டிருந்த குரல் ஒரே வார்த்தை சொன்னது—திற. நான் அந்த வாசனையை திறந்தேன். மணம் கிளம்பியது. நான் கண்களை மூடிக்கொண்டேன். திடீரென நான் வண்டியூர் ஏரிக்கரையில் இருந்தேன். மழை, பனிக்கடி, பிரஞ்ச் துணியில் அவள். அவள் என்னிடம் சிரித்துக்கொண்டிருந்தாள். “நீ வாசனையைப் பற்றி சிந்திக்கிற போதெல்லாம், காதலையே மறந்துட்ற,” என்றாள். அது கனவா? ஞாபகமா? இல்லை… அது வாசனை உருவாக்கிய உணர்ச்சி. நினைவின் தூண்டுகோல். என் ஆராய்ச்சியின் சாட்சி. MeMorya அந்த வாசனையை வைத்து நான் ஒரு செயலி உருவாக்கினேன்—MeMorya. வாசனையை சுட்டி வைத்து, நினைவுகளை தானாகவே தூண்டும் ஒரு சாதனம். உளவியலாளர்கள், மருத்துவர்கள், சிலருக்கான கடைசி சந்திப்பு, மாயமான குழந்தைப் பருவம்—எல்லாமே அந்த செயலியில் மீண்டன. “நான் என் அம்மாவின் சமையல் வாசனையைக் கண்டேன்,” என்ற ஒருவர். “முதல் காதலியின் ஜாதி புத்தக வாசனை, சுரங்கத்தில் போல,” என்ற மற்றொருவர். சிலர் அழுதனர். சிலர் சிரித்தனர். அனைவருக்கும் இந்த வாசனை ஒன்று தரக்கூடியது—அழிவற்ற நிழல். ஆனால் எனக்கே கிடைத்ததா? அவள் வாசனையிலே... ஒரு நாள் நான் அந்த வாசனையை மீண்டும் பயன்படுத்தினேன். எல்லா தரவுகளும், முற்றும் தருணங்கள், என் முன் காணொளி போல ஒளிர்ந்தன. ஆனால் இதில் ஒரு வேறுபாடு இருந்தது. “ரமணா…” எனது காதுக்கு வந்த குரல். அவளின் குரல். நான் கண்களைத் திறந்தேன். அவள் வாசனைக்குள் இருந்தாள். அவள் என்னிடம் பேசவில்லை, ஆனால் என்னை பாக்கிறாள். சிரிக்கிறாள். என் அருகே நடந்தாள். ஒரு இம்சையை விடுத்து, ஒரு நிம்மதியுடன். நான் கண்ணீர் வடிக்கவில்லை. அதற்கு இடமில்லை. என் உள்ளம் பூரணமான உணர்ச்சியில் நிரம்பியது. என் ஆராய்ச்சி, என் அறிவியல், என் வாசனை—all for this moment. ஒரு முறையேனும் வாசனை உணர்வு நிஜத்தை மீறுகிறது. அது என் உணர்வுகளின் நிஜம். அவளின் வாசனை.












