இயலில் தேடலாம்!
211 results found with an empty search
- முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம்
என் பெயர் நஸீரா, நான் காசா நகரத்தில் இந்த நிமிடம் வரை உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இல்லையில்லை. என் பெயர் அமெலினா. நான் உக்ரைன் நாட்டிலுள்ள கீவ் நகரில் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கிறேன். எந்தப் பெயராக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வு நேரத்தில் தான் யுத்தம் ஒரு புயலைப் போல வீசியது. எங்கள் பள்ளிக்கட்டிடம் இடிந்து மண்ணோடு மண்ணாகி ஓராண்டு ஆகிறது. நேற்று கூட என்னுடைய பள்ளிக்கட்டிட இடிபாடுகளில் சிக்கிய என்னுடைய அறிவியல் புத்தகத்தைத் தேடிப் போனேன். என்னுடைய வகுப்பு இருந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றேன். அந்த வகுப்பு நடப்பதைப் போலவே கண்டேன். என் வகுப்புத்தோழி அதோ ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் இப்போது இல்லை. சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறாள்.. அவள் எவ்வளவு அழகு தெரியுமா? எனக்கு அழுகை வருகிறது. நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அமைதியாக வாழ்ந்தோம். எங்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதம் இருந்தது. சிலநேரம் நல்வாய்ப்பாக மூன்று வேளைகூட கிடைத்தது. நான், என் தங்கை,தம்பி, எல்லாரும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவோம். ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வோம். பிறாண்டிக் கொள்வோம். சிலசமயம் எங்களுக்கு அடி விழும். அழுவோம். பிறகு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். சிரிப்போம். கேலி செய்வோம். ஓடிப்பிடித்து விளையாடுவோம். ஆமாம்.காலையில் சூரியன் எல்லாருக்கும் போல எங்கள் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சினான். இரவில் நிலவின் குளிர்ந்த ஒளி எங்களையும் குளிப்பாட்டியது. மழை எங்களையும் நனைத்தது. பூக்கள் எங்களுக்கும் மணம் வீசின. எனக்கு அருகிலுள்ள ரோஜா தோட்டத்திலிருந்து வரும் வாசனை மிகவும் பிடிக்கும். அதை அப்படியே முகர்ந்து கொண்டே அந்த ரோஜா தோட்டத்தில் இருப்பதாகக் கற்பனை செய்வேன். காலையில் குயில்கள் எங்களுக்காகவும் பாடின. எங்களுக்கு என்று ஒரு வீடு இருந்தது. சின்னஞ்சிறிய வீடு.. பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு வரும் அப்பாவும் அம்மாவும் காலை நீட்டிப் படுக்க ஒரு வீடு. எல்லாருக்கும் படுக்க இடம் போதாது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவ்ர் இடித்துக் கொண்டு படுத்து உறங்கினோம். உறக்கம் நன்றாகவே வந்தது. எங்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார். உங்களுக்கு இருப்பதைப் போலவே. எங்கள் கடவுளும் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். உங்கள் கடவுளைப் போலவே. எங்கள் கடவுளும் இறந்தவருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் உங்கள் கடவுளைப் போலவே. எங்கள் கடவுளும் ஏழைகளுக்கு உதவியிருக்கிறார் . ஒவ்வொரு நாளும் கடவுளைத் தொழுகிறோம், உங்களைப் போலவே. ஒவ்வொரு நாளும் கடவுள் உதவி செய்வார் என்று நம்புகிறோம் உங்களைப் போலவே. ஒரு சிறிய நன்மை நடந்தாலே இந்தக் காரியம் கடவுளால் நடந்தது என்று புகழ் பாடுகிறோம் உங்களைப் போலவே. அவர் இந்த யுத்தத்தை எப்படியாவது நிறுத்தி விடுவார் என்று உங்களைப்போலவே நாங்களும் நம்புகிறோம். எங்கள் பாட்டி இருந்தபோது தினமும் கதைகளைச் சொல்வார். நல்லவர்களைப் புகழ்கிற கதைகள். தீயவர்கள் அழிவது உறுதி என்று சொல்கிற கதைகள். கடவுள் ஒருபோதும் ஏழை, எளிய மக்களைக் கைவிடமாட்டார் என்கிற கதைகள் வாழ்க்கை சொர்க்கம் போல மாறும் என்று நம்பிக்கை தரும் கதைகள். நான் நம்பினேன் எங்கள் வாழ்க்கை மாறும் என்று நம்பினேன். சொர்க்கம் எல்லாம் வேண்டாம். மூன்று வேளை உணவு, கிழியாத உடைகள், படிப்பதற்குப் பள்ளிக்கூடம் இவை எல்லாம் கிடைக்கும் என்று நம்பினேன். எங்கள் பள்ளிக்கூடம் குண்டு வீச்சில் தகர்ந்து வெகுகாலம் ஆகி விட்டது. புத்தகங்கள் தொலைந்து விட்டன. மருத்துவமனையின் மீது கூட குண்டு வீசப்பட்டது. வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. தினம் நிறையப்பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்ற குழந்தைகள் உடல் சிதறி, தலை சிதறி, இறந்து போகிறார்கள். நேற்று கூட குண்டு வீச்சினால் இடிந்த வீட்டிலிருந்து என் தம்பிக்கு ஒரு காலணி எடுத்தேன். ஒரு காலணியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நினைக்கிறாயா? காலணிகளே இல்லாத என் தம்பிக்கு அந்த ஒரு காலணி அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது தெரியுமா? ஆனால் சில நிமிடங்களில் அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக மறைந்து விட்டது. ஆமாம். தெருவில் இறங்கி நண்பர்களிடம் காட்டுவதற்காகப் போன தம்பி திரும்பவில்லை. இடிந்த கட்டிடத்தின் சிதைவுகளில் அவனுடைய காலணி அணிந்த அந்த ஒரு கால் மட்டுமே தெரிந்தது. எனக்குக் கண்ணீர் வரவில்லை. தினம் தினம் என்னைப் போன்ற குழந்தைகள் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன். அழுதழுது கண்கள் மரத்துப் போய் விட்டது நாளை நான் இருப்பேனா என்று தெரியாது. என் அப்பா அம்மா நாங்கள் இருக்கும் சின்னஞ்சிறு வீடு, சின்னஞ்சிறு ரோஜாச்செடி, அதன் வாசனை எல்லாம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சூரியன் இருக்கும். சந்திரன் இருக்கும். நாளையும் வெயில் அடிக்கும். மழை பொழியும். மனிதர்கள் இருக்கும்வரை உன் கடவுளும் இருப்பார். என் கடவுளும் இருப்பார். மனிதர்கள் நம்புவதற்கு யாராவது வேண்டுமில்லையா? இந்த பூமி எல்லாருக்கும் சொந்தமானது தானே. ஈ, எறும்பு முதல் யானை வரை எல்லாருக்குமானது தானே. அப்புறம் ஏன் மனிதர்கள் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். குண்டுகளை வீசி யுத்தம் செய்கிறார்கள். மனிதர்களைக் கொல்கிறார்கள். பெண்களைக் கொல்கிறார்கள். குழந்தைகளைக் கொல்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடும்? இதோ போர் விமானங்கள் மேலே பறக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் குண்டுகள் என் மீது விழலாம். இறந்து போன என் தம்பியுடன் நானும் சொர்க்கத்தில் கண்ணாமூச்சி விளையாடலாம். குழந்தைகளுக்காகக் கடவுள் சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பாராம். தம்பியின் இறுதிச்சடங்கில் மதபோதகர் சொன்னார். முகம் தெரியாத என் சிறுமியே! உன்னுடைய நாடு எதுவாயினும் சரி. உன்னுடைய நகரம் எதுவாயினும் சரி. அங்கே யுத்தம் வராமலிருக்கட்டும். குண்டுகளின் கரும்புகை வெண்மேகங்கள் மிதந்து செல்லும் நீலவானத்தைக் களங்கப்படுத்தாமலிருக்கட்டும். மனிதர்கள் இயற்கையாகவே மரணமடையட்டும். மனிதனின் மிகக் கொடிய கண்டுபிடிப்பு யுத்தம். நான் போரிடும் இந்த உலகத்தின் மனசாட்சியைப் பார்த்துக் கேட்கிறேன். குழந்தைகள் இல்லாத இந்த உலகத்தில் எதைச் சாதிக்கப்போகிறீர்கள் நீங்கள்? உனக்கும் இப்படி ஒரு கேள்வி வந்தால் நீயும் என்னுடைய அன்புத்தோழி தான். உனக்கு நீண்ட வாழ்நாளை உன்னுடைய கடவுள் அருளட்டும் என என்னுடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன். உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- மன்சூர்
கீதா துர்வே தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ மன்சூருக்கு தன்னை அலங்காரம் செய்வது, குறிப்பாகக் கண் மை போடுவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு கண் இமைகளின் மேலும் கீழும் மிக நுணுக்கமாக கண் மை போட்டுக் கொள்வான். குச்சுப்புடி நடனக் கலைஞர்கள் கண்களை அசைப்பதுபோல, அவனும் தனது கண்களை இட வலமாக அசைத்துப் பார்த்து சிரிப்பான். சில நேரங்களில் நெற்றியிலும், கன்னத்திலும் சிறிய பொட்டு வைத்துக்கொள்வான். அவனுக்கு நிறைய தோழிகள் இருந்தனர். ஒரு நாள் தனது தோழி சஹத்தின் உடையைக் கேட்டு அணிந்து, உதட்டுச் சாயம் பூசிக்கொண்டான். அவளிடம் “நான் அழகாக இருக்கிறேனா? இந்த உடை அலங்காரத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசையாக இருக்கிறது" என்றான். அதற்கு சஹத், "உன்னை இந்தக் கோலத்தில் உனது அம்மா பார்த்தால் அடிப்பார். என்னையும் பிடித்து உதைப்பார். நான் வரமாட்டேன்" என்றாள். மன்சூர், சஹத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, "வா!.. என்னிடம் சிறுமிகள் அணியும் உடைகள் இல்லை. அம்மா அப்பாவுக்கு முன்னால் இதை உடுத்திக் கொள்ள முடியாது. சீக்கிரம் போய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம்" என்று கெஞ்சினான். சஹத், "சரி வா. ஆனால் முதலில் நீ இந்த உடைகளைக் கழற்றிவிட்டு, உதட்டுச் சாயத்தைத் துடைத்துவிடு" என்றாள். மன்சூர், "ஏன்?" என்று கேட்டான். சஹத், "இப்படி அலங்காரம் செய்துகொண்டு போனால், சனங்கள் எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்... அங்கே போனதும் போட்டுக்கொள்" என்றாள். மன்சூருக்கு சஹத்தின் யோசனை பிடித்திருந்தது. உடனே அவன் அலங்காரத்தைக் களைந்துவிட்டான். புகைப்படம் எடுக்கும் கடைக்கும் வந்ததும், "சரி, நீ உன் வளையல்களைக் கொடு. எல்லாவற்றையும் அணிந்து கொள்கிறேன்" என்றான். சிறுவயது முதல் மன்சூருக்கு தோழிகளின் அழகான உடைகளை அணிந்து நடனமாடுவது மிகவும் பிடிக்கும். அந்த உடைகளை அணியும்போது, தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டதுபோல மகிழ்ச்சியாக உணர்ந்தான். தோழிகளுடன் விறகு சேகரிக்கச் செல்லும்போது, அவனது கண்கள் பெரும்பாலும் குப்பையில் கிடக்கும் பெண்களின் கைப்பைகள் மீது பதியும். அவற்றில் உதட்டுச் சாயம், பவுடர், வேறு ஒப்பனைப் பொருட்களைத் தேடுவான். ஏதாவது கிடைத்தால் உடனே எடுத்து அதை பூசிக்கொண்டு அழகு பார்ப்பான். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனக் கண்ணாடிகளில் தன்னைப் பார்த்துப் பெருமிதம் கொள்வான். பிறகு கால்சட்டைப் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு வட்டமாகச் சுழன்று நடனமாடுவான். சிறுவயது முதலே மன்சூர், தோழிகள் விளையாடும் கோ-கோ, கயிறு தாண்டுதல் போன்ற எல்லா விளையாட்டுகளையும் விளையாடினான். அவனுக்கு இதுபோன்ற விளையாட்டுகள்தான் பிடிக்கும். சில நேரங்களில் அவர்கள் யாராவது ஒருவர் வீட்டுத் திண்ணையில் நாடகம் நடத்துவார்கள். மன்சூர், எப்போதும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பான். சில நேரங்களில் அம்மா, சில நேரங்களில் அக்கா, சில நேரங்களில் மனைவி எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பான். ஆண் கதாபாத்திரங்களில் நடிப்பது அவனுக்குப் பிடிக்காது. முதலில், மன்சூரின் தோழிகள் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். அப்போது அவன் கவலை அடைந்தான். சில நேரங்களில் அழுதான். ஆனால் அவன் தோழிகளுடன் தொடர்ந்து பழக விரும்பியதால், கவலையை மறந்து சிரிக்கத் தொடங்கினான். மகன் உதட்டுச் சாயம் பூசி, வளையல்கள் அணிந்திருப்பதை மன்சூரின் அம்மா பார்த்தால் கோபம் அடைவார். எப்போது சிக்கினாலும் அவனைப் பிடித்து நன்றாக அடிக்க வேண்டுமென்று கையில் தடியுடன் தெரு முழுவதும் தேடுவார். நாள் முழுவதும் தோழிகளுடன் சந்தோஷமாக இருப்பான். ஆனால் வீடு திரும்பும் நேரம் வந்ததும் வருத்தமடைவான். வீட்டிற்குப் போனால் அடி விழும் என்று அவனுக்குத் தெரியும். அம்மாவைச் சமாதானம் செய்வது எளிது, ஆனால் அப்பா...? ஒருமுறை அவர் கையில் சிக்கினால், வீட்டிற்குள் கட்டி வைத்து அடிப்பார். "உதட்டுச் சாயம், கண் மை போடுவியா? உனக்கு பெண்ணாக மாறவேண்டும் என்று ஆசையா? பெண்களுடன் சுற்றுவியா? இந்தத் தெருவில் எங்களது மானத்தைக் கெடுப்பியா?" என்று கேட்பார். அப்பாவின் அடியைவிட அவரது வார்த்தைகள்தான் மன்சூரைத் ததுன்புறுத்தும். வெடித்து அழ வைக்கும். அவன் அழுதாலும், "பெண்கள் மாதிரி அழுவதை நிறுத்து" என்று அதட்டுவார் அப்பா. மன்சூரின் அம்மா அவனைத் தெருவிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் போது, "பெண்களுடன் பழக வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னேன். ஏன் நீ பெண்கள் மாதிரி நடக்கிறாய்?" என்று கேட்பார். அவனை நீண்ட நேரம் திட்டிவிட்டுத் தானும் அழுவார். மன்சூரின் செயலால் அக்கம் பக்கத்தவர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பலவிதமாகப் பேசுகிறார்கள் என்று அவருக்குத் தெரியும். சிலர் அவனை ‘திருநங்கை’ என்று அழைக்கிறார்கள். அதைக் கேட்டு மன்சூருக்குக் கோபம் வரும், ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான். வீட்டில் உள்ளவர்கள் அப்படிப் பேசும்போது அவனுக்கு வருத்தமாக இருக்கும். சஹத்தும், தமன்னாவும் மன்சூருக்குப் பிடித்த தோழிகள். அவர்கள் இருவரும் அவனை ஒருபோதும் அன்னியமாக நினைத்ததில்லை. மன்சூர் எப்படி இருந்தானோ அப்படியே அவனை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடன் சுற்றுவதும், வேலை செய்வதும் மன்சூருக்கு நிம்மதி அளித்தது. தோழிகளுடன் சேர்ந்து சமையல் செய்வது, சாணம் மெழுகுவது, வீட்டைப் பெருக்கி துடைப்பது போன்ற பல வேலைகளைக் கற்றுக்கொண்டான். இரண்டு மூன்று வீடுகளில் பெருக்கி, குப்பைகளை அகற்றும் வேலையும் அவனுக்குக் கிடைத்தது. தீபாவளி நேரத்தில், வீட்டு முற்றத்தில் சாணம் மெழுகும்போது, அக்கம்பக்கத்தவர்கள் அவனை ‘பொட்டை’ என்று சொல்லிக் கேலி செய்தார்கள். மன்சூர், யாரையும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஒருநாள் சஹத், மன்சூரிடம் அவனது பெயருக்கான அர்த்தத்தைச் சொன்னாள்: "கோண்டி மொழியில் மன்சூர் என்றால் அழகான மயில். மயில் தோகையில் உள்ள வண்ணங்கள் அவற்றின் அழகை இரட்டிப்பு ஆக்குகின்றன. ஆனால் அவற்றின் கால்கள் அழகற்றவை. மக்கள் மனதில் மயிலின் அழகான தோகைக்கு கிடைத்த இடம் கால்களுக்குக் கிடைக்கவில்லை. மன்சூர் என்பதற்கு 'ஏற்றுக்கொள்ளுதல்' அல்லது 'அங்கீகரித்தல்' என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு" என்றாள். சஹத்தின் வார்த்தைகளைக் கேட்ட மன்சூர், "நான் மன்சூர் என்பதால் என்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையோ? இந்த உலகில் நான் மட்டும் விசித்திரமானவனா? நான் எந்த அடையாளத்துடன் வாழ விரும்புகிறேனோ, அதற்கு இங்கு இடம் கிடைக்குமா?" என்று கேட்டான். சஹத் அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் மன்சூரின் கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
- பிளமிங்கோ
ஓவியம் : கண்ணன்
- பிரம்மாண்ட ஊசிக்கணவாய்
ஆங்கிலத்தில் இதன் பெயர் Giant Squid - தமிழில் நாம் இந்த விலங்கை பிரம்மாண்ட ஊசிக்கணவாய் என்று அழைத்துக்கொள்ளலாம். சும்மா பெயரில் மட்டும் இல்லை இந்த பிரம்மாண்டம். இது 43 அடி, அதாவது 13 மீட்டர் நீளம் வளரக்கூடியது, பெண் ஊசிக்கணவாய்கள் 275 கிலோ எடை வரை இருக்கும். இது 3 யானைக்குட்டிகளின் எடைக்கு சமம். இதன் கண் எவ்வளவு பெரியது தெரியுமா? கண்ணுடைய விட்டம் மட்டுமே ஒரு அடி இருக்கும்! 300மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள கடற்பகுதியில் மட்டுமே இவை வசிக்கும்.ஆகவே இவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன,இந்த விலங்குகளை நேரில் பார்ப்பதும் தகவல்களை சேகரிப்பதும் கடினமாக இருக்கிறது. இப்போதைக்கு வெப்பமண்டல மற்றும் துருவக்கடல்களில் இந்த ஊசிக்கணவாய் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1850களிலேயே இதுபற்றிய குறிப்புகள் வந்துவிட்டன. ஆனால் 2004ல்தான் இந்த விலங்கின் முதல் வீடியோ எடுக்கப்பட்டது, அந்த அளவுக்கு இது அறியப்படாத இனமாகவே இருக்கிறது. இது மிகத்திறமையாக வேட்டையாடக்கூடிய விலங்கு. 32 அடி தொலைவில் இரை இருந்தாலும் தனது கைகளை நீட்டி இரையைப் பிடித்துவிடும். பெரிய ஆழ்கடல் மீன்களை விரும்பி சாப்பிடும். இவ்வளவு பெரிய விலங்காக இருக்கிறதே, இதற்கு எதிரிகளே கிடையாது என்று யோசிக்கிறீர்களா? அதுதான் இல்லை. இயற்கையில் எல்லாவிதமான விலங்குகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வேட்டையாடிகள் உண்டு. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள், பைலட் திமிங்கிலங்கள், ஒருவகை சுறாக்கள், ஆர்காக்கள் எனப் பல பெரிய விலங்குகள் இந்த பிரம்மாண்ட ஊசிக்கணவாய்களை வேட்டையாடுகின்றன! அளவில் பிரம்மாண்டமாக இருந்தாலும் இந்த விலங்குகள் மனிதர்களை எதுவும் செய்வதில்லை. இவை ஆழ்கடலில் வசிக்கின்றன. நாமாகப் போய் தொந்தரவு செய்து இவற்றை எரிச்சல்படுத்தாதவரை இந்த ஊசிக்கணவாய்கள் மனிதர்களைத் தாக்காது.
- மா லியாங்கின் மாயத்தூரிகை
சீனமொழியில்: ஹாங் ஷிண்டாவ் (1950) ஆங்கிலம் வழி தமிழில்: எழில் சின்னத்தம்பி முன்னொரு ஒரு காலத்தில், மா லியாங் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஏழை மனிதன். இரக்க குணம் கொண்டவன்; ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். எங்கு பார்த்தாலும் ஓவியம் வரைந்து கொண்டே இருப்பான். ஒரு நாள் இரவு, அவன் ஒரு கனவு கண்டான். அதில் வயதான மனிதர் ஒருவர் மாயத் தூரிகை ஒன்றை அவனிடம் கொடுத்து, ஏழைகளுக்கு உதவ அதைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். விழித்துப் பார்த்தபோது, அந்த மாய தூரிகை அவனது மேசையில் இருப்பதைக் கண்டான். அன்றிலிருந்து, ஏழைகளுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் அவன் அந்தத் தூரிகையைப் பயன்படுத்தினான். மக்கள் தங்கள் வயல்களுக்குப் பயன்படுத்த தண்ணீர் இல்லாமல் இருப்பதை அவன் கண்டபோது, ஒரு நதியை வரைந்தான். அந்த நதி உயிர் பெற்றது. மக்கள் அந்த நதியிலிருந்து வயலுக்குத் தண்ணீர் கொண்டு வந்து தங்கள் பயிர்களை வளர்க்க முடிந்தது. கடினமாக உழைக்கும் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கச் சிரமப்படுவதைக் கண்டபோது, அவர்களுக்குச் சாப்பிட உணவு வரைந்தான். விரைவில், பலர் மாயத் தூரிகையைப் பற்றி அறிந்தனர்; அவர்கள் மாயத்தூரிகையினால் பயன் பெற்று, மா லியாங்கிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தனர். ஆனால் அந்த கிராமத்தில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் மிகவும் மோசமானவன். மேலும் பணக்காரனாக மாற அந்த இளைஞனிடமிருந்து தூரிகையைத் திருட முடிவு செய்தான். எனவே அவன் தனது வேலைக்காரர்களை மா லியாங்கின் வீட்டிற்கு அனுப்பி அந்த மாயத் தூரிகையை திருடச் செய்தான். தூரிகை அவனிடம் வந்ததும், அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தனது புதிய உடைமையைக் காண்பிக்கத் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்தான். அவர்கள் வந்ததும் அவன் நிறையப் படங்களை வரைந்தான்; ஆனால் அவை எதுவும் உயிர் பெறவில்லை. தூரிகை அவனுக்காக வேலை செய்யாததால் அவன் மிகவும் கோபமடைந்து, மா லியாங்கிற்கு ஆள் அனுப்பி வரவழைத்தான். அவன் மா லியாங்கிடம் "நீ எனக்காகச் சில படங்களை வரைந்து அவற்றை உயிர்ப்பித்தால், நான் உன்னை விடுவித்து விடுவேன்" என்றான். மா லியாங் அந்த மோசமான மனிதனுக்கு உதவ விரும்பவில்லை, ஆனால் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன் அந்த கெட்ட மனிதனிடம், "நான் உங்களுக்கு என்ன வரைய வேண்டும்?" என்று கேட்டான். பணக்காரன், "எனக்கு ஒரு தங்க மலை வேண்டும். அங்கு சென்று நான் அந்தத் தங்கத்தை எல்லாம் எடுத்துக் கொள்வேன்" என்றான். ஆனால் மா லியாங் முதலில் ஒரு கடலை வரைந்தான். பணக்காரன் கோபமடைந்து, "ஏன் ஒரு கடலை வரைந்தாய்? எனக்கு ஒரு தங்கமலை வேண்டும். அதை விரைவாக வரை!" என்றான். எனவே மா லியாங் ஒரு தங்கமலையை வரைந்தான். அது கடலில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. பணக்காரன், "ஒரு பெரிய கப்பலை விரைவாக வரை. நான் மலைக்குச் சென்று தங்கம் சேகரிக்க வேண்டும்" என்றான். மா லியாங் அமைதியாகப் புன்னகைத்து ஒரு பெரிய கப்பலை வரைந்தான். பணக்காரன் கப்பலில் ஏறித் தங்கத்தைத் தேடிப் புறப்பட்டான். ஆனால் கப்பல் கடலின் நடுப்பகுதிக்குச் சென்றபோது, மா லியாங் அந்த ஓவியத்தில் ஒரு பெரிய அலையை வரைந்தான். அந்த அலை சுழன்றடித்துக் கப்பலை அழித்தது. அதன் பிறகு அந்தப் பணக்காரன் மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப வரவேயில்லை. அதன் பிறகு, மா லியாங் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். வயதான மனிதர் கேட்டுக் கொண்டபடி ஏழைகளுக்கு உதவ மாயத் தூரிகையைப் பயன்படுத்தினான். அந்த மாயத் தூரிகை அனைவராலும் விரும்பப்பட்டு மென்மேலும் உதவிகள் செய்தது.
- சமூக நூலகங்கள்
புதிய சிந்தனை நூலகம் செப்டம்பர் 5 ம் தேதி தெற்கு ஆத்தூரில் புதிய சிந்தனை நூலகம் எனும் நூலகத் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. குழந்தை ரதி பிரார்த்தனா (3-ஆம் வகுப்பு) தான் கண்ட சில நூலகங்களைக் கண்டு அதன்படி தங்களது வீட்டிலும் ஒரு நூலகம் வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அவரது அம்மா வீட்டில் மாலை நேர தனி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அவரிடம் 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். அவர்களும் வாசிக்கட்டும், தனது மகளின் நண்பர்களும் வாசிக்கட்டும் என்ற நோக்கில், தொடங்கப்பட்டது. தசிஎகச முக்காணி கிளை சுப்புலெட்சுமி, சண்முக வடிவு, தூத்துக்குடி கிளை வாலண்டினா ஆகியோர் சார்பில் சிறார் புத்தகங்கள் புதிய சிந்தனை நூலகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன. மகிழினி IFS நூலகம். செப்டம்பர் 5 தெற்கு ஆத்தூர் புதிய சிந்தனை நூலகம் தொடக்க நிகழ்வு முடிந்து திரும்பி வரும்வழியில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவி முத்து நித்யா, தங்கள் வீட்டிற்கு வரும்படி அன்புடன் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று மகிழ்வுடன் சென்றபோது, தனது சேகரிப்பு புத்தகங்களை பெரும் மகிழ்வுடன் காண்பித்து, தன்னிடம் 33 புத்தகங்கள் உள்ளன, இதனை வைத்து ஒரு நூலகம் தொடங்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார். அவரது அம்மாவும் உற்சாகப்படுத்தினார். வேகவேகமாக உடனிருந்த குழந்தைகள் அந்தப் புத்தகங்களை ஒரு இரண்டு அடுக்கு சிறிய அலமாரியில் அடுக்கத் தொடங்கினர். ஆஹா! அற்புதம்! என்றனர் குழந்தைகள். சரி, இன்னொரு நாள் எதற்கு? இப்போதே நூலகம் தொட ங்கிவிடலாம் என்று முடிவு செய்து, ஆளுக்கொரு பெயர் சொல்ல, தனக்கு செப்டம்பர் 2ல் அறிவுச் சுடர் படிப்பகம் சார்பில் பிறந்தநாள் பரிசாக கிடைத்த, மகிழினி IFS புத்தகத்தை, அதே புத்தகத்தை இரண்டு பிரதிகள் தனது சேமிப்பு உண்டியல் தொகை மூலம் வாங்கி, தனது பள்ளிக்கும், தனது மாலைநேர தனிபயிற்சி வகுப்புக்கும் பரிசாக அளித்த , தனக்கு மிகவும் பிடித்த அதே மகிழினி IFS எனும் புத்தகத்தின் தலைப்பையே தனது நூலகத்திற்கு சூட்டி மகிழ்ந்தார் மாணவி முத்து நித்யா. ஒரு புத்தகப் பரிசு என்ன செய்யும்? ஒரு நூலகத்தையே உருவாக்கும்! இப்படித்தான் உருவானது மகிழினி IFS நூலகம். இது நமது 12வது நூலகம். சமூக நூலகங்கள். Community Libraries 1.அறிவுச்சுடர் படிப்பகம், நவம்பர் 14 - 2022. சண்முக வடிவு மற்றும் பலர் இணைந்து... ஆத்தூர் . 2.அல்முபின் தையல் நூலகம், நவம்பர் 14- 2023 செய்யதலி பாத்திமா ஆத்தூர் . 3.வானவில் நூலகம், மார்ச் 8 - 2024 சுப்புலெட்சுமி முக்காணி. 4.சிறகுகள் சிறார் நூலகம், ஏப்ரல் 23 - 2024. வாலண்டினா தூத்துக்குடி . 5.அரும்பு நூலகம், ஜனவரி 01 - 2025 மரியம் ஆயிஷா ஆத்தூர் . 6.Rise and Shine Library, பிப்ரவரி 16 - 2025. மாணவச் செல்வங்கள், மரிய ஸ்டெர்லி & கிரேசி ஆத்தூர். 7.பெருங்கனா சிறார் நூலகம் . பிப்ரவரி 24 - 2025. ஜோசப் டெரின் குருவிநத்தம் கிராமம் 8.குரூப்ஸ்கயா நூலகம் ஏப்ரல் 14 2025 கோமதி அம்மாள் தோப்பூர் திருச்செந்தூர் 9.பெனோ ஜெபைன் நூலகம் , ஏப்ரல் 23 2025. சகாயமேரி காமநாயக்கன்பட்டி. 10.வாசிப்பை நேசிப்போம் நூலகம் மே 11 2025. தங்கலெட்சுமி பூஜாஸ்ரீ, வினோத் குமார் தெற்கு ஆத்தூர். 1 1.புதிய சிந்தனை நூலகம்.. செப்டம்பர் 5 2025. முத்துலெட்சுமி ரதி பிரார்த்தனா. தெற்கு ஆத்தூர். 12.மகிழினி IFS நூலகம் செப்டம்பர் 5 2025. சிவரஞ்சனி முத்து நித்யா தெற்கு ஆத்தூர். - தொடரும்...
- Magic Square
A special magic square is done for 15-8-2025 This magic squares can be used from 2025 to 2099 All vertical, Horizontal and in both Diagonals are 68. One more magic square for the year 2026 is also done with the total 69 From 2025 to 2026, simply add one number in the yellow colored squares and in total. By adding one number every year in all the yellow squares and in total, this magic square can be used from 2026 to 2099 (75 Years)
- ஈரோட்டில் கதைத்திருவிழா -2025
ஈரோடு மாவட்டத்தில் 21 வருடங்களாக புத்தகத் திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 17 வருடங்களாக மக்கள் சிந்தனை பேரவை தனியாகவும் கடந்த நான்கு வருடங்களாக தமிழ்நாடு பொது நூலக துறையோடு இணைந்தும் நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ஆளுமைகளின் சிறப்புரை நடைபெறும். இந்த வருடம் 5 கோடிக்கு மேல் நூல்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு கடந்த வருடம் நடைபெற்றது. இந்த வருடமும் தினமும் காலையிலிருந்து மாலை வரை பல்வேறு பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் கதை கேட்டார்கள். கதைக்களம் என்ற ஒரு அரங்கம் அமைத்து அதில் குழந்தைகளுக்கு கதை சொல்லிகள் கதை சொன்னார்கள். கதை சொல்லிகள் வனிதாமணி, கோதை, லட்சுமி விசாகன், சரிதா ஜோ, நான்சி கோமகன், சங்கீதா பிரகாஷ், சர்மிளா தேவி, கார்த்திகா கவின் குமார் மற்றும் தீரா தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டு மிகச் சிறப்பான கதைகளைக் கூறினார்கள். 10 வயதுக்குள் குழந்தைகள் கேட்கும் கதைகள் பிற்காலத்தில் அவர்கள் ஆளுமையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் குழந்தைகளுக்கு கதைகளை கொண்டு சேர்த்த ஈரோடு புத்தக திருவிழா ஏற்பட்டாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- எழுத்து பிறந்த கதை
வணக்கம் செல்லக் குட்டீஸ் எழுத்துகள் எப்படி பிறந்தது என்று தெரியுமா? முதன்முதல்ல மனிதன் என்ன எழுதி இருப்பான்? அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்? எல்லாருக்கும் புரியற மாதிரி எழுத்துகள் எடுத்ததுமே உருவாகிடுச்சா? முதல்ல அது எப்படி இருந்தது? எப்படி இன்று இருக்கும் எழுத்துகளா மாறி இருக்கும்? இப்படி எல்லாம் யோசிச்சிருக்கீங்களா! அப்ப உங்களுக்காக தான் இந்தக் கதை. இத ருட்யார்ட் கிப்ளிங் அப்டிங்கற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் எழுதி இருக்காரு. அவர் ஆங்கில எழுத்தாளர் இல்லையா? அதனால ஆங்கில எழுத்துகள் எப்படி பிறந்தது அப்படிங்கறத கதையா எழுதி இருக்காரு. அந்தக் கதைய எழுத்தாளர் கோகிலா, தமிழில் மொழிபெயர்த்து கொடுத்திருக்காங்க. இப்ப மாதிரியே அப்பவும் வெவ்வேறு இனக் குழுக்களுக்கு வேற வேற மொழி இருந்திருக்கு. அதாவது அவங்க எழுப்பும் வித்தியாசமான ஓலிகள். ஒரு குழு பேசற மொழி இன்னொரு குழுவுக்கு புரியாது. அப்ப எல்லாருக்கும் புரியற மாதிரி ஓவியங்கள் வரைஞ்சு காட்டினால் எப்படி இருக்கும்! அந்த ஓவியங்கள் தான் பின்னாடி எழுத்துகளாக மாறி இருக்கும் இல்லையா! என்ன என்ன எழுத்துகள் எப்படி உருவாச்சு அப்படின்னு ரொம்ப சுவாரஸ்யமா எழுதி இருக்காங்க. இந்த புத்தகத்தை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.. எழுத்து உருவான வரலாறு தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்தீங்கன்னா இந்த புத்தகம் உங்களுக்கு தான். ராஜலட்சுமி நாராயணசாமி
- பேசும் கடல்
கடல் பாட்டியிடம் பேசும் போது நேரம் போவதே தெரியவில்லை என்று சொல்லுமளவுக்கு பாட்டிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கேள்வி பதில் தொடர்ந்து கொண்டே இருந்தன. இப்போது அவர்களின் அப்பாவிடமும் நிறைய கேள்வி கேட்க தொடங்கினர். "அப்பா ........அப்பா நீங்கள் எப்பவும் வெற்றிலை போட்டுக்கிட்டே இருக்கீங்கல உங்களுக்கு வாய் வலிக்காதா?" என்று அமுதா தன் அப்பாவின் மீசையை தடவிக் கொண்டே கேட்டாள். "ஆமாம்....... அப்பா! நானும் இதை கேட்க நினைத்தேன் " இனியனும் இணைந்து கேட்டான். "இரண்டு பேரும் கடல் பாட்டிகிட்ட கேள்வி கேட்டது போய் என்னிடம்மா.....? சரி சொல்றேன்" என்று சிரித்தார் அப்பா. ஆர்வத்தோடு இருவரும் கேட்கத் துணிந்தனர். " கடல்ல மீன் பிடிக்க அதிகாலை 2 மணி மூன்று மணி என்று நேரம் காலம் பாராமல் செல்வோம். காலநிலைக்கு ஏற்றார் போல், காற்றின் திசைக்கும், கடலின் நீரோட்டத்திற்கும் ஏற்றார் போல் தொழில் செய்யும் நேரம், காலம் எல்லாம் மாறுபடும். ஒரே சீரான நேரத்தில் கடல் தொழில் செய்வோம் என்று சொல்ல முடியாது. கடல் தொழில் செய்பவர்களுக்கு மூன்று பெரும் சிக்கல்கள் உருவாகும். "........ என்று சொல்லியவர் ஒரு கணம் நிறுத்தினார். தன் வாயிலிருந்து வெற்றிலை எச்சிலை துப்புவதற்கு எழுந்து போனார். "மூன்று சிக்கல்கள் என்னப்பா ........." அமுதாவும், இனியனும் அவசர அவசரமாக அப்பாவிடம் கேட்டார்கள். " பசி, தூக்கம் ,கடும் குளிர் இவை மூன்று கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். இவை மூன்றுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு தான்" " அப்பா என்னப்பா சொல்றீங்க ......" இனியன் அப்பாவின் உணர்வோடு இணைந்தான். " ........சாமத்துல இரண்டு மணிக்கு போனால் 12 மணி நேரம் கழித்து தான் திரும்ப கரை வர முடியும். அதுவரை கடல் தண்ணீரிலேயே இருப்பது நிலத்தில் இருப்பது போல் எளிதானது அல்ல. முதலில் கடும் குளிர், பனி காலங்களில் வெற்றிலை போட்டால் குளிர் நம்மை தாக்கும் உணர்வே தெரியாது. நாவும் , பற்களும் மரத்து போகும்" என்று அப்பா சொல்வதைக் கேட்ட குழந்தைகள் அவரைக் கனிவுடன் பார்த்தனர். I love you அப்பா " என்று அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அமுதா . இனியன் அப்பாவின் முதுகை கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்பாவின் முகத்தில் புன்னகை பூத்தது. அவர் தொடர்ந்தார்..... "நீண்ட நேரம் வெற்றிலையை மென்றுகொண்டே, வாயில் ஒதுக்கி வைப்பதால் பசியும் எடுக்காது தூக்கமும் வராது . கடலில் பயணிக்கும் போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், எப்போது அலை உயர்ந்து எழும் என்று தெரியாது. வெற்றிலையை வாயில் ஒதுக்கி வைத்து மென்று கொண்டே இருந்தால் தூக்கமும் வராது, பசியும் இராது, குளிர் காற்றும் தாக்காது" என்று தன் தோளில் சாய்ந்து கேட்டுக்கொண்ட பிள்ளைகளின் தலையை தடவினார் அப்பா . அண்ணே..... அண்ணே சோளக்காற்று, கச்சான்காற்று, வாடைக்காற்று எதுவும் நம்ம அப்பாவை தாக்காமல் இருக்கணும்னா கொஞ்சம் வெற்றிலை போட்டாலே போதுமா? என்று அமுதா இனியனிடம் கூறினாள். " ஆமாம் அமுதா ஆனால் எல்லோரும் புகையிலை சேர்த்து போடுறாங்களே அதான் கவலையா இருக்கு....." " தம்பி இனியா..... புகையிலை போடுறது தப்புதான் ஆனால் அந்த குளிரை தாங்க கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறார்கள்". தாழ்ந்த குரலில் பேசினார் அப்பா. அவரும் புகையிலை போடுவார். அதைக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள். "அமுதா.... காற்றுக்கு பெயரிடும் மீனவர்கள் அந்த காற்றை எதிர்கொள்ள கண்டுபிடித்தது தான் வெற்றிலை பாக்கு போல." " ஆமாம் அண்ணே, எனக்கு வெற்றிலை போடும் நபர்களை பார்த்தாலே பிடிக்காது. ஆனால் இப்போதான் தெரியுது, ஒரு இலைக்குப் பின்னால் இவ்வளவு சோகமா? " என்று அமுதா இப்போது பொறுப்பாக பேசினாள் . ஓங்கி அடித்த அலை அமுதாவின் கால்நினைத்து சென்றது. " இன்னைக்கு உங்க அப்பா கிட்டயே இருந்துட்டீங்க, என்கிட்ட வரலையா? ” என்று கடல்பாட்டி சிரித்துக்கொண்டே கேட்டார். ” ஆமாம் பாட்டி ! அப்பா வெற்றிலை போடுவது பற்றி பேசினார்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம் .” என்று சேர்ந்த குரலில் சொன்னார்கள். "அது சரி.... உங்களுக்கு இன்னொன்னு சொல்லட்டுமா இதுநாள் வரை கடல் தொழில் செய்யும் மீனவர்கள் கடலில் மது அருந்துவது கிடையாது. அதுதான் அவங்க எனக்குத் தரும் மரியாதை" " அப்படியா !......." இருவரும் ஆச்சரியமாய் கேட்டார்கள். ” பாட்டி பாட்டி பாய் மரம்னா என்ன? ” என்று அமுதா கேட்டாள். ” சொல்றேன்........ கண்மணிகளே....” என்று சொன்ன பாட்டி மீண்டும் மறைந்து போனார். ( கடல் பேசும் )
- பூச்சி இறால் தெரியுமா?
மீன் சந்தைகளில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். சற்றே வித்தியாசமான உடலுடன் கொஞ்சம் இறால் போலவே இருக்கும் இந்த உயிரி "பூச்சி இறால்" என்று மீனவர்களால் அழைக்கப்படுகிறது. இறால் என்று பெயர் இருந்தாலும் இது இறால் இனம் அல்ல. சிங்கிஇறால்கள், நண்டுகள், இறால்கள் எல்லாவற்றுக்கும் ஒரு தூரத்து உறவினர் என்று சொல்லலாம். சிறு கடல் புழுக்கள், கணவாய்கள், சிப்பிகள், மீன்கள் போன்றவற்றை இவை வேட்டையாடி சாப்பிடும். ஆங்கிலத்தில் இதன் பெயர் Mantis shrimp. Praying Mantis என்ற ஒரு வகை பூச்சி இருக்கிறது, தெரியுமா? இது தமிழில் கும்பிடு பூச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூச்சியைப் போலவே முன்னால் இருக்கும் கைகளை வைத்து வேட்டையாடுவதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். அறிவியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதற்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் என்ன தெரியுமா? "கட்டைவிரல் நறுக்கி". சரியாகக் கையாளாவிட்டால் இது நம்மைக் காயப்படுத்திவிடும் பலம் கொண்டது. அதென்ன அப்படிப்பட்ட பலம்??? ஒருமுறை இது தாக்கும்போது 1500 நியூட்டன் விசை இருக்குமாம்! ஒரு திறமையான பாக்ஸிங் வீரர் பலத்தைத் திரட்டி ஓங்கி ஒரு குத்துவிட்டால் எவ்வளவு வலுவாக இருக்குமோ, அவ்வளவு வலு! இவ்வளவு வலுவும் குறைவான வேகத்தில் வருவதில்லை. ஒரு நொடிக்கு 23 மீட்டர் வேகம், அதாவது மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் இந்தத் தாக்குதல் நிகழும்! இந்தப் பூச்சி இறால்களுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. இவற்றின் பார்வைத்திறனும் அலாதியானது. கிட்டத்தட்ட மனிதர்களோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு இவை பார்வைத்திறன் கொண்டவை. சில பூச்சி இறால் வகைகள் உணவாகப் பயன்படுகின்றன. சில இனங்கள் அழகுக்காக மீன்தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.












