top of page

இயலில் தேடலாம்!

178 results found with an empty search

  • பகா எண்களுக்கும் பகு எண்களுக்கும் என்ன தான் பிரச்சனை?

    வானத்தில் இருந்து தொப்பென கோலிக்குண்டு ஒன்று விழுந்தது. கோலிக்குண்டு எப்போது விழும் என்று யாருக்கும் தெரியாது. அது நகரத்தின் நடுவில் இருக்கும் மைதானத்தில் மட்டுமே விழும். அது கோலிக்குண்டுகளின் உலகம் மட்டுமல்ல. அது எண்களின் உலகமும்கூட. ஆனால் எல்லா கோலிக்குண்டும் ஒரே அளவில்தான் இருக்கும். ஒவ்வொரு கோலிக்குண்டிலும் ஓர் எண் எழுதி இருக்கும். அது இந்த உலகத்திற்கு வரும்போதே இருக்கும். குண்டு விழுந்ததும் அதில் என்ன எண் இருக்கும் என எல்லோரும்  உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏன்? ஏனெனில், இப்போது அங்கே ஒரு பிரச்சனை. பிரச்சனை என்பதைவிடச் சண்டை என்று சொல்லலாம். சண்டைகூட இல்லை, மனக்கசப்பு. அங்க யாருக்குள்ளே மனக்கசப்பு வந்துவிடப்போகிறது? எண்களுக்குள்தான். ஆமாம் ஆமாம். அங்கே ஒவ்வொரு கோலிக்குண்டிற்கும் ஓர் எண் இருக்கும். அவை அதிகபட்ச இரண்டு இலக்க எண்ணாக இருக்கும். 02,03,04ல் தொடங்கி....98,99 வரைக்கும். பூஜ்ஜியம் என்று எந்தக் கோலிக்கும் எண்கள் இல்லை. ஒவ்வொரு எண்ணும் பல எண்ணிக்கையில் இருக்கும். அதே சமயம் எல்லாக் கோலிக்குண்டும் ஒரே மாதிரி இருக்காது. அதற்குள் இருக்கும் குமிழிகள் வேறு வேறு மாதிரி இருக்கும். [உடனே வீட்டில் இருக்கும் கோலிக்குண்டினை ஆராயச் சென்றுவிடவேண்டாம்]. எண் இரண்டு முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களில் பல பிரிவுகள் இருக்கும். ஆனால் பிரதானமாக இரண்டு வகையான எண்களே அங்கே பேசப்பட்டன. பகா எண்கள் (Prime Numbers). பகு எண்கள் (Composite Numbers).  பகா எண் என்பது 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 ஐ விடப் பெரிய இயல் எண்ணாகும். . எண் 5 தன்னாலும் 1ஆல் மட்டுமே வகுபடும் அல்லவா. அது பகா எண். எண் 6, தன்னால் 1,2,3ஆல் வகுபடும் என்பதால் பகு எண். பகா எண்கள் வீராப்பான எண்கள். கொஞ்சம் கெத்தாகச் சுற்றும் எண்கள். யாரிடமும் எளிதாகப் பேசாது, ஆனால் யாராவது அழைத்து பேசினால் பேசும். பகு எண்கள் எப்போதும் கலகலப்பாக இருக்கும். சுற்றி நண்பர்கள் இருப்பார்கள். நெருங்கின உறவுக்கார எண்களும் இருக்கும். சத்தமாகச் சிரித்துக்கொண்டே இருக்கும். சாலையில் போய்வரும் குண்டுகளிடம் பேச்சுக்கொடுத்து ஒரே சத்தமாக இருக்கும். பக்கத்தில் எங்காவது போகவேண்டும் என்றால் குண்டுகள் உருண்டபடியே பயணிப்பார்கள். இன்னும் கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் என்றால் மூன்று சக்கர ஆட்டோக்களில் செல்வார்கள். ஓட்டுநர் என யாரும் இருக்க மாட்டார்கள். தானியங்கி ஆட்டோக்கள். ஒரு நாள் அந்த சம்பவம் நடந்தது. ஆட்டோவில் எண் 7ம், எண் 20ம் பயணித்தனர். ஏறியதில் இருந்து 20ஆம் எண் பேச்சை நிறுத்தவே இல்லை. கேட்ட கேள்விக்கு மட்டும் 7ஆம் எண் கோலி பதில் சொன்னது. என்ன சாப்பிட்டீங்க, எங்க படிக்கறீங்க, வெயில் அதிகமா இருக்கு, தண்ணீர் குடிக்கறீங்களான்னு நச நசன்னு பேசிக்கொண்டே வந்தது. என்னுடைய வகுத்திகள் 2,4,5,10 என்று பெருமையாக சொன்னது 20 எண் கொண்ட கோலிக்குண்டு. நாங்க எல்லாம் கெத்தான பகா எண்கள் என்று சொன்னது 7ஆம் எண் கொண்ட கோலிக்குண்டு. சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மூன்று பாலங்களைக் கடந்தது ஆட்டோ. ஆட்டோவில் இருந்த சிகப்பு பொத்தானை அழுத்தியது 20. அதை எங்கே அழுத்தினாலும் அங்கே வண்டி நிற்கும். வண்டி நின்றது. “எண் 7, கொஞ்சம் இறங்கினா நான் கீழ இறங்கிப்பேன்” என்றது. 7 நகரவே இல்லை. அப்படியே போங்க என்று சொன்னது. 7ஆம் எண் கோலிக்குண்டினைத் தாண்டினால்தான் 20ஆம் எண் கோலிக்குண்டால் வெளியே வர முடியும். தாவ முயன்றது. தொம்மென 7ஆம் எண் கோலிக்குண்டின்மீது விழுந்தது 20. 7க்கு செம வலி. வலி பொறுக்க முடியாமல் திட்ட ஆரம்பித்தது. இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கித் திட்ட ஆரம்பித்தனர். “கொஞ்சம் இறங்கி ஏறி இருந்தால் சிக்கலே இல்லாமல் போயிருக்கும்” - 20 “இவ்ளோ பெருசா இருந்தா எப்படி நடமாட” - 7 அப்படியே வாய்தகராறு முத்தியது. 20ன் பக்கம் பகு எண்கள் சேர்ந்துகொண்டன. 7ன் பக்கம் பகா எண்கள் சேர்ந்து கொண்டன. 20க்கும் 7க்குமான சண்டை இப்போது பகு எண்ணுக்கும் பகா எண்ணுக்குமான சண்டையாக மாறிவிட்டது. “பகா எண்களால் எல்லோருடனும் சேர்ந்த வாழவே முடியல” “பகு எண்கள் எல்லா இடத்திலும் இடத்தை நிரப்பி அமைதியே கெடுது” மாறி மாறி திட்டிக்கொண்டனர். எல்லா கோலிகுண்டுகளும் திரண்ட காட்சி பயங்கரமாக இருந்தது. அது நடந்தபின்னர் அந்த உலகமே அமைதியாக இருந்தது. பேச்சுவார்த்தைகள், கேளிக்கை கொண்டாட்டம் என எதுவுமே நடைபெறவில்லை. எப்போதும் ஒரு போர் சூழல் நிலவியது. வானத்தில் இருந்து குண்டு விழும் மைதானத்தில் அடிக்கடி எல்லோரும் சேர்வார்கள். புதிய கோலிக்குண்டு விழுந்தால் அது பகு எண்ணா, பகா எண்ணா எனக் காண்பதற்காக. அணிக்கு ஆள் சேர்க்கின்றார்களாம். மாதத்தின் முதல் தேதி அன்று. எல்லோரும் மைதானத்தில் கூடி இருந்தனர். இடப்பக்கம் ஒரு அணியினர், வலப்பக்கம் ஒரு அணியினர். இன்று நிச்சயம் புதிய கோலிக்குண்டு விழும். வானத்தையே ஆவென பார்த்துக்கொண்டு இருந்தனர். மிகப்பெரிய கோலிக்குண்டு வானில் இருந்து விழுந்து கொண்டிருந்தது. பெருசு என்றால் மிகப்பெருசு. எல்லோரும் தூர ஓடினார்கள். எந்த அதிர்வையும் அது ஏற்படுத்தவில்லை. ஒரு தும்பி எப்படி பூ மீது அமருமோ அப்படி இலகுவாகத் தரையில் இறங்கியது. “ஏ.. அங்க பாருங்க ஒன்றாம் எண் கோலிக்குண்டு” ஆமாம். இதுவரையில் யாருமே ஒன்றாம் எண் கோலிக்குண்டினைப் பார்த்ததே இல்லை. ஒரு சின்ன கோலிக்குண்டு “இது பகா எண் அணியில் சேருமா, பகு எண் அணியில் சேருமா?” என்று கேட்டது. ஒன்று.. ஒன்று.. ஒன்று என அந்த உலகமே ஆரவாரத்தில் இருந்தது. அமைதி உடைந்திருந்தது. ஒன்றாம் எண் கோலிக்குண்டு தன் பையில் இருந்து ஒரு சொம்பினை எடுத்து வெளியே வைத்தது. “ஏ பஞ்சாயத்து செய்ய வந்திருக்குடா” என்று பேசிக்கொண்டனர். “வணக்கம் எண் கோலிக்களே, உங்களுக்குள் பிரச்சனை என அறிந்தோம். பிரச்சனையைத் தீர்க்கவே வந்துள்ளேன். யாராவது இரண்டு பக்க பிராதையும் சொல்லுங்க” என்றது ஒன்றாம் கோலிக்குண்டு. பகா எண்களை தலைமை தாங்கிய கோலிகுண்டு ”எங்களுக்குன்னு தனி நாடு பிரிச்சு கொடுங்க” என்றது. பகு எண் தலைமையும் ஆமாம் ஆமாம் என்றது. ஒன்றாம் எண் புன்னகைத்தது. “நாம எல்லோரும் எண்கள். பகா எண்கள் இல்லை என்றால் எப்படிப் பகு எண்கள் இருக்க முடியும். 20ன் வகுத்திகள் 2,4,5,10. இதில் எத்தனை பகா எண்கள் இருக்கு கவனிங்க. 4ன் வகுத்திகளும் 2,2 அவையும் பகா எண்களே. 10ன் வகுத்திகள் 2,5. இவை ரெண்டு பகா எண்களே. எல்லாம் சேர்த்தவைகளே எண்களின் உலகம். எல்லோரும் சேர்ந்து உலவும்போது நமக்கு மகிழ்ச்சி. இந்த எண் உலகம் எல்லோருக்குமானது, யாரும் உயர்வும் அல்ல, யாரும் தாழ்வும் அல்ல. இயங்க முடியாத கோலிகுண்டுகளுக்கு வலுவான கோலிகுண்டுகள் தானே கைக்கொடுக்க வேண்டும்? அது நம்ம கடமை அல்லவா?” ஒன்றாம் எண் பேசி முடித்ததும் அது சொல்வது சரி என்று ஒப்புக்கொண்டனர். மீண்டும் எல்லோரும் ஒன்றாக இணைந்தனர். ஒன்றாகச் சேர்ந்து பாடல் ஒன்றும் பாடினார்கள். என்ன பாட்டாக இருக்கும்?

  • யுனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் – 4

    குழந்தைகள் தமது உரிமைகளைப் பற்றியும்,அவற்றை எவ்வாறு வென்றெடுப்பது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் எந்த ஒரு விஷயம் பற்றியும் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்? தமது பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், தாம் வாழ்கிற சமூகங்களின் மனிதர்கள் ஆகியோரிடமிருந்தும், பத்திரிகை –தொலைக்காட்சி - யூடியூப் உள்ளிட்ட நவீன மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமே அறிந்து கொள்கிறார்கள். இந்த அறிதல் செயல்பாட்டுக்குக் குடும்பங்களும்,சமூகங்களும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு குழந்தைகளுக்குக் கற்பிக்க அரசாங்கங்கள் அவர்களுக்கு அனுமதியும், ஆதரவும் அளிப்பது அவற்றின் கடமை என யுனிசெஃப் அமைப்பின் பிரகடனத்தின் ஐந்தாவது விதி சொல்கிறது. ஒரு குடும்பமோ,சமூகமோ தமது குழந்தைகளுக்கு எதையேனும் கற்பிக்க விரும்பினால் அவர்கள் பாட்டுக்கு அதைச்செய்து கொள்ள முடியும்தானே? இதில் அரசாங்கம் அனுமதிக்க என்ன இருக்கிறது என்ற கேள்வி, இதைப் படிக்கும் பலரின் மனங்களிலும் எழக்கூடும். ஓர் எல்லை வரை அரசாங்கத்துக்கு ஒரு பங்கும் கிடையாது என நாம் வாதத்துக்கு ஒப்புக் கொள்வோம்.  ஆனால், குடும்பம், இன்றைய நவீன சூழலில் கூட, தமது குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு இப்படியான கற்பித்தலைச் செய்கிறதா? சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கி விட்ட இளம் பெண் ரிதன்யாவினுடைய மரணம்,அதற்குக் கூறப்படும் காரணங்கள், பரிதாபமாக அந்தப்பெண் கண்ணீரும் கம்பலையுமாகத் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றிக் கதறி அழுது கொண்டே விவரித்த சம்பவங்கள், இறுதியில் அவருடைய தற்கொலை – இவையெல்லாம் எதைக்காட்டுகின்றன? அந்தப் பெண்ணின் பெற்றோர் அவருக்குக் கோடி கோடியாகப் பணம் செலவழித்து நகைகளையும்,ஆடை ஆபரணங்களையும், இன்ன பிறவற்றையும்தாம் கொட்டிக் கொடுத்திருந்தார்களே தவிர, ஒரு பெண் என்ற முறையில் அவளுக்குக் குடும்பத்திலும்,சமூகத்திலும் என்னென்ன உரிமைகள் இருக்கின்றன, அவை கிடைக்காமற் போனாலோ,மறுக்கப்பட்டாலோ, யாரேனும் அவரைக் கொடுமைப்படுத்தினாலோ அதை எதிர்த்து என்ன செய்வது,எப்படி அதிலிருந்து மீள்வது என்பதைப் பற்றி எல்லாம் ஒரே ஓர் அணுவளவும் சொல்லித்தரவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? அந்தப் பெண்ணின் பெற்றோர் இப்போது கதறிக் கதறி அழுது புலம்புவதைப் பார்க்கையில், நமக்கு ஒரு புறம் பரிதாப உணர்வும்,அனுதாபமும் எழுந்தாலும் நிதானமாக யோசிக்கும் போது கோபமும்,வெறுப்பும்தானே தோன்றுகின்றன? அவர்களுக்கே இந்த உரிமைகள்,உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் ஒரு துளியும் அறிவில்லை அல்லது இருந்தும்,அவற்றில் ஒரே ஓர் அணுவளவைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதுதானே உண்மை?    திருமணமாகிக் கணவன் வீட்டிற்குப் போய் இருபதாவது நாளிலேயே அந்தப் பெண் பெற்றோரிடம் வந்து கணவன் வீட்டாரிடம் தான் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றியெல்லாம் கதறியழுது சொல்லியிருக்கிறார். ஆனால்,அவர்கள் மட்டுமல்லர், அந்தப்பெண் யாரிடம் எல்லாம் சொன்னாரோ அவர்களில் ஒருவர் கூட, அந்தப்பெண்ணுக்குத் துணிவூட்டி,”உனக்கு இழைக் கப்படுபவை குற்றங்கள். இவற்றை நீ அனுமதிக்கக் கூடாது. எதிர்த்துப் போராட உனக்கு உரிமைகள் உண்டு” என்ற உண்மையைக் கூறவில்லை. காரணம், இவையெல்லாம் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்னும் உணர்வு யாருக்கும் இருந்திருக்கவில்லை; அல்லது நமக்கு எதற்கு வம்பு என்னும் பொதுப் புத்தி!  பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் இந்த உண்மையை உணர்த்தி, பாதிக்கப்படுவோரின் பக்கம் நிற்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைத்தான் யுனிசெஃப் தனது பிரகடனத்தில் வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகளுக்கு,சிறு வயதிலிருந்தே அவர்களின் உரிமைகளைக் கற்றுத்தர வேண்டும். அப்படிக் கற்றுத்தரும் போதுதான்,அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது, தமது உரிமைகளை ஆகச்சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்கிறது யுனிசெஃப். அவர்கள் பெரியவர்களாக வளர வளர, நாம் நேரடியாக அவர்களுக்கு வழி காட்ட வேண்டிய தேவை குறையும் என்பது அந்தப் பிரகடன விதியின் உள்ளார்ந்த விருப்பம். ஏனெனில், எவ்வளவிற்குக் குழந்தைகள் வளர்கிறார் களோ, அந்த அளவுக்கு அவர்களுக்குக் குறைந்த அளவுக்கே வழிகாட்டல் தேவைப்படும் என்கிறது.   அரசாங்க அமைப்புகளுக்கும் இந்த மனித உரிமைகள் பற்றிய கல்வியும், விழிப்புணர்வும் அவசியம் என்பது, இரு தினங்களுக்கு முன் நடந்த அஜித் குமாரின் மரணம், - உண்மையில்,அது அரசே செய்த கொலை எனலாம் – தமிழ்நாட்டு மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது. மடப்புரம் கோயிலில் நடந்த ஒரு திருட்டைப் பற்றி விசாரிக்க அங்கு போன போலீசார், அங்கே தற்காலிகப் பணியாளராகக் காவல்காரர் பொறுப்பில் இருந்த அஜித் குமாரை ‘விசாரணை’ செய்திருக்கிறார்கள். அந்த விசாரணையின் முடிவில் அவரைக் கொலை செய்து தூக்கிக் கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள். திரைப்படங்கள்,நாவல்களில் பார்க்கும்,படிக்கும் போதே இத்தகைய சம்பவங்கள் நம்மைப் பதற வைப்பவை. நிஜத்தில் நடக்கும் போது, என்றைக்குத்தான் இந்தக் காவல் துறையினருக்கு மனிதத்தன்மை பற்றிய அறிவு வரும் என விரக்தியாக இருக்கிறது. இம்மாதிரி ஏதேனும் நடக்கும் போது, ஒரு வாரத்திற்கு எல்லாம் அமளி துமளிப்படும்! கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப்பணிக்கான உத்தரவு, வீட்டுமனைப் பட்டா, ஓர் அரசியல் கட்சியின் சார்பில் ஐந்து இலட்சம் பணம்- எல்லாம் இன்று அஜித்குமாரின் இல்லம் போய்ச்சேர்ந்திருக்கின்றன! போலீஸ் உயர் அதிகாரிகள் போட்டி போட்டுக்கொண்டு “இப்படியெல்லாம் காவல் நிலையங்களில் ‘விசாரணை’கள் நடக்கவே கூடாது; இம்மாதிரித்  ‘தனி’ப்படை களை உடனடியாகக் கலைக்க வேண்டும்” என்றெல்லாம் உத்தரவுக்கு மேல் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்!  நல்லது; இந்த விழிப்புணர்வும்,எச்சரிக்கையுணர்வும் நிரந்தரமாகட்டும்! தனி மனிதர்களும்,குடும்பங்களும்,ஒட்டுமொத்தச் சமூகமும் நமது குழந்தைகளுக்கு மனித உரிமைகள் பற்றி, பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுத்தரட்டும்! அரசாங்கங்கள் அந்தக் கற்றல் செயல்பாடு கள் எவ்விதத்திலும் தடைப்படாமல் தொடர்வதை உறுதி செய்யட்டும்!

  • உரையாடல்களே பாடங்களாக…

    கதை, பாடல், உரைநடை... என இயங்கிவரும் இலக்கியத்தின் ஒரு பகுதியாக உரையாடல்களும் உள்ளன. இலக்கியத்தில் உரையாடலை மையப்படுத்தி தமிழில் நூல்கள் வெளிவந்துள்ள அனுபவம் நமக்கு உண்டு. உரையைவிட உரையாடல் முக்கியத்துவம் பெறும் காலம் இது. ஒற்றைக்கருத்தை உடைக்க, புரிதலை வலுப்படுத்த, நவீன சிந்தனைக்கான களமாக, திறந்த மனதோடு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள... என நேரடியான உரையாடல் மூலம் கருத்தாக்கங்களை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் காலம் இது. ஆரம்பக் கல்வியில் உரையாடல் வடிவத்தில் பல்வேறு பொருண்மைகளை மையப்படுத்திய பாடங்கள் இடம்பெற்றுள்ளன.  ஒவ்வொரு வகுப்பிற்கும் நான்கு பாடங்கள்வரை அவர்களது நிலைக்கேற்ப இடம்பெற்றுள்ளன. -  பாடமாக உள்ள உரையாடலை குழுவாக வாசித்தல் - அதையே நாடக வடிவில் பேசிக் காட்டுதல் - ஏதேனும்  தலைப்பின் கீழ் அல்லது குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இயல்பாக உரையாடல் நிகழ்த்துதல் - சில உரையாடல்களை எழுத்தாக்குதல்... என்பதாக பாடங்கள் மொழியையும் மொழித்திறனையும், வாழ்க்கை அனுபவங்களை இணைத்துக்கொண்ட நிகழ்வுகளையும் முன்னெடுத்து செல்கின்றன. பாடத்தலைப்புகள்: நூலகம்: மூன்றாம் வகுப்புப் பாடத்தில் மாமாவும் தேனருவியும் நூலகத்திற்குச் செல்லுதல். கணினி உலகம் : மகிழினியும் மதியும் உரையாடுவது. கரிகாலன் கட்டிய கல்லணை: விடுமுறையில் அத்தையும் மாமாவும் கனிமொழியையும் மணிமொழியையும் கல்லணைக்கு அழைத்துச் சென்று கரிகாலன் கட்டிய கல்லணையைச் சுற்றிப் பார்ப்பது போன்ற பாடம். பசுவுக்குக் கிடைத்த நீதி : மனுநீதிச்சோழனின் அரண்மனை உரையாடல். விதைத் திருவிழா : ஆசிரியரும் மாணவர்களும் உரையாடுதல். தப்பிப் பிழைத்த மா ன்:  காகமும் மானும் பேசுவது. எழில் கொஞ்சும் அரு வி: சித்தியும் சித்தப்பாவும் அங்கவை சங்கவையுடன் ஒகேனக்கல் அருவிக்குப் போய்வந்த அனுபவம். நாயும் ஓநாயும் : தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் உரையாடுவது உயர்திணையும் அஃறிணையும்  - அப்பாவும் எழிலியும்  உரையாடுவது பாடத்தின் உரையாடல்கள்: புதுவை வளர்த்த தமிழ் யாழினி : அப்பா, பாரதிதாசனின் பாடலொன்றை சொல்லுங்களேன். அப்பா : சொல்கிறேன், யாழினி. “ தமிழுக்கும் அமுதென்று பேர்…"இது மட்டுமா? இயற்கை, பெண் விடுதலை போன்ற பல கருத்துக்களை முன்வைத்து நிறைய பாடல்களை அவர் பாடியுள்ளார்.  மாட்டு வண்டியிலே தாத்தா: நல்லா சிந்தித்துச் சொல்லுங்க. ஓரெழுத்து உறுப்பு எது? இளமதி நீ சொல்லு. இளமதி: ‘கை’தாத்தா தாத்தா: கொஞ்சமா இருந்தா சிலன்னு சொல்வோம். நிறைய இருந்தா என்னன்னு சொல்வோம். இளமதி: ‘பல’தாத்தா...   இலக்கணக் கற்றலுக்கான உரையாடல்கள்:   கற்கண்டு ஐந்தாம் வகுப்புப் பாடத்தில் கற்கண்டு என்ற தலைப்பில் இலக்கணத்தை மையப்படுத்தி, உரையாடல் வடிவில் சிறு பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி, இணைப்புச் சொற்கள், மயங்கொலிப்பிழை, மூவிடப் பெயர்கள்... போன்ற மொழிக்கூறுகளைப் புரிந்துகொள்ள அவை பேருதவியாக உள்ளன.      மயங்கொலிப்பிழை: மலர்: என்னப்பா இது? வளர்: நீதானே தவளையைக் கொண்டுவரச் சொன்னாய்? மலர்: என்ன? நான் தண்ணீர் பிடிக்கத் தவலை கேட்டால், நீ தண்ணீரில் வாழும் தவளையைக் கொண்டு வந்துள்ளாயே!    மாற்றி யோசிக்க வேண்டியவை: பாடப்பொருளை எளிதாகப் புரிந்துகொள்வதற்காக உரையாடல் வடிவம் இடம்பெற்றுள்ளது. ஆனால், கனமான பாடப்பொருளும் அதன் எழுத்துத் தமிழ்மொழிநடையும் குழந்தைகளைத் திக்குமுக்காடச் செய்வதாகவே உணரவைக்கிறது. எளிய வார்த்தைகள், வாக்கியங்கள், தெரிந்த வார்த்தைகள் என இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாணவர்களால், அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் புழங்கும் வார்த்தைகளின் மூலம் மொழியை எளிதாக உள்வாங்கிக்கொள்ளமுடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டியுள்ளது. உரையாடல் பாடங்கள் அனைத்துமே ஆணை அறிவாளியாக, பதிலளிப்பவனாக மட்டுமே காட்டியுள்ளன. தாத்தா, மாமா, சித்தப்பா, ஆசிரியர் என எல்லோருமே ஆண்களாக உள்ளனர். கல்லணை பாடத்தில் மாமாவின் மனைவியாக அத்தையும் அருவிக்குப் போகலாமா பாடத்தில் சித்தப்பாவின் மனைவியாக சித்தியும் இடம்பெறுகின்றனர். துடுக்காக பதிலளிக்கும் பெண் குழந்தைகளைப் பெரும்பாலும் எல்லா பாடங்களிலும் பார்க்க முடிகிறது.

  • மதத்தைத் துறக்கலாமா? - அஜேந்தர் சிங்

    தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ இன்று எனக்கு நாற்பது வயது. கோடையில் ஒரு நாள் நான் பாட்னா சென்றேன். பாட்னா எனக்கு முற்றிலும் புதிய நகரம். அங்கே எனக்கு அறிமுகமானவர்கள் யாரும் இல்லை. நான் நினைத்ததைச் சாதிக்க ஏற்ற ஒரு சரியான இடம் எனத் தீர்மானித்தேன். கடைவீதியில் உள்ள விளம்பரப் பலகைகளை வாசித்தபடி நடந்தேன். இறுதியாக நான் தேடிவந்த இடத்தைக் கண்டுபிடித்தேன். அது ஒரு முடி திருத்தம் செய்யும் கடை. முடி திருத்தம் செய்ய எனக்குத் தடை இருந்தது. நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக அந்தத் தடையை மீறி நான் அங்கு சென்றேன். நான் ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவன். நீளமான தலைமுடி, அடர்ந்து வளர்ந்த தாடி, அடர்த்தியான மீசை இவை அனைத்தும் எனது அடையாளம். எனக்கு எல்லோரையும் போல இரண்டு மனங்கள் இருந்தன. ஒரு மனம் முடி திருத்தம் செய்யச் சொன்னது. மற்றொரு மனம் வேண்டாம் என்று தடுத்தது. இந்தச் சோதனையும், உள் போராட்டமும் நீண்ட நாட்களாக என்னைத் துரத்தின. சில சீக்கிய நண்பர்கள் சிறு வயதிலேயே முடி திருத்திக் கொண்டனர். என் நெருங்கிய நண்பன் பன்னிரண்டு வயதில், தடையை மீறி முடியைத் திருத்தி தன்னை அழகு படுத்திக் கொண்டான். அவனது பெற்றோர் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சிறு வயதில் எப்போதும் எனக்கு அவ்வாறு செய்ய ஆசை இல்லை. எனது அம்மா சீக்கிய மதத்தை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுபவர். எனக்கு அனைத்து வேதங்களையும் கற்றுக் கொடுத்தார். நானும் அவர் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்தேன். ஒவ்வொரு வாரமும் குருத்வாரா சென்றேன். கீர்த்தனை செய்தேன். அர்தாஸ் படித்தேன். சிறு வயதிலேயே தஸ்தார் (தலைப்பாகை) அணிந்தேன். நான் இளமையாக இருந்தபோது, ​​தெருக்களில் மக்கள் "ஓய் சர்தார்! தேரே பரா பஜ் கயே" அல்லது "ஜூடி" என்று கூச்சலிட்டதை நினைத்துப் பார்க்கிறேன். டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்தபோது அம்மா கவனமாக எனது தோற்றத்தை மாற்றினார். நான் ஒரு சீக்கியப் பையனைப் போலத் தெரியக்கூடாது என்பதற்காக, ஒரு சிறுமியைப் போல குதிரைவால் சடை போட்டுவிட்டார். கலவரத்தில் எங்கள் வீடு எரிந்து சாம்பலானது. பிறகு நாங்கள் அகதிகளைப் போல வீடு வீடாக அலைந்தோம். பயங்கரவாதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயந்து ஒதுங்கும் நாங்கள், அதற்கான விலையைக் கொடுத்தோம். அன்று ஒரு சம்பவம் நடந்தது. பஞ்சாப்பில் காவல்துறையினரால் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டது. அந்தப் பேருந்தில் இருந்த ஒரே சீக்கியன் நான்தான். பேருந்திலிருந்து இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எனது உடைமைகள் அனைத்தும் இரக்கமின்றி வெளியே சாலையில் வீசப்பட்டன. பேருந்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். என்னிடம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கிடைக்காதபோது, ​​சிதறிக்கிடந்தவற்றை அள்ளி எடுக்க நான் தனித்து விடப்பட்டேன். எனக்கு வெட்கம் பிடுங்கியது. மறுபடியும் பேருந்து கிளம்பியதும், பயணிகள் என்னைக் குற்றவாளியைப் போலப் பார்த்தார்கள். அந்த நேரத்தில், இறங்கிச் சென்று எங்காவது மறைந்து போக வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தன. ஆனாலும் நான் தலைப்பாகையும், தாடியும் வைத்த சீக்கியனாகவே இருந்தேன். அப்படியானால், எனது அடையாளத்தை அழிக்க நாற்பது வயதில் நான் ஏன் முடிதிருத்தும் கடையில் காத்திருந்தேன்? இந்த மாற்றம் படிப்படியாக வந்தது. சீக்கிய மதத்தில் சிலை வழிபாடு இல்லை என்று குழந்தையாக இருந்தபோது எனக்குச் சொல்லப்பட்டது. கோயில்களிலும், தேவாலயங்களிலும் இருக்கும் சிலைகளைப் பற்றி எதிர்மறையான விஷயங்கள் கூறப்பட்டன. இந்த வடிவங்களில் கடவுளை நாம் ஒருபோதும் காண முடியாது என்றும் கூறப்பட்டது. குருத்வாராவுக்குச் சென்றபோது, ​​சீக்கியர்களின் கடைசி குருவாகக் கருதப்படும் சீக்கியப் புனித நூல், ஒரு தங்க இருக்கையில் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அது அழகான பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. ஒருவர், புனித நூலை பல்லக்கில் சுமந்து சென்றார். சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத ஒரு மதம், சொந்தப் புனித நூலுக்கு ஒரு சிலையின் வடிவத்தை அளித்தது அப்போது எனக்குப் புரிந்தது. புனித நூலின் குறிப்புகள் பற்றி விவாதித்த யாரையும் நான் பார்த்ததில்லை. உண்மையில், பெரும்பாலான சீக்கியர்கள் அதைப் படித்ததில்லை. வழிபாட்டுச் செயல்முறை, மதத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. எனக்கும் மனதளவில் மதம் தொடர்பான பல கேள்விகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு சீக்கிய குருவும், எனது கேள்விகளுக்கு இதுவரை பதிலளித்ததில்லை. நான் அதைப் பற்றித் தேடினேன். பல்வேறு புத்தகங்களைப் படித்தேன். அறியாமை எனக்குக் கசப்பாக இருந்தது. நீண்ட யோசனையில் இருந்தேன். நாவிதர், என்னை வாடிக்கையாளர் நாற்காலியில் உட்காரச் சொன்னார். ஆனால் அவர் சற்று குழப்பமடைந்ததாகத் தோன்றியது. நான் போலி நம்பிக்கையுடன் முன்னோக்கி நடந்து நாற்காலியில் அமர்ந்தேன். என் நீண்ட முடியை வெட்டச் சொன்னேன். எனக்கு எந்த ஸ்டைல் ​​வேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியாது என்றேன். "நீங்கள் விரும்பும் எந்த வடிவமும் எனக்குப் பொருத்தமானது" என்றேன். சீக்கிய மதத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றை ஒருவர் செய்தால், தண்டனையாக குருத்வாராவிற்கு வரும் எல்லோரது செருப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று யாரோ சொன்னது நினைவில் இருந்தது. அப்போது அவர் பாவத்திலிருந்து விடுபடுவார். மீண்டும் மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார். எனவே முடி வெட்டிய பிறகு, நான் தவறு செய்ததாக உணர்ந்து, என் மதத்திற்குத் திரும்ப விரும்பினால், எனது மதத் தலைவர் தீர்மானிக்கிற தண்டனையை நான் அனுபவிக்க வேண்டும். முடி திருத்துபவர் சீப்பையும், கத்தரிக்கோலையும் கையில் எடுத்து, என் தலைமுடியைத் தொட அனுமதி கேட்டார். ஏனென்றால் வேறு யாரும் சீக்கியரின் தலைமுடியைத் தொடக்கூடாது. நான் 'ஆம்' என்றேன். முதலில், ஒரு கொத்து முடி கீழே விழுந்தது. நான் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அதுதான் நான் கடைசியாக என்னை இந்த வடிவத்தில் பார்த்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. நாற்காலியைச் சுற்றி நீண்ட முடிகள் சிதறிக்கிடந்தன. தலைபாரம் குறைந்ததாக இருந்தது. நான் இப்படியொரு வடிவம் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. தாடியை வெட்டும்போது, ​​முடிதிருத்துபவர், “இன்னும் கொஞ்சம் வெட்ட வேண்டுமா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். சலூனில் இருந்த மற்றவர்கள் எல்லோரும், தங்கள் வேலையை விட்டுவிட்டு எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். முழு தாடியும் நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக என் முகத்தைப் பார்த்தபோது, ​​என் கன்னங்கள் தெரிந்தன. என்னை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. நான் என் வயதை விட இளமையாகத் தெரிந்தேன். முடிதிருத்துபவரின் வேலை முடிந்தது. நான் அவருக்கு நன்றி சொல்லி, அங்கிருந்த எல்லோருக்கும் வணக்கம் வைத்தேன். என்னை அடையாளம் காண முடியவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள். நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். முன்கதவைத் திறந்து வீட்டினுள் செல்வதற்கு முன்பு, மோத்தி என்னை அடையாளம் காண்பாளா என்று பயந்தேன். ஆனால் நான் கதவைத் திறந்ததும் என்னை நோக்கிப் பாய்ந்தாள். கட்டி அணைத்தாள். இந்த உலகில், யாரும் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், என் செல்லப் பிராணி மோத்தி என்னுடன் இருக்கிறாள். அதன் நட்பு நீடிக்கும் வரை யாருடைய விமர்சனங்களையும், தீர்ப்பையும் என்னால் எதிர்கொள்ள முடியும். முன்பைவிட மோத்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஏனென்றால் அவளால் என் முடி இல்லாத கன்னங்களை எளிதாக நக்க முடிந்தது.

  • ஏன் பிறந்தோம்? - 4 சிந்தனை விதை எப்படி உருவானது?

    உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்துக்கொண்டும், இயற்கையின் மீது மிகக் குறைந்த அளவில் தாக்கம் செலுத்தியும் உயிர் வாழ்ந்தன, வாழ்ந்துவருகின்றன. அவை இயற்கையுடன் இணைந்து, இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்துவருகின்றன. அந்த உயிரினங்களுக்கு வறட்சியோ, வெள்ளமோ, புயலோ, மழையோ, இயற்கைப் பேரிடரோ என எதுவாக இருந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டன. அவற்றைக் குறித்து எந்தப் புகாரும் அவற்றுக்கு இல்லை. ஏன் இப்படி நடக்கிறது? தெரியாது. இதை மாற்ற முடியுமா? தெரியாது. இந்தப் பேரிடரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா? தெரியாது. ஏனெனில், அவற்றுக்கு இயற்கையையும் தங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. இயற்கையின் செயல்களுக்குக் காரணகாரியம் தெரியாது. அதைப் பற்றிச் சிந்திக்கும் அளவுக்கு அவற்றின் மூளை வளர்ச்சியடையவில்லை. பரிணாமக் கோட்பாட்டின்படி இயற்கையான வாழும்நிலையில் மாற்றம் இல்லாதபோது, எந்த உயிரும் மாற்றமடைவதில்லை. புரிகிறதா? வாழும்நிலை என்றால் உணவு, இனப்பெருக்கம், பாதுகாப்பு, சூழல் ஆகியவற்றில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழாதபோது, அந்த உயிரினங்களும் தலைகீழாக மாறவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.  எனவேதான், ஒரு புலி புலியாகவே இப்போதும் நீடிக்கிறது. அல்லது கரப்பான்பூச்சி இன்னமும் கரப்பான்பூச்சியாகவேதான் இப்போதும் இருக்கிறது. இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அதாவது  வாழும்நிலை என்பதே ஒவ்வொரு உயிரின் இருப்பைத் தீர்மானிக்கிறது. வாழும்நிலைதான் அந்த உயிரின் உணர்வையும் அறிவையும் முடிவு செய்கிறது. வாழும்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உயிர்களின் வாழ்க்கையும் கேள்விக்குள்ளாகிறது. ஒரு புலி காட்டில் வாழ்கிறது. ஏனெனில் காட்டில்தான் அதற்கான உணவு கிடைக்கிறது. இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. பாதுகாப்பு இருக்கிறது.  சுதந்திரமாக இருக்க முடிகிறது. அதனால் புலி காட்டில் வாழ்கிறது. சரியா? ஆனால், காடு அழியும்போது என்ன நடக்கிறது? உணவு கிடைக்காது,  இனப்பெருக்கம் செய்ய முடியாது., பாதுகாப்பு இல்லை. புலி என்கிற இனம் அந்தக் காட்டில் அழிந்துவிடும். நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? புலி ஏன் மரங்களை நட்டு காட்டை உருவாக்கக் கூடாது? நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது இல்லையா? கார்ட்டூன் படங்களிலோ, அனிமேஷன் படங்களிலோ அப்படி நடக்கலாம். உண்மையில் புலிக்கு அப்படி எல்லாம் செய்யமுடியும் என்று கனவில் கூடத் தெரியாது. வாழ்வதற்குச் சாதகமான சூழல் இருந்தால் வாழும். இல்லையென்றால் அழிந்துவிடும். இயற்கையை மாற்ற முடியும், கட்டுப்படுத்த முடியும், திருத்த முடியும் என்று அதற்குத் தெரியாது. ஆனால், யானையும் வண்ணத்துப்பூச்சியும் காட்டை உருவாக்குகின்றனவே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? உண்மைதான் யானையும் வண்ணத்துப்பூச்சியும் மட்டுமல்ல, வேறு பல உயிரினங்களும் காட்டை உருவாக்குகின்றன. ஆனால், யானை தன்னுடைய சாணத்தின் வழியே விதைகளையும் கொட்டைகளையும் வெளியேற்றும்போது நான் மரம் நடுகிறேன். நான் காட்டை உருவாக்குகிறேன் என்று யோசித்துச் செய்கிறதா? அல்லது வண்ணத்துப்பூச்சி மகரந்தச் சேர்க்கை மூலம் மரங்களின், செடிகளின் இனப்பெருக்கத்துக்கு நான் உதவுகிறேன் என்று தெரிந்து, ஒவ்வொரு பூவாகப் போய் உட்காருகிறதா? இல்லையே. யானைக்கோ வண்ணத்துப்பூச்சிக்கோ தாம் செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்று தெரியாது. தங்களுடைய செயலால் காடு உருவாகும் என்று சுத்தமாகத் தெரியாது. அவற்றின் உயிரியல் இயல்பும், உடலியல் செயல்பாடுகளும் இயற்கையாக நடப்பவை. அப்படி என்றால்?  அவை சிந்தித்துச் செயல்படவில்லை. மனித இனம் மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிறது. மனிதர்களும் திடீரென சிந்திக்கவில்லை. மற்ற விலங்குகளைப் போலவே இயற்கையோடு இயற்கையாக மனிதர்களும் கலந்தே இருந்தார்கள். எப்படி மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்? எப்போது அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்? மனிதர்களிடம் சிந்தனைவிதையை ஊன்றியது எது? என்கிற கேள்விகள் வருகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். சிந்தனை என்றால் அது மூளையின் செயல்பாடு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், மனித இனத்தின் முதல் சிந்தனை தோன்றியது எங்கே தெரியுமா? கை விரல்களில் இருந்துதான். கேளுங்கள்! எப்படி? ( தத்துவம் அறிவோம் ) - ஆதி

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 3

    1.நடந்தா உடம்பு குறையும்னு சொல்றாங்க. ஆனால், யானைக்கு உடம்பு குறையவேயில்லை, ஏன்? (த.சி.பத்ரிபிரசாத், ஐந்தாம் வகுப்பு, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்.) நல்லா யோசிச்சிருக்கீங்க பத்ரிபிரசாத். உடல் எடையைக் குறைக்க எல்லாரும் நடக்கச் சொல்கிறார்கள். அதேநேரம் காட்டுயிர்களில் அதிகம் நடப்பது யானை. அதன் உடல் எடை குறையவில்லையே. இந்த இரண்டு விஷயத்தையும் இணைச்சு யோசிச்சு கேள்வி கேட்டதற்கு நன்றி. நம் நாட்டில் வாழும் காட்டு யானை ஒன்றின் சராசரி எடை 4,000 கிலோவுக்கு மேல். ஒரு நாளைக்கு 150-200 கிலோ இலை, தழைகளை அது சாப்பிடுகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 2 கி.மீ.இல் தொடங்கி 7 முதல் 10 கி.மீ.வரை யானைகள் நடக்கின்றன. இவ்வளவும் நடந்துசெல்வது எதற்காக? இரை தேடத்தான். ஒரு நாளின் முக்கால் பங்கு நேரத்தில் இரை தேடுவதற்காக யானைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக்கொள்வோம். நாமெல்லாம் குழந்தையாகப் பிறக்கிறோம். அதிலிருந்து நம் உடல் எடை ஏறிக்கொண்டேதான் செல்கிறது. பதின்பருவத்தைத் தாண்டி வளர்ந்தவுடன் நம் உடல் எடை கிட்டத்தட்ட நிலையாகிவிடுகிறது. பிறகு வயது முதிரும்போது குறையத் தொடங்குகிறது.  இதேபோலத்தான் யானைகளுக்கும் நடைபெறும். யானை குட்டியாக இருந்ததில் இருந்து, வயது ஏறஏற எடை அதிகரித்து, வளர்ந்தவுடன் எடை நிலைபெற்றுவிடும். வயது முதிரும்போது எடை குறையத் தொடங்கிவிடும். எல்லா உயிரினங்களும் அவற்றின் உயரம், உடல் சுற்றளவின் அடிப்படையில் உகந்த எடை என்று ஒன்று இருக்கிறது. அந்த உகந்த எடை இருந்தால்தான், அந்த உயிரினம் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, எடையைப் பராமரிக்க எல்லா உயிரினங்களும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அதிகப்படி எடை இருந்தால் நடந்தோ, உடற்பயிற்சி செய்தோ, உணவின் அளவைக் குறைத்தோ எடையைக் குறைக்க வேண்டும். இலை, தழை, புல், இளம் கிளைகள், மரப்பட்டைகள் போன்றவற்றை யானை உண்ணும். அவை தம் உடல் எடையை பராமரிக்க நிஜமாகவே நிறைய சாப்பிட வேண்டியிருக்கிறது. அந்த இரையைத் தேட நிறைய நடக்கவும் வேண்டியிருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை, எதிரானவை அல்ல. அதனால், யானை எவ்வளவு நடந்தாலும் எடை குறைவதில்லை. 2.ராட்டினத்திலோ, பூங்காவில் சுழலும் குதிரையிலோ உட்கார்ந்து சுற்றிய பிறகு, அந்த ராட்டினமோ குதிரையோ நின்றுவிடுகிறது. அதன் பிறகு நமக்குத் தலைசுற்றுவது ஏன்? அவை நின்ற பிறகு, நம் உடல் சுற்றாமல் நின்றுவிடுகிறது. ஆனாலும், தலைசுற்றுவது போல் தோன்றுகிறதே, அது ஏன்? த.மதிவதனி, 4ஆம் வகுப்பு, ஆரப்பாளையம், மதுரை நல்ல கேள்வி மதிவதனி. நம் உடல் ஏன் இப்படிச் செய்கிறது என்று பார்ப்போமா? நம் உள்காதுப் பகுதிதான் நம் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது. பொதுவாக நம் உடலோ அல்லது வாகனத்தில் நாம் சென்றாலோ அந்த இயக்கத்துக்கு ஏற்ப நம் உடலை சமநிலையில் வைப்பதற்கு, உள்காது பகுதி எதிர்வினை ஆற்றுகிறது. நமது உள்காதுப் பகுதியில் அரை வட்ட வடிவில் சில கால்வாய்கள் உள்ளன. அந்தக் கால்வாய்களில் திரவம் உள்ளது. நம் உடலைச் சுற்றும்போதோ, ராட்டினம், சுழலும் குதிரையில் சுற்றும்போதோ இந்த திரவமும் சேர்ந்து சுற்றும். அந்தக் கால்வாய்களில் உள்ள நுண்ணிய முடிகள், இந்த இயக்கம் தொடர்பாக மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இயக்கத்துக்கு ஏற்ப உடலை சமநிலையில் வைக்க இது தேவை. அதேநேரம், நம் உடல் சுற்றுவதை நிறுத்திவிட்டாலும்கூட, நிலைமத்தின் (inertia) காரணமாக திரவம் சற்று நேரத்துக்கு சுற்றுவதால், அந்த சமிக்ஞை சிறிது நேரத்துக்கு செல்லும். நம் உடல் இயங்குவதை நிறுத்தியிருக்கும். ஆனாலும் மூளைக்குச் செல்லும் தவறான சமிக்ஞையின் காரணமாகத் தலை மட்டும் சுற்றும். சிறிது நேரத்தில் இந்த சமிக்ஞை நின்று, இயல்பு நிலைக்கு நாம் திரும்பிவிடுவதால், தலைசுற்றல் நின்று உடலைப் போலவே தலையும் இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது.  -------- அமிதா

  • எல்லாக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் சிறார் இலக்கியத்தில் வேண்டும் - யெஸ்.பாலபாரதி

    1. சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்புகளும் போதாமைகளும் என்னென்ன? சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்பு என்பது பல்வேறு துறைப் பின்னணி கொண்டவர்களும் எழுதத் தொடங்கியிருப்பதுதான். அதன்மூலம் சிறார் இலக்கியத்தின் அகலம் அதிகமாகியுள்ளது உண்மையில் மகிழ்வளிக்கிறது. ஆனால் அதன் ஆழம் அதே விகிதத்தில் அதிகரிக்கவில்லை என்பது வருத்தத்தையும் தருகிறது. இதையே சமகால சிறார் இலக்கியத்தின் போதாமையாக நான் பார்க்கிறேன். குழந்தைகளுக்குத்தானே நூல் எழுத வேண்டும், எனவே இங்கே குறைந்தபட்ச உழைப்பைப் போட்டு, அதிகபட்சமான புகழ், விருது போன்றவற்றை பெற்றுவிடலாம் என்ற தவறான கற்பிதத்தோடு பலரும் உள்நுழைகின்றனர். அவர்களால் சொந்தமாக எதையும் சொல்ல முடியாதபோது ஏற்கனவே வேரூன்றிய படைப்பாளிகளின் படைப்பிலிருந்தே அங்குமிங்குமாக உருவியெடுத்த உருப்படிகளைக் கொண்டு, துரித உணவுகளைப் போல படைப்புகளைச் சமைத்துப் பரிமாறுகின்றனர். இத்தகைய நூல்களை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாது அதற்கான விளம்பரங்களையும் முழுமூச்சாகச் செய்து, சிறார் இலக்கியத்தின் மேற்பரப்பை ஆகாயத் தாமரை போல மூடுகிறார்கள் என்பதே இப்போதைய சிறார் இலக்கியத்தின் முதன்மையான சிக்கல். 2. இன்றைய சிறார் இலக்கியத்தில் அனைத்துக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் இருக்கிறதா? பிறமொழிப் படைப்புகளோடு ஒப்பிடுகையில், அனைத்துக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லை என்பதே உண்மை. ஒரு படைப்பில் ஒரு குறிப்பிட்ட பின்னணியைச் சார்ந்த அல்லது வகைமையை சேர்ந்த குழந்தைக்கான பிரதிநிதித்துவம் என்பது இரு வகையில் இருக்கலாம். ஒன்று, அந்தக் குழந்தைகளின் சிக்கல்களும் சிறப்புகளும் விரிவாகப் பேசப்படலாம். அல்லது பொதுவானதொரு படைப்பில் தானும் இடம்பெறுவதாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு கதையில் இரு மதத்துக் குழந்தைகளின் ஒற்றுமை, உணர்வு பூர்வமான நட்பு போன்றவை பேசப்படலாம். அல்லது ஒரு சாகசக் கதையில் இடம் பெறும் நண்பர் குழுவில் எல்லா மதத்துக் குழந்தைகளும் இடம் பெறுவதாகக் காட்டலாம். என்னுடைய ஆமை காட்டிய அற்புத உலகம் போன்ற சாகசக் கதைகளில் இடம் பெறும் நண்பர் குழுவில் மும்மதப் பெயர் கொண்ட குழந்தைகளும் உண்டு. அதே போல் எனது பெரும்பாலான கதைகளில் மாற்றுத் திறன் குழந்தைகளும் இடம் பெறுவர். சந்துருவுக்கு என்ன ஆச்சு, துலக்கம் போன்ற மாற்றுத் திறன் குழந்தைகளின் பிரத்யேக சிக்கல்களைப் பேசும் கதைகளும் என் படைப்புலகில் உண்டு. எனவே இருவிதமாகவும் எல்லா வகைக் குழந்தைகளும் இலக்கியத்தில் இடம் பெறுவதை படைப்பாளிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 3. சமகாலச் சிறார் இலக்கியத்தின் பாதை எப்படி இருக்க வேண்டும்? முந்தைய இரு கேள்விகளுக்கான எனது விடைகளையும் சேர்த்தாலே இந்தக் கேள்விக்கான விடை வந்துவிடும். சிறார் இலக்கியத்தின் அகலம் அதிகரிப்பதைப் போலவே அதன் ஆழமும் அதிகரித்தாக வேண்டும். அதாவது வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் படைப்பாளிகளும், அவர்களது உலகின் நுட்பமான பேசுபொருட்களை சிறார் இலக்கியத்தில் படைப்பாக மாற்ற வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் உலகில் நாம் கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும். சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் இருக்கும் குழந்தைகளுக்கான பிரதிநிதித்துவமும் நம் படைப்புகளில் இருந்தே தீர வேண்டும். வேறுபட்ட பின்னணி கொண்ட குழந்தைகள் படைப்புகளில் உலாவும்போது, வாசிக்கும் அதே பின்னணி கொண்ட குழந்தைக்கு அது ஒரு கூடுதல் மகிழ்வைத் தந்து, தன்னை அப்படைப்போடு இணைத்துக் கொள்ள உதவும். அதே நேரம் மற்ற பின்னணிகளில் உள்ள குழந்தைகளுக்கு, பிற குழந்தைகளின் வாழ்க்கைச் சூழல் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றிய புரிதலையும் தர முடியும். இதுவே அக்குழந்தைகளுக்கு பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனை(Empathy) கூர்மைப்படுத்தி, குடிமைப் பண்பு கொண்ட ஒரு பண்பட்ட சமூக உறுப்பினராக வளர்த்தெடுக்கும். 4. கடந்த ஐந்தாண்டுகளில் சிறார் இலக்கியத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்வூட்டுகிறது. ஆனால் அதே நேரம் மேலே நாம் பேசியிருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய தரமான படைப்புகள் மிக அரிதாகத்தான் வந்திருக்கின்றன. நாம் போக வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதே என் எண்ணம். 5. சிறார் இலக்கியம் மரப்பாச்சி சொன்ன ரகசியத்துக்கு முன் மரப்பாச்சி சொன்ன ரகசியத்துக்குப் பின் எப்படி இருக்கிறது? சிறார் இலக்கியத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்பதை விடவும், வாசிப்பாளர்களிடம் அந்நூல் ஏற்படுத்தியுள்ள மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதை பல்வேறு எதிர்வினைகள் மூலம் உணர்ந்து வருகிறேன். வேதாளம் தோளில் தொங்குவது, தெனாலி ராமன்/பீர்பால் போன்ற விதூஷகர்களின் கதைகள் போன்றவை மட்டுமே சிறார் இலக்கியம் என்று எண்ணியிருந்த பல பெற்றோர்களுக்கும், மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலின் அறிமுகம் சென்று சேர்ந்தது. அதன் மூலம் சிறார் இலக்கியத்தில் சமகாலச் சிக்கல்களும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித்தரும் சூழல் உருவானது. தனிப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இந்நூலை வாங்கித் தந்து வாசிக்கச் செய்வதைப் போலவே, பல்வேறு இடங்களில் இந்நூல் கூட்டு வாசிப்புக்கு உட்படுத்தப்படுவதையும் நெகிழ்வோடு கண்டு வருகிறேன். குறிப்பாக ‘தர்மபுரி வாசிக்கிறது’ எனும் நிகழ்வில் மூவாயிரம் குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இந்நூல் சென்று சேர்ந்ததையும், அத்தனை குழந்தைகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அந்நூலை வாசித்ததையும் அருகிலிருந்து பார்க்க நேரிட்டது என் வாழ்வின் மிக முக்கியமான, மகிழ்வானதொரு தருணம். அந்த கூட்டு வாசிப்பை முன்னிட்டே அந்நூலின் காப்புரிமையை பொதுவில் வைத்தேன். அதே போல குழந்தை நேய செயல்பாட்டாளர்கள் பலரும் அந்நூலை பல நூறு பிரதிகள் வாங்கி, குழந்தைகளிடம் கொண்டு சேர்த்தபடியே இருப்பது ஒவ்வொரு முறையும் என்னை நெகிழச் செய்கிறது. நேர்காணல் - உதயசங்கர்

  • கமீலாவின் வீரம்

    "மேத்யூ மேத்யூ இந்த இலை விழுது பிடி பிடி” எனக் கத்தியது அனா.  “இதோ வந்துட்டேன் அனா..” என ஓடியது மேத்யூ.. என்ன பெயரெல்லாம் வித்தியாசமா இருக்குனு பாக்குறீங்களா..  மேத்யூவும் அனாவும் தென் அமெரிக்க காடுகள்ல வாழ்றாங்க. அதான் அந்த பேரு.  அவங்க யாருன்னா கேக்குறீங்க? "மேத்யூவும் அனாவும் பூஞ்சை வளர்க்கும் எறும்பு வகையைச் சேர்ந்தவர்கள். இலைவெட்டி எறும்புகள்னு கூட சொல்லலாம். அட வாங்க ஏதோ சொல்லுது மேத்யூ என்ன என்று கேப்போம்"  "உன் அளவுக்கு 3 மடங்கு இலைய எடுக்கனும். அல்லது குறைவா"  "சரி சரி நீ சொல்றது சரி தான். 3 மடங்க விட அதிகமா எடுக்கக்கூடாது. கண்காணிப்பாளர் சொல்லிருக்காரு" "யாரு அந்த டியாகோ வா?" "ஆமா அவர் தான்.  எவ்ளோ உயரமா இருக்காருல்ல" என இலையைத் தூக்கிக் கொண்டே கேட்டது அனா.  "அவனென்ன உயரம் அவன விட தலைமைக் கண்காணிப்பாளர் கமீலா தான் உயரம்" என எல்லாம் தெரிந்தது போல சொன்னது மேத்யூ. இருவரும் பேசிக் கொண்டே புற்றின் வாயிலுக்கு வந்து விட்டனர். "நல்ல இலைய எடுத்துட்டு வந்தீங்களா?" எனக் கேட்டது காவல் எறும்பு.   "அங்க வாசல்ல என்ன டா சத்தம்? வேலைய பாருங்க" என்ற கமீலாவின் குரல் மட்டும் கேட்டது. எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க ஓடினார்கள். மேத்யூவும் அனாவும் இலையைக் கொண்டு போய், புதிய விவசாயப் பகுதியில் வைத்தன.  "அட மேத்யூ, அனா வேகமா வந்துட்டீங்களே.. குடுங்க" என இலையை வாங்கிக் கொண்டது விக்டோரியா.  அங்கிருந்த விக்டோரியாவும், மற்ற எறும்புகளும் அந்த இலைகளை மென்றன. பின் தம் உமிழ்நீரோடு சேர்த்து ஒரு கலவையை உருவாக்கி ஓரிடத்தில் நிரப்பின.  இங்கு தான் இந்த இலைகளின் மீது பூஞ்சை வளரும். அந்த பூஞ்சை தான் எறும்புகளின் உணவு.  இந்த பூஞ்சைத் தொகுதி முழுதாக ஆறு மாதங்கள் ஆகும்.  காவல் எறும்புகள் விவசாய இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.  அப்போது பரபரப்பாக வந்த இரண்டு காவல் எறும்புகள் டியாகோவைப் பார்த்தன.  "பூஞ்சைத் தொகுதி 4567ல் நோய்க் கிருமி தாக்கம் தெரிகிறது மேத்யூ" என்றன. "என்ன நோய்க்கிருமியா? மேத்யூ, அனா என்னோட வாங்க" என அந்தப் பகுதிக்கு விரைந்தது டியாகோ.  அங்கே பூஞ்சைகளில் சில இடங்களில் நோய்த்தாக்கம் தெரிந்தது. இதை அப்படியே விட்டால் மொத்த தொகுதியும் வீணாகப் போய்விடும். "அனா நீ போய் உதவிக்கு ஆட்களை அழைத்து வா" என கட்டளையிட்டது டியாகோ. விக்டோரியாவும் அவளது கூட்டமும் வந்து சேர்ந்தனர்.  ."இந்த நோய்ப்பகுதிகளை எல்லாம் அப்புறப்படுத்து" என்றது டியாகோ. நோய் தாக்கின பகுதிகளை அப்புறப்படுத்தி அவற்றை குப்பைப் பகுதியில் சேகரிக்க ஆரம்பித்தார்கள். வேகம் வேகம் என உற்சாகமூட்டியது டியாகோ.   காவல் எறும்புகளைக் கூப்பிட்டு பாராட்டவும் மறக்கவில்லை. "வேலை செய்யாம என்ன வேடிக்கை. ஓடு" என்ற கமீலாவின் குரல் எங்கோ துரத்தில் ஒலித்தது.  ஓடு ஓடு என அடுத்த இலையை எடுக்க ஓடினர் மேத்யூவும் அனாவும்.  கமீலா மிகவும் சுறுசுறுப்பாக புற்றின் உள்ளேயும் வெளியேயும் கண்காணித்துக் கொண்டிருந்தது.  அனைத்து எறும்புகளும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தன. எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றியது. ஆனால் புற்றின் உள்பகுதியில் இவர்களுக்கான ஆபத்து ஒளிந்து இருந்தது. "கமீலா கமீலா அங்கே அங்கே" என பதற்றமாக ஓடி வந்தன லியாவும், ஜேம்ஸூம். இருவரும் கமிலாவைப் போன்ற கண்காணிப்பாளர்கள் தான்.  "ஏன் என்னாச்சு?" எனக் கேட்டது கமீலா. "நம் இராணி அம்மா வழக்கத்துக்கு மாறா நடந்துக்கறாங்க. ஒரு பூஞ்சைத்தொகுதிக்குள்ள போய் எல்லாத்தையும் சாப்டுறாங்க" "பசிச்சா சாப்ட மாட்டாங்களா? அதுவும் நம்ம இராணியம்மா" எனக் கேட்டது அனா மேத்யூவிடம். இருவரும் அதற்குள் அடுத்த சுற்று இலைகளை எடுத்து வந்திருந்தன. "எனக்கும் ஒன்னும் புரியல. வா இலைய வச்சிட்டு வந்து பாக்கலாம்" என்ற மேத்யூ விக்டோரியாவிடம் இலையைக் கொடுத்து விட்டு நடந்ததைச் சொன்னது. "எந்த பூஞ்சைத் தொகுதில இருக்காங்க?" எனக் கேட்டபடி விரைந்தது கமீலா. அவர்கள் பின்னாலே போனார்கள் மேத்யூவும் அனாவும். டியாகோவும் வந்து விட்டது.  "இப்ப நாம எல்லாரும் உணவு எடுக்க வேண்டியது கிழக்குப் பக்கம் இருக்கற 2695வது பூஞ்சைத் தொகுதியில தான" "ஆமா!"  "ஆனா இராணி அம்மா மேற்குப்பக்கம் இருக்கற 3874வது தொகுதில போய் சாப்டுட்டு இருக்காங்க. காவல்கார எறும்புகளை எல்லாம் பயமுறுத்தி விரட்டிட்டாங்க" என்றது லியா.  "லியா நீ நல்லா பார்த்தயா? அது நம்ம இராணி தானா? ஜேம்ஸ் நீ வலது பக்கம் போய் அங்க இராணி இருக்காங்களானு பாரு" என்றது கமீலா. "என்ன கமீலா சொல்ற? அதான் இராணி மேற்குப்பக்கம் இருக்காங்கனு சொல்றனே" என்றது லியா. "அது போலி இராணியா கூட இருக்கலாம். அதனால நம்ம இராணி இருக்கற இடத்த பார்த்து அவங்கள நாம பாதுகாக்கனும். மேத்யூ நீயும் ஜேம்ஸ் கூட போ" எனக் கட்டளையிட்டது கமீலா. "அனா, நீ காவல்கார எறும்புகள் நிறைய பேர அழைச்சுட்டு வா, டியாகோ நீ என் கூடவே வா" என போருக்குச் செல்வது போல கிளம்பியது கமீலா. கமீலாவின் பாட்டியான மூத்த கண்காணிப்பாளர் எறும்பு அதனிடம் சொல்லி இருக்கிறது. சில நேரங்களில் வேறு இனத்தைச் சேர்ந்த இராணி எறும்புகள் நம் புற்றை ஆக்கிரமிக்க வரும். அவை பூஞ்சைகளைத் தின்னும், இராணி எறும்பை விரட்டி விட்டு நம்மை அடிமையாக்க முயற்சிக்கும், நம் இன முட்டையிடாது"  அதெல்லாம் கமீலாவுக்கு நினைவுக்கு வந்தன. "அந்த பெரிய தாத்தா எறும்பு கூட சொன்னது. நம்ம எறும்புக்கூட்டத்திலேயே போலி இராணி உருவாகுமாம். அது முட்டை போடும் எறும்புகள் உருவாகும். ஆனா அந்த போலி இராணியும் அதோட எறும்புகளும் வேலை எதுவும் செய்யாம நம்ம பூஞ்சைகள சாப்பிடுமாம்" எனத் தன் பங்கிற்கு கதை சொன்னது டியாகோ. மேற்குப்பக்க 3874வது தொகுதிக்கு வந்து விட்டார்கள்.  "இது நம்ம இராணி இல்ல. வேற இனம் போலி இராணி பொய்க்கா..  தாக்குங்க தாக்குங்க" எனக் கூச்சலிட்டது கமீலா. அதற்குள் காவல் எறும்புகளை அழைத்து வந்து விட்டது அனா.  எல்லா எறும்புகளும் வீரத்தோடு போரிட்டன. போலி இராணி பொய்க்கா நிறைய எறும்புகளை விரட்டி விட்டது. எனினும் அஞ்சாமல் அதனோடு மோதினார்கள் காவல்கார எறும்புகள். பொய்க்காவின் இறக்கைகளை மொய்த்து பிய்க்க ஆரம்பித்தன. போலி இராணி எனத் தெரிந்ததும் சமிக்சை கொடுக்கபட்டு நூற்றுக்கணக்கான காவல் எறும்புகள் வர ஆரம்பித்தன. அவற்றின் தாக்குதலைத் தாங்க இயலாமல் தப்பி ஓட முயன்றது பொய்க்கா. கமீலா அதன் காலைப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை. அனா அதன் தலையில் ஏறிக் கொண்டது.   இறக்கைகளை அசைத்து அசைத்து மேலே எழும்பியது போலி இராணி எறும்பு.   அனா கீழே விழுந்து விட்டது. போலி இராணி தப்பித்து ஓடி விட்டது. இனி அது இவர்கள் புற்று பக்கமே வராது.   "போலி இராணி ஓடி விட்டது. அவரவர் இடத்துக்கு திரும்புங்க" எனக் கட்டளையிட்டது கமீலா.   "கமீலா சிறப்பு சிறப்பு" என பாராட்டிக் கொண்டே சென்றன எறும்புகள்.   "அனா உனக்கு அடி படலையே" என தூக்கி விட்டது டியாகோ.   "எல்லாரும் ரொம்ப நல்ல வேலை செஞ்சீங்க" என பாராட்டியது கமீலா.   கமீலா அவசர அவசரமாக கிளம்பியது. "எங்க போற கமீலா" என பின்னாலேயே வந்தது லியா.   "இராணி அம்மாவோட பாதுகாப்ப உறுதி செய்ய" என்றது கமீலா.   "நாங்க இராணி அம்மாவுக்கு காவலா இருந்தோம். பத்திரமா பாத்துக்கிட்டோம்" என பெருமையாக சொன்னது மேத்யூ.   "மேத்யூ, ஜேம்ஸ் ரெண்டு பேரும் ரொம்ப நல்ல வேலை செஞ்சீங்க" என பாராட்டியது கமீலா.   அப்போது அங்கே வந்தது இராணி அம்மா.   "கமீலா, உன் புத்திசாலித்தனமும் தைரியமும் தான் நம்ம குடும்பத்த இன்னிக்கு காப்பாத்துச்சு. இனிமே நீ தான் நம்ம புற்றோட தலைமைக் காவல் அதிகாரி" என்ற இராணி கமீலாவின் தலையைத் தடவி விட்டுச் சென்றது.   "இராணியா பிறக்கலைன்னாலும் நம்ம இராஜ்ஜியத்தையே நீ காப்பாத்திட்ட" என வாழ்த்தியது இராஜா எறும்பு.   "தலைமைக் காவல் அதிகாரி கமீலா வாழ்க" என எம்பிக் குதித்தன மேத்யூவும் அனாவும்.

  • நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை அளித்தது பாக்ட்டீரியாவா!

    உங்கள் பள்ளியில், ஊரில் மரம் நடும் விழா நடந்திருக்கிறது அல்லவா? உங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு செடியை நட்டிருப்பீர்கள். சுத்தமான காற்று வேண்டுமென்றால், மரங்களை நடுங்கள்; நிழல் வேண்டுமென்றால் மரங்களை நடுங்கள்; காற்றில் நிறைந்த அளவு ஆக்ஸிஜன் வேண்டுமென்றால் மரங்களை நடுங்கள். இவற்றில் எந்த தவறும் இல்லை. கட்டுரைக்கு போகும் முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மீம்ஸை பார்த்து விடுங்கள் சொல்லப்போனால் இந்த கட்டுரையின் சாராம்சமே இதுதான். ஃப்யூச்சர் பயோடெக்னாலஜி என்ற இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து எடுத்தது. மரங்கள் மட்டுமே ஆக்ஸிஜனை அளிக்கின்றன என்று நினைக்கிறோம். உண்மையில் ஆக்சிஜனை அளிப்பதில் முக்கிய காரணி பாக்டீரியா தான் என்றால் நம்ப முடிகிறதா? இந்த பூமி உருவானபோது வளிமண்டலம் எப்படி இருந்தது? பூமி உருவாகி கிட்டத்தட்ட 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது இருந்த வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களே அதிகம் இருந்தன. நீராவியும் இருந்தது. இப்போது இருப்பதைப்போல நைட்ரஜனாலும் ஆக்சிஜனாலும் நிறைந்திருக்கவில்லை. சூரிய ஒளி நீராவியின் மீது பட்டு அதிலிருந்து ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் பிரிந்தன. அப்படி பிரிந்து வந்த ஆக்சிஜன் உடனடியாக மீதேனுடன் வினை புரிந்து விடும். எனவே வளிமண்டலத்தில் அவ்வளவாக ஆக்சிஜனே இருக்காது. சயனோ பாக்டீரியா என்னும் ஆக்ஸிஜன் கொடையாளி பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அடுத்த 70 கோடி ஆண்டுகளுக்கு பூமியில் உயிர் எதுவும் உருவாகவில்லை. அதற்குப் பிறகு தோன்றிய உயிர்களும் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜனை பயன்படுத்தவில்லை. கடலில் இருந்த தாதுக்களை வைத்து தங்கள் உடலுக்கான ஆற்றலை பெற்றுக் கொண்டன. புதிய உயிர்கள் அப்படித் தங்களைத் தகவமைத்துக் கொண்டன. கிட்டத்தட்ட 270 கோடி ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு புவியில் சயனோ பாக்டீரியாக்கள் தோன்றின. இந்த பாக்டீரியாக்களால் ஒளிச் சேர்க்கை செய்ய முடிந்தது. அதாவது சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை பெற முடிந்தது. ஒளிச்சேர்க்கை செய்வதற்கான ஆற்றல் மூலமாக இவை கடல் நீரை பயன்படுத்திக் கொண்டன. மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்போது சூரிய ஒளி கார்பன்டை ஆக்சைடு நீர் ஆகியவற்றை பயன்படுத்தி குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜனை தயாரிக்கும். குளுக்கோசை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். கிட்டத்தட்ட அதே பாணியில்தான் சயனோ பாக்டீரியாக்கள் ஆக்ஸிஜனை கொடுக்கின்றன. இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். சயனோ பாக்டீரியாக்கள் ஆக்ஸிஜன் கொடுக்க ஆரம்பித்த காலத்தில் மரங்கள் இல்லை. ஒளிச்சேர்க்கையின் போது எப்படி ஆக்ஸிஜன் உருவாகிறது என்பதை சுட்டி காட்டத்தான் மரங்களை உதாரணமாக குறிப்பிட்டேன். சயனோ பாக்டீரியாக்கள் தொடர்ந்து ஆக்ஸிஜனை வெளியிட்டன. முதலில் கடல் நீரில் ஆக்ஸிஜன் கலந்து கடல் உயிரினங்கள் ஆக்ஸிஜனை பயன்படுத்தின. அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் வளிமண்டலத்தில் கலந்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இந்த தொடர் செயலால் காற்றில் ஆக்ஸிஜன் நிறைந்தது. இதுவே ஆக்ஸிஜனேற்றப் பெருநிகழ்வு என்று சொல்லப்படுகிறது. சயனோ பாக்டீரியாக்கள் பொதுவாக நீலப் பச்சைப்பாசி என்று அழைக்கப்படுகின்றன. பூமியில் இருக்கும் 70 சதவீத ஆக்ஸிஜனை இந்த பாக்டீரியாக்கள் தான் உருவாக்குகின்றன. மீதம் 30 சதவீத்த்தைத் தான் செடிகளும் மரங்களும் உருவாக்குகின்றன.

  • லண்டனிலிருந்து அன்புடன் - 4

    தொடரில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற பதிவில் பள்ளி விழாக்களில் நடக்கும் நாடகங்கள் குறித்துப் பார்த்தோம். இந்தப் பதிவில் திரை அரங்குகளில் நடக்கும் நாடகம் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஆமாம் செல்லங்களே! திரையரங்கத்துக்குச் சென்று படம் பார்ப்போம் அல்லவா? அதே போல் நாடகங்களுக்கு இங்கு நிறைய அரங்குகள் உண்டு. நமது ஊரிலும் 50-60 வருடங்களுக்கு முன்பெல்லாம் நாடக அரங்குகள் நிறைய இருந்தன. அவை அனைத்துமே தற்போது காணாமல் போய்விட்டன. ஆனால் இங்கிலாந்தில் நாடக அரங்குகள் இன்னும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பெரியவர்களுக்கான நாடகங்கள் போலவே, சிறுவர்களுக்கான நாடகங்களும் அதற்கான அரங்குகளும் உண்டு. இந்த நாடகங்கள் அனைத்துமே, புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதைகளோ அல்ல புத்தகங்களாகவோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நானும் என் பிள்ளைகளும் பார்த்த நாடகம்தான் Gruffalo’s Child. இந்தக் கதையை எழுதியவர் ஜூலியா(Julia Donaldson,  Illustrator: Axel Scheffler). இது ஒரு படக்கதைப் புத்தகம். “க்ரெஃபல்லோவின் பிள்ளை” கதையை அறிந்து கொள்வதற்கு முன்பு முதலில் க்ரெஃபல்லோவின் கதையை நீங்கள் கேட்க வேண்டும். சரி வாருங்கள், இந்தப் பதிவில் க்ரெஃபெல்லோ கதையைப் பார்ப்போம். எலி ஒன்று காட்டினுள் நடந்து செல்கிறது, எலியினைக் கண்ட நரி அதனைத் தனது உணவாக்கிக் கொள்ளத் திட்டமிடுகிறது. நரி, எலியிடம் சென்று மதிய உணவிற்கு தன் வீட்டிற்கு அழைக்கிறது. நரியின் சதி திட்டத்தைப் புரிந்துகொண்ட எலி, தான் க்ரெஃபல்லோவை சந்திக்கப் போவதாக சொல்கிறது. “க்ரெஃபல்லோ? அது என்ன ? “ என்று நரி கேட்க, “க்ரெஃபல்லோவை தெரியாதா? அதுக்கு பெரிய நகம் உண்டு. அதுக்கு நரி வறுவல் என்றால் நிறையப் பிடிக்கும்” என்று கற்பனையாகச் சொல்ல. நரி, தப்பித்தால் போதுமென்று ஓடிவிடுகிறது. நரியிடம் தப்பித்த எலி மேலும் காட்டுக்குள் செல்ல அடுத்ததாக ஆந்தை வருகிறது, அதன் பிறகு பாம்பு வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனது கற்பனையில் பயங்கரமான உருவத்தை க்ரெஃபல்லோவை வர்ணிக்கிறது. இப்படியாக மூவரிடமிருந்த தப்பித்த எலி அடுத்ததாக நிஜமாகவே அது சொன்ன உருவத்திலே க்ரெஃபல்லோவை சந்திக்கிறது. எலி கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரம் நிஜத்தில் வருவதே இந்தக் கதையின் சுவாரஸ்யமான விசயம். க்ரெஃபல்லோ தற்போது எலியைச் சாப்பிட நினைக்கிறது. அதனைப் புரிந்துகொண்ட எலி, அதனிடம்…”இந்தக் காட்டிலே நான்தான் பயங்கரமான மிருகம். என்னை கண்டாலே அனைவரும் நடுங்குவார்கள்” என்று சொல்ல க்ரெஃபல்லோ சிரிக்கிறது. உடனே எலி க்ரெஃபல்லோவிடம் “நீ வேண்டுமானால் என்னுடன் வா, உனக்கு காட்டுகிறேன்” என்று காட்டினுள் நடக்கிறது. முதலில் பாம்பைச் சந்திக்கின்றனர், “ஆகா! சொன்ன மாதிரியே க்ரெஃபல்லோவை எலி கூட்டிட்டு வந்திடுச்சே” என்று பாம்பு நடுநடுங்கிப் போகிறது. அதுபோல ஆந்தையும் நரியும் பயந்து நடுங்கிச் செல்ல, க்ரெஃபல்லோ எலியை நினைத்துப் பயப்படுகிறது. பயந்து காட்டினுள் ஓடி ஒளிந்துகொள்கிறது. எலி நிம்மதி பெருமூச்சுடன் தனது உணவான பழ கொட்டையச் சாப்பிடுவதாகக் கதை முடிகிறது. இது க்ரெஃபல்லோவின் கதை. இந்தப் புத்தகம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பல மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகின. அதனைத் தொடர்ந்து Gruffalo’s Child புத்தகம் வெளியானது. அதில் என்ன ஆனது தெரியுமா? அதனை அடுத்த பதிவில் பார்ப்போம் செல்லங்களே! அதனுடன் இந்தக் கதை நாடக வடிவில் எப்படி இருந்தது என்பதையும் பார்ப்போம்!

  • அறிவோம் ஆளுமை – 4 அம்பேத்கர் எனும் பன்முக ஆளுமை

    ஜோ  : வணக்கம் செல்லக்குட்டிகளா!  நகுலன் : வணக்கம் அத்தை.  கையில் வைத்திருப்பது என்ன புத்தகம்? ஜோ : அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.   ரதி : அத்தை போன மாதம் நீங்கள் ஏன் வரவில்லை? ஜோ : போன மாதம் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு கதை சொல்ல நிகழ்வுக்காக ஆசிரியர் செந்தில்குமார் அழைத்திருந்தார். அங்கு சென்று விட்டேன். உதயசங்கர் தாத்தா வந்திருப்பாரே? நகுலன் : ஆமாம் அத்தை. அவர் கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள் பற்றிச் சொன்னார்.. ..  ரதி : இந்த வாரம் நீங்கள் அம்பேத்கரைப் பற்றி தானே கூறப் போகிறீர்கள்? ஜோ : ஆமாம். அவரைப் பற்றித்தான். அவருக்குப் புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.  நகுலன் : எங்களுக்கும் மிகவும் பிடிக்கும் அத்தை. அவர் தானே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்?  ரதி : அவர் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தானே? ஜோ : இருவரும் சொன்ன கருத்திலிருந்து நீங்களும் வாசிப்பாளர்கள் தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அம்பேத்கர் ஒரு வழக்கறிஞர், பொருளியல் நிபுணர், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவர் தான் இந்திய அரசியலமைப்பின் முதன்மை வரைவாளர்.  நகுலன் : அவர் மகாராஷ்டிராவில் தானே பிறந்தார்? ஜோ : ஆமாம் மகாராஷ்டிராவில் உள்ள மௌ என்னும் இடத்தில் 1891 இல் பிறந்தார். அவர் மஹர் எனும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர்.  சிறு வயதிலேயே சாதிய ஒடுக்கு முறைக்கு ஆளானார். அவருக்குப் பள்ளியில்  தண்ணீர் குடிக்கவும் மேஜை நாற்காலிகளில் உட்காரவும் அனுமதி இல்லை. வகுப்பறையில் வெளியில் அமர வைக்கப்பட்டார். அதுவும் ஒரு சாக்குப்பை கொண்டு வந்து போட்டு அதன் மேல் தான் அவர் அமர வேண்டும்.  ரதி : எவ்வளவு அவமானப்பட்டு இருக்கிறார். கேட்கவே மனசு வலிக்குது அத்தை.  ஜோ : இந்த அவமானம் தான் அவரை இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை எழுதும் அளவிற்கு வெறித்தனமாக படிக்க வைத்தது. படித்தால் மட்டுமே தனக்கான மரியாதை கிடைக்கும் என்பதை உணர்ந்து படிக்கத் தொடங்கினார். தனக்காக மட்டுமல்ல தன் சமூகத்திற்குமான மதிப்பு கல்வியால் தான் என்பதை உணர்ந்தார். நகுலன் : அவர் என்ன படித்திருக்கிறார் அத்தை?  ஜோ : அவர் முதலில் பாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.  அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சிலும் கல்வி பயின்றார். அவர் ஒரு பி.எச்.டி பட்டதாரி.  ரதி : அவருடைய சமூகத்துக்காக என்ன எல்லாம் செய்தார் அத்தை.? ஜோ : அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை, சம உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட முயற்சி செய்தார். 1927 ஆம் ஆண்டு மகத் குடிநீர் சத்தியாகிரகம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் உரிமையை நிலைநாட்டினார்.   தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருந்தார். நகுலன் : அவர் அரசியலிலும் இருந்தாரா?  ஜோ : ஆமாம் கண்ணு.. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சாசனம் உருவாக்கிய குழுவின் தலைவர் அவர்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமையைச் சட்டம் ஆக்கினார்.  ரதி : அவர் ஏன் பௌத்த மதத்திற்கு மாறினார் அத்தை?  ஜோ : அம்பேத்கரைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  1956 ஆம் ஆண்டு பௌத்த மதத்தைத் தழுவினார். ஏனெனில் ஹிந்து மதத்தில் சாதிய ஒடுக்கு முறை நீங்காது என்று அவர் நம்பினார். பௌத்த மதம் சமத்துவத்தை வலியுறுத்தும் மதம் என்பதால் அதனைத் தழுவினார்.  ரதி : புத்தரும் அவர் தம்மமும் என்ற புத்தகம் எங்கள் வீட்டில் இருக்கிறது. அம்பேத்கர் வேறு என்னென்ன புத்தகங்களை எழுதி இருக்கிறார்?  ஜோ : ஏராளமான புத்தகங்களை எழுதி இருக்கிறார். முக்கியமான நூல்கள் Annihilation of Caste   The Buddha and His Dhamma  Who Were the Shudras? The Problem of the Rupee.  எனக்கு மிகவும் பிடித்த அம்பேத்கரின் பிரகடனம் கற்பி! ஒன்றுசேர்! புரட்சி செய்.! .  குழந்தைகள் :  ஆகா.. எங்களுக்கும் பிடித்திருக்கிறது..  டிசம்பர் 6 தானே அம்பேத்கர் நினைவு நாள்?  ஜோ :  டிசம்பர் 6, 1956 இல் அவர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்குப் பின் அவர் நினைவாக இந்தியா முழுவதும் சிலைகள், கல்வி நிறுவனங்கள், சாலையின் பெயர்கள், நூலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை இந்திய அரசு உருவாக்கியது. 1990 ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.   குழந்தைகள் : நாங்களும் படித்து முடித்ததும் அவரைப் போலவே ஏற்ற தாழ்வுகளில்லாத சமத்துவ உலகம் உருவாகப் பாடுபடுவோம்.. .  ஜோ : கண்டிப்பாக.. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியே ஆயுதம்..  அம்பேத்கரைப் போல் நீதிக்காக சமத்துவத்திற்காக வாழ வேண்டும். மகிழ்ச்சி குழந்தைகளே! குழந்தைகள் :  இன்று அம்பேத்கரைப் பற்றி ஏராளமாகத் தெரிந்து கொண்டோம். இதை நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம் நன்றி அத்தை.

  • பேசும் கடல் - 4

    வலை பழுது பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம்  "நாங்கள் கடல் பாட்டி கூட ரொம்ப ஜாலியா பேசினோமே"....... என்று அமுதா சிரித்துக் கொண்டே சொன்னாள். அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த இனியன் கேட்டான்.  " அப்பா. நீங்க காத்து கடலில் தொழில் செய்வது தெரியும்? அதில் ரொம்ப பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கா? என்று இனியன் கேட்டான்.  "நீங்க கடல்ல காத்துக்கு பெயர் வைப்பீங்களாமே!." என்று ஈர மணலை கன்னத்தில் தேய்த்து கொண்டே கேட்டாள் அமுதா. "அன்புச் செல்வங்களே! "பெயரிடுதல் என்பதே உரிமையின் அடையாளம். பெயரிட்டு அழைப்பது என்பது உறவின் வெளிப்பாடு. எல்லாரும் எல்லாருக்கும் பெயரிட முடியுமா? ".. "முடியாது " என்று இருவரும் கோரசாகச் சொன்னார்கள்.  "உரிமை உடையவர்கள் உறவு உடையவர்கள் தான் பெயரிட முடியும். கடலோடிகள் காற்றை உறவாக பார்க்கிறார்கள் என்பதற்கு பெயரிட்டு அழைப்பதே சான்று"  அப்பா தன் வாயிலிருந்த வெற்றிலையை மணலில் துப்பி விட்டு பேசினார்.  "என்ன பெயரிடுவீங்க.? " என்று இனியன் கேட்டான்.  "ஏன் பெயரிடுறீங்க.? " என்று அமுதாவும் கேட்டாள். "காத்து என்பது பொதுவானது. ஆனால் அது எந்த திசையில் இருந்து வருகிறது? எவ்வளவு வேகத்தில் வருகிறது? என்பதை எல்லாம் பொதுவாக பேச முடியாது தானே?" " ஆமாப்பா...... " என்றாள் அமுதா. " அதான் பல பெயரில் அழைப்போம்"  என்றார் அப்பா.  " புரியும்படி சில பெயர்களை சொல்லுங்க அப்பா." என்றான் இனியன். " மேற்கிலிருந்து கிழக்கு நோக்கு வீசும் காற்றை கச்சான் காற்று, சோள காற்று என்று அழைப்போம். கிழக்கிலிருந்து மேற்கே நோக்கி வீசும் காற்றை  வாடைக்காற்று என்று அழைப்போம். " என்றார் அப்பா.    "ஒரு திசையில் இருந்து மறு திசைக்கு வீசும் காற்றுக்கு ஏன் பெயரிடுறீங்க......" என்று  இனியன் ஆர்வத்தோடு கேட்டான்.  "காற்றை பொறுத்துத்தான் கடலில் படகை செலுத்த முடியும். கடலில் பயணம் செய்யும் போது காற்று வீசும் திசை தெரிய வேண்டும். எங்கிருந்து எந்த திசை நோக்கி வீசுகிறது என்பதை கணித்தால் தான் பயணம் செய்ய ஏதுவாய் இருக்கும். பாதிப்பும் ஏற்படாது. " என்று அப்பா தன் அனுபவத்தை பிள்ளைகளிடம் பேசும்போது தன்னை ஓர் ஆசிரியர் போல் உணர்ந்தார்.  கடற்கரையில் காற்று வலுவாக இருந்தது. அமுதாவின் முடியும் பறந்தது. தலை முடியை தன் கைகளில் பிடித்துக் கொண்டு, " இப்போ என் தலைமுடி எந்த திசையில் பறக்குதுன்னு சொல்லுங்க அப்பா." என்று அமுதா சிரித்துக்கொண்டே கேட்டாள். " ஆமா இது ரொம்ப முக்கியம்" என்று இனியன் விளையாட்டாய் அமுதாவை தட்டி விட்டான்.  அப்பா வலையை பின்னிக்கொண்டே,  "கரையில் வாழ்பவர்கள் தான் பொருள்கள், மரங்கள், கிளைகள் அசைவதைக் கண்டு காற்றின் திசையை சொல்வார்கள் நாங்கள் அதை உணர்ந்து சொல்வோம் "  " அப்பா புரியல" என்று  அமுதா சொல்லி முடிக்கும் முன்னால் இனியன் கத்தினான்.  "  எனக்கு புரிஞ்சிட்டு " என்று இனியன் தொடர்ந்து பேசினான்,  "கரையில் மரங்கள் இருப்பது போல் கடலில் எதுவும் இருக்காது. காற்று உங்கள் உடலில் படுவதைக் கொண்டு கணிக்கிறீர்கள்......... சரியா?"     "சரிதான் மவனே...... அதுமட்டுமல்ல கடலில் நீரின் ஓட்டத்தையும் கணித்து சொல்வோம் " என்றார் அப்பா. "காத்து ரொம்ப வலுவா இருந்தா?" எப்படி தப்பிச்சு வருவீங்க பயமா இருக்காதா?" என்று ஆச்சரியத்துடன். கண் இமைகளை விரித்துக் கொண்டே கேட்டாள் அமுதா.  "அதுக்குத்தான் பாய் மரம் கொண்டு போவோம்ல பாய்மரம் கட்டினால் வந்த காற்றை எளிதாக எதிர்கொள்ளலாம்." என்று பேசிக் கொண்டிருக்கும்போதே பெரிய அலை ஒன்று அவர்கள் அருகில் வந்து ஈரமாக்கிச் சென்றது. "ஏய் பாட்டி ! அப்பா வலையை ஈரமாக் கிட்ட..... என் சட்டையை ஈரமாகிட்ட.... சும்மா இருக்க மாட்டியா?" என்று அமுதா செல்லம் கொஞ்சினாள். "நான் என் பேரப்பிள்ளைகளிடம் தான் விளையாட முடியும். அப்பா கிட்ட ரொம்ப நேரம் கேள்வி கேட்டு தெளிவடைஞ்சாச்சா! " என்று கடல்பாட்டி புன்சிரிப்புடன் சொன்னாள். " இல்லை" என்று இனியன் குரலை உயர்த்தினான். "என்னப்பா கோபம்?"என்றாள் கடல் பாட்டி.  "பாட்டி பாய் மரம்னா என்ன?"  "அதுவா.. சொல்லட்டா? ( கடல் பாட்டி பேசுவாள் )

bottom of page