top of page

இயலில் தேடலாம்!

Search this site

408 results found with an empty search

  • துளிரும்... துளிர் இல்லமும்...

    அறிவியலறிஞர் த.வி.வெங்கடேஸ்வரனுடன்  நேர்காணல் சந்திப்பு : சாலைசெல்வம் 1987-ம் ஆண்டு நவம்பரில், சி.வி.ராமன் பிறந்த நாளில், 'துளிர்' என்ற சிறார் இதழ் துவங்கப்பட்டது. தமிழகத்தில் அன்று நிலவிய சிறார் இலக்கியப் போக்குக்கு மாறாக, குழந்தைகளை 'அடக்க வேண்டியவர்கள்' என்று பார்க்காமல், 'தானே விரியும் மலர்மொட்டுகள்' எனப் பார்க்கத் தூண்டியது துளிர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சியின் ஒரு கட்டமாக உருவான இந்த இதழ், இன்று சுமார் 30,000 பிரதிகள் விற்பனையாகும் ஒரு முக்கிய சிறார் இதழாக வளர்ந்துள்ளது. அதே பார்வையின் நீட்சியாகவே, 'துளிர் இல்லம்' எனும் முறைசாரா சிறார் அமைப்பு (Informal Children's Organisation) உருவானது. இந்த இல்லங்கள் பத்து, பதினைந்து குழந்தைகள் சேர்ந்து, தங்கள் பகுதியிலோ அல்லது பள்ளியிலோ இயங்கும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். இந்த இரண்டின் உருவாக்கத்திலும், அமைப்பிலும், செயல்பாட்டிலும் த. வி. வெங்கடேஸ்வரன் அவர்களுக்குப் பங்கு உண்டு. அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். கேள்வி 1: துளிர் இதழ் துவங்கப்பட்ட சூழல் என்ன? 1980களின் இறுதியில் தமிழகத்தில் சிறார் இலக்கியத்துக்கான தேவை எப்படி இருந்தது? பதில்: நான் சொல்வதற்கு முன்னர், அந்தக் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பார்த்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது 'குழந்தைகள் அளவில் சிறிய பெரியவர்கள்' என்றும், 'பண்பின்றிப் பிறக்கிறவர்கள்' என்றும், 'அவர்களை அடி உதையால்தான் பக்குவப்படுத்த வேண்டும்' என்றும் ஒரு கருத்து நிலவியது. ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. குழந்தைகள் பிறக்கும்போதே அறிய ஆர்வம் கொண்டவர்கள், தம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முயல்பவர்கள், இயல்பாகவே பகிர்ந்துகொள்பவர்கள் - இதுவே எங்கள் பார்வை. இப்படிப்பட்ட குழந்தைமை பார்வைதான் துளிரின் அடித்தளம். 1987-க்கு முன்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்த இயக்கமாக இருந்தது. 1986-ல் மாநிலம் தழுவிய அறிவியல் கலைப் பயணத்தை நடத்தியது. அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் கிளைகளை விரிவாக்கியது. 1987-ல் அகில இந்திய அறிவியல் கலைப் பயணமும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகவே நாங்கள் துளிரைத் துவக்கினோம். எங்கள் எதிர்பார்ப்பைவிடச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. 30,000 பிரதிகள் விற்பனையாகின்றன என்றால், அதன் பின்னணியில் ஒரு தேவை இருந்தது என்பதை இது காட்டுகிறது. கேள்வி 2: 'துளிர் இல்லம்' எதற்காக உருவாக்கப்பட்டது? அதன் செயல்பாடுகள் என்ன? பதில்: துளிர் இதழ் மட்டும் போதாது என்று நாங்கள் கருதினோம். படிப்பதோடு நின்றுவிடாமல், விவாதிப்பதும், செய்து பார்ப்பதுமே உண்மையான கற்றல் என்று நாங்கள் நம்பினோம். அதனால்தான் 'துளிர் இல்லம்' உருவாக்கப்பட்டது. இது ஒரு முறைசாரா சிறார் அமைப்பு. அதாவது, அதிகாரபூர்வமான கட்டமைப்பு இல்லாமல், 10-15 குழந்தைகள் ஒரு பகுதியில் சேர்ந்து இயங்குவது. முதல் படியாக, அவர்கள் துளிர் இதழைக் கூட்டாகப் படிக்க வேண்டும். பல குழந்தைகளுக்குத் தனியாக வாசிக்கும் திறன் குறைவு. கூட்டாகப் படிக்கும்போது, அது மெல்ல மெல்ல வளர்ச்சியடையும். அதன்பின் படித்ததை வைத்து விவாதம் நடைபெறும். அப்பொழுதுதான் ஒரு கட்டுரையின் கருத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அடுத்ததாக, 'செய்துபார்' பகுதியில் உள்ள பரிசோதனைகளைச் செய்து பார்ப்பது. தனியாகச் செய்யும்போது, தோல்வி ஏற்பட்டால் சோர்வு ஏற்படலாம். ஆனால் கூட்டாகச் செய்யும்பொழுது, ஒருவரின் தடுமாற்றத்தை இன்னொருவர் சரிசெய்வார். இவ்வாறு வாசிப்பு, விவாதம், செய்முறை, தேடல் - இந்த நான்கு பழக்கங்களையும் வளர்ப்பதற்கே துளிர் இல்லம் முயற்சிக்கிறது. எல்லாக் கட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூற முடியாது, ஆனால் முயற்சி தொடர்கிறது. கேள்வி 3: துளிரின் உள்ளடக்கக் கொள்கை என்ன? சிறார் இதழ் என்பதால் நன்னெறி போதிப்பதை முக்கியமாகக் கொண்டீர்களா? பதில்: இல்லவே இல்லை. அதனையே தொடக்கம் முதலே நாங்கள் முற்றாகத் தவிர்த்தோம். ஏனெனில், மனிதர்கள் எல்லோருமே நல்லவர்கள்தான். பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள்தான். ஆனால் நமது சமூகமும், வாழ்க்கைச் சூழலுமே நமக்குச் சுயநலத்தைக் கற்றுக்கொடுக்கின்றன என்று நாங்கள் கருதுகிறோம். அதனால், பெரியவர்களான நாங்கள்தான் அறம் படைத்தவர்கள், குழந்தைகளை நாங்கள்தான் பண்படுத்த வேண்டும் என்ற சிந்தனை முறையை நாங்கள் ஏற்கவில்லை. மாறாக, சுய சிந்தனை வளர்ப்பு மூலமே உண்மையான மனிதநேயம் சாத்தியமாகும் என்பது எங்கள் நம்பிக்கை. அதுபோலவே, மனப்பாடக் கல்வியை நாங்கள் கடுமையாக விமர்சித்தோம். எனவே புரிதலுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். மேலும், மதத்தை ஓதுவது போலவோ, ஜபிப்பது போலவோ அறிவியலைக் கற்பிப்பதும் கற்றுக்கொள்வதும் அறிவியல் பார்வையை உருவாக்க உதவாது. இதற்கு என்ன ஆதாரம், அந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்ன முடிவுக்கு வர முடியும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதனால்தான் 'செய்துபார்' பகுதிக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அன்று இத்தகைய பரிசோதனைகள் பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்ததே இல்லை. Joy of Learning போன்ற இயக்கங்கள் மூலமே இந்தப் பார்வை வளர்ச்சியடைந்தது. இதன் விளைவே இப்பொழுது அவை பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. கேள்வி 4: அறிவியல் பார்வைக்கும் சமூக நீதிக்கும் உள்ள தொடர்பைத் துளிர் எவ்வாறு கையாள்கிறது? பதில்: இதுவே மிக முக்கியமான கேள்வி. பரிணாம வளர்ச்சி நமக்குச் சொல்வது என்ன? நாம் எல்லோருமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரே மனித இனத்தின் வழித்தோன்றல்களாவோம். இன்னும் பின்னோக்கிச் சென்றால், எல்லா உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அவ்வாறிருக்கும்பொழுது, சாதி போன்ற பாகுபாடுகள் எல்லாம் பொய்யானவை, நமது கற்பிதமே ஆகும். இதனையே அறிவியல் காட்டுகிறது. ஆனால் பலருக்கும், குறிப்பாகப் பிற்போக்குப் பார்வை உள்ளவர்களுக்கு, இந்த உண்மைகளை ஏற்பதில் தயக்கம் உள்ளது. சிங்காரவேலர் போன்றவர்கள் தொடங்கி வைத்த பார்வையின் நீட்சியாகவே நாங்கள் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கருதினோம். அதனால்தான் தமிழ்செல்வனின் 'நாம் எல்லாம் குரங்குச் சாதி' போன்ற கட்டுரைகளை வெளியிட்டோம். இந்தக் கட்டுரைகள் பின்னர் 'இருட்டு எனக்குப் பிடிக்கும்' என்ற தலைப்பில் சிறு நூலாக வெளிவந்தன. உதாரணத்திற்கு, தீபாவளி சிறப்பிதழில் பட்டாசு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றி எழுதும்பொழுது, டாக்டர் சுந்தரராமன் அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினார்: "பட்டாசில் என்ன வேதிப்பொருட்கள் உள்ளன என்பதை மட்டும் எழுதினால் போதுமா? அதனைத் தயாரிக்கும் தொழிலாளர் சிறுமிகளைப் பற்றி ஏன் பேசக்கூடாது?" அதனால்தான் நாங்கள் பட்டாசுத் தொழிற்சாலையில் சுரண்டப்படும் ஒரு சிறுமியின் பார்வையில் அந்தக் கட்டுரையை எழுதினோம். அவ்வாறே உப்புப் பற்றிய கட்டுரை எழுதும்பொழுது, உப்புச் சத்தியாகிரகத்தையும் இணைத்தோம். அறிவியல் பார்வைக்கும் சமூக நீதிக்கும் உள்ள இந்தத் தொடர்பையே துளிர் முழுமையாக முன்னிறுத்த முயல்கிறது. இன்னும் நிறையச் செய்ய வேண்டும். கேள்வி 5: துளிர் இல்லத்தை முதுகெலும்பாகக் கொண்டு இயங்கிய சமூகப் பிரிவு எது? பதில்: முதற்கட்டத்தில், நகர்ப்புறங்களில் பல்வேறு சிறு தொழில்களில் ஈடுபட்டிருந்த குறைந்த வருமானம் கொண்ட நடுத்தரக் குடும்பங்களே துளிரின் முதுகெலும்பாக இருந்தன. அவர்களே 'துளிர் இல்ல'ச் செயல்பாடுகளை அதிகமாக ஏற்று நடத்தினர். அவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, ஒன்றாகச் சேர்ந்து படிப்பதற்கும், புதிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் ஒரு ஆர்வம் இருந்தது. துளிர் இல்லம் அந்தத் தேவையை நிறைவு செய்தது. கேள்வி 6 : 1990களில் கல்வியறிவு மற்றும் நகரமயமாக்கல் காரணமாகப் புதிய 'கீழ்-நடுத்தர வர்க்கம்' உருவானது. துளிரின் வளர்ச்சியிலும் நிலைத்தன்மையிலும் அது என்ன பங்கு வகித்தது? பதில்: மிக முக்கியமான கேள்வி இது. காலப்போக்கில் தமிழகத்தில் கல்வி விரிவாக்கம் பெற்றது. தமிழ்நாட்டில் எழுத்தறிவு நிலை 1951-ல் மெட்ராஸ் மாநிலத்தில் 20.9% ஆக இருந்தது, 1991-க்குள் அது 62.7% ஆக உயர்ந்தது. இது நாற்பது ஆண்டுகளில் 40 சதவீதப் புள்ளிகளுக்கும் மேலான வளர்ச்சி ஆகும். ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பிலும், ஆண்களின் எழுத்தறிவு பெண்களைவிட அதிகமாகவே இருந்தது. உதாரணமாக, தமிழ்நாட்டில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 1961-ல் 51.6% ஆகவும், 1991-ல் 73.7% ஆகவும் உயர்ந்தது. பெண்களின் எழுத்தறிவு விகிதம் 1961-ல் 21.1% ஆகவும், 1991-ல் 51.3% ஆகவும் அதிகரித்தது. இரு பாலரும் முன்னேற்றம் அடைந்தாலும், பெண்களின் எழுத்தறிவில் முழுமையான முன்னேற்றம் அதிகமாக இருந்தது. இதனால் பாலின இடைவெளி காலப்போக்கில் குறைந்தது. சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. ஆனால் காலப்போக்கில் அவை குறைந்துவிட்டன. மேலும் சிறு குடும்ப முறை உருவாகியிருந்தது. இருவர் அல்லது மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பம் பெருகியது. இந்தச் சூழலில் 'குழந்தைமை' குறித்த பார்வையும் தமிழகத்தில் மாற்றம் அடைந்தது. 1990களின் முற்பகுதியில் அறிவொளி இயக்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இளம்பெண்கள் எழுத்தறிவு பெற்றதும், அவர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் கல்வியில் ஒரு புதிய அக்கறை ஏற்பட்டது. அதே நேரத்தில் நகரங்கள் விரிவடைந்தன. சிறு சிறு ஊர்களிலிருந்து மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு வந்தனர். அவர்கள் பெரும்பாலும் கூலி வேலை, சிறு வியாபாரம், ஓட்டுநர், கட்டடத் தொழிலாளி போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இவர்களே 'கீழ்-நடுத்தர வர்க்கம்' என அழைக்கப்படுபவர்கள். இதன் பொருள் 1980களின் இறுதியில் புதிய சமூகப் பிரிவுகள் கல்வி பெற்ற பிரிவுகளாக மாறின; இவர்களுக்குப் படிப்பின் மதிப்பு நன்கு தெரியும். ஆனால் அவர்களால் தங்கள் குழந்தைகளை விலை உயர்ந்த பள்ளிகளில் சேர்க்க முடியாது. அவ்வாறிருக்க, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், அறிவியல் புரிதல், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் - இவை அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த ஆர்வமே துளிருக்கும் துளிர் இல்லத்திற்கும் ஒரு பெரும் ஆதரவாக மாறியது. இவர்களின் குழந்தைகள்தான் துளிர் இதழை ஆர்வமாக வாங்கிப் படித்தனர்; துளிர் இல்லங்களில் பங்கேற்றனர். நேர்மையாகச் சொல்வதானால், இந்தக் கீழ்-நடுத்தர வர்க்கப் பிரிவு இல்லையென்றால், துளிர் இவ்வளவு காலம் நிலைத்து நின்றிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவர்களே துளிரின் உயிர்நாடி ஆவர். கேள்வி 7: குழந்தைமை (childhood) குறித்த பார்வை காலப்போக்கில் எவ்வாறு மாறியது? இந்த மாற்றத்தில் துளிரின் பங்கு என்ன?  பதில்: அரவிந்தர் போன்றோர் குழந்தைகளை 'மலர்மொட்டுகள்' என்று அழைத்தனர். அவை தாமாகவே விரியும்; ஒவ்வொரு மலரும் தனித்த நிறமும், தனித்த மனமும் கொண்டிருப்பது போல, ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையுடன் மலரும் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தனர். எனினும் அறுபது, எழுபதுகளில் குழந்தைகளைப் பற்றிய பார்வை மிகவும் மாறுபட்டதாக இருந்தது. ஒரு கட்டத்தில், "குழந்தைகளை அடக்கி ஒடுக்கி வளர்க்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் ஒழுங்காக இருப்பார்கள்" என்ற ஒரு நம்பிக்கை நிலவியது. ஆனால் 1990களுக்குள், குறிப்பாகச் சிறுகுடும்ப முறை பரவலான பின்னர், இந்தப் பார்வை மெதுவாக மாறத் தொடங்கியது. இத்தகைய பார்வைகள் மக்களிடையே பேசப்படவும், ஏற்கப்படவும் தொடங்கின. இந்த மாற்றத்திற்காக நாங்கள் நிறைய உழைத்துள்ளோம். துளிர் அதன் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு கட்டுரையிலும், குழந்தைகளை மதிக்க வேண்டும், அவர்களின் கேள்விகளை ஊக்குவிக்க வேண்டும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும் - இந்தச் செய்திகளையே முன்னிறுத்தியது. துளிர் இல்லச் செயல்பாடுகள், குழந்தைகளை மையமாகக் கொண்டு இயங்கின. இத்தகைய சூழலில், 'குழந்தைகளை அறைந்து வளர்க்க வேண்டும்' என்ற பார்வை மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டது. இதில் துளிருக்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். கேள்வி 8: இன்று துளிரும் துளிர் இல்லமும் என்னென்ன முக்கியமான பங்குகளைச் செய்திருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பதில்: மொத்தத்தில், நான்கு முக்கியமான விஷயங்களுக்கு நாங்கள் உதவியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். முதலாவது, குழந்தைமை பற்றிய பார்வையையே மாற்றியிருக்கிறோம். குழந்தைகளை 'திருத்த வேண்டியவர்கள்' என்று பார்த்த அந்தக் கால மனநிலையிலிருந்து, அவர்களையும் மதித்து, அவர்களின் கேள்விகளை ஊக்குவிக்கும் ஒரு பார்வைக்கு மாற்றம் ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும். இரண்டாவது, 'செய்து பார்த்துக் கற்பது' என்னும் கல்வி முறை இப்பொழுது பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நாங்கள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய 'செய்துபார்' பகுதி இப்பொழுது கல்விப் பாடமாக மாறியுள்ளது. அதற்கு ஓரளவிற்கு அறிவியல் இயக்கமும், அதன் ஒரு பகுதியான துளிரும் காரணம் என்று நினைக்கிறேன். மூன்றாவது, அறிவியல் என்பது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல, அது ஒரு உலகப்பார்வை - சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி - இந்தக் கருத்தினை முன்னிறுத்தியதில் நாங்கள் முக்கியமான பங்கு வகித்துள்ளோம். நான்காவது, தமிழில் எதுவும் முடியும், சிறார்களுக்கான அறிவியலைத் தமிழில் எழுதலாம் - இதற்கு ஓர் உதாரணமாகத் துளிர் இருந்துள்ளது. இன்னும் நிறையச் செய்ய வேண்டும், ஆனால் துளிர் வேர்விட்டிருக்கிறது, இனியும் வளரும். இந்தப் பயணத்தில் பங்கு பெற்றிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. கேள்வி 9: துளிரில் வரும் கட்டுரைகள் மேலும் சிறார் இலக்கிய நயத்தோடும் மொழியோடும் வர வேண்டும் எனப் பலரும் விருப்பம் தெரிவிக்கிறார்களே? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: அறிவியல் இயக்கத்துக்காக நான் பேசுவது முறையாக இருக்காது என்றாலும், என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம், இது உண்மைதான். எங்களுக்கும் அதே ஆவல் உண்டு. ஆயினும் மூன்று செய்திகளை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவது, இன்று தமிழகத்தில் சிறார் இலக்கியத் துறையில் மிளிரும் பலரும் துளிரில் எழுதி வளர்ந்தவர்கள்தாம். எல்லோருமல்லை; ஆனால் கணிசமான நபர்கள் துளிரில் எழுதத் தொடங்கி வளர்ந்தவர்கள். இரண்டாவது, துளிர் ஒரு இயக்கம், வெறும் பத்திரிகை அல்ல. இதழ் என்றால் வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்வது. வணிக இதழ் என்றால் இலாபம் பார்ப்பது அல்லது குறைந்த பட்சம் நஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்வதுதான் முதல் இலக்காக இருக்கும். ஆனால் அறிவியல் பார்வையும் சமூக நீதி மனநிலையும் உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு இயங்கும் இயக்கம் என்பதால், துளிருக்குச் சிறார் வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்பது மட்டுமல்ல, அமைப்பு ரீதியாக இப்போன்ற விருப்பம் உள்ளவர்களைத் திரட்ட வேண்டும் என்கிற பொறுப்பும் இருக்கிறது. பிறக்கும்போதே யாருக்கும் தெளிவான செய்தித் தொடர்புத் திறன்கள் இருக்கப் போவதில்லை; இவற்றைக் கற்கும் இடமாகத் துளிர் செயல்படுகிறது. சிலர், துளிர் இதழைத் தொழில்முறை சார்ந்த இதழியலாளர்கள் கொண்டு நடத்த வேண்டும் - துளிரை அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் கூறுவதுண்டு. எனக்கு உடன்பாடு இல்லை. துளிரின் ஒரு முக்கியப் பணி, சிறார் உலகத்தைக் குறித்து கவலை கொண்டவர்களைத் திரட்டி அமைப்பாக இயங்கச் செய்வதும் ஆகும். ஆயினும், நிச்சயமாக முன்னேற்றம் காண மேலும் சிறப்பாக வடிவமைக்கவும் எழுதவும் நாங்கள் அனைவரும் முயல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சாலை செல்வம்   பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார். புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

  • நிதானமும் மகிழ்ச்சியே

    மகிழ்ச்சியூர் என்ற கிராமத்தில் பத்து நாள் திருவிழா தொடங்கியிருந்தது. திருவிழாவிற்காக விதவிதமான இராட்டினங்கள் அந்த ஊருக்கு வந்திருந்தது. அங்குள்ள குழந்தைகள் அனைவரும் இராட்டினத்தின் வருகையால் மகிழ்ச்சியாக இருந்தனர்.         சுழலும் இராட்டினம், பம்பரம் போல் சுற்றும் இராட்டினம், ஊஞ்சல் போல் மேலும் கீழும் சென்றுவரும் இராட்டினம், காப்பி கப் போன்ற வடிவத்தில் இராட்டினம் இப்படி பல வகையான இராட்டினங்கள் அங்கு வந்திருந்தது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இராட்சத இராட்டினமும் வந்திருந்தது.       திருவிழா கூட்டத்தைவிட அந்த  இராட்சத ராட்டினத்தினை பார்க்க மக்கள் கூட்டம் அதிகமாக வந்திருந்தது.    தன்னை பார்க்க வரும் மக்களைக் கண்டு பெருமிதம் கொண்டது இராட்சத ராட்டினம் . அது பிற இராட்டினங்களை எப்போதும் கேலி செய்து கொண்டே இருந்தது.       ஒரு நாள் வழக்கம் போல இராட்சத இராட்டினம் ஓடிக்கொண்டு இருக்கும் போது மின்சாரக் கோளாறால் தடைப்பட்டு போனது.  அவ்வளவு தான் இராட்டினத்தில் இருந்த அனைவரும் கூச்சலிடத்தொடங்கினர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு இராட்டினத்தில் இருந்தவர்கள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.      திருவிழாவிற்கு இராட்டினம் ஆட ஆவலோடு வந்தவர்கள் . பழுதான இராட்டினத்தைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர். தாத்தவோடு இராட்டினம் ஆடும் ஆசையில் வந்த கிரிஷ் இராட்டினம் பழுதான செய்தி கேட்டு வருத்தப்பட்டான்.  தாத்தாவோ மற்ற இராட்டினங்களில்  ஆடுமாறு  கூறினார்.    கிரிஷ் மறுத்துவிட்டான்.  ஆடினால் இராட்சத இராட்டினம் தான் ஆடுவேன் என்று அடம்பிடித்தான். இல்லையென்றால் வீட்டுக்கு போகலாம் என்றான் .  தாத்தாவும் அவனை சமாளிக்க வேறு வழி தெரியாது வீட்டுக்கு போகலாம் என்று முடிவு எடுத்தார். கிளம்பி போகும் போது எதிரில் வந்தவரை தாத்தா கூர்ந்து பார்த்துவிட்டு "  டேய் சோமு நீயா " என்றார்.  " ஆமா, நீங்க யாரு " என்று கேட்டார் பெரியவர் . "என்னைத் தெரியலையா நான் தான் நான் தான்டா உங்கூட அஞ்சாப்பு வரை ஒன்னா படிச்ச கணபதி" என்றார்  தாத்தா. " டேய் நீயா , அடையாளமே தெரியலடா " என்ற படி தாத்தாவை கட்டியணைத்தார்.   "திருவிழாவுக்கு வந்தியா, இது யாரு உன் பேரனா"  என்றார் சோமு தாத்தா. " ஆமா டா , இவன் என் பேரன் தான் . இராட்டினம் ஆடனும்னு சொன்னான் கூட்டுவந்தேன்.  ஆனா அது ரிப்பேரா இருக்குனு சொல்லிட்டாங்க அதான் வீட்டுக்கு போறோம்" என்றார் தாத்தா. " அட அதான் என்னோட இராட்டினம் இருக்குல வா அதுல ஆடலாம்" என்றார் சோமு தாத்தா .  "எங்க உன்னுடைய இராட்டினம்" என்ற கணபதி தாத்தா கேட்கவும் "அதோ பார் " என்று கை காட்டினார் சோமு தாத்தா. அவர் கைகாட்டிய திசையை ஆவலோடு பார்த கிரிஷின் முகம் வாடி போனது.தாத்தா கை காட்டிய இடத்தில் ஒரு குடை இராட்டினம் நின்றது. பல வண்ண நிறங்களில் குடைபோன்ற அமைப்பைக் கொண்ட  அதில் வெள்ளை நிற குதிரை, சாம்பல் நிற மான், வெள்ளையும் கருப்பும் வரிவரியாக கலந்த வரிக்குதிரை,தலையின் முன் பகுதியில் கொம்பு வைத்த யூனிக்கான் குதிரை என பல மிருகங்களின் உருவ பொம்மைகளோடு   இருந்தது அந்த இராட்டினம்.  மற்ற இராட்டினங்களைப் போல மின் இயக்கியால் இயங்காததால் கைகளால் இயக்கப்படும் அது மிக மெதுவாக இயங்கியது. " ஐய்யே இதுல்லாம் நான் ஆடமாட்டேன் பா " என்று முகத்தை சுழித்தான் கிரிஷ் கிரிஷ் இப்படி சொல்லவும் சோமு தாத்தா முகம் வாடியது. அதுக்கண்ட கணபதி தாத்தா "அப்படிலாம் சொல்லக்கூடாது கிரிஷ் " என்று கண்டித்தார்.  " பரவாயில்லை விடுப்பா, உன் பேரன் மட்டும் இல்ல இங்க வர்ர பசங்க யாருக்குமே என்னோட இராட்டினம் பிடிக்க மாட்டுக்கு . மற்ற இராட்டினம் மாதிரி வேக போகாதுனு யாருமே இங்க வரமாட்டாங்க தெரியுமா " என்று வருத்தப்பட்டார் சோமு தாத்தா. சோமு தாத்தா வருந்துவதைக் கண்ட கணபதி தாத்தா கிரிஷ்யிடம் "எனக்காக ஒரு முறை இதில் ஆடிபாரு. பிறகு உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ இறங்கிவிடலாம் " என்றார்.  தாத்தா சொன்னது போல கிரிஷ்ம் குடைராட்டினம் ஆட ஒத்துக்கொண்டான். ராட்டினத்தில் உள்ள யூனிக்கான் குதிரையில் அவனை அமரவைத்தார் தாத்தா.  இராட்டினம் முதலில் மெதுவாக சுற்றத் தொடங்கியது. கிரிஷ்கு இப்படி மெதுவாக சுற்றுவது பிடிக்கவில்லை . ஆனாலும் தன் தாத்தாவிற்காக அதில் இருந்தான். சிறிது நேரத்திலேயே அந்த இராட்டினத்தின் அருகில் மற்றொரு குழந்தையும் வந்தான். வெள்ளை நிற குதிரையில் ஆட வேண்டும் என்று கூறினான். உடனே அவனையும் அந்த குதிரையில் ஏற்றிவிட்டார் தாத்தா. இரு குழந்தைகள் தன் மேல்  ஏறிய மகிழ்வில்  இராட்டினம் சீரான வேகத்தில் சுற்றத்தொடங்கியது.   கொஞ்ச நேரத்தில் இன்னும் சில குழந்தைகள் வந்துசேர இப்போது இராட்டினம் முழுவதும் குழந்தைகளால் நிறைந்தது. ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கு பிடித்தமான பொம்மையில் அமர்ந்து கொள்ள அந்த பொம்மையை உண்மையான குதிரை,மான் போல் எண்ணி அதை ஓட்டுவது போல சைகைகள் செய்து மகிழ்ந்தனர். அதனைக்கண்டு உற்சாகமான இராட்டினம் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாக சுற்றியது. வேகமாக சுழலும் இராட்டினத்தை விட நிதனாமாக இயங்கும் இராட்டினம் அதிக மகிழ்ச்சி அளிப்பதை புரிந்து கொண்டான் கிரிஷ். ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார். முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.

  • மறதி நல்லது!

    மின்னி அணில், பின்னி யானையைப் பார்த்தால் எப்போதும் வியக்கும். “அடடா… என்ன ஒரு பெரிய உடம்பு! என்ன ஒரு வலிமை! நானும் இப்படியா இருந்தால் என்ன?” என்று நினைக்கும். அதே நேரத்தில்,  “இந்த மின்னி எவ்வளவு சின்னது! எங்கே வேண்டுமானாலும் ஓடிவிடும்… மரத்துக்கு மேல் ஏறிவிடும்… நம்மால் முடியாது?” என்று கொஞ்சம் பொறாமையாக நினைக்கும் பின்னி யானை.  இருவரும் நல்ல நண்பர்கள் தான்… ஆனால் உள்ளுக்குள் சிறிய பொறாமையும் இருந்தது. ஒரு நாள், அவர்கள் இருவரும் ஓடிப்பிடி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மின்னி ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு தாவிக் கொண்டே ஓடியது. பின்னி சிரித்துக்கொண்டே மரத்தின் அடியில் ஓடியது. "மின்னி  நீ நேற்று தானே கூறினாய், இனிமேல் ஓடிப் பிடித்து விளையாடும் போது நான் மரத்தின் மேல் ஏற மாட்டேன் என்று. ஆனால் இன்று மரத்தின் மேல் ஏறுகிறாய் என்னால் எப்படிப் பிடிக்க முடியும்?" இன்று கோபமாக கேட்டது பின்னி யானை.  "ஐயையோ பின்னி நான் மறந்தே விட்டேன். மன்னித்துக்கொள்!" என்றது சோகமாக.  அந்த நேரம் ஒரு மயில் அகவியது.  அந்த சத்தம் கேட்ட உடனே பயத்தில் வேகமாக மரத்தின் உச்சியில் ஏறி நின்றது. அணிலின் வால்  வேக வேகமாக ஆடியதை பார்த்தவுடன் அணில் பயப்படுகிறது என்பதை உணர்ந்த யானை  "இது காட்டில் வழக்கமாகக் கேட்கும் சத்தம் தானே, இதற்கு எதுக்குப் பயன்படுகிறாய்?   குயில் கூவினால் கூட  பயப்படுகிறாய்.  சின்னப் பூச்சி பறந்து வரும் சத்தம் கேட்டால் பயப்படுகிறாய். மரத்திலிருந்து இலை  விழும் சத்தம் கேட்டாலும் பயப்படுகிறாய். இப்படி எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாய். நான் இருக்கிறேன் கீழே இறங்கி வா" என்று கூறியது பின்னி யானை.  மெதுவாக கீழே இறங்கி வந்த அணில் "நான் சரியில்லை. நீ சொல்வது சரிதான். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறேன். எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். அவசரக்குடுக்கையாக இருக்கிறேன். என்னால் யாருக்குமே பயனுமில்லை" என்று கூறி அங்குமிங்கும் ஓடிக்கொண்டே அழ ஆரம்பித்தது.  "அடடா இதற்கெல்லாம் அழலாமா நண்பா!  அப்படியெல்லாம் நினைக்காதே!  முதலில் பேசும்போது பொறுமையாக கேள். ஓரிடத்தில் நில். உன்னாலும் ஏதாவது ஒரு பயன் இந்த பூமிக்கு இருக்கும். அதைக் நாம் கண்டுபிடிக்கலாம்" என்று கூறியது பின்னி யானை.  எவ்வளவு கூறியும் அணில் சமாதானமாகவில்லை.  "சரி நண்பா நாளை வருகிறேன். நீ தூங்கி எழுந்து விடு. அப்போது நீ சரியாகி விடுவாய், ஆனால் உன்னால் ஏதாவது ஒரு நன்மை இந்த பூமிக்கு இருக்கும் அதை நாம் கண்டுபிடித்து விடலாம்" என்று கூறியது பின்னி யானை. எதுவும் பேசாமல் மெதுவாக  ஆலமரத்தின் மேல் சென்று அமர்ந்தது. ‌பின்னி யானை எவ்வளவு சமாதானப்படுத்தியும் மின்னி அணில் சமாதானமாகவில்லை.  மின்னி அணில் அன்று முழுவதும் யாரிடமும் பேசவும் இல்லை.  விளையாடவும் இல்லை. 'என்னால் எந்தப் பயனும் இல்லையா? நான் எதற்காக வாழ வேண்டும்? யானை மாதிரி பெரிதாக இருந்திருந்தால் அது எப்படி சாணத்தின் வழியாக எப்படி காட்டை உருவாக்குகிறதோ அது போல் நாமும் உருவாக்கி இருக்கலாம். நான் மட்டும் ஏன் இவ்வளவு சிறிதாக யாருக்கும் பயனில்லாதவனாக இருக்கிறேன்?'  என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு  சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.‌ அதை பார்த்த ஆலமரம் “மின்னி… ஏன் இப்படி ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறாய்? நீ அப்படி அமர் பவன் கிடையாதே? உன்னை பார்த்தாலே எனக்கும் சுறுசுறுப்பு வரும் எனக்கு உன்னைப் போல் ஓட வேண்டும் என்று ஆசையாக இருக்கும். நீ இப்படி இருப்பது சரி இல்லை. என்னவாயிற்று உனக்கு?" என்று கேட்டது.  “இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பயன் உள்ளவர்களாக இருக்கிறார்கள். உன்னை எடுத்துக் கொள் எவ்வளவு பேருக்கு வீடாக இருக்கிறாய் எவ்வளவு பேருக்கு நிழல் கொடுக்கிறாய்.‌ ஆனால் எங்களால்  என்ன பயன்? எங்கள் இனத்தால் இந்தக் காட்டுக்கு இந்த பூமிக்கு என்ன பயன்?  நான் எதற்காக வாழ வேண்டும்? நான் ஒரு அவசர குடுக்கை நான் ஓடிக்கொண்டே இருப்பேன் நான் எதற்கெடுத்தாலும் பயப்படுவேன் நான் எல்லாவற்றையும் மறந்து விடுவேன். என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருக்கிறது" என்று கூறிவிட்டு மரத்தின் உச்சிக்கும் அடிக்கும் ஏறி இறங்கிக் கொண்டே இருந்தது.  ஆலமரம் சிரித்தது. “அட மின்னி! நீ இப்படிச் சொல்றதெல்லாம் சரியில்லை. நீ அப்படியா நினைக்கிறாய்? உன்னை யார் இப்படிக் குழப்பி விட்டது?"  "யாரும் இல்லை எனக்கே நீண்ட நாட்களாக இந்த யோசனை இருந்து கொண்டே இருக்கிறது"என்று தன் முன்பற்களால் ஆலம்பழத்தை கொறித்தபடியே கூறியது மின்னி அணில். "நான் இங்கே இருக்கிறேன் என்றால்… அதற்கு உன் கொள்ளுத்தாத்தா காரணம்!” என்றது ஆலமரம்.  மின்னி அதிர்ச்சியுடன் “என்ன!? என் கொள்ளு தாத்தா வா!? சரி சரி… சும்மா விளையாடாதே! என்னை சமாதானப்படுத்த இப்படி எல்லாம் கூறாதே!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தாவியது.  "அட உண்மைதான்! அதுவும் உங்கள் இனத்திற்கே இருக்கும் மறதி தான் மிக முக்கிய காரணம்" என்று கத்தி கூறியது.  "என்னது மறதியா? இதை என்னை நம்பச் சொல்கிறாயா?" என்று தலையை வலதும் இடமும் ஆட்டிவிட்டு இன்னும் வேகமாக தாவியோடி  ஓடிக் களைத்து ஒரு நெல்லி மரத்தின் மேல் அமர்ந்தது.  வேகமாக பெருமூச்சு விட்டபடியே சோகமாக அமர்ந்திருந்தது.  மின்னி அணிலை பார்த்த நெல்லி மரம் “என்ன மின்னி… முகம் ஏன் சோர்ந்து இருக்கிறது?” என்று கேட்டது.  மின்னி நடந்ததை எல்லாம் சொன்னது. நெல்லி மரம் சிரித்து. “அட மின்னி! நான் இங்கே இருக்கிறேனே… அதற்கு உன் அப்பாதான் காரணம்!” என்று கூறியவுடன், மின்னி முகம் சுளித்து. “அடடா! நீயும் ஆலமரம்  போலவே பேசுறே!. எல்லோரும் என்னை சமாதானப்படுத்த பார்க்கிறீர்கள்" என்று சொல்லி தாவியது. "அட உன்னை யாரும் சமாதானப்படுத்தவில்லை. ஆலமரம் கூறியது சரிதான். உங்கள் இனத்தின் மறதியால் தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்" என்று சத்தமாக கூறியது.   மின்னி அணில் நெல்லி மரம் கூறியதை காதில் வாங்கியபடியே  வேகமாகத் தாவி ஓடியது. ஓடி ஓடிக் களைத்து முடிவாக அடுத்து அது ஒரு பெரிய அத்தி மரத்தின் மீது ஏறியது. அத்தி மரமும் "நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?" என்று கேட்டவுடன் நடந்தவற்றையெல்லாம் அத்தி மரத்திடம் கூறியது மின்னி அணில்.  “மின்னி… நான் இங்கே வளர்ந்தது உன் பாட்டி புதைத்த விதையால்தான்!” என்று அத்தி மரம் மெதுவாகச் சொன்னது மின்னி சிரித்தது.  “இப்போ எல்லாரும் இதே மாதிரி தான் பேசப் போறீங்களா?” என்று சொல்லிக்கொண்டே தாவியது. அது தொடர்ந்து. பல மரங்களிடம் சென்றது… ஒரு வில்வ  மாமரம் “உன் தாத்தா காரணம்!” ஒரு வேம்பு   மரம் “உன் அம்மா காரணம்!” ஒரு இலுப்பை மரம்  “உன் முன்னோர்கள் காரணம்!”  அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் இதையே சொன்னன.  “உன் குடும்பத்தால்தான் நாங்கள் வளர்ந்தோம்!”  “உன் மறதியால்தான் இந்த விதைகள் முளைத்தது!” மின்னி இன்னும் குழப்பமாகியது  அப்போது மின்னிக்கு திடீரென்று பசி வந்தது. “அய்யோ! நேற்று ஒரு பழத்தை எடுத்து வந்து புதைத்து வைத்தேனே… எங்கே வைத்தேன்?” என்று யோசித்தபடியே தேடியது. தேடியது… தேடியது… ஆனால் கிடைக்கவே இல்லை! அது சோர்ந்து அத்தி  மரத்தின் அடியில் அமர்ந்தது. அத்தி  மரம் சிரித்தது. “பசிக்கிறதா மின்னி?” “ஆமாம்… நான் வைத்த இடத்தை மறந்துட்டேன்…” “பரவாயில்லை!  மறதி நல்லது தான். என் பழங்களை சாப்பிடு!” என்றது. மின்னி சாப்பிட்டது… அப்போது அருகில் ஒரு சிறிய செடி  “மின்னி அக்கா! நான் உங்களால் தான் வந்தேன்!” மின்னி ஆச்சரியத்தில் “என்ன!? நீயா!?” “ஆமாம்! நீ கடந்த மாதம் தாங்கள் புதைத்து மறந்த விதையிலிருந்து தான் நான் வளர்ந்தேன்!” மின்னி கண்கள் பெரிதானது. “அப்போ… நான் மறந்ததால்தான் நீ வளர்ந்தாயா?” “ஆமாம்!” என்றது செடி. உண்மையை புரிந்த மின்னி அணில் மகிழ்ச்சியுடன் குதித்தது.  “அப்போ நான் உதவி செய்கிறேன்! நான் புதைத்த விதைகள் மரங்களாக மாறுது! என் தாத்தா பாட்டி எல்லாரும் இதே மாதிரி தான் செய்திருக்கணும்!”    உடனே தன் நண்பன் பின்னி யானையை தேடி ஓடியது. “பின்னி! பின்னி! நான் முக்கியமானவன்!” பின்னி சிரித்துக்கொண்டே “என்ன மின்னி?” என்று கேட்டது. “ நீயும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவனாக இருப்பாய் கண்டு பிடித்து விடலாம் என்று நேற்று நீ சொன்னாயே நான் கண்டுபிடித்து விட்டேன்" "அடடா அப்படியா!  நீ எந்த வகையில் பயனுள்ளவனாக இருக்கிறாய்?" "உன்னைப்போல் நானும் இந்தக் காட்டை உருவாக்க உதவி செய்கிறேன்!"  அப்படியா என்று தன் இரண்டு காதுகளையும் முன்னும் பின்னும் அசைத்தபடியே கேட்டது பின்னி யானை.  நான் சாப்பிட்டு முடித்துவிட்டு மீதி இருப்பதை எங்காவது புதைத்து வைத்து விடுவேன். சில நேரங்களில் தோண்டி எடுத்து விடுவேன் பெரும்பாலான நேரங்களில் என் மறதியின் காரணமாக எங்கே புதைத்தேன் என்றே மறந்து விடுவேன். நான் மட்டுமல்ல என்னுடைய இனத்தைத் தேர்ந்த எல்லோரும் அப்படித்தான்"  "அதுதான் எல்லோருக்குமே தெரியுமே அதில் என்ன இப்போ?" ” அப்படிப் புதைத்துவிட்டு மறந்து போன  விதைகள் எல்லாம் மரங்களாக வளருது!” என்று தன் வாலை ஆட்டியபடியே தன் முன்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே கூறியது  மின்னி அணில். பின்னியும் சிரித்தது. “அப்படியா! அப்போ நீயும் ரொம்பப் பெரிய வேலை பண்ணுறே! இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்போது நீ உணர்ந்து கொண்டாயா" என்று தன்னுடைய தும்பிக்கையை அணிலின் உடம்பின் மீது வைத்து தடவியபடியே கேட்டது யானை.  மின்னி தன் மறதியை எண்ணிப் பெருமை கொண்டது.  மறதி நல்லது என்று சொன்னது பின்னி  யானை. "ஆமாம் !ஆமாம் மறதி நல்லது தான்" என்று தன் புசுபுசுவாலை ஆட்டியபடியே கூறியது மின்னி அணில். சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (நெல்லை கிளை) சார்பில் மார்ச் 9 2026 அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (வல்லநாடு தெற்கு) மாணவர்களுக்கு பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி கொடுக்கப்பட்டது. எழுத்து கண்டுப்பிடிக்காத கற்காலத்தில், தனது எண்ணங்கள், வாழ்வனுபவங்கள், உணர்வுகள் என அனைத்தையும் பாறைகளில் ஓவியமாக மனிதன் பதிவு செய்தான். பழங்கால மனிதனின் கைகளில் இருந்த கலை மொழி, இன்று வல்லநாடு அரசு பள்ளி மாணவர்களின் கைகளில் மீண்டும் உயிர்ப்பெற்றது! ஓவியம் என்பது கலை மட்டுமல்ல; காற்றில் கரையும் பேச்சுப் போல் அல்லாமல், காலம் கடந்தும் தன் சந்ததியினருக்கு அறிவை கடத்தும் கருவி! ஒலியற்ற மொழி!! மிகவும் எளிய கருவிகளாலும், இயற்கை பொருட்களாலும் அழகான கலை உருவாக்க முடியும் என்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது! மேலும், கலைத் திறமைகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளும் இருப்பதை திரு. லெனின் அவர்கள் எடுத்துரைத்தார். திரு. லெனின் அவர்கள் பாறை ஓவியங்களின் நுட்பங்களை மாணவர்களுக்கு அழகாக கற்றுக்கொடுத்தார். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தாங்களே உருவாக்கிய கலைப்பணிகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஒருவரின் படைப்பை மற்றொருவர் பாராட்டிய தருணங்கள் மனதை நெகிழச் செய்தன. மாணவர்களின் உற்சாகத்தை பார்த்து, ஆசிரியர்களும் பாறை ஓவியம் வரைய ஆரம்பித்தது நிகழ்ச்சிக்கு மேலும் உயிரூட்டியது. பள்ளி வளாகம் முழுவதும் கலை, சிரிப்பு, ஆச்சரியம், ஆர்வம் நிறைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி டிலைட் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், “பள்ளி மாணவர்களுக்கு இப்படிப் பட்ட கலை அனுபவம் கிடைக்க வேண்டும்” என்ற எண்ணத்துடன் எங்களை தொடர்பு கொண்ட திரு. வேலாயுதம் ஆசிரியர் அவர்களுக்கும் எங்களின் சிறப்பு நன்றி. நிகழ்ச்சியின் போது மாணவர்களுடன் இணைந்து கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு அனைவரையும் ஊக்கப்படுத்திய திருமதி. ஜெயந்தி மற்றும் பிற ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இது போன்ற முயற்சிகள் மூலம் மேலும் பல பள்ளிகளில் குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர முடியும் என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் - திருநெல்வேலி கிளை.

  • தத்துவம் அறிவோம் - 13

    அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாய் யார்? மனித குலவரலாறு முழுவதும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஆனது. மனிதகுலம் அறிவியல் கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்தியே முன்னேறி வருகிறது. அறிவியல் இல்லை என்றால் மாற்றம் இல்லை. முன்னேற்றம் இல்லை. அப்படி என்ன அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்தார்கள்? வேட்டைச் சமூகமாக இருந்த போது கற்களைப் பயன்படுத்தி வேட்டையாடினார்கள். இது அறிவியல் கண்டுபிடிப்பா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக.  1.முதலில் கிடைத்த தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நமது மூதாதையர்கள் கருவியை அதாவது கற்களைப் பயன்படுத்தி உணவு தேடலாம் என்று கண்டுபிடித்தார்கள். 2.முதலில் கையில் கிடைத்த கற்களைப் பயன்படுத்தினார்கள். பிறகு அந்தக் கல்லைக் கூர் தீட்டிப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார்கள். அது இன்னும் எளிதாக வேட்டையாட உதவுகிறது.   3.முதலில் வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தை அப்படியே பச்சையாகச் சாப்பிட்டார்கள். இதில் இன்னொரு விஷயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் அனைத்து மனிதர்களும் மாமிசம் சாப்பிடுபவர்கள் தான். அதாவது எல்லாரும் நான்வெஜ் சாப்பிட்டிருக்கிறார்கள். நாங்கள் வெஜ் என்று இப்போது சொல்வதைப் போல அப்போது யாரும் கிடையாது. அப்படியா? என்று கேட்கிறீர்களா? நான்வெஜ் சாப்பிட்ட தால் தான் நம்முடைய உடலுக்கும் மூளைக்கும் தேவையான புரோட்டீனும் மற்ற மினரல்ஸும் சுலபமாக் கிடைத்தது.  இன்னொன்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். கண்ணாடி முன்னால் நில்லுங்கள். வாயை ஆ வெனத் திறந்து பாருங்கள். இரண்டு பக்கமும் சிங்கப்பல் இருக்கிறதா? மாமிசம் சாப்பிடும் விலங்குகளைப் பாருங்கள். இரண்டு பக்கமும் சிங்கப்பல் இருக்கிறதா? அது எதுக்காம்? மாமிசத்தைக் கிழித்துச் சாப்பிடுவதற்காகத் தான். தெரிந்ததா? ஆக, முதலில் எல்லாரும் மாமிசம் சாப்பிடுபவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள். என்ன சரியா? 4.முதலில் பச்சையாக மாமிசத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த மனித இனத்தின் முன்னேற்ற த்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். கரெக்ட். நீங்கள் நினைத்த து சரிதான். நெருப்பு. அதுவரை இயற்கையாக காடுகளில் திடீர் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ மட்டுமே தெரியும்.. அந்த த் தீயில் வெந்த விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவதற்கு எளிதாக இருக்கிறது என்று தெரியும். ஆனால் அந்த த் தீயைச் செயற்கையாக உருவாக்க முடியுமா? என்று அப்போது தெரியாது. இரண்டு கற்கள் வேகமாக உரசும் போது எழுந்த தீப்பொறி தான் அடுத்த கண்டுபிடிப்பு.  தீப்பொறியைத் தீயாக்கினார்கள். தீயில் மாமிசத்தைச் சுட்டுச் சாப்பிட்டார்கள். அவர்கள் தங்கியிருந்த குகைகளில் தீயைக் காப்பாற்றி வெளிச்சமாகப் பயன்படுத்தினார்கள். வெளிச்சம் கொடிய விலங்குகளை விரட்டுவதையும் தெரிந்து கொண்டார்கள். சமைத்த மாமிசத்தைச் சாப்பிட்ட போது வயிற்றில் சுலபமாகச் செரிமானம் நடந்த து.  அதனால் பச்சை மாமிச த்தைச் சாப்பிடும் போது செய்த வேலைகளைக் குடல் செய்யத் தேவையில்லை.  அதன்விளைவு? அதிகமான என்சைம்களும், மினரல்ஸும் மூளைக்குச் சென்றன. மூளையின் செயல்பாடுகள் விரிவடைய த் தொடங்கியது. இன்றும் கூட பத்து கணினிகளின் வேலையை நம்முடைய மூளை செய்கிறது. அதற்குக் காரணமான கண்டுபிடிப்பு எது தெரியுமா? நெருப்பு.  5.முதலில் ஒரே இட த்தில் இருந்து கொண்டு அங்கே கிடைத்த பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விலங்குகள், பறவைகள் இவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த இட த்தில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது முதன்முதலாக  உயிர்வாழ வேண்டும் என்றால் வேறு இட த்துக்குப் போக வேண்டும் என்று பயணம் செய்தார்கள்.   அந்தப் பயணம் தான் மனித இனத்தின் அடுத்த கண்டுபிடிப்பு.  அதனால் தான் ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனிதர்களின் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  அப்படியா? என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் அம்மாவிடமும் அப்பாவிடமும் கேட்டுப்பாருங்கள். அவர்களுடைய சொந்த ஊர் எது? அவர்களுடைய பெற்றோர்களின் சொந்த ஊர் எது? அவர்களுடைய தாத்தா பாட்டிகளின் சொந்த ஊர் எது? அவர்களுடைய அப்பா அம்மாவின் சொந்த ஊர் எது? அவர்களுடைய தாத்தா பாட்டிகளின் சொந்த ஊர் எது? அவர்களுடைய …. சரி சரி போதும் என்கிறீர்களா? இப்படியே நாம் நம்முடைய பூர்வீகத்தைத் தேடி ஒரு துப்பறியும் பயணம் போனால் என்ன? அது எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும்? இந்தக் கேள்விக்குத் தான் உங்களுக்கு விடை தெரியுமே. அது என்ன? ஆப்பிரிக்கா. இன்னும் பல கண்டுபிடிப்புகளை அடுத்த மாதம் பார்ப்போம். ( அறிவோம் தெளிவோம் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.  சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்  பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்  விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • ஆனை – புலி

    ஆனைக் கன்று கரும்புக் காட்டில் ஆடி நுழைந்ததே! தேனாய் இனித்த கரும்புகளைத் தேடித் தின்றதே! பசி கொண்ட புலி அங்கே பதுங்கி மறைந்ததே! ஆனை மீது பாய்ந்ததம்மா அய்யோ வேடிக்கை! தும்பிக் கையால் கோபத்தில் ஆனை  சுழற்றி அடித்ததே!  பயந்து புலியும் பாயந்து ஓடிப் புதரில் சரிந்ததே!  ஆனை அடிக்கப் புலியின் வரிகள்  அழிந்து போயின!  பூனை போல நகர்ந்து புலியும்  பொந்தில் ஒளிந்ததே! கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

  • பயந்தாங்கோலி சிங்கம்... இளவரசனும் மந்திர மோதிரமும்...

    பயந்தாங்கோலி சிங்கம்- எழுத்தாளர் - சே.யுவராஜ் (ஐந்தாம் வகுப்பு) நூல்-இளவரசனும் மந்திர மோதிரமும் - எழுத்தாளர்- ஆ.கௌதம் சந்திரன். " எம் புள்ளைங்கள நாங்கூட இப்படி பக்கத்துல உட்கார வச்சி பேசியிருக்கமாட்டேன், ஆனா எங்க முகிலன் சார் தான் பத்து வயசுல எம்மகனை ஒரு எழுத்தாளரா அடையாளம் காணவச்சாரு, எப்பவுமே அவருக்கு எங்க குடும்பம் நன்றி சொல்லக் கடைமைப்பட்டிருக்கு" குரல் தழுதழுக்க எழுத்தாளர் யுவராஜ் அவர்களின் அம்மா தன் மகிழ்வினைப் பகிர்ந்தபோது அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது. வகுப்பறைப் பாடங்களை மட்டுமல்லாது வெளியுலகத்தை நோக்கி குழந்தைகளின் பார்வை எவ்வளவு கூர்ந்துள்ளது என்பதை அனைத்து ஆசிரியர்களாலும் தனித்தறிய முடிந்தாலும், அவை நல்லனவாகவும், அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்குமாயின் அதற்கொரு நல்ல வழிகாட்டலாக இருந்து, அக்குழந்தைகளை இவ்வுலகத்திற்கு புகழ்தரக்கூடிய புதியவராக அடையாளப்படுத்துபவர்கள் சிலரே. அவ்வகையில் தம்பணிக்கு உண்மையுள்ளவராக பிற ஆசிரியர்களுக்கு உதாரணமாகவும் இருக்கிறார், நல் ஆசிரியரும் எழுத்தாளருமான மதிப்புமிகு முகிலன் அவர்கள். இனிய வாழ்த்துகள். சிங்கம் னா எந்நேரமும் உர்ர்ன்னு இருக்கனும், பிற மிருகங்களோட சண்டை போட்டு ஜெயிக்கனும், அப்புறம் யானை, புலி, குரங்கு, மான் இன்ன பிற எல்லா மிருகங்களுக்கும் ராஜாவா இருக்கனும் அப்படிங்குற மாறாத விதியை மாத்திப் பார்த்தா எப்படி இருக்கும்னு சொல்றதுதான் இந்த  "பயந்தாங்கோலி சிங்கம்" என்ற நூல்.  இந்த நூலின் ஆசிரியரான யுவராஜ், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். 'அமைதி ஒரு நாளும் கோழைக்குரிய அடையாளம் அல்ல' , 'வாழ்க்கையில் நிதானம் ரொம்ப முக்கியம்' ஆகிய  கருத்துகள் கதையின் கருக்களாக அமையப்பெற்று ஒரு கதையாக வடிமேற்றிருக்கிறது இந்நூல். நூலாசிரியருக்கு எனது வாழ்த்துகள். **** குழந்தைகள் பேசும் ஒரு சொல்லுக்கு கூட இனிமை உண்டு. அதுவே அவர்கள் ஒரு விசயத்தை கதையாக உருவகித்து நம்மிடம் பகிரும் போது அவர்களின் உலகம் நம் கண் முன் கொஞ்சம் கொஞ்சமாக விசாலமாகிக்கொண்டே வருவதை பெருமையோடு காணுதல் எத்தனை கொடுப்பினை இல்லையா? அப்படியாகத்தான் 'இளவரசனும் மந்திர மோதிரமும்' என்று நூலுக்கு தலைப்பிட்டு ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவன்,  ஒரு நூலாசிரியராக உயர்ந்திருக்கிறார். அவரது பெயர் ஆ.கௌதம் சந்திரன். இவ்வுலகில் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதில்லை. ஆனால் கிடைத்தவற்றைக் கொண்டு தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்ளுதல் எல்லோராலும் சாத்தியமாக்கிவிட முடியும் என்பதுகூட சந்தேகம்தான். எழுத்தாளர் கௌதம் அவர்களின் கதையில் " ஒருவர் அடுத்தடுத்து புரியும்  நற்செயல்கள் மற்றும் அதனால் உண்டாகும் பலன்கள் குறித்து எழுதியிருக்கிறார்.  அதுமட்டுமல்ல அவர் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நிறைவாக வாழவேண்டுமென்று விரும்புகிறார். அந்த சின்னஞ்சிறு மனதில் இப்படியொரு சிந்தையை விதைத்தது அவரது தாய்மாமாவாகவும் இருக்கலாம் என்பதை அவர்களோடான உரையாடலால் புரிய வந்தது. ஒரு குழந்தை, தான் வளரும் சூழலை எப்படியெல்லாம் கிரகித்து அதன்படி தனது பண்பினை, குணத்தினை, செயல்பாடுகளை உருவமைத்துக் கொள்கிறதென்பதற்கு உதாரணம் தான் இந்த எழுத்தாளர் என்று எண்ணத் தோணுகிறது. மேற்கூறிய இரண்டு நூல்களும் மிகச் சிறப்பு. இரு நூலாசிரியர்களுக்கும் பாராட்டுகள். மிக முக்கியமாக தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் 'இன்னும் இன்னும் உங்களால் முடியும்' என்று உற்சாகப்படுத்தி வழிகாட்டும் ஆசிரியர் ச.முகிலன் போன்ற மற்ற ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகள்

  • வாண்டுகளின் நூலகம்

    அன்னைத் தமிழே - என்  ஆவி கலந்தவளே என்னை வளர்ப்பவளே என்னில் வளர்பவளே எனத் துவங்கும் நான்காம் வகுப்புப் பாடலை ஏற்ற இறக்கத்துடன் சத்தமாக வாசித்தாள் செம்மொழி. வாசித்து முடித்ததும் தமிழம்மா முதலில் கைத்தட்டினார். அடுத்த நொடி வகுப்பில் அனைவரும் கைத் தட்டினார்கள். மொழியின் முகத்தில் பெருமிதம் மிளிர்ந்தது.  அன்றோடு கல்வியாண்டு முடிவடையப் போகிறது. மூன்றாம் வகுப்பு பரிட்சை அன்று காலையில் தான் முடிந்தது. பள்ளி கடைசி மணியடிக்க அரை மணி நேரம் தான் இருந்தது. அந்த நேரத்தில் வகுப்புக்குள் வந்தார் தமிழம்மா. அவருடைய கையில் நான்காம் வகுப்பு தமிழ் புத்தகம். அது ஆங்கில வழிக் கல்வி நிறுவனம் என்பதால் பிள்ளைகள் எல்லோரும் ஆங்கிலத்தில் சடுகுடு விளையாடுவார்கள்.  ஆனால் தமிழ் தத்துப்பித்து என தந்தியடிக்கும். அதனால் பிள்ளைகளுக்கு தமிழம்மாவைப் பார்த்தாலே உடல் கொஞ்சமாக நடுங்கும். அனைவரும் திருதிருவென விழித்துக் கொண்டு தங்களுக்குள் முனுமுனுத்தனர்.  தமிழம்மா அழகாக சிரித்தார். "பிள்ளைகளா அடுத்த வருசம் நாலாம் வகுப்பு போறீங்க. எப்படி தமிழ் வாசிக்கிறீங்க பார்க்கலாமா? ஒவ்வொருத்தரா எந்திரிச்சு வாசிக்கனும். வரிசையா வாசிங்க" என்றார்.  முதல் இருக்கையில் இருந்து துவங்கியது. யாருமே சரியாக வாசிக்கவில்லை. ஒவ்வொருவரின் குரலிலும் தயக்கம்.  செம்மொழி மூன்றாவது வரிசையில் இரண்டாவதாக அமர்ந்திருந்தாள். அவள் முறை வந்தபோது, கொஞ்சமும் திக்காமல் ஏற்ற இறக்கத்தோடு அழகாக இசை போல வாசித்தாள். அவளது தோழி லிசாவும் நண்பன் சம்ஸும் கூட திணறித் திணறி வாசித்தனர்.  வகுப்பு முடிந்ததும் மூவரும் பள்ளி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் "மொழி நீ மட்டும் எப்படி திணறாம தமிழ் வாசிக்கிற?" எனக் கேட்டான் சம்ஸ். "ஆமா? எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? அதுவும் இந்த செய்யுள் பாட்டெல்லாம் வாயிலயே வரல" என்றாள் லிசா. "நான் வீட்டில நிறைய வாசிப்பேன், அதனால இருக்கலாம்" என்றாள் செம்மொழி. விடுமுறையில் ஒரு நாள் செம்மொழி வீட்டிற்கு வந்தான் சம்ஸ்.  அவன் கண்கள் வியப்பால் பெரிதானது. சுவற்றை நிரப்பிய அலமாரிகளில் நூல்கள்… நூல்கள்… நூல்கள்… அவள் அவ்வளவு சரளமாக தமிழ் வாசிக்க என்ன காரணம் என்பது அவனுக்குப் புரிந்தது.  அவன் வீட்டில் அந்த அலமாரிகளில் எல்லாம் அலங்காரப் பொருட்கள் தான் இருக்கும். "ஏ என்ன மொழி, இவ்ளோ புக்ஸ் இருக்கு?" என ஆச்சர்யமாக கேட்டான் சம்ஸ்.  "எங்க அம்மா நிறைய வாசிப்பாங்க. எங்களுக்கும் நிறைய புத்தகங்கள் வாங்கித் தருவாங்க. கதைகள் சொல்வாங்க" என்றாள் மொழி. "உனக்கு கதை புத்தகங்கள் இல்லையா சம்ஸ்" எனக் கேட்டார் மொழியின் அம்மா தமிழ். "இல்ல ஆண்டி. எனக்கு நிறைய Toys இருக்கு" என்றான் சம்ஸ். "“அத்தைனு சொல்லு… நீ தினமும் இங்க வா… மொழியோட சேர்ந்து வாசிக்கலாம்,” என்றார் அன்புடன். மொழிக்கு இந்த யோசனை  பிடித்திருந்தது. ஒரு சிறு பொறி அவளுக்குள் உருவானது.  "அம்மா என் நண்பர்கள் நிறைய பேருக்கு தமிழ் சரியாவே வாசிக்க வரலம்மா. நாம எல்லாரையும் கூப்பிடலாமா? நீங்க கதை சொல்லுங்க. எல்லாரையும் வாசிக்க வைக்கலாம்" என்றாள் கண்கள் மிளிர. சிறிது யோசித்த அம்மா, "சரி, ஆனால் குழந்தைகளுக்கான நூலகத்தை நீ தான் உருவாக்கனும். நூல்களின் பட்டியல் தயாரிக்கனும். அழகா அடுக்கி வைக்கனும்" என்றார். "நானும் உதவுறேன்" என்றான் சம்ஸ்.  மறுநாள் லிசாவும் வந்து விட்டாள். மூவரும் இணைந்து வேலை செய்தனர். மொழி சிறார் நூல்களை எல்லாம் பிரித்து எடுத்தாள். லிசா அவற்றை வரிசைப்படுத்தி அடுக்கினாள். சம்ஸ் நூல்களின் பட்டியல் தயாரித்தான். வீட்டின் முன்னறையில் ஒரு குட்டி நூலகம் தயாரானது. "நம்ம நூலகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?" என யோசித்தார்கள் மூவரும். வாண்டுமாமா அப்டின்னு ஒருத்தர் குழந்தைகளுக்காக நிறைய எழுதி இருக்கார். அவர் நினைவா வாண்டுகளின் நூலகம் வைக்கலாமா? என்றார் அம்மா. "வாண்டுகளின் நூலகம்" என்ற பெயரை அழகாக எழுதி வண்ணமிட்டு ஒட்டினார்கள். அந்தப் பெயரை வண்ணமிட்டு ஒட்டியபோது, அது பெயர் மட்டும் இல்லை… அது ஒரு கனவின் கதவு. மூவரும் தங்கள் நண்பர்களை எல்லாம் அழைத்தார்கள். மொழியின் அம்மா தமிழ் தினமும் குழந்தைகளுக்கு ஒரு கதை சொன்னார்.  அதன் பின் ஒவ்வொருவராக நூல் எடுத்து சத்தமாக வாசிக்க வேண்டும். முதலில் வழக்கம் போல யாருக்கும் சரியாக வாசிக்க வரவில்லை. குரல்கள் நடுங்கின.வார்த்தைகள் தடுமாறின. தமிழ் மிகவும் பொறுமையாக சொல்லிக் கொடுத்தார். "தவறாக சொன்னாலும் பரவாயில்லை. தயங்காமல் சத்தமாக வாசிப்பது முக்கியம்" என்றார்.  நடு நடுவே சின்னச் சின்ன விளையாட்டுகள் வைத்தார். அதனால் பிள்ளைகள் அனைவரும் உற்சாகமாகவே வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கக் கற்றுக் கொண்டார்கள். அவர்களது தயக்கம் காணாமல் போனது. வாசிப்பு பயம் மறைந்தது. லிசா கூட செய்யுளை சரளமாக வாசிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டாள்.  விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. தமிழ் பாட வேளை எப்போது வரும் என பிள்ளைகள் ஆவலோடு காத்திருந்தார்கள். தமிழம்மா வந்ததும் ஒவ்வொருவராக எழுந்து வாசிக்க சொன்னார். முதல் மாணவியே செய்யுளை சிறப்பாக வாசித்தாள்.  தமிழம்மா வியந்து போய் பாராட்டினார். அடுத்த மாணவியை அடுத்த பக்கத்தை வாசிக்க சொன்னார்.  அனைவரும் சிறப்பாக வாசித்தார்கள்.  "“ஒரே விடுமுறையில எப்படி இவ்வளவு மாறிட்டீங்க?" எனக் கேட்டார் தமிழம்மா. "வாண்டுமாமா மேஜிக்" என சொல்லிச் சிரித்தாள் செம்மொழி. ராஜலட்சுமி நாராயணசாமி ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார். பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார். இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. 'கனலின் பயணம்' நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது.

bottom of page