இயலில் தேடலாம்!
211 results found with an empty search
- புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம்!
1. நாம் வாழும் பூமி சுற்றுகிறது என்று சொல்கிறார்கள். பூமி ஒரு பந்தைப் போலிருக்கிறது. அதன் மேல்தான் நாம் வாழ்கிறோம். அப்படியென்றால், அதன் மேல் இருக்கும் நாம் ஏன் கீழே விழுவதில்லை? - ஆதிரன், திருச்சி வணக்கம் ஆதிரன், நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்கள் கேட்டிருப்பது ரொம்ப முக்கியமான கேள்வி. இதுபோன்ற சந்தேகங்கள்தான் அறிவை வளர்க்கும். ஆனா, இந்தக் கேள்விக்கு எனக்கும் சட்டுனு பதில் தெரியலை. நிறைய அறிவியல் புத்தகங்களை எடுத்துப் படிச்சேன். அதுல என்ன போட்டிருக்குன்னா... நீங்க சொல்ற மாதிரி பூமி ஒரு பிரம்மாண்டப் பந்துதான். அது தன்னைத் தானே சுத்திக்குது. இந்த சுழற்சியோட வேகம் நில நடுக்கோட்டுப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 1,675 கிலோமீட்டராம் (அம்மாடி, நாம பைக்குல 100 கி.மீ. வேகத்துல போனாவே தலைய சுத்துதே). பூமிப் பந்தின் மீதுதான் நாம் எல்லாரும் வாழுறோம். பூமியின் மீது இருக்கும் மனிதர்கள், மற்ற எல்லாமுமே ஒரே வேகத்தில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் நாம கீழே விழுவதில்லை. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை (Gravity). உலகில் உள்ள அனைத்தையும் இதுதான் கீழ புடிச்சு இழுத்துக்கிட்டிருக்கு. அப்படின்னா, அது இழுக்குறது நமக்கு ஏன் தெரியலை? நாம பொறக்குறதுக்கு முன்னாடி அம்மா வயித்துக்குள்ள இருந்த காலத்திலேர்ந்தே, அது நம்மை இழுத்துக்கிட்டுதான் இருக்கு. அதனால, அது இழுக்குறது நமக்கு தனியாத் தெரியாது. அது இருக்கிறதுனாலதான் நாம எல்லாரும் நடக்க, ஓட, விளையாட முடியுது. விண்வெளிக்குப் போய்ட்டா புவி ஈர்ப்பு விசை இருக்காது. அதனாலதான் விண்வெளில வீரர், வீராங்கனைகள் மிதக்குறாங்க. சரி, நாம கேள்விய விட்டு ரொம்ப தூரமா விண்வெளிக்கே போய்ட்டோம். திரும்ப பூமிக்கே வந்திருவோம். ஒரு எடுத்துக்காட்டு சொன்னா உங்களுக்கு இன்னும் நல்லா புரியும்னு நினைக்கிறேன். ஒரு நேரான சாலையில், ஒரே சீரான வேகத்தில் ஒரு கார் போய்க்கிட்டு இருக்கு. அதுக்குள்ள நீங்கள் இருக்கிங்க. அந்த காருடன் வேறு எதுவுமே குறுக்கிடாதபோது, ஏதாவது அசைவை நம்மால உணர முடியுமா? முடியாது இல்லையா? அதுபோலத்தான் பூமியில நாம வாழ்றதும். பூமியோட சுத்தும் வேகம் ரொம்பப் பெரிய அளவுக்குக் கூடவோ, குறையவோ இல்லை. அது சீரான வேகத்துல சுத்துது. இது மட்டுமில்லாம, புவியீர்ப்பு விசை வேற இருக்கு. இதெல்லாம் சேர்ந்து நாம இப்போ இயல்பா வாழ்றதுக்கு, நடமாடுறதுக்கு உதவுது. நம்மளோட இயல்பான இயக்கத்துல ஏதாவது தடை வந்தா கீழ விழுகுறோம், காயமாகுது. இல்லேன்னா நாம எப்பவுமே எல்லா வேலைகளையும் செய்ய எந்தத் தடையும் இந்த உலகத்துல இல்ல. 2. மாவட்ட ஆட்சியர்களைப் போல அமைச்சர்களும் ஏன் படித்துப் பரீட்சை எழுதக் கூடாது? - யாழினி, திருநெல்வேலி. வணக்கம் யாழினி! வழக்கமா எல்லாரும் அறிவியல், பொது அறிவுக் கேள்வி கேட்பாங்க. நீங்க அரசியல் கேள்வி கேட்டிருக்கீங்க. இந்த வயசுலேயே உங்களுக்கு இப்படி கேள்வி வந்திருக்கிறது ரொம்ப நல்ல விசயம். Government என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது தமிழில் அரசு எனப்படுகிறது. இதன் முக்கிய அங்கங்கள் சட்டம் இயற்றும் அவை, அரசு நிர்வாக அமைப்பு, நீதித் துறை. அரசு கொள்கைகளை/சட்டங்களை உருவாக்குதல், அவற்றை நடைமுறைப்படுத்துதல், சட்டத்தைப் பாதுகாத்தல் ஆகிய வேலைகளை இந்த அமைப்புகளே செய்கின்றன. இதில் அரசு நிர்வாக அமைப்பை இயக்குபவர்களே நீங்கள் கூறும் மாவட்ட ஆட்சியர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். இதற்கான தேர்வை ஒரு முறை எழுதித் தேர்வாகிவிட்டால், அவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றலாம். இந்தத் தேர்வுகள் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடத்தப்பட்டுவருகின்றன. அரசு கொள்கைகளை உருவாக்குவதில் குறிப்பிட்ட அளவும், நடைமுறைப்படுத்துவதிலும் இவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். அதேநேரம் இந்தக் கொள்கைகளை வகுப்பது சார்ந்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவற்றில் எதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறார்கள் என்பதுடன் அனைத்துத் தரப்புக்கும் அனைத்தும் உரிய வகையில் கிடைப்பதை உறுதிசெய்ய மக்கள் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள். இந்த பிரதிநிதிகளே அரசியல்வாதிகள். அரசு அதிகாரிகளைப் போல அரசியல்வாதிகள் தேர்வை எழுதுவது இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தேர்தல் எனும் தேர்வு உண்டு. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்முடைய பிரதிநிதியாகவே (இவர்களில் சிலர் அமைச்சர் ஆகிறார்கள்) உள்ளாட்சி மன்றம், மாநகராட்சி மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு அவர்கள் செல்கிறார்கள். இந்த மன்றங்களே மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுகின்றன. அரசு சட்டங்கள், கொள்கைகள் உருவாக்கப்படும்போது நம் சார்பாக மன்றங்களில் பேசுவது, வாதிடுவது ஆகிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். இப்படி பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வசதியாக, ஒரு அமைப்பாக கட்சிகளில் அவர்கள் சேர்கிறார்கள். அவர்கள் சரியாகச் செயல்படுவதை உறுதிசெய்ய மக்களான நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் சரியாகச் செயல்படவில்லை என்றால், அடுத்துவரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள். அதற்கு முன்னதாகவே, நம் நாட்டுச் சட்டங்களின்படி அரசியல்வாதிகளுக்கு எதிராகப் புகார் அளிக்கலாம், வழக்கு தொடுக்கலாம். 100 சதவீதம் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் நம்முடைய சமூகத்தின், சமூகம் இருக்கும் நிலையின் பிரதிபலிப்புதான். அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவையாற்ற என்பதற்கு பதிலாக, தங்கள் சுயநலனுக்குப் பலரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வெகுமக்கள் சரியாக செயல்பட்டால், அந்நாட்டு அரசியல்வாதிகளும் சரியாகச் செயல்படுவார்கள். அனைத்துத் தரப்பினருக்கும் கல்வியுடன், அரசியல் கொள்கைகள், ஆட்சிக் கொள்கைகள்/சட்டங்கள் சார்ந்த பயிற்சி இதற்கு அவசியம். இதை சமூகச் செயல்பாட்டாளர்கள் உதவியுடன் மக்களான நாம் முன்னெடுக்கலாம், பரவலாக்கலாம். கூட்டாகவும் சிந்தனைபூர்வமாகவும் செயல்பட்டால் மாற்றங்கள் சாத்தியமாகும்.
- சாம்பல் நிற அணில்
” அது என்ன விலங்கு ?” என அண்ணன் அப்பாவிடம் கேட்டான். ஒரு புளிய மரத்தின் கிளையில் நம்ம ஊர் அணிலைப் போன்று ஆனால் சற்று பெரிதான விலங்கு தொங்கிக்கொண்டு புளியம் பழத்தை கடித்துக்கொண்டிருந்தது. ” இதுவா அணில் ” என்று சொன்னார் அப்பா. ” அணில் இவ்வளவு பெரிதாக இருக்குமா ? நம்ம வீட்டுக்கு அருகில் உள்ள அணில் குட்டியா தான இருக்கும் ” எனக் கேட்டாள் தங்கை. ” ஆம் இந்தியாவில் மூன்று வகையான பெரிய அணில்கள் வாழ்கின்றன. அதில் ஒன்று தான் இந்த சாம்பல் நிற அணில் ” என விளக்கம் சொன்னார் அப்பா. இந்த உரையாடல் எங்கே நடந்தது தெரியுமா? மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனச்சுற்றுலா வந்த அம்மா அப்பா அண்ணன் தங்கை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்கள். நடந்து செல்லும் வழியில் ஒரு புளிய மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அணிலைப் பார்த்த அண்ணன் கேட்டான். அண்ணனின் முகத்தைப் பார்த்த அப்பா சொன்னார், ” சாம்பல் நிற அணிலின் ஆங்கிலப் பெயர் Grizzled-Giant Squirrel. இதன் உடம்பில்கருப்பு மற்றும் வெள்ளை நிற முடிகள் கலந்து சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. அதனால் சாம்பல் நிற அணில் என அழைக்கிறோம். கிராமங்களில் நரை அணில் எனவும் அழைக்கிறார்கள். “ ” சாம்பல் நிற அணில் என்ன சாப்பிடும்? ” என்று தங்கை கேட்டாள். “ மாம்பழம், வாகை மரத்தின் இலை, பூ மற்றும் விதை, புளிய மரத்தின் பட்டை மற்றும் விதை ஆகியவற்றைச் சாப்பிடும்.” ” அது மட்டும் ஏன் தலை கீழாக படுத்துக்கொண்டே தின்கிறது ? ” ” சாம்பல் அணில் மற்ற அணில்களை பெரியது. அதனால் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது கடினம்.. சாம்பல் நிற அணில் தன்னுடைய முன்னங்கால்களை 180 டிகிரி வரை திருப்பிக் கொண்டு சாப்பிட முடியும்..”. ” அப்பா! அணிலின் வால் புசு புசு னு இருக்குது ” என்றாள் தங்கை ” ஆமாம்மா. சாம்பல் நிற அணில் வாலின் நீளம் 50-90 சென்டி மீட்டர், உடம்பின் நீளத்தை (25 – 40 சென்டி மீட்டர்) விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும்..”. ” சாம்பல் நிற அணிலினால் நமக்கு என்ன பயன் ? ” என்று அம்மா கேட்டார் ” பழங்களைச் சாப்பிட்டு விதைகளை பரப்பி மரங்கள் வளர்வதற்கு உதவுகிறது. வேகமாக வளரும் அதன் பற்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மரப்பட்டைகளைக் கடிக்கும். இதனால் மரத்திலிருந்து பிசின்கள் வெளியாகின்றன. இந்த மரப்பிசினை பூச்சிகள் தங்களது கூடுகளை கட்ட பயன்படுத்துகின்றன. “ “ அவ்வளவு தானா? என்று கேட்டான் அண்ணன். ” சிறிய ஊனுண்ணிகளுக்கு சாம்பல் நிற அணில் முக்கிய உணவாக திகழ்வதால் வனத்துக்குள் உணவுச் சங்கிலியை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் பல்லுயிர் பாதுகாப்புக்கும் உதவுகிறது. ” என்றார் அப்பா. ” ஓ இவ்வளவு நன்மைகள் இருக்கா ?” என்றார் அம்மா. ” ஆமாம், அதனால தான் இப்பகுதி 1988 முதல் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. ” ” குரங்கு நிறையா இருக்கு ஏன் சாம்பல் நிற அணில் ஒன்னே ஒன்னு தான் பார்த்தோம். “ என்று சந்தேகத்தைக் கேட்டாள் தங்கை. ” எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கு..”. ” ஏன் குறைவாக உள்ளது ? உடனே அண்ண்ன் கேட்டான் “ சாம்பல் நிற அணில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே வாழ்பவை. அந்த இடத்தின் சூழல் பாதிக்கப்படும் பொழுது அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அணிலால் தன் குட்டிகளை வளர்க்க முடிவதில்லை. ” என்று சொன்னார் அப்பா. ” அந்த இடம் எப்படி ஆபத்துக்குள்ளாகிறது ? “ என்று கேட்டான் அண்ணன். ” இங்கு நம்மைப் போல வரும் மக்கள் பிளாஸடிக் பைகளை பயன்படுத்துகின்றனர், இங்கேயே தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர். இங்கு தினமும் நடந்து வருபவர்களால் வழிகள் உருவாகின்றன. நாளுக்கு நாள் அது பெரிதாகி தாவரங்கள் வளருவதில்லை. அதனால் காடு துண்டு துண்டாகிறது.. “ “ சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..” என்றாள் தங்கை. “ஆமாம்.எல்லோருமே சிந்திக்க வேண்டும்..” என்று அண்ணன் சொன்னான்.
- வாண வேடிக்கை
பட்பட் படார் டம்டம் டமார் பட்டாசுச் சத்தம் கேட்கிறது விமானம் போல வானில் ஏறி பாதி வழியில் வெடிக்கிறது இருட்டு படிந்த ஊரின் மீது ஒளியை அள்ளித் தெளிக்கிறது விலகிச் செல்லும் வெளிச்சக் கீற்று எங்கோ வானில் கலக்கிறது கண்ணைப் பறிக்கும் நிறங்களில் எல்லாம் வண்ணப் பொறிகள் விழுகின்றன அண்ணாந்து பார்த்து ரசிப்பதற்குள்ளே அனைத்துப் பொறிகளும் மறைகின்றன
- நீர் பலூன் சோதனை
Water baloon experiment பலூன்கள் மிகவும் உடையக்கூடிய விஷயங்கள். அவை கூர்மையான பொருட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் தீப்பிழம்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். ஒரு நெருப்பு ரப்பரை பலவீனப்படுத்தி வெடிக்கச் செய்யலாம். இருப்பினும், பலூனை உடைக்காமல் ஒரு பலூனை நேரடியாக சுடர்களில் எவ்வாறு பிடிக்க முடியும் என்பதை இந்த சோதனையில் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். தேவையான பொருட்கள் : 1. காற்றால் நிரப்பப்பட்ட ஒரு பலூன் 2. தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பலூன் 3. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றியது 4. வயது வந்தவரின் உதவி பரிசோதனையை எவ்வாறு செய்வது : 1. ஒளிரும் மெழுகுவர்த்தியை தொட்டியில் வைக்கவும், இந்த வழியில் ஏதாவது நடந்தால், நீங்கள் குழாய் நீரைக் கொண்டு தீப்பிழம்பை எளிதாக அணைக்கலாம். 2. ஒரு பலூனை ஊதி, அதைக் கட்டவும். பின்னர் அதை ஒரு மெழுகுவர்த்தியின் மீது வைக்கவும். பலூனுக்கு என்ன நடக்கிறது? 3. இப்போது ஒரு பலூனை தண்ணீரால் நிரப்பி, அதைக் கட்டவும். கவனமாக இருங்கள் அல்லது நீங்கள் ஈரமான முடிவடையும்! 4. இப்போது மெழுகுவர்த்தியின் மீது தண்ணீர் பலூனை பிடித்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது? அதன் பின்னால் உள்ள அறிவியல் : என்ன நடக்கிறது தண்ணீர் இல்லாத பலூன் ஏன் தீப்பிழம்பில் உடைகிறது? தீப்பிழம்பு அதில் வைக்கப்படும் அனைத்தையும் சூடாக்குகிறது. இது இரண்டு பலூன்களின் ரப்பரை சூடாக்குகிறது. தண்ணீர் இல்லாத பலூனின் ரப்பர் மிகவும் சூடாகி, பலூனுக்குள் காற்றின் அழுத்தத்தை எதிர்க்க முடியாத அளவுக்கு பலவீனமாகிறது. தண்ணீரைக் கொண்ட பலூன் தீப்பிழம்பில் உடைவதை எவ்வாறு தடுக்கிறது? பலூனுக்குள் உள்ள நீரைச் சுடர்களில் வைக்கும்போது, நீர் தீப்பிழம்பிலிருந்து பெரும்பாலான வெப்பத்தை உறிஞ்சுகிறது. பின்னர், பலூனின் ரப்பர் மிகவும் சூடாக மாறாது. ரப்பர் சூடாகாததால், அது பலவீனமடையாது, மேலும் பலூன் உடைக்காது. பலூன் உடைக்காது. தீச்சுவாலைக்கு மேலே பலூனின் வெளிப்புறத்தில் புகை வடிவத்தின் கருப்புத் துண்டைக் கூட நீங்கள் காணலாம். நீர் குறிப்பாக வெப்பத்தை உறிஞ்சி ஒரு நல்ல உறிஞ்சியாகும். நீரின் வெப்பநிலையை மாற்ற நிறைய வெப்பம் தேவைப்படுகிறது. 1 கிராம் இரும்பின் வெப்பநிலையை அதே அளவு உயர்த்துவதை விட 1 கிராம் நீரின் வெப்பநிலையை 1C உயர்த்துவதற்கு 10 மடங்கு அதிக வெப்பம் தேவைப்படுகிறது. அதனால்தான் கொதிக்க ஒரு டீகெட்டில் தண்ணீரைக் கொண்டு வர நீண்ட நேரம் ஆகும். மறுபுறம், நீர் குளிர்ச்சியடையும் போது, அது அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இதனால்தான் பெருங்கடல்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் அல்லது பிற பெரிய நீர்நிலைகள் குளிர்காலத்தில் அதே அட்சரேகையில் உள்ள பகுதிகளைப் போல குளிர்ச்சியடைவதில்லை.
- பறக்கும் பன்றி
பாவலன் நல்ல ஓவியன்தான் பறக்கும் குதிரை படம் வரைந்தான் அன்று இரவு அவன் கனவில் பன்றி ஒன்று வந்தது பார்! என்ன தம்பி நியாயம் இது? என்னை மறந்தது எப்படி நீ வலிமை மிகுந்த குதிரைக்குதான் வாய்ப்பு வசதியும் தருவாயோ? சேற்றில் கிடந்து உழல்கின்றேன் சிரமப்பட்டு வாழ்கின்றேன் விரட்டி வந்து அடிக்கின்றார் வீல் வீலென அலறி துடிக்கின்றேன் என்னைப் போன்ற எளியவர்க்கு இறக்கைகள் தந்தால் ஆகாதா? என்ற பன்றியின் குறையை நினைத்தபடி படுத்து புரண்டான் பாவலனும் உறக்கம் கலைந்து எழுந்தவுடன் பறக்கும் பன்றி படம் வரைந்தான்!
- கேளு பாப்பா கேளு!
கேள்வி: குழந்தைகளுக்கு அரசியல் வேண்டுமா? ( ஸ்ரீமதி, சென்னை) பதில்: நிச்சயம் வேண்டும். அதிகாரம், ஜனநாயகம், சமத்துவம், பொதுநலம் குறித்த புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்குத் தேவையான, அடிப்படையான அரசியல். அதேவேளையில் கற்பனை மிகுந்த அவர்களது உலகை சிதைத்து விடாமல் அந்த சிந்தனைகளை உருவாக்க வேண்டும். காட்டில் சிங்கத்திற்கு கட்டுப்பட்டு மற்ற மிருகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மிருகம் அதற்கு இரையாக உடன்படுவது போன்ற தந்திரக்கதைகளை மாற்றி எல்லா மிருகங்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை எதிர்த்தால் விரட்ட முடியும் என்ற வழிகளை காட்ட வேண்டும். கேள்வி: அறிவியல் மனப்பாங்கு என்றால் என்ன? ( ஆதினி, தென்காசி) பதில்: நம்மைச் சுற்றி இருக்கிற ஒவ்வொன்றையும் கவனிப்பதும், அதுகுறித்த சிந்தனைகளில் ஈடுபடுவதும் அறிவியல் மனப்பான்மை. ஏன் என்றும் எப்படி என்றும் ஒவ்வொன்றையும் ஆராய்வதன் மூலம் உண்மைகளை அறியும் முயற்சிதான் அது. சூரியன் இருக்கும்போது பகலாகவும், சூரியன் இல்லாமல் இருக்கும் போது இரவாகவும் ஏன் இருக்கிறது என்று ஒரு காலத்தில் கேள்விகள் எழுந்தன. மனிதர்கள் அதுகுறித்து சிந்திக்கத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாகத்தான் பூமி உருண்டை என்பதையும், பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பதையும் கலிலியோ மூலம் உலகம் அறிந்தது. இன்று நாம் அறிந்திருக்கும் ஒவ்வொரு உண்மைக்கும் பின்னால் மனிதர்கள் காலம் காலமாய் கேட்டு வந்த எத்தனையோ கேள்விகளும், உண்மையைத் தேடும் இடைவிடாத முயற்சிகளும் இருக்கின்றன. இந்த அறிவியல் மனப்பான்மையால்தான் மனித இனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது.
- இலண்டனிலிருந்து அன்புடன்
வணக்கம் சுட்டிகளா, “இயல்” சிறுவர் இதழ் புத்தம் புதிதாய் மலர்ந்துள்ளது. புதியது என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். அந்தக் கொண்டாட்டத்தில் நானும் உங்களுடன் இணைகிறேன். அதுவும் எங்கிருந்து தெரியுமா? இலண்டனிலிருந்து… “இங்கிலாந்து சிறுவர் இலக்கியம்” எனும் தலைப்பில் உங்களை நான் ஒவ்வொரு இதழிலும் சந்திக்க இருக்கிறேன். இலண்டனில் பிரபலமான சிறுவர் புத்தகங்கள் பற்றித்தான் பேசப் போகிறோம். Virtual Reality கண்ணாடி அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்? அப்படிதான் நாம் அனைவரும் ஒன்றாகப் புத்தகங்கள் மூலம் இலண்டனைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம். என்ன? புத்தகங்கள் வழியே இலண்டனைச் சுற்றிப் பார்க்க நீங்கள் தயாரா? hologauze animations இலண்டனின் மிக முக்கியமான அடையாளம் “தேம்ஸ் நதி”. திருவிழா, பண்டிகை என எந்த ஒரு முக்கியமான என்றாலும் மக்கள் தேம்ஸ் நதிக்கரையில் கூடிக் கொண்டாடுவார்கள். 2025ஆண்டு புத்தாண்டை வரவேற்க சுமார் ஒரு இலட்சம் மக்கள் தேம்ஸ் நதியோரம் கூடினர். பல இலட்சம் மக்கள் நேரலையில் இந்நிகழ்வைப் பார்த்தனர். சரியாக 12மணிக்கு பட்டாசுகளும் டிரோன் விளக்குகளும் இணைந்த வான வேடிக்கை நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில்தான் முதன்முதலாக hologauze animations பயன்படுத்தப்பட்டன. Hologauze animations என்பது புதுவகையான மாய பிம்பங்கள். “London Eye” என அறியப்படும் மிகப் பெரிய ராட்டினம் உள்ளது. அந்த இராட்டினத்தைச் சுற்றித்தான் hologauze animations நடைபெற்றன. ஆரம்பத்தில் hologauze animations மூலம் “Happy New Year” போன்ற வாழ்த்துச் செய்திகளே இடம் பெற்றன. ஆனால், நிகழ்வின் முடிவில் மாய திரையில் சிறப்பு விருந்தினர் ஒருவர் தோன்றி இன்ப அதிர்ச்சி தந்தார். அவர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் பிரதமரோ, மறைந்த எலிசபத் ராணியோ, ராஜா பிலிப்போ, விளையாட்டு வீரரோ, நடிகரோ, இசைக் கலைஞரோ, விஞ்ஞானியோ அல்ல. அங்குத் தோன்றியது, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான, சிறார் இலக்கியத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான “பேடிங்கடன் கரடி”. ஆமாம்! பேடிங்கடன் கரடிதான் அன்றைய சிறப்பு விருந்தினர். நாடு, இனம், மொழி, மதம், கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகள் நிறைந்த மக்கள் வாழும் இடம் இங்கிலாந்து. வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாய் வாழும் சூழலை உருவாக்குவதே இங்கிலாந்து அரசின் நோக்கம். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் செய்தியைத்தான் “பேடிங்கடன் கரடி” எனும் சிறுவர் புத்தகம் உலகிற்கு வழங்கியுள்ளது. "As we enter the new year, I always remember what Mrs Brown says: in London everyone is different, but that means anyone can fit in. I think she must be right. Because although I dont' look like anyone else, I really feel at home. Happy New Year, Love, from Paddington" ஆமாம் செல்லங்களா! பேடிங்கடன் கரடி என்பது உலக அமைதியின் அடையாளமாய் விளங்குகிறது. சரி! இவ்வளவு முக்கியமான பேடிங்கடன் புத்தகம் குறித்தும், அதன் ஆசிரியரான மைக்கேல் பாண்ட் குறித்தும் விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம். ( தொடரும் )
- எலிக்கு வழி சொல்லுங்கள்!
படம் உதவி: ராஜலட்சுமி நாராயணசாமி
- டமால்!
ஒவியம் : உ.நவீனா
- கரடிக்கு ஏன் குட்டையான வால் வந்தது?
ஒரு குளிர் கால காலை நேரம். ஒரு நரி ஒரு கொத்து மீன்களை மீனவனிடமிருந்து திருடியது. நரி தன் குகைக்குப் போகும் வழியில் கரடியைச் சந்தித்தது. நரியிடம் இருக்கும் மீன்களைப் பார்த்து கரடியின் கண்கள் பெரிதாயின. கரடியின் நீண்ட வால் உற்சாகத்தில் ஊஞ்சல் போல் ஆடியது. (குழந்தைகளே, முன்னொரு காலத்தில் கரடிகளுக்கு நீண்ட வால் இருந்தது.) நரி கரடியிடம் கேட்டது : 'அம்மாடி! இவ்வளவு மீன்கள் உனக்கு எப்படி கிடைத்தது. எனக்கும் கொஞ்சம் கொடுப்பியா?' 'இல்லை. இவைகள் என்னுடைய மீன். இவைகளைப் பிடிக்க எனக்கு ரொம்ப நேரமானது. உனக்கு வேண்டுமென்றால் நீயே பிடித்துக் கொள்' என்றது நரி. 'தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கு. நீ எப்படி மீன்களைப் பிடித்தாய்?' கரடி ஆச்சரியத்துடன் கேட்டது. கண்களை சிமிட்டிக் கொண்ட நரி, 'ஏன் நீ என்னுடன் வா. உனக்குக் காட்டுகிறேன், என்றது. நரி கரடியை ஏரிக்கு அழைத்துச் சென்றது. 'கரடியே, ரொம்ப எளிது. பனிக்கட்டியில் முதலில் ஒரு ஓட்டைப் போடு. அதில் உன் வாலை விடு. ரொம்ப நேரம் வைத்திரு. உன் வாலில் வந்து மீன்கள் கடிக்கும். நிறைய மீன்கள் வேண்டுமென்றால் ரொம்ப நேரம் வைத்திருக்கனும். வாலை எடுத்து விடாதே. நிறைய மீன்களைப்பிடித்து விட்டோம் என்று நீ நினைத்தவுடன் வாலை பலமாக இழு' என்று நரி கரடிக்கு மீன் பிடிக்கும் வழியைச் சொன்னது. நரி சொன்னது போலவே கரடி செய்தது. கொஞ்ச நேரம் ஆனது. தன் வாலை ஏதோ கடிப்பது போல் உணர்ந்தது. 'நரி நீ சொன்னது சரி' என்று கரடி மகிழ்ச்சியில் கத்தியது. 'நான் மீன்களை பிடித்து விட்டேன்' என்றும் சொன்னது. அதைக் கேட்ட நரி ஓடியே போய் விட்டது. ஓடும் போதே தனக்குள் சிரித்துக் கொண்டது. கரடியின் வால் உறை பனிக்குள் சிக்கிக் கொண்டது என்பது நரிக்குத் தெரியும். அதனால்தான் அது ஓடியது. கரடி மதியத்திற்கு மேலும் அங்கு உட்கார்ந்து இருந்தது. கரடியின் வால் மேலும் மேலும் கடிப் பட்டது. நரியை விட அதிகமான மீன்களைப் பிடித்து விட்டோம் என்று கரடி எண்ணிக் கொண்டது. கடைசியாக கரடி மீன்களைப் பிடித்தது போதும் என்று முடிவுக்கு வந்தது. கரடி தன் வாலை உறை பனிக்குள்ளிருந்து வெளியே இழுத்தது. வால் கொஞ்சம் கூட நகரவில்லை. இன்னொரு முறை வேகமாக இழுத்தது. ஒன்றும் நடக்கவில்லை. கடைசியாக கரடி தன் முழு பலத்தையும் சேர்த்து இழுத்தது. வால் அறுந்து விட்டது. (குழந்தைகளே! அன்று முதல் கரடிகளுக்கு குட்டையான வால் வந்து விட்டது.) கரடி வலியால் கத்தியது. 'நரி நீ என் கையில் கிடைத்தால் சட்னி' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டது. கரடி நரியைத் தேடி அலைந்தது. கடைசியாக நரி கரடியிடம் மாட்டிக் கொண்டது. குழந்தைகளே! கரடி நரியை என்ன செய்தது? என்பது அடுத்த கதை. ( நார்வே நாட்டு நாடோடிக் கதை )
- பேசும் கடல் - 1
கடலில் அலைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. கடற்கரையில் இனியனும் அமுதாவும் மணலில் கோபுரம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலைகள் இனியனையும் அமுதாவையும் தொட்டுவித் துடித்தன. அருகில் அவர்களது அப்பா மீன்பிடி வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய அலை வந்து. அமுதாவையும் இனியனையும் தொட்டது.தஈர மணலில் கட்டிய கோபுரங்களும் வீடுகளும் அலையில் கரைந்தன. அமுதாவுக்கு கோபம் வந்தது. “உனக்கு ரொம்ப கொழுப்பு, நாங்க கட்டிய வீட்டை ஏன் இடிச்ச “ கடலைப் பார்த்துக் கேட்டாள் அமுதா. “ இது நான் தினமும் வந்து போகும் இடம்தான் இன்றைக்கு நீங்கள் கோபுரம் கட்டி இருப்பதை கவனிக்கவில்லை, சாரி பேத்தி “ என்று கடல் சிரித்தது. ” என்னது நான் உன் பேத்தியா? ” “ஆமாம்; மனிதர்களுக்கு நான் தானே தாய்.. கடல்தாய்.. சொல்லப்போனால் அனைத்து உயிர்களுக்கும் நான் தாய் “ ’ உண்மைதான் பாட்டி அதுக்கு என் கோபுரத்தை இடிக்க வேண்டுமா? “ உங்க கிட்டே பேசணும்னு தான் வேகமாக வந்துட்டேன்.. சாரி..” "ஓ.... அப்படியா பாட்டி.. நீங்க கூப்பிட்டா நாங்களே வந்துருப்போம்..” ” இனியன் தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணையில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்து நிலங்களை பற்றி குறிப்பிடுகிறார். அதில் நெய்தல் நிலத்தை பற்றி கூறும்போது கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்று அழைக்கப்படும் என்கிறார். அதாவது “வருணன் மேய பெருமணல் உலகம்” என்று அடைமொழி கொடுக்கிறார் “ ” கடல் பாட்டி நாங்க எட்டாம் வகுப்பு தான் படிக்கிறோம். தொல்காப்பியம் எல்லாம் எப்படி எங்களுக்கு புரியும்?. ” என்றான் இனியன். “அது சரி கடற்கரை என்பது மணல் நிறைந்த பெருவழி என்று இதற்கு பொருள். சங்க பாடல்களில் கடற்கரைப் பகுதிகள் வெண்மணல் வெளியாக இருந்தது என்றும் இங்கு கடல்சார் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு இவர்களின் தொழில் கருவிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடற்கரையோரம் நெய்தல் மக்கள் கடல் தோன்றிய காலத்தில் இருந்தே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு சான்றாக இந்த பகுதியை உங்களுக்கு நான் சுட்டிக் காட்டுகிறேன்.” “பாட்டி அம்மா அதுக்கு ஏன் தொல்காப்பியம் சங்க இலக்கியம் என்று சொல்றீங்க நம்ம ஊரில் வாழும் மக்களே இதற்கு சான்று, என்றாள் அமுதா. ” சபாஷ் அமுதா கடற்கரையோரம் கடல் தொழில் செய்து வாழும் அனைவரும் நெய்தல் நிலத்துக்காரர்கள் இவர்கள் அனைவரையும் பரதவர்கள் என்று அழைப்பர் இதற்கு உறுதிமிக்க படகை ஆள்பவன் என்று பொருளும் உண்டு. இவர்கள் படகுகளில் வந்து என்னிடம் மீன்பிடித்து வாழ்கிறார்கள். கட்டுமரம் நாட்டு படகு விசைப்படகு என்று பல வடிவங்களில் மீன் பிடிக்கிறார்கள். தோணி மீன்பிடிக்கப்பல் என்று மிகப்பெரிய அளவிலும் மீன்பிடித்தலும் சரக்கு வணிகமும் நடைபெறுகிறது. மீன்களை பிடிப்பதற்கு வலை தூண்டில் ஒருவகையான உளி போன்றவை பயன்படுத்துகிறார்கள். ” ” எங்க அப்பா வலைவீசி தான் மீன் பிடிப்பாங்க, எப்பவாச்சும் தூண்டில் மீன் பிடிப்பாங்க உளியில் மீன் பிடிப்பதை நாங்கள் பார்த்ததே இல்லையே? ” என்று இனியன் கேட்டான். ” பழங்காலத்தில் உளியை எரிந்து மீன் பிடித்துள்ளனர் சுறாமீனை பிடிக்க வலை வீசினால் அது வலையை கிழித்துக்கொண்டு மீண்டும் என்னிடமே வந்துவிடும். அதனால் உளியை எரிந்து மீனை பிடிப்பார்கள். நெய்தல் மக்களை வேட்டை சமூகம் என்றும் அழைக்கிறார்கள். “எங்க அப்பா எதுவுமே எங்களுக்கு சொல்லவே இல்லையே ரொம்ப ஆச்சரியமா இருக்குதே!!! ” என்றாள் அமுதா. ” ஆச்சரியப்படுறீங்களா! என்னிடமும் பெரும் ஆச்சரியமிக்க அதிசயங்கள் மிக்க பல வளங்கள் இருக்குது.. என் மடியில் வாழக்கூடிய நெய்தல் நிலத்து மக்களிடமும் பல்வேறு பண்பாட்டுகள் உள்ளன. அதைப்பற்றி உங்களுக்கு நான் விரிவாக சொல்லுகிறேன். பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறு, பண்புகள், பழக்கவழக்கங்கள்?, தொழில்நுட்ப அறிவு, வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு போன்றவற்றை பற்றி அறிவது. நான் உங்களுக்கு புரிகிற மாதிரி விளக்கமா சொல்றேன்.” ” சொல்லுங்க..பாட்டி..” ( அலை அடிக்கும் )
- ஏன் பிறந்தோம்? - 1
குழந்தைகளுக்குத் தத்துவமா? இதென்ன கேலிக்கூத்தாக இருக்கிறது? என்று யோசிக்கிறீர்களா? ஒரு உண்மை தெரியுமா? இயற்கையில் குழந்தைகள் எல்லாருமே தத்துவவாதிகள் தான். கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறதா? தத்துவம் எல்லாம் மண்டையைப் போட்டு உடைக்கிற காரியம். பெரியவர்களுக்கே புரியாத விஷயம். இதில் குழந்தைகளுக்குத் தத்துவம் என்பதெல்லாம் கேலிக் கூத்தாக இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஒரு விஷயம் தெரியுமா? குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களான நாமும் தத்துவவாதிகள் தான். அன்றாடம் தத்துவச்சிந்தனைகளுடன் தான் நாளைத் தொடங்குகிறோம். நாளை முடிக்கிறோம். நாமும் தத்துவவாதிகள் என்று நமக்கே தெரியாது. ஏன் மற்றவர்களுக்கும் கூடத் தெரியாது? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! இன்னும் பல ஆச்சரியங்களை இந்தத் தொடரில் சந்திக்க இருக்கிறோம். இப்போது குழந்தைகளிடம் தொடங்குவோம். பொதுவாகக் குழந்தைகளுக்கு என்ன தெரியும்? என்றோ எதுவும் தெரியாது! என்றோ குழந்தைகள் மீது அலட்சியம் காட்டுகிறோம். ஆனால் பிறக்கும் போதே குழந்தைகள் தத்துவச்சிந்தனையுடன் பிறக்கின்றன. எப்படி? அதைப் பார்ப்பதற்கு முன்னால் முதலில் தத்துவம் என்றால் என்ன? என்று பார்த்து விடலாமா? தத்துவம் என்பது இந்த உலகை அறிந்து கொள்வது. வாழ்க்கையைப் புரிந்து கொள்வது. வாழ்க்கையை விளக்குவது. வாழ்க்கையின் நோக்கம் பற்றி விவாதிப்பது. வாழ்க்கையின் லட்சியங்களை உருவாக்குவது. இப்படிச் சொல்லலாம். இவை தனித்தனியாகவோ சேர்ந்தோ இருக்கலாம். சரிதானே! இந்த பூமியில் உள்ள எந்த விலங்குகளோ, பறவைகளோ, பூச்சிகளோ, தத்துவம் பேசுகிறதா? இல்லை. ஏன் பேசுவதில்லை? மிக முக்கியமான காரணம், அவை தங்களையும் தங்களைச் சுற்றியுள்ள இயற்கையையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இயற்கையின் சூழலுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றன. அப்படி வாழ்வதற்கான இயற்கைச்சூழல் இல்லாதபோது மறைந்து விடுகின்றன. அப்படிப் பல பறவைகள், விலங்குகள் மறைந்ததை நாம் அறிவோம். அவற்றின் தோற்றம் பற்றியோ, மறைவைப் பற்றியோ அவற்றிற்குத் தெரியாது. ஏன் பிறந்தோம் என்றோ? எப்படிப் பிறந்தோம் என்றோ? எதற்காகப் பிறந்தோம் என்றோ? அவை சிந்திப்பதில்லை. பிறக்கும்போதே தன் உடலில் தகவமைந்திருக்கும் மரபணுக்களின் தூண்டுதலில் உணவு, தங்குமிடம், பாதுகாப்பு, இனப்பெருக்கம் போன்றவற்றைச் செய்கின்றன. இவற்றில் எதையும் கட்டுப்படுத்தவோ, மாற்றவோ விலங்குகளால் முடியாது. இயற்கையின் தீர்மானத்தின் படியே வாழ்ந்து மடிகின்றன. என்ன காரணத்தினால் அவற்றால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆமாம். அவற்றிற்குச் சிந்திக்கும் ஆற்றல் இல்லை. அது தான் எனக்குத் தெரியுமே என்று நினைக்கிறீர்களில்லையா! சரிதான். ஆக நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரலாம். தத்துவத்துக்கு அடிப்படை சிந்தனை. அல்லது சிந்திக்கும் ஆற்றல் மனிதன் பிறந்ததிலிருந்தே சிந்திக்கும் விலங்காக இருக்கிறான். எனவே அவன் தத்துவவாதியாகவும் இருக்கிறான். என்ன சரிதானே! அப்படி என்றால் குழந்தைகளும் தத்துவவாதிகளாகத்தான் பிறக்கிறார்கள் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? சரி. தத்துவத்துக்கு அடிப்படை என்ன? சிந்திக்கும் ஆற்றல். சிந்திக்கும் ஆற்றல் என்றால் என்ன? (தொடரும்)












