யாரெல்லாம் சிரிப்பார்கள்
- கொ மா கோ இளங்கோ

- May 15
- 1 min read

அம்மா சிரித்தால் அழகப்பா- அவள்
அன்பில் பூக்கும் மலரப்பா!
பாட்டி சிரிப்பில் கலகலப்பு- பாடும்
பாடல்கள் தரும் மலைப்பு!
பாப்பா சிரிக்கும் சிரிப்பினிலே- நம்
பாரம் குறையும் நொடியிலே
பூக்கள் சிரிப்பதைப் பார்த்தாயா?- அதன்
புன்னகை எங்கும் மணம் வீசும்!
வானம் சிரிப்பில் வானவில் - அது உன்
வாசல் நோக்கி வருது பார்!
கடல் சிரித்தால் அலை பிறக்கும்- அவை
கரை சேரும் அழகைப் பார்!
இத்தனை பேரும் சிரிக்கையில்- நீ
இன்னும் ஏன் தூங்குகிறாய்?
எழுந்து நீயும் சிரித்துப் பார்- உன்
எதிரே உலகம் மலர்வதைப் பார்!

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.





நன்றி