எப்போது மாறும்
- குருங்குளம் முத்துராஜா

- May 15
- 1 min read
Updated: May 15

இந்த நிலைமை எதனாலே
எனக்கு புரியல - இது
எப்போது மாறும் என்று
எதுவும் தெரியல !
ஊர்க்கோடி தாண்டி போனா
எங்க தெருவுங்க ! கொஞ்சம்
ஒதுக்குப்புறமா தள்ளி வெச்ச
சின்னத் தெருவுங்க!
இந்த தெருவில் எல்லாமே
குடிசை வீடு தான் -இங்கே
எவரும் வசதிக்காரர் இல்லை
ஏழை சனங்கதான் !
பெரிய தெருக் காரர் வயலில்
வேலை செய்யணும் - அவங்க
போட்ட கூலி வாங்கி கஞ்சி
காய்ச்சி குடிக்கணும்!
சட்டை போட்ட ஆட்கள் எவரும்
இங்கே இல்லை -அழுக்கு
துண்டு இடுப்பில் கட்டி இருப்பார்
பேருக்கு வெள்ளை!
உடன்படிக்கும் பையன் கூட
எங்க அப்பாவை -அவர்
பேரைச் சொல்லிக் கூப்பிட இவர்
ஏனுங்க என்பார் !
கடைப்பக்கம் போனால் நாங்க
ஒதுங்கி நிற்கணும் -அங்கே
காபி, தண்ணீர் குடிக்க கூட
தனிக் குவளைதான்!
இந்த நிலைமை எதனாலே
எனக்கு புரியல - இது
எப்போது மாறும் என்று
எதுவும் தெரியல!

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.
இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024
கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது
தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.





இந்தக் கவிதை, சமூகத்தில் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் சாதியக் கொடுமைகளையும், தீண்டாமையின் வலியையும் மிக எளிய சொற்களில், ஆனால் ஆழமாகப் பதிவு செய்கிறது.
"எப்போது மாறும்" என்ற ஏக்கம் நிறைந்த கேள்வி, காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சில் இருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு. கவிதையின் வரிகளில் மறைந்திருக்கும் சமூக யதார்த்தங்கள் மற்றும் அதன் ஆழமான பொருளைப் பின்வருமாறு பார்க்கலாம்:
1. இட ஒதுக்கலும் வாழ்விடப் பிரிவினையும்
ஊர்க்கோடி தாண்டி போனா எங்க தெருவுங்க ! கொஞ்சம் ஒதுக்குப்புறமா தள்ளி வெச்ச சின்னத் தெருவுங்க!
கிராமங்களில் 'ஊர்' என்றும் 'சேரி' அல்லது 'காலனி' என்றும் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்திருக்கும் புவியியல் ரீதியான தீண்டாமையை இந்த வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. "ஒதுக்குப்புறமா தள்ளி வெச்ச" என்கிற வார்த்தை, அதுவாக அமைந்தது அல்ல, திட்டமிட்டு ஒதுக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது.
2. பொருளாதாரச் சுரண்டலும் வறுமையும்
இந்த தெருவில் எல்லாமே குடிசை வீடு தான்... பெரிய தெருக் காரர் வயலில் வேலை செய்யணும்...
ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலையும், நிலப்பிரபுத்துவ அமைப்பும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை இது காட்டுகிறது. சொந்தமாக நிலமில்லாமல்,…