top of page

ஞானச் செருக்கு


ஞானச் செருக்குடை  பாரதி-எழு

      ஞாயிறாம் விடுதலைச் சாரதி!

வானம் அளந்திடும் மாருதி-அவன்

       வடித்ததோ இன்ப வாரிதி!


தேனைச் சொரிந்திடும் தமிழ்க்கவி-அவன்

       தேடிய விடுதலைப் படைக்கவி!

கானகம் மலைகளின் குடைக்கவி-அதைக்

     கவிதை  வடித்த கலைக்கவி!


கண்ணன் பாட்டைப் பாடினான்-அவன்

       கண்ணம் மாவுடன் ஆடினான்!

வண்ணக் கவிதைப் பாடினான்-அதில்

       வாழ விடுதலைத் தேடினான்!


பாஞ்சாலி சபதம் பாடினான்-அதில்

        பாரதத் தாயை  நாடினான்

வாஞ்சை  விடுதலைத் தேடினான்-கவி

       வடித்தே வீரத்தில் கூடினான்!


எண்ணரும் மொழிகளை அறிந்தவன்-அதில்

        ஏற்றம் தமிழெனப் புரிந்தவன்!

பண்ணருங் கலைகளில்  உயர்ந்திட-அவன்

       பாடினான் உலகோர் அயர்ந்திட!


பாரதித் தேரை  இழுத்திடு-அவன்

     பாக்களைப் புகழில் உயர்த்திடு!

பாரதிர நீயும் உரைத்திடு-பாரதிப்

     பாடலில் நாட்டைக் கரைத்திடு!


கோவி.பால.முருகு
கோவி.பால.முருகு

இயற்பெயர் பால.முருகுவரதராசன்

தமிழாசிரியர், தலைமையாசிரியர்(பணிநிறைவு)

15 நூல்கள் எழுதியுள்ள இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீக்கதிர் வண்ணக்கதிர் பாலர் பூங்காவில் எழுதி வருகிறார்.

பத்துக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page