சாம்பல் நிற அணில்
- கிருபாநந்தினி
- Apr 5
- 2 min read
Updated: Apr 8

” அது என்ன விலங்கு ?” என அண்ணன் அப்பாவிடம் கேட்டான்.
ஒரு புளிய மரத்தின் கிளையில் நம்ம ஊர் அணிலைப் போன்று ஆனால் சற்று பெரிதான விலங்கு தொங்கிக்கொண்டு புளியம் பழத்தை கடித்துக்கொண்டிருந்தது.
” இதுவா அணில் ” என்று சொன்னார் அப்பா.
” அணில் இவ்வளவு பெரிதாக இருக்குமா ? நம்ம வீட்டுக்கு அருகில் உள்ள அணில் குட்டியா தான இருக்கும் ”
எனக் கேட்டாள் தங்கை.
” ஆம் இந்தியாவில் மூன்று வகையான பெரிய அணில்கள் வாழ்கின்றன. அதில் ஒன்று தான் இந்த சாம்பல் நிற அணில் ”
என விளக்கம் சொன்னார் அப்பா.
இந்த உரையாடல் எங்கே நடந்தது தெரியுமா? மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனச்சுற்றுலா வந்த அம்மா அப்பா அண்ணன் தங்கை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நடந்து செல்லும் வழியில் ஒரு புளிய மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அணிலைப் பார்த்த அண்ணன் கேட்டான்.
அண்ணனின் முகத்தைப் பார்த்த அப்பா சொன்னார்,
” சாம்பல் நிற அணிலின் ஆங்கிலப் பெயர் Grizzled-Giant Squirrel. இதன் உடம்பில்கருப்பு மற்றும் வெள்ளை நிற முடிகள் கலந்து சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. அதனால் சாம்பல் நிற அணில் என அழைக்கிறோம். கிராமங்களில் நரை அணில் எனவும் அழைக்கிறார்கள். “
” சாம்பல் நிற அணில் என்ன சாப்பிடும்? ” என்று தங்கை கேட்டாள்.
“ மாம்பழம், வாகை மரத்தின் இலை, பூ மற்றும் விதை, புளிய மரத்தின் பட்டை மற்றும் விதை ஆகியவற்றைச் சாப்பிடும்.”
” அது மட்டும் ஏன் தலை கீழாக படுத்துக்கொண்டே தின்கிறது ? ”
” சாம்பல் அணில் மற்ற அணில்களை பெரியது. அதனால் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது கடினம்.. சாம்பல் நிற அணில் தன்னுடைய முன்னங்கால்களை 180 டிகிரி வரை திருப்பிக் கொண்டு சாப்பிட முடியும்..”.
” அப்பா! அணிலின் வால் புசு புசு னு இருக்குது ” என்றாள் தங்கை
” ஆமாம்மா. சாம்பல் நிற அணில் வாலின் நீளம் 50-90 சென்டி மீட்டர், உடம்பின் நீளத்தை (25 – 40 சென்டி மீட்டர்) விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும்..”.
” சாம்பல் நிற அணிலினால் நமக்கு என்ன பயன் ? ” என்று அம்மா கேட்டார்
” பழங்களைச் சாப்பிட்டு விதைகளை பரப்பி மரங்கள் வளர்வதற்கு உதவுகிறது. வேகமாக வளரும் அதன் பற்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மரப்பட்டைகளைக் கடிக்கும். இதனால் மரத்திலிருந்து பிசின்கள் வெளியாகின்றன. இந்த மரப்பிசினை பூச்சிகள் தங்களது கூடுகளை கட்ட பயன்படுத்துகின்றன. “
“ அவ்வளவு தானா? என்று கேட்டான் அண்ணன்.
” சிறிய ஊனுண்ணிகளுக்கு சாம்பல் நிற அணில் முக்கிய உணவாக திகழ்வதால் வனத்துக்குள் உணவுச் சங்கிலியை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் பல்லுயிர் பாதுகாப்புக்கும் உதவுகிறது. ” என்றார் அப்பா.
” ஓ இவ்வளவு நன்மைகள் இருக்கா ?” என்றார் அம்மா.
” ஆமாம், அதனால தான் இப்பகுதி 1988 முதல் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. ”
” குரங்கு நிறையா இருக்கு ஏன் சாம்பல் நிற அணில் ஒன்னே ஒன்னு தான் பார்த்தோம். “ என்று சந்தேகத்தைக் கேட்டாள் தங்கை.
” எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கு..”.
” ஏன் குறைவாக உள்ளது ?
உடனே அண்ண்ன் கேட்டான்
“ சாம்பல் நிற அணில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே வாழ்பவை. அந்த இடத்தின் சூழல் பாதிக்கப்படும் பொழுது அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அணிலால் தன் குட்டிகளை வளர்க்க முடிவதில்லை. ” என்று சொன்னார் அப்பா.
” அந்த இடம் எப்படி ஆபத்துக்குள்ளாகிறது ? “ என்று கேட்டான் அண்ணன்.
” இங்கு நம்மைப் போல வரும் மக்கள் பிளாஸடிக் பைகளை பயன்படுத்துகின்றனர், இங்கேயே தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர். இங்கு தினமும் நடந்து வருபவர்களால் வழிகள் உருவாகின்றன. நாளுக்கு நாள் அது பெரிதாகி தாவரங்கள் வளருவதில்லை. அதனால் காடு துண்டு துண்டாகிறது.. “
“ சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..” என்றாள் தங்கை.
“ஆமாம்.எல்லோருமே சிந்திக்க வேண்டும்..” என்று அண்ணன் சொன்னான்.
Comentarios